சூது கவ்வும் என்னும் புதிய திரைமொழிப் படத்தைத் தந்த இயக்குநர் நலன் குமரசாமியின் இரண்டாம் படம் காதலும் கடந்து போகும். இரண்டாம் படத்தில் இயக்குநரின் வளர்ச்சி தெரியவில்லை. கிட்டத்தட்ட முதல் படத்தைப் போல் தான் இப்படத்தையும் இயக்கியிருக்கிறார். ஆனால் சூது கவ்வும் படத்தில் இருந்த புத்துணர்ச்சி இந்தப் படத்தில் இல்லை. நலன் சற்றுக் கவனமாக வேண்டும். இல்லையெனில் டெம்ப்ளேட் இயக்குநராகிவிடுவார். இதுவும் தமிழுக்குப் புதிய வகை திரைக்கதை என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஏனெனில் ஓர் அடியாள். ஆனால் அவனோ மிகவும் தத்தி. அவனைச் சூழல் காரணமாக நண்பனாக ஏற்றுக்கொண்ட நாயகி. பெரிய திருப்பங்களோ முடிச்சுகளோ அற்ற தெளிவான ஓட்டம் கொண்ட திரைக்கதை.
ஒரு சிறுகதையைப் படிப்பது போல் இயல்பான சம்பவங்களோடு படம் பயணித்து முடித்துவிடுகிறது. இந்தப் படத்துக்குப் பாடல் என்று எதுவுமே தேவையில்லை. ஆனால் படத்தில் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. சமீபத்தில் வெளியான நானும் ரௌடிதான் படத்தில் இப்போது தான் விஜய் சேதுபதி ஒரு சோதா ரௌடி வேடத்தில் நடித்தார். இந்தப் படத்திலும் அப்படியொரு வேடம் தான். அவரைத் தவிர வேறு கதாநாயகர் எவரும் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பார்களா என்பதே சந்தேகம் தான். ஏனெனில் கதாநாயக பிம்பத்தைத் தூக்கி நிறுத்தும் கதை அல்ல இது. இதில் பாத்திரம் தான் முன்னிலையில் நிற்கிறது.
மை டியர் டெஸ்பரடோ படத்தில் அடிநாதமாகக் கல்விக்கான ஆதரவு மனநிலை அந்த அடியாள் பாத்திரத்திடமிருந்து வெளிப்பட்டிருக்கும். நலன் மூலப் படத்திலிருந்து பெரிய அளவில் எதையும் மாற்றவில்லை. ஆனால் தமிழ்ப் படத்துக்காகச் சிறிது மசாலா தூவியிருக்கிறார். தென்கொரியப் படம் இதைவிட இன்னும் கொஞ்சம் நுட்பமாக இருக்கும். தமிழ்ப் படம் சற்று வெளிப்படையான காட்சிகளைக் கொண்டிருக்கிறது.
கேங்க்ஸ்டர் ஸ்டைல் படம் என்றாலும் படத்தில் ரத்தமே இல்லை. இறுதிக் காட்சியில்கூட கத்திக் குத்தின் ரத்தத்தை மறைக்க சினிமாவில் மறைமுகமாகப் பயன்படுத்தப்படும் சிவப்பு பெயிண்ட் தான் இதில் வெளிப்படையாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. வன்முறை மீது நம்பிக்கையற்ற மென்னுணர்வுப் பிரியர்களுக்கான படத்தை எடுத்திருக்கிறார் கொரிய இயக்குநர். 2010-ல் வெளியான இந்தக் கொரியப் படத்தைப் பார்த்து அதைத் தமிழுக்குக் கொண்டுவர விரும்பிய நலன் முயற்சி ஆச்சரியத்தையே தருகிறது. ஆனால் தமிழுக்கு இந்தப் படம் ஒட்டுகிறதா என்பது கேள்வியே.
![]() |
My Dear Desperado காட்சி |
கஷ்ட காலத்தில் உடனிருப்போர் மீது மனிதருக்கு எழும் இயல்பான பிரியத்தை தெளிவான திரைக்கதை வெளிப்படுத்துகிறது. விஜய் சேதுபதிக்கு ஏற்ற கதாபாத்திரம் தான். அவரிடமிருந்து இடையிடையே வெளிப்படும் மெல்லிய நகைச்சுவைகளுக்கு திரையரங்கில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. இதைப் போன்ற பொழுதுபோக்குப் படங்கள் தமிழுக்கு அவசியமே. ஆனால் இந்தப் படம் எந்த அளவு வெற்றிபெறப் போகிறது என்பது தெரியவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக