இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, டிசம்பர் 15, 2019

காளிதாஸ்: காதலித்தால் போதுமா?

காதலித்து மணந்துகொண்டாலும் தன் முழு நேரத்தையும் காவல் துறைக்கு ஒதுக்கிவிட்ட ஆய்வாளர் காளிதாஸ் (பரத்). எப்போதும் வேலை வேலை என்று அலைந்து வீட்டைக் கவனிக்காததால் அவருடைய மனைவி வித்யாவுக்கு (ஆன் ஷீத்தல்) பெருங்கோபம். இந்தச் சூழலில் அவருடைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அடுத்தடுத்து இரண்டு பெண்கள் உயரமான மாடியிலிருந்து விழுந்து மர்மமான முறையில் இறந்துவிடுகிறார்கள். இந்த வழக்கை விசாரிக்க துணை ஆணையர் ஜார்ஜ் (சுரேஷ் மேனன்) வருகிறார். காளிதாஸ் இறந்த பெண்கள் தற்கொலைசெய்துகொண்டார்கள் என்கிறார். சுரேஷ் மேனன் அவை கொலையாகவும் இருக்கலாம் என்கிறார். மர்ம மரணங்கள் தொடர்கின்றன. அவை தற்கொலையா, கொலையா, இவற்றின் பின்னணி மர்மம் என்ன? காளிதாஸுக்கும் அவருடைய மனைவிக்கும் இடையிலான பிணக்கு தீர்ந்ததா போன்ற கேள்விகளுக்கு விடைகளாக விரிகிறது திரைக்கதை.
இதைப் போன்ற உளவியல்ரீதியான தொடர் கொலைப் படங்கள் பல வந்துவிட்டன. என்றபோதும், இறுதிவரை படத்தை இயன்ற அளவு தொய்வின்றி நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் ஸ்ரீசெந்தில். ஜார்ஜ் கதாபாத்திரம் வழக்கமான போலீஸ் கதாபாத்திரம் போல் அல்லாமல் படைக்கப்பட்டிருக்கிறது. தனிமையின் துயரை வெளிப்படுத்தும் வகையில் வித்யா கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருக்கிறது. வழக்கமான புலனாய்வுப் படம் போல் அல்லாமல், காவல் துறையினரின் கடமை உணர்வு குடும்ப உறவுகளில் ஏற்படுத்தும் சிக்கல்களையும் அவ்வப்போது வெளிப்படுத்தும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. காவலர் சிங்க துரையிடம் வித்யா உரிமையுடன் காளிதாஸ் குறித்துக் கோபப்படுவது, ஜார்ஜ் காளிதாஸ் வீட்டுக்கு வருவது போன்ற காட்சிகள் அழகு.

நாமெல்லாம் இங்க என்ன பெஞ்சு தேய்க்கவா உக்காந்திருக்கோம் என்று சுறுசுறுப்புடன் காளிதாஸ் கதாபாத்திரத்தில் பரத் பணியாற்றியபோதும், அந்தக் கதாபாத்திரத்தை முடிந்த அளவு ஒழுங்காகச் செய்திருக்கிறார் என்ற போதும் அவரை ஏனோ காக்கி உடையில் பார்க்கவே முடியவில்லை.  அலுவலகப் பணி தனிப்பட்ட நேரத்தையும் எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க இயலாமலும், மனைவியின் துயரைப் போக்க இயலாமலும் உருவாகும் தவிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஆன் ஷீத்தல் அழகாக இருக்கிறார். அவருடைய கதாபாத்திர உருவாக்கமே சற்று மாறுபட்டதாக இருக்கிறது.  அந்த மாறுபாடான நடத்தைக்குத் தேவையான நடிப்பை இயல்பாக வழங்கியிருக்கிறார். ஆசை ஆசையாகக் குழந்தையுடன் கொஞ்சுவது, மேல் மாடியில் குடியிருக்கும் ஆதவ் கண்ணதாசனுடன் நேரத்தைச் செலவழிப்பது, கணவன் மீது உரிமையுடன் கோபம் கொள்வது என எல்லாக் காட்சிகளிலும் கவர்கிறார்.

முப்பது நிமிடங்களுக்குப் பிறகு உள்ளே வந்தாலும் சுரேஷ் மேனன்தான் படத்தை முழுவதும் கூட்டிச் செல்கிறார். காளிதாஸ் நாயகன் என்றபோதும் சுரேஷ் மேனனுக்கு முதன்மை தரப்பட்டுள்ளது. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக காவல் துறையில் பணியாற்றியதால் அனுபவப் பட்டிருக்கும் நிதானத்தை அழகாகக் காட்டியுள்ளார். தேவையற்ற பதற்றம் எதுவுமின்றி வழக்கை விசாரித்துச் செல்லும் தன்மை ஈர்க்கக்கூடியதாக இருக்கிறது.   

சுரேஷ் பாலா ஒரு திரில்லர் படத்துக்கான அமானுஷ்ய தன்மையுடன் ஒளிப்பதிவைத் தந்திருக்கிறார். பறவைக் கோணங்களில் வரும் பல காட்சிகள் அழகாக உள்ளன. மழையில் நனைய வைத்தது ஒரு நாள் பாடல் அழகு. பின்னணி இசை பெரிய அளவில் உறுத்தலில்லை.   

போலீஸ்காரனுக்கும் லப் டப் லப் டப்புன்னு அடிக்குதுன்னு பப்ளிக்குகுத் தெரியட்டுமே. ஒருத்தர சாவடிக்கிறது அவருக்குக் கொடுக்குற தண்டனைன்னு நினைக்குறோம் ஆக்சுவலி அது அவருக்குக் கொடுக்கிற ஃப்ரீடம். தப்பு சரியெல்லாம் அவங்கவங்க மனசப் பொறுத்திருக்கு. வேலை கொடுத்தவண்ட்ட பம்மி பம்மிப் பேசுற வாழ்க்கை கொடுத்தவட்ட எரிஞ்சு எரிஞ்சு விழுற போன்ற வசனங்கள் கவனிக்க வைக்கின்றன.

விசாரணையின்போது, பெயரைச் சீருடையில் அணிந்திருக்கும் பாதுகாவலரிடம் பெயர் கேட்பதைக் கவனித்து நீக்கியிருக்கலாம்.  வித்யா பற்றி முழுவதும் அறிந்த பரத் அவளுக்கு முறையாக நேரம் ஒதுக்காதது சற்று உறுத்தல். எந்நேரமும் மொபைலில் மூழ்கிக் கிடப்பது, மனைவியைச் சரியாகக் கண்டுகொள்ளாத கணவர் எனச் சில அம்சங்களை ஒன்றிணைத்து எதிர்பாராத திருப்பங்களுடன் அமைந்திருக்கிறான் காளிதாஸ். இப்படியான படங்கள் புதிதில்லை என்பதால் காளிதாஸைப் பெரிய அளவுக்குக் கொண்டாட முடியவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

லேட்டஸ்ட்

ஒரு விக்ரம் பத்து கமல்ஹாசன்

தொடர்பவர்