இந்த வலைப்பதிவில் தேடு

இளம்பெண் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இளம்பெண் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், மார்ச் 08, 2021

கொன்றது நீதானா சொல் சொல்...


கடற்கரையில் அந்தக் குடும்பத்தினர் உற்சாகமாகப் பொழுதைக் கழித்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த நேரத்தில் அங்கே வரும் சீருடைக் காவலர்கள் விசாரணைக்காக அந்தப் பெண்ணை அழைத்துச் செல்கிறார்கள். இப்படித்தான் த கேர்ள் வித் எ ப்ரேஸ்லெட் படம் தொடங்குகிறது. ஏன், என்ன, எதுவெனப் புரியாமல் நாம் நிமிர்ந்து உட்காரும்போது, இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் எனப் படம் தொடர்கிறது. லீஸ் பத்தைல் என்னும் அந்த இளம் பெண் தனது அருமைத் தோழியைக் கொன்றுவிட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறார். நீதிமன்றத்தில் விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. ஒரு த்ரில்லர் படமாக இருந்தாலும் நீதிமன்றக் காட்சிகளாகவே படம் நகர்கிறது. லீஸ் கொலைசெய்திருப்பாளா இல்லையா அவள் விடுவிக்கப்படுவாளா தண்டனை பெறுவாளா என்னும் கேள்விகளுடன் நாம் படத்தைத் தொடர வேண்டியுள்ளது.

நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களின் வாதத்தின் வழியே கொலைக் குற்றம் நடந்ததாகச் சொல்லப்படும் 2016 ஜூன் 7 அன்று என்ன நடந்தது என்று நமக்குச் சொல்கிறார்கள். ஆனால், கொலைச் சம்பவத்தின் எந்தக் காட்சியும் இறுதிவரை நமக்குக் காட்டப்படுவதேயில்லை. அந்தச் சம்பவத்தில் தொடர்புள்ள சடலத்தின் புகைப்படம் மட்டுமே நமக்குக் காட்டப்படுகிறது. ஆறேழு இடங்களில் குத்திக் கொலைசெய்யப்பட்டுள்ளார் அந்தப் பெண். குற்றம்சாட்டப்பட்டுள்ள லீஸ் எந்தக் குற்றவுணர்வும் இல்லாமல் இயல்பாக இருக்கிறார். விசாரணையின்போது, தேவைக்காக மட்டுமே பேசுகிறார். மற்றபடி உறைந்தநிலையிலேயே இருக்கிறார். இது பற்றி அரசாங்க வழக்கறிஞர் தனது அதிருப்தியை வெளிப்படுத்துகிறார். 

ஒரு குற்றச்செயலில் தொடர்புள்ளதாகச் சந்தேகிக்கப்படும் ஒருவர் மீதான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெறும்போது, அவரது நடத்தை பூரணமாகக் கவனிக்கப்படுகிறது. அவர் குற்றம்செய்தவரா இல்லையா என்பதை விசாரித்துத் தெரிந்துகொள்ளும் நடைமுறைகளில் அவரது நடத்தை எந்த வகையில் முக்கியத்துவம் பெறுகிறது என்பதைக் காட்சிகளின் மூலம் இயக்குநர் எடுத்துவைக்கிறார். ஆனால், இதையெல்லாம் வைத்து நீதியை முடிவுசெய்ய முடியாது என்பதையும் அவர் சொல்கிறார். 

பருவ வயதுப் பெண்ணின் நடத்தைகள் குறித்த புரிதலை உருவாக்கும் எண்ணத்தில் இந்தப் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. பருவ வயதினரின் உடம்பு பற்றிய புரிதல் முந்தைய தலைமுறையால் எப்படிப் புரிந்துகொள்ளப்படுகிறது என்பதையும் படம் விசாரிக்கிறது. லீஸுக்கும் அவளுடைய தோழிக்கும் இடையே உடல்ரீதியான மகிழ்ச்சிப் பரிமாற்றம் இருந்துள்ளது. கொலை நடந்ததற்கு முந்தைய நாளின் இரவில்கூட இருவரும் ஒரே படுக்கையைப் பகிர்ந்திருக்கிறார்கள்; முத்தமிட்டிருக்கிறார்கள்; பரவச நிலையை உணர்ந்திருக்கிறார்கள். ஆனால், அது குறித்து அவளுக்கு அசூயையோ தவறென்ற எண்ணமோ இல்லை. இருவரும் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை அளித்துக்கொண்டோம் என்றுதான் லீஸ் கூறுகிறாள். பெரும்பாலும் மூத்த தலைமுறையினரால் நிறைந்துள்ள அந்த நீதிமன்றத்தில் அந்த இளம் பெண்ணின் உண்மையான பேச்சு ஒருவிதமான நிச்சயமற்ற நிலையை ஏற்படுத்துகிறது.  

ஓர் இளம்பெண்ணின் வாழ்வில் எதிர்பாராத வகையில் நிகழ்ந்த சம்பவம் அவளுடைய அவளது குடும்பத்துடைய வாழ்க்கையை எப்படியெல்லாம் பாதித்துவிடுகிறது என்பதை யோசிக்கச் செய்யும் வகையிலேயே படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இளம் பெண் ஒருவருக்குத் தன் உடல் குறித்த பார்வை எப்படி இருக்கிறதோ அதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் புரிதல் முதிய தலைமுறையினருக்கு வேண்டும் என்னும் கோணம் படத்தில் நம் கவனத்தைக் கோருகிறது. 

இளம்பெண்ணின் தனிப்பட்ட சுகதுக்கங்களைப் பற்றி அறிய நேரும் பெற்றோருக்கு ஏற்படும் பதற்றம் அதே வேளையில் அதன் இயல்புத்தன்மை குறித்த உண்மையை உணர்ந்துகொள்ள வேண்டிய தேவை ஆகியவற்றைக் கதாபாத்திரங்கள் இயல்பாக வெளிப்படுத்தியுள்ளன. அடிப்படையில் சினிமா என்பது ஒரு புனைவாக இருந்தபோதும், அது நமது வாழ்வின் சிக்கலைத் தீர்த்துவைக்க ஏதாவது ஒரு வகையில் முயன்றுகொண்டே இருக்கிறது. இந்தப் படம் 2018இல் வெளியான த அக்குயிஸ்டு என்னும் பெயரில் வெளிவந்த அர்ஜெண்டினா நாட்டுப் படத்தின் மறு ஆக்கம். 

மாறும் காலத்துக்கு ஏற்ப மனிதர்களின் மனங்களும் மாறிக்கொண்டே வருகின்றன. சட்டதிட்டங்கள் பழைய மரபையும் பாரம்பரியத்தையும் மட்டுமே தூக்கிப் பிடித்துக்கொண்டு வறட்டுத்தனமான தீர்ப்புகளை வழங்கிக்கொண்டிருந்தல் தொடர்பான தீவிரமான கேள்வியை எழுப்பியிருக்கும் காரணத்தால் இந்தப் படத்தைப் பார்ப்பது மிகவும் பயனுள்ள செயலாகவே படுகிறது. எதேச்சையான சம்பவங்களைக் கண்டு அவற்றை குற்றம்சாட்டப்பட்டவரின் நடத்தையுடன் முடிச்சிட்டுக் குற்றங்களைப் பொதிந்துள்ள புதிரின் முடிச்சுகளை அவிழ்க்க முயல்வது ஒருவகையான அபத்தமே என்பதைப் படம் மிகவும் தெளிவாக உணர்த்துகிறது. 

ஞாயிறு, பிப்ரவரி 12, 2017

சினிமா ஸ்கோப் 26: காதல் கவிதை


புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர் ஃபியோதர் தஸ்தோயெவ்ஸ்கி எழுதி, 1848-ல் வெளியான கதை ஒயிட் நைட்ஸ். பனிபொழியும் காலத்தின் நான்கு இரவுகளில் நடைபெறும் சம்பவங்களை உள்ளடக்கிய கதையான இது ஒரு கனவுலகவாசியின் நனவுலகக் குறிப்புகள். கதைப்படி அந்தக் கனவுலகவாசி கூச்ச சுபாவி. அவனது பிரதேசத்தில் அழகிய இளம்பெண்கள் பிரவேசித்ததில்லை. பெண்களின் உலகுக்குள் அவனும் அத்துமீறி நுழைந்ததில்லை. ஓரிரவில் அவன் சந்திக்கும் ஓரிளம்பெண் அவனது வாழ்வின் திசையை மாற்றுகிறாள். தன்னைப் பிரிந்துசென்ற காதலனுக்காக காத்திருக்கிறாள் அந்த இளம் பெண். நான்கு நாட்களுக்குள் கனவுலவாசிக்கும் இளம் பெண்ணுக்கும் நட்பும் காதலும் உருவாகிவிடுகின்றன. அவள் முழு மனத்துடனும் காதலுடனும் கனவுலகவாசியுடன் கைகோத்த கணத்தில் பழைய காதலன் தோன்றிவிடுகிறான். அந்தக் காதலனுடன் சென்றுவிடுகிறாள் இளம்பெண். கனவுலகவாசி மீண்டும் தன் கனவுகளில் தஞ்சமடைந்துவிடுகிறான்.       

சற்றே நீண்ட இந்தச் சிறுகதையை உலகின் பல இயக்குநர்கள் படமாக்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு இயக்குநரும் ஒவ்வொருவிதமான படத்தைப் படைத்திருக்கிறார்கள். கதை ஒன்றுதான். ஆனால், திரைக்கதையின் போக்குக்கு ஏற்ப இதன் காட்சிகளும், கதாபாத்திரங்களின் தோற்றங்களும் மாறுபடுகின்றன. களம் மாறுபடுகிறது, கதாபாத்திரங்களின் நடவடிக்கைகளில் வித்தியாசம் வந்துவிடுகிறது. இப்படியாக அவை வெவ்வேறு வகையான திரை அனுபவங்களைத் தருகின்றன. அடிப்படையில் இந்தக் கதையே முழுக்க முழுக்க காதலுணர்வில் முகிழ்த்த கதை. ஆகவே அசட்டுத்தனங்களுக்கும் அற்புதத் தருணங்களுக்கும் குறைவில்லை. ஒரு திரைப்படத்துக்குத் தேவையான திடுக்கிடும் திருப்பங்கள் என எவையுமில்லை. ஆனால், அறிவால் எளிதில் புரிந்துகொள்ள முடியாத உணர்வின் அடைப்படையில் அந்த இளம்பெண் எடுக்கும் முடிவுகள் அதிர்ச்சிதரவல்லவை.   


இந்தக் கதையை அடிப்படையாகக் கொண்டு 1957-ல் இத்தாலிய இயக்குநர் லூக்கினோ விஸ்கோந்தி ஒயிட் நைட்ஸ் என்னும் பெயரிலேயே ஒரு படத்தை உருவாக்கினார். கறுப்பு வெள்ளைப் படமான இதில் பனிபொழியும் இரவு, ஆற்றுப் பாலம், அதை ஒட்டிய பகுதிகளில் நடைபெறும் சம்பவங்கள் ஆகியவை அசையும் ஓவியங்களைப் போலவே காட்சிகொள்ளும். கதையைப் போலவே இதிலும் இளம்பெண்ணின் பாட்டி உறங்கும்போது, தன்னுடன் அந்தப் பெண்ணின் உடையைப் பிணைத்திருப்பார். தீவிர வாசிப்பனுபவத்துக்கான கதையை இனிய காட்சியனுபவமாக மாற்றியிருப்பார் இயக்குநர். 

இதே கதையை 1971-ல் ஃபோர் ஆஃப் எ ட்ரீம்மர் என்னும் பெயரில் ஃபிரெஞ்சு இயக்குநர் ராபே ப்ரேஸான் (ஆங்கில உச்சரிப்பு ராபர்ட் ப்ரஸ்ஸான்) படமாக்கினார். பிக் பாக்கெட் படத்தை உருவாக்கிய ராபே ப்ரேஸான் தனக்குரிய முத்திரைகளுடன் ஒயிட் நைட்ஸ் கதையைக் கையாண்டிருப்பார். இந்தக் கதையில் இளம்பெண்ணுக்குப் பாட்டி கிடையாது. அதற்குப் பதில் அம்மா. தனது தனிமைக்குள் உழலும் அந்தக் கனவுலகவாசி ஓர் ஓவியன், ஆனால் அதையே பிறரிடம் வெளிப்படுத்தாத அளவுக்கு உள்ளடங்கிய குணம் கொண்டவன். தன் குரலில் தானே பேசி அதைக் கேட்டு மகிழ்பவன். அழகிய வெள்ளைப் புறாக்கள் புல் தரையில் அலைவுறும் ஒலியைப் பதிவுசெய்வதைக்கூட விருப்பத்துடன் செய்யும் அளவுக்கு மென்மையானவன். அவனைத்தான் காதலனுக்காகக் காத்திருந்த இளம்பெண் காதலிக்கிறாள்; காதலன் திரும்பிவிடவும் கைவிட்டுவிடுகிறாள்.  


முக்கோணக் காதல் கதைகளைத் தனித்துவத்துடன் இயக்கியிருந்த இயக்குநர் ஸ்ரீதர் கதை வசனம் எழுதி இயக்கிய அழகே உன்னை ஆராதிக்கிறேன் (1979) திரைப்படத்தில் ஒயிட் நைட்ஸின் பாதிப்பை உணர முடியும். திரைக்கதையில் ஸ்ரீதர் செய்திருந்த பல மாற்றங்களே இந்தப் படத்தை ஒயிட் நைட்ஸிலிருந்து வேறுபடுத்தும். வேணி என்னும் இளம் பெண் கதாபாத்திரத்தை லதா ஏற்று நடித்திருப்பார். அவருடைய காதலனாக ஜெய்கணேஷ் வேணு என்னும் பாத்திரத்திலும், வேணியை உருகி உருகிக் காதலிக்கும் வாசு என்னும் பாத்திரத்தில் விஜயகுமாரும் நடித்திருப்பார்கள். காதலன் பாத்திரத்தை ஸ்திரிலோலனாக மாற்றியிருப்பார் ஸ்ரீதர். ஒயிட் நைட்ஸில் ஓராண்டில் திரும்பிவந்துவிடுவதாகக் காதலன் கதாபாத்திரம் சொல்லிவிட்டுச் செல்லும். ஆனால், இதில் ஜெய்கணேஷ் வேணியிடம் வேண்டியது கிடைத்ததும் தலைமறைவாகிவிடுவார். பல முற்போக்கு சங்கதிகளை இந்தப் படம் கொண்டிருக்கும். வேணியின் அண்ணன் மகளாக வரும் பருவப் பெண் அடல்ட் ஒன்லி ஜோக்குகளை அள்ளிவிடுபவளாக நடித்திருப்பாள். வேணுவிடம் வேணி தன்னை இழந்திருப்பதை அறிந்தும் அவளைக் கரம்பற்ற விரும்புபவனாகவே வாசுவின் கதாபாத்திரத்தைப் படைத்திருப்பார் ஸ்ரீதர். வாலி எழுதிய என் கல்யாண வைபோகம், நானே நானா யாரோ தானா? உள்ளிட்ட பல பாடல்கள் இந்தப் படத்தை மறக்க முடியாததாக மாற்றியிருக்கிறது. 


2003-ல், தோழர் எஸ்.பி.ஜனநாதன் கதை, வசனம் இயக்கத்தில் வெளியான இயற்கை படமும் இதன் பாதிப்பில் உருவானதே. இதை ஜனநாதனே நேர்காணல்களில் குறிப்பிட்டிருக்கிறார். அதனால்தானோ என்னவோ படத்தின் டைட்டிலில் எதுவும் குறிப்பிட்டிருக்க மாட்டார். ஸ்ரீதரின் படத்தில் கனவுலகவாசியின் சாயல் கொண்ட கதாபாத்திரத்தில் விஜயகுமார் நடித்திருந்தார் என்றால் இயற்கையில் காதலன் கதாபாத்திரத்தில் அவருடைய மகன் அருண் விஜய் நடித்திருப்பார். பொழுதுபோக்குப் படங்களை உருவாக்கிவந்த ஸ்ரீதரின் படத்தின் கதாபாத்திரங்கள் போல் முற்போக்கான கதாபாத்திரங்களை, மாற்றுப் படங்களை உருவாக்குவதான பாவனை காட்டும் ஜனநாதன் உருவாக்கவில்லை. நாயகி மாசற்ற பெண்ணாகவே படைக்கப்பட்டிருப்பாள். நெய்தல் நிலத்தின் பின்னணியில் படத்தை உருவாக்கியிருந்ததால் படத்துக்குப் புதியதொரு நிறம் கிடைத்தது. சிறந்த படமென மாநில அரசின் விருதும் கிடைத்தது. 



இத்தனை படங்களுக்குப் பின்னர், இந்திப் பட இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, சாவரியா (2007) என்னும் பெயரில், ஒயிட் நைட்ஸ் கதையை ஒரு காவியப் படமாக்கினார். காதலனாக சல்மான் கானும், காதலியாக சோனம் கபூரும், கனவுலகவாசியாக ரன்பீர் கபூரும் நடித்திருப்பார்கள். இத்தாலிப் பட்த்திலும், ஃபிரெஞ்சுப் படத்திலும் அந்த இளம் பெண் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவளாகக் காட்சிபடுத்தப்பட்டிருப்பாள். இந்திப் படத்தில் அந்தப் பெண் இஸ்லாமியச் சமூகத்தைச் சேர்ந்தவள். மெலோ டிராமா வகையைச் சேர்ந்த இந்தப் படம் ஒயிட் நைட்ஸின் தீவிரத் தன்மையைக் குறைக்கும் வகையிலானது. ஸ்ரீதரைப் போலவே, அமெரிக்க இயக்குநர் ஜேம்ஸ் க்ரேயும் இந்தக் கதையின் பாதிப்பில் 2008-ல் டூ லவ்வர்ஸ் என்னும் பெயரில் ஒரு படமெடுத்தார். இதில் அந்தக் கனவுலக வாசிக்கு வேறு ஒரு காதலியையும் இவர் உருவாக்கியிருப்பார். தான் விரும்பிய இளம் பெண் அவளுடைய காதலனுடன் சென்ற பிறகு, கனவுலகவாசி மற்றொரு காதலியைத் தஞ்சமடைந்துவிடுவான். ஒரே கதையைப் பல்வேறு திரைக்கதைப் பாதைகளில் கொண்டுசென்று பல படங்களை உருவாக்கிவிட முடியும். ஆனால் எல்லாப் படங்களும் தனித்துவம் கொண்டதாக அமைய வேண்டுமென்றால் அதற்கு இயக்குநரின் ஒத்துழைப்பு தேவை. அவருடைய பார்வை வழியேதான் படம் மெருகேறும் அல்லது மொண்ணையாக மாறும்.

< சினிமா ஸ்கோப் 25 >                               < சினிமா ஸ்கோப் 27 >  

திங்கள், ஏப்ரல் 07, 2014

பேஸ்புக்கால் பிழைத்த உயிர்

(2014 ஏப்ரல் 5 அன்று தி இந்துவில் வெளியானது) 


சமூக வலைதலங்கள் பொழுதுபோக்காக மட்டுமே பயன்படுகிறது என்னும் குரல் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அதையும் மீறி சமூக வலைதலங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில நல்ல செயல்களிலும் ஈடுபடுகின்றன. சமீபத்தில் கேரளாவில் ஃபேஸ்புக் மூலமாக இளம்பெண் ஒருவரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் அகலி என்னும் இடத்தில் வசித்துவருபவர் ரபிதா சுனில் குமார். அவர் அகலியிலுள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துவருகிறார். அவருடைய பெற்றோர் கூலித் தொழிலாளிகள். பிறந்ததிலிருந்தே அந்தப் பெண் இதய நோயால் அவதியுற்றுவருகிறார். ஒரு சில நாட்களுக்கு முன்னர் ரபீதா வகுப்பறையில் மிகவும் களைப்பாக இருந்திருக்கிறார்.

உடல்நிலை பாதிப்படைந்துள்ளதை உணர்ந்திருக்கிறார். எனவே அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ரபீதாவை முழுமையாகப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு இதய நோய் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என ஆலோசனை தெரிவித்துள்ளனர். ஆனால் பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வு இருந்ததால் அவர் தேர்வெழுதச் சென்றுள்ளார். தேர்வு எழுத அவர் விரும்பினாலும் உடல்நிலை அவருக்கு ஒத்துழைக்கவில்லை. கடும் வலி காரணமாக அவரால் தேர்வைச் சரியாக எழுத முடியவில்லை. பாதியிலேயே வீட்டிற்குத் திரும்பிவிட்டார்.

அறுவைச் சிகிச்சை செய்தால் ஒழிய அவர் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதனால் அவரது பெற்றோர் அவரை அங்குள்ள ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதய நோய் அறுவைச் சிகிச்சையை மேற்கொள்ள இரண்டு லட்சம் ரூபாய் செலவாகுமென்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். சாதாரணக் கூலித் தொழிலாளர்களான அவருடைய பெற்றோருக்கு என்ன செய்வதெனத் தெரியவில்லை. மகளின் உயிரைக் காப்பாற்ற அவ்வளவு பணமில்லை என்பதால் கவலையடைந்துள்ளனர்.

நெருக்கடியான நிலைக்குத் தள்ளப்பட்டது ரபீதாவின் குடும்பம். குடும்ப நண்பர்கள் ஏதாவது நன்கொடை திரட்டலாம் என யோசனை தெரிவித்தனர், அதற்கும் முயன்றனர். ஆனால் நிலைமை அவர்களுக்குச் சாதகமாக இல்லை. அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. குறுகிய காலத்தில் எப்படிப் பணத்தைப் புரட்டுவது என ரபீதாவின் பெற்றோர் கலங்கித் தவித்துப்போனார்கள்.

இப்படியான சமயத்தில் ரபீதாவுடன் படிக்கும் மாணவி ஒருவர் ரபீதாவின் நிலைமை பற்றி ஃபேஸ்புக்கில் சாயக்கடா என்னும் குழுவில் பதிவிட்டுள்ளார். அது வெறும் லைக்குகளும் கமெண்டுகளுமாகச் சாதாரணப் பதிவாக முடிந்துவிடவில்லை. அந்தப் பதிவுக்கு அதிகமான அளவில் ஆதரவு கிடைத்தது. அந்தக் குழுவின் உறுப்பினர்கள் தங்களது பங்காக ரூபாய் ஒரு லட்சத்து அறுபதாயிரத்தைத் திரட்டிக் கொடுத்துள்ளனர். எல்லோரும் அவர்களாக விரும்பி வந்து உதவினார்கள் என சாயக்கடா குழு உறுப்பினர்களில் ஒருவரான மினி ஸ்ரீனிவாசன் கூறுகிறார்..

இந்தியாவில் உள்ளவர்கள் மட்டுமல்ல இஸ்ரேல், அங்கோலா போன்ற நாடுகளில் வசிக்கும் உறுப்பினர்கள் சிலரும் இந்த உதவியில் கைசேர்த்திருக்கிறார்கள். உண்மையில் இஸ்ரேலில் உள்ள ஒரு உறுப்பினர்தான் இந்த உதவிப் பயணத்தைத் தொடங்கிவைத்தார் என ரபீதாவின் அம்மா பிந்து சுனில்குமார் சொல்கிறார். அதனால்தான் எங்களை மலைக்கவைத்த தொகையை ஒரு வாரத்திற்குள் புரட்ட முடிந்தது என்றும் அவர் சந்தோஷப்படுகிறார்.

ரபீதாவின் அறுவைச் சிகிச்சைக்குத் தேவையான பணம் கிடைத்துவிட்டது. ரபீதாவுக்குத் தேவையான சிகிச்சையை மருத்துவர்கள் அளித்துவிட்டனர். ரபீதா மெல்ல மெல்ல இயல்பான நிலைக்குத் திரும்பிவருகிறாள் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். ரபீதா மீண்டும் துள்ளித் திரியும் காலம் தொடங்கிவிட்டது.

லேட்டஸ்ட்

அமலா எனும் பொன்மான்

தொடர்பவர்