இந்த வலைப்பதிவில் தேடு

இலக்கியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலக்கியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஏப்ரல் 29, 2021

ஜீ.முருகன் சிறுகதைகள்: பெருங்கூட்டத்தில் தனிமை கொண்டு திரியும் கதைகள்


சட்டென்று வசீகரித்துவிடுகின்றன ஜீ.முருகனின் சிறுகதைகள். முதலில் அவற்றின் மொழிநடை. முரண்டுபண்ணாமல் உடன் நடக்கும் செல்லக் குழந்தைபோல் அவருக்கு ஒத்துழைக்கிறது மொழி. அடுத்தது, சிறுகதையின் நீளம். அநேகமாக எல்லாக் கதைகளுமே சிக்கனமாகவும் எதை மறைக்க வேண்டும், எதை வெளிப்படுத்த வேண்டும் என்ற தெளிவுடனும் எழுதப்பட்டுள்ளன. ஆழமான சிறுகதைகளுக்கும் நீளமான சிறுகதைகளுக்கும் நிறைய வேறுபாடு உள்ளது என்பதை உணர்த்திவிடுகின்றன இந்தக் கதைகள்.

தொகுப்பை முழுமையாக வாசித்து முடிக்கும்போது, பிரியத்துடன் குழந்தைகளை மடியில் அமர்த்திக் கதை சொல்லும் மூதாட்டியின் நினைவு வந்து செல்கிறது. சக மனிதருடன் உரையாட முருகன் தேர்ந்தெடுத்திருக்கும் வழிமுறையே கதை என்பதாகவே படுகிறது. அவர் பரிமாறுவதற்கு விழையும் அனைத்துக் காரியங்களையும் கதையைச் சாக்காக வைத்துச் சொல்கிறார். கதையையும் சொல்கிறார்; அதன் வழியே உரையாடலையும் நிகழ்த்துகிறார். முன்னது மேலடுக்கில் இருக்க, பின்னது உள்ளடுக்கில் உள்ளது.

மனிதரைக் கிராமத்திலிருந்து நகரத்தை நோக்கி நகர்த்தும் வாழ்வின் துயரம், எல்லாருக்குமானது இயற்கை என்ற எண்ணமின்றித் தமக்கானது உலகம் என வாழும் மனிதரின் அத்து மீறல், ஆண் பெண் உறவில் ஏற்படும் பொருளற்ற சிக்கல், கடவுள் நம்பிக்கை, பொதுவுடைமைத் தத்துவம் எனப் பல விஷயங்கள் குறுக்கீடு நிகழ்த்தும் வாழ்வைப் பொட்டலம் போல் பொதிந்து தந்திருக்கிறார். மானுடத் துயரத்தைத் துயரம் என்ற நிலையிலேயே வைத்துப் பார்க்கிறார்; எழுதுகிறார். அதற்கு அதிகப்படியான சோகச் சாயையைப் பூசவில்லை. ‘வழித்துணை’கதையில் வெளிப்படும் தனிமையுணர்வு மனத்தில் பரவும்போது கதையில் மறைந்த நாயாக மனம் மாறிவிடுகிறது.

தொகுப்பின் கதைகளில் புழுவும் எலியும் நாயும் பூனையும் கழுதையும் யானையும் குரங்கும் குருவியும் பாம்பும் கிளியும் புறாவும் வருகின்றன. தமக்கான வாழ்வை எதிர்கொள்ளும் மனிதர்களும் வருகிறார்கள். ஒவ்வொரு பானையையும் வெவ்வேறு வடிவத்தில் செய்து பார்க்கும் குயவர் போல் வெவ்வேறு வடிவங்களில் கதைகளைச் செய்துபார்த்திருக்கிறார். கற்பனை யான சம்பவங்களும் நிகழ்ந்ததாக நம்பக்கூடிய சம்பவங்களும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து மாய யதார்த்தக் கதைகளாக மாறியிருக்கின்றன.

ஜீ. முருகன்
துடுப்பற்ற படகு கடலின் மேலே சதா அலைவுறுவதுபோல் காமம், மரணம் இரண்டுக்குமிடையே அலைக்கழிக்கப்படும் மனித மனம் அதிலிருந்து வெளியேற ஏதோவொரு வழி தேடி அலைகிறது. அந்த மனத்தின் அலைச்சலை, உளைச்சலை உள்வாங்கி அவற்றைக் கதைகளாக்கி ஆறுதலடைகிறார் முருகன். புணர்ச்சியும் சாவும் இணைந்த புள்ளிகளால் கோலம் போட்டது போல் தொகுப்பு அமைந்திருக்கிறது. பெண்களின் வாழ்க்கையில் ஆண்களாலும் ஆண்களின் வாழ்க்கையில் பெண்களாலும் சிக்கல்கள் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. மனச்சிதைவென்னும் அபாய விளிம்பில் நிற்கும்படியான ஆண்களைப் பல கதைகளில் காண முடிகிறது. தலையணை கட்டிலில் கிடக்கும் கோலமே ஓர் ஆணுக்குப் பெண்ணின் துரோகம் பற்றிய குரோத நினைவைத் தூண்டிவிடும் அளவுக்கு ஆணின் மனத்தில் பெண்ணின் உடம்பு பதற்றத்தை ஏற்படுத்துகிறது.

தனிமையில் அழுதபடியிருக்கிறார் ஒரு தாய். விலக்க முடியாத துயரமாகத் தன் மீது கவிந்து கிடக்கும் நோயுற்ற மகனைத் தூக்கித் திரியும் தாயொருத்தி அவனைப் பிணமாகப் பார்க்கிறாள். குழந்தை சீரழிக்கப்படுவதன் வேதனை தாளாமல் தவிக்கிறான் ஓர் ஓவியன். இப்படிப் பல கதாபாத்திரங்களை வாசகருக்கு நெருக்கமாக்கியிருக்கிறது கதைகளின் கூறுமுறை.

ஒரு வகையில், சமூகத்தின் மூடாக்கை விலக்கிப் பார்க்கின்றன சில கதைகள்; சில கதைகளோ மூடாக்கை விலக்கப் பார்க்கின்றன. பாலியல் உணர்வு ‘காண்டாமிருகம்’ போன்ற கதைகளில் உள்ளாடைகளில் மறைக்கப்பட்டிருக்கிறது; ‘இடம்’, ‘கிழத்தி’ போன்ற கதைகளில் துண்டிக்கப் பட்ட சிற்பத்தின் திமிர்ந்த மார்புபோல் வெளியே விழுந்து கிடக்கிறது. ‘பூனைகள் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்?’ காமம் தொடர்பான நல்ல கதை.

இரட்டை வாழ்வு நடத்தும் தோழர்களை முருகனின் எழுத்து புழுப் புழுவாய் உதிர்த்துவிடுகிறது. ‘புழு’ கதையில் சவக்கிடங்கில் கிடக்கும் பிணங்களை விழித்தெழச் சொல்லும் தோழர் ஒருவரைச் சந்திக்கும்போது, ‘விருந்தோம்ப’லில் தோழர்களைப் பெரிதாகப் பகடி செய்யவில்லை என்றாகிவிடுகிறது. பரந்து விரிந்து கிடக்கும் இந்தப் பூமியில் ஆறுதலாகச் சாய்ந்துகொள்ள எந்தத் தோளுமில்லை என்ற யதார்த்தத்தை உணர்த்தும் இந்தக் கதைகள் அதனாலேயே ஆசுவாசமே தருகின்றன. வாழ்வு குறித்த பொய்யான நம்பிக்கைகளில் வாசகரை அமிழ்த்தும் கதைகள் அல்ல இவை. அசலான வாழ்வில் நகல்கள் பெருத்துவிட்டதைச் சொல்லும் கதைகள்.

‘பாரிச வாயு’ என்னும் கதையில் புறாவைத் தேடி அலைகிறான் கிருஷ்ணன். புறாக்களை எங்கும் காணவில்லையே என்ற பரிதவிப்புடன் தொடங்கும் கதையின் இறுதியில் புறாவை அவன் தேடுவது - தன் நாயின் நோய் தீர்க்க - புறாவின் ரத்தத்துக்காகத்தான் என்பது தெரிகிறது. தாயின் நோய் குறித்த நிலை கதையில் சொல்லப்படவில்லை. ஆனால், இரண்டு புறா வேண்டுமா எனக் கேட்கும்போது, சற்று யோசனை செய்துவிட்டு இப்போதைக்கு ஒன்று போதும் என்று முடிவெடுக்கும்போது அந்தத் தாயின் நிலை வாசகருக்குப் புரிகிறது. இப்படித்தான் பல கதைகளில் சொல்லப்பட்ட வாக்கியங்கள் சொல்லப்படாத சேதிகளை உணர்த்துகின்றன. ‘கவுண்டர் கே’ என்னும் கதை கிட்டத்தட்ட சுய விமர்சனக் கதையைப் போலவே எழுதப்பட்டிருக்கிறது. மொத்தமுள்ள ஐம்பது கதைகளும் பெரும்பாலும் வெவ்வேறானவை. ‘இடம்’ ‘கிழத்தி’, ‘பாரிச வாயு’ ‘வேட்டை’, ‘மஹா விஜயம்’ ‘சத்திரம்’ போல சில கதைகளில் ஒரு தொடர்ச்சி காணப்படுகிறது.

வாழ்வென்னும் புதிரை அவிழ்க்க அவிழ்க்க அது முடிச்சுகளை உருவாக்கிக்கொண்டே போகிறது. அடுப்பங்கரைச் சுவரில் படியும் கரிக் கறைபோல் மனத்தில் படியும் அறிவுக் கறையை இலக்கியம் கொண்டு போக்கும் முயற்சிகளாகவே கதைகளை எழுது கிறார். வாழ்க்கையை அதன் போக்கில் எதிர்கொண்டபோதும், அதன் முரணானது மனத்தை அரிக்கிறது. ஏன், எதற்கு, எப்படி என்ற கேள்விகளை உருவாக்கிக்கொண்டே இருக்கிறது. அப்படிக் கேள்விகள் எழுப்பிக் கொள்ளாதவர்கள் பாக்கியவான் கள். இந்தத் தொகுப்பு அவர்களுக் கானதல்ல. கேள்விகளில் முட்டி மோதிக் குருதி வழிய நிற்கும் மாந்தர்களுக்கான கதைகள் இவை. அந்தக் கேள்விகளை உருவாக்குவதற்கான மேடையாக அல்லது அந்த மேடையில் உரு வான கேள்விகளாக இந்தக் கதைகள் கருக்கொள்கின்றன. ஒரு பெருங்கூட்டத்தில் தனிமை கொண்டு திரியும் இந்தக் கதைகள் தனித்தும் தெரிகின்றன. கதைகளுக்கேற்ற பொருத்தமான அட்டைப்படத்துடன், நல்ல முறையில் நூலை உருவாக்கியிருக்கிறது ஆதி பதிப்பகம். வரிகளின் தொடக்கத்தில் ஒற்றெழுத்து வருவதைத் தவிர்த்திருக்கலாம்.

பக்கங்கள் : 400 விலை : ரூ.320
வெளியீடு:
ஆதி பதிப்பகம்
திருவண்ணாமலை 606806
தொடர்புக்கு: 9994880005

திங்கள், ஏப்ரல் 19, 2021

காதல் வந்தால் சொல்லியனுப்பு


ரஷ்ய எழுத்தாளர்களில் பெரிதும் மதிக்கப்படுபவர்களில் ஒருவரான இவான் துர்கநேவ் 1857இல் எழுதிய குறுநாவல், ஆஸ்யா. இந்தக் குறுநாவலை அல்லது நெடுங்கதையை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கிறார் நா.பாஸ்கரன். நாவலுக்கு மொழிபெயர்ப்பாளர் தந்திருக்கும் தலைப்பு சீமானின் திருமணம். ஸ்டார் பிரசுரம் வெளியிட்டிருக்கும் இந்த நாவல் 1956 அக்டோபரில் முதல் பதிப்பு கண்டிருக்கிறது. இந்த நாவலின் பிடிஎஃப் வடிவம் தமிழ்நாட்டு அரசின் பொது நூலக இயக்ககத்தின் இணையப் பக்கத்தில் கிடைக்கிறது. ஏதோ ஒன்றைத் தேடிக்கொண்டிருந்த வேளையில் இந்த இணையப்பக்கம் கண்ணில் பட்டது. இதில் தற்செயலாகத் தேடிப்பார்த்தபோது, சீமானின் திருமணம் என்னும் தலைப்பு சட்டென்று ஈர்த்தது. ஆகவே, அதைப் பதிவிறக்கிப் படித்தேன். 

நாவலின் மையப்பாத்திரமான மனிதர் இருபது வருடங்களுக்கு முன்னர் தனது வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை விவரிக்கிறார். அவர் வாழ்வில் வந்து, அவரை மகிழ்ச்சிப்படுத்திவிட்டு வேறோர் இளைஞருடன் சென்றுவிட்ட இளம் கைம்பெண் ஒருவரது ஞாபகத்திலிருந்து விடுபட ரஷ்யாவை விட்டு விலகி ஜெர்மனியின் ரைன் நதிக்கரையில் ஓர் சிற்றூரில், தனிவீடு ஒன்றில் வாழ்ந்துவருகிறார். அந்த ஊருக்கு சா... என்று மட்டும் பெயரிடுகிறார். இப்படித்தான் நாவல் தொடங்குகிறது. நிலக் காட்சிகளின் விவரணை அதிகமாக  இடம்பெற்றிருக்கிறது. நிலா, நதி, நாடு, மக்கள் என நாவலின் விவரணை வாசிப்பவர்களைக் கதைசொல்லியின் நிலத்துக்கு அழைத்துச் சென்றுவிடுகிறது.

இவான் துர்கநேவ்
அந்தச் சிற்றூர் மலையடிவாரத்தில் அமைந்திருக்கிறது. ஊரில் எலுமிச்சை மரங்கள் நிறைந்திருக்கின்றன. நதியின் மேலமைந்திருக்கும் பாலங்கள் என அந்த ஊரை வார்த்தைகளால் வடித்துவிடுகிறார். ரைன் நதிக்கரையின் ஓரத்தில் பன்னீர் மரத்தடியில் கிடக்கும் கல்லாசனத்தில் அமர்ந்து தன் வாழ்வில் வந்துபோன அந்தக் கைம்பெண் குறித்த நினைவுகளில் மூழ்கிக் கிடந்த அவனை (இளைஞன் தானே அதனால் அவன் என்றே குறிக்கிறேன்) ஒரு நாள் நதியின் எதிர்க்கரையிலிருந்த ஓர் இசை சப்தம் இழுக்கிறது. தன்னை நோக்கி ஒரு துயரம் இசையாக வந்துகொண்டிருக்கிறது என்பது அந்த இளைஞனுக்குத் தெரியாது. இசை மயக்கத்தில் அவன் ல என்னும் அந்த நகரத்துக்குச் செல்கிறான். 

அங்கே அவனுக்கு ரஷ்யாவைச் சேர்ந்த காகின் என்பவனும் அவனுடைய தங்கையான ஆஸ்யாவும் அறிமுகமாகிறார்கள். ஆஸ்யா அவனை ஈர்க்கிறாள். ஆஸ்யாவைத் தங்கை என அறிமுகப்படுத்துகிறான் காகின், ஆனால், இளைஞனுக்கு அவர்களிடையே சகோதர உறவு இல்லை என்று படுகிறது. தொடர்ந்து அவர்கள் வசிக்கும் வீட்டுக்கும் செல்கிறான். காகின் ஓர் ஓவியன். ஆஸ்யா ஒரு தனவந்தருக்கும் அவருடைய வீட்டின் பணிப்பெண்ணும் பிறந்தவர். இவர்கள் மூவருக்கும் நட்பு தொடர்கிறது. ஆஸ்யாவுக்கும் காகினுக்கும் என்ன உறவு அண்ணன் தங்கை தானா, இளைஞனுக்கு ஆஸ்யாவுடன் ஏற்பட்ட ஈர்ப்பு என்ன ஆனது என்பதை எல்லாம் நாவல் விவரிக்கிறது. 

இந்த நாவல் துர்கநேவ் வாழ்வில் நடந்த சம்பவங்களின் அடிப்படையிலான நாவல் என்கிறார்கள். நாவலில் மன உணர்வுகளையே துர்கநேவ் தொடர்ந்து விவரிக்கிறார். ஒரு வகையில் இது ஒரு நிறைவேறாக் காதலையே கொண்டிருக்கிறது. ஆண் பெண் உறவின் சிக்கலைத் தான் உலகின் பெரிய பெரிய படைப்பாளிகள் கைக்கொள்கிறார்கள். ஆனாலும், அது தீர்ந்தபாடில்லை. உறவுச் சிக்கல் தீரத்தான் வாய்ப்பே இல்லையே. ஆஸ்யாவின் உருவ சித்தரிப்பைவிட அவளது மனநிலை மாற்றங்களைப் பற்றிய விவரங்களே நாவலின் முதன்மையான சித்தரிப்புகளாகியிருக்கின்றன. அவள் பதினேழு வயது நிரம்பியவள். சிறுமியா பெண்ணா எனக் குழம்பவைக்கும் பருவத்தைக் கொண்டிருக்கிறாள். பெண் மனம் எப்படியெல்லாம் ஆணால் உந்தப்படுகிறது, அதனால் என்ன பாடு படுகிறது என்பதையெல்லாம் துர்கனேவ் விவரித்துக்கொண்டே போகிறார். 


நாவல் என்று சொன்னபோதும், இது நூறு பக்கங்களுக்குள் அடங்கிவிடுகிறது. ரைன் நதியோட்டம் போன்ற இயல்பான நடையைக் கொண்டிருக்கிறது நாவல். வாசிப்பு சுகம், இலக்கிய இன்பம் என்றெல்லாம் சொல்கிறார்களே அவற்றைத் தேடுபவர்களுக்கான நாவல் இது. 1857இல் எழுதப்பட்ட நாவல் இது என்பதால் அந்தக் காலகட்டத்தில் ஓவியங்களும் எழுத்துகளுமே மனிதர்களை அவர்களது வாழ்க்கையை வெளியுலகுக்கு வெளிப்படுத்திக்கொண்டிருந்தன என்பதை ஞாபகம் வைத்துக்கொண்டு வாசிக்க வேண்டியதுள்ளது. ஆனால், நாவலின் மனவோட்டங்கள் இன்றுவரை மாறவில்லை. மனிதரின் அகச் சிக்கல் பெரிய அளவில் மாறவில்லை என்பதையே உணர முடிகிறது. இன்றும் ஆணுக்கும் பெண்ணுக்குமான உறவில் ஏற்படும் சிக்கலைத் தான் கையாள முடியாமல் மனிதர்கள் தவிக்கிறார்கள். அகத்தில் உருண்டு திரண்டு வரும் அன்பை அவ்வளவு எளிதில் வெளிப்படுத்த இயலாமல் மனிதர்களை எது தடுக்கிறது? பறிபோனபின் பரிதவிக்கும் மனிதர்கள் படும்பாட்டை இலக்கியங்கள் காலாகாலத்துக்கும் சொல்லிக்கொண்டே இருக்கின்றன. 

வியாழன், டிசம்பர் 03, 2020

நிலவறைக் குறிப்புகள்: நிலைக்கண்ணாடி போன்றவை


பரிசுத்த வேதாகமத்தில் பிரசங்கி என்னும் அதிகாரத்தின் ஒன்றாம் அத்தியாயத்தில் இடம்பெற்றுள்ள 18ஆம் வசனம் இப்படிச் சொல்கிறது: அதிக ஞானத்திலே அதிக சலிப்புண்டு, அறிவு பெருத்தவன் நோவு பெருத்தவன்.’ ஃபியோதர் தஸ்தவ்யெவ்ஸ்கியின் நிலவறைக் குறிப்புகள் நாவலும் அதையே முன்மொழிகிறது. மனிதன் மகிழ்ச்சியாக இருக்க இயலாதவன்; அவனால் ஒருபோதும் மகிழ்ச்சியில் நிலைக்க முடியாது; அவனது மனம் சதா அவனை அலைக்கழித்துக்கொண்டேயிருக்கும், இதிலிருந்து மீள்தல் சாத்தியமற்றது என்பதைப் பட்டவர்த்தனமாகச் சொல்லிவிடுகிறது இந்த நிலவறைக் குறிப்புகள்

தஸ்தயெவ்ஸ்கியின் இந்த நாவலில் தன்னைப் பற்றிச் சொல்பவன் ஒரு நிலவறை மனிதன். ஆனால், அவன் தன்னைப் பற்றி மட்டும் சொல்லவில்லை. அவன் ஒரு பிரதிநிதியாகத்தான் இருக்கிறான். அவனைச் சமுதாயம் ஒதுக்கிவைத்திருக்கிறதா அவன் சமுதாயத்தை ஒதுக்கிவைத்திருக்கிறானா என்பது அவ்வளவு எளிதில் விடைகாணக்கூடிய வினாவன்று. அவனது இயல்புகளைச் சொல்லும்போது அவனிடம் எந்த ஒளிவுமறைவும் இல்லை. மனத்தின் பாவனை, ஒப்பனை எல்லாவற்றையும் களைந்துவிட்டு பிறந்தகுழந்தையின்  தன்மையுடன் அவற்றை வெளிப்படுத்துகிறான். இந்த வாக்கியத்தில் ஓர் ஒப்பனை வந்து அமர்ந்துவிட்டது. இப்படிச் சொல்வதால் இந்த வாக்கியத்திலிருந்து என்னை விலக்கிக்கொள்கிறேன் என்று எனக்குள் வாழும் நிலவறை மனிதன் என்னைப் பார்த்து ஏளனம்செய்கிறான். நீயாக எழுதிவிட்டு வாக்கியத்தின் மீது பழிபோடுகிறாயே நியாயமா? என்று கேட்கிறான். இப்படியான கேள்விகளை நிலவறைக் குறிப்புகளில் நீங்கள் தொடர்ந்து எதிர்கொள்ளலாம். 

இந்த நாவலை ஒருமுறை வாசித்தால் போதாது; ஒவ்வொரு முறையும் அது தன்னை வெவ்வேறு வகைகளில் வெளிப்படுத்துகிறது என்பதால் எத்தனை முறை வேண்டுமானாலும் வாசித்து மகிழலாம். ஆனால், மகிழ்ச்சி என்பதை ஆய்வகத்தில் கொண்டு நிறுத்தும் நிலவறை மனிதன் அதையும் ஈவு இரக்கமின்றி அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து மேய்ந்துவிடுகிறான். நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அவனது கேள்விக் கணைகள் உங்கள் கழுத்தைப் பிடித்து திருகுகின்றன, உங்கள் மனசாட்சியை உலுக்குகின்றன. 

தன்னுணர்வு அற்றவன் எப்படி மனிதனாக முடியும் என்ற கேள்வி எழுப்பும் அதே வேளையில் மனிதனின் தன்னுணர்வு அவனை மகிழ்ச்சிக் கடலிலிருந்து வெளியேற்றித் துன்பக் கரையில் போட்டுவிடும் அபத்தத்தை நிலவறை மனிதன் மிக இயல்பாக உணர்த்தும்போது, இயல்பான மனிதனுக்கு அது புரிவதேயில்லை. ஆனால், தன்னுணர்வு கொண்ட மனிதன் அதைப் புரிந்துகொண்டு அவதியுறுகிறான். இயல்பான மனிதன் முட்டாளாக இருக்கலாம், சராசரியானவனாக இருக்கலாம். ஆனால், அவனைப் பார்த்து தன்னுணர்வு கொண்ட நிலவறை மனிதன் பொறாமைப்படுகிறான். அவனைப் போல் தன்னால் இருக்க முடியவில்லையே என ஏங்குகிறான். அதே நேரத்தில் அவனை முட்டாள் எனத் தூற்றுகிறான். இந்த வேறுபாடு உங்களுக்கு விளங்குகிறதுதானே?

நிலவறைக் குறிப்புகள் நாவல் இரண்டு பாகங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. முதல் பாகத்தில் நிலவறை மனிதன் தனது இயல்புகளைக் குறித்து விவரிக்கிறான். இருபதாண்டுகளுக்கும் மேலாகத் தான் எலி வளை போன்ற நிலவறையில் வசித்துவருவதையும் தான் யார் என்பதையும் வாசகர்களிடம் சொல்கிறான். ஆனால், அவன் வாசகர்களுக்காக எழுதவில்லை தனக்காக எழுதுவதாகவும் சொல்கிறான். இப்படிக் கணம்தோறும் நிலைமாறும் சிலவேளை நிலைதடுமாறும்  மனத்தைப் பின்தொடர்ந்து சென்றுகொண்டேயிருக்கிறான். அதன் எல்லா வேடங்களையும் நுட்பமாகக் கவனிக்கிறான். எதனால் இப்படி வேடம் புனைகிறது என்று ஆராய்கிறான். தனது மேன்மையைச் சொல்லி நமது பாராட்டைக் கோரவில்லை அவன். தனது கீழ்மையைச் சொல்லி நமது ஏளனத்தையும் எதிர்கொள்ள அவன் தயாராக இல்லை. ஆனால், தனது மேன்மை கீழ்மை எல்லாவற்றையும் எந்தப் பிரதிபலனையும் பாராமல் சொல்கிறான். அதனால், அவனுக்கு ஆசுவாசம் கிடைக்கலாம். ஆனால் ஆசுவாசம் கிடைக்கும் என்பதற்காக அவன் அதைச் சொல்லவில்லை.  

நிலவறைக் குறிப்புகளின் இரண்டாம் பாகத்தில் நிலவறை மனிதன் எதிர்கொண்ட சில சம்பவங்களை விவரிக்கிறான். அந்தச் சம்பவங்கள் அவனை அலைக்கழிக்கின்றன. இந்தச் சம்பவங்கள் நம்மில் பலர் எதிர்கொண்டதைப் போன்றவைதாம். இவற்றைப் போன்ற சம்பவங்கள் நமக்கும் ஏற்பட்டிருக்கலாம். நாமும் நிலவறை மனிதன் போன்ற அவசத்தை அனுபவித்திருக்கலாம். ஆனால், நம்மால் அதைத் தீர்மானமாக விளக்க முயன்றிருக்காது. ஆனால், நிலவறை மனிதன் அதைத் தீர்க்கமான தருக்கங்களுடன் எடுத்துவைக்கிறான். தன்னிலிருந்து விலகி தனது நடத்தையையும் அவன் கறாராக விமர்சிக்கிறான். சிலபோது, தனது நடத்தைகளுக்கான காரணத்தையும் மொழிகிறான். இந்தத் தருக்கத்தை அவனிடம் எடுத்துக்காட்டும் அவனது தன்னுணர்வுதான் அவனது மிகப் பெரிய சிக்கலாக உள்ளது. 

நிலவறை மனிதனால், ஒரு எஜமானனாகவோ ஒரு பணியாளனாகவோ ஒரு நண்பனாகவோ ஒரு காதலனாகவோ ஏன் ஒரு மனிதனாகவோ கூட இருக்க இயலவில்லை. அது தான் அவனது துயரம். அவனுக்குக் கிடைக்கும் அன்பையும் அவனால் அனுபவிக்க இயலவில்லை. அவனது தன்னுணர்வு அவனைச் சதா கலக்கத்திலேயே காலங்கழிக்க வைக்கிறது.  நிலவறை என்பது சிறிய குடிலாக இருக்கலாம் சிறிய பொந்தாக இருக்கலாம் பெரும்பரப்பாகக் கூட இருக்கலாம். ஆனால், அங்கே வசிக்கும் மனிதனின் மனம் மிகச் சுருங்கிக் கிடக்கிறது. அது அவனை நிம்மதியின்மையில் மூழ்கடிக்கிறது. தன்னைப் பெரிய அறிவாளி எனக் கருதும் நிலவறை மனிதனால் அவன் முட்டாளாகக் கருதும் இயல்பான மனிதன் துய்க்கும் இன்பத்தைக்கூடத் துயக்க இயலவில்லை. 

மகிழ்ச்சியை அவன் வேண்டினாலும் அவனால் மகிழ்ச்சியை அனுபவிக்க முடியவில்லை. அவனது மகிழ்ச்சிகூட அவனைக் கையைப்பிடித்து துன்பத்துக்கே அழைத்துச் செல்கிறது. அவன் அறிஞர்கள் எழுதிய நூல்களைப் பள்ளிக்காலத்திலேயே வாசித்துவிட்டான். ஆனால், அது அவனது இருண்ட வாழ்க்கையில் எந்த வெளிச்சத்தையும் பாய்ச்சவில்லை. அதன் வெளிச்சமெல்லாம் அவனது கலக்கத்தைத் துலக்கப்படுத்தவே உதவுகிறது. நட்பு, உறவு, காதல் என்ற எல்லா உணர்வுகளிலிருந்து விடுபட்ட மனிதனாக அவன் இருந்தபோதும் அதன் காரணமாக அவன் மகிழ்ச்சிக்கடலில் திளைக்கவில்லை. வெறுப்பு சமுத்திரம் அவனது மூச்சை முட்டவைத்துக்கொண்டிருக்கிறது.

நண்பர்களுடன் அமர்ந்து ஒரு விருந்தை அவனால் இயல்பாக உண்ண இயலவில்லை. அங்கே நடக்கும் அபத்தங்கள் அவனைப் பாடாய்ப்படுத்துகின்றன. அதனால் அவன் வெளிப்படுத்தும் எதிர்வினையோ அவனை இன்னும் நார்நாராய்க் கிழித்துவிடுகிறது. குருதி வழிய வழிய குமைகிறான். எல்லாராலும் வெறுக்கப்படும் மனிதனாகத் தான் இருக்கிறோமோ எல்லாரும் தன்னைப் புறக்கணிக்கிறார்களோ அவமதிக்கிறார்களோ என எண்ணும் அதே வேளையில் தன்னால் அப்படி மட்டுமே இருக்க முடியும் என்பதையும் அவன் உணர்கிறான். தன்னைத் தேடி வந்து நேசம் செலுத்திய பெண்ணின் நேசத்தை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. உன்னதமான பளிங்கு மாளிகை போன்ற ஒன்றில்கூட அவனால் வசித்திருக்க முடியாது. அந்தப் பளிங்குமாளிகையையும் அவன் நிலவறையாக மாற்றிக்கொண்டுவிடுகிறான்.  

எந்தப் பெருமிதமும் இல்லாத மனிதனாக இருக்க நேர்வதன் சோகத்தை அவன் பரப்பும் அதே நேரம் பெருமிதங்கள் மீது சாணியடிக்கவும் அவன் தவறவில்லை.  ஒரே சமயத்தில் அவனது மனம் பல்வேறு எண்ணக் குழப்பங்களால் பீடிக்கப்படுகிறது. அந்த மாயச் சுழலில் அவன் மாட்டிக்கொள்கிறான். அதிலிருந்து  அவன் வெளிவர விரும்பினாலும் அதிலேயே கிடந்து உழலவும் பிரியம் கொள்கிறான். இதற்கெல்லாம் என்னதான் முடிவு? எந்த முடிவும் இல்லை என்பதே முடிவு. இப்படியொரு நாவலை எழுதுவதேகூட அவனுக்குப் பெரிய உவப்புக்குரியதாக இல்லை. அதை ஒரு பெரிய தண்டனை என்றுகூடச் சொல்கிறான். 

இந்த நாவலைப் படித்து முடித்தபின் இப்படியெல்லாம் மனிதர்கள் இருப்பார்களா என்று தோன்றவில்லை; இப்படித்தானே இருக்கிறோம் என்று தோன்றுகிறது. அதுதான் நாவல் உருவாக்க விரும்பிய எண்ணமா எனவெல்லாம் தெரியவில்லை. ஆனால், இந்த நாவலை வாசிக்கும்போது, ஒரு நிலைக்கண்ணாடி முன் அமர்ந்திருப்பதுபோல்தான் உள்ளது. இப்படியான நாவல்கள் நமது துயரத்திலிருந்து நம்மை விடுவிடுப்பதில்லை. ஆனால், நமது துயரங்களுக்கு என்ன மதிப்பிருக்கிறது என ஏளனம் செய்கின்றன. இன்பத்துக்கும் துன்பத்துக்குமான ஊடாட்டத்திலேயே வாழ்க்கை சிதைந்துகொண்டேயிருக்கிறது. சிதைவுகளின் வழியே சிரித்துக்கொண்டேயிருக்கிறோம். அந்தச் சிரிப்புக்குப் பொருளென்ன?

நிலவறைக் குறிப்புகள் 
ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி 
தமிழில்: எம்.ஏ.சுசீலா
விலை ரூ. 250/-
வெளியீடு: நற்றிணை பதிப்பகம் 
தொடர்புக்கு: +919486177208


புதன், ஏப்ரல் 29, 2020

நிச்சலனம்: எல்லாம் அல்லது எதுவுமில்லை


உயிரோடு இருப்பவர்கள் சொன்னாலே பல புத்தகங்களை வாசிக்க மாட்டோம். ஆனால், இறந்துவிட்ட எழுத்தாளர் ஒருவர் எனக்கு ஒரு புத்தகத்தைப் பரிந்துரைத்தார். உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். இறந்துபோனவர் எப்படிப் பரிந்துரைக்க முடியுமென. ஆனால், நான் சொல்வது உண்மைதான் எழுத்தாளர் நஞ்சுண்டன் மறைந்த பின்னர் அவருக்கான அஞ்சலிக் குறிப்பை (இருக்கும்போது ஒருவருக்கு அஞ்சலிக் குறிப்பெழுத முடியுமா என்ன?) எழுதியதற்காக காலச்சுவடு பதிப்பகம் எனக்கொரு நூலை அனுப்பிவைத்தது. அந்தப் புத்தகத்தை எனக்கு நஞ்சுண்டன் பரிந்துரைத்தார் என்பதை இப்போது நீங்கள் விளங்கிக்கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன். 

பொதுவாக, பணம் கொடுத்து வாங்கிய புத்தகங்களையே அலமாரியில் வைத்துவிட்டு வாய்ப்பு வரும்போது படித்துக்கொள்ளலாம் என முடிவுசெய்வதுதான் எனது பழக்கம். இப்படிப் பல புத்தகங்கள் அலமாரியில் உள்ளன. சில புத்தகங்களை ஐம்பது அறுபது பக்கங்கள் வாசித்துவிட்டு அப்படியே மூடிவைத்துவிடுவேன். வாசிப்பதற்கு, புத்தகமும் நேரமும் இருந்தால் மட்டும் போதாது, ஒரு மனநிலை வாய்க்க வேண்டும். மனநிலை வாய்க்காதபோது எவ்வளவு சிறப்பான புத்தகம் கிடைத்தாலும் வாசிக்க இயலாது என்பதுதான் எனது அனுபவம். 

காலச்சுவடு எனக்குப் புத்தகம் அனுப்பியிருந்தது என்று சொன்னேனே ஒழிய அது என்ன புத்தகம் என்று இன்னும் சொல்லவில்லையே. அந்தப் புத்தகம் நிச்சலனம். அது ஒரு துருக்கிய நாவல். அகமத் ஹம்தி தன்பினார் என்பவர் எழுதியது. 20ஆம் நூற்றாண்டின் துருக்கிய எழுத்தாளர்களில் குறிப்பிடத் தகுந்தவர் இவர் என ஓரான் பாமுக் குறிப்பிட்டுள்ளார். அவர் டிரையாலஜியாக எழுதிய நாவலில் இது இரண்டாவதாக வெளிவந்திருக்கிறது. இந்த நாவல் துருக்கியில் 1949ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. நாவல் தீவிரமான மொழிநடையில் அமைந்திருக்கிறது. துருக்கியின் கலை, அரசியல், பண்பாடு, இசை, வாழ்க்கை முறை எனப் பலவற்றையும் அலசிச் செல்கிறார் நாவலாசிரியர். இஸ்தான்புல், அனடோலியா எனப் பல இடங்களுக்கும் நாவல் பயணப்படுகிறது. நாவல் முதலில் துருக்கியில்  நாளிதழ் ஒன்றில் வெளியாகியிருக்கிறது. அங்குள்ள நாளிதழின் தரத்தை நமது நாட்டின் நாளிதழ்களின் தரத்துடன் ஒப்பிட்டுப் பார்த்து நாம் பெருமூச்சுதான் விட இயலும். 


பொதுவாக, ஒரு நாவலையோ புத்தகத்தை வாசிக்க ஒரு தூண்டுதல் வேண்டும். அந்தத் தூண்டுதலை நண்பர் ஒருவர் தரலாம், இல்லையெனில் எங்கோ வாசிக்கும் ஏதோவொரு வரியில் குறிப்பிடத்தக்க தூண்டுதல் கிடைத்துவிடலாம். அப்படிக் கிடைத்தபோது அதை நாம் வாசிக்கத் தொடங்குவோம். நிச்சலனத்தைப் பொறுத்தவரை எனக்கு நஞ்சுண்டனைத் தவிர யாரும் பரிந்துரைக்கவில்லை. அவருடைய பரிந்துரையும் அது ஒரு வகையான மாய எண்ணம்தானே. இப்படியெல்லாம் எதையாவது நினைத்து மனம் மகிழ்ந்துகொள்கிறது என்றுதானே எடுத்துக்கொள்ள முடியும். 

கரோனா காலத்தின் முதல் ஊரடங்கைத் தொடர்ந்து திரைப்படங்களாகப் பார்த்துக் கழித்தேன். பார்க்க வேண்டிய பல படங்களைப் பார்த்து முடித்தேன். அதைத் தனிப் பதிவாக எழுதுகிறேன். இந்தப் பதிவில் நிச்சலன குறித்து மட்டும் எழுத வேண்டும் என முடிவெடுத்துவிட்டதால் அதற்குத் தாவுகிறேன். இப்படியெல்லாம் நமக்கு நாமே எதையாவது கட்டுப்பாடுகளை விதித்துத்தான் வாழ்க்கையை நடத்துகிறோம். இது ஒருவகையில் அபத்தமாகத்தான் இருக்கிறது. ஆனாலும். இதுதானே நிலைமை? 

எனது வாசிப்பு என்பது மிகவும் சுணக்கம் கொண்டது. நாவலின் பக்கங்களைக் கொண்டு ஒருநாளுக்கு எத்தனை பக்கம் படித்தால் அதை எத்தனை நாளில் முடிக்கலாம் என முதலில் திட்டமிடுவேன். அதன்படி சில நாள்கள் படித்தும் முடிப்பேன். அதன் பின்னர் அந்தத் திட்டத்துக்கு ஏதோ ஒரு நோவு வந்துவிடும். நாவலைக் கசந்த காதல் போல் தள்ளிவைத்துவிடுவேன். மீண்டும் அந்தக் காதல் துளிர்க்குமோ துளிர்க்காதோ அது காலத்துக்குத்தான் வெளிச்சம். 

அகமத் ஹம்தி தன்பினார்
நிச்சலனம் நாவல் 424 பக்கங்களைக் கொண்டிருக்கிறது. ஆகவே, ஒரு நாளைக்கு 40 பக்கம் வீதம் வாசித்தால் சுமார் பதினோரு நாளில் முடித்துவிடலாம் என ஒரு கணக்குப் போட்டேன். எனது கணக்கில் பிழை இருக்காது எனது வாசிப்பில்தான் பிழை இருக்கும் என்று ஏற்கெனவே நான் சொல்லியிருப்பதை நினைவுகூர்ந்து நீங்கள் இதை எப்படி வாசித்திருப்பான் எனச் சந்தேகப்படாதீர்கள். எப்போதும் ஒருவன் சோம்பேறியாக இருக்க மாட்டான். சிலவேளை அவனையும் அறியாமல் ஏதாவது ஒரு சுறுசுறுப்புப் படகு வந்து அவனைக் கரை சேர்த்துவிடும். அப்படியான படகு எனக்கு நிச்சலனம் நாவல் விஷயத்தில் நடந்தேறியது. மிகவும் ஆச்சரியகரமான வகையில் 2020 ஏப்ரல் 18 அன்று வாசிக்கத் தொடங்கி ஏப்ரல் 27 அன்றிரவில் முழுவதுமாக வாசித்து முடித்துவிட்டேன். எனக்கே ஆச்சரியம் தாங்கவில்லை. அப்படி என்னை வாசிக்க வைத்தது நாவலின் நடை. ஆகாய விமானம் பரந்த வெளியில் தடம்பிறழாமல் செல்வது போன்றதொரு நடையில் நாவல் நகர்த்தப்பட்டிருந்தது. 

வாழ்க்கைமீது உங்களுக்கு ஏகப்பட்ட கேள்விகளும் வாழ்க்கை குறித்து உங்களுக்கு அநேக சிந்தனைகளும் இருக்கிறது என்றால் கண்டிப்பாக நீங்கள் நிச்சலனத்தை வாசிக்க வேண்டும். அது தரும் இலக்கிய சுகம் இப்படி அப்படியென்றில்லை அது ஒரு பரம சுகம். கதை என்று பார்த்தால் வெறும் காதல் கதைதான். என்ன வெறும் காதல் என்கிறான் மரமண்டைப்பயல் என நீங்கள் எனைத் திட்டக் கூடும். காதலை வெறும் காதல் என்பதால் எனக்குக் காதல் மீது வெறுப்பு என்று கருதிக்கொள்ளாதீர்கள். அது சும்மா வெறும் நடிப்பு. ஒவ்வொரு முட்டாளுக்குள்ளும் ஒரு ‘அறிவுஜீவி’ முளைவிடத் துடிக்கத்தானே செய்வான். அவனது செயல்பாடுகள் கொஞ்சம் அசட்டுத்தனமாகத்தானே இருக்கும். அப்படி ஒரு அசட்டுத்தனத்தில் வெளிப்பட்டதுதான் அந்த வெறும் காதல். 

மும்தாஜ் எனும் இளைஞனின் காதல்தான் நாவலின் நடு நரம்பு. அதை அடிப்படையாகக் கொண்டு நாவல் அங்குமிங்கும் சென்று வருகிறது. நான்கு பாகங்களைக் கொண்ட நாவலில் முதல் பாகம் இக்ஸான், இரண்டாம் பாகம் நூரன், மூன்றாம் பாகம் சூயத், நான்காம் பாகம் மும்தாஜ். நான்கு பாகங்களில் இரண்டாம் பாகமான நூரன் அதிகப் பக்கங்களை எடுத்துக்கொண்டிருக்கிறது. அந்த நூரன் தான் மும்தாஜின் காதலி. தன் வாழ்வின் பல சோகங்களை பால்யம் முதலே அனுபவித்துவந்த மும்தாஜின் வாழ்க்கையில் அவனை அவனது இடர்பாடுகளிலிருந்து கைதூக்க வந்தவள் நூரன் என்று நம்பினான் மும்தாஜ். ஆனால் அவள் அவனுக்குத் துக்கத்தையே பரிசளித்துச் சென்றுவிட்டாள். நூரனுடன் மும்தாஜ் படகில் இரவு பகல் என்று பாராமல் சுற்றியிருக்கிறான். அந்தத் தேவதையுடன் திருமணத்துக்கான நாளை எல்லாம் குறித்துவிட்டான். எல்லாவற்றையும் ஒரு மரணம் வந்து அழித்துவிட்டது. அதுவும் ஒரு தற்கொலை. நூரனோ மும்தாஜோ இறந்திவிட்டிருந்தால்கூட அதில் ஒரு நியாயம் இருந்திருக்கும். ஆனால், நூரனை எப்போதோ காதலித்திருந்த ஒருவன் இறந்து இவர்கள் காதலை நிறைவேறாத ஒன்றாக மாற்றிவிட்டான். 

அகமத் ஹம்தி தன்பினார்

தன் கணவனை விவாகரத்து செய்துவிட்டிருந்த நூரனுக்கு மும்தாஜ் எல்லாமுமாக இருந்தான். அவனைக் கைபிடிக்கலாம் என்றிருந்தபோது அவளுடைய கணவன் திரும்பிவந்து அவளுடைய காதலின் திசையை மாற்றிவிட்டான். நிறைவேறாத காதலின காவியச் சோகம் இந்த நாவலின் பக்கங்களில் எல்லாம் நிரம்பிவழிகிறது. ஆனால், அது மாத்திரமே நாவலா என்று கேட்டால் இல்லை என்பதே பதில். துருக்கி நாட்டின் வரலாறு ஒட்டாமன் பேரரசின் சரித்திரம், அந்த நாட்டின் நவீன வாழ்க்கை, பழம்பெருமை என எல்லாவற்றையும் தொட்டுச் செல்கிறார் தன்பினார். 

தனி மனிதரின் அக உணர்வுகளையும் புறச் சூழல்களையும் ஒருசேர எடுத்துவைத்துக்கொண்டே போகிறார். துருக்கிய இஸ்லாம் வாழ்வின் பல பக்கங்களைத் திறந்துகாட்டுகிறார். அதன் இசை, தத்துவம் என வாய்ப்புக் கிடைக்கும் இடங்களில் எல்லாம் துருக்கிய பண்பாட்டின் விதைகளைத் தூவிச் செல்கிறார் தன்பினார். இந்த நாவலின்வழியே இசைபட வாழும் ஒரு பண்பாடு வாய்க்கப்பெற்ற நாடாக துருக்கி துலக்கம் கொள்கிறது.  இரண்டாம் உலகப் போர் மூளுமா மூளாதா என கேள்விகள் பல்கிப் பெருகிய காலகட்டத்தில் தொடங்கும் நாவல் நிறைவுறும் வேளையில் இரண்டாம் உலகப் போர் மூண்டுவிடுவதான அறிவிப்பு வருகிறது. 

அறிவுப்பூர்வமான வாழ்வை வாழும் மனிதனின் உணர்வுபூர்வ காதல் வழியே ஒரு நாட்டின் வரலாற்றைக் குழைத்து இலக்கிய ருசியுடன் அகமத் ஹம்தி தன்பினார் படைத்திருக்கும் ரசனையான விருந்து நிச்சலனம். ஆங்கிலத்தில் இந்த நாவல் A mind at piece என மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. துருக்கிய மொழியில் இதன் தலைப்பு ஹோஸோர் (Huzur). தமிழில் இதை மொழிபெயர்த்திருக்கிறார் தி.அ.ஸ்ரீனிவாசன். நாவல் முழுவதும் ஒற்றுப்பிழைகள் ஏராளம் காணப்படுகின்றன. நஞ்சுண்டன் பரிந்துரைத்த நாவல் ஆனால் அவரால் சகித்துக்கொள்ள இயலாத ஒற்றுப்பிழைகளுடன் வாசிக்க நேர்ந்தது நகைமுரண்தான். 

நிச்சலனம் 
அகமத் ஹம்தி தன்பினார் 
தமிழில் தி.அ.ஸ்ரீனிவாசன் 
வெளியீடு:  காலச்சுவடு
பக்கங்கள்: 424
விலை ரூ. 375 
தொடர்புக்கு: 04652278525

ஞாயிறு, ஏப்ரல் 07, 2019

இயக்குநர் மகேந்திரன்: அழகியல் திரைப்பட ஆசான்

(அஞ்சலிஇயக்குநர் மகேந்திரன் 25.07.1939 – 02.04.2019)



தமிழ்த் திரையின் உயிர்த் துடிப்பு கொண்ட இயக்குநர் மகேந்திரன் என்பதை யாரும் மறுக்கப்போவதில்லை. சினிமா ஒரு தவம் என்றோ அதற்காகவே காத்துக்கிடந்தவர் என்றோ அவரைக் குறிப்பிட்டுச் சொல்லிவிட முடியாது. ஏனெனில், அவர் சினிமாவுக்கு வந்தது அவரே சொல்லியிருப்பதுபோல் ஒரு விபத்துதான். ஆனால், சினிமாவுக்கு வந்த பின்னர் அவர் படைத்த சினிமாக்களில் சிலதாம் அவரைக் காலாகாலத்துக்கும் சாகாவரம் பெற்றவராக்கியிருக்கின்றன. 

அளவுக்கு மீறித் தான் புகழப்பட்டுவிட்டோமோ என அவரே கூச்சப்பட்டுப் பேசியிருக்கிறார். ஆனாலும், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அவரைப் புகழ்ந்துபேசுவது ஒருவகையான போதை. அதை அவர்கள் தவிர்க்க நினைத்தாலும் அந்தப் போதையில் அவர்களுக்கு ஒரு ஆத்மதிருப்தி இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. ஏனெனில், அந்த அளவுக்கு சினிமாவை நேசிக்கும் ரசிகரின் உதிரத்தின் அணுக்களில் கலந்துவிட்ட பெயர்கள் ‘முள்ளும் மலரு’மும்  ‘உதிரிப்பூக்க’ளும் ‘மெட்டி’யும் ‘ஜானி’யும் ‘நண்டு’ம்  இன்ன பிற படங்களும்.   

பல படங்களுக்குக் கதை, வசனம் எழுதித் தள்ளிய பின்னரே அவர் இயக்குநராக அரிதாரம் பூசிக்கொண்டார். சிவாஜி கணேசனின் ‘தங்கப்பதக்கம்’ அதில் இடம்பெற்றிருந்த வசனங்களுக்காகவே அறியப்பட்டது. அப்படியான மனிதர் முதன்முறையாக இயக்குநராக அவதாரமெடுத்த ‘முள்ளும் மலரும்’ காட்சி மொழியில் புது இலக்கணம் வகுத்தது. அதன் பின்னர் அவர் யதார்த்த சினிமாவின் நாயகன் எனக் கொண்டாடப்படுகிறார். அவர் யதார்த்த சினிமாவை உருவாக்கினாரா என்பது சந்தேகம்தான். ஏனெனில், அவர் அழகியல் சினிமாக்களை உருவாக்கினார்.



அவரது முதல் படமான ‘முள்ளும் மலரும்’ படத்தையே எடுத்துக்கொண்டால் அது ஒரு யதார்த்த படம் அன்று. அது முழுக்க முழுக்க அழகியல் சினிமாதான். கையை இழந்துவிட்டு அண்ணன் வந்து நிற்கும் ஒரு காட்சி போதும் அது அழகியல் சினிமா என்பதைப் புரிந்துகொள்ள.  கையில்லாமல் வந்து நிற்கும் அண்ணனைப் பார்த்து விக்கித்துப்போய் நிற்பார் தங்கை. அண்ணனோ “என்னடா ஆச்சு? ஒண்ணும் இல்ல… ஒண்ணும் இல்லடா… ஒண்ணும் இல்ல” எனும் வசனங்களை மட்டுமே பேசுவார். யதார்த்தத்தில் எந்த அண்ணனும் தங்கையும் அப்படிப் பேசிக்கொள்வார்களா? ஆனால், படத்தில் அந்தக் காட்சியைப் பார்க்கும்போது அற்புதமானதாகத் தெரியும். அந்தக் காட்சியின் கதாபாத்திர உணர்வுகளை ரசிகருக்கு நடிப்பின் வழியாகவும் இசையின் வழியாகவும் ஒளிப்பதிவின் வழியாகவும் இயக்குநர் உணர்த்தியிருப்பார். இந்தத் தன்மை அதுவரையான தமிழ் சினிமாவின் பாதையிலிருந்து விலகியிருந்தது. அதுதான் மகேந்திரனின் பாதையாக அதன் பின்னர் உருவெடுத்தது. உணர்வுமயமான தருணங்களை அறிவின் தளத்தில் வைத்து அலசிப் பார்ப்பதில் அலாதி ஆனந்தமடைந்தவர் அவர். அதனால்தான் அவை யதார்த்தப் படங்களா எனச் சந்தேகம் கொள்ள வேண்டியதிருக்கிறது.

அவரது படங்களில் திரையில் காட்சிகள் அமைக்கப்பட்ட விதமும் நடிகர்கள் வருவதும் போவதும் வசனங்களைப் பேசுவதும் ரசனைக்குரியவையாக மாறியிருந்தன. அவற்றில் காணப்பட்ட அழகில் சொக்கிப்போயிருந்தனர் தமிழ்த் திரைப்பட ரசிகர்கள்.  அதுவரை பெரிதாக மலராமல் கிடந்த தமிழ் சினிமாவின் மலர்ச்சிக்குக் கைகொடுத்தவர் என்ற வகையில் தொடர்ந்து ஆராதிக்கப்படுகிறார் மகேந்திரன். அவரது பாடல்களில் காணப்படும் மாண்டேஜ் காட்சிகளும் அவர் எந்த அளவுக்கு சினிமாவில் அழகுணர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்தார் என்பதைத் துல்லியமாக உணர்த்துகின்றன. ஆனாலும், சினிமாவில் பாடல்களின் இடம் குறித்து அவருக்குப் பலத்த ஆட்சேபகரமான கருத்துகள் இருந்தன என்பதும் உண்மை. அவருக்குப் பின் வந்த மணிரத்னம், ஷங்கர், வஸந்த் போன்ற பல இயக்குநர்களின் படங்களில் பாடல் காட்சிகள் சிறப்பான இடத்தைப் பெற்றதற்கு மகேந்திரன் பெரிய உந்துதலாக இருந்திருக்கக்கூடும்.  



உரையாடல் என்ற உறைநிலை சினிமாவில் இவரது பாதம் பட்ட பிறகுதான் அது உயிர் தரித்துக்கொண்டது. அவரது படங்கள் ஒவ்வொன்றைப் பற்றியும் நாள்கணக்காகப் பேசிக்கொண்டிருக்கலாம். திரைத்துறையின் நண்பர்கள் சந்தித்து அளாவளாவும்போதெல்லாம் அந்த இடத்தில் மகேந்திரன் பெயரோ அவரது படங்களின் பெயரோ அவர் படைத்த கதாபாத்திரங்களது பெயரோ இடம்பெறாமல் போகாது என்று சொல்லும் அளவுக்கு மகேந்திரன் தமிழ் சினிமாவில் பெரும் தாக்கத்தைச் செலுத்தியிருக்கிறார். ஆனாலும், இந்தியத் தரத்துடனும் உலகத் தரத்துடனும் ஒப்பிட்டுப் பார்த்தால் மகேந்திரனின் இடம் நாம் பெருமைப்படும் அளவுக்கான உயரத்தில் இல்லை என்பதை இந்த இடத்தில் நினைவுபடுத்திப் பார்க்க வேண்டும். அதே நேரத்தில் நூறாண்டு தமிழ் சினிமா வரலாற்றில் மகேந்திரன் அழுத்தமான அத்தியாயங்களை எழுதிச் சென்றிருக்கிறார் என்பதையும் மறுக்க முடியாது. 

அவருக்குக் குடும்பம் என்ற அமைப்பின்மீது அநேகக் கேள்விகள் இருந்துள்ளன என்ற முடிவுக்கு நாம் வருவதற்கான சாத்தியங்களைக் கொண்டவை அவரது ‘உதிரிப்பூக்கள்’, ‘மெட்டி’, ‘நண்டு’, ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’, ‘ஜானி’ போன்ற பெரும்பாலான படங்கள். மரபு, குடும்பம், திருமணம், ஆணாதிக்கம், பெண்களின் துயரம் இவற்றைப் போன்ற விஷயங்களைத் தான் அவர் தொடர்ந்து படைத்திருக்கிறார். அவற்றைக் கருவாகக்கொண்டே அவரது படைப்புகள் உருவாகியிருக்கின்றன. தந்தைமீது சினம் கொண்ட தனயர்களையும், அன்பு கொண்ட காரணத்தால் அவதிக்கு ஆளாகும் பெண்களின் துயரத்தையும் அவருடைய படங்களில் நாம் அதிகமாக எதிர்கொள்ள முடிகிறது.

பெரிய குடும்பத்தின் இனம்புரியாத அரூப சோக இழையைத் தேர்ந்தெடுத்து அதில் கதாபாத்திரங்களைக் கோத்துப் படங்களாக்கிருக்கிறார் மகேந்திரன். அவரது முதன்மைக் கதாபாத்திரங்கள் குடும்பங்களைப் புறக்கணித்தவை அல்லது குடும்பங்களால் துரத்திவிடப்பட்டவை. குடும்பத்திலிருந்து அல்லது ஒரு கூட்டத்திலிருந்து விலகிச் செல்லும் மனநிலையில்தான் அவர் படங்களை உருவாக்கியிருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. ‘மெட்டி’ திரைப்படத்தில் தந்தை மீது வெறுப்புக் கொண்டு ஊரைவிட்டு ஓடிவருகிறார் பட்டாபி. இது தமிழ்நாட்டில் நடைபெறும் கதை. இதே போல் ‘நண்டு’ திரைப்படத்தில் லக்னோவிலிருந்து தகப்பன் மீது கோபம் கொண்டு தமிழ்நாட்டுக்கு வருகிறார் அதிர்ஷ்டம்கெட்ட நாயகன் ராம் குமார் ஷர்மா.  



இந்தியா முழுவதும் குடும்பங்களில் ஆணாதிக்கத் திமிர் கொண்ட தந்தைகள்தாம் இருந்திருக்கிறார்கள் என்று இதை நாம் புரிந்துகொள்ள சாத்தியமிருக்கிறது. மகேந்திரனின் புரிதலும் இதுவாக இருந்திருக்கலாம். குடும்பத்துப் பெண்கள் ஆண்களை எதிர்த்துப் பேச முடியாமலும் அந்த அடிமைத்தனத்திலிருந்து வெளிவர இயலாமலும் தங்களை மாய்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஒருவேளை அவர்கள் வீட்டிலிருந்து வெளியேறினாலும் ஊர்ப் பேச்சுகளிலிருந்து தப்பிக்க வழியின்றித் தங்களை இழந்திருக்கிறார்கள். ‘மெட்டி’யின் கல்யாணி அம்மா தனது கொடுமைக்காரக் கணவனிடமிருந்து விலகித் தனியே தன் மகள்களை வளர்த்துவிட்டபோதும், ஊராரது இழிபேச்சுக்கு ஆளாகித் தனது முந்தானையிலேயே தூக்குப்போட்டு இறந்துவிடுகிறார். குடும்பமும் சமூகமும் பெண்கள் விஷயத்தில் எவ்வளவு பிற்போக்காக இருக்கின்றன என்பதை உணர்ந்து அந்தப் பிற்போக்குத் தனத்தை உணர்த்துவதற்காகவும் அதை மாற்ற இயலும் கலைப் படைப்பாகவுமே தனது படங்களை உருவாக்கியுள்ளார்.

இயக்குநர் மகேந்திரன் கதை எழுதும் திறமை கொண்டிருந்தவர் என்றபோதும் பிறரது கதைகளைப் படமாக்குவதிலும் அவர் ஆர்வம் கொண்டிருந்தார். புதுமைப்பித்தனின் ‘சிற்றன்னை’ தாக்கத்தில்தான் அவர் ‘உதிரிப்பூக்க’ளைப் படைத்தார். நாவலுக்கும் சினிமாவுக்கும் பெரிய வேறுபாடுண்டு. ஆனாலும், உந்துதலைத் தந்த காரணத்துக்காகவே அதைப் படத்தின் டைட்டிலிலேயே கவனப்படுத்தியவர். இலக்கியத்துக்கும் சினிமாவுக்கும் பாலமாக இருந்தவர் மகேந்திரன். அவரது வேர் இலக்கியத்தில் நிலைகொண்டிருந்த காரணத்தாலேயே அவரால் பசுமையான கிளை பரப்பிய உயிர்த்துடிப்பான சினிமாக்களை உருவாக்க முடிந்திருந்தது. அந்த சினிமாக்களின் நிழலில் சினிமா ரசிகர்கள் ஆசுவாசமடைந்துகொண்டே இருப்பார்கள். அந்த நிழல் இருக்கும் வரை மகேந்திரனின் நினைவுமிருக்கும்.

இந்து தமிழ் திசை இதழில் வெளியானது. 

செவ்வாய், பிப்ரவரி 09, 2016

திருலோகம் என்றொரு கவி ஆளுமை

சங்கப் பாணர்களின் நீட்சியான கவிஞர்


பலன் எதிர்பாராமல் அரும்பெரும் பணிகளில் ஈடுபடுவது சென்ற தலைமுறையினரில் பெரும்பாலானோர் கொண்டிருந்த மாண்பு. எல்லாமே பிரதிபலன் நோக்கிய செயல்பாடுகள் எனச் சமூகம் பயணிக்கும் வேளையில் மாண்புடன் விளங்கிய அந்தத் தலைமுறையினரின் குணநலன்களை வரும் தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்லும் கடமை தற்காலத் தலைமுறையினருக்கு உண்டு. அதிலும் கலை சார்ந்த செயல்பாடுகளில் தன்னைப் பிணைத்திருப்போர் தன்னலம் கருதாமல் செய்ய வேண்டிய அரும் பணி இது. அப்படிப்பட்ட ஆளுமைகள் பற்றிய செய்திகள், தகவல்கள், சம்பவங்கள் அடங்கிய வாழ்க்கை வரலாற்றைப் புதிய தலைமுறையினர் அறிந்துகொண்டால்தான் நமது பண்பாடும் பாரம்பரியமும் கட்டிக் காக்கப்படும். உதயமாகும் தலைமுறை தனது கடந்த கால மனிதர்கள் பற்றிய செய்திகளை அறியும்போது, தான் எத்தகைய பாரம்பரியத்தில் பிறப்பெடுத்திருக்கிறோம் என்று பெருமிதமும் பிரியமும் கொள்ளும். அரிய ஆளுமைகளை அறியவைக்க வேண்டிய தருணத்தின் தேவையை உணர்ந்து அதை நிறைவேற்றியுள்ளார் ரவிசுப்பிரமணியன். ஆளுமைகளை வெவ்வேறு வகையில், தான் அறிந்த கலை வெளிப்பாட்டின் மூலம் ஒரு கலைஞன் அறியச் செய்யலாம். ரவிசுப்பிரமணியன் ஆவணப்படம் என்ற வடிவத்தைக் கையில் எடுத்திருக்கிறார்.

சங்ககாலப் பாணர்களின் நீட்சி போல் கவிதைகள் பாடிய கவிஞர், சிறுபத்திரிகையாளர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர் எனப் பன்முகத் தன்மை கொண்ட திருலோக சீதாராம் குறித்த ஆவணப்படத்தை எழுதி இயக்கி நம் முன் படைத்திருக்கிறார் ரவி. மகாகவி பாரதியாரை, அவரின் கவிதைகளை, பொதுமக்களிடம் கொண்டுசேர்த்த வ.ராமசாமி ஐயங்கார்., ஜீவா, பாரதிதாசன் வரிசையில் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட சீதாராமுக்கும் வலுவான இடம் உண்டு என்பதை ஆவணப்படம் சுட்டுகிறது. இலக்கிய நுட்பங்களை அறிந்திருந்தது போலவே இசையின் நுட்பங்களையும் புரிந்துவைத்திருந்ததால், எழுத்தாகவும் உரையாகவும் அல்லாமல் தன் இனிய குரலால் பாரதியின் பாடல்களை உயிர்ப்புடன் பாடி அவற்றின் சாரத்தைப் பரப்பியிருக்கிறார் சீதாராம். பாரதியாரை நேரில் சந்தித்திராதபோதும் அவரது பாடல்கள் வழி அரும்பிய அதிசய உறவாக பாரதியார் - சீதாராம் உறவு இருந்திருக்கிறது. செல்லம்மா பாரதியின் உயிர் பிரிந்ததே சீதாராமின் மடியில்தான் என்று பெருமையுடன் குறிப்பிடுகிறார் சீதாராமின் நெருங்கிய நண்பரும் தமிழறிஞருமான தி.ந.ராமச்சந்திரன்.

சீதாராமின் தனிநபர் கவிதை வாசிப்பை 1967-ல் நேரில் கேட்ட எழுத்தாளர் அசோகமித்திரன், கவிதை வாசிப்பைத் தான் அனுபவித்த மிகச் சில சந்தர்ப்பங்களில் இது ஒன்று என்கிறார். புதுக்கவிதைகளைக்கூட உள்ளார்ந்து ரசித்து வாசித்தார் சீதாராம் என வியக்கிறார் அவர். ஆம்பல் கலை இலக்கிய அறக்கட்டளை தயாரித்திருக்கும் இந்த ஆவணப்படத்தில், கரிச்சான்குஞ்சு, க.நா.சு, தி.ஜானகிராமன், வெங்கட் சாமிநாதன், ஜெயகாந்தன் போன்றோரின் மேற்கோள்கள், பாரதியார், பாரதிதாசன், திருலோக சீதாராம் ஆகியோரின் பாடல்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி திருலோக சீதாராமின் இலக்கிய வாழ்க்கையையும் லௌகீக வாழ்வின் சில தருணங்களையும் காட்சிச் சித்தரிப்புகளின் உதவியுடன் விவரித்திருக்கிறார் ரவிசுப்பிரமணியன்.

டிராட்ஸ்கி மருதுவின் ஓவியங்களும் சிபி சரவணனின் ஒளிப்பதிவில் நிலக்காட்சிகளும் இயற்கை அழகின் பின்புலமும் சீதாராமின் காலத்து நிகழ்வுகளைச் சித்தரிக்கும் காட்சிகளில் ரவிசுப்பிரமணியனுக்குப் பெருமளவில் உதவியுள்ளன. ஆவணப் படத்தின் பின்னணி இசையும் பாடல்களும் ஆழமான இசை அனுபவத்தைச் சாத்தியமாக்குகின்றன. திவாகர் சுப்பிரமணியன் இசையில் ஒலிக்கும் பாரதியார் பாடல்களின் மெட்டுகளும் ‘ஆத்திசூடி இளம்பிறை அணிந்து’ எனத் தொடங்கும் சர்வ சமயப் பிரார்த்தனைப் பாடல் காட்சிப்படுத்தப்பட்டுள்ள விதமும் ஆவணப் படத்துக்கு வேறு வண்ணங்களை அளிக்கின்றன.

பாரதி போலவே அவரின் தாசரான பாரதிதாசனையும் பிரியத்துடன் நேசித்திருக்கிறார் சீதாராம். பாரதிதாசனின் ‘குடும்ப விளக்கு’ நூலை முழுவதும் மனப்பாடம் செய்து சீதாராம் மேடையில் நிகழ்த்தும் உரையை வியந்தோதுகிறார் பாரதிதாசனின் புதல்வர் மன்னர் மன்னன். அந்த உரையைக் கேட்ட அனுபவத்தை மெயிசிலிர்க்க விவரிக்கிறார் சீதாராமின் சீடர் சக்தி சீனுவாசன். பாரதிதாசனுடன் முரண்பட நேர்ந்த ஒரு சமயத்தில் சீதாராம், “அய்யா கவிஞரே நீங்கள் எங்களுக்குத் தேவையில்லை ஆனால் உமது கவிதைகள் எங்களுக்குத் தேவை” எனக் கூறி பாரதிதாசனை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார். அந்த முரண்பாட்டுக்குப் பின்னர் பாரதிதாசன், பக்கத்து வீட்டிலிருந்து பிராமணரான சீதாராமுக்குத் திருநீறு வாங்கித் தரச் செய்திருக்கிறார். சீதாராமும் அங்கே விருந்து உண்டிருக்கிறார். திராவிட இயக்கத் தலைவரான அண்ணாத்துரை, ‘அக்ரஹாரத்து அதிசயப் பிறவிகளில் இவரும் ஒருவர்’ என சீதாராமைப் பாராட்டியிருக்கிறார். கொள்கை மாறுபாடு, கருத்து முரண்பாடு போன்றவை தனிநபர்களின் உறவையும் கலா ரசனையையும் சிறிதும் சேதாரப்படுத்தவில்லை. இந்தப் பண்பு இப்போது என்னவாகியிருக்கிறது எனச் சிந்திக்கத் தூண்டுகிறது படம்.

சுரதா, சுஜாதா போன்ற எழுத்தாளர்களின் முதல் படைப்பை வெளியிட்டது சீதாராமின் சிவாஜி இதழே. தன் படைப்புகளைப் பிரசுரிப்பதில் அதிகம் ஆர்வம் காட்டாமல் இளம் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதையே முதன்மை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டிருக்கிறார் சீதாராம். இப்படியான தகவல்கள் பொதிந்த இந்த ஆவணப் படம் மூலம் நம் மனதில் உருவாகும் சீதாராம் குறித்த பிம்பத்தில் இலக்கியம் சார்ந்த, தனிநபர் மாண்பு சார்ந்த பெருமிதம் நிரம்பி வழிகிறது. எப்படிப்பட்ட ஆளுமை அவர் என்னும் வியப்பு மேலிடுகிறது. திருலோக சீதாராம் பற்றிய விமர்சனக் கருத்துகள் ஆவணப்படத்தில் இல்லையென்றாலும், பார்வையாளர்களிடம் அவரைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ளும் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

பிப்ரவரி 7 தி இந்து நாளிதழில் வெளியானது

லேட்டஸ்ட்

ரஜினியாவாரா விஜய்?

தொடர்பவர்