இந்த வலைப்பதிவில் தேடு

குழந்தை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குழந்தை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, மார்ச் 15, 2020

தாராள பிரபு


சென்னையில் கருத்தரிப்பு மையத்தை நடத்தி வருகிறார் டாக்டர் கண்ணதாசன் (விவேக்). அவரிடம் தம்பதியர் பலர் குழந்தையின்மை பிரச்சினைக்காக வருகிறார்கள். தகுந்த ‘ஸ்பெர்ம் டோனர்’ இல்லாமல் அவதிப்படும் அவர் டோனரைத் தேடிக் கொண்டிருக்கிறார். கால்பந்து விளையாட்டு வீரரான பிரபுவைக் (ஹரிஷ் கல்யாண்) கண்டுபிடிக்கிறார் கண்ணதாசன். முதலில் டோனராக இருக்க மறுக்கும் பிரபு பின்னர் சம்மதிக்கிறார். இதற்கிடையே நிதி வந்தனாவுடன் (தான்யா ஹோப்) பிரபுக்குக் காதல் ஏற்படுகிறது. தான் டோனர் என்பதை நிதியிடன் சொல்லவா வேண்டாமா எனக் குழம்புகிறார் பிரபு. இதன் பின்னர் பிரபுவின் வாழ்வின் என்னவெல்லாம் நிகழ்ந்தது என்பதற்கு விடையாக உள்ளது தாராள பிரபு.

அறிவியல் எவ்வளவோ முன்னேறிவருகிறது; புதுப்புது தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அதற்கேற்ப மனித மனங்களும் மாறினால்தான் பயனுண்டு என்பதை உணர்த்தும் வகையிலான திரைக்கதை அமைந்திருக்கிறது. விக்கி டோனர் (2012) என்னும் இந்திப் படத்தை மறு ஆக்கம் செய்திருக்கும் இயக்குநர் கிருஷ்ணா மாரிமுத்து தமிழுக்கு ஏற்ற வகையில் தந்திருக்கிறார். என்றபோதும், தமிழுக்குப் படம் சற்று அந்நியமாகத் தான் இருக்கிறது. விந்து தானம், மறு மணம், தத்தெடுப்பு எனப் பல விஷயங்களைப் படம் கையாண்டிருக்கிறது. ஆனால், இயன்றவரை அதைப் பிரச்சாரப்படுத்தாமல் இயல்பான கதையோட்டத்திலேயே தந்திருப்பதால் படத்தை ரசிக்க முடிகிறது. எல்லோருக்கும் குழந்தை தந்த ஒருவருக்குக் குழந்தை இல்லாத சூழல் அதை அவர் எப்படிச் சமாளிக்கிறார் என்ற ஒருவரிக் கதையை ஒரு முழுநீளப் படமாகத் தரத் தேவையான அம்சங்களைக் கொண்டே திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. விந்தணு தானம் என்ற, சமூகம் சட்டென்று ஏற்றுக்கொள்ள இயலாத, அம்சத்தைப் படம் மையமாகக் கொண்டிருந்தாலும் அதை முகம்சுளிக்கச் செய்யாத வகையில் திரைக்கதையில் கையாண்டிருக்கிறார்கள்.  


நடிகர் ஹரிஷ் கல்யாண் சுறுசுறுப்பான கால்பந்து விளையாட்டு வீரனாக, ஸ்போட்ர்ஸ் கோட்டாவில் வேலை தேடிவிட வேண்டும் என்ற யத்தனிப்புடன் செயல்படுபவராக நடித்திருக்கிறார். விந்தணு தானத்துக்காகத் தன்னைத் தேடி வரும் டாக்டர் விவேக்கைக் கண்டு விலகிவிலகி ஓடுவது, பின்னர் தனது கோச்சுக்குக் குழந்தை இல்லாததால் அவர் பட்ட கஷ்டங்களை உணர்ந்து தான் விந்து தானம் தரச் சம்மதிப்பது, காதலிடம் உண்மையைச் சொல்வதா வேண்டாமா எனத் தவிப்பது என பல காட்சிகளில் உறுத்தல் இல்லாமல் நடித்திருக்கிறார்.

விவேக்குக்கு முக்கியமான படம் இது. நகைச்சுவை, குணச்சித்திரம் இரண்டும் கலந்து உருவாக்கப்பட்ட கதாபாத்திரம். அதைச் சரியாக உணர்ந்து நடித்திருக்கிறார் விவேக். ஆனால், அவரது கதாபாத்திரம்தான் சற்று நெருடல். ஒரு பெரிய மருத்துவமனையை நடத்திவரும் அவர் ஒரே ஒரு டோனரை நம்பிச் செயல்படுவதும், எப்போதும் ஹரிஷை மட்டுமே சுற்றிக்கொண்டிருப்பது நம்பும்படியாக இல்லை.  ஆர்.எஸ். சிவாஜியின் நகைச்சுவை ரசிக்கும்படி இருக்கிறது. அதுவும் உண்மையை பிரபுவிடம் போட்டு உடைத்துவிட்டு விவேக்கிடம் ஏன் இப்படிச் செய்தீர்கள் எனக் கேட்கும் இடம் அழகு.



தான்யா ஹோப் அழகாக இருக்கிறார் ஆனால் அழகுப் பதுமையாக மட்டும் பயன்பட்டிருக்கவில்லை. தான் விவாகரத்தானவள் என்பதைக் காதலனிடம் மிக இயல்பாகச் சொல்கிறார். தன்னால் குழந்தையைத் தர முடியாது என்பதை உணரும்போது வெடித்தழுகிறார்; குழந்தையைத் தத்தெடுக்கும் காட்சியில் இயல்பான பெண்ணாகத் தன்னை வெளிப்படுத்தியிருக்கிறார். செல்வ குமாரின் ஒளிப்பதிவு, காட்சிகளை அழகாக்கி இருக்கிறது. ஓரிரு பாடல்கள் கேட்கும்படி உள்ளன. பின்னணியிசை சராசரி.   

குழந்தையின்மையால் பாதிக்கப்பட்டிருக்கும் சிலரையாவது இதைப் போன்ற படங்கள் சிந்திக்க வைத்தால் நலமாக இருக்கும். சாதி, மதம், வெட்டுக் குத்து எனத் தொடர்ந்து படங்களைப் பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில் எந்த வில்லத்தனமும் இல்லாமல் மனித உறவுகளை முன்னிருத்தி, ஆரோக்கியமான அறிவியல் உத்தியின் சாதக அம்சங்களைத் தாங்கி வந்திருக்கும் படம் என்பதாலேயே படத்தை ரசிக்க முடிகிறது.

வியாழன், டிசம்பர் 19, 2019

CIFF 2019: மனிதரை ஆளும் ஆவணம்

இன்று (டிசம்பர் 17) தேவி தியேட்டரில் மதியம் 2 மணிக்கு Holy Boom என்னும் கிரேக்கத் திரைப்படம் பார்த்தேன். சூழல் காரணமாக வேறு நாட்டில் வசிக்கும் பெண் ஒருவர். அவருடைய கணவன் விபத்து ஒன்றில் இறந்துவிடுகிறான். அவனது சடலத்தை வாங்க வேண்டும் என்றால் இவரது பாஸ்போர்ட் தேவைப்படுகிறது. அதை ஒரு குழு வைத்துக்கொண்டு தர மறுக்கிறது. கணவனின் சடலம் மருத்துவமனையில் கிடக்கிறது. சிறு குழந்தையை வைத்துக்கொண்டு அவள் எப்படிச் சமாளிக்கிறாள் என்பது கதை. இதைத் தவிர இன்னும் சிலர் படத்தின் முக்கியப் பாத்திரங்கள். வேறு நாட்டில் அகதிகள் போல் வாழும் மனிதர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களைப் பேசிய படம். 

கிரேக்கப் பெண்ணைக் காதலிக்கிறான் கறுப்பின இளைஞன் ஒருவன். அவனது சிக்கலைப் போக்கப் பணம் தேவைப்படுகிறது. காதலியும் அவனும் சேர்ந்து தேவாலயக் காணிக்கையைத் திருடத் திட்டமிடுகிறார்கள். திருடிவிட்டு வரும் வழியில் காதலன் மாட்டிக்கொள்கிறான். அவனைச் சுட்டுக்கொன்றுவிடுகிறார்கள். அவனது ரத்தம் வழிந்தோடிய சாலையில் கிறிஸ்தவர்களின் ஆராதனைப் பவனி நடைபெறுகிறது. இப்படி வாழ்வின் அபத்தத்தைப் பேசும் படம் இது

சிறு வயதிலேயே தன் குழந்தையைப் பறிகொடுத்த முதிய பெண் ஒருவர் வருகிறார் இவர் அனைவருக்கும் உதவுகிறார். கிரேக்கப் பெண்ணுக்கும் அவருடைய காதலனுக்கு அடைக்கலம் தருகிறார். தனியே வீட்டில் அழும் குழந்தை குறித்து வருத்தம் கொள்கிறார். ஒருமுறை அந்தத் தாய் காவல் துறையில் மாட்டிக்கொள்கிறார். அப்போது குழந்தையின் அழுகை பொறுக்க மாட்டாமல் அதைக் கறுப்பின இளைஞன் மூலம் தூக்கிவந்து விடுகிறார் அந்த முதிய பெண்மணி. இந்த நேரத்தில் தாயின் பேச்சைக் கேட்டு குழந்தையைக் காண வீட்டுக்கு வரும் காவல் துறை அங்கே குழந்தை இல்லாததைக் கண்டு தாய் பொய் சொல்லி ஏமாற்றுகிறாள் என நினைக்கிறது.  

ஞாயிறு, நவம்பர் 13, 2016

சினிமாஸ்கோப் 21: கன்னத்தில் முத்தமிட்டால்


உலக அளவில் சினிமா பாரடைஸ், சில்டன் ஆஃப் ஹெவன், லைஃப் இஸ் பியூட்டிஃபுல், கலர் ஆஃப் பாரடைஸ், த வே ஹோம் போன்ற பல படங்களின் குழந்தைக் கதாபாத்திரங்கள் அப்படங்களைப் பார்த்தவர்களின் நினைவைவிட்டு அகலாதவை. உலகப் படங்களின் அளவுக்கோ சத்யஜித் ரேயின் அபு அளவுக்கோ மேம்பட்ட தரத்தில் உருவாக்கப்படாவிட்டாலும்கூட, தமிழ்த் திரைப்படங்களிலும் குழந்தைக் கதாபாத்திரங்கள் ஆதியிலிருந்தே முதன்மை பெற்றே வந்திருக்கின்றன. தமிழில் வெளியான, களத்தூர் கண்ணம்மா (1959), குழந்தையும் தெய்வமும் (1965), உதிரிப்பூக்கள் (1979), மழலைப் பட்டாளம் (1980), அன்புள்ள ரஜினிகாந்த் (1984), மை டியர் குட்டிச்சாத்தான் (1984), பூவிழி வாசலிலே (1987), வேதம் புதிது (1987), என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு (1988), ராஜா சின்ன ரோஜா (1989), மல்லி (1998), குட்டி (2001), பசங்க (2009), தங்க மீன்கள் (2013), பூவரசம் பீப்பீ (2014), காக்கா முட்டை (2014) போன்ற படங்களில் இடம்பெற்ற குழந்தைக் கதாபாத்திரங்களை உடனே சொல்லிவிட முடிகிறது.

கமல் ஹாசன், ஸ்ரீதேவி, குட்டி பத்மினி, மீனா உள்ளிட்ட பலர் சிறு வயதிலேயே வெள்ளித் திரையில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தியவர்கள் என்பதை மறக்கவோ மறுக்கவோ இயலாது. ஏவி. எம், தயாரித்த எங்கேயோ கேட்ட குரலில் ரஜினி காந்தின் மகளாக நடித்த மீனா அதே ஏவி.எம்.மின் எஜமான் படத்தில் ரஜினிக்கு மனைவியாக நடித்ததையும் அதிசயத்துடன் ரசித்திருக்கிறோம். திரையுலகில் பதினோரு வருடங்களில் மீனாவின் வளர்ச்சி ரஜினியைத் தொட்டுவிட்டது!   

குழந்தைகளின் மழலை மொழிகள், குறும்புகள் மட்டுமல்ல; சின்னச் சின்ன சிணுங்கல்கள், கோப தாபங்கள் போன்ற அனைத்துமே எல்லோரையும் கவர்பவை. எந்த மனநிலை இறுக்கத்தையும் குழந்தைகள் சட்டென்று தளர்த்திவிடுவார்கள். மகிழ்ச்சி, துக்கம் போன்ற உணர்வுநிலைகளைச் உடனுக்குடன் மாற்றிக்கொள்ளக் கூடிய குணாம்சம் பால்ய வயதினருக்கே வாய்க்கும். இந்தக் குணாம்சம் திரைக்கதைகளை அமைப்பதற்கு உதவும். அதனாலேயே குழந்தைகளைப் பிரதான பாத்திரங்களாக அமைக்கும்போது, திரைக்கதையில் பல சுவாரஸ்யங்கள் தாமாகவே  இணைந்துவிடும். ஆனால், வாழ்வை உற்று நோக்கும் பண்பு கொண்டவராக இருந்தால் மட்டுமே இது தகுந்த விதத்தில் அமையும். இல்லை என்றால் வறட்டுத்தனம் தலைதூக்கிவிடும். குழந்தைக் கதாபாத்திரங்கள் இடம்பெற்ற படங்களை எல்லாம் குழந்தைத் திரைப்படங்கள் என்ற வகையில் அடக்கிவிட முடியாது.  தமிழில் குழந்தைத் திரைப்படங்கள் என்ற வகை குறித்த பல குழப்பம் நிலவுகிறது. குழந்தைகளுக்கான படங்கள் இங்கே உருவாக்கப்படுவது அபூர்வம். அதனால் தானோ என்னவோ இங்கு குழந்தைகள் ரஜினி முருகன், ரெமோ போன்ற விடலைப் படங்களை எந்த விகல்பமும் இன்றிக் குதூகலத்துடன் கண்டுகளிக்கிறார்கள்.

வெகுளித்தனத்தை இயல்பாகக் கொண்டிருக்கும் ஒருவரால் மட்டுமே குழந்தைக் கதாபாத்திரங்களை உயிரோட்டத்துடன் உருவாக்க முடியும். கே. பாக்யராஜ் தனது திரைக்கதைகளில் குழந்தைகளுக்குப் பிரதான இடம் தருபவர். அந்த ஏழு நாட்கள், முந்தானை முடிச்சு, மௌன கீதங்கள் எனப் பல உதாரணங்களைச் சொல்லலாம். திரைக்கதை அமைப்பதில் பாக்யராஜை அடியொற்றிச் செயல்படுபவராகத் தோன்றும், சர்வதேச அளவில் அறியப்பட்டிருக்கும் இயக்குநர் மணி ரத்னமும் குழந்தைக் கதாபாத்திரங்களை அதிக அளவில் அமைத்திருக்கிறார். அஞ்சலி, கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற படங்களில் குழந்தைகளே படத்தின் ஜீவன்களாக உள்ளனர்; படங்கள் ஜீவன் உள்ளவையா என்பது வேறு விஷயம்.


பாக்யராஜின் கதாபாத்திரங்கள் நாம் பூமியில் எதிர்கொள்ளும் குழந்தைகளின் அம்சங்களைக் கொண்டிருக்கும். மணி ரத்னத்தின் குழந்தைகள் ஆகாயம் திறந்து குதித்த அதிதேவதைகள். சாதாரண மனிதர்கள் அவர்களைப் புரிந்துகொள்ளல் கடினம். பாக்யராஜின் கதாபாத்திரங்கள் கிளையில் பழுத்தவை; மணி ரத்னத்தின் பாத்திரங்களோ பிஞ்சில் பழுத்தவை. நாயகன் படத்தில் வேலு நாயக்கரிடம் நீங்க நல்லவரா, கெட்டவரா என்று சிந்திக்காமல் பதில் சொல்ல முடியாத கேள்வியை எழுப்பும் ஞானம் கொண்ட குழந்தைகளே மணி ரத்னத்தின் கண்களுக்குத் தட்டுப்படுகின்றன. தளபதியில் சூரியா பிறந்த அன்றே அவனுடைய தாய் அவனைச் சரக்கு ரயில் பெட்டியில் வைத்துவிட்டு ஓடிவிடுகிறாள். இருபது முப்பது வருடங்களுக்குப் பின்னரும் ரயிலோசை கேட்கும் போதெல்லாம் அதீத ஞாபக சக்தியுடன் சூரியா தன் தாயை நினைத்துக்கொள்கிறான். ரசிகர்களும் இளையராஜாவின் தீம் மியூசிக்கில் கரைந்துபோய்விடுகிறார்கள். இதுதான் திரைக்கதையின் மாயம். அந்த வகையில் மாயக்காரர் மணி ரத்னம். சினிமாவில் லாஜிக்ரீதியான குறைகளை வெளித் தெரியாமல் மறைப்பதற்குத் தனி சாமர்த்தியம் வேண்டும். அதைப் பெற்றிருக்கும் அசாத்திய திறமைசாலி மணி ரத்னம்.

மணி ரத்னத்தின் அஞ்சலி வேறு வீட்டில் பிறந்திருக்கலாம் என உடன்பிறந்த குழந்தைகளே நினைக்கின்றன. நகரத்தின் நாகரிகச் சமூகத்தால் அஞ்சலி அவலமாகக் கருதப்பட்டுவிடுவாளோ என்ற அச்சம் அவளைப் பெற்ற தந்தைக்கே உள்ளது. ஆனால் பாக்யராஜின் தவக்களை கிராமத்துக் குழந்தைகளுடன் துள்ளிவிளையாடும் வரம் பெற்றவன். கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் அமுதா தனக்கு இரண்டு அம்மாவும் அப்பாவும் என்பதைத் துயரத்துடன் சொல்கிறாள். ஆனால், அவசர போலீஸ் 100 படத்தில் அந்தச் சிறுவன் தனக்கு இரண்டு அப்பா என்பதை வெகுளித்தனத்துடன் சொல்கிறான்.
கே. பாக்யராஜின் முந்தானை முடிச்சு, மணி ரத்னத்தின் கன்னத்தில் முத்தமிட்டால் ஆகிய இரண்டு படங்களும் குழந்தைகளை மையங்கொண்டே நகரும். முந்தானை முடிச்சில், மீண்டும் திருமணம் செய்தால் தன் குழந்தையைப் புது மனைவி கவனிக்காமல் போய்விடுவாளோ என்ற அச்சத்தில் திருமணத்தை மறுக்கிறான் மனைவியை இழந்த கணவன். கன்னத்தில் முத்தமிட்டாலில் பக்கத்து நாட்டில் அகதி முகாமில் குழந்தையைப் பிரசவித்துப் போட்டுவிட்டுச் சொந்த நாட்டுக்குச் சென்றுவிடுகிறாள் அதன் தாய்.

முந்தானை முடிச்சில் முதல் காட்சியிலேயே தாம்பத்யத்தின் அவசியத்தை அழகாக விளக்கி, இதன் மூலம் படத்தின் முடிவு எப்படி அமையும் என்பதையும் நாசூக்காகக் காட்டிவிடுவார். செடியில் மொட்டு அரும்பி, படிப்படியாகப் பூவாய் மலர்வதைப் போல் படத்தின் திரைக்கதைப் பயணம் இயல்பாக அமைந்து மணம் வீசும். இப்படத்தில் பள்ளிக்கூடத்தில் பாடும் இறை வணக்கப் பாடலுக்கு அருள் புரிவாய் கருணைக் கடலே ஆருயிர் அனைத்தும் அமர வாழ்வு பெறவே என்ற சுத்தானந்த பாரதியாரின் பாடலைப் பயன்படுத்தியிருப்பார் பாக்யராஜ். ஆனால் தமிழ்கூறும் நல்லுலகம் முருங்கைக் காயை மட்டும் மனத்தில் இருத்திக்கொண்டது.


சுஜாதாவின் வசனம், ஏ.ஆர்.ரஹ்மானின் இசை, ரவி கே சந்திரனின் ஒளிப்பதிவு என பல முத்தாய்ப்பான தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்கிருந்தபோதும் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தின் பயணம் படு செயற்கை. 9 வயதுக் குழந்தையின் பார்வையில் படம் விரிவதாலோ என்னவோ படமும் குழந்தைத் தனமாகவே இருக்கும். சினிமாவின் ருசியைக் கூட்டுவதில் தொழில்நுட்பம் உதவாது படைப்புத் திறனாலேயே அது கூடும் என்பதை உணர்ந்துகொள்ள இந்த இரண்டு படங்களையும் அடுத்தடுத்துப் பார்க்கலாம். 

< சினிமா ஸ்கோப் 20 >               < சினிமா ஸ்கோப் 22 >

ஞாயிறு, ஜூலை 31, 2016

சினிமா ஸ்கோப் 9: ரெண்டும் ரெண்டும் அஞ்சு


பொதுவாகவே திரைக்கதை என்பது ஒரு முரண்களின் விளையாட்டு. எப்போதுமே முரணான விஷயங்களை எடுத்துக்கொண்டு அதில் பயணப்படும்போதுதான் திரைக்கதையின் சுவாரசியம் கூடும். நல்லவர் நல்லது செய்வார் என்பதில் பெரிய சுவாரசியமிருக்காது. ஆனால் ஒரு தீய செயலை அவர் செய்யும்போது, அதற்கான காரணத்தை அறிந்துகொள்வதில் ஆர்வம் ஏற்படும். அப்படியான ஆர்வத்தைத் தூண்டும்வகையிலான திரைக்கதையை அமைக்கும்போது ரசிகர்களை எளிதில் ஈர்க்கலாம். 

எனவேதான் பெரும்பாலான திரைக்கதைகள் முரண்களின்மீதே களம் அமைத்துக்கொள்ளும். சின்ன தம்பி திரைப்படத்தில் குடும்ப கவுரவத்தின் சின்னமான குஷ்பு, தாலியென்றால் என்னவென்றே அறியாத பிரபுவைக் காதலித்ததுபோல் நிஜத்தில் எங்காவது நடக்குமா, காலணியைக் கழற்றிவிட மாட்டாரா? அது சினிமா, அங்கே ஒரு முரண் தேவைப்பட்டது அவ்வளவுதான்.  

முரண்களைக் கொண்டு அமைக்கப்படும் திரைக்கதையை ஒரு வகையில் குதிரை சவாரிக்கு ஒப்பிடலாம். சவாரி பிடிபட்டால் காற்றாகப் பறக்கலாம். இல்லையென்றால் காற்றில் பறக்க நேரிடும். இந்த உண்மை புரியாமல் பலர் இதில் சிக்கிக்கொண்டு அல்லல்படுகிறார்கள். சினிமா பார்க்கும்போது திரைக்கதை என்பது மிகவும் சாதாரணமாகத் தோன்றும். இதை எழுதுவது அவ்வளவு கடினமா என்ற எண்ணத்தில் சினிமாவுக்கு வந்துவிடுகிறார்கள். சினிமாவுக்கு எழுதவும் தொடங்கிவிடுகிறார்கள். ஆனால் பின்னர்தான் அதன் நடைமுறைச் சிரமத்தை உணர்வார்கள். 


ஒருவர் நன்றாகப் படித்திருப்பார், புலமைபெற்றவராக இருப்பார். ஆங்கிலம் அவருக்குத் தண்ணீர்பட்ட பாடாக இருக்கும். ஆனால் அவற்றை நம்பி அவர் ஒரு திரைக்கதையை எழுதத் துணிந்தால் விழி பிதுங்கிவிடும். அதே நேரத்தில் இன்னொருவர் எதுவுமே பெரிதாகப் படித்திருக்க மாட்டார். பள்ளிப் படிப்பையே பாதியில் விட்டுவிட்டு வந்திருப்பார். வெட்டியாகப் பொழுதைக் கழிப்பவராக இருப்பார், ஆனால் சுவாரசியமான திரைக்கதைகளாக எழுதிக் குவிப்பார்.

இதுவே முரண் தானே? இது எப்படிச் சாத்தியம். இதை அறிவால் அறிந்துகொள்ள முயன்றால் தோல்வியே மிஞ்சும். இதை உணர்வுரீதியில் அணுகினால் மிக எளிதாகப் புரிந்துகொள்ளலாம். அப்படியான உணர்வுகொண்டோரால் தான் திரைக்கதையை உருவாக்க முடியும். ஏனெனில் அது ஒரு குழந்தையைக் கையாள்வது போன்றது. அதற்கு அறிவு அடிப்படைத் தேவையல்ல, ஆனால் இங்கிதமான உணர்வும் கரிசனமும் இன்றியமையாதவை. திரைக் கதாபாத்திரங்கள் வெறும் நிழல்கள். ஆனால் அவற்றை ரசிப்பவர்கள் ரத்தமும் சதையுமான மனிதர்கள். இந்தப் புரிதலுடனும் நெகிழ்ச்சியான உணர்வுடனும் கதையைக் கட்டுக்கோப்பாகவும் அனைவரும் ரசிக்கும்படியாகவும் இயல்பான சம்பவங்களால் கட்டி நகர்த்திச் செல்லும் திறமை இருந்தால்போதும், சின்னச் சின்ன சம்பவங்களில் ரசிகர்களை நெகிழ்த்திவிட முடியும். 

அப்படியான காட்சிகள்தான் ரசிகர்களை ஈர்க்கவும் செய்யும். கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரே விஷயம் நெகிழ்ச்சி என்பது அதன் வரம்பைக் கடந்துவிடாமலிருக்க வேண்டும். இல்லையென்றால் ரசக்கேடாய் அமைந்துவிடும். இந்த வரம்பைக் கற்றுக்கொள்ள வேண்டுமென்றால் தங்கர்பச்சானின் ஒன்பது ரூபாய் நோட்டு, அம்மாவின் கைப்பேசி, சேரனின் தவமாய்த் தவமிருந்து போன்ற திரைப்படங்களைப் பாருங்கள். உங்களுக்கே புரிந்துவிடும்.


திரைக்கதையில் ஒரு காட்சி அதிகாலை புலர்வது போல் இயல்பாகத் தொடங்க வேண்டும்; மாலையில் கதிரவன் மறைவது போல் கச்சிதமாக நிறைவுபெற வேண்டும். இதற்கான பயிற்சியைக் காலமும் அனுபவமும் தான் கற்றுத்தரும், லிங்குசாமி இயக்கிய ஆனந்தம் திரைப்படத்தில் ஒரு காட்சியில் பின்னிரவில் நடிகை ஸ்ரீவித்யா வீட்டின் பண்ட பாத்திரங்களை எடுத்துப் போட்டு விளக்கிக்கொண்டிருப்பார். பல குடும்பங்களில் இந்தக் காட்சியை அன்றாடம் நாம் பார்த்திருப்போம். அதைத் திரைப்படத்தில் பார்க்கும்போது நமக்கு உணர்வெழுச்சி ஏற்படுகிறது. 

இப்படியான சின்னச் சின்ன இயல்பான சம்பவங்கள் ஒரு படத்தில் இருந்தாலே அந்தப் படம் ரசிகர்களுக்கு நெருக்கமானதாக மாறிவிடும். இந்தக் காட்சியை அமைக்கப் பெரிய அறிவு அவசியமல்ல. ஆனால் வீடுகளில் அம்மாக்கள் செய்யும் அப்படிப்பட்ட வேலைகளைக் கண்களால் அல்லாமல் மனதால் கவனித்திருக்க வேண்டும். அப்படிக் கவனித்திருந்தால் பொருத்தமான ஒரு தருணத்தில் அதேவிதமான காட்சியை அமைக்கலாம். 

நடைமுறை வாழ்க்கையில் பார்க்கும் ஒரு சம்பவத்தைத் திரைக்கதையில் கொண்டுவரும்போது கற்பனை வளத்துடன் அந்தக் காட்சி அமைய வேண்டும். இல்லையென்றால் அதற்கு ஒரு ஆவணப் படத் தன்மை வந்துவிடும். யதார்த்தத்துக்கு நெருக்கமாக இருக்க வேண்டும் அதே நேரத்தில் ஆவணப் படத் தன்மையிலிருந்து விலகியிருக்க வேண்டும். அப்படியான விதிகளையொட்டி காட்சி அமையும்போது ரசிகர்களின் உணர்வோடும் அது கலந்துவிடும். இதைப் போல் வெயில் திரைப்படத்தில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கும் பாண்டியம்மாளும் முருகேசனும் தீப்பெட்டிகள் இறைந்துகிடக்கும் வீதியில் பேசியபடி நடந்துசெல்லும்போது சாக்குகளை உதறிக்கொண்டிருக்கும் ஒரு காட்சி வரும். இதைப் போன்ற அவர்கள் வாழ்வில் பார்த்த ஒரு விஷயத்தை ரசனையுடன் பதிவு செய்யும்போது ரசிகர்கள் கிளர்ந்தெழுந்துவிடுவார்கள்.


இப்படியான காட்சிகள் திரைக்கதையில் கைகூடுவதற்குப் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். அதற்கான பொறுமை இன்றி திரைக்கதையில் கைவைத்தால் வாகை சூட வா, அழகர்சாமியின் குதிரை, மெரினா, நந்தலாலா, தாரை தப்பட்டை, இறைவி போன்ற படங்களைப் போல் படம் அமைந்துவிடலாம். தரக் குறைவான படங்களை எடுக்கக் கூடாது என்ற விருப்பம் உள்ளவர்கள் தாராளமாகத் தமிழ்ப் படங்களைப் பார்க்கலாம், அதிலிருந்து பல நல்ல விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும். 

உன்னதமான உலகத் திரைப்படங்கள் உங்களை மெருகேற்றுவது போல் தமிழ்ப் படங்களும் உங்களை மேம்படுத்தும். தரமான படத்தில் கற்றுக்கொள்ளும் அனைத்து விஷயங்களையும் தரமற்ற படங்களிலிருந்தும் கற்றுக்கொள்ளலாம் என்பதை மறந்துவிடாதீர்கள். எனவே உலகப் படங்களுடன் இணைந்து உள்ளூர்ப் படங்களையும் பாருங்கள்; அப்போது தான் சினிமாவை முழுமையாகக் கற்றுக்கொள்ள முடியும்.

கே.பாக்யராஜ், ஸ்ரீதர் போன்றவர்கள் திரைக்கதையை அமைத்துச் செல்லும் விதத்தைப் பாருங்கள். பெரிய மெனக்கெடுதல் இல்லாமல் மிகவும் இயல்பான சம்பவங்களை அடுக்கிக்கொண்டே சென்று திரைக்கதையை அமைப்பார்கள். அடிப்படையில் ஏதாவது ஒரு முரண் மட்டும் இருந்துகொண்டேயிருக்கும். உதாரணமாக, எந்தப் பெண்ணும் குழந்தையைக் கீழே போட்டுத் தாண்டி பொய் சொல்ல மாட்டாள் என்பது ஒரு நம்பிக்கை. ஆனால் அப்படி ஒரு பெண்ணால் பொய்ச் சத்தியம் பண்ண முடிகிறது என்பதை வைத்தே அவர் முந்தானை முடிச்சு என்னும் படத்தை உருவாக்கினார். 


அந்தப் பொய்ச் சத்தியத்தின் பின்னணியில் ஓர் உண்மை அன்பு மறைந்திருக்கும். அதுதான் திரைக்கதையின் மைய நரம்பு. அதன் பலம் ரசிகர்களை இறுதிவரை படத்துடன் பிணைத்திருக்கும். ஆகவே, பிரயத்தனத்துடன் காட்சிகளுக்காக மூளையைச் சூடாக்கிக்கொள்வதைவிட நமது வாழ்வில் நாம் கடந்த, கேள்விப்பட்ட சம்பவங்களை, நிகழ்வுகளைப் பொருத்தமான இடங்களில் பொருத்தமான வகையில் பொருத்திவிட்டால்போதும் திரைக்கதை வலுப்பெறும்.

புதன், செப்டம்பர் 30, 2015

வேலி

டாலர் எனும் புதிருக்குள் சிக்கிய வாழ்க்கை



அந்த மாலைப்பொழுது கொஞ்சம் இறுக்கமானதாக அமைந்ததுகண்முன்னே  அமெரிக்கத் தம்பதி ஒன்றின் குடும்பச் சிக்கல் அரங்கேறிக்கொண்டிருந்தது. தீவிர மன உணர்வுகளைக் கிளறியபடி நகர்ந்துகொண்டிருந்ததுஅல்லயன்ஸ் பிரான்சேயில் கண்ட நாடகமான வேலிநவீன வாழ்வின் பொருளாதாரத் தேவையைப் பூர்த்திசெய்யும் பொருட்டு மனிதர்கள் தேசங்களின் எல்லையை எளிதாகக் கடந்து சென்றுவிடுகிறார்கள்.ஆனால் அவர்களது மனதில் சொந்த தேசம் விதைத்த எண்ணங்களே பரிபூரணமாக நிரம்பிவழிகின்றன.தாங்கள் சென்ற நாட்டில் திடீரென ஒரு சிக்கல் ஏற்படும்போது நிலைதவறிவிடுகிறார்கள்உறவுகளுக்குள்ளேயே சிக்கல் முளைத்துவிடுகிறதுஇதற்கெல்லாம் மனிதர்களின் மனோபாவம் காரணமா,அவர்கள் சென்று வசித்துவரும் வெளிநாடு காரணமா இப்படிப் பலகேள்விகளை எழுப்புகிறது வேலி


எந்த நேரத்திலும் மனிதர்களை மனப்பிறழ்வுக்குள்ளாக்கிவிடும் சாத்தியங்களைக் கொண்ட நெருக்கடிகளைத் தாராளமாகத் தந்துகொண்டேயிருக்கிறது அந்த அமெரிக்க வாழ்க்கைஅப்படியொரு வாழ்க்கை வாழ்ந்துவருகிறான் ராஜன் தன் மனைவி ஜெயாவுடன்டாலர்களைக் குவிப்பதற்காக,படுக்கையறையின் ஒரு பகுதியில் தலையணை போல் எப்போதும் இடம்பிடித்துக் கொள்கிறது மடிக் கணினி. தன் ஒன்றரை வயதுக் குழந்தை கட்டிலிலிருந்து தவறி விழுந்து விபத்து நேர்ந்துவிடுவதாக ராஜன் கூறுகிறான்அதை அவனுடைய மனைவியும் நம்புகிறாள்குழந்தை சித்திரவதை செய்யப்பட்டிருப்பதாக அமெரிக்க மருத்துவர்களது அறிக்கை சொல்கிறதுகுழந்தை வளர்க்கும் தகுதி ராஜனுக்கு இல்லை என்று அவர்களின் சட்டம் சொல்ல முற்படுகிறதுசராசரியான இந்தியத் தாயான ஜெயாவுக்குத் தங்கள் குழந்தை தங்களிடமிருந்து பிரிக்கப்பட்டுவிடுமோ என்னும் பதற்றம் தொற்றிக்கொள்கிறதுராஜனின் நெருங்கிய நண்பன் கோபால்அவனுடைய மனைவி ரேகா ஆகியோரின் உதவியை நாடுகிறார்கள்அவர்கள் ஆலோசனையின் பேரில் வழக்கறிஞர் காந்தாவை இந்த வழக்குக்காக அமர்த்துகிறார்கள்.

நாடகத்தில் ஒரு புதிர் மெல்ல மெல்ல அவிழ்கிறதுஅது முழுவதுமாக அவிழ்ந்துகொள்ளும்போது நாடகம் நிறைவடைகிறது பார்வையாளனின் மனத்தில் வாழ்வு குறித்த வெறுமை சூழ்ந்துகொள்கிறது.வாழ்க்கையின் ஆதார நம்பிக்கைகளை மிக லாவகமாக ஆனால் தீவிரமாக அசைத்துப் பார்க்கிறது இந்த நாடகம்போலி ஆசாபாசத்துடன் நவநாகரிக உடையணிந்து நடமாடும் நவீன மனிதர்களை எள்ளி நகையாடுகிறது வேலிமனிதர்களின் அகத்தில் கரைபுரண்டு ஓடும் சாக்கடையின் துர்நாற்றத்தைபுறத்தில் போட்டுக்கொள்ளும் ஒப்பனையால் தவிர்க்க நினைக்கும் அறியாமையைக் கொடூரத்துடன் குத்திக்காட்டுகிறது நாடகம்.


பிரம்பைக் கையாடாதவன் தன் மகனைப் பகைக்கிறான் அவன் மீது அன்பாயிருக்கிறவனோ அவனை ஏற்கனவே தண்டிக்கிறான் என்கிறது பரிசுத்த வேதாகமம்தான் எப்படியிருந்தாலும் தன் குழந்தை ஊரார் மெச்சும் உத்தமனாக வளர வேண்டும் என்பதே பெற்றொரின் விழைவுஅதன் பொருட்டே அவர்கள் குழந்தைகள் தவறு செய்யும்போது கண்டிக்கிறார்கள்ஆனால் அது வரம்பை மீறிவிடாமல் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு பெற்றோருக்கு இருக்கிறதுஅப்படியான பொறுப்பில் அவர்கள் சிறிதளவு பிசகினாலும் சட்டம் தன் கடமையைக் கவனிக்க வந்துவிடுகிறதுஇது அமெரிக்காவின் சட்டம்ஒரு தந்தைக்கும் மகனுக்குமான உறவில் ஏற்படும் சிக்கலைச் சட்டம் கண்காணிக்கத் தொடங்கினால் அங்கே உணர்வுக்கு வேலையில்லைஅமெரிக்க சட்டத்தின் நோக்கம் ஒரு குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டுமென்பதல்ல தனிமனிதனின் உரிமையைக் காப்பாற்ற வேண்டும் என்பதே.

ஐந்து கதாபாத்திரங்கள், ஒன்றரை வயதுக் குழந்தை அப்பு உள்பட காட்டப்படாத ஓரிரு கதாபாத்திரங்கள்,டிரேயில் ஒரு தண்ணீர் ஜாடிஇரண்டு டம்ளர்கள்சில கோப்புகள்லேடிஸ் பேக்ஜெண்ட்ஸ் பேக்ஒரு சீப்பு,ஒரு மொபைல்ஒரு பேனாஒரு டைரிஅநேகமாக இவைதான் அரங்கத்தில் இடம்பெற்றிருந்தனஆனால் பார்வையாளன் கண்முன்னே அமெரிக்காவைஅங்கே ஒரு தம்பதி எதிர்கொள்ளும் உளவியல் நெருக்கடிகளைசட்டச் சிக்கல்களைத் தவிப்புடன் பார்த்துக்கொண்டிருக்கிறான்இதைச் சாத்தியப்படுத்தியதில் நாடக இயக்குநரின் பண்பட்ட இயக்கத்தை உணர்ந்துகொள்ள முடிகிறதுநாடகத்தின் பேசுபொருளை மிகத் தீவிரமாகவும் தீர்க்கமாகவும் சித்தரித்திருக்கிறது நாடகம்ஒவ்வொரு கதாபாத்திரமும் அந்த வேடத்துக்கு ஏற்றபடி மிக பாந்தமாகப் பொருத்தியிருக்கிறதுஅது மிகவும் தத்ரூபமாக அமைந்திருப்பதால் தான் பார்வையாளனால் அந்த வழக்கறிஞர் பாத்திரத்துடன் ஒன்றவே முடியவில்லை.அது நாடகத்தின் சிருஷ்டியில் நேர்ந்திருக்கும் ரஸவாதம்.


கணவனுக்குப் பயந்து அவனுக்கு அடங்கியே நடந்துபழகிய ஜெயாவின் உடல்மொழியிலேயே சதா ஒரு பயம் தென்படுகிறதுதயக்கத்தின் வேர் அவளுடைய நடையையே பாதித்திருக்கிறதுஆனால் அவள் குழந்தைக்குக் கணவனால் ஆபத்து என்று தெரிந்தபோது அவளிடம் வெளிப்படும் ஆங்காரம் அவளிடம் குடிகொண்டிருக்கும் இந்திய தாய் மனத்தை வெளிக்கொண்டுவந்துவிடுகிறதுசிறுவயதில் தந்தையின் கடுமையான தண்டனைகளைப் பெற்று வளர்ந்திருந்த ராஜன்அவனுக்கும் ரேகாவுக்குமான வெளியில் சொல்ல முடியாத உறவுவேலையின் நெருக்கடி ஆகியவற்றால் எப்போதும் தீராத மனக் குழப்பத்துடனேயே இருக்கிறான்அதிலிருந்து தப்ப தற்காலிகத் தீர்வாகக் குடியை நாடுகிறான்ரேகா ஒரு புதுமைப்பெண்அவள் மென்மையானவள்தான்ஆனால் அது சுரண்டப்படும்போது அவள் கொதித்தெழுகிறாள்எந்த எல்லைக்கும் சென்று தன் கோபத்தைக் காட்டுகிறாள்ராஜன் மீது அவளுக்கிருப்பது சாதாரண பழிவாங்கும் உணர்வல்ல.அது ஆண்களின் கயமைத் தனத்தின்மீது ஒரு பெண்ணுக்கு ஏற்படும் தார்மிகக் கோபத்தின் வெளிப்பாடு.அதனால் தான் அவளால் ஜெயாவுக்கு இரக்கப்பட முடிகிறதுஇந்த நாடகத்தில் அந்த கோபால் பாரதி சுட்டும் ஒரு வேடிக்கை மனிதன் அவ்வளவேஅவனது அறியாமை அவனைப் பாதுகாத்துக்கொள்கிறது.குழந்தை இல்லை என்னும் ஏக்கம் தத்து எடுக்க விரும்பாத மனைவி என அவனது வாழ்க்கை நித்ய கண்டம் பூரண ஆயுசு ரகம் தான்

மனித வாழ்வைப் புரட்டிப் போட்ட நவீன சாதனமென மொபைலைச் சொல்லலாம்நவீன வாழ்வில் செய்திகளும்சம்பவங்களும் உடனுக்குடன் பரிமாறப்படுகின்ன. தீர்வுக்கான முயற்சியாக இவைஅடையாளம் காணப்பட்டாலும் மன அழுத்தத்தை உருவாக்குவதிலும் அதிகரிப்பதிலும் மொபைலுக்கு உள்ள பங்கை எளிதில் புறந்தள்ள முடியாதுஇந்த நாடகம் அதை நுட்பமாகச் சித்தரித்திருக்கிறதுஜெயா தன் தாயுடன் மொபைலில் மேற்கொள்ளும் உரையாடலில் தொடங்கும் நாடகம் ராஜன் வழக்கறிஞர் காந்தாவுடன் மொபைலில் வாக்குமூலம் தருவதாகச் சொல்வதுடன் நிறைவடைகிறதுஒரு திரைப்படம் தரும் அனுபவத்திலிருந்து நாடகம் தரும் அனுபவம் முற்றிலும் வேறுபடுகிறதுநாடகத்தின் அனுபவம் மனதில் அடியாழம்வரை ஊடுருவுகிறதுதீவிர நாடகமான வேலி மனத்தில் வெவ்வேறுவிதமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறதுவாழ்வு தொடர்பான நமது புரிதலை வளப்படுத்த உதவுகிறது.ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் நாடகம் என்னும் ஒரு கலையின் மகத்துவத்தை நம்மிடையே புரியவைத்து விடைபெறுகிறது இந்த வேலி

வங்காள நாடகம் பலோக்
எழுதியவர் :சுதிப்தா பாமிக்

நடிகர்கள்:
ராஜீவ் ஆனந்த் - ராஜன்
பரீன் அஸ்லம் - ஜெயா
அமல் -கோபால்
டெல்பின் ராஜேந்திரன் - ரேகா
விலாசினி - காந்தா லால்வாணி

ஆங்கில மொழிபெயர்ப்பு மற்றும் ஒளி அமைப்பு : சுனிபா பாசு.

மேடை நிர்வாகம் : மணிபாலன் , மனோ , பார்த்திபன்

தமிழ் மொழிபெயர்ப்பு & தயாரிப்பு : அம்ஷன் குமார்
இயக்கம் : பிரணாப் பாசு

இந்நாடகம் செப்டம்பர் 19 அன்று நடைபெற்றது. இந்தக் கட்டுரையின் சுருக்கம் தி இந்து நாளிதழில் வெளியானது.

ஞாயிறு, செப்டம்பர் 13, 2015

உச்சி தொடும் பயணம்... உயிரே பணயம்!

உலகின் மிக ஆபத்தான பகுதிகளுள் ஒன்று எனச் சொல்லப்படுவது எவரெஸ்ட் சிகரப் பகுதி. இந்தச் சிகரத்தின் உச்சியைத் தொடும் சாகசப் பயணத்தில் உயிரைப் பணயம் வைத்துச் செல்லும் பலர் வெற்றிபெற்றுள்ளனர், பலர் வாழ்வை இழந்துள்ளனர். 1996-ம் ஆண்டில் எவரெஸ்டில் நிகழ்ந்த பேரழிவுச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு வில்லியம் நிக்கல்சனும், சைமன் போஃபாயும் எழுதிய கதையை ‘எவரெஸ்ட்’ என்னும் பெயரிலேயே படமாக்கியிருக்கிறார் இயக்குநர் பால்டஸார் கார்மேகர்.

ஜூனில் வெளியான இப்படத்தின் ட்ரெயிலரை சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் யூடியூபில் பார்த்துள்ளனர். இப்படத்தைக் காண வேண்டும் என்ற ஆர்வத்தை ரசிகர்கள் கொண்டுள்ளார்கள் என்பதற்கு இதுவே சான்று.

உயிரைத் துச்சமாக மதித்து ஜேஸன் க்ளார்க் தலைமையிலான ஒரு குழுவும், ஜேக் கிலினால் தலைமையிலான ஒரு குழுவும் எவரெஸ்டில் ஏறுகின்றன. அப்போது அவர்கள் எதிர்கொள்ளும், ஒருபோதும் கற்பனைசெய்துகூடப் பார்க்க முடியாத தடைகளை, நெருக்கடிகளை, அவற்றைச் சமாளித்து அவர்கள் மேற்கொள்ளும் துணிச்சலான பயணத்தை மயிர்க்கூச்செறியும் வகையில் படமாக்கியிருக்கிறார் இயக்குநர்.

உறைந்த பனிமலையில் காற்றுகூட அரிதான சூழலில் எப்படியும் உச்சியைத் தொட வேண்டும் என்ற வெறியுடன் செல்லும் குழுவினருடன் ரசிகர்களும் செல்லும் உணர்வைத் தரும் வகையில் காட்சிகள் உயிரோட்டத்துடன் படமாக்கப்பட்டுள்ளன. பரந்த பனிமலையின் தோற்றத்தைப் பார்க்கும்போதும் அதில் அவர்கள் மேற்கொள்ளும் ஆபத்தான சாகசப் பயணத்தைக் காணும்போதும் மனத்தில் எழும் கிலி அடங்குவதேயில்லை.

உயர்ந்து எழுந்து நிற்கும் மலையில் குழுவினர் ஏறிக்கொண்டிருக்கும்போது உலகையே விழுங்கிவிடுவது போன்ற பெரும் பசியுடன் சரிந்து விழும் பெரும் பனித் திரளில் குழுவினர் மாட்டிக்கொள்வார்களோ என்ற பதைபதைப்பை மனம் உணர்கிறது. திகில் சிறையில் மாட்டிக்கொண்டு லப்டப் என இதயம் துடிக்கும் ஓசையைத் துல்லியமாகக் கேட்கும் அனுபவத்தை இப்படம் உருவாக்கிவிடுகிறது.

இயற்கையின் சீற்றத்தை எதிர்த்துத் துணிச்சலுடன் முன்னேறி இயற்கையின் குழந்தையான எவரெஸ்டின் உச்சியை எப்படியாவது தொட்டுவிட வேண்டும் என்று தொடர்ந்து முன்னேறும் குழுவினரின் ஒவ்வொரு அடியிலும் ஆபத்து காத்திருக்கிறது. அத்தனையையும் சமாளித்துச் செல்லும் அவர்கள் இறுதியில் உச்சியைத் தொட்டார்களா, அதலபாதாளத்தில் வீழ்ந்தார்களா என்ற விடைதெரியாத கேள்விக்கு விடைகாண இந்தப் படத்தை ரசிகர்கள் பார்க்க வேண்டும்.

செப்டம்பர் 18-ல் திரையரங்குக்கு வரவிருக்கிறது இந்தப் படம். பயம், துணிச்சல், நம்பிக்கை, காதல் போன்ற உணர்வுகள் பின்னிப்பிணைந்த திரைக்கதையின் பயணத்தில் முன்னணியில் இருப்பது சாகச உணர்வு மட்டுமே. சாகச விரும்பிகளின் ஒட்டுமொத்த கவனத்தை ஈர்க்கும் வகையில் உருவாகியிருக்கும் எவரெஸ்ட் நிச்சயம் அவர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும் என்றே தோன்றுகிறது.
செப்டம்பர் 11 தி இந்து நாளிதழில் வெளியானது

ஞாயிறு, ஆகஸ்ட் 02, 2015

நகரத்தில் மாட்டிக்கொண்ட ஆட்டின் சாகசங்கள்

‘ஷான் த ஷீப்’ என்னும் பெயரில் ஒரு தொலைக்காட்சித் தொடர் வந்தது. அதை அடிப்படையாகக் கொண்டே ‘ஷான் த ஷீப்’ என்னும் இந்த அனிமேஷன் காமெடிப் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ரிச்சர்டு ஸ்டார்ஜாக், மார்க் பர்ட்டன் ஆகியோர் இணைந்து இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார்கள்.

ஆர்டுமேன் அனிமேஷன் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறது. கடந்த ஜனவரியில் சன் டான்ஸ் திரைப்பட விழாவில் உலக பிரிமியராக இந்தப் படம் திரையிடப்பட்டது. அதைத் தொடர்ந்து இங்கிலாந்தில் கடந்த பிப்ரவரி மாதமே படம் வெளியாகிவிட்டது. அமெரிக்காவில் ஆகஸ்ட் 7 அன்று வெளியாக விருக்கிறது.

ஷான் என்பது துடுக்குத்தனமான ஒரு ஆடு. அது தனது மந்தையுடன் ஒரு பண்ணைவீட்டில் வசித்துவருகிறது. மந்தை வாழ்க்கையில் சலிப்புற்ற அந்த ஷான் என்னும் ஆடு எங்கேயாவது ஜாலியாக வெளியே செல்ல வேண்டும் என்று திட்டமிடுகிறது. அதற்குப் பண்ணை உரிமையாளர் அனுமதிக்க மாட்டார் என்பதால் அவரைத் தந்திரமாக நகருக்கு அனுப்பிவிடுகிறது.

அங்கே நேர்ந்த விபத்தால் பண்ணை உரிமையாளருக்கு நினைவு தப்பிவிடுகிறது. பின்னர் அவர் ஒரு ஹேர் ஸ்டைலிஸ்ட்டாக வாழ்க்கையை நடத்துகிறார். இதற்கிடையே, பண்ணை உரிமையாளர் இல்லாமல் தங்கள் வாழ்க்கை நலமாக அமையாது என்பதை ஷான் உணர்ந்துகொள்கிறது. உரிமையாளரைத் தேடி நகருக்கு வருகிறது.

ஷான் ஆட்டைத் தொடர்ந்து மந்தை ஆடுகளும் வந்துவிடுகின்றன. இது ஷானுக்குத் தெரியாது. இப்போது நகரத்தில் அவை என்னவிதமான சிக்கல்களை எதிர்கொள்கின்றன? உரிமையாளரை ஷான் சந்தித்ததா? அவருக்கு ஷானை அடையாளம் தெரிந்ததா? மீண்டும் அந்த ஆடுகள் மந்தைக்குத் திரும்பினவா? இது போன்ற கேள்விகளுக்கு விடை தெரிய வேண்டுமென்றால் நீங்கள் ‘ஷான் த ஷீப்’ படத்தைப் பார்க்க வேண்டும்.

தமிழ்க் குழந்தைகளுக்கு க்ளே மாடல் கதாபாத்திரமாக அறிமுகமான ஷான் ஆட்டின் சுட்டித்தனமான நடவடிக்கைகளும் குறும்புகளும் குழந்தைகளை வெகுவாக ஈர்த்துவிடும். தொழில்நுட்ப உதவியுடன் அமைக்கப்பட்ட வண்ணமயமான கிராபிக்ஸ் காட்சிகள் குழந்தைகளை மட்டுமல்ல பெரியவர்களையும் கட்டிப்போட்டுவிடும்.

ஜூலை 31 தி இந்து நாளிதழில் வெளியானது

திங்கள், ஜூன் 30, 2014

உணவு தயாரிக்கும் 3டி பிரிண்டர்


குழந்தைகளுக்குச் சாப்பாடு தருவது என்பது தாய்மார்களின் சிரமமான வேலை. குழந்தைகளுக்குப் புதுப் புது வடிவங்கள், புதுப் புது வண்ணங்கள் ஆகியவை விருப்பத்துக்குரியதாக இருக்கின்றன. ஆனால் அவர்களின் விருப்பங்களைப் பூர்த்திசெய்யும் அளவுக்குத் தாய்மார்களிடம் தொழில்நுட்பம் இல்லை. அதே உணவு வகைகள்; அதே வடிவம்; அதே நிறம்; அதே சுவை. இவை எல்லாம் குழந்தைகளை உணவை விட்டுத் தூரத்திற்கு விரட்டி விடுகிறது. அடுத்ததாக ஊட்டச் சத்துகளை எப்படிச் சரிவிகிதத்தில் கலந்து குழந்தைகளுக்குத் தருவது என்பது ஒரு சிக்கலே. இந்த இரண்டையும் களையும் விதத்தில் செயல்படுகிறது உணவுக்கான 3டி பிரிண்டர். இதெற்கெல்லாமா 3 டி பிரிண்டர் என்றுதான் தோன்றும். ஆனால் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி இதற்கும் கருவியைக் கொண்டு வந்துவிட்டது. 

அரிசியையும் உளுந்தையும் நன்கு அரைத்து புளிக்கவைத்து அவித்து சுடச்சுட மல்லிகைப் பூ இட்லி தயாரிக்கிறோம். 3டி பிரிண்டரில் மாவு ஊற்றிவிட்டால் அது இட்லியைத் தந்துவிடுமா? அதைத்தான் குக்கரே தந்துவிடுமே. அப்படியானால் 3 டி பிரிண்டரால் என்ன பயன்? அவசரப்படாதீங்க. பயன் இருக்கிறது. இட்லியை ஆண்டாண்டு காலமாக வெள்ளை நிறத்தில் வட்ட வடிவமாகவே பார்க்கச் சலிப்பாக இல்லையா? அதை மாற்றிவிடும் இந்த 3டி பிரிண்டர். விதவிதமான வடிவங்களில் வண்ணங்களில் இட்லி மாவை வடிவமைக்க இது உதவும். குழந்தைகளுக்குப் பிடித்த ஸ்பைடர்மேன் வடிவத்தில், சிவப்பு நிறத்தில் இட்லி வரவேண்டுமா? கவலையே இல்லை. தேவையான மாவில் வண்ணங்களைச் சேர்த்து 3டி பிரிண்டரில் இட்டு தேவையான வடிவத்தையும் உள்ளீடு செய்தால் போதும் நீங்கள் விரும்பிய வடிவத்தில் இட்லி தயார். ஆனால் அதை அப்படியே எடுத்துச் சாப்பிட முடியாது. ஏனெனில் இட்லியின் வடிவத்தையும் நிறத்தையும் தான் 3டி பிரிண்டர் உருவாக்கித் தரும். ஆனால் அதை அவிக்கும் வேலையை அது செய்யாது. அதை நாம்தான் செய்ய வேண்டும்.


இட்லி என்பது வெறும் உதாரணத்திற்குத் தான். அனைத்துவித உணவு வகைகளையும் இதில் உருவாக்கலாம் என்னவொன்று, எல்லாவற்றையும் பேஸ்ட் வடிவத்தில் மாற்றித்தான் பிரிண்டரின் கேப்சுயூல்களில் உள்ளீடு செய்ய வேண்டும். பெண்கள் தங்களை அழகுபடுத்த மெகந்தி கோன்களில் மெகந்தியை இட்டி கைகளையும் பாதங்களையும் வண்ண வண்ணமாக நுட்பமான உருவங்களால் மெருகேற்றிக் கொள்வது போல் உணவையும் கண்களைக் கவரும் வகையில் மாற்றிக்கொள்ள 3 டி பிரிண்டர் உதவும். பூப்போன்ற மிருதுவான இட்லி என்பதை உண்மையிலேயே பூப்போன்ற வடிவத்திலும் வண்ணத்திலும் பெறலாம் என்பது சுவையாகத்தானே இருக்கும். இவற்றை எல்லாம் கேட்க நன்றாகத் தான் இருக்கிறது ஆனால் பயன்படுத்த முடியுமா என்னும் சந்தேகம் எழத்தான் செய்யும். அந்தச் சந்தேகங்கள் எல்லாம் களையப்பட்டு எதிர்காலத்தில் எல்லோரது வீடுகளில் ஒரு 3 டி பிரிண்டர் இருக்கலாம். எல்லாம் சரி இதன் விலை என்ன? இப்போது 3,000 அமெரிக்க டாலர்.

செவ்வாய், மே 20, 2014

கண்ணுக்குத் தெரியாத குழந்தைகள்

நியூ விஷன் என்பது உகாண்டாவின் முன்னணி செய்திப் பத்திரிகை. இது ஆண்டுதோறும் தம் சமூகத்திற்கு சேவை ஆற்றிய, வெளி உலகிற்கு அதிகம் தெரிந்திராத பெண்களைக் கண்டுபிடித்து விருதளித்துக் கௌரவித்து வருகிறது. இந்த ஆண்டு நியூ விஷன் விருதளித்திருப்பது ரூத் நியாபஹிகா என்னும் இளம் பெண்ணுக்கு. அவர் செய்த செயல் எழுத்தறிவித்தது. யாருக்கு? கருத்தரித்தல் போன்ற காரணங்களால் படிப்பை இடையில் நிறுத்திய பெண்களைத் தேடிப்பிடித்து அவர்கள் கல்வி கற்க உதவியுள்ளார். அப்பெண்களிடம் என்ன திறமை ஒளிந்துகிடந்ததோ அதைக் கண்டுபிடித்து அதற்கு உயிர் கொடுத்து அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவியுள்ளார் நியாபஹிகா.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நியாபஹிகா எங்கிருந்தார்? உகாண்டாவின் கடைக் கோடி கிராமத்திலா, இல்லை. அமெரிக்காவில். அங்கே அவர் குழந்தை உளவியலாளராக பணியாற்றிவந்தார். இலகுவான கேளிக்கை நிரம்பிய வாழ்க்கை வாழ்ந்தார். அப்போது அவரை நம்பி அவரும் அவருடைய குழந்தைகளும் உகாண்டாவிலிருந்த பெற்றோரும் மட்டுமே இருந்தனர். இப்போது அவரை நம்பி 45 பெண்கள் உள்ளனர். ஆறு வயதிலிருந்து 17 வயதுக்குட்பட்டவர்கள் அனைவரும். கபேல் என்னும் ஊரில் வசித்துவருகிறார்.


இந்த மாற்றம் நிகழ் என்ன காரணம்? 2005-ம் ஆண்டில் அவர் இன்விஸிபிள் சில்ட்ரன் என்னும் ஆவணப்படத்தைப் பார்த்துள்ளார். அப்படத்தில், உகாண்டாவில் கலகம் நடத்தும் ராணுவ அமைப்பு குழந்தைகள்மீது தொடுக்கும் மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் காட்சிகளாக பரவியிருந்தன. அந்த அட்டூழியங்கள் அவர் மனதைப் பாதித்தன. அது தொடர்பாக பல விஷயங்களை ஆராய்ந்தறிந்தார்.

இதைத் தொடர்ந்து அமெரிக்காவில் குழந்தைகளுக்கு ஆலோசனை தரும் இயக்கங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார் நியாபஹிகா. தன் பங்குக்கு குழந்தைகளுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கிவந்தார். இந்நிலையில் 2010-ல் பராக் ஒபாமா உகாண்டா கலக்க்கார்ர்களான எல்ஆர்ஏவின் ஆயுதங்களைப் பறிக்கவும் வடக்கு உகாண்டாவை மீட்கவுமான சட்டம் இயற்றினார். அப்போது நியாபஹிகாவின் பங்களிப்பை அறிந்து அப்போதைய செனட்டான எட்வர்ட் கென்னடி அவருக்குப் பாராட்டுக் கடிதம் எழுதினார்.

அதற்குப் பிறகு உகாண்டாவில் நியாபஹிகா கழிக்கும் விடுமுறை நாட்கள் பிறருக்கு பயன் தரும் வகையில் அமைந்தன. குடும்பத்துடன் செலவிடும் குதூகலம் தவிர்த்த நேரங்களில் நாடு முழுவதும் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களுக்குச் சென்று சேவையாற்றினார். வாழ்க்கை பொருள்கொண்டதாக மாறிவருவதை அவர் உணர்ந்தார். இதனால் கிரேஸ் வில்லா என்னும் பெயரில் சமூகத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான இல்லத்தைத் திறந்தார். இங்கே ஆறு முதல் 21 வயது வரையான பெண்களுக்கு அடைக்கலம் அளிக்கத் தொடங்கினார். இந்த திட்ட்த்தைத் தொடங்குவதற்காக இரண்டு ஆண்டுகளாக பணத்தைச் சேமித்துள்ளார் இவர். முதல் ஆண்டில் இவரது இல்லத்தில் 10 குழந்தைகள் மட்டுமே இருந்துள்ளனர். குழந்தைகளின் எண்ணிக்கையை கூடுமானவரை மிகவும் அதிகரிக்கக் கூடாது என விரும்பினார். எண்ணிக்கை குறைவாக இருந்தால் தான் குழந்தைகளைப் பராமரிக்க முடியும் என நம்பினார். அப்படியிருந்தும் கொஞ்சம் கொஞ்சமாக 45 குழந்தைகள் வந்து சேர்ந்துவிட்டனர்.

இல்லத்தில் மூன்று முக்கிய பயிற்சித் திட்டத்தைச் செயல்படுத்திவருகிறார். இதன் மூலம் பெண்களுக்கு தேவையான உடல் ஆரோக்கியப் பயிற்சி அளிக்கிறார்; பேக்கரி பணிகள், கணினிக் கல்வி, தகவல் தொழில்நுட்பம், புகைப்படக் கலை, தையல், விவசாயம் போன்ற பலவற்றைக் கற்றுக்கொடுக்கிறார்.

பெண்களின் வாழ்க்கைக்குத் தேவையான பயிற்சிகளை அளித்து அவர்களது வாழ்க்கை மேம்பட உறுதுணையாயிருக்கிறார் நியாபஹிகா. பொருளாதாரச் சிரமம் இருக்கத்தான் செய்கிறது. அவ்வப்போது நண்பர்கள் உதவுகின்றனர். ஆனாலும் அது போதவில்லை. இல்லத்தில் பேக்கரி உணவு வகைகளைத் தயாரித்து அதன் மூலம் நிதி திரட்டத் திட்டமிட்டுள்ளார். 

லேட்டஸ்ட்

அமலா எனும் பொன்மான்

தொடர்பவர்