இந்த வலைப்பதிவில் தேடு

கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஏப்ரல் 29, 2021

ஜீ.முருகன் சிறுகதைகள்: பெருங்கூட்டத்தில் தனிமை கொண்டு திரியும் கதைகள்


சட்டென்று வசீகரித்துவிடுகின்றன ஜீ.முருகனின் சிறுகதைகள். முதலில் அவற்றின் மொழிநடை. முரண்டுபண்ணாமல் உடன் நடக்கும் செல்லக் குழந்தைபோல் அவருக்கு ஒத்துழைக்கிறது மொழி. அடுத்தது, சிறுகதையின் நீளம். அநேகமாக எல்லாக் கதைகளுமே சிக்கனமாகவும் எதை மறைக்க வேண்டும், எதை வெளிப்படுத்த வேண்டும் என்ற தெளிவுடனும் எழுதப்பட்டுள்ளன. ஆழமான சிறுகதைகளுக்கும் நீளமான சிறுகதைகளுக்கும் நிறைய வேறுபாடு உள்ளது என்பதை உணர்த்திவிடுகின்றன இந்தக் கதைகள்.

தொகுப்பை முழுமையாக வாசித்து முடிக்கும்போது, பிரியத்துடன் குழந்தைகளை மடியில் அமர்த்திக் கதை சொல்லும் மூதாட்டியின் நினைவு வந்து செல்கிறது. சக மனிதருடன் உரையாட முருகன் தேர்ந்தெடுத்திருக்கும் வழிமுறையே கதை என்பதாகவே படுகிறது. அவர் பரிமாறுவதற்கு விழையும் அனைத்துக் காரியங்களையும் கதையைச் சாக்காக வைத்துச் சொல்கிறார். கதையையும் சொல்கிறார்; அதன் வழியே உரையாடலையும் நிகழ்த்துகிறார். முன்னது மேலடுக்கில் இருக்க, பின்னது உள்ளடுக்கில் உள்ளது.

மனிதரைக் கிராமத்திலிருந்து நகரத்தை நோக்கி நகர்த்தும் வாழ்வின் துயரம், எல்லாருக்குமானது இயற்கை என்ற எண்ணமின்றித் தமக்கானது உலகம் என வாழும் மனிதரின் அத்து மீறல், ஆண் பெண் உறவில் ஏற்படும் பொருளற்ற சிக்கல், கடவுள் நம்பிக்கை, பொதுவுடைமைத் தத்துவம் எனப் பல விஷயங்கள் குறுக்கீடு நிகழ்த்தும் வாழ்வைப் பொட்டலம் போல் பொதிந்து தந்திருக்கிறார். மானுடத் துயரத்தைத் துயரம் என்ற நிலையிலேயே வைத்துப் பார்க்கிறார்; எழுதுகிறார். அதற்கு அதிகப்படியான சோகச் சாயையைப் பூசவில்லை. ‘வழித்துணை’கதையில் வெளிப்படும் தனிமையுணர்வு மனத்தில் பரவும்போது கதையில் மறைந்த நாயாக மனம் மாறிவிடுகிறது.

தொகுப்பின் கதைகளில் புழுவும் எலியும் நாயும் பூனையும் கழுதையும் யானையும் குரங்கும் குருவியும் பாம்பும் கிளியும் புறாவும் வருகின்றன. தமக்கான வாழ்வை எதிர்கொள்ளும் மனிதர்களும் வருகிறார்கள். ஒவ்வொரு பானையையும் வெவ்வேறு வடிவத்தில் செய்து பார்க்கும் குயவர் போல் வெவ்வேறு வடிவங்களில் கதைகளைச் செய்துபார்த்திருக்கிறார். கற்பனை யான சம்பவங்களும் நிகழ்ந்ததாக நம்பக்கூடிய சம்பவங்களும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து மாய யதார்த்தக் கதைகளாக மாறியிருக்கின்றன.

ஜீ. முருகன்
துடுப்பற்ற படகு கடலின் மேலே சதா அலைவுறுவதுபோல் காமம், மரணம் இரண்டுக்குமிடையே அலைக்கழிக்கப்படும் மனித மனம் அதிலிருந்து வெளியேற ஏதோவொரு வழி தேடி அலைகிறது. அந்த மனத்தின் அலைச்சலை, உளைச்சலை உள்வாங்கி அவற்றைக் கதைகளாக்கி ஆறுதலடைகிறார் முருகன். புணர்ச்சியும் சாவும் இணைந்த புள்ளிகளால் கோலம் போட்டது போல் தொகுப்பு அமைந்திருக்கிறது. பெண்களின் வாழ்க்கையில் ஆண்களாலும் ஆண்களின் வாழ்க்கையில் பெண்களாலும் சிக்கல்கள் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. மனச்சிதைவென்னும் அபாய விளிம்பில் நிற்கும்படியான ஆண்களைப் பல கதைகளில் காண முடிகிறது. தலையணை கட்டிலில் கிடக்கும் கோலமே ஓர் ஆணுக்குப் பெண்ணின் துரோகம் பற்றிய குரோத நினைவைத் தூண்டிவிடும் அளவுக்கு ஆணின் மனத்தில் பெண்ணின் உடம்பு பதற்றத்தை ஏற்படுத்துகிறது.

தனிமையில் அழுதபடியிருக்கிறார் ஒரு தாய். விலக்க முடியாத துயரமாகத் தன் மீது கவிந்து கிடக்கும் நோயுற்ற மகனைத் தூக்கித் திரியும் தாயொருத்தி அவனைப் பிணமாகப் பார்க்கிறாள். குழந்தை சீரழிக்கப்படுவதன் வேதனை தாளாமல் தவிக்கிறான் ஓர் ஓவியன். இப்படிப் பல கதாபாத்திரங்களை வாசகருக்கு நெருக்கமாக்கியிருக்கிறது கதைகளின் கூறுமுறை.

ஒரு வகையில், சமூகத்தின் மூடாக்கை விலக்கிப் பார்க்கின்றன சில கதைகள்; சில கதைகளோ மூடாக்கை விலக்கப் பார்க்கின்றன. பாலியல் உணர்வு ‘காண்டாமிருகம்’ போன்ற கதைகளில் உள்ளாடைகளில் மறைக்கப்பட்டிருக்கிறது; ‘இடம்’, ‘கிழத்தி’ போன்ற கதைகளில் துண்டிக்கப் பட்ட சிற்பத்தின் திமிர்ந்த மார்புபோல் வெளியே விழுந்து கிடக்கிறது. ‘பூனைகள் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்?’ காமம் தொடர்பான நல்ல கதை.

இரட்டை வாழ்வு நடத்தும் தோழர்களை முருகனின் எழுத்து புழுப் புழுவாய் உதிர்த்துவிடுகிறது. ‘புழு’ கதையில் சவக்கிடங்கில் கிடக்கும் பிணங்களை விழித்தெழச் சொல்லும் தோழர் ஒருவரைச் சந்திக்கும்போது, ‘விருந்தோம்ப’லில் தோழர்களைப் பெரிதாகப் பகடி செய்யவில்லை என்றாகிவிடுகிறது. பரந்து விரிந்து கிடக்கும் இந்தப் பூமியில் ஆறுதலாகச் சாய்ந்துகொள்ள எந்தத் தோளுமில்லை என்ற யதார்த்தத்தை உணர்த்தும் இந்தக் கதைகள் அதனாலேயே ஆசுவாசமே தருகின்றன. வாழ்வு குறித்த பொய்யான நம்பிக்கைகளில் வாசகரை அமிழ்த்தும் கதைகள் அல்ல இவை. அசலான வாழ்வில் நகல்கள் பெருத்துவிட்டதைச் சொல்லும் கதைகள்.

‘பாரிச வாயு’ என்னும் கதையில் புறாவைத் தேடி அலைகிறான் கிருஷ்ணன். புறாக்களை எங்கும் காணவில்லையே என்ற பரிதவிப்புடன் தொடங்கும் கதையின் இறுதியில் புறாவை அவன் தேடுவது - தன் நாயின் நோய் தீர்க்க - புறாவின் ரத்தத்துக்காகத்தான் என்பது தெரிகிறது. தாயின் நோய் குறித்த நிலை கதையில் சொல்லப்படவில்லை. ஆனால், இரண்டு புறா வேண்டுமா எனக் கேட்கும்போது, சற்று யோசனை செய்துவிட்டு இப்போதைக்கு ஒன்று போதும் என்று முடிவெடுக்கும்போது அந்தத் தாயின் நிலை வாசகருக்குப் புரிகிறது. இப்படித்தான் பல கதைகளில் சொல்லப்பட்ட வாக்கியங்கள் சொல்லப்படாத சேதிகளை உணர்த்துகின்றன. ‘கவுண்டர் கே’ என்னும் கதை கிட்டத்தட்ட சுய விமர்சனக் கதையைப் போலவே எழுதப்பட்டிருக்கிறது. மொத்தமுள்ள ஐம்பது கதைகளும் பெரும்பாலும் வெவ்வேறானவை. ‘இடம்’ ‘கிழத்தி’, ‘பாரிச வாயு’ ‘வேட்டை’, ‘மஹா விஜயம்’ ‘சத்திரம்’ போல சில கதைகளில் ஒரு தொடர்ச்சி காணப்படுகிறது.

வாழ்வென்னும் புதிரை அவிழ்க்க அவிழ்க்க அது முடிச்சுகளை உருவாக்கிக்கொண்டே போகிறது. அடுப்பங்கரைச் சுவரில் படியும் கரிக் கறைபோல் மனத்தில் படியும் அறிவுக் கறையை இலக்கியம் கொண்டு போக்கும் முயற்சிகளாகவே கதைகளை எழுது கிறார். வாழ்க்கையை அதன் போக்கில் எதிர்கொண்டபோதும், அதன் முரணானது மனத்தை அரிக்கிறது. ஏன், எதற்கு, எப்படி என்ற கேள்விகளை உருவாக்கிக்கொண்டே இருக்கிறது. அப்படிக் கேள்விகள் எழுப்பிக் கொள்ளாதவர்கள் பாக்கியவான் கள். இந்தத் தொகுப்பு அவர்களுக் கானதல்ல. கேள்விகளில் முட்டி மோதிக் குருதி வழிய நிற்கும் மாந்தர்களுக்கான கதைகள் இவை. அந்தக் கேள்விகளை உருவாக்குவதற்கான மேடையாக அல்லது அந்த மேடையில் உரு வான கேள்விகளாக இந்தக் கதைகள் கருக்கொள்கின்றன. ஒரு பெருங்கூட்டத்தில் தனிமை கொண்டு திரியும் இந்தக் கதைகள் தனித்தும் தெரிகின்றன. கதைகளுக்கேற்ற பொருத்தமான அட்டைப்படத்துடன், நல்ல முறையில் நூலை உருவாக்கியிருக்கிறது ஆதி பதிப்பகம். வரிகளின் தொடக்கத்தில் ஒற்றெழுத்து வருவதைத் தவிர்த்திருக்கலாம்.

பக்கங்கள் : 400 விலை : ரூ.320
வெளியீடு:
ஆதி பதிப்பகம்
திருவண்ணாமலை 606806
தொடர்புக்கு: 9994880005

வியாழன், பிப்ரவரி 11, 2021

எழுத்தாள மனசு

நான் உங்களுக்கு ஒரு கதை சொல்லப் போகிறேன். ஒரு கதையின் முதல் வரி முத்தாய்ப்பாக இருக்க வேண்டும் என்பார்கள் ஆனால், முதல் வரியே இந்தக் கதையில் இப்படி மொக்கையா தொடங்குதே, கதை எந்த லட்சணத்துல இருக்குமோ என எடுத்த எடுப்பிலேயே எதிர்மறையா யோசனை போவுதா? மனசை அப்படிக் கண்டபடி அலையவிடாதீங்க. எல்லாத்துலயும் ஒரு விதிவிலக்கு இருக்கும். அதனால என்னதான் சொல்றான்னு பார்ப்போம், பிடிச்சா படிப்போம் இல்லாட்டிப் போய்டுவோம் என அதை சமாதானப்படுத்துங்கள். பரவாயில்லயே, சொன்ன உடனே அதுக்கு மதிப்புக் கொடுத்து மனச சமாதானப்படுத்தி தொடர்ந்து வாசிக்கிறீங்களே, அந்த நல்ல மனசுக்கு ஒரு குறையும் வராது தைரியமா வாசிங்க. அதெல்லாம் இருக்கட்டும் முதலில் கதையைச் சொல்லுன்னு நீங்க தலையில் தட்டுவதற்குள் நான் கதையைச் சொல்லிவிடுகிறேன்.

கதையில் என்ன பெரிய சுவாரசியம் இருந்துரப்போவுது என அலுத்துக்கொள்ளும் நண்பர்களுக்கு ஒரு ரகசியம் சொல்கிறேன். இது உண்மைச் சம்பவத்தின் அடிப்படையிலான கதை. கதையைவிட உண்மைச் சம்பவத்துல நல்ல சுவாரசியம் இருக்குங்கிறது உங்களுக்குத் தெரியும்லா? ஆனா அதை அப்படியே சொன்னால் சுவையா இருக்காதுல்ல அதனால அத கதையா மாத்திட்டேன். இப்ப இது சுவாரசியமான கதையா ஆயிருச்சு. இது சுவாரசியமான கதையா இல்லையாங்கிறத வாசிக்கிற நாங்கல்லா முடிவுபண்ணனும்னு நீங்க நினைக்கிறது சரிதான். கதையை எழுதுற நான் என்னதான் அடக்கமா இருந்தாலும் கதையைப் பற்றிய உண்மையைச் சொல்லாட்டி நான் கதைக்குத் துரோகம் செஞ்சவனா ஆயிரக்கூடாதுல்லா? அதனால்தான் கதை சுவாரசியமானதுன்னு உண்மையைச் சொன்னேன். அது கதையன்று கதை பற்றிய நிஜம். கதைக்குள்ள உண்மையும் இருந்தாதான நல்லது. ஆனா, நீ கடைசி வரை கதையைச் சொல்ல மாட்டபோல என உங்களுக்கு இந்த நேரம் தோனியிருக்கும். அதனால கதைக்குள்ள போறன்.
இந்தக் கதையைக் கொஞ்சம் குஷியா தொடங்குறேன். குஷின்ன உடனே குஷியாயிட்டீங்களா. இடுப்பு கிடுப்புன்னு மனசு எங்கெங்கோ போயிராம பாத்துக்கங்க. அது உங்க பாடு. என்னோட பாடு கதை சொல்றதுதான். பொதுவா, நம்மோட ஃப்ரண்ட்ஸ் நமக்கு எப்படியெப்படியெல்லாமோ உதவுவாங்க. சில வேளைல இப்படியெல்லாம் உதவ முடியுமான்னு நமக்கு திக்பிரமை ஏற்படுற மாதிரி உதவிடுவாங்க. அப்படியொரு நண்பனின் உதவிதான் இந்தக் கதை. இப்ப புரியுதா ஏன் குஷியா தொடங்குறதா சொன்னன்னு. நாம்பாட்டுக்கு குஷின்னு சொல்லிட்டேன். நீங்க குஷி பார்த்திருக்கீங்களான்னு கேக்கவேயில்ல? ஆனா பாத்துருப்பீங்கங்க நம்பிக்கையில் தொடர்றேன். சில லாஜிக் பார்த்தா கதை நகராது. ஏற்கெனவே இங்க அப்படியே செக்குலக்கை மாதிரி கதை ஒரே இடத்திலதான் நட்டமா நிக்குது அப்படீங்கிறீங்களா? கதையோட சுருக்கத்தைச் சொல்லிட்டானே இனி ஏன் இதை வாசிக்கணும்னு உங்களுக்குத் தோனலாம். தப்பில்ல, ஆனா என்ன உதவின்னு பாப்பமேன்னு உங்க மனசு இப்ப உங்கட்ட சொல்லும் பாருங்க. அது நம்ம பக்கம் சாஞ்சிருச்சு. நெனப்புதான் பொழப்ப கெடுக்குதாம் என்னும் பழமொழியை இப்ப எதுக்கு நீங்க தேவையில்லாம நெனைக்கீங்க.
இந்தக் கதை ரொம்ப கலோக்கியலாவும் சாதாரணமாவும் தொடங்குனாலும் இதன் முடிவு ரொம்ப சோகமா இருக்கும். சோகமா, அது பிடிக்காதேன்னு டக்குன்னு வாசிப்புக்கு குட்பை சொல்லப் பாக்குறீங்களே கொஞ்சம் பொறுமையா இருங்க. முடிவு சோகமாக இருந்தாலும் நீங்க அந்தச் சோகத்துக்காகக் கண்ணீர் விடமாட்டீங்க. அந்தச் சோகத்தை நெனச்சு சிரிக்கத்தான் போறீங்க. சோகமான விஷயத்துக்கு எப்படிச் சிரிப்பு வரும்னு ஒரு யோசனை வருதா. இப்ப யாராவது வாழப்பழத் தோல் வழுக்கி விழுந்தா அது சோகமான நிகழ்வுதான? ஆனால், அதுக்கு வருத்தப்படுவீங்களா, சிரிப்பீங்களா. வருத்தப்படுவோம் ஆனால் சிரிப்பு வந்துரும் அப்படிங்கிறீங்களா. நீங்க இந்த அளவு வெளிப்படையா உண்மையைச் சொல்லும்போது நானும் உண்மையைத்தான சொல்லணும். அதனாலதான் கதையோட முடிவு எப்படி இருக்கும்னு முன்னாடியே சொல்லிட்டேன் ஆனா சொல்லல. இன்னும் டீ வரலன்னு வட போச்ச காமெடியில் வடிவேலு சொல்றமாதிரி இன்னும் கதை வரலன்னு நீங்க சொல்லப்போறீங்கன்னு எனக்கும் தெரியுது.
இந்தக் கதையின் நாயகன் ஓர் எழுத்தாளன். டக்குன்னு தலைப்பைப் படிச்சீங்க பாரு அங்க நிக்கிறீங்க. உங்களோட சமயோஜிதப் புத்திக்கு ஒரு சபாஷ். அவன் எப்டியாப்பட்ட ஆளுன்னா, சுஜாதா மாதிரி, ஜெயமோகன் மாதிரி, தமிழ்வாணன் மாதிரி, ஜி.எஸ்.எஸ்.மாதிரி (ஜி.எஸ்.எஸ். யாருன்னு தெரியாட்டா நீங்க சமகாலச் செய்திப் பத்திரிகைகளை வாசிச்சிருக்க மாட்டீங்க அல்லது அத கவனத்தில் வைத்திருக்க மாட்டீங்கன்னு அர்த்தம். ஏனெனில், ஜி.எஸ்.எஸ். நாளிதழ்களிலும் வார இதழ்களிலும் மலை மலையா எழுதுறாரு.) என்னன்னாலும் அசராம எழுதுற ஆளு. அவன் ஒரு தொலைபேசி நிறுவனத்துல அதிகாரியா இருந்தான். அங்க அவனுக்கு வேலையே இருக்காது. எந்த வேலையும் இல்லையேன்னு எழுத ஆரம்பிச்சான். ஒருத்தனுக்கு நேரம் நல்லாயிருந்தா அவன் என்ன செஞ்சாலும் சும்மா மஜாதாம்பாங்க. அப்படி தான் அவனுக்கு ஆயிருச்சு. அவன் என்ன எழுதினாலும் எல்லாரும் படிக்க ஆரம்பிச்சாங்க. படிச்சதோட நிறுத்திட்டாப் பராவாயில்ல. சூப்பர் சூப்பர்னு சும்மா அவனப் பாராட்டித் தள்ளிட்டாங்க. அதனால அவன் துணிச்சலா ஒரு வேலையைச் செய்தான்.
அது எப்படிங்க, துணிச்சலா ஒரு வேலையை எழுத்தாளன் செய்தான்னு சொன்ன உடனே அது நாவல்தான்னு முடிவு பண்ணுனீங்க? உண்மையிலேயே உங்களுக்கு செம அறிவுங்க. அப்படியில்லாட்டி நீங்க எதுக்கு இந்தக் கதையைப் படிக்கப் போறீங்க? கோவிச்சுக்காதீங்க. இது சும்மா இடையில் ஒரு விளம்பரம்தான். பிடிக்காட்டி இதைப் படிச்சத மறந்துட்டு மேல படியுங்க. என்னங்க படிச்ச வரிய மறுபடி படிக்கிறீங்க. ஓ மேலன்னு சொன்னதாலயா, அய்யய்யோ சாரிங்க மேலன்னா மேல இல்ல, கீழ. அப்ப கீழன்னா கீழ இல்லயா மேலயான்னு சட்டுனு கோபப்படுறீங்களே? இது ஒரு காமெடிக் கதைதான. அதுக்குப் போய் இவ்வளவு கோபமா? ஓ புரியுது இதை காமெடி கதைன்னு சொன்னதாலதான் கோபமா? பாத்தீங்களா நமக்குள் ஒரு அன்னியோன்யமான உறவு வந்துருச்சு. இதுதான் ஒரு கதைக்கு அவசியம். எழுத்தாளனும் வாசகனும் ஏதாவது ஒரு கட்டத்தில் இப்படி ஒருத்தருக்கொருத்தர் பேசி உறவாடுவதும் உரையாடுவதும் ரொம்ப ஆரோக்கியமானதுதான். டேய் சவ்வப்போடாம கதைக்கு வாடா? வாடான்னா நான் வாட மாட்டேன். ஏன்னா அது உங்களுக்கு இந்தக் கதைமேல உள்ள உரிமையில வந்த வார்த்தைன்னு எனக்கும் தெரியும். கதை சொல்றதத் தவிர எல்லாம் உனக்குத் தெரியுதுடான்னு நீங்க கொஞ்சம் சத்தமாவே சொல்லிட்டீங்க. அமைதியா சொன்னாவே எனக்குக் கேட்கும் ஆனா நீங்க சத்தமாவே சொல்லிட்டாதாலே. சட்டுனு என் காதில் விழுந்திருச்சு. உனக்கு காதே விழுந்துருச்சுன்னு நெனச்சோம். நல்லவேளை காது இன்னும் இருக்குதுன்னு சொல்றன்னு ஆசுவாசம் அடைஞ்சிட்டீங்களே. சமத்துதான் நீங்க.
ஆங் கதையை எங்க விட்டேன்? என்னடா தீப்பொறி ஆறுமுகம் மாதிரி கேக்குறன்னு நினைக்காதீங்க. எனக்குக் கொஞ்சம் ஞாபக மறதி. இது வேறயா? உருப்பட்ட மாதிரிதான்னு தோனுதா? ஞாபகம் வந்துருச்சு. ஞாபகம் வந்துருச்சு. நாயகனான நம்ம எழுத்தாளன் ஒரு நாவலை எழுதினான். கிட்டத்தட்ட எழுத்து ஒரு தவம்னு சொல்ற மாதிரி கடுமையான தவம் பண்ணுன மாதிரி நாவலை முழு மூச்சா எழுதி முடிச்சான். மொத நாவல எழுதி முடிச்ச உடனே அவனுக்கு அப்படியே சும்மா கிர்ர்ர்ர்ன்னு இருந்துச்சு. ஆனா பாருங்க. எழுதுறதவிட அதை யாராவது வாசிச்சு சொன்னாதான அது எப்படி வந்திருக்கும்னு தெரியும். அதுக்கு என்ன பண்ண? இந்த மாதிரி நேரத்துல இருக்கவே இருக்கான் நம்ம பஞ்சாயத்துன்னு சொல்ற மாதிரி (ஆமா, சரிதான் களவாணி பஞ்சாயத்துதான். அதென்ன களவாணி பஞ்சாயத்துன்னு யாராவது ஒரு பஞ்சாயத்த கூட்டிராதீங்க. அதனாலதான் ப்ராக்கெட்டுல போட்டுட்டேன். நீங்க இதப் படிக்காட்டிக்கூடப் பரவாயில்ல, கதையைப் படிக்காம விட்டுட்டுப் போயிறாதீங்க.) எல்லாருக்கும் ஒரு ஃப்ரண்டு இருப்பானே. அப்படி நம்ம நாயகனுக்கும் ஒரு ஃப்ரண்ட் இருந்தான். அவனுக்கு போன போட்டான். உடனே என்ன ஏதுன்னு கேக்கவே நேராவே வந்துட்டான். அதெப்படின்னு லாஜிக்லாம் கேக்காதீங்க.
டேய் நண்பா, முதன்முதலா ஒரு நாவல் எழுதியிருக்கேன். இது மட்டும் வெளிவந்துச்சுன்னா தமிழில் இதுவரை இப்படி ஒரு நாவல் வந்ததில்லன்னு சொல்லும்படி இருக்கும். இந்த நாவல எனக்கு அடுத்து வாசிக்கிற வாய்ப்ப ஒனக்குத் தான் கொடுக்குறேன். அப்படி இப்படின்னு என்னவெல்லாமோ பிட்டப் போட்டான். நண்பன் கொஞ்சம் வாசிக்கிற ஆளு. அவனுக்கு உண்மை புரிஞ்சுபோச்சு. ஆனாலும் என்ன பண்ண முடியும் துரோகமே பண்ணுனாலும் நண்பனா இருந்தா மன்னிச்சிரணும்ங்கற தமிழர் மரபுல வந்தவனாச்சே. கண்டிப்பா வாசிக்கிறேன்னு விருப்பத்தோட தலையை நீட்டினான்.
ஆனால், ஒருவிஷயம்டா. என்னப் பொறுத்தவரை இந்த நாவல் இங்கிலீஷுல மட்டும் வந்தா எங்கெயோ போயிரும். அதுக்காக நீ இதை நல்லா இருக்குன்னு சொல்லணும்னு அவசியமில்லை. உன்னோட கருத்த நான் ரொம்ப மதிக்கிறேன். நீ படிச்சிப்பாரு. நல்லாயில்லன்னு தோனுச்சுன்னா அப்படியே என்ட்ட வந்து சொல்லு. நான் நாவலை அப்படியே கொளுத்திடுறேன் என்று கொஞ்சம் ஓவராவே உணர்ச்சிவசப்பட்டான். என்னமோ பெரிய காஃப்கான்னு நினைப்பு அவனுக்கு. சரி அவனும் எழுத்தாளன் தானே அவனுக்கும் உணர்ச்சி இருக்காதா என்ன? சே சே ஏன்டா அப்படிச் சொல்ற உம்மேல எனக்கு நம்பிக்கை இருக்கு நீ நல்லா எழுதிருப்பே. அப்படின்னு அவன் சொல்லவுமே நம்ம எழுத்தாளருக்குப் பரவாயில்ல நாம சொன்னது ஒர்க் அவுட் ஆயிருச்சுன்னு ஒரு பரவசம் வந்திருச்சு. கண்டிப்பா நான் படிச்சிட்டு உண்மையைச் சொல்றேன். ஆனால், எனக்கு ஒரு பத்து நாள் டைம் வேண்டும் என்றான் நண்பன். நாயகனும் தாராளமா டைம் எடுத்துக்கோ. ஆனால், மறுபடியும் சொல்றேன் கதையைப் பத்துன உண்மையைத் தான் நீ சொல்லணும்னு அடம்பிடிச்சான். இனியும் பொறுக்க முடியாதுன்னு நெனச்ச நண்பன் கதையை வாங்கிட்டு நடையைக் கட்டிட்டான்.
பத்து நாள் பத்து யுகம் மாதிரி கழிஞ்சுச்சு நம்ம எழுத்தாளருக்கு. பன்னிரண்டு நாளுக்குப் பிறகு நண்பன் எழுத்தாளரப் பார்க்க வந்தான். ஆனால் கையில நாவலோட பிரதி இல்ல. அதைப் பார்த்ததும் எழுத்தாளருக்குப் பக்குன்னு ஆயிருச்சு. ஆனா அவரு எழுத்தாளராச்சே. உணர்ச்சியை அவ்வளவு சீக்கிரம் வெளிப்படுத்துவாரா? எதையும் கண்டுக்கிடாத மாதிரி எப்போதும்போல ஃப்ரண்டுட்ட பேசிட்டிருந்தாரு. இவரோட ஃப்ரண்டுன்னு அவரு எப்படி இருப்பாரு. அவரும் எப்போதும்போல நல்லா ஜாலியா பேசிகிட்டே இருக்காரு. எழுத்தாளரோட மனசு ஃபுல்லா நாவலப் பத்தி ஒண்ணுமே சொல்ல மாட்டக்கானேன்னு இருந்துச்சு. ஆனால் கேக்க முடியல. நண்பரும் நேரமாயிருச்சு கிளம்ப ஆயத்தமாயிட்டாரு. எழுத்தாளருக்கோ இருப்பு கொள்ளல. நாவலப் படிச்சியான்னு கேக்க வாய்வர வார்த்த வந்துருச்சு ஆனாலும் ஆர்வத்த அடக்கிட்டு நண்பர வழியனுப்பி வச்சிட்டாரு.
இப்படி இன்னும் ஒரு பத்து நாளு போச்சு. மறுபடியும் ஒரு நாள் நண்பர் வந்தாரு. இப்பவும் அவர் கையில நாவலோட பிரதி இல்ல. இந்த முறை எப்படியும் கேட்டுடணும்னு எழுத்தாளரு முடிவு பண்ணிட்டாரு. என்னடா எப்படியிருக்கன்னு கொஞ்சம் கெத்தாவே கேட்டாரு நம்ம எழுத்தாளரு. அவரோட ஃப்ரண்டுக்குப் புரிஞ்சு போச்சு. சாரிடா போன தடவயே சொல்லணும்னு நெனச்சேன். ஆனா மறந்துட்டேன் சாரிடான்னு என்னமோ கூட்டமான பஸ்ல தெரியாம கால மிதிச்ச மாதிரி சொன்னாரு. எழுத்தாளருக்கோ என்னவோ போலாயிருச்சு. எப்படிப்பட்ட நாவல எழுதி இவன்ட்ட கொடுத்தோம் அதைப் பத்திப் பேசாமா ஏதேதோ பேசுறான்னேன்னு இருந்துச்சு.
நாவலப் பத்தி நாம பேசும்போது நீ என்னடா சொன்னன்னு எழுத்தாளர்ட்ட நண்பர் கேட்டார். இங்கிலீஷ்ல மட்டும் வந்தான்னு எழுத்தாளர் ஆரம்பிச்சாரு. அதில்லடா கடைசியா என்ன சொன்ன? நல்லாயில்லன்னா சொல்லு கொளுத்திட்றேன்னு சொன்னேன் எனச் சொல்லும்போதே எழுத்தாளருக்கு ஒரு மாதிரி கலவரமாயிருச்சு. குரல் ஒடஞ்சிருச்சு. கொஞ்சம் விட்டா அழுதுருவாரு போல இருந்துச்சு. அதுக்கென்னடா இப்போ? என எழுத்தாளர் கேக்குறதுக்குள்ள நண்பர் முந்திக்கிட்டாரு. அதான் ஒனக்கு எதுக்கு சிரமம்னு நானே கொளுத்திட்டேன்னு சொல்லி முடிக்கிறதுக்குள்ள எழுத்தாளர் உடம்புல சொக்கப்பனை கொளுத்திய மாதிரி ஆயிருச்சு. இருந்தாலும் ஃப்ரண்ட் பொய் சொல்றானோன்னு அவன் கண்ணைப் பார்த்தார். அதில் தீர்க்கமான முடிவு தெரிஞ்சுச்சு.
இவ்வளவு நடந்ததுக்குப் பிறகு நம்ம எழுத்தாளர் நண்பர்ட்ட கேட்டாருங்க ஒரு கேள்வி. அதுதான் இந்தக் கதையோட தலைப்ப வைக்க உதவுச்சு. அப்படி என்னதான் கேட்டாரு? இருங்க சொல்லிட்றேன். டேய் நீ உண்மையிலேயே கதையைப் படிச்சியான்னு கேட்டாரு. என்னங்க இப்படிச் சிரிக்கீங்க. இது சோகக் கதைன்னு தெரிஞ்சும் சிரிக்கிறீங்க பாருங்க. அந்த நாவல் மேல் எழுத்தாளருக்கு இருந்த நம்பிக்கையை நீங்களும் புரிஞ்சிக்காம சிரிக்கீங்க பாருங்க, உண்மையிலேயே இதுதாங்க சோகம். இனிமேயும் இந்தக் கதையைத் தொடர்வதில் எனக்கு இஷ்டமில்லீங்க. இத்தோட கதைக்கு முற்றுப்புள்ளி வச்சிட்றேன்.

செவ்வாய், ஜனவரி 05, 2021

பணி ஒப்பந்தத்தின் பத்தாவது ஷரத்து

இது ஒரு நகைச்சுவைக் கதை என்பதால் யாரும் லாஜிக் பார்க்காதீர்கள். ஆனால், கதையைப் படித்து முடித்த பின்னர் உங்களுக்குச் சிரிப்பு வராவிட்டால் கவலைப்படாதீர்கள். இப்படியொரு கதையை எப்படி நகைச்சுவைக் கதை என்று சொன்னான் இந்த மடையன் என்று நினைத்துச் சிரித்துக்கொள்ளுங்கள். அப்போது இது நகைச்சுவைக் கதை என்பது உறுதிப்பட்டுவிடும். ஏனென்றால், நீங்கள்தான் சிரித்துவிட்டீர்களே! 

இந்தக் கதை நடந்து சுமார் மூவாயிரம் நான்காயிரம் ஆண்டுகள் இருக்கும். ஆனாலும் இப்போதுள்ள சூழலுக்கும் பொருந்திப்போகும்வகையில் கதை இருக்கிறது என்பதுதான் இந்தக் கதையின் சிறப்பு. சரி கதைக்குள் போவோமா? கதையைக் கவனமாகப் படியுங்கள். கதையின் இடையிடையே நகைச்சுவைக்கான சாத்தியங்கள் ஒளிந்துள்ளன. அவற்றைத் தவறவிட்டுவிட்டால் கதையைப் படித்து முடித்த பின்னர் உங்களுக்குச் சிரிப்பு வராமல் போய்விடக் கூடும். அப்படிக் கதையைப் படித்து முடித்த பின்னர் சிரிப்பு வராதவர்களுக்காகவே முதல் நான்கு வாக்கியங்கள். கதையைப் படித்து முடித்தபின்னர் சிரிப்பவர்கள் முதல் நான்கு வாக்கியங்களைப் படிக்கத் தேவையில்லை. ஆனால், பழக்கதோஷத்தில் முதலிலேயே படித்துவிட்டீர்கள் என்றால் பரவாயில்லை. அதற்காக வருந்தாதீர்கள். ஒரு நகைச்சுவைக் கதையைப் படித்துவிட்டு அதிலும் அதற்காகச் சிரித்துவிட்டு வருத்தப்படுவது நன்றாக இருக்காது அல்லவா? 

எப்படா அலுவலகம் திறக்கும் என்றாகிவிட்டது அவனுக்கு. சுமார் பத்து மாதங்கள் அடைத்தே வைத்துவிட்டார்கள். இன்றுதான் அலுவலகத்தைத் திறக்கிறார்கள். நிறுவனம் தொடங்கிய நாள் முதல் இந்தப் பத்து மாதங்கள்தான் நிறுவனம் நல்ல லாபமீட்டியதாகவும் அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடவே இன்று அலுவலகம் திறக்கப்பட்டதாகவும், கொண்டாட்டம் முடிந்த பின்னர் மீண்டும் அலுவலகம் மூடப்பட்டுவிடும் என்றும் செய்தி கசிந்தது. அது உண்மையா பொய்யா என்று ஒருவருக்கும் தெரியவில்லை. யாரிடமும் கேட்கவும் யாருக்கும் தைரியமில்லை. ஏனெனில், சில மாதங்களுக்கு முன்னர் ஏன் இன்னும் அலுவலகம் திறக்கப்படவில்லை என்று தன் மனதுக்குள் கேள்வி கேட்ட ஊழியன் ஒருவன் உடனே பணியிலிருந்து நீக்கப்பட்டான். தான் மனத்தில் நினைத்திருந்ததை எப்படி அலுவலகம் கண்டுபிடித்தது என்பது அந்த ஊழியனுக்குத் தெரியவேயில்லை. ஆனால் அவன் மனத்துக்குள் நினைத்தது அதுதான் என்பது மட்டும் அவனுக்குத் தெரிந்திருந்தது. அதுபோலவே அலுவலகத்துக்கும் தெரிந்திருந்தது. இந்த மாயம் எப்படிச் சாத்தியமாயிற்று என்ற கேள்விக்கு யாரிடமும் விடையில்லை. எனவே, எவருக்கும் எந்தக் கேள்வியும் நாவில் எழவேயில்லை. எல்லாரும் அநியாயத்துக்கு மௌனம் காத்தார்கள். பொதுவான விஷயம் என்றால் சும்மா பிச்சு உதறும் சூராதி சூரர்களும் அலுவலக விஷயமென்றால் அமைதியாகிவிடுவார்கள். மற்றபடி அவர்கள் அனைவருமே புரட்சியாளர்கள்தாம். 

நீண்ட இடைவேளைக்குப் பிறகு இன்றுதான் அலுவலகம் திறந்ததால் எல்லாரையும் போல் அவனும் உற்சாகத்துடன் அலுவலகத்துக்குச் சென்றான். அவன் அலுவலகத்தில் நுழையும்போது, அவனது கையைப் பிடித்துக்கொண்டு அழகான பெண்மணி ஒருத்தியும் அவன் தோளோடு தோள் உரசி வந்தாள். நீண்ட நாள்களாகத் திருமணமே செய்யாமல் இருந்தவன் யாரோ ஓர் அழகியின் பிடியில் விழுந்துவிட்டான் போல என அனைவரும் கருதினார்கள். ஆனால், மனைவியை அவன் ஏன் அலுவலகத்துக்கு அழைத்து வந்தான் என்பதுதான் அவர்களில் சிலருக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒருவேளை பணி ஒப்பந்தத்தின் பத்தாவது ஷரத்தை அவன் படித்துப் பார்க்காமலே கையெழுத்திட்டிருப்பான் போல என்று அவர்களில் சிலர் நினைத்துக்கொண்டார்கள். 

அவன் மேலாளர் அறைக்குச் சென்றான். அதுவரை குனிந்து கணக்குவழக்குகளைக் கவனித்துக்கொண்டிருந்தவர், ஏதோ உள்ளுணர்வு உறுத்த சட்டென்று நிமிர்ந்து பார்த்தார். அந்த அழகி மட்டுமே அவர் கண்ணுக்குத் தெரிந்தாள். அடுத்த சில நிமிடங்களில் அவர் வாயைத் துடைக்க நாலைந்து கைக்குட்டைகள் தேவைப்பட்டன. நீண்ட நேரத்துக்குப் பின்னர்தான் அவனைப் பார்த்தார். அவனைப் பார்த்தவுடன் சற்றென்று அவருக்குப் பதற்றம் ஏற்பட்டது. மனைவியைத் தான் நீண்ட நேரமாக வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்துவிட்டோமே எனப் பதறினாரோ என்னவோ? ஆனால், அவன் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இதற்காகத் தான் மனைவியை அழைத்துவந்ததுபோல் நடந்துகொண்டான். 

பெரிதாக எந்த வேலையும் நடைபெறவில்லை. மாலையாகிவிட்டது. வீட்டுக்குக் கிளம்பும் நேரம் வந்துவிட்டதால் அவன் மனைவியுடன் புறப்பட ஆயத்தமானான். வெளியே செல்ல எத்தனித்தபோது, அலுவலக செக்யூரிட்டி அவனை மட்டுமே போக அனுமதித்தான். அந்தப் பெண்ணைத் தடுத்து நிறுத்திவிட்டான். அவனுக்கு ஏன் என்று புரியவில்லை. அப்போதுதான் காலையில் நண்பர்கள் சிலர் தன்னை ஆச்சரியத்துடன் பார்த்தது அவனுக்கு நினைவுக்கு வந்தது. அவர்களிடம் கேட்கலாம் என நினைத்தவனை செக்யூரிட்டி அழைத்துப் போய் காரணத்தைச் சொன்னார். அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவன் எப்படி அந்த ஷரத்தைக் கவனிக்காமல் இருந்தான் என்று புரியவில்லை. அதில் தெளிவாக எழுதப்பட்டிருந்தது அலுவலகத்துக்குக் கணவனையோ மனைவியையோ அழைத்து வந்தால் அவர்கள் அலுவலக அடிமை ஆக்கிக்கொள்ளப்படுவார்கள் என. இப்படி ஏற்கெனவே அடிமையாக்கப்பட்டவர்கள் அந்த அலுவலகத்தில் ரகசிய அறையில் பணியில் உள்ளார்களாம். ரகசிய அறையில் என்ன பணி நடைபெறுகிறது என்பது ரகசியமாதலால் யாருக்கும் அதுபற்றித் தெரியாதாம். 

இந்த அலுவலகத்தில் பத்தாண்டுகளுக்கும் மேல் வேலை பார்த்த அவனுக்கு இந்த ஷரத்தோ இந்த விஷயமோ தெரியாமல் இருந்திருக்கிறது. ஆண்டுதோறும் அவன் பணி ஒப்பந்தப் பத்திரத்தில் கையெழுத்துப் போட்டிருக்கிறான். ஆனால், அப்படியோர் ஆபத்தான ஷரத்தைக் கவனிக்காமலே இருந்திருக்கிறான். எப்படியும் சட்டம் என்றால் சட்டம்தான். அலுவலகம் அதன் சட்டதிட்டங்களை மாற்றிக்கொள்ளப் போவதில்லை. எனவே, வேறு வழியில்லாமல் அவன் தனியே அலுவலகத்தை விட்டு வெளியே வந்தான். 

அவன் பின்னாலேயே வந்த அலுவலக நண்பன் அவனிடம் இப்படியாகிவிட்டதே உன் நிலைமை என வருத்தப்பட்டான். அப்போது ராஜகுமாரன் படத்தில் செந்தில் சிரித்ததுபோல் இடி இடியெனச் சிரித்தான் அவன். நண்பனுக்கோ ஆச்சரியம். இப்படியொரு துன்பகரமான சூழலில் உனக்கு எப்படிச் சிரிப்பு வருகிறது என்று கேட்டான். அப்போது, அவன் சொன்னான், தான் அழைத்துவந்தது தன் மனைவி அல்ல என்றும் மேலாளருடைய மனைவிதான் என்றும். அப்படியென்றால் மேலாளருக்கு அது எப்படித் தெரியாமல் போயிற்று என நண்பன் லாஜிக்காகக் கேட்டான். அலுவலகத்தில் இருந்த காரணத்தால் கடமையே கண்ணாகச் செயல்படும் மேலாளர் தன் மனைவியின் முகத்தைச் சுத்தமாக மறந்துவிட்டார். அவர் வீட்டுக்குப் போனதும் இருக்கிறது வேடிக்கை என்று கூலாகச் சொன்னான் அவன். இதை எப்படி நம்புவது என்று கேட்கிறீர்களா? அப்படியென்றால் உங்களுக்குப் பணி ஒப்பந்தத்தின் பத்தாவது ஷரத்து பற்றி எதுவும் தெரியவில்லை என்பதே பொருள். சரி இந்தக் கதைக்கு ஏன் ரஜினி காந்த் படம் என யாராவது நினைத்தீர்களா? நினைத்தீர்கள் எனில் முதல் வாக்கியத்தைப் படியுங்கள் காரணம் தெரியும். 

ஞாயிறு, பிப்ரவரி 14, 2016

விலங்குகளுக்காக ஒரு மாநகரம்!



ஹாலிவுட்டின் அனிமேஷன் படங்கள் உலகெங்கும் வரவேற்பைப் பெற்றவை. அதிலும் வால்ட் டிஸ்னியின் தயாரிப்பு என்றால் கேட்கவே வேண்டாம். குழந்தைகள், பெரியவர்கள் என அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்திழுக்க வல்ல அனிமேஷன் படங்களைத் தயாரிப்பதில் மன்னர்கள் அவர்கள். அந்த வரிசையில் வெளிவர இருப்பதுதான் வால்ட் டிஸ்னி பிக்சர்ஸின் பிரம்மாண்ட 3 டி அனிமேஷன் படமான ஸூடோபியா (Zootopia).

இந்தப் படத்தில் விலங்குகளான ஒரு நகரம் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறது. ஸூடோபியா என்னும் இந்த நகரத்தைப் போன்ற ஒரு நகரத்தை நீங்கள் வேறெங்கும் பார்க்க முடியாது. குளு குளு என்ற இந்த நகரத்தில் எந்தச் சூழலிலிருந்து வரும் விலங்கும் தங்க இயலும். பெரிய விலங்கு சிறிய விலங்கு என்ற பேதமற்று அனைத்தும் ஒன்றாக வசிக்கும் சூழல் இங்கு உள்ளது. மனிதர்கள் வசிக்கும் நகரத்தைப் போன்றே இந்த நகரத்திலும் காவல்துறை துறை உண்டு. காவல்துறை துறை அதிகாரியான ஜுடி ஹாப்ஸ் என்னும் முயலுக்கு விலங்குகளைக் கட்டி மேய்ப்பது சாதாரண வேலையில்லை என்பது தெரிகிறது. ஒரு முக்கியமான வழக்கைத் துப்புதுலக்க வேண்டிய தேவையும் வருகிறது அவருக்கு. இப்படிப் போகிறது கதை.

ஜுடி ஹாப்ஸுக்குப் பிரபல ஹாலிவுட் நடிகை ஜெனிபர் குட்வின் குரல் தந்திருக்கிறார். கான் ஆர்டிஸ்ட்டான நிக் வைல்ட் என்னும் நரிக்குப் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேஸன் பேட்மேன் குரல் கொடுத்திருக்கிறார். பைரோன் ஹவார்டு, ரிச் மோர் ஆகியோர் இணைந்து இயக்கியிருக்கிறார்கள். விலங்குகளின் சாகச விளையாட்டுகளைப் பார்க்கத் தயாரானவர்களுக்காக மார்ச் 3 அன்று 3டியிலும் திரைக்கு வருகிறது ஸூடோபியா.

பிப்ரவரி 12 தி இந்து நாளிதழில் வெளியானது

லேட்டஸ்ட்

அமலா எனும் பொன்மான்

தொடர்பவர்