இந்த வலைப்பதிவில் தேடு

ரியல் எஸ்டேட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரியல் எஸ்டேட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, ஜூன் 15, 2014

மெட்ரோ ரயிலால் மேம்படும் ரியல் எஸ்டேட்

சென்னையை அறியாதவர்கள் யாரும் தமிழகத்தில் இருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை அப்படி யாராவது இருந்தாலும் அவர்களுக்குச் சென்னையில் நீண்டு கிடக்கும் மௌண்ட் ரோடு எனச் சொல்லப்படும் அண்ணா சாலை தெரியாமல் இருக்காது. ஏனெனில் பல தமிழ்த் திரைப்படங்களில் சென்னையின் பிரதான கட்டிடங்களில் ஒன்றாகக் காண்பிக்கப்படும் எல்ஐசி, ஸ்பென்ஸர் பிளாசா போன்றவை இந்தச் சாலையில் தான் அமைந்துள்ளன. இந்தச் சாலையில் தற்போது மெட்ரோ ரயில் பணிகள் துரிதமாக நடைபெற்றுவருகின்றன. மெட்ரோ ரயில் ஓடத்தொடங்கும் நாளை மாநகரின் மனிதர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். சென்னை நகரவாசிகளைப் போலவே ரியல் எஸ்டேட் துறையினரும் மெட்ரோ ரயிலை ஆர்வமாக எதிர்கொள்ளவிருக்கிறார்கள். ஏனெனில் மெட்ரோ ரயில் பணிகள் காரணமாகத் தற்போது போக்குவரத்து பாதிக்கப்பட்டாலும் ரயில் ஓடத் தொடங்கிய பின்னர் சென்னை அண்ணாசாலையில் தங்கள் துறை சார்ந்த வணிகம் பெருக வாய்ப்புள்ளதாக ரியல் எஸ்டேட் துறையினர் நம்புகின்றனர். 

ஒரு காலத்தில் அண்ணா சாலையில் அலுவலகங்களை அமைக்க போட்டா போட்டி இருந்தது. ஆனால் சென்னை மாநகரில் இரண்டு சக்கர வாகனங்களும் நான்கு சக்கர வாகனங்களும் தொடர்ந்து அதிகரித்ததால் போக்குவரத்து நெரிசல் உருவானது. இதன் காரணமாக அண்ணா சாலையில் அலுவலகத்திற்கு வந்துபோக சிரமமானது. மேலும் அலுவலகங்களில் வாகனங்களை நிறுத்தும் இடத்திற்கும் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் கொஞ்சம் கொஞ்சமாக வணிக நிறுவனங்கள் தங்கள் பார்வையை வேறு பக்கம் திருப்பின. இந்த நிலை மெட்ரோ ரயில் இயங்கத் தொடங்கியதும் மாறிவிடும் என ரியல் எஸ்டேட் துறையில் உள்ளவர்கள் தெரிவிக்கின்றனர். 

தற்போது அண்ணாசாலையில் இருக்கும் பல கட்டிடங்கள் சென்னை மாநகர் கட்டுமானச் சட்டம் உருவாகும் முன்னர் கட்டப்பட்டவை. எனவே அவை கட்டுமானச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றியிருக்காதவை. நிலத்தின் பரப்புக்கும் அதில் உருவாக்கப்படும் கட்டிடத்தின் பரப்புக்கும் உள்ள விகிதத்தை அவை முறையாகப் பேணியிருப்பதில்லை. சில கட்டிடங்கள் அனுமதிக்கப்படும் அளவைவிட இரு மடங்கு பரப்பு கொண்ட கட்டிடத்தை எழுப்பியுள்ளன. ஆகவே அவை மறு சீரமைக்கப்பட வேண்டியது அவசியம் என்று ரியல் எஸ்டேட் அமைப்பு அரசிடம் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. 

தரமான அலுவலகம் என வகைப்படுத்தப்படும் கிரேடு ஏ அலுவலகங்களுக்கான இடம் அண்ணாசாலையில் மிகக் குறைவாகவே உள்ளது. அநேகமான கட்டிடங்களில் கிரேடு பி, சி போன்ற வகை அலுவலகங்களே அமைந்துள்ளன. வாகன நிறுத்தம், உள்கட்டமைப்பு உள்ளிட்ட வசதிகளை அடிப்படையாக கொண்டே கிரேடுகள் நிர்ணயிக்கப்படுகின்றன. சென்னையில் மெட்ரோ ரயில் செயல்பாட்டுக்கு வந்த பின்னர் பொதுப் போக்குவரத்து மேம்படும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். கார்களிலும் பைக்களிலும் வந்தவர்கள் மீண்டும் பொதுப் போக்குவரத்தை நாடுவார்கள். இதனால் அண்ணாசாலை அலுவலகங்களுக்கு எளிதில் வந்து போகும் சூழல் உருவாகும்.

ஆகவே பெரும்பாலான கட்டிடங்கள் கிரேடு ஏ வகை அலுவலகங்களை உருவாக்கும் வாய்ப்பை மெட்ரோ ஊக்குவிக்கும். இதில் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்தும் நிலைமை ஏற்படும். ஏற்கனவே பல கட்டுமான நிறுவனங்கள் இந்த முயற்சியில் இறங்கியுள்ளன என ரியல் எஸ்டேட் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. நந்தனத்திலும் ஆயிரம் விளக்கிலும் நான்கு லட்சம் சதுர அடிக்கு மேல் அலுவலகம் அமைக்கும் அளவுக்கு இடத்தை வைத்துள்ள கட்டுமான நிறுவனம் இந்த நிலையை முன்னரே உணர்ந்துள்ளதாகக் கூறுகிறது. அண்ணா சாலையில் ஜெமினி மேம்பாலம் அருகே அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்று உருவாவதைக் குறிப்பிடும் அந்நிறுவனம் அநேக கிரேடு ஏ அலுவலகங்கள் விரைவில் உருவாகும் என நம்பிக்கையுடன் சொல்கிறது. அத்தனை அலுவலகங்களையும் எளிதில் சென்றடைய வசதியாக மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைவது ரியல் எஸ்டேட் துறையினருக்கும் உற்சாகம் அளிக்கிறது.    

திங்கள், மே 12, 2014

ஆடம்பர வீடுகளால் அதிரும் கட்டுமானத் துறை

(2014 மே 10 அன்று தி இந்துவில் வெளியானது)


சென்னையின் ரியல் எஸ்டேட் சந்தை பழமை விரும்பிகள் நிறைந்ததாகப் பார்க்கப்படுகிறது. பாரம்பரியமான வீடுகளை விரும்புவோர்களும் மரபு சார்ந்த விஷயங்களின் மீது பிடிப்பு கொண்டோருமே சென்னையில் வீடு வாங்கிக் குடியேறுகிறார்கள் என்னும் நம்பிக்கை ரியல் எஸ்டேட் வட்டாரத்தில் இருந்துவருகிறது. ஆனால் சமீப காலமாக வீடுகளுக்கான சந்தையில் உருவாகிவரும் மாற்றங்கள் இந்த நம்பிக்கையைத் தகர்க்கின்றன.

முன்னணிக் கட்டுமான நிறுவனங்கள் சென்னையில் ஏராளமான ஆடம்பர வீடுகளை உருவாக்கிவருகின்றன. அடையாறு, எழும்பூர், எம்.ஆர்.சி. நகர், நுங்கம்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலை, அண்ணா சாலை போன்ற இடங்களில் கட்டப்பட்டுவரும் புதிய வீட்டுத் திட்டங்களே இதற்குச் சான்றுகள். இந்தத் திட்டங்களில் உருவாகிவரும் குடியிருப்புகளில் சுமார் ஆயிரம் வீடுகள் கட்டப்படுகின்றன. இங்கு ஒரு வீட்டின் விலை 5 முதல் 15 அல்லது 16 கோடி ரூபாய் வரை உள்ளது. இந்தத் திட்டங்களில் பெரும்பான்மையானவை வரவிருக்கும் மாதங்களில் பூர்த்திபெற்றுவிடும்.

இந்தத் திட்டங்கள் எல்லாம் நுகர்வோரால் எவ்வளவு விரும்பி வாங்கப்படும் என்பதைப் பொறுத்தே இவற்றின் வளர்ச்சி இருக்கும் என்கிறார்கள் கட்டுமானத் துறையைச் சேர்ந்த சிலர். சில திட்டங்கள் தொடங்கப்பட்டபோது ஓரளவு வாடிக்கையாளர்கள் வந்து தங்களுக்கான வீடுகளைப் பதிவுசெய்துள்ளனர். குடியிருப்புப் பகுதிகளை முற்றிலும் கட்டி முடித்துள்ள நிறுவனங்கள் அவற்றை வாடிக்கையாளர்களுக்குத் திறந்துவிடும் அதிருஷ்ட நேரத்திற்காகக் காத்திருக்கிறார்கள். நில உரிமையாளர்கள் சிலரும் இதைப் போன்ற குடியிருப்புகளைக் கட்டிவருகிறார்கள். முன்னணிக் கட்டுமான நிறுவனங்களும் இத்தகைய குடியிருப்புகளை உத்வேகத்துடன் உருவாக்கிவருகின்றன.

பெரும்பாலான திட்டங்களில் உருவாகும் வீடுகளை நுகர்வோர்கள் கடன் பயமின்றி வாங்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க முன்னேற்றமே. வழக்கமாகச் சென்னையில் தொழிலில் ஈடுபட்டு வரும் கட்டுமான அதிபர்கள் கூட்டுத் திட்டங்களில் முதலீடு செய்வதையே வலியுறுத்துவார்கள். ஆனால் சமீபத்திய திட்டங்களில் ஈடுபட்டுவரும் நிறுவனங்கள் கணிசமான அளவில் தங்களைப் பணயம் வைத்து இந்தத் திட்டங்களை நிறைவேற்றிவருகின்றன. இதனால் கட்டுமானத் துறையைக் கூர்ந்து கவனிப்பவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தனிநபர்கள்கூடத் தங்களது நிலங்களில் சொந்தமாகக் குடியிருப்புத் திட்டங்களை, அதற்கான பிரத்தியேக திட்ட மேலாண்மைக் குழுவின் உதவியுடன் நிறைவேற்றுகிறார்கள். வீட்டுத் திட்டங்களின் தொடக்க செலவுக்கான நிதியைச் சம்பாதிப்பதற்காக நுகர்வோருக்கு நல்ல தள்ளுபடியை வழங்குகிறார்கள். தி.நகர் போன்ற பகுதிகளில் சில திட்டங்களுக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பு தனிநபர்களைத் துணிச்சலுடன் ரியல் எஸ்டேட் துறைக்குள் இறக்கியுள்ளது.

குடியிருப்புத் திட்டங்களை ஊக்குவிக்கக்கூடிய அளவுக்கு தியேட்டர்கள், வணிக வளாகங்கள் போன்றவை அமையாவிட்டால்கூட சில ஹோட்டல்கள் இத்தகைய திட்டங்களுக்கு அனுகூலமாய் அமைந்துள்ளன. ஆடம்பர வீடுகளை உருவாக்குவதில் வீட்டின் இண்டீரியரில் பொருத்தப்படும் அதிநவீன சாதனங்கள், குளியலறையின் நவீன வசதிகள், அலங்கார விளக்குகள் போன்றவையே சவாலாக இருக்கும் அம்சங்கள். கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்கும்போது பார்த்தாலே பிரமிப்பை ஏற்படுத்தும் தோற்றத்தில் வீடு அமைவது அவசியம். ஆகவே வீட்டைப் பார்த்த உடன் இதற்குக் கோடி ரூபாய் கொடுக்கலாம் என்னும் எண்ணத்தை உருவாக்கும் இண்டீரியரைத் தர வேண்டும்.

இந்த ஆடம்பர வீடுகளை வாங்குவதில் ஆர்வம் காட்டுபவர்கள் கோடி கோடியாய்ச் சம்பாதிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்களல்ல. நமது நாட்டிலேயே வசிக்கும் உயரதிகாரிகளும், பிரபலங்களும், தொழிலதிபர்களும்தான் இங்கு வீடுகளை வாங்கத் துடிக்கிறார்கள் என்பது ஆச்சரியம்தான். ஆனால் இந்தத் திட்டங்களைச் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் வெளிநாட்டு முதலீட்டார்களை அணுக எந்தத் தடையும் இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியதிருக்கிறது.

லேட்டஸ்ட்

அமலா எனும் பொன்மான்

தொடர்பவர்