இந்த வலைப்பதிவில் தேடு

சாதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சாதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஆகஸ்ட் 28, 2025

இப்பல்லாம் யாரு சார் சாதி பாக்குறா?


அவன் கிண்டி ரயில் நிலையத்தில் அந்தப் புறநகர் ரயிலில் ஏறினான். அது சென்னைக் கடற்கரையிலிருந்து தாம்பரம் செல்லும் புறநகர் ரயில். அவன் முதல் வகுப்பில் தனக்குக் கிடைத்த இருக்கையில் அமர்ந்தான். அவனுக்கு வலப்புறம் ஒரு பெரியவர் அமர்ந்திருந்தார். சாதாரணமான பேண்ட், சர்ட் உடுத்தியிருந்த மனிதராகத் தென்பட்டார். கையில் வைத்திருந்த மொபைலில் ஏதோ காணொலியைக் கண்டுகொண்டிருந்தார். அவ்வப்போது அவனை ஓரக்கண்ணால் பார்த்தவாறே இருந்தார். அவன் அதைக் கவனித்தும் கவனிக்காததுபோல் காட்டிக்கொண்டான். 

ரயில் திரிசூலத்தைக் கடந்த நேரத்தில் அந்தப் பெரியவர் அவனிடம் பேச்சுக் கொடுத்தார். 

“நீங்க ரயில்வேல வேலை பாக்குறீங்களா?”

அவன் தலையை மறுத்து ஆட்டியபடியே, “இல்லையே” என்றான்.

“ஃபர்ஸ்ட் க்ளாஸ் டிக்கெட் வச்சிருக்கீங்களா” எனும் அடுத்த கேள்வியை எறிந்தார்.

அப்போது, அவன் அவரைக் கூர்ந்து கவனித்தான். அவரது முதுகுச் சட்டையை மீறி நூலைக் காண வழியில்லை. ஆனால், பிடரியில் சிறிய அளவில் தென்பட்ட குதிரை வால் போன்ற மயிர்க் கற்றையைக் காண முடிந்தது. அவர் இன்னார் என்பதை உணர்ந்துகொண்டதால் சிறு திருவிளையாடலை நடத்த விரும்பினான்.

“நீங்க யாரு, உங்ககிட்ட நான் டிக்கெட் எடுத்தேனா இல்லையான்னு ஏன் சொல்லணும்?”

“நான் சாதாரணமாத்தான கேட்கிறேன், ஏன் கோபப்படுறீங்க?”

“நான் கோபப்படலைங்க... சாதாரணமாத்தான் சொல்றேன்... உங்ககிட்ட ஏன் நான் டிக்கெட்டைக் காட்டணும்?” மூஞ்சியில் புன்னகை தவழச் சொன்னான்.

அவனது பேச்சால் அவருக்கு எரிச்சலும் கோவமும் ஏற்பட்டிருக்க வேண்டும்.

“டிக்கெட் எடுத்தீங்களா?” அதிகாரத் தொனியில் வாலிமீது ராமன் அம்பெய்தது போல் கேள்வியை  வீசினார்.

அவன் சிரித்துக்கொண்டே, “இல்லை” என்று உதட்டைப் பிதுக்கிக் காட்டினான்.

“டிக்கெட் எடுக்கல... ஃப்ர்ஸ்ட் கிளாஸ்ல போறீங்க... வாழ்க வளமுடன்” என்று வஞ்சகப் புகழ்ச்சியில் வாழ்த்தியபடி குரோம்பேட்டையில் இறங்கிச் சென்றார்.

அந்த மனிதர் அவன் உள்ளத்தைச் சோற்றகப்பை போல் கிளறிவிட்டார். அவன் மனதில் தந்தை பெரியார் விஸ்வரூபமெடுத்தார். அந்தப் பெரியவர் சின்னதொரு கடுகு போல உள்ளங்கொண்ட மனிதராகத் தோற்றம் கொண்டார். இது நடந்தது 2025இல் எனில், 1925இல் நிலைமை எப்படி இருந்திருக்கும்?

பெரியார் ஏன் கைத்தடியைக் கடுங்கோவத்துடன் சுழற்றினார் என்பது புரிகிறதா? இப்பல்லாம் யார் சார் சாதி பாக்குறான்னு யாராவது சொல்லத்தான் செய்றாங்க. ஆனால், யதார்த்தம் வேறு மாதிரியாகத்தானே உள்ளது.


செவ்வாய், ஜூன் 29, 2021

மண்ணுக்குள் வைரம்

அண்மையில் லீனா மணிமேகலை இயக்கிய மாடத்தி படத்தைப் பார்த்திருந்தேன். அந்தப் படத்தைப் பார்த்தபோதே, மண்ணுக்குள் வைரம் (1986) படம் நினைவு வந்தது. அது வெளியான காலத்தில் படத்தைப் பார்த்திருக்கவில்லை. ஆனால், சலவைத் தொழிலாளர் பற்றிய கதை என்பதை அறிந்திருந்தேன். படம் வெளியானபோது குமுதம் இதழின் விமர்சனத்தை விமர்சித்துப் படத்தின் இயக்குநரான மனோஜ் குமார் ஒரு கடிதமோ என்னவோ எழுதியிருந்தார் அது நினைவுக்கு வந்தது. ஆகவே மண்ணுக்குள் வைரம் படத்தை யூடியூபில் தேடினேன், இருந்தது. சில படங்கள் யூடியூபில் முன்னர் பார்த்த சில படங்கள் இப்போது கிடைக்கவில்லை. கலைஞர் வசனம் எழுதிய பாலைவன ரோஜாக்கள், ஒரே ரத்தம் ஆகிய படங்களை யூடியூபில் சில ஆண்டுகளுக்கு முன்னர் பார்த்திருக்கிறேன். ஆனால், அவை இப்போது பார்க்கக் கிடைக்கவில்லை. 

பாரதிராஜாவின் மைத்துனரான இயக்குநர் மனோஜ்குமார் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கிய முதல் படம் இது. சின்னத்தாயி படத்தை இயக்கிய S.கணேச ராஜ் இந்தப் படத்தில் துணை இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார் போல. டைட்டிலில் பெயர் வருகிறது. மண்ணுக்குள் வைரம் படத்தின் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் சின்னத்தாயி. இரண்டு கணேச ராஜும் ஒருவர்தானா என்பது தெரியவில்லை. இசை அமைப்பாளர் தேவேந்திரன் இந்தப் படத்தில்தான் அறிமுகமாகியிருக்கிறார். நடிகை வாணிவிஸ்வநாத்தின் அறிமுகப் படமும் இதுதான். வாணி விஸ்வநாத் என்றதும் பூந்தோட்டக் காவல்காரன், நல்லவன் போன்ற விஜய காந்த் நடித்த படங்கள் நினைவில் எழும். 

சிட்டு தனது தாயுடன் கிராமத்துக்கு மருத்துவராக வருகிறார். அவரது பயணத்தில் கடந்தகாலக் காட்சி விரிகிறது. அதுவரை அப்பத்தா வீட்டில் வளர்ந்த சிட்டு தந்தை வேலப்பனுடன் சொந்த வீட்டுக்கு வருகிறாள். மேட்டுப்பட்டி கிராமத்தில் சலவைத் தொழிலாளி வேலப்பன். அவனுடைய மனைவி வெள்ளையம்மா. அந்த ஊரின் பெரிய மனிதர் தவசி. அவருக்கு சின்னத்தாயி என ஒரு பேத்தி. குழந்தைத் திருமணத்தில் சிறுவனான கணவனை இழந்து கைம்பெண்ணாக இருக்கிறாள். வெள்ளைப் பாவாடை சட்டையில் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறாள். தவசிக்கு ஒரு தம்பி. சாதிப் பெருமைமிக்க மனிதர் அவர். பேர் விருமாண்டி. அவருடைய மகன் மயில்சாமி. அவனுக்கும் படிப்புக்கும் தூரம் அதிகம். ஒவ்வொரு வகுப்பிலும் இரண்டு ஆண்டுகள் தங்கி நிதானமாகக் கல்வி கற்றுச் செல்லும் மாணவன் அவன். அவன் படிக்கும் அதே பன்னிரண்டாம் வகுப்பில் வந்து சேர்கிறாள் சிட்டு. 

சலவைத் தொழில் செய்து பிழைக்கும் வண்ணார் சமூகத்தைச் சேர்ந்த அவளை எப்படியாவது படிக்கவைத்துவிட வேண்டும் என்று வேலப்பன் நினைக்கிறான். அவளுக்கும் படிப்பில் அதிகப் பிரியம். நன்றாகப் படிக்கிறாள். முதலில் சிட்டுவுக்கும் மயில்சாமிக்கும் மோதல் வருகிறது. அவளைச் சாதியைச் சொல்லித் திட்டிவிடுகிறான் மயில்சாமி. அவள் ஊர்கூட்டி நியாயம் கேட்கிறாள். ஊர்ப் பெரியவர் தவசி மயில்சாமி செய்த தவறுக்கு சிட்டுவின் துணியையும் ஊரார் துணியையும் மயில்சாமி துவைத்துப்போட வேண்டும் எனத் தீர்ப்பு தருகிறார். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு மயில்சாமிக்கு சிட்டுமீது காதல் வருகிறது. அவனுடைய அப்பாவுக்கும் விரோதம் வந்துவிடுகிறது. பொங்கலன்று தவசி தந்த நல்ல துணிமணியுடன் வலம்வரும் வேலப்பனைப் பார்த்து விருமாண்டி பொறாமையில் புழுங்குகிறார். 

அந்த நேரம் பார்த்து தவசி வெளியூருக்கு பஞ்சாயத்து பண்ணச் செல்லவேண்டியதாகிவிடுகிறது. இதைப் பயன்படுத்திக்கொண்டு வேலப்பனை வெளுக்க அனுப்புகிறார் விருமாண்டியின் கையாள். வெளுக்கச் சென்ற வேலப்பன் தீவிபத்தில் மாட்டி உயிருக்குப்போராடுகிறார். உயிரைக் காப்பாற்ற சிட்டு மருத்துவமனைக்கு விரைகிறாள். அங்கே மருத்துவர் விருமாண்டியும் குடித்துக் கும்மாளமிட்டுக்கொண்டிருக்கிறார். அந்தக் கும்பல் சிட்டுவைக் கேலி பேசி அனுப்பிவிடுகிறது. வேலப்பனோ கரிக்கட்டையாகிவிடுகிறார். இரவோடு இரவாக சிட்டுவையும் அவளுடைய அம்மாவையும் ஊரைவிட்டே விரட்டி விடுகிறார் விருமாண்டி. கணவன் உடலை அப்படியே கரையில் போட்டுவிட்டு மகளைக் கூட்டிக்கொண்டு போகிறார் வெள்ளையம்மா. அப்போது சென்ற சிட்டு இப்போதுதான் ஊருக்கு வருகிறார். 

இப்போது மனம் பேதலித்த நிலையில் மயில்சாமியை சிட்டு பார்க்கிறார். அவருக்கு வைத்தியம் பார்த்து குணப்படுத்த நினைக்கிறால் சிட்டு. ஆனால், விருமாண்டியின் வறட்டு கௌரவம் சிட்டுவை அனுமதிப்பதில்லை. மயில்சாமிக்கு பித்தம் தெளிந்ததா, சிட்டு மயில் சாமி காதல் என்ன ஆனது, சின்னத்தாயி நிலைமை என்னா ஆயிற்று என்பதையெல்லாம் ஒன்றுதிரட்டி திரைக்கதையை அமைத்திருக்கிறார் மனோஜ் குமார். சாதிப் பெருமை என்னும் இழிகுணத்தைச் சாடுவதுதான் படத்தின் நோக்கம். 

பொதுவாக, சாதி இழிவு பேசும் படங்களில் எல்லாம் பட்டியலின மக்களுக்கு எதிரான சாதிய இழிவே பேசப்படும். ஆனால், இந்தப் படத்தில் இடைநிலைச் சாதியைச் சேர்ந்த ஒரு பிரிவினருக்கு ஆதிக்க சாதியால் நேரும் கொடுமைகள் பேசப்பட்டுள்ளன. ஒடுக்கப்பட்ட பிரிவினருக்குக் கல்வி எப்படிக் கைகொடுக்கிறது என்பதைப் பேசியிருக்கிறார் இயக்குநர். ஒரு வணிகப் படத்தில் இந்த அளவு முற்போக்காகப் பேசியிருப்பது ஆரோக்கியமான விஷயமாகவே படுகிறது. இவ்வளவுக்கும் இது ஒரு அக்மார்க் தமிழ் சினிமாதான். ஆனால், மாற்றுசினிமா என்று சல்லி அடிக்கும் படங்களைவிட சமூகத்தைச் சாடும் செய்திகளை நன்றாகவே கையாண்டிருக்கிறது இந்தப் படம்.  

தவசியாக சிவாஜி கணேசனும், விருமாண்டியாக வினுச்சக்கரவர்த்தியும், வேலப்பனாக ராஜேஷும், வெள்ளையம்மாவாக சுஜாதாவும், சிட்டுவாக ரஞ்சனியும் காந்திமதி, பாண்டியன் உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். கவுண்டமணி செந்தில் ஜோடியும் உள்ளது. ஆனால் காமெடி சொல்லிக்கொள்ளும்படி இல்லை.  குழந்தைத் திருமணம், சாதிப் பெருமை என்னும் இழி குணம் ஆகியவற்றைச் சாடும் வகையில் திரைக்கதையை அமைத்திருக்கிறார் மனோஜ் குமார். அநேகமாக அவர் இயக்கிய படங்களில் உருப்படியான படமாக இதுதான் இருக்கும்போல. இசையமைப்பாளர் தேவேந்திரனின் இசையில் பொங்கியதோ காதல் வெள்ளம், இதழோடு இதழ் சேரும் நேரம் போன்ற பல பாடல்கள் கேட்பதற்கு இனிமையாக உள்ளன. ஒளிப்பதிவு கே. எஸ்.செல்வராஜ். 

சனி, ஜூன் 26, 2021

கோவில் சீர்திருத்தம் தொடங்கு

முன்னாள் முதலமைச்சரும் திமுகவின் முன்னாள் தலைவருமான மு.கருணாநிதி ‘பராசக்தி’ திரைப்படத்துக்காக எழுதிய, ‘கோவிலிலே குழப்பம் விளைவித்தேன். கோவில் கூடாது என்பதற்காக அல்ல; கோவில் கொடியவரின் கூடாரமாக இருக்கக் கூடாது என்பதற்காக’ என்னும் வசனம் தமிழ்நாட்டில் மிகப் பிரபலமானது. அந்த வசனத்தில் குறிப்பிடப்படும் கோவில் என்பதை வெறும் வழிபாட்டுத் தலம் என்று சுருக்கிப் பார்த்துவிடல் ஆகாது. தமிழ்ப் பண்பாடு, கலை ஆகியவற்றின் வரலாற்றுச் சான்றும் அதுவே. கோவில்களில் மிளிரும் கட்டடக் கலையும் ஓவியக் கலையும் சிற்பக் கலையும் தமிழர்களின் நாகரிகத்தையும் பண்பாட்டையும் வெளிப்படுத்திவருபவை; கடும் உடலுழைப்பால் உருவானவை. இத்தகைய கோவில்களில் குடிகொண்டுள்ளதாக நம்பப்படும் கடவுள் முன் அனைவரும் சமம் என்று சொல்லப்பட்டாலும் அப்படியொரு நிலைமை இன்றுவரை உருவாகியிருக்கிறதா? 

கடவுள் அளவில்லா ஆற்றல் கொண்டவர் என்பது உண்மையாயிருக்கும் பட்சத்தில் அவர் எல்லா மொழிகளையும் அறிந்தேயிருப்பார். சம்ஸ்கிருதத்தில் வேதங்களை ஓதினாலும் தமிழில் வேதங்களை ஓதினாலும் அவருக்கு ஒன்றுதான். ஆனால், மனிதர்களால் மேற்கொள்ளப்படும் கடவுள் வழிபாட்டு நடைமுறையில் மொழி ஆதிக்க உணர்வு மேலோங்கியுள்ளது. இதற்கான காரணத்தை எல்லாரும் அறிவர். வழிபாட்டு மொழியின் நிலையில் எப்படிச் சமநீதி பேணப்படவில்லையோ அதுபோலவே வழிபாடு நடத்துகிறவரான அர்ச்சகர் விஷயத்திலும் இதுவரை சமநீதி நிலைநாட்டப்படவில்லை. அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கும் நிலையிலும், அது அமலாகும் பாதையில் ஆயிரம் தடைக்கற்கள் விழுகின்றன என்பது ஆகம விதிகளின் பலத்தையல்ல; ஆதிக்கத்தின் பலத்தையே புலப்படுத்துகிறது. 

அரசியல் அதிகாரப் பலம் மிகுந்த இந்த ஆதிக்கத்துக்கு நெடிய வரலாறு உண்டு. அந்த வரலாற்றின் வேர் சோழர் காலத்தில் சூல்கொண்டது. அப்போது சூல் கொண்ட வேர் நின்று நிலைத்துப் பெரும் விருட்சமாகி உள்ளது. அது தலவிருட்சமாகிக் கோவிலை ஆக்கிரமிக்காமல் தவிர்க்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் அக்கறை. கோவில் நிர்வாகம் எப்படிக் குடிமைச் சமூகத்தின் மீது ஆதிக்கம் செலுத்தியது என்பதற்கு விடைசொல்கிறது, பொ.வேல்சாமியின் ‘கோவில் நிலம் சாதி’ என்னும் நூல். ‘பல்லவர் காலத்தில் தோன்றிய சைவ – வைணவக் கோவில்களுக்கு ஆடு மாடுகளே தானமாக வழங்கப்பட்டிருக்கின்றன.’ ’சோழர் காலத்தில் பார்ப்பனர்கள் பலர் தங்கள் நிலங்களைக் கோவில்களுக்கு விற்று வந்துள்ளதைப் பல கல்வெட்டுகள் பதிவுசெய்துள்ளன’ என்று குறிப்பிட்டுள்ளார் பொ.வேல்சாமி. அப்படி விற்ற பிரம்மதேய நிலங்களுக்குப் பொற்காசுகளைப் பெற்றுக்கொண்டாலும் கோவில் நிலங்களின் நிர்வாகிகள் என்னும் பெயரில் அந்த நிலங்களின் மீதான அதிகாரம் தங்களை விட்டுப் போகாமலும் பார்ப்பனர்கள் பார்த்துக்கொண்டனர் என்றும் அந்நூல் தெரிவிக்கிறது. கோவில்களுக்குச் சொந்தமான நிலங்களை உரிமை கொண்டாடியோர் குடிமைச் சமூகத்தின் மீதும் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்திவந்துள்ளனர்.

இந்தப் பின்னணியில்தான் தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்திருக்கும் திமுகவுக்கும் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகவுக்கும் அடிப்படையிலான கருத்தியல் வேறுபாட்டைப் புரிந்துகொள்ள வேண்டியதிருக்கிறது. கடவுள் விஷயத்தில் இரண்டு கட்சிகளும் முற்றிலும் மாறுபட்ட அபிப்ராயத்தைக் கொண்டுள்ளன. திமுக கடவுள் மறுப்புக் கொள்கையை முன்னெடுக்கும் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து தொடங்கப்பட்ட கட்சி. பாஜக ராமர் கோவில் விவகாரத்தைக் கையிலெடுத்து அரியணையைக் கைப்பற்றிய கட்சி. இந்த இரண்டு கட்சிகளுக்கும் பொதுவான அம்சம் தேர்தல் அரசியல்தாம். அந்த அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் தேவையை முன்னிட்டே மக்களை ஒன்றுதிரட்டும் முகமாகத் தமிழ்நாட்டில் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதோர் என்று ஏற்படுத்தப்பட்டிருக்கும் இரு பிரிவுகளை பாஜக இந்து, இந்து அல்லாதோர் என்னும் பிரிவாக மாற்ற முயன்றுவருகிறது. பாஜகவின் இந்தச் செயல்பாட்டுக்கு அடிப்படைத் தேவையாக உள்ளவை கோவில்களும் அதன் சொத்துக்களும் அவற்றின் பாதுகாப்பும்.

இப்போது, இந்தக் கோவில்கள், அவற்றின் பாதுகாப்பு அனைத்தும் தமிழ்நாட்டு அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்துவருகிறது என்பது விதியன்று; விதிமுறை. தமிழ்நாட்டில் உள்ள 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்களுக்குச் சொந்தமாகத் தற்போது 4.78 லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளன; அத்துடன் லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளும், கடைகளும் உள்ளன. இவற்றின் வாடகைத் தொகை, குத்தகைத் தொகை, கோவில் உண்டியல் வருமானம், நகைகளின் மதிப்பு எனக் கோவில்களின் சொத்து மதிப்பு எக்கச்சக்கமானது. இது முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கப்போவதில்லை. ஆனால், அதை யார் மேற்கொள்வது என்பதே அதிகாரப் போட்டியாக மாறி நிற்கிறது.

தமிழ்நாட்டில் அமைந்த திராவிடக் கட்சிகளின் அரசுகள் கோவில் சொத்துக்களைத் முறையாகப் பாதுகாக்கவில்லை என பாஜகவினர் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்கள். அதுவும் ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் கோவில் அடிமை நிறுத்து என்னும் இயக்கத்தை  முன்னெடுத்த பிறகு கோவில் சொத்து விவகாரம் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது என்பதன் பின்னணியிலுள்ள அரசியலை ஆழ்ந்து பரிசீலிக்க வேண்டியுள்ளது. கோவில்கள் தொடர்பான விஷயத்தில் அக்கறையுடன் செயல்படும் தரப்பு யார் என்பதில் பாஜகவுக்கும் திமுகவுக்கும் கடும்போட்டி நிலவுகிறது. இந்தச் சூழலில் கடந்த ஏப்ரல் ஆறு அன்று நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜகவுக்கு இணக்கமாக ஆட்சி நடத்திவந்த அதிமுகவை வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்றியது திமுக. தேர்தலில் இந்துக்களில் பெரும்பான்மையோர் வாக்களிக்காமல் திமுகவால் ஆட்சியமைத்திருக்க முடியாது என்பது யதார்த்தம். அதுவும் கோவில் நகரங்கள் எனச் சொல்லப்படும் திருவண்ணாமலை, ஸ்ரீரங்கம், மயிலாப்பூர், பழனி, திருச்செந்தூர், திருத்தணி, மதுரை மத்தி ஆகிய தொகுதிகளில் திமுக பெரிய வெற்றியைப் பெற்றதால் ஆண்டவனே நம் பக்கம்தான் என்று திமுகவினர் ஆர்ப்பரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதுபோதாதென்று, தமிழ்நாட்டில் பொறுப்பேற்றுக்கொண்ட புதிய அரசின் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரான பி.கே.சேகர் பாபு, தான் பதவியேற்றதிலிருந்தே கோவில்களின் சீர்திருத்தம் தொடர்பாகத் தொடர்ந்து பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இதை முடுக்கிவிடும் விதமாக, சென்னை உயர்நீதிமன்றம் ஜூன் 7 அன்று வழங்கிய ஒரு தீர்ப்பு அமைந்துள்ளது. தமிழக அரசுக்குக் கோவில் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களில் மேற்கொள்ள வேண்டிய அம்சங்கள் குறித்து 75 உத்தரவுகளை உயர்நீதிமன்றம் இட்டுள்ளது.

கோவில் சொத்துக்கள் அனைத்தும் இணையத்தில் பதிவேற்றப்படும் என்று ஏற்கெனவே அமைச்சர் சேகர் பாபு அறிவித்திருந்தார். அதன்படி, கோவில்களுக்குச் சொந்தமான 3,43,647 ஏக்கர் நிலங்கள் தொடர்பான விவரங்கள் இணையத்தில் பதிவேற்றப்பட்டிருக்கின்றன. இதையடுத்து, சாலிகிராமம், காந்தி நகர் பகுதியில் வடபழனி முருகன் கோவிலுக்குச் சொந்தமான சுமார் ரூ.250 கோடி மதிப்பிலான 5.5 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டிருக்கிறது.  

கோவில் சொத்துக்கள் மீட்கப்படும்  நடவடிக்கை ஒருபுறம் என்றால், மறுபுறம் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம் விரிவாக்கப்படும் என்றும், பயிற்சி பெற்ற அர்ச்சகர்கள் 100 நாட்களுக்குள் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் சேகர்பாபு கூறியிருந்தார். ‘அமைச்சரின் அறிவிப்பு வரவேற்புக்குரியது' எனத் தமிழ்நாடு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் ரங்கநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘திராவிட இயக்கத்தின் 100 ஆண்டுக்காலச் சமூக நீதிப் பயணத்தில், இந்த அறிவிப்பு ஓர் மைல் கல்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக பாஜக தலைவர் எல். முருகனும், பாஜகவின் சட்டமன்ற உறுப்பினரான வானதி சீனிவாசனும் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் என்னும் அறிவிப்பை வரவேற்பதாகத் தெரிவித்துள்ளனர். கோவிலின் ஆகம விதிகள் தெரிந்தவர்களையே கோவில் அர்ச்சகராகத் தமிழ்நாடு அரசு நியமிக்க வேண்டும் என்று எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார். அதே நேரத்தில், அந்தணர் முன்னேற்றக் கழகம் இதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. (பார்க்க: பெட்டிச் செய்தி)

அர்ச்சகர் பணி என்பது அரசுப்பணி.  அரசுப் பணியில் பொது அறிவிப்பு, தேர்வு, நேர்காணல் என்ற முறையே பின்பற்றப்படுகிறது. பரம்பரைவழி அர்ச்சகர் முறை ஒழிக்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆன பின்பும் இன்றுவரை மதுரை மீனாட்சியம்மன், பழனி, திருச்செந்தூர் முருகன் கோவில், திருவரங்கம் அரங்கநாதர், திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோவில்களில் அர்ச்சகர் நியமனம் பரம்பரை, வாரிசுரிமை அடிப்படையில்தான் நடக்கிறது இது அரசியல் சட்டம், உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு எதிரானது என்று அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கம் கூறியிருப்பதும், அந்தணர் முன்னேற்றக் கழகம் இந்த அறிவிப்பை ஆகம விதிகளைக் காரணங்காட்டி எதிர்ப்பதும் உற்றுநோக்கத் தக்கது.    

இத்துடன் நில்லாமல், அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை நடைபெறும் எனவும் தமிழில் அர்ச்சனை செய்வதற்குப் பயிற்சி தரப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்திருக்கிறார். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதைப் போல, பெண்களும் அர்ச்சகர் ஆவதற்கு விருப்பப்பட்டால் அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவார்கள் என்றும், அர்ச்சகராக விரும்பும் பெண்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். இவையெல்லாம் ஆகம விதிகளின் பாற்பட்டு நிற்போருக்கு உவப்பான விஷயமாக இருக்க மாட்டா.

கோவில் பணியாளர்களை நியமிக்கும் அதிகாரத்தை அறங்காவலருக்கு வழங்கும்இந்து சமய அறநிலையக் கொடைகள் சட்டம் 1959 இன் பிரிவு 55 இல் ஆண் / பெண் என்ற பாலினப் பாகுபாடு ஏதுமில்லை. எனவே, பெண் ஒருவரை அர்ச்சகராக நியமிக்க சட்டப்படி தடை ஏதுமில்லை’ என்கிறார் விடுதலை சிறுத்தைக் கட்சியின் எம்பியான து.ரவிக்குமார். 

கோவில்களின் சொத்துக்கள் பாதுகாக்கப்படுவதும், தமிழில் அர்ச்சனை செய்யப்படுவதும், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராவதும், பெண்கள் அர்ச்சகத் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதும் அவசியமான, முற்போக்குகரமான சீர்திருத்தங்களே. இவை அரசியல் நோக்கமின்றி முறையான ஆன்மிக அக்கறையுடன் மேற்கொள்ளப்பட்டால் மட்டுமே, கோவில் என்பது கொடியவர்களின் கூடாரமாக மாறாமல் கும்பிடத்தகுந்த இடமாக நின்று நிலைக்கும் என்பதே உண்மை. 

*

பெட்டிச் செய்தி

அந்தணர் முன்னேற்றக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை

தமிழக பாஜக (தமிழக திராவிட பாஜக) பிராமணர்களுக்கு எதிராகத் திரும்புவதை உணருங்கள் பிராமணர்களே. பாஜக தேசிய மகளிரணிச் செயலாளர் திருமதி வானதி சீனீவாசன் எம்எல்ஏவும், தமிழக பாஜக தலைவர் திரு எல். முருகனும், ஆகம விதிகளுக்கு எதிராக, நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோவில்களில் அர்ச்சகர் நியமனம் மகளிருக்கு அர்ச்சகர் பயிற்சி என்கிற திமுகவின் செயலை வரவேற்பதாகத் தொலைக்காட்சி, பத்திரிகைகளில் பேட்டிகொடுத்துள்ளனர்.

தமிழகத்தில் பாஜக, பிராமணர் கட்சி என்கிற  இல்லாத ஒன்றைக் கூறிவரும் திராவிடர் கூட்டத்தின் கூற்றைப் பொய்ப்பிக்க வேண்டும் என்பதற்காக, அரசியலுக்காக, திராவிட இயக்கங்கள் பகுத்தறிவுக் கூட்டங்களின் இந்துவிரோத போக்குக்குத் துணைபோகும்விதமாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பின்பற்றபடும் ஆகம விதிகளுக்கு எதிராக ஹிந்துக்களின் கடவுள் நம்பிக்கையை பூஜைமுறைகளைச் சிதைக்கும் நோக்கத்தோடு அர்ச்சகர் நியமனத்தையும், பெண்களுக்கு அர்ச்சகர் பயிற்சியையும் வரவேற்றுள்ளனர். திக நாத்திகக் கூட்டத்துக்குத் துணைபோகும் இவர்களுக்கு அந்தணர் முன்னேற்றக் கழகம் கண்டனத்தைத் தெரிவித்துகொள்கிறது.”  

(நியூஸ்ஸ்ட்ரோக் இதழில் ரோஹின் என்னும் பெயரில் எழுதிய கட்டுரை)

ஞாயிறு, மார்ச் 08, 2020

ஜிப்ஸி: மதம் பிடிக்காத மனித சாதி


காஷ்மீரீல் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பெற்றோர் பலியான சூழலில் கைக்குழந்தையாக ஒரு பெரியவரிடம் அடைக்கலமாகிறார் ஜிப்ஸி (ஜீவா). சே எனும் குதிரையும் அந்தப் பெரியவரும் ஜிப்ஸிக்குத் துணை. பெரியவர் மறைந்துவிட்டபிறகு நாகூருக்கு வரும் ஜிப்ஸியின் காதலுக்குரியவளாகிறாள் வஹிதா (நடாஷா சிங்). அவளும் ஜிப்ஸியும் மணமுடித்துக்கொண்டு வடக்கே ஒரு சிறு நகரில் குடியேறுகிறார்கள். வயிற்றில் குழந்தையுடன் இருக்கும் வஹிதாவையும் ஜிப்ஸியையும் பிரித்துவிடுகிறது ஒரு மதக் கலவரம். அதன் பின்னர் அவர்கள் சேர்ந்தார்களா இல்லையா என்பதை அரசியல் பார்வையுடன் சொல்கிறது ஜிப்ஸி.  

இயக்குநர் ராஜுமுருகன் மத்திய அரசின் திட்டமொன்றைப் பகடியை உத்தியாக்கி விமர்சித்த ஜோக்கர் படத்துக்குப் பின்னர் வெளியாகியுள்ள ஜிப்ஸி தணிக்கைத் துறையினருக்குக் கடுமையான வேலை வைத்திருக்கும் என்பது படத்தைப் பார்த்தாலே தெரிகிறது. நாடு நெருக்கடியான சூழலை எதிர்கொள்ளும்போது கலைஞர்கள் மக்கள் பக்கம் நின்று அவர்களது வாதைகளையும் வேதனைகளையும் சொல்ல வேண்டும். அந்த வேலையைத் தான் ராஜுமுருகன் செய்திருக்கிறார். அதைத் திருத்தமாகச் செய்திருந்தால் ஜிப்ஸி மிகப் பெரிய அளவில் கொண்டாடப்பட்டிருக்கும். 


ஜிப்ஸியை வளர்த்த பெரியவர் மறைந்தபோது அவரை நீரோட்டத்தில் ஒரு பாறைமீது கிடத்தியிருக்கும் தோற்றம் நமக்கு ஒரு நிகழ்வை நினைவூட்டும். கலவரத்தின்போது வஹிதாவை வாளுயர்த்தி மிரட்டும் சோனுகுமாரை பின்னர் ஒரு காட்சியில் கொல்ல வரும் மதவாதி ஒருவனை மக்கள் திரண்டு செங்கற்களால் எறிந்துவிரட்டுகிறார்கள். இந்திய வரலாற்றில் மதப் பிரிவினையின் குறியீடான செங்கற்கள் இங்கே மத ஒற்றுமைக்குக் குறியீடாக மாறி நிற்பது அழகு. இப்படிப் படத்தில் ஆங்காங்கே சமகால கடந்தகால அரசியல் நிகழ்ச்சிகளை வாய்ப்புக் கிடைத்த இடங்களிலெல்லாம் தூவி மக்களிடையே ஒருங்கிணைப்பையும் நல்லிணக்கத்தையும் உருவாக்க முயன்றிருக்கிறார் ராஜுமுருகன். ஆனால், அதில் அவர் முழு வெற்றியைப் பெறவில்லை என்பது சோகமே.   

திரைக்கதையைப் பொறுத்தவரை ஒரு கோவையாக இல்லாமல் காட்சிகள் வெவ்வேறு நிலப் பரப்புக்கும் வெவ்வேறு உணர்வுக்கும் அடுத்தடுத்து மாறுகின்றன. இந்த மாற்றத்தை எதிர்கொள்வதற்கான கால இடைவெளி பேணப்படவில்லை; தகுந்த காரணங்களும் படத்தில் இடம்பெறவில்லை. தணிக்கைத் துறையின் குப்பைக் கூடைகளுக்குச் சென்ற படச் சுருள்களைச் சேர்த்துப் பார்த்தால் படம் ஒரு சீராக இருக்கக்கூடும். 


ஒரு நாடோடிக் கதாபாத்திரத்தை ஜீவா பொறுப்புணர்ந்து உயிர்ப்புடன் தந்திருக்கிறார்.  கலவரப் பொழுதில் கர்ப்பிணியான மனைவியை நடுத் தெருவில் விட்டுவிட்டு வந்த அவஸ்தையை, தன் உயிருக்குயிரான சே கொல்லப்பட்ட சோகத்தை எதையுமே காதில் போட்டுக்கொள்ளாமல் தன்னைத் துன்புறுத்தும் காவல் துறையினரின் கொடுங்கோன்மையை எதிர்கொள்ளும் காட்சியில் வேதனையையும் கோபத்தையும் இயலாமையையும் என உணர்வுகளை மிகச் சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார். அதே போல் நீதிமன்றத்தில் காவல் துறையினரது சித்திரவதைகளைக் காட்டுவதற்காகச் சட்டையைக் கழற்றி நிற்பது, கேரளத்தில் காவல் நிலையத்தில் சிறுநீர் கழிப்பது போன்ற காட்சிகளில் கவர்கிறார். 

நடாஷா சிங் கவலரத்தின் போது மலங்க மலங்க விழித்தபடி கைகூப்பி நிற்கும் போதும், மீண்டும் தன்னை வந்து பார்க்கும் ஜிப்ஸியை அடையாளம் காணாமல்  சிலையாக நிற்கும்போதும் உரிய நடிப்பைக் காட்டியிருக்கிறார். நாயகியின் தந்தை முத்தலிப்பாக நடித்திருக்கும் லால் ஜோஷ் மத அடிப்படைவாதியாகத் தனது கதாபாத்திரத்தை இயன்ற அளவு இறுக்கமாக வெளிப்படுத்தியுள்ளார். அவரது குரல்தான் அந்நியமாக உள்ளது. 


செல்வ குமாரின் ஒளிப்பதிவில் இந்தியாவின் பல இடங்களும் இரவும் பகலும் பனிப் பாறைகளையும் மணம் மேடுகளும் நதிக்கரைகளும் கலவரம்சூழ் பொழுதுகளும் அப்படி அப்படியே பதிவாகியுள்ளன. சந்தோஷ் நாராயணனின் பின்னணியிசை படத்துடன் ஒத்திசைந்து செல்கிறது. ஆனால். பாடல்கள் திரைப்படத்துடன் கேட்கும்போது பெரிதாக ஈர்க்கவில்லை. தெருப்பாடகனான ஜிப்ஸி மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் தந்திருக்கும் கிளைமாக்ஸ் பாடல்கூட எடுபடவில்லை.  அனைவரையும் ஈர்க்கக்கூடிய குரல் பெற்றவன் ஜிப்ஸி என்பது வசனத்தில்தான் வெளிப்படுகிறது; காட்சியிலோ பாடல்களிலோ வெளிப்படவே இல்லை. 

சாதியின் பெயராலும் மதத்தின் பெயராலும் அப்பாவிகளின் வாழ்க்கை எப்படியெல்லாம் சிதைந்துபோகிறது, அதைப் பயன்படுத்தி அரசியல்வாதிகள் எப்படி அதிகாரத்தைக் கைப்பற்றிவிடுகிறார்கள் என்பதை எடுத்துக்காட்டிய வகையில் ராஜு முருகன் கவனம் ஈர்க்கிறார்.  ஒரு பைக்கிலேயே கேரளாவிலிருந்து வடக்கே ஜிப்ஸி செல்வது நகைப்பையே தருகிறது.  ஆனாலும், சோனுகுமாரைப் பழிவாங்கும் நோக்கத்தில் அவரைத் தேடிப் போகும் ஜிப்ஸி அவரை விரட்டும்போது, தடுமாறி விழுந்த அவர் கைகளை இழந்தவர் என்பது தெரியவரும்போது திடுக்கிட நேர்கிறது. மதத்தில் பெயரால் அவரைப் பயன்படுத்திக்கொண்டு சாதியின் பெயரால் அவரை இழிவுபடுத்திய கும்பலுக்கு அவரும் இரையாகியுள்ளார் என்பது அதிர்ச்சி தருகிறது. ஆனால் அதன் பின்னரான சம்பவங்கள் மிகச் சாதாரணமாகக் கடந்து செல்கின்றன. இப்படிப் படம் முழுமை பெறாமல் பாதிக் கிணற்றைத் தாண்டிய நிலையிலேயே பெரும் பள்ளத்தில் விழுந்து விழுந்து எழுகிறது. 


பாதிக்கப்பட்ட கைகூப்பிய கரங்களும் மதத்தின் பெயரால் வாளேந்திய கையும்  கொண்ட புகைப்படங்கள் பார்வையாளர்களுக்குப் பல வரலாற்றுச் சம்பவங்களை நினைவூட்டி எச்சரிக்கின்றன. ஆனால், ஜிப்ஸி வஹீதாவிடையே கண்டவுடன் காதல் மலரும் காட்சிகள் பெரிதாக ரசிக்கவில்லை. மறுநாள் மணமுடிக்க உள்ள நிலையில் ஜிப்ஸியுடன் வஹிதா புறப்பட்டு வருவது யதார்த்தத்துக்குப் பொருந்தாததாக உள்ளது.  காதல் காட்சிகள் மெஹந்தி சர்க்கஸ் படத்தை நினைவுபடுத்துகின்றன. அதில் சர்க்கஸ், இதில் குதிரை நடனம் அதுதான் வேறுபாடு. ஒட்டுமொத்தமான ஒரு வார்ப்பாகப் படம் அமையாமல் துண்டு துண்டு துணுக்குகளாகக் கோக்கப்பட்டுள்ளதால் முழுதாகப் படத்தை ரசிக்க இயலாமல் போகிறது.    

தான் எச்சரிக்க விரும்பிய அரசியல் தொடர்பான விஷயங்களை உணர்த்த மட்டுமே படம் உருவாக்கப்பட்ட தோற்றத்தைப் பெற்றுள்ளது. அவையும் ஆழமான புரிதலின் அடிப்படையில் அமையாமல் வெறும் துணுக்குத் தோரணங்களாகவே உள்ளன. ஆகவே, அந்த அரசியல் மிளிர்ந்த அளவுக்குத் திரைப்படமாக ஜிப்ஸி மிளிரவில்லை. 

ஞாயிறு, மார்ச் 01, 2020

திரௌபதி: எட்டுத் திக்கும் வன்மம்


சிலம்ப வாத்தியாரான ருத்ரபிரபாகரன் (ரிச்சர்ட் ரிஷி) தன் மனைவி திரௌபதியையும் (ஷீலா ராஜ்குமார்) அவருடைய தங்கை லட்சுமியையும் ஆணவக்கொலை செய்துவிட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு கைதானவர். அவர் ஜாமீனில் வெளிவருகிறார். சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள வழக்கறிஞர் கருணாவையும் அரசியல் பிரமுகர் செஞ்சி சேகரையும் அவர் அடுத்தடுத்து கொலைசெய்கிறார். இந்தச் சூழலில் அவருடைய மனைவி திரௌபதி உயிருடன் இருப்பதாக அவருக்குத் தகவல் கிடைக்கிறது. ருத்ர பிரபாகர் ஏன் இந்தக் கொலைகளைச் செய்கிறார்? ஆணவக் கொலைக்காளானதாகச் சொல்லப்படும் திரௌபதி எப்படி உயிருடன் உள்ளார், ருத்ர பிரபாகரன் குடும்பத்துக்கு என்ன நடந்தது போன்ற வினாக்களுக்கு விடை தருகிறது திரௌபதி.

இயக்குநர் மோகன் திரைக்கதையை ஒரு நோக்கத்துடன் அமைத்துள்ளார் என்பது தெளிவாகத் தெரிகிறது. அவரது நோக்கமே முதன்மை பெறுவதால் வழக்கமான திரைக்கதையின் கட்டுமானத்தைப் பற்றி அவர் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. போலித் திருமணம், நாடகக் காதல் என சில அம்சங்களையும் இயற்கை விவசாயம், கிராமப்புற நலன் எனச் சில அம்சங்கங்களையும் எதிரெதிர் பாதையில் கொண்டுசெலுத்தி திரைக்கதையை அமைத்திருக்கிறார். இந்தப் பயணத்தில் சாதிப் பெருமை என்னும் பழமைவாதக் கருத்தைத் திரைக்கதையில் மையமாக்கி அதற்கு ஊட்டச்சத்தான உணவை வழங்க முயன்றிருக்கிறார். என்றபோதும் அது சவலைக்குழந்தையாக வளர்ந்து நிற்கிறது. 


ஒரு சமூகத்தை மேம்படுத்த சினிமா எனும் சாதனத்தை பெரும்பான்மையோர் பயன்படுத்தி வரும் வேளையில் அதே சாதனத்தை சாதி எனும் பழமைவாதக் கருத்தைப் பரப்ப இயக்குநர் தேர்ந்தெடுத்திருப்பது அதிர்ச்சியாக உள்ளது. சக மனிதரை இழிவுபடுத்தும் காட்சிகளை வைப்பது குறித்து எந்தக் கிலேசமுமின்றி இயக்குநர் காட்சிகளைக் கையாண்டிருக்கிறார். நமது சாதியச் சமூகத்தின் சாதியப் பாகுபாட்டைக் களைய பெரும்பங்கு வகிக்கும் காதல் எனும் இயல்பான உணர்வை முடிந்த அளவு கொச்சைப்படுத்தியுள்ளன திரைக்கதையில் இடம்பெற்றுள்ள சம்பவங்கள். படத்தில் நாயகனும் காதல் திருமணம் செய்துள்ளார். ஆனால், அவர் சொந்தத்திலேயே காதல்செய்தவர். 

படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள பொறுப்பான கதாபாத்திரங்களும் பொறுப்பற்ற வசனங்களைப் போகிற போக்கில் உதிர்த்துச் செல்கின்றன. “இந்த மாதிரி கீழ்த்தரமானவங்கள இப்படித்தான் கொடூரமா கொல்லணும்” என்கிறார் ஒரு வழக்கறிஞர். “நாம எப்ப சானிடரி பேட்ஸ் யூஸ் பண்ண ஸ்டார்ட் பண்ணமோ அப்பவே கார்ப்பரேட் டிசைட் பண்ணிட்டாங்க நாம எப்ப பிள்ளைப் பெத்துக்கணும்னு” என்கிறார் ஒரு மருத்துவர். இயக்குநர் பார்த்தறிந்த மருத்துவர் இப்படியான புரிதல்கொண்டவர்தான் போலும்.

பஞ்சாயத்துக் காட்சியில் பிரபாகனிடம் ”நீங்க ஏன் மாமா அவங்ககிட்ட பேசிட்டிருக்கீங்க” என்று சொல்லியபடி, வழக்கறிஞரையும் அரசியல்வாதியையும் பார்த்து சமூக சேவகியான திரௌபதி வெளிப்படுத்தும் உடல்மொழி சாதித் திமிரின் வெளிப்பாடு.  நூறு நாள் வேலைத் திட்டம் குறித்த திரௌபதியின் புரிதலும் வன்மமாக வெளிப்பட்டுள்ளது. எங்கெல்லாம் வாய்ப்புக் கிடைக்கிறதோ அங்கேயெல்லாம் கண்ணி வெடியைப் புதைத்துவைத்துள்ளதைப் போல் சாதி வன்மத்தைப் புதைத்துவைத்துள்ளது படம். 

கல்யாண வயதில் உள்ள பெண்களை எல்லாம் ஒரு கூட்டம் திட்டமிட்டு வஞ்சகத்தால் சீரழிக்க முயல்வது போன்ற தோற்றத்தை உருவாக்க படம் முயல்கிறது. மணமகள் விருப்பமே இல்லாமல் பதிவுத் திருமணங்கள்  நடத்திவைகப்படுவதான பிம்பத்தை நிறுவ இயக்குநர் கடும் பிரயத்தனத்தை மேற்கொண்டிருக்கிறார். எங்கோ ஓரிடத்தில் தவறாக நடந்த ஒரு உதாரணத்தை எடுத்துக்கொண்டு சமூகத்தில் ஆரோக்கியமாகக் கையாளப்படும் காதல் திருமணம் பெற்றோருக்கு எவ்வளவு பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது என விஷயத்தை அப்படியே தலைகீழாக்க இயக்குநர் முயன்றுள்ளார். பல காட்சிகளில் வன்மத்தைக் கக்குகின்றன வசனங்கள். தணிக்கையில் சில வசங்களின் ஒலி முடக்கப்பட்டுள்ளது என்றபோதும் சில வன்மமான வசனங்களைத் தணிக்கதைத் துறையினர் எப்படி அனுமதித்தார்கள்?

பரபரப்பான இடங்களில் எந்தச் சிக்கலும் இல்லாமல் இரண்டு கொலைகளைச் செய்துவிடுகிறாரே அது எப்படி? பெண் குழந்தைகள் தங்கள் துணைவரைத் தேர்ந்தெடுக்கும் உரிமை அவர்களுக்கு உள்ளது எனும்போது, பெற்றோரின் பார்வையில்தான் பதிவுத் திருமணம் நடத்தப்பட வேண்டும் என்னும் கோரிக்கையை எப்படி எழுப்ப இயலுகிறது? இப்படி அநேகக் கேள்விகளை எழுப்பும் வாய்ப்பைத் தாராளமாக வழங்குகிறார் இயக்குநர்.

நடிகர்கள் பலரது நடிப்பு ஏதோ ஒரு சுரத்தற்ற நாடகத்தைப் பார்ப்பது போன்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. பல காட்சிகளில் தொலைக்காட்சி நாடகத்தைப் போன்று காட்சிகள் நகர்கின்றன. இயையமைப்பாளர் ஜுபினின் பின்னணியிசை பெரிய அளவில் உறுத்தவில்லை; அதே நேரத்தில் பெரிதாகக் கைகொடுக்கவும் இல்லை.  குக்குக்குக்குக்கூ எனும் பாடல் முணுமுணுக்கவைக்கிறது. மனோஜ் நாராயணின் ஒளிப்பதிவும் சராசரி ரகம்.  

பட்டறையில் வேலை பார்க்கும் படித்த வசதியான பெண்ணைக் காதலித்து மணமுடித்தால் வாழ்க்கையில் செட்டிலாகிவிடலாம் என நம்பும் ஜேக்கைப் பார்த்து நாயகன் ”படிக்காதது உன் தப்பு” என்று பேசுகிறார். இப்படியான அபத்தமான வசங்களுக்கும் காட்சிகளுக்கும் படத்தில் பஞ்சமேயில்லை. 

”நான் அட்டகத்தி சார்” 

”எந்த மாதிரி வம்சத்துல பொறந்துட்டு எப்படிப் பேசுற”

”இந்த முறை டவுசரத் தான் அறுத்தேன் அடுத்த முறை அறுத்துருவேன்”

”எங்களுக்கு மண்ணு பொண்ணு ரெண்டுமே முக்கியம் அதுல யார் கைய வச்சாலும் கைய வெட்டுவோம்” 

இவையெல்லாம் இந்தப் படத்தில் வெவ்வேறு காட்சிகளில் இடம்பெறும் வசனங்கள். சமூகநீதிக்காகக் குரல் கொடுக்கும் ஒரு மாநிலத்தில் இத்தகைய விஷ வித்துக்கள் போன்ற வசனங்களை தன் படத்தில் ஒலிக்க விடுவதில் இயக்குநருக்குப் பெருமிதம் இருக்கலாம்; ஆனால், மேம்பட்ட சமூகம் பற்றிய கனவு காணும் ஒரு பார்வையாளனை இவை கவலைகொள்ளச் செய்கின்றன. படத்தில் நாயகன் இரண்டு காட்சிகளில் மீசையை முறுக்குவார்.  முதலில் திரௌபதி, திலகாவின் போட்டோவை மார்பிங் செய்து வெளியிட்டுவிடுவேன் என மிரட்டு இளைஞனின் டவுசரை அறுத்து அம்மணமாக்கும்போது. இரண்டாவது தன் மனைவி கருவுற்ற சேதி அறிந்தபோது. 

மூன்று மணி நேரம் தொடர்பில் இல்லாத தன் பெண்ணைப் பற்றி வரும் தகவலைச் சரிபார்க்காமல் அவசரப்பட்டு உயிரை மாய்த்துக்கொள்கிறார் ஒரு தந்தை. தன் பெண் பதிவுத் திருமணம் செய்து கொண்டாள் என்று சொல்கிறாளே சரி பரவாயில்லை அவளிடம் விசாரித்துப் பார்க்கலாம் என்ற பொறுமைகூட அவருக்கில்லை. சட்டென்று விஷம் குடித்து இறந்துபோகிறார் என்றால் இந்தச் சமூகம் என்ன மனநிலையில் உள்ளது? அப்படியா உன் சாதி உயர்ந்தது எனும் கேள்வியே எழுகிறது.

திருமணத்துக்குப் பின்னர் தன்னை மிரட்டும் ஒருவன் குறித்து கணவனிடம் பேசப் பயந்து தந்தையிடம் ஓடிவருகிறார் ஒரு மனைவி. தனக்கே தெரியாமல் தன்னைப் பதிவுதிருமணம் செய்ததாக மிரட்டுகிறானாம் ஒருவன். அந்த மகளின் பிரச்சினையை மருமகனிடம் பேசும் துணிவு அந்தத் தந்தைக்கு இல்லை. கோடி கோடியாகப் பணம் கொடுத்துப் பிரச்சினையைச் சமாளித்தாராம் அவர். அழுதுகொண்டே நீதிமன்றத்தில் சொல்கிறார் அந்தத் தந்தை. நீங்கள் பார்த்துவைத்து திருமணம் உங்கள் சாதியில் ஒருவரைத் தான் மணமுடித்துவைத்துள்ளீர்கள். அந்த மருமகனிடம் உங்களால் பேசவே முடியவில்லை என்றால் இது என்னவிதமான உறவு? 
இயக்குநர் பெருமிதமாகக் கருதும் சமூகம் இப்படியான மனிதர்களைத் தான் உருவாக்கியுள்ளது என்பது காட்சிகளில் அம்பலமாகிறது. இதைப் பார்க்கும் ஒரு பார்வையாளனுக்கு அந்தச் சமூகத்தின் மீது எப்படி நம்பிக்கை வரும்? இப்படியான ஒரு திரைப்படத்தைச் சமூகத்துக்கு வழங்கியதன் மூலம் இயக்குநர் பெருமை கொள்வதைப் போன்ற சிறுமை இந்தச் சமூகத்துக்கு வேறில்லை.  உருவாக்கரீதியான அமெச்சூர்தனத்தைப் பொறுத்துக்கொள்ள முடிகிறது; ஆனால், கருத்தியல்ரீதியாக விஷம் கக்கும் திரௌபதி கொண்டாடப்பட வேண்டியவள் அல்ல; புறக்கணிக்கப்பட வேண்டியவள்.

வெள்ளி, டிசம்பர் 13, 2019

தமிழ்த் திரைப்படங்கள் 2019 ஒரு பார்வை


சிறிய படங்கள் எவை? சிறிய பட்ஜெட் படங்களா, ஒருவகையில் இது சரிதான். ஆனால் பட்ஜெட் குறைவாகவே இருந்தாலே அது சிறிய படமாகிவிடுமா? இல்லை. எனில், மாற்றுப் படங்களைச் சிறிய படங்கள் என்கிறோமோ. இதையும் முழுக்க ஒத்துக்கொள்ள முடியாது. ஆனால், ஓரளவுக்கு மாற்றத்தை நோக்கிய படங்களைச் சிறு படங்கள் எனச் சொல்லலாம். படத்தின் உருவாக்கம், விநியோகம் பற்றிய கவலைகளின்றிச் சற்றுச் சுதந்திரமாக உருவாக்கப்படும் படங்களைச் சிறிய படங்கள் எனலாம். பிரபல நடிகர்களையும் பிரபலத் தொழில்நுட்பக் கலைஞர்களையும் மட்டுமே நாடாமல் கதைக் களத்தையும் அதற்கேற்ற நடிகர்களையும் தொழில்நுட்பக் கலைஞர்களையும் நம்பி உருவாக்கப்படும் படங்களைச் சிறு படங்கள் என நமது வசதிக்காக ஒரு வரையறை செய்துகொள்ளலாம்.

எல்லா ஆண்டுகளையும்போல் இந்த ஆண்டும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் தமிழில் வெளியாகியுள்ளன. ஆனால், ஆண்டின் இறுதியில் அவற்றைச் சீர்தூக்கிப் பார்த்தால் ஓரிரு படங்களைக்கூடச் சிறப்பானவை எனக் குறிப்பிட முடியாத சூழலே தொடர்கிறது என்பது சினிமா ஆர்வலர்களுக்கு வேதனை தரும் விஷயமே. எனினும், சற்றுத் தளர்வான, கரிசனமான பார்வையுடன் பரிசீலித்தால், ஏழைக்கேற்ற எள்ளுருண்டையாகச் சில படங்கள் உள்ளன. முதல் காலாண்டில் சிகை, பேரன்பு, டூலெட், நெடுநல்வாடை, சூப்பர் டீலக்ஸ், இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் போன்ற சில படங்களைக் குறிப்பிடலாம்.


ஆரண்ய காண்டம் திரைப்படத்தின் மூலம் உருவான எதிர்பார்ப்பு காரணமாக சூப்பர் டீலக்ஸ் பெரிய நம்பிக்கைக்குரிய படமாக வெளியீட்டுக்கு முன் தோற்றம் கொண்டது. ஆனால், படம் வெளியான பின் அது கொண்டாடத்தக்க படமாக அமையால் போனது. ஒரு தரப்பினர் இதைக் கொண்டாடித் தீர்த்தனர் என்றபோதும் அந்த அளவுக்கான தகுதியைப் படம் கொண்டிருக்கவில்லை என்பதே உண்மை. அதே போல் மாற்று ஊடகத்தில் வெளியான சிகை திரில்லர் பாணியிலான ஒரு சராசரிப் படமே. அதன் களம் மாத்திரமே அதைக் குறிப்பிடக் காரணமாகிறது. பேரன்பு மிகையுணர்வுடன் புரிதலின்மை கைகோத்த படமாகவே இருந்தது. மம்முட்டி போன்ற பெரிய நடிகர் நடித்தபோதும் அது கையாண்ட உள்ளடக்கம் காரணமாக அதைச் சிறிய படமாகவே கருத வேண்டியுள்ளது.


சிறிய படங்களையும் சமூக ஊடகங்கள் வழியே சரியாகச் சந்தைப்படுத்தினால் அதை வெற்றிப் படமாக முன்னிறுத்திவிடலாம் என்பதற்கு உதாரணமாக அமைந்தது டூலெட். யதார்த்தமற்ற யதார்த்த படம் இது உலகத்தில் பல திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டது என்ற பிம்பத்தின் வழியே தமிழின் சிறந்த படம் என முன்னிலைப்படுத்தப்பட்டது. ஆனால், சொந்த வீடு தரும் நிம்மதியையோ மகிழ்ச்சியையோ தராத சராசரியான வாடகை வீடு போன்ற திரைப்படமே இது. நெடுநல்வாடை திரைப்படம் கிராமத்து வாழ்வையும் உறவையும் ஓரளவு உயிர்ப்புடன் சித்தரித்திருந்தது. கிராமம், காதல், தியாகம் போன்ற மரபான அம்சங்கள் இருந்தபோதும், பூ ராமு போன்ற ஒரு குணச்சித்திர நடிகரை மையமாகக் கொண்டு ஒரு காலகட்ட வாழ்வைத் திரையில் முடிந்தவரை ஒப்பனையின்றி நிகழ்த்திச் சென்றது ரசிக்கத்தக்கதாக இருந்தது.


அடுத்த காலாண்டில் வெளியான சிறிய படங்களில் மெஹந்தி சர்க்கஸ், கேம் ஓவர், ஹவுஸ் ஓனர், ஜீவி போன்ற படங்களைக் கவனம் பெற்றவை எனச் சொல்லலாம். எண்பதுகளில், தொண்ணூறுகளில் சினிமாப் பாடல்கள் வழியாகவே வாழ்வின் முக்கிய தருணங்களைக் கழித்த ஒரு தலைமுறையின் வாழ்க்கையை நினைவூட்டிய, மெல்லிய உணர்வுகொண்ட படமாக இது அமைந்தது. ஊரூராக வந்து சர்க்கஸ் நடத்திய குழுவிலிருந்த பெண்ணுக்கும் பூம்பாறை என்ற ஊரின் பெரிய குடும்பத்துப் பையனுக்குமான காதல் படம் இது.  காதலியை அடைய கத்தி எறிய வேண்டிய சூழலில் அதைத் தவிர்த்து காதலிலிருந்து வெளியேறும் காதலனிடம் காதலி மீண்டும் கிடைக்கிறாள், ஆனால், அதற்கிடையே அவளுக்கு மணமாகி, பருவ வயது மகள் வந்துவிடுகிறாள். இறுதியாக காதலியைச் சுற்றிக் குறிதவறாமல் கத்தியைக் காதலன் எறியும்போது, அங்கே காலத்தைக் கடந்து காதல் சாகசம் நிகழ்த்துகிறது.  


அதே போல் ஜீவி திரைப்படமும் வழக்கமான பாதையைத் தவிர்த்த திரில்லர் என்ற வகையில் கவனிக்கவைத்தது. புத்திசாலித்தனமான திரைக்கதையைச் சார்ந்து பயணித்து சுவாரசியம் தந்த சினிமாவாக இது இருந்தது. ஹவுஸ் ஓனர் திரைப்படத்தைப் பொறுத்தவரை சென்னையை அச்சுறுத்திச் சென்ற 2015-ம் ஆண்டின் வெள்ள நிகழ்வின் பின்னணியில் உருவாக்கப்பட்டிருந்தது என்பதைத் தவிர்த்துக் குறிப்பிட்டுச் சொல்ல எந்த அம்சமுமில்லை. சென்னை வெள்ளம் எனும் சம்பவத்தின் துயரத்தில் துளி அளவைக் கூட உணர்த்த இயலாத உலர்ந்த படம் இது.


மூன்றாம் காலாண்டில் , ஆடை, கொளஞ்சி, தொரட்டி, பக்ரீத் போன்ற படங்கள் வெளியாயின. இதே வேளையில் வெளியான ஒத்த செருப்பு அளவு எண் 7, மகாமுனி ஆகிய படங்களையும் இந்தப் பட்டியலில் நினைவுகூரலாம். கூடா நட்பு கேடாய் முடியும் என்னும் பழமொழிக்காகவே ஒரு திரைக்கதை அமைக்கப்பட்டிருந்ததைப் போன்ற எண்ணத்தைத் தந்த படம் தொரட்டி. ஆனால், கிடை போட்டு வாழும் ஒரு சமூகக் குழுவின் வாழ்க்கை முறையைச் சித்தரித்திருந்த விதத்தால் இது தனித்துத் தெரிகிறது. புதிய முகங்களை வைத்து ஓரளவு நம்பிக்கைக்குரிய படத்தை உருவாக்கிட முடியும் என்னும் நம்பிக்கை தரத்தக்க படம் இது. பார்த்திபன் என்னும் ஒரே நடிகர் தன் திறமைமீது நம்பிக்கை வைத்துத் தன்னை மட்டுமே ஒரு முழுப் படத்தில் பார்க்கவைத்து, ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டவகையில் ஒத்தச் செருப்புப் படம் முக்கியமான படமாகவே தென்படுகிறது.


ஆண்டின் இறுதிப் பகுதியின் வெளியான படங்களில், கே.டி.என்கிற கருப்பு துரை,  இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு ஆகிய படங்கள் நினைவுகொள்ளத் தக்கவை. இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு தரமான படமாக மலர்ந்திருக்க வேண்டிய கதைக் களத்தைக் கொண்டிருந்தது. ஆனால், திரைக்கதை உருவாக்கத்தின் தொய்வுத் தன்மையும் குழப்பமும் கருத்தாசையும் சேர்ந்து படத்தைச் சாதாரணமானதாக்கியது. படம் எடுத்துக்கொண்ட களத்துக்குத் தொடர்பேயில்லாத ஆணவக் கொலை சாதி கடந்த திருமணம் போன்ற அம்சங்கள் படத்தின் கவனச்சிதறலாகிப் போயின. போர் பாதிப்பைச் சொல்ல முயன்றதற்குப் பதில் காயலான் கடை மனிதர்களின் நல்லது கெட்டதுகளை முறையாக எடுத்துவைத்திருந்தாலே அது குறிப்பிடத்தகுந்த படமாக மாறியிருக்கக்கூடுமோ என்ற எண்ணத்தையே ஏற்படுத்தியது.  

கே.டி. என்ற கருப்பு துரை சொல்லிக்கொள்ளத்தக்க மாற்றுப்பட முயற்சி எனலாம். அதன் நோக்கத்தை அது முழுமையாக எட்டவில்லை என்றாலும் முதியவருக்கும் சிறுவனுக்குமான உறவை முடிந்தவரை யதார்த்தமாகவும் மிகையுணர்ச்சியின்றியும் கலகலப்பாகவும் காட்சிப்படுத்தியிருந்த படம் இது. தலைக்கூத்தல் என்ற பண்பாட்டு அம்சமொன்றைக் கதைக் களமாகக் கொண்டிருந்தது.


சிறிய படங்கள் என்று சொல்லும்போது அவற்றின் முதன்மை நோக்கம் வெறுமனே லாபமீட்டுவது என்பது மட்டுமாகவே இருக்காது என்பதை நாம் கவனத்தில்கொள்ள வேண்டும். என்றாலும், லாபத்தைக் கணக்கில்கொள்ளாமல் படங்களை உருவாக்கிவிடவும் முடியாது. இந்த இரண்டையும் பெரிய அளவிலான சமரசமின்றி சங்கமிக்கச் செய்து கிடைக்கும் புள்ளியில் நமது வாழ்வு சார்ந்த மண் சார்ந்த பண்பாடு சார்ந்த கதைகளைத் திரைக்கதைகளாக வடித்தெடுக்கப்படும்போது மட்டுமே உருப்படியான படங்களை உருவாக்கிட முடியும். அதற்கான இணையவெளிகள் முன்னெப்போதுமில்லாத வகையில் இப்போது திறந்துகிடக்கின்றன. ஏனெனில் ஒவ்வொருவரும் தங்கள் கையிலேயே திரையரங்கைச் சுமந்து திரிகின்றனர். அவர்களது ரசனையைப் பூர்த்திசெய்யும் படங்களுக்காகத் தான் அவர்களும் காத்திருக்கின்றனர். நமது படங்கள் இதைப் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை. வருங்காலத்திலாவது புரிந்துகொண்டால் ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்தான்.

ஞாயிறு, செப்டம்பர் 08, 2019

மகாமுனி: உலகத் தரத்துக்கு ஆசைப்படும் உள்ளூர் சினிமா


தனியார் டிராவல்ஸில் ஓட்டுநராக இருக்கும் மகாதேவன் (ஆர்யா). வண்ணமயமான வாழ்க்கை வாழ ஆசைப்படும் இளம் மனைவி விஜி (இந்துஜா), மகன் பிரபாவுடன் சராசரியான வாழ்க்கை வாழ்ந்துவருகிறார். முத்துராஜ் (இளவரசு) என்னும் உள்ளூர் அரசியல்வாதிக்காகச் சில அடிதடி, கொலை போன்றவற்றுக்கான திட்டம் போட்டுக் கொடுக்கிறார். அதில் ஏற்பட்ட பகை காரணமாக மகாவையும் எதிரிகள் கொல்லத் துடிக்கின்றனர்.

ஈரோடு அருகே கிராமம் ஒன்றில் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டபடி குழந்தைகளுக்கு வாழ்க்கைக்கான கல்வியைக் கற்றுக்கொடுத்துவருகிறார் ஒடுக்கப்பட்ட சமூகத் தாய் வளர்க்கும் முனிராஜ் (ஆர்யா). பிரம்மச்சாரியாகவே வாழ்க்கையை நகர்த்தும் முனிராஜின் வாழ்வில் குறுக்கிடுகிறார் ஆதிக்க வகுப்பைச் சேர்ந்த தீபா (மஹிமா நம்பியார்). இதை விரும்பாத தீபாவுடைய தந்தை ஜெயராம் (ஜெயபிரகாஷ்) முனியைக் கொல்ல நினைக்கிறார்.

மகா, முனி இருவரும் என்ன ஆகிறார்கள் என்பதே மகாமுனியாக விரிகிறது.


மௌன குரு படத்தின் மூலம் கவனம் பெற்ற சாந்தகுமார் சமகால அரசியல், சாதிய ஒடுக்குமுறை போன்ற விஷயங்களின் வழியே திரில்லர் படமொன்றையே மறுபடியும் தந்திருக்கிறார். வழக்கமான வன்முறைப் படங்களுக்கான திரைமொழியைத் தவிர்த்துருப்பதால் படம் கவனிக்கவைக்கிறது. இயக்குநர் மகேந்திரனின் ஜானி போன்ற ஒரு தன்மையுடன் படம் நகர்கிறது. மிக நிதானமாகவே காட்சிகள் நகர்கின்றன. ஒருவிதமான தீவிரமான கதை சொல்லல் பாணியிலேயே திரைக்கதை அமைந்துள்ளது. சமகால அரசியலை ஒரு சரடாகவும், சமகால சமூகத்தின் சாதியப் பார்வையை மற்றொரு சரடாகவும் பிணைத்து திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர்.   

படத்தின் தொடக்கத்தில் மனநிலைக் காப்பகத்தில் காணப்படும் ஆர்யா தொடர்பான காட்சிகள் படத்தைக் குறித்து பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன. ஆனால் தொடர்ந்துவரும் காட்சிகள் பெரிதாகக் கவராமல் மந்த கதியில் நகர்கின்றன. ஓரளவு படம் நம்மைப் பிடித்து இருத்துவதற்கே முக்கால் மணி நேரம்வரை ஆகிவிடுகிறது. தெருமுனை திருமூர்த்தி கதையில் திருப்பமான கதாபாத்திரம் என்றபோதும் அவர் தொடர்பான மேடைப் பேச்சு காட்சி சுவாரசியமற்று உள்ளது.

ஆர்யாவுக்குச் சொல்லிக்கொள்ளும்படியான கதாபாத்திரம். மகாவானாலும் சரி, முனியானாலும் சரி இரண்டிலுமே அவசியமான உடல்மொழியுடன் மென்மையான குரலில் நிதானமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.


முத்துராஜின் மனைவி மிகையாக நடித்திருக்கிறார். மகாவின் மனைவியான விஜியாக வரும் இந்துஜா நடிப்பில் ஒரு செயற்கைத் தனம் தென்படுகிறது. முனியை விரும்பும் தீபாவான மஹிமா நம்பியார் பத்திரிகையாளர், ஆதிக்க சாதியில் பிறந்தபோதும் ஆதிக்கத்தை வெறுப்பது போன்றவற்றை இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார். தந்தை மீது கொண்ட கோபத்தில் அவருக்கு வேலையாள் எடுத்துச் செல்லும் மதுவைப் பிடிங்கிப் படபடவெனக் குடித்துவிட்டு பாட்டிலைப் போட்டு உடைத்துவிட்டுப் பேசும் அழகு தமிழுக்குப் புதிது.

மேடையில் தாறுமாறாகப் பேசும் திருமூர்த்தியை அழைத்துவரச் செய்து துடைப்பத்தால் சாத்தும் காட்சியும் நன்றாக இருக்கிறது. திருமூர்த்தியைக் கொல்லும் முடிவால் படத்தில் திரைக்கதையின் பாதை மாறுகிறது. மகாவின் அளவுக்கு மீறிய பணிவு இயல்புக்கு மாறானதாக இருக்கிறது.

படத்தில் பல இடங்களில் லாஜிக் மீறல்கள் சரமாரியாகத் தென்படுகின்றன. உதாரணத்துக்கு, கத்தியால் அவ்வளவு ஆழமாகக் குத்துப்பட்ட மகா ஏதோ முள் குத்தியைப் போல் அதைப் பிடுங்கிவிட்டு இயல்பாக நகர்வதை நம்ப முடியவில்லை. வன்முறை தொடர்பான படம் என்றபோதும் முடிந்தவரை திரையில் வன்முறைத் தவிர்த்திருப்பது நன்று. சாதிய ஆணவக் கொலை முயற்சிக்கு விஷப் பாம்பைப் பயன்படுத்தியிருப்பது ரசிக்க வைத்திருக்கிறது. கத்தியால் குத்துவது, துப்பாக்கியால் சுடுவது போன்றவற்றில் இல்லாத ஒரு மென்மைத் தன்மை பாம்பின் விஷத்தில் இருக்கிறது. சாதியம் உதிரத்தில் விஷம் போல் பரவும் என்பதைக் குறிப்பதுபோலும் உள்ளது.


அருண் பத்மநாபனின் ஒளிப்பதிவு, எஸ்.தமனின் இசை, சாபு ஜோசப்பின் படத் தொகுப்பு ஆகியவை படத்துக்கு உறுதுணை புரிந்திருக்கின்றன. ஆனால், துரதிர்ஷ்டவசமாக மௌனகுருவில் கைவப்பட்டிருந்த நேர்த்தி மகாமுனியில் தவறியிருக்கிறது. ஹாலிவுட் கிளாஸிக் தன்மையில் படத்தை உருவாக்க முயன்றிருக்கிறார் சாந்தகுமார் ஆனால், அவர் நினைத்த உயரத்தைப் படம் தொட்டிருக்கிறதா என்பது சந்தேகமே. எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு படத்துடன் வரும்போது அது முந்தைய படத்தைவிடச் சிறப்பாக இருந்திருந்தால் மகாமுனியைக் கொண்டாடியிருக்கலாம்.

வெள்ளி, மார்ச் 02, 2018

ஆ (தெலுங்கு): புதுமையா, பித்துக்குளித்தனமா?

அந்தத் தெலுங்குப் படத்தின் டிரெயிலரில் ஒவ்வொரு கதாபாத்திரமாக அறிமுகப்படுத்தப்படும். இறுதியாக நாயகன் யாரெனக் கேள்வி எழுப்பப்படும். கதையே ஹீரோ என ஒரு வசனம் ஒலிக்கும். அதைக் கேட்டவுடன், ஆ என்ற அதிர்ச்சி வெளிப்படும். அப்போது அதுவே படத்தின் தலைப்பு என்று சொல்லப்படும்.

டிரெயிலரில் சொல்லப்பட்டது போல் கதை ஹீரோ அல்ல. ஆனால், திரைக்கதைதான் ஹீரோ. குழந்தைப் பருவத்தில் பாலியல் துன்புறுத்தல் காரணமாகப் பாதிக்கப்பட்ட ஒரு பெண் ஆண்களை வெறுக்கிறாள். அவளைப் பன்முக ஆளுமைக் கோளாறு நோய் தாக்குகிறது. அந்த நோயின் தூண்டுதலால் அவளுக்கு ஏற்படும் மனக்குழப்பமும் அதனால் அவள் மேற்கொள்ளும் முடிவுமே ‘ஆ’ என்னும் இந்தப் படத்தின் மையம்.


இந்தக் கதையை நேரடியாகச் சொல்லாமல், துண்டு துண்டாக, அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சொல்லிச் செல்கிறார் புதிய இயக்குநர் பிரசாந்த் வர்மா. படத்தின் தொடக்கத்தில் ஓரிளம்பெண் தன் பெற்றோருக்குத் தன் காதலைத் தெரியப்படுத்தி தன் இணையை அறிமுகப்படுத்த இருக்கிறாள். ஆச்சாரமான அந்தப் பெற்றோர் இணையின் சாதி, படிப்பு, அந்தஸ்து, சொத்துபத்து விவரம் போன்றவற்றை ஓர் இந்திய மனோபாவத்தில் வினவுகிறார்கள்.

அந்தப் பெண்ணும் பொறுமையாகப் பதில் சொல்கிறாள். இறுதியாக அவளுடைய இணை வந்து சேரும்போது பெற்றோருக்கு அதிர்ச்சி ‘ஆ’ என வாய்பிளக்கிறார்கள். ஏனெனில், வந்து நிற்பதும் ஒரு பெண். அவளைத் தான் தன் மகள் காதலிக்கிறாள். இருவரும் மணமுடிக்க இருக்கிறார்கள் என்பதை அந்த இந்திய மனங்கள் ஏற்க முடியாமல் தவிக்கின்றன.

அரைகுறையான சமையல் வேலையைத் தெரிந்துவைத்துக்கொண்டு யூடியூபில் சமையல் நிகழ்ச்சிகளைப் பார்த்து சமாளிக்கும் ஒரு சமையல்காரன். அவன் ஒரு ரெஸ்டாரெண்டுக்கு வேலை தேடி வருகிறான். அங்கே அவனுக்கு ஒரு மீனும் ஒரு போன்சாய் மரமும் உதவுகின்றன. அவை அவனிடம் உரையாடுகின்றன. அவனும் அவற்றுடன் அந்நியோன்யமாக உரையாடுகிறான். ஒரு கட்டத்தில் தனது வேலைக்காகத் தனக்கு சமையல் சொல்லித் தந்த மீனையே கொல்ல வேண்டிய சூழல் வருகிறது. மீன் ‘ஆ’ என அதிர்ச்சியாகப் பார்க்கிறது.


செக்யூரிட்டியாக வேலைபார்க்கும், ஒரு டைம் மிஷினை உருவாக்கிட முயலும் விஞ்ஞான ஆர்வம் கொண்ட இளைஞன், சிறு குழந்தையிடம் மமதையுடன் நடந்துகொள்ளும் மந்திரவாதி, போதைக்கு ஆளான இளம்பெண், அவளை வைத்து ஒரு கொள்ளையைத் திட்டமிடும் காதலன். தனது பிறந்தநாளன்று தன்னையும் இன்னும் சிலரையும் கொன்றுவிட நினைக்கும் ஓர் இளம்பெண். இப்படிச் சில கதாபாத்திரங்களும் சில அதிர்ச்சிகளுமாக ஆ நகர்கிறது.

கதை என்னும் ஒன்று தேவையில்லை திரைக்கதையை மட்டும் வித்தியாசமாக நகர்த்தினால் போதும் என்னும் புதுயுக இயக்குநர்களின் பாணியையே இந்தப் படத்தில் கையாண்டிருக்கிறார் இயக்குநர். ஆனால், திரைக்கதையில் புதுமை என்று சொல்வதற்கு எதுவுமே இல்லை. நன்கு நுனிப்புல் மேய்ந்த மேடு, மரத்தின் அடியில் வாகாய் அமர்ந்து அசைபோடுவது போல் படம் நகர்கிறது.

பின் நவீனத்துவப் படம் என்னும் மாயையின் சாயை படத்தில் ததும்புகிறது. குழந்தைப் பருவ பாலியல் துன்புறுத்தல், இயற்கை நேசம், மரணம், பன்முக ஆளுமைக் கோளாறு எனப் பல விஷயங்களை மிகவும் அலட்டலாகப் படம் கையாண்டிருக்கிறது. பேய்ப்படம், திகில் படம், நகைச்சுவைப் படம், அனிமேஷன் படம், சயன்ஸ் பிக்‌ஷன் படம் போன்றவற்றைத் தனித் தனியே எடுக்காது ஒரே படத்தில் எடுத்திருப்பது புதுமையா?இதை மல்டி ஜானர் என வகைப்படுத்திப் பார்வையாளர்கள் தலையில் போடுகிறார்கள்.

உலக மொழிகளிலும் தமிழிலும் ‘எ பியூட்டில்ஃபுல் மைண்ட்’, ‘ஷட்டர் ஐலண்ட்’, ‘ஆளவந்தான்’, ‘குடைக்குள் மழை’போன்ற பல படங்களைப் பார்த்துவிட்டோம். தமிழ்ப் பார்வையாளர்களுக்கு இந்தப் படம் எந்த வகையிலும் புதுமையல்ல. இந்தப் படத்தைவிட இந்தப் படத்துக்கு ஆதரவாகப் பெருவாரியாக வந்துவிழும் விமர்சனங்களே ஆ என வாய்பிளக்க வைக்கின்றன. மற்றபடி இது பொழுதுபோக்கு நோக்கத்தில் உருவாக்கப்பட்ட சாதாரணப்படமே,

2018 பிப்ரவரி 23 அன்று இந்து டாக்கீஸ் இணைப்பிதழில் வெளியானது

ஞாயிறு, மே 08, 2016

சபாஷ் நாயுடு: பிறர் வாட ஒரு செயல்




கமல்ஹாசன் கைதேர்ந்த நடிகர். அவர் வெறும் நடிப்புக் கலைஞர் மட்டுமல்ல. சினிமாவின் அத்தனை துறைகளிலும் தன் முத்திரையைப் பதிப்பவர். ஒரு சினிமாவின் தொடக்கம் முதல் இறுதிவரை உடனிருந்து அதைச் செழுமைப்படுத்தி, தன்னால் முடிந்த அளவு செய்நேர்த்தியை வெளிப்படுத்தி, அதை அற்புதமான காவியமாக்குவதில் வல்லவர். கடந்த ஆண்டில் அவர் படைத்த திரைக் காவியம் ‘உத்தமவில்லன்’, வெற்றியைப் பெறாவிட்டாலும் இன்னும் பல ஆண்டுகள் கழித்து அதன் மகத்துவம் ரசிகர்களுக்குத் தெரியவரலாம். அதன் பிறகு ‘பாபநாசம்’, ‘தூங்காவனம்’ என இரண்டு படங்களைக் கொடுத்துத் தனது ரசிகர்களைத் திருப்திபடுத்திவிட்டார்.

இந்த ஆண்டில் இதுவரை கமலின் புதுப் படம் குறித்த தகவல் இல்லையே என அவரது ரசிகர்கள் தவித்துப்போயிருந்தனர். இந்நிலையில் தனது அடுத்த படம் பற்றிய அறிவிப்பை அவர் ஏப்ரல் 29 அன்று வெளியிட்டார். ஒரு சினிமாவை எப்படி விளம்பரப்படுத்தினால் அது ரசிகர்களை ஈர்க்கும் என்னும் நுட்பம் அறிந்தவர் அவர். ‘சபாஷ் நாயுடு’ என அவர் படத் தலைப்பை அறிவித்த அடுத்த நிமிடத்திலிருந்து சமூக வலைத்தளங்களில் இந்தத் தலைப்பில் தொனிக்கும் சர்ச்சை குறித்த விவாதங்கள் பெருகத் தொடங்கின. தன் புதுப் படம் மீதான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவிட்டதில் கமல் என்னும் நடிகர் வெற்றிபெற்றுவிட்டார். தமிழ்த் திரைப்படங்களில் அம்மா, நட்பு, காதல் சென்டிமென்ட் போல் சர்ச்சை சென்டிமென்ட்டும் வெற்றிக்கு வழிவகுக்கக்கூடிய ஒன்று. இதன் ருசியை ஏற்கெனவே நன்கு அறிந்தவர் இயக்குநர் கமல் ஹாசன்.


கமல் ஹாசனின் ‘தேவர் மகன்’ (1992) படத் தலைப்பு தொடர்பாக அப்போது எந்த சர்ச்சையும் எழுந்ததாக நினைவிலில்லை. படம் வெளியாகிப் பெரும் வெற்றிபெற்றது. ஆனால், அதன் பின்னர் தென் மாவட்டங்களில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களைக் கேலி செய்யும் வகையிலும் ஆதிக்கச் சாதியினர் தங்கள் பெருமையை உலகுக்கு அறிவிக்கும் வகையிலும் அப்படத்தின் பாடல்களும் காட்சிகளும் பயன்பட்டன என்பது வருத்தமும் கோபமும் தரும் யதார்த்தம். ‘தேவர் மகன்’ படத்தின் இறுதியில் என்னவோ கமல் விமர்சனக் கருத்துகளைத்தான் வைத்திருப்பார். படம் சொல்லும் செய்தியும் வன்முறைக்கு எதிரானதுதான். ஆனால், படம் நெடுகிலும் தென்பட்ட சாதிப் பெருமிதம் தவறாகப் பயன்படுத்திக்கொள்ளப்பட்டது என்பது கசப்பான உண்மை. ‘அறிவுரை சொன்னால் நானே கேட்க மாட்டேன்’ எனக் கமலே நேர்காணல்களில் சொல்கிறார். தனக்கு அறிவுரை மீது நம்பிக்கை இல்லை என்றும் பகர்கிறார். இந்நிலையில், திரைப்படத்தின் இறுதியில் அவர் சொல்லும் அறிவுரையைச் சாதாரண ரசிகர் புரிந்துகொண்டுவிடுவார் என நாம் எதிர்பார்ப்பதில் எந்த நியாயமுமில்லை.

‘தேவர் மகன்’ படம் ஏற்படுத்திய தாக்கத்தால் பாதிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்தினர், அவர் தன் படம் ஒன்றுக்கு ‘சண்டியர்’ எனும் பெயரைத் சூட்டியபோது விழித்துக்கொண்டனர். சண்டியர் என்னும் சொல் தங்களை எந்த அளவுக்குப் பதம் பார்க்கும் என்பதை உணர்ந்துகொண்ட அவர்கள் தொடக்கத்திலேயே அந்தத் தலைப்புக்கு எதிர்ப்பைத் தெரிவித்தனர். ஆனால், கமல் ஹாசன் அந்த எதிர்ப்பை கலைக்கும் கலைஞனுக்கும் எதிரான கண்டனமாக உணர்ந்துகொண்டாரோ என்னும் சந்தேகம் ஏற்படும்வகையில் நடந்துகொண்டார். ஒடுக்கப்பட்ட மக்களின் பயத்தையோ அவர்களது கலக்கத்தையோ அவர் உணர முற்பட்டதாகத் தெரியவில்லை. எனவே, படத்தின் தலைப்பை மாற்றுவதில் விருப்பமற்று இருந்தார். ஆனால், தொடர்ந்த கண்டனங்களால் வேறு வழியின்றி இறுதியில் படத்தின் தலைப்பை மாற்றினார். இந்தப் படப் பெயர் மாற்றம் தொடர்பான நக்கல் தொனிக்கும் கமலின் உரையாடல் ஒன்று இணையதளங்களில் இப்போதும் காணக் கிடைக்கிறது. கமலுக்கும் தார்மிகக் கோபம் இருக்கும்தானே?


பிறகு பிரேம் நடித்த ‘வர்றார் சண்டியர்’ என்னும் படத்தின் பெயருக்கும், ‘சண்டியர்’ என்றே பிறகு வேறொருவரால் எடுக்கப்பட்ட படத்துக்கும் எதிராக எந்தப் போராட்டமும் நடைபெறவில்லை. எனவே, ‘இது கமலுக்கு மட்டுமே இழைக்கப்படும் அநீதி’ என்று கமல் ரசிகர்கள் குரல் கொடுத்தனர். ஆனால், ஒரு சொல்லையோ கருத்தையோ யார் சொல்கிறார்கள் என்பதுதான் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. இன்னும் திரைப்பட மாயையில் சிக்கிச் சுழலும் தமிழகத்தில் இது போன்ற சர்ச்சைக்குரிய விஷயங்களை கமல் போன்ற ஆளுமைகள் கையாளும்போது மனம் பதறுகிறது. ஏன் கமலிடம் இந்த எதிர்பார்ப்பு? அவரை நாம் வெறும் நடிகராக மட்டும் பார்க்கவில்லை.

சமூகத்தின் மாற்றங்களுக்குக் குரல் கொடுக்கும் முன்மாதிரி மனிதராகத் தன்னைக் காட்டிக்கொள்வதில் கமல் பெரிய விருப்பத்துடன் இருக்கிறார். எய்ட்ஸ் நோயாளிகளுக்கான விளம்பரப் படத்தில் நடிக்கிறார், பெண் சிசுக்கொலையை எதிர்த்துக் காணொலியில் குரல் எழுப்புகிறார். பிரதமர் ஒரு திட்டத்தை அறிவித்தால் தானும் சென்று ஊரைச் சுத்தப்படுத்த முனைகிறார். தேர்தல் நெருங்கினால் வாக்குக்குப் பணம் வாங்கும் வாக்காளர்களின் செயலை வன்மையாகக் கண்டிக்கிறார். தன் மன்றங்களின் மூலம் பல நற்பணிகளைச் செய்துவருகிறார். இப்படியான நடவடிக்கைகளால் கமல் சமூக அக்கறை கொண்ட கலைஞராகவும் மதிப்பிடப்படுகிறார். அதனால்தான் அவர் ‘சபாஷ் நாயுடு’ போன்ற சாதிப் பெருமிதப் பெயரைச் சூட்டும்போது அனைவரும் கொந்தளிக்கிறார்கள்.


மும்மொழிகளில் தயாராகும் தனது படத்துக்கு தெலுங்கு, தமிழ் இரண்டுக்கும் பொதுவாக ‘சபாஷ் நாயுடு’ எனப் பெயர் வைப்பது சினிமா உருவாக்கத்தில் அவருக்கு உதவியாக இருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டில் இத்தகைய சாதிப் பெருமிதப் பெயரால் ஏற்பட வாய்ப்புள்ள பின்விளைவுகள் பற்றிய அக்கறையின்றி கமல் போன்ற சமூக அக்கறை கொண்ட கலைஞர், மானிடத்தின் மகத்துவம் பற்றி முழங்கும் ஒருவர் கடந்துபோக முடியுமா என்பதே நமக்கு எழும் கேள்வி. படத்தின் கதைக்கு இந்தத் தலைப்புதான் தகுந்தது என்றுகூட கமல் சொல்லவில்லை. தெருவின் பெயரில் சாதி இருக்கிறது, உங்கள் பெயரின் பின்னே சாதி இருக்கிறது எனச் சொல்கிறார் என்பதையும் கவனிக்க வேண்டியதிருக்கிறது. சர்ச்சைக்குரிய தலைப்பை வைத்துவிட்டுப் படம் வெளியாகும் வரை அதன் மூலம் கிடைக்கும் விளம்பரத்தை அனுபவித்துவிட்டு இறுதியில் படம் வெளியாகும் சமயத்தில் படத்தின் பெயரை மாற்றிக்கொள்ளலாம் என்று செயல்படும் நடிகராக கமல் இருக்க மாட்டார் என்ற நம்பிக்கை மட்டும் இன்னும் மீதம் இருக்கிறது.

லேட்டஸ்ட்

அமலா எனும் பொன்மான்

தொடர்பவர்