இந்த வலைப்பதிவில் தேடு

பிரகாஷ் ராஜ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிரகாஷ் ராஜ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, மார்ச் 30, 2014

அறுசுவைக் கலைஞன்

பிரகாஷ் ராஜின் பிறந்தநாளுக்காக (மார்ச் 26) எழுதப்பட்ட கட்டுரை. இதன் எடிட் செய்யப்பட்ட பிரதி 2014 மார்ச் 28 அன்று தி இந்துவில் வெளியானது.)


பாலசந்தரின் மோதிர விரலால் குட்டுப்பட்டவர்களில் ஒருவர் பிரகாஷ்ராஜ். 1965 மார்ச் 26 அன்று பிறந்த பிரகாஷ் ராஜ் பாலசந்தரின் டூயட் படத்தின் விறுவிறுப்பான வில்லனாக அறிமுகமானார். பிரத்யேக உடல்மொழி, வனங்களை உச்சரிக்கும் பாணியில் தனித்துவம் என எளிதாக ரசிகர்களை வசீகரித்தார் பிரகாஷ் ராஜ். ஏற்கனவே கன்னடத்தில் நாடகங்களில் நடித்திருந்த அனுபவம் அவருக்குக் கைகொடுத்தது. தமிழ்த் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமான பின்னர் 1995இல் கையளவு மனசு என்னும் தொலைக்காட்சித் தொடரில் நடித்ததால் தமிழ்க் குடும்பங்களுக்குப் பரிச்சயமான நடிகராக அவர் மாற முடிந்தது. 1995-96களில் வெளியான ஆசை, கல்கி ஆகிய திரைப்படங்கள் மூலமாக பிரகாஷ் ராஜ் முன்னணிக்கு வந்தார். வில்லனாக நடித்தாலும் கதாநாயகனுக்குச் சமமான வரவேற்பையும் பெற்றார். ரஜினிகாந்த், சத்யராஜ், ரகுவரன் ஆகிய நடிகர்கள் வரிசையில் பிரகாஷ் ராஜுக்கு முக்கிய இடம் கிடைத்தது. 

மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியான இருவர் படத்தில் இரண்டு கதாநாயகர்களுள் ஒருவராக பிரகாஷ் தோன்றினார். திராவிட அரசியலில் எம்ஜிஆர், கருணாநிதி ஆகியோர் உறவைச் சித்திரிந்திருந்த அந்தப் படத்தில் திமுக தலைவர் கருணாநிதி வேடமேற்றிருந்தார் பிரகாஷ் ராஜ். அந்தப் படம் வசூல்ரீதியாகப் பெரிய வெற்றியைப் பெறாவிட்டாலும் பிரகாஷ் ராஜின் நடிப்புத்திறனுக்குச் சாட்சியாக இருந்தது. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என படு பிஸியான நடிகராக வலம் வந்தார் பிரகாஷ்.

வஸந்தின் அப்பு திரைப்படத்தில் அரவாணி வேடம் ஏற்று நடித்தார். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான வேடமேற்ற நடிக்க வேண்டும் என விரும்பினார். ஆனால் இவரது நடிப்பு ஒரே பாணியில் தான் அமைந்துள்ளது என விமர்சனமும் உண்டு. சைக்கோத்தனம், நக்கல் நையாண்டி வசனம் இரண்டையும் கலந்து தனது கதாபாத்திரங்களுக்கு புது வடிவம் கொடுத்தார் பிரகாஷ் ராஜ். கில்லி படத்தில் இவரது உச்சரிப்பில் வெளியான செல்லம்… என்னும் வசனம் ரசிகர்களால் அடிக்கடி நினைவுகூரப்படுகிறது. வில்லனாக அறிமுகமானாலும் குணச்சித்திர வேடங்களிலும் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார் பிரகாஷ் ராஜ். வித்தியாசமான படங்களைத் தர வேண்டும் என்னும் விருப்பத்தால் தானே தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்தார். மொழி, வெள்ளித்திரை, அபியும் நானும் போன்ற படங்களை அதன் காரணமாகவே உருவாக்கினார். திரைப்படம் மீது கொண்ட தாகத்தால் தோனி என்னும் திரைப்படத்தை இயக்கி நடித்தார். பூலோகம், மத கஜ ராஜா, ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை உள்ளிட்ட பல படங்கள் வெளியாக உள்ளன.

லேட்டஸ்ட்

அமலா எனும் பொன்மான்

தொடர்பவர்