இந்த வலைப்பதிவில் தேடு

அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், அக்டோபர் 29, 2025

ரஜினியாவாரா விஜய்?

1975இல் திரையுலகுக்கு ரஜினி காந்த் வந்தார். 50 ஆண்டுகளாகிவிட்டன. இந்த ஐம்பதாண்டுகளில் தீபாவளிக்கு ரஜினியின் 19 தமிழ்ப் படங்கள் வெளியாகியுள்ளன. அதுவும் 1995வரை 18 படங்களும் நீண்ட நாள்களுக்குப் பிறகு 2021இல் அண்ணாத்தயும் வெளியானது.

முதன்முதலில் 1976இல் மூன்று முடிச்சு வெளிவந்தது. 1978 தீபாவளிக்கு, மூன்று ரஜினி படங்கள் திரைக்கு வந்துள்ளன. 1976 முதல் 1981வரை தொடர்ந்து ஆறு ஆண்டுகளும் [ஆறு புஷ்பங்கள் (1977); தப்புத் தாளங்கள், அவள் அப்படித்தான், தாய்மீது சத்தியம் (1978); அன்னை ஓர் ஆலயம் (1979); பொல்லாதவன் (1980); ராணுவ வீரன் (1981)], 1983முதல் 1989வரை தொடர்ந்து ஏழு ஆண்டுகளும் [தங்க மகன் (1983), நல்லவனுக்கு நல்லவன் (1984), படிக்காதவன் (1985), மாவீரன் (1986), மனிதன் (1987), கொடிபறக்குது (1988), மாப்பிள்ளை (1989)] தீபாவளிக்குப் படங்களை வழங்கிய ரஜினிக்கு 1990, 1993,1994 ஆகிய ஆண்டுகளிலும், அதன் பின்னர் 2020 வரையிலும் ஒரு படம்கூடத் தீபாவளிக்குத் திரைக்கு வரவில்லை.

1990 தீபாவளிக்குத் திரைப்படம் வராததால் அவருடைய ரசிகர்கள் அந்தத் தீபாவளி நாளைத் துக்க நாள் எனச் சொல்லித் திரிந்தார்கள். மதுரையில் சுவரொட்டி ஒட்டப்பட்டதாகக்கூட தகவல் உண்டு. அடுத்த ஆண்டு 1991இல் தளபதியும், 1992இல் பாண்டியன் திரைப்படமும் ரசிகர்களுக்குப் பார்க்கக் கிடைத்தன. இன்னும் அவர் வீட்டு முன்னர் தீபாவளி அன்று ரசிகர்கள் சிலர் திரள்கிறார்கள். இது ரஜினியின் நிலைமை.
இப்போது விஜய் கதைக்கு வருவோம். அவர் நடித்த 12 படங்கள் தீபாவளியை முன்னிட்டு வெளியாயின. முதலில் தீபாவளிக்கு வந்த படம் சந்திரலேகா (1995). தீபாவளி அன்று ரஜினியின் முத்து படம் வெளியான அதே தீபாவளிக்கு வந்து படுதோல்வியடைந்த படம் இது. அதன் பின்னர் சில ஆண்டுகள் கழித்து 2000இல் பிரியமானவளே வந்தது. 2001இல் ஷாஜகான் தொடங்கி, 2019இல் பிகில் வரை, பகவதி (2002), சிவகாசி (2005), அழகிய தமிழ் மகன் (2007), வேலாயுதம் (2011), துப்பாக்கி (2012), கத்தி (2014), மெர்சல் (2017), சர்கார் (2018) என மொத்தம் 10 படங்கள் வெளியாயின. மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாகப் படம் வெளியானதே ஒரே ஒரு முறைதான். அதுவே இருபது ஆண்டுகள் ஆகிவிட்டன.
திரைப்படத் துறையில் இன்றுவரை ஆதிக்கம் செலுத்துவரும் ரஜினி பொதுமேடைகளில் எந்தவித பெரிய ஒப்பனையும் இன்றி முடியற்ற தலையுடன் தோன்றிவிடுகிறார். அப்படிப்பட்ட நடிகர் ரஜினியையே அரசியல் துண்டைக்காணோம் துணியைக் காணோம் என ஓடவைத்துவிட்டது. ஆனால், நடிகர் விஜய் ஒப்பனையற்று ரசிகர்களைச் சந்திக்கத் துணியாமல் முழு ஒப்பனையுடன் அதுவும் குளிர்சாதனக் கூண்டு வண்டியில் வந்து மக்களைச் சந்திக்கிறார். அப்படிப்பட்ட விஜய் அரசியல் மாற்றத்துக்கான தலைவர் என்று அறியாமையாலோ அவசியத்தாலோ நம்பும் மனிதர்கள் கலர் கலராக ரீல் விடுகிறார்கள். அவரது செல்வாக்கின் ஆற்றலை மிகைப்படுத்திக் கூறுகிறார்கள். எல்லாம் 2026 தேர்தல் முடிவு வரும் வரையில்தான். முடிவு வந்த பின்னர் அவருக்கான ஆதரவு வெட்டவெளிச்சமாகிவிடும். அது அஞ்சு … ஆறு… விழுக்காடாக இருக்கலாம்… அதுவரை கம்பு சுத்துபவர்கள் சுத்திக்கொண்டே இருக்கலாம்.

திங்கள், அக்டோபர் 27, 2025

ராமராஜனுக்கும் விஜய்க்கும் முதலமைச்சர் ஆசை


நடிகர் விஜய் போலவே மக்கள் செல்வாக்கு பெற்ற நடிகராக எண்பதுகளின் இறுதியில் இருந்தார் ராமராஜன். இளையராஜா இசையமைத்த

அவருடைய படங்களின் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் பரவின. விஜய் போல் அவர் அரசியலில் நடிகராக இல்லை. அவருக்கு உண்மையிலேயே அரசியல் ஆர்வம் இருந்தது. அதிமுகவில் இணைந்து 1998இல் திருச்செந்தூர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார்.
திருச்செந்தூரில் அப்போது, மொத்தம் 12 பேர் மனுத் தாக்கல் செய்தனர். அதில் ஒருவரது மனு தள்ளுபடியானது. நான்கு பேர் மனுவைத் திரும்பப் பெற்றுக்கொண்டனர். இறுதியில் களத்தில் ஏழு பேர் எஞ்சினர். ஊரகப் பகுதியின் இளம்பெண்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற நடிகர் ராமராஜனை எதிர்த்து எந்தப் பெண்ணும் போட்டியிடவில்லை. போட்டியிட்ட ஏழு பேரும் ஆண்கள்.
1998 பிப்ரவரி 22 அன்று தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் மார்ச் 2 அன்று எண்ணப்பட்டு,முடிவு அறிவிக்கப்பட்டது.
அப்போது, திருச்செந்தூரின் மொத்த வாக்காளர்கள் 10,14,366 பேர். அவர்களில் 53.95 விழுக்காட்டினர் வாக்களித்தார்கள். 5,47,234 வாக்குகள் பதிவாயின. அவற்றின் செல்லுபடியானவை 5,35,637 வாக்குகள்.
அவற்றில் நடிகர் ராமராஜன் 2,64,290 (49.34%) வாக்குகளைப் பெற்று, தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் தனுஷ்கோடி ஆதித்தனை 46,855 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிகொண்டார். ஆதித்தன் பெற்ற வாக்குகள் 2,17,435 (40.59%)
எஞ்சிய ஐவரும் வைப்புத் தொகையைப் பறிகொடுத்தனர். அதிலொருவர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட குமரி அனந்தன் அவர்கள். அவருக்கு 38,291 (7.15%) வாக்குகள் கிடைத்திருந்தன.
இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக 22 இடங்களில் போட்டியிட்டது. நான்கு தொகுதிகளில் தோல்வியுற்றது. டி ஜெயகுமார் (மத்திய சென்னை), கா.காளிமுத்து (சிவகங்கை), கிருஷ்ணமூர்த்தி (திருப்பத்தூர்), டாக்டர் கோபால் (நாகப்பட்டினம்) ஆகிய நால்வரும் தோல்வியைத் தழுவியவர்கள்.
கா.காளிமுத்து தோல்விகண்ட சிவகங்கை தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ப.சிதம்பரம் வெற்றிபெற்றார். இந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் திருநெல்வேலியில் போட்டியிட்ட நடிகர் சரத் குமார் தோற்றுப்போனார்.
முதலமைச்சர் கனவு கண்ட ராமராஜனை அந்த ஒரு தேர்தலோடு அரசியல் ஏறக்கட்டிவிட்டது.
(ராமராஜனின் பிறந்த நாளான அக்டோபர் 18 அன்று ஃபேஸ்புக்கில் எழுதிய பதிவு)

ஞாயிறு, செப்டம்பர் 26, 2021

‘அண்ணாத்த’ அரசியல் எடுபடுமா?


தமிழ்த் திரையுலகில் மின்னிய நட்சத்திரங்களின் வரிசையில் முதன்மையான இடம் ரஜினி காந்துக்கு உண்டு. சற்றேறக்குறைய நாற்பது ஆண்டுகளாகத் திரைப்படங்களில் நாயகனாகவே நடித்தும், நடிகைகளுடன் டூயட் பாடியும் முத்திரை வசனங்களை முழங்கியும் வரும் ரஜினி காந்தின் படங்கள் இன்றுவரை பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தயாரிப்பாளர்களுக்கு லாபத்தைச் சம்பாதித்துக்கொடுத்துள்ளன என்றே சொல்லப்படுகிறது. சில சந்தர்ப்பங்களில் அவரது படங்கள் படுமோசமான தோல்வியைச் சந்தித்துள்ளன என்பதும் மறுக்கவியலா உண்மை. உதாரணங்களாக மாவீரன், ஸ்ரீராகவேந்திரர், பாண்டியன், உழைப்பாளி, அருணாசலம், பாபா, லிங்கா போன்ற படங்களைக் குறிப்பிட முடியும்.

ரஜினி காந்த் தனது படங்களை வெற்றிபெற வைக்கக் கையாண்ட உத்திகளில் ஒன்று அரசியல். ரஜினியின் நிஜ அரசியல் அவரது காலைவாரிவிட்டுவிட்டபோதும், அவரது சினிமா அரசியல் அவருக்குப் பெரிய அளவில் கைகொடுத்துள்ளது. அது இந்தத் தீபாவளி நாளில் வெளியாகவுள்ள அண்ணாத்த படத்தைக் கரைசேர்க்குமா? ஏன் இப்படி ஒரு கேள்வி என்றால், கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அதாவது, 1996இல் வெளியான முத்து திரைப்படம் தொடங்கி இதுவரை ரஜினி காந்த் தான் அரசியலில் ஈடுபடப்போவதாக இலைமறைகாயாகப் படங்களில் உணர்த்தியோ திரைப்படங்கள் வெளியாகும் சமயத்தில் மேடைகளில் பேசியோ அவற்றை வெற்றிக்கோட்டை நோக்கி நகர்த்திவந்தார். முதன்முறையாக இப்போது அவர் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்று உறுதியாக அறிவித்த நிலையில் அவரது படம் ஒன்று வெளியாகப் போகிறது. இந்தச் சூழலில் அரசியலுக்கும் அவருக்கும் முகிழ்த்த உறவிழை குறித்த நினைவை ஓட விடுவோம்.    

கே. பாலசந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் (1975) திரைப்படத்தில் அறிமுகமான நடிகர் ரஜினிகாந்த் இரண்டு மூன்று ஆண்டுகளில் தமிழகத்தின் முன்னணி நடிகர் என்னும் இடத்தைக் கடந்து தமிழ்நாட்டின் முதன்மை நட்சத்திரமானார். திரைப்படங்களில் கிடைத்த தொடர் வெற்றி காரணமாகத் தமிழ்நாட்டின் பட்டிதொட்டி எங்கும் அறியப்பட்ட பெயரானது ரஜினி காந்த். எம்.ஜி.ஆர். ஆட்சியைப் பிடித்த காலத்தில் திரைத்துறையில் புகழ்க் கொடியைப் பறக்கவிட்ட ரஜினி காந்த் மீது அரசியல் காற்றுவீசத் தொடங்கியது எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின்னர்தான்.

1987இல் ஆர்.எம்.வீரப்பன் தயாரித்த ஊர்க்காவலன்  திரைப்பட வெற்றிவிழாவின் போது, ‘வரவிருக்கும் தேர்தலில் ஜானகி எம்.ஜி.ஆர். அவர்கள் வெற்றிபெற வாழ்த்துகிறேன்’ என்னும் பொருள் தொனிக்கும் வகையில் அவர் பேசியது நாளேடுகளில் செய்தியானது. இப்படி மேடையில் அரசியல் பேசினாலும், அதற்கு அடுத்த ஆண்டில் 1988இல் வெளியான ராஜாதி ராஜா திரைப்படத்தில், “எனக்குக் கட்சியும் வேணாம் ஒரு கொடியும் வேணாம்” எனப் பாடி நடித்திருந்தார் அவர். ஜானகி எம்.ஜி.ஆரின் அரசியல் வெற்றிக்கு வாழ்த்துத் தெரிவித்திருந்த ரஜினியின் பேச்சு அரசியல்ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் ஜானகி எம்.ஜி.ஆருக்கு எதிர்நிலையிலிருந்த ஜெயலலிதாவுக்கு உவப்பாக இருந்திருக்கவில்லை. மேலும், 1989 சட்டமன்றத் தேர்தலில் ஜானகி எம்.ஜி.ஆர். தலைமையிலான அதிமுக படுதோல்வியைச் சந்தித்தது. ஜெயலலிதா தலைமையிலான அதிமுக குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது. இதனால் ரஜினியின் வாழ்த்து ஜெயலலிதாவின் பார்வையில் கேலிக்கு ஆளானது. இதுதான் ஜெயலலிதா, ரஜினி இருவருக்குமிடையேயான மோதலுக்குத் தொடக்கப்புள்ளியாக இருக்கக்கூடும். 

அதைத் தொடர்ந்து 1989 தீபாவளி நாளில் வெளியான மாப்பிள்ளை திரைப்படத்தில் ரஜினிகாந்த் பணத் திமிர் படைத்த மாமியாரின் கொட்டத்தை அடக்கும் மாப்பிள்ளையாக நடித்திருந்தார் என்பதை நினைவுபடுத்திப் பாருங்கள். இந்தப் படத்தின் பெரிய அளவிலான வெற்றியே ரஜினியின் ‘சினிமா வெற்றிக்கு அரசியல் முலாம்’ என்னும் உத்திக்கு உந்து சக்தியைக் கொடுத்திருக்க வேண்டும். திரைக்கு வந்து சுமார் பதினைந்து ஆண்டுகளைக் கடந்துவிட்ட நிலையில் அவர் வேறொரு திசைக்கு நகர வேண்டிய தேவையும் எழுந்தது. அதற்கு உதவியது அரசியல்.   

1990இல் வெளியான அதிசயப் பிறவி என்னும் திரைப்படத்தில் ரஜினியைக் காட்டி, நடிகர் சோ, “பூவுலகில் இந்த முகத்துக்கு ஏகப்பட்ட மதிப்பு இவரைப் போன்றவர்கள் போட்டிக்கு வந்துவிட்டால் என்ன செய்வது என்று அரசியல்வாதிகளே அஞ்சி நடுங்குகிறார்கள்” என வசனம் பேசுவார். அரசியலில் ஈடுபடுவதில் ஆர்வமே இல்லாத ரஜினி காந்த் இப்படியான வசனங்களை ஏன் அனுமதித்தார்? ரசிகர்களை உசுப்பேற்றி அவர்களைத் தன் பிடியிலேயே வைத்திருக்க இத்தகைய வசனங்களும் காட்சிகளும் அவருக்கு உதவின. எதையும் வெளிப்படையாகச் சொல்லாமல் எல்லாம் ஆண்டவன் செயல் எனப் பூடகமாகச் சொல்வதன் மூலம் அவரால் தன் ரசிகர்களை எப்போதும் பரவச நிலையிலேயே வைத்திருக்க முடிந்தது.

1991 ஆம் ஆண்டில் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்ட ஜெயலலிதா வசித்த போயஸ்கார்டன் பகுதியிலேயே ரஜினிகாந்தும் குடியிருந்துவந்தது இந்த அரசியல் விளையாட்டுக்கு மிகத் தோதாகிப்போனது. முதலமைச்சர் வீட்டுக்கு வரும்போதும் போகும்போதும், போக்குவரத்து நிறுத்திவைக்கப்படுவது வாடிக்கையாக இருந்தது. ரஜினி என்னும் திரை நட்சத்திரம் இந்த விவகாரத்தை வெறுமனே கடக்க இயலாமல் தடுமாறினார். ஒருமுறை அவர் காரிலிருந்து இறங்கிச் செல்ல ஊடக வெளிச்சத்தில் அது சட்டென்று தமிழ்நாட்டுக்கான செய்தியானது. இது முதலமைச்சர் ஜெயலலிதாவின் பார்வைக்கும் சென்றிருக்கும். இப்படியான சம்பவங்களால் ரஜினி அரசியல் துறையில் குறுக்கீடு நிகழ்த்தியது காலத்தின் கட்டாயமானது. அந்தக் காலத்தில் வெளியான மன்னன், பாண்டியன், அண்ணாமலை போன்ற படங்களில் ரஜினிகாந்த் பேசிய முத்திரை வசனங்களுக்கு அரசியல் சாயம் பூசி மகிழ்ந்தனர் ரஜினி ரசிகர்கள். முத்தாய்ப்பாக 1993 இல் வெளியான உழைப்பாளி படத்தில், “நேத்து என்னைக் கூலியா வச்சிருந்தான்; இன்னக்கி நடிகனாக்கியிருக்கான்; நாளக்கி…” என்று வசனம் பேசிச் சிரிப்பார் ரஜினி. ரசிகர்கள், தலைவா நாளக்கி நீ முதல்வர் என்று சொல்லி பூரிப்படைந்தார்கள். இவையெல்லாம் ரஜினிகாந்த் செவிகளையும் சென்றடைந்திருக்க வேண்டும்.

தனிப்பட்ட முறையில் அரசியல் தனது சுபாவத்துக்கு ஒத்துவராதது என்பதை ரஜினி அறிந்திருந்தபோதும், அரசியல் முலாம் பூசிய வசனங்கள் படங்களை வெற்றிபெற வைக்க உதவும் என்னும் நம்பிக்கையில், அவற்றை ஓர் உத்தியாகத் தொடர்ந்து பயன்படுத்தத் தொடங்கினார் அவர். 1995ஆம் ஆண்டு ஜூலை 14 அன்று நடைபெற்ற பாட்ஷா பட விழாவில் வெடி குண்டு கலாச்சாரம் குறித்துப் பேசியபோது, சட்டென்று அனைவரது பார்வையும் அவர்மீது விழுந்தது. இதைத் தொடர்ந்து ஜெயலலிதாவுக்கும் அவருக்குமான உரசல் அதிகரித்தது.  அதன் பின்னர் 1996ஆம் ஆண்டுக்கான தேர்தலின்போது, ரஜினிக்கான அரசியல் பிரவேச வாய்ப்புகள் பிரகாசமாக இருந்ததாக ரஜினி அரசியல் ஆலோசகர் என்ற நிலையிலிருந்த சோ ராமசாமி முதலான அரசியல் பார்வையாளர்கள் கருதினர். ஆனால், ரஜினியோ அந்த வாய்ப்பில் பிரமாதமாகச் சொதப்பினார். அரசியலில் இறங்காமல், குரல் கொடுத்ததுடன் ஒதுங்கி நின்றுவிட்டார். அதன் பின்னர் ரஜினி காந்த் நடித்த படங்களின் எண்ணிக்கையும் பெருமளவில் குறைந்துவிட்டது. ஆண்டுக்கு இரண்டு மூன்று படங்கள் வெளிவந்த காலம் போய் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு படம் வெளியாகத் தொடங்கியது.

ஐம்பது வயதைத் தொட்ட நிலையில், அதுவரை திரைப்படங்களில் வசனம் பேசிய ரஜினி காந்த் மேடைகளில் வசனம் பேசத் தொடங்கினார். பாமக எதிர்ப்பு, காவிரி நீர் பிரச்சினை, இலங்கைத் தமிழர் பிரச்சினை, தூத்துக்குடி துப்பாக்கி சம்பவம் வரை அரசியல் நிகழ்வுகள் பற்றிக் கருத்துகள் தெரிவிப்பார். அதைத் தொடர்ந்து அவரது படங்களும் வெளியாகும். ஆகவே, ஊடகங்கள் ரஜினி காந்தின் அரசியல் பிரவேசம் குறித்த ஊகங்களைக் கட்டுரைகளாக எழுதித் தள்ளின. எப்படியும் ரஜினி காந்த் அரசியலுக்கு வந்துவிடுவார் என நம்பிய அவரது ரசிகர்கள் அவரது படத்தைத் தொடர்ந்து பார்த்துவந்தனர்.

ரஜினியின் இந்த உத்தி எல்லா நேரத்திலும் அவரைக் காப்பாற்றியது என்று சொல்ல முடியாது. ஆனாலும், எல்லா நேரத்திலும் ரஜினி இந்த உத்தியை பயன்படுத்துவதை வாடிக்கையாக்கினார். ஏனெனில், தான் நேரடி அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்பதை அறிவிக்காமல், உள்ளங்கையைப் பொத்தியபடியே பூடகமாக வைத்திருந்தார் ரஜினிகாந்த். இப்போது முதன் முறையாக அரசியல் தொடர்பாகக் கையைவிரித்துள்ள நிலையில் அவரது படமான அண்ணாத்த திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கு முன்னரான ஒரு சூழல் இது. அரசியல் என்னும் சுழலில் மாட்டிக்கொள்ளும் முன்னர் ரஜினி என்ற நடிகருக்கு இருந்த அதே வரவேற்பு இப்போதும் உள்ளதா என்பதை அண்ணாத்த வெளிப்படுத்த வாய்ப்புள்ளது. இப்போதுகூட முற்றுப்புள்ளி வைத்த அரசியல் அரசியல் நாடகத்துக்கு ஒரு காற்புள்ளிவைத்து, சிறு கல்லெறிந்து பார்க்கிறார். வழக்கம்போல் ரஜினியிடம் ரசிகர்கள் ஏமாறுவார்களா, ரஜினி ரசிகர்களிடம் ஏமாறுவாரா? அண்ணாத்த ஒரு பாட்ஷாவாகுமா பாபாவாகுமா என்பதைப் பொறுத்தது அது.

இன்மதி இணையதளத்துக்காக எழுதி அதில் வெளியான கட்டுரை. 

செவ்வாய், செப்டம்பர் 14, 2021

அரசியல் சதுரங்கம் ஆட வருகிறாரா ஆளுநர்?

தென்னாட்டுக் காந்தி என அழைக்கப்படும் பேரறிஞர் அண்ணாவின் ஆட்டுக்குத் தாடி எதற்கு, நாட்டுக்கு ஆளுநர் எதற்கு என்னும் சொற்றொடர் தமிழ்நாட்டில் மிகப் பிரபலமானது. அரசியலமைப்புச் சட்டத்தின்கீழ் குடியரசுத் தலைவரால் ஆளுநர் நியமிக்கப்படுகிறார் என்றபோதும், ஆளுநர் பதவி ஒரு மாநிலத்தின் செயல்பாட்டை ஒன்றிய அரசு கண்காணிக்கச் செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடு என்பதான எண்ணம் சுயமரியாதையைப் போற்றும் எந்த மாநில அரசுக்கும் இருக்கவே செய்கிறது. ஏனெனில், எந்தக் கட்சி  மத்தியில் ஆள்கிறதோ அந்தக் கட்சிக்குச் சார்பான ஒருவரே ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பது நடைமுறை உண்மை. ஆகவே, ஒன்றிய அரசுடன் இணங்கிப் போகும் மாநில அரசுகளுக்கும் அந்தந்த மாநிலங்களின் ஆளுநர்களுக்கும் பெரிதாகக் கருத்து வேற்றுமைகளோ மோதல்களோ ஏற்படுவதில்லை. அதே நேரத்தில் ஒன்றிய அரசுடன் அரசியல்ரீதியாக முரண்படும் மாநில அரசுகள் ஆளும் மாநிலங்களில் நியமிக்கப்படும் ஆளுநர்கள் எப்போதும் மாநில அரசுகளுக்கு நெருக்கடி தருபவர்களாகவே நியமிக்கப்படுகிறார்கள் என்பது இந்திய அரசியலை அறிந்த எவருக்கும் தெரிந்த செய்தியே. 

மாநில சுயாட்சியை வலியுறுத்தும் திமுக எப்போதுமே ஆளுநரை ஆறாம் விரலாகத்தான் பார்க்கிறது. அரசியல் சாசனம் அனுமதித்தபோதும் அந்தப் பதவி அநாவசியம் என்றே அது நினைக்கிறது. அதனால் தான் கடந்த முறை அதிமுக ஆட்சியின்போது, தமிழ்நாட்டுக்கு முழு நேர ஆளுநர் இல்லாத சமயத்தில் அப்படியோர் ஆளுநர் தேவை என்று திமுக கோரிக்கை வைத்தபோது தமிழிசை சௌந்தர்ராஜன் திமுகவைக் கிண்டல் செய்தார். திமுகவைப் பொறுத்தவரை தமிழகத்தின் ஆளுநரான சுர்ஜித் சிங் பர்னாலா மட்டும் விதிவிலக்கு. அதேபோல் 1991இல் அதிமுக ஆட்சி நடைபெற்றபோது, தமிழ்நாட்டுக்கு ஆளுநராக வந்த சென்னாரெட்டிக்கும் அப்போதைய தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவுக்குமான மோதல் போக்கு அரசியல் களத்தில் மிகவும் பரபரப்பான பேசுபொருளாக இருந்தது. ஆளுநர் தன்னிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றார் என முதலமைச்சர் சட்டப்பேரவையில் பேசும் அளவுக்கு அந்த மோதல் தரந்தாழ்ந்தவகையில் வெளிப்பட்டது. அதன் பின்னர் தமிழ்நாட்டு ஆளுநர் முதலமைச்சர் உறவு பெரிதாக மோதலோ சர்ச்சையோவின்றி மிகவும் அமைதியான முறையிலேயே இருந்தது.

இப்போது மாறுதலாகிச் செல்லும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு என்னும் பெயரில் நடத்திய நிகழ்வுகள் தமிழக அரசியல் நோக்கர்களைக் கொந்தளிக்கவைத்தன என்றபோதும், ஆளும் தரப்பு எல்லாவற்றையும் அமைதியாகவே பார்த்துக்கொண்டிருந்தது. எந்த முணுமுணுப்பையும் வெளிப்படுத்தாமல் எல்லாம் அவன் செயல் என்று காலம் கடத்தியது. இப்படியான சூழலைக் கடந்து வந்துள்ள தமிழ்நாட்டுக்கு இப்போது புதிதாக ஓர் ஆளுநர் நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர்தான் ரவீந்திர நாராயண ரவி. 1976இல் ஐபிஎஸ் அதிகாரியாக கேரளத்தில் பொறுப்பேற்றுக்கொண்ட பிஹாரைச் சேர்ந்த அவர் ஆளுநராக அறிவிக்கப்பட்டதிலிருந்தே தமிழ்நாட்டு அரசியல் வட்டாரத்தில் பரவலான முணுமுணுப்பு எழுந்தது. ஏனெனில், அவர் ஆளுநராக இருந்த நாகாலந்து மாநிலம் அந்த ஆளுநர் மாறிப்போவதைக் கொண்டாடுகிறது. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும் உளவுத் துறையின் அதிகாரியுமான ஆர்.என்.ரவி தமிழ்நாட்டு அரசியலில் சிக்கலை உருவாக்குவதற்காகவே நியமிக்கப்படுகிறாரோ என்னும் அய்யத்தை காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் எழுப்புகின்றன. 

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி இது தொடர்பாக ட்வீட் செய்திருந்தார். அதில், முழுக்க, முழுக்கக் காவல் துறை பின்புலம் கொண்ட ஆர்.என்.ரவி தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பதில் உள்நோக்கம் இருப்பதாகச் சந்தேகம் எழுப்பினார். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இடையூறு செய்வதற்காகவே இது போன்ற நியமனங்களை மத்திய அரசு கடந்த காலங்களில் செய்திருக்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இடையூறு செய்யும் வகையிலேயே ஆர்.என்.ரவியை மோடி அரசு ஆளுநராக நியமித்திருக்கிறதோ என்று சந்தேகப்படுகிறேன் என்றும் கூறியிருந்தார். இவை மட்டுமல்ல;  புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவியை, தமிழகத்தில் ஜனநாயகப் படுகொலை நடத்துவதற்கு ஆயுதமாகப் பயன்படுத்த மோடி அரசு முயன்றால், மக்களைத் திரட்டி ஜனநாயக சக்திகள் போராட வேண்டிய சூழல் உருவாகும் என்றும் எச்சரித்திருந்தார்.

அதே நேரத்தில் தமிழ்நாட்டு முதலமைச்சரான மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் மாண்புமிகு ஆர்.என்.ரவியை வாழ்த்தி வரவேற்று ட்வீட் செய்திருந்தார். அதில், தங்களது வருகை தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் வளத்துக்கும் ஊக்கமளிப்பதாக இருக்கட்டும் என்று குறிப்பிட்டிருந்தார். மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் ஆளுநர்களை எப்படிப் பயன்படுத்தியது என்பது அனைவரும் அறிந்ததே. அப்படியான அரசியல் பின்னணி கொண்ட காங்கிரஸ் தலைவர் ஒருவர் எச்சரிக்கை விடுப்பதை அப்படியே விட்டுவிட முடியாது. அதே நேரத்தில் ஸ்டாலின் வரவேற்றிருப்பதையும் சாதாரணமானது என்று கடந்துவிட முடியாது. ஏனெனில், ஆளுநர் சர்ச்சைக்குரியவராக இருந்தாலும், அவர் தமிழ்நாட்டில் பெரிய அளவில் சர்ச்சைகளை உருவாக்கிவிட முடியாது என்பது வெளிப்படையான விஷயம். பதவியேற்ற நாள்முதலாக ஆளும் பாஜகவைச் சித்தாந்தரீதியில் எதிர்கொள்ளும் முதலமைச்சருக்கு ஒன்றிய அரசின் உண்மையான முகம் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. எனில், அவர் ஏன் வாழ்த்தி வரவேற்கிறார்? அதன் மூலம் ஒன்றிய அரசுக்கு என்ன உணர்த்துகிறார்? நீங்கள் என்னதான் முயன்றாலும் தமிழ்நாட்டை அசைத்துவிட முடியாது என்று சொல்ல நினைக்கலாம். சர்ச்சைக்குரிய மனிதரை ஆளுநராக நியமிப்பதன் மூலம் எங்களுக்கு ஒருவிதப் பதற்றத்தை  நீங்கள் உருவாக்க முயன்றால் நாங்கள் பதற்றமடையமாட்டோம் எனக் காட்டிக்கொள்கிறார் எனப் புரிந்துகொள்ளலாம்.

அதே வேளையில் ஒன்றிய அரசின் வஞ்சக எண்ணத்தைக் கூட்டணிக் கட்சிகளைக் கொண்டு அம்பலப்படுத்தவும் முயலலாம். அரசியல் சதுரங்கத்தில் காய்கள் எப்படி வேண்டுமானாலும் நகர்த்தப்படலாம். ராஜாவைப் பாதுகாப்பது மட்டுமே சதுரங்கப் பலகையின் எதிரெதிரே அமர்ந்திருக்கும் இரு தரப்பினருக்கும் நோக்கம். அறுதிப் பெரும்பான்மை பெற்ற மக்கள் பிரதிநிதி என்ற முறையில் முதலமைச்சர் ஒரு புறம் இருக்கிறார் என்றால் ஒன்றிய அரசின் பக்கபலத்துடன் ஆளுநர் மறுபுறம் இருக்கிறார். எந்த வேளையில் இந்த ஆளுநர் நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பது உற்றுநோக்கத்தக்கது. ஒன்றிய அரசு கொண்டுவந்த வேளாண்மைச்  சட்டங்கள், குடியுரிமைச் சட்டம் போன்றவற்றுக்கு எதிராகத் தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேறுகிறது. அனைவரையும் அர்ச்சகராக்கும் செயல் வெற்றிகரமாக நடந்தேறுகிறது. இந்திய நாகரிகத்தைவிடத் தொன்மையானது தமிழ்நாட்டின் நாகரிகம் என்ற கருதுகோள் அழுத்தமாகத் தமிழ்நாட்டு முதலமைச்சரால் முன்வைக்கப்படுகிறது. இந்திய வரலாறு தமிழ்நாட்டிலிருந்து தொடங்குகிறது என்ற முழக்கம் சென்னையில் ஒலித்தாலும் அது தில்லியை அதிரவைக்கிறது. அரசியல்ரீதியான எதிர்ப்புகளைவிடச் சிந்தாந்தரீதியான பண்பாட்டுரீதியான எதிர்ப்பை மிகவும் வலுவாகவும் தெளிவாகவும் துணிச்சலாகவும் முதலமைச்சர் வெளிப்படுத்தும் வேளையில் இப்படியோர் ஆளுநர் தமிழ்நாட்டுக்கு அனுப்பப்படுகிறார் என்றால் அதை அப்படியே எளிதாக எடுத்துக்கொண்டுவிட முடியுமா என்ன? அதனால்தான் உடனடியாக எதிர்வினை ஆற்றுகிறார்கள் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, விடுதலை சிறுத்தைகளின் தலைவர் தொல் திருமாவளவன் போன்றோர். ஒருபுறம் கூட்டணிக் கட்சிகளைக் கொண்டு எதிர்ப்பை வெளிப்படுத்துகிறது தமிழ்நாடு. அதே நேரம் முதலமைச்சரோ வரவேற்புத் தெரிவிக்கிறார். ஆகவே, இந்த அரசியல் சதுரங்கத்தில் ஆளுநர் என்னும் பெயரில் நகர்த்தப்படும் ஒவ்வொரு காய் நகர்த்தலையும் மிகவும் உன்னிப்பாகவும் அதே நேரத்தில் அநாயாசமாகவும் எதிர்கொள்ளத் தயாராகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்றே புரிந்துகொள்ள முடிகிறது.

தமிழ்நாடு போன்ற பண்பாட்டு பிடிப்பு கொண்ட மாநிலத்தில், மக்களின் பேராதரவைப் பெற்ற ஓர் ஆட்சியை, அதன் முதலமைச்சரை அவ்வளவு எளிதில் அசைத்துவிட முடியாது என்பதை உணராமல் இருக்காது ஒன்றிய அரசு. இது எதிரும் புதிருமான இரண்டு பலம் வாய்ந்தவர்களின் விளையாட்டு. இந்த விளையாட்டுத் தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக வேகமெடுக்கும்போது, இன்னும் பல சுவாரசியமான காட்சிகள் அரசியல் சதுரங்கத்தில் அரங்கேறும் என்பதே அரசியல் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பு. ஆட்டத்தில் யார் வெல்கிறார் யார் தோற்கிறார் என்பதைவிட சுவாரசியமான ஆட்டம் ஒன்று அரங்கேறப்போகிறது என்பதே ஊடகங்களுக்கான செய்தி.   

டைம்ஸ் சமயம் இணையதளத்துக்காக எழுதி அதில் வெளியான கட்டுரை.   

வியாழன், செப்டம்பர் 09, 2021

அரசியல் களத்து ஆயுதமா திராவிட அடையாளம்?


அண்மை நாள்களாக அரசியல் களத்தில் திராவிடக் களஞ்சியம் தொடர்பான விவாதம் பரபரப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. திமுக அரசு தமிழர் அடையாளங்களை அழித்தொழிக்க முயல்கிறது என தமிழ்த் தேசியவாதிகள் குற்றஞ்சாட்டுகிறார்கள். இப்போது இந்த விவகாரம் மிகச் சூடு பிடித்ததற்கு 2021 ஆகஸ்ட் 31 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ் வளர்ச்சித் துறைக்கான மானியக் கோரிக்கைகள் பற்றிய விவாதமே காரணம். ஏனெனில் அந்த விவாதத்தின்போது, ஒரு கொள்கை விளக்கக் குறிப்பு அறிவிக்கப்பட்டது. அதன் பத்தாம் அறிவிப்பு, சங்க இலக்கியங்களைச் சந்தி பிரித்து எளிமைப் பதிப்புகளாக வெளியிடும் திட்டம், திராவிடக் களஞ்சியம் என்ற தொகுப்பு நூல் வெளியிடும் திட்டம் ஆகியற்றைக் கொண்டிருந்தது.  இது போதாதா? கொதித்தெழுந்துவிட்டன தமிழ்த் தேசிய அமைப்புகள்.  தேசிய அடையாளங்களை அழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் குற்றஞ்சாட்டின.

தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவரான பெ.மணியரசன், சங்கத் தமிழ் நூல்களுக்குத் `திராவிடக் களஞ்சியம்என்ற பெயர் சூட்டுவது, தமிழ்மொழி, தமிழினம் இரண்டையும் மறைக்கும் செயல் என்றதுடன் இவ்வாறு பெயர் சூட்டுவதைத் தமிழக அரசு கைவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் இந்த அறிவிப்பைக் கண்டித்திருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகளில் தமிழ் நூல்களைத் தொகுத்து, அவற்றை 'திராவிடக்களஞ்சியம்' என அடையாளப்படுத்தப்போவதாக அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது என்றும் பெருமைமிக்கத் தொல்தமிழர் வரலாற்று அடையாளங்கள் யாவற்றையும் தன்வயப்படுத்தும் திராவிடத் திரிபுவாதிகள் தற்போது தமிழ் நூல்களின் மீதும் கைவைக்க முனைந்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த விவகாரம் பொதுத் தளங்களில் கடுமையாக விவாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இது தொடர்பாக விளக்கமளித்தார்.  எல்லோரும் சங்க இலக்கியத் தொகுப்பையும் திராவிடக் களஞ்சியத்தையும் ஒன்றாகச் சேர்த்துக் குழப்பிக்கொள்கிறார்கள்  என்று அவர் கூறியுள்ளார். சங்க இலக்கியங்களை இந்தக் காலத் தலைமுறையினரும் புரிந்துகொள்ளும் வகையில் எளியதாகச் சந்தி பிரித்துச் செம்பதிப்புகளாக வெளியிடுவது ஒர் அறிவிப்பு. திராவிடக் களஞ்சியம் என்பது மற்றோர் அறிவிப்பு. அதில் திராவிடம் சார்ந்த ஆய்வுக் கட்டுரைகள் இடம்பெறும் என்றும் தெரிவித்தார். கால்டுவெல், அஸ்கோ பர்ப்போலா, ஆர். பாலகிருஷ்ணன் போன்ற ஆய்வறிஞர்களின் கட்டுரைகள், கருதுகோள்கள், இட ஒதுக்கீடு, இந்தி எதிர்ப்பு, சமூக நீதி போன்றவை குறித்த விஷயங்களை உள்ளடக்கிய கட்டுரைகள் அதில் இடம்பெறும் என்பதைக் குறிப்பிட்டிருந்தார். 

மேலும், தொல்காப்பியம் தொடங்கி முத்தொள்ளாயிரம் வரையிலான தமிழ்ச் செவ்வியல் இலக்கிய நூல்கள் அனைத்தும் ஒரே தொகுப்பாக, ஒரே இடத்தில் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்றும் இதற்காக வருடந்தோறும் 10 லட்சம் ரூபாய் செலவிடப்படும் என்றும் கூறியுள்ளார். ஆனால், அதற்குப் பின்னரும் தமிழ்த் தேசியவாதிகள் விட்டபாடில்லை. இந்த விவாதத்தைத் தொடர்ந்துகொண்டேயிருக்கிறார்கள். அவர்கள் திமுக தலைவரை தமிழ்த் தேசியத்தை அழித்தொழிக்கும் ஒருவராக அடையாளப்படுத்த விரும்புகிறார்கள் என்பதுபோல் நடந்துகொள்கிறார்கள்.  

தமிழ்நாட்டில் இந்துத்துவ அரசியல் பேசும் பாஜக, தமிழ்த் தேசிய அரசியல் பேசும் நாம் தமிழர் உள்ளிட்ட தமிழ்த் தேசியவாதிகள் இருவருமே தங்களது எதிராக திமுகவையே முன்னிருத்துகின்றன. தமிழ்நாட்டில் மு.கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி நடைபெற்றபோது அவர் இந்த அளவு எதிர்ப்புகளைச் சந்தித்ததில்லையோ என்று சந்தேகப்படும் அளவுக்கு இப்போது திமுகவுக்கு எதிர்ப்பு உருவாகியிருக்கிறது.  திராவிட சிந்தாந்தத்தைப் பேசும் கட்சியாகத் திமுக இருந்தபோதும், கருணாநிதி தலைமையில் கட்சி நடத்தப்பட்டபோது, அதன் சித்தாந்தத்துக்கு இந்த அளவு நெருக்கடி ஏற்பட்டதில்லை. இப்போது திமுகவை மு.க.ஸ்டாலின் தலைமை ஏற்று நடத்தப்படும்போது சிந்தாந்தரீதியிலான நெருக்கடி முற்றிப்போயுள்ளது. மு.கருணாநிதியால் பாஜகவுடன் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்திக்க முடிந்தது. ஆனால், இப்போது திமுக 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும், 2021 சட்டப்பேரவைத் தேர்தலிலும் வெற்றிபெற அது மிகத் தீவிரமான இந்துத்துவ எதிர்ப்பைக் கையிலெடுக்க வேண்டியதிருந்தது.

தமிழ்நாட்டில் திராவிடச் சிந்தாந்தத்துக்கு நெருக்கடியை ஏற்படுத்தி இந்து என்னும் ஒரு குடையின் கீழ் தமிழ் மக்களைத் திரட்டும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது. அரசியல்ரீதியாக பாஜகவை எதிர்த்து நிற்கும் திமுக இட ஒதுக்கீடு, அனைவரும் அர்ச்சகர் முதலான அம்சங்களின் மூலம் தாங்கள் இந்துக்களுக்கு எதிரியல்ல என்பதை நிரூபிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. பாஜக என்ற நேரடி எதிரியை அரசியல் களத்தில் எதிர்கொள்ளும் திராவிடக் கட்சியான திமுகவுக்கு தமிழ்த் தேசியம் என்னும் உடன்பிறந்த சகோதரத் தொல்லைகளும் உள்ளன. தமிழர் என்றும், திராவிடர் என்றும் தமிழ்நாட்டில் நடைபெறும் விவாதங்கள் இன்று நேற்று தொடங்கியவையல்ல. பெரியார், மறைமலையடிகள் காலம் தொட்டே இருந்துவருபவை.

ஆகவே, பாஜகவின் இந்துத்துவத்தையும் நாம் தமிழரின் தமிழ்த் தேசியத்தையும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக எதிர்கொள்ள வேண்டுமென்றால் அது திராவிட சித்தாந்தத்தை வலுவுடன் கைப்பற்றிக்கொள்ள வேண்டியது தவிர்க்க இயலாதது. இப்போதைய திமுக அரசின் நிலைப்பாடுகள் திராவிடச் சிந்தாந்தத்தில் ஊறிப்போனவை என்பதான எண்ணைத்தையே தருகின்றன. அதன் அண்மைக்காலச் சான்றென திராவிடக் களஞ்சிய அறிவிப்பைச் சொல்லலாம். கட்சியில் இளைஞர்களைக் கொண்டுவந்து சேர்க்கும் பெரிய பொறுப்பை இப்போது திமுக நிறைவேற்ற வேண்டியதிருக்கிறது. அதற்காகவே இந்தத் திராவிட களஞ்சியம் அறிவிப்பை அது வெளியிட்டிருக்கிறது. திராவிட என்ற சொல் இந்துத்துவவாதிகளையும் தமிழ்த் தேசியவாதிகளையும் ஒரே நேரத்தில் அச்சுறுத்துகிறது.

மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்ற நாள் முதலே அது திராவிட அடையாள அரசியலைத் தனது ஆயுதமாக ஏந்திக்கொண்டது கண்கூடு. திராவிட சிந்தாந்த அரசியல் பேசுவதும் அதை ஆயுதமாக ஏந்திக்கொள்வதும் தமிழ்நாட்டுக்கும் தமிழ்நாட்டு நலனுக்கும் உகந்தது என்பதே திராவிடச் சித்தாந்தத்தை ஆதரிப்பவர்களது கருத்து. திராவிடக் கொள்கைகளை இன்றைய இளந்தலைமுறையினரிடம் கொண்டுசென்றால் மட்டுமே தமிழ்நாட்டைச் சூழ்ந்து நிற்கும் சிந்தாந்தப் போரில் வெற்றியைப்பெற முடியும் என்று திமுகவும் ஸ்டாலினும் உணர்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதன் வெளிப்பாடாகவே இத்தகைய நடவடிக்கைகளைப் பார்க்க முடிகிறது.

தங்களது இனம் திராவிடம் என்றும் தாங்கள் பேசும் மொழி தமிழ் என்றும் தொடர்ந்து திராவிட ஆதரவாளர்கள் கூறிவருகிறார்கள். திராவிடமும் ஆரியமும் ஒன்றுக்கொண்டு எதிரான அரசியல் நிலைகளில் உள்ளன. எப்போதுமே திராவிடத்தை அழிக்கவும் ஒழிக்கவும் இங்கிருந்தே எதிர்களை உருவாக்குவது ஆரியத்தின் சூழ்ச்சி. எப்போதுமே திராவிடர்களது ஒன்றுதிரளலைத் தடுக்க முயலும் ஆரியம் திராவிடத்துக்கான பகையை இங்கே திராவிட நிலத்திலேயே உருவாக்கும். இதற்குத்  தமிழ்த் தேசியம் பயன்படுகிறது என்னும் குற்றச்சாட்டு திராவிடர்கள் எப்போதும் முன்வைக்கிறார்கள். ஆதிக்க எதிர்ப்பு, மாநில சுயாட்சிக்கான உரிமைக் குரல், சாதி,மதரீதியான சமத்துவம் போன்றவை  திராவிடச் சிந்தாந்தத்தின் அடிப்படைக் கொள்கைகள்.

அதனால்தான் திமுக அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவதை நடைமுறைப்படுத்தியுள்ளது; கீழடி போன்ற தமிழர் பண்பாட்டு ஆய்வுகளை முன்னெடுக்கிறது; வ.உ.சிதம்பரானார் போன்ற தலைவர்களைக் கொண்டாடுகிறது;  தமிழ்ப் பெருமிதமான ராஜராஜ சோழன் பிறந்தநாளை அரசு விழாவாகக் கொண்டாடுகிறது. பழந்தமிழ் இலக்கியங்களை இக்காலத் தலைமுறைக்கு அறிமுகப்படுத்த விழைகிறது திராவிடர் குறித்த களஞ்சியங்களை உருவாக்குவது போன்ற பண்பாட்டுப் பணிகளில் தன்னை முழுமையாக திமுக ஈடுபடுகிறது. சிந்தாந்த அடிப்படையிலான கொள்கைப் பிடிப்பும் அது தொடர்பான அடையாளங்களைப் பாதுகாப்பதுமே திமுகவுக்கு அரசியல்ரீதியான பலன் தரும் என்பதை ஸ்டாலினும் சரி திமுகவினரும் சரி உணர்ந்திருக்கிறார்கள். மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைத்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் திராவிட சிந்தாந்த விஷயத்தில், திமுகவின் முன்னாள் தலைவரான மு.கருணாநிதியைவிட மிகத் தீவிரம் காட்டுகிறார்கள் என்றே அரசியல் களத்தினர் பேசிக்கொள்கிறார்கள். அது உண்மைதான்.

அதே நேரத்தில் இந்துத்துவவாதிகளைப்போல் பிற மதத்தினரைத் தேடித் தேடித் துன்புறுத்தும் வேலை போன்ற அடாவடித்தனங்களில் திமுக ஈடுபடவில்லை. திராவிடத்தின் ஒரு கொள்கையாக கடவுள் மறுப்பு உள்ளது என்றபோதும், கடவுள் நம்பிக்கையாளர்களையும் அரவணைத்துச் செல்லும் போக்கையே திமுக அரசு கைக்கொள்கிறது. இறுக்கமான ராணுவக் கெடுபிடி என்னும் ரீதியில் கொள்கைகளைப் பின்பற்றாமல் தேவைப்படும் வேளையில் நெகிழ்ந்துகொடுக்கிறது திமுக.  இதை மெய்ப்பிக்கும் வகையில்தான் தமிழ்நாட்டு அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. திராவிடப் பெருமிதங்கள் ஒரு புறம் இருந்தாலும் அனைவரையும் அரவணைக்கும் பண்பையும் தொடர்ந்து திமுக கடைப்பிடிக்க வேண்டும் என்பதே அதன் நலனை விரும்புபவர்களின் எண்ணம். இந்துத்துவ அரசியலைப் போன்று எதிர்தரப்பினரை எதிரிகளாகவே கருதி அவர்களை ஒழிக்க முயலாதவரை திராவிட அடையாளங்களைக் கையிலெடுக்கும் திமுகவின் நடவடிக்கை அதற்கு அனுகூலத்தையே தரும் என்பதே உண்மை. 

டைம்ஸ் சமயம் இணையதளத்துக்காக ரோஹின் என்னும் பெயரில் எழுதி வெளியானது.

ஞாயிறு, செப்டம்பர் 05, 2021

பாலியல் குற்றங்களின் அரசியல்


ஆண் பெண் உறவு குறித்த பக்குவத்தை நம் சமூகம் இன்னும் கற்றுக்கொள்ளவில்லையோ அந்த உறவு தொடர்பான புரிதலை வளர்த்துக்கொள்ளவில்லையோ என்னும் எண்ணத்தை வலுப்படுத்தும்படியான பல சம்பவங்கள் தமிழ்நாட்டில் தொடர்ந்து அரங்கேறியவண்ணமே உள்ளன. அண்மைச் சம்பவமாக சமூக வலைத்தளங்களில் பரவலாகச் சுற்றுக்குவிடப்பட்ட கே.டி.ராகவன் வீடியோவைச் சொல்லலாம். பருவம் வந்த ஆணுக்கும் பெண்ணுக்குமான தனிப்பட்ட, அந்தரங்க உறவைப் பொதுவெளியில் பகிரும் நாகரிகமற்ற நடவடிக்கை இன்னும் தொடர்ந்தபடியே உள்ளது. சர்ச்சை சாமியார் நித்யானந்தாவுக்கும் நடிகைக்குமான ரகசிய உறவைத் தமிழ்நாட்டின் முக்கிய செய்தி அலைவரிசை சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிட்டது. முக்கியக் கட்சியின் வேட்பாளர் ஒருவரது பாலியல் வீடியோ ஒன்று இதைப் போல் பொதுவெளியில் கசியவிடப்பட்டது. அந்த வேட்பாளர் அந்தத் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்றார் என்பதையும் மறந்துவிட முடியாது. கடந்த ஆட்சியில் அமைச்சராக இருந்த ஒருவரது பாலியல் வீடியோவையும் தமிழ்ச் சமூகம் பார்த்தது. இப்படியான விஷயங்கள் தொடர்பாக அநேக மீம்களும் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமிப்பதும் வாடிக்கையாகிவிட்டது.

தமிழர், பண்பாடு, பாரம்பரியம், பெருமை பேசும் தமிழ்நாட்டில் இன்னும் இத்தகைய வீடியோக்கள் வெகுமக்கள் பரப்பைச் சுவாரசியப்படுத்தும் போக்கு கண்டு நாம் உண்மையிலேயே வெட்கப்பட வேண்டும். ஆனாலும், எவரும் அப்படியொரு வெட்கம் கொள்ளாமல் தங்களது பாலியல் அரிப்பைத் தீர்க்கும் பேசுபொருளாக இப்படியான விஷயங்களைக் கருதுகிறார்களோ என்றே நினைக்கத் தோன்றுகிறது. இந்த நினைப்பு அச்சம் தரத்தான் செய்கிறது ஆனாலும், நடைமுறையில் நமது நிலைமை இப்படித்தான் இருக்கிறது என்பதை நம்மால் மறுக்க முடியுமா?  

ஆணும் பெண்ணும் இணங்கிக் கொள்ளும் உறவை வரம்பற்ற நட்பை மூன்றாம் மனிதர் கேள்விகேட்பதோ அப்படியான உறவில் தலையிடுவதோ நாகரிக சமுதாயத்தில் அநாகரிகமாகவே பார்க்கப்படும். திருமணம் தாண்டிய உறவுகளில் ஏதேனும் சட்டப்பிரச்சினை இருந்தால் அது தொடர்பான மனிதர்கள் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெறலாம். அதே வேளையில் அதிகாரம் காரணமாகவோ ஆதிக்கம் காரணமாகவோ பெண் ஒருவர் பாலியல்ரீதியான ஒடுக்குமுறைக்கு ஆளானால் அதிலுள்ள நியாயத்தைப் புரிந்துகொண்டு பொதுச் சமூகம் அவர் பக்கம் நிற்க வேண்டும். இந்த இரண்டு வகைகளிலுமே முக்கிய ஆதாரமான வீடியோ, ஆடியோ போன்றவற்றைப் பொதுவெளியில் வெளியிட எந்த அவசியமும் இல்லை. நடைபெற்ற குற்றத்தைக் காட்சிப்படுத்தும் ஆவணங்களாகவே அவை கருதப்பட வேண்டும். ஆனால், நமது நாட்டில், மாநிலத்தில் இத்தகைய காட்சிகள் பொதுவெளியில் கேளிக்கைக்கான விஷயமாகச் சந்தி சிரிப்பது உள்ளபடியே அவமானமானகரமானதே.

தமிழகத் தலைவர்களில் ஒருவரான கே.டி.ராகவன் தொடர்பான வீடியோவைப் பகிர்ந்திருந்தவர் ஊடகத் துறையில் செயல்படுபவர். இந்த விஷயத்தை முன்னிட்டுத் தமிழ்ச் சமூகம் பெரிய விவாதங்களில் ஈடுபடுகிறது. பெண் ஒருவரிடம் பாலியல்ரீதியாக முகம் சுளிக்கச் செய்யும் வகையிலான தொடர்பை ராகவன் பேணிவந்தது அந்த வீடியோவில் அம்பலமானது. அந்தப் பெண்ணுக்கும் ராகவனுக்கும் கட்சிரீதியான தொடர்பு இருப்பது போன்று சித்தரிக்கப்பட்டது. கட்சிப் பெண்களிடம் அவர் தகாத செயலில் ஈடுபடுவதை அம்பலமாக்கும் வகையில் அந்த வீடியோ வெளியானதாகச் சொல்லப்பட்டது. உண்மை என்ன என்பது தெரியவில்லை. அது திட்டமிட்ட சதிச் செயல் என்பது போல் பார்க்கப்பட்டது. ஆனால், அது பரவிய வேகம் கே.டி.ராகவனை மாநிலத்தின் கடைசி மனிதர்வரை கொண்டுசேர்க்கச் செய்த ரகசியச் செயலோ என்ற ஐயத்தை ஏற்படுத்தும் அளவுக்குப் போனது. அந்த அளவுக்கு இந்த வீடியோ ராகவனைப் பற்றிய அறியாத பலரிடமும் அவரைக் கொண்டுபோய்ச் சேர்த்தது. ஒரு நல்ல விஷயம் பரவும் வேகத்தைவிட ஒரு கெட்ட விஷயம் மிகவும் வேகமாகவும் வீரியமாகவும் பரவிவிடுவது வருத்தம் தரக்கூடிய உண்மை. இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் யாரும் செய்யாததையா ராகவன் செய்துவிட்டார் என்பது போல் ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். மேம்போக்கான அந்தக் கருத்தும் பலத்த விமர்சனங்களைச் சந்தித்தது. அப்படியானால் இப்படித்தான் ஆண்கள் அனைவரும் நடந்துகொள்கிறார்களா, ஒரு பெண்ணிடம் தவறாக நடந்துகொள்வதைவிட அதை நியாயப்படுத்துவது எவ்வளவு ஆபத்தான போக்கு என்பதான விமர்சனங்கள் எழுந்தன.

கே.டி.ராகவனோ தன்னையும் தன் கட்சியையும் களங்கப்படுத்தவே இந்த வீடியோ வெளியிடப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். ஆனாலும், அவர் கட்சிப் பொறுப்பிலிருந்து விலகிவிட்டார். எந்தத் தவறும் செய்யாதபோது கட்சிப் பொறுப்பிலிருந்து ஏன் அவர் விலக வேண்டும் என்ற கேள்விகள் எழுந்தன. பழி விழுந்தபின்னர் பதவியில் எப்படி ஒட்டிக்கொண்டிருக்க முடியும் என அவர் தரப்பினர் கருத்துத் தெரிவித்தனர். தமிழ்நாட்டு பாஜக தலைவர் அண்ணாமலையின் ஒப்புதலுடன் தான் வீடியோ வெளியிடப்பட்டதாகக் கூறிய மதன் அது தொடர்பான ஆடியோ பதிவுகளையும் வெளியிட்டிருந்தார்.  வீடியோ, ஆடியோ ஆகியவற்றை வெளியிட்ட மதன், வெண்பா ஆகிய இருவரும் பாஜக கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். ஆனால், இப்படியொரு வீடியோ தன்னிடம் உள்ளது என்பது தெரிந்த பின்னரும் அது பொதுவெளியில் பரவிடும் ஆபத்து உள்ளது என்பதை அறிந்த பின்னரும் பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை எப்படி இவ்வளவு மெத்தனமாக இருந்தார் என்ற கேள்வி எழாமல் இல்லை. இவ்வளவுக்கும் அவர் ஒரு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி.

அதே நேரத்தில் பாஜக போன்ற பலமானதொரு கட்சியின் முக்கியப் பொறுப்பில் உள்ள மனிதர் ஒருவரைப் பற்றி இப்படி ஒரு வீடியோவை சாதாரண ஊடகவியலாளர் ஒருவர் எளிதில் வெளியிட்டுவிட முடியுமா? அதையெல்லாம் கடந்து அந்த வீடியோவைத் துணிச்சலாக வெளியிட்டிருப்பதன் பின்னணியில் உள்ள விவகாரம் சாதாரணமாக இருக்குமா என்னும் ரீதியில் அரசியல் விமர்சகர்கள் இந்த விஷயத்தை விவாதத்துக்கு உட்படுத்திவருகின்றனர்.

இந்த விவகாரம் குறித்துக் கருத்துத் தெரிவித்த அண்ணாமலையும் அரசியல்ரீதியாகத் தன்னை வந்து சந்திக்கும் கட்சியின் பெண் நிர்வாகிகளிடம் தான் எவ்வளவு கண்ணியமாக நடந்துகொள்கிறேன் என்பதைப் பற்றிக் கூறிய கருத்துகளும் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கின. இப்படியான விஷயங்களை மொத்தமாகப் பார்க்கும்போது, பெண்கள் பற்றிஆண்கள் கொண்டிருக்கும் பழமைவாத எண்ணத்தைப் பிரதிபலிப்பதாகவே அவை உள்ளன.

யாராவது ஒரு ஆணை அவமானப்படுத்த வேண்டும் என்றால் உடனே அவரது பாலியல் தொடர்பான விஷயங்களை அம்பலப்படுத்துவது, பெண் ஒருவரை அவமானப்படுத்த வேண்டும் என்றால் அவரது பாலியல்நடத்தையைக் கேள்விக்குட்படுத்துவது போன்றவை மிகவும் அநாகரிகமான செயல்கள். இதை அனைவரும் ஒத்துக்கொள்கிறார்கள். ஆனாலும், இப்படியான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்றே வருகின்றன. சூழலின் ஆரோக்கியமற்ற தன்மைக்கு என்ன காரணம்? இங்கே நாகரிமற்ற நடவடிக்கை என இத்தகைய வீடியோக்களைக் குறிப்பிடுவது, அது இருவர் ஒப்புதலுடன் நடைபெற்ற அந்தரங்கச் செயல் என்னும் நம்பிக்கையில்தான். அதேவேளையில் அதிகாரத்தைப் பயன்படுத்தி பாலியல்ரீதியாகப் பெண்கள் சுரண்டப்படுவதும் தொடர்ந்து வருகிறது. பொள்ளாச்சி விவகாரத்தின் ரணம் இன்னும் நம் மனத்தில் ஆறாமல் அப்படியேதான் உள்ளது. இப்படியான சம்பவங்கள் ஆணாதிக்கச் சூழல் இன்னும் அகலவில்லை என்பதையே காட்டுகிறது. ராகவன் தொடர்பிலான வீடியோ எத்தகைய தன்மையைக் கொண்டிருக்கிறது என்பது முறையான விசாரணை வழியாகவே தெரியவரும்.

அரசியலில், திரைப்படத் துறையில், அரசு, தனியார் நிறுவனங்களில், பள்ளி கல்லூரிகளில் என எங்கெங்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆண்கள் பெண்களைத் தங்கள் ஆளுகைக்குள் கொண்டுவரப் பார்க்கிறார்கள். துணிச்சல் கொண்ட பெண்கள் இதை எதிர்த்துப் போர்க்கொடி தூக்குகிறார்கள். அதேவேளையில் பெண்களில் பலர் இத்தகைய சம்பவங்களை சிவ பெருமான் தொண்டையில் சிக்கிய ஆலகால விஷம் போல் விழுங்கவும் முடியாமல் துப்பவும் முடியாமல் அவதிப்படுகின்றனர். படிநிலையில் தங்களைவிட மேலே இருக்கும் ஆண்கள் தங்களைப் பாலியல்ரீதியாகத் தொந்தரவுக்குட்படுத்தும்வேளையில், துணிச்சலான பெண்கள் பொதுவெளியில் குற்றம்சாட்டுகிறார்கள். அப்படிக் குற்றம்சாட்டும் பெண்ணின் நடத்தையைக் கேள்விக்குள்ளாக்கும் பிற்போக்குத் தனம் இங்கு நிலவுகிறது என்பதை நாம் மறந்துவிட முடியாது. இந்தப் பிற்போக்குத்தனத்திலிருந்து ஒட்டுமொத்த சமூகமும் வெளியேற வேண்டாமா?

பெண்களின் பாலியல்ரீதியான பாதுகாப்புக்கு வழிகோலும் விசாகா கமிட்டி போன்ற அம்சங்களால்கூட இன்னும் ஆக்கபூர்வமான பலன்கள் கிட்டிவிடவில்லை. விசாகா கமிட்டி அமைக்கப்பட்ட நிறுவங்களிலேயே கூட பெண்ணுக்கு எதிரான இப்படியான பாலியல்ரீதியான துன்புறுத்தல்களும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன என்பதும் நாம் அறியாத உண்மை அல்ல. ஒப்புக்கு விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதிகாரமிகு பதவியில் ஆண் இருப்பின் பெண்கள் ஒடுக்கப்படுவதும் ஊமையாக்கப்படுவதும் வெகு சாதாரணமாக நிகழ்ந்துவருகின்றன. ஆனாலும், இவற்றைக் கண்டும் காணாமலும் நாம் போகிறோம். சிவபெருமான் தன் உடம்பின் பாதியை உமையவளுக்குக் கொடுத்தார் என்று சொல்கிற நாம்தான் அதே உமையவளைப் போன்ற பெண் ஒருவரைத் தகாத வகையில் நடத்தத் துடிக்கிறோம். பாலியல் என்னும் மிருக உணர்ச்சிக்கு இன்னும் இப்படியான அத்துமீறல்கள் வழியே தீனி போட முயல்வது குறித்து வெட்கப்பட வேண்டாமா? பதவியும் அதிகாரமும் பணமும் தரும் போதையில் நெறிதவறும் பெரும்பாலானோரின் இலக்கு பெண்களாகவே இருப்பது பற்றி பண்பாடு மிக்க ஒரு சமூகம் வெட்கித் தலைகுனிய வேண்டாமா? என்று தணியும் இந்த பாலியல் மோகம்? சட்டப்படியான தண்டனைகள் பெற்றுத்தர வாய்ப்பு இருந்தபோதும், பெண்ணை சக உயிர் என்று உணராதவரையிலும், தனிமனிதர் திருந்தாதவரையிலும் இப்படியான சம்பவங்கள் தொடரவே செய்யும் என்பது கசப்பான உண்மை.  

நியூஸ் ஸ்ட்ரோக் இதழுக்காக எழுதியது. 

புதன், செப்டம்பர் 01, 2021

கேள்விக்குள்ளாக்கும் மக்களாட்சியின் மாண்பு


தமிழ்நாட்டு அரசியல் களத்தில் கொடநாடு எஸ்டேட் விவகாரம் பயங்கரமான அனலைக் கிளப்பியிருக்கிறது. அங்கே 2017 ஏப்ரல் மாதம் 23 ஆம் நாளன்று அதன் காவலாளிகளில் ஒருவரான ஓம்பகதூர் என்பவர் கொல்லப்பட்டார். அந்தக் கொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து கொடநாடு எஸ்டேட்டுக்குள் புகுந்த கொள்ளையர் விலை மதிப்பற்ற பொருள்களைக் கொள்ளையடித்துச் சென்றதாகத் தகவல்கள் வெளியாயின. இதையடுத்து, ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரான கனகராஜ் என்பவர் சாலை விபத்தில் பலியானார். கொடநாடு கொலை காரணமாகத் தேடப்பட்ட சயான் தன்னுடைய மனைவியையும் மகளையும் விபத்தில் இழந்தார். கொடநாட்டுக் கொள்ளைச் சம்பவம் சிசிடிவி காட்சிகளாகப் பதிவாகவே இல்லை என்பது ஆச்சரியத்தைத் தந்தது. இதைத் தொடர்ந்து கொடநாட்டில் கணினிப் பிரிவில் பணியாற்றிய தினேஷ் என்பவர் தற்கொலைசெய்துகொண்டார்.

இப்படி அடுக்கடுக்காகக் கொலை, கொள்ளை, விபத்து, தற்கொலை போன்ற சம்பவங்களால் பெரும்புனைவுபோல் உருண்டு திரண்டது கொடநாட்டு மர்மம். ஒரு சுவாரசியமான திரில்லர் நாவலை ஒத்திருந்தது இந்த விவகாரம். இதன் பின்னணியில் இருப்பவர் யார் என்னும் கேள்வி தமிழ்நாட்டு அரசியல் ஆர்வலர்கள், வெகுமக்கள் மனத்தைக் குடைந்தது. அது தொடர்பான முறையான விசாரணை மட்டுமே இந்த விவகாரத்தின் மர்மங்களை விலக்கி உண்மையைத் தெளிவாக்கும் என்பது பொதுத்தளத்தில் விவாதிக்கப்பட்டது. ஆனால், இந்த விவகாரம் மீண்டும் தோண்டப்படுவதையோ மறுவிசாரணை நடத்தப்படுவதையோ  தமிழ்நாட்டின் எதிர்க்கட்சியான அதிமுக விரும்பவில்லை. மறுவிசாரணை என்னும் நடவடிக்கை அதிமுகவைப் பெரும் பதற்றத்தின் பிடிக்குள் தள்ளியிருக்கிறது. ஆட்சியில் இருந்த காலத்தில் ஒன்றிய அரசுடன் முரண்படாமல் தன் மீது எந்தப் பழியும் விழாமல் பார்த்துக்கொண்ட அதிமுகவால் இப்போது அப்படி நடந்துகொள்ள இயலவில்லை. மாநிலத்தின் ஆட்சி அதிகாரத்தை இழந்து நிற்கும் அந்தக் கட்சி இந்த விவகாரம் தொடர்பாகச் சட்டமன்றத்தில் விவாதிக்கப்படுவதையே விரும்பவில்லை. ஆளுநரைச் சந்தித்து மனு அளித்தது அந்தக் கட்சி. இந்த விவகாரத்தில் முன்னாள் முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமியும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் கரம் கோத்து செயல்படுகிறார்கள். தங்கள் கட்சியை அரசியல்ரீதியாகப் பழிவாங்கும் பொருட்டு இந்தக் கொடநாடு விவகாரத்தைக் கையில் எடுத்திருக்கிறது ஆளும் திமுக தரப்பு என்பது அவர்களது வாதம். கொடநாடு விவகாரத்தைச் சுற்றிப் படர்ந்துள்ள மர்மங்களை விலக்கி அங்கே என்ன நடந்தது என்பதை முறையாக விசாரித்து மக்களுக்குச் சொல்ல வேண்டிய கடமை தங்களுக்கு இருப்பதாக ஆளும் திமுக தரப்பு சொல்கிறது. 

ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் இந்த விவகாரத்தை முன்னிட்டு அதனதன் தரப்பை நியாயப்படுத்தும் காட்சிகளை அரங்கேற்றுகின்றன. இந்தக் கொடநாடு எஸ்டேட் அதன் உரிமையாளர்களான ஜோன்ஸ் குடும்பத்தினரிடமிருந்து கட்டாயப்படுத்தி 1994இல் வாங்கப்பட்டதிலிருந்தே அதைச் சுற்றி அநேகக் கதைகள் புனையப்பட்டுப் பொதுவெளியில் புழக்கத்துக்கு வந்தன. அவற்றில் உண்மையும் பொய்யும் புரட்டும் கலந்தே காணப்படுகின்றன. எது உண்மை எது பொய் என அறிந்துகொள்வது சாமானியமான செயலன்று.

முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா இரண்டாம் தலைமைச் செயலகத்தையே கொடநாட்டில் அமைத்துவிட்டாரோ என்று தோன்றும்படியாகவே தமிழ்நாட்டை ஆண்டார். அதிகாரமிகு மன்னராட்சிக் காலத்தைப் போல் மக்களாட்சியை மாற்றியமைத்தார். கேள்வி கேட்க இயலாதவராகவும் மக்களிடமிருந்து தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்ட ஒருவராகவும் அவர் நடந்துகொண்டார். அதிகார துஷ்பிரயோகம் என்பதைப் பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படாமல அதிகாரங்களைத் தனக்குத் தோதாக ஆட்டம்போடவைத்தார். அதிகாரத்தைப் பயன்படுத்தி சொத்துகளை வாரிக்குவித்தார். சொத்துக்குவிப்பு வழக்கு காரணமாக முதலமைச்சர் பதவியிலிருந்தே இறங்க நேரிட்டது. ஆனாலும் துளியும் ஜெயலலிதா தன் போக்கை மாற்றிக்கொள்ளவில்லை.

போயஸ்கார்டன், சிறுதாவூர், கொடநாடு என ஜெயலலிதா எங்கெங்கு சென்றாலும் அங்கெல்லாம் சாமானியர்கள் தங்கள் வாழ்வில் பல துயரங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவானது. அவருக்காகப் போக்குவரத்து மணிக்கணக்காக நிறுத்தப்பட்டது. தான் மக்கள் சேவகர் தன்பொருட்டு மக்கள் துன்பப்படுவதா என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டதா என்றே தெரியவில்லை. அவர் வணங்கும் கடவுள் அவருக்கு ஆளும் வாய்ப்பையும் அதிகாரத்தின் பயனையும் தந்திருக்கிறார் என்றே நம்பியிருப்பாரோ என்னவோ? வழிபாடுகளில் ஜெயலலிதாவுக்கு இருந்த நம்பிக்கை சகலரும் அறிந்த ஒன்றுதான். ஆகவே, அவருக்கு இப்படியான எண்ணம் உருவாகியிருக்க வாய்ப்புள்ளது.

தமிழ்நாட்டைச் சார்ந்த எந்த முதலமைச்சரும் இப்படியான நடவடிக்கையில் இறங்கியதில்லை. அரசாங்க கோப்புகள் முதலமைச்சரின் கையெழுத்துக்காக விமானத்தில் பறந்த வரலாற்றை ஜெயலலிதா படைத்தார். முதலமைச்சர் உள்ளிட்ட அரசாங்கப் பணிகள் அனைத்தும் மக்களுக்கான வேலைகளைப் புரிய மக்கள் அளித்த ஒரு வாய்ப்பு என்பதை மறந்து அதன் அதிகாரங்களில் திளைப்பவர்கள் அரசியலில் பெருகிய பிறகு மக்களாட்சியின் மாண்பு பெரிதும் கேள்விக்குள்ளானது. தலைமைப் பதவிகளில் தகுதியற்றோர் அமரும்போது, பதவிக்கான மாண்புகள் காற்றில் பறந்துவிடும் என்பதற்கு எடுத்துக்காட்டானார் ஜெயலலிதா.

மக்களாட்சி என்னும் பெரும் தத்துவத்தையே கேலிக்குரியதாக மாற்றிவிடுகிறார்கள் இப்படியான அரசியல்வாதிகளும் தலைமைப் பொறுப்பாளர்களும். மன்னராட்சிக் காலத்தில் மன்னர் வைத்ததுதான் சட்டம். மக்களெல்லாம் அதற்கேற்ப நடந்துகொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு ஆட்பட்டார்கள். பல மன்னர்கள் கொடுங்கோலாட்சி நடத்தி மக்களை வதைத்தார்கள். இப்படியான கொடுங்கோன்மையிலிருந்து தங்களை விடுவிக்கக்கூடிய ஒன்றாக மக்களாட்சி பார்க்கப்பட்டதென்னவோ உண்மை. ஆனால், நடைமுறை யதார்த்தத்தில் மக்களாட்சி என்பது மக்களுக்காக இருக்கிறதா என்று சீர்தூக்கிப் பார்க்கும்போது தலையைக் குனியத்தான் வேண்டியதிருக்கிறது. மக்கள் பணிக்காக நம்மை மக்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்னும் புரிதல் இருந்தால் ஒரு முதலமைச்சர் தனக்கென எந்தத் தனிப்பட்ட உரிமையையும் கோர மாட்டார். மக்கள் நலன் சார்ந்த விஷயங்களுக்காக மட்டுமே தனக்கான அதிகாரத்தைப் பயன்படுத்துவார்.

தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் 1967 ஆம் ஆண்டு குறிப்பிடத்தக்க ஒன்றாகிறது. அந்த ஆண்டில் நடைபெற்ற தேர்தலில்தான் சாமானியர்கள் கையில் அதிகாரம் அளிக்கப்பட்டது. அந்தத் தேர்தலில் 174 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக 137 இடங்களைக் கைப்பற்றியது. அந்தக் கட்சி பெற்ற வாக்குகள் 62,30,552. வெறும் 62 லட்சம் சொச்சம் பேர் தான் அந்த ஆட்சியைத் தேர்ந்தெடுத்தனர். அந்தத் தேர்தலில் மொத்த வாக்காளர்கள் இரண்டு கோடிக்கும் மேற்பட்டோர். இதேபோல் திமுகவிடமிருந்து ஆட்சியை அதிமுக கைப்பற்றிய 1977 தேர்தலில் 200 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக 130 இடங்களைக் கைப்பற்றியது. அந்தக் கட்சிக்குக் கிடைத்த மொத்த வாக்குகள் 51,94,876தான். இந்தத் தேர்தலில் மொத்த வாக்காளர்கள் 2.81 கோடிப் பேர். இன்றுவரை இப்படியான நடைமுறைதான் தொடர்கிறது. 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக பெற்ற மொத்த வாக்குகள் 1.74 கோடிதான்.

பெரும்பான்மை மக்களை ஆள்வதற்காகத் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு கட்சியைப் பெரும்பான்மையோர் தேர்ந்தெடுப்பதில்லை. சிறுபான்மையோர் தான் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது ஒரு நகைமுரண்தான். மக்களாட்சியின் குறைபாடுகளில் இதுவும் ஒன்று. மக்களாட்சி தந்த வாய்ப்பால் முதலமைச்சரான அறிஞர் சி.என்.அண்ணாதுரை இரண்டு ஆண்டுக்குள் மறைந்துவிட்டார். அவரையடுத்து முதலமைச்சரான மு.கருணாநிதி தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் தரமிறங்கியதற்கான மூல விதை விதைத்தவராகக் கருதப்படுகிறார். அவரைத் தொடர்ந்து முதலமைச்சராக ஆன எம்.ஜி.ஆர். தன்னை வழிபடுகிறவர்களுக்கு வள்ளலாகத் தோற்றமளித்தபோதும் தன்னைப் பகைத்துக்கொண்டவர்களுக்கு சிம்ம சொப்பனமாகவே இருந்தார். அவரது ராமாவரம் தோட்டம் பற்றிய கதைகள் தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் முக்கிய இடம்பிடித்தவை. எம்.ஜி.ஆர். அங்கே அளித்த விருந்துகள் போல அங்கே அரங்கேறிய கொடுஞ்சம்பவங்களும் அதிகப்படியானவை. இருந்தபோதும், எம்.ஜி.ஆர். தமிழ்நாட்டு மக்களால் கடவுள்போல் வழிபடப்பட்டார். மக்களின் இந்த அறியாமைதான் அரசியல்வாதிகளுக்குத் தாங்கள் சாதாரண மக்களைவிட உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள் என்ற மமதையை அளித்துவிடுகிறது.

எம்.ஜி.ஆர் மறைந்த பிறகு அவரது இடத்தை ஆக்கிரமித்துக்கொண்ட முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா. மு.கருணாநிதி, எம்.ஜி.ஆர். போன்ற தலைவர்களை எல்லாம் அசுர வேகத்தில் கடந்துவிட்டார். 1991 ஆம் ஆண்டில் அமைந்த அவரது ஆட்சியில் பட்டம் பெற்றவர்கள் அநேகர் இருந்தனர். கிட்டத்தட்ட ஒரு சர்வாதிகாரி போல் செயல்படும் வாய்ப்பை ஜெயலலிதா பெற்றிருந்தார். ஜெயலலிதா மட்டும் மக்கள் சேவைக்காகத் தான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன் என்பதை உணர்ந்து நடந்துகொண்டிருந்தால் தமிழ்நாட்டு மக்கள் எத்தனையோ நன்மைகளைப் பெற்றிருக்க முடியும். ஆனால், தமிழ்நாட்டு மக்களின் துரதிர்ஷ்டம் மக்களுக்கான தலைவராக இல்லாமல் மக்கள் தலைவராகவே அவர் நின்றுவிட்டார். மக்களால் நான் மக்களுக்காக நான் என்பதை வெறும் முழக்கத்துடன் மூலைக்கு அனுப்பிவிட்டார். அதிகாரம் தரும் அத்தனை வசதி வாய்ப்புகளையும் ஒரு முதலமைச்சராகத் தான் அனுபவித்ததுடன் தன் தோழிக்கும் அதை மடைமாற்றிவிட்டார். கொடநாடு எஸ்டேட் விவகாரத்தில் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கைங்கர்யம் குறிப்பிடத்தக்கது.

மு.கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, அதிகாரத்தைப் பயன்படுத்தித் தனது குடும்பத்தினரின் வளர்ச்சிக்கு வித்திட்டார் என்ற குற்றச்சாட்டு இன்றுவரை அவரது சமூகநீதிப் பங்களிப்பையும் மீறிய கறையாக நிலைத்திருக்கிறது. தினகரன் ஊழியர் எரிப்பு விவகாரத்தில் திமுகவின் பெயர் எந்த அளவுக்கு அடிபட்டது என்பதைத் தமிழ்நாட்டு அரசியலை அறிந்தோர் மறந்துவிட முடியாது. அதே போல் இப்போது இந்த கொடநாடு விவகாரத்தில் அதிமுகவின் தொடர்பு என்பது பல விபரீத எல்லைக்குச் சென்றுள்ளது என்றுதான் தோன்றுகிறது.

தொழில்நுட்ப வளர்ச்சி பெருகிய இந்தக் காலத்திலும், ஒவ்வொருவர் கையில் கைபேசி என்னும் நவீன சாதனம் எல்லா மர்மங்களையும் வெளிப்படுத்திவிடக் கூடிய வீரியத்துடன் செயல்படும்போதும், கொடநாடு எஸ்டேட் போன்ற விவகாரங்களின் மர்மம் ஒரு புகை மூட்டம் போல தமிழ்நாட்டு அரசியல் வட்டாரத்தில் படர்வது மக்களாட்சி என்பதையே கேலிக்குரியதாக்குகிறது. இதை எப்படிச் சாமானியர்களால்  பொறுத்துக்கொள்ள முடியும்? அதே நேரத்தில் அவர்களால் இதை எதிர்த்து என்ன செய்துவிட முடியும்? ஆட்சியிலிருக்கும் திமுககூட இதை அரசியல்ரீதியான காய்நகர்த்துதலுக்குத்தான் பயன்படுத்துகிறதோ என்று கருதவும் இடமிருக்கிறது. ஏனெனில், மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை நிறைவேற்ற முனைப்பு காட்டும் திமுக அரசு கருணாநிதி நினைவிடம் போன்ற வெகுமக்களுக்குப் பயன் தராத விஷயங்களிலும் வீரியத்துடன் செயல்படுவது கண்கூடு. பாஜக ஆட்சியில் 3,000 கோடி சர்தார் பட்டேல் சிலை விவகாரம் எப்படி விமர்சிக்கப்பட்டது? முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடம் அமைக்கப்படும் என்று கடந்த ஆட்சியில் சொல்லப்பட்டபோது திமுக அதை எப்படி எதிர்கொண்டது? இவை எல்லாம் வெகு மக்கள் மூளையில் பதிவாகியிருக்கிறது என்பதை மறந்துவிட முடியாது.

ஜனநாயக நாட்டில் வாக்களிப்பதுடன் மக்களின் கடமை முடிந்துவிடுகிறது. அவர்களால் ஆட்சியை மாற்றியமைக்க முடியும். ஆனால், தாங்கள் தேர்ந்தெடுத்த ஆட்சி தங்கள் விருப்பத்துக்கு மாறாக நடந்துகொள்ளும்போது அதைக் கேள்வி கேட்க இயலாது. மக்களுக்கான ஆட்சியை மக்களுக்காக அமைத்திருக்கிறோம் என்னும் புரிதலற்ற ஆளுமைகளிடம் அதிகாரம் சிக்கும்போது, அதனால் மக்கள்தாம் பாதிக்கப்படுகிறார்கள். சட்டமியற்றும் அதிகாரம் கொண்ட மக்கள் பிரதிநிதிகள் அந்தச் சட்டத்துக்குத் தாங்களும் கட்டுப்பட்டவர்கள் என்பதை மறந்துவிடுதல் கூடாது. அப்படி மறந்துசெயல்படும்போது, மக்கள்தாம் அவர்களுக்கு அதை நினைவூட்ட வேண்டும். மக்கள் சார்பாக நின்று ஊடகங்கள் அந்த வேலையைச் செய்ய வேண்டும். இப்படியெல்லாம் நடந்தால்தான் மக்களாட்சி என்பது உரிய மகத்துவம் பெறும். இல்லாவிட்டால் ஜனநாயகம் சிதைந்துவிடும். ஜனநாயகம் சிதைவது ஜனங்களுக்கு நல்லதன்று.  

டைம்ஸ் சமயம் இணையதளத்துக்காக எழுதிய கட்டுரையின் மூல வடிவம். 

சனி, ஆகஸ்ட் 21, 2021

புல்லுக்குப் பாயும் நீரா இலவசங்கள்?


திராவிட இயக்கப் பின்புலத்திலிருந்து வந்து அமைச்சராகியிருக்கும் தமிழ்நாட்டு நிதியமைச்சரான பழனிவேல் தியாகராஜன், நிதிநிலை அறிக்கை விவாதத்துக்குப் பதில் அளித்துப் பேசியபோது, சமூகப் பொருளாதார நீதிக்கு ஏற்ப எல்லாருக்கும் எல்லாவற்றையும் இலவசமாக வழங்க முடியாது, அப்படிச் செய்தால் அரசு திவாலாகிவிடும் என்று கூறியுள்ளார். திமுக ஆட்சி அமைந்த உடன் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட 4,000 ரூபாய் உதவி தகுதியற்ற பலருக்கும் சென்று சேர்ந்தது என்பதை அவர் வருத்தத்துடன் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தார். அதே போல் அரசு ஊழியர் ஓய்வூதிய விஷயத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தைச் செயல்படுத்த அரசின் பொருளாதார நிலைமை கைகொடுக்கவில்லை என்று வெளிப்படையாகச் சொல்லிவிட்டார். அப்படிச் சொன்னபோதுதான், எல்லாவற்றையும் இலவசங்களாகக் கொடுத்தால் அரசு திவாலாகிவிடும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.  நிதியமைச்சரின் இந்தக் கருத்து ஆழ்ந்து சிந்திக்கத்தக்கது. இதைத் தொடக்கமாகக் கொண்டு இலவசங்கள் பற்றிய சில விஷயங்களை அலசிப் பார்க்கலாம்.  

தமிழ்நாட்டு அரசியல் களத்தில், குறிப்பாகத் தேர்தல் அரசியலில் இலவசங்கள் குறிப்பிடத்தக்கச் செல்வாக்கைச் செலுத்துகின்றன. இலவசங்கள் குறித்த ஆதரவான எதிரான கருத்துகளுக்கு எப்போதுமே பஞ்சமேயில்லை. பொதுவாகவே இலவசங்கள் தொடர்பான எதிர்ப்பு மனநிலை உள்ளதுபோலவே அவை தொடர்பான சாய்வு மனநிலையும் நம்மிடையே உள்ளது. ஆயிரக்கணக்கான ரூபாய்க்குப் பொருள்களை வாங்குவோம் அதற்காகப் பத்து ரூபாய் பெறுமான பொருள் இலவசமாகக் கிடைத்தால் போதும் கிடைப்பதற்கரிய பொருள் கிடைத்தது போல் மகிழ்வோம். உண்மையில் அது இலவசமாக இருக்காது நம்மிடம் அதற்கும் சேர்த்துத்தான் பணம் பெற்றிருப்பார்கள். ஆனால், அது குறித்து நாம் யோசிப்பதேயில்லை. அந்த நேரத்து சந்தோஷம் நமக்கு எப்போதும் முதன்மையாகிவிடுகிறது. மேலும், ஆழமாக யோசிக்கும்போதுகூட, அதற்கும் சேர்த்துத்தான் பணம் கொடுத்துவிடுகிறோமே ஆதலால் அது இலவசமன்று நமக்கான உரிமைதானே என நம்மை நாமே சமாதானப்படுத்திக்கொள்கிறோம். இப்படிச் சந்தோஷப்படும் நம்மிடம் யாராவது ஒருவர் சும்மா எதையாவது கொடுத்தால் உடனே நாம் வாங்கிவிடுவதில்லை. அவர் ஏன் நமக்குக் கொடுக்க வேண்டும் என ஒருமுறைக்குப் பலமுறை யோசிக்கிறோம். ஓரிடத்தில் இலவசத்தை எந்தக் கேள்வியுமின்றி பெறுவதில் மகிழ்ச்சியடையும் நாம்தான் இன்னோரிடத்தில் அதே இலவசம் தொடர்பாக ஆயிரம் சந்தேகங்களை எழுப்பிக்கொள்கிறோம்; இரண்டு வகையாகவும் நாம்தான் செயல்படுகிறோம்.

சில இடங்களில் இலவசத்தை அனுபவிக்கும் நாம் சில இடங்களில் அதே இலவசத்தை அனுபவிக்க மறுக்கிறோம். ஏன் இந்த முரண்பாடு? எந்த இடத்தில் நாம் அனுபவிக்கிறோம் எந்த இடத்தில் மறுக்கிறோம் என்பதை நிதானமாகச்  சிந்தித்துப்பார்க்கும்போது, நமக்கு உரிமை என்று நம்புமிடத்தில் நாம் அதை அனுபவிக்கிறோம், நமக்கு உரிமையானதில்லை என்று கருதுமிடத்தில் அதை மறுத்துவிடுகிறோம். ஆக, இலவசம் பெறுவது தொடர்பாக நமக்கு ஒரு தெளிவு இருக்கத்தான் செய்கிறது. ஓடும் ரயிலில் சிலர் வெறுமனே பிச்சை கேட்டுச் செல்வார்கள். சிலரோ அந்த ரயில் பெட்டியைச் சுத்தப்படுத்தியபடி காசு கேட்பார்கள். வெறுமனே பிச்சை கேட்பவருக்குக் கொடுப்பவர்களும் இருப்பார்கள்; சுத்தப்படுத்திவிட்டுக் காசு கேட்பவருக்குக் கொடுக்காதவர்களும் இருப்பார்கள். பெறுபவர்களுக்கு ஒரு தெளிவு இருப்பதைப் போல் கொடுப்பவர்களுக்கும் ஒரு தெளிவு இருக்கவே செய்கிறது.

இப்படி இலவசத்துக்கு இரண்டு பக்கங்கள் உள்ளபோது, அது தொடர்பான விவாதங்களும் விமர்சனங்களும் எழுவது இயல்பு. அதிலும், தமிழகத்தைப் பொறுத்தவரை அரசு தரும் இலவசங்கள் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளாகிவருகின்றன; அதே நேரத்தில் ஒரு தரப்பாரால் வரவேற்கவும் படுகின்றன. இலவசங்கள் தருவதால் மக்கள் சோம்பேறிகளாகிவிடுவார்கள் என்கிறது ஒரு தரப்பு. இலவசங்கள் மக்களுக்கான உரிமைதான் அரசுகள் அத்தகைய இலவசங்களைத் தருவதில் எந்தத் தவறுமில்லை அதே வேளையில் அது ஜனநாயக நாட்டில் மக்கள் நலம் நாடும் அரசின் கடமையே என்றுரைப்பாரும் உண்டு.

தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் 1967 ஆம் ஆண்டில் ஆட்சியதிகாரத்தை காங்கிரஸிடமிருந்து கைப்பற்றிய திமுகவின் ஆட்சிதான் இத்தகைய இலவசங்களுக்கு வழிவகுத்தது என அண்ணாவின் ஒரு ரூபாய்க்கு மூன்று படி அரிசி என்னும் திட்டத்தைக் கைகாட்டுபவர்கள் இருக்கிறார்கள். அதே மனிதர்கள், அந்தத் திட்டத்தையும் முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை, அரசின் பொருளாதாரம் இடம்கொடுக்கவில்லை என்பதையும் குறையாகச் சொல்வார்கள். அண்ணாத்துரை தலைமையில் அமைந்த அந்த ஆட்சி தமிழ்நாட்டை ஒரு முன்னுதாரண மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டது. அப்படியமைந்த ஆட்சி கண்டிப்பாக மக்களைச் சோம்பேறி ஆக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அப்படியொரு முடிவை எடுத்திருக்க இயலாது. அப்படியெனில், மக்களில் ஒரு பகுதியினருக்கு அப்படியொரு உதவி தேவைப்பட்டது என்பதே உண்மை.

இலவசங்களைப் பொறுத்தவரை கல்வி, மருத்துவம் போன்றவற்றை இலவசமாகத் தர வேண்டும் என்றே பெரும்பாலானோர் கருதுகிறார்கள். அவர்கள் எங்கே முரண்படுகிறார்கள் என்றால், இலவச அரிசி, இலவச தொலைக்காட்சி, இலவச மிக்ஸி, இலவச கிரைண்டர் போன்ற விஷயங்களையே எதிர்க்கிறார்கள். இப்படி எல்லாவற்றையும் இலவசமாகக் கொடுக்கும்போது மக்களை அது சோம்பேறிகளாகிவிடக் கூடும் என்று அஞ்சுவதாகத் தெரிவிக்கிறார்கள். ஆனால், இலவசங்களை ஆதரிப்போர் இது அடிப்படையற்ற அச்சம் என்கிறார்கள். வெறுமனே இப்படியான இலவசங்களைப் பெற்றுக்கொண்டு மக்கள் எந்த வேலையும் செய்யாமல் இருந்துவிடுவார்கள் என்பதற்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை என்று அவர்கள் தெரிவிக்கிறார்கள்.  

இதில் இன்னொரு அம்சமும் கவனிக்கத்தக்கது. இலவசங்களை ஆதரிப்போரில் பெரும்பாலானோர் இடது சாரி மனப்போக்கு கொண்டவர்களாகவும், எதிர்ப்போரில் பெரும்பாலானோர் வலது சாரி மனப்போக்கு கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். நடிகர் ரஜினி காந்த் திரைக்கதை வசனம் எழுதி வள்ளி என ஒரு திரைப்படம் வெளிவந்தது. அந்தப் படத்தில் மந்திரி ஒருவர் இலவச வேட்டி, சேலை வழங்குவார். அங்கே வரும் வீரைய்யன் என்னும் கதாபாத்திரமேற்றிருந்த ரஜினி, சேலை வேட்டி வேண்டாம் வேலை வெட்டி கேளுங்க, வேலை வெட்டி இருந்தா சேலை வேட்டி நாமே வாங்கிக்கலாம் என்று கூறுவார்கள். எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதிய சன் பிக்சர்ஸ் தயாரித்த சர்கார் திரைப்படத்திலும் இலவசத் தொலைக்காட்சி பெட்டிகளைத் தெருவில் போட்டு உடைப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருக்கும். 

அரசியலில் ரஜினிகாந்த் இடதா வலதா என்பதை முடிவுசெய்யும் முன்பே அவர் அரசியலிலிருந்து விலகிவிட்டபோதும், அவரது நடவடிக்கைகள் அவர் எந்தப் பக்கம் சாய்ந்திருந்தார் என்பதைத் தெளிவுபடுத்தியது. அதைப் போலவே எழுத்தாளர் ஜெயமோகனும் வலதுசாரிச் சாய்வு கொண்டவர் என்பதைத் தமிழ்நாடு அறியும். மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் இலவசங்களுக்கு எதிராக இருப்பதையும் இங்கே நினைவில் கொள்ள வேண்டும். ஆனால், தமிழ்நாட்டு நிதியமைச்சர் போன்ற திராவிட இயக்கப் பின்னணி கொண்ட ஒருவர் இலவசம் தொடர்பான மாற்றுக்கருத்தை முன்வைக்கும்போது அது பரிசீலிக்கத்தக்கதாகிறது.

உண்மையில் இலவசம் என்பதை வேண்டும் என்றோ வேண்டாம் என்றோ சட்டென்று முடிவுகட்டிவிட முடியாது என்றே தோன்றுகிறது. மகளிருக்கு உரிமைத் தொகையாக அரசு வழங்கவிருக்கும் ரூ. 1,000 தொடர்பாகக் கணக்கெடுப்பு நிகழ்த்தி அதன் பின்பே அதை வழங்க முடியும் என்று நிதியமைச்சர் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது என்றே பெரும்பாலானோர் கருதுகிறார்கள். என்னதான் மக்கள் நலத் திட்டமாக இருந்தபோதும், அது தகுதியானோரை மட்டும் சென்றடையும்போதுதான் அதனால் பலன் இருக்கும். நெல்லுக்கு இறைத்த நீர் புல்லுக்கும் சிறிது பாயலாம் அதைச் சகித்துக்கொள்ள முடியும். ஆனால், நீரில் பெரும்பகுதியைப் புல்லே பெற்றுக்கொள்ளுமானால் அது பயனற்றுப் போய்விடும். அரசு தரும் இலவசங்களைப் பெறுவதில் பொதுமக்களுக்கு எந்தத் தயக்கமுமில்லை அது நமது வரிப்பணத்தில் தரப்படுவதுதானே என அத்தகைய இலவசங்களை உரிமையாகவே கருதுகிறார்கள். எனவே, இத்தகைய இலவசங்களை வழங்குவதில் ஒரு தெளிவையும் கறார்தன்மையையும் அரசுதான் கைக்கொள்ள வேண்டியிருக்கிறது. வாக்கு வாங்குவதற்காக இலவசங்களைப் பயன்படுத்தாமல் உண்மையிலேயே பொருளாதாரரீதியாகப் பாதிக்கப்படுவோருக்கான இலவசங்கள் மட்டுமே அறிவிக்கப்பட வேண்டும். அவற்றைப் பெறத் தகுதியானோரைச் சரியாக இனங்கண்டு மக்கள் நலத் திட்டங்களை அவர்களிடம் கொண்டுசேர்ப்பதில் எந்தப் பாரபட்சமுமற்று அரசு நடந்துகொள்ளும்போது இலவசங்களால் எதிர்பார்க்கும் பயனும் பலனும் கிடைக்கக்கூடும். அதை விடுத்து வெறுமனே எல்லாருக்கும் எல்லாவற்றையும் வாரி இறைத்தால் அதனால் பொருளாதார நிலை மேலும் பலவீனமாகுமே தவிர யாருக்கும் எந்தப் பயனும் இல்லாமல் போய்விடும். நிதியமைச்சர் சொல்வது போல் அரசு திவாலாகிவிடும் என்பதை மறுப்பதற்கில்லை. 

டைம்ஸ் சமயம் இணையதளத்துக்காக ரோஹின் என்னும் பெயரில் எழுதப்பட்டது. 

வியாழன், ஜூலை 08, 2021

உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா, நடக்காதா?


உள்கட்டமைப்பில் சிறந்து விளங்கும் மாநிலம் தமிழ்நாடு என்று அரசுகள் மார்தட்டிக்கொண்டபோதும் இன்னும் நமது ஊரகப் பகுதிகளிலும் நகரப் பகுதிகளிலும் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் முழுமையாகத் தீர்க்கப்படவில்லை. சரியான சாலை இல்லை, குடிநீர் வசதி இல்லை, தெரு விளக்குகள் இல்லை, சுகாதார வசதி போதுமானதாக இல்லை, கழிவுநீர் செல்லும் வசதி இல்லை, குப்பை மேடுகள் முறையாக அகற்றப்படவில்லை எனப் பல இல்லைகளைத் தொடர்ந்து மக்கள் கவனப்படுத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்; இந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்படுவதற்காகத் தொடர்ந்து போராடிக்கொண்டும் இருக்கிறார்கள். மக்கள் பிரதிநிதிகள் ஊராட்சி, நகராட்சி உள்ளிட்ட ஊராட்சி அமைப்புகளில் பொறுப்பிலிருக்கும்போதே இப்படியான நிலைமைதான் உள்ளது என்றால், மக்கள் பிரதிநிதிகளும் இல்லாதபோது, மக்கள் எதிர்கொள்ளும் அவதியைச் சொல்லத் தேவையில்லை. சின்ன சின்ன பிரச்சினைக்கும் அரசு அலுவலகத்துக்கு ஏறி இறங்க முடியாது; அதிகாரிகளுடன் மல்லுக்கட்ட இயலாது.   

பாசன நீர் கடைமடைவரை பாய்வது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அரசு நிர்வாகம் அடிப்படை அலகான ஊராட்சிகள்வரை வந்து சேர்வது. ஊராட்சிகள்வரை அதிகாரம் வந்துசேரும்போதே செழுமையான நிர்வாகம் சாத்தியப்படும். மக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாகாத நிலைமை மாறுவதற்கு ஊரக உள்ளாட்சி அமைப்புகள் தொய்வின்றித் தொடர்ந்து செயல்படுதல் அவசியம். மக்கள் பிரதிநிதிகள் அந்த அமைப்புகளில் இருக்கும்போதுதான் பொதுமக்கள் தமது பிரச்சினைகளை உடனுக்குடன் கவனப்படுத்த முடியும். வீட்டில், தெருவில், ஊரில் ஒரு பிரச்சினையை எதிர்கொண்டால் உடனடியாக மன்ற உறுப்பினரை அணுகித் தம் குறையைக் கூற இயலும். அது தீர்க்கப்படுகிறதா, இல்லையா என்பது வேறு கதை.

ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை சட்டப்பேரவைத் தேர்தலும் நாடாளுமன்றத் தேர்தலும் எந்தச் சிக்கலுமின்றி ஒழுங்காக நடந்துவிடுகின்றன. ஆனால், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் மாத்திரம் ஒருவிதச் சுணக்கத்தைக் காணமுடிகிறது. பொதுவாக, மாநிலத்தின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் கட்சி வலுவான நிலையில் உள்ளபோது உள்ளாட்சித் தேர்தலைச் சூட்டோடு சூடாக நடத்தி உள்ளாட்சி அமைப்புகளையும் தம் ஆளுகைக்குக் கொண்டுவருவதில் முனைப்பு காட்டுகிறது. அதே நேரத்தில் ஆளும் கட்சிக்கு வெற்றிவாய்ப்பு இருக்காதோ எனும் ஐயம் எழுந்தால் அவ்வளவுதான் உள்ளாட்சித் தேர்தல் எண்ணத்தையே அது மூட்டை கட்டிவைத்துவிடுகிறது.

தமிழ்நாட்டில் 1996 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அமோக வெற்றிபெற்று ஆட்சியமைத்த திமுக அரசு, அந்த உற்சாகத்தில் பத்தாண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை 1996 அக்டோபரில் நடத்தியது. 23 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை மாநகராட்சித் தேர்தல் நடத்தப்பட்டு, இப்போதைய தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை மாநகர மேயராக மக்களால் முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து 2001, 2006, 2011 ஆகிய ஆண்டுகளில் உள்ளாட்சித் தேர்தல்கள் தொடர்ந்து நடத்தப்பட்டன.

2016ஆம் ஆண்டில் தொடர்ந்து இரண்டாம் முறையாக ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய அதிமுக அரசு தமிழகத்தின் உள்ளாட்சித் தேர்தலை 2016 அக்டோபரில் நடத்தியிருக்க வேண்டும். ஆனால், அரசியல் காரணங்களால் அதிமுக அரசு உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தது. 2011ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதிகளை மறுவரையறை செய்து, அதற்குப் பிறகு உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என திமுக உள்ளிட்ட சிலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உத்தரவிட்டிருந்தது. அந்த ஒன்பது மாவட்டங்களிலும் மறுசீரமைப்பு பணிகளின் பொருட்டு அப்போது அவற்றுக்கு விலக்கு அளிக்கப்பட்டது.

நீதிமன்ற உத்தரவு காரணமாக 2019 டிசம்பரில் அதிமுக அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்தியது.  தமிழகத்தின் 27 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் 2019 டிசம்பர் 27, 30 ஆகிய நாள்களில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, திருப்பத்தூர், தென்காசி, ராணிப்பேட்டை, விழுப்புரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் தேர்தல் நடத்தப்படவில்லை. மேலும், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி போன்ற அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்தப்படவில்லை.

இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருந்த 9 மாவட்டங்களில் தொகுதி மறுவரையறைப் பணிகளை நிறைவுசெய்து 2020 டிசம்பர் 11 ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்துவதற்கான விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டிருந்தது. ஆனால், கொரோனா பரவல் உள்ளிட்ட காரணங்களால் இந்தப் பணிகளை முடிக்க மேலும் 6 மாதம் அவகாசம் வேண்டும் என்று தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்திருந்தது. அதை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் அவகாசத்தை வழங்கியிருந்தது.

இந்நிலையில் மேற்குறிப்பிட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, அனிருத்தா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநிலத் தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.நரசிம்மா தனது வாதத்தில், ”இந்தியாவிலேயே கொரோனா பரவல் தமிழகத்தில்தான் அதிகம். இதனால் இந்த 9 மாவட்டங்களில் தொகுதி மறுவரையறை உள்ளிட்ட பணிகளை குறித்த காலத்துக்குள் செய்ய முடியவில்லை. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தல் ஆணையத்திடம் இருந்து பெற வேண்டியுள்ளது. இந்தக் காரணங்களால் உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியவில்லை. எனவே மீண்டும் அவகாசம் வழங்க வேண்டும்என்று கோரினார்.

அதையேற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். ‘‘புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் தொகுதி மறுவரையறை உள்ளிட்ட பணிகளை நிறைவுசெய்து 2021 செப்டம்பர் 15க்குள் அங்கே உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிவுகளை அறிவிக்க வேண்டும்என உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையைத் தள்ளிவைத்துள்ளனர்.

இதனிடையே 2019ஆம் ஆண்டு ஊரக அளவிலான தேர்தல் மட்டுமே நடத்தப்பட்டு, நகராட்சி, பேரூராட்சித் தேர்தல்கள் ஆகியவை நடத்தப்படாததால், அங்கு அரசு தனி அதிகாரிகளே நிர்வாகத்தைக் கவனித்துவருகிறார்கள். இதற்கான அரசாணை ஆறு மாதத்துக்கு ஒருமுறை நீட்டிக்கப்படுகிறது. உள்ளாட்சித் துறையில் செயல்படும் அத்தகைய தனி அதிகாரிகளின் பதவிக் காலம் 2021 ஜூன் 30 அன்றுடன் முடிவடைவதால், மேலும் 6 மாதம் நீட்டிக்கும் மசோதா சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் ஆகியோர் சட்ட மசோதாக்களைப் பேரவையில் தாக்கல் செய்தனர்.

2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரையின்போது, திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், உள்ளாட்சித் தேர்தல் முழுமையாக நடத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார் என்பதை நினைவில்கொள்ள வேண்டும். கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் ஒருபுறம் மேற்கொள்ளப்படும் சூழலிலும், இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளைக் கவனிக்கும்படி அமைச்சர் கே.என்.நேருவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருப்பதாகச் செய்திகள் வந்தன. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் வார்டுகள் மறுசீரமைப்பு செய்யும் பணிகள் தேங்கிக் கிடந்தால் அதை விரைந்து முடிக்குமாறு முதலமைச்சர் அறிவுறுத்தி இருக்கிறார் என்கிறது ஆளும் தரப்பு. முதலமைச்சரின் இந்த நடவடிக்கைகள் காரணமாக 2021  இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படக்கூடும் என்று பேசப்படுகிறது.

கொரோனாவின் இரண்டாம் அலை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுவிட்டாலும், மூன்றாம் அலை செப்டம்பரில் வரக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். அப்படி கொரோனா பெருந்தொற்றின் மூன்றாம் அலை உருவானால் அந்தச் சூழலில் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாதவகையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது எந்த அளவுக்கு இயலும் என்பது கேள்விக்குறியே. அதே வேளையில் புதிதாக உருவான 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடுதல் அவகாசம் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும் தமிழக அரசு கூறியுள்ளது. கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு தேர்தல் தேதி முடிவு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவில் 12ஆம் வகுப்பு தேர்வு நடத்தப்படுவது குறித்து உச்சநீதிமன்றம் கடுங்கேள்விகளை எழுப்பியுள்ளது. தேர்வு நடத்துவதே பாதுகாப்பற்றது என்ற எண்ணம் உள்ளபோது, தேர்தல் நடத்துவது எப்படிப் பாதுகாப்பானது என்ற கேள்வி எழுவது இயல்பு. தேர்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்போது, பரப்புரை உள்ளிட்ட காரணங்களுக்காக ஆயிரக்கணக்கானோர் பொதுவிடங்களில் திரளக்கூடும். சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரை காரணமாகத் தமிழ்நாட்டின் இரண்டாம் அலை அதிகமாகப் பரவியது என்னும் விமர்சனமும் எழுந்ததை மறந்துவிட முடியாது. அதேவேளையில் கொரோனாவைக் காரணங்காட்டி மீண்டும் தேர்தலை தள்ளிவைக்க செப்டம்பர் 15 எனக் கெடு விதித்துள்ள உச்சநீதிமன்றம் அனுமதிக்குமா? ஒருவேளை அப்படித் தள்ளிவைத்தாலும் ஆளும் அரசுக்குத் தோல்வி பயம் வந்துவிட்டதாலேயே உள்ளாட்சித் தேர்தலுக்கு அவகாசம் கேட்டு இழுத்தடிக்கிறது என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டும் வாய்ப்பும் உள்ளது. ஆக, தேர்தலை நடத்தினாலும் சிக்கல் நடத்தாவிட்டாலும் சிக்கல் என்பதே உண்மை நிலை.

ஆனால், திமுக தம் கட்சியினரை அழைத்து ஆலோசனை நடத்தியிருக்கிறது என்பதைக் கருத்தில்கொண்டால், அது உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகிவிட்டது என்பதே பொருள். ஆக, உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் உள்ளாட்சி அமைப்புகளில் நிரப்பப்படுவதை ஆர்வத்துடன் எதிர்நோக்கும் கட்சிக்காரர்களின் திசையிலேயே ஆளும் தரப்பும் பயணப்படுகிறது என்றே தோன்றுகிறது. உள்ளாட்சித் தேர்தலைக் கட்சிக்காரர்கள் எதிர்பார்க்கும் காரணம் வேறு; மக்கள் எதிர்பார்க்கும் காரணம் வேறு. அதே நேரத்தில் கொரோனா பெருந்தொற்றின் மூன்றாம் அலை என்னும் கத்தி தொங்கிக்கொண்டிருப்பதையும் பரிசீலித்து உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் எடுக்கப்படுவதே அனைவருக்கும் நல்லது. இந்தச் சிக்கல்களைச் சமாளித்து உள்ளாட்சித் தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடிக்க வேண்டிய பெரும் சவால் ஆளுங்கட்சி முன் உள்ளது. அதை எப்படி ஆளுங்கட்சி சமாளிக்கப்போகிறது?

நியூஸ் ஸ்ட்ரோக் இதழுக்காக எழுதியது. அந்த இதழில் ஜூனில் வெளியானது. 

லேட்டஸ்ட்

ரஜினியாவாரா விஜய்?

தொடர்பவர்