இந்த வலைப்பதிவில் தேடு

தமிழ்ப் படம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ்ப் படம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஏப்ரல் 12, 2022

விரும்புகிறேன்

யூடியூபில் பழைய படங்களை அவ்வப்போது பார்ப்பது வழக்கம். அப்படி ஒரு படத்தைப் பார்ப்பதற்கு ஏதாவது ஒரு தூண்டுகோல் தேவைப்படும். அந்தப் படத்தைப் பற்றி எதையாவது கேள்விப்பட்டால் பார்க்கத் தோன்றும். அண்மையில் வெளிவந்த டாணாக்காரன் படத்தில் சாதி தொடர்பான காட்சி ஒன்று இடம்பெற்றிருந்தது. அதைத் தொடர்ந்து சிவாஜி கணேசன் நடித்த பழையபடத்தில் அவர் சாதிப்பெயரைப் பெருமையுடன் சொல்லும் காட்சியையும் விக்ரம் பிரபு சாதி பற்றிக் கேட்பதன் அபத்தத்தைச் சொல்லும் காட்சியையும் இணைத்து ஃபேஸ்புக்கில் ஒரு வீடியோ பகிரப்பட்டிருந்தது. அதைக் கண்டவுடன் இதைப் போல் சாதி தொடர்பான ஒரு காட்சியை விரும்புகிறேன் படத்தில் பார்த்த நினைவுவந்தது. எனவே, அந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என்ற  எண்ணம் வந்து. யூடியூபில் தேடினால் படம் கிடைத்தது. 

சுசி கணேசன் இயக்கிய முதல் படம் இது. ஆனால், படம் காலதாமதமாகத் தான் வெளியானது. அதற்குள் அவர் ஃபைவ்ஸ்டார் படத்தை இயக்கிவிட்டார் என ஞாபகம். இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக இருந்தவர் சுசி கணேசன். இவரிடம் உதவி இயக்குநராக இருந்தவர்தான் மௌனகுரு, மகாமுனி ஆகிய படங்களை இயக்கிய சாந்தகுமார். படம் வந்தபோதே பார்த்திருக்கிறேன். பொதுவாகத் தமிழ்ப் படங்களில் பாரதிராஜா பாதிப்பிலான கிராமங்களைத்தாம் அதிகம் பார்க்க முடியும். ஆனால், சுசி கணேசன் காட்டிய கிராமம் முற்றிலும் வேறான ஒரு கிராமமாக இருந்தது. 

படத்தின் கதைக் களமும் புதிது. கதாநாயகனாக பிரசாந்த்  நடித்திருந்தார். பிரசாந்தை நடிகராகப் பார்க்க முடிந்த படங்களில் இதுவும் ஒன்று. சிநேகாவின் அறிமுகப் படம் இது. ஆனால், அவர் நடித்த என்னவளே இதற்கு முன்னரே வெளியாகிவிட்டது. நடன இயக்குநர் கலாவின் உறவுக்காரப் பெண்ணான சிநேகா இந்தப் படத்தில் வசீகரமான கிராமத்துப் பெண்ணாக வலம்வருகிறார். தந்தைக்கு அடங்கிய அப்பாவின் பெண்ணான தவமணி- அவரது கதாபாத்திரப் பெயர் இதுதான் - காதல் பிறந்தபிறகு துணிச்சலும் தைரியமும் கொண்ட பெண்ணாக மாறிவிடுகிறார். இரண்டின் சுபாவங்களையும் இயல்பாகச் செய்திருந்தார் சிநேகா. 

சுசி கணேசன் எழுதிய வாக்கப்பட்ட பூமி என்னும் நாவலே இந்தப் படமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. கண்ணின் கடைப்பார்வையைக் காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் இளைஞர்க்கு மாமலையும் ஓர் கடுகாம் என்னும் கவிதை வரிகளுக்குத் தகுந்த காட்சியாக்கம் ஒன்று படத்தில் உண்டு. கே.வி.ஆனந்த் ஒளிப்பதிவில் ஒரு கிராமத்தின் வேறுபட்ட தோற்றங்களைப் படம் காட்சிப்படுத்தியிருந்தது. தீயணைப்பு வீரர் சிவனாகப் படத்தில் நடித்திருந்தார் பிரசாந்த். தீயணைப்பு வீரரான தந்தை பணியின்போது மரணமுற்றதால் அந்த வேலையில் சிவன் சேர வேண்டியதாகிவிடும். அவருக்கு இரண்டு தம்பிகள். இருவரையும் கரையேற்றும் பொறுப்பை அவர் ஏற்றுக்கொள்வார். அதே போல் தவமணிக்கும் இரண்டு தங்கைகள். அம்மா இல்லாத குடும்பம் அவர் அம்மா நிலையிலிருந்து தங்கைகளைக் கரையேற்ற வேண்டியதிருக்கும். இவர்கள் இருவருக்கும் காதல் முளைத்துவிடுகிறது. அந்தக் காதல் அவர்களை என்ன செய்தது, இவர்கள் காதலால் தவமணி வாழ்ந்த கிராமம் என்ன ஆனது என்பதைப் படம்  கூறும். 

நல்ல காரியத்துக்காக ஒன்றுசேராத கிராமம் காதலைப் பிரிக்க ஒன்றுசேரும். சாதி என்னும் பித்து கிராமத்து மனிதர்களின் மனங்களில் எவ்வளவு கேட்டைக் கொண்டுவந்துசேர்க்கும் என்பதையும் படம் தெரிவிக்கும். காதல் காட்சிகளும் பாடல்களும் காட்சிப்படுத்தியிருந்த விதமும் ரசனைக்குகந்தவை. ஈஸ்வரி ராவ் ஏற்றிருந்த லதா என்னும் கதாபாத்திரம் மிகவும் ஈர்ப்புக்குரிய ஒன்று. தினந்தோறும் படத்தில் வரும் ரேணுகா கதாபாத்திரம் போல் இதுவும் சுவாரசியமான பாத்திரப் படைப்பு. நாசர், லிவிங்ஸ்டன், ஸ்ரீமன், செந்தில், வினுச்சக்ரவர்த்தி எனப் பல நடிகர்கள் படத்துக்கு உயிரூட்டியிருந்தனர்.    

என்னதான் கிராமத்துக் கட்டுப்பாட்டுக்கு அடங்கி ஒடுங்கி நடந்த பெண்ணாக இருந்தாலும் காதல் தோன்றிவிட்டால் அவர் காதலுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் துணிவு பெற்றிடுவார் என்னும் கருத்துக்குப் படம் வலுச்சேர்த்திருந்தது. இசை தேவா. பாடல்கள் சில முணுமுணுக்கவைக்கும். சிநேகாவின் கள்ளம்கபடமற்ற அழகை ஆனந்தின் கேமரா வாழையிலை விருந்தாகத் திரையில் காட்சி படுத்தியிருந்தது. படம் போரடிக்காமல் செல்கிறது. இடையிடையே பாடல்கள் அடிக்கடி வந்தபோதும்,  அவையும் காட்சி விருந்தாக அமைவதால் பார்க்க முடிகிறது. படத்தின் பெண் கதாபாத்திரங்கள் சுவாரசியமானவை. வில்லத்தனமான தந்தை  தரும் தண்டனை விநோதமானது. மகள் காதலனுக்கு எழுதிய கடிதத்தை ஊரறிய வாசிக்கச் செய்யும் காட்சி அதற்கோர் உதாரணம். அந்தக் கடிதத்தை வாசிக்கும் குட்டி தங்கை பார்வையாளர்களை ஈர்த்துவிடுவார். குடும்பக் கடமை இருந்த இருவருக்கிடையே காதல் முளைத்தால் கடமை என்னவாகும், காதல் என்னவாகும் என்ற கேள்விக்கெல்லாம் விடையாக இருக்கும் படம். வழக்கமான பொழுதுபோக்குப் படம் என்றபோதும், அந்த எல்லைக்குள் மாறுபட்ட காட்சியனுபவத்தைத் தந்துவிட வேண்டும் என்ற இயக்குநரின் முனைப்பு படத்தை மாறுபட்டதாக்கிவிடும். நேரம் கிடைத்தால் தாராளமாக ஒருமுறை பார்க்கக்கூடிய படம் விரும்புகிறேன்.  

புதன், ஆகஸ்ட் 25, 2021

ஏழைகளின் இதயத்தில் வீற்றிருக்கும் மதுரைக்காரன்

விஜயகாந்த் தான் நடித்த இரண்டாம் படத்தில்தான் முதலில் கதாநாயகனானார். அந்தப் படம் ‘அன்னக்கிளி’ ஆர் செல்வராஜ் இயக்கிய ‘அகல் விளக்கு’. அது 1979 டிசம்பர் 4 அன்று வெளியானது. அந்தப் படத்தில் அவரது கதாபாத்திரத்தின் பெயர் தனுஷ்கோடி. கதைப்படி மக்களுக்கு நல்லது செய்தல் வேண்டும் என்ற துடிப்புள்ள இளைஞரான அவர் தேர்தலில் நின்று வெல்வார். மதுரை நகரத்தின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். அவரது குடும்பத்தினர் அவர் பெயரைப் பயன்படுத்தி லஞ்ச, ஊழலில் ஈடுபட்டு அதிகமாகச் சொத்து சேர்த்துவிடுவார்கள். இறுதியில் இதை அறிந்த விஜயகாந்த் தனது நேர்மையை நிரூபிக்கச் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பார். திரைப்படம் என்பதால் அவருடைய குடும்பத்தினர் தங்கள் தவற்றை உணர்ந்து திருந்திவிடுவார்கள். விஜயகாந்த் மீதான கறை துடைக்கப்பட்டுவிடும். இந்தப் படத்தின் ‘ஏதோ நினைவுகள்…’ பாடல் இன்றளவும் பலரது விருப்பத் தேர்வில் ஒன்று. இந்தப் படத்தைப் பார்க்கும்போது வாழ்க்கைதான் எவ்வளவு விசித்திரமானது என்று தோன்றுகிறது. ‘மாந்தோப்புக் கிளியே’ படத்தை இயக்கிய எம்.ஏ.காஜாவின் ‘இனிக்கும் இளமை’ என்னும் படத்தில் வில்லனாக அறிமுகமானார் விஜயகாந்த். அந்தப் படத்தின் நாயகன் சுதாகர். இதே சுதாகர் ரஜினிகாந்த் நடித்த ‘அதிசயப் பிறவி’யில் காமெடி வில்லனாக நடித்தார்.

அடுத்து அவரது அறிமுகப்படம் என்றே பலராலும் இன்றளவும் நினைவுகூரப்படும் ஒரு படம் என்றால் அது, ‘தூரத்து இடிமுழக்கம்’. கே. விஜயன் தயாரித்து இயக்கிய, மீனவர் வாழ்வை மையப்படுத்தியிருந்த இந்தப் படம் அப்போதைய மாற்றுப்பட முயற்சி வகையிலானது. படத்துக்கு இசையமைத்தவர் சலீல் சௌத்ரி. படத்தின் பாடல்களை எழுதியிருந்தவர் கு.மா.பாலசுப்ரமணியன். 1981-ல் டெல்லியில் நடைபெற்ற சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட படம் இது. அங்கே திரையிடப்பட்ட மற்றுமொரு தமிழ்ப் படம் பாரதிராஜா இயக்கிய ‘நிழல்கள்’. 


இதற்கு அடுத்து வெளியான ‘சட்டம் ஒரு இருட்டறை’தான் விஜயகாந்தின் முதல் வெற்றிகரமான படம் எனலாம். நடிகராக இருந்த விஜயகாந்தை நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்த்திய படம் இது. இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் அறிமுகப்படமான இது அடிப்படையில் பழிவாங்கும்தன்மையிலானது. சங்கர் கணேஷ் இசையில் ஒலிக்கும் ‘தனிமையிலே ஒரு ராகம் ஒரு தாளம்’ பாடல் அந்தக் காலக் காதல் இன்னிசையின் பெருமையை இன்றும் காதோடு காதாகச் சொல்லிவருகிறது.  இப்படத்தின் இந்தி ரீமேக்கான ‘அந்தா கானூன்’ படத்தின் மூலமாகத் தான் ரஜினிகாந்த் இந்திப் படவுலகில் நுழைந்தார். இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘நெஞ்சிலே துணிவிருந்தால்’, ‘சாதிக்கொரு நீதி’, ‘பட்டணத்து ராஜாக்கள்’, ‘ஓம் சக்தி’, ‘சாட்சி’, ‘நீதியின் மறுபக்கம்’, ‘வசந்தராகம்’ எனத் தொடர்ந்து எஸ்.ஏ.சந்திர சேகரின் படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

ஏவி.எம். தயாரிப்பில், இராம நாராயணன் இயக்கத்தில் இவர் செஞ்சட்டை நாயகனாக நடித்த, ‘சிவப்பு மல்லி’ தான் விஜயகாந்தை ஏழைகளின் வேந்தனாக்கியது. 1981 ஆகஸ்ட் 15 அன்று வெளியான இப்படம் தொழிலாளர் வர்க்கத்தில் ஒருவராக அவர்களுடைய நம்பிக்கையக்குரியவராக இவரை மாற்றியது. வைரமுத்துவின் வரிகளில் இடம்பெற்ற ‘எரிமலை எப்படிப் பொறுக்கும்…’ பாடல் அனல்கக்கும் ஒன்று என்றால், இதே படத்தில் இடம்பெற்ற ‘ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்’ பாடல் காதல் களிப்பின் உச்சம். இந்தப் படத்தின் இசையும் சங்கர் கணேஷ்தான். சந்திரசேகருக்கு அடுத்தபடியாக விஜயகாந்தை அதிகப் படங்களில் இயக்கியவர் அநேகமாக இயக்குநர் இராமநாராயணன்தான். ‘சிவப்பு மல்லி’ தொடங்கி, ‘சபாஷ்’, ‘தண்டனை’, ‘கரிமேடு கருவாயன்’, ‘வீரன் வேலுத்தம்பி’ எனப் பல படங்களில் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ளனர். மு.கருணாநிதியின் வசனத்தை ‘வீரன் வேலுத்தம்பி’, ‘சட்டம் ஒரு விளையாட்டு’ ஆகிய படங்களில் பேசி நடித்துள்ளார். விஜயகாந்தின் தொடக்க காலத்தில் பெரும்பாலான படங்களுக்கு சங்கர் கணேஷ்தான் இசையமைத்திருக்கிறார். ‘ஆட்டோ ராஜா’  படத்தில் இவர் இசையமைத்த ‘மலரே என்னென்ன கோலம்’ பாடல் காதல் தோல்விப் பாடல்களின் தோரணத்தில் எந்நாளும் பசுமையைப் பரப்பிக்கொண்டேயிருக்கும். இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘சங்கத்தில் காணாத தமிழை’ பாடலுக்கு மாத்திரம் இசை இளையராஜா.   

ஏழைப் பங்காளனாகவும் கோபக்கார இளைஞனாகவும் தொடர்ந்து ஆக்‌ஷன் படங்களிலும் புரட்சிப் படங்களிலும் நடித்துக்கொண்டிருந்த விஜயகாந்தின் மென்மையான பக்கத்தை வெளிப்படுத்திய, அவரைப் பாசக்கார மனிதனாக ஆக்கிய படம் விசுவின் ‘டௌரி கல்யாணம்’. இதற்கு இசையமைத்திருந்தார் எம்.எஸ்.விஸ்வநாதன். இதில் இடம்பெற்றிருந்த ‘ஸ்ரீராமன் ஸ்ரீதேவி கல்யாண வைபோகம்’ பாடலும் இனிமையானது. 1984 -ல் 18 படங்கள் 85 -ல் சுமார் 14 படங்கள் விஜயகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ளன என்பது ஒரு சாதனைதான்.

இந்தக் காலகட்டத்தில் வெளியான ‘வெள்ளைப் புறா ஒன்று’ என்ற படத்தில் ஒரு காட்சியில் அநேகமாக அது விஜயகாந்த் அறிமுகமாகும்போதாக இருக்கலாம், அவரது கழுத்தில் அணிந்திருக்கும் அரிவாள் சுத்தியல் டாலர் அணிந்த சங்கிலி சட்டையைத் தாண்டி தென்பட்டு ரசிகர்களைப் புரட்சி நீரில் நனைக்கும். எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியானதொரு படம் ‘வெற்றி’. இதில் எதற்கெடுத்தாலும் பந்தயம் கட்டி வெற்றிபெறுபவராக விஜய காந்த் நடித்தார். இந்தப் படத்தில் சிறுவன் விஜயகாந்தாக அறிமுகமானார் நடிகர் விஜய. பின்னாளில் நடிகர் விஜயின் வளர்ச்சிக்காக செந்தூரப்பாண்டியில் நடித்துக்கொடுத்தவர் இவர். ‘வெற்றி’ தெலுங்கில் சிரஞ்சீவி நாயகனாக நடிக்க மறு ஆக்கம் செய்யப்பட்டது. அது தமிழில் ‘பந்தயம்’ என்னும் பெயரில் டப்பிங் ஆனது.

1984 தீபாவளி நாளில்தான் விஜயகாந்தின் பெரிய வெற்றிப்படமான ‘வைதேகி காத்திருந்தாள்’ வெளியானது. வ.வே.சு. ஐயரின் ‘குளத்தங்கரை அரசமரம்’ கதையை நினைவூட்டும் இந்தப் படத்தில் பரிமளம் என்றொரு நடிகை விஜயகாந்தின் முறைப்பெண்ணாக வேடமேற்றிருந்தார். அதன் பின்னர் அவரை எந்தப் படத்திலும் பார்த்ததாக நினைவில்லை. இந்தப் படத்தை இயக்கிய ஆர்.சுந்தர்ராஜனின் ‘அம்மன் கோவில் கிழக்காலே’ படமும் இதைப் போலவே பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்துக்காகச் சிறந்த நடிகருக்கான ஃபிலிம்பேர் விருதை இவர் பெற்றுள்ளார். இரண்டு படங்களிலும் இளையராஜாவின் இசையிலான பாடல்கள் படத்தின் வெற்றிக்குப் பெரிதும் உதவின. இதே போல் பாடல்களுக்குப் பெயர்பெற்ற விஜயகாந்தின் இன்னொரு படம் கே.ரங்கராஜ் இயக்கிய ‘நினைவே ஒரு சங்கீதம்’.

சிறுமுகை ரவி இயக்கிய ‘அலை ஓசை’ படத்தின் ‘போராடடா ஒரு வாளேந்தடா’ பாடல் ஒடுக்கப்பட்டோரின் இதய கீதமாக இப்போதும் ஒலிக்கிறது. பாலு ஆனந்தின் இயக்கத்தில் இவர் நடித்த ‘நானே ராஜா நானே மந்திரி’ நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டது. ஆனால், அதன் நகைச்சுவையைவிட ரசிகர்கள் மனத்தில் நிற்பது ‘மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்’ என்னும் காதல் பாடல்தான்.

இருபது படங்களுக்கும் மேலாகக் காவல் துறை அதிகாரியாக இவர் நடித்துள்ளபோதும் ‘ஊமை விழிகள்’ படத்தின் டிஎஸ்பி தீனதயாளன் கதாபாத்திரம் மிகச் சிறப்பானது. வழக்கமான வசனங்களை அள்ளிவீசாமல் மிகவும் இயல்பாகத் தனது நடிப்பை அதில் விஜய காந்த் தந்திருப்பார். திரைப்படக் கல்லூரி மாணவர்களின் உழைப்பில் உருவான இந்தப் படத்துக்கு விஜயகாந்த் பெரிய ஒத்துழைப்பை நல்கியிருக்கிறார். உண்மையில் இந்த வேடத்தில் முதலில் நடிக்கவிருந்தவர் நடிகர் சிவகுமார் தான் என்கிறார்கள். பத்திரிகையாளர்களின் உணர்வை வெளிப்படுத்திய இப்படத்தின் ‘தோல்வி நிலையென நினைத்தால்’ பாடல் தளர்வுற்றவர்களின் ஊக்க மருந்தாக இன்றுவரை செயல்படுகிறது. 

விஜயகாந்தின் நூறாம் படம் ‘கேப்டன் பிரபாகரன்’. படத்தின் பெயரே அவரது தமிழாதரவு நிலையைச் சொல்லும். பொதுவாக நூறாம் படம் பெரிய நடிகர்களுக்குக் காலைவாரிவிடும் என்பது தமிழ்த் திரைப்பட வரலாறு. ஆனால், இந்தப் படம் வெள்ளிவிழா கண்டது புதிய வரலாறு. விஜயகாந்த் நடித்த ‘மனக்கணக்கு படத்தில் கௌரவ வேடத்தில் நடித்திருக்கிறார் கமல்ஹாசன். சிவாஜி கணேசனுடன் ‘வீர பாண்டியன்’ படத்திலும் பிரபுவுடன் ‘காலையும் நீயே மாலையும் நீயே’ படத்திலும் இணைந்து நடித்துள்ளார். கா.நீ.மா.நீ. படத்தில் ‘தூங்காத கண்ணின்று ஒன்று’ பாடலை மீண்டும் பயன்படுத்தியிருப்பார்கள். இவர் நடித்த, டி.ராஜேந்தர் பாடல்களை எழுதி இசையமைத்த ‘கூலிக்காரன்’ படத்தில் முதலில் நடிப்பதற்காகப் பேசப்பட்டவர் ரஜினிகாந்த். ஆனால், அப்போது அவர் கேட்ட சம்பளத்தில் அந்தப் படமே எடுக்கப்பட்டுவிட்டதாக அந்த நேரத்தில் பத்திரிகைகள் எழுதியிருந்தன. தமிழின் முதல் முப்பரிமாணப் படமான ‘அன்னை பூமி’யில் இவரும் நளினியும் நடித்திருந்தார்கள்.

எல்லோருக்கும் உதவுபவராகத் திரைப்படத்தில் நடிப்பதைவிட திரைப்படத்தில் நடித்ததன் மூலமாகப் பிறருக்குத் தன்னால் இயன்றவரை உதவியவர் இவர். நடிகை வடிவுக்கரசிக்காக ‘அன்னை என் தெய்வம்’, நடிகர் சரத் குமாருக்காக ‘தாய்மொழி’ எனத் தன்னைப் போன்ற சக நடிகர் நடிகைகளுக்காகப் படங்களில் நடித்துக்கொடுத்தவர் விஜயகாந்த். இளம் இயக்குநர்களை உற்சாகப்படுத்தியதில் இவருக்கு நிகரான ஒரு நட்சத்திரம் இல்லவே இல்லை.

‘சிறைப்பறவை’, ‘உழவன் மகன்’, ‘தெற்கத்திக் கள்ளன்’, ‘என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்’, ‘பூந்தோட்டக் காவல் காரன்’, ‘செந்தூரப்பூவே’ (இந்தப் படத்துக்காகச் சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் விருது இவருக்குக் கிடைத்தது), ‘புலன் விசாரணை’, ‘சத்ரியன்’, ‘சின்ன கவுண்டர்’, ‘வானத்தப்போல’, ‘ரமணா’, ‘சொக்கத்தங்கம்’ என எண்ணற்ற படங்கள் விஜயகாந்தின் வெற்றி மகுடத்தை அலங்கரித்துள்ளன. இப்படிப் பல சிறப்புகளைக் கொண்ட வெற்றி நாயகன் விஜய காந்தின் பிறந்தநாள் இன்று.  

சனி, ஜூன் 19, 2021

ஜகமே தந்திரம் வருதே ஆத்திரம்


ஜகமே தந்திரம் படத்தை நேற்று பார்க்கத் தொடங்கினேன். இன்றுதான் பார்த்து முடித்தேன். படம் அவ்வளவு விறுவிறுப்பு. ஏன்தான் தமிழ்ப் படங்களை இரண்டரை மணி நேரத்துக்கு மேலே எடுத்துத் தொலைக்கிறார்களோ? ரசனைக்குறைவான படத்துக்கான எல்லா அறிகுறிகளும் முதலியேயே தொடங்கிவிடுகின்றன. பொதுவாகவே, கார்த்திக் சுப்புராஜின் முதல் படமான பீட்சா தவிர்த்து பிற எல்லாப் படங்களும் பொறுமையைச் சோதித்தவைதான். ஆகவே, இந்தப் படமும் விதிவிலக்கு அன்று. படத்தின் நாயகராக ஒரு நடிகர் நடித்திருக்கிறார் தனுஷ் போல இருக்கிறார்; ஆனால் ரஜினியை இமிடேட் செய்திருக்கிறார். ரஜினி தப்புத்தாளங்களில் வைத்திருந்த மீசை போல ஒரு மீசை சுருளிக்கு. மேசை மீது பேப்பர்  வெயிட் வைத்தது போல் அவரது முகத்தில் அந்த மீசை ஒரு செட் புராபர்ட்டிபோல் இருக்கிறது. 

லண்டனில் ஆயுத வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கிறார் சிவதாஸ். அவரைப் போட்டுத்தள்ள நினைக்கிறார் இனவாதியும் கேங்ஸ்டருமான பீட்டர். அதற்கு அவருக்கு ஓர் ஆள் தேவை. அந்த ஆளாக இருக்கிறார் மதுரையில் ரௌடித்தனத்தில் ஈடுபட்டுவருபவரும் பரோட்டாக் கடை நடத்திவருபவருமான சுருளி. லண்டனில் கிடைக்காத ஆளா மதுரையில் கிடைக்கிறார் என்று யோசிக்கலாம். ஆனால், என்ன பண்ண ஹீரோ அவர் தானே? மதுரையிலிருந்து லண்டன் செல்லும் தாம்பூலத்துக்கும் தாம்பத்தியத்துக்கும் வேறுபாடு தெரியாத சுருளி அங்கே சிவதாஸின் கடத்தல் ரகசியத்தை எல்லாம் மிக எளிதாகக் கண்டுபிடித்துவிடுகிறார். எப்படி? இதென்ன கேள்வி, அவர்தான் ஹீரோ.

ஹீரோயினைப் பார்த்த மாத்திரத்தில் ஹீரோவுக்கு அப்படிப் பிடித்துப்போய்விடுகிறது. அவரது அழகில் சொக்கிப் போய்விடுகிறார். அவரே தன் மனைவி என நினைத்துவிடுகிறார். இது தமிழ் சினிமாவில் அடிக்கடி நடைபெறும் புதுமைதானே? அதனால் இது நமக்குப் பெரிய அதிர்ச்சியன்று. நாயகிக்குக் கல்யாணமாகி ஒரு பையனும் இருக்கிறான். அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் அந்தப் பையனையும் சேர்த்து நேசிக்கிறார் நம் ஹீரோ. ஹீரோ முற்போக்கானவர் என்பதை வேறு எப்படிக் குறிப்புணர்த்த? 


நவீன ஆயுதங்களை எல்லாம் வைத்திருக்கும் லண்டன் தாதா சுருளி கேட்டதை எல்லாம் கொடுக்கிறார். ஏன், அவருடைய எதிரியான சிவதாஸைப் போட சுருளியால் மட்டும் தான் முடியுமாம். இதையெல்லாம் நாம் நம்ப வேண்டும். நாம் ஒரு கமர்ஷியல் படம் பார்க்கிறோம். அதில் லாஜிக்கை எல்லாம் பார்க்கக் கூடாது. அதெல்லாம் சரிதாம்பா. இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா என்கிறீர்களா. அதெல்லாம் தெரிந்தால் இப்படி ஒரு படத்தை ஏன் கார்த்திக் சுப்புராஜ் எடுக்கப்போகிறார். 

இதையெல்லாம்விடக் கொடுமை என்னவென்றால் இதில் இலங்கைத் தமிழர் துயரத்தை ஆங்காங்கே வசனங்கள் வழியே அப்படியே ஆஃபாயிலில் மிளகைத் தூவுவது போல் தூவியிருக்கிறார்கள். சிப்ஸ் கொறித்துக்கொண்டே சீரியல் துயரத்துக்குக் கண்ணீர் விடுவதுபோல் இருக்கிறது கதை. சிவதாஸுக்குப் பின்னணியில் ஒரு வேலு நாயக்கர் பிம்பம். சிவதாஸு அவ்வளவு பெரிய ஆள். ஆனால், டக்குன்னு சுருளியை நம்பிவிடுகிறார். நம்பாவிட்டால் அவரெப்படி துரோகம் நம் இனத்தோட சாபம்னு டயலாக் பேசுவதாம்? 

முருகேசன் என்று ஒரு கதாபாத்திரம் வருகிறது. அந்தக் கதாபாத்திரம் அது பாட்டுக்கு ஹோட்டலில் தட்டு கழுவி பிழைத்துக்கொண்டிருக்கிறது. நம்ம ஹீரோ இல்ல, அவரு அவரைக் கூப்பிட்டு தன் கடையில் வேலை கொடுத்து அவரைச் சாகடிச்சு ஒரு பாட்டு வேற பாடுறாரு. கேங்ஸ்டரு படம் எடுக்கிறோம் என்னும் நினைப்பில் கேணத்தனமா படம் எடுக்குறது இப்பல்லாம் ஃபேஷனா போயிருச்சு போல. படம் இரண்டு மணி நேரம் 38 நிமிடங்களுக்கு மேல ஓடுது. ஈவு இரக்கமே இல்லாமல் நின்னு அடிச்சிருக்காங்க. 

உலகெங்கிலும் வாழும் இலங்கைத் தமிழர்களை இவ்வளவு ஈஸியான டார்கெட்டா நினைச்சிருக்காரே அண்ணன், இங்க அண்ணன் என்றால் கார்த்திக் சுப்புராஜ். படம் தியேட்டரில் வராததால் தியேட்டர் அதிபர்கள் தப்பித்துவிட்டார்கள். ஓடிடியில் (நெட்ஃபிளிக்ஸ்) வந்துவிட்டதால் ரசிகர்கள் மாட்டிக்கொண்டார்கள். 

வெள்ளி, ஏப்ரல் 23, 2021

விடுதலை ராகம் பாடும் குயில்கள்

அப்போது எட்டாம் வகுப்பு முழு ஆண்டுத் தேர்வை எழுதிவிட்டு விடுமுறையில் இருந்தேன். அந்தச் சித்திரை வருடப் பிறப்பை ஒட்டி ரஜினி காந்த் நடித்த விடுதலை (1986 ஏப்ரல் 11) திரைப்படம் வெளியானது. திருநெல்வேலி நியூராயல் தியேட்டரில் படத்தை வெளியிட்டிருந்தார்கள். விடுமுறையில் குடும்பத்துடன் பேட்டை செல்லையா அண்ணன் வீட்டுக்குப் போயிருந்தோம். அண்ணன் பேட்டை மில்லில் வேலை பார்த்தார். 

அவர் வீட்டில் ஒரு மேசையில் டேப் ரிக்கார்டர் இருக்கும். எதிரே நாற்காலியைப் போட்டு மேசை டிராயரில் இருக்கும் கேஸட்டுகளில் எதையாவது போட்டுக் கேட்பேன். பெரும்பாலான கேஸட்டுகளில் கம்யூனிஸ்ட் இயக்கப் பாடல்களே இருந்தன. அங்குதான் முதன்முதலில் அந்தப் பாடல்களைக் கேட்டேன். ஏனோ அந்தச் சிறுவயதில் அந்தப் பாடல்களைக் கேட்பது ஈர்ப்புக்குரியதாக இருந்தது. என்னவோ சொர்க்கமே காலடியில் கிடப்பது போன்ற மகிழ்ச்சி ஏற்படும். ஒருநாள் அண்ணன் என்னைப் படத்துக்குக் கூட்டிப்போவதாகக் கூறினார். அப்போது ரஜினி படம் என்றால் சோறு தண்ணிகூடத் தேவைப்பட்டிருக்காத காலம். இப்போது ரஜினி படத்தைப் பார்க்காட்டி உயிர் போகும்னு சொன்னா போகட்டும் என்று விட்டுவிட முடிகிறது. 

என்ன படம் பார்க்க விரும்புகிறாய் என செல்லையா அண்ணன் கேட்டதும், மறுபேச்சின்றி ரஜினி நடித்த விடுதலை படம் பார்க்கலாம் என்று கூறினேன். லீவு முடிந்து ஸ்கூலுக்குப் போனதும் படத்தின் கதையையும் சொல்லலாம்; படம் பார்த்த கதையையும் சொல்லலாம் என்ற ஆசைதான். அண்ணனுடன் புறப்பட்டேன். மணி பதினொன்று கிட்ட ஆகிவிட்டது. மனம் பார்க்கப்போகும் படத்தை எண்ணி பரபரப்பானது. பேட்டை மெயின் ரோட்டில் ஒரு ஹோட்டலுக்குக் கூட்டிட்டுப் போய் கேசரி வாங்கிக் கொடுத்தார்.  ஜம்முன்னு சேரில் உட்கார்ந்து கேசரியைச் சாப்பிடும் கௌரவத்தை அண்ணன் தந்திருந்தார். அது இப்போது நினைத்தால் இனிக்கிறது. ஆனால் அன்று கேசரியைவிட சிங்க நிகர் தலைவன் ரஜினியைப் பார்க்க வேண்டும் என்றுதான் மனம் அலைபாய்ந்தது. ஆகவே, சீக்கிரம் சாப்பிட்டுவிட்டு படத்துக்குப் போக வேண்டும் என்று தான் ஆர்வமாக இருந்தது. 

தென்காசியில் படம் பதினோரு மணிக்கெல்லாம் போட்டுவிடுவார்கள். அதற்குப் பழகியிருந்ததால் நேரமாகிக்கொண்டிருக்கிறதே அண்ணன் மிக நிதானமாக இருக்கிறாரே என்றிருந்தது. கேசரி சாப்பிட்டுவிட்டு ஹோட்டலை விட்டு வெளியே வரும்போதே மணி பதினொன்றரை ஆகிவிட்டது. அய்யய்யோ படம் போட்டுவிடுவானே என்றிருக்கிறது. அண்ணனோ நிதானமாக இருக்கிறார். அவரிடம் சொல்லவும் முடியவில்லை. நம்மையும் ஓர் ஆளாக மதித்து ஒருவர் சினிமாவுக்குக் கூட்டிக்கொண்டு போகிறார். அவரை எப்படி அவசரப்படுத்த முடியும்? 

ஒருவழியாக பஸ் பிடித்து டவுனில் இறங்கினோம். அருகிலேயே தான் ராயல் தியேட்டர். டிக்கெட் எடுத்து அவசர அவசரமா உள்ளே போனா, யார் நீ எனக் கேட்கும் வில்லனிடம் 'நான் கடவுளோட புள்ள' அப்படின்னு ரஜினி சொல்லிட்டிருக்கார். படம் போட்டு ஏழெட்டு நிமிஷமாயிருச்சு. படம் படு மொக்கை. ஆனால் அதையே மீண்டும் தென்காசி பரதனிலும் பார்த்தேன். திருநெல்வேலியில் ஏழெட்டு நிமிஷம் கழிச்சுத்தானே பார்த்தேன். ஆகவே, முதலிலிருந்து தென்காசியில் பார்த்தேன். நாட்டுக்குள்ள நம்ம பத்தி கேட்டுப் பாருங்க பாடல் கேட்கும்போதெல்லாம் சும்மா நரம்பெல்லாம் ஜிவ்வுன்னு இருக்கும்.

சிவாஜியும் ரஜினியும் சேர்ந்து நடித்த படங்களிலேயே படு தோல்வி அடைந்த இந்தப் படம் படு கேவலமான படமும்கூட. சிவாஜி வீரபாண்டிய கட்டபொம்மன் வசனத்தை இந்தப் படத்தில் காக்கி உடையில் சொல்வார். சிவாஜியின் மிகை நடிப்பு அதிகமாக வெளிப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று. ரஜினிக்கு கார் திருடன் பாத்திரம். இந்தப் படத்தில் இடம்பெற்ற கார் சேஸிங் காட்சி அப்போது மிகவும் பிடித்திருந்தது. விஷ்ணுவர்தன் கதாபாத்திரமும் நன்றாக இருக்கும். கே.பாலாஜி தயாரித்திருந்த இந்தப் படத்தில் மாதவி, அனுராதா, விஜய குமார், பேபி ஷாலினி, தேங்காய் சீனிவாசன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கே விஜயன் இயக்கிய படம். சந்திரபோஸ் இசையில் நீலக்குயில்கள் ரெண்டு பாடலும் கேட்பதற்கு இனிமையானது. இந்தியில் வெளியான குர்பானி திரைப்படத்தின் மறு ஆக்கம் விடுதலை.  ஆனால், இந்திப் படம் போல் நன்றாக அமையவில்லை தமிழ்ப் படம் என்பது அப்போதைய ரசிகர்களின் கணிப்பு. இப்போது ராயல் தியேட்டரோ, பரதன் தியேட்டரோ இல்லை என்பதும் நானும் ரஜினி ரசிகனாக இல்லை என்பதும் புரியும்போது, வாழ்க்கை, விடுதலை என்பதற்கெல்லாம் வேறு பொருள்கள் உண்டு என்று தோன்றுகிறது. 

சனி, ஜூன் 20, 2020

இப்பட்டிப்பட்ட ஆளா மலேசியா வாசுதேவன்?

கொலுசு மலேசியா வாசுதேவன்

பிரபலப் பிண்ணனிப் பாடகர் மலேசியா வாசுதேவனின் பிறந்தநாள் ஜூன் 15 அன்று என பேஸ்புக்கில் பல பதிவுகள் இடம்பெற்றிருந்தன. இதைப் பார்த்தவுடன் மலேசியா வாசுதேவன் குறித்த நினைவுகள் எழுந்தன. அவர் பாடிய பாடல்களைப் போல் அவர் நடித்த படங்களைப் பற்றியும் எண்ணங்கள் மேலெழுந்தன. மலேசியாவைப் பிரபலமாக்கிய படம் ஒரு கைதியின் டைரி. ஆனால், அவர் முதலில் நடித்த படம் கொலுசு. இந்தப் படத்தை இயக்கியவர் கே.எஸ்.மாதங்கன். இந்தப் படத்தை அம்பாசமுத்திரம் ஸ்ரீகிருஷ்ணா திரையரங்கில் பார்த்திருக்கிறேன். அநேகமாக எட்டாம் வகுப்பு விடுமுறையின்போது உறவினர் வீட்டுக்குச் சென்றபோது பார்த்ததாக ஞாபகம். 

கொலுசு சரிதா

கொலுசு திரைப்படத்தின் இசையும் மலேசியா வாசுதேவன் தான். யூடியூப்பில் கொலுசு படம் கிடைக்கிறது. மிகவும் சாதாரணப் படம் தான். மலையப்பன் என்னும் கிராமத்து பண்ணையார் வேடத்தில் நடித்திருக்கிறார் மலேசியா வாசுதேவன். கிராமத்தில் அவர் வைத்ததுதான் சட்டம். யாரும் எதிர்த்து எதுவும் பேசிவிட முடியாது. தனி அரசாங்கமே நடத்திவருகிறார். கிராமத்தில் பள்ளிக்கூடம் உண்டு. ஆனால், மாணவர்கள் அனைவரும் கல் குவாரியில் வேலை பார்க்கிறார்கள். எனவே, பள்ளியில் குடிகாரர்களே வாசம் செய்கிறார்கள். 

கொலுசு சுரேஷ்

பண்ணையார் இருந்தால் விசுவாசமான பணியாள் இருக்க வேண்டுமே? மலையப்பன் என்ன சொன்னாலும் தட்டாமலும் சந்தேகப்படாமலும் செய்யும் பழனி என்னும் பணியாள் கதாபாத்திரத்தில் ராஜேஷ் நடித்திருக்கிறார். பண்ணையாரால் பாதிக்கப்பட்ட வெங்கலத்தான் என்பவரின் மகனாக நடிகர் சுரேஷ். அவர் அந்த ஊருக்கு ஆசிரியராக வருகிறார். அவருக்கு ஜோடியாக ஊரின் காந்திபக்தரின் மகளாக நடிகை சசிகலா வேடமேற்றிருக்கிறார். கிட்டத்தட்ட படத்தின் கதை ஒரு கைதியின் டைரியின் அடிப்படைக் கதைபோல்தான். அதில் அரசியல் கட்சியின் தொண்டரது மனைவியை அரசியல் தலைவர் அபகரித்து வல்லுறவுகொள்வார். இங்கே தனது பணியாளின் மனைவியைப் பண்ணையார் பெண்டாட முயல்வார். 

கொலுசு சசிகலா

ராஜேஷின் மனைவியாக பொன்னுத்தாய் என்னும் கதாபாத்திரத்தில் சரிதா நடித்திருக்கிறார். ஏற்கெனவே தனது கிராமத்தில் தன்னிடம் தவறாக நடக்க முயலும் பண்ணையாரை ஊரைக்கூட்டி அவமானப்படுத்துகிறார் சரிதா. அதற்குப் பழிவாங்கவும் அவரை அடையவும் திட்டமிட்டு சரிதாவை ராஜேஷுக்குத் திருமணம் செய்து வைக்கிறார் மலேசியா வாசுதேவன். அதில் அவர் வெற்றிபெறுகிறாரா, என்ன ஆகிறது சரிதாவின் நிலைமை, ராஜேஷ் பண்ணையாரின் சுயரூபத்தை அறிந்துகொண்டாரா என்பதையெல்லாம் விவரித்துச் செல்கிறது திரைக்கதை. ஒருபுறம் கல்விக்கான போராட்டம் மறுபுறம் கலவிக்கான போராட்டம் எனத் திரைக்கதை நகர்கிறது. பொறுமையாகத்தான் படத்தைப் பார்க்க முடிகிறது. சிறுவயதில் பார்த்தபோது கல்வி தொடர்பான காட்சிகள் மனத்தில் பதிந்திருக்கவே இல்லை என்பது புரிகிறது. மலேசியா வாசுதேவன் சரிதாவை அடைய முயல்வார் என்பது மட்டும் நினைவில் இருந்தது. 

கொலுசு ராஜேஷ்

வெள்ளி, மே 22, 2020

சாட்டை இல்லாத பம்பரம்


நான் இலஞ்சி ராமசாமி பிள்ளை மேல்நிலைப் பள்ளியில் படித்தபோது, கோடை விடுமுறைக்குக் குடும்பத்துடன் கோவில்பட்டிக்குச் செல்வோம். கோவில்பட்டியில் அப்போது சரஸ்வதி, ராமசாமி, நாராயணசாமி என மூன்று திரையரங்குகள் இருந்தன. கடைசியாக 1987 ஆம் ஆண்டு சென்றோம். அதன்பின்னர் அங்கே செல்வது இல்லை. சில உறவுகளும் நட்புகளும் அப்படியே சில பல காரணங்களால் அறுந்துபோவதுபோல் கோவில்பட்டியுடனான தொடர்பும் அறுந்துவிட்டது. ஆனால், பால்யத்தில் அங்கே பார்த்த பல படங்கள் அவ்வப்போது நினைவில் எழும். இந்த ஊரடங்கு காலத்தில் அப்படி எழுந்த நினைவுகளால் சில படங்களைப் பார்த்தேன்.


சிறு வயதில் ஏன் அந்தப் படத்தில் என்ன காட்சிகள் நினைவில் பதிந்திருந்தன, அவை ஏன் நினைவில் நின்றன போன்றவற்றை ஆராய்ந்து பார்ப்பதில் மனம் ஏதோ ஒருவகை ஆறுதல் கொள்கிறது. கோவில்பட்டியில் பார்த்த படங்களென ஒரே ரத்தம், ராமன் ஸ்ரீராமன், சாட்டை இல்லாத பம்பரம், அம்மன் கோவில் கிழக்காலே, பூவிழி வாசலிலே எனச் சில மனத்தின் மேல் வரிசைக்கு அடிக்கடி வந்து செல்லும். அப்போது கோவில்பட்டி நாடார் பள்ளியில் பொருட்காட்சி நடைபெறும். பொருட்காட்சியிலும் தினந்தோறும் சினிமா ஒன்று திரையிடுவார்கள். பொருட்காட்சியில் பட்டணம் பொடி விளம்பரத்துக்காக வைக்கப்பட்டிருந்த ஒரு பெரிய ஆள் உட்கார்ந்து கொண்டு கையில் உலக்கையைப் பிடித்துக்கொண்டிருப்பது போன்ற உருவம் ஒன்று இப்போதுகூட நினைவிலாடுகிறது.


சாட்டை இல்லாத பம்பரம் படத்தைத் திடீரென்று சில நாட்களுக்கு முன்னர் பார்த்தேன். மிகவும் சாதாரணப் படம். நாயகன் வெகுளியான பணக்கார இளைஞன். அவன் வீட்டு வேலையாட்களே அவனை வேலை வாங்குகிறார்கள். அந்த அளவுக்கு அப்பாவி அவன். அவன் வீட்டுக்கு எதிரே கடைவைத்திருக்கும் பொன்னம்மா என்னும் பெண்மணி, ஒரு விவரமான பொண்ணைப் பார்த்துத் திருமணம் செய்துகொண்டால் அவனது வாழ்வு உருப்படும் என்கிறாள். அவனும் அப்படி ஒரு பெண்ணைப் பார்த்து, அவளைக் காதலித்துத் திருமணம்செய்துகொள்கிறாள். அவள் ஏழைக் குடும்பத்துப் பெண். அவர்களது வாழ்வு திருமணத்துக்குப் பிறகு என்னவானது என்பது தான் படத்தின் கதை. யூடியூபில் படம் கிடைக்கிறது.


சிவகுமார், சரிதா, சோ, சங்கிலி முருகன், சாமிக்கண்ணு, காந்திமதி உள்ளிட்டோர் நடித்த இந்தப் படத்தின் கதையை கே. பாக்யராஜ் எழுத, வசனத்தை கவிஞர் வாலி எழுதியுள்ளார். ஈரோடு என் முருகேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் இது. 



ஞாயிறு, மார்ச் 15, 2020

தாராள பிரபு


சென்னையில் கருத்தரிப்பு மையத்தை நடத்தி வருகிறார் டாக்டர் கண்ணதாசன் (விவேக்). அவரிடம் தம்பதியர் பலர் குழந்தையின்மை பிரச்சினைக்காக வருகிறார்கள். தகுந்த ‘ஸ்பெர்ம் டோனர்’ இல்லாமல் அவதிப்படும் அவர் டோனரைத் தேடிக் கொண்டிருக்கிறார். கால்பந்து விளையாட்டு வீரரான பிரபுவைக் (ஹரிஷ் கல்யாண்) கண்டுபிடிக்கிறார் கண்ணதாசன். முதலில் டோனராக இருக்க மறுக்கும் பிரபு பின்னர் சம்மதிக்கிறார். இதற்கிடையே நிதி வந்தனாவுடன் (தான்யா ஹோப்) பிரபுக்குக் காதல் ஏற்படுகிறது. தான் டோனர் என்பதை நிதியிடன் சொல்லவா வேண்டாமா எனக் குழம்புகிறார் பிரபு. இதன் பின்னர் பிரபுவின் வாழ்வின் என்னவெல்லாம் நிகழ்ந்தது என்பதற்கு விடையாக உள்ளது தாராள பிரபு.

அறிவியல் எவ்வளவோ முன்னேறிவருகிறது; புதுப்புது தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அதற்கேற்ப மனித மனங்களும் மாறினால்தான் பயனுண்டு என்பதை உணர்த்தும் வகையிலான திரைக்கதை அமைந்திருக்கிறது. விக்கி டோனர் (2012) என்னும் இந்திப் படத்தை மறு ஆக்கம் செய்திருக்கும் இயக்குநர் கிருஷ்ணா மாரிமுத்து தமிழுக்கு ஏற்ற வகையில் தந்திருக்கிறார். என்றபோதும், தமிழுக்குப் படம் சற்று அந்நியமாகத் தான் இருக்கிறது. விந்து தானம், மறு மணம், தத்தெடுப்பு எனப் பல விஷயங்களைப் படம் கையாண்டிருக்கிறது. ஆனால், இயன்றவரை அதைப் பிரச்சாரப்படுத்தாமல் இயல்பான கதையோட்டத்திலேயே தந்திருப்பதால் படத்தை ரசிக்க முடிகிறது. எல்லோருக்கும் குழந்தை தந்த ஒருவருக்குக் குழந்தை இல்லாத சூழல் அதை அவர் எப்படிச் சமாளிக்கிறார் என்ற ஒருவரிக் கதையை ஒரு முழுநீளப் படமாகத் தரத் தேவையான அம்சங்களைக் கொண்டே திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. விந்தணு தானம் என்ற, சமூகம் சட்டென்று ஏற்றுக்கொள்ள இயலாத, அம்சத்தைப் படம் மையமாகக் கொண்டிருந்தாலும் அதை முகம்சுளிக்கச் செய்யாத வகையில் திரைக்கதையில் கையாண்டிருக்கிறார்கள்.  


நடிகர் ஹரிஷ் கல்யாண் சுறுசுறுப்பான கால்பந்து விளையாட்டு வீரனாக, ஸ்போட்ர்ஸ் கோட்டாவில் வேலை தேடிவிட வேண்டும் என்ற யத்தனிப்புடன் செயல்படுபவராக நடித்திருக்கிறார். விந்தணு தானத்துக்காகத் தன்னைத் தேடி வரும் டாக்டர் விவேக்கைக் கண்டு விலகிவிலகி ஓடுவது, பின்னர் தனது கோச்சுக்குக் குழந்தை இல்லாததால் அவர் பட்ட கஷ்டங்களை உணர்ந்து தான் விந்து தானம் தரச் சம்மதிப்பது, காதலிடம் உண்மையைச் சொல்வதா வேண்டாமா எனத் தவிப்பது என பல காட்சிகளில் உறுத்தல் இல்லாமல் நடித்திருக்கிறார்.

விவேக்குக்கு முக்கியமான படம் இது. நகைச்சுவை, குணச்சித்திரம் இரண்டும் கலந்து உருவாக்கப்பட்ட கதாபாத்திரம். அதைச் சரியாக உணர்ந்து நடித்திருக்கிறார் விவேக். ஆனால், அவரது கதாபாத்திரம்தான் சற்று நெருடல். ஒரு பெரிய மருத்துவமனையை நடத்திவரும் அவர் ஒரே ஒரு டோனரை நம்பிச் செயல்படுவதும், எப்போதும் ஹரிஷை மட்டுமே சுற்றிக்கொண்டிருப்பது நம்பும்படியாக இல்லை.  ஆர்.எஸ். சிவாஜியின் நகைச்சுவை ரசிக்கும்படி இருக்கிறது. அதுவும் உண்மையை பிரபுவிடம் போட்டு உடைத்துவிட்டு விவேக்கிடம் ஏன் இப்படிச் செய்தீர்கள் எனக் கேட்கும் இடம் அழகு.



தான்யா ஹோப் அழகாக இருக்கிறார் ஆனால் அழகுப் பதுமையாக மட்டும் பயன்பட்டிருக்கவில்லை. தான் விவாகரத்தானவள் என்பதைக் காதலனிடம் மிக இயல்பாகச் சொல்கிறார். தன்னால் குழந்தையைத் தர முடியாது என்பதை உணரும்போது வெடித்தழுகிறார்; குழந்தையைத் தத்தெடுக்கும் காட்சியில் இயல்பான பெண்ணாகத் தன்னை வெளிப்படுத்தியிருக்கிறார். செல்வ குமாரின் ஒளிப்பதிவு, காட்சிகளை அழகாக்கி இருக்கிறது. ஓரிரு பாடல்கள் கேட்கும்படி உள்ளன. பின்னணியிசை சராசரி.   

குழந்தையின்மையால் பாதிக்கப்பட்டிருக்கும் சிலரையாவது இதைப் போன்ற படங்கள் சிந்திக்க வைத்தால் நலமாக இருக்கும். சாதி, மதம், வெட்டுக் குத்து எனத் தொடர்ந்து படங்களைப் பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில் எந்த வில்லத்தனமும் இல்லாமல் மனித உறவுகளை முன்னிருத்தி, ஆரோக்கியமான அறிவியல் உத்தியின் சாதக அம்சங்களைத் தாங்கி வந்திருக்கும் படம் என்பதாலேயே படத்தை ரசிக்க முடிகிறது.

ஞாயிறு, மார்ச் 08, 2020

ஜிப்ஸி: மதம் பிடிக்காத மனித சாதி


காஷ்மீரீல் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பெற்றோர் பலியான சூழலில் கைக்குழந்தையாக ஒரு பெரியவரிடம் அடைக்கலமாகிறார் ஜிப்ஸி (ஜீவா). சே எனும் குதிரையும் அந்தப் பெரியவரும் ஜிப்ஸிக்குத் துணை. பெரியவர் மறைந்துவிட்டபிறகு நாகூருக்கு வரும் ஜிப்ஸியின் காதலுக்குரியவளாகிறாள் வஹிதா (நடாஷா சிங்). அவளும் ஜிப்ஸியும் மணமுடித்துக்கொண்டு வடக்கே ஒரு சிறு நகரில் குடியேறுகிறார்கள். வயிற்றில் குழந்தையுடன் இருக்கும் வஹிதாவையும் ஜிப்ஸியையும் பிரித்துவிடுகிறது ஒரு மதக் கலவரம். அதன் பின்னர் அவர்கள் சேர்ந்தார்களா இல்லையா என்பதை அரசியல் பார்வையுடன் சொல்கிறது ஜிப்ஸி.  

இயக்குநர் ராஜுமுருகன் மத்திய அரசின் திட்டமொன்றைப் பகடியை உத்தியாக்கி விமர்சித்த ஜோக்கர் படத்துக்குப் பின்னர் வெளியாகியுள்ள ஜிப்ஸி தணிக்கைத் துறையினருக்குக் கடுமையான வேலை வைத்திருக்கும் என்பது படத்தைப் பார்த்தாலே தெரிகிறது. நாடு நெருக்கடியான சூழலை எதிர்கொள்ளும்போது கலைஞர்கள் மக்கள் பக்கம் நின்று அவர்களது வாதைகளையும் வேதனைகளையும் சொல்ல வேண்டும். அந்த வேலையைத் தான் ராஜுமுருகன் செய்திருக்கிறார். அதைத் திருத்தமாகச் செய்திருந்தால் ஜிப்ஸி மிகப் பெரிய அளவில் கொண்டாடப்பட்டிருக்கும். 


ஜிப்ஸியை வளர்த்த பெரியவர் மறைந்தபோது அவரை நீரோட்டத்தில் ஒரு பாறைமீது கிடத்தியிருக்கும் தோற்றம் நமக்கு ஒரு நிகழ்வை நினைவூட்டும். கலவரத்தின்போது வஹிதாவை வாளுயர்த்தி மிரட்டும் சோனுகுமாரை பின்னர் ஒரு காட்சியில் கொல்ல வரும் மதவாதி ஒருவனை மக்கள் திரண்டு செங்கற்களால் எறிந்துவிரட்டுகிறார்கள். இந்திய வரலாற்றில் மதப் பிரிவினையின் குறியீடான செங்கற்கள் இங்கே மத ஒற்றுமைக்குக் குறியீடாக மாறி நிற்பது அழகு. இப்படிப் படத்தில் ஆங்காங்கே சமகால கடந்தகால அரசியல் நிகழ்ச்சிகளை வாய்ப்புக் கிடைத்த இடங்களிலெல்லாம் தூவி மக்களிடையே ஒருங்கிணைப்பையும் நல்லிணக்கத்தையும் உருவாக்க முயன்றிருக்கிறார் ராஜுமுருகன். ஆனால், அதில் அவர் முழு வெற்றியைப் பெறவில்லை என்பது சோகமே.   

திரைக்கதையைப் பொறுத்தவரை ஒரு கோவையாக இல்லாமல் காட்சிகள் வெவ்வேறு நிலப் பரப்புக்கும் வெவ்வேறு உணர்வுக்கும் அடுத்தடுத்து மாறுகின்றன. இந்த மாற்றத்தை எதிர்கொள்வதற்கான கால இடைவெளி பேணப்படவில்லை; தகுந்த காரணங்களும் படத்தில் இடம்பெறவில்லை. தணிக்கைத் துறையின் குப்பைக் கூடைகளுக்குச் சென்ற படச் சுருள்களைச் சேர்த்துப் பார்த்தால் படம் ஒரு சீராக இருக்கக்கூடும். 


ஒரு நாடோடிக் கதாபாத்திரத்தை ஜீவா பொறுப்புணர்ந்து உயிர்ப்புடன் தந்திருக்கிறார்.  கலவரப் பொழுதில் கர்ப்பிணியான மனைவியை நடுத் தெருவில் விட்டுவிட்டு வந்த அவஸ்தையை, தன் உயிருக்குயிரான சே கொல்லப்பட்ட சோகத்தை எதையுமே காதில் போட்டுக்கொள்ளாமல் தன்னைத் துன்புறுத்தும் காவல் துறையினரின் கொடுங்கோன்மையை எதிர்கொள்ளும் காட்சியில் வேதனையையும் கோபத்தையும் இயலாமையையும் என உணர்வுகளை மிகச் சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார். அதே போல் நீதிமன்றத்தில் காவல் துறையினரது சித்திரவதைகளைக் காட்டுவதற்காகச் சட்டையைக் கழற்றி நிற்பது, கேரளத்தில் காவல் நிலையத்தில் சிறுநீர் கழிப்பது போன்ற காட்சிகளில் கவர்கிறார். 

நடாஷா சிங் கவலரத்தின் போது மலங்க மலங்க விழித்தபடி கைகூப்பி நிற்கும் போதும், மீண்டும் தன்னை வந்து பார்க்கும் ஜிப்ஸியை அடையாளம் காணாமல்  சிலையாக நிற்கும்போதும் உரிய நடிப்பைக் காட்டியிருக்கிறார். நாயகியின் தந்தை முத்தலிப்பாக நடித்திருக்கும் லால் ஜோஷ் மத அடிப்படைவாதியாகத் தனது கதாபாத்திரத்தை இயன்ற அளவு இறுக்கமாக வெளிப்படுத்தியுள்ளார். அவரது குரல்தான் அந்நியமாக உள்ளது. 


செல்வ குமாரின் ஒளிப்பதிவில் இந்தியாவின் பல இடங்களும் இரவும் பகலும் பனிப் பாறைகளையும் மணம் மேடுகளும் நதிக்கரைகளும் கலவரம்சூழ் பொழுதுகளும் அப்படி அப்படியே பதிவாகியுள்ளன. சந்தோஷ் நாராயணனின் பின்னணியிசை படத்துடன் ஒத்திசைந்து செல்கிறது. ஆனால். பாடல்கள் திரைப்படத்துடன் கேட்கும்போது பெரிதாக ஈர்க்கவில்லை. தெருப்பாடகனான ஜிப்ஸி மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் தந்திருக்கும் கிளைமாக்ஸ் பாடல்கூட எடுபடவில்லை.  அனைவரையும் ஈர்க்கக்கூடிய குரல் பெற்றவன் ஜிப்ஸி என்பது வசனத்தில்தான் வெளிப்படுகிறது; காட்சியிலோ பாடல்களிலோ வெளிப்படவே இல்லை. 

சாதியின் பெயராலும் மதத்தின் பெயராலும் அப்பாவிகளின் வாழ்க்கை எப்படியெல்லாம் சிதைந்துபோகிறது, அதைப் பயன்படுத்தி அரசியல்வாதிகள் எப்படி அதிகாரத்தைக் கைப்பற்றிவிடுகிறார்கள் என்பதை எடுத்துக்காட்டிய வகையில் ராஜு முருகன் கவனம் ஈர்க்கிறார்.  ஒரு பைக்கிலேயே கேரளாவிலிருந்து வடக்கே ஜிப்ஸி செல்வது நகைப்பையே தருகிறது.  ஆனாலும், சோனுகுமாரைப் பழிவாங்கும் நோக்கத்தில் அவரைத் தேடிப் போகும் ஜிப்ஸி அவரை விரட்டும்போது, தடுமாறி விழுந்த அவர் கைகளை இழந்தவர் என்பது தெரியவரும்போது திடுக்கிட நேர்கிறது. மதத்தில் பெயரால் அவரைப் பயன்படுத்திக்கொண்டு சாதியின் பெயரால் அவரை இழிவுபடுத்திய கும்பலுக்கு அவரும் இரையாகியுள்ளார் என்பது அதிர்ச்சி தருகிறது. ஆனால் அதன் பின்னரான சம்பவங்கள் மிகச் சாதாரணமாகக் கடந்து செல்கின்றன. இப்படிப் படம் முழுமை பெறாமல் பாதிக் கிணற்றைத் தாண்டிய நிலையிலேயே பெரும் பள்ளத்தில் விழுந்து விழுந்து எழுகிறது. 


பாதிக்கப்பட்ட கைகூப்பிய கரங்களும் மதத்தின் பெயரால் வாளேந்திய கையும்  கொண்ட புகைப்படங்கள் பார்வையாளர்களுக்குப் பல வரலாற்றுச் சம்பவங்களை நினைவூட்டி எச்சரிக்கின்றன. ஆனால், ஜிப்ஸி வஹீதாவிடையே கண்டவுடன் காதல் மலரும் காட்சிகள் பெரிதாக ரசிக்கவில்லை. மறுநாள் மணமுடிக்க உள்ள நிலையில் ஜிப்ஸியுடன் வஹிதா புறப்பட்டு வருவது யதார்த்தத்துக்குப் பொருந்தாததாக உள்ளது.  காதல் காட்சிகள் மெஹந்தி சர்க்கஸ் படத்தை நினைவுபடுத்துகின்றன. அதில் சர்க்கஸ், இதில் குதிரை நடனம் அதுதான் வேறுபாடு. ஒட்டுமொத்தமான ஒரு வார்ப்பாகப் படம் அமையாமல் துண்டு துண்டு துணுக்குகளாகக் கோக்கப்பட்டுள்ளதால் முழுதாகப் படத்தை ரசிக்க இயலாமல் போகிறது.    

தான் எச்சரிக்க விரும்பிய அரசியல் தொடர்பான விஷயங்களை உணர்த்த மட்டுமே படம் உருவாக்கப்பட்ட தோற்றத்தைப் பெற்றுள்ளது. அவையும் ஆழமான புரிதலின் அடிப்படையில் அமையாமல் வெறும் துணுக்குத் தோரணங்களாகவே உள்ளன. ஆகவே, அந்த அரசியல் மிளிர்ந்த அளவுக்குத் திரைப்படமாக ஜிப்ஸி மிளிரவில்லை. 

ஞாயிறு, மார்ச் 01, 2020

திரௌபதி: எட்டுத் திக்கும் வன்மம்


சிலம்ப வாத்தியாரான ருத்ரபிரபாகரன் (ரிச்சர்ட் ரிஷி) தன் மனைவி திரௌபதியையும் (ஷீலா ராஜ்குமார்) அவருடைய தங்கை லட்சுமியையும் ஆணவக்கொலை செய்துவிட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு கைதானவர். அவர் ஜாமீனில் வெளிவருகிறார். சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள வழக்கறிஞர் கருணாவையும் அரசியல் பிரமுகர் செஞ்சி சேகரையும் அவர் அடுத்தடுத்து கொலைசெய்கிறார். இந்தச் சூழலில் அவருடைய மனைவி திரௌபதி உயிருடன் இருப்பதாக அவருக்குத் தகவல் கிடைக்கிறது. ருத்ர பிரபாகர் ஏன் இந்தக் கொலைகளைச் செய்கிறார்? ஆணவக் கொலைக்காளானதாகச் சொல்லப்படும் திரௌபதி எப்படி உயிருடன் உள்ளார், ருத்ர பிரபாகரன் குடும்பத்துக்கு என்ன நடந்தது போன்ற வினாக்களுக்கு விடை தருகிறது திரௌபதி.

இயக்குநர் மோகன் திரைக்கதையை ஒரு நோக்கத்துடன் அமைத்துள்ளார் என்பது தெளிவாகத் தெரிகிறது. அவரது நோக்கமே முதன்மை பெறுவதால் வழக்கமான திரைக்கதையின் கட்டுமானத்தைப் பற்றி அவர் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. போலித் திருமணம், நாடகக் காதல் என சில அம்சங்களையும் இயற்கை விவசாயம், கிராமப்புற நலன் எனச் சில அம்சங்கங்களையும் எதிரெதிர் பாதையில் கொண்டுசெலுத்தி திரைக்கதையை அமைத்திருக்கிறார். இந்தப் பயணத்தில் சாதிப் பெருமை என்னும் பழமைவாதக் கருத்தைத் திரைக்கதையில் மையமாக்கி அதற்கு ஊட்டச்சத்தான உணவை வழங்க முயன்றிருக்கிறார். என்றபோதும் அது சவலைக்குழந்தையாக வளர்ந்து நிற்கிறது. 


ஒரு சமூகத்தை மேம்படுத்த சினிமா எனும் சாதனத்தை பெரும்பான்மையோர் பயன்படுத்தி வரும் வேளையில் அதே சாதனத்தை சாதி எனும் பழமைவாதக் கருத்தைப் பரப்ப இயக்குநர் தேர்ந்தெடுத்திருப்பது அதிர்ச்சியாக உள்ளது. சக மனிதரை இழிவுபடுத்தும் காட்சிகளை வைப்பது குறித்து எந்தக் கிலேசமுமின்றி இயக்குநர் காட்சிகளைக் கையாண்டிருக்கிறார். நமது சாதியச் சமூகத்தின் சாதியப் பாகுபாட்டைக் களைய பெரும்பங்கு வகிக்கும் காதல் எனும் இயல்பான உணர்வை முடிந்த அளவு கொச்சைப்படுத்தியுள்ளன திரைக்கதையில் இடம்பெற்றுள்ள சம்பவங்கள். படத்தில் நாயகனும் காதல் திருமணம் செய்துள்ளார். ஆனால், அவர் சொந்தத்திலேயே காதல்செய்தவர். 

படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள பொறுப்பான கதாபாத்திரங்களும் பொறுப்பற்ற வசனங்களைப் போகிற போக்கில் உதிர்த்துச் செல்கின்றன. “இந்த மாதிரி கீழ்த்தரமானவங்கள இப்படித்தான் கொடூரமா கொல்லணும்” என்கிறார் ஒரு வழக்கறிஞர். “நாம எப்ப சானிடரி பேட்ஸ் யூஸ் பண்ண ஸ்டார்ட் பண்ணமோ அப்பவே கார்ப்பரேட் டிசைட் பண்ணிட்டாங்க நாம எப்ப பிள்ளைப் பெத்துக்கணும்னு” என்கிறார் ஒரு மருத்துவர். இயக்குநர் பார்த்தறிந்த மருத்துவர் இப்படியான புரிதல்கொண்டவர்தான் போலும்.

பஞ்சாயத்துக் காட்சியில் பிரபாகனிடம் ”நீங்க ஏன் மாமா அவங்ககிட்ட பேசிட்டிருக்கீங்க” என்று சொல்லியபடி, வழக்கறிஞரையும் அரசியல்வாதியையும் பார்த்து சமூக சேவகியான திரௌபதி வெளிப்படுத்தும் உடல்மொழி சாதித் திமிரின் வெளிப்பாடு.  நூறு நாள் வேலைத் திட்டம் குறித்த திரௌபதியின் புரிதலும் வன்மமாக வெளிப்பட்டுள்ளது. எங்கெல்லாம் வாய்ப்புக் கிடைக்கிறதோ அங்கேயெல்லாம் கண்ணி வெடியைப் புதைத்துவைத்துள்ளதைப் போல் சாதி வன்மத்தைப் புதைத்துவைத்துள்ளது படம். 

கல்யாண வயதில் உள்ள பெண்களை எல்லாம் ஒரு கூட்டம் திட்டமிட்டு வஞ்சகத்தால் சீரழிக்க முயல்வது போன்ற தோற்றத்தை உருவாக்க படம் முயல்கிறது. மணமகள் விருப்பமே இல்லாமல் பதிவுத் திருமணங்கள்  நடத்திவைகப்படுவதான பிம்பத்தை நிறுவ இயக்குநர் கடும் பிரயத்தனத்தை மேற்கொண்டிருக்கிறார். எங்கோ ஓரிடத்தில் தவறாக நடந்த ஒரு உதாரணத்தை எடுத்துக்கொண்டு சமூகத்தில் ஆரோக்கியமாகக் கையாளப்படும் காதல் திருமணம் பெற்றோருக்கு எவ்வளவு பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது என விஷயத்தை அப்படியே தலைகீழாக்க இயக்குநர் முயன்றுள்ளார். பல காட்சிகளில் வன்மத்தைக் கக்குகின்றன வசனங்கள். தணிக்கையில் சில வசங்களின் ஒலி முடக்கப்பட்டுள்ளது என்றபோதும் சில வன்மமான வசனங்களைத் தணிக்கதைத் துறையினர் எப்படி அனுமதித்தார்கள்?

பரபரப்பான இடங்களில் எந்தச் சிக்கலும் இல்லாமல் இரண்டு கொலைகளைச் செய்துவிடுகிறாரே அது எப்படி? பெண் குழந்தைகள் தங்கள் துணைவரைத் தேர்ந்தெடுக்கும் உரிமை அவர்களுக்கு உள்ளது எனும்போது, பெற்றோரின் பார்வையில்தான் பதிவுத் திருமணம் நடத்தப்பட வேண்டும் என்னும் கோரிக்கையை எப்படி எழுப்ப இயலுகிறது? இப்படி அநேகக் கேள்விகளை எழுப்பும் வாய்ப்பைத் தாராளமாக வழங்குகிறார் இயக்குநர்.

நடிகர்கள் பலரது நடிப்பு ஏதோ ஒரு சுரத்தற்ற நாடகத்தைப் பார்ப்பது போன்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. பல காட்சிகளில் தொலைக்காட்சி நாடகத்தைப் போன்று காட்சிகள் நகர்கின்றன. இயையமைப்பாளர் ஜுபினின் பின்னணியிசை பெரிய அளவில் உறுத்தவில்லை; அதே நேரத்தில் பெரிதாகக் கைகொடுக்கவும் இல்லை.  குக்குக்குக்குக்கூ எனும் பாடல் முணுமுணுக்கவைக்கிறது. மனோஜ் நாராயணின் ஒளிப்பதிவும் சராசரி ரகம்.  

பட்டறையில் வேலை பார்க்கும் படித்த வசதியான பெண்ணைக் காதலித்து மணமுடித்தால் வாழ்க்கையில் செட்டிலாகிவிடலாம் என நம்பும் ஜேக்கைப் பார்த்து நாயகன் ”படிக்காதது உன் தப்பு” என்று பேசுகிறார். இப்படியான அபத்தமான வசங்களுக்கும் காட்சிகளுக்கும் படத்தில் பஞ்சமேயில்லை. 

”நான் அட்டகத்தி சார்” 

”எந்த மாதிரி வம்சத்துல பொறந்துட்டு எப்படிப் பேசுற”

”இந்த முறை டவுசரத் தான் அறுத்தேன் அடுத்த முறை அறுத்துருவேன்”

”எங்களுக்கு மண்ணு பொண்ணு ரெண்டுமே முக்கியம் அதுல யார் கைய வச்சாலும் கைய வெட்டுவோம்” 

இவையெல்லாம் இந்தப் படத்தில் வெவ்வேறு காட்சிகளில் இடம்பெறும் வசனங்கள். சமூகநீதிக்காகக் குரல் கொடுக்கும் ஒரு மாநிலத்தில் இத்தகைய விஷ வித்துக்கள் போன்ற வசனங்களை தன் படத்தில் ஒலிக்க விடுவதில் இயக்குநருக்குப் பெருமிதம் இருக்கலாம்; ஆனால், மேம்பட்ட சமூகம் பற்றிய கனவு காணும் ஒரு பார்வையாளனை இவை கவலைகொள்ளச் செய்கின்றன. படத்தில் நாயகன் இரண்டு காட்சிகளில் மீசையை முறுக்குவார்.  முதலில் திரௌபதி, திலகாவின் போட்டோவை மார்பிங் செய்து வெளியிட்டுவிடுவேன் என மிரட்டு இளைஞனின் டவுசரை அறுத்து அம்மணமாக்கும்போது. இரண்டாவது தன் மனைவி கருவுற்ற சேதி அறிந்தபோது. 

மூன்று மணி நேரம் தொடர்பில் இல்லாத தன் பெண்ணைப் பற்றி வரும் தகவலைச் சரிபார்க்காமல் அவசரப்பட்டு உயிரை மாய்த்துக்கொள்கிறார் ஒரு தந்தை. தன் பெண் பதிவுத் திருமணம் செய்து கொண்டாள் என்று சொல்கிறாளே சரி பரவாயில்லை அவளிடம் விசாரித்துப் பார்க்கலாம் என்ற பொறுமைகூட அவருக்கில்லை. சட்டென்று விஷம் குடித்து இறந்துபோகிறார் என்றால் இந்தச் சமூகம் என்ன மனநிலையில் உள்ளது? அப்படியா உன் சாதி உயர்ந்தது எனும் கேள்வியே எழுகிறது.

திருமணத்துக்குப் பின்னர் தன்னை மிரட்டும் ஒருவன் குறித்து கணவனிடம் பேசப் பயந்து தந்தையிடம் ஓடிவருகிறார் ஒரு மனைவி. தனக்கே தெரியாமல் தன்னைப் பதிவுதிருமணம் செய்ததாக மிரட்டுகிறானாம் ஒருவன். அந்த மகளின் பிரச்சினையை மருமகனிடம் பேசும் துணிவு அந்தத் தந்தைக்கு இல்லை. கோடி கோடியாகப் பணம் கொடுத்துப் பிரச்சினையைச் சமாளித்தாராம் அவர். அழுதுகொண்டே நீதிமன்றத்தில் சொல்கிறார் அந்தத் தந்தை. நீங்கள் பார்த்துவைத்து திருமணம் உங்கள் சாதியில் ஒருவரைத் தான் மணமுடித்துவைத்துள்ளீர்கள். அந்த மருமகனிடம் உங்களால் பேசவே முடியவில்லை என்றால் இது என்னவிதமான உறவு? 
இயக்குநர் பெருமிதமாகக் கருதும் சமூகம் இப்படியான மனிதர்களைத் தான் உருவாக்கியுள்ளது என்பது காட்சிகளில் அம்பலமாகிறது. இதைப் பார்க்கும் ஒரு பார்வையாளனுக்கு அந்தச் சமூகத்தின் மீது எப்படி நம்பிக்கை வரும்? இப்படியான ஒரு திரைப்படத்தைச் சமூகத்துக்கு வழங்கியதன் மூலம் இயக்குநர் பெருமை கொள்வதைப் போன்ற சிறுமை இந்தச் சமூகத்துக்கு வேறில்லை.  உருவாக்கரீதியான அமெச்சூர்தனத்தைப் பொறுத்துக்கொள்ள முடிகிறது; ஆனால், கருத்தியல்ரீதியாக விஷம் கக்கும் திரௌபதி கொண்டாடப்பட வேண்டியவள் அல்ல; புறக்கணிக்கப்பட வேண்டியவள்.

புதன், ஜனவரி 01, 2020

சில்லுக் கருப்பட்டி ஒரு டிஜிட்டல் கருப்பட்டி,

நான்கு தனித்தனிக் கதைகள். மென்னுணர்வு கலந்து பிசைந்து அவற்றை முழுநீளப் படமாகத் தந்திருக்கிறார் ஹலிமா சமீம். முதல் கதையான பிங்க் பேக், குப்பை பொறுக்கும் சிறுவன் மகேஷின் வாழ்க்கையுடன் பணக்காரச் சிறுமி ஒருத்தியை இணைக்கிறது. இரண்டாம் கதையான காக்கா கடி, புற்றுநோய் பாதித்த முகிலன் என்ற ஐடி இளைஞன், மது என்னும் ஃபேஷன் கலைஞர் பெண்ணுக்குமான பிரியத்தைப் பேசுகிறது.  டர்ட்டில்ஸ் என்னும் கதை, திருமணமேசெய்துகொள்ளாமல் முதுமை அடைந்துவிட்ட யசோதா, முப்பதாண்டுகளுக்கும் மேல் குடும்பம் நடத்திய பின்னர் மனைவியை இழந்த நவநீத கிருஷ்ணன் இவர்களுக்கிடையேயான நேசத்தைச் சொல்கிறது. திருமணம் முடிந்து 12 ஆண்டுகளுக்குப் பிறகு தம்பதிக்கிடையே ஏற்படும் உரசலையும் தீர்வையும் முன்வைக்கிறது இறுதிக் கதையான ஹே அம்மு.

பாலுமகேந்திராவின் கதை நேரம் போல் மெல்லுணர்வு நிரம்பி வழியும் திரைக்கதையையே எழுதியிருக்கிறார் ஹலிமா. குப்பை பொறுக்கும் சிறுவன் டேஷ் என்னும் கதாபாத்திரம் மட்டுமே உயிர்ப்புடன் இருக்கிறது. மாஞ்சா என்னும் மகேஷ் கதாபாத்திரம் தட்டையாக அமைக்கப்பட்டிருக்கிறது.  வைர மோதிரம், ஏழைச் சிறுவன், செல்வந்தச் சிறுமி என்னும் வழியில் பயணப்பட்டு நீதிபோதனைக் கதையாகிறது இதன் பயணம்.

சொல்லக் கூச்சப்படும் இடத்தில் புற்றுநோய் பாதித்த முகிலனுக்கும் மதுவுக்கும் ஓலாவில் தொடர்ந்து நிகழும் சந்திப்பும் காதலும்  சினிமாத்தனமானது. முடிந்தவரை புற்றுநோய் சோகத்தைத் தவிர்த்திருக்கிறார் என்பது ஆறுதலாக உள்ளது. இந்த அத்தியாயம் பார்த்திபனின் பொண்டாட்டி தேவை படத்தை நினைவுபடுத்தியது.

மனைவியை இழந்த நவநீதனுக்கும் யசோதாவுக்குமான முதிய வயது சந்திப்பும்  முதலை நடையிடையே அவர்களுக்குள் ஏற்படும் உரையாடலும் ஒருவகையில் ஓர் அந்தி மந்தாரை. திருமணத்தை மறுத்தவராக இல்லாமல் திருமணம் ஆகாதவராக யசோதாவைச் சித்தரித்திருப்பது மிகப் பழமையாக உள்ளது. அவர்களுக்கிடையே ஏற்படும் அணுக்கமும் அன்பும் புதுமையாக உள்ளன.

தனபாலுக்கும் அமுதினிக்குமான திருமண உறவைச் சொல்லும் கதை ஓரளவு உற்சாகமாகக் கையாளப்பட்டுள்ளது. அவர்களிடையே எழும் விரிசல் புதிதில்லை என்றபோதும் புத்துணர்வுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சமுத்திரகனியை மிகச் சரியாகப் பயன்படுத்தியுள்ளார் இயக்குநர். சுனைனாவின் நடிப்பு மிக இயல்பாக உள்ளது.

துண்டு துண்டுக் கதைகள் என்பதால் ஒரு சினிமாவைப் பார்த்த உணர்வு எழவே இல்லை. ஏதோ வெப் சீரிஸின் சில அத்தியாயங்களைப் பெரிய திரையில் பார்ப்பது போலவே தோன்றுகிறது.

பிறர் சொல்லத் தயங்கும் வித்தியாசமான விஷயங்களை எடுத்துக்கொண்டு அவற்றைப் படமாக்க வேண்டும் என்னும் யத்தனிப்பு படத்தில் துருத்தலாகத் தெரிகிறது. தனபால் உறங்கும்போது வாக்கும் கிளீனரால் அமுதா சுத்தப்படுத்தும்போது அவனுக்கு ஏற்படும் எரிச்சல்போல் அது உள்ளது. எல்லாக் கதைகளிலும் அறவுணர்வானது முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கிறது. சினிமாவில் அறவுணர்வு சொல்லப்படலாம் ஆனால், அதற்காகவே படம் எடுத்தது போன்ற உணர்வை இந்தச் சில்லுக்கருப்பட்டி ஏற்படுத்திவிடுகிறது.

ஒளிப்பதிவு உறுத்தலில்லாமல் இருக்கிறது. ஆனால், பின்னணியிசை படத்தின் மென்னுணர்வை உச்சபட்சமாக அதிகரிக்கும் வகையில் பல காட்சிகளில் முழங்கிக்கொண்டே இருக்கிறது.

மிகையுணர்வு இல்லாமல் நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். அந்த வகையில் இயக்குநர் வெற்றிபெற்றிருக்கிறார். ஆனால், படத்தின் இயல்பில் ஒரு செயற்கைத் தனம் ஒட்டியிருக்கிறது. அது சில்லுக்கருப்பட்டியை இயல்புக்கு மாறான சினிமாவாகக் காட்டுகிறது. மென்னுணர்வாளர்களுக்கு இப்படம் பெரிய சுவாரசியம் தரலாம். ஆனால், அதிகப்படியான வன்முறை நிறைந்த சினிமாவில் குருதிபாய்வது போல் இதில் நல்லுணர்வு பாய்ந்துகொள்கிறது.

ஓலா போன்ற வாடகை வாகனங்களில் இப்படி ஒரே மனிதர்கள் தொடர்ந்து பயணம்செய்வது சாத்தியமா? அமேசான் அலெக்ஸா ஒரு மாபெரும் தேவ தூதன் போல் செயல்படுவது நகைப்புக்குரியதாகிறது.

சில்லுக்கருப்பட்டியையே மிகச் சிறந்த சினிமாவாக விதந்தோதும் வகையில் தான் தமிழ் திரைப்பட உலகம் இருக்கிறது என்பது வேதனையானதே. இந்தச் சில்லுக் கருப்பட்டி ஒரு டிஜிட்டல் கருப்பட்டி, பார்க்க முடியும் உண்ண முடியாது.

ஞாயிறு, டிசம்பர் 22, 2019

ஹீரோ அல்ல ஜீரோ

சிறுவயது முதலே சக்திமான் மீது விருப்பம் கொண்டு சூப்பர் ஹீரோவாகும் ஆசை கொண்டவர் சக்தி (சிவகார்த்திகேயன்). ஆனால், பிழைப்புக்காக அவர் போலிச் சான்றிதழ் தயாரித்துக் கொடுக்கும் வேலையைச் செய்கிறார்.  கல்லூரிச் சேர்க்கை நேரத்தில் மாணவர்களுக்கு அனுமதி வாங்கிக் கொடுத்து அதிலும் கமிஷன் பார்க்கிறார். அவருடைய தங்கை போன்ற மதிக்கு ஏரோ நாட்டிகல் படிப்புக்காக சீட்டுக்கு அலைகிறார். அது கிடைக்காமல் போகிறது. மதி கண்டுபிடித்த உப்புநீர் இன்ஜினைக் கண்காட்சிக்கு வைத்து அதனால் சீட் பெறுகிறார். ஆனால், மதி காப்புரிமை பெற்ற கண்டுபிடிப்பைத் திருடிவிட்டார் எனச் சொல்லிவிடுகிறார்கள். 

அதில் மனமுடைந்த மதி தற்கொலைசெய்துகொள்கிறார். மதியின் கண்டுபிடிப்புகளுக்குப் பின்னணியில் சத்தியமூர்த்தி (அர்ஜுன்) இருக்கிறார். மதி தற்கொலைக்குப் பின்னணியில் இருக்கிறார் மகாதேவ் (அபய் தியோல்).  அபய் தியோலைப் பழிவாங்க சூப்பர் ஹீரோ அவதாரம் எடுக்கிறார் சக்தி. அதில் அவர் வென்றாரா, எதிரிகளை ஒழித்தாரா, சத்ய மூர்த்தி எவ்வகையில் உதவினார் போன்ற கேள்விகளுக்கு விடை தருகிறது ஹீரோ.

கல்விக்கு எதிரான கருத்துப் பேசும் படமாக இதை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் பி.எஸ்.மித்ரன். நமது கல்விமுறைக்கு எதிராகக் குரல் தருவதற்காகவே ஹீரோவின் திரைக்கதை பயணிக்கிறது. ஆனால், ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள் படத்தில் உள்ளன. சுவாரசியமற்ற சம்பவங்களாலும் காட்சிகளால் படத்தை நகர்த்தியிருக்கிறார்கள். படம் முழுக்க அந்தரத்தில் பறப்பது போன்று எந்த ஒட்டுமில்லாமல் உறவுமில்லாமல் இருக்கிறது.
திறமையிருந்தும் அதிக மதிப்பெண் பெறாத மாணவர்களை சத்யமூர்த்தி அழைத்துவந்து படிப்புச் சொல்லிக்கொடுக்கிறார். புதுப் புதுக் கண்டுபிடிப்புகளை அவர்கள் நிகழ்த்துகிறார்கள். அரசுக்கே தெரியாமல் அவர் கல்வி நிறுவனம் நடத்துகிறார் என்பதெல்லாம் காதில் சுற்றப்படும் பெரிய பூ. சத்திய மூர்த்தி மாணவர்களை உருவாக்கி உலகம் முழுக்க அனுப்புகிறார். அது எப்படி சாத்தியம்? அவர் நிறுவனம் நடத்துவதே தெரியாத போது என்ன அடிப்படையில் அவருடைய மாணவர்கள் சாதிக்கிறார்கள். ஏதாவது கண்டுபிடிப்பு வெளி உலகத்துக்கு வந்தால் அதை மோப்பம் பிடித்துவிடுகிறான் வில்லன். ஆனால், சத்திய மூர்த்தி அவனுக்கே தெரியாமல் எல்லாவற்றையும் செய்கிறார் என்பதையெல்லாம் நம்பும்படியாக இல்லை.  

மாணவர்களின் புதுப் புதுக் கண்டுபிடிப்புகளை அபகரித்து அவர்களை முடமாக்கிவிட்டுக் கண்டுபிடிப்புகளைக் காசாக்குகிறார் அபய் தியோல். அந்தக் கதாபாத்திரச் சித்தரிப்பே சரியாக இல்லை. அவர் யார், கல்வி நிறுவனம் நடத்துகிறாரா, எல்லா விஷயத்தையும் அறிந்து எப்படித் தடுக்கிறார்? இவை எதற்கும் பதில் இல்லை.

நல்ல மதிப்பெண் எடுக்க முடியாத மாணவர்களிடமும் பெரிய திறமைகள் ஒளிந்திருக்கும். அவற்றைக் கண்டுபிடித்து ஊக்குவித்தால் மாணவர்கள் பெரிய அளவில் வருவார்கள். அதற்கு நமது கல்வி முறை உதவிகரமாக இல்லை. இதைச் சொல்லும் இந்தப் படம் அதை நேர்த்தியாகவும் ஒழுங்காகவும் சொல்லவில்லை என்பது படத்தின் பெரிய பலவீனம்.
வழக்கறிஞர் ஒருவர் தான் படிக்க நாற்பது லட்சம் ரூபாய் செலவு செய்வதாகக் கூறுகிறார். கல்வி முறை பற்றி அறிந்த ஒருவர் இதைக் கேட்டுச் சிரிக்கத்தான் செய்வார். மாணவர்களின் ரப் நோட்டில் அவர்களுடைய திறமையை அறியலாம் என்ற சாதாரணக் கருத்தை ஊதிப் பெருக்கி சூப்பர் ஹீரோவரை கொண்டு சென்றதே அபத்தம்.

சிவகார்த்திகேயன் வழக்கம் போல் நடித்திருக்கிறார். அர்ஜுனுக்கு முக்கியமான வேடம் அதை ஒழுங்காகச் செய்திருக்கிறார். கதாநாயகி என்ற ஒருவர் வேண்டும் என்பதற்காக கல்யாணி பிரியதர்ஷனை வைத்திருக்கிறார்கள். அழகம் பெருமாள், இளங்கோ குமார வேல், ரோபோ சங்கர் போன்றோரும் நடித்திருக்கிறார்கள். இசை, பாடல்கள் யுவன் சங்கர் ராஜா. இறுதியில் ஒரு பாடலை இளையராஜா பாடியிருக்கிறார்.   

கல்வி முறைக்கு எதிராகக் கருத்து சொல்வதற்கும் பெரிய கல்வி அவசியம். அது இல்லாமல் படமெடுத்தால் அது சூப்பர் ஹீரோ படமாக உருவாகாது. இப்படியான அமெச்சூர் படமாகத் தான் உருவாகும். இவன் ஹீரோ அல்ல வெறும் ஜீரோ.

ஞாயிறு, டிசம்பர் 15, 2019

காளிதாஸ்: காதலித்தால் போதுமா?

காதலித்து மணந்துகொண்டாலும் தன் முழு நேரத்தையும் காவல் துறைக்கு ஒதுக்கிவிட்ட ஆய்வாளர் காளிதாஸ் (பரத்). எப்போதும் வேலை வேலை என்று அலைந்து வீட்டைக் கவனிக்காததால் அவருடைய மனைவி வித்யாவுக்கு (ஆன் ஷீத்தல்) பெருங்கோபம். இந்தச் சூழலில் அவருடைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அடுத்தடுத்து இரண்டு பெண்கள் உயரமான மாடியிலிருந்து விழுந்து மர்மமான முறையில் இறந்துவிடுகிறார்கள். இந்த வழக்கை விசாரிக்க துணை ஆணையர் ஜார்ஜ் (சுரேஷ் மேனன்) வருகிறார். காளிதாஸ் இறந்த பெண்கள் தற்கொலைசெய்துகொண்டார்கள் என்கிறார். சுரேஷ் மேனன் அவை கொலையாகவும் இருக்கலாம் என்கிறார். மர்ம மரணங்கள் தொடர்கின்றன. அவை தற்கொலையா, கொலையா, இவற்றின் பின்னணி மர்மம் என்ன? காளிதாஸுக்கும் அவருடைய மனைவிக்கும் இடையிலான பிணக்கு தீர்ந்ததா போன்ற கேள்விகளுக்கு விடைகளாக விரிகிறது திரைக்கதை.
இதைப் போன்ற உளவியல்ரீதியான தொடர் கொலைப் படங்கள் பல வந்துவிட்டன. என்றபோதும், இறுதிவரை படத்தை இயன்ற அளவு தொய்வின்றி நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் ஸ்ரீசெந்தில். ஜார்ஜ் கதாபாத்திரம் வழக்கமான போலீஸ் கதாபாத்திரம் போல் அல்லாமல் படைக்கப்பட்டிருக்கிறது. தனிமையின் துயரை வெளிப்படுத்தும் வகையில் வித்யா கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருக்கிறது. வழக்கமான புலனாய்வுப் படம் போல் அல்லாமல், காவல் துறையினரின் கடமை உணர்வு குடும்ப உறவுகளில் ஏற்படுத்தும் சிக்கல்களையும் அவ்வப்போது வெளிப்படுத்தும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. காவலர் சிங்க துரையிடம் வித்யா உரிமையுடன் காளிதாஸ் குறித்துக் கோபப்படுவது, ஜார்ஜ் காளிதாஸ் வீட்டுக்கு வருவது போன்ற காட்சிகள் அழகு.

நாமெல்லாம் இங்க என்ன பெஞ்சு தேய்க்கவா உக்காந்திருக்கோம் என்று சுறுசுறுப்புடன் காளிதாஸ் கதாபாத்திரத்தில் பரத் பணியாற்றியபோதும், அந்தக் கதாபாத்திரத்தை முடிந்த அளவு ஒழுங்காகச் செய்திருக்கிறார் என்ற போதும் அவரை ஏனோ காக்கி உடையில் பார்க்கவே முடியவில்லை.  அலுவலகப் பணி தனிப்பட்ட நேரத்தையும் எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க இயலாமலும், மனைவியின் துயரைப் போக்க இயலாமலும் உருவாகும் தவிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஆன் ஷீத்தல் அழகாக இருக்கிறார். அவருடைய கதாபாத்திர உருவாக்கமே சற்று மாறுபட்டதாக இருக்கிறது.  அந்த மாறுபாடான நடத்தைக்குத் தேவையான நடிப்பை இயல்பாக வழங்கியிருக்கிறார். ஆசை ஆசையாகக் குழந்தையுடன் கொஞ்சுவது, மேல் மாடியில் குடியிருக்கும் ஆதவ் கண்ணதாசனுடன் நேரத்தைச் செலவழிப்பது, கணவன் மீது உரிமையுடன் கோபம் கொள்வது என எல்லாக் காட்சிகளிலும் கவர்கிறார்.

முப்பது நிமிடங்களுக்குப் பிறகு உள்ளே வந்தாலும் சுரேஷ் மேனன்தான் படத்தை முழுவதும் கூட்டிச் செல்கிறார். காளிதாஸ் நாயகன் என்றபோதும் சுரேஷ் மேனனுக்கு முதன்மை தரப்பட்டுள்ளது. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக காவல் துறையில் பணியாற்றியதால் அனுபவப் பட்டிருக்கும் நிதானத்தை அழகாகக் காட்டியுள்ளார். தேவையற்ற பதற்றம் எதுவுமின்றி வழக்கை விசாரித்துச் செல்லும் தன்மை ஈர்க்கக்கூடியதாக இருக்கிறது.   

சுரேஷ் பாலா ஒரு திரில்லர் படத்துக்கான அமானுஷ்ய தன்மையுடன் ஒளிப்பதிவைத் தந்திருக்கிறார். பறவைக் கோணங்களில் வரும் பல காட்சிகள் அழகாக உள்ளன. மழையில் நனைய வைத்தது ஒரு நாள் பாடல் அழகு. பின்னணி இசை பெரிய அளவில் உறுத்தலில்லை.   

போலீஸ்காரனுக்கும் லப் டப் லப் டப்புன்னு அடிக்குதுன்னு பப்ளிக்குகுத் தெரியட்டுமே. ஒருத்தர சாவடிக்கிறது அவருக்குக் கொடுக்குற தண்டனைன்னு நினைக்குறோம் ஆக்சுவலி அது அவருக்குக் கொடுக்கிற ஃப்ரீடம். தப்பு சரியெல்லாம் அவங்கவங்க மனசப் பொறுத்திருக்கு. வேலை கொடுத்தவண்ட்ட பம்மி பம்மிப் பேசுற வாழ்க்கை கொடுத்தவட்ட எரிஞ்சு எரிஞ்சு விழுற போன்ற வசனங்கள் கவனிக்க வைக்கின்றன.

விசாரணையின்போது, பெயரைச் சீருடையில் அணிந்திருக்கும் பாதுகாவலரிடம் பெயர் கேட்பதைக் கவனித்து நீக்கியிருக்கலாம்.  வித்யா பற்றி முழுவதும் அறிந்த பரத் அவளுக்கு முறையாக நேரம் ஒதுக்காதது சற்று உறுத்தல். எந்நேரமும் மொபைலில் மூழ்கிக் கிடப்பது, மனைவியைச் சரியாகக் கண்டுகொள்ளாத கணவர் எனச் சில அம்சங்களை ஒன்றிணைத்து எதிர்பாராத திருப்பங்களுடன் அமைந்திருக்கிறான் காளிதாஸ். இப்படியான படங்கள் புதிதில்லை என்பதால் காளிதாஸைப் பெரிய அளவுக்குக் கொண்டாட முடியவில்லை.

செவ்வாய், டிசம்பர் 10, 2019

காமம் வரும் முன்னே காதல் வரும் பின்னே


எந்தக் காரியத்தையும் ஜோதிடத்தின் அடிப்படையிலேயே முடிவுசெய்கிறார் தனுசு ராசிக்காரரான அர்ஜுன் (ஹரிஷ் கல்யாண்). அவருக்குக் கன்னி ராசிப் பெண்ணுடன் திருமணம் நடைபெறுவது நல்லது என ஜோதிடர் கூறியதால் அந்தப் பெண்ணைத் தேடுகிறார் அவர். காதலியின் திருமணத்தன்று அவர் சந்திக்கும் கே.ஆர்.விஜயாவுக்கும் (டிகங்கனா சூரியவன்ஷி) அவருக்கும் முதல்நாளன்றே உறவு ஏற்பட்டுவிடுகிறது. செவ்வாய்க் கிரகத்துக்குச் செல்ல வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்ட விஜயாவுக்கும் அர்ஜுனுக்கும் காதல் மலர்ந்ததா கல்யாணம் நடந்ததா இல்லையா என்பதே திரைக்கதை.

பரிகாரம் செய்யாமல் தந்தை மணமுடித்துக்கொண்டதால் தன் தாய் பாண்டியம்மாள் (ரேணுகா) இளம்வயதிலேயே கைம்பெண்ணாகிவிடுகிறார் என்பதை அறிந்ததிலிருந்து ஹரிஷுக்கு ஜோதிடத்தில் திடமான நம்பிக்கை ஏற்படுகிறது. பார்க்கும் எல்லாப் பெண்களையும் ராசி கேட்டே பழகுகிறான். இதனாலேயே எந்தப் பெண்ணுக்கும் அவனைப் பிடிக்காமல் போய்விடுகிறது. அனிதாவுடனான (ரெபா மோனிக்கா ஜான்) காதலும் முறிந்துபோய்விடுகிறது. பார்த்த மாத்திரத்தில் காதல் வருவதற்குப் பதில் பார்த்த மாத்திரத்தில் காமம் வந்துவிடுகிறது. அதன் பின்னரே காதலிக்கலாமா வேண்டாமா என்று முடிவெடுக்கிறார்கள் இருவரும். இது கொஞ்சம் திரைக்கதையில் புதிதாக இருக்கிறது. உறவு கொண்டுவிட்டோமே எனப் பெரிதாக இருவரும் கவலைகொள்ளவில்லை. மூடநம்பிக்கைக்கும் முற்போக்குச் சிந்தனைக்கும் இடையிலான வேறுபாட்டைச் சுட்டிக்காட்டுகிறது திரைக்கதை.


ஹரிஷ் கல்யாணுக்கு வழக்கம்போல் துறுதுறுப்பான இளைஞன் வேடம். காதல் காட்சிகளில் கவர்கிறார். சோகக் காட்சிகளில் பெரியாத ஈர்க்கவில்லை. காதலியைக் கடலுக்குள் அழைத்துச் சென்று வெகுளிக் காதலனாக வெளிப்படுத்தும் அன்பு அழகு.

தன் பிரியத்துக்குரிய காதலனுடன் சேர்ந்துவாழும் வாய்ப்பு எளிதாகக் கிடைத்தாலும் தன் லட்சியத்திலேயே உறுதியாக இருந்து செவ்வாய்க் கிரகத்துக்குப் போக முடிவெடுத்துவிட்ட பெண் வேடம் தமிழுக்குப் புதிது. இந்த வேடத்தில் தமிழில் அறிமுகமாகியுள்ள டிகங்கனா சூரியவன்ஷி வசீகரிக்கிறார். ரெபா மோனிக்கா ஜானுக்குப் பெரிய வேலை இல்லை. ஒரு பாடலிலும் சில காட்சிகளில் தலைகாட்டிப் போகிறார்.   

பிரியாணிப் பிரியரான, முற்போக்குச் சிந்தனைகொண்டவராக அர்ஜுனின் தாய்மாமா   வேடத்தில்  முனீஸ்காந்த் உற்சாகப்படுத்துகிறார். எங்கெங்கே என்ன பிரியாணி கிடைக்கும் என்பதைப் பட்டியில் போட்டு உண்ணும் பழக்கம் கொண்ட வேடம் கலகலப்பு. இறுதியாக, குணச்சித்திர நடிப்பிலும் முத்திரை பதிக்கிறார்.


பாண்டியம்மாளாக நடிகை ரேணுகா பாந்தமான அம்மா வேடத்தில் இயல்பாகப் பொருந்துகிறார். செக்யூரிட்டியாக வரும் நடிகர் சார்லி கனமான கதாபாத்திரத்தில் ஆழமான நடிப்பைத் தந்திருக்கிறார். பரிகாரம் எல்லாம் செய்து, மணமுடித்துக் கொடுத்த  மகளை இழந்து வருந்தும் காட்சியில் உருகவைக்கிறார்.  

கட்டியக்காரன் போல் படத்தின் போக்கைக்  கதையாகச் சொன்னபடி வரும் யோகிபாபுவின் கதாபாத்திரம் படத்தில் தேவையற்ற ஒன்று. ஷெல்வி முதலான பிரபல சோதிடர்கள் வந்துபோகும் படத்தில் சோதிடராக  நடித்திருக்கிறார் பாண்டிய ராஜன்.  பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை. ஜிப்ரானின் பின்னணி இசை சுமார் ரகம். ஒளிப்பதிவு பளிச்சென்று இருக்கிறது.  


காதல் என்பதற்காகவே உருகிய காலம் போய் லட்சியத்துக்குக் குறுக்கே காதல் வந்தால் விலகத் தெரிய வேண்டும் என்பதை உணர்த்திய வகையில் கவனிக்கவைக்கிறார் சஞ்சய் பாரதி. தன்னை நம்பாமல் ஜோதிடம் முதலான விஷயங்களை  நம்பித் திரிவதன் அபத்தத்தை எளிதாக எடுத்துவைத்திருக்கும் இந்த தனுசு ராசிக்காரனைப் பொழுதுபோக்காகப் பார்க்கலாம்.

லேட்டஸ்ட்

ரஜினியாவாரா விஜய்?

தொடர்பவர்