இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், ஏப்ரல் 14, 2014

குளு குளு மர வீடுகள்

(2014 ஏப்ரல் 12 அன்று தி இந்துவில் வெளியானது) 


நமது முன்னோர்கள் வீடுகளைப் பெரும்பாலும் களிமண், சுண்ணாம்பு, கல், மரம் போன்ற இயற்கையான பொருள்களைக் கொண்டே கட்டினார்கள். வெப்பமான நமது சூழலுக்கு ஏற்றவாறான வீடுகளைக் கட்டி அதில் தான் அவர்கள் வாழ்ந்துவந்தார்கள். வீடு கட்டவும் அலங்காரங்களுக்கும் மரங்களை அதிகமாகப் பயன்படுத்தினார்கள். மரப் பலகைகள் சூட்டைக் கடத்தாது, தடுத்துவிடும். எனவே அதிகமான சூடு வெளியில் இருந்தாலும் வீட்டின் உள்ளே வெப்பம் வராது. கோடைகாலத்தில் வீடு குளுகுளுவென்றிருக்கும், குளிர்காலத்திலோ கதகதப்பாக இருக்கும்.

ஆனால் இப்போதெல்லாம் நமது வீட்டின் அமைப்பு மாறிவிட்டது. நவீனக் கட்டுமானப் பொருட்களும் பெருகிவிட்டன. அதிகப் பொருட்செலவில் முழுக்க சிமெண்டையும் இரும்பையும் கண்ணாடியையும் பயன்படுத்தி வீடுகளை உருவாக்குகிறோம். இதனால் வீடுகளில் மரங்களைப் பார்ப்பதே அரிதாகிவிட்டது. பழைய வீடுகளின் கதவுகளையும் உத்திரங்களையும் நினைவுபடுத்திப் பாருங்கள். நவீன வீடுகளின் உருவாக்கத்தில் உபயோகமுள்ள மரத்தை மறந்துவிட்டோம். பசுமையான சூழலை வீட்டிற்குத் தரும் மரங்களை விட்டு விலகிவிட்டோம். ஆனால் பழைய வீடுகளைப் பார்க்கும்போது பலருக்கு ஏக்கமாக உள்ளது. கடந்த காலத்தை விட்டு நீண்ட தூரம் வந்துவிட்டாலும் அந்தப் பழங்கால உத்தியை இப்போதைய சூழ்நிலைக்கு ஏற்றவாறு பயன்படுத்தி வருகிறார் கட்டடக் கலை நிபுணர் ரவீந்திர குமார்.

இவர் பெங்களூருவில் உள்ள ப்ரகுருப் (Pragrup) என்னும் கட்டட நிறுவனத்தின் முதன்மை வடிவமைப்பாளர். மரத்தாலான வீடுகளை இவர் உருவாக்கிவருகிறார். மர வீடுகள் மட்டுமல்ல மரத்திலேயேகூட வீடு கட்டித் தருகிறார் ரவீந்திர குமார். உங்களுக்குத் துணிச்சலும் வித்தியாசமான விருப்பமும் இருந்தால் மரத்தின் மீது கட்டப்படும் வீட்டில் குடியிருக்கலாம். இது வரை சுமார் 20 மர வீடுகளை ரவீந்திர குமார் உருவாக்கியுள்ளார். இவை அனைத்துமே தனித்துவமானவை. ஒவ்வொன்றும் பிரத்தியேகமான வடிவமைப்பைக் கொண்டவை. ஆனால் அனைத்து வீடுகளுக்குமான பொதுவான அம்சங்கள் அவற்றின் அழகும் பசுமையான சூழலும்.

உங்களது சொந்த வீட்டை உருவாக்குங்கள் என்னும் கருத்தை அடிப்படையாகக் கொண்டே இவர் வீடுகளைக் கட்டுகிறார். இதனடிப்படையில் மரப் பலகைகளை வைத்துப் பண்ணை வீடுகள் போல் பசுமையான சூழலில் வீடுகளை அமைக்கும் முயற்சியில் இவர் ஈடுபடுகிறார். இவரது வீடுகளில் பாதங்கள் அதிகமாகத் தரையைத் தொட வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் முழுக்க முழுக்க மரங்கள் தாம் வீட்டை ஆக்கிரமித்து நிற்கும். சுவர்கள், கூரைகள், தளங்கள் என அனைத்துமே ஏதாவது ஒரு மரத்திலிருந்து அறுக்கப்பட்ட பலகையாகவே இருக்கும். ரவீந்திர குமார் ஒரு வீட்டை மரத்தின் மீதே கட்டியுள்ளார். இந்த வீட்டை இவர் கமுகு மரத்தின் பட்டை, பழைய ரயில் தண்டவாளங்களை மறுசுழற்சி செய்து தயாரான இரும்புப் பட்டை ஆகியவற்றைக் கொண்டு கட்டினார். கமுகு மரத்திலிருந்து கிடைக்கும் பலகைகள் நீண்ட கால ஆயுள் கொண்டவையாம். இவை நூறு ஆண்டுகள் வரை கூட அப்படியே இருக்குமாம்.

இருபது வயது கொண்ட தூங்குமூஞ்சி மரத்தின் இரண்டு கிளைகளுக்கு மேலே இந்த மர வீடு தூக்கி நிறுத்தப்பட்டிருக்கிறது. அடி மரத்திலிருந்து பிரிந்து செல்லும் இரண்டு கிளைகள் தான் வீட்டைத் தாங்கிப் பிடித்து நிற்கின்றன. அந்தரத்தில் இருப்பது போல் தோற்றம் கொண்டாலும் மரம் வாயிலாக நிலத்தின்மீது நன்கு ஊன்றியபடி இந்த வீடு கம்பீரமாக நிற்கிறது. இதன் கதவுகள், சன்னல்கள், படிகள், அறைக்கலன்கள் அனைத்தும் மரத்தாலானவை. ஒருவேளை இயற்கைச் சீற்றத்தால் இந்த வீடு இடிந்துவிழுந்தாலும் இதன் பொருட்கள் எல்லாம் மண்ணோடு மண்ணாக மட்கிவிடும் என்கிறார் ரவீந்திரா. இதனால் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படாது. வீட்டின் கூரை மீது சுடு மண்ணாலான டைல்ஸ் பதிக்கப்பட்டுள்ளன. இடவசதித் தேவைக்கேற்ப பக்கவாட்டில் நகரும் கதவுகளை அமைத்து அறைகளைப் பிரித்துள்ளார் ரவீந்திரா. மேற்கூரையில் புற்களை வேய்ந்துள்ளார்.

இந்த வீட்டின் வடிவம் பிரமிடைச் சாய்த்துவைத்தது போன்று உள்ளது. வீட்டின் சுவரைக் கல்லால் கட்டி யிருப்பதாலும் அதிகப்படியான மரத்தின் பயன்பாட்டாலும் பசுமையான உணர்வை இந்த வீடு அளிக்கிறது. வெளிப்புறச் சுவரின் மீது கமுகின் மேற்பட்டையை ஒட்டி அழகூட்டியிருப்பதால் பசுமை உணர்வு தூக்கலாகத் தெரிகிறது. குளுகுளு வீட்டை விரும்புவர்களின் மனதை விட்டு அகலாதவை இந்த மர வீடுகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

லேட்டஸ்ட்

ஒரு விக்ரம் பத்து கமல்ஹாசன்

தொடர்பவர்