இந்த வலைப்பதிவில் தேடு

உலகப் படம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உலகப் படம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஏப்ரல் 01, 2025

நூரி பில்கே ஸிலான்: மனங்களில் ஒளிந்துகிடக்கும் மாய ஓவியங்களைக் கலைப்படுத்தும் இயக்குநர்


வாழ்க்கையைப் பேசும் படங்களை உருவாக்கியவர் எனத் துருக்கிய இயக்குநர் நூரி பில்கே ஸிலானைச் சொல்ல முடியும். 1959 ஜனவரி 26 அன்று பிறந்த ஸிலானை, சிறு வயது முதலே கலைகளைக் கண்டுணரும் சூழலில் வாழ்ந்தவர் எனச் சொல்ல முடியாது. ஏனெனில், சிறுவயதில் கிராமிய இசையைக் கேட்கும் சூழலும் திரைப்படத்தைக் காணும் வாய்ப்பும் மட்டுமே அவருக்குக் கிடைத்திருக்கின்றன. ஓவியக் கண்காட்சிகள் போன்றவை நடந்திட வாய்ப்பில்லாத சிற்றூர் ஒன்றில் ஸிலானின் பால்யம் கழிந்தது. ஆனால், அவரது படங்களின் பல காட்சிகள் நகரும் ஓவியங்கள் போலவே அமைந்துள்ளன என்பது ஆச்சரியம் தருகிறது. தான் கலைத் துறைக்கு வந்தது குறித்த ஆச்சரியம் அவருக்கே இருக்கிறது. உயர் பள்ளிக் கல்விக்காகத் தான் வசித்த யூனைஸ் என்னும் ஊரிலிருந்து இஸ்தான்புல் நகருக்கு வந்தபோது கலைத் துறையின்பால் அவர் கவனம் சென்றிருக்கிறது. அவரைப் போலவே அவருடைய சகோதரியும் கலைத் துறையில் ஆர்வம் கொண்டிருந்திருக்கிறார்.

சிறு வயதில் ஸிலானுக்கு உறவினர் ஒருவர் புகைப்படக் கலை தொடர்பான புத்தகம் ஒன்றைப் பரிசளித்திருக்கிறார். தனக்குப் புகைப்படக் கலை மீதான ஆர்வம் தோன்றியதற்கு அந்தப் புத்தகம் காரணம் என்கிறார் ஸிலான். இந்தச் சம்பவத்தைப் பற்றி நேர்காணல் ஒன்றில் பேசும்போது, குழந்தைகளுக்குப் பரிசுப் பொருள் வழங்கும் போது மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில், அந்தப் பொருள் அந்தக் குழந்தையின் வாழ்க்கைப் போக்கையே மாற்றிவிடக்கூடிய சாத்தியத்தைக் கொண்டுள்ளது என்பதை மறந்துவிடாதீர்கள் என்கிறார் ஸிலான். அந்தப் புத்தகத்தை வாசித்த பின்னர், அது தந்த உற்சாகத்தில் அவர் புகைப்படம் எடுக்கவும் அதை பிரிண்ட் போடவும் தொடங்கியுள்ளார். அதை ஒரு விளையாட்டுப் போலத் தான் தொடங்கியிருக்கிறார். ஆனால், நாள் செல்லச் செல்ல அது ஒரு கலை என்பதை உணர்ந்திருக்கிறார். இப்போதும் அவரது படங்களில் பல காட்சிகளில் கேமரா அசைவின்றி அப்படியே உறைந்துபோய்விட்டதோ என்று நினைக்கும் அளவுக்குக் காட்சிகள் நிதானமாக அமைந்திருப்பதற்குப் புகைப்படக் கலைமீது அவர் கொண்டுள்ள ஈடுபாடு காரணமாக இருக்கலாம். அவர் வளர்ந்த காலகட்டத்தில் வீடியோ கேமரா என்பது அவ்வளவு எளிதாக எல்லோருக்கும் கிடைத்திருக்கவில்லை. குறிப்பிட்ட சிலரிடம் மட்டும் வீடியோ கேமரா இருந்துள்ளது. அவர் பல்கலைக்கழகப் படிப்பை முடித்த பின்னரோ இராணுவ சேவை முடித்த பின்னரோ கூட சினிமா துறைக்கு வருவதைப் பற்றி எந்த முடிவும் எடுத்திருக்கவில்லை.

எல்லோரையும் போல் ஸிலானுக்கும் சினிமா பார்ப்பதில் விருப்பம் இருந்திருக்கிறது. திரைப்பட உருவாக்கம் தொடர்பான புத்தகங்களை விரும்பிப் படித்திருக்கிறார் அவர். அதுதான் அவரைத் திரைத் துறையின் பக்கம் தள்ளிவிட்டிருக்கிறது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், ராணுவத்தில் இருந்தபோது, போலந்து இயக்குநர் ரோமன் பொலான்ஸ்கியின் தன் வரலாற்றைப் படித்திருக்கிறார். அது அவரிடம் பெரிய தாக்கத்தை உருவாக்கியிருக்கிறது. சாதனைச் சம்பவங்கள் நிறைந்த அந்தப் புத்தகம் நாஜி முகாமில் ஒன்றுமில்லாமல் இருந்த பொலான்ஸ்கி ஹாலிவுட்டுக்குப் போனதுவரையான வாழ்க்கையை உள்ளடக்கியிருந்தது. அந்தப் புத்தகம் சினிமாவை எளிதில் உருவாக்கலாம் எனும் எண்ணத்தை ஸிலானிடம் ஏற்படுத்தியிருக்கிறது. தொடர்ந்து சினிமா தொடர்பான நூல்களுடன் சினிமா தொழில்நுட்பம் பற்றியும் வாசித்திருக்கிறார்.


அவர் ஒரு குறும்படத்தில் நடித்தபோது சினிமா உருவாக்கத்தின் அத்தனை விஷயங்களையும் கற்றுக்கொண்டிருக்கிறார். அதன் பின்னர்தான் ஏரிஃப்ளக் 2சி கேமரா ஒன்றை வாங்கியிருக்கிறார். அது இயங்கும்போது, இயந்திரத் துப்பாக்கி போன்று அதிகப்படியான ஓசையை எழுப்புமாம். அந்த கேமரா வாங்கிய பின்னரும் பத்தாண்டுகளாகத் தான் படமெதுவும் எடுத்திருக்கவில்லை என்கிறார் ஸிலான். பிறகு குக்கூன் என்னும் பெயரில் ஒரு குறும்படம் எடுத்திருக்கிறார். அதில் குடும்ப உறுப்பினர்களே நடித்திருக்கிறார்கள். தான் எடுத்ததிலேயே மிகவும் கடினமான படம் அது என்று ஸிலான் சொல்கிறார். குறும்படம் எடுத்து முடித்த பின்னர் ஒரு முழுநீளப் படத்தை உருவாக்கியிருக்கிறார். அதுவும் அவரது வாழ்க்கைச் சம்பவங்களை ஒட்டி உருவாக்கப்பட்ட படமே. அதன் பெயர் த ஸ்மால் டவுன் (1997). இந்தப் படத்தில் அவரது குடும்ப உறுப்பினர்களே நடித்திருந்தார்கள். இதைத் தொடர்ந்து க்ளவுட்ஸ் ஆஃப் மே (1999), டிஸ்டண்ட் (2002) ஆகிய படங்களையும் உருவாக்கினார். இந்த மூன்றுமே ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டது. ஒருவகையில் இந்த மூன்று படங்களும் ஒரு தொகுதி என்று சொல்ல முடியும்.

நூரி பில்கே ஸிலான் துணை இயக்குநராகக்கூடப் பிறரது படங்களில் பணியாற்றியிருக்கவில்லை. அவர் முழுக்க முழுக்க புத்தகங்கள் மூலமாகவே சினிமாவின் அத்தனை துறைகளைப் பற்றியும் அறிந்திருக்கிறார். அவரே படத்தை உருவாக்கி அவரே அதை வணிகமும் செய்திருக்கிறார். ஓர் இயக்குநருக்கு சினிமா தொடர்பான அனைத்து விஷயங்களும் தெரிந்திருக்க வேண்டும் என்று நம்புகிறார் ஸிலான். அப்படித் தெரிந்திருக்காவிட்டால் ஓர் இயக்குநர் தொழில்நுட்பக் குழுவையே சார்ந்திருக்க வேண்டியதிருக்கும். இயக்குநருக்கு எல்லா விஷயங்களும் தெரிந்திருந்தால் அவரால் தொழில்நுட்பக் குழுவைச் சிறப்பாக இயக்க முடியும் என்பதை ஸிலான் நம்புகிறார்.

சினிமாவின் பின்னணியிசை குறித்து ஸிலானுக்கு மாறுபட்ட கருத்து உள்ளது. சினிமாவில் இசை விஷயங்களைக் கொன்றுவிடுகிறது என்கிறார் ஸிலான். அதனால்தான் அவரது படங்களில் பின்னணியிசையின் குறுக்கீடு இருக்காது. காட்சிகள் நடைபெறும் களங்களில் அரங்கப் பொருள்கள், கதாபாத்திரங்கள் ஆகியவற்றிடமிருந்து வெளிப்படும் சத்தங்களைக் கொண்டே காட்சி தொடர்பான அர்த்தங்களை உருவாக்குவதிலேயே அவரது கவனம் இருக்கும். இசைக்கருவிகளை நம்பி இராமல் புறச்சூழலின் ஒலிகளை வைத்து அக உணர்வை உணர்த்த முயல்வார்.

குடிமைப் பணி செய்த பெற்றோருக்குப் பிறந்தார் நூரி பில்கே ஸிலான். யெனைஸ் பகுதியில் வசித்த அவரது தந்தை மிகக் கடினமான சூழலிலும் படித்து முடித்தவராக இருந்தார். அவர் வேளாண்மைப் பொறியியலாளர். அந்தப் பகுதியில் அப்போது நல்ல பள்ளிகள் கூட இருந்திருக்கவில்லை. ஸிலானின் சிறுவயதில் யெனைஸ் பகுதியில் இருந்த அவரது குடும்பம் கல்வியின் பொருட்டு இஸ்தான்புல்லுக்கு இடம்பெயர்ந்திருக்கிறது. சற்று வறுமையான சூழலிலேயே அவர் வாழ்ந்திருக்கிறார். புகை பரப்பும் அடுப்பில் சமையல் செய்து அம்மா பட்ட அவஸ்தையை ஸிலான் நினைவுகூர்கிறார். அம்மா சதா இருமிக்கொண்டே இருப்பார் என்கிறார் அவர். த ஸ்மால் டவுன் படத்தில் குடும்பத்துடன் வெட்ட வெளியில் உரையாடும் காட்சி ஒன்று இடம்பெற்றிருக்கும். அதில் அந்த அம்மா பாத்திரத்தில் பழமொன்றை வெட்டிப் போடும்போது, இருமிக்கொண்டே இருப்பார், அருகில் குளிர்காய்வதற்காகப் போடப்பட்ட நெருப்பில் புகைவெளியேறிக்கொண்டேயிருக்கும் என்பதை இங்கே நினைவுபடுத்திப் பார்க்க வேண்டியதிருக்கிறது.


சிறு வயதில் ஸிலானுக்கு ஆங்கில எழுத்தான ஆர் என்பதை உச்சரிக்க முடியாமல் இருந்திருக்கிறது. எனவே, அவரது பெயரின் நடுவில் இருக்கும் பில்கே என்பதையே பெயராகச் சொல்வது வழக்கமாம். ஆனால், துருக்கியில் இந்தப் பெயர் ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவானது. அவர் ஒருமுறை பள்ளியில் பில்கே எனப் பெயரைச் சொன்னபோது, கேலிக்காளாகியிருக்கிறார். அதனால்தான் அவர் எவரையும் இழிவுபடுத்துவது என்பதை வெறுக்கிறார்.

த ஸ்மால் டவுன் படத்தில் ஆசிரியர் வருகைப் பதிவேடு எடுத்துக்கொண்டிருப்பார். இஸ்மாயில் எனப் பெயர் சொல்வார். அந்த மாணவன் வந்திருக்க மாட்டான். ஆசிரியர் அப்படியே வெளியில் பார்ப்பார். வெளியில் பனி பெய்துகொண்டிருக்கும். இப்போது வகுப்பில் பாடம் தொடங்கிவிடும். சிறிது நேரத்துக்குப் பின்னர் மேல் கோட்டில் சிறு சிறு பனித் திட்டுகளைக் கொண்டபடி ஒரு மாணவன் வந்துசேர்வான். அவன் இஸ்மாயில். ஆசிரியர் பார்த்த பார்வைக்கு இப்போது நமக்குப் பொருள் விளங்கும். ஐயோ பனி பெய்துகொண்டிருக்கிறதே மாணவன் நனைந்துவிட்டு வருவானே என்ற அவரது பதைபதைப்பை நம்மால் உணர்ந்துகொள்ள முடியும். எந்த வசனமும் இல்லாமல் மௌனமாகவே இதை உணர்த்திவிடுகிறார் நூரி பில்கே ஸிலான். இதுதான் அவரது பலம். அதே நேரத்தில் மிக அவசியம் என்று தோன்றும் இடங்களில் வசனங்களை மிகக் கச்சிதமாகப் பயன்படுத்துகிறார் ஸிலான். இதே படத்தில் சிகரெட்டின் பயனற்ற முனை போல் என் இளமை வீணாகிக்கொண்டிருக்கிறது என ஒரு வசனத்தை சஃபேத் பேசுவார். இவர் ஸிலானின் உறவினர்.

ஸிலானின் அடுத்த படமான க்ளவுட்ஸ் ஆஃப் மே படம், சினிமாவுக்குள் சினிமாவைக் கொண்டது. முந்தைய படமான த ஸ்மால் டவுனில் தாத்தா ஒருவர் தனது போர்க்கால அனுபவங்களைப் பற்றிப் பேசுவார். இந்தக் கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் ஸிலானின் தந்தை. இந்தத் தாத்தா பற்றிய சம்பவங்களை அப்படியே திரைப்படமாக்கும் முயற்சிதான் க்ளவுட்ஸ் ஆஃப் மே என்னும் படம். இப்படத்தில் சஃபேத் ஒரு தொழிற்சாலையில் பணியாற்றுவார். திரைப்படப் பணிக்காக அந்த வேலையை விட்டுவிடுவார். படத்தில் இயக்குநராக வருவார் முஸாஃபர். இந்த முஸாஃபர் டிஸ்டண்ட் படத்தில் மஹ்மூத்தாக வருவார்; சஃபேத் யூசுஃபாக மாறிவிடுவார்.

இந்த க்ளவுட்ஸ் ஆஃப் மே படத்தில் தையல்காரர் ஒருவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வரும். அதில் பேசுபவர், தனக்கெனத் தைத்த பேண்ட் மிகவும் இறுக்கமாக இருப்பதாகவும் இடுப்புப் பகுதியில் காலை நுழைக்கவே முடியவில்லை என்றும் புகார் கூறுவார். முக்கியமான சந்திப்பு ஒன்றில் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் புதிய உடையைத் தைத்ததாகவும் உடனே சரிசெய்ய வேண்டும் என்றும் அந்த வாடிக்கையாளர் கூறுவார். உலகம் முழுவதும் தையல்காரர்களும் அவர்களிடம் உடைகளைத் தைக்கும் வாடிக்கையாளர்களும் ஒரே போல் தான் இருப்பார்கள் போல. இப்படியான இயல்பான காட்சிகள் மூலம் மனிதருடைய இயல்பான வாழ்வைத் திரையில் பிசிறின்றிக் காட்சிக்குவைக்கிறார் ஸிலான்.


இந்தப் படத்தில் நாற்பது நாள் முட்டையை உடைக்காமல் வைத்திருந்தால் மியூசிக் வாட்ச் கிடைக்கும் என்பதற்காகச் சிறுவன் அலி அதைப் பாதுகாத்து வருவான். ஒருநாள் தக்காளிப் பழங்கள் நிறைந்த கூடையொன்றை ஒரு வீட்டில் கொடுத்துவிடும்படி பெண்மணி ஒருவர் அவனிடம் கொடுத்துவிடுவார். மிகக் கவனமாக அதை எடுத்துச் சென்ற அலி கூடையைத் தர வேண்டிய வீட்டில் கொண்டுபோய் வைக்கும்போது, ஒரு தக்காளி தவறிக் கீழே விழுந்துவிடுகிறது. அதை எடுப்பதற்காகக் குனிகிறான் அலி. அப்போது பையிலிருந்து முட்டை உடைந்துவிடுகிறது. உடைந்த முட்டையைப் பையிலிருந்து வெளியே எடுத்துப் போட்ட அடுத்த விநாடி தக்காளிக் கூடையைக் காலால் உதைக்கிறான். முட்டையை உடையாமல் காப்பாற்ற வேண்டிய தனது முயற்சியை இந்தத் தக்காளி ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டதே எனும் கோபமே இந்த உதையாக வெளிப்படுகிறது. தக்காளிகள் நிலத்தில் நாலாபுறம் சிதறுகின்றன. மனிதரின் கீழான பண்பு எப்படியெல்லாம் வெளிப்படுகிறது என்பதையும் சிறுவயது முதலே நமது பண்பு வெளிப்படத் தொடங்குகிறது என்பதையும் இப்படித்தான் வாய்ப்புக் கிடைக்கும் காட்சிகளில் அழகாகக் கடைபரத்துகிறார் இயக்குநர். சட்டபூர்வமான ஆவணங்கள் தனி மனிதரது வாழ்வில் எத்தகைய முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன என்பதையும் இந்தப் படம் காட்சிகளாகக் கொண்டிருக்கும். முஸாஃபரின் தந்தையான எமின் தனது நிலத்தை அரசாங்கத்திடம் இருந்து காப்பாற்ற படும் பாட்டை மிகைப்படுத்துதலின்றிக் காட்சிப்படுத்தியிருப்பார் ஸிலான்.

இந்த வரிசையின் இறுதியான டிஸ்டண்ட் படத்தில் ஒரே அறையில் தங்கும் இருவருக்கிடையேயான தொலைவைப் பற்றி மிகவும் நுட்பமான வகையில் படமாக்கியிருக்கிறார். மஹ்மூத் ஒரு புகைப்படக் கலைஞர். இவர் இஸ்தான்புல்லில் தனியே வசித்துவருகிறார். இவரது அறைக்குக் கிராமத்திலிருந்து உறவினரான யூசுஃப் வேலை தேடி வந்து தங்குகிறார். அப்போது இருவருக்குமான உறவில் ஏற்படும் கசப்புகளையும் விருப்பு வெறுப்புகளையும் காட்சிப்படுத்தியிருக்கிறார். மஹ்மூத்தின் இரட்டை வேடத்தை மிக இயல்பாகக் காட்சிகளின் வழியே வெளிப்படுத்துகிறார் நூரி பில்கே ஸிலான். தன்னுடன் வந்து தங்கியிருக்கும் யூசுஃபின் வருகை மஹ்மூத்துக்கு உவப்பாக இல்லை. அதே நேரத்தில் அவரது வருகையைத் தவிர்க்கவும் இயலவில்லை. யூசுஃபின் வருகை தனது தனிமையைக் குலைப்பதாக நினைக்கிறார் மஹ்மூத். யூசுஃப் தன் தாயுடன் போனில் பேசும்போது, ஒட்டுக்கேட்கிறார். தனது வாட்ச் ஒன்று தொலைந்துவிட்டதெனக் கூறி யூசுஃபுக்குக் குற்றவுணர்வை ஏற்படுத்துகிறார். யூசுஃப் அறையில் ஒழுங்கைக் குலைக்கிறார் என்று அவர் மீது குற்றம்சுமத்துகிறார் மஹ்மூத். தார்கோவெஸ்கி இயக்கிய நீளப் படங்களைப் பார்க்கும் மஹ்மூத் அடுத்த கணமே நீலப்படத்தைப் பார்க்கக்கூடியவராகவும் இருக்கிறார். நீளப் படத்தை நண்பருடன் பார்க்கும் அவர் நீலப்படத்தைத் தனியே ரகசியமாகப் பார்க்கிறார். இவற்றையெல்லாம் பார்க்கும்போது, மனிதர்களிடம் இவ்வளவு கீழ்மைக் குணங்கள் ஏன் குவிந்துகிடக்கின்றன என்ற கேள்வி தோன்றிவிடுகிறது.

வீட்டுக்குள் தொந்தரவு தரும் எலியைத் தரையில் பசை தடவிய அட்டையை வைத்து சிக்கவைக்கிறார் மஹ்மூத். அந்த எலியின் சத்தம் யூசுப்பை இம்சைப்படுத்துகிறது. ஆகவே, எலியை ஒரு பாலிதீன் கவரில் போட்டு அந்த கவரைத் தெருவில் போட்டுவிட வருகிறார் யூசுப். ஏற்கெனவே தெருவில் கிடக்கும் சில கவருடன் இதையும் போட்டு விட முயல்கிறார். ஆனால், அந்த கவர்களைச் சுற்றிச் சுற்றி வரும் பூனைகளால் எலிக்கு ஆபத்து வருமோ என அச்சப்படுகிறார். ஆகவே, பாலிதீன் கவரை அருகிலிருந்து சுவரில் படார் படாரென சில அடிகள் அடிக்கிறார். அதன் பின்னர் அந்த கவரை தெருவில் போடுகிறார். எலியைப் பூனைகள் பிறாண்டிவிடும் என்பதால் அதை கவரில் போட்டுக் கொன்றுவிடுகிறார். இப்போதும் எலி செத்துத்தான் போயிருக்கும். யூசுப்பைப் பொறுத்தவரை பூனைகளால் எலி குதறப்படுவதில்லை என்பதே நிம்மதியான உணர்வாக இருக்கிறது. தானே எலியைக் கொன்றுவிட்டது குறித்து அவருக்கு எந்தப் புகாரும் இல்லை. இப்படியான அம்சம்தான் ஸிலான் படங்களைத் தனித்துக் காட்டுகிறது.


இவரது படங்களில் படம் ஒரு கதையைப் பற்றிப் படர்ந்துகொண்டிருக்கும். கதாபாத்திரங்களின் உரையாடல் ஒரு வாழ்க்கையைப் பேசிக்கொண்டிருக்கும். ஒன்றுக்கொன்று தொடர்பு உள்ளதா இல்லையா என்பதைப் பரிசீலிக்கும் பொறுப்பு பார்வையாளரிடம் விடப்பட்டுவிடும். படத்தில் வெளிப்பட்டு நிற்கும் பூடகமும் மர்மமும் ஒருபோதும் விளக்கப்படுவதில்லை, விலக்கப்படுவதுமில்லை. பார்வையாளரது புரிதலுக்கு விடப்பட்ட சவாலாகவே அவை எடுத்துக்கொள்ளப்பட வேண்டியதிருக்கிறது.

பொதுவாகவே, ஸிலான் தனது படங்களில் மனித உணர்வுகளை வெளிப்படுத்த பின்னணியிசையையோ வசனங்களையோ நம்புவதில்லை. த ஸ்மால் டவுன் படத்தில் ஆமையைத் திருப்பிப் போட்டுவிட்டு ஓடுகிறானே சிறுவன் அலி. ஆமையைத் திருப்பிப் போட்டால் ஆமையால் திரும்ப இயலாது என முந்தைய காட்சியில்தான் அலியின் அக்கா அவனிடம் கூறியிருப்பாள். ஆனாலும், அதைச் செய்கிறான். இந்தக் காட்சி தரும் உணர்வை எந்த வசனமும் இசையும் தந்திருக்க இயலும்? ஒரு காட்சியைப் படமாக்கும் உத்தியின் வழியே, கேமரா நகரும் விதம், அரங்கப் பொருள்கள் காட்சியில் புலனாகும் தன்மை, நடிகர்களது உடல்பாவனை போன்றவை வழியே பார்வையாளர்களிடம் ஒரு புரிதலை ஏற்படுத்த முனைகிறார். அதாவது, கேமரா கோணம், சட்டகத்தில் கதாபாத்திரங்களையும், அரங்கப் பொருள்களையும் இருத்திவைக்கும் தன்மை ஆகியவற்றை ஒருங்கமைத்து ஒரு காட்சியைப் படம்பிடிப்பதன் வழியே காட்சிக்கு ஓர் அர்த்தத்தை சிருஷ்டித்துவிடுகிறார் ஸிலான். வழக்கமான காட்சிகளை வழக்கத்துக்கு மாறான வகையில் பயன்படுத்தும் உத்தியால் காட்சிக்கு ஓர் அர்த்தம் கிடைத்துவிடும்.

நடிகர்கள் பெரிய அளவில் அவருக்கு உதவுகிறார்கள். சிறிய கண்ணசைவு, தலையசைப்பு என ஒவ்வொன்றும் ஸிலானின் பட உருவாக்கத்தில் முதன்மை பெற்றுவிடுகிறது. வழக்கமான படங்களைப் பார்த்துச் சலித்த பார்வையாளர்களுக்கு ஒரு மாறுபட்ட திரையனுபவத்தை வழங்குவதில் ஸிலான் கவனம்பெறுகிறார். அதே நேரத்தில் சினிமாவில் சுவாரசியம் விரும்பும் பார்வையாளர்களுக்கு இவரது படங்கள் அலுப்பையும் சலிப்பையும் தந்துவிடுபவை என்பதையும் சொல்ல வேண்டியதிருக்கிறது. வாழ்க்கையை உற்றுநோக்குபவருக்கு இவரது படங்கள் உருப்பெருக்கிக் கண்ணாடிபோல் உதவுகின்றன.

இவரது விண்டர் சிலீப் என்னும் படத்தின் பெயரைக் கேள்விப்பட்டவுடன் அவரது விநியோகஸ்தர்களும் அவரைச் சேர்ந்தவர்களும் அந்தத் தலைப்பு வேண்டாம் எனச் சொல்லியிருக்கிறார்கள். நீங்களோ மெதுவாக நகரும் காட்சிகளைக் கொண்டு படமெடுப்பவர்; இந்தப் படத்தின் நீளமும் அதிகம். அதிலும் தலைப்பு தூக்கம் என்பது இடம்பெற வேண்டுமா எனக் கேட்டிருக்கிறார்கள். ஆனால், ஸிலான் தலைப்பில் உறுதியாக இருந்திருக்கிறார். ஜப்பானிய இயக்குநர் யாஸிஜிரோ ஓஸுவும், பிரெஞ்சுத் திரைப்பட இயக்குநர் ராபர்ட் ப்ரெஸ்ஸனும் இவருக்குப் பிடித்த இயக்குநர்கள். தனது க்ளவுட்ஸ் ஆஃப் மே படத்தை எழுத்தாளர் ஆண்டன் செக்காவுக்குச் சமர்ப்பித்திருக்கிறார்.

ஒன்ஸ் அபான் எ டைம் இன் அனடோலியா (2011) படத்தில், யாசர் உயிரோடு புதைக்கப்பட்டிருப்பதை அறிந்தும் மருத்துவர் பிரேத பரிசோதனை அறிக்கையில் அதைக் குறிப்பிடவில்லை. ஏன் அப்படிச் செய்தார்? மருத்துவரது கன்னத்தில் தெறித்த அந்த ஒற்றைத் துளி ரத்தத்தை நோக்கிச் சென்ற கேமரா அதை ஏன் அத்தனை நெருக்கமாகக் காட்சிப்படுத்தியது? இந்தத் திரைப்படம் அடிப்படையில் ஒரு குற்றப்பின்னணியிலானது. ஆனால், படம் நமது குற்றத்தை நமது நடத்தையை எல்லாம் மறுபரிசீலனை செய்ய வைக்கும். ஸிலான் திரைப்படங்களில் இயற்கைக்கும் நிலக் காட்சிக்கும் முதன்மையான பங்கு உண்டு. இந்தப் படத்திலும் இரவில் மூன்று வாகனங்கள் ஊர்ந்து வரும் காட்சிகளில் தொனிக்கும் பூடகமான உணர்வு நம்மைப் படத்துடன் பிணைத்து நிற்கும். படத்தின் விடைகாணப்படாத மர்மங்களை உணரும்போது, நமது வாழ்வின் விடைகாணப்படாத மர்மங்களை நோக்கி நாம் நகர்வோம்.

இந்தப் படத்தில் உயிருள்ள மனிதர்கள் உயிரற்ற சடலம் ஒன்றைத் தேடி வருகிறார்கள். அந்தச் சடலத்துக்கு எந்தச் சிக்கலும் இல்லை. அது தேமே என்று எங்கோ புதைந்து கிடக்கிறது. அதைத் தேடி அலையும் இந்த மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் சிக்கல் இருக்கிறது. கெனான் என்னும் மனிதன் ஒருவன் தன் நண்பனைக் கொன்றதாகக் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறான். அந்தச் சடலத்தைத் தேடித்தான் காவலர்களும் வழக்கறிஞரும் மருத்துவரும் இன்னும் சில அரசு ஊழியர்களும் அந்த அர்த்த ராத்திரியில் அந்த மலைப்பாங்கான பாதையில் பயணப்படுகிறார்கள். கொன்றவனுக்குச் சடலத்தை எங்கே புதைத்தான் என்பது நினைவிலில்லை. உடனிருந்தவனோ தூங்கிவிட்டேன் எனக்கு எதுவும் தெரியவில்லை என்கிறான். சடலம் புதைத்த இடத்தைக் காட்டுவதாகச் சொல்லி அழைத்து வந்தவன் அலைக்கழிக்கிறான். காவல் துறை அதிகாரிக்குக் கோபம் வருகிறது. அவனைப் போட்டு அடிக்கிறார். வழக்கறிஞர் அதைத் தடுக்கிறார்.

சடலத்தைப் பொதிந்துகொள்ளத் தேவையான பையை எடுத்துவர மறந்துவிடுகிறார்கள். இப்போது சடலத்தை காரின் டிக்கியில் வைப்பதற்குள் படாதபாடு படுகிறார்கள். உயிருக்கும்போது எளிதாய் நிறைவேற்றும் ஒரு காரியத்தை இறந்தபிறகு நிறைவேற்ற எவ்வளவு அவதிப்பட வேண்டியதிருக்கிறது? ஒரு மரணம் எல்லோருக்கும் மரணமன்று. மரணமடைந்தவரைச் சாராதவர்களுக்கு மரணம் மிகச் சாதாரணமான நிகழ்வாகவே இருக்கிறது. காவல் துறை அதிகாரி, சடலத்தைக் கண்டுபிடித்துக் கொடுத்துவிட்டால் போதும் தனது வேலை முடிந்துவிடும் என்று நினைக்கிறார். சடலம் கிடைக்கிறது. சாவுக்கான காரணம் என்பதை அறியும் பொறுப்பு மருத்துவருக்கு வந்துவிடுகிறது. அதை அவர் கண்டுபிடிக்கிறார் ஆனால், அதை வெளியே சொல்லவில்லை. எல்லோரும் எதையாவது மறக்கிறார்கள்; அல்லது மறைக்கிறார்கள். அதன் வழியே வாழ்வில் சிக்கல் இல்லாமல் வாழ நினைக்கிறார்கள். ஆனால், மறைப்பதன் மூலம் வாழ்வில் சிக்கல் வந்துதான் விடுகிறது. ஏன் மறைக்க வேண்டும்? உண்மையை எதிர்கொள்ளும் துணிச்சல் மனிதருக்கு ஏன் இல்லை. உண்மைக்குப் பதில் பொய்யை ஏன் அங்கு இருத்திவைக்கிறார்கள்? இப்படியான கேள்விகளுக்கு விடை தேடிப் பார்வையாளர் செல்லட்டும் என்பதற்காகவே இப்படியான புதிரைத் தனது படங்களில் விட்டுச் செல்கிறார் ஸிலான். இந்தப் புதிருக்கு விடைதேடுவதே ஒரு புதிரான பயணமாக இருப்பதால் பார்வையாளரால் ஸிலானின் படங்களை ரசிக்க இயலுகிறது.

இந்தப் படத்தில் சில காட்சிகள் நம்மை அப்படியே ஆவிசேர்த்து அணைத்துக்கொள்கின்றன. இரவில் எல்லோரும் பசியுடன் அந்த அந்துவானக் காட்டில் மாட்டிக்கொள்கிறார்கள். ஒருவர் மரத்தை உலுக்க ஆப்பிள் பழங்கள் உதிர்ந்துவிழுகின்றன. அதிலொரு பழம் அப்படியே நழுவி உருண்டு நீரோடையில் மிதந்துசெல்கிறது. ஓரிடத்தில் மேலும் சில பழங்கள் ஒதுங்கிக்கிடக்கின்றன அவற்றுடன் சேர்ந்துகொள்கிறது இந்தப் பழம். எந்த வசனமும் இல்லாத இந்த காட்சி வாழ்வின் அபத்தத்தை உணர்த்துகிறது. யாருடைய பசியையோ ஆற்ற வேண்டிய இந்தப் பழம் யாருக்கும் பயனற்று ஏன் அப்படி உருள வேண்டும்?

கொல்லப்பட்ட யாசர் கொல்லப்பட்ட அன்று இரவில் நாயொன்றுக்கு உணவளித்திருப்பான். அவனது சடலம் புதைக்கப்பட்ட இடத்தில் அந்த நாய் நின்று குரைத்துக்கொண்டிருக்கும். உடனிருந்த நண்பனின் மனைவியுடன் ஏற்பட்ட உறவு காரணமாக நண்பனையே கொன்ற மனிதர்கள் வாழும் அதே ஊரில் தான் ஒரு நேரம் உணவிட்டவனின் சடலத்தைச் சுற்றிச் சுற்றி வருகிறது அந்த நாய்.

பொதுவாகவே ஸிலான் படங்களில் வசனமற்ற காட்சிகள் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியமானவை கதாபாத்திரங்களுக்கிடையேயான உரையாடல்கள். இந்தப் படத்தில் வழக்கறிஞருக்கும் மருத்துவருக்கும் இடையேயான உரையாடல் கவனம்கொள்ளத்தக்கது. தனக்குத் தெரிந்த பெண் ஒருவர் கர்ப்பமாக இருந்தபோது, பிரசவத்துக்குப் பின்னர் தான் இறந்துவிடுவேன் என்று தீர்க்கமாகச் சொல்லிவிட்டு அதே போல் மரித்தார் என்று சொல்கிறார் வழக்கறிஞர். அந்தப் பெண் வழக்கறிஞரின் மனைவி என்பது பின்னர் பூடகமாகச் சொல்லப்படுகிறது. ஒரு பொதுக் கதை இருந்தபோதும், ஒவ்வொருக்கும் தனித் தனிக் கதைகளும் உள்ளன. பொதுக் கதையைப் பேசும் சாக்கில் படம் தனித் தனிக் கதைகளையும் சொல்கிறது. வாகனம் பாதையில் சென்றாலும் நாம் சன்னல் வழியே புறக் காட்சிகளைப் பார்த்தபடியேதானே பயணப்படுவோம். அப்படியான அனுபவம் தரக்கூடிய இயக்குநர் நூரி பில்கே ஸிலான். வாய்ப்புக் கிடைக்கும்போது, ஸிலானில் படத்தைப் பார்ப்பதன் மூலம் வாழ்வில் நாம் மேற்கொள்ளும் அபத்தங்களை நாம் உணர முடியும். அதற்காகவாவது அவரது படங்களைப் பார்க்கலாம். முதன்முறை அலுப்புத் தரும் அவரது படங்களை மறுமுறை பார்த்தால் அது நம்மை வசீகரித்துவிடக்கூடும். இதுதான் அவரது படங்களின் மாயம்.

இவரது த்ரீ மங்கீஸ், க்ளைமேட்ஸ், விண்டர் சிலீப், த வைல்ட் பியர் ட்ரீ ஆகியவையும் தனித் தனியாகச் சிந்தித்துப் பார்க்கத்தக்கவை.

(2022 ஏப்ரல் அகநாழிகை இதழில் வெளியான கட்டுரை)

திங்கள், மார்ச் 31, 2025

வாதை எல்லாம் வாஞ்சையின் பொருட்டே…


சில திரைப்படங்கள் நம்மைச் சிந்திக்கவிடாமல் செய்யும்; சில திரைப்படங்கள் தூங்கவிடாமல் செய்யும். சிந்திக்கவிடாமல் செய்யும் திரைப்படங்களை விட்டு விலகித் தூங்கவிடாமல் செய்யும் திரைப்படங்களை நோக்கிச் செல்லும்போது, திரைப்பட அனுபவம் நமது வாழ்வுக்கும் உதவக்கூடும். அப்படியான படங்களைப் பார்ப்பது நமது நேரத்தையும் பயனுள்ளதாக்கும். அப்படி நமது நேரத்தைப் பயனுள்ளதாக்கும் ஒரு திரைப்படமே பிரெஞ்சு இயக்குநர் ராபர்ட் ப்ரஸ்ஸான் இயக்கிய Diary of a Country Priest.
 
படத்தின் கதை மிகவும் எளிமையானது. ஒரு சிற்றூரின் சிறிய சபை, அதன் போதகர், அந்தச் சபையின் அங்கத்தினர்கள், அவர்களது மனோபாவங்கள் ஆகியவற்றைச் சுற்றிய சம்பவங்களே படமாக்கப்பட்டுள்ளன. இதை வைத்துக்கொண்டு, நம்பிக்கை, விசுவாசம், அன்பு, கருணை, போன்ற நற்குணங்களையும், வஞ்சம், விரோதம், வெறுப்பு போன்ற தீக்குணங்களையும் ஆராய்கிறது திரைப்படம்.

அம்பரி கோர்ட் என்னும் அந்தச் சிற்றூரின் சபைக்குப் பாதிரியாக வருகிறார் அந்த இளைஞர். பூஞ்சையான உடல் வாகு. எப்போதும் துயரத்தில் தோய்ந்தெழுந்தது போன்ற மூஞ்சி. பாதிரியாருக்குரிய அங்கியின்றி அவரைப் பார்த்தல் அரிது. இறை நம்பிக்கையை இதயம் முழுவதும் பரவவிட்ட மனிதர் அவர். தனது நாள்களின் ஒவ்வொரு நிகழ்வையும் அவர் தனது டைரியில் குறித்துவைக்கிறார். அந்த நிகழ்வுகளே காட்சிகளாக விரிகின்றன.

1951இல் வெளிவந்துள்ள திரைப்படம் இது. இதில் நடித்துள்ள பாதிரி கிறிஸ்துவை நினைவூட்டுகிறார். படம் பெரிய ஆன்மிக அனுபவத்தைத் தரக்கூடியதாக அமைந்துள்ளது. மிகத் தீவிரமான படம்தான். பார்வையாளரைச் சுவாரசியப்படுத்தும் எந்த அம்சமும் இல்லாத படம். எந்தக் காட்சியில் வேண்டுமானாலும் விருப்பமில்லாத பார்வையாளர் வெளியேறிக்கொள்ளலாம் என்ற முடிவெடுத்த பின்னர் படத்தை ப்ரஸ்ஸான் இயக்கியிருப்பார் என்றே தோன்றுகிறது.

இளம் பாதிரியுடன் யாருமே இல்லை. அவர் தனித்திருக்கிறார். அவரது உடல்நலமும் உவப்புக்குரியதாக இல்லை. ரொட்டியும் ஒயினும் மட்டுமே அவரது உணவு. அவற்றைத் தவிர வேறு எதுவும் அவருக்கு ஒத்துக்கொள்வதில்லை. ஒரு நாளில் அவருக்குப் பரிசாகக் கிடைக்கிறது முயல் கறி. அதைக் கூட அவரால் சமைத்துச் சுவைக்க இயலாது என்பதுதான் அவரது நிலைமை. வயிற்று உபாதை அவரை அடிக்கடி வாட்டி எடுக்கிறது. சபையிலோ அங்கத்தினர்களது நடவடிக்கை அவரை வேதனைப்படுத்துகிறது. முதியவர் ஒருவர் அவருடைய மனைவியின் இறுதிக் காரியத்துக்குச் சல்லிக்காசுகூடத் தர முடியாது எனச் சாதிக்கிறார். ஏழைகளை வதைக்காதீர்கள் என வாதிடுகிறார். எல்லோருக்குமான கட்டணம் எதுவோ அதுதான் அவருக்கும் விதிக்கப்பட்டிருக்கிறது. சபையின் கடமைகளை நிறைவேற்றுவதில் பாதிரிக்குச் சமூகத் திறமைகள் போதுமான அளவு இல்லை என அவரது மூத்த பாதிரிகளும் சபையோரும் கூறுகிறார்கள். ஆனால், பாதிரியோ இறை நம்பிக்கையில் ஊறித் ததும்புபவர். ஆனாலும், இரவுகளில் துயரம் கவியும் தருணங்களே அவரது துணையாய் உள்ளன.



புனித சமயச் சடங்கான திடப்படுத்துதல் தொடர்பான வகுப்புகளில் கலந்துகொள்ளும் சிறுமிகளில் செராஃபிதா என்னும் சிறுமி ஒருத்தி மட்டும் துடிப்பாக இருக்கிறாள். பாதிரியின் கேள்விக்குச் சமயம் சார்ந்த சரியான பதிலைக் கூறுகிறாள். தம் சீடர்களிடம் ரொட்டியைப் பிய்த்து உண்ணத் தந்தபோது, நீங்கள் உண்ணும் இந்த ரொட்டியானது எனது உடம்பு என்றும் ஒயினை அருந்தத் தந்தபோது, நீங்கள் அருந்தும் இந்த ஒயின் எனது ரத்தம் என்றும் கூறியதை நினைவுபடுத்தும் வகையில் அனுசரிக்கப்படும் சடங்குதான் திடப்படுத்துதல் என்கிறாள். பாதிரியின் உள்ளம் நிறைகிறது. ”எப்படி உன்னால் மட்டும் இப்படிச் சரியான பதிலைக் கூற முடிகிறது” எனப் பாதிரி கேட்கிறார். ”உங்களது அழகான கண்கள் தாம் காரணம்” என்கிறாள் செராஃபிதா. கதவுக்கு வெளியே பிற சிறுமிகள் சிரிக்கிறார்கள். பாதிரிக்கு என்னவோ போல் ஆகிவிடுகிறது. பாதிரி மௌனமாகக் கடக்கிறார் அந்தத் தருணத்தை. ஆனால், அவரது மனபாரம் அதிகரிக்கிறது. அவர்கள் ஏன் இவ்வளவு விரோத பாவம் காட்டுகிறார்கள் என டயரி எழுதுகையில் கேள்வி எழுப்புகிறார்.

செரஃபிதாவின் நடவடிக்கைகள் பாதிரிக்குக் கவலையை உண்டாக்குகின்றன. ஒரு நாள் பாதையோரத்தில் தோழிகளுடன் நிற்கும் அவளை சைக்கிளில் சென்ற பாதிரி பார்க்கிறார். அவரைப் பார்த்த மாத்திரத்தில் துள்ளிக் குதித்து ஓடும் செரஃபிதா தனது பள்ளிப் பையைத் தூக்கி சேறும் சகதியுமான நிலத்தில் எறிந்துவிட்டுப் போகிறாள். அதை எடுத்து அவளிடம் கொடுப்பதற்காக அவளுடைய வீட்டுக்குப் போகும் இளம் பாதிரிக்கு அங்கே எந்த மரியாதையும் கிடைக்கவில்லை; அவரது உதவி மதிக்கப்படவில்லை. மிகவும் பாராமுகத்துடன் அவர் நடத்தப்படுகிறார். செரஃபிதாவால் பாதிரி மிகுந்த வாதைக்கு ஆளாகிறார். தனது ஜெபம் குறைந்துவிட்டதோ என்னும் ஐயம் பாதிரிக்கு ஏற்படுகிறது. அதே செரஃபிதா பின்னொரு நாளில் மயங்கி சேற்றில் வீழ்ந்து கிடக்கும் பாதிரியைத் தொட்டுத் தூக்கித் துடைத்துப் பணிவிடை செய்து அனுப்புகிறாள். அப்போது அந்தச் சபையின் அங்கத்தினர்கள் எல்லோரும் பாதிரியைக் குடிகாரர் என்றே நினைக்கிறார்கள். அந்தச் சூழலில் செரஃபிதா அவரை அக்கறையுடன் கவனித்துக்கொள்கிறார்.

அந்த சபைக்குட்பட்ட மாளிகையில் ஃபெரெண்ட் சீமான் ஒருவர் வசிக்கிறார். மாளிகையின் சீமாட்டி சிறுவயதில் இறந்துவிட்ட தன் மகனை எண்ணியே துக்கத்துடன் நாள்களைக் கழிக்கிறார். சீமானுக்கும் வீட்டின் பணிப்பெண்ணான லூயிஸுக்கும் ரகசிய உறவு இருக்கிறது. இந்த உறவு காரணமாக சீமானின் பெண்ணான சந்தால் லூயிஸை இழிவுபடுத்துகிறாள். வீட்டில் நடைபெறும் நிகழ்வுகள் பருவப் பெண்ணான சந்தாலைக் கலக்கப்படுத்துகின்றன; அவளது நடத்தையில் கடினத்தன்மை கூடுகிறது. இது தொடர்பான தீர்வுக்கு முயல்வதாக சந்தாலிடம் கூறுகிறார் இளம் பாதிரி. அதற்காக, சந்தாலின் தாயிடம் பேசப்போன அன்று அந்த உரையாடலை நிகழ்த்த முடியாத அளவுக்குப் பாதிரியின் உடல்நலம் பாதிக்கப்படுகிறது- இவ்வளவுக்கும் நல்ல உடல்நிலையுடன் தான் அந்த மாளிகைக்குள் நுழைந்தார், என்னவோ திடீரென உடல்நிலை மோசமானது. மிகத் தீவிரமான உடல்நிலைக் கோளாறு என்பதை பாதிரி உணர்கிறார். ஏற்கெனவே இதைப்போல் ஆறு மாதங்களுக்கு முன்னரும் உடல் நலம் கெட்டிருந்தது அவரது நினைவுக்கு வருகிறது.

டார்ஸி என்ற இடத்தின் பாதிரியார் தந்த அறிவுரையின்படி டாக்டர் தெல்பெந்தெவைப் பார்க்கப் போகிறார் இளம் பாதிரி. அவரது உடலநலனைப் பரிசோதித்த டாக்டர் மிகவும் பலவீனமாக உள்ளதாகக் கூறுகிறார். மிகக் குறைவாக உணவு உண்ணும் காரணத்தாலேயே இப்படியான பாதிப்பு ஏற்பட்டதாகவும் நிலைமை மோசமாக உள்ளதாகவும் அவர் பாதிரியிடம் தெரிவிக்கிறார். ”ஆல்கஹால் என்ன ஆனது” என வினவுகிறார். ”ஆல்கஹாலா” என பாதிரி அதிர்ச்சியாகிறார். ”நீ குடித்ததைக் கேட்கவில்லை நீ பிறப்பதற்கு வெகு காலத்துக்கு முன்னர் உனக்காகச் செலவிடப்பட்ட ஆல்கஹால்” என்கிறார் டாக்டர். அவர் இயேசுவின் ரத்தம் குறித்துக் கேள்வி எழுப்புவதாக உணர்ந்துகொள்ள வேண்டியதிருக்கிறது. ”உனது கண்கள் நம்பிக்கைமிக்கவை, விசுவாசத்தை வெளிப்படுத்துபவை” என்று கூறும் டாக்டர், ”நீ, டார்ஸியின் பாதிரியார், நான் மூவரும் ஒரே இனம்” என்கிறார். அநீதியை ஏற்றுக்கொள்ள வேண்டியவர்கள் என்னும் பொருளில் அப்படிக் கூறுகிறார். டாக்டர் தனக்கு இறை நம்பிக்கை இல்லை என்கிறார். ஆழ்ந்த வருத்தத்தால் காயம்பட்டிருக்கும் மனத்தால் டாக்டர் அப்படிப் பேசுவதாக இளம் பாதிரி உணர்கிறார்.



ஒரு நாள் வழியில் டார்ஸியின் பாதிரியாரைச் சந்திக்கிறார் இளம் பாதிரி. அவர் ஆயர்களுக்குப் பாதிரியின் மீது நம்பிக்கை இல்லை என்கிறார்; பாதிரிக்கு விவேகம் இல்லை என்றும் கூறுகிறார். அவரது மிகப் பெரிய திட்டங்கள் சூழலுக்கு ஒத்துவராதவை அவற்றில் நம்பகத்தன்மை இல்லை என்பதைப் போன்ற கருத்தைத் தெரிவிக்கிறார். இவையெல்லாம் இயேசு கிறிஸ்துவை விமர்சிப்பதுபோலத்தான் உள்ளன. அவரது அன்பு என்பது நமது சமூகச் சூழலுக்கு ஒத்துவருமா எனக் கேள்வி கேட்பதுபோல் தான் இருக்கிறது. உலகம் புரியாத பிள்ளை என்பதைப் போல் இளம் பாதிரியைக் குறிப்பிடுகிறார் டார்ஸியின் பாதிரியார். இந்தக் காட்சியைக் காணும்போது, பகைவரை நேசிக்கச் சொன்ன இயேசு கிறிஸ்துவின் கொள்கைகளை மானசீகமாக நம்மால் தரிசிக்க முடிகிறது, அதே நேரத்தில் அதை ப்ரஸ்ஸான் எள்ளிநகையாடுவதாகவும் தோன்றுகிறது.

ஒருநாள் அதிகாலை மூன்று மணிக்கெல்லாம் எழுந்து தேவாலயம் சென்று ஜெபிக்கிறார். இதயத்தை நொறுக்கும்படியான உருக்கமான ஜெபத்தில் ஈடுபடுகிறார். அன்று காலையில் அவருக்கு மோசமான தாளில் பெயர் குறிப்பிடப்படாமல் எழுதப்பட்ட ஒரு கடிதம் வருகிறது. அவருக்கு வருத்தப்படுவதாகத் தெரிவித்த அந்த மொட்டைக் கடிதம் அவரை அந்தச் சபையை விட்டு வெளியேறும்படி எச்சரிக்கிறது. அவரது நலத்தை முன்னிட்டே அவரை வெளியேறச் சொல்வதாகவும் எவ்வளவு விரைவில் வெளியேற முடிகிறதோ அவ்வளவு விரைவில் வெளியேறுவது நல்லது என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்தக் கடிதத்தில் இருந்த கையெழுத்தும், ஃபெரண்ட் வீட்டுப் பணிப்பெண் லூயிஸ் கையில் உள்ள பைபிளிலிலிருந்த கையெழுத்தும் ஒரே போல் உள்ளன. அதன் பின்னர் அவரால் முழு மனத்துடன் ஜெபிக்க இயலவில்லை. ஆனால், நுரையீரலுக்குக் காற்றுப் போல, குருதிக்கு பிராண வாயு போல அவருக்கு ஜெபம் தேவையாயிருக்கிறது. தான் தனித்துவிடப்பட்டதாக பாதிரி உணர்கிறார். எப்போதும் போன்ற அதே தனிமை, அதே ஆழ்ந்த, படுதீவிர, கலக்கம் தரும் வகையிலான அமைதி. தடைகளை உடைக்கும் நம்பிக்கை காலாவதியாகிவிட்டதோ என்ற உணர்வு அவருக்கு எழுகிறது. கையில் இருக்கும் லாந்தர் விளக்கை ஊதி அணைக்கிறார். கடவுள் தன்னைவிட்டு விலகிவிட்டாரோ என அவருக்குத் தோன்றுகிறது.

தனது கடமைகளிலிருந்து தான் வழுவிவிடவில்லை என்று நினைக்கிறார். தனது உடல் நலம் மேம்பட்டால் தனது பணிகளை இன்னும் எளிதாக நிறைவேற்ற முடியும் என நம்புகிறார். இந்த நிலையில் டாக்டர் தெல்பெந்தே மர்மமான முறையில் இறந்துபோகிறார். அது தற்கொலை எனும் பேச்சும் ஊருக்குள் உலவுகிறது. அவரது மரணம் டார்ஸியின் பாதிரிக்குத் தாங்கவொண்ணாத வேதனையைத் தருகிறது. அவர் தற்கொலை செய்துகொண்டாரா என இளம் பாதிரி டார்ஸியின் பாதிரியாரிடம் கேட்கிறார். ”டாக்டர் ஏமாற்றமடைந்திருந்தார், அவரது நோயாளிகள் அவரை விட்டுவிட்டுச் சென்றனர் மொத்தத்தில் தனது தொழிலில் மீண்டும் ஜொலிக்க முடியும் என்னும் நம்பிக்கையை இழந்துவிட்டார்” என்கிறார் பாதிரியார். அதை அப்படியே கேட்கும் நிலையில் இளம் பாதிரி இல்லை. டார்ஸியின் பாதிரியார் கூறிய சொற்கள் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியதைப் போல் இருக்கிறது இளம் பாதிரிக்கு. அவர் இதுவரை அனுபவித்தறியாத மிகுந்த மன வேதனைக்கு ஆளாகிறார். ”உண்மையிலேயே டாக்டர் தற்கொலை செய்துகொண்டாரா?” என மீண்டும் கேட்கிறார். ”என்னிடம் கேட்காதே கடவுள்தான் நீதிபதி அவருக்குத்தான் தெரியும்” என்கிறார் டார்ஸியின் பாதிரியார். ”நாம் போரில் ஈடுபடுகிறோம்; எதிரியை எதிர்கொள்ள வேண்டியதுதான். ’எதிர்கொள்ள வேண்டியதுதான்…’ என்பது அவரது கொள்கை அதை அடிக்கடி டாக்டர் சொல்வார் நினைவிருக்கிறதல்லவா” என்று சொல்லிவிட்டுப் பாதிரியார் செல்கிறார். இந்தக் காட்சியின்போது, ஒலிக்கும் தேவாலய மணி பெருஞ்சோகத்தை, வேதனையை வெளித்தள்ளுகிறது. இளம் பாதிரி சற்று நேரம் அங்கேயே நின்றுவிட்டு மெதுவாக அங்கிருந்து நகர்கிறார். மழையின் நீர் நிலத்தடிக்குப் போவதைபோல் பாதிரியாரது சொற்கள் இளம் பாதிரியின் உள்ளத்தின் ஆழத்தில் சென்று புதைகின்றன.

எனது நம்பிக்கையை நான் இழந்துவிடவில்லை. இந்தத் திடீரான, குரூரமான மனக் கசப்பு மிகுந்த அனுபவம் எனது நரம்புகளைப் பாதித்துள்ளது; என்னைச் சஞ்சலப்படுத்தியுள்ளது ஆனால் எனது நம்பிக்கை மாறாமல் அப்படியேதான் இருக்கிறது என்று நினைக்கிறார் இளம் பாதிரி. இவ்வாறு நினைத்தபோதே தன்னை யாரோ அழைத்தது போல் இருக்கிறது என அவருக்குத் தோன்றுகிறது. மெதுவாக எழுந்துசென்று ஜன்னலுக்கு வெளியே எட்டிப் பார்க்கிறார். அங்கே யாரும் இருக்க மாட்டார்கள் என்று உணர்ந்தும் அப்படிப் பார்க்கிறார்.

பாதிரியைச் சந்திக்க வருகிறாள் சந்தால். அவளது உரையாடலில் அவளுக்கு அவளுடைய தந்தை மீதும் தாய் மீதும் அவள் கொண்ட வெறுப்பு வெளிப்படுகிறது. பணிப்பெண் மீதான கோபத்தை வெளிப்படுத்துகிறாள். அவளைக் கொன்றுவிடுவேன் அல்லது என்னை மாய்த்துக்கொள்வேன் எனக் கடுங்கோபம் வெளிப்பட மொழிகிறாள். வெறுப்பைக் கைவிடச் சொல்கிறார் பாதிரி. அவளைப் பாவமன்னிப்பு கூண்டுக்கு நகர்த்திச் செல்கிறார். ஆனால், அவளோ பாவமன்னிப்பு பெறத் தான் விரும்பவில்லை என்கிறாள். எனக்கு வேண்டியது நீதி என்பது உங்களுக்கு நன்கு தெரியும் என்கிறாள். தன் தாய் ஒரு கோழை என்கிறாள். தனக்கு மகிழ்ச்சியானவற்றைக்கூடச் செய்துகொள்ள முடியாதவள் என்கிறாள். பணிப்பெண்ணும் தந்தையும் என்ன சொன்னாலும் நம்புபவள் என்கிறாள். தந்தைமீதும் மரியாதை இல்லை என்கிறாள். அவர்கள் எல்லோரையும் வெறுக்கிறேன் என்கிறாள். அவள் உதடுகள் வெளிப்படுத்தாத வார்த்தைகளையும் அவரால் உணர முடிகிறது.

அவள் பையில் மறைத்துவைத்திருக்கும் கடிதத்தைக் கொடு எனக் கேட்கிறார் பாதிரி. அவள் மறுக்காமல் கடிதத்தைக் கொடுத்துவிட்டு, கண்டிப்பாக நீங்கள் ஒரு பிசாசாகத்தான் இருக்க வேண்டும் என்று கூறிவிட்டுச் செல்கிறாள். அவள் சென்ற பின்னர், அந்தக் கடிதத்தை பாதிரி வாசிக்காமல் நெருப்பிலிட்டு எரிக்கிறார். அது அவள் தன் தந்தைக்கு எழுதிய தற்கொலைக் குறிப்பு என்பதாகக் காட்சியில் உணர்த்தப்படுகிறது. அவளது உக்கிரமான கண்களில் தற்கொலைத் தடயத்தைப் பாதிரி உணர்கிறார். தான் ஒன்றுக்கும் பயனற்ற துக்ககரமான பெரிய மதிப்பில்லாத பாதிரி என அவருக்குத் தன்னைப் பற்றிய ஓர் எண்ணம் ஏற்படுகிறது. அவள் கூறியவற்றைக் காது கொடுத்துக் கேட்டிருக்கக் கூடாது என்றும் அவருக்குத் தோன்றுகிறது. கடவுள் அவளைத் தண்டிப்பதாக அவர் நினைக்கிறார். மனிதர்கள் குறித்த எதுவும் தனக்குத் தெரியாது; தெரிந்துகொள்ளவும் இயலாது என்று அவருக்குத் தோன்றுகிறது.

சந்தாலிடம் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றும் பொருட்டு சீமாட்டியை வீட்டில் சென்று சந்திக்கிறார் பாதிரி. சந்தால் எதுவும் விபரீதமாகச் செய்துகொள்வாளோ எனப் பயப்படுவதாகச் சொல்கிறார். அவளுக்கு மரண பயம் அதிகம் என்கிறாள் சீமாட்டி. அப்படிப்பட்டவர்கள் தங்களை மாய்த்துக்கொள்வார்கள் என்கிறார் பாதிரி. அப்படிப் பிறர் உங்களிடம் சொல்லியிருக்கக் கூடும் எனச் சொல்லும் சீமாட்டி நீங்கள் மரணத்துக்குப் பயப்படுகிறீர்களா என வினவுகிறாள். கணவனின் துரோகம், மகளின் வெறுப்பு போன்றவற்றுக்குத் தானா பொறுப்பு என்பதைப் போன்ற கேள்விகளை எழுப்புகிறாள் சீமாட்டி. நல்லது கெட்டதுகளில் நாம் ஒருவரில் ஒருவர் பிணைக்கப்பட்ட விதத்தை முழுமையாகப் புரிந்துகொண்டால் நம்மால் வாழவே முடியாது என நான் நம்புகிறேன் என்கிறார் பாதிரி. மரணம், அன்பு, கடவுள் நம்பிக்கை போன்ற விஷயங்கள் குறித்து இருவரும் உரையாடுகிறார்கள். அதன் வழியே ஆன்மிக உலகின் பல சாளரங்கள் திறந்துகொள்கின்றன.

பாதிரி கடவுளின் மேன்மையை எடுத்துச் சொல்கிறார். கடவுளிடமிருந்து வெகுதூரம் விலகியிருந்த சீமாட்டி கடவுள்தன்மையைப் புரிந்துகொள்கிறார். தனது மகனின் மரணம் காரணமாகக் கடவுளிடமிருந்து விலகியிருந்த அவர் வேறு திசைக்குத் திரும்புகிறார். தனது கழுத்தில் அணிந்திருந்த மகனின் படம் கொண்ட டாலர் கோக்கப்பட்டிருந்த சங்கிலியை அறுத்து நெருப்பில் எரிகிறார். என்ன பைத்தியக்காரத்தனம் என்கிறார் பாதிரி. என்னை மன்னியுங்கள் என்கிறார் சீமாட்டி. கடவுள் யாரையும் துன்புறுத்துவதில்லை என்கிறார் பாதிரி. நாம் ஒருவரோடொருவர் கருணையுடன் நடந்துகொள்ள வேண்டும் என விரும்புகிறார் என்கிறார். கடவுள் அன்பின் எஜமானன் அல்ல அன்பே அவர்தான் என்றும் கூறுகிறார் பாதிரி. சீமாட்டி வேதனையுடன் முழங்கால் படியிட்டுத் தலையைக் கவிழ்கிறார். அமைதி ஆட்கொள்ளட்டும் எனப் பாதிரி ஜெபித்து அவர் சிரசின் மேல் சிலுவைக்குறியிடுகிறார்.

பாதிரி வீட்டுக்கு வரும்போது, தோட்டக்காரர் ஒரு சிறிய பொதியை அவரிடம் கொடுக்கிறார். அதில் சீமாட்டி நெருப்பில் எரிந்த சங்கிலியிலிருந்த வெற்று டாலரும் அவரது கடிதமும் இருக்கின்றன. இறந்துபோன மகனின் பயனற்ற நினைவு எல்லாவற்றிலிருந்தும் விலக்கித் தன்னைத் தனிமைக்குள் தள்ளிவிட்டது என்றும் அதிலிருந்து அடுத்த குழந்தை தன்னை வெளியே இழுத்துவிட்டிருக்கிறது போல் தெரிகிறது என்றும் எழுதிய கடிதத்தைப் பாதிரி வாசிக்கிறார். ஒரு பொறுப்பிலிருந்து தான் வழுவவில்லை என்ற நிம்மதி சீமாட்டிக்குக் கிடைத்ததைக் கடிதம் தெரிவிக்கிறது. பாதிரி தன்னை அமைதியடையச் செய்ததை நன்றியுடன் குறிப்பிட்டுள்ளார் சீமாட்டி. நாம் இனி சந்தித்துக்கொள்வோமா என்று தெரியவில்லை எனக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த சீமாட்டி அன்றிரவு இறந்துவிடுகிறார்.

துயரமிகு பின்னணியிசை ஒலிக்க பாதிரி சீமாட்டியின் மாளிகையை நோக்கி வியர்க்க விறுவிறுக்க ஓடுகிறார். சீமாட்டியின் முகத்தில் புன்னகை உறைந்திருக்கலாம் என நம்பிய பாதிரி புன்னகை அரும்பியிராத முகத்தையே பார்க்கிறார். கைகளை உயர்த்தி அவள் அமைதிகொள்ள ஜெபித்து, அப்படியே முழங்கால் படியிடுகிறார். தன் வேலையை முடித்துவிட்டு மீண்டும் மாளிகைக்குச் செல்கிறார். சீமாட்டியின் சடலத்தின் நெற்றியில் கைவைத்து அவள் அமைதிகொள்ள வேண்டுகிறார்.

மறுநாள் மாளிகைக்குச் செல்கிறார். அங்கே சந்தால் அவரை அழைத்துச் செல்கிறாள். பணிப்பெண் வீட்டை விட்டுப் புறப்பட்ட செய்தியைச் சொல்கிறார். சீமாட்டியின் இருக்கையில் சந்தால் அமர்கிறார். தான் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிவிக்கிறாள். தான் விரும்பியது தனக்குக் கிடைத்துவிட்டதாகக் கூறுகிறாள். நீ இப்போது இருப்பது போலவே தொடர்ந்து இருந்தால், நீ யாரையாவது ஒருவரை வெறுத்துக்கொண்டே இருப்பாய்… உண்மையில் நீ வெறுப்பது பிறரையல்ல உன்னையே என்கிறார் பாதிரியார். நான் விரும்பியது நடக்கவில்லை எனில் நானே என்னை வெறுக்கத்தான் செய்வேன் என்கிறாள் அவள் ஆங்காரத்துடன்.

சீமாட்டியின் மரணத்துக்குப் பாதிரி காரணம் என்று அந்தச் சிற்றூர் நம்புகிறது. ஆனால், சீமாட்டி மன அமைதியுடன்தான் மரணமடைந்துள்ளார் என்பது, சீமாட்டியை அவளது மன இறுக்கத்திலிருந்து விடுவிடுத்து இறைவனுக்கு அருகில் கூட்டிவந்துள்ள பணியைச் செய்துமுடித்த பாதிரிக்கு மட்டுமே தெரியும். அதற்குச் சான்றாக, பாதிரிக்குச் சீமாட்டி எழுதிய கடிதம் உள்ளது. பாதிரியோ அந்தக் கடிதத்தைக் காட்டி தனது தரப்பை நிரூபிக்க விரும்பவில்லை. அப்படியே இருந்துவிடுகிறார்.

பாதிரியின் உடல்நிலை மிகவும் மோசமாகிறது. அருகிலுள்ள நகரத்துக்கு சிகிச்சைக்காகச் செல்கிறார். நகரத்துக்குச் செல்வதற்காக ரயில் நிலையத்துக்கு பாதிரியை இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் செல்கிறான் சந்தாலின் உறவுக்கார இளைஞன். அந்த இரு சக்கர வாகனப் பயணம் பாதிரிக்கு ஒரு சாகசம் போல் தோன்றுகிறது. மிகச் சன்னமான நேரமே நிகழ்ந்தாலும் பாதிரியின் வாழ்வில் அந்தப் பயணம் பொருள்மிக்கதாகிறது. அதன் பின்னர் அவர் மருத்துவரைப் பார்க்கிறார். பாதிரிக்குப் புற்றுநோய் இருப்பது உறுதியாகிறது. பழைய நண்பர் ஒருவரைப் பார்க்கச் செல்லும் பாதிரி அங்கேயே உயிரை விட்டுவிடுகிறார்.

மொத்தத்தில், பாதிரியின் வாழ்க்கை பல கேள்விகளை எழுப்பிவிடுகிறது. எல்லோருக்கும் நல்லவராக நடக்க முயன்ற பாதிரியை ஏன் ஒருவரும் சரிவரப் புரிந்துகொள்ளவில்லை. பாதிரியைப் போன்றவர்கள் கதி இதுதானா? உலகம் சிறக்க அன்பொன்றே வழி என்று சொன்ன கிறிஸ்துவின் எண்ணம் தவறா? இந்த உலகம் நல்லவர்களுக்கானதில்லையா? மிகச் சரியான மனிதரான அந்தப் பாதிரி ஏன் மிகத் தவறான மனிதராகப் புரிந்துகொள்ளப்பட்டார்?

அந்தச் சிறிய ஊர் என்பதை முழு உலகமாகவும் அதன் அங்கத்தினர்களை உலக மக்களாகவும் பாதிரியை கிறிஸ்துவாகவும் கொள்ளும்போது, படம் விரிந்த தளத்தில் பொருள்தருகிறது.

படத்தில் இரண்டு மரணங்கள் இடம்பெறுகின்றன. ஒன்று, டாக்டர் தெல்பந்தேவின் மரணம், அது தற்கொலை எனச் சொல்லப்படுகிறது. அவர் கடவுள் நம்பிக்கையற்ற மனிதராகவே காட்டப்படுகிறார். அடுத்தது சீமாட்டியின் மரணம். அவர் கடவுளை உணர்ந்து அவர் அருகில் சென்ற வேளையில் மரணமடைகிறார். ஆனால், அவரது முகத்தில் இறப்புக்குப் பின்னர் ஒரு சிறிய புன்னகைகூட இல்லை. இவை எல்லாம் சேர்ந்து ப்ரஸ்ஸான் கடவுள் தொடர்பாக என்ன சொல்ல வருகிறார் என்பதைப் பற்றிக் கோடிட்டுக் காட்டுகின்றன. அதைச் சிந்திக்கும் வேளையில் நமக்குப் படம் வெவ்வேறு போதனைகளைத் தருகிறது. அவற்றுக்காகத் தான் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டியதிருக்கிறது.
*

திங்கள், ஜூலை 04, 2022

உத்திரமாய் மனதில் விழுந்த காதல்


நேற்றிரவு மனம் ஒருநிலையில் இல்லை. அண்மைக்காலமாகவே அடிக்கடி அப்படியொரு மனநிலை வாய்த்துவிடுகிறது. எதையுமே செய்யாமல் இருப்பது தொடர்பான ஒருவிதமான அலுப்பை மனம் உணர்கிறது. இரவில் ஏதாவது ஒரு படத்தைப் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். என்ன படம் பார்ப்பது என ஒரு முடிவுக்கு வராமலேயே மடிக் கணினியைத் திறந்தேன். அது என்னை ப்ரீஃப் என்கவுண்டர் என்னும் படத்தைப் பார்க்கச் சொன்னது. படத்தைத் தேர்ந்தெடுத்த பின்னர் அது குறித்த விவரங்களைப் பார்த்தேன். 

டேவிட் லீன் இயக்கிய பிரிட்டிஷ் படம் இது. இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்த ஆண்டில், 1945இல் வெளிவந்திருந்த படம். என்கவுண்டர் என்னும் சொல்லை வைத்துப் படம் கொலை தொடர்பானது என மனம் முடிவுசெய்திருந்தது. ஆனால், படம் திருமணத்துக்கு வெளியேயான காதல் தொடர்பானது. கறுப்பு வெள்ளைப் படம். வெறும் எண்பத்தாறு நிமிடங்கள்தாம் படம். 

லாரா என்னும் நடுத்தரவர்க்கத்துப் பெண்மணிக்கும் அவர் யதேச்சையாக ரயில் நிலையத்தில் சந்திக்கும் அலெக் என்னும் டாக்டருக்கும் இடையில் உருவாகும் காதல் தான் படத்தின் மையப் பொருள். லாராவுக்கு ஓர் அழகான குடும்பம் உள்ளது. அன்பான கணவர், ஆண் ஒன்று பெண் ஒன்று என இரு குழந்தைகள். அவள் வாரம் தோறும் வியாழக் கிழமை அன்று அருகிலுள்ள நகரத்துக்குச் சென்று ஷாப்பிங், ரெஸ்டாரெண்ட், சினிமா எனப் பொழுதைக் கழிக்கிறாள். அப்படி வெளியே செல்லும் போதுதான், அலெக் உடன் அவளுக்கு நட்பு உருவாகிறது. 

ஒருநாள் ரயில் நிலையத்தின் தூசு ஒன்று அவள் கண்ணில் விழுந்துவிடுகிறது. அதை எடுக்கும் முயற்சியில் அவளுக்கு உதவுகிறான் அலெக். கண்ணிலிருந்த தூசை எடுத்த அலெக் உத்திரம் போன்ற காதலை மனதில் போட்டுவிடுகிறான். முதல் சந்திப்பில் காதலாகவெல்லாம் அது மாறவில்லை. ஓர் அறிமுகம் மட்டுமே அப்போது கிடைக்கிறது. அறிமுகம் மெதுமெதுவாக நட்பாக மாறி, ஒரு கட்டத்தில் காதலாகக் கனிந்துவிடுகிறது. அலெக்குக்கும் குடும்பம் உள்ளது. மனைவியைப் பற்றிச் சொல்கிறான். ஆனால், அவனது குடும்பம் திரையில் காட்டப்படவில்லை. 


ஒரு வியாழக்கிழமை இருவரும் படத்துக்குச் செல்கிறார்கள். இன்னொரு முறை காரில் உலாப் போகிறார்கள். அருகிலுள்ள கிராமத்துக்குச் செல்கிறார்கள். அங்குள்ள ஆற்றுப் பாலத்தில் சிறிது நேரம்  செலவிடுகிறார்கள். இப்படி அவர்களது உறவு ஆழமாக வேர் விட்டு விடுகிறது. லாராவுக்கும் இந்தக் காதல் முதலில் தித்திப்பாகத்தான் இருக்கிறது. நாளாக நாளாக தான் செய்வது சரியா என்ற கேள்வி எழுந்துவிடுகிறது. இப்போது, இந்தக் காதல் தொடர்ந்தால் தனது வாழ்வு என்ன ஆகும் என்ற கேள்வி மனதில் எழ அச்சமும் நிம்மதியின்மையும் அவளை அலைக்கழிக்கின்றன. ஆனாலும், வியாழன் தோறும் அலெக்கைப் பார்க்காவிட்டால் அவளுக்கு மனம் இருப்புக்கொள்வதில்லை. தவறென்று தெரிந்தும் மனம் அதையே நாடுவதை எப்படித் தவிர்க்க என அந்தப் பேதைப் பெண்ணுக்கும் டாக்டர் பட்டம் பெற்ற அந்த ஆணுக்கோ தெரியவில்லை. ஆனாலும், எல்லா உறவுக்கும் ஒரு முடிவு வந்துதானே ஆகவேண்டும். அவர்கள் காதலுக்கும் ஒரு முடிவு வந்துவிடுகிறது. அந்த முடிவை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதைப் படத்தில் பாருங்கள். 

படத்தில் ரயில் நிலையம், அதன் பயணியர் உணவகம், திரையரங்கம், லாரா வீடு ஆகியவையே திரும்பத் திரும்ப இடம்பெறுகின்றன. கறுப்பு வெள்ளைப் படம் என்பதால் இயல்பாகவே காட்சிகள் ஈர்க்கின்றன. பயங்கரமான ஒலியெழுப்பியபடி தூசு பரப்பி ரயில் விரைந்து செல்லும் காட்சி அப்படியே மனதில் ஒட்டிக்கொள்கிறது. ஒரு நடுத்தர வயதுக்குரிய பெண்மணியின் உணர்வுகளை எல்லாம் அப்படியே நடிப்பில் கொண்டுவந்து, ஒரு பெண்மணியின் வாழ்வை நேரில் பார்ப்பது போன்ற எண்ணத்தைக் கொண்டுவந்துவிடுகிறார் லாராவாக நடித்திருக்கும் செய்லா ஜான்சன். அலெக்கின் நண்பருடைய அபார்ட்மெண்டில் ஓர் இரவு நேரத்தில் அலெக்குடன் லாரா இருக்கும்போது, அலெக்கின் நண்பர் திரும்பிவந்துவிடுகிறார். அலெக் பின் கதவு வழியே லாராவை அனுப்புகிறான். அந்த இரவில் அவளுடைய மனம் படும் பாடு... காதல் ஒரு பக்கம் சுயமரியாதை இழப்பு தந்த வலி ஒரு பக்கம் என அவளைத் துன்புறுத்துகிறது. 

நோயல் கவர்டு எழுதிய ஸ்டில் லைஃப் என்னும் நாடகமே இந்தப் படமாக உருமாறியுள்ளது. படத்தின் திரைக்கதையை நோயல் கவர்டு தான் எழுதியுள்ளார். அலெக்குடன் இறுதியாக விடைபெறும் தருணத்தில் சிவபூஜையில் கரடி போல் வந்து சதா பேசிக்கொண்டே இருக்கும்போது, லாராவின் தவிப்பை வசனங்களேயின்றி வெளிப்படுத்தும் வகையில் திரைக்கதையை அமைத்திருக்கிறார் நோயல் கவர்டு. தனது காதலனை இனி ஒருபோதும் பார்க்க முடியாது என்பதால் இறுதியில் அவனோடு விடைபெறும் தருணத்தை வாழ்வின் உன்னதத் தருணமாக நினைத்து எதிர்கொள்ளத் தயாராகும் லாராவால் அதை அப்படி எதிர்கொள்ள முடியவில்லை. தோழி ரூபத்தில் அந்தத் தருணம் தடைப்படுகிறது. அந்தக் கணம் உயிரை விட்டுவிடலாமா என்னும் எல்லைக்கே போய்விடுகிறாள் லாரா. 


மத்தியதர வயதில் வந்த காதல் லாராவையும் அலெக்கையும் பள்ளி மாணவர்கள் போல செயல்பட வைக்கிறது. அவர்கள் மனம் அந்தக் காதலின் உற்சாக வெள்ளத்தில் மிதக்கிறது. காதல் பூரணமாக அரும்பிய பின்னர் இது சரிப்பட்டுவருமா என்ற வேதனைத் தழல் நெருப்பை அள்ளி மனத்தில் வீசுகிறது. காதலுக்குப் பின்னான காதல் தொடர்பாக சமூகம் என்ன சொல்லும், அது சரியாக வருமா என்ற தனிமனிதர்களின் தத்தளிப்பு இன்னும் தொடரும் சூழலில் தானே உலகம் உள்ளது. அப்படியொரு தடுமாற்ற உணர்வுக்கும் தன்னிலை மறக்கச் செய்யும் காதல் உணர்வுக்கும் இடையில் அல்லாடும் மனிதர்களைப் பற்றிய படமா இது இருப்பதால் என்றென்றைக்குமான படமாகிறது. 

1946 ஆம் ஆண்டில் நடைபெற்ற கேன் திரைப்பட விழாவில் தங்கப் பனை விருதுவென்ற திரைப்படம் இது. டேவிட் லீன் இயக்கிய ஆலிவர் ட்விஸ்ட், த ப்ரிட்ஜ் ஆன் த ரிவர் க்வாய், லாரென்ஸ் ஆஃப் அரேபியா, டாக்டர்  ஷிவாகோ, ரேயான்ஸ் டாட்டர் ஆகிய படங்கள் குறிப்பிட்டுச் சொல்லத் தகுந்தவை. அகத்தில் நிகழும் மாற்றங்களை, எண்ணவோட்டங்களைக் காட்சிகளில் வெளிப்படுத்தி, உயர்தர திரைப்பட அனுபவம் தருவதில் மாஸ்டர் டேவிட் லீன். தன் கணவனிடம் லாரா வாக்குமூலம் போலச் சொல்வதாகத் தான் திரைக்கதை  அமைந்துள்ளது. அவளது மனவோட்டங்களையும் நினைவோட்டங்களையும் ஒரு நேர்த்தியான திரைக்கதைக்குள் கொண்டுவந்து அதை எப்போதும் பார்ப்பதற்கான சினிமாவாக மாற்றியதில் டேவிட் லீன் தனித்துத் தெரிகிறார்.     

ஞாயிறு, மே 30, 2021

த ஸ்ட்ரேஞ்சர் (1946): அவன் ஓர் அந்நியன்


இரண்டாம் உலகப் போரைப் பின்னணியாகக் கொண்ட பல படங்களைப் பார்த்திருக்கிறோம். ஆர்சன் வெல்ஸின் த ஸ்ட்ரேஞ்சர் அமெரிக்கப் படம் இதே பின்னணியைக் கொண்டிருந்தபோதும், இந்தப் படம் பிறவற்றிலிருந்து வித்தியாசப்படுகிறது. ஒரு வெகுசனப் படத்தில் நாஜி வதை முகாம்களின் காட்சி இடம்பெறுவது இந்தப் படத்தில் முதன் முறையாக நிகழ்ந்திருக்கிறது. படம் போர்க்குற்றவாளி ஒருவரை மையமாகக் கொண்டுள்ளது. ஆனால், இது ஒரு த்ரில்லர் வகைப் படமே. தூண்டிலில் புழுவை மாட்டி மீனைப் பிடிப்பது போன்ற ஒரு வேலையே முழுப் படமும். படத்தை இப்போது பார்த்தாலும் சுவாரசியம் குன்றாமல் பார்க்க முடிகிறது என்பதே படத்தின் சிறப்பாகப் படுகிறது. 

பொதுவாகவே, வண்ணப்படங்களைவிடக் கறுப்பு வெள்ளைப் படங்களே மனத்தைக் கவர்கின்றன. இந்தப் படம் 1946ஆம் ஆண்டு வெளிவந்திருக்கிறது. படம் ஒன்றரை மணி நேரம்தான். ஒரு சினிமா தரக் கூடிய அத்தனை திருப்தியையும் தருகிறது படம். மிகச் சில கதாபாத்திரங்கள். இரண்டாம் உலகப் போரின்போது இன அழிப்பில் ஈடுபட்ட போர்க் குற்றவாளியான ஃப்ரான்ஸ் கிண்ட்லர் என்பவரைக் கண்டுபிடிக்க வேண்டிய பெரிய பொறுப்பு போர்க் குற்றங்களுக்கான ஆணையத்தின் துப்பறிவாளர் வில்ஸனிடம் (எட்வர்ட் ஜி ராபின்சன்) விடப் பட்டிருக்கிறது. அவர் முன்னால் உள்ள பெரிய சவால் என்னவென்றால், ஃப்ரான்ஸ் கிண்ட்லர் தனது எல்லா அடையாளங்களையும் அழித்துவிட்டார். ஆகவே, அவர் எங்கே இருக்கிறார் எப்படி இருக்கிறார் யாராக இருக்கிறார் என்பவற்றைத் தெரிந்துகொள்வது அவ்வளவு எளிதன்று. ஆனாலும், அவரைக் கண்டுபிடித்தாக வேண்டும். 

படம் தொடங்கும்போது, அந்நியர் ஒருவர் கப்பலில் இருந்து இறங்குகிறார். கான்ரெட் மெய்னகி என்னும் அந்த மனிதர் தன்னை போலந்தைச் சார்ந்தவர் என்றும் தனது உடல்நலத்தின் பொருட்டு அங்கே வந்திருப்பதாகவும் தெரிவிக்கிறார். அவரை வில்ஸன் நியமித்த ஆள் தொடர்கிறார். மெய்னகி தேடி வந்த மனிதர் அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தின் ஹார்பர் நகரத்தில் வசிப்பதாகத் தகவல் கிடைக்கிறது. ஆகவே, மெய்னகி அங்கே செல்கிறார். அவரைத் தொடர்கிறார் வில்ஸன். 

ஹார்பர் நகரத்தில் மெய்னகி ஒருவரைச் சந்திக்கிறார். அவர் அங்குள்ள கல்லூரியில் பணியாற்றும் சார்லஸ் ரேன்கின் என்னும் பேராசிரியர். அன்று அந்தப் பேராசிரியருக்கும் அவரைக் காதலித்த மேரிக்கும் (லோரெட்டா யங்) திருமணம் நடைபெறுகிறது. அந்தத் திருமணத்துக்கு இடையே தன்னை வந்து சந்தித்த பேராசிரியரிடம் தன்னைத் தொடர்ந்த மனிதரைத் தான் கொன்றுவிட்டதாகக் கூறுகிறார் மெய்னகி. சிறிது நேரத்தில், பேராசிரியர் மெய்னகியைக் கொன்று புதைத்துவிடுகிறார். பேராசிரியர் யார், அவர் ஏன் மெய்னகியைக் கொல்கிறார், பேராசிரியருக்கும் மெய்னகிக்கும் என்ன உறவு, ஃப்ரான்ஸ் கிண்ட்லரை வில்சன் கண்டுபிடித்தாரா போன்ற கேள்விகளுக்கு விடை தேடி மீதிப் பயணத்தை மேற்கொள்கிறது திரைக்கதை. 

ஆர்சன் வெல்ஸ் பேராசிரியர் வேடத்தை ஏற்றிருக்கிறார். திருமண நாளன்று ஒரு கொலையைச் செய்துவிட்டு அதை மறைக்க எத்தனையோ பொய்களைக் கூறுகிறார் அவர். ஒவ்வொரு நெருக்கடி வரும்போதும், அவர் சிறிது சிறிதாக உண்மையைச் சொல்வதுபோல் தொடர்ந்து தன் மனைவியிடம் கூடப் பொய்யையே கூறுகிறார். மிதமிஞ்சிய காதலின் காரணமாக மேரியால் கணவன் கொலைகாரன் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர் எது செய்தாலும் அது நல்லதுக்கே என்று நம்புகிறார். 

பார்வையாளர்களுக்குப் பேராசிரியர் யார் என்பதை இயக்குநர் தெளிவுபடுத்திவிடுகிறார். ஆனால், மேரிக்கு அவர் யார் என்பது இறுதியில்தான் தெரியவருகிறது. திரைக்கதையின் சுவாரசியம் குன்றாமல் படம் முழுக்கவும் பயணப்படுகிறது. பேராசிரியருக்கும் கடிகாரம் பழுதுபார்த்தல் என்பதன் மீது பேரார்வம். அதை அவர் தொடர்ந்து செய்துவருகிறார். அந்தப் பேரார்வம்தான் அவர் யார் என்பதையும் காட்டிக்கொடுக்கிறது.

மரங்களடர்ந்த பகுதி, டவுன் கிளார்க் நடத்தும் ஸ்டோர், அங்கே போன் செய்துகொள்ளலாம், மதுவருந்தலாம், சூதாடலாம், பொருள்களை வைத்துச் செல்லலாம், தேவாலயம், மேரியின் வீடு இப்படிச் சில இடங்களே படத்தில் மீண்டும் மீண்டும் வருகிறது. கொலையாளிக்கும் துப்பறிவாளருக்கும் இடையே உள்ள சிறிய தூர இடைவெளியைத் திரைக்கதை சிறிதுசிறிதாக நிரப்பிவருகிறது. அந்த இடைவெளி முற்றாக இல்லாமல்போகும்போது படம் நிறைவடைந்துவிடுகிறது. 

விக்டர் ட்ரைவாஸ் எழுதிய கதைக்குத் திரைக்கதையை எழுதியிருக்கிறார் அந்தோனி வெய்ல்லர். ரஸ்ஸல் மெட்டி ஒளிப்பதிவை மேற்கொண்ட இந்தப் படத்தின் இசை ப்ரோனிஸ்லா காப்பர். சுவாரசியமாகப் பார்ப்பதற்கு உகந்த படம் இது. நல்ல சினிமா பார்க்க விரும்புவர்களுக்கான விருந்து இந்தப் படம். இந்தப் படத்துக்கான ஐஎம்டிபி ரேட்டிங் 7.4.  யூடியூபிலேயே படம் கிடைக்கிறது. பார்க்க விரும்புபவர்கள் பார்க்கலாம். 

திங்கள், மார்ச் 08, 2021

கொன்றது நீதானா சொல் சொல்...


கடற்கரையில் அந்தக் குடும்பத்தினர் உற்சாகமாகப் பொழுதைக் கழித்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த நேரத்தில் அங்கே வரும் சீருடைக் காவலர்கள் விசாரணைக்காக அந்தப் பெண்ணை அழைத்துச் செல்கிறார்கள். இப்படித்தான் த கேர்ள் வித் எ ப்ரேஸ்லெட் படம் தொடங்குகிறது. ஏன், என்ன, எதுவெனப் புரியாமல் நாம் நிமிர்ந்து உட்காரும்போது, இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் எனப் படம் தொடர்கிறது. லீஸ் பத்தைல் என்னும் அந்த இளம் பெண் தனது அருமைத் தோழியைக் கொன்றுவிட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறார். நீதிமன்றத்தில் விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. ஒரு த்ரில்லர் படமாக இருந்தாலும் நீதிமன்றக் காட்சிகளாகவே படம் நகர்கிறது. லீஸ் கொலைசெய்திருப்பாளா இல்லையா அவள் விடுவிக்கப்படுவாளா தண்டனை பெறுவாளா என்னும் கேள்விகளுடன் நாம் படத்தைத் தொடர வேண்டியுள்ளது.

நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களின் வாதத்தின் வழியே கொலைக் குற்றம் நடந்ததாகச் சொல்லப்படும் 2016 ஜூன் 7 அன்று என்ன நடந்தது என்று நமக்குச் சொல்கிறார்கள். ஆனால், கொலைச் சம்பவத்தின் எந்தக் காட்சியும் இறுதிவரை நமக்குக் காட்டப்படுவதேயில்லை. அந்தச் சம்பவத்தில் தொடர்புள்ள சடலத்தின் புகைப்படம் மட்டுமே நமக்குக் காட்டப்படுகிறது. ஆறேழு இடங்களில் குத்திக் கொலைசெய்யப்பட்டுள்ளார் அந்தப் பெண். குற்றம்சாட்டப்பட்டுள்ள லீஸ் எந்தக் குற்றவுணர்வும் இல்லாமல் இயல்பாக இருக்கிறார். விசாரணையின்போது, தேவைக்காக மட்டுமே பேசுகிறார். மற்றபடி உறைந்தநிலையிலேயே இருக்கிறார். இது பற்றி அரசாங்க வழக்கறிஞர் தனது அதிருப்தியை வெளிப்படுத்துகிறார். 

ஒரு குற்றச்செயலில் தொடர்புள்ளதாகச் சந்தேகிக்கப்படும் ஒருவர் மீதான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெறும்போது, அவரது நடத்தை பூரணமாகக் கவனிக்கப்படுகிறது. அவர் குற்றம்செய்தவரா இல்லையா என்பதை விசாரித்துத் தெரிந்துகொள்ளும் நடைமுறைகளில் அவரது நடத்தை எந்த வகையில் முக்கியத்துவம் பெறுகிறது என்பதைக் காட்சிகளின் மூலம் இயக்குநர் எடுத்துவைக்கிறார். ஆனால், இதையெல்லாம் வைத்து நீதியை முடிவுசெய்ய முடியாது என்பதையும் அவர் சொல்கிறார். 

பருவ வயதுப் பெண்ணின் நடத்தைகள் குறித்த புரிதலை உருவாக்கும் எண்ணத்தில் இந்தப் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. பருவ வயதினரின் உடம்பு பற்றிய புரிதல் முந்தைய தலைமுறையால் எப்படிப் புரிந்துகொள்ளப்படுகிறது என்பதையும் படம் விசாரிக்கிறது. லீஸுக்கும் அவளுடைய தோழிக்கும் இடையே உடல்ரீதியான மகிழ்ச்சிப் பரிமாற்றம் இருந்துள்ளது. கொலை நடந்ததற்கு முந்தைய நாளின் இரவில்கூட இருவரும் ஒரே படுக்கையைப் பகிர்ந்திருக்கிறார்கள்; முத்தமிட்டிருக்கிறார்கள்; பரவச நிலையை உணர்ந்திருக்கிறார்கள். ஆனால், அது குறித்து அவளுக்கு அசூயையோ தவறென்ற எண்ணமோ இல்லை. இருவரும் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை அளித்துக்கொண்டோம் என்றுதான் லீஸ் கூறுகிறாள். பெரும்பாலும் மூத்த தலைமுறையினரால் நிறைந்துள்ள அந்த நீதிமன்றத்தில் அந்த இளம் பெண்ணின் உண்மையான பேச்சு ஒருவிதமான நிச்சயமற்ற நிலையை ஏற்படுத்துகிறது.  

ஓர் இளம்பெண்ணின் வாழ்வில் எதிர்பாராத வகையில் நிகழ்ந்த சம்பவம் அவளுடைய அவளது குடும்பத்துடைய வாழ்க்கையை எப்படியெல்லாம் பாதித்துவிடுகிறது என்பதை யோசிக்கச் செய்யும் வகையிலேயே படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இளம் பெண் ஒருவருக்குத் தன் உடல் குறித்த பார்வை எப்படி இருக்கிறதோ அதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் புரிதல் முதிய தலைமுறையினருக்கு வேண்டும் என்னும் கோணம் படத்தில் நம் கவனத்தைக் கோருகிறது. 

இளம்பெண்ணின் தனிப்பட்ட சுகதுக்கங்களைப் பற்றி அறிய நேரும் பெற்றோருக்கு ஏற்படும் பதற்றம் அதே வேளையில் அதன் இயல்புத்தன்மை குறித்த உண்மையை உணர்ந்துகொள்ள வேண்டிய தேவை ஆகியவற்றைக் கதாபாத்திரங்கள் இயல்பாக வெளிப்படுத்தியுள்ளன. அடிப்படையில் சினிமா என்பது ஒரு புனைவாக இருந்தபோதும், அது நமது வாழ்வின் சிக்கலைத் தீர்த்துவைக்க ஏதாவது ஒரு வகையில் முயன்றுகொண்டே இருக்கிறது. இந்தப் படம் 2018இல் வெளியான த அக்குயிஸ்டு என்னும் பெயரில் வெளிவந்த அர்ஜெண்டினா நாட்டுப் படத்தின் மறு ஆக்கம். 

மாறும் காலத்துக்கு ஏற்ப மனிதர்களின் மனங்களும் மாறிக்கொண்டே வருகின்றன. சட்டதிட்டங்கள் பழைய மரபையும் பாரம்பரியத்தையும் மட்டுமே தூக்கிப் பிடித்துக்கொண்டு வறட்டுத்தனமான தீர்ப்புகளை வழங்கிக்கொண்டிருந்தல் தொடர்பான தீவிரமான கேள்வியை எழுப்பியிருக்கும் காரணத்தால் இந்தப் படத்தைப் பார்ப்பது மிகவும் பயனுள்ள செயலாகவே படுகிறது. எதேச்சையான சம்பவங்களைக் கண்டு அவற்றை குற்றம்சாட்டப்பட்டவரின் நடத்தையுடன் முடிச்சிட்டுக் குற்றங்களைப் பொதிந்துள்ள புதிரின் முடிச்சுகளை அவிழ்க்க முயல்வது ஒருவகையான அபத்தமே என்பதைப் படம் மிகவும் தெளிவாக உணர்த்துகிறது. 

சனி, பிப்ரவரி 29, 2020

உறவைத் துளைத்த தோட்டா


பதினேழாம் சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவில்,  2019 டிசம்பர் 15 அன்று கேசினோ திரையரங்கில் திரையிடப்பட்ட படம் எ சன், பிக் கெனெய்: அ பிஸ் என்பது இதன் அசல் தலைப்பு. பிரெஞ்சு நாட்டிலிருந்து 1956-ல் விடுதலை பெற்ற அரபு நாடான துனிசியாவில் 2011-ம் ஆண்டையொட்டிய பென் அலி காலத்தில் நடைபெற்ற உள்நாட்டுக் கலகப் பொழுதில் இந்தப் படத்தின் சம்பவங்கள் நடந்தேறுகின்றன.  அடிமைமுறையை ஒழித்த முதல் அரேபிய நாடு துனிசியா; அதுதான் மகளிருக்கு முதல் வாக்களிக்கும் உரிமையைத் தந்த அரபு நாடு; முறைப்படியான தேர்தலை நடத்தியது அது. அதே நாட்டில்தான் திருமணம் கடந்த உறவுக்கெதிரான சட்டமும் கடுமையாக உள்ளது. திருமணம் கடந்த உறவு நிரூபணமானால் ஐந்தாண்டுகள்வரை சிறைத்தண்டனை வழங்கும் சட்டமும் அமலிலுள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் இப்படத்தை உருவாக்கியுள்ளதாக இயக்குநர் மெஜி பசௌவ்வி ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார்.

துனிசியா, பிரான்ஸ், லெபனான், கத்தார் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இந்தப் படம் அரேபிய, பிரெஞ்சு மொழியில் எடுக்கப்பட்டிருக்கிறது. படத்தை எழுதி இயக்கியவர் மெஜி பசௌவ்வியின் முதல் படம் இது. படத்தின் திரைக்கதையில் மனித உணர்வுதான் மேலோங்கியிருக்கிறது. உணர்வின் தளத்திலேயே படம் நகர்ந்துசெல்கிறது. அரசியல், சமூகம், மதம், தனிமனித உறவு, உணர்வு ஆகிய அம்சங்களை இணைத்தோடும் திரைக்கதையில் ஒரு படகு போல் ஏற்ற இறங்கங்களுடன் பயணம்செல்கிறது படம்.

ஃபேர்ஸ் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் தலைமைச் செயல் அலுவலர். அவருடைய மனைவி மெரியெம் மனிதவள மேம்பாட்டுத் துறையில் உயரிய பொறுப்பில் பணியாற்றுகிறார். மெரியெம் மனிதவளத் துறையின் இயக்குநராகப் பதவி உயர்த்தப்படுகிறார். அதைத் தெற்கு துனிசியாவில் ஓரிடத்தில் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் கூடி உற்சாகமாகக் கொண்டாடுகிறார். கொண்டாட்டம் முடிந்து தங்கள் பிரியத்துக்குரிய மகன் அஜீஸுடன் தங்களது சொகுசு காரில் திரும்புகிறார்கள். காட்சியிலும் பின்னணியிசையிலும் அவர்களது உற்சாகமான மனநிலையை உணர முடிகிறது. மகிழ்ச்சியான அந்தப் பொழுதில் ஆயுதமேந்திய குழு ஒன்று நடத்தும் தாக்குதலில் புறப்பட்டுவந்த தோட்டா ஒன்று காரைப் பதம் பார்க்கிறது. அது காரோடு போயிருந்தால் கவலை இல்லை. தங்கள் ஆசை மகனைத் துளைத்துவிட்டு ஓய்வுகொள்கிறது அந்தத் தோட்டா.


எல்லாமும் ஒரு நொடியில் மாறிவிடுகிறது. அந்தக் குடும்பத்தின் ஒட்டுமொத்த மகிழ்ச்சியும் சட்டென்று பதங்கமாகிவிடுகிறது. அன்புப் புதல்வனைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைகிறார்கள். அடுத்த தோட்டா அங்கே காத்திருக்கிறது. இந்தத் தோட்டா எந்த உடம்பையும் துளைக்கவில்லை. ஆனால், மனங்களைத் துளைத்தெடுக்கிறது. அஜீஸின் கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டுவிடுகிறது. கல்லீரலை மாற்றியாக வேண்டும் என்கிறார் மருத்துவர். அதற்காக மேற்கொண்ட டிஎன்ஏ சோதனையில் அதிர்ச்சி தரும் தகவல் ஒன்று வெளிப்படுகிறது. இதுவரை தனது மகன் என்று நம்பிய மகன் தன் மகனல்ல எனும் உண்மை ஃபேர்ஸின் அடிவயிற்றைக் கலக்குகிறது.

அந்த உண்மை ஃபேர்ஸ், மெரியெம் இடையிலான அன்பையும் இணக்கத்தைம் கேள்விக்குறியாக்குகிறது. ஏதோவொரு ஆயுதத்தில் யாரோ ஒருவர் ஏவிய துப்பாக்கிக் குண்டு அந்தத் தம்பதியின் சுமுக உறவைத் துளைத்துவிடுகிறது. துனிசியா நாட்டின் சூழலை இந்தக் குடும்பம் பிரதிபலிக்கிறது. இப்படிப் பயங்கரவாதச் செயலால் எத்தனை எத்தனையோ குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன. படம் அரசியல் பிரச்சினையைத் தொட்டுச் செல்கிறது. ஆனால், அத்துடன் மட்டும் நிற்கவில்லை. பெண் விடுதலை, உறுப்பு மாற்று சிகிச்சை, இஸ்லாம் அங்கீகரிக்காத ஆண் பெண் உறவு குறித்த பல அம்சங்களையும் தனித்தனி அடுக்குகளாகப் படம் கொண்டுள்ளது.

முதன்மை வேடங்களில் நடித்திருக்கும் சமி பவ்ஜிலா, நஜிலா பென் அப்துல்லா இருவரும் ஒரு தம்பதியாகத் தாங்கள் வெளிப்படுத்த வேண்டிய உணர்வுகளை மிகத் துல்லியமாக வெளிப்படுத்தியுள்ளார்கள். தன் மகனைக் காப்பாற்ற முடியாமல் கையறு நிலையில் நிற்கும் வேதனையையும், கணவனது நடவடிக்கைகளில் சந்தேகம் தொனித்தபோதும் அதை முழுமையாகக் கேள்வி கேட்க முடியாத நிலையையும் முழுமையாக நடிப்பில் கொண்டுவந்துள்ளார். அதே போல் சமி பவ்ஜிலாவும் தான் மகனாகக் கருதும் தன் மகன் தனக்குப் பிறந்தவனல்ல என்ற உண்மையை அறிந்தபிறகும் அவனை வளர்த்த பாசத்தால் அவனைக் காப்பாற்றத் துடிக்கும் துடிப்பைத் திறம்பட வெளிக்காட்டியுள்ளார். உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக சமூகத்தின் விளிம்புநிலையில் உள்ள மனிதர்களைக் கிஞ்சித்தும் இரக்கவுணர்வின்றி ஒரு கூட்டம்  பயன்படுத்தும் தன்மையைப் படம் சுட்டுகிறது. அரசியல், மதக் கொள்கைகள் எப்படித் தனிமனித வாழ்வைக் கூறுபோடுகின்றன என்பதை இந்தப் படம் மிகவும் நாகரிகமாகவும் அதே வேளையில் நுட்பமாகவும் மனிதநேய உணர்வு தொனிக்கும் வகையிலும் காட்சிப்படுத்தியுள்ளது.

சனி, ஜனவரி 25, 2020

தோல்வி நிலையென நினைத்தால்…

டிசம்பர் 2019-ல் நடைபெற்ற சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட பெரும்பாலான படங்கள் ‘ஏன்டா படம் பார்க்க வந்தோம்’ என எண்ணவைத்தன. விதிவிலக்காக இருந்தது டிசம்பர் 13 அன்று கேசினோவில் திரையிடப்பட்ட ஜெர்மனியப் படமான பலூன் (2018). மைக்கேல் ஹெர்பிக் இயக்கிய இந்தப் படம் விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டிருந்தது. இரண்டு மணி நேரம் போனதே தெரியாமல் படத்துடன் படமாக ஒன்ற முடிந்தது.

கிழக்கு ஜெர்மனியிலிருந்து மேற்கு ஜெர்மனிக்குத் தப்பிப்போக கோந்தா, பீட்டா இருவருடைய குடும்பங்களும் முடிவுசெய்கின்றன. பிரம்மாண்டமான வெப்பக் காற்று பலூனை உருவாக்கி அதில் தப்பிச் செல்லலாம் என முடிவுவெடுத்து பலூனை உருவாக்கிவிட்டனர். காற்றின் திசை தங்களுக்குச் சாதகமாகும் நாளுக்காகக் காத்திருக்கின்றனர். அப்படியொரு நாள் வருகிறது. ஆனால், பலூன் எட்டுப் பேரைத் தாங்காது என்பதால் திட்டத்தை நிறைவேற்றுவது கடினம் என்கிறார் கோந்தா. முன்வைத்த காலைப் பின்வைக்க பீட்டாவுக்கு விருப்பமில்லை. தன் குடும்பத்தினருடன் செல்ல முடிவெடுக்கிறார். யாருமறியாமல் இரவுடன் இரவாகப் புறப்படுகிறார்கள். வனப் பகுதிக்குச் சென்று காரிலிருந்து பலூனை இறக்கி, பறக்கத் தொடங்குகிறார்கள். எல்லாம் கூடிவந்த வேளையில் இயற்கை சதி செய்கிறது. உயரப் பறந்த பலூன் சட்டென்று தாழ்கிறது. சரசரவென்று கீழ் நோக்கி வருகிறது. எரிபொருள் தீர்ந்துபோகிறது. அவர்களது முயற்சி தோல்வியில் முடிகிறது. தரையில் வந்து விழுந்து விடுகிறார்கள்.

அவர்களது கனவு ஒருமுறை முறிந்துபோகிறது. ஆனால், முறிந்த கனவை எண்ணி நொடிந்துபோகவில்லை பீட்டா. மீண்டும் முயல விரும்புகிறார். இப்போது நிலைமை முன்பைவிடச் சிக்கலாகிறது. ஒருபுறம் இவர்கள் விட்டுவந்த தடயத்தைப் பின் தொடர்ந்து ராணுவம் அவர்களைத் தேடிக் கொண்டிருக்கிறது. மறுபுறம் யாருமறியாமல் மீண்டும் ஒரு பலூனை உருவாக்கும் முயற்சியில் இறங்குகிறார்கள். இந்த இரண்டாம் முயற்சி வென்றதா இல்லையா என்பதே படத்தின் கிளைமாக்ஸ்.

உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. 1976 முதல் 1988 வரையான காலகட்டத்தில் சுமார் 38,000 தப்புதல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் சுமார் 462 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கிழக்கு ஜெர்மனியிலிருந்து மேற்கு ஜெர்மனிக்குத் தப்பிப்போக முயன்றவற்களைத் துரோகிகளாகக் கருதியது ஜெர்மனியின் ஜனநாயகக் குடியரசு. எனவே, அது எல்லையில் கண்காணிப்பைப் பலமாக வைத்திருந்தது. அதை மீறித் தப்பித்துப்போவதென்பது பெரிய துணிகரச் செயலே. அந்தச் செயலில் முதல் முறை தோற்றார் பீட்டா.
முதன்முறை இரவில் வீட்டை விட்டு வெளியேறும் வேளையில், மீண்டும் திரும்ப வர மாட்டோம் என்று தெரிந்தும் வீட்டைச் சுத்தமாக வைத்துவிட்டே பீட்டாவுடைய மனைவி தோரிஸ் புறப்படுகிறார். தன்னை யாரும் மோசமான குடும்பப் பெண் என்று சொல்லிவிடக் கூடாது என்று என்பதில் அவர் முனைப்புடன் இருக்கிறார். பலூனில் ஏற மறுக்கும் இளைய மகனிடம் மேற்கே அவன் விரும்பிய பிஎம்எக்ஸ் பைக் வாங்கித் தருவதாகச் சொல்லிச் சம்மதிக்கவைக்கிறார். அந்த முயற்சி தோற்றபோது அந்த மகனுக்குத் தனக்கு பிஎம்எக்ஸ் கிடைக்காமல் போய்விட்டது என்பதே கவலை. முதல் மகன் ஃபாங்க், தன் காதலிக்குக் கடிதம் எழுதி அவளுடைய வீட்டின் தபால் பெட்டியில் போட்டுவிட்டுச் செல்கிறான்.  முயற்சி தோற்றதால், மறுநாள் காலை அதை அவனே வந்து எடுக்க நேர்கிறது. கடிதத்தைத் தபால்பெட்டியில் போடும் செயல் எளிதாக இருந்தது; ஆனால் கடிதத்தை எடுக்கத்தான் சிரமப்படுகிறான்.

இரண்டாம் முயற்சியின் போது நாமே கிழக்கிலிருந்து மேற்குக்குத் தப்பித்துப் போக முயல்வது போன்ற எண்ணத்தை உருவாக்கிவிடுகிறது திரைக்கதையின் போக்கு. பின் தொடர்ந்து வரும் நிழல்போல் ராணுவத்தினர் ஒவ்வொரு துப்பாகத் துலக்கிக்கொண்டே வருகிறார்கள். எந்த நேரத்திலும் பீட்டாவின் குடும்பம் ராணுவத்திடம் மாட்டிக்கொள்ளுமோ என்ற பதைபதைப்புடன் திக் திக்கென ஒவ்வொரு நொடியும் நகர்கிறது. முதன்முறை ஒரு குடும்பம் என்றால், இரண்டாம் முறை கோந்தாவின் குடும்பமும் சேர்ந்துகொள்கிறது. மொத்தம் எட்டுப் பேர். ராணுவத்தினர் கண்ணில் மண்ணைத் தூவி பலூனில் ஏறிவிடுகிறார்கள். மொத்தப் பார்வையாளர்களுக்கும் அவர்கள் எப்படியாவது தப்பிவிட வேண்டுமே என்ற எண்ணம் நெஞ்சில் நிறைந்து கிடக்கிறது. எதிர்பார்ப்பு  வீணாகவில்லை. 
முதலில் இடறிய பீட்டாவின் முயற்சி இறுதியில் துலங்கியது. ஏனெனில், வாழ்வில் சிலவேளை எல்லாச் செயலும் இடறும்; சில நேரம் தொட்டதெல்லாம் துலங்கும். எப்போது இடறும், எப்போது துலங்கும் என்பதை நாமறியாததால் வாழ்வு ருசிகரமாகிறது.  

வியாழன், டிசம்பர் 19, 2019

CIFF 2019: ஒரு குப்பைப் படம்

இன்று காலை 11 மணிக்கு தேவியில் X – The eXploited என்னும் ஹங்கேரி நாட்டுத் திரைப்படம் பார்த்தேன். அரசியல் தூவப்பட்ட கிரைம் திரில்லர் வகைப் படம். அடுக்கடுக்காக நடைபெற்ற பல தற்கொலைச் சம்பவங்கள் கொலை என காவல் துறை சந்தேகிக்கிறது. அதைத் துப்புத் துலக்க ஒரு பெண் அதிகாரி வருகிறார். அவருடைய கணவரும் தற்கொலை செய்துகொண்டதாகச் சொல்கிறார்கள். ஆனால், அதுவும் ஒரு கொலை என்பது அவருக்குத் தெரியவருகிறது. இதனால் மனப் பாதிப்பு ஏற்படும் அந்த அதிகாரி அத்துடன் குற்றச் செயல்களின் பின்னணியைக் கண்டுபிடிக்கிறார். 

அங்கொன்றும் இங்கொன்றுமாக மாற்றி மாற்றிக் காட்சிகளைக் கோக்கும் பாணியில் படக் காட்சிகள் வந்துசெல்கின்றன. அரசுக்கெதிராக சாதாரண மனிதர்கள் எதையும் செய்ய முடிவதில்லை என்பதையே படம் பேசுகிறது. அதிகாரிகளாலும் எதையும் செய்ய முடியாது என்பதே யதார்த்தம். இந்தப் படத்தின் உருவாக்கம் இதைப் பார்க்கும்படி செய்தது. 
அடுத்து கேசினோவில் Despite the Fog என்னும் இத்தாலிப் படம். முகம்மது என்னும் சிறுவன் எல்லை தாண்டிவந்துவிடுகிறான். கடலில் ரப்பர் படகு ஒன்றில் வரும்போது ஏற்பட்ட விபத்து ஒன்றில் அவனுடைய பெற்றோர் இறந்துவிடுகிறார்கள். அவனை சமீர் என்னும் இளைஞன் காப்பாற்றுகிறான். அவன் சுவீடன் செல்ல வேண்டும் எனச் சொல்வதால் சிறுவனும் அங்கே செல்ல நினைக்கிறான். இதனிடையே ஒரு கிறித்தவத் தம்பதியிடம் முகம்மது வந்துவிடுகிறான். அந்தத் தம்பதி தனது மகனை இழந்திருந்தவர்கள். எனவே அந்தப் பெண்ணுக்கு தன் மகனே மீண்டும் வந்ததுபோல் திருப்தி ஏற்படுகிறது. கிறித்தவ வீட்டில் வாழும் இஸ்லாமியச் சிறுவன் என்னென்ன சிக்கல்களை எதிர்கொள்கிறான், அவனால் அங்கே இருக்க முடிந்ததா என்பதைப் படம் பேசுகிறது. கோவா திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட படம் என நம்பிச் சென்றால் படம் மிகவும் சுமார் ரகம். 

இறுதியாக கேசினோவில் இரவும் 7 மணிக்கு The Bra என்னும் மௌனப் படம். சில படங்கள் வசனமாகப் பேசிக் கொல்லும் இந்தப் படம் மௌனமாகக் கொன்றது. சரியான குப்பைப் படம். ஆனால் உலக சினிமா திரையிடலுக்குத் தைரியமாக அனுப்பியிருக்கிறார்கள். ரயில் இன்ஜின் டிரைவர் தனது இன்ஜினை ஓட்டிச் செல்லும்போது ஒருநாள் அவரது ரயிலில் பெண் ஒருவரின் மேல் உள்ளாடை மாட்டிக்கொண்டுவிடும். அது யாருக்குரியது என அவர் தேடி அலையும் அலைச்சல்தான் படம். சரியான பாடாவதிப் படம். 

CIFF 2019: மனிதரை ஆளும் ஆவணம்

இன்று (டிசம்பர் 17) தேவி தியேட்டரில் மதியம் 2 மணிக்கு Holy Boom என்னும் கிரேக்கத் திரைப்படம் பார்த்தேன். சூழல் காரணமாக வேறு நாட்டில் வசிக்கும் பெண் ஒருவர். அவருடைய கணவன் விபத்து ஒன்றில் இறந்துவிடுகிறான். அவனது சடலத்தை வாங்க வேண்டும் என்றால் இவரது பாஸ்போர்ட் தேவைப்படுகிறது. அதை ஒரு குழு வைத்துக்கொண்டு தர மறுக்கிறது. கணவனின் சடலம் மருத்துவமனையில் கிடக்கிறது. சிறு குழந்தையை வைத்துக்கொண்டு அவள் எப்படிச் சமாளிக்கிறாள் என்பது கதை. இதைத் தவிர இன்னும் சிலர் படத்தின் முக்கியப் பாத்திரங்கள். வேறு நாட்டில் அகதிகள் போல் வாழும் மனிதர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களைப் பேசிய படம். 

கிரேக்கப் பெண்ணைக் காதலிக்கிறான் கறுப்பின இளைஞன் ஒருவன். அவனது சிக்கலைப் போக்கப் பணம் தேவைப்படுகிறது. காதலியும் அவனும் சேர்ந்து தேவாலயக் காணிக்கையைத் திருடத் திட்டமிடுகிறார்கள். திருடிவிட்டு வரும் வழியில் காதலன் மாட்டிக்கொள்கிறான். அவனைச் சுட்டுக்கொன்றுவிடுகிறார்கள். அவனது ரத்தம் வழிந்தோடிய சாலையில் கிறிஸ்தவர்களின் ஆராதனைப் பவனி நடைபெறுகிறது. இப்படி வாழ்வின் அபத்தத்தைப் பேசும் படம் இது

சிறு வயதிலேயே தன் குழந்தையைப் பறிகொடுத்த முதிய பெண் ஒருவர் வருகிறார் இவர் அனைவருக்கும் உதவுகிறார். கிரேக்கப் பெண்ணுக்கும் அவருடைய காதலனுக்கு அடைக்கலம் தருகிறார். தனியே வீட்டில் அழும் குழந்தை குறித்து வருத்தம் கொள்கிறார். ஒருமுறை அந்தத் தாய் காவல் துறையில் மாட்டிக்கொள்கிறார். அப்போது குழந்தையின் அழுகை பொறுக்க மாட்டாமல் அதைக் கறுப்பின இளைஞன் மூலம் தூக்கிவந்து விடுகிறார் அந்த முதிய பெண்மணி. இந்த நேரத்தில் தாயின் பேச்சைக் கேட்டு குழந்தையைக் காண வீட்டுக்கு வரும் காவல் துறை அங்கே குழந்தை இல்லாததைக் கண்டு தாய் பொய் சொல்லி ஏமாற்றுகிறாள் என நினைக்கிறது.  

CIFF 2019: மனிதத் தவறுகள் குற்றங்களல்ல

இன்று (டிசம்பர் 16) காலையில் எந்தப் படமும் பார்க்கவில்லை. மதியம் 2:45 மணிக்கு கேசினோவில் Zero Floor என்னும் ஈரானியப் படம் பார்த்தேன். மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டிருக்கும் சிறுவன் ஒருவன் இறந்துவிடுகிறான். அவனுடைய அப்பாவும் அம்மாவும் விவாகரத்துப் பெற்றவர்கள். அப்பா தன் தம்பியுடனும் அம்மா தன் தந்தையுடன் மருத்துவமனைக்கு வருகிறார்கள். அவர்களுக்குள் ஏற்படும் வாக்குவாதங்களும் சிக்கல்களும் தான் படம். அதை மீறி அந்தப் பையனை எப்படிப் பெற்று இறுதிச் சடங்கு செய்கிறார்கள் என்பதையே திரைக்கதை சித்தரித்திருந்தது. 
அடுத்ததாக, Irina எனும் பல்கேரிய நாட்டுத் திரைப்படம். உணவகம் ஒன்றில் பணிபுரியும் பணிப்பெண். கணவன் ஒரு சிறு குழந்தை ஆகியோரைக் கொண்ட சிறு குடும்பம். அவனுடனேயே அவளுடைய தங்கையும் வசிக்கிறாள். அவள் மட்டுமே சம்பாதிக்கிறாள். அவள் உணவகத்தில் மேற்கொள்ளும் சிறு சிறு திருட்டால் வேலை போய் விடுகிறது. பணத்துக்காக வாடகைத் தாயாகிறாள். ஒரு செல்வந்தத் தம்பதியின் குழந்தையைச் சுமக்கிறாள். மனிதர்கள் அவர்தம் நிறைகுறைகள் எனப் படம் செல்கிறது. 

இறுதியாக Summer of Changsha என்னும் சீனப் படம் பார்த்தேன். துப்பறியும் அதிகாரி இருவர். ஒரு கொலை நடக்கிறது. அதைத் துப்புத் துலக்கும்போது அது ஒரு மருத்துவரின் சகோதரன் என்று தெரியவருகிறது. அந்த மருத்துவரின் கனவில் அந்தச் சகோதரன் வந்து தன் உடன் எங்கெங்கு கிடக்கிறது என்பதைச் சொல்கிறான். கொலையாளி யார் எனத் துப்புத் துலக்குகிறார்கள். இதற்கிடையே மருத்துவருக்கும் துப்பறியும் அதிகாரிக்கும் காதல் வருகிறது. அவருடைய காதலி ஏற்கெனவே இறந்துவிட்டாள். மருத்துவரின் குழந்தையும் இறந்திருக்கும். இருவருக்குமான குற்றவுணர்வு காதல் என்று படம் சென்றது. மிக நிதானமான, சுமாரான படம்.  

புதன், டிசம்பர் 18, 2019

CIFF 2019: அவனுக்குப் பிறக்காத அவனுடைய மகன்

இன்று (டிசம்பர் 15) முழுக்க கேசினோ தியேட்டரிலேயே பொழுதை ஓட்டியாகிவிட்டது. காலையில் முதலில் Alice என்னும் படம் பார்த்தேன். பிரெஞ்சுப் படம். கணவனின் துரோகத்தை அறிந்த மனைவி தானும் அப்படியொரு தகாத பாதைக்குச் செல்லும் சூழலை எதிர்கொண்ட படம். தனது பணத்தை எல்லாம் ஊதாரித் தனமாகச் செலவு செய்துவிட்ட கணவனால் குடும்பமே மூழ்கிவிடும் சூழல் வந்து வாய்க்கிறது. கணவனும் எங்கேயோ சென்றுவிட்டான். அவளுடைய பெற்றோரும் உதவ முடியாத நிலையில் அவள் பாலியல் தொழிலில் ஈடுபடுகிறாள். அந்தத் தொழிலில் அவளுக்கு ஒரு தோழியும் கிடைக்கிறாள். அந்தத் தோழியிடம் தான் பணத்தை முழுவதும் கணவன் இழந்தான் என்பது இறுதியில் தெரிகிறது. ஒரு கட்டத்தில் மீண்டும் மனைவியைத் தேடி கணவன் வருகிறான். அவனுக்கு மனைவியின் செயல்பாடுகளும் தெரியவருகின்றன. இருவருமே ஒரு புதிய வாழ்க்கையை வாழ முடிவுசெய்துகொள்ளலாம் என்கிறான் கணவன். அந்த மனைவியோ அவளுடைய தோழியுடன் சென்று புதிய வாழ்வை அமைத்துக்கொள்கிறாள். 
அடுத்ததாக Just 6.5 என்னும் ஈரான் திரைப்படம். போதைப் பொருள் கடத்தல் தான் படத்தின் அடிப்படை. முக்கியப் போதைப் பொருள் கடத்தல்காரரைத் தேடி ஓடும் காவல் துறையினர் இருவர் செல்கிறார்கள். முக்கிய நபருக்குப் பதில் வேறொரு நபர் கிடைக்கிறார். அவருக்கே இறுதியில் மரண தண்டனை விதிக்கப்படுகிறது. அதிகார மட்ட ஊழல், நேர்மையற்ற நீதி எனப் படம் செல்கிறது. வசனம் வசனம் வசனம் எனப் பேசித் தீர்க்கிறார்கள். சப் டைட்டிலை வைத்துக்கொண்டு பெரிதாகப் படத்தைப் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு சப் டைட்டில் தொடர்ந்து திரையில் தென்பட்டுக்கொண்டேயிருந்தது. 
அடுத்து, Charcoal என்னும் ஈரானியத் திரைப்படம். மாமன் மகளைத் திருமணம் செய்துகொள்ள வேண்டிய காரணத்துக்காக நகைகளைத் திருடி சிறைக்குச் சென்றுள்ள மகன், அவருடைய தந்தை இருவரும் மையப் பாத்திரங்கள். அவர் கரி வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கிறார். அவருடைய எதிரி நகைக்கடைக்காரர். மகனையும் குடும்பத்தையும் காப்பாற்ற கடத்தலில் ஈடுபட வேண்டிய சூழலையும் எதிர்கொள்கிறார் அந்தத் தந்தை. படத்தின் தொடக்கத்தில் மகனைச் சிறையிலிருந்து அழைத்துவரும் தந்தை இறுதியில் அவரே சிறைக்குச் சென்றுவிடுகிறார். அத்துடன் படம் நிறைவுபெறுகிறது. 
இறுதியாக, A Son என்னும் துனிசியா நாட்டுப் படம். வேறுபட்ட கதைக் களம். மகிழ்ச்சியுடன் மனைவி மகனுடன் காரில் செல்கிறார் அவர். திடீரெனப் பயங்கரவாதத் தாக்குதல் காரணமாகப் புறப்பட்டுவரும் தோட்டா ஒன்று மகனைப் பதம் பார்த்துவிடுகிறது. உயிருக்குப் போராடும் மகனுக்கான சிகிச்சையில் அவனது கல்லீரலை மாற்ற வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. அந்த பரிசோதனையில் அந்த மகன் அவருக்குப் பிறக்கவில்லை என்ற உண்மை தெரிகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு அவருடைய மனைவியில் அலுவலக நபர் ஒருவர் மூலம் அந்தக் குழந்தை பிறந்துள்ளது. இந்தச் சூழலை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதே படம். இதனிடையே லிபியா இரக்கமற்ற போர் ஆகியவை குறித்த சித்தரிப்புகளும் இடம்பெற்றுள்ளன. தீவிரமான படம். பார்த்த ஓரிரு நல்ல படங்களில் இதுவும் ஒன்று.    

லேட்டஸ்ட்

ரஜினியாவாரா விஜய்?

தொடர்பவர்