இந்த வலைப்பதிவில் தேடு

அஜித் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அஜித் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், மே 20, 2025

ஒரு விக்ரம் பத்து கமல்ஹாசன்

வர வர தமிழ்ப் படங்கள் பார்க்கும் ஆசையே விட்டுப்போய்விடும்போல. ஏற்கெனவே கொரோனா காலத்துக்குப் பிறகு தியேட்டரில் போய் படம் பார்க்கும் பழக்கம் கிட்டத்தட்ட போய்விட்டது. 2023 ஆம் ஆண்டில் தியேட்டரில் இரண்டு படங்கள் பார்த்தேன். அதில் ஒன்று தமிழ்ப் படம். அது உதயநிதி நடித்து மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன். படம் சுமார் ரகம். அடுத்த ஆண்டான கடந்த ஆண்டில் அதாவது 2024இல் இவ்வளவுக்கு விளக்கம் எழுதுவதற்குப் பதில் 2024இல் என்றே எழுதியிருக்கலாம். சரி விடுங்கள் எழுதியாயிற்று இருந்துவிட்டுப் போகட்டும். 

2024இல் தியேட்டரில் பார்த்த ஒரே படம் லப்பர் பந்து. அந்தப் படத்தைப் பார்த்தபோது, முள்ளும் மலரும் படம் நினைவில் எழுந்தது. அதே கருதான். அதில் அண்ணன் தங்கை. இதில் அப்பா மகள். கிரிக்கெட் அது இதுன்னு படம் போரடிக்காமல் போனது என்றபோதும், புதிதாக படத்தில் ஒன்றுமில்லை என்ன எண்ணமே வந்தது. படத்தில் ஒரே காதல் சோகப் பாடலில் அப்பா மகள் இருவரையும் கொண்டு காட்சி அமைத்திருந்தது மட்டுமே புதுமையாக இருந்தது. 

இந்த ஆண்டில் இதுவரை பார்த்த எந்தத் தமிழ்ப் படமும் பெரிதாக ஈர்ப்புக்குரியதாக இல்லை. அதுவும் இப்போது தியேட்டருக்குச் செல்வதே இல்லை. படம் வெளியான நான்கு வாரத்தில் படம் ஓடிடியில் வந்துவிடுகிறது. ஆகவே, வீட்டிலிருந்தே படத்தைப் பார்த்துவிட முடிகிறது. தியேட்டருக்குச் செல்வதே தேவையில்லாத ஆணியாகிவிட்டது. முந்தைய வாக்கியத்தில் தேவையில்லாத ஆணி என்னும் பயன்பாட்டைப் போலவே முழுப் படத்திலும் வசனம் இடம்பெற்றிருந்த படம் அஜித் குமார் நடித்த   Good Bad Ugly. படம் Good ஆக இல்லாவிட்டாலும் Bad ஆகவாவது இருந்திருக்கலாம். ஆனால், Ugly ஆக இருந்தது. 

படம் முழுக்க அண்ணன் யார் தெரியுமா அண்ணன் யாரு தெரியுமான்னு உதார் இருந்துகிட்டே இருக்கு. படத்துலயோ ஒரு சரக்கும் இல்ல. எந்தத் தைரியத்துல இப்படியெல்லாம் படம் எடுக்குறாங்கன்னுதான் தோணுச்சு. ஜெயில் காமெடி குரு சிஷ்யன் படத்துல ஏற்கெனவே பார்த்துட்டோம். நாயகி வில்லன்களை நொறுக்கச் சொல்லும் காட்சி நல்லவனுக்கு நல்லவன் படத்திலேயே பார்த்துவிட்டோம். படம் முழுக்க கலர் கலரா ட்ரெஸ் போட்டுட்டு ஸ்டைலா வலம் வர்றாரு அஜித். அதுதான் நடிப்புன்னா அஜித்தோட நடிப்பு பிரமாதம்னு சொல்லணும். 

சரி இதுதான் இந்த லட்சணம்னு டூரிஸ்ட் ஃபேமிலி படம் நல்லாருக்கும்னு எல்லாரும் சொல்றாங்களேன்னு அதப் பார்க்க உட்கார்ந்தா அது அதுக்கு மேல. கொலையா கொல்றாய்ங்க. முன்னாடி தொலைக்காட்சியில செவ்வாய்க்கிழமை நாடகம் வருமே அது மாதிரியான மாடர்ன் ட்யூஸ்டே டிராமா. நெஞ்சை அநியாயத்துக்கு நக்கி நக்கி தோல உரிச்சு தொங்கவிட்டுட்டாங்க. படம் நல்லா இல்லன்னு சொன்னா நமக்கு மனிதநேயமே இல்லன்னு குரூரமா சொல்வாங்க. ஆனா, படம் நல்லாவே இல்லன்னு கூசாம சொல்லலாம். அந்தச் சின்ன பையன் மட்டும் படத்துல ஆறுதல். அதுவும் இல்லாட்டி சூர மொக்கைன்னு துணிஞ்சு சொல்லலாம். 

விக்ரம் நடித்த வீர தீர சூரன் நல்ல கமர்ஸியல் படம். நீட்டான திரைக்கதை. படம் எந்தத் தொய்வும் இல்லாம இருந்துச்சு. நடிகர் விக்ரமை எல்லை மீறாமல் வரையறைக்குள் வைத்து படத்தை எடுத்த விதத்துக்கே இயக்குநருக்கு ஒரு சபாஷ் சொல்லணும். ஏனெனில், அண்மைக்காலத்தில் நடிகர் விக்ரம் திரையில் பத்து கமலஹாசனா பரிணாமம் எடுக்கிறார். தாங்க முடியல. ஆனால், இந்தப் படத்தில் அவருடைய நடிப்பு இயல்பானது. எந்தவிதமான மிகையும் இல்லாமல் அப்படியே மலர்ந்த அதிகாலைபோல் உறுத்தலின்றி இருந்தது. இதுவும் நடிப்புதான் சார். இப்படி நடிச்சா போதும், தங்கலான் மாதிரி அநியாயத்துக்கு நடிச்சா ரசிகர்கள் பாவம் இல்லயா? கொஞ்சம் அவங்க நிலைமையையும் யோசிச்சுப் பாருங்க. வெளியில தொல்லை தாங்க முடியாம தியேட்டருக்கு வர்ற அவன ரத்தம் கக்க வைக்கிறது நல்லாவா இருக்கு?  விக்ரம் நடிச்ச இந்தப் படம் சரியா ஓடல்லன்னு சொல்றாங்க. ஏற்கெனவே முன்னாடி அவர் நடிச்ச மஜா படமும் அப்படித்தான். நல்லா இருந்துச்சு ஆனா படம் ஓடல. அவர் நடிச்ச சாமி, தூள் மாதிரி கரம் மசாலாதான் ரசிகருக்குப் பிடிக்குது போல.

செவ்வாய், நவம்பர் 28, 2023

நம்பிக்கைக்குரியவர்களா தமிழின் அடுத்த தலைமுறை இயக்குநர்கள்?



கொரொனா பெருந்தொற்று காரணமாகத் தமிழ்நாட்டில் தியேட்டர்கள் முடங்கிப்போயிருந்த நிலைமை சற்றே மாறத் தொடங்கியிருக்கிறது. அண்மையில் வெளியான, சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம் திரையரங்குகளில் வசூலைக் குவிக்கிறது என்கிறார்கள். இதனால் இந்தப் படத்தின் இயக்குநர் நெல்சன் திலிப்குமாருடைய சந்தை மதிப்பும் கூடியிருக்கிறது. ஏனெனில், சிவகார்த்திகேயனின் சமீபத்திய படங்கள் பெரிய வெற்றியைக் கொடுக்காத நிலையில் அவருக்கு நம்பிக்கையூட்டிய இயக்குநராக மாறியிருக்கிறார் நெல்சன். சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தையும் அவர் இயக்கப்போவதாகத் தகவல்கள் வருகின்றன.

ஏற்கெனவே நடிகர் விஜயின் பீஸ்ட் படத்தை அவர் இயக்கிவருகிறார். 2018இல் வெளியான கோலமாவு கோகிலா என்ற சராசரியான பொழுதுபோக்குப் படத்தின் மூலம் அவர் இயக்குநராக அறிமுகமானார். தமிழ்த் திரையுலகில் அடுத்த தலைமுறை இயக்குநர்கள் காலூன்றத் தொடங்கிவிட்டார்கள் என்பதன் அறிகுறியாக நெல்சன் போன்ற சமீப கால இயக்குநர்களின் வெற்றியைப் பார்க்க முடிகிறது. கடந்த சில ஆண்டுகளில் வெளியான படங்களில் கவனத்தை ஈர்த்த இயக்குநர்கள் பற்றிய விவரத்தை அறியும்போது ஒரு சுவாரசியமான விஷயம் பளிச்சிடுகிறது. இதுவரை தமிழ்த் திரையுலகில் பெயர் வாங்கிய இயக்குநர்களைப் பார்த்தீர்கள் என்றால், அவர்கள் வெறும் வணிகப் படங்களை மட்டும் இயக்கியவர்களாக இருக்க மாட்டார்கள்.

பாரதிராஜா காலம் தொடங்கி வெற்றிமாறன், பா.இரஞ்சித் காலம்வரை இதுதான் நியதி. இந்தப் போக்கில் சிறிய மாற்றம் தென்படுகிறது. அதன் அறிகுறியாலேயே நெல்சன் போன்ற பொழுதுபோக்குப்படத்தை இயக்கியவர்களும் இயக்குநர்கள் என்னும் பெயரில் அறியப்படுகிறார்கள். தொண்ணூறுகளில் மணிரத்னம், ஷங்கர் போன்ற இயக்குநர்கள் படங்களை இயக்கத் தொடங்கிய காலத்து நிலைமைக்கும் இப்போதைய நிலைமைக்கும் ஒரு பெரிய வேறுபாடு இருக்கிறது. அதற்கு முந்தைய எண்பதுகளில் காலத்தில் எஸ்பி.முத்துராமனும் இயக்குநராக இருந்தார்; மகேந்திரனும் இயக்குநராக இருந்தார். ஆனால், இருவருக்குமிடையேயான வேறுபாடு இருந்துகொண்டுதான் இருந்தது.

புவனா ஒரு கேள்விக் குறி, ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது, எங்கேயோ கேட்ட குரல் போன்ற மாறுபட்ட கதையம்சம் கொண்ட படங்களை இயக்கியவராக எஸ்பி.முத்துராமன் இருந்தபோதும், அவர் சகலகலா வல்லவன், முரட்டுக்காளை போன்ற பொழுதுபோக்குப் படங்களாலேயே அதிகம் அறியப்பட்டிருந்தார். ஆனால், உதிரிப்பூக்கள் மகேந்திரனுக்குத் திரையுலகில் கிடைத்த இடம் வேறு மாதிரியானது. அவர் ஜானி போன்ற வணிகச் சூத்திரத்தின் அடிப்படையிலான படத்தை இயக்கியபோதும், அது மகேந்திரனின் முத்திரையுடன் அமைந்திருந்தது. அதுதான் இயக்குநரின் ஆற்றலுக்கும் ஆதிக்கத்துக்கும் சான்று. மகேந்திரனும் எஸ்பி முத்துராமனும் இணைந்தும் ஆடுபுலி ஆட்டம், தையல்காரன் போன்ற படங்களில் பணியாற்றியிருக்கிறார்கள். ஆனாலும் இருவருக்கும் இடையே இருந்த வேறுபாடு தெளிவாக வெளித் தெரிந்தது.

தொண்ணூறுகளில்கூட ஷங்கர் ஆக்‌ஷன், காமெடி கலந்த பொழுதுபோக்குப் படங்களால்தான் அதிகம் அறியப்பட்டார், ஆனால் மணி ரத்னத்துக்கு அளிக்கப்பட்ட இடம் வெறும் ஆக்‌ஷன், பொழுதுபோக்கு இயக்குநருக்கானதில்லை. இப்போதைய திரைப்பட இயக்குநர்களின் பயணத்தில் இப்படியான இடைவெளி சுத்தமாக அழிந்துவருகிறதோ என்ற எண்ணமே ஏற்படுகிறது. கலைப் படம், வணிகப் படம் என்ற இடைவெளி இப்போது இல்லை. இவை இரண்டும் கலந்த படமாக அது மாறியிருக்கிறது. ஆழமான கதையம்சம் கொண்ட படம் காலாவதியாகிவிட்டதோ என்னும் அளவுக்குத் தமிழ்த் திரைப்படங்களில் திரைக்கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் போன்ற மாறுபட்ட திரைக்கதை வருகிறது ஆனாலும், பாக்யராஜ் அளவுக்குத் தெளிவான திரைக்கதையை எழுதும் இயக்குநர்கள் இப்போது யார் என்பதைத் தேடித்தான் பார்க்க வேண்டியதிருக்கிறது.

பாலுமகேந்திராவின் சீடரான பாலா இயக்க வந்தபோது, பொழுதுபோக்குப் படத்துக்கும் தீவிரப் படத்துக்குமான இடைவெளி குறையத் தொடங்கியது. சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள் எனத் தொடர்ந்து அவர் உருவாக்கிய அனைத்துப் படங்களும் பொழுதுபோக்குக் கதையம்சத்துடன் உருவாக்கப்பட்டிருந்தாலும் அவருடைய படங்கள் மாற்றுப்படங்கள் என்ற மயக்கத்திலேயே மதிப்பிடப்படும்.அவன் இவன் போன்ற சராசரிக்கும் கீழான படங்கள் கூட பாலா படம் என்ற மதிப்புடன் அணுகப்பட்டன. பாலுமகேந்திராவின் மற்றொரு சீடரான வெற்றிமாறன் பொழுதுபோக்குப் படங்களைக் கலாபூர்வமான முறையில் உருவாக்கும் இயக்குநராக இருக்கிறார். 

இவருக்கும் அடுத்த தலைமுறை இயக்குநர்கள்தாம் இப்போது உருவாகிவருகிறார்கள். இவர்களை முந்தைய தலை முறையிலிருந்து வேறுபடுத்துவது அவர்களது பின்னணியும் படங்களை உருவாக்கும் முறையும். ஓர் இயக்குநரிடம் உதவி இயக்குநராகப் பல ஆண்டுகள் இருந்து பிறகு படம் இயக்க வந்தவர்கள் அல்ல இவர்கள். நெல்சனையே எடுத்துக்கொண்டால், அவர் விஷுவல் கம்யூனிகேஷன் முடித்துவிட்டு தொலைக் காட்சியில் ரியாலிட்டி ஷோவில் பணியாற்றி அப்படியே சினிமாவுக்கு வந்திருக்கிறார். எண்பதுகளின் மத்தியில் ஊமைவிழிகள் திரைப்பட வெற்றியைத் தொடர்ந்து திரைப்படக் கல்லூரியில் படித்துமுடித்த மாணவர்கள் பலர் திரைத் துறையில் காலடி பதித்தார்கள். அதைப் போல் இப்போது விஷுவல் கம்யூனிகேஷன் முடித்து திரைத்துறைக்கு வருபவர்கள் அநேகர்.

சமீப ஆண்டுகளில் முதல் படத்தை இயக்கி, கவனிக்கத் தக்க அளவில் பெயரைப் பெற்றவர்கள் என துருவங்கள் பதினாறு கார்த்திக் நரேன், சதுரங்க வேட்டை வினோத், இரும்புத்திரை பி. எஸ். மித்ரன், உறியடி விஜய குமார், கிடாரி பிரசாத் முருகேசன், மாநகரம் லோகேஷ் கனகராஜ், பாம்புச் சட்டை ஆடம் தாசன், எட்டுத் தோட்டாக்கள் ஸ்ரீகணேஷ், ஒரு கிடாயின் கருணை மனு சுரேஷ் சங்கையா, புரியாத புதிர், இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் ரஞ்சித் ஜெயக்கொடி, அறம் மீஞ்சூர் கோபி, பரியேறும் பெருமாள் மாரி செல்வராஜ், ராட்சசன் ராம் குமார், 96 பிரேம் குமார், ஜீவி வி ஜே கோபிநாத், க/பெ ரணசிங்கம் பி விருமாண்டி எனச் சிலரைக் குறிப்பிடலாம். சிலர் விடுபட்டிருக்கக்கூடும். இவர்களில் தொடர்ந்து ஒரு படத்துக்கு மேல் படங்களை இயக்கியவர்கள் எனப் பார்க்கும்போது, பலர் பட்டியலிலிருந்து விலகிவிடுகிறார்கள். இருட்டு அறையில் முரட்டுக் குத்து சந்தோஷ் பி ஜெயகுமார், திரௌபதி மோகன் ஜி ஆகியோர்களும் இதே தமிழ்த் திரையுலகில் இயக்குநர்கள் என அறிப்பட்டிருப்பது நகைமுரணே.

மிக இளைய வயதில் இயக்குநராகிவிட்ட கார்த்திக் நரேன் துருவங்கள் பதினாறு மூலம் கவனம் பெற்றிருந்தார் என்றபோதும் அந்தப் படம் மிகவும் சாதாரண த்ரில்லர் வகையைச் சார்ந்ததே. அதன் பின்னர் அவர் இயக்கிய மாஃபியா மிகவும் சுமாரான படமே. இரும்புத் திரையில் புதுமையாக இயக்குநராக வெளிப்பட்ட மித்ரன், ஹீரோ படத்தில் மிகச் சாதாரண இயக்குநராக மாறியிருந்தார். உறியடி வழக்கத்திலிருந்து சற்று மாறுபட்ட படம் என்ற அளவில் பொருள்கொள்ளத்தக்கதே தவிர உறியடி 1, 2 ஆகிய படங்களை வைத்து அவர் பிரமாதமான இயக்குநர் என்று சொல்லிவிட முடியாது. இயக்குநர் என்ற வகையில் மதிப்பிடும்போது, லோகேஷ் கனகராஜின் மாநகரம் ஈர்த்த அளவுக்கு அவருடைய கைதியோ மாஸ்டரோ ஈர்க்கவில்லை. ரஞ்சித் ஜெயக்கொடியின் இரண்டு படங்களுமே மாறுபட்டவைதாம். முதல் படமான புரியாத புதிர் கிம் கி டுக்கின் பியட்டா படத்தை நினைவூட்டியது.

இயக்குநராகச் சொல்லிக்கொள்ளும்படியான படங்களைத் தரும் முனைப்பு அவருக்கு உள்ளது என்பதை அவருடைய படங்கள் சொல்கின்றன. பிரசாத் முருகேசன், ஆடம் தாசன், சுரேஷ் சங்கையா, பி.விருமாண்டி ஆகியோரது அடுத்தடுத்த படம் வெளிவரும்போதுதான் அவர்கள் எப்படி இயக்குநராகப் பரிணமிக்கிறார்கள் என்பதைச் சீர்தூக்கிப் பார்க்க இயலும். ராம் குமார் இயக்கிய ராட்சசன் பெரிய வெற்றியைப் பெற்றது என்றபோதும், அந்தப் படத்தை அவர் கையாண்டவகையில் வெற்றிபெற்ற படத்தின் இயக்குநர் என்று அவரைச் சொல்ல முடிகிறதே ஒழிய வெற்றிகரமான இயக்குநர் என்று சொல்ல முடியவில்லை.

96 வழக்கமான காதலை வழக்கத்துக்கு மாறாகச் சொன்ன படம். ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு காதல் படம் ரசிகர்களுக்குத் தேவையாயிருக்கிறது. ஒரு தலை ராகம், இதயம், காதல் கோட்டை, ஆட்டோ கிராப் வரிசையில் 96 இடம்பெற்றிருக்கிறது. அவ்வளவுதான். பிரேம் குமார் சிறப்பான இயக்குநராக என்பதைச் சொல்தல் கடினம். தொடர்ந்து இரண்டு படங்களையும் நம்பிக்கை ஊட்டும் வகையில் தந்திருக்கிறார் மாரி செல்வராஜ். ஆகவே, அவர் மீது நம்பிக்கைகொள்ள முடிகிறது. தனது மூன்று படங்களிலும் சொல்லிக்கொள்ளும்படியான ஆளுமையைச் செலுத்தியவர் என ஹெச். வினோத் இருக்கிறார். சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை என ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையாக இருந்தது. அடுத்து அஜித்தின் வலிமையை இயக்கிவருகிறார். தொடர்ந்து ஓர் இயக்குநராக அவர் சாதித்திருக்கிறார் என்று நம்புவதற்கான சான்றுகள் இப்படங்கள்.

இயக்குநர் சிகரம் என்ற பெயரை பாலசந்தருக்குக் கொடுத்து தமிழ்த் திரையுயலகம் கௌரவித்திருக்கிறது. ஆனால், அவரைவிட சினிமாவை ஒழுங்காகக் கையாண்டு வெற்றிபெற்றவர் என ஸ்ரீதரைத் தான் சொல்ல முடியும். அவர் பொழுதுபோக்குப் படங்களை இயக்கியவர் என்ற வகையில் அறியப்பட்டிருந்த போதும் சினிமாவை சினிமாவாக உருவாக்கியவர் அவர். இப்போதைய இயக்குநர்களில் ஒரு ஸ்ரீதரோ, பாலசந்தரோ பாரதிராஜாவோ பாலுமகேந்திராவோ உருவாவார்களா என்பது சந்தேகமே. வேண்டுமானால், ஒரு ஷங்கரோ, மணிரத்னமோ உருவாகலாம். ஏனெனில், காலம் பெரிய அளவில் மாறியிருக்கிறது. அதற்கேற்பத் தான் இயக்குநர்களும் வெளிப்படுவார்கள்.

தமிழ் இதழ்களில் முன்னர் பொழுதுபோக்கு இதழ்கள், தீவிர இலக்கிய இதழ்கள் என்ற வேறுபாடு பெரிய அளவில் இருந்தது. இப்போது அப்படியான வேறுபாடு அழிந்துவிட்டது. தீவிர இலக்கிய இதழ்களில் எழுதிய பலர் பொழுதுபோக்கு இதழ்களில் பணியாற்றத் தொடங்கிய பின்னர் ஏற்பட்ட மாற்றம் இது. அது போல் தமிழ் சினிமாவின் இயக்கத்திலும் ஒரு புதிய பரிணாம வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. புத்தாயிரத்தின் நவீன இளைஞர்கள் திரைத்துறையில் புகுந்திருக்கிறார்கள். அவர்கள் உலகப் படங்களையும் இணையத் தொடர்களையும் பார்த்த மயக்கத்தில் படமெடுக்க வந்திருக்கிறார்கள். அது அவர்களுடைய படங்களில் வெளிப்படுகிறது. தொழில்நுட்பம் அவர்களுக்குக் கைகொடுக்கிறது.

மேலும், அந்தக் கால இயக்குநர்களுக்குக் குறைந்தபட்சம் பத்து ஆண்டுகள் அவர்கள் இயக்குநராகக் கோலோச்ச கால அவகாசம் இருந்தது. ஆனால், இப்போது படம் இயக்கும் இயக்குநர்களுக்கு அந்தக் கால அவகாசம் இல்லை என்பது வெளிப்படையான விஷயம். இரண்டு மூன்று படங்கள் இயக்கிய பிறகே அவர்களைத் தேடத் தான் வேண்டியதிருக்கிறது. அதற்குள் அவர்கள் பணத்தைச் சம்பாதிப்பார்களா, பெயரைச் சம்பாதிப்பார்களா என்னும் கேள்விக்குக் காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

இன்மதி இணையதளத்தில் 2021 அக்டோபர் 16 அன்று வெளியான கட்டுரை.  

வெள்ளி, ஏப்ரல் 09, 2021

ஒரு சைக்கிள் ஒரு மாஸ்க் பல குறிப்புகள்


தமிழ்நாட்டின் 16ஆம் சட்டப்பேரவைக்கான தேர்தல் 2021 ஏப்ரல் ஆறு அன்று ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. பெரிய அளவிலான வன்முறைச் சம்பவம் எதுவுமின்றி இந்தத் தேர்தல் அமைதியாகவே நடந்துமுடிந்துள்ளது.  இதுவரை காலை ஏழு மணி முதல் மாலை ஆறு மணிவரையே வாக்குப்பதிவு நடத்தப்பட்டு வந்தது. இம்முறை முதன்முறையாக வாக்குப்பதிவு இரவு ஏழு மணி வரை நடத்தப்பட்டது. மாலை ஆறு மணி முதல் இரவு ஏழு மணி வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வந்து வாக்களிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது. திமுகவின் எம்பி கனிமொழி பாதுகாப்பு உடை அணிந்து வாக்களித்தார். மொத்தம் 72.78 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. காலையில் நடைபெற்ற வேகத்தைப் பார்த்தால் எண்பது சதவீதம் பதிவாகும்போல இருந்தது. ஆனால், மதியத்துக்கு மேல் சிறிது மந்த கதியாகிவிட்டது. ஆகவே, கடந்த முறையைவிடச் சற்றுக் குறைவாகவே வாக்குப்பதிவு நடந்துள்ளது. 



இந்தத் தேர்தலில் கட்சி தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட ரஜினி காந்த் கட்சி தொடங்கவில்லை. ஆனால், வழக்கம்போல் வந்து வாக்களித்துவிட்டார். ஊடகங்களின் கவனம் இந்த முறை ரஜினி மேல் இருக்கவில்லை. சட்டப்பேரவைத் தேர்தலில் முதன்முறையாகப் போட்டியிடும் கமல்ஹாசன் தன் மகள்களுடன் வந்து வாக்களித்தார். மு க ஸ்டாலின் குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன் பேரனைத் தூக்கியபடி வந்து வாக்களித்தார்.  


நடிகர் விஜயும் அஜீத்தும் ஊடகக் கவனத்தை ஈர்த்துவிட்டார்கள். நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தார். அதுவும் அவரது சைக்கிளில் கறுப்பு சிவப்பு வண்ணமிருந்தது பெரிய அளவில் பேசப்பட்டது. அதே போல் அஜித் அணிந்து வந்திருந்த முகக்கவசம் கறுப்பு வண்ணத்தில் சிவப்பு பட்டையால் இணைக்கப்பட்டிருந்தது. இதுவும் பேசுபொருளானது. இருவருமே ஆளும் தரப்புக்கு எதிரான மனநிலையை வெளிப்படுத்தினார்கள் என்று சமூக ஊடகங்களில் பலரும் எழுதினார்கள். ஆனால், வாக்குச்சாவடி காரில் வருவதற்கு ஏதுவான சூழலில் இல்லாததால் விஜய் சைக்கிளில் வந்தார் என்று விஜயின் பிஆர்ஓ தெரிவித்தார். ஆனால், அஜித்திடமிருந்து எந்த விளக்கமும் வரவில்லை. வாக்குச்சாவடியில் தன்னுடன் செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகர் ஒருவரின் மொபைல் போனைப் பிடுங்கினார் அஜித். பின்னர் அவரிடம் போனைக் கொடுத்துவிட்டு வருத்தமும் தெரிவித்தார். 


1952ஆம் ஆண்டு தேர்தல் முதல் இந்தத் தேர்தல்வரை வாக்களித்த மாரப்ப கவுண்டர் என்னும் தனிமனிதர் ஊடகத்தில் இடம்பிடித்தார். வாக்காளர் ஒருவர் சேலத்தில் மயங்கிவிழுந்து உயிரிழந்தார். வழக்கம்போல் இம்முறையும் சென்னையில் குறைந்த அளவிலான வாக்குப்பதிவே நடந்துள்ளது. படித்தவர்கள் மத்தியில் வாக்களிக்கும் ஆர்வமில்லை என்று பொதுவாகப் பேசப்பட்டது. யாருக்கு வாக்களித்து என்ன பண்ண என்னும் மனநிலையில் அவர்கள் இருக்கிறார்களோ என்னவோ? அடித்தட்டு மக்கள் உற்சாகத்துடன் வந்து வாக்களித்தார்கள். 


தேர்தலில் பதிவான வாக்குகளை வைத்து ஒரு முடிவுக்கும் வர இயலவில்லை. 2016இல் வாக்குப்பதிவு சதவீதம் 74.81. ஆனால் இப்போது அதைவிட குறைவான சதவீதத்தினரே வாக்களித்திருக்கிறார்கள். கொரோனா காலத்திலும் இவ்வளவு பேர் வாக்களித்திருப்பது ஆரோக்கியமான செய்தியே. 2011ஆம் ஆண்டு தேர்தலில் 78.29 சதவீத வாக்குப்பதிவு நடந்திருந்தது. இதுவரையான தேர்தல்களில் அதிக வாக்குப்பதிவு இதுவே. அப்போது ஆண்ட கட்சியான திமுகவுக்கு எதிராகத் தேர்தலின்போது பெரிய அலை வீசியது. மிகக் குறைவான வாக்குப்பதிவு நடந்தது 1957இல். அந்த ஒரு முறைதான் ஐம்பது சதவீதத்துக்கும் கீழே வாக்குப்பதிவு சென்றுள்ளது. வாக்குப்பதிவு சதவீதம் 46.75 ஆக இருந்தது. ஆட்சிக்கு எதிரான மிகப் பெரிய அலைவீசப்பட்டது எனச் சொல்லப்பட்ட 1996இலேயே 66.95 சதவீத வாக்குப்பதிவுதான் நடைபெற்றிருக்கிறது.


இதுவரை ஆட்சி மாற்றம் நடைபெற்ற எட்டு முறையும் அதாவது, 1967, 1977, 1989, 1991, 1996, 2001, 2006, 2011 ஆகிய ஆண்டுகளில் இந்த வாக்குப் பதிவு அடிப்படையில் பார்த்தால் ஒரு சுவாரசியமான விஷயம் தெரியவருகிறது. கடந்த முறையைவிட அதிகமாக வாக்குப்பதிவு நிகழ்ந்து நான்குமுறையும் (1967, 1996, 2006, 2011), குறைவாக வாக்குப்பதிவு நிகழ்ந்து நான்கு முறையும் (1977, 1989, 1991, 2001) ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. முந்தைய தேர்தலைவிட அதிக வாக்குப்பதிவு நடைபெற்று ஆட்சி மாற்றத்தை மூன்று முறை திமுக பெற்றுள்ளது (1967, 1996, 2006); குறைந்த வாக்குப்பதிவு நடைபெற்று ஆட்சி மாற்றத்தை மூன்று முறை அதிமுக (1977, 1991, 2001) பெற்றுள்ளது. இந்த முறை திமுக வென்று ஆட்சியமைத்துவிடும் என்றுதான் பரவலாகப் பேசப்படுகிறது. ஆனாலும் என்ன நடக்கிறது என்பதைக் காண மே 2 அன்று வரை காத்திருந்துதான் ஆக வேண்டும்.

லேட்டஸ்ட்

அமலா எனும் பொன்மான்

தொடர்பவர்