கடற்கரையில் அந்தக் குடும்பத்தினர் உற்சாகமாகப் பொழுதைக் கழித்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த நேரத்தில் அங்கே வரும் சீருடைக் காவலர்கள் விசாரணைக்காக அந்தப் பெண்ணை அழைத்துச் செல்கிறார்கள். இப்படித்தான் த கேர்ள் வித் எ ப்ரேஸ்லெட் படம் தொடங்குகிறது. ஏன், என்ன, எதுவெனப் புரியாமல் நாம் நிமிர்ந்து உட்காரும்போது, இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் எனப் படம் தொடர்கிறது. லீஸ் பத்தைல் என்னும் அந்த இளம் பெண் தனது அருமைத் தோழியைக் கொன்றுவிட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறார். நீதிமன்றத்தில் விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. ஒரு த்ரில்லர் படமாக இருந்தாலும் நீதிமன்றக் காட்சிகளாகவே படம் நகர்கிறது. லீஸ் கொலைசெய்திருப்பாளா இல்லையா அவள் விடுவிக்கப்படுவாளா தண்டனை பெறுவாளா என்னும் கேள்விகளுடன் நாம் படத்தைத் தொடர வேண்டியுள்ளது.
நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களின் வாதத்தின் வழியே கொலைக் குற்றம் நடந்ததாகச் சொல்லப்படும் 2016 ஜூன் 7 அன்று என்ன நடந்தது என்று நமக்குச் சொல்கிறார்கள். ஆனால், கொலைச் சம்பவத்தின் எந்தக் காட்சியும் இறுதிவரை நமக்குக் காட்டப்படுவதேயில்லை. அந்தச் சம்பவத்தில் தொடர்புள்ள சடலத்தின் புகைப்படம் மட்டுமே நமக்குக் காட்டப்படுகிறது. ஆறேழு இடங்களில் குத்திக் கொலைசெய்யப்பட்டுள்ளார் அந்தப் பெண். குற்றம்சாட்டப்பட்டுள்ள லீஸ் எந்தக் குற்றவுணர்வும் இல்லாமல் இயல்பாக இருக்கிறார். விசாரணையின்போது, தேவைக்காக மட்டுமே பேசுகிறார். மற்றபடி உறைந்தநிலையிலேயே இருக்கிறார். இது பற்றி அரசாங்க வழக்கறிஞர் தனது அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்.
ஒரு குற்றச்செயலில் தொடர்புள்ளதாகச் சந்தேகிக்கப்படும் ஒருவர் மீதான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெறும்போது, அவரது நடத்தை பூரணமாகக் கவனிக்கப்படுகிறது. அவர் குற்றம்செய்தவரா இல்லையா என்பதை விசாரித்துத் தெரிந்துகொள்ளும் நடைமுறைகளில் அவரது நடத்தை எந்த வகையில் முக்கியத்துவம் பெறுகிறது என்பதைக் காட்சிகளின் மூலம் இயக்குநர் எடுத்துவைக்கிறார். ஆனால், இதையெல்லாம் வைத்து நீதியை முடிவுசெய்ய முடியாது என்பதையும் அவர் சொல்கிறார்.
பருவ வயதுப் பெண்ணின் நடத்தைகள் குறித்த புரிதலை உருவாக்கும் எண்ணத்தில் இந்தப் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. பருவ வயதினரின் உடம்பு பற்றிய புரிதல் முந்தைய தலைமுறையால் எப்படிப் புரிந்துகொள்ளப்படுகிறது என்பதையும் படம் விசாரிக்கிறது. லீஸுக்கும் அவளுடைய தோழிக்கும் இடையே உடல்ரீதியான மகிழ்ச்சிப் பரிமாற்றம் இருந்துள்ளது. கொலை நடந்ததற்கு முந்தைய நாளின் இரவில்கூட இருவரும் ஒரே படுக்கையைப் பகிர்ந்திருக்கிறார்கள்; முத்தமிட்டிருக்கிறார்கள்; பரவச நிலையை உணர்ந்திருக்கிறார்கள். ஆனால், அது குறித்து அவளுக்கு அசூயையோ தவறென்ற எண்ணமோ இல்லை. இருவரும் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை அளித்துக்கொண்டோம் என்றுதான் லீஸ் கூறுகிறாள். பெரும்பாலும் மூத்த தலைமுறையினரால் நிறைந்துள்ள அந்த நீதிமன்றத்தில் அந்த இளம் பெண்ணின் உண்மையான பேச்சு ஒருவிதமான நிச்சயமற்ற நிலையை ஏற்படுத்துகிறது.
ஓர் இளம்பெண்ணின் வாழ்வில் எதிர்பாராத வகையில் நிகழ்ந்த சம்பவம் அவளுடைய அவளது குடும்பத்துடைய வாழ்க்கையை எப்படியெல்லாம் பாதித்துவிடுகிறது என்பதை யோசிக்கச் செய்யும் வகையிலேயே படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இளம் பெண் ஒருவருக்குத் தன் உடல் குறித்த பார்வை எப்படி இருக்கிறதோ அதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் புரிதல் முதிய தலைமுறையினருக்கு வேண்டும் என்னும் கோணம் படத்தில் நம் கவனத்தைக் கோருகிறது.
இளம்பெண்ணின் தனிப்பட்ட சுகதுக்கங்களைப் பற்றி அறிய நேரும் பெற்றோருக்கு ஏற்படும் பதற்றம் அதே வேளையில் அதன் இயல்புத்தன்மை குறித்த உண்மையை உணர்ந்துகொள்ள வேண்டிய தேவை ஆகியவற்றைக் கதாபாத்திரங்கள் இயல்பாக வெளிப்படுத்தியுள்ளன. அடிப்படையில் சினிமா என்பது ஒரு புனைவாக இருந்தபோதும், அது நமது வாழ்வின் சிக்கலைத் தீர்த்துவைக்க ஏதாவது ஒரு வகையில் முயன்றுகொண்டே இருக்கிறது. இந்தப் படம் 2018இல் வெளியான த அக்குயிஸ்டு என்னும் பெயரில் வெளிவந்த அர்ஜெண்டினா நாட்டுப் படத்தின் மறு ஆக்கம்.
மாறும் காலத்துக்கு ஏற்ப மனிதர்களின் மனங்களும் மாறிக்கொண்டே வருகின்றன. சட்டதிட்டங்கள் பழைய மரபையும் பாரம்பரியத்தையும் மட்டுமே தூக்கிப் பிடித்துக்கொண்டு வறட்டுத்தனமான தீர்ப்புகளை வழங்கிக்கொண்டிருந்தல் தொடர்பான தீவிரமான கேள்வியை எழுப்பியிருக்கும் காரணத்தால் இந்தப் படத்தைப் பார்ப்பது மிகவும் பயனுள்ள செயலாகவே படுகிறது. எதேச்சையான சம்பவங்களைக் கண்டு அவற்றை குற்றம்சாட்டப்பட்டவரின் நடத்தையுடன் முடிச்சிட்டுக் குற்றங்களைப் பொதிந்துள்ள புதிரின் முடிச்சுகளை அவிழ்க்க முயல்வது ஒருவகையான அபத்தமே என்பதைப் படம் மிகவும் தெளிவாக உணர்த்துகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக