இந்த வலைப்பதிவில் தேடு

குடும்பம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குடும்பம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, மார்ச் 29, 2020

வசனங்களால் வாழ்ந்தார் வாழ்கிறார் இன்னும் வாழ்வார்

அஞ்சலி: இயக்குநர் விசு (01.07.1945 – 22.03.2020)


இயக்குநர் கே.பாலசந்தரின் மோதிரக் கையால் நடிகைகள்தாம் குட்டுப்பட வேண்டுமென்பதில்லை, இயக்குநர்களும் குட்டுப்பட்டிருக்கின்றனர். அவர்களில் முதன்மையானவர் விசு. மீனாட்சிசுந்தரம் ராமசாமி விஸ்வநாதன் என்னும் இயற்பெயரைக் கொண்ட இவரை ரசிகர்கள் விசு என்ற பெயராலேயே அறிந்துவைத்திருக்கிறார்கள். விசுவின் முந்தைய தலைமுறை இயக்குநர் ஸ்ரீதர் போல் இவரும் முதலில் எழுத்தாளராக அறிமுகமாகி பின்னர் இயக்குநரானவர். தனது ஒரு படம் போல் இன்னொரு படம் இருந்துவிடக் கூடாது என்று இயங்கியது ஸ்ரீதரது சிறப்பு என்றால் பெரும்பாலான படங்களை ஒரே விதமாக உருவாக்கிய பெருமைக்குரியவர் விசு.

திரைப்படங்கள் யதார்த்தமாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்ற கருத்துடன் இயக்குநர் மிஷ்கின் விடாப்பிடியாகத் திரைப்படங்களை உருவாக்குவதுபோல் இயக்குநர் விசுவும் அதே கருத்துடன் ஆனால், மிஷ்கினுக்கு எதிரான துருவத்தில் நின்றுகொண்டு படங்களை உருவாக்கியவர். கணியன் பூங்குன்றன் போன்ற ரோபோத்தனமான துப்பறிவாளனையோ அம்மையப்ப முதலியார் போன்று வீட்டுக்கு நடுவில் அட்சர சுத்தமான கோடு போடும் தந்தையையோ உலகத்தில் காண முடியாது. அவர்களைத் திரையில்தான் பார்க்க முடியும்.

நாடகம் தொடர்பான மேன்மையான எண்ணம் கொண்டிருந்த காரணத்தாலேயே, தனது படங்கள் நாடகம்போல் உள்ளன என்னும் விமர்சனத்தை விசனப்படாமல் பெருமிதத்துடன் எதிர்கொண்டவர் விசு. அதுதான் அவரது வெற்றி.  தொடக்க காலத்தில் இவர் கதை, வசனம் எழுதிய படங்களை இயக்கியவர்களும் உயிர்த்துடிப்பான வசனங்களை எழுதி அதனால் பெயர் பெற்றவர்களே. முதலில் எழுதிய பட்டினப்பிரவேசத்தை இயக்கியவர் கே. பாலசந்தர். தொடர்ந்து எழுதிய அவன் அவள் அது, கீழ்வானம் சிவக்கும் போன்ற படங்களை முக்தா வி சீனிவாசன் இயக்கினார்.


எஸ்பி. முத்துராமன் இயக்கிய குடும்பம் ஒரு கதம்பம் ஒரு நடிகராக விசுவுக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்திருந்தபோதும் அவர் இயக்குநராகத் தடம்பதித்தது அடுத்து வெளியான கண்மணிப் பூங்காவில் தான். தணிக்கைத் துறையினரால் வயது வந்தினருக்கான படமாக ஏ சான்றிதழ் வழங்கப்பட்ட இந்தப் படம் பெரிதாகப் பேசப்படாவிட்டாலும் அதன் பின்னர் விசு சிறந்த குடும்பப் படம் இயக்குநராக முத்திரை பெற அச்சாரம் போட்டது இந்தப் படம்.  விசுவை வெற்றிகரமான இயக்குநராக வெகுமக்கள்திரளிடம் கொண்டு சேர்த்த படம், மோடி மஸ்தான் என்னும் மேடை நாடகத்தின் அடிப்படையில் உருவான மணல் கயிறுதான். விசுவின் திரைப்பட வரலாற்றில் அசைக்க முடியாத இரும்புக் கயிறான அந்தப் படத்தின் காது கேளாத மாமா போன்ற அவர் உருவாக்கிய எண்ணற்ற கதாபாத்திரங்களுக்கு உயிர் தந்தனர் சேது விநாயகம், கமலா காமேஷ், கிஷ்மூ, மனோரமா, பூபதி போன்றவர்கள். இப்படியான நிலையக் கலைஞர்களைப் பயன்படுத்திய தன்மை நாடக மேடையில் ஏற்பட்ட பழக்கமாக இருந்திருக்கலாம். நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்த பாக்யராஜிடமும் இந்த அம்சத்தைக் காண முடியும்.

1986-ல் வெளியான சம்சாரம் அது மின்சாரம் விசுவின் திரைப்படங்களில் மாபெரும் வெற்றிபெற்றது. சிறந்த பொழுதுபோக்குச் சித்திரம் என்பதற்காக தங்கப்பதக்கம் பெற்ற முதல் தமிழ்ப்படம் இது. இது பின்னர் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் குடும்ப புராணம் என்னும் பெயரில் மலையாளத்தில் மறு ஆக்கம் செய்யப்பட்டது. இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளுக்கும் இப்படம் சென்றது. இதன் இரண்டாம் பாகத்தை எழுதி முடித்து அதைத் திரைப்படமாக்கும் கனவோடு இருந்தவர் அந்தக் கனவு நிறைவேறாமலே நம்மிடமிருந்து விடைபெற்றுக்கொண்டார்.

தில்லுமுல்லு, நெற்றிக்கண், புதுக்கவிதை, நல்லவனுக்கு நல்லவன், மிஸ்டர் பாரத், மன்னன் என நடிகர் ரஜினிகாந்தின் பல படங்களில் இவருடைய பங்களிப்பு இருந்திருக்கிறது. ரஜினிகாந்துடன் இவரது பயணம் 1978-ல் இவரது கதை வசனத்தில் ’பசி’ துரையின் இயக்கத்தில் உருவான சதுரங்கம் திரைப்படத்தில் தொடங்கியது. கிட்டத்தட்ட இதே கதையைத் தான் பின்னர் விசு, திருமதி ஒரு வெகுமதி என்னும் பெயரில் படமாக்கினார். நடிகர் எஸ்.வி.சேகர் இந்தப் படத்தில் நடித்த வெகுளித்தனமான கணவன் வேடத்தில்தான் ரஜினி காந்த் நடித்திருந்தார். ரஜினி காந்த் அரசியலில் தனது காலைப் பதிப்பதைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்கும் வேளையில் அவரைவிட ஓரிரு வயது மூத்த விசு காலமானது ஒரு சோகமே.


கமல் ஹாசனை விசு இயக்கியதில்லை ஆனால் முக்தா சீனிவாசன் இயக்கத்தில் கமல் நடித்திருந்த சிம்லா ஸ்பெஷல் படத்துக்கு விசு கதை வசனம் எழுதியிருந்தார். ரஜினியை இயக்க ஒரு வாய்ப்பு வந்தது. ஆனால், எந்தச் சூழலிலும் படைப்புரீதியான சமரசம் செய்யக் கூடாது என்பதில் உறுதியாக இருந்த விசு ரஜினியை இயக்கக் கிடைத்த அந்த வாய்ப்பை மறுத்துவிட்டார். அந்தப் படம் அண்ணாமலை. பின்னர், அந்தப் படத்துக்கு வஸந்த் இயக்குநர் என நாளிதழ்களில் விளம்பரம்கூட வந்தது. ஆனால், இறுதியில் இயக்கியவர் சுரேஷ் கிருஷ்ணா. அப்படியான சமரசத்துக்குத் தயாராக இருந்ததால் சுரேஷ் கிருஷ்ணாவுக்கு பாட்ஷா கிடைத்தது. விசுவோ தன் மானத்தைக் காப்பாற்றிக்கொண்டவராக வரலாற்றில் நிலைபெறுகிறார்.  

நடிகர் சிவாஜி கணேசனுடன் அவர் இணைந்து நடித்த ஆனந்தக் கண்ணீர் திரைப்படத்தில்கூட அவரை நினைவுபடுத்துவது தோராயமாக என்னும் சொல்லைப் பயன்படுத்தி அவர் டாக்ஸி டிரைவரிடம் பேசும் நீளமும் குழப்பமுமான அந்த வசனம்தான். இவ்வளவுக்கும் அந்தப் படத்தில் விசு வெறும் நடிகரே. ஆனால், விசு என்றவுடனேயே இயக்குநர்களுக்கு இப்படியான வசனங்களுக்கான நடிகர் என்றே தோன்றுயிருக்கிறது. ஆனால், விஜய் காந்த் நடிப்பில் அவர் இயக்கிய டௌரி கல்யாணம் என்னும் திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். திருமணப்   பந்தியில் இலைகளில் மிச்சம் வைக்கப்பட்டிருக்கும் உணவுப் பொருட்களெல்லாம் பணத் தாள்களாகவும் நாணயமாகவும் தென்படும். ஒரு நடுத்தரக் குடும்பத்தின் தலைவனின் மனத் தாங்கலை இதைவிடத் தெளிவாக வசனங்களால்கூட வெளிப்படுத்திருக்க முடியாத அளவுக்கு நயமான காட்சி.

எல்லாவற்றுக்கும் மேலாக, மேடையில் உருவாக்கப்பட்ட நாடகங்களைப் போன்ற திரைப்படங்களைப் படைக்கவே தான் திரைப்படத் துறைக்கு வந்தோம் என்பதில் அவருக்கு இறுதிவரை எள்ளளவும் சந்தேகம் இருந்ததில்லை. அந்தப் படங்களில் பல பெரும்பான்மையான ரசிகர்களை, குறிப்பாகத் தாய்க்குலத்தைக் கவர்ந்து வெற்றியை வாரிக்குவித்ததே அவரது சாதனைச் சரித்திரம்.

சனி, ஜனவரி 25, 2020

தோல்வி நிலையென நினைத்தால்…

டிசம்பர் 2019-ல் நடைபெற்ற சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட பெரும்பாலான படங்கள் ‘ஏன்டா படம் பார்க்க வந்தோம்’ என எண்ணவைத்தன. விதிவிலக்காக இருந்தது டிசம்பர் 13 அன்று கேசினோவில் திரையிடப்பட்ட ஜெர்மனியப் படமான பலூன் (2018). மைக்கேல் ஹெர்பிக் இயக்கிய இந்தப் படம் விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டிருந்தது. இரண்டு மணி நேரம் போனதே தெரியாமல் படத்துடன் படமாக ஒன்ற முடிந்தது.

கிழக்கு ஜெர்மனியிலிருந்து மேற்கு ஜெர்மனிக்குத் தப்பிப்போக கோந்தா, பீட்டா இருவருடைய குடும்பங்களும் முடிவுசெய்கின்றன. பிரம்மாண்டமான வெப்பக் காற்று பலூனை உருவாக்கி அதில் தப்பிச் செல்லலாம் என முடிவுவெடுத்து பலூனை உருவாக்கிவிட்டனர். காற்றின் திசை தங்களுக்குச் சாதகமாகும் நாளுக்காகக் காத்திருக்கின்றனர். அப்படியொரு நாள் வருகிறது. ஆனால், பலூன் எட்டுப் பேரைத் தாங்காது என்பதால் திட்டத்தை நிறைவேற்றுவது கடினம் என்கிறார் கோந்தா. முன்வைத்த காலைப் பின்வைக்க பீட்டாவுக்கு விருப்பமில்லை. தன் குடும்பத்தினருடன் செல்ல முடிவெடுக்கிறார். யாருமறியாமல் இரவுடன் இரவாகப் புறப்படுகிறார்கள். வனப் பகுதிக்குச் சென்று காரிலிருந்து பலூனை இறக்கி, பறக்கத் தொடங்குகிறார்கள். எல்லாம் கூடிவந்த வேளையில் இயற்கை சதி செய்கிறது. உயரப் பறந்த பலூன் சட்டென்று தாழ்கிறது. சரசரவென்று கீழ் நோக்கி வருகிறது. எரிபொருள் தீர்ந்துபோகிறது. அவர்களது முயற்சி தோல்வியில் முடிகிறது. தரையில் வந்து விழுந்து விடுகிறார்கள்.

அவர்களது கனவு ஒருமுறை முறிந்துபோகிறது. ஆனால், முறிந்த கனவை எண்ணி நொடிந்துபோகவில்லை பீட்டா. மீண்டும் முயல விரும்புகிறார். இப்போது நிலைமை முன்பைவிடச் சிக்கலாகிறது. ஒருபுறம் இவர்கள் விட்டுவந்த தடயத்தைப் பின் தொடர்ந்து ராணுவம் அவர்களைத் தேடிக் கொண்டிருக்கிறது. மறுபுறம் யாருமறியாமல் மீண்டும் ஒரு பலூனை உருவாக்கும் முயற்சியில் இறங்குகிறார்கள். இந்த இரண்டாம் முயற்சி வென்றதா இல்லையா என்பதே படத்தின் கிளைமாக்ஸ்.

உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. 1976 முதல் 1988 வரையான காலகட்டத்தில் சுமார் 38,000 தப்புதல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் சுமார் 462 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கிழக்கு ஜெர்மனியிலிருந்து மேற்கு ஜெர்மனிக்குத் தப்பிப்போக முயன்றவற்களைத் துரோகிகளாகக் கருதியது ஜெர்மனியின் ஜனநாயகக் குடியரசு. எனவே, அது எல்லையில் கண்காணிப்பைப் பலமாக வைத்திருந்தது. அதை மீறித் தப்பித்துப்போவதென்பது பெரிய துணிகரச் செயலே. அந்தச் செயலில் முதல் முறை தோற்றார் பீட்டா.
முதன்முறை இரவில் வீட்டை விட்டு வெளியேறும் வேளையில், மீண்டும் திரும்ப வர மாட்டோம் என்று தெரிந்தும் வீட்டைச் சுத்தமாக வைத்துவிட்டே பீட்டாவுடைய மனைவி தோரிஸ் புறப்படுகிறார். தன்னை யாரும் மோசமான குடும்பப் பெண் என்று சொல்லிவிடக் கூடாது என்று என்பதில் அவர் முனைப்புடன் இருக்கிறார். பலூனில் ஏற மறுக்கும் இளைய மகனிடம் மேற்கே அவன் விரும்பிய பிஎம்எக்ஸ் பைக் வாங்கித் தருவதாகச் சொல்லிச் சம்மதிக்கவைக்கிறார். அந்த முயற்சி தோற்றபோது அந்த மகனுக்குத் தனக்கு பிஎம்எக்ஸ் கிடைக்காமல் போய்விட்டது என்பதே கவலை. முதல் மகன் ஃபாங்க், தன் காதலிக்குக் கடிதம் எழுதி அவளுடைய வீட்டின் தபால் பெட்டியில் போட்டுவிட்டுச் செல்கிறான்.  முயற்சி தோற்றதால், மறுநாள் காலை அதை அவனே வந்து எடுக்க நேர்கிறது. கடிதத்தைத் தபால்பெட்டியில் போடும் செயல் எளிதாக இருந்தது; ஆனால் கடிதத்தை எடுக்கத்தான் சிரமப்படுகிறான்.

இரண்டாம் முயற்சியின் போது நாமே கிழக்கிலிருந்து மேற்குக்குத் தப்பித்துப் போக முயல்வது போன்ற எண்ணத்தை உருவாக்கிவிடுகிறது திரைக்கதையின் போக்கு. பின் தொடர்ந்து வரும் நிழல்போல் ராணுவத்தினர் ஒவ்வொரு துப்பாகத் துலக்கிக்கொண்டே வருகிறார்கள். எந்த நேரத்திலும் பீட்டாவின் குடும்பம் ராணுவத்திடம் மாட்டிக்கொள்ளுமோ என்ற பதைபதைப்புடன் திக் திக்கென ஒவ்வொரு நொடியும் நகர்கிறது. முதன்முறை ஒரு குடும்பம் என்றால், இரண்டாம் முறை கோந்தாவின் குடும்பமும் சேர்ந்துகொள்கிறது. மொத்தம் எட்டுப் பேர். ராணுவத்தினர் கண்ணில் மண்ணைத் தூவி பலூனில் ஏறிவிடுகிறார்கள். மொத்தப் பார்வையாளர்களுக்கும் அவர்கள் எப்படியாவது தப்பிவிட வேண்டுமே என்ற எண்ணம் நெஞ்சில் நிறைந்து கிடக்கிறது. எதிர்பார்ப்பு  வீணாகவில்லை. 
முதலில் இடறிய பீட்டாவின் முயற்சி இறுதியில் துலங்கியது. ஏனெனில், வாழ்வில் சிலவேளை எல்லாச் செயலும் இடறும்; சில நேரம் தொட்டதெல்லாம் துலங்கும். எப்போது இடறும், எப்போது துலங்கும் என்பதை நாமறியாததால் வாழ்வு ருசிகரமாகிறது.  

சனி, ஜூன் 01, 2019

யோமெடின்: அவரும் மனிதர் தானே?


எகிப்திய-ஆஸ்திரிய இயக்குநர் அபு பக்கர் ஷாகி எகிப்தின் தலைநகரான கெய்ரோவைச் சேர்ந்தவர். அடிப்படையில் ஆவணப்பட இயக்குநரான அவருடைய முதல் முழு நீளத் திரைப்படம் ‘யோமெடின்’. தீர்ப்பு நாள் என்று பொருள் படும் இந்தப் படம் 2018-ம் ஆண்டு கான் பட விழாவில் முதலில் திரையிடப்பட்டது. விமர்சகர்களின் பெருவாரியான வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் அந்த ஆண்டில் ஆஸ்கருக்கு அனுப்பப்படுவதற்கான எகிப்தியப் படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது; ஆனால், ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்படவில்லை. 

இயக்குநர் ஷாகி 2008-ம் ஆண்டில் ‘த காலனி’ என்னுமோர் ஆவணப்படத்தை உருவாக்கியிருக்கிறார். தொழுநோய் காலனி ஒன்றில் வாழும் தொழுநோயாளிகள் பற்றிய படமிது. அந்தத் தொழுநோயாளிகளை நேர்காணல்செய்து அதை ஆவணப்படுத்தியிருந்தார். இந்தப் பட உருவாக்கத்தின்போது, ஷாவ்கிக்குக் கிடைத்த அனுபவங்கள் காரணமாகத் தொழுநோயாளிகளின் வாழ்க்கைக் கதைகளை அடிப்படையாக வைத்து முழு நீளத் திரைப்படம் ஒன்றை உருவாக்கும் எண்ணம் வந்திருக்கிறது. ஆனால், அது படமாவதற்குப் பத்து ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கின்றன. 


‘யோமெடின் திரைப்படத்தில் முதன்மைக் கதாபாத்திரம் பெஷேய். எகிப்தின் தொழுநோய் காலனியில் சிறுவயதிலேயே தந்தையால் கொண்டுவந்து விடப்பட்டவர் அவர். நோய் குணமானதும் வந்து அழைத்துக் கொள்வதாகக் கூறிச் சென்ற தந்தை அதன் பின்னர் வரவேயில்லை. தொழுநோயிலிருந்து பெஷாய் விடுபட்டுவிட்ட போதும் அவருடைய முகத்தில் தொழுநோய் விட்டுப் போயிருந்த தழும்புகளும் கைகளின் விரல்கள் மடங்கிய தோற்றமும் அவரை பிறரிடமிருந்து விலக்கிவைக்கப் போதுமானவையாக இருந்தன. பொதுச் சமூகம் முகச்சுளிப்புடனேயே பெஷாயை எதிர்கொள்ளப் பழகியிருந்தது. எல்லோரையும்போல் அவரும் ஒரு மனிதர் தான் என்பது அவருக்கு எளிதாகப் புரிந்திருந்தது. ஆனால், தோற்றக் குறைபாடற்ற ஒருவருக்கும் அது ஒழுங்காகப் புரியவில்லை. அவர்கள் பெஷாயை விநோதமாகப் பார்த்தார்கள். அவரைப் போன்றே ஆதரவற்ற மனநோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் அவருடைய மனைவியாக இருந்தார். அவரும் உயிர்நீத்த பிறகு இந்தப் பரந்த உலகத்தில் தனித்துவிடப்பட்டவராகிறார் பெஷாய். சுமார் 40 வயதைத் தொட்ட நிலையில் மனம் தனிமையை ஆழமாகவும் அழுத்தமாகவும் உணர்கிறது. இந்தத் தனிமையைப் போக்கிக்கொள்ளத் தனது குடும்பத்தினரைச் சந்தித்தால் போதும் என்ற எண்ணம் பெஷாயிக்கு வருகிறது. அவர்கள் தன்னைத் தம்முடன் இணைத்துக்கொள்வார்கள் என்ற ஆசையுடன் அவர்களைத் தேடிச் செல்கிறார். 

எகிப்தின் வடக்கு மூலையிலிருந்து தெற்கு மூலைக்கு அவர் சென்றால்தான் குடும்பத்தினரைப் பார்க்க முடியும். அவரை யாரும் சக மனிதனாக ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதால் தன்னிடம் இருக்கும் ஒரு கழுதை பூட்டப்பட்ட பழைய வண்டியில் செல்ல முடிவெடுக்கிறார். அவ்வளவு நீண்ட தொலைவு பயணப்படுவதற்குத் தோதான வாகனமல்ல அது. அதன் தோற்றமே எப்போது காலைவாருமோ என்றிருக்கும். அவர் பழைய பொருட்களைச் சேகரித்து அதில் கிடைத்த வருமானத்தில்தான் தன் வயிற்றைக் கழுவிக்கொண்டிருந்தார். அதற்குப் பயன்படுத்திய வண்டி அது. குறைவான தொலைவுக்கே அது தாங்கும் என்றபோதும், துணிவுடன் அதில் புறப்படுகிறார் பெஷாய். அவருடனே வந்து ஒட்டிக்கொள்கிறான் ஒபாமா என்னும் ஆதரவற்ற சிறுவன். விரட்டிவிட்ட போதும் அவன் விலகாமல் அவருடன் வருவேன் என அடம்பிடித்து உடன் வருகிறான். இந்த இருவரும் இணைந்து செல்லும் பயணத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் மனிதர்களும் சம்பவங்களுமாகவுமே அனுபவம் தருகிறது யோமெடின். 


படத்தின் தொடக்கத்தின் பெஷாயின் முகத்தை நம்மால் சட்டென்று இயல்பாகப் பார்க்க இயலவில்லை. எகிப்தின் குப்பைக் கூளம் நிறைந்த, காய்ந்துபோன அந்த வறண்ட பூமியை எப்படி வேண்டா வெறுப்பாகப் பார்க்கிறோமோ அப்படித்தான் பெஷாயையும் பார்க்க முடிகிறது. ஆனால், படம் நகர நகர பெஷாய் நம்முடன் ஒட்டிக்கொள்கிறார். தொழுநோய்த் தழும்புகள் நிறைந்த அந்த முகத்தை நம்மால் இயல்பாகப் பார்க்க முடிகிறது. அவருடைய முகம் குளோஸ் அப் காட்சியில் காட்டப்படும்போது நன்கறிந்த நண்பரைப் பார்ப்பதுபோல் நம்மால் அவரைப் பார்க்க முடிகிறது. படம் இதைத் தான் குறிப்புணர்த்த முற்படுகிறது. படத்தின் இசையும் ஒளிப்பதிவும் நம்மை பெஷாயுடனும் ஒபாமாவுடன் அழைத்துச் செல்கின்றன. 

பெஷாய் வேடமேற்றிருந்த ரேடி கமால் பிறவி நடிகரல்ல; அவர் தொழுநோய் காலனியில் இருந்தவர்தான். ஆனால், ஒரு நடிகரைவிட அழுத்தமாக அந்தக் கதாபாத்திரத்தின் உணர்வுகளைப் பார்வையாளர்களிடம் கொண்டுசேர்த்திருக்கிறார். சிறுவன் ஒபாமா, படத்தில் வரும் கால்களற்ற மனிதர் போன்ற பலர் திரைக்குப் புதிதானவர்கள். அதனாலேயே இது ஒரு திரைப்படம் என்பதைத் தாண்டி ஒரு அன்னியோன்யமான உணர்வைத் தருகிறது. 


மனிதர்கள் எல்லோருக்குமே சக மனிதர்களால் நேசிக்கப்பட வேண்டும் என்றும் தம்மைப் பற்றிய நினைவுகளைப் பிறர் கொண்டிருக்க வேண்டும் என்றும் தானே விரும்புவார்கள். பெஷாய்க்கும் அந்த ஆசைதான் இருந்தது; அந்த ஆசை மட்டுமே இருந்தது. அவர் செல்லும் வழியில் பல தடைகள் வந்தபோதும் எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டார். அவருடைய குடும்பம் கூட அவரை ஏற்றுக்கொண்டது. ஆனாலும் அவர் அங்கிருக்கவில்லை. அவர்கள் ஏற்றுக்கொண்டதே அவருக்குப் பெரிய நிம்மதி. அதன் பின் எந்த வெட்கமுமற்று பொதுவெளியில் பிரவேசிக்கும் தைரியம் அவருக்கு வந்து விட்டது. பொதுவெளியில் பிற மனிதருடன் இயல்பாகக் கலந்துகொள்வதைவிட வேறு என்ன தேவைப்படப் போகிறது ஒரு மனிதருக்கு?  

ஞாயிறு, பிப்ரவரி 21, 2016

இயேசுவின் பால்ய காலம்!

(2016 பிப்ரவரி 19 அன்று தி இந்துவில் வெளியானது)


இயேசுவின் வாழ்க்கைச் சம்பவங்களின் அடிப்படையில் அமைந்த திரைப்படங்களுக்கு உலகெங்கிலும் பெரும் வரவேற்பு எப்போதுமே இருக்கிறது. இந்த வரவேற்பை அவ்வப்போது ஹாலிவுட் அறுவடை செய்துகொள்கிறது. அந்த வகையில் இயேசு பற்றிய புதிய ஹாலிவுட் திரைப்படம் ஒன்று மார்ச் 11 அன்று வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் ஏழு வயதான இயேசு மிகப் பெரிய ஆன்மிக ஆளுமையாக உருவானது வரையான சம்பவங்களின் சித்திரிப்புகள் காட்சிகளாக இடம்பெற்றுள்ளன. ‘த யங் மெஸையா’ என்னும் பெயர் கொண்ட இந்த ஹாலிவுட் படம் ஆன் ரைஸ் (Anne Rice) என்னும் எழுத்தாளரின் ‘கிறிஸ்ட் த லார்டு: அவுட் ஆஃப் ஈஜிப்ட்’ என்னும் நாவலைத் தழுவி உருவாக்கப்பட்டிருக்கிறது.

இயேசுவின் ஏழு வயதில் அவரது குடும்பம் எகிப்திலிருந்து மீண்டும் நாசரேத்துக்கு வந்த பின்னர் இயேசு எதிர்கொண்ட சம்பவங்களின் புனைவுக் காட்சிகள் திரைக்கதையாக்கப்பட்டுள்ளன. தனது பிறப்பு குறித்த மர்மத்தை அறிய இயேசு விருப்பம் கொள்கிறார். பரலோகப் பிதாவின் மகனாக இயேசு இருந்தபோதும் பிற குழந்தைகளிலிலிருந்து அவர் எப்படி மாறுபட்டார், அவரது குழந்தைப் பருவத்தில் ஏற்பட்ட போராட்டங்கள், தனது படைப்பின் நோக்கத்தைப் புரிந்துகொள்ளுதல் எனப் படத்தின் பயணம் அமைகிறது.

அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதல் பற்றி, ‘த பாத் ஆஃப் 9/11’ என்னும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் சைரஸ் நௌராஸ்டேக் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். குழந்தைப் பருவம் முதல் பருவ வயதுவரை இயேசு கொண்டிருந்த இறை நம்பிக்கையைப் பரிசுத்த வேதாகமம் எப்படிச் சித்தரிக்கிறதோ அப்படியே யதார்த்தமாக இந்தப் படமும் சித்தரிப்பதாக இயக்குநர் தெரிவித்திருக்கிறார். இயேசுவின் கதையைப் புதிய கோணத்தில் சொல்லியிருக்கும் தங்கள் முயற்சிக்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்கும் என்றும் இயக்குநர் நம்பிக்கையுடன் கூறியிருக்கிறார்.

இந்தப் படத்தில் ஆடம் கிரீவ்ஸ் நீல், சீன் பீன், டேவிட் ப்ராட்லி உள்ளிட்ட நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். ‘த பேஷன் ஆஃப் ஜீசஸ் கிறைஸ்ட்’ திரைப்படத்துக்கு இசையமைத்த ஜான் டெப்னி இசையமைத்திருக்கும் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருப்பவர் ஜோயல் ரான்சம் எனும் ஒளிப்பதிவாளர். இயேசுவின் குழந்தைப் பருவம் முதல் பருவ வயது வரையான வாழ்க்கைப் பாதை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதாலும் அது அதிகமாகத் திரையில் வெளிப்படவில்லை என்பதாலும் இந்தப் படத்துக்குப் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

செவ்வாய், ஜனவரி 21, 2014

மர்மமும் புதிரும் கொண்ட லடோகா ஏரி


ரஷ்ய இயக்குநர் ஆந்த்ரேய் ஜயஜிந்த்சேவ் இயக்கி 2003இல் ரஷ்யாவிலும் பிற உலக நாடுகளில் 2004இலும் வெளியான திரைப்படம் த ரிடர்ன். இது 2003ஆம் ஆண்டில் வெனிஸ் திரைப்பட விழாவில் கோல்டன் லைன் விருது பெற்றது. வாரத்தின் ஏழு நாட்களில் நடைபெறும் சம்பவங்களை உள்ளடக்கிப் புனையப்பட்ட இது இயக்குநரின் முதல் முழுநீளத் திரைப்படம்.  

ஆந்த்ரேய் ஜயஜிந்த்சேவ்
ரஷ்யப் படம் என்றாலும் இது அரசியல் படமல்ல. சாதாரண ரஷ்யக் குடும்பம் ஒன்றின் கதை. அம்மா, பாட்டியுடன் வசித்துவரும் இரு சிறுவர்கள். மூத்தவன் ஆந்த்ரேய், இளையவன் இவான். 12 ஆண்டுகளுக்குப் பிறகு திடீரென ஒரு நாள் வீட்டிற்குத் திரும்பும் தந்தை, ஓடெட்ஸ். இவர்கள் தாம் படத்தை வழிநடத்தும் கதாபாத்திரங்கள். 

படத்தின் தொடக்கக் காட்சியில் நீருக்கடியில் மூழ்கிய படகொன்று காண்பிக்கப்படுகிறது. அப்போது பின்னணியில் ஒலிக்கும் இசை மனத்தின் தடித்த சுவரை ஏதோவொரு துயரத் தந்தி அறுக்கும் உணர்வை ஏற்படுத்தும். படம் நெடுகிலும் அந்த வேதனை பார்வையாளனைத் துரத்துகிறது. அதிலிருந்து அவன் தப்பிக்கவே இயலாது. படம் முடிந்த பின்னரும் உள்ளுக்குள் வழிந்து வழிந்து உறைந்துபோன குருதியை என்ன செய்யப்போகிறோம் என்பதை அவனால் சொல்ல முடியாது. அது பாரமாக மாறியிருக்கும். அந்தப் பாரம் அவனுக்குள் ஆயிரம் கேள்விகளை எழுப்பும். படத்தின் காட்சிகள் அனைத்தும் நடந்து முடிந்த பின்னும் அவனது சிந்தையை ஏதோவொரு மர்மத் துடுப்பு அசைத்துக்கொண்டிருக்கும்.

அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. நண்பர்களுடன் ஆந்த்ரேயும் இவானும் மிக உயரமான ஒரு கோபுரத்திலிருந்து கீழே உள்ள நீர்நிலையில் குதித்து விளையாடத் தொடங்குகிறார்கள். அனைவரும் குதித்து முடித்த பின்னர் இவானின் முறை. ஆனால் அவனால் குதிக்க முடிவதில்லை. பயம் அவனை முற்றிலும் ஆட்கொண்டுள்ளது. நண்பர்கள் அனைவரும் கேலிசெய்துவிட்டு  அகன்றுவிடுகின்றனர். தனியே உயரமான கோபுரத்திலேயே அவன் விடப்பட்ட நிலையில் அவனைத் தேடி அவனுடைய அம்மா மேட் அங்கே வருகிறாள். இவான் தேம்பித் தேம்பி அழுகிறான். தனது இயலாமை குறித்த தாங்க முடியாத வருத்தம் அவனுக்கு. தான் உயரத்திலிருந்து குதிக்க இயலாததை அறிந்தால் நண்பர்கள் தன்னைக் கிண்டல்செய்வார்களே எனப் பதறுகிறான். தான் யாரிடம் அதைச் சொல்லமாட்டேன் என அவன் தாய் அவனைத் தேற்றி அழைத்துவருகிறாள். 


அடுத்து, திங்கள்கிழமை. நண்பர்களோடு ஆந்த்ரேய் விளையாடும் இடத்திற்கு இவான் வருகிறான். அனைவரும் அவனைக் கோழை எனத் தூற்றுகின்றனர். ஆந்த்ரேயும் அதே வார்த்தையைச் சொல்கிறான். இவான் வருத்தம் மேலிட ஆந்த்ரேயுடன் சண்டையிடுகிறான். இருவரும் தாயிடம் புகார் சொல்ல ஓடிவருகிறார்கள். வீட்டின் வெளியே தாய் சாவதானமாகப் புகைபிடித்துக்கொண்டிருக்கிறாள். ஆற்றாமையோடு தன் தரப்பு நியாயத்தை இவான் உரக்கச் சொல்லத் தொடங்குகிறான். அவன் தாய் அவனது தந்தை உறங்குவதாகச் சொல்லி அவனை ஒன்றும் பேசவிடாமல் செய்கிறாள். தந்தை வந்ததாக அவள் தெரிவித்த செய்தி அவர்கள் இருவரையும் பலத்த அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வந்திருக்கிறார் தந்தை. ஓடிச் சென்று பார்க்கிறார்கள். அவர் அயர்ந்து உறங்கிக்கொண்டிருக்கிறார். அவருடைய புகைப்படம் ஒன்றைத் தேடி எடுக்கிறான் இவான். அவர்தான் தந்தை என ஆந்த்ரேய் உறுதிப்படுத்துகிறான். உணவு மேசையில் தந்தை, தாய், பாட்டி ஆகியோருடன் இருவரும் உணவருந்துகின்றனர். மறுநாள் அவர்களை மீன்பிடிக்க அழைத்துப்போவதாகத் தந்தை சொல்கிறார். இருவருக்கும் மகிழ்ச்சி. வழக்கமான எந்தச் சுவடும் தென்படாதவாறு படமாக்கப்பட்டிருக்கும் அந்த உணவுமேசைக் காட்சி இறுக்கமான அமானுஷ்ய சூழலைப் பிரதிபலிக்கும்.

செவ்வாய்க்கிழமை. மூவரும் மீன்பிடிக்கக் காரில் புறப்படுகின்றனர். வழியில்  எதிர்கொள்ளும் சம்பவங்களை அவர்கள் சமாளிக்கும் முறையும் சிறுவர்கள் கற்றுக்கொள்ளும் பாடமும்தான் படத்தின் உயிர்நாடி.

மீன்பிடித்தலில் மகிழ்ச்சிகொண்டு மறுநாளையும் அங்கேயே கழிக்க விரும்பும் இவானைக் கட்டாயப்படுத்தித் தீவைப் பார்க்க தந்தை அழைத்துச் செல்கிறார். அவன் புலம்பிக்கொண்டே வருகிறான். பாதி வழியில் அவனைக் காரிலிருந்து அவர் இறக்கிவிட்டுவிடுகிறார். ஆந்த்ரேயும் தந்தையும் சென்றுவிடுகின்றனர். ஒரு பாலத்தின் மீது தனியே நீண்ட நேரம் இவான் காத்திருக்கிறான். கொட்டும் மழையில் முழுக்க முழுக்க அவன் நனைந்துவிடுகிறான். மறுபடியும் தந்தை வந்து அவனை அழைத்துச் செல்கிறார். இவான் அவரிடம் சண்டையிடுகிறான். தீவுக்குச் செல்லும் வழியில் இயந்திரக் கோளாறு காரணமாகப் படகு பாதியில் நின்றுவிடுகிறது. மகன்களைத் துடுப்பு வலிக்கச் சொல்கிறார் தந்தை. இவானுக்கு அவர்மீது கோபம். பலம் கொண்ட அவர் துடுப்பு வலிக்கலாமே என்னும் எண்ணம் அவனுக்கு. ஆனால் அவர் செய்பவராக இல்லாமல் செய்யவைப்பராகவே உள்ளார் என்பதும் படகு மிதப்பதைச் சமன்படுத்த அவர் ஓரிடத்தில் அமர்ந்து கட்டளையிடுவது மட்டுமே சாத்தியம் என்பதும் பார்வையாளனால் உணர முடியும் விஷயங்கள். 

 தீவில் மீன்பிடிப்பதற்காகத் தூண்டிலில் மாட்ட புழு சேகரிக்க ஆந்த்ரேயும் இவானும் செல்கின்றனர். அந்த நேரத்தில் தந்தை ஏதோ ஒரு குழியைத் தோண்டி அதிலிருந்து புதையல் ஒன்றை எடுத்துப் படகில் பத்திரப்படுத்துகிறார்.


 புழுவைச் சேகரிக்கும் இருவரும் கடலுக்குள் சற்றுத் தூரம் சென்று மீன்பிடித்துவர முடிவுசெய்து கிளம்புகின்றனர். தந்தையிடம்  அனுமதி கேட்க வேண்டும் என்கிறான் ஆந்த்ரேய். அதில் இவானுக்கு எரிச்சல். வேண்டாம் எனச் சொல்லிவிடுகிறான். இருவரும் கிளம்பும்போது தந்தை  பார்த்துவிடுகிறார். அவர்களிடம் தனது கடிகாரத்தைத் தந்து 3 மணிக்குள் வந்துவிட வேண்டும் என்றும் தனது கண் பார்வையிலேயே இருக்க வேண்டும் என்றும் எச்சரித்துக் கடலுக்குள் அனுப்புகிறார். கரையிலிருந்து படகின் மோட்டாரில் ஏற்பட்ட பழுதை நீக்குவதில் மும்முரமாகிவிடுகிறார்.


இருவரும் நீண்ட தூரம் சென்றுவிட்டு 7 மணிக்குக் கடலிலிருந்து திரும்புகின்றனர். அவரது இரண்டு எச்சரிக்கைகளையும் அவர்கள் சட்டைசெய்யவில்லை. கோபத்துடன் தந்தை தட்டிக்கேட்கிறார். ஆந்த்ரேயை அடிக்கிறார். அவனும் அவரைத் திட்டுகிறான். இவான் தந்தையைக் கொன்றுவிடுவதாகக் கோபத்தில் மிரட்டுகிறான். அவர்மீது தங்களால் அன்பு செலுத்த முடியவில்லை என்றும் அவர் மிருகத்தனமாக நடந்துகொள்வதாகவும் தெரிவித்து அவரைவிட்டு ஓடுகிறான். இவானைத் தடுத்துநிறுத்த தந்தையும் ஓடுகிறார். கோபுரம் ஒன்றின் மீதிருந்து தீவைப் பார்க்க முதலில் அவர் அழைத்தபோது மறுத்த அதே உயரமான கோபுரத்தில் விறுவிறுவென ஏறிவிடுகிறான் இவான். பின்தொடர்ந்துவந்த தந்தை அவனைக் கீழே இறங்கச் சொல்லிக் கெஞ்சுகிறார். கதவை மூடிக்கொண்ட அவன் கீழே குதித்துவிடுவதாக மிரட்டுகிறான். இவான் கோபுரத்தின் விளிம்புக்குச் செல்கிறான். தந்தை அவனைத் தடுத்துநிறுத்த முயல்கிறார். முயற்சி பலனளிக்கவில்லை எதிர்பாராத ஒரு தருணத்தில் அந்த அசம்பாவிதம் நிகழ்ந்துவிடுகிறது. அவர் தவறி விழுந்து இறந்துவிடுகிறார். சிறுவர்கள் இருவரும் அதிர்ச்சியில் உறைந்துபோகின்றனர். இப்போது அவர்கள் இருவரும் அவரைக் கரைக்கு எடுத்துவர நேர்கிறது. சிறுவர்கள் எதிர்கொள்ள வேண்டிய நிஜமான நெருக்கடி இது. 


அந்த நெருக்கடியை அவர்கள் இருவரும் சமாளிக்கிறார்கள். தந்தையின் பாடங்கள் அவர்களுக்குப் பயனளிக்கத் தொடங்குகின்றன. முன்பொரு முறை காரின் சக்கரம் சகதியில் மாட்டிக்கொண்டபோது, சக்கரத்தின் அடியில் பள்ளம் தோண்டி மரத்தின் கிளைகளை முறித்துப் போடு எனத் தந்தை கூறும்போது, ஆந்த்ரேய் “எப்படி” எனக் கேட்பான் ‘உனது பிஞ்சுக் கைகளால்’ என அவர் பதிலளிப்பார். இப்போது தந்தையின் சடலத்தை எப்படி எடுத்துச்செல்வது என இவான் கேட்கிறான் ‘நமது பிஞ்சுக்கைகளால்’ எனப் பதிலளிக்கிறான் ஆந்த்ரேய். தந்தையின் இடத்துக்கு அவன் வந்து நிற்பதை உணர்கிறான் பார்வையாளன்.  


இறுதியாகச் சனிக்கிழமை. சடலத்தைப் படகில் ஏற்றிக் கரைக்கு வந்த பின்னர் படகிலிருந்த பொருள்களை எல்லாம் காரில் ஏற்றிவிட்டு இருவரும் சற்றுக் கண்ணயர்ந்துவிடுகிறார்கள். 


அதற்குள் ஒரு விபரீதம் நடந்துவிடுகிறது. படகைக் கரையில் கழியில் கட்ட மறந்துவிடுவதால் அது நீரில் இழுத்துக்கொண்டு போய்விடுகிறது. தந்தையின் சடலம் அவர்களது கண்ணெதிரில் கைநழுவிக்கொண்டிருக்கிறது. ‘அப்பா’ என அலறியபடி இவான் ஆந்த்ரேயை முந்திக்கொண்டு ஓடுகிறான். தந்தையை அவன் பழுதற நம்புகிறான் என்பதன் சான்று அந்த ஓட்டம். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாகப் படகு தந்தை பத்திரப்படுத்திய புதையலுடன் நீருக்குள் மூழ்கிவிடுகிறது. 


பின்னர் காருக்குத் திரும்பும்போது, காரில், ஆந்த்ரேய், இவான் அவர்களுடைய அம்மா மூவரும் இருக்கும் புகைப்படத்தை அவர் பத்திரப்படுத்தி வைத்திருந்ததைப் பார்க்கிறார்கள். இப்போது அவர்களுக்குத் தந்தையின் அன்பு விளங்குகிறது. நெருக்கடியை இனி இவர்களால் சமாளித்துவிட முடியும். இனிமேல் தந்தையின் துணை தேவையில்லை. அவர் வந்த வேலை இனிதே நிறைவுபெற்றுவிட்டது.


உணவு விடுதியில் பணியாளரை அழைப்பது, குளிர்காய்ந்து முடித்த பின்னர் மறக்காமல் நெருப்பை அணைப்பது, சேற்றில் சிக்கிக்கொண்ட காரை அதிலிருந்து மீட்பது, நடுவழியில் இயந்திரப் படகின் மோட்டார் பழுதடைந்ததால் துடுப்பு கொண்டு அதைக் கரைசேர்ப்பது எனச் சின்னச் சின்ன விஷயங்கள் முதல் நெருக்கடியான நிலைமையைச் சமாளிப்பதுவரை அவர் தன் மகன்களுக்கு அனைத்தையும் சொல்லித்தருகிறார். ஆனால் அன்பு மிக்கத் தந்தையாக அல்ல. ராணுவத் தளபதியின் கண்டிப்புடன். அன்பை அவர் வெளிப்படுத்துவதில்லை. ஆனால் அவரது அத்தனை நடவடிக்கைகளின் பின்னும் அன்புதான் உள்ளது என்பது தொடக்கத்திலிருந்தே இவானுக்குப் புரியவில்லை. அவன் புரிந்துகொண்டபோது ஓடெட்ஸ் இல்லை.


ஆந்த்ரேய் தந்தையை நம்புகிறான். பன்னிரண்டு ஆண்டுகள் கழிந்த பின்னர் வந்திருக்கும் தந்தைமீது ஆந்த்ரேய் எவ்விதக் கேள்விகளுமற்று அன்பு செலுத்துகிறான். அவனால் அவரிடம் எளிதாக ஒட்டிக்கொள்ள முடிகிறது. ஆனால் இவானால் அது முடியவில்லை. இவானுக்கு அவர் தன் தந்தையா என்பதில் தொடக்கத்திலிருந்தே சந்தேகம். அவனது ஒவ்வொரு அசைவிலும் அது வெளிப்படுகிறது. பல சந்தர்ப்பங்களில் அவன் அவரை அப்பா என்று அழைப்பதையே தவிர்க்கிறான். அவராக வற்புறுத்தித்தான் அவனை அப்பா என அழைக்கவைக்கிறார்.  நடுத்தர வயது தந்தை காரில் இருந்துகொண்டு சாலையில் செல்லும் பெண்ணின் பிருஷ்டத்தைக் கண்ணாடி வழியே காண்பதையும் கூர்ந்து கவனிக்கிறான்.  தகப்பன் குறித்த  தனது சந்தேகத்தை உறுதிப்படுத்தும் சான்றுகள் வெளிப்பட்டுவிடாதா என்று கண்கொத்திப்பாம்பாய் அவரைக் கண்காணிக்கிறான்.

தந்தை மிகக் கறாரானவர். சிரிப்பது பேசுவது என ஒவ்வொரு விஷயத்திலும் சிறிதும் அவர் எல்லை மீறுவதுமில்லை; குழந்தைகளையும் மீற அனுமதிப்பதில்லை. தன் மகன் கூறும் ஒரு நகைச்சுவைத் துணுக்கைக் கேட்டுச் சற்று மலர்ச்சியுடன் அகலச் சிரிப்பை உதிர்க்கிறார். அந்த ஒரு காட்சியில் மட்டும்தான் அவர் சற்றே வெளிப்படையான புன்னகையை உதிர்க்கிறார். மற்றபடி படம் முழுவதும் ராணுவக் கண்டிப்பு இயல்பாகப் புழங்கும் மனிதராகவே அவர் வலம்வருகிறார். உற்சாகத்துடன் ஆந்த்ரேய் அடுத்த ஜோக்கை நோக்கி நகர எத்தனிக்கையில் சட்டென அதைக் கத்தரித்துவிடுகிறார். குளிர் தெரியாதிருக்க மதுவைக் கொஞ்சம் பிள்ளைகளுக்குத் தருகிறார். மறுக்கும் இவானுக்குக் கட்டாயத்துடன் புகட்டுகிறார். ஆனால் எதையும் வரம்புமீறாமல் பார்த்துக்கொள்வதில் தனிக்கவனத்துடன் இருக்கிறார். 


தந்தை குறித்துப் படத்தில் அதிகமான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. அத்தனை ஆண்டுகள் அவர் எங்கேயிருந்தார், என்ன செய்தார் என்பதற்குத் தெளிவான காட்சிபூர்வ விவரணைகளோ வசனங்களோ இல்லை. அவர் பைலட்டாக இருந்தார் என்பதும் அதிகமாக மீன் உண்டார் என்பதும் அதனால் தற்போது அவர் மீனே உண்ணுவதில்லை என்பதும்தாம் பார்வையாளன் அறிந்துகொள்ளக்கூடிய விஷயங்களாக உள்ளன. தந்தை குறித்த மர்மத்தை இயக்குநர் விருப்பத்துடன் தான் செய்திருக்க வேண்டும். ஏனெனில் நுட்பமான பல உணர்வுகளைக் காட்சிப்படுத்தியவருக்கு மேலதிக விவரங்களைத் தருவது கடினமாக இருந்திருக்காது.

 கதாபாத்திரங்களிடையே எழும் உணர்ச்சிப் பிரவாகங்களைச் சிறிதும் வீணாக்காமல் அப்படியே பார்வையாளனின் மனத்தில் நேரடியாகக் கொண்டுசேர்த்ததுதான் இயக்குநரின் பலம். மனத்தின் அடையாளம் காண முடியாத ஆழத்தில் வேதனையை உருவாக்கும் காட்சிகளை எளிதில் கடந்துசெல்வது சாத்தியமல்ல.


மிகச் சில கதாபாத்திரங்களே படத்தில் இடம்பெற்றுள்ளன. ஆர்ப்பாட்டமான இசையோ ஒளி வெள்ளம் பெருகிய காட்சிகளோ இல்லை. மிகச் சுருக்கமான உரையாடல்கள்தாம் பாத்திரங்களுக்கிடையே நிகழ்த்தப்படுகின்றன. ஆனால் ஒவ்வொரு காட்சியிலும் கையாளப்பட்டுள்ள பின்னணி இசை, காட்சியைத் துலக்கமாக்கும் வெளிச்சம் - ஒருசில துண்டுக்காட்சிகளில் இருட்டு, கதாபாத்திரங்கள் சட்டகத்தை ஆக்கிரமித்த விதம், சட்டகத்துக்குள் அஃறிணைப் பொருள்கள் அடங்கியிருக்கும் பாங்கு ஆகியவற்றை உள்ளடக்கிய காட்சிக் கலவையின் பின்னணியில் இயக்குநரிடம் வெளிப்பட்டிருக்கும் அர்ப்பணிப்பு உணர்வு திரைப்படத்திற்கும் பார்வையாளனுக்கும் இடையே நெருக்கத்தை உருவாக்குகிறது. கதாபாத்திரங்களின் மனநிலையைப் பார்வையாளனின் மனநிலையோடு சற்றும் பிசிறறப் பொருத்துவதில் இயக்குநரின் ஆளுமை வெளிப்படுகிறது. தந்தையாக நடித்துள்ள கான்ஸ்தந்தின் லவ்ரோனென்கோ,  இவான் கதாபாத்திரமேற்றுள்ள இவான் தோப்ரோன்ரவாவ் இருவரும் வெளிப்படுத்தியுள்ள பாத்திர உணர்வுகள் படத்தைச் செறிவாக்குவதில் முக்கியப் பங்கு வகித்துள்ளன. காட்சிகளை மாறுபட்ட விதத்தில் படமாக்க இசையும் ஒளிப்பதிவும் முழுக்க முழுக்க உதவியுள்ளன. இல்லையெனில் இப்படிப்பட்ட பரிபூரணத் திரைப்படம் சாத்தியப்பட்டிருக்காது.  


கடும் பிரயத்தனத்தில் உருவாக்கப்பட்ட திரைப்படம் இது என்பதை எளிதாக உணர்ந்துகொள்ளலாம். ஒரு வாரத்திற்குள் அடுக்கடுக்கான இது போன்ற சம்பவங்கள் தனி மனித வாழ்வில் நடந்தேறுவது சாத்தியமில்லாதது. ஆழ்ந்து யோசித்தால் தத்துவார்த்த சாயை படத்தின் பெரும்பாலான பரப்பை ஆக்கிரமித்துள்ளது. கிறித்தவ மதம் போதிக்கும் சந்தேகமற்ற விசுவாசத்தைப் படம் வலியுறுத்துகிறதோ என்னும் ஐயத்தை உருவாக்கும் அளவுக்குப் படத்தில் நம்பிக்கை சார்ந்த விஷயங்கள் அமைதியாக  ஆனால்  அழுத்தமாகவும் ஆழமாகவும் அலசப்படுகின்றன.
தந்தை புதையலோடு மூழ்கியது உள்ளிட்ட பல சம்பவங்கள் குறியீடுகளாகத் தோன்றுகின்றன. அந்தப் புதையல் என்னவென்பது யாருக்குமே தெரியாது. அதன் மர்மம் மனித மனத்தின் மர்மம் போலப் புதிரானது தான்.
பின்குறிப்பு: 
இத்திரைப்படத்தில் ஆந்த்ரேயாக நடித்த 15 வயதான விளாடிமிர் கரின் என்னும் சிறுவன் படத்தின் படப்பிடிப்பு முடிந்த சில தினங்களுக்குப் பின்னர் படத்தின் தொடக்கத்தில் இடம்பெற்ற உயரமான கோபுரத்திலிருந்து நீருக்குள் குதிக்கும் முயற்சியில் உயிரை இழந்துவிட்டான் என்பதுதான் சோகம். வெனிஸ் திரைப்பட விழாவில் இந்தப் படத்திற்குக் கிடைத்த விருதை விளாடிமிர் கரினுக்கு இயக்குநர் சமர்ப்பித்துள்ளார்.


நண்பர் முரளியின் அடவி பிப்ரவரி 2014 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை இது.
  

லேட்டஸ்ட்

அமலா எனும் பொன்மான்

தொடர்பவர்