இந்த வலைப்பதிவில் தேடு

உண்மை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உண்மை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, பிப்ரவரி 29, 2020

உறவைத் துளைத்த தோட்டா


பதினேழாம் சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவில்,  2019 டிசம்பர் 15 அன்று கேசினோ திரையரங்கில் திரையிடப்பட்ட படம் எ சன், பிக் கெனெய்: அ பிஸ் என்பது இதன் அசல் தலைப்பு. பிரெஞ்சு நாட்டிலிருந்து 1956-ல் விடுதலை பெற்ற அரபு நாடான துனிசியாவில் 2011-ம் ஆண்டையொட்டிய பென் அலி காலத்தில் நடைபெற்ற உள்நாட்டுக் கலகப் பொழுதில் இந்தப் படத்தின் சம்பவங்கள் நடந்தேறுகின்றன.  அடிமைமுறையை ஒழித்த முதல் அரேபிய நாடு துனிசியா; அதுதான் மகளிருக்கு முதல் வாக்களிக்கும் உரிமையைத் தந்த அரபு நாடு; முறைப்படியான தேர்தலை நடத்தியது அது. அதே நாட்டில்தான் திருமணம் கடந்த உறவுக்கெதிரான சட்டமும் கடுமையாக உள்ளது. திருமணம் கடந்த உறவு நிரூபணமானால் ஐந்தாண்டுகள்வரை சிறைத்தண்டனை வழங்கும் சட்டமும் அமலிலுள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் இப்படத்தை உருவாக்கியுள்ளதாக இயக்குநர் மெஜி பசௌவ்வி ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார்.

துனிசியா, பிரான்ஸ், லெபனான், கத்தார் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இந்தப் படம் அரேபிய, பிரெஞ்சு மொழியில் எடுக்கப்பட்டிருக்கிறது. படத்தை எழுதி இயக்கியவர் மெஜி பசௌவ்வியின் முதல் படம் இது. படத்தின் திரைக்கதையில் மனித உணர்வுதான் மேலோங்கியிருக்கிறது. உணர்வின் தளத்திலேயே படம் நகர்ந்துசெல்கிறது. அரசியல், சமூகம், மதம், தனிமனித உறவு, உணர்வு ஆகிய அம்சங்களை இணைத்தோடும் திரைக்கதையில் ஒரு படகு போல் ஏற்ற இறங்கங்களுடன் பயணம்செல்கிறது படம்.

ஃபேர்ஸ் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் தலைமைச் செயல் அலுவலர். அவருடைய மனைவி மெரியெம் மனிதவள மேம்பாட்டுத் துறையில் உயரிய பொறுப்பில் பணியாற்றுகிறார். மெரியெம் மனிதவளத் துறையின் இயக்குநராகப் பதவி உயர்த்தப்படுகிறார். அதைத் தெற்கு துனிசியாவில் ஓரிடத்தில் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் கூடி உற்சாகமாகக் கொண்டாடுகிறார். கொண்டாட்டம் முடிந்து தங்கள் பிரியத்துக்குரிய மகன் அஜீஸுடன் தங்களது சொகுசு காரில் திரும்புகிறார்கள். காட்சியிலும் பின்னணியிசையிலும் அவர்களது உற்சாகமான மனநிலையை உணர முடிகிறது. மகிழ்ச்சியான அந்தப் பொழுதில் ஆயுதமேந்திய குழு ஒன்று நடத்தும் தாக்குதலில் புறப்பட்டுவந்த தோட்டா ஒன்று காரைப் பதம் பார்க்கிறது. அது காரோடு போயிருந்தால் கவலை இல்லை. தங்கள் ஆசை மகனைத் துளைத்துவிட்டு ஓய்வுகொள்கிறது அந்தத் தோட்டா.


எல்லாமும் ஒரு நொடியில் மாறிவிடுகிறது. அந்தக் குடும்பத்தின் ஒட்டுமொத்த மகிழ்ச்சியும் சட்டென்று பதங்கமாகிவிடுகிறது. அன்புப் புதல்வனைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைகிறார்கள். அடுத்த தோட்டா அங்கே காத்திருக்கிறது. இந்தத் தோட்டா எந்த உடம்பையும் துளைக்கவில்லை. ஆனால், மனங்களைத் துளைத்தெடுக்கிறது. அஜீஸின் கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டுவிடுகிறது. கல்லீரலை மாற்றியாக வேண்டும் என்கிறார் மருத்துவர். அதற்காக மேற்கொண்ட டிஎன்ஏ சோதனையில் அதிர்ச்சி தரும் தகவல் ஒன்று வெளிப்படுகிறது. இதுவரை தனது மகன் என்று நம்பிய மகன் தன் மகனல்ல எனும் உண்மை ஃபேர்ஸின் அடிவயிற்றைக் கலக்குகிறது.

அந்த உண்மை ஃபேர்ஸ், மெரியெம் இடையிலான அன்பையும் இணக்கத்தைம் கேள்விக்குறியாக்குகிறது. ஏதோவொரு ஆயுதத்தில் யாரோ ஒருவர் ஏவிய துப்பாக்கிக் குண்டு அந்தத் தம்பதியின் சுமுக உறவைத் துளைத்துவிடுகிறது. துனிசியா நாட்டின் சூழலை இந்தக் குடும்பம் பிரதிபலிக்கிறது. இப்படிப் பயங்கரவாதச் செயலால் எத்தனை எத்தனையோ குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன. படம் அரசியல் பிரச்சினையைத் தொட்டுச் செல்கிறது. ஆனால், அத்துடன் மட்டும் நிற்கவில்லை. பெண் விடுதலை, உறுப்பு மாற்று சிகிச்சை, இஸ்லாம் அங்கீகரிக்காத ஆண் பெண் உறவு குறித்த பல அம்சங்களையும் தனித்தனி அடுக்குகளாகப் படம் கொண்டுள்ளது.

முதன்மை வேடங்களில் நடித்திருக்கும் சமி பவ்ஜிலா, நஜிலா பென் அப்துல்லா இருவரும் ஒரு தம்பதியாகத் தாங்கள் வெளிப்படுத்த வேண்டிய உணர்வுகளை மிகத் துல்லியமாக வெளிப்படுத்தியுள்ளார்கள். தன் மகனைக் காப்பாற்ற முடியாமல் கையறு நிலையில் நிற்கும் வேதனையையும், கணவனது நடவடிக்கைகளில் சந்தேகம் தொனித்தபோதும் அதை முழுமையாகக் கேள்வி கேட்க முடியாத நிலையையும் முழுமையாக நடிப்பில் கொண்டுவந்துள்ளார். அதே போல் சமி பவ்ஜிலாவும் தான் மகனாகக் கருதும் தன் மகன் தனக்குப் பிறந்தவனல்ல என்ற உண்மையை அறிந்தபிறகும் அவனை வளர்த்த பாசத்தால் அவனைக் காப்பாற்றத் துடிக்கும் துடிப்பைத் திறம்பட வெளிக்காட்டியுள்ளார். உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக சமூகத்தின் விளிம்புநிலையில் உள்ள மனிதர்களைக் கிஞ்சித்தும் இரக்கவுணர்வின்றி ஒரு கூட்டம்  பயன்படுத்தும் தன்மையைப் படம் சுட்டுகிறது. அரசியல், மதக் கொள்கைகள் எப்படித் தனிமனித வாழ்வைக் கூறுபோடுகின்றன என்பதை இந்தப் படம் மிகவும் நாகரிகமாகவும் அதே வேளையில் நுட்பமாகவும் மனிதநேய உணர்வு தொனிக்கும் வகையிலும் காட்சிப்படுத்தியுள்ளது.

ஞாயிறு, ஜூலை 31, 2016

சினிமா ஸ்கோப் 9: ரெண்டும் ரெண்டும் அஞ்சு


பொதுவாகவே திரைக்கதை என்பது ஒரு முரண்களின் விளையாட்டு. எப்போதுமே முரணான விஷயங்களை எடுத்துக்கொண்டு அதில் பயணப்படும்போதுதான் திரைக்கதையின் சுவாரசியம் கூடும். நல்லவர் நல்லது செய்வார் என்பதில் பெரிய சுவாரசியமிருக்காது. ஆனால் ஒரு தீய செயலை அவர் செய்யும்போது, அதற்கான காரணத்தை அறிந்துகொள்வதில் ஆர்வம் ஏற்படும். அப்படியான ஆர்வத்தைத் தூண்டும்வகையிலான திரைக்கதையை அமைக்கும்போது ரசிகர்களை எளிதில் ஈர்க்கலாம். 

எனவேதான் பெரும்பாலான திரைக்கதைகள் முரண்களின்மீதே களம் அமைத்துக்கொள்ளும். சின்ன தம்பி திரைப்படத்தில் குடும்ப கவுரவத்தின் சின்னமான குஷ்பு, தாலியென்றால் என்னவென்றே அறியாத பிரபுவைக் காதலித்ததுபோல் நிஜத்தில் எங்காவது நடக்குமா, காலணியைக் கழற்றிவிட மாட்டாரா? அது சினிமா, அங்கே ஒரு முரண் தேவைப்பட்டது அவ்வளவுதான்.  

முரண்களைக் கொண்டு அமைக்கப்படும் திரைக்கதையை ஒரு வகையில் குதிரை சவாரிக்கு ஒப்பிடலாம். சவாரி பிடிபட்டால் காற்றாகப் பறக்கலாம். இல்லையென்றால் காற்றில் பறக்க நேரிடும். இந்த உண்மை புரியாமல் பலர் இதில் சிக்கிக்கொண்டு அல்லல்படுகிறார்கள். சினிமா பார்க்கும்போது திரைக்கதை என்பது மிகவும் சாதாரணமாகத் தோன்றும். இதை எழுதுவது அவ்வளவு கடினமா என்ற எண்ணத்தில் சினிமாவுக்கு வந்துவிடுகிறார்கள். சினிமாவுக்கு எழுதவும் தொடங்கிவிடுகிறார்கள். ஆனால் பின்னர்தான் அதன் நடைமுறைச் சிரமத்தை உணர்வார்கள். 


ஒருவர் நன்றாகப் படித்திருப்பார், புலமைபெற்றவராக இருப்பார். ஆங்கிலம் அவருக்குத் தண்ணீர்பட்ட பாடாக இருக்கும். ஆனால் அவற்றை நம்பி அவர் ஒரு திரைக்கதையை எழுதத் துணிந்தால் விழி பிதுங்கிவிடும். அதே நேரத்தில் இன்னொருவர் எதுவுமே பெரிதாகப் படித்திருக்க மாட்டார். பள்ளிப் படிப்பையே பாதியில் விட்டுவிட்டு வந்திருப்பார். வெட்டியாகப் பொழுதைக் கழிப்பவராக இருப்பார், ஆனால் சுவாரசியமான திரைக்கதைகளாக எழுதிக் குவிப்பார்.

இதுவே முரண் தானே? இது எப்படிச் சாத்தியம். இதை அறிவால் அறிந்துகொள்ள முயன்றால் தோல்வியே மிஞ்சும். இதை உணர்வுரீதியில் அணுகினால் மிக எளிதாகப் புரிந்துகொள்ளலாம். அப்படியான உணர்வுகொண்டோரால் தான் திரைக்கதையை உருவாக்க முடியும். ஏனெனில் அது ஒரு குழந்தையைக் கையாள்வது போன்றது. அதற்கு அறிவு அடிப்படைத் தேவையல்ல, ஆனால் இங்கிதமான உணர்வும் கரிசனமும் இன்றியமையாதவை. திரைக் கதாபாத்திரங்கள் வெறும் நிழல்கள். ஆனால் அவற்றை ரசிப்பவர்கள் ரத்தமும் சதையுமான மனிதர்கள். இந்தப் புரிதலுடனும் நெகிழ்ச்சியான உணர்வுடனும் கதையைக் கட்டுக்கோப்பாகவும் அனைவரும் ரசிக்கும்படியாகவும் இயல்பான சம்பவங்களால் கட்டி நகர்த்திச் செல்லும் திறமை இருந்தால்போதும், சின்னச் சின்ன சம்பவங்களில் ரசிகர்களை நெகிழ்த்திவிட முடியும். 

அப்படியான காட்சிகள்தான் ரசிகர்களை ஈர்க்கவும் செய்யும். கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரே விஷயம் நெகிழ்ச்சி என்பது அதன் வரம்பைக் கடந்துவிடாமலிருக்க வேண்டும். இல்லையென்றால் ரசக்கேடாய் அமைந்துவிடும். இந்த வரம்பைக் கற்றுக்கொள்ள வேண்டுமென்றால் தங்கர்பச்சானின் ஒன்பது ரூபாய் நோட்டு, அம்மாவின் கைப்பேசி, சேரனின் தவமாய்த் தவமிருந்து போன்ற திரைப்படங்களைப் பாருங்கள். உங்களுக்கே புரிந்துவிடும்.


திரைக்கதையில் ஒரு காட்சி அதிகாலை புலர்வது போல் இயல்பாகத் தொடங்க வேண்டும்; மாலையில் கதிரவன் மறைவது போல் கச்சிதமாக நிறைவுபெற வேண்டும். இதற்கான பயிற்சியைக் காலமும் அனுபவமும் தான் கற்றுத்தரும், லிங்குசாமி இயக்கிய ஆனந்தம் திரைப்படத்தில் ஒரு காட்சியில் பின்னிரவில் நடிகை ஸ்ரீவித்யா வீட்டின் பண்ட பாத்திரங்களை எடுத்துப் போட்டு விளக்கிக்கொண்டிருப்பார். பல குடும்பங்களில் இந்தக் காட்சியை அன்றாடம் நாம் பார்த்திருப்போம். அதைத் திரைப்படத்தில் பார்க்கும்போது நமக்கு உணர்வெழுச்சி ஏற்படுகிறது. 

இப்படியான சின்னச் சின்ன இயல்பான சம்பவங்கள் ஒரு படத்தில் இருந்தாலே அந்தப் படம் ரசிகர்களுக்கு நெருக்கமானதாக மாறிவிடும். இந்தக் காட்சியை அமைக்கப் பெரிய அறிவு அவசியமல்ல. ஆனால் வீடுகளில் அம்மாக்கள் செய்யும் அப்படிப்பட்ட வேலைகளைக் கண்களால் அல்லாமல் மனதால் கவனித்திருக்க வேண்டும். அப்படிக் கவனித்திருந்தால் பொருத்தமான ஒரு தருணத்தில் அதேவிதமான காட்சியை அமைக்கலாம். 

நடைமுறை வாழ்க்கையில் பார்க்கும் ஒரு சம்பவத்தைத் திரைக்கதையில் கொண்டுவரும்போது கற்பனை வளத்துடன் அந்தக் காட்சி அமைய வேண்டும். இல்லையென்றால் அதற்கு ஒரு ஆவணப் படத் தன்மை வந்துவிடும். யதார்த்தத்துக்கு நெருக்கமாக இருக்க வேண்டும் அதே நேரத்தில் ஆவணப் படத் தன்மையிலிருந்து விலகியிருக்க வேண்டும். அப்படியான விதிகளையொட்டி காட்சி அமையும்போது ரசிகர்களின் உணர்வோடும் அது கலந்துவிடும். இதைப் போல் வெயில் திரைப்படத்தில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கும் பாண்டியம்மாளும் முருகேசனும் தீப்பெட்டிகள் இறைந்துகிடக்கும் வீதியில் பேசியபடி நடந்துசெல்லும்போது சாக்குகளை உதறிக்கொண்டிருக்கும் ஒரு காட்சி வரும். இதைப் போன்ற அவர்கள் வாழ்வில் பார்த்த ஒரு விஷயத்தை ரசனையுடன் பதிவு செய்யும்போது ரசிகர்கள் கிளர்ந்தெழுந்துவிடுவார்கள்.


இப்படியான காட்சிகள் திரைக்கதையில் கைகூடுவதற்குப் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். அதற்கான பொறுமை இன்றி திரைக்கதையில் கைவைத்தால் வாகை சூட வா, அழகர்சாமியின் குதிரை, மெரினா, நந்தலாலா, தாரை தப்பட்டை, இறைவி போன்ற படங்களைப் போல் படம் அமைந்துவிடலாம். தரக் குறைவான படங்களை எடுக்கக் கூடாது என்ற விருப்பம் உள்ளவர்கள் தாராளமாகத் தமிழ்ப் படங்களைப் பார்க்கலாம், அதிலிருந்து பல நல்ல விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும். 

உன்னதமான உலகத் திரைப்படங்கள் உங்களை மெருகேற்றுவது போல் தமிழ்ப் படங்களும் உங்களை மேம்படுத்தும். தரமான படத்தில் கற்றுக்கொள்ளும் அனைத்து விஷயங்களையும் தரமற்ற படங்களிலிருந்தும் கற்றுக்கொள்ளலாம் என்பதை மறந்துவிடாதீர்கள். எனவே உலகப் படங்களுடன் இணைந்து உள்ளூர்ப் படங்களையும் பாருங்கள்; அப்போது தான் சினிமாவை முழுமையாகக் கற்றுக்கொள்ள முடியும்.

கே.பாக்யராஜ், ஸ்ரீதர் போன்றவர்கள் திரைக்கதையை அமைத்துச் செல்லும் விதத்தைப் பாருங்கள். பெரிய மெனக்கெடுதல் இல்லாமல் மிகவும் இயல்பான சம்பவங்களை அடுக்கிக்கொண்டே சென்று திரைக்கதையை அமைப்பார்கள். அடிப்படையில் ஏதாவது ஒரு முரண் மட்டும் இருந்துகொண்டேயிருக்கும். உதாரணமாக, எந்தப் பெண்ணும் குழந்தையைக் கீழே போட்டுத் தாண்டி பொய் சொல்ல மாட்டாள் என்பது ஒரு நம்பிக்கை. ஆனால் அப்படி ஒரு பெண்ணால் பொய்ச் சத்தியம் பண்ண முடிகிறது என்பதை வைத்தே அவர் முந்தானை முடிச்சு என்னும் படத்தை உருவாக்கினார். 


அந்தப் பொய்ச் சத்தியத்தின் பின்னணியில் ஓர் உண்மை அன்பு மறைந்திருக்கும். அதுதான் திரைக்கதையின் மைய நரம்பு. அதன் பலம் ரசிகர்களை இறுதிவரை படத்துடன் பிணைத்திருக்கும். ஆகவே, பிரயத்தனத்துடன் காட்சிகளுக்காக மூளையைச் சூடாக்கிக்கொள்வதைவிட நமது வாழ்வில் நாம் கடந்த, கேள்விப்பட்ட சம்பவங்களை, நிகழ்வுகளைப் பொருத்தமான இடங்களில் பொருத்தமான வகையில் பொருத்திவிட்டால்போதும் திரைக்கதை வலுப்பெறும்.

ஞாயிறு, நவம்பர் 01, 2015

அமெரிக்கா எதிர்பார்க்கும் படம்!


பிரபல அமெரிக்கத் திரைப்பட இயக்குநரும் நடிகருமான தாமஸ் மெக்கர்த்தி இயக்கத்தில் வரும் நவம்பர் 6 அன்று திரைக்கு வர இருக்கிறது ‘ஸ்பாட்லைட்’ என்னும் ஹாலிவுட் திரைப்படம். இயக்குநர் மெக்கர்த்தி தனது ‘அப்’ திரைப்படத்தின் திரைக்கதைக்காக ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டார். ‘ஸ்பாட்லைட்’ திரைப்படம் கடந்த செப்டம்பரில் நடைபெற்ற வெனிஸ் திரைப்பட விழாவில் முதன்முதலில் திரையிடப்பட்டு விமர்சகர்களின் வரவேற்பைப் பெற்றது. அமெரிக்காவில் வெளிவரும் ‘த பாஸ்டன் க்ளோப்’ பத்திரிகையின் ஸ்பாட்லைட் குழுவினர் மேற்கொண்ட விசாரணையைப் பற்றிய படம் இது. 2002-ம் ஆண்டு மாஸாசுசெட்ஸ் மாகாணத்திலுள்ள கத்தோலிக்க ஆலயத்தில் நடைபெற்ற பாலியல் முறைகேடுகளைத் துப்புத் துலக்கி விளக்கமான அறிக்கைகளைத் தொடர்ந்து பிரசுரித்துவந்தது ‘த பாஸ்டன் க்ளோப்’ பத்திரிகை. இதற்காக 2003-ம் ஆண்டு அந்தப் பத்திரிகைக்கு புலிட்ஸர் விருதும் கிடைத்தது. இந்தச் சம்பவங்களை உள்ளடக்கியதே இந்த ஸ்பாட்லைட் திரைப்படம்.

கத்தோலிக்க ஆலயத்தில் குழந்தைகளுக்கு எதிராக நடைபெற்ற பாலியல் சுரண்டலுக்காக ஐந்து கத்தோலிக்கப் பாதிரியார்கள்மீது குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பான விவகாரத்தில் ‘த பாஸ்டன் க்ளோப்’ பத்திரிகை துணிச்சலுடன் செயல்பட்டுத் திரைமறைவு ரகசியங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது. இந்த வழக்கு விசாரிக்கப்பட்டுப் பாதிரியார்கள் செய்த குற்றங்கள் நிரூபிக்கப்பட்டன. பின்னர் அவர்கள் சிறைக்கு அனுப்பப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பான ‘த பாஸ்டன் க்ளோப் ’ அறிக்கைகள் படு சூடாக அமெரிக்காவில் விவாதிக்கப்பட்டன. இந்தச் சூடான சம்பவங்களை அப்படியே ருசிகரமான திரைக்கதையாக்கியிருக்கிறார் தாமஸ் மெக்கார்த்தி. இதைத் திரைக்கதையாக்கியதில் அவருடன் இணைந்து பணியாற்றியுள்ளார் ஜோஷ் சிங்கர்.

கால ஓட்டத்தில் இந்தப் பாலியல் முறைகேடுகள் தொடர்பான முணுமுணுப்புகள் சிறிது சிறிதாகச் சமூகத்தினரிடையே ஒலித்து மறைந்துவிட்டது. மக்களும் ஊடகங்களும் இந்த அவமானகரமான கதையை மறந்துவிட்டுத் தத்தம் செயல்களில் ஈடுபடத் தொடங்கிவிட்டனர். சட்ட அமைப்பும் காவல்துறையும்கூட இந்தச் சம்பவத்தை விட்டு விலகி நெடுதூரம் வந்துவிட்டன. இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிலர் தற்கொலை செய்துகொண்டனர். ஆனால் இந்த விவகாரத்தின் பின்னணியில் மறைந்து கிடந்த உண்மையைத் துணிச்சலுடன் வெளிப்படுத்தியது பாஸ்டன் க்ளோப் பத்திரிகை. உண்மையை வெளி உலகுக்குத் தெரியப் படுத்த துணிச்சலுடன் செயலாற்றியது.

இதுதான் இப்போது திரைப்படமாகியிருக்கிறது. ஒரு கத்தோலிக்க ஆலயத்தின் பாலியல் முறைகேடுகளை அறியாத தலைமுறையினருக்கு இந்தப் படம் அந்த மோசமான சம்பவங்களை நினைவுபடுத்தும். இந்தப் பத்திரிகையின் ஸ்பாட்லைட் குழுவினராக மார்க் ரூஃபலோ, மைக்கேல் கீட்டன், ரேச்சல் மெக்காதம்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கான திரைக்தையை மெக்கார்த்தியும் ஜோஷ் சிங்கரும் கடந்த 2013-ம் வருடத்திலேயே முடித்துவிட்டனர். இப்படத்தின் படப்பிடிப்பு 2014 செப்டம்பர் 24 அன்று பாஸ்டனில் தொடங்கி நடைபெற்றிருக்கிறது. கடந்துபோன வரலாற்றின் கறை படிந்த தருணங்கள் மீண்டும் வெள்ளித்திரையில் வலம் வரும்போது அது என்னென்ன தாக்கங்களை ஏற்படுத்துமோ என்ற ஆவலுடன் அமெரிக்கா இந்தப் படத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறது.

அக்டோபர் 30 தி இந்து நாளிதழில் வெளியானது

லேட்டஸ்ட்

அமலா எனும் பொன்மான்

தொடர்பவர்