இந்த வலைப்பதிவில் தேடு

பாஜக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாஜக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஆகஸ்ட் 19, 2025

குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சில குறிப்புகள்


இந்தியக் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளராகக் களமிறங்கும் சி.பி.ராதா கிருஷ்ணனுக்கு எதிராக இந்தியா கூட்டணியின் வேட்பாளராக, உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான பி.சுதர்ஷன் ரெட்டி களமிறக்கப்பட்டுள்ளார். திமுகவின் திருச்சி சிவா களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்தியா கூட்டணி  இன்று (2025 ஆகஸ்டு 19)  மதியம் சுதர்ஷன் ரெட்டியை வேட்பாளராக அறிவித்துள்ளது. 

பாஜக அரசியல் ஆளுமையை வேட்பாளராக நிறுத்தியுள்ளது எனில், இந்தியா கூட்டணி அரசியலில் ஈடுபடாத ஒருவரை வேட்பாளராகக் கொண்டுவந்துள்ளது. எப்படியும் வெற்றிபெறப் போவது சி.பி.ராதாகிருஷ்ணன் தான் எனும்போது, அரசியல் சாராத ஒருவரை நிறுத்தியிருப்பதன் மூலம் இந்தியா கூட்டணி சரியாகவே நகர்ந்துள்ளது. 

1998 நாடாளுமன்றத் தேர்தலில் கோயம்புத்தூர் தொகுதியில் 4,49,269 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளரான கே.ஆர். சுப்பையனை 1,44,676 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிகொண்டவர். என்னடா, பாஜக அவ்வளவு வாக்குகளை எப்படிப் பெற்றது என அதிசயிக்காதீர்கள். அந்தத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருந்தது பாஜக. அடுத்த தேர்தலில் அதாவது 1999 நாடாளுமன்றத் தேர்தலில் அதே கோயம்புத்தூரில் சி.பி.ராதா கிருஷ்ணன் 4,30,068  வாக்குகளைப் பெற்று, அவரை அடுத்த வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளரான ஆர். நல்லகண்ணுவைவிட 54,077 வாக்குகள் அதிகம்பெற்று வெற்றிபெற்றிருந்தார். 

மீண்டும் 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்  கோயம்புத்தூர் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் கே.சுப்பராயன் 1,64,505 வாக்குகள் வித்தியாசத்தில் சி.பி.ராதா கிருஷ்ணனைத் தோற்கடித்தார். அந்தத் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வாங்கிய வாக்குகள் 3,40,476. 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் கோயம்புத்தூர் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்ட ராதாகிருஷ்ணன் 3,88,911 வாக்குகள் பெற்றுத் தோல்வியடைந்தார். 2019 ஆம் ஆண்டும் கோயம்புத்தூர் தொகுதியிலேயே போட்டியிட்டார் சி.பி.ராதாகிருஷ்ணன். அப்போது அவர் 3,92,007 வாக்குகள் பெற்று வெற்றிவாய்ப்பைத் தவறவிட்டார். 

2023 ஆம் ஆண்டில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். அப்போது, தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களையும் கூடுதல் பொறுப்பாக அவர் கவனித்துக்கொண்டார். அதன் பிறகு மகாராஷ்டிர மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டவர், தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிறார்.

ஜூலை 21 ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளில் உடல்நலக் காரணங்களைக் கூறி குடியரசு துணைத் தலைவராகவிருந்த ஜகதீப் தன்கர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து குடியரசு துணைத் தலைவர் பதவி காலியானது.வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஆகஸ்டு 21. வேட்பாளர்கள் ஆகஸ்டு 25 வரை தங்கள் வேட்புமனுக்களைத் திரும்பப் பெறலாம். குடியரசு துணைத் தலைவர் தேர்தல் செப்டம்பர் 9 அன்று நடைபெற உள்ளது.  வாக்குகள் அன்றே எண்ணப்படும். 

செப்டம்பர் 9 அன்று நடைபெற்ற தேர்தலில், மொத்த வாக்குகள் 782இல் 767 வாக்குகள் பதிவாயின. பதிவான வாக்குகளில் செல்லாதவை 15, பாஜக சார்பில் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று வெற்றியை ஈட்டியுள்ளார். இதன் மூலம் இந்தியாவின் 15 ஆம் குடியரசு துணைத் தலைவர் என்னும் பொறுப்புக்கு உரியவராகிறார். இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட சுதர்சன் ரெட்டி 300 வாக்குகளைப் பெற்றிருந்தார்.    

பாஜகவின் அரசியல் நாடகம் வெற்றிபெறாது


குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை பாஜக முன்னிருத்தியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு ஆகஸ்டு 18 அன்று வெளியானது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரை அதுவும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளராக நிறுத்துவதன் மூலம் தமிழ்நாட்டில் திமுகவுக்கு ஒரு நெருக்கடியைத் தரலாம் என பாஜக நினைக்கிறது.  

வழக்கம்போல் பாஜக நடத்தும் அதே அரசியல் நாடகம்தான் இது. இந்தத் தேர்தலில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரை நிறுத்துவதால் திமுக அவருக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என பாஜக கோருகிறது. ஆனால், அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ்.காரரான ராதாகிருஷ்ணன் திராவிட சித்தாந்தத்துக்கு எதிரானவர். 

மேலும், ஒருவர் தமிழர் என்பதற்காகவே அவரை ஆதரிக்க இயலுமா? அவர் தமிழ்நாட்டுக்கு என்ன செய்வார்? திராவிட சித்தாந்தம் குறித்த அவரது அணுகுமுறை என்ன? புரிதல் என்ன? என்பவற்றை ஆழ்ந்து பரிசீலித்துத்தானே முடிவெடிக்க இயலும்.

திராவிட சித்தாந்த புரிதல் உள்ள எந்தத் தமிழரும் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் திமுக சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்க வேண்டும் என நினைக்க மாட்டார். கொங்குப் பகுதியின் வாங்குவங்கிக்கான கணக்காகவே பாஜக சிபிஆரை வேட்பாளராக நிறுத்தியுள்ளது என்பதை அரசியலில் அடிப்படை அறிவு உள்ள எவரும் புரிந்துகொள்ள முடியும். 

தமிழ்நாட்டைச் சேர்ந்த திருச்சி சிவா இந்தியா கூட்டணியின் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்றும் வதந்தி ஒன்று நேற்று முதலே சமூக ஊடகங்களில் உலவுகிறது. அப்படி அவர் நிறுத்தப்பட்டால் அது சரியான நகர்வாகவே இருக்கும். தமிழர் என்பதால் ராதாகிருஷ்ணனை ஆதரிக்கக் கோரும் பாஜக அப்போது எதுவும் செய்ய இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டுவிடும்.  பாஜக வேட்பாளரைத் தவிர்ப்பதற்கு ஒரு நியாயமான காரணம் திமுகவுக்குக் கிடைத்துவிடும். 

ஒரு வேளை அப்படி இல்லாத பட்சத்திலும் இந்தியா கூட்டணியின் சார்பில் வேறு ஒரு வேட்பாளரே நிறுத்தப்படும் பட்சத்திலும் திமுக ராதாகிருஷ்ணனை ஆதரிக்காமல் தவிர்ப்பதே தமிழ்நாட்டு நலனுக்கு நல்லது. 

ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தில் ஊறிப்போன ஒருவரால் ஒருபோதும் தமிழ்நாட்டுக்கு எந்த நல்லதும் நடைபெறப்போவதில்லை. ஆகவே, தமிழ்நாட்டைச் சார்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசுத் துணைத் தலைவராகத் தேர்வாகப் போவதால் தமிழ்நாட்டுக்கு அதனால் எந்த நல்லதும் நடக்கப்போவதில்லை என்பதை மட்டும் உறுதியாகக் கூற முடியும்.  

வியாழன், செப்டம்பர் 09, 2021

அரசியல் களத்து ஆயுதமா திராவிட அடையாளம்?


அண்மை நாள்களாக அரசியல் களத்தில் திராவிடக் களஞ்சியம் தொடர்பான விவாதம் பரபரப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. திமுக அரசு தமிழர் அடையாளங்களை அழித்தொழிக்க முயல்கிறது என தமிழ்த் தேசியவாதிகள் குற்றஞ்சாட்டுகிறார்கள். இப்போது இந்த விவகாரம் மிகச் சூடு பிடித்ததற்கு 2021 ஆகஸ்ட் 31 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ் வளர்ச்சித் துறைக்கான மானியக் கோரிக்கைகள் பற்றிய விவாதமே காரணம். ஏனெனில் அந்த விவாதத்தின்போது, ஒரு கொள்கை விளக்கக் குறிப்பு அறிவிக்கப்பட்டது. அதன் பத்தாம் அறிவிப்பு, சங்க இலக்கியங்களைச் சந்தி பிரித்து எளிமைப் பதிப்புகளாக வெளியிடும் திட்டம், திராவிடக் களஞ்சியம் என்ற தொகுப்பு நூல் வெளியிடும் திட்டம் ஆகியற்றைக் கொண்டிருந்தது.  இது போதாதா? கொதித்தெழுந்துவிட்டன தமிழ்த் தேசிய அமைப்புகள்.  தேசிய அடையாளங்களை அழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் குற்றஞ்சாட்டின.

தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவரான பெ.மணியரசன், சங்கத் தமிழ் நூல்களுக்குத் `திராவிடக் களஞ்சியம்என்ற பெயர் சூட்டுவது, தமிழ்மொழி, தமிழினம் இரண்டையும் மறைக்கும் செயல் என்றதுடன் இவ்வாறு பெயர் சூட்டுவதைத் தமிழக அரசு கைவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் இந்த அறிவிப்பைக் கண்டித்திருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகளில் தமிழ் நூல்களைத் தொகுத்து, அவற்றை 'திராவிடக்களஞ்சியம்' என அடையாளப்படுத்தப்போவதாக அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது என்றும் பெருமைமிக்கத் தொல்தமிழர் வரலாற்று அடையாளங்கள் யாவற்றையும் தன்வயப்படுத்தும் திராவிடத் திரிபுவாதிகள் தற்போது தமிழ் நூல்களின் மீதும் கைவைக்க முனைந்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த விவகாரம் பொதுத் தளங்களில் கடுமையாக விவாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இது தொடர்பாக விளக்கமளித்தார்.  எல்லோரும் சங்க இலக்கியத் தொகுப்பையும் திராவிடக் களஞ்சியத்தையும் ஒன்றாகச் சேர்த்துக் குழப்பிக்கொள்கிறார்கள்  என்று அவர் கூறியுள்ளார். சங்க இலக்கியங்களை இந்தக் காலத் தலைமுறையினரும் புரிந்துகொள்ளும் வகையில் எளியதாகச் சந்தி பிரித்துச் செம்பதிப்புகளாக வெளியிடுவது ஒர் அறிவிப்பு. திராவிடக் களஞ்சியம் என்பது மற்றோர் அறிவிப்பு. அதில் திராவிடம் சார்ந்த ஆய்வுக் கட்டுரைகள் இடம்பெறும் என்றும் தெரிவித்தார். கால்டுவெல், அஸ்கோ பர்ப்போலா, ஆர். பாலகிருஷ்ணன் போன்ற ஆய்வறிஞர்களின் கட்டுரைகள், கருதுகோள்கள், இட ஒதுக்கீடு, இந்தி எதிர்ப்பு, சமூக நீதி போன்றவை குறித்த விஷயங்களை உள்ளடக்கிய கட்டுரைகள் அதில் இடம்பெறும் என்பதைக் குறிப்பிட்டிருந்தார். 

மேலும், தொல்காப்பியம் தொடங்கி முத்தொள்ளாயிரம் வரையிலான தமிழ்ச் செவ்வியல் இலக்கிய நூல்கள் அனைத்தும் ஒரே தொகுப்பாக, ஒரே இடத்தில் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்றும் இதற்காக வருடந்தோறும் 10 லட்சம் ரூபாய் செலவிடப்படும் என்றும் கூறியுள்ளார். ஆனால், அதற்குப் பின்னரும் தமிழ்த் தேசியவாதிகள் விட்டபாடில்லை. இந்த விவாதத்தைத் தொடர்ந்துகொண்டேயிருக்கிறார்கள். அவர்கள் திமுக தலைவரை தமிழ்த் தேசியத்தை அழித்தொழிக்கும் ஒருவராக அடையாளப்படுத்த விரும்புகிறார்கள் என்பதுபோல் நடந்துகொள்கிறார்கள்.  

தமிழ்நாட்டில் இந்துத்துவ அரசியல் பேசும் பாஜக, தமிழ்த் தேசிய அரசியல் பேசும் நாம் தமிழர் உள்ளிட்ட தமிழ்த் தேசியவாதிகள் இருவருமே தங்களது எதிராக திமுகவையே முன்னிருத்துகின்றன. தமிழ்நாட்டில் மு.கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி நடைபெற்றபோது அவர் இந்த அளவு எதிர்ப்புகளைச் சந்தித்ததில்லையோ என்று சந்தேகப்படும் அளவுக்கு இப்போது திமுகவுக்கு எதிர்ப்பு உருவாகியிருக்கிறது.  திராவிட சிந்தாந்தத்தைப் பேசும் கட்சியாகத் திமுக இருந்தபோதும், கருணாநிதி தலைமையில் கட்சி நடத்தப்பட்டபோது, அதன் சித்தாந்தத்துக்கு இந்த அளவு நெருக்கடி ஏற்பட்டதில்லை. இப்போது திமுகவை மு.க.ஸ்டாலின் தலைமை ஏற்று நடத்தப்படும்போது சிந்தாந்தரீதியிலான நெருக்கடி முற்றிப்போயுள்ளது. மு.கருணாநிதியால் பாஜகவுடன் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்திக்க முடிந்தது. ஆனால், இப்போது திமுக 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும், 2021 சட்டப்பேரவைத் தேர்தலிலும் வெற்றிபெற அது மிகத் தீவிரமான இந்துத்துவ எதிர்ப்பைக் கையிலெடுக்க வேண்டியதிருந்தது.

தமிழ்நாட்டில் திராவிடச் சிந்தாந்தத்துக்கு நெருக்கடியை ஏற்படுத்தி இந்து என்னும் ஒரு குடையின் கீழ் தமிழ் மக்களைத் திரட்டும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது. அரசியல்ரீதியாக பாஜகவை எதிர்த்து நிற்கும் திமுக இட ஒதுக்கீடு, அனைவரும் அர்ச்சகர் முதலான அம்சங்களின் மூலம் தாங்கள் இந்துக்களுக்கு எதிரியல்ல என்பதை நிரூபிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. பாஜக என்ற நேரடி எதிரியை அரசியல் களத்தில் எதிர்கொள்ளும் திராவிடக் கட்சியான திமுகவுக்கு தமிழ்த் தேசியம் என்னும் உடன்பிறந்த சகோதரத் தொல்லைகளும் உள்ளன. தமிழர் என்றும், திராவிடர் என்றும் தமிழ்நாட்டில் நடைபெறும் விவாதங்கள் இன்று நேற்று தொடங்கியவையல்ல. பெரியார், மறைமலையடிகள் காலம் தொட்டே இருந்துவருபவை.

ஆகவே, பாஜகவின் இந்துத்துவத்தையும் நாம் தமிழரின் தமிழ்த் தேசியத்தையும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக எதிர்கொள்ள வேண்டுமென்றால் அது திராவிட சித்தாந்தத்தை வலுவுடன் கைப்பற்றிக்கொள்ள வேண்டியது தவிர்க்க இயலாதது. இப்போதைய திமுக அரசின் நிலைப்பாடுகள் திராவிடச் சிந்தாந்தத்தில் ஊறிப்போனவை என்பதான எண்ணைத்தையே தருகின்றன. அதன் அண்மைக்காலச் சான்றென திராவிடக் களஞ்சிய அறிவிப்பைச் சொல்லலாம். கட்சியில் இளைஞர்களைக் கொண்டுவந்து சேர்க்கும் பெரிய பொறுப்பை இப்போது திமுக நிறைவேற்ற வேண்டியதிருக்கிறது. அதற்காகவே இந்தத் திராவிட களஞ்சியம் அறிவிப்பை அது வெளியிட்டிருக்கிறது. திராவிட என்ற சொல் இந்துத்துவவாதிகளையும் தமிழ்த் தேசியவாதிகளையும் ஒரே நேரத்தில் அச்சுறுத்துகிறது.

மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்ற நாள் முதலே அது திராவிட அடையாள அரசியலைத் தனது ஆயுதமாக ஏந்திக்கொண்டது கண்கூடு. திராவிட சிந்தாந்த அரசியல் பேசுவதும் அதை ஆயுதமாக ஏந்திக்கொள்வதும் தமிழ்நாட்டுக்கும் தமிழ்நாட்டு நலனுக்கும் உகந்தது என்பதே திராவிடச் சித்தாந்தத்தை ஆதரிப்பவர்களது கருத்து. திராவிடக் கொள்கைகளை இன்றைய இளந்தலைமுறையினரிடம் கொண்டுசென்றால் மட்டுமே தமிழ்நாட்டைச் சூழ்ந்து நிற்கும் சிந்தாந்தப் போரில் வெற்றியைப்பெற முடியும் என்று திமுகவும் ஸ்டாலினும் உணர்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதன் வெளிப்பாடாகவே இத்தகைய நடவடிக்கைகளைப் பார்க்க முடிகிறது.

தங்களது இனம் திராவிடம் என்றும் தாங்கள் பேசும் மொழி தமிழ் என்றும் தொடர்ந்து திராவிட ஆதரவாளர்கள் கூறிவருகிறார்கள். திராவிடமும் ஆரியமும் ஒன்றுக்கொண்டு எதிரான அரசியல் நிலைகளில் உள்ளன. எப்போதுமே திராவிடத்தை அழிக்கவும் ஒழிக்கவும் இங்கிருந்தே எதிர்களை உருவாக்குவது ஆரியத்தின் சூழ்ச்சி. எப்போதுமே திராவிடர்களது ஒன்றுதிரளலைத் தடுக்க முயலும் ஆரியம் திராவிடத்துக்கான பகையை இங்கே திராவிட நிலத்திலேயே உருவாக்கும். இதற்குத்  தமிழ்த் தேசியம் பயன்படுகிறது என்னும் குற்றச்சாட்டு திராவிடர்கள் எப்போதும் முன்வைக்கிறார்கள். ஆதிக்க எதிர்ப்பு, மாநில சுயாட்சிக்கான உரிமைக் குரல், சாதி,மதரீதியான சமத்துவம் போன்றவை  திராவிடச் சிந்தாந்தத்தின் அடிப்படைக் கொள்கைகள்.

அதனால்தான் திமுக அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவதை நடைமுறைப்படுத்தியுள்ளது; கீழடி போன்ற தமிழர் பண்பாட்டு ஆய்வுகளை முன்னெடுக்கிறது; வ.உ.சிதம்பரானார் போன்ற தலைவர்களைக் கொண்டாடுகிறது;  தமிழ்ப் பெருமிதமான ராஜராஜ சோழன் பிறந்தநாளை அரசு விழாவாகக் கொண்டாடுகிறது. பழந்தமிழ் இலக்கியங்களை இக்காலத் தலைமுறைக்கு அறிமுகப்படுத்த விழைகிறது திராவிடர் குறித்த களஞ்சியங்களை உருவாக்குவது போன்ற பண்பாட்டுப் பணிகளில் தன்னை முழுமையாக திமுக ஈடுபடுகிறது. சிந்தாந்த அடிப்படையிலான கொள்கைப் பிடிப்பும் அது தொடர்பான அடையாளங்களைப் பாதுகாப்பதுமே திமுகவுக்கு அரசியல்ரீதியான பலன் தரும் என்பதை ஸ்டாலினும் சரி திமுகவினரும் சரி உணர்ந்திருக்கிறார்கள். மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைத்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் திராவிட சிந்தாந்த விஷயத்தில், திமுகவின் முன்னாள் தலைவரான மு.கருணாநிதியைவிட மிகத் தீவிரம் காட்டுகிறார்கள் என்றே அரசியல் களத்தினர் பேசிக்கொள்கிறார்கள். அது உண்மைதான்.

அதே நேரத்தில் இந்துத்துவவாதிகளைப்போல் பிற மதத்தினரைத் தேடித் தேடித் துன்புறுத்தும் வேலை போன்ற அடாவடித்தனங்களில் திமுக ஈடுபடவில்லை. திராவிடத்தின் ஒரு கொள்கையாக கடவுள் மறுப்பு உள்ளது என்றபோதும், கடவுள் நம்பிக்கையாளர்களையும் அரவணைத்துச் செல்லும் போக்கையே திமுக அரசு கைக்கொள்கிறது. இறுக்கமான ராணுவக் கெடுபிடி என்னும் ரீதியில் கொள்கைகளைப் பின்பற்றாமல் தேவைப்படும் வேளையில் நெகிழ்ந்துகொடுக்கிறது திமுக.  இதை மெய்ப்பிக்கும் வகையில்தான் தமிழ்நாட்டு அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. திராவிடப் பெருமிதங்கள் ஒரு புறம் இருந்தாலும் அனைவரையும் அரவணைக்கும் பண்பையும் தொடர்ந்து திமுக கடைப்பிடிக்க வேண்டும் என்பதே அதன் நலனை விரும்புபவர்களின் எண்ணம். இந்துத்துவ அரசியலைப் போன்று எதிர்தரப்பினரை எதிரிகளாகவே கருதி அவர்களை ஒழிக்க முயலாதவரை திராவிட அடையாளங்களைக் கையிலெடுக்கும் திமுகவின் நடவடிக்கை அதற்கு அனுகூலத்தையே தரும் என்பதே உண்மை. 

டைம்ஸ் சமயம் இணையதளத்துக்காக ரோஹின் என்னும் பெயரில் எழுதி வெளியானது.

ஞாயிறு, மார்ச் 14, 2021

கடவுள் வருவாரா, மாட்டாரா?

அவன் சாலையில் நடந்துசென்றுகொண்டிருந்தான்.

திடீரென ஒருவர் அவன் கையைப் பிடித்து இழுத்து நிறுத்தினார். அவரை எங்கேயும் பார்த்ததுபோல் நினைவில்லை. எனவே, அவன் அவரைக் கேள்வியுடன் பார்த்தான்.
என்னை எங்கேயும் பார்த்ததில்லை என்று யோசிக்கிறாயா என்று கேட்டார்.
சட்டென்று ஒருமையில் பேசும் அளவுக்கு உரிமை எடுத்துக்கொள்கிறாரே என்னும் எரிச்சலில் அவர் யார் எனப் புருவம் உயர்த்தினான்.
ஒருமையில் பேசியதால் உனக்கு எரிச்சலா என்று கேட்டார்.
எல்லாவற்றையும் கண்டுபிடிக்கிறாரே எனக் கோபமே வந்துவிட்டது அவனுக்கு.
சரி கோபப்படாதே என்றார்.
அவனது கோபம் எல்லை மீறிவிடுமோ என்ற அச்சம் அவனுக்கு ஏற்பட்டது.
நீங்க என்ன பெரிய கடவுளா என்று கோபத்தையும் எரிச்சலையும் அடக்கிக்கொண்டு கேட்டான்.
அவர் முகம் சட்டென்று மலர்ந்தது. எப்படிச் சரியாகக் கண்டுபிடித்தாய் என்று கேட்டார்.
எதுவும் நட்டு கழன்ற கேஸோ என்று கூர்ந்து பார்த்தான்.
மனிதர்களுக்குத்தான் புத்தி பேதலிக்கும் நான் கடவுள் என்றார்.
ஒருவேளை பாலா படங்களைப் பார்த்து அதனால் ஏற்பட்ட நிலைமையோ என்று யோசித்தான்.
உனக்குக் கடவுள் நம்பிக்கையே இல்லையா, எனக் கேட்டார்.
எப்படி இருக்க முடியும்? என்று கேட்டான்.
இப்படித்தான் என்று தன்னைக் காட்டினார்.
அவனுக்குக் குழப்பம் ஏற்பட்டுவிட்டது. சரி இருந்துவிட்டுப் போங்கள். எனக்கு வழிவிடுங்கள் எனக்கு வேலை இருக்கிறது என்று சொன்னான்.
என்னைவிட முக்கியமான வேலை என்றால் நீ இன்னும் என்னை நம்பவில்லை என்று நினைக்கிறேன் என உரையாடலைத் தொடர்ந்தார்.
அவரது உரையாடல் அவனுக்கு அலுப்பைத் தந்தது. இதென்னடா வம்பாகப் போய்விட்டது. இன்று யார் முகத்தில் முழித்தோமோ என்று நினைத்தான்.
பெரிய பகுத்தறிவு பேசுற ஆனால் யார் முகத்தில் முழித்தோம் என யோசிக்கிறாயே என்றார் அவர் விடாமல்.
ஒருவேளை கடவுள் தானோ என்று சந்தேகம் ஏற்பட்டது அவனுக்கு. தனது நம்பிக்கையின் மூல வேரை அறுக்க முயல்கிறாரே என்ற கோபம் வேறு சேர்ந்துகொண்டது.
சரி நான் ஏதாவது அதிசயம் நிகழ்த்தினால்தான் நம்புவாயா என்று கேட்டார்.
ஆமாம் என்று பலமாகத் தலையாட்டினான்.
என்ன வேண்டும் சொல் என்றார்.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றிபெற்றால் உங்களை நம்புகிறேன் என்றான்.
படுபாவி கடவுளாலேயே செய்ய முடியாத விஷயத்தைக் கேட்கிறானே என நினைத்தாரோ என்னவோ அவனைத் தர்மசங்கடத்துடன் பார்த்தார். ஆனால், சரி செய்கிறேன் என்றார்.
அவன் ஆச்சரியத்துடன் உங்களால் முடியுமா என்று கேட்டான்.
இனி எதையும் மே 2 அன்று கேள். அன்று மாலை உன்னை மீண்டும் சந்திக்கிறேன் என்று சொல்லிவிட்டு மறைந்துவிட்டார்.
மே 2 அன்று அவர் வருவாரா, மாட்டாரா?

செவ்வாய், ஜூன் 04, 2019

தேசமணியின் தலையில் விழுந்த சுத்தி

ஓவியம்: வெங்கி

நடைபெற்று முடிந்த நகராட்சித் தேர்தலில் வீராப்பூரில் தாய்மண் கட்சி சார்பில் போட்டியிட்ட வெள்ளைச்சாமி மட்டுமே வென்றிருந்தான். மீதி எல்லா நகர்மன்ற உறுப்பினர்களையும் வென்றிருந்தது  சமோசா பார்ட்டி. அதன் தலைவர் பொறுப்பிலிருந்த இயந்திர பாடியார் பதவியேற்க நினைத்திருந்த அன்றுதான் அந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது. வீராப்பூரின் மண்ணின் மைந்தன் தேசமணியாரின் தலையில் சுத்தியல் விழுந்து அவர் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். இதைக் கேள்விப்பட்ட வெள்ளைச்சாமி இயந்திர பாடியார் பதவியேற்பு நிகழ்ச்சியை ஒத்திவைத்துவிட்டு தேசமணியாரைப் பார்க்கக் கிளம்பினார்.

கேட்டைத் திறந்து வெளியே வரவும் செய்தியாளர்கள் அவர் வாயில் மைக்கை நுழைக்காத குறையாக தேசமணியின் வரலாற்றைக் கேட்க ஆரம்பித்துவிட்டனர். ஒரு நிமிஷம் வெள்ளைச்சாமிக்குத் தலையே சுத்திவிட்டது. வெள்ளைச்சாமியின் தலைக்கு உள்ளேயும் சுத்தம்;  வெளியேயும் சுத்தம். அதில் பளீரென்று  வெயில் தாக்கிய நேரத்தில் ஒருவழியாகச் செய்தியாளர்களைச் சமாளித்துவிட்டு வந்துவிட்டார். தேசமணி சேர்க்கப்பட்டிருந்த மருத்துவமனையின் பெயரை எழுதிவைத்திருந்த சீட்டை மட்டும் இந்தச் செய்தியாளர் களேபரத்தில் தொலைத்துவிட்டார்.

எப்படியோ மருத்துவமனையைக் கண்டுபிடித்து வந்தவர் தேசமணியாரின் படுக்கையருகே வந்தார். அப்போது தேசமணியார் ஒரு மாம்பழத்தை உறிஞ்சி சுவைத்துக்கொண்டிருந்தார். எப்படியிருக்கீங்க தேசமணி என்றார். அதற்கு தேசமணி, நீங்க யாரு? என்று கேட்கவும் பதறிவிட்டார் வெள்ளைச்சாமி. ஈரேழு பதினான்கு லோகத்துக்கும் தன்னை யாரெனத் தெரியும் என்று நினைத்திருந்த வெள்ளைக்குத் தேசமணியார் தன்னை இப்படிச் சேதப்படுத்துகிறாரே என்று எரிச்சலாக இருந்தது. ஆனால், சமாளித்துக்கொண்டார். அருகிலிருந்து டாக்டர் தெலுங்கிசையிடம் கேட்டபோதுதான் அவர் தேசமணி இல்லை என்பது தெரிந்தது. அவரது பெயர் குண்டுகனி என்றும் தேர்தலில் ஏற்பட்ட மோதலில் அவர் படுகாயமடைந்தவர் என்றும் தெரியவந்தது. தனது வழக்கமான அசமந்தத்தனத்தால் மருத்துவமனை மாறிவிட்டதை அறிந்து வெளியேறினார் வெள்ளை.

தேசமணியைப் பார்ப்பதற்குள் அவரது சரித்திரத்தை அறிந்துகொள்ள வேண்டும் என்பதால் அருகிலிருந்த புத்தகக் கடைக்குச் சென்றார். எழுத்தாளர் பயபோகன் எழுதிய ‘முன்விழும் தேசமணியாரின் நிழல்’ என்ற நூல் கண்ணில் பட்டது. உடனே வாங்கிப் படிக்க ஆரம்பித்தார். ஒரு கோடீஸ்வரத் தாய்க்கு மகனாகப் பிறந்த தேசமணியார். செல்வச் செழிப்பு மிக்க வாழ்க்கை பிடிக்காமல் ஓர் ஏழைத் தாயைத் தத்து எடுத்து அவருடனேயே வாழ்ந்துவந்திருக்கிறார். ஒரு ரயில் கூட வராத வீராப்பூர் ரயில் நிலையத்தில் சிறுவயதில் சுக்கு காபி விற்றிருக்கிறார். இப்போதுகூட தேசமணியாரின் கையில் சுக்கு காபி கேனைத் தூக்கித் திரிந்த அடையாளமாக ஒரு தழும்பு காணப்படும் என்பதை வாசித்தபோது வெள்ளையின் கண்களிலிருந்து நீர் வழிந்தது. அதைத் தடவிப் பார்த்தவர் கண்ணீர் ஏன் சிவப்பு நிறத்திலிருக்கிறது யோசித்தபோதுதான் அது ரத்தம் என்பது உறைத்தது. நூலை வாசித்து முடிக்கவும், சப்பலோ மருத்துவமனை வரவும் சரியாக இருந்தது.

உள்ளே சென்ற வெள்ளைச்சாமிக்குப் பலத்த அதிர்ச்சி. தேசமணியார் டிவியில் நண்பர்கள் படத்தின் வெடிவேலு காமெடிகளைப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தார். அவரிடம் பேச்சுக்கொடுத்தபோது, அவரது உடல்நிலை குறித்த செய்தி இயந்திர பாடியாரின் செட்டப் என்று தெரிந்தது. வாக்குப்பெட்டிகளில் அஜால் குஜால் வேலை செய்துதான் சமோசா பார்ட்டி வென்றிருக்கிறது. அது வெளியே தெரியாமல் மறைக்கவே தேசமணியாரின் உடல்நிலை பற்றிய செய்தியைப் பரப்பியிருக்கிறது என்பதை அரசல் புரசலாகப் புரிந்துகொண்ட வெள்ளைக்குத் தன் மடத்தனத்தை நினைத்துச் சிரிக்கவா அழவா என்றே தெரியவில்லை. 

இந்து தமிழ் திசை நாளிதழின் இளமை புதுமை இணைப்பிதழில் 04.06.2019 அன்று வெளியானது.

லேட்டஸ்ட்

அமலா எனும் பொன்மான்

தொடர்பவர்