இந்த வலைப்பதிவில் தேடு

வீடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வீடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஏப்ரல் 23, 2019

நட்சத்திர நிழல்கள் 2: சுதாவின் கனவான இல்லம்

வீடு


தமிழ் சினிமா வரலாற்றில் தவிர்க்க இயலாத படங்களில் ஒன்று பாலுமகேந்திரா இயக்கத்தில் 1988-ல் வெளியான ’வீடு’. அகிலா மகேந்திரா எழுதிய கதைக்குத் திரைக்கதை, வசனம் எழுதிய பாலுமகேந்திரா ஒளிப்பதிவு, படத் தொகுப்பு இயக்கம் ஆகிய பணிகளையும் மேற்கொண்டிருந்தார். தனது சிறு வயதில் தன் தாய் கட்டிய வீடு பற்றிய நினைவுகளின் தாக்கத்தால் இந்தப் படத்தை உருவாக்கியதாக பாலுமகேந்திரா குறிப்பிட்டிருக்கிறார்.

‘வீடு’ படத்தின் பிரதான கதாபாத்திரமான சுதா எனும் வேடத்தை நடிகை அர்ச்சனா ஏற்று நடித்திருந்தார். படத்தின் டைட்டிலிலும் அவரது பெயரே முதலில் இடம்பெறும். செப்டம்பர் 27 அன்று, அனுஷ நட்சத்திரத்தில் பிறந்த சுதா தன் தங்கை இந்து, ஓய்வுபெற்ற பாட்டு வாத்தியாரான தாத்தா முருகேசன் ஆகியோருடன் வாடகை வீட்டில் வசித்துவருகிறார். சூட்கேஸைக் கட்டிலுக்குக் கீழே வைத்து அது தெரியாமல் மறைக்கும் அளவுக்குக் கட்டிலின் மீது விரித்திருக்கும் பெட்ஷீட்டைத் தொங்கவிட்டிருக்கும் சராசரியான நடுத்தரவர்க்க வீடு அது.

பெரிய அளவில் வெளிச்சம் வராத அந்தப் பழங்கால வீட்டில் மூவரும் சுகஜீவனம் நடத்திவருகிறார்கள். சாய்வு நாற்காலியில் தாத்தா ஓய்ந்திருக்கும்போது வரும் தகவல் அந்தக் குடும்பத்தையே ஓயவிடாமல் செய்துவிடுகிறது. வீட்டின் உரிமையாளர் அந்த நிலத்தில் ஃபிளாட் கட்டும் முடிவெடுத்திருப்பதால் அந்த வீட்டைக் காலிபண்ண நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். ஒரு மாதத்துக்குள் வீடு மாறியாக வேண்டிய நிலைமை சுதாவுக்கு ஏற்படுகிறது. டுலெட் விளம்பரப் பலகைகள் தந்த ஏமாற்றத்தின் காரணமாகச் சொந்தமாக வீடு கட்டும் நிலைமைக்குத் தள்ளப்படுகிறாள் சுதா. 


தனியார் நிறுவனம் ஒன்றில் சாதாரணப் பணியில் இருக்கும் சுதாவின் மாதச் சம்பளம் 1,800 மட்டுமே. ஆனால், சுமார் ஒரு லட்சத்து இருபத்தைந்தாயிரம் மதிப்புள்ள வீட்டை அவள் கட்டியெழுப்ப வேண்டியதிருந்தது. குருவி தலையில் பனங்காயைச் சுமத்துகிறோமே என்ற எந்தக் குற்றவுணர்வும் காலத்துக்கு இல்லவே இல்லை. சில சுமைகள் மனிதரின் விருப்பத்தைக் கேட்டு அவர்கள் தலையில் ஏறிக்கொள்வதில்லை. அவை தாமாக மனிதரை உரிமை கொண்டாடிவிடும். அப்படித்தான் வீடு கட்டும் பணியும் ஒரு துடுக்கான குழந்தையைப் போல் சுதாவின் இடுப்பில் மீது ஏறி அமர்ந்துகொண்டது.

கூரைப் புடவை கட்டிக்கொள்ளக் காத்திருந்த சுதா தனக்கான கூரையை வேய்ந்துகொள்ள வேண்டிய நிலைமைக்கு ஆளானாள். அவளுடன் பணிபுரியும் அய்யங்கார் வீடு கட்டுவது ஒன்றும் மலையைப் புரட்டும் வேலை அல்ல என நம்பிக்கை ஊட்டுகிறார். பணத்துக்கான வழிமுறைகளையும் விலாவாரியாக விளக்குகிறார். வாய் பிளந்து கேட்கும் சுதா சுதாரித்துக்கொள்ளும் முன்பு துணிச்சலாகக் காரியத்தில் இறங்குகிறாள்.

தங்கை எனும் குழந்தைக்குத் தாயாக மாறி, தாத்தாவைத் தவிர ஆண் துணையற்ற வீட்டின் தலைமைப்பொறுப்பேற்று நிர்வாகத்தை நடத்திவரும் சுதா, பேருந்து விபத்தில் பெற்றோரைப் பறிகொடுத்தவள். சுதாவுக்கு ஆறுதலாக இருக்கிறான் அவளுடன் பணியாற்றும் கோபி. அவனும் பெரும் செல்வந்தனல்ல. கையிருப்பை வைத்து இரு தங்கைகளுக்குத் திருமணம் முடித்துவைக்க வேண்டிய நிலையில் உள்ளவன். இவர்களுக்கிடையேயான காதல் அன்னியோன்யமானது; ஆரோக்கியமானது. சுதாவின் நெருக்கடி நேர ஆலோசனைக்கும் அவள் ஆத்திரங்கொண்டால் அரவணைத்துக்கொள்ளவும் கோபி மட்டுமே இருக்கிறான். ஒருவகையில் அவன் இருக்கும் நம்பிக்கையிலும் சுதா வீடு கட்டத் துணிகிறாள். அவனிடம் சுதா பொருளாதார உதவி எதிர்பார்க்கவில்லை. ஆனால், மன பாரம் கூடும்போதும் இறக்கிவைக்க உதவும் நெஞ்சத்துக்குரியவனாக கோபி இருக்கிறான்.
வீடு கட்டும் மனையைப் பார்க்க வரும் அன்றே மழை ‘சோ’வெனப் பெய்கிறது. சுதாவின் துயரமும் துளித் துளியாகச் சேர்கிறது. முறையாகப் பூமி பூஜை போட்டு வீட்டின் வேலை தொடங்குகிறது. அஸ்திவாரம் போடும் நாளிலும் மழை தொடர்கிறது. வெள்ளமெனச் சூழப்போகும் துயரத்தில் அவள் மாட்டிக்கொள்ளப் போகிறாள் என்பதைக் குறிப்புணர்த்துவதுபோல் பெய்து ஓய்கிறது மழை. விவசாயி வாழ்த்தும் மழையை வீடு கட்டுபவர்கள் சபிக்கிறார்கள். வீடு கட்டும் நேரத்தில் மழை என்பது வேலைக்கு இடைஞ்சல். அதுவும் ஒவ்வொரு காசாகக் கணக்குப் பார்த்துச் செலவு செய்யும் இளம்பெண்ணான சுதாவுக்கு அந்த நேரத்திய மழை பெரும் தடைக்கல். தொந்தரவு தருவதில் இயற்கைக்குச் சளைத்தவர்கள் அல்ல மனிதர்கள் என்னும் வகையில் ஒப்பந்ததாரர் நடந்துகொள்கிறார்.




சிமெண்ட்டைத் திருடி விற்கும் ஒப்பந்தகாரரை எதிர்த்துக்கேள்வி கேட்டதால் அவர் வீடு கட்டும் பணியிலிருந்து உடனடியாக விலகிக்கொள்கிறார். விக்கித்துப்போய் நிற்கும் சுதாவுக்கு, அநீதி கண்டு ஆத்திரத்துடன் கேள்வி கேட்ட மங்கா எனும் சித்தாள் பெண் கைகொடுக்கிறார். பெண்ணின் துயரத்தைப் பெண்தான் உணர்ந்துகொள்கிறாள். மங்காவின் ஒத்துழைப்புடன் மேஸ்திரியின் மேற்பார்வையில் தளம், கூரை என வீடு வளர்கிறது.

முழுமையும் பூர்த்தியாகாவிட்டாலும் ஒதுங்குவதற்கான கூரையாக வீடு நிலைபெற்றுவிட்டத்தைப் பார்த்த சந்தோஷத்திலேயே கண்ணை மூடிவிடுகிறார் தாத்தா. இருந்த ஒரே ஆண் துணையும் கைகழுவிக்கொண்டது. தாத்தா இறந்த துக்கம் கரைவதற்குள் அடுத்த துயரம் சுதா வீட்டுக் கதவைத் தட்டுகிறது. அவள் ஆசை ஆசையாக அலைந்து திரிந்து, நயந்துபேசி பணம் புரட்டி, கடன் பெற்று, மனையின் ஒரு பகுதியை விற்றுக் கட்டிய வீடு அமைந்திருக்கும் மனை மெட்ரோ வாட்டர் நிறுவனம் கையகப்படுத்தப்போகும் நிலம் என்ற குண்டைத் தூக்கிப் போடுகிறார்கள் அந்தத் துறையினர். ஆற்றல்மிகு இடி ஒன்று நடுமண்டையில் நச்சென்று இறங்கியதைப் போல் துடிதுடித்துப் போகிறாள் சுதா.

பஞ்சாயத்தில் அனுமதி வாங்கிக் கட்டிய வீடாயிற்றே ஏன் இப்படி ஒரு நிலைமை? என நிலைகுலைந்துபோன சுதா அந்த அலுவலகத்துக்கு விரைகிறாள். சிறிய லஞ்சத் தொகைக்கு ஆசைப்பட்டுப் பொய்யான அனுமதிச் சான்றிதழ் வழங்கிய அரசு ஊழியரின் ஒற்றைக் காகிதம் சுதாவின் கனவு வீட்டைக் காவு கேட்கிறது. வீட்டைக் காப்பாற்ற நீதிமன்றப் படியேறுகிறாள் சுதா. படம் நிறைவடைகிறது. எளிமையான வண்ணப்புடவை, மேட்சிங் ப்ளவுஸ், கேண்ட் பேக் சகிதமாகப் பக்கத்துவீட்டுப் பெண் போன்று படம் முழுவதும் வலம்வந்த சுதாவின் துயரம் பார்வையாளர்களைக் கலங்கவைக்கிறது. நிம்மதி தரும் என நம்பி வீடு கட்டத் துணிந்த சுதாவின் சின்னச் சின்ன சந்தோஷங்களையும் நிம்மதியையும் வீடே காலி செய்துவிட்டதோ என்னும் கேள்வியை எழுப்புகிறது வீடு.

என்றபோதும், சுதாவின் வாழ்க்கை வழியே அவளைப் போன்ற இளம் பெண்கள் விழிப்புணர்வு பெறுகிறார்கள். வீடு கட்டுவதில் உள்ள சிக்கல்களையும் அவற்றை எப்படி அணுக வேண்டும் என்ற நடைமுறைகளையும் சுதாவின் வாழ்வுச் சம்பவங்கள் நுட்பமாகச் சுட்டிக்காட்டுகின்றன. வீட்டுக்குப் பூஜை போடுவதில் அக்கறைகொள்வதைவிட அனுமதிச் சான்றிதழ் முறையானதா ஒப்பந்ததாரர் ஒழுங்கானவரா போன்ற அம்சங்களையே கவனத்தில்கொள்ள வேண்டும் என்னும் யதார்த்தத்தை உணர்த்தி ஓய்கிறது வீடு.

படங்கள் உதவி ஞானம்

ஞாயிறு, மார்ச் 05, 2017

சினிமா ஸ்கோப் 28: மூடுபனி வீடு


வீடு கட்டுவதைப் பற்றி ஒரு கதை எழுதி அதைப் படமாக்கினால் எப்படி இருக்கும்? ரசனைக்குரியதாக இருக்காது என்று தானே சொல்வோம். ஆனால், உணர்வுபூர்வமான வீட்டைக் கட்டுவதையே உருப்படியான சினிமாவாக மாற்றியிருக்கிறார் இயக்குநர் பாலுமகேந்திரா. அது ‘வீடு’ (1988). தனது படங்களில் தனக்குத் திருப்தி அளித்த இரண்டில் ஒன்று ‘வீடு’ என்று பாலுமகேந்திரா நேர்காணல் ஒன்றில் கூறியிருக்கிறார். இன்னொன்று ‘சந்தியா ராகம்’. 

‘வீடு’ திரைப்படத்தின் கதை மிகவும் சாதாரணமானது. நடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்த இளம்பெண் பகீரதப் பிரயத்தனப்பட்டு வீடொன்றைக் கட்டுகிறார். வீடு கட்டி முடித்த சமயத்தில் அந்த வீடு கட்டிய நிலம் மெட்ரோ நீர் திட்டத்துக்கானது என்று அரசு சொல்கிறது. தனது வீட்டைக் காப்பாற்ற நீதிமன்றத்தின் படியேறிப் போராடுகிறாள் அவள். இதுதான் கதை. ஒரு கதை எழுப்பும் அடிப்படைக் கேள்விகளுக்குச் சரியான பதில்களைத் தரும் வகையில் காட்சிகளை அமைத்துவிட்டாலே திரைக்கதை சரியாக அமைந்துவிடும் என்பது திரைக்கதையின் அடிப்படைப் பாடம்.


வீடு கதையில் அந்தப் பிரதானப் பாத்திரம் 22 வயதேயான சுதா (அர்ச்சனா) என்னும் இளம்பெண். அவள் வேலை பார்த்துத்தான் வீட்டின் பாடு கழிகிறது. அவளுடன் அவளுடைய தங்கையும் தாத்தாவும் (சொக்கலிங்க பாகவதர்) இருக்கிறார்கள். சுதாவுக்கு ஒரு காதலன் (பானுசந்தர்). அவன் செல்வச் சீமானல்ல. அவனுக்கும் திருமண வயதில் இரண்டு தங்கைகள். இந்த நிலையில் அந்தப் பெண் ஏன் வீடு கட்ட முயன்றாள்? இது நமக்கு எழும் முதல் கேள்வி. அதற்கான விடைதான் படத்தின் முதல் சில காட்சிகள். வசிக்கும் வாடகை வீட்டைக் காலி பண்ண வேண்டிய சூழல் வருகிறது. வீடு தேடி அலைகிறாள். இன்றுகூட சென்னையில் வீடு தேடி அலைந்தால் நாம் பட்டினத்தார் ஆகிவிடும் அளவுக்கு நமக்கு அனுபவங்கள் கிடைத்துவிடும். சமீபத்தில் வெளியான ‘ஆண்டவன் கட்டளை’யில் வீடு தேடு அலைவதன் அவஸ்தையை இயக்குநர் மணிகண்டன் இயல்பாகக் காட்சிகளாக்கியிருப்பார். அன்றும் இந்த நிலைதான். அதில் மாற்றமில்லை. வீடு தேடி அலைந்து சுதா சோர்ந்திருக்கும் வேளையில் சொந்த வீடு கட்டினால் என்ன என்று நண்பர் ஒருவர் யோசனை தருகிறார். அவளுக்கும் சரியென்று படுகிறது. செயலில் இறங்கிவிடுகிறாள் சுதா.

ஏன் வீடு கட்ட வேண்டும் என்பதற்குப் பதில் கிடைத்துவிட்டது. எப்படிக் கட்டினாள் என்ற கேள்விக்குப் பதில்தான் தொடரும் காட்சிகள். வீடு கட்டத் தேவையான நிலம் (2 கிரவுண்ட்) ஏற்கெனவே அவளிடம் இருக்கிறது. நிலம் சரி. வீடு கட்டப் பணம்? தான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் வீடு கட்ட கடன் கேட்டுப் பெறுகிறாள். எஞ்சிய பணத்துக்கு ஒரு கிரவுண்ட் நிலத்தை விற்கிறார்கள். நிலமும் இருக்கிறது பணத்துக்கும் வழிசெய்தாகிவிட்டது. அடுத்து மளமளவென்று வீட்டைக் கட்டிவிட வேண்டியதுதானே? அப்படியெல்லாம் முடியுமா? வீடு கட்டுவது என்றால் லேசுப்பட்ட காரியமா? சிக்கல் வரத்தானே செய்யும்? சிக்கலே இல்லையென்றால் திரைக்கதை எப்படி ரசிக்கும்? 


வீடு கட்டத் தொடங்கிய அன்றே மழை வெளுத்து வாங்குகிறது. தொடர்ந்து ஒப்பந்தக்காரரின் திருட்டுத் தனம் தெரியவருகிறது. சிமெண்டையும் ஜல்லியையும் திருடி விற்கிறார்கள். அதைத் தட்டிக்கேட்கும்போது வேலையை அப்படியே விட்டுவிட்டுப் போய்விடுகிறார் அவர். அந்த நேரத்தில் நிலைமையைச் சமாளிக்க உதவுகிறார்கள் சித்தாள் வேலை பார்க்கும் மங்காவும் (பசி சத்யா) மேஸ்திரியும். இடையில் பணப்பிரச்சினை, மனப்பிரச்சினை என்று பலதும் வருகின்றன. அத்தனையையும் சமாளித்து வீட்டை எழுப்பி முடித்தபோதுதான் சுதாவை நிலைகுலையச் செய்வது போன்ற கிளைமாக்ஸ். அவள் நீதிமன்றத்தின் படியேறுவதுடன் படம் முடிந்துவிடுகிறது. 

இது யதார்த்தமான ஒரு திரைப்படம். எதிரே திரையில் சலனக் காட்சிகள் நகர்கின்றன என்பதையே மறக்கடித்துவிடும் படத்தின் ஒளிப்பதிவு. அவ்வளவு தத்ரூபம். இளையராஜாவின் ஹவ் டூ நேம் இட் ஆல்பத்தின் இசையைச் சில காட்சிகளின் பின்னணியில் பயன்படுத்தியிருப்பார்கள். பிற காட்சிகளில் பின்னணியில் அப்பாஸ் கியரோஸ்தமியின் படங்களைப் போன்று இயற்கையான ஒலிகளால் நிரம்பியிருக்கும். அது உணர்வைக் கிளறும். அன்னக்கிளி வந்த பின்னர் தமிழ்நாட்டில் டீக்கடைகளில் இந்திப் பாட்டுப் போடுவது வழக்கிலிருந்து மறைந்துவிட்டது என்பார்கள். ஆனால், இந்தப் படத்தில் ஒரு காட்சியில் டீக்கடையொன்றில் ஆர் டி பர்மனின் யம்மா யம்மா பாடல் ஒலிக்கும். தனது சிறுவயதில் தன் தாய் கட்டிய வீடு காரணமாக அவரது குணத்தில் ஏற்பட்ட மாறுபாடு பற்றிய ஆழமான நினைவுகளின் தாக்கமே இந்தப் படத்துக்கான உந்துதல் என்று பாலுமகேந்திரா சொல்லியிருக்கிறார். இதுதான் படத்தின் உயிரோட்டத்துக்குக் காரணமாக இருந்திருக்கும். 


இதே போல் வீட்டை மையமாக வைத்து 2003-ல் ஓர் அமெரிக்கத் திரைப்படம் வெளியானது அதன் தலைப்பு ஹவுஸ் ஆஃப் சேண்ட் அண்ட் ஃபாக். வீடு படத்தில் சுதா வீடு கட்டப் போராடுகிறாள் என்றால் இந்தப் படத்தில் ஏலமிடப்பட்ட தன் தந்தை தந்த வீட்டைக் கைப்பற்றப் போராடுகிறாள் படத்தின் நாயகி. வீட்டுக்கான வரியைக் கட்டவில்லை என்பதால் அவளது வீட்டை ஏலத்துக்கு விட்டு விடுகிறது அரசு. அந்த வீட்டை அமெரிக்கக் குடியுரிமை பெற்ற அரேபியர் ஒருவர் முதலீட்டு நோக்கத்தில் வாங்கிவிடுகிறார். அவர் வீட்டைத் தர மறுக்கிறார். அந்தப் பெண்ணோ தன் வீட்டைக் கைப்பற்றத் துடிக்கிறார். இருவருக்குமான போராட்டம் திரைக்கதையாக மாறுகிறது. இறுதியில் இந்த வீடே தனக்குரியதில்லை என்று சொல்லிவிடுகிறார் அந்தப் பெண். அந்த மனமாற்றத்துக்கு என்ன காரணம் என்பதை அழுத்தமாகப் படமாக்கியிருப்பார் வடிம் ப்ராவ்மென் என்னும் இயக்குநர். இது இவரது முதல் படம். அரேபியர் வேடமேற்று நடித்திருப்பவர் பென் கிங்க்ஸ்லி. 

வீட்டைப் பிரதான விஷயமாகக் கொண்ட இன்னுமொரு அமெரிக்கப் படம் லைஃப் அஸ் ஏ ஹவுஸ். இதில் தன் தந்தையின் கடற்கரையோர வீட்டை இடித்துவிட்டுப் புதிய வீடு ஒன்றைக் கட்ட முற்படுவான் விவாகரத்து பெற்ற நாயகன். கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கும் அவனை வேலையை விட்டு நிறுத்திவிடுகிறது நிறுவனம். அந்த தினமே அவனுக்குப் புற்று நோய் என்பதும் தெரிந்துவிடுகிறது. அதை யாரிடமும் அவன் தெரிவிக்கவில்லை. இறப்பதற்குள் வீட்டைக் கட்டிவிட முயல்கிறான். வளரிளம்பருவ மகனின் ஒத்துழைப்புடனும் இதைச் செயல்படுத்த விரும்புகிறான். ஆனால் மகனோ தகப்பனை வெறுக்கிறான், வீடு கட்டும் பணியில் ஒத்துழைக்க மறுக்கிறான். மகனுக்குத் தந்தையின் நோய் நிலை தெரிந்ததா? வீடு கட்டப்பட்டதா போன்றவற்றை உள்ளடக்கிய திரைக்கதையைப் படமாக்கியிருப்பார் இயக்குநர் இர்வின் விங்க்லர். நிம்மதியாக வாழலாம் என்று தான் ஒரு வீட்டுக்காக மனிதர்கள் பிரயத்தனப்படுகிறார்கள் ஆனால் வீடு அந்த நிம்மதியை அவர்களுக்கு அளிக்கிறதா என்னும் கேள்வியைத் தான் இந்தப் படங்கள் எழுப்புகின்றன.

< சினிமா ஸ்கோப் 27 >                      < சினிமா ஸ்கோப் 29 >

திங்கள், பிப்ரவரி 22, 2016

இடமோ சிறுசு, இல்லமோ பெருசு

(2016 பிப்ரவரி 21 அன்று தி இந்துவில் வெளியானது)


நகரத்தில் வசிப்பவர்களில் பெரும்பாலானோரின் பிரச்சினை வீடு சார்ந்ததாகவே இருக்கிறது. வாங்கும் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கை வாடகையாகக் கொடுத்தும் நிம்மதியாக வசிக்க வழியில்லை என்ற வருத்தத்தைப் பலரும் வெளிப்படுத்துகிறார்கள். புறாக் கூண்டு போன்ற அபார்ட்மெண்ட்களை விலை கொடுத்து வாங்குவதே பெரும் போராட்டமாக இருக்கிறதே என்ற முணுமுணுப்புகள் எழுந்துகொண்டேயிருக்கின்றன. குறைந்த இடத்தில் பார்ப்பதற்கும் வசிப்பதற்கும் போதுமான அளவில் வீடு கிடைத்தால் பெரிய வரம் என்ற நினைப்பு எழாதவர்கள் இருக்க இயலாது. இந்த எதிர்பார்ப்பை உணர்ந்து கட்டுநர்களும் முடிந்த அளவில் குறைந்த இடத்தில் போதுமான வசதியை அளிக்க முயன்றுவருகிறார்கள். ஆனால் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை அவ்வளவு எளிதில் பூர்த்திசெய்துவிட முடியாது.

உலகமெங்கிலும் நகரப் பகுதியில் குறைந்த இடத்தில் வசதியான வீடு என்னும் தேவை பெருகிக்கொண்டே இருக்கிறது. வீட்டுத் திட்டங்களை வடிவமைக்கும் வடிவமைப்பாளர்களும் தங்கள் அறிவைக் கூர்தீட்டி புதுமையான முறையில் நவீனமாக வீடுகளை உருவாக்குவதில் முனைப்புடன் ஈடுபட்டுவருகிறார்கள். ரஷ்யாவைச் சேர்ந்த கான்ஸ்டண்டின் எண்டலேசிவ் என்னும் விஷுவலைஸர் வீட்டின் உள்ளலங்காரத்தில் புதுமையான உத்திகளைப் பிரயோகித்துவருகிறார். 400 சதுர மீட்டர் பரப்புக்குள் அடங்கும் வீடுகளையே மிகவும் விசாலமானதாகக் காட்டும் வகையில் அமைத்துவிடுகிறார் அவர்.

அவர் கட்டிய மொத்தமே 344 சதுர அடி பரப்பு கொண்ட ஒரு வீட்டில் ஹாலிலேயே படுக்கையறை அமைந்திருக்கிறது. ஆனால் படுக்கையறைக்குக் கண்ணாடிச் சுவர்களைப் பயன்படுத்தியிருக்கிறார். பார்ப்பதற்கு அது தனியான அறையாகத் தெரியாமல் ஒட்டுமொத்தமாகப் பெரிய அறையாகத் தெரியும். ஆனால் படுக்கையறையும் தனியாக அமைந்திருக்கும். சிறிய உத்திதான் ஆனால் நம் கண்ணே நம்மை ஏமாற்றிவிடும் அளவுக்கு மிகவும் நேர்த்தியாக அதை அமைத்துவிடுகிறார்.

வசீகரமான இரண்டு நாற்காலிகள் ஒரு சிறிய டைனிங் டேபிள் ஆகியவற்றைப் போட்டு மனங்கவரும் ஒரு டைனிங் ஏரியாவை உருவாக்கிவிடுகிறார். அந்த டைனிங் அமைப்பே விருந்தினர்களை எளிதாகக் கவர்ந்திழுத்துவிடும். மிகவும் ஒடுங்கிய சமையலறையில் இயற்கையான வண்ணங்களைப் பயன்படுத்தி அவை மிகவும் திறந்தவெளியில் இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்திவிடுகிறார். அதிக இடம் இல்லாவிட்டால்கூட சமையலறையில் ஒரு அமைதி எப்போதும் இருப்பது போன்று இது தோற்றம்கொள்கிறது.

மிகச் சிறிய குளியலறையில் அவர் வெள்ளை மார்பிள்களைக் கொண்டு இழைத்துவிடுகிறார். ஆகவே அந்தச் சிறிய குளியலறையே மிகவும் ஆடம்பரமான ஒன்றாக நம்மை எண்ணவைத்துவிடுகிறது. அந்தக் குளியலறையின் ஒரு மூலையில் செல்லம் போல் ஒரு ஷவர். அதைக் கண்ணாடிச் சுவர்களை வைத்து மறைத்திருக்கிறார். அதைப் பார்க்கும்போது அறைக் குளியலே ஆனந்தக் குளியலாகத் தோன்றிவிடும். அந்த அளவு வசீகரமாக அதை அமைத்திருக்கிறார். மிகவும் சிறிய இடம் என்பதால் அதை எளிதில் சுத்தப்படுத்தலாம். ஆக, குளியலறை எப்போதும் சுத்தமாகவும் அழகாகவும் காட்சி தரும்.

அடிப்படைத் திட்டத்தைப் பெரிதும் மாற்றாமல் அழகிய, ஆடம்பர, அறைக் கலன்களையும், சுவரின் வண்ணங்களையும் மாற்றி அல்ட்ரா மாடர்ன் தோற்றத்தில் மற்றொரு வீட்டையும் உருவாக்கியிருக்கிறார். அவரது செயல்திட்டம் ஒன்று தான். மிகச் சிறிய இடத்தில் கண்ணுக்கு அழகான வசிப்பதற்கு வாகான வீட்டை அமைக்க வேண்டும் என்பதுதான். குறைந்த இட வசதி வீடு எப்படிக் கட்டுவது என யோசிப்பவர்கள் இதைப் போன்ற நிபுணர்களின் உத்தியைப் பின்பற்றினால் சிறப்பான வீட்டை அமைத்துவிடலாம்.

ஞாயிறு, ஜூன் 08, 2014

உள்ளூர் கட்டுமானப் பொருட்களையே வாங்குங்கள்


வீடு கட்ட அவசியமான கட்டுமானப் பொருட்களின் விலை குறித்து அதிக எச்சரிக்கையுடன் நடந்துகொள்கிறோம். விலையைப் பார்த்துப் பார்த்து வாங்குகிறோம். எங்கே விலை மலிவாக உள்ளது எனப் பலரிடம் விசாரிக்கிறோம். விலை குறைவாக இருந்தால் எவ்வளவு தூரம் என்றாலும் பரவாயில்லை அங்கேயிருந்து கட்டுமானப் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என முடிவெடுத்து விடுகிறோம். பொருளாதார ரீதியாகப் பார்த்தால் இது சரிதான். ஆனால் சுற்றுச்சூழலை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால் இது சிக்கலானது என்கிறார்கள் கட்டிட நிபுணர்கள். ஏனெனில் கட்டுமானப் பொருட்களை அதிக தூரத்திலிருந்து வாங்கும்போது அந்தப் பொருட்களைக் கொண்டுவர போக்குவரத்து உள்ளிட்ட பல விஷயங்களைக் கவனித்துக்கொள்ள வேண்டியதிருக்கிறது. இதனால் நேரடியாகவும் மறைமுகமாகவும் இயற்கை கடும் பாதிப்புக்கு உள்ளாகிறது எனத் தெரிவிக்கிறார்கள் நிபுணர்கள். 

உலகமயமாக்கலுக்குப் பின்னர் இந்தப் போக்கு அதிகரித்து வருகிறது. உலகின் எந்தப் பகுதியில் இருந்தும் எந்தப் பகுதிக்கும் பொருட்களைக் கொண்டுசெல்லலாம் என்ற வாய்ப்பின் காரணமாக உள்ளூர் பொருட்களை யாரும் பெரிதாகக் கொள்வதில்லை. கட்டுமானப் பொருட்களை வெளியில் இருந்து வாங்கி வீட்டைக் கட்டும் செலவைக் குறைத்துவிட்டால் போதும் என்று செயல்படும்போது சுற்றுச்சூழலைக் கவனித்துக் கொள்ள மறந்துவிடுகிறோம். இது சரியான செயலல்ல என எச்சரிக்கிறார்கள் கட்டிடக் கலை நிபுணர்கள்.  ஏனெனில் கட்டுமானப் பொருட்களை ஓரிடத்தில் இருந்து தொலைதூரத்திலுள்ள மற்றொரு இடத்திற்கு அனுப்புவதற்கு அதிகப்படியான வேலைகள் தேவைப்படுகின்றன. அவற்றை பேக்கிங் செய்ய வேண்டும், வாகனங்களில் அனுப்ப வேண்டும், சந்தைப்படுத்த வேண்டும், அதற்குரிய பணியாளர்கள், இணையத்தின் மூலம் பெற்றால் அது தொடர்பான பணிகள் என அநேகர் அந்தப் பணியுடன் தொடர்புபடுவார்கள். இதற்குத் தேவைப்படும் மொத்த சக்திக்கான செலவை எல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தால் அது ஒருவேளை உள்ளூரில் கிடைக்கும் கட்டுமானப் பொருட்களின் விலையைவிட வெளியிலிருந்து வாங்கும் கட்டுமானப் பொருட்களின் விலை அதிகமாக ஆகலாம். ஆனால் தற்போது நம்மிடம் இருக்கும் வழிமுறைகள் மூலம் இந்த மொத்த ஆற்றலையும் அதற்கான செலவையும் சரிவரக் கணக்கிட முடியவில்லை.

தொலைதூரத்திலிருந்தோ அல்லது வெளிநாட்டிலிருந்தோ கட்டுமானப் பொருட்களை வாங்கும் போது இன்னொரு விஷயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பொதுவாக ஓரிடத்தின் தட்பவெப்ப நிலை சார்ந்த பொருட்கள் அந்தப் பகுதியிலேயே கிடைக்கும். அதைவிடுத்து அந்தத் தட்பவெப்பத்திற்கு தொடர்பு இல்லாத கட்டுமானப் பொருட்களை விலை மலிவு என்பதற்காக வாங்கினால் அதனால் தீங்கு ஏற்படக் கூடும். வெப்பம் அதிகம் நிலவும் பகுதியில் உள்ள பொருட்கள் குளிர் மிகுந்த பகுதியின் கட்டுமானப் பொருள்களை விலை குறைவு என்று வைத்துக்கொள்ளுங்கள். விலை மலிவு என்பதற்காக வெப்பம் அதிகம் நிலவும் பகுதியில் கிடைக்கும் கட்டுமானப் பொருட்களை வாங்கி குளிர் நிலவும் பகுதியில் வீடு கட்டினால் எப்படி இருக்கும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள்.   

உலகமயமாக்கல் காரணமாக உலகின் ஏதோ ஒரு மூலையில் கிடைக்கும் பொருளை விலை மலிவு என்பதற்காக நாம் வாங்கத் தொடங்கினால் நம்மையே நம்பி உள்ளூரில் கட்டுமானப் பொருட்களை உற்பத்திசெய்வோர் பாதிக்கப்படுவார்கள். இதனால் உள்ளூர் தொழில் சரிவடையும், தேசத்திற்கு அது பாதிப்பு ஏற்படுத்தும். இதையெல்லாம் கருத்தில் கொண்டு உள்ளூர் பொருட்களை வாங்கும்போது மட்டுமே நம்மால் இயற்கைக்கு சேதாரமற்ற வீட்டைக் கட்டியெழுப்ப முடியும். பசுமை கட்டிடத்தை அமைக்க 600 கி.மீ. தூரத்திற்குட்பட்ட பகுதியில் இருந்தே கட்டுமானப் பொருட்களை வாங்க வேண்டும் என சுற்றுச்சூழலியல் கூறுகிறது. ஆகவே நீடித்து நிற்க வேண்டிய நமது கட்டிடத்திற்கு அதிக ஆயுளை வழங்கக்கூடிய வகையில் தயாராகும் உள்ளூர் கட்டுமானப் பொருட்களை நாம் ஆதரிக்க வேண்டிய தருணம் இது என்பதைக் கவனத்தில் கொள்வது அவசியம்.

திங்கள், மே 12, 2014

ஆடம்பர வீடுகளால் அதிரும் கட்டுமானத் துறை

(2014 மே 10 அன்று தி இந்துவில் வெளியானது)


சென்னையின் ரியல் எஸ்டேட் சந்தை பழமை விரும்பிகள் நிறைந்ததாகப் பார்க்கப்படுகிறது. பாரம்பரியமான வீடுகளை விரும்புவோர்களும் மரபு சார்ந்த விஷயங்களின் மீது பிடிப்பு கொண்டோருமே சென்னையில் வீடு வாங்கிக் குடியேறுகிறார்கள் என்னும் நம்பிக்கை ரியல் எஸ்டேட் வட்டாரத்தில் இருந்துவருகிறது. ஆனால் சமீப காலமாக வீடுகளுக்கான சந்தையில் உருவாகிவரும் மாற்றங்கள் இந்த நம்பிக்கையைத் தகர்க்கின்றன.

முன்னணிக் கட்டுமான நிறுவனங்கள் சென்னையில் ஏராளமான ஆடம்பர வீடுகளை உருவாக்கிவருகின்றன. அடையாறு, எழும்பூர், எம்.ஆர்.சி. நகர், நுங்கம்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலை, அண்ணா சாலை போன்ற இடங்களில் கட்டப்பட்டுவரும் புதிய வீட்டுத் திட்டங்களே இதற்குச் சான்றுகள். இந்தத் திட்டங்களில் உருவாகிவரும் குடியிருப்புகளில் சுமார் ஆயிரம் வீடுகள் கட்டப்படுகின்றன. இங்கு ஒரு வீட்டின் விலை 5 முதல் 15 அல்லது 16 கோடி ரூபாய் வரை உள்ளது. இந்தத் திட்டங்களில் பெரும்பான்மையானவை வரவிருக்கும் மாதங்களில் பூர்த்திபெற்றுவிடும்.

இந்தத் திட்டங்கள் எல்லாம் நுகர்வோரால் எவ்வளவு விரும்பி வாங்கப்படும் என்பதைப் பொறுத்தே இவற்றின் வளர்ச்சி இருக்கும் என்கிறார்கள் கட்டுமானத் துறையைச் சேர்ந்த சிலர். சில திட்டங்கள் தொடங்கப்பட்டபோது ஓரளவு வாடிக்கையாளர்கள் வந்து தங்களுக்கான வீடுகளைப் பதிவுசெய்துள்ளனர். குடியிருப்புப் பகுதிகளை முற்றிலும் கட்டி முடித்துள்ள நிறுவனங்கள் அவற்றை வாடிக்கையாளர்களுக்குத் திறந்துவிடும் அதிருஷ்ட நேரத்திற்காகக் காத்திருக்கிறார்கள். நில உரிமையாளர்கள் சிலரும் இதைப் போன்ற குடியிருப்புகளைக் கட்டிவருகிறார்கள். முன்னணிக் கட்டுமான நிறுவனங்களும் இத்தகைய குடியிருப்புகளை உத்வேகத்துடன் உருவாக்கிவருகின்றன.

பெரும்பாலான திட்டங்களில் உருவாகும் வீடுகளை நுகர்வோர்கள் கடன் பயமின்றி வாங்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க முன்னேற்றமே. வழக்கமாகச் சென்னையில் தொழிலில் ஈடுபட்டு வரும் கட்டுமான அதிபர்கள் கூட்டுத் திட்டங்களில் முதலீடு செய்வதையே வலியுறுத்துவார்கள். ஆனால் சமீபத்திய திட்டங்களில் ஈடுபட்டுவரும் நிறுவனங்கள் கணிசமான அளவில் தங்களைப் பணயம் வைத்து இந்தத் திட்டங்களை நிறைவேற்றிவருகின்றன. இதனால் கட்டுமானத் துறையைக் கூர்ந்து கவனிப்பவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தனிநபர்கள்கூடத் தங்களது நிலங்களில் சொந்தமாகக் குடியிருப்புத் திட்டங்களை, அதற்கான பிரத்தியேக திட்ட மேலாண்மைக் குழுவின் உதவியுடன் நிறைவேற்றுகிறார்கள். வீட்டுத் திட்டங்களின் தொடக்க செலவுக்கான நிதியைச் சம்பாதிப்பதற்காக நுகர்வோருக்கு நல்ல தள்ளுபடியை வழங்குகிறார்கள். தி.நகர் போன்ற பகுதிகளில் சில திட்டங்களுக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பு தனிநபர்களைத் துணிச்சலுடன் ரியல் எஸ்டேட் துறைக்குள் இறக்கியுள்ளது.

குடியிருப்புத் திட்டங்களை ஊக்குவிக்கக்கூடிய அளவுக்கு தியேட்டர்கள், வணிக வளாகங்கள் போன்றவை அமையாவிட்டால்கூட சில ஹோட்டல்கள் இத்தகைய திட்டங்களுக்கு அனுகூலமாய் அமைந்துள்ளன. ஆடம்பர வீடுகளை உருவாக்குவதில் வீட்டின் இண்டீரியரில் பொருத்தப்படும் அதிநவீன சாதனங்கள், குளியலறையின் நவீன வசதிகள், அலங்கார விளக்குகள் போன்றவையே சவாலாக இருக்கும் அம்சங்கள். கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்கும்போது பார்த்தாலே பிரமிப்பை ஏற்படுத்தும் தோற்றத்தில் வீடு அமைவது அவசியம். ஆகவே வீட்டைப் பார்த்த உடன் இதற்குக் கோடி ரூபாய் கொடுக்கலாம் என்னும் எண்ணத்தை உருவாக்கும் இண்டீரியரைத் தர வேண்டும்.

இந்த ஆடம்பர வீடுகளை வாங்குவதில் ஆர்வம் காட்டுபவர்கள் கோடி கோடியாய்ச் சம்பாதிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்களல்ல. நமது நாட்டிலேயே வசிக்கும் உயரதிகாரிகளும், பிரபலங்களும், தொழிலதிபர்களும்தான் இங்கு வீடுகளை வாங்கத் துடிக்கிறார்கள் என்பது ஆச்சரியம்தான். ஆனால் இந்தத் திட்டங்களைச் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் வெளிநாட்டு முதலீட்டார்களை அணுக எந்தத் தடையும் இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியதிருக்கிறது.

திங்கள், ஏப்ரல் 14, 2014

குளு குளு மர வீடுகள்

(2014 ஏப்ரல் 12 அன்று தி இந்துவில் வெளியானது) 


நமது முன்னோர்கள் வீடுகளைப் பெரும்பாலும் களிமண், சுண்ணாம்பு, கல், மரம் போன்ற இயற்கையான பொருள்களைக் கொண்டே கட்டினார்கள். வெப்பமான நமது சூழலுக்கு ஏற்றவாறான வீடுகளைக் கட்டி அதில் தான் அவர்கள் வாழ்ந்துவந்தார்கள். வீடு கட்டவும் அலங்காரங்களுக்கும் மரங்களை அதிகமாகப் பயன்படுத்தினார்கள். மரப் பலகைகள் சூட்டைக் கடத்தாது, தடுத்துவிடும். எனவே அதிகமான சூடு வெளியில் இருந்தாலும் வீட்டின் உள்ளே வெப்பம் வராது. கோடைகாலத்தில் வீடு குளுகுளுவென்றிருக்கும், குளிர்காலத்திலோ கதகதப்பாக இருக்கும்.

ஆனால் இப்போதெல்லாம் நமது வீட்டின் அமைப்பு மாறிவிட்டது. நவீனக் கட்டுமானப் பொருட்களும் பெருகிவிட்டன. அதிகப் பொருட்செலவில் முழுக்க சிமெண்டையும் இரும்பையும் கண்ணாடியையும் பயன்படுத்தி வீடுகளை உருவாக்குகிறோம். இதனால் வீடுகளில் மரங்களைப் பார்ப்பதே அரிதாகிவிட்டது. பழைய வீடுகளின் கதவுகளையும் உத்திரங்களையும் நினைவுபடுத்திப் பாருங்கள். நவீன வீடுகளின் உருவாக்கத்தில் உபயோகமுள்ள மரத்தை மறந்துவிட்டோம். பசுமையான சூழலை வீட்டிற்குத் தரும் மரங்களை விட்டு விலகிவிட்டோம். ஆனால் பழைய வீடுகளைப் பார்க்கும்போது பலருக்கு ஏக்கமாக உள்ளது. கடந்த காலத்தை விட்டு நீண்ட தூரம் வந்துவிட்டாலும் அந்தப் பழங்கால உத்தியை இப்போதைய சூழ்நிலைக்கு ஏற்றவாறு பயன்படுத்தி வருகிறார் கட்டடக் கலை நிபுணர் ரவீந்திர குமார்.

இவர் பெங்களூருவில் உள்ள ப்ரகுருப் (Pragrup) என்னும் கட்டட நிறுவனத்தின் முதன்மை வடிவமைப்பாளர். மரத்தாலான வீடுகளை இவர் உருவாக்கிவருகிறார். மர வீடுகள் மட்டுமல்ல மரத்திலேயேகூட வீடு கட்டித் தருகிறார் ரவீந்திர குமார். உங்களுக்குத் துணிச்சலும் வித்தியாசமான விருப்பமும் இருந்தால் மரத்தின் மீது கட்டப்படும் வீட்டில் குடியிருக்கலாம். இது வரை சுமார் 20 மர வீடுகளை ரவீந்திர குமார் உருவாக்கியுள்ளார். இவை அனைத்துமே தனித்துவமானவை. ஒவ்வொன்றும் பிரத்தியேகமான வடிவமைப்பைக் கொண்டவை. ஆனால் அனைத்து வீடுகளுக்குமான பொதுவான அம்சங்கள் அவற்றின் அழகும் பசுமையான சூழலும்.

உங்களது சொந்த வீட்டை உருவாக்குங்கள் என்னும் கருத்தை அடிப்படையாகக் கொண்டே இவர் வீடுகளைக் கட்டுகிறார். இதனடிப்படையில் மரப் பலகைகளை வைத்துப் பண்ணை வீடுகள் போல் பசுமையான சூழலில் வீடுகளை அமைக்கும் முயற்சியில் இவர் ஈடுபடுகிறார். இவரது வீடுகளில் பாதங்கள் அதிகமாகத் தரையைத் தொட வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் முழுக்க முழுக்க மரங்கள் தாம் வீட்டை ஆக்கிரமித்து நிற்கும். சுவர்கள், கூரைகள், தளங்கள் என அனைத்துமே ஏதாவது ஒரு மரத்திலிருந்து அறுக்கப்பட்ட பலகையாகவே இருக்கும். ரவீந்திர குமார் ஒரு வீட்டை மரத்தின் மீதே கட்டியுள்ளார். இந்த வீட்டை இவர் கமுகு மரத்தின் பட்டை, பழைய ரயில் தண்டவாளங்களை மறுசுழற்சி செய்து தயாரான இரும்புப் பட்டை ஆகியவற்றைக் கொண்டு கட்டினார். கமுகு மரத்திலிருந்து கிடைக்கும் பலகைகள் நீண்ட கால ஆயுள் கொண்டவையாம். இவை நூறு ஆண்டுகள் வரை கூட அப்படியே இருக்குமாம்.

இருபது வயது கொண்ட தூங்குமூஞ்சி மரத்தின் இரண்டு கிளைகளுக்கு மேலே இந்த மர வீடு தூக்கி நிறுத்தப்பட்டிருக்கிறது. அடி மரத்திலிருந்து பிரிந்து செல்லும் இரண்டு கிளைகள் தான் வீட்டைத் தாங்கிப் பிடித்து நிற்கின்றன. அந்தரத்தில் இருப்பது போல் தோற்றம் கொண்டாலும் மரம் வாயிலாக நிலத்தின்மீது நன்கு ஊன்றியபடி இந்த வீடு கம்பீரமாக நிற்கிறது. இதன் கதவுகள், சன்னல்கள், படிகள், அறைக்கலன்கள் அனைத்தும் மரத்தாலானவை. ஒருவேளை இயற்கைச் சீற்றத்தால் இந்த வீடு இடிந்துவிழுந்தாலும் இதன் பொருட்கள் எல்லாம் மண்ணோடு மண்ணாக மட்கிவிடும் என்கிறார் ரவீந்திரா. இதனால் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படாது. வீட்டின் கூரை மீது சுடு மண்ணாலான டைல்ஸ் பதிக்கப்பட்டுள்ளன. இடவசதித் தேவைக்கேற்ப பக்கவாட்டில் நகரும் கதவுகளை அமைத்து அறைகளைப் பிரித்துள்ளார் ரவீந்திரா. மேற்கூரையில் புற்களை வேய்ந்துள்ளார்.

இந்த வீட்டின் வடிவம் பிரமிடைச் சாய்த்துவைத்தது போன்று உள்ளது. வீட்டின் சுவரைக் கல்லால் கட்டி யிருப்பதாலும் அதிகப்படியான மரத்தின் பயன்பாட்டாலும் பசுமையான உணர்வை இந்த வீடு அளிக்கிறது. வெளிப்புறச் சுவரின் மீது கமுகின் மேற்பட்டையை ஒட்டி அழகூட்டியிருப்பதால் பசுமை உணர்வு தூக்கலாகத் தெரிகிறது. குளுகுளு வீட்டை விரும்புவர்களின் மனதை விட்டு அகலாதவை இந்த மர வீடுகள்.

திங்கள், ஏப்ரல் 07, 2014

காற்றோட்டமான வீடு வாங்குகிறீர்களா?

(2014 ஏப்ரல் 5 அன்று தி இந்துவில் வெளியானது) 


வீடு என்பது வெறும் சொல்லல்ல. அது பலருக்குப் பெரும் கனவு. சம்பாத்தியமே போனாலும் கவலையில்லை நல்ல வீடு கிடைத்தால் போதும் என்பது தான் பலரது எதிர்பார்ப்பு. ஆக அப்படி ஒரு வீடு வாங்கும்போது நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். ஒரு வீடு போன்று மற்றொரு வீடு இருக்காது.

எல்லா வீடுகளும் ஒன்றுபோல் தோன்றினாலும் வெவ்வேறானவை. சில சமயங்களில் ஒரே மாதிரி தோன்றும் வீடுகளின் விலை வேறுபட்டிருக்கும். வீடு வாங்கும்போது அதிக விலை கொடுத்தாலும் சரியான வீட்டைத் தேர்ந்தெடுத்தால் நாம் கொஞ்சம் பணத்தைச் சேமிக்கலாம். விலை அதிகம் எனில் எப்படிச் சேமிப்பதாம் எனக் கேட்கிறீர்களா? வீடு வாங்கும்போது வீட்டின் உள்ளே நன்கு கவனித்துப் பாருங்கள். வீட்டின் வெளிப் புறத்தைப் போல் உள்புறமும் நேர்த்தியுடன் அமைக்கப்பட்டிருக்கிறதா எனச் சோதியுங்கள். வீட்டின் உள்ளே வெளிச்சமும் காற்றும் தேவையான அளவில் வருவதற்கு வசதியாக வீட்டின் உட்புறம் அமைக்கப்பட்டிருக்கிறதா என்பதைக் கவனியுங்கள்.

அறைகளுக்கு அவசியமான ஜன்னல்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் ஆரோக்கியமாக வாழ வீட்டிற்குள் சூரிய ஒளியும் சுத்தமான காற்றும் நிறைய வர வேண்டும். முறையான வெண்டிலேஷன் அமைந்துள்ள வீட்டில் அநாவசியமாக விளக்கெரிக்க வேண்டாம். குளிர்சாதன வசதியைத் தேவையின்றிப் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் கோடையில் மட்டும் தான் அந்த வீட்டிற்கு ஏ.சி. தேவைப்படும். இரவில் மட்டும் தான் விளக்கு தேவைப்படும். தேவையான இடங்களில் தண்ணீர் கிடைக்குப் போதுமான குழாய் வசதி அமைந்திருக்க வேண்டும்.
மின் சாதனங்களுக்கு மின்சாரம் வழங்கப் போதுமான சுவிட்ச் போர்டுகளும் சுவிட்சுகளும் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இவையெல்லாம் வீட்டிற்குக் குடிபோகும் முன் கவனிக்கப்பட வேண்டியவை; இவற்றை எல்லாம் கவனிக்காமல் வீட்டிற்குக் குடிபோய்விட்டால் அதனால் அதிகச் சிரமம் ஏற்படும். நமக்குத் தேவையான விதத்தில் வீட்டை மாற்றியமைக்க நேரமும் பணமும் செலவாகும். இவை அநாவசிய விரயங்கள்.

பெரும்பாலும் வீட்டைத் தேர்வு செய்யும் முன்னர் தரையில் டைல்ஸ் பதிக்கப்பட்டுள்ளதா மார்பிள்ஸா கிரானைட்டா என்பதை எல்லாம் உடனே கவனித்துவிடுவோம். ஆனால் குளியலறையில் தேவையான வாஷ் பேசின் உள்ளதா என்பது போன்ற விஷயங்களையும் கவனிக்க வேண்டும். இவை எல்லாவற்றையும் நன்றாக ஆராய்ந்துவிட்டே வீட்டை வாங்க வேண்டும். சில ஆயிரங்கள் குறைவு என்பதால் உட்புறம் முறையாக அமைக்கப்படாத வீட்டை வாங்குவது சரியல்ல. ஏனெனில் அவற்றைப் புதிதாக உருவாக்க அதிக செலவு பிடிக்கும் என்பதை நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள். பலர் அவசரப்பட்டு வீட்டை வாங்கிவிட்டு உள் அலங்காரத்திற்கு அதிகச் செலவு செய்து அவதிப்படுவார்கள். அந்தத் தவறை நீங்கள் செய்துவிடாதீர்கள். வீடு என்பது நிம்மதிக்கானது. எனவே நிதானமாக வீடு வாங்கி நிம்மதியாகக் குடிபோங்கள்.

வியாழன், ஜனவரி 16, 2014

ஒளிக்குத் தப்பிய வாழ்க்கை


தமிழின் முதல் பேசும்படமான காளிதாஸ் (31.10.1931) வெளியாகி 82 ஆண்டுகளாகிவிட்டன. தமிழகத்தில் ஆண்டுதோறும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் திரைப்படம் பார்க்கும் அனுபவம் விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகவே விளங்குகிறது. திரைப்படமோ அதுசார்ந்த மனிதர்களோ இல்லாவிட்டால் பெரும்பாலான தொலைக்காட்சி அலைவரிசைகள் தங்கள் நிகழ்ச்சிகளைக் குறிப்பாகச் சிறப்பு நிகழ்ச்சிகளைத் தயாரிக்கச் சிரமப்படும் என்பதே எதார்த்தம். ஒவ்வொரு  வருடமும் சுதந்திரத் தினத்தன்றும் குடியரசு தினத்தன்றும் வசீகரமான திரைத்துறை ஆளுமைகள் தம் அனுபவங்களை விவரித்து உரையாடும் காட்சிகள் பெரும்பாலான தொலைக்காட்சிகளில் காணக்கூடியவை. அந்தத் திரைத்துறை ஆளுமை ஒரு படத்தில் பங்களித்திருந்தால்கூட அவரிடம் தெரிந்துகொள்ளத் தமிழ்ச் சமூகத்திற்கு ஏராளமான செய்திகள் இருக்கும் என்பதாக அவரை நோக்கிக் கேள்விக் கணைகள் பாயும். ஆனால் காட்சிமொழியையும் சமூகப் புரிதலையும் உள்ளடக்கிய அசலான தமிழ்ப்படம் இது என்று ஒன்றைக்கூட நெஞ்சுநிமிர்த்தி நம்மால் சுட்ட முடியவில்லை. இந்த இடைவெளிக்குக் காரணம் என்ன?

கே.சுப்பிரமணியமும் எஸ். பாலசந்தரும் ஸ்ரீதரும் பாரதிராஜாவும் மகேந்திரனும் தேவராஜ் மோகனும் பாலுமகேந்திராவும் பாலாவும் வெற்றிமாறனும் இவர்களைப் போன்ற வேறுசிலரும் இந்த அவப்பெயரைத் தங்களால் இயன்ற அளவு துடைத்தெறிந்தார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. தியாகபூமி, அந்த நாள், கிழக்கே போகும் ரயில், ஜெயகாந்தனின் உன்னைப் போல் ஒருவன், சிட்டுக்குருவி, அவள் அப்படித்தான், உதிரிப்பூக்கள், வீடு, மகாநதி, சேது, ஆடுகளம், ஆரண்யகாண்டம் போன்ற பல படங்கள் வெவ்வேறு காலகட்டங்களில் தமிழில் தொடர்ந்து உருவாக்கப்படுகின்றன. ஆனாலும் திரைமொழியின் அத்தனை சாத்தியங்களையும் பயன்படுத்திச் சமூகச் சிக்கலின் அனைத்துப் பரிமாணங்களையும் தொட்டுக் கலை அனுபவம் மிளிரும் படங்களை உருவாக்குவதில் நாம் இன்னும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளோம் என்பது கசப்பான உண்மை. இவ்வளவுக்கும் நம்மிடம் திரைத் தொழில்நுட்பம், காட்சிமொழி, திரைப்படத்தின் சாத்தியம் ஆகியவற்றை முழுவதும் உணர்ந்த கலைஞர்கள் தோன்றிக்கொண்டேதான் இருக்கிறார்கள். இருந்தும் ஏன் ஒரு வறட்சி தொடர்ந்து நிலவுகிறது? இந்த வறட்சி தமிழ்த் திரைப்படத் துறையை எப்போதுமே பீடித்துள்ளது என்பதைத் தமிழின் தொடக்ககாலத் திரைப்படக் கட்டுரைகள் உணர்த்துகின்றன.


தமிழர்களின் வாழ்வோடு ஒன்றிணைந்துவிட்ட தமிழ்த் திரைப்படங்கள் தமிழர் வாழ்வைச் சித்திரிக்கும்விதத்தில் மிகவும் விலகியே நிற்கின்றன. ஆழமான அகச்சிக்கல்களையும் அக உணர்வையும் சித்திரிக்கும் தீவிரப் படங்கள் உருவாக்கப்படுவதில் தொடர்ந்து மந்த நிலையே நீடிக்கிறது. தீவிர அக உணர்வுகளை அறிவுத் தளத்தில் விவாதித்த மெட்டி (1981) போன்ற திரைப்படங்கள் அற்பசொற்பமாகவே உருவாக்கப்படுகின்றன. நாட்டு விடுதலையை, தேசப்பற்றை வலியுறுத்திய திரைப்படங்கள் இந்திய விடுதலைக்கு முன்னர் தயாரிக்கப்பட்டன என்பதும் அதைத் தொடர்ந்து சினிமா பேசத் தொடங்கிய பொழுதுகளிலேயே சமூகப் படங்களும் வெளிவரத் தொடங்கிவிட்டன என்பதும் நமது ஆச்சரியத்தை அதிகரிக்கின்றன. சமூகப் படங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்குச் சமூகப் படங்கள் உருவாக்கப்படாததன் காரணமென நாம் ஒரு குறிப்பிட்ட பிரிவினரை மட்டும் சுட்ட இயலவில்லை. இந்தப் படைப்பூக்கத்தின் போதாமையில் திரைத்துறையினரைப் போல அதைக் கண்டுகளிக்கும் விமர்சிக்கும் அனைவருக்கும் பங்குள்ளது என்பதே உண்மை. வாழ்வுக்கும் திரைச் சித்திரிப்புக்கும் இடையே உள்ள இடைவெளிகளை நிரப்புவதற்கான படங்கள் உருவாக்கப்படவே இல்லை என்பது சமூகச் சோகமே. சினிமா ரசனை என்பது தமிழில் பெரிய அளவில் வளர்த்தெடுக்கப்படவில்லை. சமூகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிக்கித் தவிக்கும் நவீனத் தமிழ்க் குடிமக்களின் வாழ்வியலில் சிக்கல்களுக்குப் பஞ்சமேயில்லை. காலனியாதிக்கம், நாட்டு விடுதலை, நெருக்கடி நிலை, திராவிட ஆட்சி, உலகமயமாக்கல், நிதி நிறுவன மோசடி, மென்பொருள் துறையின் தாக்கம், தமிழீழ விடுதலைப் போராட்டம் எனத் தமிழ்ச்சூழலில் அரசியல், சமூக, பொருளாதார மாற்றங்கள் தொடர்ந்து நிகழ்ந்தவண்ணமே உள்ளன. நவீன நகர வாழ்வில் திரும்பிய பக்கங்களில் எல்லாம் சமூகத்தில் சிக்கித் திணறும் சாமான்யர்களின் வாழ்க்கைச் சிக்கல்கள் நம் மனத்தைப் பிறாண்டுகின்றன. சுரீரென மனத்தைத் தைக்கும் இத்தனை பிரச்சினைகளையும் மீறிப் பொழுதுபோக்குத் திரைப்படங்கள் மட்டுமே திரையை ஆக்கிரமித்து நிற்கின்றன. சிறிதுகூடக் கூச்சமேயின்றி அயல்மொழிப் படங்களை அப்படியே தமிழுக்கு மடைமாற்றம் செய்யும் இயக்குநர்கள் நமது சமூகத்தைப் புரிந்துவைத்துள்ளார்களா இல்லையா என்பது குறித்துச் சந்தேகம் எழுகிறது.


 
வலுமிக்க சமூக மாற்றத்தை உருவாக்கக்கூடிய சாத்தியம் கொண்ட சினிமாவைப் புரிந்து கொண்டு திரைப்படங்களைக் காட்சிபூர்வமாகவும் கையாளும் இயக்குநர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். கிழக்கே போகும் ரயில் (1978) திரைப்படத்தில் நாவிதரான மருது எதிரில்வரும் ஆதிக்கசாதியைச் சார்ந்த நபரைக் கண்ட மாத்திரத்தில் காலில் கிடக்கும் செருப்பைக் கழற்றிக் கையில் வைத்துக்கொண்டு உரையாடுவார். சமூகத்தில் சாதிரீதியாக ஒரு சமூகத்தினரை மிகவும் தாழ்ந்த நிலையில் வைத்திருப்பதையும் அந்தச் சமூகத்தினர் அதைக் கேள்வியே கேட்க முடியாத நிலையில் உள்ளதையும் மௌனமாக உணர்த்தியிருப்பார் பாரதிராஜா. இதைப் பார்க்கும்போது இந்தச் சமூக அவலத்தின் மீது நாகரிகம் விரும்பும் மனம் சீற்றம்கொள்ளும். ஒரு கலைஞன் சாதிரீதியான மதரீதியான வேறுபாடுகளைக் களையத் தன்னால் ஆன முயற்சிகளை எடுப்பது அவசியம்.



சினிமா ஒரு காட்சி ஊடகம் என்றபோதும் இன்னும் தமிழ்த் திரைப்படங்களில் வசனம் என்பது முக்கிய இடத்தை வகிக்கிறது. சமீபத்தில் வெளியான ஓநாயும் ஆட்டுக்குட்டியும் (2013) திரைப்படத்தில் முக்கியமான காட்சி ஒன்றில் படத்தின் கருவை, கதைச் சுருக்கத்தை வெறும் வசனங்களால் விவரித்திருப்பார் இயக்குநர் மிஷ்கின். அதற்குக் கிடைத்த வரவேற்பு இன்னும் நாம் வசன ஆதிக்கத்திலிருந்து வெளிவரவில்லை என்பதன் சான்றுதான். மிஷ்கின் திரைப்படங்களைக் காட்சிபூர்வமாக அணுகும் தன்மை கொண்டவர் என்பதும் இந்தப் படமும்கூடக் காட்சிகளாலேயே நகர்த்தப்பட்ட ஒன்று என்பதும் நகைமுரணே. கதைக் களமும் சம்பவங்களும் நிகழும் சூழலும் தமிழ்ப் படம் என்பதற்கான அடையாளமின்றி அமைந்திருந்தன. இப்படத்தின் பல காட்சிகள் நவீன மேடை நாடகக் காட்சிகளைப் போன்றும் திரையில் மலர்ந்துகொண்டிருக்கும் திரைப்படம் ஒன்றின் காட்சிகள் போலவுமே அமைக்கப்பட்டிருந்தன. ஒரு தமிழ்ப் படம் என்று உணர்வதற்கான எந்தச் சான்றும் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் இல்லாததாலேயே இது மனத்தில் ஒட்டவில்லை.

திரைப்படத்திற்குக் கதை முதுகெலும்பு, திரைக்கதை இதயம், ரத்த ஓட்டம் இசை என்றால் அதற்கு உயிரூட்டுபவர் இயக்குநர். ஒளி, இசை, படத்தொகுப்பு, அரங்க வடிவமைப்பு, நடனம், சண்டை என சினிமா தொடர்பான அனைத்துக் கலைகளிலும் இயக்குநருக்கு முழு ஈடுபாடு இருக்க வேண்டும். இயக்குநருக்குச் சம்பவங்களை எப்படிக் காட்சியாக்க வேண்டும், அதை எப்படித் திரையில் மலர்த்த வேண்டும், காட்சியில் புலனாகும் பிம்பங்களுக்கு என்ன பொருள், அவற்றால் பார்வையாளரின் மனத்தில் என்னவிதமான தாக்கம் ஏற்படும் ஆகியவை குறித்த புரிதல் இருக்க வேண்டும். இத்துடன் நாம் வாழும் சமூகத்தின் வரலாறு, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றையும் சமூகத்தில் நிகழும் மாற்றங்களையும் தொடர்ந்து கவனித்துவருவதும் அவசியம். இவை அனைத்தும் ஒன்றிணையும்போதுதான் திரைப்படம் கலாபூர்வ அனுபவமாக மாறும். இதைத் தொடக்கத்திலிருந்தே விமர்சகர்கள் வலியுறுத்திவந்தபடியே இருக்கிறார்கள் என்பதை சினிமாக் கட்டுரைத் தொகுப்பு நூல்கள் உணர்த்துகின்றன.


கே. பாக்யராஜ், டி. ராஜேந்தர் போன்றோரின் வருகைக்கும் வெற்றிக்கும் பின்னர் இயக்குநர் என்றாலே அவருக்குக் கதையும் எழுதத் தெரிந்திருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி ஆகிவிட்டது. தமிழ்த் திரைப்படங்களில் கலைத்தன்மை வீரியத்துடன் வெளிப்படாததற்கு இதுவும் ஒரு காரணம். வாசிப்பனுபவம் இல்லாத இயக்குநர்கள் தமிழ் இலக்கியத்தின் செழுமையை உணராமல் தாங்களாகவே சொந்தமாகக் கதை எழுதத் தொடங்கினார்கள். தமிழ் இலக்கியத்திலிருந்து திரைப்படத்திற்குச் சென்றவர்களோ திரைப்பட ஜோதியில் தங்கள் சுயத்தை இழந்தார்கள். ஜெயகாந்தன், பூமணி போன்றவர்கள் விதிவிலக்குகளே. ஆகச் செழுமையான கதையாடலும் புதுமையான திரைமொழியும் இணைந்து ஆக்கப்பூர்வமான பாதையில் செயல்பட்டுக் கலை அனுபவம் மிளிரும் திரைப்படங்கள் உருவாவதற்கான ஊற்றின் தோற்றுவாய் முற்றிலும் தூர்ந்துபோய்விட்டது.

தற்போதைய இயக்குநர்களில் திரைப்பட மொழியைப் புரிந்துகொண்டவர்களில் சிலர் குறிப்பாகப் பாலா போன்றோர் இலக்கியத்தின் செழுமையைத் தாங்கள் உருவாக்கும் திரைப்படங்களில் பயன்படுத்திக்கொள்ள விழைந்ததாலேயே இலக்கியவாதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களைப் பயன்படுத்திக்கொள்ள முனைந்தனர். நவீன இலக்கியத் தளத்தில் தொடங்கி ஆனந்தவிகடன் வாயிலாகப் பரவலான வாசகர்களைச் சென்றடைந்த எஸ். ராமகிருஷ்ணன், ஜெயமோகன் போன்றோரது திரைத்துறைப் பங்களிப்பு என்று பார்த்தால் எதுவுமே மிஞ்சவில்லை. அதனால்தான் ரஷ்யக் கதையின் பாதிப்பில் என்ற பாவனையில் சாமி இயக்கிய சிந்து சமவெளி என்னும் மாமனார் மருமகளுக்கிடையேயான அபூர்வ உறவைப் பகிரங்கப்படுத்திய ‘கலைப்படைப்பு’க்கு வசனம் எழுத ஜெயமோகனால் முடிந்தது. சுஜாதா, பாலகுமாரன் போன்றோர் செலுத்திய பங்களிப்பைக்கூட இந்த நவீன எழுத்தாளர்களால் செலுத்த முடியவில்லை.


80களின் மத்தியில் தமிழ்த் திரைப்படத் துறையில் நுழைந்து தனக்கென ஓரிடம் அமைத்துக்கொண்ட இயக்குநர் மணிரத்னத்தை விடலைப் பருவ மயக்கத்தின்போது மட்டுமே நெருங்க முடிந்தது. கையாண்ட எந்தக் கருத்திலும் ஆழமான புரிதல் இன்றி மேம்போக்காக அவர் காட்சிகளை ஒரு குறிப்பிட்ட வார்ப்பில் ஊற்றி எடுத்து அடுக்கிச் சென்றுள்ளார். காட்சிகளின் அழகியலுக்கு அழுத்தங்களைத் தந்திருந்த மணிரத்னம் உணர்வுகளின் ஆழங்களுக்குள் இறங்க இயலாமல் உயரத்தில் நிற்கிறார். இன்று அயல்நாட்டுப் படங்களைப் பார்த்து அதை அப்படியே சுத்தத் தமிழ்ப் படமாக உருவாக்க முற்படும் இயக்குநர்களுக்குத் தவறான வழிகாட்டியவராக இவரைச் சுட்ட முடிகிறது. எண்பதுகளின் இறுதிப் பகுதியில் வெளியாகி அப்போதைய பதின் பருவத்தினரின் மனசுகளைக் கவர்ந்துகொண்ட இவரது மௌன ராகம் - இப்படத்தின் அபத்தம் குறித்து அசோகமித்திரன் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்- கே. பாக்யராஜின் அந்த ஏழு நாட்கள்தான் என்பதையும் அலைபாயுதே திரைப்படத்தின் திரைக்கதை உத்தி கே. பாக்யராஜின் மௌன கீதங்களின் உத்தி என்பதையும் அறிந்தபோது அவர்மீது கொண்டிருந்த மயக்கம் கலைந்தது. இவருக்கு இணையாகச் சிலாகிக்கப்பட்ட மற்றொரு இயக்குநர் ஷங்கர். இவரது இயக்கத்தில் வெளிவந்த ஜென்டில்மேன், இந்தியன், அந்நியன், முதல்வன் போன்றவை சமூகத்தின் ஆழமான சிக்கல்களின் வேரைக் கண்டறிய முற்படாமல் மேலெழுந்தவாரியாக இலைகளை வெட்டிச் சென்றன. இட ஒதுக்கீடு, லஞ்சம் உள்ளிட்டவற்றைக் கையாண்ட இவரது திரைப்படங்களில் ஷங்கர் முன்வைத்த அரசியல் ஆபத்தானது. காட்சிரீதியான அழகியலுக்கு முக்கியத்துவம் தந்த இவர்களது திரைப்படங்கள் தமிழ்த் திரைப்பட வரலாற்றின் கரும்புள்ளிகள் எனச் சுட்டப்படும் சகலகலாவல்லவன், முரட்டுக்காளை போன்ற திரைப்படங்களுக்கு எந்த வகையிலும் குறைந்ததில்லை. எஸ்.பி. முத்துராமன் இயக்கிய எங்கேயோ கேட்ட குரல், புவனா ஒரு கேள்விக்குறி போன்ற படங்கள் முக்கியமானவை என்பதையும் இங்கே நினைவுகூர வேண்டும்.


2000த்திற்குப் பின்பு மணிரத்னம், ஷங்கர் போன்றவர்களை ஆதர்ஷமாகக் கொண்டு திரையுலகிற்குள் நுழைந்த இளம்வயதினர் ஒழுங்கான திரைப்படங்களை உருவாக்க முடியாமல் தடுமாறினார்கள். அவர்களுக்கு வழிகாட்ட வேண்டியவர்கள் வழிதவறியவர்களாயிருந்தனர். திரைப்பட விழாக்களிலும் டிவிடிகளிலும் புது இயக்குநர்கள் கண்ட உலகப் படங்கள் அவர்களுக்கு உத்வேகத்தை அளித்தன. அதே வேளையில் தமிழ்ப் படங்களைக் கோத்திருந்த காட்சிகள் மேம்போக்கானவையாக இருந்தன. இவற்றுக்கிடையே காணப்பட்ட பெரும் வித்தியாசம் இயக்குநர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியது. எத்தகைய படங்களை உருவாக்க வேண்டும் என்னும் தெளிவு அவர்களுக்குள் உருவாக வாய்ப்பில்லாமல் போயிற்று.

தமிழ் வாழ்வியலில் காணப்படும் கலாச்சார, பண்பாட்டுச் சிக்கல்கள் தமிழ்த் திரைப்படங்களில் பாவனைகளாகவே வெளிப்படுகின்றன. தமிழ்ச் சமூகத்தில் டாஸ்மாக் கலாச்சாரம் தனது கொடுங்கரங்களால் குடும்பங்களின் இனிமையான கட்டமைப்பை ஈவு இரக்கமின்றிக் கலைத்துப்போடுகிறது. ஆனால் தமிழ்த் திரைப்படங்களிலோ கதாநாயகன் நண்பர்களுடன் தனது மகிழ்ச்சியையோ துக்கத்தையோ பரிமாறிக்கொள்ளப் பயன்படும் மேடையாகவே இத்தகைய டாஸ்மாக் மேசைகள் பயன்பட்டன. 2012இல் வெளியான மதுபானக் கடை தனக்குக் கிடைத்த சிறு வாய்ப்பில் குடி சார்ந்த பன்மைத் தன்மையைச் சித்திரிக்க முயன்று அதில் குறிப்பிடத்தக்க வெற்றியும் பெற்றது. ஆனாலும் இந்தப் படத்தைக் குறும்படத்தின் விரிவாக்கம் என்பதாகவே நினைவுகூர முடிகிறது. சமகாலச் சிக்கல்கள் குறித்த சித்திரிப்புகளும் கலைநுட்பமான திரைமொழியும் சரிவிகிதத்தில் கலக்கும்போதுதான் முழுமையான திரைப்படக் கலை பரிணமிக்கும். தொழில்நுட்ப அறிவும் காட்சியின் அழகியலும் மண் சார்ந்த மணமும் மனமும் தனித்தனியாகப் பயணிக்கும்போது கடல், அம்மாவின் கைப்பேசி, பரதேசி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும் போன்ற அரைகுறைப் படங்களே எஞ்சும். இவற்றையெல்லாம் மீறிப் புதுத் தலைமுறை இயக்குநர்கள் நமது சிக்கலைப் பேச வேண்டியிருந்தது. அவர்களது கவனம் உள்ளூர் இலக்கியங்களிலும் சமகால வாழ்விலும் நிலைகொள்வதற்குப் பதில் அயல்மொழித் திரைப்படங்களைச் சுற்றியது. வாசிப்பு என்பது காட்சிமொழியை வளப்படுத்திப் புதிய கற்பனைகளை மனத்தில் கிளர்த்தும் என்பது ஓர் எளிய உண்மை. ஆனால் நம் இயக்குநர்களில் பெரும்பாலானோர் உலகத் திரைப்படங்களைப் பார்ப்பதாலேயே தங்கள் படைப்பூக்கம் மிளிரும் கற்பனைத் திறன் வலுப்பெறும் என நம்புகிறார்கள்.


பாலாவின் சேது (1999) காதலைப் பின்புலமாகவும் பொழுதுபோக்குத் திரைப்படத்தின் உத்திகளைக் கவனமாகவும் கையாண்டிருந்தபோதும், பாலா திரைப்பட மொழியைப் புரிந்துகொண்டவராகத் தெரிந்தார். மண்ணின் கலாச்சாரத்தை, பண்பாட்டைப் பிரதிபலிக்கக்கூடிய தீவிரமான திரைப்படத்தை உருவாக்கும் ஆற்றல் கொண்டவர் என்னும் நம்பிக்கையை உருவாக்கிய அவர் தந்ததென்னவோ ஏமாற்றம்தான். அவரை உயரத்திற்குச் செல்லவிடாமல் அவரது இந்துத்துவச் சார்பு தடுத்துவிடுகிறது. சமூகத்தின் விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வியல் சார்ந்த சிக்கல்களைக் காட்சிகளாக மாற்ற முடிந்த அவரால் ஜெயகாந்தன் எழுத்தில் வடித்திருந்த அழுத்தத்தைத் தர முடியவில்லை. அதனால் தொடர்ந்து வந்த அவரது திரைப்படங்கள் அவரைச் சமூகப் புரிதலற்ற கலகக்காரனாகவே அடையாளம் காட்டின. தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் கடுந்துயரை முழுமையான அர்ப்பணிப்பு உணர்வுடன் திரைப்படமாக்கத் துணிந்த பாலா அதைப் பிழைபட நிறைவேற்றியிருந்தார். எனவே பரதேசியால் தான் அடைய வேண்டிய உயரத்தை அண்ணாந்து மட்டுமே பார்க்க முடிந்தது. தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் துயரார்ந்த வாழ்க்கையை அவர் தனது விருப்புவெறுப்புகளை விடுத்து முழுமையாகச் சித்திரித்திருந்தால் ஒடுக்கப்பட்ட ஒரு சமூகம் மேட்டிமைச் சமூகத்தின் இன்பங்களுக்காக எவ்வளவு தூரம் சிதைக்கப்பட்டது என்பதன் காட்சி ஆவணமாகவும் கலை அனுபவமாகவும் அப்படம் அமைந்திருக்கும். அப்படி அமையாமல் போனதற்கு யாரைக் குற்றப்படுத்துவது?


இயக்குநர் பாரதிராஜா லண்டன் தீபம் தொலைக்காட்சிக்கு 2013 ஏப்ரலில் நேர்காணல் ஒன்று அளித்துள்ளார். அதில் அவர் கலைஞன் சமூக அக்கறையுடன் செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார். மக்களின் விருப்பத்திற்கு ஏற்பப் படங்கள் உருவாக்கப்படுகின்றன என்பதை அவர் ஒத்துக்கொள்ள மறுத்திருந்தார். மக்களைக் கீழான கலைக்குப் பழக்கப்படுத்திவிட்டு அவர்கள் பொழுதுபோக்கு அம்சங்கள் மட்டுமே கொண்ட படங்களை விரும்புகிறார்கள் எனக் கூறுவதை விமர்சித்திருந்தார். அத்தகைய படங்களை உருவாக்குவது தவறு என்றும் அவை திரையரங்கிற்கு வருவதால்தான் பார்வையாளர்கள் பார்க்கிறார்கள் என்றும் கருத்துத் தெரிவித்திருந்தார். பார்வையாளர்கள்மீது பழியைப் போட்டு அவர்களைச் செல்லுலாய்ட் போதையில் அமிழ்த்துவது தொடர்பான தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்.


காதலை வெவ்வேறு விதமாகச் சித்திரித்த பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான அன்னக்கொடி (2013) ஆதிக்கசாதியினரின் ஒடுக்குமுறையைக் காட்சிகளாகக் கொண்டிருந்தும் அது குறிப்பிடத்தக்க தாக்கத்தை உருவாக்கவில்லை. அன்னக்கொடியும் கொடிவீரனும் என்னும் தலைப்பில்கூடத் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த இளைஞனின் பெயரை நீக்கிய பின்னரே வெளியானது. சாதி என்னும் மாயக்கரம் நமது சமூகத்தின் குரல்வளையை அழுத்தமாக நெறிப்பதை மூடிமறைத்துக்கொண்டே இருந்தால் நாம் நாகரிகச் சமூகமாகத் திமிர்ந்தெழுவது சாத்தியமல்ல. படைப்பூக்கம் மிளிரும் காலத்தில் பாரதிராஜா இதே அன்னக்கொடியைப் படமாக்கியிருந்தால் அதன் வெளிப்பாடு வேறு விதமாக அமைந்திருக்கலாம்.

வேதம் புதிது (1987) திரைப்படத்தில், “பாலுத் தேவர் பாலுத் தேவர்ன்னு சொல்றீங்களே பாலுங்கிறது உங்க பேரு. தேவர்ங்கிறது நீங்க வாங்கிய பட்டமா?” என ஒரு பிராமணச் சிறுவன் கேள்வி கேட்க முடிந்தது. இதே கேள்வியைச் சமூகரீதியாகப் பிற்படுத்தப்பட்ட அல்லது தாழ்த்தப்பட்ட பிரிவைச் சார்ந்த சிறுவனால் திரையில் எழுப்ப முடியுமா, அப்படிக் காட்சி அமைக்கும் துணிவுள்ள இயக்குநர்கள் நம்மிடையே உள்ளனரா? அப்படியான துணிவும் புரிதலும் சமூக அக்கறையும் உள்ள இயக்குநர் எழுந்தருளும்போதுதான் திரைப்படக் கலை வீரியத்துடன் வெளிப்பட்டுச் சமூகத்தின் சிக்கல்களைப் பாகுபாடின்றிப் பேசும். உலக அரங்கில் தமிழ்த் திரைப்படங்கள் பேசப்படும். அதைவிடுத்து ஆஸ்கர் நாயகன், உலக நாயகன் என நாயகர்களைத் தூண்டிவிடுவதோ தென்னகத்து சத்யஜித் ரே என இயக்குநர்களுக்கு முதுகுசொறிவதோ சிறுபிள்ளைத் தனமாகவே இருக்கும்.


மௌனகுரு (2011) திரைப்படத்தை இயக்கிய சாந்தகுமார் சூது கவ்வும் படத்தை இயக்கிய நலன் குமரசாமி, கற்றது தமிழ் ராம், ஆடுகளம் வெற்றிமாறன் போன்ற இயக்குநர்கள் ஒருசிலர்மீது நம்பிக்கைகொள்ள முடிகிறது. ஆனாலும் நமது அடையாளம் சார்ந்த மண்ணின் ஈரம் கொண்ட படங்கள் உருவாகுமா என்பது கேள்விக்குறிதான். மீனவர்கள் சிக்கல்களைச் சித்திரித்து சமீப ஆண்டுகளில் மூன்று திரைப்படங்கள் வெளியாயின. நீர்ப்பறவை (2012), மரியான் (2013) ஆகிய இரண்டுமே மீனவர்கள் வாழ்க்கையின் அடிப்படையையே கவனத்தில்கொள்ளாமல் உருவாக்கப்பட்டிருந்தன. தினந்தோறும் சிங்கள ராணுவத்தால் பல்வேறு தாக்குதல்களை எதிர்கொண்டு அனுதினமும் அல்லல்படும் மீனவர்களின் வாழ்க்கை திரையில் அழுத்தம் திருத்தமாகப் பதிவாகவில்லை. வாலியின் படகோட்டி படப் பாடல் இதைவிட அழுத்தமாக மீனவர்களின் துயரத்தைப் பதிவுசெய்திருந்தது. கடல் திரைப்படத்தைப் பார்ப்பதற்கான துணிவு இல்லை. ஆனால் அதுவும் மேலோட்டமான சித்திரிப்பு என்று நேர்மையான விமர்சனங்கள் தெரிவித்தன.


விமர்சனங்களை விமர்சனங்களாக எதிர் கொள்ளும்போதுதான் ஒரு கலைஞன் முழுமையை நோக்கி ஆரோக்கியத்துடன் முன்னேற முடியும். ஆனால் இங்கு விமர்சனங்களை விமர்சனமாகப் பார்க்கும் தன்மை தகர்க்கப்பட்டுவிட்டது. இது முழுக்க முழுக்கப் படைப்பாளிகள் சார்ந்த பிரச்சினை அல்ல. விமர்சகர்களும் இந்த நிலைக்குக் காரணம். விமர்சனத்தை மூர்க்கத்துடன் எதிர்கொள்ளும் இயக்குநருக்கும் கூடிக்கிடந்த காலத்தில் படத்தைப் போற்றிப் பிரிந்த பின்னர் இகழும் விமர்சகருக்கும் இதில் பங்கு உண்டு. ஒரு படைப்பாளியின் பணி விமர்சனங்களுக்குப் பதில் சொல்லி நேரத்தையும் காலத்தையும் வீணடிப்பதல்ல. விமர்சனங்கள் நேர்மையோடு வெளிப்படின் அது சார்ந்த பரிசீலனை படைப்புக்கு உதவும். அவ்வளவுதான். படைப்பாளி விமர்சனங்களை மட்டுமே கருத்தில் கொண்டால் படைப்புச் செயல்பாடு மழுங்கிவிடும். விமர்சகன் கரையில் நின்று கருத்துரைக்கிறானே ஒழிய கப்பலைச் செலுத்தும் மாலுமிக்குத்தான் காற்றின் திசையும் அலையின் வலுவும் கப்பலின் நிலையும் புரிபடும். விமர்சகனின் வேட்கையும் மாலுமியின் விழைவும் இனிமையான பயணமே. அது சாத்தியமாகாதபோதே இருவருக்குள் மாற்றுக் கருத்துகள் எழுகின்றன. தமிழ்த் திரைப்படத்துறையைப் பொறுத்தவரை இந்த முரண் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. விமர்சனங்களால் படைப்பு கூர்மைப்பட வேண்டுமே தவிர முனை மழுங்கக் கூடாது என்பதில் விமர்சகர்களுக்கும் இயக்குநர்களுக்கும் நம்பிக்கை வேண்டும். படைப்புகளும் விமர்சனங்களும் முக்கியமே ஒழிய படைப்பாளியோ விமர்சகரோ முக்கியமல்ல. கலங்கரை விளக்கம் கப்பலின் பயணத்திற்கு அவசியமோ இல்லையோ விளக்கின் ஒளி கப்பலுக்காகவே சுழன்றுகொண்டிருக்கும்.

(இக்கட்டுரையை எழுத உதவிய நூல்கள்: 
பாம்பின் கண் தமிழ் சினிமா ஓர் அறிமுகம் - மீதி வெள்ளித்திரையில் (சு. தியடோர் பாஸ்கரன்), சித்திரம் பேசுதடி (தொகுப்பாசிரியர் சு. தியடோர் பாஸ்கரன்), பேசும் பொற்சித்திரம் (அம்ஷன் குமார்), அநேக இணையதளங்கள்)

காலச்சுவடு ஜனவரி 2014 இதழில் ( http://www.kalachuvadu.com/issue-169/page88.asp) பிரசுரமாகியுள்ள கட்டுரை இது.

வியாழன், ஜனவரி 02, 2014

புதியதல்லாத புது நாள்

புத்தாண்டைக் கொண்டாடி மகிழும் மனநிலை எப்போதுமே இருந்ததில்லை. பெரிய உற்சாகத்தை மனம் உணர்ந்ததில்லை என்பது ஒரு காரணம். வீடு என்பது தொல்லையான இடமாக இருந்தால் வெளியில் செல்லலாம். ஆனால் வீட்டில் இருப்பதே நிம்மதி என்னும் உணர்வு தான் உள்ளது. அதனால் வீட்டில் அமர்ந்தே பொழுதுபோனது. ஃபேஸ்புக், டுவீட்டர் என சமூக வலைதளங்கள் தனிமையைக் கலைக்க பெரிதும் உதவும். நம் நண்பர்கள் உலகமெங்கும் விழித்துக்கொண்டிருப்பதை ஃபேஸ்புக்கில், ஜிமெயிலில் ஒளிரும் சிறு பச்சை வட்டம் உணர்த்தும். பக்கத்திலேயே அமர்ந்து அவர் வேறு ஏதோ வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார் என்று தான் தோன்றும். அவர் எங்கோ எந்த மாநிலத்திலோ எந்த நாட்டிலோ எந்த நகரத்திலோ இருக்கக்கூடும். ஃபேஸ்புக்கை உருட்டும்போது நண்பர்கள் யாரை நண்பர்களாக சேர்த்திருக்கின்றனர், எதை விரும்புகின்றனர், எதற்கு எதிர்வினை ஆற்றியுள்ளனர் போன்ற செய்திகளை அறிந்துகொள்ளலாம். ஆக தனியே இருந்தாலும் தனிமை அல்ல அது.


24 மணி நேர செய்தி அலைவரிசைகள் வந்த பின்னர் புத்தாண்டு கொண்டாட்டத்தை நேரடி ஒளிபரப்பு செய்வது உள்ளிட்ட கொண்டாட்ட போக்கு அதிகரித்துள்ளது. ஒவ்வொரு வருடமும் வந்துகொண்டும் போய்க்கொண்டும் தான் இருக்கிறது. விஷேசமாக சொல்வதற்கு எதுவும் இல்லை. ஆனாலும் புத்தாண்டை சடங்குத் தனமாகக் கொண்டாடி மகிழ்வோர் இருக்கத்தான் செய்கின்றனர். இந்தப் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஆறேழு பேர் இறந்துள்ளனர். ஜனனமும் மரணமும் இயல்பானது தான். ஆனால் அநியாயத்திற்குச் செத்துப்போகிறார்களே என்ற எண்ணம் எழத்தான் செய்கிறது. வழக்கம்போல் தொலைக்காட்சிகளை திரையுலக ஆளுமைகள் நிறைக்கின்றனர். பைசா பெறாத விஷயங்களைக் கிடைப்பதற்கரிய பொக்கிஷமாய் பேசி மாய்கிறார்கள். கையில் ரிமோட் கண்ட்ரோல் இருந்தபோதும் எந்தப் பெரிய மாற்றமுமில்லை. ஒரே ஆளுமைகள் வெவ்வேறு தொலைக்காட்சிகளில் சொன்னதையே சொல்லிச் செல்கிறார்கள். 



சினிமா தவிர்த்த பொழுதுபோக்கு அம்சங்கள் குறித்த பிரக்ஞை எந்தத் தொலைக்காட்சிக்கும் இருப்பது போல் தெரியவில்லை. தொலைக்காட்சி என்பது ஆற்றல்மிக்க ஊடகம் தான். ஆனால் தமிழில் வெளிவரும் நிகழ்ச்சிகள் எவையும் ஆழமானவையோ பரிசீலிக்கத்தக்கவையோ அல்ல. ஒரே ஒரு தூர்தர்ஷன் இருந்தபோது கிடைத்த ஆசுவாசம் இத்தனை தொலைக்காட்சி அலைவரிசைகள் வந்து பின்னர் அதிகரித்திருக்க வேண்டும். ஆனால் அயர்ச்சியை உண்டுபண்ணும்விதமாகவே தொலைக்காட்சிகள் அமைந்துள்ளன. ஒரே விதமாக யோசிக்கின்றன. ஏற்கனவே வெற்றிகரமாக நடைபெறும் நிகழ்ச்சிகளை நகலெடுக்கும் வேலை தான் நடக்கிறது. 


பரிசோதனை பண்ணி பார்க்க எந்தத் தொலைக்காட்சியும் முயல்வதில்லை. எல்லாவற்றிற்கும் பணம் பண்ணும் ஆசை மட்டுமே உள்ளது. மக்கள் திரளுக்கு அதை எல்லாம் உணர வாய்ப்பே இல்லை. அவர்கள் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். கிடைக்கும் இடைவெளியில் அவர்களைத் தொந்தரவு செய்யாத நிகழ்ச்சிகளை மட்டும் பார்க்க விரும்புகிறார்களோ என்னவோ? அறிவியல், இலக்கியம், வரலாறு தொடர்பான ஆழமான நிகழ்ச்சிகளைத் தயாரிக்கும் தைரியம் எந்தத் தொலைக்காட்சிக்கும் இல்லை. ஒருவேளை மக்களும் அவற்றைப் பார்க்கத் தயாராக இல்லையோ என்னவோ? தொடர்ந்து ஒரு நாள் முழுவதும் தமிழ்த் தொலைக்காட்சி அலைவரிசைகளை யாராவது பார்த்தால் பைத்தியம் பிடித்துவிடும். அதிலும் நெடுந்தொடர்கள் உங்கள் கொதவளையை நெரிச்சிரும். ஆனாலும் பைத்தியம் பிடிக்காதபடி மக்கள் பார்த்துக்கொண்டே தான் இருக்கிறார்கள். மக்களிடம் ஏதோ ஒரு வெறுமை உள்ளது. அதைப் பூர்த்திசெய்ய அவர்களுக்கு கிடைப்பது போதும் போல. ஆழமான விஷயங்களை நோக்கி அவர்கள் நகர விருப்பப்பட மாட்டார்கள் என்பது நமது சூழலின் சாபமோ?

லேட்டஸ்ட்

அமலா எனும் பொன்மான்

தொடர்பவர்