இந்த வலைப்பதிவில் தேடு

ஜெயலலிதா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜெயலலிதா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், செப்டம்பர் 01, 2021

கேள்விக்குள்ளாக்கும் மக்களாட்சியின் மாண்பு


தமிழ்நாட்டு அரசியல் களத்தில் கொடநாடு எஸ்டேட் விவகாரம் பயங்கரமான அனலைக் கிளப்பியிருக்கிறது. அங்கே 2017 ஏப்ரல் மாதம் 23 ஆம் நாளன்று அதன் காவலாளிகளில் ஒருவரான ஓம்பகதூர் என்பவர் கொல்லப்பட்டார். அந்தக் கொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து கொடநாடு எஸ்டேட்டுக்குள் புகுந்த கொள்ளையர் விலை மதிப்பற்ற பொருள்களைக் கொள்ளையடித்துச் சென்றதாகத் தகவல்கள் வெளியாயின. இதையடுத்து, ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரான கனகராஜ் என்பவர் சாலை விபத்தில் பலியானார். கொடநாடு கொலை காரணமாகத் தேடப்பட்ட சயான் தன்னுடைய மனைவியையும் மகளையும் விபத்தில் இழந்தார். கொடநாட்டுக் கொள்ளைச் சம்பவம் சிசிடிவி காட்சிகளாகப் பதிவாகவே இல்லை என்பது ஆச்சரியத்தைத் தந்தது. இதைத் தொடர்ந்து கொடநாட்டில் கணினிப் பிரிவில் பணியாற்றிய தினேஷ் என்பவர் தற்கொலைசெய்துகொண்டார்.

இப்படி அடுக்கடுக்காகக் கொலை, கொள்ளை, விபத்து, தற்கொலை போன்ற சம்பவங்களால் பெரும்புனைவுபோல் உருண்டு திரண்டது கொடநாட்டு மர்மம். ஒரு சுவாரசியமான திரில்லர் நாவலை ஒத்திருந்தது இந்த விவகாரம். இதன் பின்னணியில் இருப்பவர் யார் என்னும் கேள்வி தமிழ்நாட்டு அரசியல் ஆர்வலர்கள், வெகுமக்கள் மனத்தைக் குடைந்தது. அது தொடர்பான முறையான விசாரணை மட்டுமே இந்த விவகாரத்தின் மர்மங்களை விலக்கி உண்மையைத் தெளிவாக்கும் என்பது பொதுத்தளத்தில் விவாதிக்கப்பட்டது. ஆனால், இந்த விவகாரம் மீண்டும் தோண்டப்படுவதையோ மறுவிசாரணை நடத்தப்படுவதையோ  தமிழ்நாட்டின் எதிர்க்கட்சியான அதிமுக விரும்பவில்லை. மறுவிசாரணை என்னும் நடவடிக்கை அதிமுகவைப் பெரும் பதற்றத்தின் பிடிக்குள் தள்ளியிருக்கிறது. ஆட்சியில் இருந்த காலத்தில் ஒன்றிய அரசுடன் முரண்படாமல் தன் மீது எந்தப் பழியும் விழாமல் பார்த்துக்கொண்ட அதிமுகவால் இப்போது அப்படி நடந்துகொள்ள இயலவில்லை. மாநிலத்தின் ஆட்சி அதிகாரத்தை இழந்து நிற்கும் அந்தக் கட்சி இந்த விவகாரம் தொடர்பாகச் சட்டமன்றத்தில் விவாதிக்கப்படுவதையே விரும்பவில்லை. ஆளுநரைச் சந்தித்து மனு அளித்தது அந்தக் கட்சி. இந்த விவகாரத்தில் முன்னாள் முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமியும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் கரம் கோத்து செயல்படுகிறார்கள். தங்கள் கட்சியை அரசியல்ரீதியாகப் பழிவாங்கும் பொருட்டு இந்தக் கொடநாடு விவகாரத்தைக் கையில் எடுத்திருக்கிறது ஆளும் திமுக தரப்பு என்பது அவர்களது வாதம். கொடநாடு விவகாரத்தைச் சுற்றிப் படர்ந்துள்ள மர்மங்களை விலக்கி அங்கே என்ன நடந்தது என்பதை முறையாக விசாரித்து மக்களுக்குச் சொல்ல வேண்டிய கடமை தங்களுக்கு இருப்பதாக ஆளும் திமுக தரப்பு சொல்கிறது. 

ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் இந்த விவகாரத்தை முன்னிட்டு அதனதன் தரப்பை நியாயப்படுத்தும் காட்சிகளை அரங்கேற்றுகின்றன. இந்தக் கொடநாடு எஸ்டேட் அதன் உரிமையாளர்களான ஜோன்ஸ் குடும்பத்தினரிடமிருந்து கட்டாயப்படுத்தி 1994இல் வாங்கப்பட்டதிலிருந்தே அதைச் சுற்றி அநேகக் கதைகள் புனையப்பட்டுப் பொதுவெளியில் புழக்கத்துக்கு வந்தன. அவற்றில் உண்மையும் பொய்யும் புரட்டும் கலந்தே காணப்படுகின்றன. எது உண்மை எது பொய் என அறிந்துகொள்வது சாமானியமான செயலன்று.

முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா இரண்டாம் தலைமைச் செயலகத்தையே கொடநாட்டில் அமைத்துவிட்டாரோ என்று தோன்றும்படியாகவே தமிழ்நாட்டை ஆண்டார். அதிகாரமிகு மன்னராட்சிக் காலத்தைப் போல் மக்களாட்சியை மாற்றியமைத்தார். கேள்வி கேட்க இயலாதவராகவும் மக்களிடமிருந்து தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்ட ஒருவராகவும் அவர் நடந்துகொண்டார். அதிகார துஷ்பிரயோகம் என்பதைப் பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படாமல அதிகாரங்களைத் தனக்குத் தோதாக ஆட்டம்போடவைத்தார். அதிகாரத்தைப் பயன்படுத்தி சொத்துகளை வாரிக்குவித்தார். சொத்துக்குவிப்பு வழக்கு காரணமாக முதலமைச்சர் பதவியிலிருந்தே இறங்க நேரிட்டது. ஆனாலும் துளியும் ஜெயலலிதா தன் போக்கை மாற்றிக்கொள்ளவில்லை.

போயஸ்கார்டன், சிறுதாவூர், கொடநாடு என ஜெயலலிதா எங்கெங்கு சென்றாலும் அங்கெல்லாம் சாமானியர்கள் தங்கள் வாழ்வில் பல துயரங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவானது. அவருக்காகப் போக்குவரத்து மணிக்கணக்காக நிறுத்தப்பட்டது. தான் மக்கள் சேவகர் தன்பொருட்டு மக்கள் துன்பப்படுவதா என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டதா என்றே தெரியவில்லை. அவர் வணங்கும் கடவுள் அவருக்கு ஆளும் வாய்ப்பையும் அதிகாரத்தின் பயனையும் தந்திருக்கிறார் என்றே நம்பியிருப்பாரோ என்னவோ? வழிபாடுகளில் ஜெயலலிதாவுக்கு இருந்த நம்பிக்கை சகலரும் அறிந்த ஒன்றுதான். ஆகவே, அவருக்கு இப்படியான எண்ணம் உருவாகியிருக்க வாய்ப்புள்ளது.

தமிழ்நாட்டைச் சார்ந்த எந்த முதலமைச்சரும் இப்படியான நடவடிக்கையில் இறங்கியதில்லை. அரசாங்க கோப்புகள் முதலமைச்சரின் கையெழுத்துக்காக விமானத்தில் பறந்த வரலாற்றை ஜெயலலிதா படைத்தார். முதலமைச்சர் உள்ளிட்ட அரசாங்கப் பணிகள் அனைத்தும் மக்களுக்கான வேலைகளைப் புரிய மக்கள் அளித்த ஒரு வாய்ப்பு என்பதை மறந்து அதன் அதிகாரங்களில் திளைப்பவர்கள் அரசியலில் பெருகிய பிறகு மக்களாட்சியின் மாண்பு பெரிதும் கேள்விக்குள்ளானது. தலைமைப் பதவிகளில் தகுதியற்றோர் அமரும்போது, பதவிக்கான மாண்புகள் காற்றில் பறந்துவிடும் என்பதற்கு எடுத்துக்காட்டானார் ஜெயலலிதா.

மக்களாட்சி என்னும் பெரும் தத்துவத்தையே கேலிக்குரியதாக மாற்றிவிடுகிறார்கள் இப்படியான அரசியல்வாதிகளும் தலைமைப் பொறுப்பாளர்களும். மன்னராட்சிக் காலத்தில் மன்னர் வைத்ததுதான் சட்டம். மக்களெல்லாம் அதற்கேற்ப நடந்துகொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு ஆட்பட்டார்கள். பல மன்னர்கள் கொடுங்கோலாட்சி நடத்தி மக்களை வதைத்தார்கள். இப்படியான கொடுங்கோன்மையிலிருந்து தங்களை விடுவிக்கக்கூடிய ஒன்றாக மக்களாட்சி பார்க்கப்பட்டதென்னவோ உண்மை. ஆனால், நடைமுறை யதார்த்தத்தில் மக்களாட்சி என்பது மக்களுக்காக இருக்கிறதா என்று சீர்தூக்கிப் பார்க்கும்போது தலையைக் குனியத்தான் வேண்டியதிருக்கிறது. மக்கள் பணிக்காக நம்மை மக்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்னும் புரிதல் இருந்தால் ஒரு முதலமைச்சர் தனக்கென எந்தத் தனிப்பட்ட உரிமையையும் கோர மாட்டார். மக்கள் நலன் சார்ந்த விஷயங்களுக்காக மட்டுமே தனக்கான அதிகாரத்தைப் பயன்படுத்துவார்.

தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் 1967 ஆம் ஆண்டு குறிப்பிடத்தக்க ஒன்றாகிறது. அந்த ஆண்டில் நடைபெற்ற தேர்தலில்தான் சாமானியர்கள் கையில் அதிகாரம் அளிக்கப்பட்டது. அந்தத் தேர்தலில் 174 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக 137 இடங்களைக் கைப்பற்றியது. அந்தக் கட்சி பெற்ற வாக்குகள் 62,30,552. வெறும் 62 லட்சம் சொச்சம் பேர் தான் அந்த ஆட்சியைத் தேர்ந்தெடுத்தனர். அந்தத் தேர்தலில் மொத்த வாக்காளர்கள் இரண்டு கோடிக்கும் மேற்பட்டோர். இதேபோல் திமுகவிடமிருந்து ஆட்சியை அதிமுக கைப்பற்றிய 1977 தேர்தலில் 200 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக 130 இடங்களைக் கைப்பற்றியது. அந்தக் கட்சிக்குக் கிடைத்த மொத்த வாக்குகள் 51,94,876தான். இந்தத் தேர்தலில் மொத்த வாக்காளர்கள் 2.81 கோடிப் பேர். இன்றுவரை இப்படியான நடைமுறைதான் தொடர்கிறது. 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக பெற்ற மொத்த வாக்குகள் 1.74 கோடிதான்.

பெரும்பான்மை மக்களை ஆள்வதற்காகத் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு கட்சியைப் பெரும்பான்மையோர் தேர்ந்தெடுப்பதில்லை. சிறுபான்மையோர் தான் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது ஒரு நகைமுரண்தான். மக்களாட்சியின் குறைபாடுகளில் இதுவும் ஒன்று. மக்களாட்சி தந்த வாய்ப்பால் முதலமைச்சரான அறிஞர் சி.என்.அண்ணாதுரை இரண்டு ஆண்டுக்குள் மறைந்துவிட்டார். அவரையடுத்து முதலமைச்சரான மு.கருணாநிதி தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் தரமிறங்கியதற்கான மூல விதை விதைத்தவராகக் கருதப்படுகிறார். அவரைத் தொடர்ந்து முதலமைச்சராக ஆன எம்.ஜி.ஆர். தன்னை வழிபடுகிறவர்களுக்கு வள்ளலாகத் தோற்றமளித்தபோதும் தன்னைப் பகைத்துக்கொண்டவர்களுக்கு சிம்ம சொப்பனமாகவே இருந்தார். அவரது ராமாவரம் தோட்டம் பற்றிய கதைகள் தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் முக்கிய இடம்பிடித்தவை. எம்.ஜி.ஆர். அங்கே அளித்த விருந்துகள் போல அங்கே அரங்கேறிய கொடுஞ்சம்பவங்களும் அதிகப்படியானவை. இருந்தபோதும், எம்.ஜி.ஆர். தமிழ்நாட்டு மக்களால் கடவுள்போல் வழிபடப்பட்டார். மக்களின் இந்த அறியாமைதான் அரசியல்வாதிகளுக்குத் தாங்கள் சாதாரண மக்களைவிட உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள் என்ற மமதையை அளித்துவிடுகிறது.

எம்.ஜி.ஆர் மறைந்த பிறகு அவரது இடத்தை ஆக்கிரமித்துக்கொண்ட முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா. மு.கருணாநிதி, எம்.ஜி.ஆர். போன்ற தலைவர்களை எல்லாம் அசுர வேகத்தில் கடந்துவிட்டார். 1991 ஆம் ஆண்டில் அமைந்த அவரது ஆட்சியில் பட்டம் பெற்றவர்கள் அநேகர் இருந்தனர். கிட்டத்தட்ட ஒரு சர்வாதிகாரி போல் செயல்படும் வாய்ப்பை ஜெயலலிதா பெற்றிருந்தார். ஜெயலலிதா மட்டும் மக்கள் சேவைக்காகத் தான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன் என்பதை உணர்ந்து நடந்துகொண்டிருந்தால் தமிழ்நாட்டு மக்கள் எத்தனையோ நன்மைகளைப் பெற்றிருக்க முடியும். ஆனால், தமிழ்நாட்டு மக்களின் துரதிர்ஷ்டம் மக்களுக்கான தலைவராக இல்லாமல் மக்கள் தலைவராகவே அவர் நின்றுவிட்டார். மக்களால் நான் மக்களுக்காக நான் என்பதை வெறும் முழக்கத்துடன் மூலைக்கு அனுப்பிவிட்டார். அதிகாரம் தரும் அத்தனை வசதி வாய்ப்புகளையும் ஒரு முதலமைச்சராகத் தான் அனுபவித்ததுடன் தன் தோழிக்கும் அதை மடைமாற்றிவிட்டார். கொடநாடு எஸ்டேட் விவகாரத்தில் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கைங்கர்யம் குறிப்பிடத்தக்கது.

மு.கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, அதிகாரத்தைப் பயன்படுத்தித் தனது குடும்பத்தினரின் வளர்ச்சிக்கு வித்திட்டார் என்ற குற்றச்சாட்டு இன்றுவரை அவரது சமூகநீதிப் பங்களிப்பையும் மீறிய கறையாக நிலைத்திருக்கிறது. தினகரன் ஊழியர் எரிப்பு விவகாரத்தில் திமுகவின் பெயர் எந்த அளவுக்கு அடிபட்டது என்பதைத் தமிழ்நாட்டு அரசியலை அறிந்தோர் மறந்துவிட முடியாது. அதே போல் இப்போது இந்த கொடநாடு விவகாரத்தில் அதிமுகவின் தொடர்பு என்பது பல விபரீத எல்லைக்குச் சென்றுள்ளது என்றுதான் தோன்றுகிறது.

தொழில்நுட்ப வளர்ச்சி பெருகிய இந்தக் காலத்திலும், ஒவ்வொருவர் கையில் கைபேசி என்னும் நவீன சாதனம் எல்லா மர்மங்களையும் வெளிப்படுத்திவிடக் கூடிய வீரியத்துடன் செயல்படும்போதும், கொடநாடு எஸ்டேட் போன்ற விவகாரங்களின் மர்மம் ஒரு புகை மூட்டம் போல தமிழ்நாட்டு அரசியல் வட்டாரத்தில் படர்வது மக்களாட்சி என்பதையே கேலிக்குரியதாக்குகிறது. இதை எப்படிச் சாமானியர்களால்  பொறுத்துக்கொள்ள முடியும்? அதே நேரத்தில் அவர்களால் இதை எதிர்த்து என்ன செய்துவிட முடியும்? ஆட்சியிலிருக்கும் திமுககூட இதை அரசியல்ரீதியான காய்நகர்த்துதலுக்குத்தான் பயன்படுத்துகிறதோ என்று கருதவும் இடமிருக்கிறது. ஏனெனில், மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை நிறைவேற்ற முனைப்பு காட்டும் திமுக அரசு கருணாநிதி நினைவிடம் போன்ற வெகுமக்களுக்குப் பயன் தராத விஷயங்களிலும் வீரியத்துடன் செயல்படுவது கண்கூடு. பாஜக ஆட்சியில் 3,000 கோடி சர்தார் பட்டேல் சிலை விவகாரம் எப்படி விமர்சிக்கப்பட்டது? முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடம் அமைக்கப்படும் என்று கடந்த ஆட்சியில் சொல்லப்பட்டபோது திமுக அதை எப்படி எதிர்கொண்டது? இவை எல்லாம் வெகு மக்கள் மூளையில் பதிவாகியிருக்கிறது என்பதை மறந்துவிட முடியாது.

ஜனநாயக நாட்டில் வாக்களிப்பதுடன் மக்களின் கடமை முடிந்துவிடுகிறது. அவர்களால் ஆட்சியை மாற்றியமைக்க முடியும். ஆனால், தாங்கள் தேர்ந்தெடுத்த ஆட்சி தங்கள் விருப்பத்துக்கு மாறாக நடந்துகொள்ளும்போது அதைக் கேள்வி கேட்க இயலாது. மக்களுக்கான ஆட்சியை மக்களுக்காக அமைத்திருக்கிறோம் என்னும் புரிதலற்ற ஆளுமைகளிடம் அதிகாரம் சிக்கும்போது, அதனால் மக்கள்தாம் பாதிக்கப்படுகிறார்கள். சட்டமியற்றும் அதிகாரம் கொண்ட மக்கள் பிரதிநிதிகள் அந்தச் சட்டத்துக்குத் தாங்களும் கட்டுப்பட்டவர்கள் என்பதை மறந்துவிடுதல் கூடாது. அப்படி மறந்துசெயல்படும்போது, மக்கள்தாம் அவர்களுக்கு அதை நினைவூட்ட வேண்டும். மக்கள் சார்பாக நின்று ஊடகங்கள் அந்த வேலையைச் செய்ய வேண்டும். இப்படியெல்லாம் நடந்தால்தான் மக்களாட்சி என்பது உரிய மகத்துவம் பெறும். இல்லாவிட்டால் ஜனநாயகம் சிதைந்துவிடும். ஜனநாயகம் சிதைவது ஜனங்களுக்கு நல்லதன்று.  

டைம்ஸ் சமயம் இணையதளத்துக்காக எழுதிய கட்டுரையின் மூல வடிவம். 

வியாழன், நவம்பர் 05, 2020

தளபதி: சில நினைவுகள்

உலகப் பொருளாதாரம் இந்தியாவுக்குள் காலைவைக்கத் தொடங்கிய வேளை அது. 1991 நவம்பர் 5 அன்று தான் ரஜினிகாந்த் நடித்த தளபதி’ திரைப்படம் வெளியானது. தளபதி’ படத்தை வைத்து பலவகையான வியாபாரமும் முன்னெடுக்கப்பட்டது. தளபதி காலண்டர், தளபதி டி ஷர்ட், தளபதி தொப்பி எனப் பல பொருட்கள் வியாபாரத்துக்கு வரலாயின. தென்காசியில் பரதன், வாஹினி இரண்டு திரையரங்கிலும் தளபதி’ திரைப்படம் வெளியானது. பரதன் இப்போது இடிக்கப்பட்டுவிட்டது. வாஹினி திரையரங்கு இருந்த இடத்தில் ஏதோ ஷோபா கம் பெட் தயாரிப்பு நிறுவனம் ஒன்று இயங்கிவருகிறது. இந்த ஆண்டு கமல் நடித்து வெளியான குணா’ தாய்பாலா திரையரங்கில் திரையிடப்பட்டிருந்தது. தாய் பாலா இப்போதைக்கு இயங்கிவருகிறது. இன்னும் எவ்வளவு காலம் இது நீடிக்குமோ?

தீபாவளியன்று இருபது ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கி ஓபனிங் ஷோ பார்த்தோம். அதுவரை தென்காசியில் எந்தப் படத்துக்கும் அப்படி அதிகத் தொகை கொடுத்து டிக்கெட் வாங்கியதில்லை. எவ்வளவு கூட்டம் இருந்தாலும் எந்தப் பண்டிகை என்றாலும் தியேட்டர்களில் டிக்கெட்டின் அசல் விலைக்கே டிக்கெட் கிடைத்துவந்தது. கூட்டம் அதிகமாக இருந்தாலும் சைக்கிளை எடுத்துக்கொண்டு சென்றால் போதும் டிக்கெட் கிடைத்துவிடும். சைக்கிள் டோக்கனுக்கான கட்டணம் ஒரு ரூபாய். ஆகவே, நானூறு ஐந்நூறு டிக்கெட்டுகள் சைக்கிள் வைத்திருப்பவர்களுக்குக் கிடைத்துவந்தது. அந்த நடைமுறையை மாற்றியது தளபதி’. அன்றே வாஹினியிலும் நண்பர்களுடன் படம் பார்த்தேன். எனக்குத் தெரிந்து தளபதி’ படத்தைப் பத்துப் பன்னிரண்டு ஊர்களில் பார்த்திருப்பேன். சுந்தரி கண்ணால் ஒரு சேதி என்னும் பாடல் தொடங்கியதும் ஒரு கூட்டமே அப்படியே எழுந்து வெளியில் போய்விடும். படத்தின் ஓபனிங் காட்சியிலேயே இந்தச் சம்பவம் நடைபெற்றது. 

ஜப்பானிய சாமுராய் போன்ற உடையில் ரஜினியை அந்தப் பாடல் காட்சியில் உலவவிட்டிருந்தார் மணிரத்னம். அந்தத் தீபாவளிக்கு வெளியான தினமலர் தீபாவளி மலருடன் ரஜினியின் ஆளுயர ஃபுளோ அப் ஒன்றைத் தந்தார்கள். அதில் இந்தத் தளபதி’ தோற்றத்தில் தான் ரஜினிகாந்த் காட்சியளித்தார். மலையாளத்தில் வெளியான தளபதி’ படத்தில் இறுதிக் காட்சி மாற்றியமைக்கப்பட்டிருந்தது என்றும் அந்தக் காட்சியில் ரஜினி இறந்து மம்முட்டி உயிருடன் இருப்பார் என்றும் அப்போது வதந்தி உலவியது.    

மகாபாரதத்தின் கர்ணன் கதாபாத்திரத்தின் பாதிப்பில் தளபதி’ படத்தை உருவாக்கியதாக மணி ரத்னம் கூறியிருக்கிறார். ஆனால், இந்தப் படம் ஒருவகையில் நாயகனின் உல்டாதான். நாயக’னில் ஒருவர் என்றால் தளபதி’யில் இருவர். மற்றபடி அதே நிழலுலக தாதாக்களின் வாழ்க்கைதான் படத்துக்குச் சம்பவங்களாயிருந்தன. ரஜினியை மிக அழகாகக் காட்சிப்படுத்தியிருந்த படம் தளபதி’. 

ஆனால், படம் மிகப் பெரிய வெற்றியா என்பது சந்தேகம்தான். ஓரளவுக்குப் பெயர் சொல்லும்படி ஓடியதே தவிர, ரஜினி, மம்முட்டி இணையின் நடிப்பு, மணிரத்னத்தின் இயக்கம், இளையராஜாவின் அட்டகாசமான பாடல்கள், சந்தோஷ் சிவனின் அமர்க்களமான ஒளிப்பதிவு ஆகியவை காரணமாக எகிறியிருந்த எதிர்பார்ப்பைப் படம் பூர்த்திசெய்யவில்லை என்றே சொல்ல வேண்டும். படம் தீபாவளி அன்று வெளியானாலும் படத்தில் இடம்பெற்ற முக்கியமான காட்சி போகியையும் அதைத் தொடர்ந்து பொங்கல் திருவிழாவையுமே நினைவூட்டியது. படம் பொங்கலுக்கு வெளியாகியிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். 

படத்தில் அடிக்கடி ரஜினி காந்த் தனியாகச் சென்று அமர்ந்துவிடுவார். பின்னணியில் சூரியன் தகதகக்கும். சூர்ய புத்திரன் கர்ணன் என்பதால் சூர்யா கதாபாத்திரத்தையும் அப்படியே உருவாக்கியிருந்தார் மணிரத்னம். இப்படியான காட்சி உருவாக்கங்கள் படத்துக்கு ஒரு சர்வதேசத் தன்மையை அளித்திருந்தன. இருபது வயதில் பார்த்தபோது பெரிய மயக்கத்தைத் தந்த தளபதி’ நாற்பது வயதில் பார்த்தபோது எந்தக் கிறக்கத்தையும் தரவில்லை. விடலைத்தனத்தின் துறுதுறுப்பின்போது ரசனைக்குரியதாக இருந்த படம் நாற்பதின் நிதானத்தில் ரசிக்க முடியாமல் போனது. இதுதான் மணிரத்னம் எனும் இயக்குநரின் மகிமை. 

1990 தீபாவளியின் போது ரஜினி காந்த் நடித்த எந்தப் படமும் வெளியாகியிருக்கவில்லை. ஆகவே மதுரை ரஜினி ரசிகர்கள் அந்த தீபாவளியைத் துக்க நாளாகக் கருதி சுவரொட்டி அடித்து ஒட்டியிருந்தார்கள். இந்தத் திரைப்படம் வெளியானபோது செல்வி ஜெ.ஜெயலலிதா தலைமையிலான அதிமுக தமிழக ஆட்சியை நடத்திக்கொண்டிருந்தது. அப்போதே ரஜினிக்கும் ஜெ.வுக்குமான உரசல் ஏற்பட்டுவிட்டது. இதைத் தொடர்ந்து வந்த மன்னன்’ திரைப்படத்தில் விஜய சாந்தி ஏற்று நடித்த கதாபார்த்திரம் ஜெயலலிதாவுடன் பொருத்திப்பார்க்கப்பட்டு ரஜினி ரசிகர்களால் சிலாகிக்கப்பட்டது.

தளபதி’யின் வெற்றியைத் தொடர்ந்து, அடுத்தும் ரஜினி நடிக்க மணிரத்னம் இயக்கத்தில் யாரடா நீ மன்மதா?’ என்னும் பெயரில் படம் ஒன்று வெளியாகக் கூடும் என அப்போது பத்திரிகைகளில் செய்திகள் வெளியாயின என நினைவு. 29 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நாளை நினைத்துப் பார்க்கையில் ஆச்சரியமான பல சம்பவங்கள் மன அலைவரிசையில் அகப்படுகின்றன. எல்லாவற்றையும் எடுத்திடவோ எழுதிடவோ இயலவில்லை என்பது பெரும் சோகம். 

ஞாயிறு, ஜூன் 18, 2017

சினிமா ஸ்கோப் 37: மனசுக்குள் மத்தாப்பூ


எல்லோருமே மன நிலைப் பாதிப்பு கொண்ட ஒருவரை வாழ்வில் ஏதாவது ஓரிடத்தில் சந்தித்திருப்போம். ஆனால், உடம்பு நோயைப் புரிந்துகொள்வது போல் மன நோயைப் புரிந்துகொள்கிறோமா என்பது சந்தேகமே. மனநிலைப் பிறழ்வு, மனச்சிதைவு போன்ற பல மன நோய்கள் உள்ளன. இவற்றை வைத்துப் பல திரைப்படங்களும் வெளியாகியுள்ளன. பொதுவாக மனநிலைப் பிறழ்வு என்பதை நமது படங்கள் இறப்புக்குப் பதிலான இன்னொரு உத்தியாகவே பயன்படுத்துகின்றன. அம்மன் கோவில் கிழக்காலே, காதல் போன்ற படங்களில் தாங்க முடியாத துக்கத்தாலும் மூன்றாம்பிறை, சேது போன்ற படங்களில் விபத்தாலும் மன நிலைப் பிறழ்வு உருவாகிவிடுகிறது. மனநிலைப் பிறழ்வுக்குள்ளான பல கதாபாத்திரங்களைக் கொண்டு நகைச்சுவைக் காட்சிகளை உருவாக்குவதும் பெரும் போக்காக நடந்துவருகிறது. 

ஸ்ரீதர் வெண்ணிற ஆடை படத்தில் மனப் பிறழ்வைக் கையாண்டிருப்பார். மனநல நிபுணர் ஒருவர் செல்வந்தப் பெண் ஒருவரை (ஜெயலலிதா) பித்து நிலையிலிருந்து மீட்பார். அந்தச் சிகிச்சை நடந்துகொண்டிருக்கும்போதே அந்தப் பெண் அவர் மீது மையல் கொண்டுவிடுவார். அந்த மருத்துவருக்கு ஏற்கெனவே ஒரு காதலி வேறு உண்டு. இப்போது மருத்துவர் யாரைக் கரம் பிடிப்பார்? யாரைக் கரம் பிடித்தாலும் மற்றவருடைய மனம் பேதலிக்க வாய்ப்புண்டு. இந்நிலையில் அந்தப் பிரச்சினையை ஸ்ரீதர் தனக்கேயான பாணியில் சமாளித்திருப்பார்.   

மனச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவருக்கு எது நிஜம் எது கற்பனை என்ற வேறுபாட்டை உணர முடியாது என்கிறார்கள். இந்த நோயையும், மல்டிபிள் பெர்ஸனாலிடி (அந்நியனை மறந்துவிடுங்கள்) என்னும் நோயையும் அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட இரண்டு படங்களைப் பார்க்கலாம். ஒன்று ஆளவந்தான் (2001); மற்றொன்று தென்கொரியப் படமான எ டேல் ஆஃப் டூ சிஸ்டர்ஸ் (2003). 


ஜீ-வான்-கிம் இயக்கிய தென்கொரியப் படம் ஜாங்க்வா ஹாங்க்ரியான்ஜியான் என்னும் அந்நாட்டு வாய்வழிக் கதையின் அடிப்படையில் உருவானது. ஒரு சிற்றன்னை தனக்குப் பிறந்த மகன்களுக்காகத் தன் கணவனின் முதலிரண்டு மகள்களைக் கொன்றுவிடுகிறாள். ஆனால், அவர்கள் ஆவியாக வந்து பழிதீர்க்கிறார்கள். இந்தக் கதை 1924 முதலே பலமுறை படமாக்கப்பட்டிருக்கிறது. இதன் தாக்கத்தில் அல்லது பாதிப்பில் ஜீ-வான்-கிம் எ டேல் ஆஃப் டூ சிஸ்டர்ஸை உருவாக்கியிருக்கிறார். ஏனென்றால் வாய்மொழிக் கதைக்கும் இவருடைய திரைப்படத்துக்கும் சில அடிப்படையான ஒற்றுமைகள் இருந்தாலும் பாரதூரமான வேறுபாடுகளும் உண்டு. மாறுபட்ட இதன் திரைக்கதையால் வழக்கமான ஒரு சைகாலஜி திரில்லராகவோ வெறும் பேய்ப்படமாகவோ அடையாளம் காட்டப்படுவதிலிருந்து இது தப்பித்திருக்கிறது. 

படத்தின் தொடக்கத்தில் சு-மியிடம் மருத்துவர்  நீயாரென நினைக்கிறாய் என்று கேட்கிறார். குடும்பப் படத்தைக் காட்டி இது யாரெனத் தெரிகிறதா என்கிறார். அந்த நாளில் என்ன நடந்தது என விசாரிக்கிறார். அவள் மெதுவாகத் தலையைத் தூக்கிப் பார்க்கிறாள். கதை விரிகிறது. படம் ஒரு அமானுஷ்ய பயணத்தை மேற்கொள்ளும் என்பதைப் படமாக்கக் கோணங்களும் பின்னணி இசையும் சொல்லிவிடுகின்றன. தன் தங்கை சு-ய்யான், தந்தை ஆகியோருடன் வீட்டுக்கு வருகிறாள் சு-மி. வீட்டில் சிற்றன்னை இருக்கிறாள். அந்த வீட்டில் பல அமானுஷ்ய சம்பவங்கள் நடந்தேறுகின்றன. தன் சிற்றன்னையால் தன் தங்கை சு-ய்யானுக்குப் பாதிப்பு வந்துவிடும் என்பதால் அவளை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்ற முனைப்புடன் செயல்படுகிறாள் சு-மி.

ஒரு கட்டத்தில் சு-மியின் செயல்பாடுகளைத் தாங்கிக்கொள்ள முடியாமல் சு-மியின் தந்தை அவளை ஏன் இங்கு வந்ததிலிருந்தே இப்படி நடிக்கிறாய் என ஆத்திரத்துடன் கேட்கிறார். தன் சிற்றன்னை தங்கையை எப்போதும் அலமாரியில் வைத்துப் பூட்டி சித்திரவதை செய்வதை நீங்கள் உணரவில்லையா எனக் கோபத்துடன் கேட்கிறாள்.  அப்போது அவர் வெளியிடும் தகவல் பார்வையாளரைப் புரட்டிப் போடும். அந்த வீட்டில் அதுவரை பார்வையாளர்கள் பார்த்த பல சம்பவங்கள் சு-மியின் கற்பனையில் நிகழ்ந்தவை என்பதை விவரிக்கும். அந்த வீட்டில் சு-மியும் அவளுடைய தந்தையும் மட்டுமே உள்ளார்கள் என்பதை உணரும்போது அதிர்ச்சி ஏற்படும். மேக மூட்டம் விலகிய நிலவு போல் காட்சிகள் தெளிவாகும். 


படம் பின்னோக்கித் திரும்பும். சு-மியின் தந்தை மற்றொரு பெண்ணை விரும்புகிறார். அவளை மணமுடிக்கத் திட்டமிடுகிறார். இந்தச் சிக்கலின் காரணமாக சு-மியின் தாய் ஒரு அலமாரியில் தூக்கிட்டு இறந்துகிடக்கிறார். இதைப் பார்த்து அலறும் சு-ய்யான் மீது அலமாரி கவிழ்ந்துவிடுகிறது. அவள் கதறல் யாருக்கும் கேட்கவில்லை. எனவே சு-மியாலும் அவளைக் காப்பாற்ற முடியாமல் போகிறது. இந்தக் குற்றவுணர்வால் பாதிக்கப்பட்ட அவளை மல்டிபிள் பெர்ஸ்னாலிடி டிஸார்டர் என்று மன நிலைக் கோளாறு தாக்குகிறது. அதன் விளைவுகளாலேயே அவள் தங்கை, சிற்றன்னை ஆகியோராகத் தன்னைக் கற்பனை செய்துகொள்கிறாள். நடிகர்களின் வரம்புக்குட்பட்ட நடிப்பும் படமாக்க நேர்த்தியும் கதாபாத்திரங்களின் உணர்வைக் கச்சிதமாக பார்வையாளர்களுக்கு நகர்த்தும். படத்தில் அவசியமின்றி ஒரு ஷாட் கூட இடம்பெற்றிருக்காது.    

இப்போது ஆளவந்தானுக்கு வாருங்கள். கமல் ஹாசன் கதை, திரைக்கதை, வசனம் எழுதிய இந்தப் படத்தில் அவருக்கு இரண்டு வேடங்கள். ஒருவர் எதிரிகளிடமிருந்து நாட்டைக் காப்பாற்றும் ராணுவ கமாண்டோவான விஜய். மற்றொருவர் தன் சித்தியிடமிருந்து தன் தம்பியைக் காப்பாற்றத் துடிக்கும், மனச் சிதைவின் ஒருவகையான சீஸோபெர்னிக் வித் பாரானாய்டு டெல்யூஷன்ஸ் காரணமாகக் மனநோய்க் காப்பகத்தில் பராமரிக்கப்படும் நந்து.


இதிலும் அப்பா மற்றொரு மணம் புரிகிறார். ஆகவே கொடுமைக்காரச் சிற்றன்னை உண்டு. அம்மா தற்கொலை செய்துகொள்கிறாள். தம்பியைப் பாதுகாக்கும் பொறுப்பு தனக்குண்டு என நம்புகிறான் நந்து. இப்படியொரு கதாபாத்திரத்தை கமலைத் தவிர வேறொருவர் படைத்திருக்க முடியுமா என்பது சந்தேகம்தான். ஆனால், அந்தக் கதாபாத்திரத்தின் வரம்புகளை அவர் நீட்டித்துவிட்டதுதான் சோகம். மனச்சிதைவால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர் வன்முறையாளர் இல்லை. பிறருக்குத் துன்பம் விளைவிக்காதவர்கள் என்றுதான் மருத்துவ அறிவியல் கூறுகிறது. இதை கமல் அறிந்திராதவராக இருக்க இயலாது. ஆனால், கமலின் கைவண்ணமான நந்து அளப்பரிய ஆற்றல் கொண்டவர்; ஒரு அதிசய மனிதர். தன் தம்பி விஜயின் காதலியான தேஜஸ்வினியைச் சித்தியின் மறு வடிவம் என்றே நந்து நம்புகிறார். எனவே, அவரிடமிருந்த தம்பியைக் காப்பாற்ற பல அசகாய சூரத்தனங்களில் ஈடுபடுகிறார். இறுதியில் தன்னையே அழித்துக்கொள்கிறார். 

எ டேல் ஆஃப் டூ சிஸ்டர்ஸ் அடர்ந்த வனத்தில் ஓடும் மயான அமைதி கொண்ட நதி என்றால், ஆளவந்தான் நகரத்தில் சலசலத்து பாயும் ஆக்ரோஷ ஆறு. படத்தின் ஒரு காட்சியில் நந்து தவறுதலாக ஒரு பெண்மணியின் கழுத்தை அறுத்துவிட்டு சாரி ராங் நம்பர் என்பார். படத்தில் கமல் அந்த உத்தியைப் பயன்படுத்தியிருந்தால் அலுப்பூட்டும் அரை மணி நேர கிளைமாக்ஸ் காட்சிகள் உள்ளிட்டவற்றை மேம்படுத்தியிருக்கலாம். ஆனால், கலைஞானி கமலுக்கு அந்த மனம் வரவில்லை போலும். ஆகவே, திரைக்கதையைப் பொறுத்தவரை கொரியப் படம் புத்திசாலித்தனமானது; ஆளவந்தான் சற்று அசட்டுத்தனமானது.

ஞாயிறு, பிப்ரவரி 05, 2017

சினிமா ஸ்கோப் 25: துள்ளாத மனமும் துள்ளும்


ஒரு திரைப்படத்தை அப்படியே நகலெடுப்பது ஒரு வகை என்றால் அந்தப் படத்தின் தாக்கத்தில் கதை எழுதி திரைக்கதை அமைப்பது மற்றொரு வகை. இந்த இரண்டு வகைகளிலும் கைதேர்ந்தவர்கள் தமிழ்ப் படைப்பாளிகள். பிற படைப்பாளிகளிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் படமாக உதாரணம் காட்டக்கூடிய ஒரு படம் சார்லி சாப்ளினின் சிட்டி லைட்ஸ். சற்றேறக்குறைய எண்பது ஆண்டுகளுக்கு முன்னர், 1931-ல் வெளியான இது, மிகவும் வரவேற்பைப் பெற்ற ஹாலிவுட் திரைப்படம். இதன் கதை, இன்றுவரை பல படங்களின் திரைக்கதைக்கு அடித்தளமாக  அமைந்துவருகிறது என்பதே இதன் மகத்துவம். 

சிட்டி லைட்ஸ் படத்தைப் பார்க்காதவர்களுக்காக அதன் கதையை ஓரிரு வரிகளில் பார்க்கலாம். வசிக்க வீடற்ற எளிய மனிதன் ஒருவனுக்கும் நடைமேடையில் பூவிற்றுப் பிழைப்பு நடத்தும் பார்வையற்ற பெண்ணுக்குமான உறவை மனிதநேய இழையில் தொடுத்துக்கட்டி பார்வையாளரின் முன்வைத்த படம் இது. இந்தப் படத்துக்குத் தான் சார்லி சாப்ளின் முதன்முதலில் பின்னணியிசை அமைத்தார். இதன் திரைக்கதையின் நேர்த்தி காரணமாக இன்றுவரை இதன் பாதிப்பில் உருவாக்கப்பட்ட எந்தப் படத்தாலும் இதைத் தொடவே முடியவில்லை. இது வானில் ஜொலிக்கும் நட்சத்திரம் என்றால், இதன் தாக்கத்தில் உருவான அனைத்துப் படங்களும் வீட்டில் தொங்கவிடப்படும் காகித நட்சத்திரங்களாகவே காட்சிகொள்கின்றன. 


பார்வையற்ற பெண்மீது கொண்ட பிரியம் காரணமாக அவளது வறுமையைப் போக்க உதவுகிறார் எளிய மனிதரின் வேடமேற்றிருக்கும் சார்லி சாப்ளின். தற்கொலை செய்துகொள்ள முயலும் ஒரு மில்லியனரைக் காப்பாற்றும் சாப்ளினுக்கு உதவுகிறார் அவர். ஆனால் அவர் போதையில் இருக்கும்போது மட்டுமே சாப்ளினை அவருக்கு அடையாளம் தெரியும். போதை தெளிந்தால் சாப்ளினை விரட்டிவிடுவார். இப்படியொரு விநோதக் கதாபாத்திரம் அது. பூக்காரப் பெண்ணின் நெருக்கடியைப் போக்கவும் அவளது பார்வையைத் திரும்பப் பெறவுமான பணத்தைச் சம்பாதிக்கும் முயற்சியில் சாப்ளின் இறங்கியபோது, எதிர்பாராத சம்பவத்தால் சாப்ளின். திருட்டுக் குற்றவாளியாகக் கருதப்படுகிறார். பூக்காரப் பெண்ணுக்குப் பணத்தைக் கொடுத்துவிட்டு வரும் சாப்ளினைக் காவல்துறையினர் பிடித்துச் சிறைக்கு அனுப்பிவிடுகின்றனர்.

சிறைக்குச் சென்று திரும்பிவரும், பிச்சைக்காரர் போன்ற தோற்றம் கொண்ட சாப்ளினை பேப்பர் விற்கும் சிறுவர்கள் கிண்டல் செய்கிறார்கள், அவரது கிழிசலான உடையைப் பிடித்து இழுத்து அவமானப்படுத்துகிறார்கள். இதையெல்லாம் பார்த்துச் சிரித்தபடியிருக்கிறாள் பூக்காரப் பெண். அவளுக்கு இப்போது பார்வை வந்துவிட்டது. சாப்ளின் அவள் முன்னால் வந்து நிற்கிறார். அவர் கையிலுள்ள ரோஜாப்பூவில் ஒவ்வொரு இதழாக உதிர்கிறது. அது முழுவதும் உதிர்ந்த கணத்தில் அவர்மீது இரக்கம்கொண்டு ஒரு புது ரோஜாவைக் கொடுக்கிறாள் பூக்காரப் பெண். அப்போது அவருடைய கையை வருடும்போது அந்த ஸ்பரிசம் அவர் தனக்கு உதவியவர் என்பதைக் காட்டிக்கொடுத்துவிடுகிறது. இருவரும் இணைகிறார்கள். இந்தப் படத்தைப் படமாக்கியிருக்கும் தன்மை காரணமாக இப்போது நீங்கள் படத்தைப் பார்த்தால்கூட ஒரு புதிய படத்தைப் பார்ப்பது போல் உணர முடியும். படத்தின் ஒரு ஷாட்கூட தேவையற்றது என நீங்கள் சொல்ல முடியாது. அவ்வளவு கூர்மையான படைப்பு அது. 


சிட்டிலைட்ஸைப் போன்று பல திரைக்கதைகள் தமிழில் எழுதப்பட்டிருக்கின்றன. 1954-ல் வெளியான ராஜி என் கண்மணி இதன் தழுவல்தான். டி.ஆர். ராமச்சந்திரன், ஸ்ரீரஞ்சனி நடித்த இந்தப் படத்தை ஜெமினி நிறுவனம் தயாரிக்க இயக்கியவர் கே.ஜே. மகாதேவன். இதன் பின்னர் குல்ஷன் நந்தாவின் கதை எழுத ஏ.எல்.நாராயணன் வசனத்தில் வெளியான எங்கிருந்தோ வந்தாள் (1970) படத்தை இயக்கினார் ஏ.சி.திருலோகச்சந்தர். இது தமிழிலும் இந்தியிலும் ஒரே நேரத்தில் உருவாக்கப்பட்டது. தமிழ்ப் படத்தில் சிவாஜி கணேசனும் ஜெயலலிதாவும் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் கரு சிட்டி லைட்ஸ் போன்றதே. 

சிட்டி லைட்ஸில் பார்வையற்ற கதாபாத்திரம் என்றால் இதில் பித்துப் பிடித்த கதாபாத்திரம். அந்த வேடமேற்றவர் சிவாஜி கணேசன். பெரிய செல்வந்தக் குடும்பத்தில் பிறந்த அவருக்கு ஆதரவாக வந்து அவரைக் குணப்படுத்துபவர் ஜெயலலிதா. அவரது கதாபாத்திரம் ஒரு தேவதாசிப் பெண் போன்றது. செல்வந்தக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் அப்படியொரு சூழலில் மாட்டிக்கொள்வார் ஜெயலலிதா. மனநிலை பாதிப்பு கொண்ட சிவாஜியைக் கவனித்துக்கொள்ளும் ஜெயலலிதாவை ஒரு அசந்தர்ப்பமான பொழுதில் தனதாக்கிக்கொள்வார் சிவாஜி. ஆனால் அவருக்குப் பித்து தெளிந்த சமயத்தில் ஜெயலலிதாவை யாரென்றே தெரியாது. பின்னர் அதை யார் தெளிவுபடுத்துகிறார்கள் என்பதே படத்தின் க்ளைமாக்ஸ். பித்துத் தெளிந்த பின்னர் சிவாஜி ஒவ்வொருவராக அடையாளம்கண்டு வரும் சிவாஜி யாரிந்தப் பெண் என ஜெயலலிதாவைப் பார்த்துக் கேட்பார். அப்போது ஜெயலலிதா, பழைய சம்பவங்களை எல்லாம் சொல்லி நடித்துக்காட்டுவார். கிட்டத்தட்ட மனப்பிறழ்வுக்குள்ளானவர் போல் நடந்துகொள்வார். இந்தக் காட்சி உங்களுக்கு மூன்றாம் பிறை படத்தை ஞாபகமூட்டக் கூடும். 


பாலுமகேந்திரா கதை திரைக்கதை எழுதி இயக்கிய படம் மூன்றாம் பிறை (1983). இதில் ஸ்ரீதேவி மனநலம் பாதிக்கப்பட்டவராக நடித்திருப்பார். அவருக்கு ஆதரவு காட்டுபவர் கமல் ஹாசன். எங்கிருந்தோ வந்தாளை அப்படியே தலைகீழாகக் கவிழ்த்தால் அது மூன்றாம் பிறை. இந்தப் படத்தின் இறுதிக் காட்சியில் தன்னை யாரென்று வெளிப்படுத்த, ஸ்ரீதேவியின் முன்பு நடித்துக்காட்டுவர் கமல் ஹாசன். மனநலம் பிறழ்ந்த ஒருவன் என்றே ஸ்ரீதேவி அவரை நினைத்துக்கொள்வார். இந்தக் காட்சியில் கமல் அவமானப்படுவது சிட்டி லைட்ஸில் சாப்ளின் அவமானப்படுவதற்கு நிகரானது. என்ன ஒன்று ‘கமல் அளவுக்கு’ சாப்ளின் நடித்திருக்க மாட்டார். அப்படி நடித்ததால்தான் கமலுக்குத் தேசிய விருது கிடைத்தது. படத்தின் வணிக வெற்றிக்கு சில்க் ஸ்மிதா பயன்பட்டிருப்பார். மூன்றாம் பிறை போன்ற படத்தில் பூர்ணம் விஸ்வநாதன், சில்க் ஸ்மிதா தொடர்பான காட்சிகளை உருவாக்கத் தனித் தைரியம் வேண்டும். அதைப் பெற்றிருந்திருக்கிறார் பாலுமகேந்திரா. இந்தப் படத்தை இந்தியிலும் பாலுமகேந்திரா உருவாக்கினார். நேரிடையாக சிட்டி லைட்ஸைத் தழுவி உருவாக்கப்பட்ட ராஜி என் கண்மணி தோல்விப்படம். ஆனால் எங்கிருந்தோ வந்தாள், மூன்றாம் பிறை போன்றவை எல்லாம் வெற்றிப் படங்கள்.   


இவை மாத்திரமல்ல மகேந்திரன் திரைக்கதை வசனத்தில் உருவான நிறைகுடம் (1969). எழில் இயக்கத்தில் வெளியான துள்ளாத மனமும் துள்ளும் (1999), மு.களஞ்சியம் இயக்கத்தில் வெளிவந்த நிலவே முகம் காட்டு (1999) போன்ற பல படங்களில் சிட்டி லைட்ஸின் தாக்கத்தை உணர முடியும். இந்த அனைத்துப் படங்களையும் ஒருசேரப் பார்க்கும்போது உங்களுக்குக் கிடைக்கும் அனுபவத்தால் நீங்கள் புதிய திரைக்கதை ஒன்றையே எழுதிவிட முடியும். ஆனால் அது சிட்டி லைட்ஸைத் தாண்டக்கூடிய வகையில் அமையுமா என்பதுதான் உங்களுக்கான சவால். அந்தச் சவாலை இப்போதும் உங்களிடம் விதைக்கும் படமாக சிட்டி லைட்ஸை உருவாக்கியதுதான் சார்லி சாப்ளின் என்ற கலைஞனின் மேதைமை. 

< சினிமா ஸ்கோப் 24 >                         < சினிமா ஸ்கோப் 26 >

திங்கள், ஜூன் 02, 2014

போடுங்கம்மா ஓட்டு!

 

தேர்தல் என்றதும் முதலில் நினைவில் எழுவது 1984-ம் ஆண்டின் தேர்தலே. அப்போது நான் ஆறாம் வகுப்போ ஏழாம் வகுப்போ படித்துக்கொண்டிருந்ததாக ஞாபகம். பரதனில் இங்கேயும் ஒரு கங்கை படம் பார்த்துவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்தேன். தென்காசி பேருந்து நிலையம் அருகே வரும்போது தென்பட்ட நபர் ஒருவரின் கையில் விரித்து வைக்கப்பட்டிருந்த நாளிதழ் அதிமுக அமோக வெற்றி என்னும் செய்தியைத் தாங்கியிருந்தது. வேறெதுவும் பெரிதாய் ஞாபகமில்லை. அப்போது எம்.ஜி.ஆர் உடல் சரியில்லாமல் அமெரிக்காவில் இருந்தார். 

1984 தேர்தலின் போது காண்பிக்கப்பட்ட வீடியோ படக் காட்சி
அவரது உடல் ஆரோக்கிய நிலைமையை விளக்கும் வீடியோவை கிராமம் கிராமமாக வந்து காண்பித்தார்கள். கருணாநிதியும் எம்.ஜி.ஆரும் அருகருகே அமர்ந்து பேசுவது போன்ற புகைப்படத்தைப் போட்டு, நண்பரின் நலிவு நீங்கிட நலமார்ந்த வாழ்த்துகள்! நாட்டின் நலிவு நீங்கிட உதயசூரியனுக்கு வாக்குகள்! என்று திமுக வால்போஸ்டரைப் பார்த்தது நினைவில் பதிந்துள்ளது. 

 

அதற்கு முந்தைய ஆண்டு ஜூலையில் இலங்கையில் கலவரம் நடந்ததோ, அதன் பொருட்டு கருணாநிதி 1984 தேர்தலில் போட்டியிடவில்லை என்று சொன்னதோ எதுவுமே அப்போது தெரியாது. ஆனால் இலங்கைத் தமிழருக்கு நிதி திரட்டுவதற்காக இராமசாமிப் பிள்ளை மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்தபோது உதய கீதம் திரைப்படத்தை வீடியோவாகப் பார்த்திருக்கிறேன்.

அதற்கடுத்து நடந்த 1989-ம் ஆண்டின் தேர்தல் ஓரளவு நினைவுதெரிந்து நடந்த முதல் தேர்தல். அப்போது பிளஸ் 1 முடித்து பிளஸ் செல்லும் தருணம். தேர்தலுக்கு முந்தைய நாள் வகுப்பறையில் மாரியப்பன் சார் வகுப்பறையில் கழக ஆட்சியில் சந்திப்போம் என்று சொல்லிவிட்டுச் சென்றார். ஓர் ஆசிரியர் வகுப்பறையில் அரசியல் பேசியது ஆச்சரியமாக இருந்தது. வகுப்பறை என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது என்ற எண்ணத்தை யார் விதைத்தது எனத் தெரியவில்லை. அவரது கணிப்போ ஆசையோ அப்படியே நடந்தது. தமிழகத்தின் முதலமைச்சராக கருணாநிதி பதவியேற்றுக்கொண்டார். 


அந்தத் தேர்தல் பிரச்சாரத்திற்கு ஜெயலலிதா தமிழ்நாடு முழுவதும் தெருத்தெருவாக வந்தார். இலஞ்சியில் நாங்கள் வசித்த முக்கடி வீட்டருகே வேனில் இருந்தபடி ஜெயலலிதா பிரச்சாரம் செய்ததும், வாக்காளர்களுக்கு அன்புப் பரிசாகப் போர்வைகளைத் தந்ததாகவும் ஞாபகம். அந்தத் தேர்தலில் ஜெயா தலைமையிலான அதிமுக சேவல் சின்னத்தில் போட்டியிட்டது. வி.பி.சிங் தலைமையிலான அமைச்சரவை மத்தியில் ஆட்சியமைத்தது. அதை ஒட்டி அப்போது தமிழ் இந்தியா டுடேயில் மத்திய அமைச்சரவை குறித்து விரிவாக செய்திகள் வெளியாயிருந்தன. அந்தப் புத்தகத்தில் என்னவெல்லாம் இடம்பெற்றிருந்தன என்பது மறந்துபோயிருந்தாலும் அப்படியொரு புத்தகம் கண்டது ஏனோ அப்படியே ஞாபகப் பக்கத்தில் நிலைத்துவிட்டது. 



ஞாயிறு, டிசம்பர் 04, 2011

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்


படித்தவர்களின் சூதும் வாதும்


எப்போதும்போல் மலர்ந்த அந்த நாள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் (த. அ. ப. தே.) தலைவருக்கும் உறுப்பினர்களுக்கும் வழக்கமான நாளாக முற்றுப்பெற வில்லை. அவர்கள் புரிந்திருந்த ஊழல்களும் முறைகேடு களும் கடந்த அக்டோபர் 14 அன்று வெளியுலகுக்குக் காட்சியாகத் தொடங்கியது.  த. அ. ப. தே. தலைவர் ஆர். செல்லமுத்து, உறுப்பினர்கள் 13 பேர் ஆகியோர் வீடுகளிலும் அரசுப் பணியாளர் தேர்வாணையத்திலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நிகழ்த்திய திடீர்ச் சோதனை பற்றிய தகவல் செய்தியாகத் தொலைக்காட்சி அலை வரிசைகளில் ஒளிபரப்பானதைக் கண்டபோது அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைப் பற்றி அறிந்திருந்தோர், பணி நியமனத்திற்கெனக் காத்திருந்தோர் மத்தியில் அதிர்ச்சி அலைகள் பரவத் தொடங்கின. லஞ்ச ஒழிப்பு இயக்குநர் மகேந்திரனின் தலைமையில் ஏறக்குறைய நூற்றைம்பது பேர் இந்தச் சோதனையை நிகழ்த்தியிருந்தனர். த. அ. ப. தே. தலைவர் மற்றும் உறுப்பினர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு விசாரணை நடத்தியது இதுதான் முதல்முறை என்பதால் இந்நடவடிக்கை பொதுமக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றது. முறையற்ற வழிகளில் பணம் சம்பாதிக்கத் துடித்த ஆணையத்தின் தலைவர்; உறுப்பினர்கள்; மேல் மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரையிலான அதிகாரிகள் போன்றோருக்கும் அவர்களது சட்டபூர்வமற்ற நடவடிக்கைகளுக்குத் துணைபோனவர் களுக்கும் இது மனக் கலக்கத்தை உண்டுபண்ணியது. 

சமூகத்தின் வேர்வரை பரவியுள்ள பொருளீட்டும் வெறி, கையூட்டுக் கொடுப்பவர்களையும் வாங்குபவர் களையும் ஒருசேர ஆக்கிரமித்திருப்பதால் இத்தகைய ஊழல்கள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. குழந்தைகளது கல்விக்கான செலவுகளை முதலீடாகப் பார்க்கும் பெற்றோர்கள் ஏதாவது ஒருவகையில் தம் மக்களைச் சமூகத்தின் உயர்தட்டில் அமர்த்த விரும்புகின்றனர். அதற்கான முறையான தகுதி தம் பிள்ளைகளிடம் இல்லாதபோது சமூகத்தில் காணப்படும் ஓட்டைகளைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி அவர்களை முன்னேற்ற பெற்றோர்கள் விழைகின்றனர். இதன் காரணமாகவே வேலைக்கெனப் பணம் கொடுப்பது இவர்களைப் பொறுத்தவரை சமூகக் குற்றமாகத் தென்படாமல் பிள்ளைகளின் நல்வாழ்வுக்கான முயற்சியாகச் சுருங்கிவிடுகிறது. பணம் கொடுக்க இயலாமல் அல்லது விரும்பாமல் திறமையை மட்டுமே நம்பி உழைத்துவருபவர்களது வேலைகளைத் தாங்கள் கைப்பற்றுகிறோம் என்ற குற்றவுணர்வு சிறிதுமற்றுக் குறுகிய மனோபாவம் கொண்டவர்களாக இவர்கள் மாறுகிறார்கள். அழுகிக்கொண்டிருக்கும் சமூகத்தைக் குற்றம்சாட்டும் இந்தப் பெற்றோர்கள் அதற்குத் தாங்களும் ஒரு காரணமாக விளங்குவதை உணரவியலாத அளவுக்குப் புத்திர பாசம் இவர்கள் கண்களை மறைக்கிறது.  

இத்தகைய பெற்றோரிடம் வகைதொகையின்றிப் பணம் பெற்றுச் சட்டத்திற்குப் புறம்பாக நடந்து கொண்டோர் என நம்பப்படுபவர்களது வீடுகளில்தாம் அன்று சோதனை நடத்தப்பட்டது. உதவிப் பல் மருத்து வர்கள், 2006-2008ஆம் ஆண்டுக்கான மோட்டார் வாகன ஆய்வாளர்கள், குரூப் 1 அதிகாரிகள் போன்ற வர்களைத் தேர்வுசெய்ய நடத்தப்பட்ட தேர்வுமுறைகளில் மேற்கொள்ளப்பட்ட முறைகேடுகள் காரணமாக எழுந்த குற்றச்சாட்டையொட்டியே சோதனை நிகழ்த்தப்பட்டி ருந்தது. த.அ.ப.தே. தலைவர், உறுப்பினர்கள்மீது ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழும் இந்தியத் தண்டனைச் சட்டப்பிரிவுகளின் கீழும் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. குற்றம் சாட்டப்பட்டோர், உதவிப் பல் மருத்துவர் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பெயர்ப் பட்டியல் அதிகாரபூர்வமாக வெளியிடப்படு வதற்கு முன்பு அதைப் பார்வையிடக் கோரியுள்ளனர்; 2006-2008ஆம் ஆண்டுகளுக்கான மோட்டார் வாகன ஆய்வாளர்களுக்கான தேர்வு முறைகளில் ஊழல் புரிந்துள்ளனர்; இவற்றின் மூலம் விதிகளைமீறி முறையற்ற வழிகளில் பொருளாதாரரீதியான பயன்பெற முயன்றுள்ளனர்.

துணை ஆட்சியர், காவல் துறை உதவிக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளைத் தேர்ந்தெடுக்க நடத்தப்படும் குரூப் 1 தேர்வுகளில் நடைபெற்றுவரும் ஊழல்களைத் தடுக்கும்வகையில் தேர்வாணையச் செயலர் த. உதயச்சந்திரன் துணிச்சலுடன் செயல்பட்டுள்ளார். குற்றம்சாட்டப்பட்டவர்கள் விதிமுறைகளுக்குக் கட்டுப்படாமல், செயலரைச் செயல்படவிடாமல் தடுத்துள்ளனர். தங்கள் பெயர்களின் பின்னே ரயில் பெட்டிகள்போல் பட்டங்களைச் சுமந்துதிரியும் இவர்கள் அனைவரும் பொறுப்பான உயர்பதவிகளை வகித்துப் பின்னரே தேர்வாணையப் பணிகளுக்கென நியமிக்கப்பட்டுள்ளனர் என்பதை நினைக்கும்போது மனத்தில் அச்சமெழுகிறது. 

இந்தச் சோதனையில் கையெழுத்திடப்படாத பணி நியமன உத்தரவு நகல்கள், போட்டித் தேர்வு எழுதியவர்களின் நுழைவுச்சீட்டுகள், பல்வேறு பணிகளுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டோர் பட்டியல், அரசியல்வாதிகளும் முக்கிய ஆளுமைகளும் வழங்கியிருந்த பரிந்துரைக் கடிதங்கள், கிராம நிர்வாக அலுவலர் தேர்வெழுதியவர்களின் பதிவு எண்கள் கொண்ட பட்டியல், மாணவர் களின் சான்றிதழ்கள், மோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வுகளை எழுதியவர்களின் மதிப்பெண் விவரங்கள் அடங்கிய ஆவணங்கள், மையிட்டு நிரப்பப்பட்ட விடைத் தாள்கள், புதிய சொத்துகள் வாங்கியதற்கான சான்றுகள் போன்ற அநேக ஆவணங்களும் ரொக்கப் பணம் லட்சக்கணக்கிலும் கைப்பற்றப்பட்டிருந்தன. ஓய்வுபெற்ற காவல் துறை ஐ. ஜி. துரைராஜின் தம்பியான உறுப்பினர் சண்முகநாதன் வீட்டில் ஏறக்குறைய இருபத்தைந்து லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. அறத்தைச் சுத்தமாகப் புறக்கணித்துவிட்டுப் பணம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டதாக நம் சமூகம் மாறிவிட்டதன் அப்பட்டமான சான்று இது.

தேர்வெழுதும் மாணவ, மாணவிகள்
      
2005இல் தனது பவளவிழாவைக் கொண்டாடிய இந்த ஆணையம் ஊழல்களுக்குப் பேர்போனது. காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வரும்போதெல்லாம் அதை மையமிட்டு அநேக ஊழல் ஊற்றுகள் வெவ்வேறு மட்டங்களில் சுரக்கும். கேள்வித் தாள்களை வழங்குவது, விடைகளைத் தேர்வுக்கு முன்னமே விண்ணப்பதாரர்களுக்கு அறியத் தருவது, நேர்முகத் தேர்வில் அளிக்கப்படும் மதிப்பெண்களைப் பெற்றுத் தருவது, விரும்பிய இடத்திற்கு பணி நியமன உத்தரவை மாற்றித் தருவது என எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கிருந் தெல்லாம் இப்போது லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் சிக்கியுள்ள தலைவரும் உறுப்பினர்களும் பணம்பெற்றுள் ளதாகச் சொல்லப்படுகிறது. விதிமுறை மீறலும் அதற்கு நிர்ணயிக்கப்படும் சட்டபூர்வமற்ற கட்டணமும் நேர்விகிதப் பொருத்தமுடையன. தேர்வாணையத்துக்குத் தொடர்பே இல்லாத இடத்தில் ஆட்கள் சந்தித்துச் சங்கேத வார்த்தைகளோடு சட்டபூர்வமற்ற விதத்தில் ஆவணப் பரிமாற்றங்களை மேற்கொள்வதாகவும் கதைகள் உலவுகின்றன. எப்படியாவது அரசு வேலையைப் பெற்று விட்டால் போதும் எஞ்சிய வாழ்நாள் முழுவதையும் நிம்மதியாகக் கழித்துவிடலாம் என்று நினைத்தும் அதற்கான உழைப்பைச் செலுத்தத் தயாராக இல்லாத நடுத்தரவர்க்க விண்ணப்பதாரர்களை இலக்காகக் கொண்டே இந்த முறைகேட்டாளர்கள் செயல்படுகின்றனர். கற்பனைக்கெட்டாத விதத்தில் பல ரூபங்களில் பணி நியமன உத்தரவு வழங்கும் அதிகாரத்தைப் பயன்படுத்திப் பெருமளவில் இவர்கள் பொருளாதாரப் பயனடைந்துள்ளனராம். தன்னாட்சி அதிகாரம்கொண்ட அமைப்பாக இருப்பதால் தங்களைக் கேள்விகேட்க எவருமில்லை என்ற அதீத நம்பிக்கையின்பொருட்டுத் தைரியமாக முறைகேடுகளில் ஈடுபட்டுப் பெருவாரி யான தொகையைக் கையூட்டாகப் பெற்றுக்கொண்டு ஆனந்த வாழ்வு நடத்திவந்ததாகச் சொல்லப்படும் ஆணைய உறுப்பினர்களுக்கும் தலைவருக்கும் 2011 சட்டப்பேரவைத் தேர்தல் மூலம் நிகழ்ந்த ஆட்சி மாற்றம் நல்ல சகுனமாக இருக்கவில்லை. 

தமிழகத்தில் அறிவியல் முறை ஊழலுக்கு வித்திட்ட வராக அறியப்பட்டிருக்கும் கருணாநிதி முதல்வராக இருந்தபோது இவர்கள் பெரிதாக அலட்டிக்கொள்ளத் தேவையில்லாமல் இருந்தது. முறைகேடுகள் பற்றிய குற்றச்சாட்டுகள் எழுப்பப்படும்போது கண்டிப்புடன் நடந்துகொள்ளாமல் தாயுள்ளத்தோடு நடந்து கனிவை வெளிப்படுத்திப் பிரச்சினையைப் பெரிதுபடுத்தாமல் சுமூகமாகத் தீர்த்துவிடும் சாணக்யர் அவர். தமிழகத்தில் ஊழலை வளர்த்தெடுத்ததில் ஜெயலலிதாவின் பங்கும் குறைத்து மதிப்பிடக் கூடியதல்ல என்பதையும் அவருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு தற்போது பெங்களூர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருவதையும் மறந்திட இயலாது. என்றாலும், அரசுப் பணியாளர் தேர்வாணையம் குறித்த அலட்சியப்படுத்தவியலாத குற்றச்சாட்டுகள் அரசின் தலைமைப் பீடத்தில் அழுத்தமாக வைக்கப்பட்டதாலும் இயல்பாகவே அவரிடம் மண்டிக்கிடக்கும் திமுக எதிர்ப்புணர்வின் காரணத்தாலும் அவர் தலைமை யிலான தமிழக அரசு இவ்விஷ யத்தில் மேம்போக்கான நடை முறையைத் தளர்த்திக்கொண்டு ஆக்கபூர்வமான செயல்பாட்டுக்கு நகர்ந்திருக்கிறது. 

நேர்மையான அதிகாரிகளான த. உதயச்சந்திரனையும் வெ. இறையன்புவையும் முறையே தேர்வாணையத்தின் செயலாளராகவும் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறைச் செயலாளராகவும் நியமித்ததைத் தேர்வாணைய முறைகேடுகளுக்கெதிரான அரசின் முதல் நடவடிக்கையெனக் குறிப்பிடலாம். 2011, ஆகஸ்ட் ஒன்பதாம் நாள் அன்று தமிழக அரசு த. அ. ப. தே. தலைவர், உறுப்பினர்களை ஊழல் தடுப்புச் சட்டம்-1988இன் கீழ் ஊழல் தடுப்பு வரம்புக்குள் கொண்டுவர அரசாணை பிறப்பித்த செயல் அடுத்த நடவடிக்கை. த.அ.ப.தே. தலைவர், உறுப்பினர்கள்மீது புகாரளிக்கப்பட்டால் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவர்களை விசாரிப்பதற்கான அதிகாரத்தை இந்த அரசாணை பெற்றுத்தந்தது. தேர்வாணையத்தின் மீதான அரசின் பிடி தொடர்ந்து இறுகிக்கொண்டிருந்ததை இந்த நடவடிக்கை உறுதிப்படுத்தியது.
  
2011 ஜூலையில் நடத்தப்பட்ட குரூப் 2 தேர்வின் விடைத்தாள்கள் தேர்வுக்கு முன்னதாகவே வெளியாகி விட்டதாக எழுந்த குற்றச்சாட்டு, கிராம நிர்வாக அலுவலர் தேர்வில் அறுநூறு பேர் அனைத்துக் கேள்விகளுக்கும் சரியான விடையளித்திருந்ததாகத் தினத் தந்தியில் வெளியான செய்தி போன்றவற்றின் விளைவாகத் தேர்வு எழுதிய மாணவர்களில் ஒரு குழுவினர் தலைமைச் செயலகத்திற்குச் சென்று தலைமைச் செயலரைச் சந்தித்து முறையிட்டுள்ளனர். மோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வில் நடந்தேறிய அதிகளவிலான முறைகேடுகள் மூலமாகத் தகுதியற்ற பலர் தேர்ச்சி பெற்றுள்ளது குறித்து விசாரிக்க வேண்டுமெனவும் தேர்வு எழுதிய சிலர் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகாரளித்துள்ளனர். தேர்வாணையம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளனைத்தையும் சேகரித்த லஞ்ச ஒழிப்புத் துறை அவற்றை ஒழுங்குபடுத்தித் தலைவர், உறுப்பினர்கள் 13 பேர்மீது வழக்குப் பதிவுசெய்ய அனுமதிக்கும்படி அரசுக்குக் கடிதம் அனுப்பியுள்ளது. இதைப் பரிசீலித்த தலைமைச் செயலர் தேவேந்திரநாத் சாரங்கி உடனே அனுமதி வழங்கி முறைப்படியான துறை நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டுள்ளார். ஆகவே திடீரெனச் சோதனை நடத்தப்பட்டிருந்தாலும் அதற்கான செயல்வடிவம் மிகக் கவனமாகத் திட்டமிடப்பட்டுப் பல கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தச் சோதனையில் தேர்வாணையத்தினர் அணிந்திருந்த முகமூடிகள் ஒவ்வொன்றாகக் கழற்றியெறியப்பட்டன.
  
அரசியல்வாதிகள் தலையீடு இருக்கும்பட்சத்தில் பாரபட்சமற்ற நியாயமான அமைப்பாகச் செயல்படுவதில் இடையூறுகள் ஏற்பட்டுவிடக் கூடும் என்ற அதிஜாக்கிரதை உணர்வு காரணமாகவே அரசுப் பணியாளர் தேர்வாணையம், தேர்தல் ஆணையம் போன்ற தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது. தேர்வாணையத் தலைவரும் உறுப்பினர்களும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 316(1) பிரிவின்படி தமிழக ஆளுநரால் நியமிக்கப்படுகிறார்கள். அவர்கள் ஆறு ஆண்டுகளோ அறுபத்தியிரண்டு வயதுவரையோ பணியாற்றலாம். இதில் எது முந்துகிறதோ அது வரை அவர்கள் பணி நீடித்திருக்கும். தற்போதைய தலைவரும் உறுப்பினர்களும் கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவின் பதவிக்காலத்தின் கடைசியில் 2011, பிப்ரவரி 21 அன்று வெளியிடப்பட்ட அரசாணை [G.O (Ms)] எண் 29  மூலம் தமிழகத் தலைமைச் செயலர் எஸ். மாலதி பிறப்பித்த உத்தரவின்படி எஸ். பன்னீர்செல்வம், வி. ரத்தினசபாபதி, பி. பெருமாள் சாமி, டி. குப்புசாமி, ஜி. செல்வமணி ஆகியோர் உறுப்பினர் பதவிபெற்றுள்ளனர்.  ஆர். செல்லமுத்து மு. க. ஸ்டாலினின் சிபாரிசால் தலைவராக்கப்பட்டார் என்கிறார்கள். கிராமப்புறப் பின்னணியில் இருந்து வந்தவர் என்பதால் கிராமப்புற மாணவர்களின் மனநிலையை நன்கு உணர்ந்துகொள்ளக் கூடியவர் என்ற நம்பிக்கையை விதைத்த தேர்வாணையத் தலைவர் இன்று தேர்வாணைய ஊழல்களின் பிதா மகனாகக் காட்சியளிப்பது அவலமே.  

தேர்வாணையத் தலைவர் செல்லமுத்து வீட்டில் சோதனை

தேர்வாணைய உறுப்பினரான வழக்கறிஞர் கே. எம். ரவி 1993இல் பதிவுத் துறை அதிகாரியாகத் திருப்போரூரில் பணிபுரிந்தபோது பத்தாயிரம் ரூபாய் கையூட்டுப் பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுக் கைதாகியுள்ளார். பின்னர் இவர்மீது சொத்துக் குவிப்பு வழக்கும் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த வழக்குகளிலிருந்து நீதிமன்றத்தில் இவர் விடுவிக்கப்பட்டுவிட்டார். அரசு வேலையை உதறிவிட்டே இவர் தேர்வாணைய உறுப்பினராகியுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு யோசிக்கும்போது ஒவ்வொரு உறுப்பினர்களின் தேர்வுகளுக்குப் பின்னணியிலும் என்னென்ன மர்மங்கள் ஒளிந்திருக்குமோ தெரியவில்லை. மராட்டிய மாநிலத் தேர்வாணைய உறுப்பினருக்கெதிரான ஊழல் வழக் கொன்றில், ஜூலை 2007இல் உச்ச நீதிமன்ற நீதிபதி பி. கே. பாலசுப்ரமணியம் வழங்கிய தீர்ப்பில் மாநில அரசுகள் தேர்வாணையத் தலைவரையும் உறுப்பினர் களையும் தேர்வுசெய்யும்போது கவனமாக இருக்க வேண்டுமென்றும் அப்பழுக்கற்றவர்களைத் தேர்வுசெய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்; தேர்வாணையத் தலைவரும் உறுப்பினர்களும் சீஸரின் மனைவி போல் இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். 2008இல் நடைபெற்ற ஒரிசா அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் டாக்டர் ஹெச். பி. மிர்தாமீதான வழக்கின் தீர்ப்பில் ஏற்கனவே ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப் பட்டிருப்பவர்களை மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையங்களில் உறுப்பினராக நியமிக்கக் கூடாதென உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. நேர்மையான வழியில் தேர்வாணையத்திற்குத் தலைவரும் உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படிப் பெரும்பாலும் அமையவில்லை என்பதுதான் சோகம். 

தமிழகத்தில் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்கள் நடைமுறைப் படுத்தப்பட்டிருந்தால் தேர்வாணையம் இப்படியொரு தலைக்குனிவைச் சந்தித்திருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்காது. தமிழக வீட்டுவசதித் துறைச் செயலராகச் செல்லமுத்து பதவி வகித்து வந்த காலத்தில் வீட்டு வசதி வாரிய வீட்டுமனை ஒதுக்கீட்டில் ஏதேனும் முறைகேடு நடந்துள்ளதா என்னும் கோணத்திலும் விசாரணை நடைபெற்றுவருவதை இங்கே நினைவுகூர வேண்டியுள்ளது. சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுக்கொண்டிருக்கும் விசாரணை நிறைவுபெறுவதற்குக் குறைந்தது 15 நாட்களாவது ஆகுமென முதலில் கூறப்பட்டது. லஞ்ச ஒழிப்புத் துறை தங்கள் விசாரணை குறித்த இடைக்கால அறிக்கையைத் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது. எனினும் முப்பது நாட்களைத் தாண்டிய பின்னரும் விசாரணை இன்னும் இறுதிக் கட்டத்தைத் தொடவில்லை என்பதை நவம்பர் 18 அன்று நடத்தப்பட்ட சோதனை பறைசாற்றியது. 

கிராம நிர்வாக அலுவலர் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டோர் பெற்றிருந்த மதிப்பெண்கள் இணையத்தில் வெளியிடப்படுவதாக நாளிதழ்களில் முன்னர் குறிப்பிடப்பட்ட நவம்பர் 18 அன்று தேர்வாணைய அதிகாரிகள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். தேர்வாணைய இணைச் செயலர் மைக்கேல் ஜெரால்டு, சார்புச் செயலர்கள், பிரிவு அதிகாரி, உதவிப் பிரிவு அதிகாரிகள் ஆகியோர் இந்தச் சோதனையில் அடங்குவர். முக்கியமான ஆவணங்கள் சில இதில் சிக்கியுள்ளன. தேர்வாணையத் தேர்வுகளில் பங்கேற்ற விண்ணப்பதாரர்களது விவரம், பெற்ற மதிப்பெண்கள் ஆகியவை குறித்தும் சோதனையிட்ட அதிகாரிகள் தீவிரமாக ஆராய்ந்துள்ளனர்.  முதல்வரும் தலைமைச் செயலரும் தேர்வாணைய முறைகேடுகள் குறித்த விஷயத்தில் தீவிர அக்கறை காட்டிவருவதாகச் சொல்கிறார்கள். 

செல்லமுத்து தலைவராகவும் ஏனைய 13 பேர் உறுப்பினர்களாகவும் செயல்பட்டிருக்கும் காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட நியமனங்கள் அனைத்தையும் ரத்துசெய்யும்படி அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கொன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எம். ஒய். இக்பால், நீதிபதி டி. எஸ். சிவஞானம் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்வாணையத்தை லஞ்ச ஒழிப்புத் துறையின் கண் காணிப்புக்குக் கீழ்க் கொண்டுவந்திருந்த தமிழக அரசாணையை எதிர்த்துச் செல்லமுத்துவும் ஏனைய உறுப்பினர்களும் வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக நீதிபதிகளிடம் தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்வினை புரிந்த நீதிபதிகள், தேர்வாணையம் தொடர்பான அனைத்து வழக்குகளும் தங்களின் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட வேண்டும் என்றும் தலைவர், உறுப்பினர்கள் 13 பேர் மீதான லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்க விரும்புகிறது என்றும் தெரிவித்திருந்தனர். 

தேர்வாணைய ஊழல் குறித்த விசாரணைகளின் இறுதியில் இவர்களது குற்றச்செயல்கள் சந்தேகத்திற்கிட மின்றி நிரூபிக்கப்பட்டால், முறைகேட்டில் ஈடுபட்ட அனைவரும் பதவி இழக்க நேரிடலாம். தேர்வாணையத் தலைவரையும் உறுப்பினர்களையும் பணிநீக்கம் செய்வதற்குரிய நடைமுறைகள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 317இல் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதில் குறிப்பிட்டுள்ளபடி, பணியாளர் தேர்வாணையத்தில் பணியாற்றும் அதே சமயம் வேறு எங்கேயும் ஊதியத்திற்காகப் பணியாற்றினாலோ பணியைச் செய்ய முடியாத அளவுக்கு மனநிலை பாதிக்கப்பட்டிருந்தாலோ முறைகேடுகள் தொடர்பாகக் குற்றம்சாட்டப்பட்டு அது நிரூபிக்கப்பட்டாலோ தலைவரையும் உறுப்பினர்களையும் குடியரசுத் தலைவர் பணிநீக்கம் செய்யலாம். முறைகேட்டில் ஈடுபட்டோரைப் பதவிநீக்கம் செய்யுமாறு மாநில அரசு ஆளுநரிடம் பரிந்துரைக்க, அவர் இந்தப் பிரச்சினையை ஜனாதிபதியிடம் கொண்டுசெல்வார். கவர்னரின் பரிந்துரையின் பேரில் ஜனாதிபதி இது குறித்து விசாரணை நடத்துமாறு உச்ச நீதிமன்றத்தைக் கோருவார். உச்ச நீதிமன்றம் அளிக்கும் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் ஜனாதிபதி அனைவரையும் பதவியை விட்டு நீக்கலாம் என்பதாகச் சட்ட அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

2007 ஜனவரியில் ஹரியானா அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மேஹர் சிங் சைனி, உறுப்பினர்கள் சந்தோஷ் சிங், ராம்குமார் காஷ்யப் ஆகியோரைப் பதவிநீக்கம் செய்து ஹரியானா ஆளுநர் உத்தரவிட்டிருந்ததற்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்திருந்தது. இவர்கள்மீது சாட்டப்பட்டிருந்த ஒன்பது குற்றச்சாட்டுகளில் ஆறு சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டிருந்தன. ஆகவே இவர்களைப் பதவிநீக்கியதற்குச் சட்டபூர்வமான காரணங்கள் உள்ளதாகத் தெரிவித்திருந்தது உச்ச நீதிமன்றம். அதே போல் கர்நாடக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முன்னாள் தலைவர் ஹெச். என். கிருஷ்ணா 1998, 1999, 2004 ஆகிய ஆண்டுகளுக்கான அதிகாரிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்வில் விதிமுறைகளை மீறி முறைகேடான நடவடிக்கைகளை மேற்கொண்டதால் பதவி நீக்கப்பட்டுக் குற்றப் புலனாய்வுத் துறையினரால் 2011, அக்டோபர் ஏழாம் நாளன்று கைதுசெய்யப்பட்டுள்ளார். இதைப் போன்ற முன்னுதாரணங்கள் இருந்தபோதும் இந்த விசாரணையில் இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் இருக்குமா என்பதை இப்போது ஊகித்தறிவது கடினம்.

வழக்குகளின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் இந்தச் சூழலில் அவற்றின் போக்கு குறித்துப் பெருமளவில் ஊடகங்களில் விவாதிக்கப்படுகின்றன. ஆனால் குரூப் 2, கிராம நிர்வாக அலுவலர் ஆகிய தேர்வுகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுத் தேர்ச்சிபெற்றவர்களுக்கான நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு போன்ற நடைமுறைகள் நிறைவுபெற்றபோதும் அவர்களுக்குப் பணி நியமன உத்தரவுகள் வழங்கப்படா தது குறித்த விவாதங்கள் ஊடகங்களில் இடம்பெறவில்லை. அப்படியே இடம்பெற்றாலும் அவை வெறும் ஊகத்தின் அடிப்படையிலேயே அமைகின்றன. பிற மாநிலங்களில் தேர்வாணைய முறைகேட்டுக்கெதிராக நடைபெற்ற வழக்குகளில் வழங்கப்பட்ட தண்டனை குறித்த தகவல்களை இணையதளங்களில் காண முடிகிறது. ஆனால் முறைகேட்டாளர்கள் தலைமையின் கீழ்த் தேர்வாணையம் நடத்திய தேர்வுகள் பற்றி என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதென்பது சரிவரத் தெரியவில்லை. 

முறையாகத் தேர்ச்சிபெற்றும் பணி கிடைக்காமல் மன உளைச்சலோடு என்ன நடக்குமோ என்ற பதை பதைப்போடு தேர்வாணைய உத்தரவுகளுக்குக் காத்துக்கிடப்பவர்களது நிலைமை துயரம்மிக்கது. இவர்கள் தேர்வாணைய அலுவலகத்தில் தங்கள் தரப்புக்கு நியாயம் கேட்டதோடு முதல்வரைத் தனிப் பட்ட முறையில் சந்தித்துத் தங்களுக்குப் பதவி வழங்கு மாறு கோரியுள்ளனர். சட்டவிதிகளை மீறிப் பலவித முறைகேடான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதால் செல்லமுத்து காலகட்டத்தின் அனைத்துப் பணி நியமனங்களையும் ரத்துசெய்துவிட வேண்டுமென்ற கோரிக்கை குறித்து நீதிமன்றம் என்ன நடவடிக்கை எடுக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஒட்டுமொத்தமாகத் தேர்வுகளை ரத்துசெய்ய வேண்டும் என்று எழும் குரல் மேலோட்டமான பரிசீலனையின் அடிப்படையில் ஒலிக்கிறது. இப்பிரச்சினை பற்றித் தீவிரமாக ஆலோசித்ததற்குப் பின்னர் அது எழுப்பப்படவில்லை. தேர்வுகளை ரத்துசெய்ய நேரிட்டால் முறையாகத் தேர்வெழுதி வெற்றி பெற்றவர்களுக்கு நியாயம் மறுக்கப்பட்டதாகிவிடும். குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டாலும் நிரபராதிகள் தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது என்னும் சட்ட வழிமுறை நமது நீதியமைப்பில் பின்பற்றப்படுகிறது என்பதை நினைவில்கொள்க. தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக அவர்கள் நீதிமன்றத்தை அணுகும் சாத்தியமுமுள்ளது. இத்தகைய பல குழப்ப முடிச்சுகளும் அவிழ்க்கப்படும் காலம் வெகு அருகில் என நம்புவதைத் தவிர வேறு வழியில்லை.  

ஊழலற்ற, நேர்மையான, பாரபட்சமற்ற அமைப்பாகத் தேர்வாணையம் செயல்பட்டால் மட்டுமே அதை நம்பிப் போட்டித்தேர்வுகளுக்கெனத் தயாராகும் லட்சக் கணக்கானவர்களின் உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிட்டும். பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு இறுதித் தேர்வு முடிவுகள் இரண்டு மாதங்களுக்குள் வெளியிடப்பட்டு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்களும் வழங்கப்பட்டுவிடுகின்றன எனும்போது அரசுப் பணியாளர் தேர்வாணையம் தேர்வு முடிவுகளை அறிவிக்க அதிக நாட்கள் எடுத்துக்கொள்வதையும் மதிப்பெண்கள் குறித்த வெளிப்படைத் தன்மையைப் பேணாததையும் சந்தேகத்திற்குரிய நடவடிக்கையாகவே பார்க்க வேண்டியதுள்ளது. எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான நேர்முகத்தேர்வில் மதிப்பெண்கள் அளிக்கப்படுவது முறைகேட்டை மறைமுகமாக ஊக்கு விக்கவே உதவுகிறது. பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவ ரின் மனநிலை அதற்குகந்ததாக உள்ளதா என்பதை அறிவதற்காக வேண்டுமானால் நேர்முகத் தேர்வு நடத்தப்படலாம். அதற்கு மதிப்பெண்கள் வழங்குவது அறவே ஒழிக்கப்பட வேண்டும். இந்திய ரயில்வே தேர்வுகளில் முறைகேடுகளைத் தடுக்கும் முகமாக இந்த நேர்முகத் தேர்வுகள் முற்றிலுமாகத் தவிர்க்கப்பட்டுவிட்டன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. 

தங்கள் மதிப்பெண்கள் குறித்த சந்தேகங்கள் எழும்போது தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பதாரர்கள் நிரப்பப்பட்ட விடைத்தாளைக் கோரினால் அதன் விவரம் அவர்களுக்கு அறிவிக்கப்பட வேண்டும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை அணுகும் விண்ணப்பதாரர் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு ஆளாகாமல் தடுக்கப்பட வேண்டியதும் அவசியம். இத்தகைய முறையான செயல்பாடுகள் பாரபட்சமற்றுப் பின்பற்றப்பட்டால் மட்டுமே தேர்வாணையத்தின் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படும். அப்படியான நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதில் தேர்வாணையத்தினர் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இல்லையெனில் சமூகப் பொறுப்பு மிக்க உதயச்சந்திரன் போன்ற அதிகாரிகளின் நேர்மையான முயற்சிகள் வீணாய்ப்போய்விடும்.

ஒருவேளை இந்தத் தேர்வாணையம் கூண்டோடு மாற்றப்பட்டால் அதன்பிறகு நியமிக்கப்படும் தலைவர், உறுப்பினர்கள் தற்போதைய ஆளும் கட்சிசார்ந்த வட்டாரத்திற்கு நெருக்கமானவர்களால் பரிந்துரைக்கப்பட்டவர்களாக இருக்கக்கூடும். அவர்கள் இன்று புதிதாய்ப் பிறந்தவர்களாக இருக்கப்போவதில்லை. தொடர்ச்சியான தவறுகளும் ஊழல்களும் தொடர்வது மக்களுக்கோ ஜனநாயகத்திற்கோ ஆரோக்கியமானதல்ல. நேர்மையாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கும் தேர்வாணையச் செயலருக்கும் புதியதாக உருவாகும் தேர்வாணையத் தலைவர், உறுப்பினர்களுக்கும் இதைப் போன்ற முரண்பாடுகள் எழுந்தால் இப்போது தமிழக அரசு வழங்கிவருவது போன்ற ஒத்துழைப்பைத் தொடர்ந்து அவருக்கு வழங்கித் தனது ஜனநாயகச் செயல்பாட்டை நிரூபிக்க வேண்டும். அதற்கு மாறாகக் கட்சி விசுவாசத்தோடு அரசு நடந்துகொள்ளுமேயானால் நேர்மையான செயலர் மீண்டும் வேறு ஒரு துறைக்கு மாற்றப்படுவார். வழக்கம்போல் தேர்வாணையம் ஊழல் பாதையில் பயணத்தைத் தொடங்கிவிடும்.  

டிசம்பர் 2011 காலச்சுவடு இதழில் வெளியாகியுள்ள கட்டுரை இது       

லேட்டஸ்ட்

அமலா எனும் பொன்மான்

தொடர்பவர்