இந்த வலைப்பதிவில் தேடு

கொலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கொலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, டிசம்பர் 15, 2019

காளிதாஸ்: காதலித்தால் போதுமா?

காதலித்து மணந்துகொண்டாலும் தன் முழு நேரத்தையும் காவல் துறைக்கு ஒதுக்கிவிட்ட ஆய்வாளர் காளிதாஸ் (பரத்). எப்போதும் வேலை வேலை என்று அலைந்து வீட்டைக் கவனிக்காததால் அவருடைய மனைவி வித்யாவுக்கு (ஆன் ஷீத்தல்) பெருங்கோபம். இந்தச் சூழலில் அவருடைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அடுத்தடுத்து இரண்டு பெண்கள் உயரமான மாடியிலிருந்து விழுந்து மர்மமான முறையில் இறந்துவிடுகிறார்கள். இந்த வழக்கை விசாரிக்க துணை ஆணையர் ஜார்ஜ் (சுரேஷ் மேனன்) வருகிறார். காளிதாஸ் இறந்த பெண்கள் தற்கொலைசெய்துகொண்டார்கள் என்கிறார். சுரேஷ் மேனன் அவை கொலையாகவும் இருக்கலாம் என்கிறார். மர்ம மரணங்கள் தொடர்கின்றன. அவை தற்கொலையா, கொலையா, இவற்றின் பின்னணி மர்மம் என்ன? காளிதாஸுக்கும் அவருடைய மனைவிக்கும் இடையிலான பிணக்கு தீர்ந்ததா போன்ற கேள்விகளுக்கு விடைகளாக விரிகிறது திரைக்கதை.
இதைப் போன்ற உளவியல்ரீதியான தொடர் கொலைப் படங்கள் பல வந்துவிட்டன. என்றபோதும், இறுதிவரை படத்தை இயன்ற அளவு தொய்வின்றி நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் ஸ்ரீசெந்தில். ஜார்ஜ் கதாபாத்திரம் வழக்கமான போலீஸ் கதாபாத்திரம் போல் அல்லாமல் படைக்கப்பட்டிருக்கிறது. தனிமையின் துயரை வெளிப்படுத்தும் வகையில் வித்யா கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருக்கிறது. வழக்கமான புலனாய்வுப் படம் போல் அல்லாமல், காவல் துறையினரின் கடமை உணர்வு குடும்ப உறவுகளில் ஏற்படுத்தும் சிக்கல்களையும் அவ்வப்போது வெளிப்படுத்தும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. காவலர் சிங்க துரையிடம் வித்யா உரிமையுடன் காளிதாஸ் குறித்துக் கோபப்படுவது, ஜார்ஜ் காளிதாஸ் வீட்டுக்கு வருவது போன்ற காட்சிகள் அழகு.

நாமெல்லாம் இங்க என்ன பெஞ்சு தேய்க்கவா உக்காந்திருக்கோம் என்று சுறுசுறுப்புடன் காளிதாஸ் கதாபாத்திரத்தில் பரத் பணியாற்றியபோதும், அந்தக் கதாபாத்திரத்தை முடிந்த அளவு ஒழுங்காகச் செய்திருக்கிறார் என்ற போதும் அவரை ஏனோ காக்கி உடையில் பார்க்கவே முடியவில்லை.  அலுவலகப் பணி தனிப்பட்ட நேரத்தையும் எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க இயலாமலும், மனைவியின் துயரைப் போக்க இயலாமலும் உருவாகும் தவிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஆன் ஷீத்தல் அழகாக இருக்கிறார். அவருடைய கதாபாத்திர உருவாக்கமே சற்று மாறுபட்டதாக இருக்கிறது.  அந்த மாறுபாடான நடத்தைக்குத் தேவையான நடிப்பை இயல்பாக வழங்கியிருக்கிறார். ஆசை ஆசையாகக் குழந்தையுடன் கொஞ்சுவது, மேல் மாடியில் குடியிருக்கும் ஆதவ் கண்ணதாசனுடன் நேரத்தைச் செலவழிப்பது, கணவன் மீது உரிமையுடன் கோபம் கொள்வது என எல்லாக் காட்சிகளிலும் கவர்கிறார்.

முப்பது நிமிடங்களுக்குப் பிறகு உள்ளே வந்தாலும் சுரேஷ் மேனன்தான் படத்தை முழுவதும் கூட்டிச் செல்கிறார். காளிதாஸ் நாயகன் என்றபோதும் சுரேஷ் மேனனுக்கு முதன்மை தரப்பட்டுள்ளது. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக காவல் துறையில் பணியாற்றியதால் அனுபவப் பட்டிருக்கும் நிதானத்தை அழகாகக் காட்டியுள்ளார். தேவையற்ற பதற்றம் எதுவுமின்றி வழக்கை விசாரித்துச் செல்லும் தன்மை ஈர்க்கக்கூடியதாக இருக்கிறது.   

சுரேஷ் பாலா ஒரு திரில்லர் படத்துக்கான அமானுஷ்ய தன்மையுடன் ஒளிப்பதிவைத் தந்திருக்கிறார். பறவைக் கோணங்களில் வரும் பல காட்சிகள் அழகாக உள்ளன. மழையில் நனைய வைத்தது ஒரு நாள் பாடல் அழகு. பின்னணி இசை பெரிய அளவில் உறுத்தலில்லை.   

போலீஸ்காரனுக்கும் லப் டப் லப் டப்புன்னு அடிக்குதுன்னு பப்ளிக்குகுத் தெரியட்டுமே. ஒருத்தர சாவடிக்கிறது அவருக்குக் கொடுக்குற தண்டனைன்னு நினைக்குறோம் ஆக்சுவலி அது அவருக்குக் கொடுக்கிற ஃப்ரீடம். தப்பு சரியெல்லாம் அவங்கவங்க மனசப் பொறுத்திருக்கு. வேலை கொடுத்தவண்ட்ட பம்மி பம்மிப் பேசுற வாழ்க்கை கொடுத்தவட்ட எரிஞ்சு எரிஞ்சு விழுற போன்ற வசனங்கள் கவனிக்க வைக்கின்றன.

விசாரணையின்போது, பெயரைச் சீருடையில் அணிந்திருக்கும் பாதுகாவலரிடம் பெயர் கேட்பதைக் கவனித்து நீக்கியிருக்கலாம்.  வித்யா பற்றி முழுவதும் அறிந்த பரத் அவளுக்கு முறையாக நேரம் ஒதுக்காதது சற்று உறுத்தல். எந்நேரமும் மொபைலில் மூழ்கிக் கிடப்பது, மனைவியைச் சரியாகக் கண்டுகொள்ளாத கணவர் எனச் சில அம்சங்களை ஒன்றிணைத்து எதிர்பாராத திருப்பங்களுடன் அமைந்திருக்கிறான் காளிதாஸ். இப்படியான படங்கள் புதிதில்லை என்பதால் காளிதாஸைப் பெரிய அளவுக்குக் கொண்டாட முடியவில்லை.

ஞாயிறு, டிசம்பர் 08, 2019

வெடிக்காத இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு


இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தாமல் விடப்பட்ட ஒரு வெடிகுண்டு மாமல்லபுரம் கடற்கரையில் கரை ஒதுங்குகிறது. அதை ஒரு ஜெர்மானியப் பெண் கண்டு காவல்துறைத்துக்குத் தகவல் தருகிறார். அந்தக் குண்டு, காவல் நிலையத்திலிருந்து களவாடப்பட்டு காயலான் கடைக்கு வருகிறது. அங்கே லோடு ஏற்றிச் செல்லும் ஓட்டுநர் செல்வம் (தினேஷ்). அவருக்கே தெரியாமல் அவரது லாரிக்கு அது வந்துவிடுகிறது. அந்தக் குண்டைக் கைப்பற்ற ஆயுதத் தரகர் ஜான் விஜய் முயல்கிறார். ஆகவே, காவல் துறையினர் அதைத் தேடிப் புறப்படுகின்றனர். வெடிகுண்டு விபத்தால் பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர் தன்யா (ரித்விகா) ஒரு ஊழலை அம்பலமாக்க அந்தக் குண்டைக் கண்டுபிடிக்க விரைகிறார். அந்தக் குண்டு என்ன ஆனது, அதன் பின்னணியிலான அரசியல் என்ன போன்றவற்றுக்கு விடை தருகிறது இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு. 

இரண்டாம் உலகப் போர் பின்னணியில் உலகமெங்கும் எத்தனையோ படங்கள் வெளியாகியிருக்கின்றன. அந்த வரிசையில் இது தமிழ்ப் பட முயற்சி. போரால் பாதிக்கப்படாத இந்தியா போன்ற நாட்டில் போரின் பாதிப்பைச் சொல்லி ஆயுதப் பயன்பாட்டைக் கைவிடச் சொல்லும் திரைக்கதை இது. களம் தமிழுக்குப் புதிது. இரும்புக் கடை வியாபாரம் அதில் தொழிலாளர் முதலாளி உறவு போன்ற அம்சங்கள் புதிதாக இருப்பதால் அதைக் கவனிக்க வாய்ப்பு தருகிறது திரைக்கதை. படத்தின் தொடக்கத்திலேயே வெடிகுண்டு வெடிப்பதால் ஏற்படும் பாதிப்பு குறித்து சொல்லிவிடுவதால் அந்தக் குண்டு வெடிக்குமோ வெடிக்காதோ என்ற எதிர்பார்ப்பு தொற்றிவிடுகிறது. இது ஒரு சரடு.



சாதி கடந்த காதல் ஒன்றும் திரைக்கதையில் ஒரு சரடாக வருகிறது. லாரி ஓட்டுநரான தினேஷைக் காதலிக்கிறார் ஆதிக்க சாதியைச் சேர்ந்த சித்ரா (ஆனந்தி). அது வழக்கம்போல் ஆணவக்கொலை முயற்சி, தப்பித்தால் எனப் பயணிக்கிறது. இந்த இரண்டு சரடுகளையும் இணைத்து திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. திரைக்கதை பெரிய சுவாரசியத்தையும் தரவில்லை; மந்தமாகவும் இல்லை. அப்படியே பெரிய ஏற்ற இறக்கமின்றிப் பயணித்து அப்படியே முடிந்துவிடவும் செய்கிறது. 

நடிகர் தினேஷுக்கு முக்கியமான பாத்திரம். ஒடுக்கப்பட்ட தொழிலாளர்களின் நிலைமையைச் சித்தரிக்கும் அந்தப் பாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார். ஒருபுறம் வெடிகுண்டு, மறுபுறம் காதலி இரண்டுக்கும் இடையில் மாட்டிக்கொண்டு சமாளிக்கும் வேடத்தை தன்னால் இயன்ற அளவு செய்துள்ளார். 

முனிஸ்காந்துக்கும் இது குறிப்பிடத்தக்க படம். பஞ்சர் என அழைக்கப்படும் அவர் தன் அசல் பெயரான சுப்பையா சாமி என்பதைச் சொல்லும்போது அவருடைய முதலாளிக்கே அது தெரியவில்லை. ஆள் முரடாகத் தெரிந்தாலும் அசடாகவே இருக்கும் மனிதர்களின் பிரதிநிதிப் பாத்திரத்தைத் தன் நடிப்பால் மெருகேற்றியிருக்கிறார்.  லாரியில் இருப்பது வெடிகுண்டு எனத் தெரிந்தபிறகு அவரது பதற்றமும் பயமும் படத்தின் கலகலப்புக்கு உதவுகின்றன. 

நடிகை ஆனந்தி இதே போன்ற வேடத்தில் பல படங்களில் நடித்திருக்கிறார் என்பதால் புதிய வேடத்தில் பார்ப்பது போலவே இல்லை.  ஏற்கெனவே நன்கு பழகிய பெண்ணைப் பார்ப்பது போன்ற உணர்வைத் தன் நடிப்பால் தந்துவிடுகிறார். 



ஒளிப்பதிவாளர் கிஷோர்குமார் ஒரு பயணக் கதைக்கு அவசியமான ஒளிப்பதிவை வழங்கியுள்ளார். ஒளிப்பதிவு திரைக்கதைப் போதுமான அளவில் போதுமானவற்றைப் படம் பிடித்து உதவியிருக்கிறது. டென்மாவின் இசையில் பாடல்களும் பின்னணியிசையும் இதமாக உள்ளன. 

எல்லாவற்றையும் பேசித் தீத்துக்கணும் ஆயுதத்த தூக்கக் கூடாது, 500 வருஷம் புல்லு பூண்டு கூட முளைக்காதுடா அந்தக் குண்டு வெடிச்சா போன்ற வசனங்கள் படம் எடுக்கப்பட்டதன் நோக்கத்தைத் தெளிவாகச்சொல்கின்றன. 

புதிய களத்தைத் தேர்ந்தெடுத்ததில் இயக்குநர் அதியன் ஆதிரை கவனத்தை ஈர்க்கிறார். வெடிகுண்டுக்கு பூசாரி கடவுள் போல் ஜோடனைசெய்து அழகு பார்ப்பது அழகு. ஆனாலும், நிமிர்ந்து உட்காரவைக்கும்படியான எந்தத் தருணமும் படத்தில் இல்லை என்பது ஏமாற்றம். அந்த வெடி குண்டும் பல காட்சிகளில் ஏதோ ஒரு சாதாரணப் பொருள் போல் தென்படுகிறதே ஒழிய வெடிகுண்டு என்னும் பதற்றத்தையோ பதைபதைப்பையோ தரவில்லை. இரண்டாம் உலகப் போர் முடிந்து எழுபது ஆண்டுகளுக்குப் பிறகு வெடிக்காத குண்டு என்பதும் அது கரை ஒதுங்கும் என்பதும் வெடித்தால் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதும் உண்மையாக இருக்கலாம், ஆனால் நம்புவதற்கு ஒவ்வாதவையாக உள்ளது. அதனாலேயே படத்துடன் ஒன்ற இயலவில்லை. தொழிலாளி முதலாளி, ஆதிக்க சாதி ஒடுக்கப்பட்ட சாதி என்று பழகிய தடத்திலேயே படம் சென்றுமுடிந்துவிடுகிறது. போரின் பாதிப்பைப் பெரிதாக அறிந்திராத நமக்கு எதற்கு இப்படி ஒரு படம் என்னும் கேள்வி எழவே செய்கிறது. 



வெடிக்குமா வெடிக்காதா என்ற எதிர்பார்ப்பிலேயே படத்தை நகர்த்திய இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு கடைசிவரை வெடிக்கவே இல்லை என்பது ஏமாற்றமா, ஆறுதலா?

வெள்ளி, ஜூலை 21, 2017

சினிமா ஸ்கோப் 40: இரத்தக்கண்ணீர்


குற்றச் செயல்களால் எளிதில் ஈர்க்கப்படும் மனிதர்கள் அவற்றின் பின் விளைவுகளை எதிர்கொள்ளவே அச்சப்படுகிறார்கள். குற்றத்துக்குத் தண்டனை கிடைக்கும் என்ற பயத்தைவிடப் பிறரை எதிர்கொள்ளத் தயங்கியே பல குற்றங்களை மறைக்கப் பார்க்கிறார்கள். ஆனால், அவ்வளவு எளிதில் எந்தக் குற்றத்தையும் மறைத்துவிட இயலாது; எல்லாக் குற்றங்களும் தம்மை வெளிப்படுத்திக்கொண்டுவிடும் என்பதுதான் இயற்கையின் ஏற்பாடு. அது தன்னை வெளிப்படுத்தும் புள்ளியிலிருந்து தொடங்குகிறது திரைக்கதையின் பயணம். அவை எப்படி வெளிப்படுகின்றன என்னும் பாதைதான் திரைக்கதையில் சுவாரசியத்தைச் சேர்க்கிறது. 

ஸ்பெயினைச் சேர்ந்த இயக்குநர் உவான் அந்தோனியோ பர்தெம் (Juan Antonio Bardem) இயக்கிய டெத் ஆஃப் எ சைக்ளிஸ்ட் என்னும் படம் 1955-ல் வெளியானது. இந்தப் படம் கான் திரைப்பட விழாவில் திரைப்பட விமர்சகர்களின் சர்வதேசக் கூட்டமைப்பு பரிசை வென்றது. சாதாரணமான ஒரு விபத்துச் சம்பவத்தில் படம் தொடங்குகிறது. காரில் ஒரு ஜோடி செல்கிறது. ஆளற்ற சாலையில் விரைந்து சென்ற அந்த கார், சைக்கிளில் சென்ற மனிதன் ஒருவன்மீது மோதிவிடுகிறது. இளைஞன் இறங்கிச் சென்று பார்க்கிறான் அடிபட்ட மனிதனின் உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கிறது. அந்தப் பெண் அங்கிருந்து சென்றுவிடலாம் என இளைஞனைத் தூண்டுகிறாள். இருவரும் நகர்கிறார்கள். அடிபட்ட மனிதன் இறந்துவிடுகிறான். மறு நாள் நாளிதழில் இது செய்தியாகிறது. அவர்கள் இருவரும் காரில் சென்றதைப் பார்த்ததாகக் கலை விமரிசகன் ஒருவன் அவர்களைக் குறிப்பாக அந்தப் பெண்ணை மிரட்டுகிறான். அவர்கள் மனங்களில் பீதி படர்கிறது. 

காரில் வந்த இருவரும் கணவனும் மனைவியும் அல்ல. இருவரும் காதலர்கள். காரில் சென்ற ஆண் கல்லூரி ஒன்றில் பேராசிரியர். அந்தப் பெண்ணும் சமூக அந்தஸ்து பெற்ற ஒருவருடைய மனைவி. அந்தப் பெண்ணால் ஒரே நேரத்தில் ஒருவருடைய மனைவியாகவும் மற்றொருவருடைய காதலியாகவும் இருக்க முடிகிறது. இரு உறவுகளின் அனுகூலங்களையும் அனுபவிக்க ஆசைப்படுகிறாள். காதல் உறவைத் தைரியமாக வெளியில் சொல்ல முடியவில்லை; மிகவும் ரகசியமாகப் பேணுகிறாள். அதனால்தான் அவள் மிரட்டப்படுகிறாள்.


அவர்களால் கொலையை மறைக்க முடிந்ததே ஒழிய அதன் குற்ற உணர்விலிருந்து தப்பித்துக்கொள்ள இயலவில்லை. பேராசிரியர், இறந்த மனிதரின் வீட்டுக்குச் செல்கிறார். மிகவும் சாதாரண நிலையிலிருக்கும் குடும்பத்தின் வருமானத்துக்குரியவரை அவர்கள் விபத்தில் கொன்றிருக்கிறார்கள். இந்தச் சம்பவம் நடந்ததற்கு மறு நாள் கல்லூரியில் மனக் குழப்பத்துடன் இருக்கும் பேராசிரியர் தன் மாணவி தேர்வில் தோற்றுப்போகக் காரணமாகிறார். ஒரு குற்றச் செயலைப் பல குற்றக் கண்ணிகள் தொடர்கின்றன. இந்தப் படம் வழியாக ஸ்பெயின் நாட்டின் இருவேறு தரப்புகளையும் காட்சிக்குவைக்கிறார் இயக்குநர். மேல் தட்டின் விசாலமான, பிரம்மாண்ட மாளிகைகளும் கீழ்த் தட்டினர் வசிக்கும் குறுகலான நெருக்கமான குடியிருப்புப் பகுதிகளும் காட்டப்படுகின்றன. போர், காதல், காமம், சமூக அந்தஸ்து போன்றவை பற்றிய தார்மிகக் கேள்விகள் பலவற்றைப் படம் எழுப்புகிறது. இந்தப் படம் வாழ்வின் பல வண்ணங்களைக் கறுப்பு வெள்ளையில் துல்லியமாகத் தந்திருக்கிறது. 

இந்த ஸ்பேனிஷ் படத்தைப் பார்த்த பின்னர் மயங்குகிறாள் ஒரு மாது (1975), ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது (1976),  விடிஞ்சா கல்யாணம் (1986) போன்ற சில தமிழ்ப் படங்கள் மனதில் நிழலாடின.          

ஒரு பாசமான தாயும் மகளும் சேர்ந்து இளைஞன் ஒருவனைக் கொன்றுவிடுகிறார்கள். அந்தக் கொலையைப் பிறரிடமிருந்து மறைப்பதற்காக யாரும் அறியாதவகையில் அந்தச் சடலத்தை ஒரு முகட்டிலிருந்து உருட்டிவிடுகிறார்கள். அதலபாதாளத்தில் விழும் அந்தச் சடலம் யார் கண்ணிலும் படாது என்று திரும்பிவிடுகிறார்கள். யார் கண்ணிலும் படாமல் இருந்தால் என்ன சுவாரசியம் இருக்கும்? அது ஒருவர் கண்ணில்படுகிறது. அதுவும் அவர் அப்போதுதான் சிறையிலிருந்து தப்பி வந்திருக்கும் மரண தண்டனைக் கைதி. அவர் நேரடியாக அந்த தாயும் மகளும் குடியிருக்கும் வீட்டுக்கு வந்துவிடுகிறார். அந்தக் கொலையை வெளியில் சொல்லிவிடுவேன் என்று மிரட்டியே தனது காரியங்களைச் சாதித்துக்கொள்கிறார் கைதி. அந்தக் கொலையை விசாரிப்பதோ மகளை மணந்துகொள்ள இருக்கும் காதலன். இப்படி ஆர்வமூட்டும் பல முடிச்சுகள் தொடக்கத்திலேயே விழுந்துவிடுகின்றன. தாயும் மகளும் எதற்காகக் கொன்றார்கள், அந்தத் தூக்குத் தண்டனைக் கைதி யார் அவருக்கும் தாய், மகளுக்கும் என்ன தொடர்பு போன்றவற்றைத் தெளிவாக்கும் வேலையைத் திரைக்கதை செய்கிறது. இது மணிவண்ணன் இயக்கத்தில் வெளியான விடிஞ்சா கல்யாணம் (1986). 


ஒரு கதையின் டைரி, பூவிழி வாசலிலே போன்ற திரில்லர் வகைப்படம்தான் இது. கொலையைச் சரி என்று பார்வையாளர்கள் ஒத்துக்கொள்ள வேண்டுமானால் அதன் பின்னணியில் வலுவான உணர்வுபூர்வ காரணம் இருக்க வேண்டும். ஒரு கொலையை யார் செய்கிறார்கள் எதற்காகச் செய்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அதற்குப் பார்வையாளர்களின் ஆதரவு கிடைக்கும். கொலை என்பதைத் தீய செயலாகவும் குற்றச் செயலாகவும் பார்க்கும் நம் பார்வையாளர்கள் அதை நல்லவர்கள் செய்தால், நல்ல நோக்கத்துடன் செய்தால் நியாயம் என்று எடுத்துக்கொள்வார்கள். அதிலும் பெண்களின் மானத்தைக் காப்பாற்றச் செய்யப்படும் கொலைகள் பார்வையாளர்களால் கொண்டாடப்படும். 

சமூகத்தின் பார்வையில், பூவிழி வாசலிலே படத்தில் வில்லன் செய்த கொலைக்கான காரணம் அநியாயமானது; ஆனால் ஒரு கைதியின் டைரி, விடிஞ்சா கல்யாணம் போன்ற படங்களில் நாயகர்கள் செய்யும் கொலைக்கான காரணம் நியாயமானது எனவே, அது சமூகத்தின் பார்வையில் குற்றச்செயலாகப் பார்க்கப்படாது. பாபநாசத்தில் சுயம்புலிங்கத்துடைய குடும்பத்தின் பக்கம் ஒட்டுமொத்தப் பார்வையாளர்களும் நின்றதற்குக் காரணம் அதுதானே. 

மயங்குகிறாள் ஒரு மாது, ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது இரண்டையுமே எஸ்பி.முத்துராமன்தான் இயக்கினார். முன்னதன் கதை பஞ்சு அருணாசலம் பின்னதன் கதை புஷ்பா தங்கதுரை. இரண்டுமே கிட்டத்தட்ட ஒரே போன்ற சம்பவங்களால் ஆனவை. ஒருவனைக் காதலித்து மற்றொருவனைக் கரம்பிடித்த பெண் ஒருவர் எதிர்கொள்ளும் சிக்கல்கள்தான் இந்தப் படங்கள். முதல் படத்தில் ஒரு மிரட்டல்காரர் வருவார். இரண்டாம் படத்தில் மிரட்டல்காரர் இல்லை. இரண்டு படங்களிலும் சுஜாதாதான் கதாநாயகி. ஸ்பானிஷ் படத்தில் மணமானதற்குப் பின்னர் எந்தச் சஞ்சலமுமின்றிக் காதலனைச் சந்திக்கிறாள் நாயகி. ஆனால், ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது படத்தில் காதலனின் வேண்டுகோளை ஏற்று ஒருநாள் அவனுக்கு மனைவியாக இருக்கிறாள். அதுதான் சிக்கலாகிறது. இவ்வளவுக்கும் அவள் தமிழ்ப் பண்பாட்டைச் சிறிதுகூட மீறாமல் நடந்துகொள்கிறாள். மயங்குகிறாள் ஒரு மாது படத்தில் தான் காதலித்த ரகசியத்தைக் கணவனுக்குத் தெரியாமல் காப்பாற்றும் பொருட்டு மிரட்டல்காரனுக்கு அடிபணிகிறாள்.  

வாழ்வைப் புரிந்துகொண்ட இயக்குநர்கள் குற்றங்களை வெறும் குற்றங்களாகப் பார்க்காமல் அவற்றின் பின்னணியுடன் சேர்த்துப் புரிந்துகொள்ளச்செய்யும் வகையிலேயே படங்களை உருவாக்குகிறார்கள். ஒரு குற்றத்தில் தனிநபரின் பங்கு என்ன, சமூகத்தின் பங்கு என்ன என்பவற்றை எல்லாம் சுட்டிக்காட்டுகிறார்கள். வெறுமனே குற்றம், பழிவாங்கல், தண்டனை, மன்னிப்பு என்று முடிந்துவிட்டால் அது சராசரியான படமாக நின்றுவிடுகிறது. அதைத் தாண்டி ஏன் இந்தக் குற்றம் நிகழ்கிறது? ஏன் இது குற்றமாகப் பார்க்கப்படுகிறது? இதைத் தவிர்க்க முடியுமா, தடுக்க முடியுமா போன்ற பல சிந்தனைகளைப் பார்வையாளரிடம் உருவாக்கும் படங்கள் மேம்பட்டவையாக அமைந்துவிடுகின்றன.

ஞாயிறு, ஜூலை 26, 2015

எழுந்து வரும் கடந்த காலம்!-

அந்தச் சிறுமிக்கு அப்போது ஏழு வயது. ஓரிரவில் அவரது பண்ணைவீட்டில் அவருடைய அம்மாவும் சகோதரிகளும் கொடூரமான முறையில் கொல்லப்படுகிறார்கள். கொலை செய்தவரென அந்தச் சிறுமி சொந்தச் சகோதரனையே நீதிமன்றத்தில் கைகாட்டுகிறாள். 16 வயது நிரம்பிய அவனுக்கு ஆயுள் தண்டனை கிடைக்கிறது. தன் வாழ்வின் இருள் பகுதியான அந்த இரவைத் திரும்பிப் பார்க்கவே இல்லை அந்தச் சிறுமி.

ஆனால் 25 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் சந்திக்கும் த கில் க்ளப் என்னும் அமெச்சூர் டிடெக்டிவ் ஏஜன்சி அந்தச் சிறுமியின் சகோதரன் ஒன்றுமறியாதவன் என்கிறது. வாய்ப்புக் கிடைத்தால் அதை நிரூபிப்பதாகவும் சொல்கிறது. அவர் அந்த இரவைத் திரும்பிப் பார்க்கும் அவசியம் வருகிறது. கொலைகாரன் தன் சகோதரன் இல்லையோ, அவன் ஒன்றும் அறியாதவனோ எனும் சந்தேகம் எழுகிறது. உண்மையை அறிய வேண்டும் என்ற ஆவலால் மீண்டும் துயரம் நிறைந்த அந்த இரவுக்குப் பயணப்படுகிறார். அந்த இரவில் நடந்த மர்மம் என்ன? அவர் பார்த்தது என்ன? பார்க்காதது என்ன? இவை அனைத்தையும் சுவாரசியமான காட்சிகளாக்கினால் கிடைக்கும் திகில் படமே டார்க் ப்ளேசஸ்.

ரசிகர்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்த கான் கேர்ள் படத்தின் கதையை எழுதிய கில்லியன் ப்ளைன் தான் இப்படத்துக்கான கதையை எழுதியிருக்கிறார். கில் பக்கே ப்ரென்னர் என்னும் பிரெஞ்சு இயக்குநர் படத்தை இயக்கியுள்ளார்; படத்தின் திரைக்கதையையும் இவரே எழுதியிருக்கிறார். சார்லிஸ் தெரோன், கிறிஸ்டினா ஹெண்ட்ரிக்ஸ், நிக்கோலஸ் ஹோல்ட், ஸ்டெர்லிங் ஜெரின்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஏற்கனவே ஏப்ரல் மாதமே இந்தப் படம் பிரான்ஸில் வெளியாகிவிட்டது. நிகழ்காலம் இறந்த காலம் எனப் படத்தின் திரைக்கதை மாறி மாறிப் பயணித்து ரசிகர்களிடம் டென்ஷனை ஏற்படுத்துகிறது. அடுத்து என்ன நடக்குமோ என்னும் பதைபதைப்பை உருவாக்கும் வகையில் படம் ஜெட் வேகத்தில் நகர்கிறது. ரசிகர்களுக்குச் சரியான திகில் விருந்தாக டார்க் ப்ளேசஸ் இருக்கும் என்னும் எண்ணத்தை இப்படத்தின் டிரெயிலர் ஏற்படுத்துகிறது. படமும் அப்படியே இருக்குமா என்பதை ஆகஸ்ட் 7 அன்று தான் தெரிந்துகொள்ள முடியும். ஏனெனில் அன்று தான் டார்க் ப்ளேசஸ் வெளிச்சத்துக்கு வருகிறது.

ஜூலை 24 தி இந்து நாளிதழில் வெளியானது

லேட்டஸ்ட்

அமலா எனும் பொன்மான்

தொடர்பவர்