இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, ஏப்ரல் 09, 2021

ஒரு சைக்கிள் ஒரு மாஸ்க் பல குறிப்புகள்


தமிழ்நாட்டின் 16ஆம் சட்டப்பேரவைக்கான தேர்தல் 2021 ஏப்ரல் ஆறு அன்று ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. பெரிய அளவிலான வன்முறைச் சம்பவம் எதுவுமின்றி இந்தத் தேர்தல் அமைதியாகவே நடந்துமுடிந்துள்ளது.  இதுவரை காலை ஏழு மணி முதல் மாலை ஆறு மணிவரையே வாக்குப்பதிவு நடத்தப்பட்டு வந்தது. இம்முறை முதன்முறையாக வாக்குப்பதிவு இரவு ஏழு மணி வரை நடத்தப்பட்டது. மாலை ஆறு மணி முதல் இரவு ஏழு மணி வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வந்து வாக்களிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது. திமுகவின் எம்பி கனிமொழி பாதுகாப்பு உடை அணிந்து வாக்களித்தார். மொத்தம் 72.78 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. காலையில் நடைபெற்ற வேகத்தைப் பார்த்தால் எண்பது சதவீதம் பதிவாகும்போல இருந்தது. ஆனால், மதியத்துக்கு மேல் சிறிது மந்த கதியாகிவிட்டது. ஆகவே, கடந்த முறையைவிடச் சற்றுக் குறைவாகவே வாக்குப்பதிவு நடந்துள்ளது. 



இந்தத் தேர்தலில் கட்சி தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட ரஜினி காந்த் கட்சி தொடங்கவில்லை. ஆனால், வழக்கம்போல் வந்து வாக்களித்துவிட்டார். ஊடகங்களின் கவனம் இந்த முறை ரஜினி மேல் இருக்கவில்லை. சட்டப்பேரவைத் தேர்தலில் முதன்முறையாகப் போட்டியிடும் கமல்ஹாசன் தன் மகள்களுடன் வந்து வாக்களித்தார். மு க ஸ்டாலின் குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன் பேரனைத் தூக்கியபடி வந்து வாக்களித்தார்.  


நடிகர் விஜயும் அஜீத்தும் ஊடகக் கவனத்தை ஈர்த்துவிட்டார்கள். நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தார். அதுவும் அவரது சைக்கிளில் கறுப்பு சிவப்பு வண்ணமிருந்தது பெரிய அளவில் பேசப்பட்டது. அதே போல் அஜித் அணிந்து வந்திருந்த முகக்கவசம் கறுப்பு வண்ணத்தில் சிவப்பு பட்டையால் இணைக்கப்பட்டிருந்தது. இதுவும் பேசுபொருளானது. இருவருமே ஆளும் தரப்புக்கு எதிரான மனநிலையை வெளிப்படுத்தினார்கள் என்று சமூக ஊடகங்களில் பலரும் எழுதினார்கள். ஆனால், வாக்குச்சாவடி காரில் வருவதற்கு ஏதுவான சூழலில் இல்லாததால் விஜய் சைக்கிளில் வந்தார் என்று விஜயின் பிஆர்ஓ தெரிவித்தார். ஆனால், அஜித்திடமிருந்து எந்த விளக்கமும் வரவில்லை. வாக்குச்சாவடியில் தன்னுடன் செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகர் ஒருவரின் மொபைல் போனைப் பிடுங்கினார் அஜித். பின்னர் அவரிடம் போனைக் கொடுத்துவிட்டு வருத்தமும் தெரிவித்தார். 


1952ஆம் ஆண்டு தேர்தல் முதல் இந்தத் தேர்தல்வரை வாக்களித்த மாரப்ப கவுண்டர் என்னும் தனிமனிதர் ஊடகத்தில் இடம்பிடித்தார். வாக்காளர் ஒருவர் சேலத்தில் மயங்கிவிழுந்து உயிரிழந்தார். வழக்கம்போல் இம்முறையும் சென்னையில் குறைந்த அளவிலான வாக்குப்பதிவே நடந்துள்ளது. படித்தவர்கள் மத்தியில் வாக்களிக்கும் ஆர்வமில்லை என்று பொதுவாகப் பேசப்பட்டது. யாருக்கு வாக்களித்து என்ன பண்ண என்னும் மனநிலையில் அவர்கள் இருக்கிறார்களோ என்னவோ? அடித்தட்டு மக்கள் உற்சாகத்துடன் வந்து வாக்களித்தார்கள். 


தேர்தலில் பதிவான வாக்குகளை வைத்து ஒரு முடிவுக்கும் வர இயலவில்லை. 2016இல் வாக்குப்பதிவு சதவீதம் 74.81. ஆனால் இப்போது அதைவிட குறைவான சதவீதத்தினரே வாக்களித்திருக்கிறார்கள். கொரோனா காலத்திலும் இவ்வளவு பேர் வாக்களித்திருப்பது ஆரோக்கியமான செய்தியே. 2011ஆம் ஆண்டு தேர்தலில் 78.29 சதவீத வாக்குப்பதிவு நடந்திருந்தது. இதுவரையான தேர்தல்களில் அதிக வாக்குப்பதிவு இதுவே. அப்போது ஆண்ட கட்சியான திமுகவுக்கு எதிராகத் தேர்தலின்போது பெரிய அலை வீசியது. மிகக் குறைவான வாக்குப்பதிவு நடந்தது 1957இல். அந்த ஒரு முறைதான் ஐம்பது சதவீதத்துக்கும் கீழே வாக்குப்பதிவு சென்றுள்ளது. வாக்குப்பதிவு சதவீதம் 46.75 ஆக இருந்தது. ஆட்சிக்கு எதிரான மிகப் பெரிய அலைவீசப்பட்டது எனச் சொல்லப்பட்ட 1996இலேயே 66.95 சதவீத வாக்குப்பதிவுதான் நடைபெற்றிருக்கிறது.


இதுவரை ஆட்சி மாற்றம் நடைபெற்ற எட்டு முறையும் அதாவது, 1967, 1977, 1989, 1991, 1996, 2001, 2006, 2011 ஆகிய ஆண்டுகளில் இந்த வாக்குப் பதிவு அடிப்படையில் பார்த்தால் ஒரு சுவாரசியமான விஷயம் தெரியவருகிறது. கடந்த முறையைவிட அதிகமாக வாக்குப்பதிவு நிகழ்ந்து நான்குமுறையும் (1967, 1996, 2006, 2011), குறைவாக வாக்குப்பதிவு நிகழ்ந்து நான்கு முறையும் (1977, 1989, 1991, 2001) ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. முந்தைய தேர்தலைவிட அதிக வாக்குப்பதிவு நடைபெற்று ஆட்சி மாற்றத்தை மூன்று முறை திமுக பெற்றுள்ளது (1967, 1996, 2006); குறைந்த வாக்குப்பதிவு நடைபெற்று ஆட்சி மாற்றத்தை மூன்று முறை அதிமுக (1977, 1991, 2001) பெற்றுள்ளது. இந்த முறை திமுக வென்று ஆட்சியமைத்துவிடும் என்றுதான் பரவலாகப் பேசப்படுகிறது. ஆனாலும் என்ன நடக்கிறது என்பதைக் காண மே 2 அன்று வரை காத்திருந்துதான் ஆக வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

லேட்டஸ்ட்

ஒரு விக்ரம் பத்து கமல்ஹாசன்

தொடர்பவர்