அப்போது எட்டாம் வகுப்பு முழு ஆண்டுத் தேர்வை எழுதிவிட்டு விடுமுறையில் இருந்தேன். அந்தச் சித்திரை வருடப் பிறப்பை ஒட்டி ரஜினி காந்த் நடித்த விடுதலை (1986 ஏப்ரல் 11) திரைப்படம் வெளியானது. திருநெல்வேலி நியூராயல் தியேட்டரில் படத்தை வெளியிட்டிருந்தார்கள். விடுமுறையில் குடும்பத்துடன் பேட்டை செல்லையா அண்ணன் வீட்டுக்குப் போயிருந்தோம். அண்ணன் பேட்டை மில்லில் வேலை பார்த்தார்.
அவர் வீட்டில் ஒரு மேசையில் டேப் ரிக்கார்டர் இருக்கும். எதிரே நாற்காலியைப் போட்டு மேசை டிராயரில் இருக்கும் கேஸட்டுகளில் எதையாவது போட்டுக் கேட்பேன். பெரும்பாலான கேஸட்டுகளில் கம்யூனிஸ்ட் இயக்கப் பாடல்களே இருந்தன. அங்குதான் முதன்முதலில் அந்தப் பாடல்களைக் கேட்டேன். ஏனோ அந்தச் சிறுவயதில் அந்தப் பாடல்களைக் கேட்பது ஈர்ப்புக்குரியதாக இருந்தது. என்னவோ சொர்க்கமே காலடியில் கிடப்பது போன்ற மகிழ்ச்சி ஏற்படும். ஒருநாள் அண்ணன் என்னைப் படத்துக்குக் கூட்டிப்போவதாகக் கூறினார். அப்போது ரஜினி படம் என்றால் சோறு தண்ணிகூடத் தேவைப்பட்டிருக்காத காலம். இப்போது ரஜினி படத்தைப் பார்க்காட்டி உயிர் போகும்னு சொன்னா போகட்டும் என்று விட்டுவிட முடிகிறது.
என்ன படம் பார்க்க விரும்புகிறாய் என செல்லையா அண்ணன் கேட்டதும், மறுபேச்சின்றி ரஜினி நடித்த விடுதலை படம் பார்க்கலாம் என்று கூறினேன். லீவு முடிந்து ஸ்கூலுக்குப் போனதும் படத்தின் கதையையும் சொல்லலாம்; படம் பார்த்த கதையையும் சொல்லலாம் என்ற ஆசைதான். அண்ணனுடன் புறப்பட்டேன். மணி பதினொன்று கிட்ட ஆகிவிட்டது. மனம் பார்க்கப்போகும் படத்தை எண்ணி பரபரப்பானது. பேட்டை மெயின் ரோட்டில் ஒரு ஹோட்டலுக்குக் கூட்டிட்டுப் போய் கேசரி வாங்கிக் கொடுத்தார். ஜம்முன்னு சேரில் உட்கார்ந்து கேசரியைச் சாப்பிடும் கௌரவத்தை அண்ணன் தந்திருந்தார். அது இப்போது நினைத்தால் இனிக்கிறது. ஆனால் அன்று கேசரியைவிட சிங்க நிகர் தலைவன் ரஜினியைப் பார்க்க வேண்டும் என்றுதான் மனம் அலைபாய்ந்தது. ஆகவே, சீக்கிரம் சாப்பிட்டுவிட்டு படத்துக்குப் போக வேண்டும் என்று தான் ஆர்வமாக இருந்தது.
தென்காசியில் படம் பதினோரு மணிக்கெல்லாம் போட்டுவிடுவார்கள். அதற்குப் பழகியிருந்ததால் நேரமாகிக்கொண்டிருக்கிறதே அண்ணன் மிக நிதானமாக இருக்கிறாரே என்றிருந்தது. கேசரி சாப்பிட்டுவிட்டு ஹோட்டலை விட்டு வெளியே வரும்போதே மணி பதினொன்றரை ஆகிவிட்டது. அய்யய்யோ படம் போட்டுவிடுவானே என்றிருக்கிறது. அண்ணனோ நிதானமாக இருக்கிறார். அவரிடம் சொல்லவும் முடியவில்லை. நம்மையும் ஓர் ஆளாக மதித்து ஒருவர் சினிமாவுக்குக் கூட்டிக்கொண்டு போகிறார். அவரை எப்படி அவசரப்படுத்த முடியும்?
ஒருவழியாக பஸ் பிடித்து டவுனில் இறங்கினோம். அருகிலேயே தான் ராயல் தியேட்டர். டிக்கெட் எடுத்து அவசர அவசரமா உள்ளே போனா, யார் நீ எனக் கேட்கும் வில்லனிடம் 'நான் கடவுளோட புள்ள' அப்படின்னு ரஜினி சொல்லிட்டிருக்கார். படம் போட்டு ஏழெட்டு நிமிஷமாயிருச்சு. படம் படு மொக்கை. ஆனால் அதையே மீண்டும் தென்காசி பரதனிலும் பார்த்தேன். திருநெல்வேலியில் ஏழெட்டு நிமிஷம் கழிச்சுத்தானே பார்த்தேன். ஆகவே, முதலிலிருந்து தென்காசியில் பார்த்தேன். நாட்டுக்குள்ள நம்ம பத்தி கேட்டுப் பாருங்க பாடல் கேட்கும்போதெல்லாம் சும்மா நரம்பெல்லாம் ஜிவ்வுன்னு இருக்கும்.
சிவாஜியும் ரஜினியும் சேர்ந்து நடித்த படங்களிலேயே படு தோல்வி அடைந்த இந்தப் படம் படு கேவலமான படமும்கூட. சிவாஜி வீரபாண்டிய கட்டபொம்மன் வசனத்தை இந்தப் படத்தில் காக்கி உடையில் சொல்வார். சிவாஜியின் மிகை நடிப்பு அதிகமாக வெளிப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று. ரஜினிக்கு கார் திருடன் பாத்திரம். இந்தப் படத்தில் இடம்பெற்ற கார் சேஸிங் காட்சி அப்போது மிகவும் பிடித்திருந்தது. விஷ்ணுவர்தன் கதாபாத்திரமும் நன்றாக இருக்கும். கே.பாலாஜி தயாரித்திருந்த இந்தப் படத்தில் மாதவி, அனுராதா, விஜய குமார், பேபி ஷாலினி, தேங்காய் சீனிவாசன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கே விஜயன் இயக்கிய படம். சந்திரபோஸ் இசையில் நீலக்குயில்கள் ரெண்டு பாடலும் கேட்பதற்கு இனிமையானது. இந்தியில் வெளியான குர்பானி திரைப்படத்தின் மறு ஆக்கம் விடுதலை. ஆனால், இந்திப் படம் போல் நன்றாக அமையவில்லை தமிழ்ப் படம் என்பது அப்போதைய ரசிகர்களின் கணிப்பு. இப்போது ராயல் தியேட்டரோ, பரதன் தியேட்டரோ இல்லை என்பதும் நானும் ரஜினி ரசிகனாக இல்லை என்பதும் புரியும்போது, வாழ்க்கை, விடுதலை என்பதற்கெல்லாம் வேறு பொருள்கள் உண்டு என்று தோன்றுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக