இந்த வலைப்பதிவில் தேடு

கருணாநிதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கருணாநிதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, ஆகஸ்ட் 12, 2018

மறைந்தும் மறையாச் சூரியன்

அண்ணா சாலையில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டி

இந்தியா விடுதலையடைந்த இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழகத்தில் தலைகீழ் அரசியல் மாற்றம் நிகழ்ந்தது. அதுவரை அரியணையில் அமர்ந்திருந்த, பலம் பொருந்திய தேசியக் கட்சியான காங்கிரஸை 1967 தேர்தலில் வென்று ஆட்சிக்கு வந்தது மாநிலக் கட்சியான திமுக. அதன் முதல் முதலமைச்சரான அண்ணாத்துரை ஈராண்டுகளுக்குள், 1969இல் மறைய, கட்சியின் அடுத்த கட்டத் தலைவர்கள் வரிசையிலிருந்த மு.கருணாநிதி முன்னேறினார்; முதலமைச்சரானார். திராவிட அரசியல் நிலைப்பாட்டைக் கொண்ட கட்சியான திமுக ஒடுக்கப்பட்டோரின் நலனையும் சமூக நீதியை நிலைநாட்டுவதையும் தன் முக்கியக் கடமைகளாகக் கொண்டிருந்தது. தந்தை பெரியாரிடம், அறிஞர் அண்ணாவிடம் அரசியல் பாடம் கற்றறிந்த முதலமைச்சர் கருணாநிதியும் இது விஷயத்தில் தீவிர அக்கறை கொண்டிருந்தார். 

ஒடுக்கப்பட்டவர்கள் என்று குறிப்பிடும்போது அதன் முதல் வரிசையில் இருப்பவர்கள் பெண்கள். சாதி வித்தியாசம் இன்றி அனைத்துக் குடும்பங்களிலும் பெண்களுக்கு எதிராக நிலவும் ஒடுக்குமுறைகள் ஒன்றல்ல; ஓராயிரம். அவை அனைத்தையும் சுத்தமாகத் துடைத்தெறிய மிகப் பெரிய சமூக மாற்றம் தேவை. அந்த மாற்றத்துக்கான விதை தூவிய பெரியாரின் வழியில் அண்ணாவை அடியொற்றி நடைபோட்டவர் மு.கருணாநிதி. அதற்கான சான்றுகளாக கருணாநிதி கொண்டுவந்த மகளிருக்கான திட்டங்களைச் சொல்லலாம். அந்தத் திட்டங்களால் பயனடைந்த பெண்கள், கருணாநிதி மறைந்த மறுநாள் ஆகஸ்ட் 8 அன்று நிகழ்ந்த கருணாநிதியின் இறுதி ஊர்வலத்தில் கண்ணீரும் கம்பலையுமாகக் கலந்துகொண்டார்கள். தங்கள் வாழ்வில் மலர்ச்சி காண விரும்பிய தந்தையாக, தமையனாக, தனயனாகச் செயல்பட்ட அம்மனிதரின் மரணம் அவர்களை உலுக்கியது. ஆகவே, கட்சி வேறுபாடின்றி அவருக்குத் தங்கள் நன்றியை அஞ்சலியாகச் செலுத்தினார்கள்.

காவேரி மருத்துவமனை முன்பு

மகளிருக்காக அவர் கொண்டுவந்த திட்டங்களைச் சிந்தித்துப் பார்த்தால் மகளிர் நலனுக்காக கருணாநிதி உண்மையிலேயே செயல்பட்டாரா இல்லையா என்பதை உணர்ந்துகொள்ளலாம். பெண்களின் பெரும் பிரச்சினைகள் என்று எடுத்துக்கொண்டால் அவர்களது கல்வியும் திருமணமுமே முன்னிலையில் நிற்கும். ஆகவே, பெண்கள் கல்வி கற்கவும் மணமுடிக்கவும் திட்டங்கள் வேண்டும். சரி மணமுடித்த பெண்கள் கணவனை இழந்தால் கைம்பெண்ணாகிவிடுகிறார்களே அவர்களுக்கும் உதவ வேண்டுமே. இன்னும் பெண்களில் சிலர் திருமணமே வேண்டாம் என முடிவெடுக்கக்கூடும் அவர்களை அப்படியே விட்டுவிட முடியாதே அவர்களுக்கும் உதவிக்கரம் நீட்ட வேண்டும். ஏழை எளிய பெண்களுக்கு இவை எல்லாம் உதவும், சொத்து நிறைந்த குடும்பத்துப் பெண்களுக்கு என்ன செய்வது? அந்தச் சொத்தில் சம உரிமையைப் பெற்றுத்தர வேண்டியது அவசியம்தானே? சரி அரசியல் ஈடுபாடுகொண்ட பெண்களை அரசியலிலும் ஈடுபடுத்த வேண்டுமே. அதற்கும் திட்டம் உண்டு. இப்படிப் பெண்கள் மீது அக்கறை கொண்டு எந்தவகையிலும் எந்தத் தரப்புப் பெண்ணும் விடுபட்டுவிடக் கூடாது என்னும் முன்னெச்சரிக்கையுடன் எல்லாத் தரப்பு பெண்களுக்கும் உதவும்படியான திட்டங்களை முன்னெடுத்ததில் கருணாநிதியின் கூர்மதியும் பங்களிப்பும் காலகாலத்துக்கும் நினைவுகூரத்தக்கவை.

கணவன் இறந்துவிட்டால் பெண்ணுக்கு வாழ்வே முடிந்துவிட்டது என்ற சமூகத்தின் அறியாமையை அகற்ற கைம்பெண்கள் மறுமணம் செய்துகொள்வது அவசியம். அதற்கு உதவும் வகையில், கைம்பெண் மறுமணத்தை ஆதரிக்கும் நோக்கத்தில் 1975ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட திட்டம்தான் டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு கைம்பெண் மறுமண உதவித் திட்டம். கைம்பெண்களின் மறுவாழ்வை ஊக்கப்படுத்தவும் அவர்களின் மறுமணத்துக்கு ஆதரவு தரவுமான நிதியுதவித் திட்டம் இது. இந்தத் திட்டத்தில் அப்போது 5000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது. 2009இல் இது 20 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. இந்தத் திட்டத்தில் உதவிபெற வருமான உச்சவரம்பு எதுவும் இல்லை. திருமணத்துக்கு உதவும் அதே நேரம் திருமணம் செய்து கொள்ள விரும்பாத கைம்பெண்களுக்கு உதவவும் ஒரு திட்டம் கொண்டுவந்தார் அவர். அது, 1975 ஜூன் 1 அன்று கொண்டுவரப்பட்ட ஆதரவற்ற கைம்பெண் உதவித் தொகைத் திட்டம். 18 வயசுக்கு மேற்பட்ட கைம்பெண்களுக்கு இந்தத் திட்டம் உதவுகிறது. வீட்டிலிருந்தபடியே உழைத்துப் பிழைக்க விரும்பும் 20 முதல் 40 வயது கொண்ட பெண்களுக்கு உதவுவதற்காக, சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவசத் தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தை 1975இல் அறிமுகப்படுத்தினார் கருணாநிதி.

கலைஞர் மறைந்த அன்று காவேரி முன்பு

ஆண்களின் கல்வி குடத்து நீரெனில் பெண்களின் கல்வி குளத்து நீர். அதனால் சமூகமே பயனடையும். ஆகவே, 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த கருணாநிதி, பெண்களின் கல்விக்கு உதவும்வகையில் பெரியார் ஈ.வே.ரா.நாகம்மை இலவசக் கல்வித் திட்டத்தை 1989-90இல் கொண்டுவந்தார்.  வருட வருமானம்  24 ஆயிரத்துக்குட்பட்ட எளிய குடும்பத்துப் பெண்கள் பட்டப் படிப்பு படிக்க உதவும் திட்டம் இது.

1989இல், கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3 அன்று கொண்டுவந்த மற்றொரு திட்டம் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம். இது திருமண உதவித் திட்டம் என்றபோதும் மறைமுகமாக பெண் கல்வியை ஊக்குவிக்கும் திட்டமாகவும் செயல்படுகிறது. குடும்பத்தின் வருட வருமானம் 72 ஆயிரத்துக்குட்பட்ட ஏழை எளிய பெண்களின் திருமணத்துக்கு உதவும் வகையில் அமைந்த திட்டம் இது. நிதி உதவி பெற விரும்பும் பெண்கள் பத்தாம் வகுப்புவரை படித்திருக்க வேண்டும் என்பது ஒரு விதி. எனவே, இந்தத் திட்டம் பெண் கல்வியை ஊக்குவிக்கவும் பயன்படுகிறது. பழங்குடியினப் பெண்கள் 5ஆம் வகுப்புவரை படித்திருந்தால் போதும் என்பதைப் போன்ற விதிகளைக் கருத்தூன்றிக் கவனிக்கும்போது திட்டங்கள் பயனாளிகளுக்குப் போய்ச்சேருவதிலும் அவர் கொண்டிருந்த அக்கறை விளங்கும்.  

கலைஞரின் இறுதி ஊர்வலம்

பெண்களது சமூகச் செயல்பாட்டையும் நிர்வாகத் திறனையும் வளர்க்க உதவும் வகையில், 1989ஆம் ஆண்டு முதலமைச்சர் கருணாநிதி தர்மபுரியில் தொடங்கிவைத்த திட்டம் மகளிர் சுய உதவிக் குழு. கிராமப்புறப் பெண்கள் சிறு குழுவாக ஒருங்கிணைந்து வாழவும், வருமானம் ஈட்டவும் உதவிய திட்டம் இது. 1989இல் செய்யப்பட்ட சட்ட திருத்தத்தின்படி ஆண்களைப் போல் பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை வழங்க வகை செய்யப்பட்டது. கல்வி, வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு, உள்ளாட்சியில் 33 சதவீத இட ஒதுக்கீடு ஆகியவையும் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் வழங்கப்பட்டன. மாற்றுப்பாலினத்தவருக்குத் திருநங்கைகள் என்ற கவுரவமான பதத்தை வழங்கியதுடன் அவர்கள் மரியாதையான வாழ்வு நடத்துவதை ஆதரிப்பதற்காகத் தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியம் ஒன்று 15.4.2008 அன்று தொடங்கப்பட்டது. அதுவரை மாற்றுப்பாலினத்தவரை ஏளனத்துடன் பார்த்துக்கொண்டிருந்த சமூகத்தின் பார்வையில் மாற்றம் ஏற்பட இந்த நடவடிக்கை உதவியது.

திருமணமே செய்துகொள்ள விரும்பாத பெண்களுக்கு உதவவும் ஒரு திட்டம் கொண்டுவந்திருக்கிறார் கருணாநிதி. அது 2008 ஜூலை 1 அன்று தொடங்கப்பட்ட முதிர்கன்னி உதவித் திட்டம். இந்தத் திட்டத்தின்கீழ் திருமணமாகாத 50 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்களுக்கு மாதம் ரூ 1000 நிதி உதவி கிடைக்கிறது.

அஞ்சலி சுவரொட்டி

கருணாநிதி கொண்டுவந்த திட்டங்கள் அனைத்தும் மக்கள் வரிப்பணத்திலிருந்தே செய்யப்பட்டன. அவர் கையிலிருந்து பணம் போட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தவில்லை. ஆனால், அத்தகைய திட்டங்கள் அவசியம் என்பதை உணர, முன்மொழிய, வழிமொழிய மகளிரின் துயரம் அறிந்த முதலமைச்சர் தேவைப்பட்டார். அந்த முதலமைச்சராக இருந்தார் கருணாநிதி. திட்டங்கள் தீட்டுவதில் வெறுமனே கடமையைத் தட்டிக்கழித்தால் போதும் என்று செயல்பட்டவரல்லர் அவர். திட்டங்களுக்குப் பெயர் சூட்டுவதிலிருந்து பயனாளிக்கான விதிகளைத் தீர்மானிப்பது வரை ஒவ்வொன்றிலும் அனைத்துத் தரப்பினரின் ஆலோசனைகளையும் கேட்டுச் செயல்படுத்தியிருக்கிறார் அவர். அது மாத்திரமல்ல; யாருக்காகத் திட்டங்கள் தீட்டப்பட்டனவோ அந்தப் பயனாளிகளைத் திட்டங்கள் சென்றடைகின்றனவா என்பதை விசாரித்தறிவதிலும் அவர் ஆர்வம் கொண்டிருந்திருக்கிறார். இவற்றை எல்லாம் விசாரித்து அறியும்போது அவரது தொலைநோக்குப் பார்வை புலப்படுகிறது. இருட்டறையில் முடங்கிக் கிடந்த மகளிருக்கு உதயசூரியனின் பேரொளியைக் காட்டிய கருணாநிதி அறிமுகப்படுத்திய திட்டங்கள் இவை. அதனால்தான் தமிழ்ப் பெண்களின் நெஞ்சம் நிறைந்த தலைவராயிருக்கிறார் இன்று அவர்.

(பெண்களுக்காகவும் சுடர்ந்த சூரியன் என்னும் தலைப்பில் 2018 ஆகஸ்ட் 12 அன்று பெண் இன்று இணைப்பிதழில் வெளியான கட்டுரையின் திருத்தப்பட்ட வடிவம் இது.) 

திங்கள், ஜூன் 02, 2014

போடுங்கம்மா ஓட்டு!

 

தேர்தல் என்றதும் முதலில் நினைவில் எழுவது 1984-ம் ஆண்டின் தேர்தலே. அப்போது நான் ஆறாம் வகுப்போ ஏழாம் வகுப்போ படித்துக்கொண்டிருந்ததாக ஞாபகம். பரதனில் இங்கேயும் ஒரு கங்கை படம் பார்த்துவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்தேன். தென்காசி பேருந்து நிலையம் அருகே வரும்போது தென்பட்ட நபர் ஒருவரின் கையில் விரித்து வைக்கப்பட்டிருந்த நாளிதழ் அதிமுக அமோக வெற்றி என்னும் செய்தியைத் தாங்கியிருந்தது. வேறெதுவும் பெரிதாய் ஞாபகமில்லை. அப்போது எம்.ஜி.ஆர் உடல் சரியில்லாமல் அமெரிக்காவில் இருந்தார். 

1984 தேர்தலின் போது காண்பிக்கப்பட்ட வீடியோ படக் காட்சி
அவரது உடல் ஆரோக்கிய நிலைமையை விளக்கும் வீடியோவை கிராமம் கிராமமாக வந்து காண்பித்தார்கள். கருணாநிதியும் எம்.ஜி.ஆரும் அருகருகே அமர்ந்து பேசுவது போன்ற புகைப்படத்தைப் போட்டு, நண்பரின் நலிவு நீங்கிட நலமார்ந்த வாழ்த்துகள்! நாட்டின் நலிவு நீங்கிட உதயசூரியனுக்கு வாக்குகள்! என்று திமுக வால்போஸ்டரைப் பார்த்தது நினைவில் பதிந்துள்ளது. 

 

அதற்கு முந்தைய ஆண்டு ஜூலையில் இலங்கையில் கலவரம் நடந்ததோ, அதன் பொருட்டு கருணாநிதி 1984 தேர்தலில் போட்டியிடவில்லை என்று சொன்னதோ எதுவுமே அப்போது தெரியாது. ஆனால் இலங்கைத் தமிழருக்கு நிதி திரட்டுவதற்காக இராமசாமிப் பிள்ளை மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்தபோது உதய கீதம் திரைப்படத்தை வீடியோவாகப் பார்த்திருக்கிறேன்.

அதற்கடுத்து நடந்த 1989-ம் ஆண்டின் தேர்தல் ஓரளவு நினைவுதெரிந்து நடந்த முதல் தேர்தல். அப்போது பிளஸ் 1 முடித்து பிளஸ் செல்லும் தருணம். தேர்தலுக்கு முந்தைய நாள் வகுப்பறையில் மாரியப்பன் சார் வகுப்பறையில் கழக ஆட்சியில் சந்திப்போம் என்று சொல்லிவிட்டுச் சென்றார். ஓர் ஆசிரியர் வகுப்பறையில் அரசியல் பேசியது ஆச்சரியமாக இருந்தது. வகுப்பறை என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது என்ற எண்ணத்தை யார் விதைத்தது எனத் தெரியவில்லை. அவரது கணிப்போ ஆசையோ அப்படியே நடந்தது. தமிழகத்தின் முதலமைச்சராக கருணாநிதி பதவியேற்றுக்கொண்டார். 


அந்தத் தேர்தல் பிரச்சாரத்திற்கு ஜெயலலிதா தமிழ்நாடு முழுவதும் தெருத்தெருவாக வந்தார். இலஞ்சியில் நாங்கள் வசித்த முக்கடி வீட்டருகே வேனில் இருந்தபடி ஜெயலலிதா பிரச்சாரம் செய்ததும், வாக்காளர்களுக்கு அன்புப் பரிசாகப் போர்வைகளைத் தந்ததாகவும் ஞாபகம். அந்தத் தேர்தலில் ஜெயா தலைமையிலான அதிமுக சேவல் சின்னத்தில் போட்டியிட்டது. வி.பி.சிங் தலைமையிலான அமைச்சரவை மத்தியில் ஆட்சியமைத்தது. அதை ஒட்டி அப்போது தமிழ் இந்தியா டுடேயில் மத்திய அமைச்சரவை குறித்து விரிவாக செய்திகள் வெளியாயிருந்தன. அந்தப் புத்தகத்தில் என்னவெல்லாம் இடம்பெற்றிருந்தன என்பது மறந்துபோயிருந்தாலும் அப்படியொரு புத்தகம் கண்டது ஏனோ அப்படியே ஞாபகப் பக்கத்தில் நிலைத்துவிட்டது. 



ஞாயிறு, மார்ச் 30, 2014

அறுசுவைக் கலைஞன்

பிரகாஷ் ராஜின் பிறந்தநாளுக்காக (மார்ச் 26) எழுதப்பட்ட கட்டுரை. இதன் எடிட் செய்யப்பட்ட பிரதி 2014 மார்ச் 28 அன்று தி இந்துவில் வெளியானது.)


பாலசந்தரின் மோதிர விரலால் குட்டுப்பட்டவர்களில் ஒருவர் பிரகாஷ்ராஜ். 1965 மார்ச் 26 அன்று பிறந்த பிரகாஷ் ராஜ் பாலசந்தரின் டூயட் படத்தின் விறுவிறுப்பான வில்லனாக அறிமுகமானார். பிரத்யேக உடல்மொழி, வனங்களை உச்சரிக்கும் பாணியில் தனித்துவம் என எளிதாக ரசிகர்களை வசீகரித்தார் பிரகாஷ் ராஜ். ஏற்கனவே கன்னடத்தில் நாடகங்களில் நடித்திருந்த அனுபவம் அவருக்குக் கைகொடுத்தது. தமிழ்த் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமான பின்னர் 1995இல் கையளவு மனசு என்னும் தொலைக்காட்சித் தொடரில் நடித்ததால் தமிழ்க் குடும்பங்களுக்குப் பரிச்சயமான நடிகராக அவர் மாற முடிந்தது. 1995-96களில் வெளியான ஆசை, கல்கி ஆகிய திரைப்படங்கள் மூலமாக பிரகாஷ் ராஜ் முன்னணிக்கு வந்தார். வில்லனாக நடித்தாலும் கதாநாயகனுக்குச் சமமான வரவேற்பையும் பெற்றார். ரஜினிகாந்த், சத்யராஜ், ரகுவரன் ஆகிய நடிகர்கள் வரிசையில் பிரகாஷ் ராஜுக்கு முக்கிய இடம் கிடைத்தது. 

மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியான இருவர் படத்தில் இரண்டு கதாநாயகர்களுள் ஒருவராக பிரகாஷ் தோன்றினார். திராவிட அரசியலில் எம்ஜிஆர், கருணாநிதி ஆகியோர் உறவைச் சித்திரிந்திருந்த அந்தப் படத்தில் திமுக தலைவர் கருணாநிதி வேடமேற்றிருந்தார் பிரகாஷ் ராஜ். அந்தப் படம் வசூல்ரீதியாகப் பெரிய வெற்றியைப் பெறாவிட்டாலும் பிரகாஷ் ராஜின் நடிப்புத்திறனுக்குச் சாட்சியாக இருந்தது. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என படு பிஸியான நடிகராக வலம் வந்தார் பிரகாஷ்.

வஸந்தின் அப்பு திரைப்படத்தில் அரவாணி வேடம் ஏற்று நடித்தார். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான வேடமேற்ற நடிக்க வேண்டும் என விரும்பினார். ஆனால் இவரது நடிப்பு ஒரே பாணியில் தான் அமைந்துள்ளது என விமர்சனமும் உண்டு. சைக்கோத்தனம், நக்கல் நையாண்டி வசனம் இரண்டையும் கலந்து தனது கதாபாத்திரங்களுக்கு புது வடிவம் கொடுத்தார் பிரகாஷ் ராஜ். கில்லி படத்தில் இவரது உச்சரிப்பில் வெளியான செல்லம்… என்னும் வசனம் ரசிகர்களால் அடிக்கடி நினைவுகூரப்படுகிறது. வில்லனாக அறிமுகமானாலும் குணச்சித்திர வேடங்களிலும் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார் பிரகாஷ் ராஜ். வித்தியாசமான படங்களைத் தர வேண்டும் என்னும் விருப்பத்தால் தானே தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்தார். மொழி, வெள்ளித்திரை, அபியும் நானும் போன்ற படங்களை அதன் காரணமாகவே உருவாக்கினார். திரைப்படம் மீது கொண்ட தாகத்தால் தோனி என்னும் திரைப்படத்தை இயக்கி நடித்தார். பூலோகம், மத கஜ ராஜா, ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை உள்ளிட்ட பல படங்கள் வெளியாக உள்ளன.

ஞாயிறு, டிசம்பர் 04, 2011

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்


படித்தவர்களின் சூதும் வாதும்


எப்போதும்போல் மலர்ந்த அந்த நாள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் (த. அ. ப. தே.) தலைவருக்கும் உறுப்பினர்களுக்கும் வழக்கமான நாளாக முற்றுப்பெற வில்லை. அவர்கள் புரிந்திருந்த ஊழல்களும் முறைகேடு களும் கடந்த அக்டோபர் 14 அன்று வெளியுலகுக்குக் காட்சியாகத் தொடங்கியது.  த. அ. ப. தே. தலைவர் ஆர். செல்லமுத்து, உறுப்பினர்கள் 13 பேர் ஆகியோர் வீடுகளிலும் அரசுப் பணியாளர் தேர்வாணையத்திலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நிகழ்த்திய திடீர்ச் சோதனை பற்றிய தகவல் செய்தியாகத் தொலைக்காட்சி அலை வரிசைகளில் ஒளிபரப்பானதைக் கண்டபோது அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைப் பற்றி அறிந்திருந்தோர், பணி நியமனத்திற்கெனக் காத்திருந்தோர் மத்தியில் அதிர்ச்சி அலைகள் பரவத் தொடங்கின. லஞ்ச ஒழிப்பு இயக்குநர் மகேந்திரனின் தலைமையில் ஏறக்குறைய நூற்றைம்பது பேர் இந்தச் சோதனையை நிகழ்த்தியிருந்தனர். த. அ. ப. தே. தலைவர் மற்றும் உறுப்பினர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு விசாரணை நடத்தியது இதுதான் முதல்முறை என்பதால் இந்நடவடிக்கை பொதுமக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றது. முறையற்ற வழிகளில் பணம் சம்பாதிக்கத் துடித்த ஆணையத்தின் தலைவர்; உறுப்பினர்கள்; மேல் மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரையிலான அதிகாரிகள் போன்றோருக்கும் அவர்களது சட்டபூர்வமற்ற நடவடிக்கைகளுக்குத் துணைபோனவர் களுக்கும் இது மனக் கலக்கத்தை உண்டுபண்ணியது. 

சமூகத்தின் வேர்வரை பரவியுள்ள பொருளீட்டும் வெறி, கையூட்டுக் கொடுப்பவர்களையும் வாங்குபவர் களையும் ஒருசேர ஆக்கிரமித்திருப்பதால் இத்தகைய ஊழல்கள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. குழந்தைகளது கல்விக்கான செலவுகளை முதலீடாகப் பார்க்கும் பெற்றோர்கள் ஏதாவது ஒருவகையில் தம் மக்களைச் சமூகத்தின் உயர்தட்டில் அமர்த்த விரும்புகின்றனர். அதற்கான முறையான தகுதி தம் பிள்ளைகளிடம் இல்லாதபோது சமூகத்தில் காணப்படும் ஓட்டைகளைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி அவர்களை முன்னேற்ற பெற்றோர்கள் விழைகின்றனர். இதன் காரணமாகவே வேலைக்கெனப் பணம் கொடுப்பது இவர்களைப் பொறுத்தவரை சமூகக் குற்றமாகத் தென்படாமல் பிள்ளைகளின் நல்வாழ்வுக்கான முயற்சியாகச் சுருங்கிவிடுகிறது. பணம் கொடுக்க இயலாமல் அல்லது விரும்பாமல் திறமையை மட்டுமே நம்பி உழைத்துவருபவர்களது வேலைகளைத் தாங்கள் கைப்பற்றுகிறோம் என்ற குற்றவுணர்வு சிறிதுமற்றுக் குறுகிய மனோபாவம் கொண்டவர்களாக இவர்கள் மாறுகிறார்கள். அழுகிக்கொண்டிருக்கும் சமூகத்தைக் குற்றம்சாட்டும் இந்தப் பெற்றோர்கள் அதற்குத் தாங்களும் ஒரு காரணமாக விளங்குவதை உணரவியலாத அளவுக்குப் புத்திர பாசம் இவர்கள் கண்களை மறைக்கிறது.  

இத்தகைய பெற்றோரிடம் வகைதொகையின்றிப் பணம் பெற்றுச் சட்டத்திற்குப் புறம்பாக நடந்து கொண்டோர் என நம்பப்படுபவர்களது வீடுகளில்தாம் அன்று சோதனை நடத்தப்பட்டது. உதவிப் பல் மருத்து வர்கள், 2006-2008ஆம் ஆண்டுக்கான மோட்டார் வாகன ஆய்வாளர்கள், குரூப் 1 அதிகாரிகள் போன்ற வர்களைத் தேர்வுசெய்ய நடத்தப்பட்ட தேர்வுமுறைகளில் மேற்கொள்ளப்பட்ட முறைகேடுகள் காரணமாக எழுந்த குற்றச்சாட்டையொட்டியே சோதனை நிகழ்த்தப்பட்டி ருந்தது. த.அ.ப.தே. தலைவர், உறுப்பினர்கள்மீது ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழும் இந்தியத் தண்டனைச் சட்டப்பிரிவுகளின் கீழும் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. குற்றம் சாட்டப்பட்டோர், உதவிப் பல் மருத்துவர் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பெயர்ப் பட்டியல் அதிகாரபூர்வமாக வெளியிடப்படு வதற்கு முன்பு அதைப் பார்வையிடக் கோரியுள்ளனர்; 2006-2008ஆம் ஆண்டுகளுக்கான மோட்டார் வாகன ஆய்வாளர்களுக்கான தேர்வு முறைகளில் ஊழல் புரிந்துள்ளனர்; இவற்றின் மூலம் விதிகளைமீறி முறையற்ற வழிகளில் பொருளாதாரரீதியான பயன்பெற முயன்றுள்ளனர்.

துணை ஆட்சியர், காவல் துறை உதவிக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளைத் தேர்ந்தெடுக்க நடத்தப்படும் குரூப் 1 தேர்வுகளில் நடைபெற்றுவரும் ஊழல்களைத் தடுக்கும்வகையில் தேர்வாணையச் செயலர் த. உதயச்சந்திரன் துணிச்சலுடன் செயல்பட்டுள்ளார். குற்றம்சாட்டப்பட்டவர்கள் விதிமுறைகளுக்குக் கட்டுப்படாமல், செயலரைச் செயல்படவிடாமல் தடுத்துள்ளனர். தங்கள் பெயர்களின் பின்னே ரயில் பெட்டிகள்போல் பட்டங்களைச் சுமந்துதிரியும் இவர்கள் அனைவரும் பொறுப்பான உயர்பதவிகளை வகித்துப் பின்னரே தேர்வாணையப் பணிகளுக்கென நியமிக்கப்பட்டுள்ளனர் என்பதை நினைக்கும்போது மனத்தில் அச்சமெழுகிறது. 

இந்தச் சோதனையில் கையெழுத்திடப்படாத பணி நியமன உத்தரவு நகல்கள், போட்டித் தேர்வு எழுதியவர்களின் நுழைவுச்சீட்டுகள், பல்வேறு பணிகளுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டோர் பட்டியல், அரசியல்வாதிகளும் முக்கிய ஆளுமைகளும் வழங்கியிருந்த பரிந்துரைக் கடிதங்கள், கிராம நிர்வாக அலுவலர் தேர்வெழுதியவர்களின் பதிவு எண்கள் கொண்ட பட்டியல், மாணவர் களின் சான்றிதழ்கள், மோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வுகளை எழுதியவர்களின் மதிப்பெண் விவரங்கள் அடங்கிய ஆவணங்கள், மையிட்டு நிரப்பப்பட்ட விடைத் தாள்கள், புதிய சொத்துகள் வாங்கியதற்கான சான்றுகள் போன்ற அநேக ஆவணங்களும் ரொக்கப் பணம் லட்சக்கணக்கிலும் கைப்பற்றப்பட்டிருந்தன. ஓய்வுபெற்ற காவல் துறை ஐ. ஜி. துரைராஜின் தம்பியான உறுப்பினர் சண்முகநாதன் வீட்டில் ஏறக்குறைய இருபத்தைந்து லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. அறத்தைச் சுத்தமாகப் புறக்கணித்துவிட்டுப் பணம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டதாக நம் சமூகம் மாறிவிட்டதன் அப்பட்டமான சான்று இது.

தேர்வெழுதும் மாணவ, மாணவிகள்
      
2005இல் தனது பவளவிழாவைக் கொண்டாடிய இந்த ஆணையம் ஊழல்களுக்குப் பேர்போனது. காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வரும்போதெல்லாம் அதை மையமிட்டு அநேக ஊழல் ஊற்றுகள் வெவ்வேறு மட்டங்களில் சுரக்கும். கேள்வித் தாள்களை வழங்குவது, விடைகளைத் தேர்வுக்கு முன்னமே விண்ணப்பதாரர்களுக்கு அறியத் தருவது, நேர்முகத் தேர்வில் அளிக்கப்படும் மதிப்பெண்களைப் பெற்றுத் தருவது, விரும்பிய இடத்திற்கு பணி நியமன உத்தரவை மாற்றித் தருவது என எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கிருந் தெல்லாம் இப்போது லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் சிக்கியுள்ள தலைவரும் உறுப்பினர்களும் பணம்பெற்றுள் ளதாகச் சொல்லப்படுகிறது. விதிமுறை மீறலும் அதற்கு நிர்ணயிக்கப்படும் சட்டபூர்வமற்ற கட்டணமும் நேர்விகிதப் பொருத்தமுடையன. தேர்வாணையத்துக்குத் தொடர்பே இல்லாத இடத்தில் ஆட்கள் சந்தித்துச் சங்கேத வார்த்தைகளோடு சட்டபூர்வமற்ற விதத்தில் ஆவணப் பரிமாற்றங்களை மேற்கொள்வதாகவும் கதைகள் உலவுகின்றன. எப்படியாவது அரசு வேலையைப் பெற்று விட்டால் போதும் எஞ்சிய வாழ்நாள் முழுவதையும் நிம்மதியாகக் கழித்துவிடலாம் என்று நினைத்தும் அதற்கான உழைப்பைச் செலுத்தத் தயாராக இல்லாத நடுத்தரவர்க்க விண்ணப்பதாரர்களை இலக்காகக் கொண்டே இந்த முறைகேட்டாளர்கள் செயல்படுகின்றனர். கற்பனைக்கெட்டாத விதத்தில் பல ரூபங்களில் பணி நியமன உத்தரவு வழங்கும் அதிகாரத்தைப் பயன்படுத்திப் பெருமளவில் இவர்கள் பொருளாதாரப் பயனடைந்துள்ளனராம். தன்னாட்சி அதிகாரம்கொண்ட அமைப்பாக இருப்பதால் தங்களைக் கேள்விகேட்க எவருமில்லை என்ற அதீத நம்பிக்கையின்பொருட்டுத் தைரியமாக முறைகேடுகளில் ஈடுபட்டுப் பெருவாரி யான தொகையைக் கையூட்டாகப் பெற்றுக்கொண்டு ஆனந்த வாழ்வு நடத்திவந்ததாகச் சொல்லப்படும் ஆணைய உறுப்பினர்களுக்கும் தலைவருக்கும் 2011 சட்டப்பேரவைத் தேர்தல் மூலம் நிகழ்ந்த ஆட்சி மாற்றம் நல்ல சகுனமாக இருக்கவில்லை. 

தமிழகத்தில் அறிவியல் முறை ஊழலுக்கு வித்திட்ட வராக அறியப்பட்டிருக்கும் கருணாநிதி முதல்வராக இருந்தபோது இவர்கள் பெரிதாக அலட்டிக்கொள்ளத் தேவையில்லாமல் இருந்தது. முறைகேடுகள் பற்றிய குற்றச்சாட்டுகள் எழுப்பப்படும்போது கண்டிப்புடன் நடந்துகொள்ளாமல் தாயுள்ளத்தோடு நடந்து கனிவை வெளிப்படுத்திப் பிரச்சினையைப் பெரிதுபடுத்தாமல் சுமூகமாகத் தீர்த்துவிடும் சாணக்யர் அவர். தமிழகத்தில் ஊழலை வளர்த்தெடுத்ததில் ஜெயலலிதாவின் பங்கும் குறைத்து மதிப்பிடக் கூடியதல்ல என்பதையும் அவருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு தற்போது பெங்களூர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருவதையும் மறந்திட இயலாது. என்றாலும், அரசுப் பணியாளர் தேர்வாணையம் குறித்த அலட்சியப்படுத்தவியலாத குற்றச்சாட்டுகள் அரசின் தலைமைப் பீடத்தில் அழுத்தமாக வைக்கப்பட்டதாலும் இயல்பாகவே அவரிடம் மண்டிக்கிடக்கும் திமுக எதிர்ப்புணர்வின் காரணத்தாலும் அவர் தலைமை யிலான தமிழக அரசு இவ்விஷ யத்தில் மேம்போக்கான நடை முறையைத் தளர்த்திக்கொண்டு ஆக்கபூர்வமான செயல்பாட்டுக்கு நகர்ந்திருக்கிறது. 

நேர்மையான அதிகாரிகளான த. உதயச்சந்திரனையும் வெ. இறையன்புவையும் முறையே தேர்வாணையத்தின் செயலாளராகவும் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறைச் செயலாளராகவும் நியமித்ததைத் தேர்வாணைய முறைகேடுகளுக்கெதிரான அரசின் முதல் நடவடிக்கையெனக் குறிப்பிடலாம். 2011, ஆகஸ்ட் ஒன்பதாம் நாள் அன்று தமிழக அரசு த. அ. ப. தே. தலைவர், உறுப்பினர்களை ஊழல் தடுப்புச் சட்டம்-1988இன் கீழ் ஊழல் தடுப்பு வரம்புக்குள் கொண்டுவர அரசாணை பிறப்பித்த செயல் அடுத்த நடவடிக்கை. த.அ.ப.தே. தலைவர், உறுப்பினர்கள்மீது புகாரளிக்கப்பட்டால் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவர்களை விசாரிப்பதற்கான அதிகாரத்தை இந்த அரசாணை பெற்றுத்தந்தது. தேர்வாணையத்தின் மீதான அரசின் பிடி தொடர்ந்து இறுகிக்கொண்டிருந்ததை இந்த நடவடிக்கை உறுதிப்படுத்தியது.
  
2011 ஜூலையில் நடத்தப்பட்ட குரூப் 2 தேர்வின் விடைத்தாள்கள் தேர்வுக்கு முன்னதாகவே வெளியாகி விட்டதாக எழுந்த குற்றச்சாட்டு, கிராம நிர்வாக அலுவலர் தேர்வில் அறுநூறு பேர் அனைத்துக் கேள்விகளுக்கும் சரியான விடையளித்திருந்ததாகத் தினத் தந்தியில் வெளியான செய்தி போன்றவற்றின் விளைவாகத் தேர்வு எழுதிய மாணவர்களில் ஒரு குழுவினர் தலைமைச் செயலகத்திற்குச் சென்று தலைமைச் செயலரைச் சந்தித்து முறையிட்டுள்ளனர். மோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வில் நடந்தேறிய அதிகளவிலான முறைகேடுகள் மூலமாகத் தகுதியற்ற பலர் தேர்ச்சி பெற்றுள்ளது குறித்து விசாரிக்க வேண்டுமெனவும் தேர்வு எழுதிய சிலர் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகாரளித்துள்ளனர். தேர்வாணையம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளனைத்தையும் சேகரித்த லஞ்ச ஒழிப்புத் துறை அவற்றை ஒழுங்குபடுத்தித் தலைவர், உறுப்பினர்கள் 13 பேர்மீது வழக்குப் பதிவுசெய்ய அனுமதிக்கும்படி அரசுக்குக் கடிதம் அனுப்பியுள்ளது. இதைப் பரிசீலித்த தலைமைச் செயலர் தேவேந்திரநாத் சாரங்கி உடனே அனுமதி வழங்கி முறைப்படியான துறை நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டுள்ளார். ஆகவே திடீரெனச் சோதனை நடத்தப்பட்டிருந்தாலும் அதற்கான செயல்வடிவம் மிகக் கவனமாகத் திட்டமிடப்பட்டுப் பல கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தச் சோதனையில் தேர்வாணையத்தினர் அணிந்திருந்த முகமூடிகள் ஒவ்வொன்றாகக் கழற்றியெறியப்பட்டன.
  
அரசியல்வாதிகள் தலையீடு இருக்கும்பட்சத்தில் பாரபட்சமற்ற நியாயமான அமைப்பாகச் செயல்படுவதில் இடையூறுகள் ஏற்பட்டுவிடக் கூடும் என்ற அதிஜாக்கிரதை உணர்வு காரணமாகவே அரசுப் பணியாளர் தேர்வாணையம், தேர்தல் ஆணையம் போன்ற தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது. தேர்வாணையத் தலைவரும் உறுப்பினர்களும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 316(1) பிரிவின்படி தமிழக ஆளுநரால் நியமிக்கப்படுகிறார்கள். அவர்கள் ஆறு ஆண்டுகளோ அறுபத்தியிரண்டு வயதுவரையோ பணியாற்றலாம். இதில் எது முந்துகிறதோ அது வரை அவர்கள் பணி நீடித்திருக்கும். தற்போதைய தலைவரும் உறுப்பினர்களும் கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவின் பதவிக்காலத்தின் கடைசியில் 2011, பிப்ரவரி 21 அன்று வெளியிடப்பட்ட அரசாணை [G.O (Ms)] எண் 29  மூலம் தமிழகத் தலைமைச் செயலர் எஸ். மாலதி பிறப்பித்த உத்தரவின்படி எஸ். பன்னீர்செல்வம், வி. ரத்தினசபாபதி, பி. பெருமாள் சாமி, டி. குப்புசாமி, ஜி. செல்வமணி ஆகியோர் உறுப்பினர் பதவிபெற்றுள்ளனர்.  ஆர். செல்லமுத்து மு. க. ஸ்டாலினின் சிபாரிசால் தலைவராக்கப்பட்டார் என்கிறார்கள். கிராமப்புறப் பின்னணியில் இருந்து வந்தவர் என்பதால் கிராமப்புற மாணவர்களின் மனநிலையை நன்கு உணர்ந்துகொள்ளக் கூடியவர் என்ற நம்பிக்கையை விதைத்த தேர்வாணையத் தலைவர் இன்று தேர்வாணைய ஊழல்களின் பிதா மகனாகக் காட்சியளிப்பது அவலமே.  

தேர்வாணையத் தலைவர் செல்லமுத்து வீட்டில் சோதனை

தேர்வாணைய உறுப்பினரான வழக்கறிஞர் கே. எம். ரவி 1993இல் பதிவுத் துறை அதிகாரியாகத் திருப்போரூரில் பணிபுரிந்தபோது பத்தாயிரம் ரூபாய் கையூட்டுப் பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுக் கைதாகியுள்ளார். பின்னர் இவர்மீது சொத்துக் குவிப்பு வழக்கும் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த வழக்குகளிலிருந்து நீதிமன்றத்தில் இவர் விடுவிக்கப்பட்டுவிட்டார். அரசு வேலையை உதறிவிட்டே இவர் தேர்வாணைய உறுப்பினராகியுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு யோசிக்கும்போது ஒவ்வொரு உறுப்பினர்களின் தேர்வுகளுக்குப் பின்னணியிலும் என்னென்ன மர்மங்கள் ஒளிந்திருக்குமோ தெரியவில்லை. மராட்டிய மாநிலத் தேர்வாணைய உறுப்பினருக்கெதிரான ஊழல் வழக் கொன்றில், ஜூலை 2007இல் உச்ச நீதிமன்ற நீதிபதி பி. கே. பாலசுப்ரமணியம் வழங்கிய தீர்ப்பில் மாநில அரசுகள் தேர்வாணையத் தலைவரையும் உறுப்பினர் களையும் தேர்வுசெய்யும்போது கவனமாக இருக்க வேண்டுமென்றும் அப்பழுக்கற்றவர்களைத் தேர்வுசெய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்; தேர்வாணையத் தலைவரும் உறுப்பினர்களும் சீஸரின் மனைவி போல் இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். 2008இல் நடைபெற்ற ஒரிசா அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் டாக்டர் ஹெச். பி. மிர்தாமீதான வழக்கின் தீர்ப்பில் ஏற்கனவே ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப் பட்டிருப்பவர்களை மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையங்களில் உறுப்பினராக நியமிக்கக் கூடாதென உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. நேர்மையான வழியில் தேர்வாணையத்திற்குத் தலைவரும் உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படிப் பெரும்பாலும் அமையவில்லை என்பதுதான் சோகம். 

தமிழகத்தில் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்கள் நடைமுறைப் படுத்தப்பட்டிருந்தால் தேர்வாணையம் இப்படியொரு தலைக்குனிவைச் சந்தித்திருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்காது. தமிழக வீட்டுவசதித் துறைச் செயலராகச் செல்லமுத்து பதவி வகித்து வந்த காலத்தில் வீட்டு வசதி வாரிய வீட்டுமனை ஒதுக்கீட்டில் ஏதேனும் முறைகேடு நடந்துள்ளதா என்னும் கோணத்திலும் விசாரணை நடைபெற்றுவருவதை இங்கே நினைவுகூர வேண்டியுள்ளது. சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுக்கொண்டிருக்கும் விசாரணை நிறைவுபெறுவதற்குக் குறைந்தது 15 நாட்களாவது ஆகுமென முதலில் கூறப்பட்டது. லஞ்ச ஒழிப்புத் துறை தங்கள் விசாரணை குறித்த இடைக்கால அறிக்கையைத் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது. எனினும் முப்பது நாட்களைத் தாண்டிய பின்னரும் விசாரணை இன்னும் இறுதிக் கட்டத்தைத் தொடவில்லை என்பதை நவம்பர் 18 அன்று நடத்தப்பட்ட சோதனை பறைசாற்றியது. 

கிராம நிர்வாக அலுவலர் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டோர் பெற்றிருந்த மதிப்பெண்கள் இணையத்தில் வெளியிடப்படுவதாக நாளிதழ்களில் முன்னர் குறிப்பிடப்பட்ட நவம்பர் 18 அன்று தேர்வாணைய அதிகாரிகள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். தேர்வாணைய இணைச் செயலர் மைக்கேல் ஜெரால்டு, சார்புச் செயலர்கள், பிரிவு அதிகாரி, உதவிப் பிரிவு அதிகாரிகள் ஆகியோர் இந்தச் சோதனையில் அடங்குவர். முக்கியமான ஆவணங்கள் சில இதில் சிக்கியுள்ளன. தேர்வாணையத் தேர்வுகளில் பங்கேற்ற விண்ணப்பதாரர்களது விவரம், பெற்ற மதிப்பெண்கள் ஆகியவை குறித்தும் சோதனையிட்ட அதிகாரிகள் தீவிரமாக ஆராய்ந்துள்ளனர்.  முதல்வரும் தலைமைச் செயலரும் தேர்வாணைய முறைகேடுகள் குறித்த விஷயத்தில் தீவிர அக்கறை காட்டிவருவதாகச் சொல்கிறார்கள். 

செல்லமுத்து தலைவராகவும் ஏனைய 13 பேர் உறுப்பினர்களாகவும் செயல்பட்டிருக்கும் காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட நியமனங்கள் அனைத்தையும் ரத்துசெய்யும்படி அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கொன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எம். ஒய். இக்பால், நீதிபதி டி. எஸ். சிவஞானம் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்வாணையத்தை லஞ்ச ஒழிப்புத் துறையின் கண் காணிப்புக்குக் கீழ்க் கொண்டுவந்திருந்த தமிழக அரசாணையை எதிர்த்துச் செல்லமுத்துவும் ஏனைய உறுப்பினர்களும் வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக நீதிபதிகளிடம் தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்வினை புரிந்த நீதிபதிகள், தேர்வாணையம் தொடர்பான அனைத்து வழக்குகளும் தங்களின் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட வேண்டும் என்றும் தலைவர், உறுப்பினர்கள் 13 பேர் மீதான லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்க விரும்புகிறது என்றும் தெரிவித்திருந்தனர். 

தேர்வாணைய ஊழல் குறித்த விசாரணைகளின் இறுதியில் இவர்களது குற்றச்செயல்கள் சந்தேகத்திற்கிட மின்றி நிரூபிக்கப்பட்டால், முறைகேட்டில் ஈடுபட்ட அனைவரும் பதவி இழக்க நேரிடலாம். தேர்வாணையத் தலைவரையும் உறுப்பினர்களையும் பணிநீக்கம் செய்வதற்குரிய நடைமுறைகள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 317இல் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதில் குறிப்பிட்டுள்ளபடி, பணியாளர் தேர்வாணையத்தில் பணியாற்றும் அதே சமயம் வேறு எங்கேயும் ஊதியத்திற்காகப் பணியாற்றினாலோ பணியைச் செய்ய முடியாத அளவுக்கு மனநிலை பாதிக்கப்பட்டிருந்தாலோ முறைகேடுகள் தொடர்பாகக் குற்றம்சாட்டப்பட்டு அது நிரூபிக்கப்பட்டாலோ தலைவரையும் உறுப்பினர்களையும் குடியரசுத் தலைவர் பணிநீக்கம் செய்யலாம். முறைகேட்டில் ஈடுபட்டோரைப் பதவிநீக்கம் செய்யுமாறு மாநில அரசு ஆளுநரிடம் பரிந்துரைக்க, அவர் இந்தப் பிரச்சினையை ஜனாதிபதியிடம் கொண்டுசெல்வார். கவர்னரின் பரிந்துரையின் பேரில் ஜனாதிபதி இது குறித்து விசாரணை நடத்துமாறு உச்ச நீதிமன்றத்தைக் கோருவார். உச்ச நீதிமன்றம் அளிக்கும் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் ஜனாதிபதி அனைவரையும் பதவியை விட்டு நீக்கலாம் என்பதாகச் சட்ட அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

2007 ஜனவரியில் ஹரியானா அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மேஹர் சிங் சைனி, உறுப்பினர்கள் சந்தோஷ் சிங், ராம்குமார் காஷ்யப் ஆகியோரைப் பதவிநீக்கம் செய்து ஹரியானா ஆளுநர் உத்தரவிட்டிருந்ததற்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்திருந்தது. இவர்கள்மீது சாட்டப்பட்டிருந்த ஒன்பது குற்றச்சாட்டுகளில் ஆறு சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டிருந்தன. ஆகவே இவர்களைப் பதவிநீக்கியதற்குச் சட்டபூர்வமான காரணங்கள் உள்ளதாகத் தெரிவித்திருந்தது உச்ச நீதிமன்றம். அதே போல் கர்நாடக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முன்னாள் தலைவர் ஹெச். என். கிருஷ்ணா 1998, 1999, 2004 ஆகிய ஆண்டுகளுக்கான அதிகாரிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்வில் விதிமுறைகளை மீறி முறைகேடான நடவடிக்கைகளை மேற்கொண்டதால் பதவி நீக்கப்பட்டுக் குற்றப் புலனாய்வுத் துறையினரால் 2011, அக்டோபர் ஏழாம் நாளன்று கைதுசெய்யப்பட்டுள்ளார். இதைப் போன்ற முன்னுதாரணங்கள் இருந்தபோதும் இந்த விசாரணையில் இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் இருக்குமா என்பதை இப்போது ஊகித்தறிவது கடினம்.

வழக்குகளின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் இந்தச் சூழலில் அவற்றின் போக்கு குறித்துப் பெருமளவில் ஊடகங்களில் விவாதிக்கப்படுகின்றன. ஆனால் குரூப் 2, கிராம நிர்வாக அலுவலர் ஆகிய தேர்வுகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுத் தேர்ச்சிபெற்றவர்களுக்கான நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு போன்ற நடைமுறைகள் நிறைவுபெற்றபோதும் அவர்களுக்குப் பணி நியமன உத்தரவுகள் வழங்கப்படா தது குறித்த விவாதங்கள் ஊடகங்களில் இடம்பெறவில்லை. அப்படியே இடம்பெற்றாலும் அவை வெறும் ஊகத்தின் அடிப்படையிலேயே அமைகின்றன. பிற மாநிலங்களில் தேர்வாணைய முறைகேட்டுக்கெதிராக நடைபெற்ற வழக்குகளில் வழங்கப்பட்ட தண்டனை குறித்த தகவல்களை இணையதளங்களில் காண முடிகிறது. ஆனால் முறைகேட்டாளர்கள் தலைமையின் கீழ்த் தேர்வாணையம் நடத்திய தேர்வுகள் பற்றி என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதென்பது சரிவரத் தெரியவில்லை. 

முறையாகத் தேர்ச்சிபெற்றும் பணி கிடைக்காமல் மன உளைச்சலோடு என்ன நடக்குமோ என்ற பதை பதைப்போடு தேர்வாணைய உத்தரவுகளுக்குக் காத்துக்கிடப்பவர்களது நிலைமை துயரம்மிக்கது. இவர்கள் தேர்வாணைய அலுவலகத்தில் தங்கள் தரப்புக்கு நியாயம் கேட்டதோடு முதல்வரைத் தனிப் பட்ட முறையில் சந்தித்துத் தங்களுக்குப் பதவி வழங்கு மாறு கோரியுள்ளனர். சட்டவிதிகளை மீறிப் பலவித முறைகேடான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதால் செல்லமுத்து காலகட்டத்தின் அனைத்துப் பணி நியமனங்களையும் ரத்துசெய்துவிட வேண்டுமென்ற கோரிக்கை குறித்து நீதிமன்றம் என்ன நடவடிக்கை எடுக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஒட்டுமொத்தமாகத் தேர்வுகளை ரத்துசெய்ய வேண்டும் என்று எழும் குரல் மேலோட்டமான பரிசீலனையின் அடிப்படையில் ஒலிக்கிறது. இப்பிரச்சினை பற்றித் தீவிரமாக ஆலோசித்ததற்குப் பின்னர் அது எழுப்பப்படவில்லை. தேர்வுகளை ரத்துசெய்ய நேரிட்டால் முறையாகத் தேர்வெழுதி வெற்றி பெற்றவர்களுக்கு நியாயம் மறுக்கப்பட்டதாகிவிடும். குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டாலும் நிரபராதிகள் தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது என்னும் சட்ட வழிமுறை நமது நீதியமைப்பில் பின்பற்றப்படுகிறது என்பதை நினைவில்கொள்க. தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக அவர்கள் நீதிமன்றத்தை அணுகும் சாத்தியமுமுள்ளது. இத்தகைய பல குழப்ப முடிச்சுகளும் அவிழ்க்கப்படும் காலம் வெகு அருகில் என நம்புவதைத் தவிர வேறு வழியில்லை.  

ஊழலற்ற, நேர்மையான, பாரபட்சமற்ற அமைப்பாகத் தேர்வாணையம் செயல்பட்டால் மட்டுமே அதை நம்பிப் போட்டித்தேர்வுகளுக்கெனத் தயாராகும் லட்சக் கணக்கானவர்களின் உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிட்டும். பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு இறுதித் தேர்வு முடிவுகள் இரண்டு மாதங்களுக்குள் வெளியிடப்பட்டு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்களும் வழங்கப்பட்டுவிடுகின்றன எனும்போது அரசுப் பணியாளர் தேர்வாணையம் தேர்வு முடிவுகளை அறிவிக்க அதிக நாட்கள் எடுத்துக்கொள்வதையும் மதிப்பெண்கள் குறித்த வெளிப்படைத் தன்மையைப் பேணாததையும் சந்தேகத்திற்குரிய நடவடிக்கையாகவே பார்க்க வேண்டியதுள்ளது. எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான நேர்முகத்தேர்வில் மதிப்பெண்கள் அளிக்கப்படுவது முறைகேட்டை மறைமுகமாக ஊக்கு விக்கவே உதவுகிறது. பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவ ரின் மனநிலை அதற்குகந்ததாக உள்ளதா என்பதை அறிவதற்காக வேண்டுமானால் நேர்முகத் தேர்வு நடத்தப்படலாம். அதற்கு மதிப்பெண்கள் வழங்குவது அறவே ஒழிக்கப்பட வேண்டும். இந்திய ரயில்வே தேர்வுகளில் முறைகேடுகளைத் தடுக்கும் முகமாக இந்த நேர்முகத் தேர்வுகள் முற்றிலுமாகத் தவிர்க்கப்பட்டுவிட்டன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. 

தங்கள் மதிப்பெண்கள் குறித்த சந்தேகங்கள் எழும்போது தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பதாரர்கள் நிரப்பப்பட்ட விடைத்தாளைக் கோரினால் அதன் விவரம் அவர்களுக்கு அறிவிக்கப்பட வேண்டும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை அணுகும் விண்ணப்பதாரர் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு ஆளாகாமல் தடுக்கப்பட வேண்டியதும் அவசியம். இத்தகைய முறையான செயல்பாடுகள் பாரபட்சமற்றுப் பின்பற்றப்பட்டால் மட்டுமே தேர்வாணையத்தின் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படும். அப்படியான நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதில் தேர்வாணையத்தினர் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இல்லையெனில் சமூகப் பொறுப்பு மிக்க உதயச்சந்திரன் போன்ற அதிகாரிகளின் நேர்மையான முயற்சிகள் வீணாய்ப்போய்விடும்.

ஒருவேளை இந்தத் தேர்வாணையம் கூண்டோடு மாற்றப்பட்டால் அதன்பிறகு நியமிக்கப்படும் தலைவர், உறுப்பினர்கள் தற்போதைய ஆளும் கட்சிசார்ந்த வட்டாரத்திற்கு நெருக்கமானவர்களால் பரிந்துரைக்கப்பட்டவர்களாக இருக்கக்கூடும். அவர்கள் இன்று புதிதாய்ப் பிறந்தவர்களாக இருக்கப்போவதில்லை. தொடர்ச்சியான தவறுகளும் ஊழல்களும் தொடர்வது மக்களுக்கோ ஜனநாயகத்திற்கோ ஆரோக்கியமானதல்ல. நேர்மையாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கும் தேர்வாணையச் செயலருக்கும் புதியதாக உருவாகும் தேர்வாணையத் தலைவர், உறுப்பினர்களுக்கும் இதைப் போன்ற முரண்பாடுகள் எழுந்தால் இப்போது தமிழக அரசு வழங்கிவருவது போன்ற ஒத்துழைப்பைத் தொடர்ந்து அவருக்கு வழங்கித் தனது ஜனநாயகச் செயல்பாட்டை நிரூபிக்க வேண்டும். அதற்கு மாறாகக் கட்சி விசுவாசத்தோடு அரசு நடந்துகொள்ளுமேயானால் நேர்மையான செயலர் மீண்டும் வேறு ஒரு துறைக்கு மாற்றப்படுவார். வழக்கம்போல் தேர்வாணையம் ஊழல் பாதையில் பயணத்தைத் தொடங்கிவிடும்.  

டிசம்பர் 2011 காலச்சுவடு இதழில் வெளியாகியுள்ள கட்டுரை இது       

செவ்வாய், மார்ச் 01, 2011

மௌனமாய் உரையாடும் சிலைகள்

தந்தை பெரியார்

சென்னை அண்ணாசாலையில் சிம்சன் எதிரில் அமைந்துள்ளது தந்தை பெரியாரின் சிலை. இந்தச் சிலை பெரியாரின் 96ஆவது பிறந்த தினமான செப்டம்பர் 17, 1974 அன்று நாவலர் நெடுஞ்செழியன் தலைமையில் க.அன்பழகன் முன்னிலையில் நடைபெற்றவிழாவில் அன்றைய முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி திறந்துவைத்தது. இது தி.மு.க.வின் சார்பில் வைக்கப்பட்ட சிலையாகும். உட்கார்ந்த நிலையில் இச்சிலை அமைந்திருந்தாலும் பெரியாரின் கம்பீரம் அப்படியேதான் இருக்கிறது.

கலைஞருக்கு சிலை வைக்க வேண்டும் என்று பெரியார் வலியுறுத்துகிறார். ஆனால் கலைஞரோ பெரியாரின் சிலையை அமைத்த பிறகுதான் தனக்கு சிலை என்று அறிவித்துவிடுகிறார். அதனால் பெரியார் “தனக்குச் சென்னையில் சிலைவைக்க கலைஞரை வற்புறுத்துங்கள்” எனக் கூறுகிறார். தனது சிலை அமைக்கப்பட்டால் தானே கலைஞர் சிலையைத் திறக்க முடியும் என்பதால் அவ்வாறு வற்புறுத்தினார் பெரியார். அவரது நோக்கம் தனக்கோ கலைஞருக்கோ சிலைவைக்க வேண்டும் என்பது மட்டுமல்ல. பகுத்தறிவாளர்கள் அனைவருக்கும் சிலை வைக்க வேண்டும் என்பதுதான். இதனால் அமைக்கப்பட்ட சிலை தான் இந்தப் பெரியார் சிலை.


மவுண்ட் ரோடு மகாவிஷ்ணு என்று பார்ப்பனரல்லாதாரால் குறிப்பிடப்படும் ‘இந்து’ நாளிதழ் அலுவலகத்திற்கு அருகில் அமைந்திருப்பதுதான் இதற்கான சிறப்பு. லட்சக்கணக்கான மக்கள் இன்று இச்சிலையை பார்வையிட்டபடிதான் போகிறார்கள், வருகிறார்கள். இப்பொழுது இன்னுமொரு கூடுதல் சிறப்பு, புதிதாக அமைக்கப்பட்டுள்ள சட்டமன்றம் பெரியார் சிலை முன்னிலையில் இருப்பது.

இச்சிலை திறப்பு விழாவிற்கு கல்வி அமைச்சர் நாவலர் தலைமை, தி.மு.க. தலைமை நிலையச் செயலாளர் வீராசாமி எம்.எல்.ஏ. வரவேற்புரை, தொடர்ந்து தி.மு.க. அமைப்புச் செயலாளர் நீலநாராயணன், மாவட்ட செயலாளர் சீதாபதி ஆகியோர் வழிமொழிந்து பேசினர். நாவலரின் தலைமை உரைக்குப்பின் லட்சசோபலட்சம் மக்களின் உணர்ச்சி வெள்ளத்திடையே தந்தை பெரியாரின் சிலையை முதல்வர் கலைஞர் திறந்துவைத்தார். பெரியார் இயற்கை அடைந்த பிறகு நடந்த சிலை திறப்பு என்பதால் மக்களின் உணர்ச்சி கட்டுக்கடங்காததாக இருந்தது.

பிறகு, அமைச்சர் என்.வி. நடராசன், மேலவைத்தலைவர் சி.பி. சிற்றரசு, திராவிடர் கழகத் தலைவர் அன்னை மணியம்மையார், திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி. வீரமணி, அமைச்சர் அன்பழகன் ஆகியோரின் உரைக்குப்பின் கலைஞர் உரையாற்றினார். இச்சிலையை உருவாக்கிய சிற்பி கோவிந்தசாமியின் மகன் பழனிக்கு கலைஞர் கேடயம் கொடுத்துச் சிறப்பித்தார். இந்த சிலை திறக்கப்பட்ட ஏப்ரல் 17ஆம் தேதி காலை பெரியார் திடலில் நடைபெற்ற நூலகத் திறப்பு விழா நிகழ்ச்சியில் “பெரியாரின் இல்லத்தை நினைவுச் சின்னமாக அனுமதிக்க வேண்டும்” என்று முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்தார். இதை ஏற்றுக்கொண்டு, சிலை திறப்பு விழாவில் ஈரோட்டில் உள்ள பெரியாரின் இல்லத்தை நினைவுச் சின்னமாக்க மணியம்மையார் ஒப்புக்கொண்டார். பெரியாரின் இல்லத்தை நினைவுச் சின்னமாக்குவதற்கான ஒப்புதல் தெரிவிக்கப்பட்ட விழா என்பதால், இந்தச் சிலை திறப்பு விழாவுக்கென ஒரு வரலாறு உண்டு.

கர்மவீரர் காமராஜர்

சென்னை அண்ணாசிலையில் ஜிம்கானா க்ளப் முன்னால் அமைக்கப்பட்டுள்ளது காமராஜரின் முழு உருவச் சிலை. காமராஜர் உயிரோடிருந்தபோது அக்டோபர் 9, 1961 அன்று இச்சிலையைத் திறந்துவைத்தவர் பாரதப் பிரதமர் ஜவஹர் லால் நேரு. இச்சிலையைப் பெருந்தலைவர் காமராஜர் நற்பணி ட்ரஸ்ட் பராமரித்து வருகிறது. குமாரசாமி காமராஜ் தமிழ் நாட்டின் முதலமைச்சர்களுள் ஒருவர். காமராஜர் விருதுநகர் மாவட்டத்திலுள்ள விருதுநகரில் 1903 ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி பிறந்தார். 1954 ஆம் ஆண்டு அப்போதைய சென்னை மாகாணத்தின் முதலமைச்சர் ஆனார். இவர் 9 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராகப் பதவி வகித்தார். தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். காமராஜ் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்ற இவர், தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, பெருந்தலைவர் என்றெல்லாம் புகழப்படுகிறார். இவர் இறந்த பிறகு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

மூன்று முறை (1954-57, 1957-62, 1962-63) முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த காமராஜர் பதவியைவிட தேசப்பணியும் கட்சிப்பணியுமே முக்கியம் என்பதை மக்களுக்கும் குறிப்பாக கட்சித் தொண்டர்களுக்கும் காட்ட விரும்பி கொண்டு வந்த திட்டம் தான் காமராஜர் திட்டம். அதன்படி கட்சியின் மூத்த தலைவர்கள் பதவிகளை இளையவர்களிடம் ஒப்படைத்துவிட்டு கட்சிப்பணியாற்றச் செல்ல வேண்டும் என்று இவர் நேருவிடம் சொன்னதை அப்படியே ஏற்றுக்கொண்டார் நேரு. இந்தத் திட்டத்தை முன்மொழிந்த கையோடு தன் முதலமைச்சர் பதவியை அக்டோபர் 2, 1963 அன்று ராஜினாமா செய்தார். அக்டோபர் 9ஆம் நாள் அகில இந்தியக் காங்கிரஸின் தலைவர் ஆனார்.


மிகச் சிறந்த பேச்சாளரும் சிறந்த நாடாளுமன்றவாதியுமான சத்தியமூர்த்தியைக் காமராஜர் தன் அரசியல் குருவாக ஏற்றுக்கொண்டிருந்தார். 1936இல் சத்தியமூர்த்தி பிரதேச காங்கிரசின் தலைவரானபோது காமராஜரைச் செயலாளராக்கினார். இந்தியா சுதந்திரம் அடைந்த செய்தி கேட்டு காமராஜர் முதலில் சத்தியமூர்த்தியின் வீட்டுக்குச் சென்று அங்கு தான் தேசியக் கொடியை ஏற்றினார். அதேபோல் முதலமைச்சர் ஆனபோதும் முதலில் சத்தியமூர்த்தியின் வீட்டுக்குச் சென்று அவர் படத்துக்கு மாலை அணிவித்து விட்டுத் தான் தன் பணியைத் தொடங்கினார். பெருந்தலைவர் காமராஜர் அக்டோபர் 2, 1973 அன்று காலமானார்.

தோழர் ப. ஜீவானந்தம்

பொதுவுடைமை வீரர் ப. ஜீவானந்தத்தின் சிலை சென்னை தண்டையார் பேட்டை மணிக்கூண்டுக்கு அருகே ஜீவா பூங்காவில் நிறுவப்பட்டுள்ளது. மார்பளவு சிலை இது. இந்தப் பூங்கா சமீபத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சிலை 30.11.1966 அன்று காமராஜர் தலைமையில் பி.ஸி.ஜோஸியால் திறந்துவைக்கப்பட்டுள்ளது. வேறெங்கோயிருந்து இங்கே கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும் இது. ப. ஜீவானந்தம் ஆகஸ்ட் 21, 1906 இல் கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியில் பிறந்தவர். ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு தியாகங்கள் பல புரிந்த பொதுவுடமைத் தலைவர் இவர். ஏறத்தாழ பத்து ஆண்டுகளைச் சிறையில் கழித்தவர். காந்தியவாதியாக, சுயமரியாதை இயக்க வீரராக, தமிழ்ப் பற்றாளராக, அனைத்திற்கும் மேலாக ஒரு பொதுவுடைமை இயக்கத் தலைவராகப் படிப்படியாக உயர்ந்தவர். தம்மை நாத்திகராக அறிவித்துக் கொண்டவர். கலை இலக்கிய உணர்வுள்ள ஜீவா அவர்கள் பெரும் இலக்கியவாதியாகவும் பத்திரிக்கையாளராகவும் திகழ்ந்தவர். குடியரசு, பகுத்தறிவு, புரட்சி, ஜனசக்தி, தாமரை ஆகிய பத்திரிகைகளில் கவிதைகளும் ஆய்வுக்கட்டுரைகளும் எழுதியுள்ளார். பாரதியின் பாதையைப் பின்பற்றி பாமரர்களை எழுச்சி பெறச் செய்த பாடல்கள் பலவற்றைப் பாடியவர். பொதுவுடைமை கட்சிக் கூட்டங்களில் முதல் முறையாகத் தமிழ் இலக்கியப் பெருமைகளை பேசி, தமிழ்க் கலாச்சாரத்தோடு, கட்சியை வளர்த்தவர். வைக்கம் சத்தியாக்கிரகம், சுசீந்திரம் தீண்டாமை இயக்கம், சுயமரியாதை இயக்கம் போன்றவைகளில் தனிப் பங்கேற்றவர். 1952ஆம் ஆண்டு வண்ணாரப்பேட்டை தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஜீவா 1963, ஜனவரி 13 அன்று சென்னையில் காலமானார்.

நான் ஒரு நாத்திகன் என்னும் நூலில் ஜீவா பின்வருமாறு கூறியுள்ளார்:
“அழகும் நிறைவும் கொண்ட ஒரு வாழ்வை சுவர்க்கத்திலன்று, இந்த மாநிலத்திலேயே நிர்மாணிப்பதற்காவே நான் பணிபுரிகிறேன். எல்லாவிதமான அடக்கல், ஒடுக்கல், அடிமைத்தனங்களையும், சுரண்டல் சூறையாட்டங்களையும் இந்தப் பூமண்டலத்திலிருந்து துடைத்து எறிந்துவிட்டு, மனிதனுடைய சிறந்த இன்பத்திற்கும், வளர்ச்சிக்கும் இன்றியமையாத பௌதிகச் சூழ்நிலைகளையும், சாதனங்களையும் படைக்கவே நான் போராடுகிறேன். மனிதத் தன்மையின் மாண்புகளைக் காலடியில் தள்ளி மிதித்துத் துவைக்கும் எல்லா பிற்போக்குத் தீமைகளுக்கும் எதிரிடையான இந்த அறப்போரில் எனது பொருள்முதல்வாதமும், எனது நாத்திகவாதமும் மாபெரும் சக்தியையும், உணர்ச்சிப் பெருக்கையும் ஊட்டுகின்றன. நான் ஒரு நாத்திகன், காரணம், நான் மனிதனை நேசிக்கிறேன்”

அறிஞர் அண்ணாதுரை

சென்னை அண்ணாசாலையில் ஓமந்தூரார் தோட்டம் (தற்போதைய தலைமைச் செயலகம்) முன்னர் வலதுகையை உயர்த்தி வழிகாட்டியபடி நிற்கும் பேரறிஞர் அண்ணாவின் முழு உருவச் சிலை. 1968இல் சென்னையில் உலகத் தமிழர் மாநாடு நடைபெற்றது. அப்போது கடற்கரைச் சாலையில் அறிஞர் பெருமக்கள் பத்து பேர்களின் சிலை நிறுவப்பட்டது. “அப்படி பத்து சிலை வைத்ததனால் அந்த அண்ணனின் புகழைப் பார் போற்ற சென்னையிலே சிலை ஒன்று வைத்தபோது ஆட்காட்டி விரல் மட்டும் காட்டி நின்றார் எம் அண்ணா. ஆணையிடுகிறார் எம் அண்ணா என்றிருந்தோம் அய்யகோ இன்னும் ஓராண்டே நான் உயிர் வாழப்போகிறேனென்று ஓர் விரல் காட்டியது இன்றன்றோ புரிகிறது” என அண்ணாவுக்கான இரங்கல் கவிதாஞ்சலியில் கலைஞர் மு கருணாநிதி குறிப்பிடுவது இச்சிலையைத் தான். இச்சிலை நிறுவப்படுவதில் அண்ணாவுக்கு விருப்பமில்லை. ஆனால் எம்ஜிஆரும் கருணாநிதியும் சேர்ந்து எடுத்த பெரு முயற்சியின் காரணமாகவே இச்சிலை நிறுவப்பட்டுள்ளது. இச்சிலையை எம்ஜிஆர் நன்கொடையாகக் கொடுத்துள்ளார். 1968 ஜனவரி முதல் நாளன்று டாக்டர் சர் ஏ ராமசாமி முதலியார் இச்சிலையைத் திறந்துவைத்தார். அண்ணா உயிரோடு இருக்கையில் இச்சிலை திறந்துவைக்கப்பட்டது. ஆனால் சிலை திறந்த அடுத்த ஆண்டே பேரறிஞர் அண்ணா மறைந்துவிட்டார்.

லேட்டஸ்ட்

அமலா எனும் பொன்மான்

தொடர்பவர்