நியூ விஷன் என்பது உகாண்டாவின் முன்னணி செய்திப் பத்திரிகை. இது ஆண்டுதோறும் தம் சமூகத்திற்கு சேவை ஆற்றிய, வெளி உலகிற்கு அதிகம் தெரிந்திராத பெண்களைக் கண்டுபிடித்து விருதளித்துக் கௌரவித்து வருகிறது. இந்த ஆண்டு நியூ விஷன் விருதளித்திருப்பது ரூத் நியாபஹிகா என்னும் இளம் பெண்ணுக்கு. அவர் செய்த செயல் எழுத்தறிவித்தது. யாருக்கு? கருத்தரித்தல் போன்ற காரணங்களால் படிப்பை இடையில் நிறுத்திய பெண்களைத் தேடிப்பிடித்து அவர்கள் கல்வி கற்க உதவியுள்ளார். அப்பெண்களிடம் என்ன திறமை ஒளிந்துகிடந்ததோ அதைக் கண்டுபிடித்து அதற்கு உயிர் கொடுத்து அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவியுள்ளார் நியாபஹிகா.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நியாபஹிகா எங்கிருந்தார்? உகாண்டாவின் கடைக் கோடி கிராமத்திலா, இல்லை. அமெரிக்காவில். அங்கே அவர் குழந்தை உளவியலாளராக பணியாற்றிவந்தார். இலகுவான கேளிக்கை நிரம்பிய வாழ்க்கை வாழ்ந்தார். அப்போது அவரை நம்பி அவரும் அவருடைய குழந்தைகளும் உகாண்டாவிலிருந்த பெற்றோரும் மட்டுமே இருந்தனர். இப்போது அவரை நம்பி 45 பெண்கள் உள்ளனர். ஆறு வயதிலிருந்து 17 வயதுக்குட்பட்டவர்கள் அனைவரும். கபேல் என்னும் ஊரில் வசித்துவருகிறார்.
இந்த மாற்றம் நிகழ் என்ன காரணம்? 2005-ம் ஆண்டில் அவர் இன்விஸிபிள் சில்ட்ரன் என்னும் ஆவணப்படத்தைப் பார்த்துள்ளார். அப்படத்தில், உகாண்டாவில் கலகம் நடத்தும் ராணுவ அமைப்பு குழந்தைகள்மீது தொடுக்கும் மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் காட்சிகளாக பரவியிருந்தன. அந்த அட்டூழியங்கள் அவர் மனதைப் பாதித்தன. அது தொடர்பாக பல விஷயங்களை ஆராய்ந்தறிந்தார்.
இதைத் தொடர்ந்து அமெரிக்காவில் குழந்தைகளுக்கு ஆலோசனை தரும் இயக்கங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார் நியாபஹிகா. தன் பங்குக்கு குழந்தைகளுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கிவந்தார். இந்நிலையில் 2010-ல் பராக் ஒபாமா உகாண்டா கலக்க்கார்ர்களான எல்ஆர்ஏவின் ஆயுதங்களைப் பறிக்கவும் வடக்கு உகாண்டாவை மீட்கவுமான சட்டம் இயற்றினார். அப்போது நியாபஹிகாவின் பங்களிப்பை அறிந்து அப்போதைய செனட்டான எட்வர்ட் கென்னடி அவருக்குப் பாராட்டுக் கடிதம் எழுதினார்.
அதற்குப் பிறகு உகாண்டாவில் நியாபஹிகா கழிக்கும் விடுமுறை நாட்கள் பிறருக்கு பயன் தரும் வகையில் அமைந்தன. குடும்பத்துடன் செலவிடும் குதூகலம் தவிர்த்த நேரங்களில் நாடு முழுவதும் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களுக்குச் சென்று சேவையாற்றினார். வாழ்க்கை பொருள்கொண்டதாக மாறிவருவதை அவர் உணர்ந்தார். இதனால் கிரேஸ் வில்லா என்னும் பெயரில் சமூகத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான இல்லத்தைத் திறந்தார். இங்கே ஆறு முதல் 21 வயது வரையான பெண்களுக்கு அடைக்கலம் அளிக்கத் தொடங்கினார். இந்த திட்ட்த்தைத் தொடங்குவதற்காக இரண்டு ஆண்டுகளாக பணத்தைச் சேமித்துள்ளார் இவர். முதல் ஆண்டில் இவரது இல்லத்தில் 10 குழந்தைகள் மட்டுமே இருந்துள்ளனர். குழந்தைகளின் எண்ணிக்கையை கூடுமானவரை மிகவும் அதிகரிக்கக் கூடாது என விரும்பினார். எண்ணிக்கை குறைவாக இருந்தால் தான் குழந்தைகளைப் பராமரிக்க முடியும் என நம்பினார். அப்படியிருந்தும் கொஞ்சம் கொஞ்சமாக 45 குழந்தைகள் வந்து சேர்ந்துவிட்டனர்.
இல்லத்தில் மூன்று முக்கிய பயிற்சித் திட்டத்தைச் செயல்படுத்திவருகிறார். இதன் மூலம் பெண்களுக்கு தேவையான உடல் ஆரோக்கியப் பயிற்சி அளிக்கிறார்; பேக்கரி பணிகள், கணினிக் கல்வி, தகவல் தொழில்நுட்பம், புகைப்படக் கலை, தையல், விவசாயம் போன்ற பலவற்றைக் கற்றுக்கொடுக்கிறார்.
பெண்களின் வாழ்க்கைக்குத் தேவையான பயிற்சிகளை அளித்து அவர்களது வாழ்க்கை மேம்பட உறுதுணையாயிருக்கிறார் நியாபஹிகா. பொருளாதாரச் சிரமம் இருக்கத்தான் செய்கிறது. அவ்வப்போது நண்பர்கள் உதவுகின்றனர். ஆனாலும் அது போதவில்லை. இல்லத்தில் பேக்கரி உணவு வகைகளைத் தயாரித்து அதன் மூலம் நிதி திரட்டத் திட்டமிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக