இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், ஆகஸ்ட் 28, 2025

இப்பல்லாம் யாரு சார் சாதி பாக்குறா?


அவன் கிண்டி ரயில் நிலையத்தில் அந்தப் புறநகர் ரயிலில் ஏறினான். அது சென்னைக் கடற்கரையிலிருந்து தாம்பரம் செல்லும் புறநகர் ரயில். அவன் முதல் வகுப்பில் தனக்குக் கிடைத்த இருக்கையில் அமர்ந்தான். அவனுக்கு வலப்புறம் ஒரு பெரியவர் அமர்ந்திருந்தார். சாதாரணமான பேண்ட், சர்ட் உடுத்தியிருந்த மனிதராகத் தென்பட்டார். கையில் வைத்திருந்த மொபைலில் ஏதோ காணொலியைக் கண்டுகொண்டிருந்தார். அவ்வப்போது அவனை ஓரக்கண்ணால் பார்த்தவாறே இருந்தார். அவன் அதைக் கவனித்தும் கவனிக்காததுபோல் காட்டிக்கொண்டான். 

ரயில் திரிசூலத்தைக் கடந்த நேரத்தில் அந்தப் பெரியவர் அவனிடம் பேச்சுக் கொடுத்தார். 

“நீங்க ரயில்வேல வேலை பாக்குறீங்களா?”

அவன் தலையை மறுத்து ஆட்டியபடியே, “இல்லையே” என்றான்.

“ஃபர்ஸ்ட் க்ளாஸ் டிக்கெட் வச்சிருக்கீங்களா” எனும் அடுத்த கேள்வியை எறிந்தார்.

அப்போது, அவன் அவரைக் கூர்ந்து கவனித்தான். அவரது முதுகுச் சட்டையை மீறி நூலைக் காண வழியில்லை. ஆனால், பிடரியில் சிறிய அளவில் தென்பட்ட குதிரை வால் போன்ற மயிர்க் கற்றையைக் காண முடிந்தது. அவர் இன்னார் என்பதை உணர்ந்துகொண்டதால் சிறு திருவிளையாடலை நடத்த விரும்பினான்.

“நீங்க யாரு, உங்ககிட்ட நான் டிக்கெட் எடுத்தேனா இல்லையான்னு ஏன் சொல்லணும்?”

“நான் சாதாரணமாத்தான கேட்கிறேன், ஏன் கோபப்படுறீங்க?”

“நான் கோபப்படலைங்க... சாதாரணமாத்தான் சொல்றேன்... உங்ககிட்ட ஏன் நான் டிக்கெட்டைக் காட்டணும்?” மூஞ்சியில் புன்னகை தவழச் சொன்னான்.

அவனது பேச்சால் அவருக்கு எரிச்சலும் கோவமும் ஏற்பட்டிருக்க வேண்டும்.

“டிக்கெட் எடுத்தீங்களா?” அதிகாரத் தொனியில் வாலிமீது ராமன் அம்பெய்தது போல் கேள்வியை  வீசினார்.

அவன் சிரித்துக்கொண்டே, “இல்லை” என்று உதட்டைப் பிதுக்கிக் காட்டினான்.

“டிக்கெட் எடுக்கல... ஃப்ர்ஸ்ட் கிளாஸ்ல போறீங்க... வாழ்க வளமுடன்” என்று வஞ்சகப் புகழ்ச்சியில் வாழ்த்தியபடி குரோம்பேட்டையில் இறங்கிச் சென்றார்.

அந்த மனிதர் அவன் உள்ளத்தைச் சோற்றகப்பை போல் கிளறிவிட்டார். அவன் மனதில் தந்தை பெரியார் விஸ்வரூபமெடுத்தார். அந்தப் பெரியவர் சின்னதொரு கடுகு போல உள்ளங்கொண்ட மனிதராகத் தோற்றம் கொண்டார். இது நடந்தது 2025இல் எனில், 1925இல் நிலைமை எப்படி இருந்திருக்கும்?

பெரியார் ஏன் கைத்தடியைக் கடுங்கோவத்துடன் சுழற்றினார் என்பது புரிகிறதா? இப்பல்லாம் யார் சார் சாதி பாக்குறான்னு யாராவது சொல்லத்தான் செய்றாங்க. ஆனால், யதார்த்தம் வேறு மாதிரியாகத்தானே உள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொடர்பவர்