இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், ஏப்ரல் 19, 2021

காதல் வந்தால் சொல்லியனுப்பு


ரஷ்ய எழுத்தாளர்களில் பெரிதும் மதிக்கப்படுபவர்களில் ஒருவரான இவான் துர்கநேவ் 1857இல் எழுதிய குறுநாவல், ஆஸ்யா. இந்தக் குறுநாவலை அல்லது நெடுங்கதையை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கிறார் நா.பாஸ்கரன். நாவலுக்கு மொழிபெயர்ப்பாளர் தந்திருக்கும் தலைப்பு சீமானின் திருமணம். ஸ்டார் பிரசுரம் வெளியிட்டிருக்கும் இந்த நாவல் 1956 அக்டோபரில் முதல் பதிப்பு கண்டிருக்கிறது. இந்த நாவலின் பிடிஎஃப் வடிவம் தமிழ்நாட்டு அரசின் பொது நூலக இயக்ககத்தின் இணையப் பக்கத்தில் கிடைக்கிறது. ஏதோ ஒன்றைத் தேடிக்கொண்டிருந்த வேளையில் இந்த இணையப்பக்கம் கண்ணில் பட்டது. இதில் தற்செயலாகத் தேடிப்பார்த்தபோது, சீமானின் திருமணம் என்னும் தலைப்பு சட்டென்று ஈர்த்தது. ஆகவே, அதைப் பதிவிறக்கிப் படித்தேன். 

நாவலின் மையப்பாத்திரமான மனிதர் இருபது வருடங்களுக்கு முன்னர் தனது வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை விவரிக்கிறார். அவர் வாழ்வில் வந்து, அவரை மகிழ்ச்சிப்படுத்திவிட்டு வேறோர் இளைஞருடன் சென்றுவிட்ட இளம் கைம்பெண் ஒருவரது ஞாபகத்திலிருந்து விடுபட ரஷ்யாவை விட்டு விலகி ஜெர்மனியின் ரைன் நதிக்கரையில் ஓர் சிற்றூரில், தனிவீடு ஒன்றில் வாழ்ந்துவருகிறார். அந்த ஊருக்கு சா... என்று மட்டும் பெயரிடுகிறார். இப்படித்தான் நாவல் தொடங்குகிறது. நிலக் காட்சிகளின் விவரணை அதிகமாக  இடம்பெற்றிருக்கிறது. நிலா, நதி, நாடு, மக்கள் என நாவலின் விவரணை வாசிப்பவர்களைக் கதைசொல்லியின் நிலத்துக்கு அழைத்துச் சென்றுவிடுகிறது.

இவான் துர்கநேவ்
அந்தச் சிற்றூர் மலையடிவாரத்தில் அமைந்திருக்கிறது. ஊரில் எலுமிச்சை மரங்கள் நிறைந்திருக்கின்றன. நதியின் மேலமைந்திருக்கும் பாலங்கள் என அந்த ஊரை வார்த்தைகளால் வடித்துவிடுகிறார். ரைன் நதிக்கரையின் ஓரத்தில் பன்னீர் மரத்தடியில் கிடக்கும் கல்லாசனத்தில் அமர்ந்து தன் வாழ்வில் வந்துபோன அந்தக் கைம்பெண் குறித்த நினைவுகளில் மூழ்கிக் கிடந்த அவனை (இளைஞன் தானே அதனால் அவன் என்றே குறிக்கிறேன்) ஒரு நாள் நதியின் எதிர்க்கரையிலிருந்த ஓர் இசை சப்தம் இழுக்கிறது. தன்னை நோக்கி ஒரு துயரம் இசையாக வந்துகொண்டிருக்கிறது என்பது அந்த இளைஞனுக்குத் தெரியாது. இசை மயக்கத்தில் அவன் ல என்னும் அந்த நகரத்துக்குச் செல்கிறான். 

அங்கே அவனுக்கு ரஷ்யாவைச் சேர்ந்த காகின் என்பவனும் அவனுடைய தங்கையான ஆஸ்யாவும் அறிமுகமாகிறார்கள். ஆஸ்யா அவனை ஈர்க்கிறாள். ஆஸ்யாவைத் தங்கை என அறிமுகப்படுத்துகிறான் காகின், ஆனால், இளைஞனுக்கு அவர்களிடையே சகோதர உறவு இல்லை என்று படுகிறது. தொடர்ந்து அவர்கள் வசிக்கும் வீட்டுக்கும் செல்கிறான். காகின் ஓர் ஓவியன். ஆஸ்யா ஒரு தனவந்தருக்கும் அவருடைய வீட்டின் பணிப்பெண்ணும் பிறந்தவர். இவர்கள் மூவருக்கும் நட்பு தொடர்கிறது. ஆஸ்யாவுக்கும் காகினுக்கும் என்ன உறவு அண்ணன் தங்கை தானா, இளைஞனுக்கு ஆஸ்யாவுடன் ஏற்பட்ட ஈர்ப்பு என்ன ஆனது என்பதை எல்லாம் நாவல் விவரிக்கிறது. 

இந்த நாவல் துர்கநேவ் வாழ்வில் நடந்த சம்பவங்களின் அடிப்படையிலான நாவல் என்கிறார்கள். நாவலில் மன உணர்வுகளையே துர்கநேவ் தொடர்ந்து விவரிக்கிறார். ஒரு வகையில் இது ஒரு நிறைவேறாக் காதலையே கொண்டிருக்கிறது. ஆண் பெண் உறவின் சிக்கலைத் தான் உலகின் பெரிய பெரிய படைப்பாளிகள் கைக்கொள்கிறார்கள். ஆனாலும், அது தீர்ந்தபாடில்லை. உறவுச் சிக்கல் தீரத்தான் வாய்ப்பே இல்லையே. ஆஸ்யாவின் உருவ சித்தரிப்பைவிட அவளது மனநிலை மாற்றங்களைப் பற்றிய விவரங்களே நாவலின் முதன்மையான சித்தரிப்புகளாகியிருக்கின்றன. அவள் பதினேழு வயது நிரம்பியவள். சிறுமியா பெண்ணா எனக் குழம்பவைக்கும் பருவத்தைக் கொண்டிருக்கிறாள். பெண் மனம் எப்படியெல்லாம் ஆணால் உந்தப்படுகிறது, அதனால் என்ன பாடு படுகிறது என்பதையெல்லாம் துர்கனேவ் விவரித்துக்கொண்டே போகிறார். 


நாவல் என்று சொன்னபோதும், இது நூறு பக்கங்களுக்குள் அடங்கிவிடுகிறது. ரைன் நதியோட்டம் போன்ற இயல்பான நடையைக் கொண்டிருக்கிறது நாவல். வாசிப்பு சுகம், இலக்கிய இன்பம் என்றெல்லாம் சொல்கிறார்களே அவற்றைத் தேடுபவர்களுக்கான நாவல் இது. 1857இல் எழுதப்பட்ட நாவல் இது என்பதால் அந்தக் காலகட்டத்தில் ஓவியங்களும் எழுத்துகளுமே மனிதர்களை அவர்களது வாழ்க்கையை வெளியுலகுக்கு வெளிப்படுத்திக்கொண்டிருந்தன என்பதை ஞாபகம் வைத்துக்கொண்டு வாசிக்க வேண்டியதுள்ளது. ஆனால், நாவலின் மனவோட்டங்கள் இன்றுவரை மாறவில்லை. மனிதரின் அகச் சிக்கல் பெரிய அளவில் மாறவில்லை என்பதையே உணர முடிகிறது. இன்றும் ஆணுக்கும் பெண்ணுக்குமான உறவில் ஏற்படும் சிக்கலைத் தான் கையாள முடியாமல் மனிதர்கள் தவிக்கிறார்கள். அகத்தில் உருண்டு திரண்டு வரும் அன்பை அவ்வளவு எளிதில் வெளிப்படுத்த இயலாமல் மனிதர்களை எது தடுக்கிறது? பறிபோனபின் பரிதவிக்கும் மனிதர்கள் படும்பாட்டை இலக்கியங்கள் காலாகாலத்துக்கும் சொல்லிக்கொண்டே இருக்கின்றன. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

லேட்டஸ்ட்

ஒரு விக்ரம் பத்து கமல்ஹாசன்

தொடர்பவர்