உலகப் பொருளாதாரம் இந்தியாவுக்குள் காலைவைக்கத் தொடங்கிய வேளை அது. 1991 நவம்பர் 5 அன்று தான் ரஜினிகாந்த் நடித்த ‘தளபதி’ திரைப்படம் வெளியானது. ‘தளபதி’ படத்தை வைத்து பலவகையான வியாபாரமும் முன்னெடுக்கப்பட்டது. தளபதி காலண்டர், தளபதி டி ஷர்ட், தளபதி தொப்பி எனப் பல பொருட்கள் வியாபாரத்துக்கு வரலாயின. தென்காசியில் பரதன், வாஹினி இரண்டு திரையரங்கிலும் ‘தளபதி’ திரைப்படம் வெளியானது. பரதன் இப்போது இடிக்கப்பட்டுவிட்டது. வாஹினி திரையரங்கு இருந்த இடத்தில் ஏதோ ஷோபா கம் பெட் தயாரிப்பு நிறுவனம் ஒன்று இயங்கிவருகிறது. இந்த ஆண்டு கமல் நடித்து வெளியான ‘குணா’ தாய்பாலா திரையரங்கில் திரையிடப்பட்டிருந்தது. தாய் பாலா இப்போதைக்கு இயங்கிவருகிறது. இன்னும் எவ்வளவு காலம் இது நீடிக்குமோ?
தீபாவளியன்று இருபது ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கி ஓபனிங் ஷோ பார்த்தோம். அதுவரை தென்காசியில் எந்தப் படத்துக்கும் அப்படி அதிகத் தொகை கொடுத்து டிக்கெட் வாங்கியதில்லை. எவ்வளவு கூட்டம் இருந்தாலும் எந்தப் பண்டிகை என்றாலும் தியேட்டர்களில் டிக்கெட்டின் அசல் விலைக்கே டிக்கெட் கிடைத்துவந்தது. கூட்டம் அதிகமாக இருந்தாலும் சைக்கிளை எடுத்துக்கொண்டு சென்றால் போதும் டிக்கெட் கிடைத்துவிடும். சைக்கிள் டோக்கனுக்கான கட்டணம் ஒரு ரூபாய். ஆகவே, நானூறு ஐந்நூறு டிக்கெட்டுகள் சைக்கிள் வைத்திருப்பவர்களுக்குக் கிடைத்துவந்தது. அந்த நடைமுறையை மாற்றியது ‘தளபதி’. அன்றே வாஹினியிலும் நண்பர்களுடன் படம் பார்த்தேன். எனக்குத் தெரிந்து ‘தளபதி’ படத்தைப் பத்துப் பன்னிரண்டு ஊர்களில் பார்த்திருப்பேன். சுந்தரி கண்ணால் ஒரு சேதி என்னும் பாடல் தொடங்கியதும் ஒரு கூட்டமே அப்படியே எழுந்து வெளியில் போய்விடும். படத்தின் ஓபனிங் காட்சியிலேயே இந்தச் சம்பவம் நடைபெற்றது.
ஜப்பானிய சாமுராய் போன்ற உடையில் ரஜினியை அந்தப் பாடல் காட்சியில் உலவவிட்டிருந்தார் மணிரத்னம். அந்தத் தீபாவளிக்கு வெளியான தினமலர் தீபாவளி மலருடன் ரஜினியின் ஆளுயர ஃபுளோ அப் ஒன்றைத் தந்தார்கள். அதில் இந்தத் ‘தளபதி’ தோற்றத்தில் தான் ரஜினிகாந்த் காட்சியளித்தார். மலையாளத்தில் வெளியான ‘தளபதி’ படத்தில் இறுதிக் காட்சி மாற்றியமைக்கப்பட்டிருந்தது என்றும் அந்தக் காட்சியில் ரஜினி இறந்து மம்முட்டி உயிருடன் இருப்பார் என்றும் அப்போது வதந்தி உலவியது.
மகாபாரதத்தின் கர்ணன் கதாபாத்திரத்தின் பாதிப்பில் ‘தளபதி’ படத்தை உருவாக்கியதாக மணி ரத்னம் கூறியிருக்கிறார். ஆனால், இந்தப் படம் ஒருவகையில் நாயகனின் உல்டாதான். ‘நாயக’னில் ஒருவர் என்றால் ‘தளபதி’யில் இருவர். மற்றபடி அதே நிழலுலக தாதாக்களின் வாழ்க்கைதான் படத்துக்குச் சம்பவங்களாயிருந்தன. ரஜினியை மிக அழகாகக் காட்சிப்படுத்தியிருந்த படம் ‘தளபதி’.
ஆனால், படம் மிகப் பெரிய வெற்றியா என்பது சந்தேகம்தான். ஓரளவுக்குப் பெயர் சொல்லும்படி ஓடியதே தவிர, ரஜினி, மம்முட்டி இணையின் நடிப்பு, மணிரத்னத்தின் இயக்கம், இளையராஜாவின் அட்டகாசமான பாடல்கள், சந்தோஷ் சிவனின் அமர்க்களமான ஒளிப்பதிவு ஆகியவை காரணமாக எகிறியிருந்த எதிர்பார்ப்பைப் படம் பூர்த்திசெய்யவில்லை என்றே சொல்ல வேண்டும். படம் தீபாவளி அன்று வெளியானாலும் படத்தில் இடம்பெற்ற முக்கியமான காட்சி போகியையும் அதைத் தொடர்ந்து பொங்கல் திருவிழாவையுமே நினைவூட்டியது. படம் பொங்கலுக்கு வெளியாகியிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.
படத்தில் அடிக்கடி ரஜினி காந்த் தனியாகச் சென்று அமர்ந்துவிடுவார். பின்னணியில் சூரியன் தகதகக்கும். சூர்ய புத்திரன் கர்ணன் என்பதால் சூர்யா கதாபாத்திரத்தையும் அப்படியே உருவாக்கியிருந்தார் மணிரத்னம். இப்படியான காட்சி உருவாக்கங்கள் படத்துக்கு ஒரு சர்வதேசத் தன்மையை அளித்திருந்தன. இருபது வயதில் பார்த்தபோது பெரிய மயக்கத்தைத் தந்த ‘தளபதி’ நாற்பது வயதில் பார்த்தபோது எந்தக் கிறக்கத்தையும் தரவில்லை. விடலைத்தனத்தின் துறுதுறுப்பின்போது ரசனைக்குரியதாக இருந்த படம் நாற்பதின் நிதானத்தில் ரசிக்க முடியாமல் போனது. இதுதான் மணிரத்னம் எனும் இயக்குநரின் மகிமை.
1990 தீபாவளியின் போது ரஜினி காந்த் நடித்த எந்தப் படமும் வெளியாகியிருக்கவில்லை. ஆகவே மதுரை ரஜினி ரசிகர்கள் அந்த தீபாவளியைத் துக்க நாளாகக் கருதி சுவரொட்டி அடித்து ஒட்டியிருந்தார்கள். இந்தத் திரைப்படம் வெளியானபோது செல்வி ஜெ.ஜெயலலிதா தலைமையிலான அதிமுக தமிழக ஆட்சியை நடத்திக்கொண்டிருந்தது. அப்போதே ரஜினிக்கும் ஜெ.வுக்குமான உரசல் ஏற்பட்டுவிட்டது. இதைத் தொடர்ந்து வந்த ‘மன்னன்’ திரைப்படத்தில் விஜய சாந்தி ஏற்று நடித்த கதாபார்த்திரம் ஜெயலலிதாவுடன் பொருத்திப்பார்க்கப்பட்டு ரஜினி ரசிகர்களால் சிலாகிக்கப்பட்டது.
‘தளபதி’யின் வெற்றியைத் தொடர்ந்து, அடுத்தும் ரஜினி நடிக்க மணிரத்னம் இயக்கத்தில் ‘யாரடா நீ மன்மதா?’ என்னும் பெயரில் படம் ஒன்று வெளியாகக் கூடும் என அப்போது பத்திரிகைகளில் செய்திகள் வெளியாயின என நினைவு. 29 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நாளை நினைத்துப் பார்க்கையில் ஆச்சரியமான பல சம்பவங்கள் மன அலைவரிசையில் அகப்படுகின்றன. எல்லாவற்றையும் எடுத்திடவோ எழுதிடவோ இயலவில்லை என்பது பெரும் சோகம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக