இந்த வலைப்பதிவில் தேடு

கட்டுமானம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கட்டுமானம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, ஜூன் 15, 2014

மெட்ரோ ரயிலால் மேம்படும் ரியல் எஸ்டேட்

சென்னையை அறியாதவர்கள் யாரும் தமிழகத்தில் இருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை அப்படி யாராவது இருந்தாலும் அவர்களுக்குச் சென்னையில் நீண்டு கிடக்கும் மௌண்ட் ரோடு எனச் சொல்லப்படும் அண்ணா சாலை தெரியாமல் இருக்காது. ஏனெனில் பல தமிழ்த் திரைப்படங்களில் சென்னையின் பிரதான கட்டிடங்களில் ஒன்றாகக் காண்பிக்கப்படும் எல்ஐசி, ஸ்பென்ஸர் பிளாசா போன்றவை இந்தச் சாலையில் தான் அமைந்துள்ளன. இந்தச் சாலையில் தற்போது மெட்ரோ ரயில் பணிகள் துரிதமாக நடைபெற்றுவருகின்றன. மெட்ரோ ரயில் ஓடத்தொடங்கும் நாளை மாநகரின் மனிதர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். சென்னை நகரவாசிகளைப் போலவே ரியல் எஸ்டேட் துறையினரும் மெட்ரோ ரயிலை ஆர்வமாக எதிர்கொள்ளவிருக்கிறார்கள். ஏனெனில் மெட்ரோ ரயில் பணிகள் காரணமாகத் தற்போது போக்குவரத்து பாதிக்கப்பட்டாலும் ரயில் ஓடத் தொடங்கிய பின்னர் சென்னை அண்ணாசாலையில் தங்கள் துறை சார்ந்த வணிகம் பெருக வாய்ப்புள்ளதாக ரியல் எஸ்டேட் துறையினர் நம்புகின்றனர். 

ஒரு காலத்தில் அண்ணா சாலையில் அலுவலகங்களை அமைக்க போட்டா போட்டி இருந்தது. ஆனால் சென்னை மாநகரில் இரண்டு சக்கர வாகனங்களும் நான்கு சக்கர வாகனங்களும் தொடர்ந்து அதிகரித்ததால் போக்குவரத்து நெரிசல் உருவானது. இதன் காரணமாக அண்ணா சாலையில் அலுவலகத்திற்கு வந்துபோக சிரமமானது. மேலும் அலுவலகங்களில் வாகனங்களை நிறுத்தும் இடத்திற்கும் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் கொஞ்சம் கொஞ்சமாக வணிக நிறுவனங்கள் தங்கள் பார்வையை வேறு பக்கம் திருப்பின. இந்த நிலை மெட்ரோ ரயில் இயங்கத் தொடங்கியதும் மாறிவிடும் என ரியல் எஸ்டேட் துறையில் உள்ளவர்கள் தெரிவிக்கின்றனர். 

தற்போது அண்ணாசாலையில் இருக்கும் பல கட்டிடங்கள் சென்னை மாநகர் கட்டுமானச் சட்டம் உருவாகும் முன்னர் கட்டப்பட்டவை. எனவே அவை கட்டுமானச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றியிருக்காதவை. நிலத்தின் பரப்புக்கும் அதில் உருவாக்கப்படும் கட்டிடத்தின் பரப்புக்கும் உள்ள விகிதத்தை அவை முறையாகப் பேணியிருப்பதில்லை. சில கட்டிடங்கள் அனுமதிக்கப்படும் அளவைவிட இரு மடங்கு பரப்பு கொண்ட கட்டிடத்தை எழுப்பியுள்ளன. ஆகவே அவை மறு சீரமைக்கப்பட வேண்டியது அவசியம் என்று ரியல் எஸ்டேட் அமைப்பு அரசிடம் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. 

தரமான அலுவலகம் என வகைப்படுத்தப்படும் கிரேடு ஏ அலுவலகங்களுக்கான இடம் அண்ணாசாலையில் மிகக் குறைவாகவே உள்ளது. அநேகமான கட்டிடங்களில் கிரேடு பி, சி போன்ற வகை அலுவலகங்களே அமைந்துள்ளன. வாகன நிறுத்தம், உள்கட்டமைப்பு உள்ளிட்ட வசதிகளை அடிப்படையாக கொண்டே கிரேடுகள் நிர்ணயிக்கப்படுகின்றன. சென்னையில் மெட்ரோ ரயில் செயல்பாட்டுக்கு வந்த பின்னர் பொதுப் போக்குவரத்து மேம்படும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். கார்களிலும் பைக்களிலும் வந்தவர்கள் மீண்டும் பொதுப் போக்குவரத்தை நாடுவார்கள். இதனால் அண்ணாசாலை அலுவலகங்களுக்கு எளிதில் வந்து போகும் சூழல் உருவாகும்.

ஆகவே பெரும்பாலான கட்டிடங்கள் கிரேடு ஏ வகை அலுவலகங்களை உருவாக்கும் வாய்ப்பை மெட்ரோ ஊக்குவிக்கும். இதில் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்தும் நிலைமை ஏற்படும். ஏற்கனவே பல கட்டுமான நிறுவனங்கள் இந்த முயற்சியில் இறங்கியுள்ளன என ரியல் எஸ்டேட் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. நந்தனத்திலும் ஆயிரம் விளக்கிலும் நான்கு லட்சம் சதுர அடிக்கு மேல் அலுவலகம் அமைக்கும் அளவுக்கு இடத்தை வைத்துள்ள கட்டுமான நிறுவனம் இந்த நிலையை முன்னரே உணர்ந்துள்ளதாகக் கூறுகிறது. அண்ணா சாலையில் ஜெமினி மேம்பாலம் அருகே அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்று உருவாவதைக் குறிப்பிடும் அந்நிறுவனம் அநேக கிரேடு ஏ அலுவலகங்கள் விரைவில் உருவாகும் என நம்பிக்கையுடன் சொல்கிறது. அத்தனை அலுவலகங்களையும் எளிதில் சென்றடைய வசதியாக மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைவது ரியல் எஸ்டேட் துறையினருக்கும் உற்சாகம் அளிக்கிறது.    

ஞாயிறு, ஜூன் 08, 2014

உள்ளூர் கட்டுமானப் பொருட்களையே வாங்குங்கள்


வீடு கட்ட அவசியமான கட்டுமானப் பொருட்களின் விலை குறித்து அதிக எச்சரிக்கையுடன் நடந்துகொள்கிறோம். விலையைப் பார்த்துப் பார்த்து வாங்குகிறோம். எங்கே விலை மலிவாக உள்ளது எனப் பலரிடம் விசாரிக்கிறோம். விலை குறைவாக இருந்தால் எவ்வளவு தூரம் என்றாலும் பரவாயில்லை அங்கேயிருந்து கட்டுமானப் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என முடிவெடுத்து விடுகிறோம். பொருளாதார ரீதியாகப் பார்த்தால் இது சரிதான். ஆனால் சுற்றுச்சூழலை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால் இது சிக்கலானது என்கிறார்கள் கட்டிட நிபுணர்கள். ஏனெனில் கட்டுமானப் பொருட்களை அதிக தூரத்திலிருந்து வாங்கும்போது அந்தப் பொருட்களைக் கொண்டுவர போக்குவரத்து உள்ளிட்ட பல விஷயங்களைக் கவனித்துக்கொள்ள வேண்டியதிருக்கிறது. இதனால் நேரடியாகவும் மறைமுகமாகவும் இயற்கை கடும் பாதிப்புக்கு உள்ளாகிறது எனத் தெரிவிக்கிறார்கள் நிபுணர்கள். 

உலகமயமாக்கலுக்குப் பின்னர் இந்தப் போக்கு அதிகரித்து வருகிறது. உலகின் எந்தப் பகுதியில் இருந்தும் எந்தப் பகுதிக்கும் பொருட்களைக் கொண்டுசெல்லலாம் என்ற வாய்ப்பின் காரணமாக உள்ளூர் பொருட்களை யாரும் பெரிதாகக் கொள்வதில்லை. கட்டுமானப் பொருட்களை வெளியில் இருந்து வாங்கி வீட்டைக் கட்டும் செலவைக் குறைத்துவிட்டால் போதும் என்று செயல்படும்போது சுற்றுச்சூழலைக் கவனித்துக் கொள்ள மறந்துவிடுகிறோம். இது சரியான செயலல்ல என எச்சரிக்கிறார்கள் கட்டிடக் கலை நிபுணர்கள்.  ஏனெனில் கட்டுமானப் பொருட்களை ஓரிடத்தில் இருந்து தொலைதூரத்திலுள்ள மற்றொரு இடத்திற்கு அனுப்புவதற்கு அதிகப்படியான வேலைகள் தேவைப்படுகின்றன. அவற்றை பேக்கிங் செய்ய வேண்டும், வாகனங்களில் அனுப்ப வேண்டும், சந்தைப்படுத்த வேண்டும், அதற்குரிய பணியாளர்கள், இணையத்தின் மூலம் பெற்றால் அது தொடர்பான பணிகள் என அநேகர் அந்தப் பணியுடன் தொடர்புபடுவார்கள். இதற்குத் தேவைப்படும் மொத்த சக்திக்கான செலவை எல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தால் அது ஒருவேளை உள்ளூரில் கிடைக்கும் கட்டுமானப் பொருட்களின் விலையைவிட வெளியிலிருந்து வாங்கும் கட்டுமானப் பொருட்களின் விலை அதிகமாக ஆகலாம். ஆனால் தற்போது நம்மிடம் இருக்கும் வழிமுறைகள் மூலம் இந்த மொத்த ஆற்றலையும் அதற்கான செலவையும் சரிவரக் கணக்கிட முடியவில்லை.

தொலைதூரத்திலிருந்தோ அல்லது வெளிநாட்டிலிருந்தோ கட்டுமானப் பொருட்களை வாங்கும் போது இன்னொரு விஷயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பொதுவாக ஓரிடத்தின் தட்பவெப்ப நிலை சார்ந்த பொருட்கள் அந்தப் பகுதியிலேயே கிடைக்கும். அதைவிடுத்து அந்தத் தட்பவெப்பத்திற்கு தொடர்பு இல்லாத கட்டுமானப் பொருட்களை விலை மலிவு என்பதற்காக வாங்கினால் அதனால் தீங்கு ஏற்படக் கூடும். வெப்பம் அதிகம் நிலவும் பகுதியில் உள்ள பொருட்கள் குளிர் மிகுந்த பகுதியின் கட்டுமானப் பொருள்களை விலை குறைவு என்று வைத்துக்கொள்ளுங்கள். விலை மலிவு என்பதற்காக வெப்பம் அதிகம் நிலவும் பகுதியில் கிடைக்கும் கட்டுமானப் பொருட்களை வாங்கி குளிர் நிலவும் பகுதியில் வீடு கட்டினால் எப்படி இருக்கும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள்.   

உலகமயமாக்கல் காரணமாக உலகின் ஏதோ ஒரு மூலையில் கிடைக்கும் பொருளை விலை மலிவு என்பதற்காக நாம் வாங்கத் தொடங்கினால் நம்மையே நம்பி உள்ளூரில் கட்டுமானப் பொருட்களை உற்பத்திசெய்வோர் பாதிக்கப்படுவார்கள். இதனால் உள்ளூர் தொழில் சரிவடையும், தேசத்திற்கு அது பாதிப்பு ஏற்படுத்தும். இதையெல்லாம் கருத்தில் கொண்டு உள்ளூர் பொருட்களை வாங்கும்போது மட்டுமே நம்மால் இயற்கைக்கு சேதாரமற்ற வீட்டைக் கட்டியெழுப்ப முடியும். பசுமை கட்டிடத்தை அமைக்க 600 கி.மீ. தூரத்திற்குட்பட்ட பகுதியில் இருந்தே கட்டுமானப் பொருட்களை வாங்க வேண்டும் என சுற்றுச்சூழலியல் கூறுகிறது. ஆகவே நீடித்து நிற்க வேண்டிய நமது கட்டிடத்திற்கு அதிக ஆயுளை வழங்கக்கூடிய வகையில் தயாராகும் உள்ளூர் கட்டுமானப் பொருட்களை நாம் ஆதரிக்க வேண்டிய தருணம் இது என்பதைக் கவனத்தில் கொள்வது அவசியம்.

லேட்டஸ்ட்

அமலா எனும் பொன்மான்

தொடர்பவர்