இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், ஏப்ரல் 29, 2021

ஜீ.முருகன் சிறுகதைகள்: பெருங்கூட்டத்தில் தனிமை கொண்டு திரியும் கதைகள்


சட்டென்று வசீகரித்துவிடுகின்றன ஜீ.முருகனின் சிறுகதைகள். முதலில் அவற்றின் மொழிநடை. முரண்டுபண்ணாமல் உடன் நடக்கும் செல்லக் குழந்தைபோல் அவருக்கு ஒத்துழைக்கிறது மொழி. அடுத்தது, சிறுகதையின் நீளம். அநேகமாக எல்லாக் கதைகளுமே சிக்கனமாகவும் எதை மறைக்க வேண்டும், எதை வெளிப்படுத்த வேண்டும் என்ற தெளிவுடனும் எழுதப்பட்டுள்ளன. ஆழமான சிறுகதைகளுக்கும் நீளமான சிறுகதைகளுக்கும் நிறைய வேறுபாடு உள்ளது என்பதை உணர்த்திவிடுகின்றன இந்தக் கதைகள்.

தொகுப்பை முழுமையாக வாசித்து முடிக்கும்போது, பிரியத்துடன் குழந்தைகளை மடியில் அமர்த்திக் கதை சொல்லும் மூதாட்டியின் நினைவு வந்து செல்கிறது. சக மனிதருடன் உரையாட முருகன் தேர்ந்தெடுத்திருக்கும் வழிமுறையே கதை என்பதாகவே படுகிறது. அவர் பரிமாறுவதற்கு விழையும் அனைத்துக் காரியங்களையும் கதையைச் சாக்காக வைத்துச் சொல்கிறார். கதையையும் சொல்கிறார்; அதன் வழியே உரையாடலையும் நிகழ்த்துகிறார். முன்னது மேலடுக்கில் இருக்க, பின்னது உள்ளடுக்கில் உள்ளது.

மனிதரைக் கிராமத்திலிருந்து நகரத்தை நோக்கி நகர்த்தும் வாழ்வின் துயரம், எல்லாருக்குமானது இயற்கை என்ற எண்ணமின்றித் தமக்கானது உலகம் என வாழும் மனிதரின் அத்து மீறல், ஆண் பெண் உறவில் ஏற்படும் பொருளற்ற சிக்கல், கடவுள் நம்பிக்கை, பொதுவுடைமைத் தத்துவம் எனப் பல விஷயங்கள் குறுக்கீடு நிகழ்த்தும் வாழ்வைப் பொட்டலம் போல் பொதிந்து தந்திருக்கிறார். மானுடத் துயரத்தைத் துயரம் என்ற நிலையிலேயே வைத்துப் பார்க்கிறார்; எழுதுகிறார். அதற்கு அதிகப்படியான சோகச் சாயையைப் பூசவில்லை. ‘வழித்துணை’கதையில் வெளிப்படும் தனிமையுணர்வு மனத்தில் பரவும்போது கதையில் மறைந்த நாயாக மனம் மாறிவிடுகிறது.

தொகுப்பின் கதைகளில் புழுவும் எலியும் நாயும் பூனையும் கழுதையும் யானையும் குரங்கும் குருவியும் பாம்பும் கிளியும் புறாவும் வருகின்றன. தமக்கான வாழ்வை எதிர்கொள்ளும் மனிதர்களும் வருகிறார்கள். ஒவ்வொரு பானையையும் வெவ்வேறு வடிவத்தில் செய்து பார்க்கும் குயவர் போல் வெவ்வேறு வடிவங்களில் கதைகளைச் செய்துபார்த்திருக்கிறார். கற்பனை யான சம்பவங்களும் நிகழ்ந்ததாக நம்பக்கூடிய சம்பவங்களும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து மாய யதார்த்தக் கதைகளாக மாறியிருக்கின்றன.

ஜீ. முருகன்
துடுப்பற்ற படகு கடலின் மேலே சதா அலைவுறுவதுபோல் காமம், மரணம் இரண்டுக்குமிடையே அலைக்கழிக்கப்படும் மனித மனம் அதிலிருந்து வெளியேற ஏதோவொரு வழி தேடி அலைகிறது. அந்த மனத்தின் அலைச்சலை, உளைச்சலை உள்வாங்கி அவற்றைக் கதைகளாக்கி ஆறுதலடைகிறார் முருகன். புணர்ச்சியும் சாவும் இணைந்த புள்ளிகளால் கோலம் போட்டது போல் தொகுப்பு அமைந்திருக்கிறது. பெண்களின் வாழ்க்கையில் ஆண்களாலும் ஆண்களின் வாழ்க்கையில் பெண்களாலும் சிக்கல்கள் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. மனச்சிதைவென்னும் அபாய விளிம்பில் நிற்கும்படியான ஆண்களைப் பல கதைகளில் காண முடிகிறது. தலையணை கட்டிலில் கிடக்கும் கோலமே ஓர் ஆணுக்குப் பெண்ணின் துரோகம் பற்றிய குரோத நினைவைத் தூண்டிவிடும் அளவுக்கு ஆணின் மனத்தில் பெண்ணின் உடம்பு பதற்றத்தை ஏற்படுத்துகிறது.

தனிமையில் அழுதபடியிருக்கிறார் ஒரு தாய். விலக்க முடியாத துயரமாகத் தன் மீது கவிந்து கிடக்கும் நோயுற்ற மகனைத் தூக்கித் திரியும் தாயொருத்தி அவனைப் பிணமாகப் பார்க்கிறாள். குழந்தை சீரழிக்கப்படுவதன் வேதனை தாளாமல் தவிக்கிறான் ஓர் ஓவியன். இப்படிப் பல கதாபாத்திரங்களை வாசகருக்கு நெருக்கமாக்கியிருக்கிறது கதைகளின் கூறுமுறை.

ஒரு வகையில், சமூகத்தின் மூடாக்கை விலக்கிப் பார்க்கின்றன சில கதைகள்; சில கதைகளோ மூடாக்கை விலக்கப் பார்க்கின்றன. பாலியல் உணர்வு ‘காண்டாமிருகம்’ போன்ற கதைகளில் உள்ளாடைகளில் மறைக்கப்பட்டிருக்கிறது; ‘இடம்’, ‘கிழத்தி’ போன்ற கதைகளில் துண்டிக்கப் பட்ட சிற்பத்தின் திமிர்ந்த மார்புபோல் வெளியே விழுந்து கிடக்கிறது. ‘பூனைகள் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்?’ காமம் தொடர்பான நல்ல கதை.

இரட்டை வாழ்வு நடத்தும் தோழர்களை முருகனின் எழுத்து புழுப் புழுவாய் உதிர்த்துவிடுகிறது. ‘புழு’ கதையில் சவக்கிடங்கில் கிடக்கும் பிணங்களை விழித்தெழச் சொல்லும் தோழர் ஒருவரைச் சந்திக்கும்போது, ‘விருந்தோம்ப’லில் தோழர்களைப் பெரிதாகப் பகடி செய்யவில்லை என்றாகிவிடுகிறது. பரந்து விரிந்து கிடக்கும் இந்தப் பூமியில் ஆறுதலாகச் சாய்ந்துகொள்ள எந்தத் தோளுமில்லை என்ற யதார்த்தத்தை உணர்த்தும் இந்தக் கதைகள் அதனாலேயே ஆசுவாசமே தருகின்றன. வாழ்வு குறித்த பொய்யான நம்பிக்கைகளில் வாசகரை அமிழ்த்தும் கதைகள் அல்ல இவை. அசலான வாழ்வில் நகல்கள் பெருத்துவிட்டதைச் சொல்லும் கதைகள்.

‘பாரிச வாயு’ என்னும் கதையில் புறாவைத் தேடி அலைகிறான் கிருஷ்ணன். புறாக்களை எங்கும் காணவில்லையே என்ற பரிதவிப்புடன் தொடங்கும் கதையின் இறுதியில் புறாவை அவன் தேடுவது - தன் நாயின் நோய் தீர்க்க - புறாவின் ரத்தத்துக்காகத்தான் என்பது தெரிகிறது. தாயின் நோய் குறித்த நிலை கதையில் சொல்லப்படவில்லை. ஆனால், இரண்டு புறா வேண்டுமா எனக் கேட்கும்போது, சற்று யோசனை செய்துவிட்டு இப்போதைக்கு ஒன்று போதும் என்று முடிவெடுக்கும்போது அந்தத் தாயின் நிலை வாசகருக்குப் புரிகிறது. இப்படித்தான் பல கதைகளில் சொல்லப்பட்ட வாக்கியங்கள் சொல்லப்படாத சேதிகளை உணர்த்துகின்றன. ‘கவுண்டர் கே’ என்னும் கதை கிட்டத்தட்ட சுய விமர்சனக் கதையைப் போலவே எழுதப்பட்டிருக்கிறது. மொத்தமுள்ள ஐம்பது கதைகளும் பெரும்பாலும் வெவ்வேறானவை. ‘இடம்’ ‘கிழத்தி’, ‘பாரிச வாயு’ ‘வேட்டை’, ‘மஹா விஜயம்’ ‘சத்திரம்’ போல சில கதைகளில் ஒரு தொடர்ச்சி காணப்படுகிறது.

வாழ்வென்னும் புதிரை அவிழ்க்க அவிழ்க்க அது முடிச்சுகளை உருவாக்கிக்கொண்டே போகிறது. அடுப்பங்கரைச் சுவரில் படியும் கரிக் கறைபோல் மனத்தில் படியும் அறிவுக் கறையை இலக்கியம் கொண்டு போக்கும் முயற்சிகளாகவே கதைகளை எழுது கிறார். வாழ்க்கையை அதன் போக்கில் எதிர்கொண்டபோதும், அதன் முரணானது மனத்தை அரிக்கிறது. ஏன், எதற்கு, எப்படி என்ற கேள்விகளை உருவாக்கிக்கொண்டே இருக்கிறது. அப்படிக் கேள்விகள் எழுப்பிக் கொள்ளாதவர்கள் பாக்கியவான் கள். இந்தத் தொகுப்பு அவர்களுக் கானதல்ல. கேள்விகளில் முட்டி மோதிக் குருதி வழிய நிற்கும் மாந்தர்களுக்கான கதைகள் இவை. அந்தக் கேள்விகளை உருவாக்குவதற்கான மேடையாக அல்லது அந்த மேடையில் உரு வான கேள்விகளாக இந்தக் கதைகள் கருக்கொள்கின்றன. ஒரு பெருங்கூட்டத்தில் தனிமை கொண்டு திரியும் இந்தக் கதைகள் தனித்தும் தெரிகின்றன. கதைகளுக்கேற்ற பொருத்தமான அட்டைப்படத்துடன், நல்ல முறையில் நூலை உருவாக்கியிருக்கிறது ஆதி பதிப்பகம். வரிகளின் தொடக்கத்தில் ஒற்றெழுத்து வருவதைத் தவிர்த்திருக்கலாம்.

பக்கங்கள் : 400 விலை : ரூ.320
வெளியீடு:
ஆதி பதிப்பகம்
திருவண்ணாமலை 606806
தொடர்புக்கு: 9994880005

வெள்ளி, ஏப்ரல் 23, 2021

விடுதலை ராகம் பாடும் குயில்கள்

அப்போது எட்டாம் வகுப்பு முழு ஆண்டுத் தேர்வை எழுதிவிட்டு விடுமுறையில் இருந்தேன். அந்தச் சித்திரை வருடப் பிறப்பை ஒட்டி ரஜினி காந்த் நடித்த விடுதலை (1986 ஏப்ரல் 11) திரைப்படம் வெளியானது. திருநெல்வேலி நியூராயல் தியேட்டரில் படத்தை வெளியிட்டிருந்தார்கள். விடுமுறையில் குடும்பத்துடன் பேட்டை செல்லையா அண்ணன் வீட்டுக்குப் போயிருந்தோம். அண்ணன் பேட்டை மில்லில் வேலை பார்த்தார். 

அவர் வீட்டில் ஒரு மேசையில் டேப் ரிக்கார்டர் இருக்கும். எதிரே நாற்காலியைப் போட்டு மேசை டிராயரில் இருக்கும் கேஸட்டுகளில் எதையாவது போட்டுக் கேட்பேன். பெரும்பாலான கேஸட்டுகளில் கம்யூனிஸ்ட் இயக்கப் பாடல்களே இருந்தன. அங்குதான் முதன்முதலில் அந்தப் பாடல்களைக் கேட்டேன். ஏனோ அந்தச் சிறுவயதில் அந்தப் பாடல்களைக் கேட்பது ஈர்ப்புக்குரியதாக இருந்தது. என்னவோ சொர்க்கமே காலடியில் கிடப்பது போன்ற மகிழ்ச்சி ஏற்படும். ஒருநாள் அண்ணன் என்னைப் படத்துக்குக் கூட்டிப்போவதாகக் கூறினார். அப்போது ரஜினி படம் என்றால் சோறு தண்ணிகூடத் தேவைப்பட்டிருக்காத காலம். இப்போது ரஜினி படத்தைப் பார்க்காட்டி உயிர் போகும்னு சொன்னா போகட்டும் என்று விட்டுவிட முடிகிறது. 

என்ன படம் பார்க்க விரும்புகிறாய் என செல்லையா அண்ணன் கேட்டதும், மறுபேச்சின்றி ரஜினி நடித்த விடுதலை படம் பார்க்கலாம் என்று கூறினேன். லீவு முடிந்து ஸ்கூலுக்குப் போனதும் படத்தின் கதையையும் சொல்லலாம்; படம் பார்த்த கதையையும் சொல்லலாம் என்ற ஆசைதான். அண்ணனுடன் புறப்பட்டேன். மணி பதினொன்று கிட்ட ஆகிவிட்டது. மனம் பார்க்கப்போகும் படத்தை எண்ணி பரபரப்பானது. பேட்டை மெயின் ரோட்டில் ஒரு ஹோட்டலுக்குக் கூட்டிட்டுப் போய் கேசரி வாங்கிக் கொடுத்தார்.  ஜம்முன்னு சேரில் உட்கார்ந்து கேசரியைச் சாப்பிடும் கௌரவத்தை அண்ணன் தந்திருந்தார். அது இப்போது நினைத்தால் இனிக்கிறது. ஆனால் அன்று கேசரியைவிட சிங்க நிகர் தலைவன் ரஜினியைப் பார்க்க வேண்டும் என்றுதான் மனம் அலைபாய்ந்தது. ஆகவே, சீக்கிரம் சாப்பிட்டுவிட்டு படத்துக்குப் போக வேண்டும் என்று தான் ஆர்வமாக இருந்தது. 

தென்காசியில் படம் பதினோரு மணிக்கெல்லாம் போட்டுவிடுவார்கள். அதற்குப் பழகியிருந்ததால் நேரமாகிக்கொண்டிருக்கிறதே அண்ணன் மிக நிதானமாக இருக்கிறாரே என்றிருந்தது. கேசரி சாப்பிட்டுவிட்டு ஹோட்டலை விட்டு வெளியே வரும்போதே மணி பதினொன்றரை ஆகிவிட்டது. அய்யய்யோ படம் போட்டுவிடுவானே என்றிருக்கிறது. அண்ணனோ நிதானமாக இருக்கிறார். அவரிடம் சொல்லவும் முடியவில்லை. நம்மையும் ஓர் ஆளாக மதித்து ஒருவர் சினிமாவுக்குக் கூட்டிக்கொண்டு போகிறார். அவரை எப்படி அவசரப்படுத்த முடியும்? 

ஒருவழியாக பஸ் பிடித்து டவுனில் இறங்கினோம். அருகிலேயே தான் ராயல் தியேட்டர். டிக்கெட் எடுத்து அவசர அவசரமா உள்ளே போனா, யார் நீ எனக் கேட்கும் வில்லனிடம் 'நான் கடவுளோட புள்ள' அப்படின்னு ரஜினி சொல்லிட்டிருக்கார். படம் போட்டு ஏழெட்டு நிமிஷமாயிருச்சு. படம் படு மொக்கை. ஆனால் அதையே மீண்டும் தென்காசி பரதனிலும் பார்த்தேன். திருநெல்வேலியில் ஏழெட்டு நிமிஷம் கழிச்சுத்தானே பார்த்தேன். ஆகவே, முதலிலிருந்து தென்காசியில் பார்த்தேன். நாட்டுக்குள்ள நம்ம பத்தி கேட்டுப் பாருங்க பாடல் கேட்கும்போதெல்லாம் சும்மா நரம்பெல்லாம் ஜிவ்வுன்னு இருக்கும்.

சிவாஜியும் ரஜினியும் சேர்ந்து நடித்த படங்களிலேயே படு தோல்வி அடைந்த இந்தப் படம் படு கேவலமான படமும்கூட. சிவாஜி வீரபாண்டிய கட்டபொம்மன் வசனத்தை இந்தப் படத்தில் காக்கி உடையில் சொல்வார். சிவாஜியின் மிகை நடிப்பு அதிகமாக வெளிப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று. ரஜினிக்கு கார் திருடன் பாத்திரம். இந்தப் படத்தில் இடம்பெற்ற கார் சேஸிங் காட்சி அப்போது மிகவும் பிடித்திருந்தது. விஷ்ணுவர்தன் கதாபாத்திரமும் நன்றாக இருக்கும். கே.பாலாஜி தயாரித்திருந்த இந்தப் படத்தில் மாதவி, அனுராதா, விஜய குமார், பேபி ஷாலினி, தேங்காய் சீனிவாசன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கே விஜயன் இயக்கிய படம். சந்திரபோஸ் இசையில் நீலக்குயில்கள் ரெண்டு பாடலும் கேட்பதற்கு இனிமையானது. இந்தியில் வெளியான குர்பானி திரைப்படத்தின் மறு ஆக்கம் விடுதலை.  ஆனால், இந்திப் படம் போல் நன்றாக அமையவில்லை தமிழ்ப் படம் என்பது அப்போதைய ரசிகர்களின் கணிப்பு. இப்போது ராயல் தியேட்டரோ, பரதன் தியேட்டரோ இல்லை என்பதும் நானும் ரஜினி ரசிகனாக இல்லை என்பதும் புரியும்போது, வாழ்க்கை, விடுதலை என்பதற்கெல்லாம் வேறு பொருள்கள் உண்டு என்று தோன்றுகிறது. 

திங்கள், ஏப்ரல் 19, 2021

காதல் வந்தால் சொல்லியனுப்பு


ரஷ்ய எழுத்தாளர்களில் பெரிதும் மதிக்கப்படுபவர்களில் ஒருவரான இவான் துர்கநேவ் 1857இல் எழுதிய குறுநாவல், ஆஸ்யா. இந்தக் குறுநாவலை அல்லது நெடுங்கதையை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கிறார் நா.பாஸ்கரன். நாவலுக்கு மொழிபெயர்ப்பாளர் தந்திருக்கும் தலைப்பு சீமானின் திருமணம். ஸ்டார் பிரசுரம் வெளியிட்டிருக்கும் இந்த நாவல் 1956 அக்டோபரில் முதல் பதிப்பு கண்டிருக்கிறது. இந்த நாவலின் பிடிஎஃப் வடிவம் தமிழ்நாட்டு அரசின் பொது நூலக இயக்ககத்தின் இணையப் பக்கத்தில் கிடைக்கிறது. ஏதோ ஒன்றைத் தேடிக்கொண்டிருந்த வேளையில் இந்த இணையப்பக்கம் கண்ணில் பட்டது. இதில் தற்செயலாகத் தேடிப்பார்த்தபோது, சீமானின் திருமணம் என்னும் தலைப்பு சட்டென்று ஈர்த்தது. ஆகவே, அதைப் பதிவிறக்கிப் படித்தேன். 

நாவலின் மையப்பாத்திரமான மனிதர் இருபது வருடங்களுக்கு முன்னர் தனது வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை விவரிக்கிறார். அவர் வாழ்வில் வந்து, அவரை மகிழ்ச்சிப்படுத்திவிட்டு வேறோர் இளைஞருடன் சென்றுவிட்ட இளம் கைம்பெண் ஒருவரது ஞாபகத்திலிருந்து விடுபட ரஷ்யாவை விட்டு விலகி ஜெர்மனியின் ரைன் நதிக்கரையில் ஓர் சிற்றூரில், தனிவீடு ஒன்றில் வாழ்ந்துவருகிறார். அந்த ஊருக்கு சா... என்று மட்டும் பெயரிடுகிறார். இப்படித்தான் நாவல் தொடங்குகிறது. நிலக் காட்சிகளின் விவரணை அதிகமாக  இடம்பெற்றிருக்கிறது. நிலா, நதி, நாடு, மக்கள் என நாவலின் விவரணை வாசிப்பவர்களைக் கதைசொல்லியின் நிலத்துக்கு அழைத்துச் சென்றுவிடுகிறது.

இவான் துர்கநேவ்
அந்தச் சிற்றூர் மலையடிவாரத்தில் அமைந்திருக்கிறது. ஊரில் எலுமிச்சை மரங்கள் நிறைந்திருக்கின்றன. நதியின் மேலமைந்திருக்கும் பாலங்கள் என அந்த ஊரை வார்த்தைகளால் வடித்துவிடுகிறார். ரைன் நதிக்கரையின் ஓரத்தில் பன்னீர் மரத்தடியில் கிடக்கும் கல்லாசனத்தில் அமர்ந்து தன் வாழ்வில் வந்துபோன அந்தக் கைம்பெண் குறித்த நினைவுகளில் மூழ்கிக் கிடந்த அவனை (இளைஞன் தானே அதனால் அவன் என்றே குறிக்கிறேன்) ஒரு நாள் நதியின் எதிர்க்கரையிலிருந்த ஓர் இசை சப்தம் இழுக்கிறது. தன்னை நோக்கி ஒரு துயரம் இசையாக வந்துகொண்டிருக்கிறது என்பது அந்த இளைஞனுக்குத் தெரியாது. இசை மயக்கத்தில் அவன் ல என்னும் அந்த நகரத்துக்குச் செல்கிறான். 

அங்கே அவனுக்கு ரஷ்யாவைச் சேர்ந்த காகின் என்பவனும் அவனுடைய தங்கையான ஆஸ்யாவும் அறிமுகமாகிறார்கள். ஆஸ்யா அவனை ஈர்க்கிறாள். ஆஸ்யாவைத் தங்கை என அறிமுகப்படுத்துகிறான் காகின், ஆனால், இளைஞனுக்கு அவர்களிடையே சகோதர உறவு இல்லை என்று படுகிறது. தொடர்ந்து அவர்கள் வசிக்கும் வீட்டுக்கும் செல்கிறான். காகின் ஓர் ஓவியன். ஆஸ்யா ஒரு தனவந்தருக்கும் அவருடைய வீட்டின் பணிப்பெண்ணும் பிறந்தவர். இவர்கள் மூவருக்கும் நட்பு தொடர்கிறது. ஆஸ்யாவுக்கும் காகினுக்கும் என்ன உறவு அண்ணன் தங்கை தானா, இளைஞனுக்கு ஆஸ்யாவுடன் ஏற்பட்ட ஈர்ப்பு என்ன ஆனது என்பதை எல்லாம் நாவல் விவரிக்கிறது. 

இந்த நாவல் துர்கநேவ் வாழ்வில் நடந்த சம்பவங்களின் அடிப்படையிலான நாவல் என்கிறார்கள். நாவலில் மன உணர்வுகளையே துர்கநேவ் தொடர்ந்து விவரிக்கிறார். ஒரு வகையில் இது ஒரு நிறைவேறாக் காதலையே கொண்டிருக்கிறது. ஆண் பெண் உறவின் சிக்கலைத் தான் உலகின் பெரிய பெரிய படைப்பாளிகள் கைக்கொள்கிறார்கள். ஆனாலும், அது தீர்ந்தபாடில்லை. உறவுச் சிக்கல் தீரத்தான் வாய்ப்பே இல்லையே. ஆஸ்யாவின் உருவ சித்தரிப்பைவிட அவளது மனநிலை மாற்றங்களைப் பற்றிய விவரங்களே நாவலின் முதன்மையான சித்தரிப்புகளாகியிருக்கின்றன. அவள் பதினேழு வயது நிரம்பியவள். சிறுமியா பெண்ணா எனக் குழம்பவைக்கும் பருவத்தைக் கொண்டிருக்கிறாள். பெண் மனம் எப்படியெல்லாம் ஆணால் உந்தப்படுகிறது, அதனால் என்ன பாடு படுகிறது என்பதையெல்லாம் துர்கனேவ் விவரித்துக்கொண்டே போகிறார். 


நாவல் என்று சொன்னபோதும், இது நூறு பக்கங்களுக்குள் அடங்கிவிடுகிறது. ரைன் நதியோட்டம் போன்ற இயல்பான நடையைக் கொண்டிருக்கிறது நாவல். வாசிப்பு சுகம், இலக்கிய இன்பம் என்றெல்லாம் சொல்கிறார்களே அவற்றைத் தேடுபவர்களுக்கான நாவல் இது. 1857இல் எழுதப்பட்ட நாவல் இது என்பதால் அந்தக் காலகட்டத்தில் ஓவியங்களும் எழுத்துகளுமே மனிதர்களை அவர்களது வாழ்க்கையை வெளியுலகுக்கு வெளிப்படுத்திக்கொண்டிருந்தன என்பதை ஞாபகம் வைத்துக்கொண்டு வாசிக்க வேண்டியதுள்ளது. ஆனால், நாவலின் மனவோட்டங்கள் இன்றுவரை மாறவில்லை. மனிதரின் அகச் சிக்கல் பெரிய அளவில் மாறவில்லை என்பதையே உணர முடிகிறது. இன்றும் ஆணுக்கும் பெண்ணுக்குமான உறவில் ஏற்படும் சிக்கலைத் தான் கையாள முடியாமல் மனிதர்கள் தவிக்கிறார்கள். அகத்தில் உருண்டு திரண்டு வரும் அன்பை அவ்வளவு எளிதில் வெளிப்படுத்த இயலாமல் மனிதர்களை எது தடுக்கிறது? பறிபோனபின் பரிதவிக்கும் மனிதர்கள் படும்பாட்டை இலக்கியங்கள் காலாகாலத்துக்கும் சொல்லிக்கொண்டே இருக்கின்றன. 

ஞாயிறு, ஏப்ரல் 18, 2021

மரணமென்னும் புதிர்

அஞ்சலி (19.11.1961 - 17.04.2021): நடிகர் விவேக்


மரணம் ஒரு புதிர். அதிலும் பலமுறை பழகிய புதிர். எப்படி முயன்றும் அவிழ்க்க இயலாத புதிர். அதனால்தான் அதன் மீதான மர்மம் நீடித்து நிலைத்திருக்கிறது. இதோ இப்போது நிகழ்ந்திருக்கும் நடிகர் விவேக்கின் மரணமும் இப்படி விடைகாண இயலா ஒரு புதிராகவே வந்து விடிந்திருக்கிறது. விளக்கு எரியும்போதும் அதனடியில் ஓரிருள் வட்டம் படர்ந்திருக்கும். அப்படித்தான் நகைச்சுவை நடிகர்களின் வாழ்வில் துயரம் சூழ்ந்துள்ளது போலும். நகைச்சுவை நடிகர் விவேக்கின் வாழ்விலும் இப்படியான துயரம் மகனின் மறைவு வழியே படிந்தது. 2015 ஆம் ஆண்டில் தன் மகன் தன்னைவிட்டுப் பிரிந்த துயரத்திலிருந்து மீள அவர் எவ்வளவோ முயன்றும் அந்தத் துயரத்திலேயே தன்னையும் மூழ்கடித்துக்கொண்டாரோ என்ற எண்ணத்தை அவரது மரணம் ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இன்றைய காலை (17.04.201) துயரத்துடன் விடிந்துள்ளது. அதிகாலை நான்கு முப்பதைந்துக்குப் பிரபல நகைச்சுவை நடிகர் மாரடைப்பால் காலமானார் என்னும் தகவல் தந்த துயரம் அது.  விவேக்கின் மரணம் இந்த அளவுக்கு அதிர்ச்சியைத் தந்திருக்கிறது என்றால் அதற்குக் காரணம் நேற்றைக்கு முந்தைய நாளில்தான் அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொண்டு, தடுப்பூசியின் அவசியம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் மேற்கொண்டார். முதல் நாள் தடுப்பூசி போட்டுக்கொண்டார்; மறு நாள் மாரடைப்பு வந்திருக்கிறது, அடுத்த நாள் மாண்டுவிட்டார் என்பதைத்தான் பலரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. 


விவேக்குக்கு ஏற்பட்ட மாரடைப்புக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பில்லை என அரசின் சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், பொது மக்களின் மனங்களில் விவேக்கின் மரணம் தடுப்பூசி குறித்த பலத்த சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது. கொரோனா தொற்றுக்கு எதிராக ஒரு பெரும் மக்கள் திரளுக்குத் தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டிருக்கும் வேளையில், இத்தகைய சந்தேகங்களுக்கு அரசு தந்துள்ள விடை போதுமானதுதானா எனப் பெரும்பாலானோர் கேள்வி எழுப்புகிறார்கள்.  

ஒரு நகைச்சுவை நடிகராக தமிழ் மக்களை எப்போதும் சிரிக்கவும் சிந்திக்கவும் செய்தவர் விவேக். 1961ஆம் ஆண்டு நவம்பர் 19 அன்று, அப்போதைய திருநெல்வேலி மாவட்டம், இப்போது தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள பெருங்கோட்டூரில் பிறந்திருக்கிறார். வீட்டில் ராஜு என அழைக்கப்பட்ட விவேக்கின் பெயர் விவேகானந்தன். அப்பா ஆசிரியர். திருநெல்வேலி, மதுரை, நீலகிரி, சென்னை ஆகிய ஊர்களில் வசித்திருக்கிறார். நீலகிரியில் படித்தபோது, 1969இல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதற்குப் பிரதமர் பதில் கடிதமும் அனுப்பியிருக்கிறார். 

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பிகாம், எம்காம் படித்திருக்கிறார். தன் தாய்க்கு நிகரான கல்லூரி இது என்கிறார் விவேக். சென்னையில் தலைமைச்செயலகத்தில் வேலை பார்த்துக்கொண்டே, மாலை நேர  சட்டக் கல்லூரியில் படித்திருக்கிறார். பள்ளியில் படித்த காலத்திலேயே இவருக்கு கலைத்துறையின் மீது நாட்டம் ஏற்பட்டிருக்கிறது. இவர் மதுரை டெலிபோன்ஸில் வேலை செய்த போது அங்கே இவரது காமெடி நிகழ்ச்சியைப் பார்த்த கலாகேந்திரா கோவிந்தராஜ் அவரை இயக்குநர் பாலசந்தரிடம் அறிமுகப்படுத்தியிருக்கிறார். கோவிந்தராஜைத் தனது வழிகாட்டி என்கிறார் விவேக். இதைத் தொடர்ந்து சென்னை ஹ்யூமர் கிளப்பில் பல காமெடி நிகழ்ச்சிகளை எழுதி வழங்கியிருக்கிறார் விவேக். பாலசந்தரிடம் எழுத்து உதவிக்காகத் தான் சென்றிருக்கிறார். ஆனால், விவேக்கை பாலசந்தர் நடிகராக்கிவிட்டார். 1987இல் மனதில் உறுதி வேண்டும் திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கிய விவேக் இறுதியாக நடித்த தமிழ்த் திரைப்படம் தாராள பிரபு


புதுப் புது அர்த்தங்கள் படத்தில் இவர் கூறும் அண்ணன் சொல்லு அண்ணன் சொல்லு வசனம் இவரை ரசிகர்களிடத்தில் நெருக்கமாகக் கொண்டு சேர்த்தது. விவேக்கின் மிமிக்ரி திறமை அவருக்குப் பெரிதாகக் கைகொடுத்தது. முதல் மரியாதை சிவாஜியை அவர் நகலெடுத்த காமெடி காட்சியை நம்மால் மறக்கவே முடியாது. கரு.பழனியப்பனின் பார்த்திபன் கனவு படத்தில் அவர் வழங்கிய அந்த காமெடி காட்சியைப் பார்த்த பிறகு முதல் மரியாதை சிவாஜியைப் பார்த்தால்கூட விவேக் ஞாபகத்தைத் தவிர்க்க முடியாது. இந்தப் படத்தின் காமெடி டிராக் கல்யாணபரிசு டணால் தங்கவேலு காமெடியின் இன்னொரு வடிவம் தாம். மேலும், விவேக்கைப் பெரிய நகைச்சுவை நடிகர் என்று சொல்லிவிட முடியாது. ஏனெனில், எம் ஆர் ராதா போலவோ, டி எஸ் பாலையா போலவே ஏன் வடிவேலு போலவோ கூட அவரால் உடல்மொழியால் நகைச்சுவையைக் கடத்திவிட முடியவில்லை. ஆனால், நகைச்சுவை நடிப்பில் அவர் கோலோச்சியதற்கு அவரது வசனங்களே ஊன்றுகோல்களாயின. விவேக் என்று நீங்கள் யோசித்துப் பார்த்தால் சட்டென்று நினைவுவருபவை எல்லாமே வசனங்கள்தாம் என்பதை மறுக்க இயலாது. அந்த வகையில் விவேக் பாலசந்தர் பட்டறையில் மெருகேறியவர் என்பதற்கு அதுவே வலுச்சேர்க்கிறது.  

ரஜினியுடன் உழைப்பாளி, வீரா ஆகிய படங்களில் நடித்த விவேக் நீண்ட நாள்களுக்குப் பிறகு சிவாஜியில் அவருடன் இணைந்திருந்தார். தனுஷுடன் படிக்காதவன் படத்தில் நடித்திருந்தார். அதில் முதலில் வடிவேலு நடிப்பதாக இருந்திருக்கிறது. பிறகு ஏதோ காரணத்தால் வடிவேலுக்குப் பதில் விவேக் அந்தக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஆகவே, அதன் உடல்மொழி வடிவேலை ஞாபகப்படுத்துவது போல் அமைந்திருக்கும். அதிலும் தனது முத்திரையைப் படித்திருப்பார். சமகாலச் சம்பவங்களை வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் தனது படத்தில் காட்சிகளில் செருகிவிடுவார். அதனால் அவர் படத்தைப் பார்க்கும்போது அந்தக் காலகட்டத்தின் முக்கியமான விஷயங்களின் ரெபரென்ஸை அவருடைய படத்தில் காண முடியும். இது விவேக்கின் சிறப்பு என்றுகூடச் சொல்லலாம். கவிதையில் அதிகமான அறிவியலை வைரமுத்து பாடியதுபோல் விவேக் தனது நகைச்சுவைக் காட்சிகளில் சமகாலப் பாதிப்பு அதிகமாக இடம்பெற்றிருக்கும். 


தனுஷுடன் நடித்த உத்தமபுத்திரன் தனக்கொரு வித்தியாசமான படம் என்று சொல்கிறார் விவேக். 1987இல் நடிகராக தனது பயணத்தைத் தொடங்கினாலும் 1999இல் வாலி படத்திலிருந்துதான் சொந்தமாக காமெடி டிராக் எழுதும் நிலைக்கு உயர்ந்தார். உன்னருகே நானிருந்தால், அலைபாயுதே, குஷி, மின்னலே, 12B, ரன், தூள், சாமி, பேரழகன், அந்நியன் என விவேக்கின் பயணம் விரிந்துகொண்டே இருந்தது. எம் ஆர் ஆர் ராதா குரலை அவர் மிமிக்ரி செய்து நடித்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்திருந்தபோதும், கமலுடன் எந்தப் படத்திலும் அவர் சேர்ந்து நடித்திருக்கவில்லை. ஆனால், நான் தான் பாலா என்னும் படத்தில் தான் நாயகனாக நடிக்க, அந்தப் பரிணாம வளர்ச்சிக்கு கமலின் ஆலோசனை காரணம் என்று கூறியிருக்கிறார் விவேக். இந்தியன் - 2 படத்தில் கமலுடன் நடிக்கவிருந்தார். ஆனால், அதற்குள் காலன் முந்திக்கொண்டார். 

விவேக்கை வெறும் காமெடி நடிகர் எனச் சுருக்கிவிட முடியாது. அவர் பன்முகத் தன்மை கொண்டவராக இருந்திருக்கிறார். இசையில் அவருக்குப் பெரிய நாட்டம் இருந்திருக்கிறது. அவருடைய மூத்த மகள் அமிர்தாநந்தினிக்குப் பெயர் சூட்டியவர் இளையராஜா. கவிதை எழுதுவதில் நிறைவு கண்டிருக்கிறார். நீங்கள் யாராக மாற ஆசைப்படுகிறீர்கள் என ஒரு நிகழ்ச்சியில் குஷ்பு கேட்டபோது, சிட்னி ஷெல்டன் பெயரைச் சொல்கிறார் விவேக். தனது படங்களில் மூட நம்பிக்கையை அவர் விமர்சித்திருந்தாலும், அவருக்குக் கடவுள் நம்பிக்கை இருந்திருக்கிறது. ஷீரடி பாபாவின் படத்தைத் தனது பர்ஸில் வைத்திருந்திருக்கிறார்.  அதே நேரத்தில் பல சர்ச்சைகளுக்கு ஆளான ஜக்கி வாசுதேவின் சீடர் போலவும் நடந்துகொண்டிருக்கிறார். 


முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பிரியத்துக்குரிய சீடன் போல தன்னைக் காட்டிக்கொள்வதில் விவேக் விருப்பம் கொண்டிருந்திருக்கிறார். அப்துல் கலாமின் வேண்டுகோளுக்கிணங்க, பசுமை கலாம் திட்டத்தின் கீழ் அவர் லட்சக்கணக்கான மரங்களை நட்டிருக்கிறார் என்பது அதன் சான்றுதான். தன்னைச் சுற்றியுள்ள பலருக்கும் உதவியிருக்கிறார். தன் மகன் சாய் பிரசன்னா மறைந்தபிறகு அவர் பெயரில் சாய் ஃபவுண்டேஷன் என்பதை ஏற்படுத்தி பலருக்கும் உதவினார். இப்படியான பல அம்சங்கள் கொண்டிருந்த நடிகர் ஒருவர் திடீரென மறைந்துவிட்டாரே என்பதைத் தான் பலராலும் தாங்கிக்கொள்ள முடியவில்லை. பெருங்கோட்டூரில் தொடங்கிய அவரது வாழ்க்கை மேட்டுக்குப்பத்தில் வந்து முடிந்துள்ளது. அவரது உடலுக்கு அவருடைய இளைய மகள் தேஜஸ்வினி தீ மூட்டியிருக்கிறார். இந்தியாவிலேயே ஒரு குளிர்பான விளம்பரத்தில் நடித்த ஒரே நடிகர் விவேக்தான். 2009இல் பத்மஸ்ரீ பெற்றுக்கொண்டார். தமிழக அரசின் விருதுகளைப் பெற்றிருக்கிறார். தமிழக அரசின் விழிப்புணர்வு விளம்பரங்களில் தொடர்ந்து நடித்துக்கொடுத்திருக்கிறார். அதனால்தான் தமிழக அரசு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் சூழலிலும் தேர்தல் ஆணையத்தில் அனுமதி பெற்று அவருக்கு காவல்துறை மரியாதை அளித்திருக்கிறது. 

பொதுவாக, எந்தக் கலைஞருக்கும் எப்போதும் மரணமே என்பதே இல்லை. ஏனெனில் எப்போது வேண்டுமானாலும் நாம் அவர்களை அவர்களது கலை வடிவில் பார்த்துக்கொள்ளலாம். ஆனால், இறப்பு என்பது ஓர் இழப்பு என்பதே நமது வருத்தம். மரணம் அந்த வருத்தத்தைத் தராமல் போவதேயில்லை என்பதே உண்மை. அந்த உண்மைதான் நம்மைச் சுடுகிறது. அதன் சூடு உடனே ஆறுவதில்லை. அதற்குச் சில காலம் ஆகும். அதுவரை காத்திருப்போம். 

வியாழன், ஏப்ரல் 15, 2021

மரணத்துக்கு ஏன் இவ்வளவு அவசரம்?


சில நாள்கள் நாம் எதிர்பாராத விஷயங்களை நம்மிடம் கொண்டுவந்து சேர்த்துவிடும். அவை நல்லவையாக இருந்தால் மனம் மகிழும்; துன்பம் தருபவையாகிவிட்டால் அவ்வளவுதான் அந்த நாளின் நினைவு மனத்தில் அழிக்க முடியாதபடி பதிந்துவிடும். பின்னர், எப்போதெல்லாம் மனம் சோர்வுகொள்ளுமோ துயர நினைவில் மூழ்குமோ அப்போதெல்லாம் அந்த நாள் மனவடுக்கில் மேல் தட்டில் தட்டுப்படும். அப்படியொரு நாளாகிவிட்டது இந்த ஏப்ரல் 15. 

மதியம் மூன்று மணிக்குப் படுத்து உறங்கிவிட்டேன். ஐந்தே கால் அளவில் முழித்தேன். இரண்டு மணி நேரத்துக்கு மேல் தூங்கியதால் மனம் சொங்கித்தனமான உணர்வைக் கொண்டிருந்தது. கையில் மொபைலைத் தூக்கிவைத்துக்கொண்டு ஃபேஸ்புக்கை மேய்ந்துகொண்டிருந்தேன். கல்லூரி நண்பன் பாலா ஜோசப் செபஸ்தியான் படங்களைக் கொண்ட வீடியோ ஒன்றைப் பகிர்ந்திருந்தான். அதைப் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு மெதுவாக கமெண்ட் செக்‌ஷனுக்கு வந்தால் பலரும் RIP, ஆழ்ந்த இரங்கல் என்று பதிவிட்டிருந்தார்கள். சட்டென ஒரு பதற்றம் தொற்றிக்கொண்டது. மீண்டும் மேலே போய் பாலா என்ன எழுதியிருக்கிறான் என்று படித்தேன். நம்பவே முடியவில்லை. பயங்கர அதிர்ச்சியாக இருந்தது. ஆனால், அது உண்மைதான். நண்பன் ஜோஸப் செபஸ்டியன் கொரானா காரணமாக உயிரிழந்திருந்தான்.

யாரிடம் விசாரிக்கலாம் செபஸ்டியனுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள் யார் எனத் தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்தேன். சட்டென்று செல்லத்துரையின் நினைவு வந்தது. ஆகவே, செல்லத்துரைக்குப் பேசினேன். அவன் செய்தியை உறுதிப்படுத்தினான். ஏப்ரல் 13 அன்றைய இரவில் 12 மணி அளவில் மரணமடைந்ததாகவும் கொரோனா மரணம் என்பதால் அங்கேயே நல்லடக்கம் நடைபெற்றுவிட்டதாகவும் கூறினான். ஏப்ரல் 4 ஈஸ்டர் அன்றுகூடப் பேசிக்கொண்டிருந்ததாகத் தெரிவித்தான். டெல்லியில்  வசிக்கும் நண்பன் வெங்கடேஸ்வரன் இரண்டு மூன்று நாள்களுக்கு முன்னதாக செபஸ்டியனிடம் பேசியபோது, தொற்றிலிருந்து மீண்டு விட்டதாகவும் ஓரிரு நாளில் டிஸ்சார்ஜ் ஆகிவிடுவேன் என்று சொன்னதாகவும் கூறினான். ஆனால், அதற்குள் கார்டியாக் அரெஸ்ட் காரணமாக சட்டென்று உயிர் பிரிந்திருக்கிறது.


செபஸ்டியான் பற்றிய பழைய நினைவுகள் ஞாபகத்துக்கு வந்தன. கல்லூரிக் காலம் நிறைவுறும் வேளை, நண்பர்கள் முத்தரசு, செல்லத்துரை, மஜீத், நாகராஜன், சுலைமான், செபஸ்டியன் ஆகியோருடன் சென்றுவந்த சுற்றுலா நாள்கள் நினைவிலாடின. அப்போது எடுத்த புகைப்படங்களில் சில ஃபேஸ்புக்கில் கிடைத்தன. அவற்றைப் பார்த்துக்கொண்டிருந்தேன். மரணம் பற்றி தத்துவார்த்தமாக எவ்வளவோ பேசுகிறோம். ஆனால், நெருங்கிய நண்பர்களின் அல்லது உறவுகளின்போது, பேச்சிழந்து நிற்கிறோம்.

செபஸ்டியானை எப்போதாவது ஒரு முறைதான் சந்திக்கிறேன். கல்லூரிப் படிப்பு முடிந்த வருடத்தில் குற்றாலத்தில் நடைபெற்ற செல்வ மாமாவின் திருமணத்துக்கு வந்திருந்தான். அப்போது தென்காசி கீழப்பாளையம் வீட்டில் எடுத்த புகைப்படங்களில் அவனும் வழக்கமான சிரிப்புடன் இப்போதும் காணப்படுகிறான்.  அதன் பின்னர் வெவ்வேறு திசைகளில் பிரிந்துவிட்டோம். மீண்டும் கல்லூரி நண்பர்களின் கூடுமை 1998இல் சென்னையில் நடைபெற்றபோது சந்தித்தேன். அப்போது நான் சரியான வேலை இல்லாமல் இருந்தேன். ஆகவே, அவன் தனக்குத் தெரிந்த என்விஎச் கோயா நிறுவனத்தில் என்னையும் வேலைக்குச் சேர்த்துவிட்டான்.

இருவரும் அந்த நிறுவனத்தில் வேலையில் சேர்ந்தோம். இருவரையும் குஜராத் அனுப்புவதாக முதலில் சொன்னார்கள். வட இந்தியாவுக்குச் சென்றுவிட்டால் தமிழ்ப் படம் பார்க்க முடியுமோ முடியாதோ என்று தோன்றியதால், வேலை நிமித்தமாகப் புறப்படுவதற்கு முந்தைய நாளில் உட்லண்ட்ஸ் தியேட்டரில் – அப்படித்தான் நினைவு – பிரபு சுவலட்சுமி நடித்த பொன் மனம் திரைப்படத்தை இருவரும் சேர்ந்து பார்த்தோம். பின் ஏனோ நிறுவனம் அவனை குஜராத்துக்கு அனுப்பியது. நான் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு அனுப்பப்பட்டேன். அப்போது கையில் மொபைல் இல்லாததால் தொடர்பு விடுபட்டுவிட்டது.

சில வருடங்களுக்குப் பிறகு ஒரு முறை பாரிஸ் பஸ் நிலையம் அருகே வைத்து செபஸ்டியானைப் பார்த்தேன். அப்போது நான் கோயா நிறுவனத்திலிருந்து வெளியே வந்துவிட்டேன் என்று நினைக்கிறேன். அவனும் கோயாவிலிருந்து சென்று வேறொரு நிறுவனத்தில் சேர்ந்துவிட்டதாகக் கூறினான். சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டுச் சென்றான். அதன் பின்னர் சென்னையில் நடைபெற்ற நண்பர்களின் கூடுகையில் ஒருமுறை பார்த்தேன். உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்தான். நண்பர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டான். எப்போதுமே உற்சாகமா காணப்படுவான். கடுமையான உழைப்பாளி. கல்லூரிக் காலத்தில் அவன் தன் தந்தையின் தோள்மீது கைபோட்டுப் பேசிச் சென்ற காட்சி ஒன்று மனத்தில் எழுகிறது. அவனுடைய உற்சாகமான சிரிப்பை மனம் ஒருபோதும் மறக்காது. கொரானா காலம் செபஸ்டியனுக்கு அஞ்சலி எழுதவைக்கும் என எண்ணவில்லை. 

மரணம் நிகழ்ந்த கணத்துக்கும்

அதற்கு முந்தைய கணத்துக்கும் இடையே

ஓர் ஆயுள் காலம் வந்தமர்ந்துவிடாதா என

அற்ப மனம் ஏங்கும்.

யதார்த்தமோ செவிட்டிலறையும்.

எப்போதாவது ஒரு முறைதான் சந்திக்கிறோம்.

ஆனால், எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம் என்னும் வாய்ப்பு

மனத்தைச் சாந்தப்படுத்திவைக்கிறது.

இப்போது உன் மரணம்

அந்த வாய்ப்பை இல்லாமலாக்கிவிட்டது.

இவ்வளவு சீக்கிரம் இது நிகழ்ந்திருக்க வேண்டாம்

நீ எங்கோ சென்றுவிட்டாய் உன் சிரிப்பு எங்களிடம் இன்னும் பத்திரமாக இருக்கிறது.

அதை என்ன செய்ய என்றுதான் தெரியவில்லை.

புதன், ஏப்ரல் 14, 2021

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சுபாவம்


ஏப்ரல் 7 அன்று அமேசான் பிரைமில் வெளியான மலையாளத் திரைப்படம் ஜோஜி. ஷேக்ஸ்பியரின் மேக்பெத் நாடகத்தின் பாதிப்பில் உருவாக்கப்பட்ட திரைப்படம் எனப் படத்தின் டைட்டிலில் சொல்கிறார்கள். படத்தின் உருவாக்கம் கே ஜி ஜார்ஜின் இரைகள் படத்தை ஞாபகப்படுத்துகிறது. உதாரணமாக, கதாபாத்திரம் ஓடும், நிலக்காட்சியும்  பின்னணியிசையும் இணைந்து உருவாக்கப்பட்ட, ஷாட் வழியே  கதாபாத்திர மனநிலையைப் பார்வையாளரிடம் கடத்தும் பாங்கு. படத்தை ஒரு ஓபரா போல் எடுத்திருக்கிறார்கள். ஆனால், ஓபரா போன்ற இசை நாடகத்துக்குத் தேவையான வலுவான சம்பவங்கள் படத்தில் இல்லை. படம் முழுக்க முழுக்க காட்சி மொழியில் மூழ்கி முத்தெடுக்கிறது. அதிகமான வசனங்கள் இல்லை. ஆர்ப்பாட்டமான அழுகைக் காட்சிகள் இல்லை. மரணம், கொலை, துரோகம், வஞ்சம் போன்ற உணர்வுகள் உள்ளன. ஆனால், அவை மிகவும் உள்ளடங்கிய தொனியில் வெளிப்பட்டுள்ளன. இப்படியான காட்சிகளால் உருவாக்கத்தால் படம் பலரை வெகுவாகக் கவர்ந்துள்ளது. ஆனால், கறாரான மொழியில் படத்தைப் பார்க்கலாமே ஒழிய பிரமாதமான படம் எனச் சொல்ல முடியாது. 

படத்தின் கதாபாத்திர உருவாக்கங்கள் மிகச் சன்னமான சித்தரிப்புகளால் ஆனவை. ஆனால், அவை பிரம்மாண்டமான தோற்றத்தைக் கொண்டுள்ளன. படத்தின் தொடக்கக் காட்சியை சினிமா என்னும் கலை கண்டுள்ள தொழில்நுட்ப வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டெனலாம். அது நாள்தோறும் நாம் காணும் ஒரு காட்சிதான். அதை அவ்வளவு ரசிக்கத்தக்க அளவில் படமாக்கியுள்ளார்கள். ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் டெலிவரி பாய் ஒரு பொருளைக் கொண்டுபோய் வாடிக்கையாளரிடம் கொடுக்கும் மிகவும் சாதாரணக் காட்சி அது. ஆனால், படமாக்கப்பட்ட விதத்தால் அது பார்வையாளரை அப்படியே கவர்ந்துவிடுகிறது.  

ஒளிப்பதிவும் இசையும் அளந்தெடுத்த அல்லது அறுத்தெடுத்த வசனங்களும் படத்தின் தரத்தை உயர்த்த மிகவும் பயன்பட்டுள்ளன. கேரள நிலத்தின் அழகையும் பசுமையையும் காட்டுவதற்கு கேமரா கோணங்கள் பெரிதும் உதவியுள்ளன. பனச்சல் என்னும் ஒரு வீடு, வீட்டிலுள் காணப்படும் ஒரு குளம், வீட்டையொட்டி ஓடும் ஓரோடை இவை மிகச் சாதாரணமானவைதாம். ஆனால், திரையில் இவற்றை காட்சிக்குவைத்திருக்கும் பாங்கு இவற்றை அசாதாரணமானதாக்குகிறது. நம் கண்களால் காண்பதைவிடப் பரந்து பட்ட காட்சிகளை கேமரா அள்ளித்தருவதாலேயே காட்சிகளின் தீவிரம் அப்படியே மனத்தில், ஒரு ஹெலிகாப்டர் தரையிறங்குவது போல் இறங்கிவிடுகிறது. 

பனச்சல் வீட்டின் தலைவன் குட்டப்பன். அவன்தான் எல்லாம். அவனின்றி ஓர் அணுவும் அசையாது. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நிலையிலும் இரண்டாம் மகன் ஜெய்சன் நீட்டும் செக்கில் கையெழுத்துப் போட்டுக் கொடுக்கும் குட்டப்பனின் அழுத்தம் குடும்பத்தின்மேலுள்ள தனது ஆதிக்கத்தை எளிதில் யாருக்கும் விட்டுத்தரத் தயாராக இல்லாத குணத்தைக் கல்வெட்டில் பொறிப்பதுபோல் பதிக்கிறது. குட்டப்பனுக்கு மூன்று மகன்கள். மூத்த மகன் ஜோமோன், குடிகாரன். மண முறிவு ஏற்பட்டு மனைவியிடம் இருந்து பிரிந்து தன் பருவ வயது மகனுடன் பனச்சல் வீட்டில் வசித்துவருகிறான். அவன் எந்தக் காரியத்துக்கும் தந்தையின் உத்தரவை எதிர்பார்த்து நிற்பவன். பக்கவாதத்தால் படுக்கையில் கிடக்கும் தகப்பனின் அறையில் ஒரு மது பாட்டிலை எடுக்கும்போதுகூட, குட்டப்பனிடம் சொல்லிவிட்டே எடுக்கிறான். அவன் மகனான பாப்பியோ மிகத் தந்திரமாகப் பாட்டனின் வங்கிக் கணக்கைப் பயன்படுத்தி ஆன்லைனில் துப்பாக்கியே வாங்கிவிடுகிறான். 

நடுவுள்ளவனான ஜெய்சன் தன் மனைவி பின்ஸியுடன் அதே வீட்டில் வசித்துவருகிறான். ரப்பர் கடையைக் கவனித்துவருகிறான். வணிகத்தின் பொருட்டு ஏற்பட்ட பழக்கமோ என்னவோ எல்லாரிடமும் நயந்துபேசியே தன் தரப்புக்குச் சாதகமான விஷயங்களைச் சாதித்துக்கொள்ள முயல்கிறான். அவனையும் தன் பேச்சுக்கு இணங்கிப்போகச் செய்கிறாள் பின்ஸி. குட்டப்பன் சடலம் கிடத்தப்பட்ட அறைக்கு வருமாறு அழைக்கும்போது ஜோஜியை முகக்கவசம் அணிந்துகொள்ளச் சொல்கிறாள் பின்ஸி. அவள் எவ்வளவு இறுக்கமான உணர்வால் வனையப்பட்டவள் என்பதை இந்த ஒற்றை வசனம் தீர்க்கமாகச் சொல்கிறது. 

இளைய மகன் ஜோஜிதான் திரைப்படத்தின் முதன்மைக் கதாபாத்திரமாகியிருக்கிறான். குதிரை வணிகத்தில் தோல்வியையே தொடர்ந்து சந்தித்துவருபவன். ஆகவே, தந்தை அவனை இரண்டாம் தர நிலையிலானவனாகக் கருதுகிறார். அது அவனுக்கும் தெரியும்.  குட்டப்பனோ எந்த மகனுக்கும் எந்த உரிமையும் தராமல் எல்லாக் கட்டுப்பாட்டையும் தன் கையிலேயே வைத்துக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில்தான் குட்டப்பன் பக்கவாதத்தால் பாதிக்கப்படுகிறார். இன்னும் பத்துப் பதினைந்து நாளில் இறந்துவிடுவார் என குடும்ப மருத்துவர் ஃபெலிக்ஸ் தெரிவிக்கிறார். ஆனால், அது நடைபெறவில்லை. அவர் ஒரு அறுவை சிகிச்சைக்குப் பின்னர் சக்கர நாற்காலியில் அமர்ந்து தனது ஆட்சியைப் பரிபாலிக்கத் தொடங்குகிறார். 

தந்தை இறந்துவிடுவார் என நினைத்த இளைய மகனுக்கு இது பெரிய சிக்கலாகப் போய்விடுகிறது. அவர் உயிரோடிருக்கும்வரை தன்னால் எந்த சுதந்திரத்தையும் அனுபவிக்க முடியாது என நினைக்கிறான் அவன். அடுத்த மகனும் நகரத்தில் ஒரு ஃப்ளாட் வாங்கத் திட்டமிட்டிருக்கிறான். அவனுக்கும் தந்தையின் இருப்பு இடைஞ்சல் என்றே படுகிறது. அவர்கள் நினைத்ததைப் போல் தந்தைக்கும் முடிவு வருகிறது. அதைத் தொடர்ந்து மூத்த மகனுக்கும் முடிவு வருகிறது. இதனால் பனச்சல் வீடு என்ன ஆனது, ஏன் அந்த வீட்டுக்கு இப்படியொரு நிலைமை என்பதையெல்லாம் ஷியாம் புஷ்கரனின் திரைக்கதையில் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் திலீஷ் போத்தன். படத்தின் கதை மிகவும் சராசரியான மேடை நாடகத்துக்கானது. அதைக் காட்சி மொழியின் உதவியுடன் கலாபூர்வத் திரைப்படமாக்கியிருப்பதில் திலீஷ் போத்தனின் திறமை வெளிப்படுகிறது.  கதாபாத்திரங்களின் மனநிலைகளைப் பார்வையாளர்களிடம் கடத்துவதற்கு சினிமா சாத்தியப்படுத்தும் அத்தனை தொழில்நுட்பத்தையும் கைதேர்ந்தவகையில் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர். அதற்கு முழு ஒத்துழைப்பு நல்கியிருக்கிறார்கள் தொழில்நுட்பக் கலைஞர்களும் நடிகர்களும். 

ஜெய்சன் மனைவி பின்ஸியாக நடித்திருக்கும் உன்னிமாயா பிரசாத்தும், ஜோமோன் கதாபாத்திரமேற்றிருக்கும் பாபுராஜும் திரைப்படத்துக்கான இயல்புடன் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். தன் தம்பி ஜோஜி ஏர் கன்னைத் தூக்குவதைக் காணும்போது, ஜோமோனிடம் வெளிப்படும் நக்கல் கலந்த புன்னகை அவருடைய நடிப்பைச் சொல்லிவிடுகிறது. கோடீஸ்வரா என ஃபெலிக்ஸ் தன்னை அழைக்கும்போது, ஜோஜியின் மனம் கொள்ளும் குதூகலத்தைப் பின்னணியிசை மிகத் துல்லியமாக மொழிபெயர்த்துவிடுகிறது. வசனங்களை இயன்ற அளவு பிசிறில்லாமல் அளவெடுத்தாற்போல் நறுக்கியெடுத்து நடிகர்களிடம் கொடுத்திருப்பார்கள்போல. ஒரு நாடகத்தை எந்த அளவுக்கு வசனங்கள் தூக்கிச் சுமக்குமோ அந்த அளவுக்கு இந்தப் படத்தை இசை தூக்கிச் சுமக்கிறது. 

மரத்திலிருந்து நழுவி நதிமீது விழுந்து கிடக்கும் இலைகள் போல் படம் முழுவதும் இசைத் துணுக்குகள் நிறைந்துகிடக்கின்றன; சில காட்சிகளில் மௌனமும் ஓரிசையாய் மலர்ந்துகிடக்கிறது (ஜோஜி, குட்டப்பனின் மருந்து டப்பாவில் மருந்தை மாற்றி வைக்குமிடத்தில் மௌனம் இசை சாம்ராஜ்யத்தை நடத்துகிறது). தமக்குப் பிடித்த வகையில் வாழ்ந்துதீர வேண்டிய விருப்பத்தில் சிக்குண்டு கிடக்கும் மனிதர்கள் அதற்காகத் தேவைப்படும் குற்றங்களைப் புரிய தயங்குவதில்லை. தமது குற்றத்தைப் பிறர் அறிந்துகொள்ளும்வரை தங்களது குணாதிசயத்தை வெளிப்படுத்தாமல் போர்வையில் போர்த்தி பாதுகாத்துக்கொள்கிறார்கள். அதே நேரத்தில் அந்தக் குற்றங்களின் நிமித்தம் தாம் கொள்ளும் குற்றவுணர்விலிருந்து தப்பிக்க இயலாமல் திண்டாடுகிறார்கள். அவர்களது இயல்பான குணம் வெளிப்படும்போது அவர்களது குரூரத்தை அறியும் மனிதர்கள் திடுக்கிடுகிறார்கள்.  மனிதர்களிடம் வெளிப்படும் இயல்பான குணங்களில் நல்ல தன்மையும் கெட்ட தன்மையும் கலந்தே காணப்படுகின்றன. இந்தக் குணங்களின் காரணமாக அவர்களது வாழ்வில் ஏற்படும் அலைக்கழிப்புகளையும் அற்ப மகிழ்ச்சிகளையும் காட்சி மொழியில் கச்சிதமாகச் சொல்லியிருக்கிறது ஜோஜி. ஆனால், இவை எல்லாவற்றையும் மீறி ஒரு முழுமையான திரைப்படம் தரும் நிறைவைத் தராமல் நழுவியும் இருக்கிறது ஜோஜி. 

திங்கள், ஏப்ரல் 12, 2021

ஸ்மைல் என்ற மண்டேலா


மாறுபட்ட திரைப்படங்களைப் பார்ப்பதில் ஆர்வம் கொண்ட ரசிகர்களுக்கு தமிழ் திரைப்படங்கள் அவ்வப்போது விருந்து படைப்பதுண்டு. அப்படி ஒரு விருந்தெனச் சொல்லப்பட்ட திரைப்படம் மண்டேலா. இன்னும் தமிழ்த் திரைப்படங்கள் வெகு தூரம் செல்ல வேண்டியதிருக்கிறது. தமிழ்த் திரைப்படங்களில் ஒரு பெரிய பிரச்சினை என்னவென்றால், செய் நேர்த்தியும் கருத்தியல் நேர்த்தியும் ஒருசேர அமையாததுதான். மண்டேலாவைப் பொறுத்தவரை, யோகி பாபு போன்ற ஒரு நடிகரை மையப் பாத்திரமாகக் கொண்டு திரைக்கதை அமைத்தது மெச்சத்தகுந்ததுதான். ஆனால், அது மட்டுமே போதுமா என்பதுதான் கேள்விக்குறி. 

தொழில்நுட்பம் வளர்ந்திருக்கும் இந்தக் காலத்தில் ஒரு திரைப்படத்தைத் திரையில் நேர்த்தியுடன் தருவது என்பது ஓரளவு எளிதானதுதான்.  திரைப்படத்தை உண்மையான ஆர்வத்துடன் உருவாக்க முயலும் இயக்குநர் அப்படியான படத்தை எளிதாகத் தந்துவிட முடியும். ஆகவே, இந்தப் படத்தின் இயக்குநர் மடோன் அஷ்வின் அந்த வகையில் படத்தை உருப்படியாகவே தந்திருக்கிறார். யதார்த்தமான படம் போன்ற பாவனையில் படத்தை உருவாக்கியிருக்கிறார். ஆனால், படமோ யதார்த்தமானது அன்று. அது பலவிடங்களில் யதார்த்தத்தை மீறியது. 

சூரங்குடி ஊராட்சி வடக்கூர் தெக்கூர் என இரு பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கிறது. ஆனால், அந்த இரு பிரிவுகளுக்கும் தலைமை வகிக்கும் மதியும் ரத்தினமும் ஒரே தகப்பனையும் தனித்தனித் தாயையும் கொண்டவர்கள். அந்தப் பெரியவர் இரண்டு பிரிவினரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதற்காக அந்த இரண்டு பிரிவிலிருந்து ஒவ்வொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இவர் சாதி, சமய பூசலற்றவர் என்பதைப் போல் காட்சி அமைத்திருக்கிறார்கள். அவரது வீட்டில் பெரியார் படம் இருக்கிறது. ஒரு வகையில் அவர் திராவிடர் என்பதைச் சுட்டுகிறது படம். அங்கு தான் சிக்கலும் தொடங்குகிறது. திராவிடக் கட்சிகள் பணத்துக்கு வாக்கு வாங்கி மக்களை வெறும் வாக்கு வங்கிகளாகச் சுருக்கிவிட்டனர் என்னும் மேம்போக்கான புரிதலே படத்தை முன்னிழுத்துச் செல்கிறது.  அவர் சக்கர நாற்காலியில் அமர்ந்திருப்பது, சீரியல் பார்ப்பது என இடம்பெற்றிருக்கும் காட்சிகள் யாரைக் கிண்டலடிக்கின்றன என்பதை எளிதாகப் புரிந்துகொள்ள முடிகிறது. படத்தின் ஒரு காட்சியில் விவேகானந்தர், அப்துல் கலாம் போன்றவர்களது புகைப்படங்களும் இடம் பெற்றிருக்கின்றன. இவர்களை எல்லாம் யார் முன்னிருத்துகிறார்கள். படம் யாரைப் போற்றுகிறது யாரைத் தூற்றுகிறது என்பது எல்லாம் மிகவும் தெளிவாக உள்ளது. அதனால்தான் படத்துடன் ஒன்றுபட முடியாமலும்போகிறது. 

படத்தில் நடித்திருக்கும் யோகிபாபு, ஷீலா ராஜ்குமார், சங்கிலி முருகன் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள் என்பதெல்லாம் சரிதான். ஆனால், அரசியல் படத்துக்கு அது சொல்ல வரும் அரசியல் வலுவாக இருக்க வேண்டும். ஆனால், இந்தப் படத்தின் அரசியல் உள்ளீடற்று பொக்காக உள்ளது. இயக்குநர் மய்யத்தில் நின்றுகொண்டு படமெடுத்திருக்கிறார். வாக்குக்குப் பணம் வாங்குவது குறித்துப் படம் விமர்சிக்கிறது. ஆனால், தனிமனிதர் பணம் பெறாமல் அதே வாக்கைச் சமூகத்துக்காகப் பயன்படுத்துவது ஆரோக்கியமானது என்றும் சொல்கிறது. அதுதான் குழப்பமாக இருக்கிறது. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறைதான் தேர்தல் வருகிறது. ஆகவே, மக்கள் ஓரணியில் திரண்டு புரிதலுடன் வாக்களிப்பது என்பது எப்போதும் எட்டாக்கனியே. அதன் மகத்துவத்தையே படம் பேசுகிறது. ஆகவே, அது ஒரு உட்டோப்பியா என்னும் அளவிலேயே தங்கிவிடுகிறது. 

அரசியல் கட்சிகள் எல்லாம் பணம் சம்பாதிப்பதற்காகவே தேர்தலில் போட்டியிடுகின்றன என்பது அரைவேக்காட்டுத் தனமான இன்னும் சொல்லப்போனால் மய்யத்தனமான புரிதல். ஐம்பதாண்டுகளாகத் தமிழ்நாட்டில் ஊழல் புரையோடிப்போய்விட்டது என்று இப்போது முன்வைக்கப்படும் நாலாந்தரக் குற்றச்சாட்டை வலுப்படுத்தும் வகையிலேயே இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. அதுதான் மிகவும் ஆபத்தானது. இப்படியான படங்களை அதன் எளிமைத் தன்மைக்காக விதந்தோதுவது சிக்கலானது. ஏனெனில், அந்த எளிமைத் தன்மை விஷம் கக்கப் பயன்பட்டுள்ளது. அதைப் புறந்தள்ளிவிட்டு இதை நல்ல படம் என்று முன் மொழிதல் அரசியல் புரிதலற்ற தன்மையென்றே விளங்கிக்கொள்ள முடிகிறது. 

ஸ்மைல் என்ற பெயர் கொண்ட நாவிதராக யோகி பாபு நடித்திருக்கிறார். அவரை அந்த ஊரைச் சேர்ந்த அனைவரும் இளிச்சவாயன் என்றே கூப்பிடுகிறார்கள். அவரும் அவர்கள் சொல்லும் எல்லா  வேலைகளையும் தட்டாமல் செய்கிறார். இதெல்லாம் எந்தக் காலத்தில் நடைபெறுகிறது? அவரது உண்மையான பெயரே அவருக்கு மறந்துவிட்டதாம். அதனால் அந்த ஊருக்குப் பணிக்கு வரும் அஞ்சல் நிலையப் பணியாளரான பெண் அவருக்குப் பெயர் வைக்கிறார். மண்டேலா என்னும் பெயரை அவருக்குச் சூட்டி அவருக்கு வாக்காளர் அடையாள அட்டையையும் பெற்றுத் தருகிறார். அவர்கள் இருவருக்கும் இடையே மெல்லிய அன்பு இழையோடுகிறது. 

ஒரு ஓட்டுக்காக என்னவெல்லாமோ செய்கிறார்கள் என்பது திரைக்கதையின் சவ்வுப் பகுதி. ஏனெனில், அந்த ஒற்றை அம்சத்தை வைத்துத்தான் கதையை இழுக்க வேண்டும் என்பதால் இயன்ற அளவுக்கு இழுத்திருக்கிறார்கள். ஆகவே, படத்தை மிகப் பொறுமையாகப் பார்க்க வேண்டியதும் இருக்கிறது. குறியீட்டுத் தன்மையுடன் திராவிட அரசியலை விமர்சிக்கும் இந்தப் படம் குருட்டாம்போக்குத் தன்மையில் மூழ்கியிருப்பதால் படம் முன்வைக்கும் அரைகுறை அரசியல் படத்தை முழுமைப்படுத்தாமல் குறைபடுத்துகிறது. கடின உழைப்பு, சிறந்த  நடிப்பு, தொழில்நுட்ப நேர்த்தி என்றெல்லாம் படத்தில் நேர்மறையான விஷயங்கள் இருந்தாலும் அது முன்வைக்கும் அரசியல் நச்சு மிக்கது என்பதால் இந்தப் படத்தைப் புறந்தள்ள வேண்டியது அவசியமாகிறது. தமிழில் அரசியல் படங்களின் போதாமை காரணமாக இதைப் போன்ற படங்களைப் புகழ்ந்துகொண்டிருப்பது ஆரோக்கியமான செயல்பாடன்று. 

வெள்ளி, ஏப்ரல் 09, 2021

ஒரு சைக்கிள் ஒரு மாஸ்க் பல குறிப்புகள்


தமிழ்நாட்டின் 16ஆம் சட்டப்பேரவைக்கான தேர்தல் 2021 ஏப்ரல் ஆறு அன்று ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. பெரிய அளவிலான வன்முறைச் சம்பவம் எதுவுமின்றி இந்தத் தேர்தல் அமைதியாகவே நடந்துமுடிந்துள்ளது.  இதுவரை காலை ஏழு மணி முதல் மாலை ஆறு மணிவரையே வாக்குப்பதிவு நடத்தப்பட்டு வந்தது. இம்முறை முதன்முறையாக வாக்குப்பதிவு இரவு ஏழு மணி வரை நடத்தப்பட்டது. மாலை ஆறு மணி முதல் இரவு ஏழு மணி வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வந்து வாக்களிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது. திமுகவின் எம்பி கனிமொழி பாதுகாப்பு உடை அணிந்து வாக்களித்தார். மொத்தம் 72.78 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. காலையில் நடைபெற்ற வேகத்தைப் பார்த்தால் எண்பது சதவீதம் பதிவாகும்போல இருந்தது. ஆனால், மதியத்துக்கு மேல் சிறிது மந்த கதியாகிவிட்டது. ஆகவே, கடந்த முறையைவிடச் சற்றுக் குறைவாகவே வாக்குப்பதிவு நடந்துள்ளது. 



இந்தத் தேர்தலில் கட்சி தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட ரஜினி காந்த் கட்சி தொடங்கவில்லை. ஆனால், வழக்கம்போல் வந்து வாக்களித்துவிட்டார். ஊடகங்களின் கவனம் இந்த முறை ரஜினி மேல் இருக்கவில்லை. சட்டப்பேரவைத் தேர்தலில் முதன்முறையாகப் போட்டியிடும் கமல்ஹாசன் தன் மகள்களுடன் வந்து வாக்களித்தார். மு க ஸ்டாலின் குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன் பேரனைத் தூக்கியபடி வந்து வாக்களித்தார்.  


நடிகர் விஜயும் அஜீத்தும் ஊடகக் கவனத்தை ஈர்த்துவிட்டார்கள். நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தார். அதுவும் அவரது சைக்கிளில் கறுப்பு சிவப்பு வண்ணமிருந்தது பெரிய அளவில் பேசப்பட்டது. அதே போல் அஜித் அணிந்து வந்திருந்த முகக்கவசம் கறுப்பு வண்ணத்தில் சிவப்பு பட்டையால் இணைக்கப்பட்டிருந்தது. இதுவும் பேசுபொருளானது. இருவருமே ஆளும் தரப்புக்கு எதிரான மனநிலையை வெளிப்படுத்தினார்கள் என்று சமூக ஊடகங்களில் பலரும் எழுதினார்கள். ஆனால், வாக்குச்சாவடி காரில் வருவதற்கு ஏதுவான சூழலில் இல்லாததால் விஜய் சைக்கிளில் வந்தார் என்று விஜயின் பிஆர்ஓ தெரிவித்தார். ஆனால், அஜித்திடமிருந்து எந்த விளக்கமும் வரவில்லை. வாக்குச்சாவடியில் தன்னுடன் செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகர் ஒருவரின் மொபைல் போனைப் பிடுங்கினார் அஜித். பின்னர் அவரிடம் போனைக் கொடுத்துவிட்டு வருத்தமும் தெரிவித்தார். 


1952ஆம் ஆண்டு தேர்தல் முதல் இந்தத் தேர்தல்வரை வாக்களித்த மாரப்ப கவுண்டர் என்னும் தனிமனிதர் ஊடகத்தில் இடம்பிடித்தார். வாக்காளர் ஒருவர் சேலத்தில் மயங்கிவிழுந்து உயிரிழந்தார். வழக்கம்போல் இம்முறையும் சென்னையில் குறைந்த அளவிலான வாக்குப்பதிவே நடந்துள்ளது. படித்தவர்கள் மத்தியில் வாக்களிக்கும் ஆர்வமில்லை என்று பொதுவாகப் பேசப்பட்டது. யாருக்கு வாக்களித்து என்ன பண்ண என்னும் மனநிலையில் அவர்கள் இருக்கிறார்களோ என்னவோ? அடித்தட்டு மக்கள் உற்சாகத்துடன் வந்து வாக்களித்தார்கள். 


தேர்தலில் பதிவான வாக்குகளை வைத்து ஒரு முடிவுக்கும் வர இயலவில்லை. 2016இல் வாக்குப்பதிவு சதவீதம் 74.81. ஆனால் இப்போது அதைவிட குறைவான சதவீதத்தினரே வாக்களித்திருக்கிறார்கள். கொரோனா காலத்திலும் இவ்வளவு பேர் வாக்களித்திருப்பது ஆரோக்கியமான செய்தியே. 2011ஆம் ஆண்டு தேர்தலில் 78.29 சதவீத வாக்குப்பதிவு நடந்திருந்தது. இதுவரையான தேர்தல்களில் அதிக வாக்குப்பதிவு இதுவே. அப்போது ஆண்ட கட்சியான திமுகவுக்கு எதிராகத் தேர்தலின்போது பெரிய அலை வீசியது. மிகக் குறைவான வாக்குப்பதிவு நடந்தது 1957இல். அந்த ஒரு முறைதான் ஐம்பது சதவீதத்துக்கும் கீழே வாக்குப்பதிவு சென்றுள்ளது. வாக்குப்பதிவு சதவீதம் 46.75 ஆக இருந்தது. ஆட்சிக்கு எதிரான மிகப் பெரிய அலைவீசப்பட்டது எனச் சொல்லப்பட்ட 1996இலேயே 66.95 சதவீத வாக்குப்பதிவுதான் நடைபெற்றிருக்கிறது.


இதுவரை ஆட்சி மாற்றம் நடைபெற்ற எட்டு முறையும் அதாவது, 1967, 1977, 1989, 1991, 1996, 2001, 2006, 2011 ஆகிய ஆண்டுகளில் இந்த வாக்குப் பதிவு அடிப்படையில் பார்த்தால் ஒரு சுவாரசியமான விஷயம் தெரியவருகிறது. கடந்த முறையைவிட அதிகமாக வாக்குப்பதிவு நிகழ்ந்து நான்குமுறையும் (1967, 1996, 2006, 2011), குறைவாக வாக்குப்பதிவு நிகழ்ந்து நான்கு முறையும் (1977, 1989, 1991, 2001) ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. முந்தைய தேர்தலைவிட அதிக வாக்குப்பதிவு நடைபெற்று ஆட்சி மாற்றத்தை மூன்று முறை திமுக பெற்றுள்ளது (1967, 1996, 2006); குறைந்த வாக்குப்பதிவு நடைபெற்று ஆட்சி மாற்றத்தை மூன்று முறை அதிமுக (1977, 1991, 2001) பெற்றுள்ளது. இந்த முறை திமுக வென்று ஆட்சியமைத்துவிடும் என்றுதான் பரவலாகப் பேசப்படுகிறது. ஆனாலும் என்ன நடக்கிறது என்பதைக் காண மே 2 அன்று வரை காத்திருந்துதான் ஆக வேண்டும்.

செவ்வாய், ஏப்ரல் 06, 2021

போட்டாச்சு... போட்டாச்சு...

நான் முதன்முதலில் எந்தத் தேர்தலில் வாக்களித்தேன் என்பதே மறந்துவிட்டது. 1996 ஆம் ஆண்டுக்குப் பிறகு தான் வாக்களித்தேன் என்பது மாத்திரம் நினைவில் இருக்கிறது. அதுவும் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்தேனா சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களித்தேனா நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்தேனா என்னும் தெளிவு இல்லை. அது ஒரு மங்கிய சித்திரமாகவே மனத்தின் ஒரு மூலையில் முடங்கிக்கிடக்கிறது. அண்மையில் 2014ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து வாக்களித்து வருகிறேன். பாஜக ஆட்சி அமைந்தபிறகுதான் வாக்களிப்பது எவ்வளவு பெரிய பொறுப்பு என்பதை உணர முடிந்திருக்கிறது. 

ஜனநாயக நாட்டில் வாக்களிப்பது சிலருக்கு ஒரு சடங்கு. ஆனால், உண்மையில் வாக்களிப்பது வெறும் சடங்கு அல்ல. அது நமது ஜனநாயக உரிமை. அதை நிறைவேற்ற வேண்டியது நம் கடமை. பொதுவாக, வாக்களிப்பது குறித்து பெரிய புரிதல் பெரும்பாலானோரிடம் இருப்பதில்லை.  நாம் வாக்களித்து என்ன பெரிய மாற்றம் வந்துவிடப் போகிறது என்னும் விட்டேத்தியான மனநிலையிலேயே உள்ளதைப் பார்க்க முடிகிறது. இந்த மனநிலையிலிருந்து விடுபட்டால் மட்டுமே நூறு சதவீத வாக்களிப்பு என்பதை நம் நாடு சாத்தியமாக்கும் என்பது உறுதி. மிகப் பெரிய ஜனநாயக நாடு என்னும் பெருமை கொண்ட நமது நாடும் தேர்தல் என்பதை மிகப் பெரிய பொருள்செலவுடனும் ஆள்பலத்துடனும் தொடர்ந்து நிறைவேற்றிவருகிறது. 

2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிப்ரவரி 26 முதலே வாக்களிப்பதன் அவசியத்தை மனம் குறித்துவைத்துக்கொண்டது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தேர்தல் அறிக்கை, பிரச்சாரம் என வீறு கொண்டு எழுந்து அரசியல் களத்தில் பீடு நடைபோட்டது. பத்தாண்டுகளாக ஆட்சி வாய்ப்பை இழந்திருந்த திமுக எப்படியும் வெற்றிபெற்றே தீர வேண்டும் என்னும் முனைப்புடன் தேர்தலை எதிர்கொண்டது. திமுக கூட்டணியில் மிகப் பெரிய சிக்கல் ஏற்படும் என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில் எல்லாவற்றையும் சமாளித்தது திமுக. நாடாளுமன்றக் கூட்டணியை எந்தச் சேதாரமுமின்றி அப்படியே தக்கவைத்துக்கொண்டது. காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்கிறது. 

அதிமுக கூட்டணியில் தொடக்கத்திலிருந்து சிக்கல்தான். நாடாளுமன்றத் தேர்தலில் தங்களுடன் இருந்த தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தை இம்முறை தவறவிட்டது அதிமுக. பாஜக, பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. பாஜக என்பது அதிமுகவுக்கு மிகப் பெரிய சவால். தமிழ்நாட்டில் பாஜக என்பது பெரும்பாலான மக்களின் எதிர்ப்பைச் சம்பாதித்து வைத்துள்ள கட்சி. இதனுடன் கூட்டணி சேர்வது என்பது கல்லைக் கட்டிக்கொண்டு கிணற்றில் குதிப்பதுபோல்தான். மீள்வது பெருங்கடினம். ஆனால், அதிமுகவுக்கு வேறு வழியில்லை. பாஜகவைத் தவிர்த்துவிடவோ தள்ளிவைக்கவோ முடியவில்லை. இது அந்தக் கட்சிக்குப் பெரிய பின்னடைவு. 

இது தவிர, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஒரு கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது. இந்தக் கட்சிக்கு வெற்றிவாய்ப்பு எந்த அளவுக்கு உள்ளது என்பது பெரிய கேள்விக் குறி. ஆனால், அதிமுகவின் வாக்குகளைப் பெரிய அளவில் சிதைக்கும் கூட்டணியாக இது பார்க்கப்படுகிறது. தென் மாவட்டங்களில் இந்தக் கட்சி அதிகப்படியான வாக்குகளை அதுவும் அதிமுக வாக்குகளைப் பெறும் எனும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்தக் கட்சி பெறும் ஒவ்வொரு வாக்கும் அதிமுகவின் வெற்றியைப் பாதிக்கும் என்பது உறுதி. இது போக, நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான கூட்டணி ஒன்றும் தேர்தல் களத்தில் உள்ளது. இந்தக் கட்சியுடன் சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் கூட்டணி வைத்துள்ளன. இந்திய தேர்தல் வரலாற்றிலேயே முதன்முறையாக சமத்துவ மக்கள் கட்சி கூட்டணியில் பெற்ற தொகுதிகளில் மூன்றைத் திரும்பக் கொடுத்து சாதனை புரிந்தது. நாம் தமிழரும் இந்தக் களத்தில் போட்டியிடுகிறது. 

2019 நாடாளுமன்றத் தேர்தலின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்

இப்படியான தேர்தலில் காலையிலேயே வாக்களித்துவிட வேண்டும் என்று முடிவுசெய்திருந்தேன். தென்காசி பகுதியில் நேற்று பெய்த மழை காரணமாகக் காலையில் வெயில் இல்லை. இதமான சூழலே நிலவியது. காலையில் ஏழே கால் அளவில் புறப்பட்டு நன்னகரத்தில் உள்ள எனது வாக்குச்சாவடியில் (வாக்குச்சாவடி எண்:28) வாக்களிக்கச் சென்றேன். கறுப்புச் சட்டை அணிந்து சென்றிருந்தேன். அருகருகே இரண்டு வாக்குச் சாவடிகள் இருந்தன. முதல் வாக்குச்சாவடியில் ஆண், பெண் இருபாலர் வரிசையில் பலர் நின்றிருந்தனர். நான் இரண்டாவதாக இருந்த வாக்குச்சாவடியில் வாக்களிக்க வேண்டியதிருந்தது. அதில், பெண்கள் ஓரிருவர் மட்டுமே வரிசையில் நின்றிருந்தனர். ஆண்கள் வரிசையில் பத்து பேருக்கு மேலே நின்றிருந்தனர். நான் எனது முறைக்காகக் காத்திருந்தேன். 

வாக்குச்சாவடிக்கு வெளியே பூத் சிலிப்பைச் சோதிப்பதற்காகவும், சானிடைஸர், கையுறை வழங்குவதற்காகவும் சிலர் அமர்ந்திருந்தனர். ஒவ்வொருவரையும் தனித்தனியே அழைத்து பூத் சிலிப்பைச் சோதித்து உள்ளே வாக்களிக்க அனுப்பினர். உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படவில்லை. முதியவர் ஒருவர் வந்திருந்தார். அவரால் நிற்க முடியாத காரணத்தால் எல்லாருடமும் அனுமதி பெற்று வரிசையில் நிற்காமல் முன்னால் சென்றார். வாக்களித்த பின்னர் எல்லாருக்கும் இருகை கூப்பி நன்றி தெரிவித்துவிட்டுச் சென்றார். 

வாக்குச்சாவடியில் சுவரில் வாக்குச்சாவடி குறித்த விவரங்களும், வாக்காளர் குறித்த விவரங்களுக்கும் சுவரொட்டியாக ஒட்டப்பட்டிருந்தன. தென்காசி தொகுதியில் 18 வேட்பாளர்கள் போட்டியில் இருக்கிறார்கள். இது போக நோட்டாவும் உண்டு. ஆக, மொத்தம் 19. என்னுடைய பூத் சிலிப்பைச் சோதித்துவிட்டு சானிடைஸர் வழங்கினார்கள். கைகளில் அதைப் பரவச் செய்தேன். பின்னர் கையுறையை அணிந்துகொண்டேன். பாலிதீன் கவர் போன்றிருந்தது கையுறை. சிறிது நேரத்துக்குப் பின்னர் வாக்குச்சாவடிக்குள் அழைத்தார்கள். உள்ளே நுழைந்ததும், எதிரே அலுவலர்கள் மூவர் அமர்ந்திருந்தார்கள். ஒருவர் தனியே அவர்களுக்கு எதிரே அவர்களுக்கு இடப்புற மூலையில் அமர்ந்திருந்தார். ஆக மொத்தம் நான்கு அலுவலர்கள் இருந்தனர். அனைவருமே பெண்கள்தாம். 

வரிசையாக அமர்ந்திருந்த அலுவலர்களில் எனக்கு வலப்புறம் முதலில் அமர்ந்திருந்த அலுவலர் பூத் சிலிப்பையும், வாக்காளர் அடையாள அட்டையையும் பெற்று சோதித்தார். சோதித்தபின் என் பெயருக்கு எதிரே டிக் செய்து விட்டு, ரோஸ் கலர் கூப்பன் ஒன்றைக் கொடுத்தார். அடுத்து அமர்ந்திருந்த அலுவலர் என்னிடம் கையெழுத்துப் பெற்றுக்கொண்டார். அடுத்து இறுதியாக அமர்ந்திருந்த அலுவலரிடம் ரோஸ் நிற கூப்பனைக் கொடுத்தேன். அவர் வாக்களிக்கும் இயந்திரத்தைக் காட்டி வாக்களிக்கச் சொன்னார். வாக்கு இயந்திரம் ப வடிவ தடுப்பால் தடுக்கப்பட்டிருந்தது. இந்தத் தடுப்பு காரணமாக நான் யாருக்கு வாக்களிக்கிறேன் என்பதைப் பிறர் அறியாமல் பாதுகாக்க முடிந்தது. 

வாக்கு இயந்திரத்தில் நான் யாருக்கு வாக்களிக்க விரும்பினேனோ அந்த வேட்பாளருக்கு எதிரே இருந்த பொத்தானை அழுத்தினேன். அழுத்திவிட்டு அருகிலிருந்த விவிபாட் இயந்திரத்தைப் பார்த்தேன். அதில் நான் வாக்களித்த வேட்பாளர் பெயரும் சின்னமும் தாங்கிய சீட்டு தோன்றி, மறைந்தது. அதன் பின்னர் இயந்திரத்திலிருந்து பீப் ஒலி எழுந்தது. வெளியே வந்துவிட்டேன். இந்த முறை வாக்களித்துவிட்டேன். எனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிவிட்டேன். வீட்டுக்கு வந்து வாக்களித்ததை அறிவிக்கும் வகையில் ஃபேஸ்புக்கில் ஒரு போஸ்ட் போட்டேன். 

வாக்காளர்கள் மிகவும் ஆர்வத்துடன் வாக்களிக்கிறார்கள். காலை ஒன்பது மணிக்கெல்லாம் பத்து சதவீதத்துக்கு மேலே வாக்குப் பதிவாகியுள்ளது. மக்கள் வாக்களிக்கும் உற்சாகத்தைப் பார்த்தால் ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகளாக அவை இருக்கும் என்ற எண்ணம் தோன்றுகிறது. இந்த நிலை நீடித்தால் வாக்கு சதவீதம் எண்பது வரை செல்லலாம் என்று நினைக்கிறேன். 

லேட்டஸ்ட்

ஒரு விக்ரம் பத்து கமல்ஹாசன்

தொடர்பவர்