இந்த வலைப்பதிவில் தேடு

திரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், செப்டம்பர் 02, 2025

ரஜினியோட ராசி நல்ல ராசி


நட்சத்திர நடிகர்களுக்குத் தங்களது நூறாம் படம் குறித்து பெரிய கனவுகள் இருப்பதுண்டு. சிவாஜி கணேசனின் நூறாவது படம் நவராத்திரி. 1964 ஆம் ஆண்டு நவம்பர் 3 அன்று படம் வெளியாகியுள்ளது. சிவாஜி கணேசன் ஒன்பது வேடத்தில் நடித்திருந்தாலும், இந்தப் படத்தில் நடிகை சாவித்திரி அவரை விழுங்கி ஏப்பம் விட்டுச் சென்றுவிடுவார். படம் மிகப் பெரிய வெற்றி என்கின்றன தகவல்கள். 

எம்.ஜி.ஆரின் நூறாம் படம் ஒளிவிளக்கு. 1968 ஆம் ஆண்டில் செப்டம்பர் 20 அன்று இப்படம் வெளியாகியுள்ளது. அந்தப் படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது ராண்டார் கை. எம்.ஜி.ஆர் உடல்நலம் குன்றி அமெரிக்க மருத்துவமனையில் இருந்த வேளையில் இந்தப் படத்தின் இறைவா உன் மாளிகையில் பாடல் தமிழ்நாட்டுத் திரையரங்குகளில் எல்லாம் ஒலிக்கவிடப்பட்டது. 

சிவாஜி, எம்.ஜி.ஆர். படங்கள் போலவே நடிகர் சிவகுமாருக்கும் நூறாம் படம் பெரிய வெற்றியைப் பெற்றது. அந்தப் படம் ரோசாப்பூ ரவிக்கைக்காரி. 1979 மே 18 அன்று படம் வெளியாகி வெற்றிபெற்றுள்ளது. தேவராஜ் மோகன் இயக்கிய இந்தப் படம் விமர்சனரீதியான வரவேற்பையும் பெற்ற படம். 

கமல் ஹாசன் நடித்த நூறாம் படம் ராஜபார்வை. 1981 ஏப்ரல் 10 அன்று வெளியாகியுள்ளது. ஹாசன் பிரதர்ஸ் என்னும் பெயரில் கமல் முதன் முதலில் தயாரித்த இந்தப் படம் படுதோல்வி. வசூல் ரீதியில் வெற்றிபெறாத இந்தப் படம் விமர்சனரீதியில் கமலுக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கிய இந்தப் படம்  வசூலை வாரிக்குவிக்காதபோது, ரசிகர்களின் நினைவில் நின்றுவிட்ட படம். 

நடிகர் ரஜினிகாந்த் நடித்த நூறாம் படம் ஸ்ரீராகவேந்திரர். ரஜினியின் விருப்பப்படி படத்தை கே.பாலசந்தர் தயாரித்தார்; எஸ்பி.முத்துராமன் இயக்கினார். ராகவேந்திர சாமிகள் மீது ரஜினி கொண்டிருந்த பற்றும் பாசமும் இப்படி ஒரு படத்தை உருவாக்க வைத்தது. படம் 1985 செப்டம்பர் 1 அன்று வெளியானது. படம் தோல்விப் படம் தான். விமர்சனரீதியிலும் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. ரஜினிக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்கும் வேண்டுமானால் இது நல்ல படம் என்ற எண்ணத்தைக் கொடுத்திருக்கும். மற்றபடி ரஜினியின் நூறாம் படமாக இருந்திருந்தபோதும், இது பத்தோடு பதினொன்று, அவ்வளவுதான். 

ரஜினி ஆசையோடு எதைச் செய்தாலும் அது உருப்படாது. ரஜினி முதலில் தயாரித்த மாவீரன் படு தோல்வி. நூறாம் படமான ஸ்ரீராகவேந்திரர் தோல்வி. முதல்முதலில் கதை, திரைக்கதை எழுதித் தயாரித்த வள்ளி தோல்வி. எஸ்பி.முத்துராமனுக்காக அவர் செய்துகொடுத்த பாண்டியன் படம் தோல்வி. ஆன்மிக அனுபவமாக உருவாக்கிய பாபா படு தோல்வி. இப்படி ரஜினி விருப்பத்தோடு எதைச் செய்தாலும் அது வெற்றிபெற்றதே இல்லை என்பதன் பெரிய எடுத்துக்காட்டு அவரது ஆன்மிக அரசியல். அது தோற்றுவிக்கப்படாமலேயே படு தோல்வியடைந்தது. 


திங்கள், ஜூலை 21, 2025

விக்ரம் சுகுமாரன்: மதயானைக் கலைஞன்


மரணிக்கப்போவது எங்கள் உடல்கள்; நாங்களல்ல – பாலுமகேந்திரா

இசையமைப்பாளர் இளையராஜா, இயக்குநர் மணிரத்னம் ஆகியோரது பிறந்தநாள்கள் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்திருந்த 2025 ஜூன் 2 அன்று காலையில், எதிர்பாராத அதிர்ச்சியாக இயக்குநர் விக்ரம் சுகுமாரனின் மரணச் செய்தி திடுமென வந்து விழுந்தது. மேதாவிலாசத்துக்கும் அற்பாயுளுக்கும் அப்படி என்னதான் நமக்கு எட்டாதபடி ரகசிய உறவோ? எனத் தனது ஜே.ஜே:சில குறிப்புகள் நாவலில் எழுத்தாளர் சுந்தர ராமசாமி கேள்வி எழுப்பியிருப்பார். அந்த நாவலை வாசித்த பின்னர் பல அகால மரணம் அந்தக் கேள்வியை நினைவூட்டிச் செல்லும். ஆனாலும், சிலரது மரணம் நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல் சில நொடிகள் சித்தத்தைக் கலங்கவைத்துவிடும். அப்படிச் சட்டென மனத்தில் கனத்த கல்லெறிந்த மரணம் இயக்குநர் விக்ரம் சுகுமாரனுடையது.

அவருடன் ஏற்பட்ட சிறு அறிமுகம் நட்பென்று சொல்லத்தக்க நிலையை அடைந்ததற்கு அவரே காரணம். அவரை அண்ணா நினைவு நூற்றாண்டு நூலகத்தில் சில மாதங்களுக்கு முன்னர் நண்பர் செல்வ புவியரசனுடன் தற்செயலாகச் சந்தித்தபோது, இதுதான் அவரை நேரில் இறுதியாகப் பார்க்கும் சந்தர்ப்பம் என்பதற்கான எந்தத் தடயத்தையும் மனம் உணரவே இல்லையே? வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த மண்ணில் நமக்கே இடமேது எனக் கேட்ட கவிஞர் கண்ணதாசனும், நடிகர் முத்துராமனும் அடுத்தடுத்த நாள்களில் மறைந்த செய்தியைச் – முன்னவர் 1981 அக்டோபர் 17 அன்றும், பின்னவர் அக்டோபர் 16 அன்றும் - எட்டு வயதில் கேள்விப்பட்டபோது, மரணம் பற்றிய எந்தவொரு அடிப்படை அறிதலும் புரிதலும் ஏற்பட்டிராத அந்த வயதில் ஏதோ ஓர் இனம்புரியாத கலக்கத்தை உணர முடிந்தது. கண்ணதாசன் 54 வயதிலும் முத்துராமன் 52 வயதிலும் உலகிலிருந்து விடைபெற்றிருந்தனர். அந்த வயதுக்குள் பெரும் புகழையும் தம் துறையில் மதிப்பு மிக்க இடத்தையும் சம்பாதித்துக்கொண்டனர். விக்ரம் சுகுமாரனுக்கும் இயற்கை சற்றுக் கருணை காட்டியிருக்கலாம். அவர் தனது துறையில் இன்னும் ஏராளம் சாதிக்க வேண்டியவர் அந்த ஆற்றல் அவருக்கு இருந்தது. ஆனால், இயற்கை கருணை காட்டாதது திரைத்துறைக்கு இழப்பென்றுதான் உணர்வு சொல்கிறது.

தமிழ்நாட்டில் ஒருவரது சராசரி ஆயுள் காலம் தற்போதைய நிலவரப்படி 75 வயது என்னும் சூழலில் அவர் இன்னும் ஐம்பது வயதைக்கூடத் தொட்டிருக்கவில்லை. அவரது சுய விவரத் தகவல்கள் பொதுவெளியில் தெளிவாக இல்லை. அவரது வயது 47, 48, 49 என வெவ்வேறுவிதமான தகவல்களே கிடைக்கின்றன. ஏப்ரல் 11 அன்று பிறந்த அவரது பிறப்பு குறித்த தகவல் விக்கிபீடியாவில் கூட ஒழுங்காக இல்லை. தமிழ்த் திரைப்பட வரலாற்றில் மதயானைக் கூட்டம் என்னும் ஒரு திரைப்படத்தின் மூலம் நிலையான இடம்பெற்றுவிட்ட ஓர் இயக்குநருக்கு இதுதான் நிலையா? தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திரைப்படத் துறையானது அரைகுறை நடிகர்கள்கூட மாநிலத்தை ஆள ஆசைப்படும் அளவுக்கு அரசியல்ரீதியான செல்வாக்கைப் பெற்றுத் தரும் களமாகவே புரிந்துகொள்ளப்பட்டுள்ள சூழலிலும், இப்படியான நிலைமை தொடர்வது என்பது ஆவணப்படுத்துதலில் தமிழர்தம் சுணக்கத்தையே சுட்டுகிறது.


மதயானைக் கூட்டம் திரைப்படத்தின் முதன்மைக் கதாபாத்திரமான ஜெயக்கொடித் தேவர் அப்படத்தில் தன் மகளுக்கு நடத்திவைத்த சிறப்பான திருமணத்தை, நினைத்த அளவுக்குச் சிறப்பாகச் செய்துவைக்க இயலவில்லையே எனும் மனத்தாங்கலில் மாரடைப்பால் உயிர்விட்டிருப்பார். திரைப்படக் கலைமீது பேரார்வம் கொண்டிருந்த விக்ரம் சுகுமாரனும் மதுரையில் தயாரிப்பாளர் ஒருவரிடம் கதை சொல்லிவிட்டுச் சென்னைக்குப் பேருந்தில் திரும்பிய வேளையில் மாரடைப்பால் உயிரை விட்டிருந்தார். இன்னும் தம் திறனை முழுமையாக வெளிப்படுத்தும் படைப்பொன்றை உருவாக்கும் வாய்ப்பு கிட்டவில்லையே என்னும் மனத்தாங்கல் அவருக்கும் இருந்திருக்கக் கூடும். தமிழ்த் திரைப்பட உலகுக்குப் பெருமைசேர்க்கும் பல படங்களை உருவாக்கும் திறன் மிக்க படைப்பாளி அவர் என்பது மரணத்துக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. எந்த எதிர்க்கேள்வியுமற்று இயற்கையின் ஏவலுக்குப் பழகிய விசுவாசமான வேலையாள்தானே மரணம்?

இயக்குநர் ருத்ரய்யா, S. கணேச ராஜ் வரிசையில் இரண்டு படங்களை இயக்கி அதில் ஒன்றால் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் என்றென்றும் இடம்பிடித்துவிட்ட திருப்தியில் சென்றுவிட்டாரோ என்னவோ? அவள் அப்படித்தான் மூலம் ருத்ரய்யாவும் சின்னத்தாயி வழியே S. கணேச ராஜும் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் நிலைத்துவிட்டர்கள். ருத்ரய்யா இரண்டாவதாக இயக்கிய கிராமத்து அத்தியாயம், S. கணேச ராஜின் மாமியார் வீடு இரண்டும் ரசிகர்கள் மனத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாதவை. இவர்கள் இருவருக்கும் இல்லாத சிறப்பு விக்ரம் சுகுமாரனுக்கு உண்டு. இவர்கள் இருவராவது தமது படங்களுக்கு இளையராஜாவின் இசையைப் பக்க பலமாகக் கொண்டிருந்தார்கள். ஆனால், விக்ரம் சுகுமாரனோ எந்தப் பெரிய தொழில்நுட்பக் கலைஞரையும் சாராது தனது கலைத் திறனை மட்டும் நம்பிக் களமிறங்கி அதில் வெற்றியை நோக்கி நகர்ந்தவர்.

தமிழ் சினிமாவில் பாரதிராஜா பரம்பரை என்று சொல்லக்கூடிய அளவில் இயக்குநர்கள் அவரிடம் பணியாற்றிவிட்டுத் தனியே இயக்குநராகியிருக்கிறார்கள். மணிவண்ணன், கே.பாக்யராஜ் உள்ளிட்ட பலரைக் குறிப்பிட முடியும். அதே போல் பாலுமகேந்திராவிடமிருந்தும், பாலா, சீனு ராமசாமி, வெற்றிமாறன் வரிசையில் இயக்குநரானவர் அவர். தனது ஜூலி கணபதி படத்தை, ‘தமிழ் சினிமாவை அதன் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல இருக்கும் என் இளைய தலைமுறைக்கு’ சமர்ப்பித்த பாலுமகேந்திராவின் சீடர்களில் ஒருவர் விக்ரம் சுகுமாரன். பாலுமகேந்திராவின் கதைநேரம் உள்ளிட்ட சில படைப்புகளில் பணியாற்றியுள்ளார். பின்னர் வெற்றிமாறனுடனும் பணியாற்றி, அவரது பொல்லாதவன், ஆடுகளம் போன்ற படங்களின் உருவாக்கத்தில் பங்களித்து விடைபெற்றுத் தனியே இயக்குநரானவர் விக்ரம் சுகுமாரன். போர்ச் சூழலால் வதைபட்ட இலங்கையிலிருந்து பாலுமகேந்திரா திரைப்படத்துறைக்கு வந்திருந்தார் என்றால், விக்ரம் சுகுமாரனோ வறட்சி வாட்டியெடுக்கும் இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து அத்துறைக்கு வந்தவர்.


“என்னுடைய சினிமாவிலே ஏதோ ஒரு தனித்தன்மை இருக்கிறது என யாராவது சொன்னால் அது எனக்கும் இலக்கியத்துக்குமான பரிச்சயம்” என்கிறார் பாலு மகேந்திரா ஒரு நேர்காணலில். அப்படிப்பட்ட இயக்குநரிடம் பாடம் பயின்ற விக்ரம் சுகுமாரன் உலக இலக்கியம், உலகத் திரைப்படம் என்றெல்லாம் கதைபேசாமல் உள்ளூர் படங்களான கிழக்குச் சீமையிலே, தேவர் மகன் போன்ற படங்களைப் பார்த்தே திரைத்துறைக்கு வந்ததாகக் கூறியுள்ளார். இயக்குநர் மிஷ்கின் போன்றவர்கள் மேடையில் ஏறி உலகப் படம், உலக இலக்கியம் என்றெல்லாம் பேசுவதைக் கேட்பதற்குப் பெரிய வியப்பாக இருக்கும். அதைவிட வியப்பு அவர்களது படங்களைப் பார்க்கும்போது ஏற்படும். அதற்குக் காரணம் உலக இலக்கியம், உலக சினிமா என வீறாப்பாகப் பேசும் அவர்களது படங்களில் அவற்றின் சிறு தடயமும் தென்படாத வகையில் அசல் தமிழ் சினிமாவை உருவாக்கிவிடுவதே. ஆனால், பேராரவாரமின்றி விக்ரம் சுகுமாரன் தமிழ்ச் சமூகத்தின் ஒரு பிரிவினரின் பண்பாட்டை விமர்சனரீதியில் திரைக்கதையாக்கி அதை ஒரு கலை ஆவணமாக மதயானைக் கூட்டம் என்னும் பெயரில் படைத்துள்ளார். சாதிப் பெருமிதம் பொங்கிய கிழக்குச் சீமையிலே, தேவர் மகன் போன்ற படங்கள் பெரிய வெற்றியைப் பெற்ற தமிழ்நாட்டில் சாதியை விமர்சித்த படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை என்பது நகைமுரணே.

இயக்குநர் விக்ரம் சுகுமாரனை நேர்காணல் ஒன்றுக்காக நுங்கம்பாக்கத்தில் இராவண கோட்டம் திரைப்பட அலுவலகத்தில் சந்தித்த வேளையில், அவர் திரைப்படத் துறைக்கு வந்த கதையை மிகவும் எளிமையாக, வெள்ளந்தியான மொழியில் விரிவாகப் பேசினார். மிகவும் சரியான விதத்தில் உருவாக்கப்பட்டும் மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட திரைப்படமான மதயானைக் கூட்டம் வெளியான வேளையில் அது சரிவரக் கவனிக்கப்படவில்லை என்ற ஆதங்கம் அவருக்கு இருந்தது. தமிழ்த் திரைப்படத்தில் வழக்கமாக வெளிப்படும் மிகைப்படுத்துதல் எதுவுமின்றி மிகவும் நுட்பமான முறையில், திரைக்கதை அமைத்து அவர் உருவாக்கிய முதல் படமான அது வெளியான தருணத்தில் பெரிதும் கவனிக்கப்பட்டிருந்தால் விக்ரம் சுகுமாரன் என்னும் இயக்குநர் அப்படம் போன்ற மேலும் பல படங்களைத் தந்திருக்கக்கூடும். ஆனால், இயற்கையின் கணக்கு வேறுவிதமாக அமைந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். அவர் இறுதியாக இயக்கிய தேரும் போரும் படம் என்னவானது என்பது விடையற்ற கேள்வியாகவே தொக்கி நிற்கிறது.

நுண்ணுணர்வுகளால் இழைக்கப்பட்ட நுட்பமான ஒரு திரைப்படத்தைக் கண்ணுக்குத் தெரியாமல் கழுத்தை நெரித்த சமூகத்தை எதிர்கொண்டதாலோ என்னவோ விக்ரம் சுகுமாரன் அடுத்து உருவாக்கிய இராவண கோட்டம் அந்த அளவுக்கு நுட்பமாக உருவாக்கப்படாமல் வழக்கமான தமிழ்ப் படப் பாதையில் பயணித்துவிட்டது. ஒரு கலைஞன் சுதந்திரமான மனநிலையில் சிந்தித்துக் கதை திரைக்கதையை எழுதி, உயிரோட்டமான வசனங்களைப் படைத்துப் படமாக்கினால் உருவாகும் படத்துக்கும், அதே கலைஞன் சமூகத்தின் அழுத்தத்துக்கு உட்பட்டு உருவாக்கும் படத்துக்குமான வேறுபாட்டை எளிதில் உணர வேறெதுவும் செய்ய வேண்டாம். அடுத்தடுத்து, மதயானைக் கூட்டத்தையும், இராவண கோட்டத்தையும் பார்த்தால் போதும். ஒரு படைப்பாளிக்கு ஏற்படும் நெருக்கடியை உணர்ந்துகொள்ளலாம். இவ்வளவுக்கும் விக்ரம் சுகுமாரனின் இரண்டாம் படம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம். தமிழ்த் திரைப்பட உலகில் திரைக்கதை மன்னன் எனக் கொண்டாடப்பட்ட கே.பாக்யராஜ் தன் மகனுக்கு நல்ல படம் ஒன்றை உருவாக்கித்தரும் பொறுப்பை விக்ரம் சுகுமாரனிடம் வழங்கியிருந்தார் என்றால் விக்ரம் சுகுமாரனின் திரைக்கதை மீது அவர் எந்த அளவுக்கு நம்பிக்கை வைத்திருந்திருப்பார். அந்தப் படமும் தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் பிரச்சினை ஒன்றை மையமாகக் கொண்டிருந்தது.

விக்ரம் சுகுமாரன் தனது மதயானைக் கூட்டம் படத்துக்கு ஒரு நேர்மறையான விமர்சனம்கூட வரவில்லை என்று ஆதங்கப்பட்டிருக்கிறார். ஆனால், சுப. குணராஜன் காட்சிப்பிழை இதழில் எழுதிய சாதீய சினிமாவும் கலாச்சார சினிமாவும் என்னும் கட்டுரை அப்படத்தை நேர்மறையான கண்ணோட்டத்துடன் அணுகி, அதன் இனவரைவியல் கூறுகளையும்,படமாக்க உத்திகளையும் செய்நேர்த்தியையும் தெளிவாகச் சுட்டிக்காட்டியது. அதே தலைப்பில் உருவாக்கப்பட்ட நூலிலும் இந்தக் கட்டுரை இடம்பெற்றுள்ளது. ஆவணத்தின் துல்லியமும் புனைவின் நேர்த்தியும் சரியான விகிதத்தில் கலந்து அசலான திரைப்படமாக உருவாக்கப்பட்டிருந்த அத்திரைப்படத்தைச் சரியாக அடையாளம் கண்டுகொண்ட விமர்சனம் அது.

(2025 ஜூலை காக்கைச் சிறகினிலே இதழில் வெளியானது) 

செவ்வாய், மே 20, 2025

ஒரு விக்ரம் பத்து கமல்ஹாசன்

வர வர தமிழ்ப் படங்கள் பார்க்கும் ஆசையே விட்டுப்போய்விடும்போல. ஏற்கெனவே கொரோனா காலத்துக்குப் பிறகு தியேட்டரில் போய் படம் பார்க்கும் பழக்கம் கிட்டத்தட்ட போய்விட்டது. 2023 ஆம் ஆண்டில் தியேட்டரில் இரண்டு படங்கள் பார்த்தேன். அதில் ஒன்று தமிழ்ப் படம். அது உதயநிதி நடித்து மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன். படம் சுமார் ரகம். அடுத்த ஆண்டான கடந்த ஆண்டில் அதாவது 2024இல் இவ்வளவுக்கு விளக்கம் எழுதுவதற்குப் பதில் 2024இல் என்றே எழுதியிருக்கலாம். சரி விடுங்கள் எழுதியாயிற்று இருந்துவிட்டுப் போகட்டும். 

2024இல் தியேட்டரில் பார்த்த ஒரே படம் லப்பர் பந்து. அந்தப் படத்தைப் பார்த்தபோது, முள்ளும் மலரும் படம் நினைவில் எழுந்தது. அதே கருதான். அதில் அண்ணன் தங்கை. இதில் அப்பா மகள். கிரிக்கெட் அது இதுன்னு படம் போரடிக்காமல் போனது என்றபோதும், புதிதாக படத்தில் ஒன்றுமில்லை என்ன எண்ணமே வந்தது. படத்தில் ஒரே காதல் சோகப் பாடலில் அப்பா மகள் இருவரையும் கொண்டு காட்சி அமைத்திருந்தது மட்டுமே புதுமையாக இருந்தது. 

இந்த ஆண்டில் இதுவரை பார்த்த எந்தத் தமிழ்ப் படமும் பெரிதாக ஈர்ப்புக்குரியதாக இல்லை. அதுவும் இப்போது தியேட்டருக்குச் செல்வதே இல்லை. படம் வெளியான நான்கு வாரத்தில் படம் ஓடிடியில் வந்துவிடுகிறது. ஆகவே, வீட்டிலிருந்தே படத்தைப் பார்த்துவிட முடிகிறது. தியேட்டருக்குச் செல்வதே தேவையில்லாத ஆணியாகிவிட்டது. முந்தைய வாக்கியத்தில் தேவையில்லாத ஆணி என்னும் பயன்பாட்டைப் போலவே முழுப் படத்திலும் வசனம் இடம்பெற்றிருந்த படம் அஜித் குமார் நடித்த   Good Bad Ugly. படம் Good ஆக இல்லாவிட்டாலும் Bad ஆகவாவது இருந்திருக்கலாம். ஆனால், Ugly ஆக இருந்தது. 

படம் முழுக்க அண்ணன் யார் தெரியுமா அண்ணன் யாரு தெரியுமான்னு உதார் இருந்துகிட்டே இருக்கு. படத்துலயோ ஒரு சரக்கும் இல்ல. எந்தத் தைரியத்துல இப்படியெல்லாம் படம் எடுக்குறாங்கன்னுதான் தோணுச்சு. ஜெயில் காமெடி குரு சிஷ்யன் படத்துல ஏற்கெனவே பார்த்துட்டோம். நாயகி வில்லன்களை நொறுக்கச் சொல்லும் காட்சி நல்லவனுக்கு நல்லவன் படத்திலேயே பார்த்துவிட்டோம். படம் முழுக்க கலர் கலரா ட்ரெஸ் போட்டுட்டு ஸ்டைலா வலம் வர்றாரு அஜித். அதுதான் நடிப்புன்னா அஜித்தோட நடிப்பு பிரமாதம்னு சொல்லணும். 

சரி இதுதான் இந்த லட்சணம்னு டூரிஸ்ட் ஃபேமிலி படம் நல்லாருக்கும்னு எல்லாரும் சொல்றாங்களேன்னு அதப் பார்க்க உட்கார்ந்தா அது அதுக்கு மேல. கொலையா கொல்றாய்ங்க. முன்னாடி தொலைக்காட்சியில செவ்வாய்க்கிழமை நாடகம் வருமே அது மாதிரியான மாடர்ன் ட்யூஸ்டே டிராமா. நெஞ்சை அநியாயத்துக்கு நக்கி நக்கி தோல உரிச்சு தொங்கவிட்டுட்டாங்க. படம் நல்லா இல்லன்னு சொன்னா நமக்கு மனிதநேயமே இல்லன்னு குரூரமா சொல்வாங்க. ஆனா, படம் நல்லாவே இல்லன்னு கூசாம சொல்லலாம். அந்தச் சின்ன பையன் மட்டும் படத்துல ஆறுதல். அதுவும் இல்லாட்டி சூர மொக்கைன்னு துணிஞ்சு சொல்லலாம். 

விக்ரம் நடித்த வீர தீர சூரன் நல்ல கமர்ஸியல் படம். நீட்டான திரைக்கதை. படம் எந்தத் தொய்வும் இல்லாம இருந்துச்சு. நடிகர் விக்ரமை எல்லை மீறாமல் வரையறைக்குள் வைத்து படத்தை எடுத்த விதத்துக்கே இயக்குநருக்கு ஒரு சபாஷ் சொல்லணும். ஏனெனில், அண்மைக்காலத்தில் நடிகர் விக்ரம் திரையில் பத்து கமலஹாசனா பரிணாமம் எடுக்கிறார். தாங்க முடியல. ஆனால், இந்தப் படத்தில் அவருடைய நடிப்பு இயல்பானது. எந்தவிதமான மிகையும் இல்லாமல் அப்படியே மலர்ந்த அதிகாலைபோல் உறுத்தலின்றி இருந்தது. இதுவும் நடிப்புதான் சார். இப்படி நடிச்சா போதும், தங்கலான் மாதிரி அநியாயத்துக்கு நடிச்சா ரசிகர்கள் பாவம் இல்லயா? கொஞ்சம் அவங்க நிலைமையையும் யோசிச்சுப் பாருங்க. வெளியில தொல்லை தாங்க முடியாம தியேட்டருக்கு வர்ற அவன ரத்தம் கக்க வைக்கிறது நல்லாவா இருக்கு?  விக்ரம் நடிச்ச இந்தப் படம் சரியா ஓடல்லன்னு சொல்றாங்க. ஏற்கெனவே முன்னாடி அவர் நடிச்ச மஜா படமும் அப்படித்தான். நல்லா இருந்துச்சு ஆனா படம் ஓடல. அவர் நடிச்ச சாமி, தூள் மாதிரி கரம் மசாலாதான் ரசிகருக்குப் பிடிக்குது போல.

செவ்வாய், நவம்பர் 28, 2023

நம்பிக்கைக்குரியவர்களா தமிழின் அடுத்த தலைமுறை இயக்குநர்கள்?



கொரொனா பெருந்தொற்று காரணமாகத் தமிழ்நாட்டில் தியேட்டர்கள் முடங்கிப்போயிருந்த நிலைமை சற்றே மாறத் தொடங்கியிருக்கிறது. அண்மையில் வெளியான, சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம் திரையரங்குகளில் வசூலைக் குவிக்கிறது என்கிறார்கள். இதனால் இந்தப் படத்தின் இயக்குநர் நெல்சன் திலிப்குமாருடைய சந்தை மதிப்பும் கூடியிருக்கிறது. ஏனெனில், சிவகார்த்திகேயனின் சமீபத்திய படங்கள் பெரிய வெற்றியைக் கொடுக்காத நிலையில் அவருக்கு நம்பிக்கையூட்டிய இயக்குநராக மாறியிருக்கிறார் நெல்சன். சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தையும் அவர் இயக்கப்போவதாகத் தகவல்கள் வருகின்றன.

ஏற்கெனவே நடிகர் விஜயின் பீஸ்ட் படத்தை அவர் இயக்கிவருகிறார். 2018இல் வெளியான கோலமாவு கோகிலா என்ற சராசரியான பொழுதுபோக்குப் படத்தின் மூலம் அவர் இயக்குநராக அறிமுகமானார். தமிழ்த் திரையுலகில் அடுத்த தலைமுறை இயக்குநர்கள் காலூன்றத் தொடங்கிவிட்டார்கள் என்பதன் அறிகுறியாக நெல்சன் போன்ற சமீப கால இயக்குநர்களின் வெற்றியைப் பார்க்க முடிகிறது. கடந்த சில ஆண்டுகளில் வெளியான படங்களில் கவனத்தை ஈர்த்த இயக்குநர்கள் பற்றிய விவரத்தை அறியும்போது ஒரு சுவாரசியமான விஷயம் பளிச்சிடுகிறது. இதுவரை தமிழ்த் திரையுலகில் பெயர் வாங்கிய இயக்குநர்களைப் பார்த்தீர்கள் என்றால், அவர்கள் வெறும் வணிகப் படங்களை மட்டும் இயக்கியவர்களாக இருக்க மாட்டார்கள்.

பாரதிராஜா காலம் தொடங்கி வெற்றிமாறன், பா.இரஞ்சித் காலம்வரை இதுதான் நியதி. இந்தப் போக்கில் சிறிய மாற்றம் தென்படுகிறது. அதன் அறிகுறியாலேயே நெல்சன் போன்ற பொழுதுபோக்குப்படத்தை இயக்கியவர்களும் இயக்குநர்கள் என்னும் பெயரில் அறியப்படுகிறார்கள். தொண்ணூறுகளில் மணிரத்னம், ஷங்கர் போன்ற இயக்குநர்கள் படங்களை இயக்கத் தொடங்கிய காலத்து நிலைமைக்கும் இப்போதைய நிலைமைக்கும் ஒரு பெரிய வேறுபாடு இருக்கிறது. அதற்கு முந்தைய எண்பதுகளில் காலத்தில் எஸ்பி.முத்துராமனும் இயக்குநராக இருந்தார்; மகேந்திரனும் இயக்குநராக இருந்தார். ஆனால், இருவருக்குமிடையேயான வேறுபாடு இருந்துகொண்டுதான் இருந்தது.

புவனா ஒரு கேள்விக் குறி, ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது, எங்கேயோ கேட்ட குரல் போன்ற மாறுபட்ட கதையம்சம் கொண்ட படங்களை இயக்கியவராக எஸ்பி.முத்துராமன் இருந்தபோதும், அவர் சகலகலா வல்லவன், முரட்டுக்காளை போன்ற பொழுதுபோக்குப் படங்களாலேயே அதிகம் அறியப்பட்டிருந்தார். ஆனால், உதிரிப்பூக்கள் மகேந்திரனுக்குத் திரையுலகில் கிடைத்த இடம் வேறு மாதிரியானது. அவர் ஜானி போன்ற வணிகச் சூத்திரத்தின் அடிப்படையிலான படத்தை இயக்கியபோதும், அது மகேந்திரனின் முத்திரையுடன் அமைந்திருந்தது. அதுதான் இயக்குநரின் ஆற்றலுக்கும் ஆதிக்கத்துக்கும் சான்று. மகேந்திரனும் எஸ்பி முத்துராமனும் இணைந்தும் ஆடுபுலி ஆட்டம், தையல்காரன் போன்ற படங்களில் பணியாற்றியிருக்கிறார்கள். ஆனாலும் இருவருக்கும் இடையே இருந்த வேறுபாடு தெளிவாக வெளித் தெரிந்தது.

தொண்ணூறுகளில்கூட ஷங்கர் ஆக்‌ஷன், காமெடி கலந்த பொழுதுபோக்குப் படங்களால்தான் அதிகம் அறியப்பட்டார், ஆனால் மணி ரத்னத்துக்கு அளிக்கப்பட்ட இடம் வெறும் ஆக்‌ஷன், பொழுதுபோக்கு இயக்குநருக்கானதில்லை. இப்போதைய திரைப்பட இயக்குநர்களின் பயணத்தில் இப்படியான இடைவெளி சுத்தமாக அழிந்துவருகிறதோ என்ற எண்ணமே ஏற்படுகிறது. கலைப் படம், வணிகப் படம் என்ற இடைவெளி இப்போது இல்லை. இவை இரண்டும் கலந்த படமாக அது மாறியிருக்கிறது. ஆழமான கதையம்சம் கொண்ட படம் காலாவதியாகிவிட்டதோ என்னும் அளவுக்குத் தமிழ்த் திரைப்படங்களில் திரைக்கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் போன்ற மாறுபட்ட திரைக்கதை வருகிறது ஆனாலும், பாக்யராஜ் அளவுக்குத் தெளிவான திரைக்கதையை எழுதும் இயக்குநர்கள் இப்போது யார் என்பதைத் தேடித்தான் பார்க்க வேண்டியதிருக்கிறது.

பாலுமகேந்திராவின் சீடரான பாலா இயக்க வந்தபோது, பொழுதுபோக்குப் படத்துக்கும் தீவிரப் படத்துக்குமான இடைவெளி குறையத் தொடங்கியது. சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள் எனத் தொடர்ந்து அவர் உருவாக்கிய அனைத்துப் படங்களும் பொழுதுபோக்குக் கதையம்சத்துடன் உருவாக்கப்பட்டிருந்தாலும் அவருடைய படங்கள் மாற்றுப்படங்கள் என்ற மயக்கத்திலேயே மதிப்பிடப்படும்.அவன் இவன் போன்ற சராசரிக்கும் கீழான படங்கள் கூட பாலா படம் என்ற மதிப்புடன் அணுகப்பட்டன. பாலுமகேந்திராவின் மற்றொரு சீடரான வெற்றிமாறன் பொழுதுபோக்குப் படங்களைக் கலாபூர்வமான முறையில் உருவாக்கும் இயக்குநராக இருக்கிறார். 

இவருக்கும் அடுத்த தலைமுறை இயக்குநர்கள்தாம் இப்போது உருவாகிவருகிறார்கள். இவர்களை முந்தைய தலை முறையிலிருந்து வேறுபடுத்துவது அவர்களது பின்னணியும் படங்களை உருவாக்கும் முறையும். ஓர் இயக்குநரிடம் உதவி இயக்குநராகப் பல ஆண்டுகள் இருந்து பிறகு படம் இயக்க வந்தவர்கள் அல்ல இவர்கள். நெல்சனையே எடுத்துக்கொண்டால், அவர் விஷுவல் கம்யூனிகேஷன் முடித்துவிட்டு தொலைக் காட்சியில் ரியாலிட்டி ஷோவில் பணியாற்றி அப்படியே சினிமாவுக்கு வந்திருக்கிறார். எண்பதுகளின் மத்தியில் ஊமைவிழிகள் திரைப்பட வெற்றியைத் தொடர்ந்து திரைப்படக் கல்லூரியில் படித்துமுடித்த மாணவர்கள் பலர் திரைத் துறையில் காலடி பதித்தார்கள். அதைப் போல் இப்போது விஷுவல் கம்யூனிகேஷன் முடித்து திரைத்துறைக்கு வருபவர்கள் அநேகர்.

சமீப ஆண்டுகளில் முதல் படத்தை இயக்கி, கவனிக்கத் தக்க அளவில் பெயரைப் பெற்றவர்கள் என துருவங்கள் பதினாறு கார்த்திக் நரேன், சதுரங்க வேட்டை வினோத், இரும்புத்திரை பி. எஸ். மித்ரன், உறியடி விஜய குமார், கிடாரி பிரசாத் முருகேசன், மாநகரம் லோகேஷ் கனகராஜ், பாம்புச் சட்டை ஆடம் தாசன், எட்டுத் தோட்டாக்கள் ஸ்ரீகணேஷ், ஒரு கிடாயின் கருணை மனு சுரேஷ் சங்கையா, புரியாத புதிர், இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் ரஞ்சித் ஜெயக்கொடி, அறம் மீஞ்சூர் கோபி, பரியேறும் பெருமாள் மாரி செல்வராஜ், ராட்சசன் ராம் குமார், 96 பிரேம் குமார், ஜீவி வி ஜே கோபிநாத், க/பெ ரணசிங்கம் பி விருமாண்டி எனச் சிலரைக் குறிப்பிடலாம். சிலர் விடுபட்டிருக்கக்கூடும். இவர்களில் தொடர்ந்து ஒரு படத்துக்கு மேல் படங்களை இயக்கியவர்கள் எனப் பார்க்கும்போது, பலர் பட்டியலிலிருந்து விலகிவிடுகிறார்கள். இருட்டு அறையில் முரட்டுக் குத்து சந்தோஷ் பி ஜெயகுமார், திரௌபதி மோகன் ஜி ஆகியோர்களும் இதே தமிழ்த் திரையுலகில் இயக்குநர்கள் என அறிப்பட்டிருப்பது நகைமுரணே.

மிக இளைய வயதில் இயக்குநராகிவிட்ட கார்த்திக் நரேன் துருவங்கள் பதினாறு மூலம் கவனம் பெற்றிருந்தார் என்றபோதும் அந்தப் படம் மிகவும் சாதாரண த்ரில்லர் வகையைச் சார்ந்ததே. அதன் பின்னர் அவர் இயக்கிய மாஃபியா மிகவும் சுமாரான படமே. இரும்புத் திரையில் புதுமையாக இயக்குநராக வெளிப்பட்ட மித்ரன், ஹீரோ படத்தில் மிகச் சாதாரண இயக்குநராக மாறியிருந்தார். உறியடி வழக்கத்திலிருந்து சற்று மாறுபட்ட படம் என்ற அளவில் பொருள்கொள்ளத்தக்கதே தவிர உறியடி 1, 2 ஆகிய படங்களை வைத்து அவர் பிரமாதமான இயக்குநர் என்று சொல்லிவிட முடியாது. இயக்குநர் என்ற வகையில் மதிப்பிடும்போது, லோகேஷ் கனகராஜின் மாநகரம் ஈர்த்த அளவுக்கு அவருடைய கைதியோ மாஸ்டரோ ஈர்க்கவில்லை. ரஞ்சித் ஜெயக்கொடியின் இரண்டு படங்களுமே மாறுபட்டவைதாம். முதல் படமான புரியாத புதிர் கிம் கி டுக்கின் பியட்டா படத்தை நினைவூட்டியது.

இயக்குநராகச் சொல்லிக்கொள்ளும்படியான படங்களைத் தரும் முனைப்பு அவருக்கு உள்ளது என்பதை அவருடைய படங்கள் சொல்கின்றன. பிரசாத் முருகேசன், ஆடம் தாசன், சுரேஷ் சங்கையா, பி.விருமாண்டி ஆகியோரது அடுத்தடுத்த படம் வெளிவரும்போதுதான் அவர்கள் எப்படி இயக்குநராகப் பரிணமிக்கிறார்கள் என்பதைச் சீர்தூக்கிப் பார்க்க இயலும். ராம் குமார் இயக்கிய ராட்சசன் பெரிய வெற்றியைப் பெற்றது என்றபோதும், அந்தப் படத்தை அவர் கையாண்டவகையில் வெற்றிபெற்ற படத்தின் இயக்குநர் என்று அவரைச் சொல்ல முடிகிறதே ஒழிய வெற்றிகரமான இயக்குநர் என்று சொல்ல முடியவில்லை.

96 வழக்கமான காதலை வழக்கத்துக்கு மாறாகச் சொன்ன படம். ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு காதல் படம் ரசிகர்களுக்குத் தேவையாயிருக்கிறது. ஒரு தலை ராகம், இதயம், காதல் கோட்டை, ஆட்டோ கிராப் வரிசையில் 96 இடம்பெற்றிருக்கிறது. அவ்வளவுதான். பிரேம் குமார் சிறப்பான இயக்குநராக என்பதைச் சொல்தல் கடினம். தொடர்ந்து இரண்டு படங்களையும் நம்பிக்கை ஊட்டும் வகையில் தந்திருக்கிறார் மாரி செல்வராஜ். ஆகவே, அவர் மீது நம்பிக்கைகொள்ள முடிகிறது. தனது மூன்று படங்களிலும் சொல்லிக்கொள்ளும்படியான ஆளுமையைச் செலுத்தியவர் என ஹெச். வினோத் இருக்கிறார். சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை என ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையாக இருந்தது. அடுத்து அஜித்தின் வலிமையை இயக்கிவருகிறார். தொடர்ந்து ஓர் இயக்குநராக அவர் சாதித்திருக்கிறார் என்று நம்புவதற்கான சான்றுகள் இப்படங்கள்.

இயக்குநர் சிகரம் என்ற பெயரை பாலசந்தருக்குக் கொடுத்து தமிழ்த் திரையுயலகம் கௌரவித்திருக்கிறது. ஆனால், அவரைவிட சினிமாவை ஒழுங்காகக் கையாண்டு வெற்றிபெற்றவர் என ஸ்ரீதரைத் தான் சொல்ல முடியும். அவர் பொழுதுபோக்குப் படங்களை இயக்கியவர் என்ற வகையில் அறியப்பட்டிருந்த போதும் சினிமாவை சினிமாவாக உருவாக்கியவர் அவர். இப்போதைய இயக்குநர்களில் ஒரு ஸ்ரீதரோ, பாலசந்தரோ பாரதிராஜாவோ பாலுமகேந்திராவோ உருவாவார்களா என்பது சந்தேகமே. வேண்டுமானால், ஒரு ஷங்கரோ, மணிரத்னமோ உருவாகலாம். ஏனெனில், காலம் பெரிய அளவில் மாறியிருக்கிறது. அதற்கேற்பத் தான் இயக்குநர்களும் வெளிப்படுவார்கள்.

தமிழ் இதழ்களில் முன்னர் பொழுதுபோக்கு இதழ்கள், தீவிர இலக்கிய இதழ்கள் என்ற வேறுபாடு பெரிய அளவில் இருந்தது. இப்போது அப்படியான வேறுபாடு அழிந்துவிட்டது. தீவிர இலக்கிய இதழ்களில் எழுதிய பலர் பொழுதுபோக்கு இதழ்களில் பணியாற்றத் தொடங்கிய பின்னர் ஏற்பட்ட மாற்றம் இது. அது போல் தமிழ் சினிமாவின் இயக்கத்திலும் ஒரு புதிய பரிணாம வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. புத்தாயிரத்தின் நவீன இளைஞர்கள் திரைத்துறையில் புகுந்திருக்கிறார்கள். அவர்கள் உலகப் படங்களையும் இணையத் தொடர்களையும் பார்த்த மயக்கத்தில் படமெடுக்க வந்திருக்கிறார்கள். அது அவர்களுடைய படங்களில் வெளிப்படுகிறது. தொழில்நுட்பம் அவர்களுக்குக் கைகொடுக்கிறது.

மேலும், அந்தக் கால இயக்குநர்களுக்குக் குறைந்தபட்சம் பத்து ஆண்டுகள் அவர்கள் இயக்குநராகக் கோலோச்ச கால அவகாசம் இருந்தது. ஆனால், இப்போது படம் இயக்கும் இயக்குநர்களுக்கு அந்தக் கால அவகாசம் இல்லை என்பது வெளிப்படையான விஷயம். இரண்டு மூன்று படங்கள் இயக்கிய பிறகே அவர்களைத் தேடத் தான் வேண்டியதிருக்கிறது. அதற்குள் அவர்கள் பணத்தைச் சம்பாதிப்பார்களா, பெயரைச் சம்பாதிப்பார்களா என்னும் கேள்விக்குக் காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

இன்மதி இணையதளத்தில் 2021 அக்டோபர் 16 அன்று வெளியான கட்டுரை.  

திங்கள், நவம்பர் 27, 2023

சின்ன புறா... பொன் மான்... நல்ல மனம்...

சில திரைப்படப் பாடல்களை நீண்ட காலமாக அலுப்போ சலிப்போ இல்லாமல் வெவ்வேறு தருணங்களில் கேட்கிறோம். முதன்முதலில் எப்போது கேட்டோம், இந்தப் பாடல் ஏன் இவ்வளவு பிடித்திருக்கிறது என்றெல்லாம் யோசித்துக்கொண்டே கேட்போம். அந்த யோசனையால் வரிகளைத் தவறவிட்டுவிடுவோம். ஆகவே, மீண்டும் கேட்போம். 

அப்படியான பாடல்களில் ஒன்று, சின்னபுறா ஒன்று... அன்பே சங்கீதா படத்தில் இடம்பெற்ற பாடல். முதன்முதலில் இந்தப் பாடலைக் குறித்துக் கேள்விப்பட்டபோது, படத்தில் இது தேங்காய் சீனிவாசனுக்கு என்பதைத் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. ஒரு நகைச்சுவை நடிகருக்கு இவ்வளவு நல்ல பாட்டா என்று தோன்றியது. இதில் நாயகியைக் குழந்தையாகப் பார்த்திருப்பான் நாயகன். இந்தப் பாடலைக் கேட்கும்போது, இதில் நாயகன் காதலிப்பதே நாயகிக்குத் தெரியாது போல. ஒருதலைராகம் டைப் காதலாக இருக்குமோ? 

அடுத்த பாடல், நெஞ்சிலாடும் பூ ஒன்று படத்தில் இடம்பெற்ற, ஒரு மூடன் கதை சொன்னால்... பாடல். இந்தப் பாடலில் விழிகளா விஷமா என்று கேள்வி கேட்கும் அளவுக்கு நாயகன் கொடூரமானவனாக இருக்கிறான். இவன் சற்றுச் சிக்கலான ஆளாக இருப்பான் போல. தனது காதல் நிறைவேறாத காரணத்தால், பெண்ணைப் படைக்காதே பிரம்மனே என்று கோரிக்கை வைக்கும் அளவுக்கு யோசிக்கிறான். இந்தப் பாடலைக் கேட்கும்போது, சிலோன் ரேடியோ ஸ்டேஷனில் கேட்ட அந்த நாள்கள் நினைவில் எழும். ஒருநாளும் திரும்பி வர வாய்ப்பே இல்லாத அந்த நாள்களை ஏக்கத்துடன் நினைத்துப் பார்ப்பதில் மனம் ஒரு சுகம் காணும்.

இன்னொரு பாடல், எங்க ஊர் ராசாத்தி படத்தின், பொன்மானைத் தேடி... இது சோகப் பாடல் என்றபோதும், நம்பிக்கை தொனிக்கும் பாடல். இந்தப் பிறப்பில் நாம் சேர்ந்துவாழ முடியாமல் போனாலும் இனியேதோ ஒரு பிறப்பில் சேர்ந்துவாழ்வோம். அப்படி ஒருவேளை சேராவிட்டாலும் அதற்காக வருந்த வேண்டியதில்லை. நான் வானத்தில் ஒரு வெள்ளியாக மாறியிருப்பேன் என்னை அடையாளம் கண்டுகொள் என நாயகி நாயகனிடம் வேண்டுவாள். 

இந்த மூன்று படங்களையும் பார்த்ததில்லை. பாடல்கள் மட்டுமே பரிச்சயம். முதல் பாடலில் காதலிக்கே தெரியாமல் காதலித்திருக்கிறான் ஒருவன். இரண்டாம் பாடலில் காதலித்தான் ஆனால், அவள் வேறு ஒரு பக்கம் போய்விட்டிருப்பாள் போல. மனம் நொந்து பாடுகிறான். மூன்றாம் பாடலில் இருவருமே காதலித்திருக்கிறார்கள். ஆனால், சூழல் ஒத்துழைத்திருக்காதுபோல. இருவரும் நிலைமையைப் புரிந்துகொண்டு மனத்தைத் தேற்றியபடி பாடுகிறார்கள். 

இந்த வரிசையில் யோசித்துக்கொண்டே போனால், ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது படத்தின், நல்ல மனம் வாழ்க பாடலும் கூட நினைவுக்கு வருகிறது. அந்தப் பாடலில் நாயகன் காதலித்த பெண் இன்னொருவரைத் திருமணம்செய்துகொண்டிருப்பாள். அவர்கள் இருவரையும் வாழ்த்தி நாயகன் பாடுவான். எங்கிருந்தாலும் வாழ்க ரகக் காதலன் இவன் போல. வெளிப்படையாக வாழ்த்துப் பாடலாக இருந்தபோதும், மெலிதான கழிவிரக்கம் உள்ளூடாகப் பரவியிருக்கும் பாடல் இது. 

பழகிய தடத்தில் அசை போட்டபடி பயணிப்பதில் பிரியம் காணும் நெஞ்சங்களுக்கு இந்தப் பாடல்கள் பிடிக்கும்…


திங்கள், ஜூலை 04, 2022

உத்திரமாய் மனதில் விழுந்த காதல்


நேற்றிரவு மனம் ஒருநிலையில் இல்லை. அண்மைக்காலமாகவே அடிக்கடி அப்படியொரு மனநிலை வாய்த்துவிடுகிறது. எதையுமே செய்யாமல் இருப்பது தொடர்பான ஒருவிதமான அலுப்பை மனம் உணர்கிறது. இரவில் ஏதாவது ஒரு படத்தைப் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். என்ன படம் பார்ப்பது என ஒரு முடிவுக்கு வராமலேயே மடிக் கணினியைத் திறந்தேன். அது என்னை ப்ரீஃப் என்கவுண்டர் என்னும் படத்தைப் பார்க்கச் சொன்னது. படத்தைத் தேர்ந்தெடுத்த பின்னர் அது குறித்த விவரங்களைப் பார்த்தேன். 

டேவிட் லீன் இயக்கிய பிரிட்டிஷ் படம் இது. இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்த ஆண்டில், 1945இல் வெளிவந்திருந்த படம். என்கவுண்டர் என்னும் சொல்லை வைத்துப் படம் கொலை தொடர்பானது என மனம் முடிவுசெய்திருந்தது. ஆனால், படம் திருமணத்துக்கு வெளியேயான காதல் தொடர்பானது. கறுப்பு வெள்ளைப் படம். வெறும் எண்பத்தாறு நிமிடங்கள்தாம் படம். 

லாரா என்னும் நடுத்தரவர்க்கத்துப் பெண்மணிக்கும் அவர் யதேச்சையாக ரயில் நிலையத்தில் சந்திக்கும் அலெக் என்னும் டாக்டருக்கும் இடையில் உருவாகும் காதல் தான் படத்தின் மையப் பொருள். லாராவுக்கு ஓர் அழகான குடும்பம் உள்ளது. அன்பான கணவர், ஆண் ஒன்று பெண் ஒன்று என இரு குழந்தைகள். அவள் வாரம் தோறும் வியாழக் கிழமை அன்று அருகிலுள்ள நகரத்துக்குச் சென்று ஷாப்பிங், ரெஸ்டாரெண்ட், சினிமா எனப் பொழுதைக் கழிக்கிறாள். அப்படி வெளியே செல்லும் போதுதான், அலெக் உடன் அவளுக்கு நட்பு உருவாகிறது. 

ஒருநாள் ரயில் நிலையத்தின் தூசு ஒன்று அவள் கண்ணில் விழுந்துவிடுகிறது. அதை எடுக்கும் முயற்சியில் அவளுக்கு உதவுகிறான் அலெக். கண்ணிலிருந்த தூசை எடுத்த அலெக் உத்திரம் போன்ற காதலை மனதில் போட்டுவிடுகிறான். முதல் சந்திப்பில் காதலாகவெல்லாம் அது மாறவில்லை. ஓர் அறிமுகம் மட்டுமே அப்போது கிடைக்கிறது. அறிமுகம் மெதுமெதுவாக நட்பாக மாறி, ஒரு கட்டத்தில் காதலாகக் கனிந்துவிடுகிறது. அலெக்குக்கும் குடும்பம் உள்ளது. மனைவியைப் பற்றிச் சொல்கிறான். ஆனால், அவனது குடும்பம் திரையில் காட்டப்படவில்லை. 


ஒரு வியாழக்கிழமை இருவரும் படத்துக்குச் செல்கிறார்கள். இன்னொரு முறை காரில் உலாப் போகிறார்கள். அருகிலுள்ள கிராமத்துக்குச் செல்கிறார்கள். அங்குள்ள ஆற்றுப் பாலத்தில் சிறிது நேரம்  செலவிடுகிறார்கள். இப்படி அவர்களது உறவு ஆழமாக வேர் விட்டு விடுகிறது. லாராவுக்கும் இந்தக் காதல் முதலில் தித்திப்பாகத்தான் இருக்கிறது. நாளாக நாளாக தான் செய்வது சரியா என்ற கேள்வி எழுந்துவிடுகிறது. இப்போது, இந்தக் காதல் தொடர்ந்தால் தனது வாழ்வு என்ன ஆகும் என்ற கேள்வி மனதில் எழ அச்சமும் நிம்மதியின்மையும் அவளை அலைக்கழிக்கின்றன. ஆனாலும், வியாழன் தோறும் அலெக்கைப் பார்க்காவிட்டால் அவளுக்கு மனம் இருப்புக்கொள்வதில்லை. தவறென்று தெரிந்தும் மனம் அதையே நாடுவதை எப்படித் தவிர்க்க என அந்தப் பேதைப் பெண்ணுக்கும் டாக்டர் பட்டம் பெற்ற அந்த ஆணுக்கோ தெரியவில்லை. ஆனாலும், எல்லா உறவுக்கும் ஒரு முடிவு வந்துதானே ஆகவேண்டும். அவர்கள் காதலுக்கும் ஒரு முடிவு வந்துவிடுகிறது. அந்த முடிவை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதைப் படத்தில் பாருங்கள். 

படத்தில் ரயில் நிலையம், அதன் பயணியர் உணவகம், திரையரங்கம், லாரா வீடு ஆகியவையே திரும்பத் திரும்ப இடம்பெறுகின்றன. கறுப்பு வெள்ளைப் படம் என்பதால் இயல்பாகவே காட்சிகள் ஈர்க்கின்றன. பயங்கரமான ஒலியெழுப்பியபடி தூசு பரப்பி ரயில் விரைந்து செல்லும் காட்சி அப்படியே மனதில் ஒட்டிக்கொள்கிறது. ஒரு நடுத்தர வயதுக்குரிய பெண்மணியின் உணர்வுகளை எல்லாம் அப்படியே நடிப்பில் கொண்டுவந்து, ஒரு பெண்மணியின் வாழ்வை நேரில் பார்ப்பது போன்ற எண்ணத்தைக் கொண்டுவந்துவிடுகிறார் லாராவாக நடித்திருக்கும் செய்லா ஜான்சன். அலெக்கின் நண்பருடைய அபார்ட்மெண்டில் ஓர் இரவு நேரத்தில் அலெக்குடன் லாரா இருக்கும்போது, அலெக்கின் நண்பர் திரும்பிவந்துவிடுகிறார். அலெக் பின் கதவு வழியே லாராவை அனுப்புகிறான். அந்த இரவில் அவளுடைய மனம் படும் பாடு... காதல் ஒரு பக்கம் சுயமரியாதை இழப்பு தந்த வலி ஒரு பக்கம் என அவளைத் துன்புறுத்துகிறது. 

நோயல் கவர்டு எழுதிய ஸ்டில் லைஃப் என்னும் நாடகமே இந்தப் படமாக உருமாறியுள்ளது. படத்தின் திரைக்கதையை நோயல் கவர்டு தான் எழுதியுள்ளார். அலெக்குடன் இறுதியாக விடைபெறும் தருணத்தில் சிவபூஜையில் கரடி போல் வந்து சதா பேசிக்கொண்டே இருக்கும்போது, லாராவின் தவிப்பை வசனங்களேயின்றி வெளிப்படுத்தும் வகையில் திரைக்கதையை அமைத்திருக்கிறார் நோயல் கவர்டு. தனது காதலனை இனி ஒருபோதும் பார்க்க முடியாது என்பதால் இறுதியில் அவனோடு விடைபெறும் தருணத்தை வாழ்வின் உன்னதத் தருணமாக நினைத்து எதிர்கொள்ளத் தயாராகும் லாராவால் அதை அப்படி எதிர்கொள்ள முடியவில்லை. தோழி ரூபத்தில் அந்தத் தருணம் தடைப்படுகிறது. அந்தக் கணம் உயிரை விட்டுவிடலாமா என்னும் எல்லைக்கே போய்விடுகிறாள் லாரா. 


மத்தியதர வயதில் வந்த காதல் லாராவையும் அலெக்கையும் பள்ளி மாணவர்கள் போல செயல்பட வைக்கிறது. அவர்கள் மனம் அந்தக் காதலின் உற்சாக வெள்ளத்தில் மிதக்கிறது. காதல் பூரணமாக அரும்பிய பின்னர் இது சரிப்பட்டுவருமா என்ற வேதனைத் தழல் நெருப்பை அள்ளி மனத்தில் வீசுகிறது. காதலுக்குப் பின்னான காதல் தொடர்பாக சமூகம் என்ன சொல்லும், அது சரியாக வருமா என்ற தனிமனிதர்களின் தத்தளிப்பு இன்னும் தொடரும் சூழலில் தானே உலகம் உள்ளது. அப்படியொரு தடுமாற்ற உணர்வுக்கும் தன்னிலை மறக்கச் செய்யும் காதல் உணர்வுக்கும் இடையில் அல்லாடும் மனிதர்களைப் பற்றிய படமா இது இருப்பதால் என்றென்றைக்குமான படமாகிறது. 

1946 ஆம் ஆண்டில் நடைபெற்ற கேன் திரைப்பட விழாவில் தங்கப் பனை விருதுவென்ற திரைப்படம் இது. டேவிட் லீன் இயக்கிய ஆலிவர் ட்விஸ்ட், த ப்ரிட்ஜ் ஆன் த ரிவர் க்வாய், லாரென்ஸ் ஆஃப் அரேபியா, டாக்டர்  ஷிவாகோ, ரேயான்ஸ் டாட்டர் ஆகிய படங்கள் குறிப்பிட்டுச் சொல்லத் தகுந்தவை. அகத்தில் நிகழும் மாற்றங்களை, எண்ணவோட்டங்களைக் காட்சிகளில் வெளிப்படுத்தி, உயர்தர திரைப்பட அனுபவம் தருவதில் மாஸ்டர் டேவிட் லீன். தன் கணவனிடம் லாரா வாக்குமூலம் போலச் சொல்வதாகத் தான் திரைக்கதை  அமைந்துள்ளது. அவளது மனவோட்டங்களையும் நினைவோட்டங்களையும் ஒரு நேர்த்தியான திரைக்கதைக்குள் கொண்டுவந்து அதை எப்போதும் பார்ப்பதற்கான சினிமாவாக மாற்றியதில் டேவிட் லீன் தனித்துத் தெரிகிறார்.     

செவ்வாய், ஏப்ரல் 12, 2022

விரும்புகிறேன்

யூடியூபில் பழைய படங்களை அவ்வப்போது பார்ப்பது வழக்கம். அப்படி ஒரு படத்தைப் பார்ப்பதற்கு ஏதாவது ஒரு தூண்டுகோல் தேவைப்படும். அந்தப் படத்தைப் பற்றி எதையாவது கேள்விப்பட்டால் பார்க்கத் தோன்றும். அண்மையில் வெளிவந்த டாணாக்காரன் படத்தில் சாதி தொடர்பான காட்சி ஒன்று இடம்பெற்றிருந்தது. அதைத் தொடர்ந்து சிவாஜி கணேசன் நடித்த பழையபடத்தில் அவர் சாதிப்பெயரைப் பெருமையுடன் சொல்லும் காட்சியையும் விக்ரம் பிரபு சாதி பற்றிக் கேட்பதன் அபத்தத்தைச் சொல்லும் காட்சியையும் இணைத்து ஃபேஸ்புக்கில் ஒரு வீடியோ பகிரப்பட்டிருந்தது. அதைக் கண்டவுடன் இதைப் போல் சாதி தொடர்பான ஒரு காட்சியை விரும்புகிறேன் படத்தில் பார்த்த நினைவுவந்தது. எனவே, அந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என்ற  எண்ணம் வந்து. யூடியூபில் தேடினால் படம் கிடைத்தது. 

சுசி கணேசன் இயக்கிய முதல் படம் இது. ஆனால், படம் காலதாமதமாகத் தான் வெளியானது. அதற்குள் அவர் ஃபைவ்ஸ்டார் படத்தை இயக்கிவிட்டார் என ஞாபகம். இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக இருந்தவர் சுசி கணேசன். இவரிடம் உதவி இயக்குநராக இருந்தவர்தான் மௌனகுரு, மகாமுனி ஆகிய படங்களை இயக்கிய சாந்தகுமார். படம் வந்தபோதே பார்த்திருக்கிறேன். பொதுவாகத் தமிழ்ப் படங்களில் பாரதிராஜா பாதிப்பிலான கிராமங்களைத்தாம் அதிகம் பார்க்க முடியும். ஆனால், சுசி கணேசன் காட்டிய கிராமம் முற்றிலும் வேறான ஒரு கிராமமாக இருந்தது. 

படத்தின் கதைக் களமும் புதிது. கதாநாயகனாக பிரசாந்த்  நடித்திருந்தார். பிரசாந்தை நடிகராகப் பார்க்க முடிந்த படங்களில் இதுவும் ஒன்று. சிநேகாவின் அறிமுகப் படம் இது. ஆனால், அவர் நடித்த என்னவளே இதற்கு முன்னரே வெளியாகிவிட்டது. நடன இயக்குநர் கலாவின் உறவுக்காரப் பெண்ணான சிநேகா இந்தப் படத்தில் வசீகரமான கிராமத்துப் பெண்ணாக வலம்வருகிறார். தந்தைக்கு அடங்கிய அப்பாவின் பெண்ணான தவமணி- அவரது கதாபாத்திரப் பெயர் இதுதான் - காதல் பிறந்தபிறகு துணிச்சலும் தைரியமும் கொண்ட பெண்ணாக மாறிவிடுகிறார். இரண்டின் சுபாவங்களையும் இயல்பாகச் செய்திருந்தார் சிநேகா. 

சுசி கணேசன் எழுதிய வாக்கப்பட்ட பூமி என்னும் நாவலே இந்தப் படமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. கண்ணின் கடைப்பார்வையைக் காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் இளைஞர்க்கு மாமலையும் ஓர் கடுகாம் என்னும் கவிதை வரிகளுக்குத் தகுந்த காட்சியாக்கம் ஒன்று படத்தில் உண்டு. கே.வி.ஆனந்த் ஒளிப்பதிவில் ஒரு கிராமத்தின் வேறுபட்ட தோற்றங்களைப் படம் காட்சிப்படுத்தியிருந்தது. தீயணைப்பு வீரர் சிவனாகப் படத்தில் நடித்திருந்தார் பிரசாந்த். தீயணைப்பு வீரரான தந்தை பணியின்போது மரணமுற்றதால் அந்த வேலையில் சிவன் சேர வேண்டியதாகிவிடும். அவருக்கு இரண்டு தம்பிகள். இருவரையும் கரையேற்றும் பொறுப்பை அவர் ஏற்றுக்கொள்வார். அதே போல் தவமணிக்கும் இரண்டு தங்கைகள். அம்மா இல்லாத குடும்பம் அவர் அம்மா நிலையிலிருந்து தங்கைகளைக் கரையேற்ற வேண்டியதிருக்கும். இவர்கள் இருவருக்கும் காதல் முளைத்துவிடுகிறது. அந்தக் காதல் அவர்களை என்ன செய்தது, இவர்கள் காதலால் தவமணி வாழ்ந்த கிராமம் என்ன ஆனது என்பதைப் படம்  கூறும். 

நல்ல காரியத்துக்காக ஒன்றுசேராத கிராமம் காதலைப் பிரிக்க ஒன்றுசேரும். சாதி என்னும் பித்து கிராமத்து மனிதர்களின் மனங்களில் எவ்வளவு கேட்டைக் கொண்டுவந்துசேர்க்கும் என்பதையும் படம் தெரிவிக்கும். காதல் காட்சிகளும் பாடல்களும் காட்சிப்படுத்தியிருந்த விதமும் ரசனைக்குகந்தவை. ஈஸ்வரி ராவ் ஏற்றிருந்த லதா என்னும் கதாபாத்திரம் மிகவும் ஈர்ப்புக்குரிய ஒன்று. தினந்தோறும் படத்தில் வரும் ரேணுகா கதாபாத்திரம் போல் இதுவும் சுவாரசியமான பாத்திரப் படைப்பு. நாசர், லிவிங்ஸ்டன், ஸ்ரீமன், செந்தில், வினுச்சக்ரவர்த்தி எனப் பல நடிகர்கள் படத்துக்கு உயிரூட்டியிருந்தனர்.    

என்னதான் கிராமத்துக் கட்டுப்பாட்டுக்கு அடங்கி ஒடுங்கி நடந்த பெண்ணாக இருந்தாலும் காதல் தோன்றிவிட்டால் அவர் காதலுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் துணிவு பெற்றிடுவார் என்னும் கருத்துக்குப் படம் வலுச்சேர்த்திருந்தது. இசை தேவா. பாடல்கள் சில முணுமுணுக்கவைக்கும். சிநேகாவின் கள்ளம்கபடமற்ற அழகை ஆனந்தின் கேமரா வாழையிலை விருந்தாகத் திரையில் காட்சி படுத்தியிருந்தது. படம் போரடிக்காமல் செல்கிறது. இடையிடையே பாடல்கள் அடிக்கடி வந்தபோதும்,  அவையும் காட்சி விருந்தாக அமைவதால் பார்க்க முடிகிறது. படத்தின் பெண் கதாபாத்திரங்கள் சுவாரசியமானவை. வில்லத்தனமான தந்தை  தரும் தண்டனை விநோதமானது. மகள் காதலனுக்கு எழுதிய கடிதத்தை ஊரறிய வாசிக்கச் செய்யும் காட்சி அதற்கோர் உதாரணம். அந்தக் கடிதத்தை வாசிக்கும் குட்டி தங்கை பார்வையாளர்களை ஈர்த்துவிடுவார். குடும்பக் கடமை இருந்த இருவருக்கிடையே காதல் முளைத்தால் கடமை என்னவாகும், காதல் என்னவாகும் என்ற கேள்விக்கெல்லாம் விடையாக இருக்கும் படம். வழக்கமான பொழுதுபோக்குப் படம் என்றபோதும், அந்த எல்லைக்குள் மாறுபட்ட காட்சியனுபவத்தைத் தந்துவிட வேண்டும் என்ற இயக்குநரின் முனைப்பு படத்தை மாறுபட்டதாக்கிவிடும். நேரம் கிடைத்தால் தாராளமாக ஒருமுறை பார்க்கக்கூடிய படம் விரும்புகிறேன்.  

வெள்ளி, அக்டோபர் 08, 2021

ஜெயமோகனுக்குச் சிறப்புச் சேர்க்குமா பொன்னியின் செல்வன்?

 

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் தமிழ் இலக்கிய உலகில் பெரும்பாலானோரால் வாசிக்கப்பட்ட நாவல். தமிழ் சினிமாவின் மாஸ்டர்களில் ஒருவராக நம்பப்படும் மணிரத்னம் பொன்னியின் செல்வன் நாவலைப் படமாக்கப் போகிறார் என்ற செய்தி வெளியான நாள் முதலாக, அது தொடர்பான ஒவ்வொரு தகவலும் பிரேக்கிங் நியூஸாகிறது.  அண்மையில் பொன்னியின் செல்வன் திரைப்பட முதல் பாகத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது என்பதால் ரசிகர்கள் உற்சாகமாகியிருக்கிறார்கள். அடுத்த ஆண்டில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இன்னொரு சுவாரசியம் அதன் வசனகர்த்தாவான இலக்கிய உலக ஜாம்பவான் ஜெயமோகன்.  அவரது இடம் இந்தப் படத்தில் என்னவாக இருக்கப் போகிறது?

வியாபாரரீதியில் வெற்றிபெறாத கடல் திரைப்படத்துக்கு ஏற்கெனவே கதை வசனம் எழுதிய அனுபவமுள்ள ஜெயமோகன் மீண்டும் மணிரத்னத்துடன் கைகோக்கிறார். இந்தப் படம் தொடர்பாக அளித்திருக்கும் ஒரு பேட்டியில் சினிமாவுக்கு ஏன் எழுதுகிறீர்கள் என்னும் கேள்விக்கு, கம்பனுக்கு சடையப்ப வள்ளல் எனக்கு சினிமா என்று வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார் அவர். மேலும், தமிழில் அதிகமாக எழுதிவரும் தனக்கு இதுவரை கிடைத்த காப்புரிமைப் பணத்தைவிட இரு மடங்கு ஊதியம் பொன்னியின் செல்வனில் கிடைத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

பொன்னியின் செல்வன் திரை வடிவத்துக்குப் பின்னணியில் ஒரு வரலாறு இருக்கிறது. இயக்குநர் மகேந்திரனைப் பொன்னியின் செல்வன் திரைக்கதையை எழுதவைத்தவர் எம்.ஜி.ஆர். ஆனால், அவரால் அதைப் படமாக்க முடியவில்லை. மக்கள் திலகம் கைக்குத் தப்பிய அந்தப் படம் மணி ரத்னம் கையில் அகப்பட்டிருக்கிறது. அப்படியான பொன்னியின் செல்வனைத் திரைக்கதையாக்கும் வாய்ப்பு ஜெயமோகனுக்குக் கிடைத்திருக்கிறது. அது அவரது இலக்கிய உழைப்புக்குக் கிடைத்த வெற்றி என்றே நம்புகிறார்கள் ஜெயமோகனின் வாசகர்கள். ஆனால், ஜெய மோகன் வாசகர்களுக்கு இந்தப் படத்தில் திருப்தி கிடைக்குமா?

தமிழில் ரப்பர், விஷ்ணுபுரம், பின் தொடரும் நிழலின் குரல், ஏழாம் குரல் எனத் தொடர்ந்து எழுதிக் குவித்துவரும் ஜெயமோகனின் மகத்தான சாதனை எனப் புகழப்படுகிறது மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்டு அவர் எழுதிய வெண்முரசு நாவல். 25 ஆயிரம் பக்கங்களைக் கொண்ட அந்த நாவலில் 2,000 கதாபாத்திரங்கள் இடம்பெற்றுள்ளன. கேட்கும்போதே மலைப்பாக இருக்கிறதே அதைப் படைக்க எவ்வளவு அசுர உழைப்பு தேவைப்பட்டிருக்கும்? அப்படி உழைத்த ஜெயமோகன் வசனத்தில் வளர்ந்துள்ள படம் பொன்னியின் செல்வன் என்றபோதும், ஒரு விஷயத்தைச் சிந்திக்க வேண்டும். ரத்னச் சுருக்கமான வசனங்களை அதுவும் மிக மிக அவசியப்பட்ட இடங்களில் மட்டுமே பயன்படுத்துபவர் மணி ரத்னம். ஆனால், பொன்னியின் செல்வனோ வரலாற்றின் கற்பனை விரிந்து பரவிக் கிடக்கும் தமிழின் மிகப் பெரிய நாவல். அதற்கு வசனமெழுதியவரோ 25 ஆயிரம் பக்கங்கள் கொண்ட நாவலை ஒருநாள் இடைவெளிவிடாமல் நாள்தோறும் அநாயாசமாக எழுதி முடித்தவர். மொத்தத்தில், மணிரத்னத்தில் வலிமை காட்சிகளில் வெளிப்படும்; ஜெயமோகனின் வலிமையோ சொற்களில் வெளிப்படும். எனும்போது, எழுத்தாளரான ஜெயமோகனுக்கு இந்தப் படத்தில் என்ன பெரிய வாய்ப்பு கிடைத்துவிடும் என ரசிகர்கள் முணுமுணுக்கிறார்கள்.   

சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் குமுதம் தீபாவளி சிறப்பிதழின் இலக்கியப் புத்தகத்தின் முகப்பில், புத்தருக்குத் தவம் எனக்கு எழுத்து எனப் போட்டு ஜெயமோகனைப் பற்றி எழுதியிருந்தார்கள். அதைத் தொடர்ந்து வெளியான மணிரத்னத்தின் கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் எழுத்தாளராக நடித்திருந்த மாதவன் ஒரு காட்சியில், “சில பேரு சொல்லுவாங்க எழுத்து ஒரு தவம்னு  பிறவியிலேயே ஒரு ஸ்பார்க் வேணும்னு சுத்தப் பொய்” என்று வசனம் பேசுவார். அந்த வசனத்தை எழுதியவர் சுஜாதா. அந்த வசனம் குமுதம் இதழில் ஜெயமோகன் கூறியதற்கான சுஜாதாவின் எதிர்வினையோ என்ற எண்ணத்தையே தரும். மணி ரத்னத்தின் ராஜாங்கத்தில் சுஜாதா இருந்த இடத்தில் இப்போது ஜெயமோகன் இருக்கிறார்.   

ஜெயமோகனுக்கு வெகுஜன எழுத்தாளரான சுஜாதா மீது பெரிய அபிமானம் இருக்க வாய்ப்பில்லை. பொழுதுபோக்கு இதழ்களில் எழுதிப் பெரும் வாசகப் பரப்பை அடைந்தவர் சுஜாதா என்றால், சிறு பத்திரிகையில் எழுதிப் பெரும்பாலானோரைச் சென்றடைந்த சுந்தர ராமசாமியின் தொடர்ச்சி எனத் தன்னை முன் வைப்பவர் ஜெயமோகன். என்ன ஆச்சரியம் என்றால், சுந்தர ராமசாமி எந்தப் படத்துக்கும் வசனம் எழுதியிருக்கவில்லை; அவரது தன்மானம் சினிமாவுக்காக வளைந்துகொடுக்கவில்லை. ஜெயமோகனோ சாமி இயக்கிய சிந்து சமவெளி திரைப்படத்தைக்கூட நழுவ விடவில்லை. அந்த வகையில் அவர் சுஜாதாவின் தொடர்ச்சி.

எனினும், திரைப்படத்தில் சுஜாதா தொட்ட உயரத்தை ஜெயமோகனால் தொட முடியவே இல்லை. சுஜாதாவை விடுங்கள் பாலகுமாரன் இடத்தைக்கூட ஜெயமோகனால் எட்டிப் பிடிக்க முடியவில்லை. சுஜாதா தீவிர இலக்கியவாதியல்லர் எனவே அவருக்கு சினிமா வசனங்கள் தீனி போட்டன ஆனால், ஜெயமோகன் தீவிர இலக்கியத்தில் அடியாழம் கண்டவர். அவரது யானைப் பசிக்குச் சோளப்பொறி போன்ற வாய்ப்பே சினிமா வாய்ப்பு வழியே கிடைக்கும். பிறகு எதற்கு சினிமாவுக்கு ஜெயமோகன் தேவைப்படுகிறார்? நீங்கள் எதைப் பற்றி வேண்டுமானாலும் அவரிடம் கேட்கலாம். எல்லாவற்றுக்கும் அவரிடம் கதை கிடைக்கும். மேலும், அவரது இலக்கியப் பங்களிப்பு காரணமாக இளைஞர்களிடையே அவருக்கு ஒரு பிரபலத் தன்மை கிடைத்திருக்கிறது. இப்போது சினிமாவை இளைஞர்கள்தான் அதிகமாகப் பார்க்கிறார்கள். ஜெயமோகன் வசனம் எழுதுகிறார் என்றால் அதன் சந்தை மதிப்பு கூடும் என சினிமாக்காரர்கள் நினைக்கிறார்கள். சினிமாவில் வசனம் எழுதினால், குறைந்த உழைப்பு அதிக வருமானம் என நினைக்கிறார் ஜெயமோகன். இதுதான் மணிரத்னம், ஜெயமோகன் கூட்டணிக்கான காரணம்.

மிக எளிய சொற்களைக் கொண்டு வசனம் எழுதினால் போதும் என்று சொல்லப்பட்டிருப்பதற்கும் அவர் கட்டுப்பட்டிருக்கிறார். சினிமாவில் வசனம் எழுத எதற்கு வெண் முரசு எழுதியவர் வேண்டும் என்று இறுமாப்போடு ஜெயமோகன் கேட்கவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். இலக்கியத்தில் அடங்க மறுக்கும் ஆசான்- இப்படித்தான் இவரது வாசகர்களால் இவர் அழைக்கப்படுகிறார்- சினிமாவில் அடக்கியே வாசிக்கிறார். இலக்கியத்துக்குத் தான் புரவலன் என்றபோதும் சினிமாவுக்குத் தான் புலவன்தான் என்னும் உண்மை அவருக்குத் தெரிந்திருக்கிறது. இல்லையென்றால், புத்தருக்குத் தவம் எனக்கு எழுத்து என்று சொன்ன ஜெயமோகனால் கம்பனுக்கு சடையப்ப வள்ளல் எனக்கு சினிமா என்று சொல்ல முடியுமா?

அவருக்கு அதிக ஊதியம் கிடைத்ததைப் பெருமையாக அவர் முன்வைத்தாலும் அவரது வாசகரைப் பொறுத்தவரை இருபது வயதுகளில் அவர் எழுதிய, ஒரு சிறு நாவல் என ஜெயமோகனே குறிப்பிடும் ரப்பர் தந்த திருப்தியில் பத்து சதவீத திருப்தியைக்கூட, அங்காடித் தெரு, நான் கடவுள் உள்ளிட்ட அவரது படங்கள் தந்திருக்கவில்லை என்கிறார்கள். எடுத்துக்காட்டாக ரப்பர் நாவலில் இடம்பெற்றுள்ள சில வாக்கியங்களை வாசித்தாலே வாசகர்களின் கூற்று உண்மை என்பது தெரிகிறது.

//ரப்பர் வந்த பெறவு மலையில் ஈரம் இல்ல, ஊற்று இல்ல.

இத்தனை செல்வம் எதற்கு மனிதனுக்கு? அது மனிதனை நல்ல வழியில் செல்லத் தூண்டாது… சுக போகங்களைக் குற்ற உணர்வு இல்லாமல் அனுபவிப்பது தான் மனிதமனம் கொள்ளும் வறட்சியின் எல்லை…

பிறர் உழைப்பிலும் உடைமையிலும் ஒரு அம்சத்தையாவது கவராமல் செல்வத்தை எப்படிக் குவித்துக்கொள்ள முடியும்? பணமும் பாபமும் பரஸ்பரம் பிரிக்க முடியாதவை.

ஒருபோதும் தன்னை மன்னித்துக்கொள்ள முடியாத செயலைச் செய்துகொண்டிருப்பதால்  உள்ளூர மனம் சொன்னது. ஆனால், குரூரமான வெறி எக்களிப்புடன் அந்த விளையாட்டைத் தொடர்ந்தார் வேறு வழி ஏதும் இருக்கவில்லை.

லாரன்ஸ் புன்னகையுடன், “ஆகாயத்துப் பறவைகள் விதைப்பதில்லை, அறுவடை செய்வதில்லை” என்றான்.

பிரான்ஸின் சட்டென்று புல்லரித்தான் எத்தனை அற்புதமான வரிகள்! இவை ஏன் இதுவரை புரியவில்லை? திரும்பத் திரும்பக் கேட்டும் ஏன் மனதைத் தாக்கவில்லை? ஒவ்வொன்றுக்கும் ஒரு மனோபாவம் வேண்டுமா? ஒரு சந்தர்ப்பம், ஒரு காலம் வரவேண்டுமா?அந்த வார்த்தைகளைப் பலமுறை மனதுக்குள் திரும்பத் திரும்பக் கூறினான். சொல்லச் சொல்ல அவை மந்திரம்போல் அவனுள் விரிந்தன. புதுப்புது அர்த்தங்களுடன் வளர்ந்தன. ஆகாயத்துப் பறவைகள்! ஆகாயத்தில் ஒரு பறவை!//

இப்படியெல்லாம் ஒரு நாவலில் அதுவும் முதல் நாவலில் எழுத முடிந்தது ஏனெனில் அவருக்கு எந்தக் கட்டும் இல்லை. ஆனால், சினிமாவில் அப்படியன்று அவர் பணத்துக்காக மட்டுமே வசனங்களை எழுதுகிறார்.  ஆனாலும், அவரால் சினிமாவைத் தவிர்க்க இயலவில்லை என்பதை இலக்கிய வாசகர் அவரது பலவீனமாகத்தான் கருதுவார். அவரது இலக்கிய வாசகர்களுக்கு அவருடைய திரைப்படப் பங்களிப்பு எப்போதுமே திருப்தியை அளிக்கப்போவதில்லை. அப்படி இருக்கும்போது அதற்கு பொன்னியின் செல்வன் படமும் விதிவிலக்காக இருக்கப்போவதில்லை. பொன்னியின் செல்வன் மணி ரத்னம் காட்சிகளின் பிரம்மாண்டத்தால் கட்டியெழுப்பும் பெரும் மாளிகை அங்கே வசனங்களால் சிறு சிறு தீட்டல்களைத் தரும் வாய்ப்பு மட்டுமே ஜெயமோகனுக்கு இருக்கிறது.  ஆக, ஜெயமோகனுக்காக வரும் ரசிகருக்கு பொன்னியின் செல்வன் ஏமாற்றத்தையே தரும் என்பது தவிர்க்க முடியாத உண்மை.   இலக்கியத்தில் அவர் வாழை மரம் என்றபோதும் சினிமாவில் அவர் ஒரு ரப்பர் மரமே.

வியாழன், செப்டம்பர் 30, 2021

கதாநாயகர் பிடியிலிருந்து விலகிடுமா தலித் சினிமா?

நடிகர் சூர்யாவின் பிறந்த நாளான ஜூலை 23 அன்று அவர் தான் நடிக்கும் ஜெய் பீம் என்னும் படத்தின் போஸ்டரைத் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதுவரை சூர்யா 39 எனத் தற்காலிகமாகப் பெயரிடப்பட்டிருந்த படத்தின் பெயரையும் போஸ்டரையும் ரசிகர்களுக்காகப் பரவசத்துடன் பகிர்வதாகவும் தெரிவித்திருந்தார். அந்த டிவிட்டர் பதிவைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களது ஒட்டுமொத்தக் கவனமும் ஜெய் பீம் மீது திரும்பியது. ஏற்கெனவே சூர்யா நடித்து அமேசான் பிரைமில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது. அது திராவிட அரசியல் பேசியதாகச் சொல்லப்பட்டது. கடந்த முறை சூர்யாவின் திரைப்படம் திராவிட அரசியல் பேசி வெற்றிபெற்றதாகச் சொல்லப்பட்ட நிலையில் இம்முறை தலித் அரசியலைப் பயன்படுத்தி வெற்றிபெற முயல்கிறதோ என்னும் எண்ணத்தை அந்த போஸ்டர் ஏற்படுத்தியது. சூரரைப் போற்று திரைப்படம் போலவே ஜெய் பீம் திரைப்படமும் அமேசான் பிரைமில் அதுவும் தீபாவளி நாளன்று வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஒரு படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வைத்து அந்தப் படத்தின் கதையையோ அந்தப் படம் விவாதிக்கும் விஷயத்தையோ முடிவுசெய்திட முடியாது. ஜெய் பீம் பட போஸ்டரில் வெளிப்பட்டிருக்கும் சூர்யாவின் தோற்றத்தை வைத்து அவர் ஒரு வழக்கறிஞராக நடித்திருக்கலாம் என ஊகிக்க வாய்ப்புள்ளது. ஏழை எளியவர்களுக்காக வாதாடும் வழக்கறிஞராக அவர் இருக்கலாம். நீதியரசர் சந்த்ரு வழக்கறிஞராக இருந்தபோது, இருளர் பெண் ஒருவருக்காக 1990களில் நடத்திய சட்டப் போராட்டத்தின் அடிப்படையிலான படம் எனவும் தகவல்கள் கூறுகின்றன. அவற்றை எல்லாம் நாம் படம் பார்த்துதான் தெரிந்துகொள்ள முடியும். ஆனால், படம் எப்படியிருக்கும் என்பது தொடர்பான ஓர் எதிர்பார்ப்பை அந்த போஸ்டர் உருவாக்கியது. ஒருவேளை அது தலித் அரசியலைப் பேசலாம் என ஊகிக்க அந்த போஸ்டர் இடம்கொடுத்தது. இது திட்டமிட்ட ஏற்பாடாக இருக்கலாம்.  

தொடர்ந்து எந்த வகைப் படங்கள் வெற்றிபெறுகின்றன என்பதைக் கவனித்து அப்படியான படங்களை சினிமாக்காரர்கள் உருவாக்குகிறார்கள். காதல் படங்கள் வெற்றிபெற்றால் காதல் படங்களாக வரும். இப்போது தலித் படங்களுக்கான காலம்.  பா.இரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் திரைப்படத்துக்குப் பின்னர் தலித் படங்கள் பற்றிய பேச்சு தமிழ்த் திரையுலகில் பரவலானது எனலாம். மெட்ராஸ் படத்தின் வெற்றியை அடுத்து இரஞ்சித் ரஜினியை இயக்க ஒப்பந்தமானார். கபாலி ரஜினி படமாக இருந்தபோதும், இதுவரை ரஜினி படம் எந்த அடையாளத்துக்குள்ளும் சிக்காமல் இருந்த நிலை மாறியது. ஏழை எளியவரின் நாயகனாக இருந்த ரஜினி தலித்துகளின் நாயகனாகப் பரிணமித்திருந்தார். கோட் சூட் அணிந்து, சோபாவில் அமர்ந்து ரஜினி சீன வில்லனுக்கு எதிராக, ”நான் முன்னுக்கு வருவதுதான் ஒனக்கு பிரச்சினைன்னா நான் முன்னுக்கு வருவேன்டா கோட் சூட் போடுவேன்டா” என்று பேசும் வசனமும் ரஜினி தலித் அரசியல் பேசுவதான தோற்றத்தைத் தந்தது. இந்த பாணி ரஜினிக்கும் பிடித்துப்போயிருக்கலாம் உடனே அடுத்த படத்தின் இயக்குநராகவும் இரஞ்சித்தை அமர்த்திக்கொண்டார். காலா படமாக்கப்பட்டது. இதிலும் தலித் அரசியலை நினைவுபடுத்தும் வசங்களும் காட்சிகளும் இடம்பெற்றிருந்தன. ரஜினியே தொடர்ந்து இரண்டு படங்களில் நடித்துவிட்டதால் தலித் படங்களுக்கான சந்தை இருப்பது உறுதிப்பட்டிருக்கலாம். அதைத் தொடர்ந்து பரியேறும் பெருமாள், அசுரன், கர்ணன் என வெளியான படங்களின் வெற்றி தலித் அரசியலுக்குப் பெரிய சந்தை இருக்கிறதோ என்ற எண்ணத்தைப் பரவலாக்கியிருக்கலாம்.

தமிழ்த் திரைப்படங்களில் தலித்துகள் பற்றிய சித்தரிப்பு இரஞ்சித் படங்களுக்கு முன்னர் இடம்பெற்றதே இல்லையா என்றால் இடம்பெற்றிருக்கிறது. இயக்குநர் கே.சுப்ரமணியம் இயக்கி, 1936இல் வெளியான பாலயோகினி திரைப்படத்திலேயே சாதி வேற்றுமைகளைச் சாடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இப்படத்தில் பட்டியலின வேலைக்காரர் வீட்டில் பார்ப்பனக் கைம்பெண் ஒருவர் அடைக்கலமாவார். இதனால் ஆத்திரம் அடைந்த வைதீகர்கள் பட்டியலின வேலைக்காரர் வீட்டைத் தீயிட்டுக் கொளுத்திவிடுவார்கள். இவரது இயக்கத்தில் 1939இல் வெளியான தியாகபூமி படத்தில் ஒடுக்கப்பட்டோருக்குக் கோயிலில் இடம்கொடுப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. 1987இல் மு.கருணாநிதி கதை வசனத்தில், சொர்ணம் இயக்கத்தில் ஒரே ரத்தம் என்றொரு படம் வெளியானது. இதிலும் ஒடுக்கப்பட்டோருக்கு இழைக்கப்படும் தீங்குகள், தீண்டாமை குறித்த காட்சிகள் உண்டு. இந்தப் படத்தில் இப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நந்தகுமார் என்னும் தலித் இளைஞனாக வேடமேற்றிருப்பார். இரட்டைக் குவளை தொடர்பான காட்சிகூட இடம்பெற்றிருக்கும்.

1985ஆம் ஆண்டில் சிறுமுகை ரவியின் இயக்கத்தில் விஜய்காந்த் நடிப்பில் வெளியான அலை ஓசை படத்தில் இளையபாரதி எழுதி இளையராஜா இசை அமைத்த ‘போரடடா ஒரு வாளேந்தடா’ என்னும் பாடல் அது வெளியான காலத்தைவிட அண்மைக் காலத்தில்தான் அதிகம் ஒலித்திருக்கிறது. எண்பதுகளில் இந்தப் படம் சராசரியான பொழுதுபோக்குப் படம் என்ற முத்திரையை மட்டுமே பெற முடிந்தது. இப்போது அந்தப் பாடலுக்குக் கிடைத்த கவனம் அப்போது கிடைத்ததா என்பது சந்தேகம்தான்.

இப்படி ஒடுக்கப்பட்ட, பட்டியலின மக்களின் துயரங்கள் தமிழ்த் திரைப்படங்களில் தொடர்ந்து பேசப்பட்டிருந்தாலும் தமிழில் தலித் சினிமா என்னும் பேச்சு இப்போதுதான் காதுகளில் ஒலிக்கிறது. இதுவரை பார்ப்பனரும் ஆதிக்கசாதியினருமான ஒடுக்கியவரே ஒடுக்கப்பட்டவருக்கான நியாயத்தைப் பேசிவந்தார். அந்த நிலைமை இப்போது மாறியிருக்கிறது. உள்ளேயிருந்த வரும் குரலாக இப்போது தலித்துகளின் குரல் வெளிப்படுகிறது. குனிந்து குனிந்து கிடந்தவர்கள் குமுறி எழுந்து கேள்வி கேட்கிறார்கள் என்பதுதான் மிகப் பெரிய வேறுபாடு. உதாரணமாக, காலா திரைப்படத்தில் ஹரிதாதா காலா வீட்டில் தண்ணீர் குடிக்காத காட்சிக்குப் புதியதொரு அர்த்தம் கிடைத்தது அதனால்தான்.    

அதே நேரத்தில் தலித் படங்கள் எனப் பெரிய அளவில் விதந்தோதப்பட்ட மெட்ராஸ், பரியேறும் பெருமாள், அசுரன், கர்ணன் ஆகிய படங்கள் கவனிக்கப்பட்ட அளவுக்கு தலித்துகளின் பிரச்சினைகளைப் பேசிய அம்ஷன்குமார் இயக்கிய மனுஷங்கடா, லீனா மணிமேகலை இயக்கிய மாடத்தி ஆகிய படங்கள் பெரிதாகக் கவனிக்கப்படவில்லையே?  அதில் சொல்லிக்கொள்ளும்படியான நாயகர்கள் இல்லாததாலா?

பா.இரஞ்சித் இயக்கிய சார்பட்டா பரம்பரை படத்தில், “இங்க வாய்ப்புன்றது நமக்குல்லாம் அவ்வளவு சீக்கிரம் கெடச்சிட்றது கெடயாது இது நம்ம ஆட்டம் எதுக்க நிக்கிறவன் கலகலத்துப்போகணும்… நீ ஏறி ஆடுடா கபிலா இது நம்ம காலம் பாத்துக்கலாம்” எனும் வசனம் ஒலிக்கும்போது, பின்னணியில் சுவரில் அம்பேத்கர் படம் போட்ட சுவரொட்டி தென்படும். இந்தப் பின்னணியுடன் பார்க்கும்போது, இந்தப் படத்துக்கு வேறொரு புரிதல் கிடைத்துவிடுகிறது. அதனடிப்படையில் இதை தலித் படம் எனச் சொல்லிவிட முடியுமா? இது குத்துச் சண்டை தொடர்பான சுவாரசியமான பொழுதுபோக்குப் படம்தானே?

இந்தப் பின்னணியில், சூர்யாவின் ஜெய் பீம் படத்தைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். இருளர் பின்னணியில் உள்ளதால் அது தலித்துகளின் வாழ்வியல் சிக்கல்களைப் பேசும் படமாக இருக்குமா? அப்படியிருப்பின் நல்லது. ஒருவேளை அம்பேத்கரின் சாயலைக் கொண்டு வணிக வெற்றியடைய முயலும் தந்திரமாக இருந்தால்? ஏனென்றால், அம்பேத்காரின் கொள்கைகளை விவாதிப்பதைவிட அவரது படம், புத்தர் சிலை, நீல நிற கோட் போன்ற அடையாளங்களை வைத்துக்கொண்டு பிரபல நடிகர்களைத் தீப்பொறி பறக்கும் வசனம் பேசவைத்தால் போதும் அது தலித் சினிமாகிவிடும், ரசிகர்களுக்கும் கிளர்ச்சி கிடைத்துவிடும் என்று சினிமாக்காரர்கள் நினைக்கிறார்களோ என்ற சந்தேகத்தைத் தவிர்க்க முடியவில்லை.  

கதாநாயகர்கள் எந்தச் சட்டையையும் அணிந்துகொள்வார்கள். அது நீல நிறமோ சிவப்பு நிறமோ கறுப்பு நிறமோ அது பற்றி அவர்கள் அக்கறை கொள்வதில்லை. அவர்களுக்குத் தேவை வெற்றி, அவ்வளவுதான். ஆனால், இரஞ்சித் போன்ற இயக்குநர்களின் விழைவு வெறும் வணிக வெற்றி மட்டும் இல்லையே, ஒடுக்கப்பட்டோரின் விடுதலையில்லையா? அப்படியான நோக்கத்தை நிறைவேற்றக்கூடிய படங்கள் உச்ச நட்சத்திரங்களின் நிழலில் ஒருபோதும் உருவாக மாட்டா. தலித்துகளின் வாழ்வியல் சிக்கல்களை, சமுதாயம் அவர்களை நடத்தும் விதத்தை விமர்சிக்கும் படங்களில் ரஜினிகாந்த், தனுஷ், சூர்யா போன்ற நடிகர்கள் நடிப்பது ஆரோக்கியமான விஷயம்தான். ஆனால், அந்த மட்டோடு நகர்ந்துவிட வேண்டும் அதை ஆராதனைக்குரிய விஷயமாகக் கருதி பெருமிதச் சுழலில் சிக்கிடுதல் நல்லதன்று. அப்படிச் சிக்கினால், மீண்டும் மீண்டும் ஹீரோயிஸப் படங்கள் உருவாகிவிடலாம். நாயக அம்சங்களில் மூழ்கித் தோய்ந்த படங்களை ஒடுக்குபவர் உருவாக்குவதைப் போல் ஒடுக்கப்பட்டவர் உருவாக்குவதும் ஆபத்தே. திரைப்படச் சக்கரம் அப்படியொரு சகதிக்குள் சிக்காமல் நகர்ந்துவிடுவதே நல்லது.

இன்மதி இணையதளத்தில் வெளியானது. 

ஞாயிறு, செப்டம்பர் 26, 2021

‘அண்ணாத்த’ அரசியல் எடுபடுமா?


தமிழ்த் திரையுலகில் மின்னிய நட்சத்திரங்களின் வரிசையில் முதன்மையான இடம் ரஜினி காந்துக்கு உண்டு. சற்றேறக்குறைய நாற்பது ஆண்டுகளாகத் திரைப்படங்களில் நாயகனாகவே நடித்தும், நடிகைகளுடன் டூயட் பாடியும் முத்திரை வசனங்களை முழங்கியும் வரும் ரஜினி காந்தின் படங்கள் இன்றுவரை பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தயாரிப்பாளர்களுக்கு லாபத்தைச் சம்பாதித்துக்கொடுத்துள்ளன என்றே சொல்லப்படுகிறது. சில சந்தர்ப்பங்களில் அவரது படங்கள் படுமோசமான தோல்வியைச் சந்தித்துள்ளன என்பதும் மறுக்கவியலா உண்மை. உதாரணங்களாக மாவீரன், ஸ்ரீராகவேந்திரர், பாண்டியன், உழைப்பாளி, அருணாசலம், பாபா, லிங்கா போன்ற படங்களைக் குறிப்பிட முடியும்.

ரஜினி காந்த் தனது படங்களை வெற்றிபெற வைக்கக் கையாண்ட உத்திகளில் ஒன்று அரசியல். ரஜினியின் நிஜ அரசியல் அவரது காலைவாரிவிட்டுவிட்டபோதும், அவரது சினிமா அரசியல் அவருக்குப் பெரிய அளவில் கைகொடுத்துள்ளது. அது இந்தத் தீபாவளி நாளில் வெளியாகவுள்ள அண்ணாத்த படத்தைக் கரைசேர்க்குமா? ஏன் இப்படி ஒரு கேள்வி என்றால், கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அதாவது, 1996இல் வெளியான முத்து திரைப்படம் தொடங்கி இதுவரை ரஜினி காந்த் தான் அரசியலில் ஈடுபடப்போவதாக இலைமறைகாயாகப் படங்களில் உணர்த்தியோ திரைப்படங்கள் வெளியாகும் சமயத்தில் மேடைகளில் பேசியோ அவற்றை வெற்றிக்கோட்டை நோக்கி நகர்த்திவந்தார். முதன்முறையாக இப்போது அவர் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்று உறுதியாக அறிவித்த நிலையில் அவரது படம் ஒன்று வெளியாகப் போகிறது. இந்தச் சூழலில் அரசியலுக்கும் அவருக்கும் முகிழ்த்த உறவிழை குறித்த நினைவை ஓட விடுவோம்.    

கே. பாலசந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் (1975) திரைப்படத்தில் அறிமுகமான நடிகர் ரஜினிகாந்த் இரண்டு மூன்று ஆண்டுகளில் தமிழகத்தின் முன்னணி நடிகர் என்னும் இடத்தைக் கடந்து தமிழ்நாட்டின் முதன்மை நட்சத்திரமானார். திரைப்படங்களில் கிடைத்த தொடர் வெற்றி காரணமாகத் தமிழ்நாட்டின் பட்டிதொட்டி எங்கும் அறியப்பட்ட பெயரானது ரஜினி காந்த். எம்.ஜி.ஆர். ஆட்சியைப் பிடித்த காலத்தில் திரைத்துறையில் புகழ்க் கொடியைப் பறக்கவிட்ட ரஜினி காந்த் மீது அரசியல் காற்றுவீசத் தொடங்கியது எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின்னர்தான்.

1987இல் ஆர்.எம்.வீரப்பன் தயாரித்த ஊர்க்காவலன்  திரைப்பட வெற்றிவிழாவின் போது, ‘வரவிருக்கும் தேர்தலில் ஜானகி எம்.ஜி.ஆர். அவர்கள் வெற்றிபெற வாழ்த்துகிறேன்’ என்னும் பொருள் தொனிக்கும் வகையில் அவர் பேசியது நாளேடுகளில் செய்தியானது. இப்படி மேடையில் அரசியல் பேசினாலும், அதற்கு அடுத்த ஆண்டில் 1988இல் வெளியான ராஜாதி ராஜா திரைப்படத்தில், “எனக்குக் கட்சியும் வேணாம் ஒரு கொடியும் வேணாம்” எனப் பாடி நடித்திருந்தார் அவர். ஜானகி எம்.ஜி.ஆரின் அரசியல் வெற்றிக்கு வாழ்த்துத் தெரிவித்திருந்த ரஜினியின் பேச்சு அரசியல்ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் ஜானகி எம்.ஜி.ஆருக்கு எதிர்நிலையிலிருந்த ஜெயலலிதாவுக்கு உவப்பாக இருந்திருக்கவில்லை. மேலும், 1989 சட்டமன்றத் தேர்தலில் ஜானகி எம்.ஜி.ஆர். தலைமையிலான அதிமுக படுதோல்வியைச் சந்தித்தது. ஜெயலலிதா தலைமையிலான அதிமுக குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது. இதனால் ரஜினியின் வாழ்த்து ஜெயலலிதாவின் பார்வையில் கேலிக்கு ஆளானது. இதுதான் ஜெயலலிதா, ரஜினி இருவருக்குமிடையேயான மோதலுக்குத் தொடக்கப்புள்ளியாக இருக்கக்கூடும். 

அதைத் தொடர்ந்து 1989 தீபாவளி நாளில் வெளியான மாப்பிள்ளை திரைப்படத்தில் ரஜினிகாந்த் பணத் திமிர் படைத்த மாமியாரின் கொட்டத்தை அடக்கும் மாப்பிள்ளையாக நடித்திருந்தார் என்பதை நினைவுபடுத்திப் பாருங்கள். இந்தப் படத்தின் பெரிய அளவிலான வெற்றியே ரஜினியின் ‘சினிமா வெற்றிக்கு அரசியல் முலாம்’ என்னும் உத்திக்கு உந்து சக்தியைக் கொடுத்திருக்க வேண்டும். திரைக்கு வந்து சுமார் பதினைந்து ஆண்டுகளைக் கடந்துவிட்ட நிலையில் அவர் வேறொரு திசைக்கு நகர வேண்டிய தேவையும் எழுந்தது. அதற்கு உதவியது அரசியல்.   

1990இல் வெளியான அதிசயப் பிறவி என்னும் திரைப்படத்தில் ரஜினியைக் காட்டி, நடிகர் சோ, “பூவுலகில் இந்த முகத்துக்கு ஏகப்பட்ட மதிப்பு இவரைப் போன்றவர்கள் போட்டிக்கு வந்துவிட்டால் என்ன செய்வது என்று அரசியல்வாதிகளே அஞ்சி நடுங்குகிறார்கள்” என வசனம் பேசுவார். அரசியலில் ஈடுபடுவதில் ஆர்வமே இல்லாத ரஜினி காந்த் இப்படியான வசனங்களை ஏன் அனுமதித்தார்? ரசிகர்களை உசுப்பேற்றி அவர்களைத் தன் பிடியிலேயே வைத்திருக்க இத்தகைய வசனங்களும் காட்சிகளும் அவருக்கு உதவின. எதையும் வெளிப்படையாகச் சொல்லாமல் எல்லாம் ஆண்டவன் செயல் எனப் பூடகமாகச் சொல்வதன் மூலம் அவரால் தன் ரசிகர்களை எப்போதும் பரவச நிலையிலேயே வைத்திருக்க முடிந்தது.

1991 ஆம் ஆண்டில் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்ட ஜெயலலிதா வசித்த போயஸ்கார்டன் பகுதியிலேயே ரஜினிகாந்தும் குடியிருந்துவந்தது இந்த அரசியல் விளையாட்டுக்கு மிகத் தோதாகிப்போனது. முதலமைச்சர் வீட்டுக்கு வரும்போதும் போகும்போதும், போக்குவரத்து நிறுத்திவைக்கப்படுவது வாடிக்கையாக இருந்தது. ரஜினி என்னும் திரை நட்சத்திரம் இந்த விவகாரத்தை வெறுமனே கடக்க இயலாமல் தடுமாறினார். ஒருமுறை அவர் காரிலிருந்து இறங்கிச் செல்ல ஊடக வெளிச்சத்தில் அது சட்டென்று தமிழ்நாட்டுக்கான செய்தியானது. இது முதலமைச்சர் ஜெயலலிதாவின் பார்வைக்கும் சென்றிருக்கும். இப்படியான சம்பவங்களால் ரஜினி அரசியல் துறையில் குறுக்கீடு நிகழ்த்தியது காலத்தின் கட்டாயமானது. அந்தக் காலத்தில் வெளியான மன்னன், பாண்டியன், அண்ணாமலை போன்ற படங்களில் ரஜினிகாந்த் பேசிய முத்திரை வசனங்களுக்கு அரசியல் சாயம் பூசி மகிழ்ந்தனர் ரஜினி ரசிகர்கள். முத்தாய்ப்பாக 1993 இல் வெளியான உழைப்பாளி படத்தில், “நேத்து என்னைக் கூலியா வச்சிருந்தான்; இன்னக்கி நடிகனாக்கியிருக்கான்; நாளக்கி…” என்று வசனம் பேசிச் சிரிப்பார் ரஜினி. ரசிகர்கள், தலைவா நாளக்கி நீ முதல்வர் என்று சொல்லி பூரிப்படைந்தார்கள். இவையெல்லாம் ரஜினிகாந்த் செவிகளையும் சென்றடைந்திருக்க வேண்டும்.

தனிப்பட்ட முறையில் அரசியல் தனது சுபாவத்துக்கு ஒத்துவராதது என்பதை ரஜினி அறிந்திருந்தபோதும், அரசியல் முலாம் பூசிய வசனங்கள் படங்களை வெற்றிபெற வைக்க உதவும் என்னும் நம்பிக்கையில், அவற்றை ஓர் உத்தியாகத் தொடர்ந்து பயன்படுத்தத் தொடங்கினார் அவர். 1995ஆம் ஆண்டு ஜூலை 14 அன்று நடைபெற்ற பாட்ஷா பட விழாவில் வெடி குண்டு கலாச்சாரம் குறித்துப் பேசியபோது, சட்டென்று அனைவரது பார்வையும் அவர்மீது விழுந்தது. இதைத் தொடர்ந்து ஜெயலலிதாவுக்கும் அவருக்குமான உரசல் அதிகரித்தது.  அதன் பின்னர் 1996ஆம் ஆண்டுக்கான தேர்தலின்போது, ரஜினிக்கான அரசியல் பிரவேச வாய்ப்புகள் பிரகாசமாக இருந்ததாக ரஜினி அரசியல் ஆலோசகர் என்ற நிலையிலிருந்த சோ ராமசாமி முதலான அரசியல் பார்வையாளர்கள் கருதினர். ஆனால், ரஜினியோ அந்த வாய்ப்பில் பிரமாதமாகச் சொதப்பினார். அரசியலில் இறங்காமல், குரல் கொடுத்ததுடன் ஒதுங்கி நின்றுவிட்டார். அதன் பின்னர் ரஜினி காந்த் நடித்த படங்களின் எண்ணிக்கையும் பெருமளவில் குறைந்துவிட்டது. ஆண்டுக்கு இரண்டு மூன்று படங்கள் வெளிவந்த காலம் போய் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு படம் வெளியாகத் தொடங்கியது.

ஐம்பது வயதைத் தொட்ட நிலையில், அதுவரை திரைப்படங்களில் வசனம் பேசிய ரஜினி காந்த் மேடைகளில் வசனம் பேசத் தொடங்கினார். பாமக எதிர்ப்பு, காவிரி நீர் பிரச்சினை, இலங்கைத் தமிழர் பிரச்சினை, தூத்துக்குடி துப்பாக்கி சம்பவம் வரை அரசியல் நிகழ்வுகள் பற்றிக் கருத்துகள் தெரிவிப்பார். அதைத் தொடர்ந்து அவரது படங்களும் வெளியாகும். ஆகவே, ஊடகங்கள் ரஜினி காந்தின் அரசியல் பிரவேசம் குறித்த ஊகங்களைக் கட்டுரைகளாக எழுதித் தள்ளின. எப்படியும் ரஜினி காந்த் அரசியலுக்கு வந்துவிடுவார் என நம்பிய அவரது ரசிகர்கள் அவரது படத்தைத் தொடர்ந்து பார்த்துவந்தனர்.

ரஜினியின் இந்த உத்தி எல்லா நேரத்திலும் அவரைக் காப்பாற்றியது என்று சொல்ல முடியாது. ஆனாலும், எல்லா நேரத்திலும் ரஜினி இந்த உத்தியை பயன்படுத்துவதை வாடிக்கையாக்கினார். ஏனெனில், தான் நேரடி அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்பதை அறிவிக்காமல், உள்ளங்கையைப் பொத்தியபடியே பூடகமாக வைத்திருந்தார் ரஜினிகாந்த். இப்போது முதன் முறையாக அரசியல் தொடர்பாகக் கையைவிரித்துள்ள நிலையில் அவரது படமான அண்ணாத்த திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கு முன்னரான ஒரு சூழல் இது. அரசியல் என்னும் சுழலில் மாட்டிக்கொள்ளும் முன்னர் ரஜினி என்ற நடிகருக்கு இருந்த அதே வரவேற்பு இப்போதும் உள்ளதா என்பதை அண்ணாத்த வெளிப்படுத்த வாய்ப்புள்ளது. இப்போதுகூட முற்றுப்புள்ளி வைத்த அரசியல் அரசியல் நாடகத்துக்கு ஒரு காற்புள்ளிவைத்து, சிறு கல்லெறிந்து பார்க்கிறார். வழக்கம்போல் ரஜினியிடம் ரசிகர்கள் ஏமாறுவார்களா, ரஜினி ரசிகர்களிடம் ஏமாறுவாரா? அண்ணாத்த ஒரு பாட்ஷாவாகுமா பாபாவாகுமா என்பதைப் பொறுத்தது அது.

இன்மதி இணையதளத்துக்காக எழுதி அதில் வெளியான கட்டுரை. 

புதன், ஆகஸ்ட் 25, 2021

ஏழைகளின் இதயத்தில் வீற்றிருக்கும் மதுரைக்காரன்

விஜயகாந்த் தான் நடித்த இரண்டாம் படத்தில்தான் முதலில் கதாநாயகனானார். அந்தப் படம் ‘அன்னக்கிளி’ ஆர் செல்வராஜ் இயக்கிய ‘அகல் விளக்கு’. அது 1979 டிசம்பர் 4 அன்று வெளியானது. அந்தப் படத்தில் அவரது கதாபாத்திரத்தின் பெயர் தனுஷ்கோடி. கதைப்படி மக்களுக்கு நல்லது செய்தல் வேண்டும் என்ற துடிப்புள்ள இளைஞரான அவர் தேர்தலில் நின்று வெல்வார். மதுரை நகரத்தின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். அவரது குடும்பத்தினர் அவர் பெயரைப் பயன்படுத்தி லஞ்ச, ஊழலில் ஈடுபட்டு அதிகமாகச் சொத்து சேர்த்துவிடுவார்கள். இறுதியில் இதை அறிந்த விஜயகாந்த் தனது நேர்மையை நிரூபிக்கச் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பார். திரைப்படம் என்பதால் அவருடைய குடும்பத்தினர் தங்கள் தவற்றை உணர்ந்து திருந்திவிடுவார்கள். விஜயகாந்த் மீதான கறை துடைக்கப்பட்டுவிடும். இந்தப் படத்தின் ‘ஏதோ நினைவுகள்…’ பாடல் இன்றளவும் பலரது விருப்பத் தேர்வில் ஒன்று. இந்தப் படத்தைப் பார்க்கும்போது வாழ்க்கைதான் எவ்வளவு விசித்திரமானது என்று தோன்றுகிறது. ‘மாந்தோப்புக் கிளியே’ படத்தை இயக்கிய எம்.ஏ.காஜாவின் ‘இனிக்கும் இளமை’ என்னும் படத்தில் வில்லனாக அறிமுகமானார் விஜயகாந்த். அந்தப் படத்தின் நாயகன் சுதாகர். இதே சுதாகர் ரஜினிகாந்த் நடித்த ‘அதிசயப் பிறவி’யில் காமெடி வில்லனாக நடித்தார்.

அடுத்து அவரது அறிமுகப்படம் என்றே பலராலும் இன்றளவும் நினைவுகூரப்படும் ஒரு படம் என்றால் அது, ‘தூரத்து இடிமுழக்கம்’. கே. விஜயன் தயாரித்து இயக்கிய, மீனவர் வாழ்வை மையப்படுத்தியிருந்த இந்தப் படம் அப்போதைய மாற்றுப்பட முயற்சி வகையிலானது. படத்துக்கு இசையமைத்தவர் சலீல் சௌத்ரி. படத்தின் பாடல்களை எழுதியிருந்தவர் கு.மா.பாலசுப்ரமணியன். 1981-ல் டெல்லியில் நடைபெற்ற சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட படம் இது. அங்கே திரையிடப்பட்ட மற்றுமொரு தமிழ்ப் படம் பாரதிராஜா இயக்கிய ‘நிழல்கள்’. 


இதற்கு அடுத்து வெளியான ‘சட்டம் ஒரு இருட்டறை’தான் விஜயகாந்தின் முதல் வெற்றிகரமான படம் எனலாம். நடிகராக இருந்த விஜயகாந்தை நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்த்திய படம் இது. இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் அறிமுகப்படமான இது அடிப்படையில் பழிவாங்கும்தன்மையிலானது. சங்கர் கணேஷ் இசையில் ஒலிக்கும் ‘தனிமையிலே ஒரு ராகம் ஒரு தாளம்’ பாடல் அந்தக் காலக் காதல் இன்னிசையின் பெருமையை இன்றும் காதோடு காதாகச் சொல்லிவருகிறது.  இப்படத்தின் இந்தி ரீமேக்கான ‘அந்தா கானூன்’ படத்தின் மூலமாகத் தான் ரஜினிகாந்த் இந்திப் படவுலகில் நுழைந்தார். இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘நெஞ்சிலே துணிவிருந்தால்’, ‘சாதிக்கொரு நீதி’, ‘பட்டணத்து ராஜாக்கள்’, ‘ஓம் சக்தி’, ‘சாட்சி’, ‘நீதியின் மறுபக்கம்’, ‘வசந்தராகம்’ எனத் தொடர்ந்து எஸ்.ஏ.சந்திர சேகரின் படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

ஏவி.எம். தயாரிப்பில், இராம நாராயணன் இயக்கத்தில் இவர் செஞ்சட்டை நாயகனாக நடித்த, ‘சிவப்பு மல்லி’ தான் விஜயகாந்தை ஏழைகளின் வேந்தனாக்கியது. 1981 ஆகஸ்ட் 15 அன்று வெளியான இப்படம் தொழிலாளர் வர்க்கத்தில் ஒருவராக அவர்களுடைய நம்பிக்கையக்குரியவராக இவரை மாற்றியது. வைரமுத்துவின் வரிகளில் இடம்பெற்ற ‘எரிமலை எப்படிப் பொறுக்கும்…’ பாடல் அனல்கக்கும் ஒன்று என்றால், இதே படத்தில் இடம்பெற்ற ‘ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்’ பாடல் காதல் களிப்பின் உச்சம். இந்தப் படத்தின் இசையும் சங்கர் கணேஷ்தான். சந்திரசேகருக்கு அடுத்தபடியாக விஜயகாந்தை அதிகப் படங்களில் இயக்கியவர் அநேகமாக இயக்குநர் இராமநாராயணன்தான். ‘சிவப்பு மல்லி’ தொடங்கி, ‘சபாஷ்’, ‘தண்டனை’, ‘கரிமேடு கருவாயன்’, ‘வீரன் வேலுத்தம்பி’ எனப் பல படங்களில் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ளனர். மு.கருணாநிதியின் வசனத்தை ‘வீரன் வேலுத்தம்பி’, ‘சட்டம் ஒரு விளையாட்டு’ ஆகிய படங்களில் பேசி நடித்துள்ளார். விஜயகாந்தின் தொடக்க காலத்தில் பெரும்பாலான படங்களுக்கு சங்கர் கணேஷ்தான் இசையமைத்திருக்கிறார். ‘ஆட்டோ ராஜா’  படத்தில் இவர் இசையமைத்த ‘மலரே என்னென்ன கோலம்’ பாடல் காதல் தோல்விப் பாடல்களின் தோரணத்தில் எந்நாளும் பசுமையைப் பரப்பிக்கொண்டேயிருக்கும். இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘சங்கத்தில் காணாத தமிழை’ பாடலுக்கு மாத்திரம் இசை இளையராஜா.   

ஏழைப் பங்காளனாகவும் கோபக்கார இளைஞனாகவும் தொடர்ந்து ஆக்‌ஷன் படங்களிலும் புரட்சிப் படங்களிலும் நடித்துக்கொண்டிருந்த விஜயகாந்தின் மென்மையான பக்கத்தை வெளிப்படுத்திய, அவரைப் பாசக்கார மனிதனாக ஆக்கிய படம் விசுவின் ‘டௌரி கல்யாணம்’. இதற்கு இசையமைத்திருந்தார் எம்.எஸ்.விஸ்வநாதன். இதில் இடம்பெற்றிருந்த ‘ஸ்ரீராமன் ஸ்ரீதேவி கல்யாண வைபோகம்’ பாடலும் இனிமையானது. 1984 -ல் 18 படங்கள் 85 -ல் சுமார் 14 படங்கள் விஜயகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ளன என்பது ஒரு சாதனைதான்.

இந்தக் காலகட்டத்தில் வெளியான ‘வெள்ளைப் புறா ஒன்று’ என்ற படத்தில் ஒரு காட்சியில் அநேகமாக அது விஜயகாந்த் அறிமுகமாகும்போதாக இருக்கலாம், அவரது கழுத்தில் அணிந்திருக்கும் அரிவாள் சுத்தியல் டாலர் அணிந்த சங்கிலி சட்டையைத் தாண்டி தென்பட்டு ரசிகர்களைப் புரட்சி நீரில் நனைக்கும். எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியானதொரு படம் ‘வெற்றி’. இதில் எதற்கெடுத்தாலும் பந்தயம் கட்டி வெற்றிபெறுபவராக விஜய காந்த் நடித்தார். இந்தப் படத்தில் சிறுவன் விஜயகாந்தாக அறிமுகமானார் நடிகர் விஜய. பின்னாளில் நடிகர் விஜயின் வளர்ச்சிக்காக செந்தூரப்பாண்டியில் நடித்துக்கொடுத்தவர் இவர். ‘வெற்றி’ தெலுங்கில் சிரஞ்சீவி நாயகனாக நடிக்க மறு ஆக்கம் செய்யப்பட்டது. அது தமிழில் ‘பந்தயம்’ என்னும் பெயரில் டப்பிங் ஆனது.

1984 தீபாவளி நாளில்தான் விஜயகாந்தின் பெரிய வெற்றிப்படமான ‘வைதேகி காத்திருந்தாள்’ வெளியானது. வ.வே.சு. ஐயரின் ‘குளத்தங்கரை அரசமரம்’ கதையை நினைவூட்டும் இந்தப் படத்தில் பரிமளம் என்றொரு நடிகை விஜயகாந்தின் முறைப்பெண்ணாக வேடமேற்றிருந்தார். அதன் பின்னர் அவரை எந்தப் படத்திலும் பார்த்ததாக நினைவில்லை. இந்தப் படத்தை இயக்கிய ஆர்.சுந்தர்ராஜனின் ‘அம்மன் கோவில் கிழக்காலே’ படமும் இதைப் போலவே பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்துக்காகச் சிறந்த நடிகருக்கான ஃபிலிம்பேர் விருதை இவர் பெற்றுள்ளார். இரண்டு படங்களிலும் இளையராஜாவின் இசையிலான பாடல்கள் படத்தின் வெற்றிக்குப் பெரிதும் உதவின. இதே போல் பாடல்களுக்குப் பெயர்பெற்ற விஜயகாந்தின் இன்னொரு படம் கே.ரங்கராஜ் இயக்கிய ‘நினைவே ஒரு சங்கீதம்’.

சிறுமுகை ரவி இயக்கிய ‘அலை ஓசை’ படத்தின் ‘போராடடா ஒரு வாளேந்தடா’ பாடல் ஒடுக்கப்பட்டோரின் இதய கீதமாக இப்போதும் ஒலிக்கிறது. பாலு ஆனந்தின் இயக்கத்தில் இவர் நடித்த ‘நானே ராஜா நானே மந்திரி’ நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டது. ஆனால், அதன் நகைச்சுவையைவிட ரசிகர்கள் மனத்தில் நிற்பது ‘மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்’ என்னும் காதல் பாடல்தான்.

இருபது படங்களுக்கும் மேலாகக் காவல் துறை அதிகாரியாக இவர் நடித்துள்ளபோதும் ‘ஊமை விழிகள்’ படத்தின் டிஎஸ்பி தீனதயாளன் கதாபாத்திரம் மிகச் சிறப்பானது. வழக்கமான வசனங்களை அள்ளிவீசாமல் மிகவும் இயல்பாகத் தனது நடிப்பை அதில் விஜய காந்த் தந்திருப்பார். திரைப்படக் கல்லூரி மாணவர்களின் உழைப்பில் உருவான இந்தப் படத்துக்கு விஜயகாந்த் பெரிய ஒத்துழைப்பை நல்கியிருக்கிறார். உண்மையில் இந்த வேடத்தில் முதலில் நடிக்கவிருந்தவர் நடிகர் சிவகுமார் தான் என்கிறார்கள். பத்திரிகையாளர்களின் உணர்வை வெளிப்படுத்திய இப்படத்தின் ‘தோல்வி நிலையென நினைத்தால்’ பாடல் தளர்வுற்றவர்களின் ஊக்க மருந்தாக இன்றுவரை செயல்படுகிறது. 

விஜயகாந்தின் நூறாம் படம் ‘கேப்டன் பிரபாகரன்’. படத்தின் பெயரே அவரது தமிழாதரவு நிலையைச் சொல்லும். பொதுவாக நூறாம் படம் பெரிய நடிகர்களுக்குக் காலைவாரிவிடும் என்பது தமிழ்த் திரைப்பட வரலாறு. ஆனால், இந்தப் படம் வெள்ளிவிழா கண்டது புதிய வரலாறு. விஜயகாந்த் நடித்த ‘மனக்கணக்கு படத்தில் கௌரவ வேடத்தில் நடித்திருக்கிறார் கமல்ஹாசன். சிவாஜி கணேசனுடன் ‘வீர பாண்டியன்’ படத்திலும் பிரபுவுடன் ‘காலையும் நீயே மாலையும் நீயே’ படத்திலும் இணைந்து நடித்துள்ளார். கா.நீ.மா.நீ. படத்தில் ‘தூங்காத கண்ணின்று ஒன்று’ பாடலை மீண்டும் பயன்படுத்தியிருப்பார்கள். இவர் நடித்த, டி.ராஜேந்தர் பாடல்களை எழுதி இசையமைத்த ‘கூலிக்காரன்’ படத்தில் முதலில் நடிப்பதற்காகப் பேசப்பட்டவர் ரஜினிகாந்த். ஆனால், அப்போது அவர் கேட்ட சம்பளத்தில் அந்தப் படமே எடுக்கப்பட்டுவிட்டதாக அந்த நேரத்தில் பத்திரிகைகள் எழுதியிருந்தன. தமிழின் முதல் முப்பரிமாணப் படமான ‘அன்னை பூமி’யில் இவரும் நளினியும் நடித்திருந்தார்கள்.

எல்லோருக்கும் உதவுபவராகத் திரைப்படத்தில் நடிப்பதைவிட திரைப்படத்தில் நடித்ததன் மூலமாகப் பிறருக்குத் தன்னால் இயன்றவரை உதவியவர் இவர். நடிகை வடிவுக்கரசிக்காக ‘அன்னை என் தெய்வம்’, நடிகர் சரத் குமாருக்காக ‘தாய்மொழி’ எனத் தன்னைப் போன்ற சக நடிகர் நடிகைகளுக்காகப் படங்களில் நடித்துக்கொடுத்தவர் விஜயகாந்த். இளம் இயக்குநர்களை உற்சாகப்படுத்தியதில் இவருக்கு நிகரான ஒரு நட்சத்திரம் இல்லவே இல்லை.

‘சிறைப்பறவை’, ‘உழவன் மகன்’, ‘தெற்கத்திக் கள்ளன்’, ‘என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்’, ‘பூந்தோட்டக் காவல் காரன்’, ‘செந்தூரப்பூவே’ (இந்தப் படத்துக்காகச் சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் விருது இவருக்குக் கிடைத்தது), ‘புலன் விசாரணை’, ‘சத்ரியன்’, ‘சின்ன கவுண்டர்’, ‘வானத்தப்போல’, ‘ரமணா’, ‘சொக்கத்தங்கம்’ என எண்ணற்ற படங்கள் விஜயகாந்தின் வெற்றி மகுடத்தை அலங்கரித்துள்ளன. இப்படிப் பல சிறப்புகளைக் கொண்ட வெற்றி நாயகன் விஜய காந்தின் பிறந்தநாள் இன்று.  

லேட்டஸ்ட்

ரஜினியாவாரா விஜய்?

தொடர்பவர்