இந்த வலைப்பதிவில் தேடு

கலைஞர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கலைஞர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, ஜனவரி 25, 2025

கூசாமல் சொல்கிறார்களே?


அண்மையில் தமிழ்நாடு அரசு கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டதன் வெள்ளிவிழாவை நடத்தியது. இரண்டு நாள்கள் சிறப்பாக விழா நடத்தப்பட்டது. இந்தத் திருவள்ளுவர் சிலை அமைக்க அடிக்கல் நாட்டியதே ஆர்.எஸ்.எஸ். தான் என பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார் என ஒரு செய்தியை 2025 ஜனவரி 24 நாளிட்ட இந்து தமிழ் திசை நாளிதழ்  வெளியிட்டுள்ளது. 

“கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறையில் மண்டபத்தை அமைத்ததோடு, அருகில் வள்ளுவர் சிலை அமைக்கத் தீர்மானித்த ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் ஏக்நாத் ரானடே, கடந்த 1979 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி அன்றைய பிரதமர் மொரார்ஜி தேசாய், ஆளுநர் பிரபுதாஸ் பட்வாரி, முதல்வர் எம்ஜிஆர், அறநிலையத் துறை அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் ஆகியோரைக் கொண்டு சிலை அமைக்க சிலை நாட்டினார்” என வானதி தெரிவித்ததாக இந்து தமிழ் திசை நாளிதழ் அந்தச் செய்தியில் வெளியிட்டுள்ளது. இந்த அடிக்கல் நாட்டு விழா பற்றிய செய்தி 1979 மே 1 நாளிட்ட தமிழரசு இதழில் வெளியாகியுள்ளது. 

என்ன ஆச்சரியம் என்றால், வானதி சீனிவாசன் குறிப்பிட்டிருக்கும் அடிக்கல் நாட்டு விழா பற்றிய செய்தி உண்மைதான். ஆனால், அந்த அடிக்கல் நாட்டுவிழாவில் கலந்துகொண்ட ஏக்நாத் ரானடேதான் வள்ளுவர் சிலை அமைக்கவே காரணம் என்பது போன்ற ஒரு தோற்றத்தைக் கட்டமைக்கிறார். அது தான் ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யாக இருக்க வேண்டும். 

ஏனெனில், “ முக்கடல் சந்திக்கும் குமரி முனையில் வான்புகழ் வள்ளுவருக்குச் சிலை அமைக்க 31.12.1975 ஆம் நாளன்று எனது தலைமையில் கூடிய கழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுத்து அறிவிக்கப்பட்டு, சிலை அமைப்புக்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது 1976 ஆம் ஆண்டு ஜனவரித் திங்களில் கழக அரசு கலைக்கப்பட்டது” என கலைஞர், கோட்டம் முதல் குமரி வரை என்னும் நூலில் இடம்பெற்ற ஒரு கட்டுரையில் எழுதியுள்ளார். இந்த நூல் குமரியில் வள்ளுவர் சிலை திறந்துவைக்கப்பட்டதை ஒட்டி வெளியிடப்பட்டது.

அந்தக் கட்டுரையில் கலைஞர் விரிவாக கன்னியாகுமரியில் வள்ளுவர் சிலை எழுப்பப்பட்டதன் பின்னணியை எழுதியுள்ளார். அந்தச் சிலையைத் திறக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பற்றிய அனைத்துவிவரங்களையும் அதில் எழுதியுள்ளார். அந்த நூல் பொதுவெளியில் வாசிக்கக் கிடைக்கிறது. அப்படியிருக்க வானதி சீனிவாசன் வள்ளுவர் சிலை அமைக்கவே ஆர்.எஸ்.எஸ். தான் காரணம் என்பது போல் எப்படிக் கூசாமல் சொல்லியுள்ளார் என்பதுதான் ஆச்சரியமாக உள்ளது.  

புதன், ஆகஸ்ட் 18, 2021

ஒரு காட்சி இரண்டு படங்கள்


தற்செயலாக இரண்டு படங்களை 17.08.2021 அன்று கே டிவியில் பார்த்தேன். ஒன்று  கலைஞர் மு.கருணாநிதி கதை வசனத்தில் இராம.நாராயணன் இயக்கிய மக்கள் ஆணையிட்டால்; மற்றொன்று விசு கதை வசனம் எழுதி இயக்கிய மீண்டும் சாவித்திரி. முதல் படம் நான்கு மணிக் காட்சியாக ஒளிபரப்பானது. இரண்டாம் படம் இரவு 10:30க்கு ஒளிபரப்பானது. இரண்டு படங்களிலும் ஒரு காட்சி இடம்பெற்றிருந்தது. ஏழை எளியவர்களுக்குத் தண்ணீர் தேவை என்பதால் ஃபயர் இன்ஜினுக்கு போன் செய்து வரவழைக்கும் காட்சி அது. 

மக்கள் ஆணையிட்டால் 1988இல் வெளியாகியிருக்கிறது. மீண்டும் சாவித்திரி 1996இல் வெளியாகியிருக்கிறது. முதல் படத்தில் விஜய்காந்த் ஃபயர் இன்ஜினுக்கு போன் செய்து வரவழைக்கிறார். இரண்டாம் படத்தில் விசு வரவழைக்கிறார். அவரது அறிமுகக் காட்சியே அது தான். இரண்டு படங்களிலும் ஏழைகளில் வயிறு எரிகிறது அதை அணைக்கத் தண்ணீர் தேவை என்பதாக வசனம் வருகிறது. முந்தைய படத்தைப் பார்க்காமலேயே விசு அப்படியான காட்சியை வைத்திருந்தாரா என்பது தெரியவில்லை. கவனக் குறைவால் நேர்ந்ததாகவும் இருக்கலாம். ஏனெனில், முந்தைய படத்தைப் பார்த்திருந்தால் கண்டிப்பாக அப்படியொரு காட்சியை வைத்திருந்திருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை உதவி இயக்குநர் யாராவது ஒருவர் சொன்ன காட்சியாகவும் இருக்கலாம். 

இதேபோல் பாலைவன ரோஜாக்கள் படத்தில் கலைஞர், வாள் முனையைவிட வலிமையானது பேனா முனை என வசனம் எழுதியிருப்பார். ஆர்.சி.சக்தி தனது பத்தினி என்ற படத்தில் இதே கூற்றை நெப்போலியன் கூறியதாக- அப்படித்தான் நினைவு- வசனம் எழுதியிருப்பார்.  

புதன், நவம்பர் 04, 2020

இயக்குநர் மணிவண்ணன்: நிழல்கள் முதல் நாகராஜசோழன் வரை

இயக்குநர் மணிவண்ணன் என்று சொன்னவுடன் கொங்கு பாஷையில் நக்கலும் நையாண்டியுமாகச் சமகால அரசியலைக் கிண்டலும் கேலியுமாகச் சொல்லும் பாங்கு நம் நினைவின் மதகுகளைத் திறந்து வரும். எல்லோருக்கும் ஓர் அரசியல் புரிதல் இருக்கும் என்றபோதும் சிலர் அதைத் தமது தொழில் தொடர்பான விஷயங்களில் வெளிப்படுத்துவதில்லை. ஆனால், வேறு சிலரோ தமது தொழிலிலும் தமது அரசியல் வெளிப்படும்படி நடந்துகொள்வர். மணிவண்ணன் இரண்டாம் ரகம். அவரைப் பொறுத்தவரை அரசியல் என்பது உழைக்கும் மக்களுக்கான அரசியல், ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரசியல். அவை தொடர்பான படங்களை உருவாக்குவதில் மட்டுமே மணிவண்ணனுக்கு நம்பிக்கை இருந்தது. ஆனாலும் அவர் எல்லாவகையான படங்களையும் உருவாக்கியுள்ளார். 

மார்க்சிய சித்தாந்தம், தமிழ்த் தேசியம், தமிழீழப் போராட்டம் போன்றவற்றில் பிடிப்பு கொண்டிருந்த மணிவண்ணன், கோவை மாவட்டம் சூலூரில் 1953-ல் ஒரு வியாபாரக் குடும்பத்தில் R.சுப்ரமணியம், மரகதம் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். சூலூர் அரசுப் பள்ளியில் பயின்ற நாட்கள் முதலே அவர் கலைகளில் ஆர்வங்கொண்டிருந்திருக்கிறார். பள்ளிநாட்களில் கதாகாலட்சேபம்’ என்னும் பெயரில் மேடைகளில் தனது கற்பனைத் திறனை வெளிப்படுத்தியிருக்கிறார். கோவை அரசுக் கல்லூரியில் பி.யூ.சி. படித்த நாட்களில் ஷியாம் பெனகல், மிருணாள் சென் ஆகியோரது படங்களையும் மலையாளத்தில் வெளியான யதார்த்தவாதப் படங்களையும் கண்டுகளித்திருக்கிறார். அதன் வழியே சினிமாவுக்கான உந்துதல் கிடைத்துள்ளது. தமிழ்ப் படங்கள் ஒரே மாதிரியாக இருக்கின்றனவே என்று அவர் சலிப்படைந்திருந்த நேரத்தில் 16 வயதினிலே’, முள்ளும் மலரும்’, உதிரிப்பூக்கள்’ போன்ற மாற்றத்தை நோக்கிய திரைப்படங்கள் வெளிவந்தது அவருக்கு உற்சாகத்தைத் தந்திருக்கிறது. மாறுபட்ட படத்தைத் தர வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்த அவருக்கு சினிமாவில் தாமும் சாதிக்கலாம் என்ற நம்பிக்கையை இத்தகைய திரைப்படங்கள் அளித்துள்ளன. எனவே, மணிவண்ணன் சென்னைக்கு வந்துள்ளார். என்னையும் சினிமாவையும் மட்டுமே நம்பி நான் சென்னைக்கு வந்தேன்” என்கிறார் மணிவண்ணன்.

இயக்குநர் பாரதிராஜாவுக்கு, கிழக்கே போகும் ரயில்’ பற்றி எழுதிய விமர்சனக் கடிதம் வழியே அவரது அறிமுகத்தைப் பெற்ற மணிவண்ணன் அவரிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்திருக்கிறார். நிழல்கள்’, அலைகள் ஓய்வதில்லை’ ஆகிய படங்களின் கதையையும் வசனத்தையும் எழுதிய மணிவண்ணன், காதல் ஓவியம்’ படத்தில் வசனத்தை மட்டும் எழுதியுள்ளார். ஆகாய கங்கை’ படத்தின் வசனத்தை எழுதியுள்ளதுடன் அதன் திரைக்கதையை இயக்குநர் மனோபாலாவுடன் இணைந்து எழுதியுள்ளார்.

மணிவண்ணன் பல படங்களுக்குக் கதை எழுதியபோதும் அவரது முதல் படமான கோபுரங்கள் சாய்வதில்லை’யின் கதை கலைமணியுடையது. அந்தக் கதைக்கு மணிவண்ணன் திரைக்கதை, வசனம் ஆகியவற்றை எழுதி இயக்கியிருந்தார். அவருக்கு அந்த வாய்ப்புக் கிடைத்ததற்கு இளையராஜாதான் காரணம் என்று அவர் கூறியிருக்கிறார். இந்தப் படத்தில் வினுச்சக்ரவர்த்திக்கு அருமையான கதாபாத்திரம் அமைந்திருந்தது. அருக்காணி என்னும் வேடத்தில் நடிகை சுஹாசினி நடித்திருந்தார். இந்தக் கதாபாத்திரத்தை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். எளிமையான கதை, சுவாரசியமான திரைக்கதை உணர்வுபூர்வக் காட்சிகள் என்று தனது இயக்குநர் பயணத்தை மிகத் தெளிவான புரிதலுடன் தொடங்கியிருந்தார் மணிவண்ணன். அடுத்த ஆண்டில், 1983இல் ஜோதி’, வீட்ல ராமன் வெளியில கிருஷ்ணன்’, இளமைக் காலங்கள்’ என்னும் மூன்று படங்களை இயக்கினார்;  1984இல் அவர் இயக்கிய ஆறு படங்களில் நூறாவது நாள்’, இங்கேயும் ஒரு கங்கை’ ஆகிய இரண்டும் முக்கியமானவை.

நூறாவது நாள்’ படத்தில் நடிகர் சத்யராஜ், காட்சி ஒன்றுக்காக மொட்டை போட்டு நடித்திருந்தார். படம் பெரிய வெற்றியைப் பெற்றது. இதற்குப் பிறகு மொட்டை போட்டு நடிகர் நடித்தால் படம் வெற்றிபெறும் எனும் ஒரு நம்பிக்கை திரைத்துறையில் உருவாகிவிட்டது. சூரியன்’ திரைப்படத்தில் சரத்குமாரும் ஜென்டில் மேன்’ படத்தில் சரண் ராஜும் மொட்டை போட, அந்தப் போக்கு தொடர்ந்தது. நடிகரை மொட்டை போட வைத்தாலும் அவருடைய தயாரிப்பாளர் மொட்டை போடும்படியான நிலைமையை மணிவண்ணன் உருவாக்கியதில்லை. 50 படங்களை இயக்கியுள்ள மணிவண்ணனின் படங்களில் முப்பதுக்கும் மேற்பட்டவை வசூலைக் குவித்தவை. என்றபோதும், வெற்றியின்போது தனக்குத் தலையில் கொம்பு முளைத்ததும் இல்லை, தோல்வியின்போது தான் தலைகுனிந்ததுமில்லை என்றே அவர் கூறியிருக்கிறார். அவர் இயக்கிய ஐம்பது படங்களில் 25இல் நாயகனாக சத்யராஜ் நடித்திருக்கிறார்; அதில் ஜல்லிக்கட்டு’ முதல் அமைதிப்படை’ வரை 12 படங்கள் தொடர்ந்து வெற்றிபெற்றுள்ளன.

இங்கேயும் ஒரு கங்கை’ படத்தின் கதை சற்றேறக்குறைய அந்த ஏழு நாட்கள்’ படத்தின் கதையை ஒத்திருக்கும். சூழல் காரணமாகக் காதலியைப் பிரிந்துவிடுகிறான் காதலன். அவளுக்கு மணமாகிவிடுகிறது. இந்த வேளையில் மீண்டும் அவள் வாழ்வில் குறுக்கிடுகிறான். இப்போது காதலி மனைவியாகத் தொடர்கிறாளா, காதலனைக் கைபிடிக்கிறாளா என்பதுதான் முடிவு. படத்தின் திரைக்கதை விஷயத்தில் மணிவண்ணன் வேறு ஒரு பாதையில் பயணம் செய்திருந்தார். காதலனாக முரளியும், காதலியாக தாராவும், கணவனாக சந்திரசேகரும் (இந்தப் படத்தில்தான் சந்திரசேகர் தாடியை எடுத்துவிட்டு நடிக்கத் தொடங்கியிருந்தார்) நடித்திருந்தனர். பாக்யராஜ் தாலி செண்டிமெண்டைக் கையில் எடுத்திருந்தார். மணிவண்ணனோ மனிதாபிமான அடிப்படையில் முடிவை எடுத்திருந்தார்.

1986ஆம் ஆண்டு தீபாவளி நாளில் மணிவண்ணன் இயக்கிய ‘விடிஞ்சா கல்யாணம்’, பாலைவன ரோஜாக்கள்’ என்னும் இரு படங்கள் வெளியாகி வெற்றிபெற்றன. இரண்டிலும் நாயகன் சத்யராஜ்தான். இரண்டும் வெவ்வேறு வகையான படங்கள். பாலைவன ரோஜாக்கள்’ மு.கருணாநிதி கைவண்ணத்தில் உருவான அரசியல் படம். இது மலையாளப் படமான வர்தா’வின் மறு உருவாக்கம். விடிஞ்சா கல்யாணம்’ ஒரு திரில்லர். ஆஃபாயில் ஆறுமுகம் என்ற வித்தியாசமான கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்திருந்தார். ஒரே நாள், ஒரே இயக்குநர் இரண்டும் வெற்றி என்பதையெல்லாம் இனிப் பார்க்க முடியுமா என்பது சந்தேகம்தான். போதைப் பொருள் பழக்கத்தை அடிப்படையாகக் கொண்டு மணிவண்ணன் இயக்கிய படம் புயல் பாடும் பாட்டு’.


மணிவண்ணன் இயக்கிய படங்களில் கிட்டத்தட்ட எல்லாப் படங்களும் பொழுதுபோக்கை நோக்கமாகக் கொண்ட படங்கள்தாம். அதில் மாறுபட்டு நிற்கிறது இனி ஒரு சுதந்திரம்’. சிறந்த நடிகருக்கான தேசிய விருதுப் போட்டியில் நாயக’னின் வேலுநாயக்கருடன் களத்தில் மோதிய கதாபாத்திரம் இது. விடுதலை பெற்ற நாட்டின் அரசியல் எவ்வளவு பாழ்பட்டுப்போயிருக்கிறது என்பதைக் குறித்து அவருக்கு எழுந்த ஆதங்கத்தில் உருவான படம் அது. விடுதலைப் போராட்டத் தியாகியாக நடிகர் சிவகுமார் நடித்திருப்பார். அவர் நுட்பமாக நடித்திருந்த படம் இது. அரசு கையகப்படுத்திய நிலத்துக்கான பணத்துக்காக, வட்ட வடிவ மூக்குக் கண்ணாடி, வெள்ளை வேட்டி சட்டை, கையில் மஞ்சள் பை, குடை சகிதம் அவர் ஆட்சியர் அலுவலகத்துக்கு நடந்துநடந்து தேய்ந்துபோன அழகை மணிவண்ணன் வசனமே இன்றிக் காட்டியிருப்பார். “உண்மை ஊசலாடிக்கிட்டிருக்கப்போ அதைக் காப்பாத்துறதுக்கு உணர்ச்சியாவது இருக்கனும். உணர்ச்சியே செத்துப்போனதுக்கப்புறம் உண்மையை யார் காப்பாத்துறது?”, “நாப்பது வருஷமா எனக்குள்ள ஊறிப்போயிருந்த நல்ல தத்துவத்தை நாலே வருஷத்துல நாசமாக்கிட்டியேடா” போன்ற வசனங்கள் அவரது உட்கிடக்கையைத் தெளிவாகக் காட்டும். கல்வி வியாபாரமான அவலத்தையும் இதில் சொல்லியிருப்பார் அவர்.

அவரை வெகுமக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்த முக்கியமான படம் அமைதிப் படை’. நறுக்குத் தெறித்தாற்போன்ற வசனங்கள் குத்தீட்டியாகக் குத்தவல்லவை என்பதை இந்தப் படத்தில் மணிவண்ணன் காட்டியிருப்பார். இவ்வளவுக்கும் இது ஓர் அரசியல் படம் என்று சொல்லத்தக்கது என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ஒரு குடும்பம் படம். அதனூடாக அரசியலைத் தூவியிருப்பார். இதன் அடுத்தபாகமாக வெளியான நாகராஜன் சோழன் MA, MLA’தான் மணிவண்ணனின் இறுதிப் படம்.

இயக்குநர் மணிவண்ணன் சுமார் பத்துப் படங்களைத் தயாரித்திருக்கிறார், நானூறு படங்களில் நடித்திருக்கிறார். நடிகனாக அவருடைய ஆதர்ஸம் எம்.ஆர்.ராதாதான் என்கிறார் அவர். கொடிபறக்குது’ படத்தில் அவரை பாரதிராஜாதான் வில்லன் நடிகராக்கினார். கில்பர்ட் தனசேகரன் என்னும் அந்த வேடத்துக்கு பாரதிராஜாதான் குரல் தந்திருப்பார். பெரிய மனித போர்வையில் அயோக்கியத்தனங்களில் ஈடுபடும் கதாபாத்திரம் அது. முதன்முதலில் வாய்ப்புத் தந்த வெளி இயக்குநர் என்றால் எஸ்.ஏ.சந்திரசேகர்தான். படம் தேவா’. அதில் மொட்டை போட்டு மீசையுடன் காட்சி தருவார்.

படையப்பா’ படத்தில் இவருடைய நடிப்பைப் பார்த்த சிவாஜி கணேசன், “டேய் தாடிக்காரா உன்னிடம் தொழில் இருக்குதுடா நீ பெரிய ஆளா வருவ” என்று சொல்லிக் கட்டியணைத்துத் தலையைத் தடவிக்கொடுத்த சம்பவத்தை நினைவுகூரும் மணிவண்ணன் பல விருதுகளைவிட மதிப்பு மிக்க விருது அது எனப் புளகாங்கிதமாகக் கூறுகிறார் மணிவண்ணன்.

இயக்குநர் அகத்தியனின் காதல் கோட்டை’யில் இவர் ஒரு டெலிபோன் பூத் வைத்து நடத்துவார். விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்பே காதல் விவகாரங்களின் தூதுவனே’ என்று பேசியபடி காதலைக் கலாய்க்கும் அவரது நடிப்பு வெகுஜன மனத்தில் வெகுகாலமாக நிற்கக்கூடியது. கமல்ஹாசனுடன் அவ்வை சண்முகி’, கார்த்திக்குடன் கோகுலத்தில் சீதை’ என எல்லாப் பெரிய நடிகரோடும் சேர்ந்து நடித்துள்ளார்.  ‘சங்கமம்’ திரைப்படத்து நாட்டுப்புறக் கலைஞர் பாத்திரம் ஒரு நடிகராக அவருக்கு நிறைவைத் தந்ததாகக் கூறியிருக்கிறார். மணிவண்னனும் சத்யராஜும் சேர்ந்து தாய் மாமன்’, மாமன் மகள்’ போன்ற படங்களில் அடித்த லூட்டி இப்போதும் யூடியூபில் ஆதிக்கம் செலுத்துகிறது. யதார்த்தமான நகைச்சுவையில் மிளிர்ந்த நடிகராக இருந்தபோதும் நகைச்சுவை தனித் தடத்தில் பயணம்செல்வதை அவர் விரும்பியதில்லை. கடவுள் நம்பிக்கையில்லாத மணிவண்ணன் கடவுள்’ திரைப்படத்தில் கடவுளாக நடித்திருக்கிறார்.


தமிழீழ அரசியலைப் பேசும் படம் ஒன்றை இயக்க வேண்டும் என்ற ஆசையும் இயக்க முடியும் என்ற நம்பிக்கையும் அவருக்கு இருந்திருக்கின்றன. ஆனால், அது நடைபெறாமலே போய்விட்டது. ஆனால், அவரது படங்கள் மணிவண்ணைப் பற்றிய சேதிகளை ரசிகர்களுக்குச் சொல்லிக்கொண்டே இருக்கும். இன்று (ஜூலை 31) அவரது பிறந்தநாள். அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவிப்போம்.   

 இந்து தமிழ் திசை இணையதளத்தில் வெளியான கட்டுரை இது.

ஞாயிறு, ஆகஸ்ட் 12, 2018

மறைந்தும் மறையாச் சூரியன்

அண்ணா சாலையில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டி

இந்தியா விடுதலையடைந்த இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழகத்தில் தலைகீழ் அரசியல் மாற்றம் நிகழ்ந்தது. அதுவரை அரியணையில் அமர்ந்திருந்த, பலம் பொருந்திய தேசியக் கட்சியான காங்கிரஸை 1967 தேர்தலில் வென்று ஆட்சிக்கு வந்தது மாநிலக் கட்சியான திமுக. அதன் முதல் முதலமைச்சரான அண்ணாத்துரை ஈராண்டுகளுக்குள், 1969இல் மறைய, கட்சியின் அடுத்த கட்டத் தலைவர்கள் வரிசையிலிருந்த மு.கருணாநிதி முன்னேறினார்; முதலமைச்சரானார். திராவிட அரசியல் நிலைப்பாட்டைக் கொண்ட கட்சியான திமுக ஒடுக்கப்பட்டோரின் நலனையும் சமூக நீதியை நிலைநாட்டுவதையும் தன் முக்கியக் கடமைகளாகக் கொண்டிருந்தது. தந்தை பெரியாரிடம், அறிஞர் அண்ணாவிடம் அரசியல் பாடம் கற்றறிந்த முதலமைச்சர் கருணாநிதியும் இது விஷயத்தில் தீவிர அக்கறை கொண்டிருந்தார். 

ஒடுக்கப்பட்டவர்கள் என்று குறிப்பிடும்போது அதன் முதல் வரிசையில் இருப்பவர்கள் பெண்கள். சாதி வித்தியாசம் இன்றி அனைத்துக் குடும்பங்களிலும் பெண்களுக்கு எதிராக நிலவும் ஒடுக்குமுறைகள் ஒன்றல்ல; ஓராயிரம். அவை அனைத்தையும் சுத்தமாகத் துடைத்தெறிய மிகப் பெரிய சமூக மாற்றம் தேவை. அந்த மாற்றத்துக்கான விதை தூவிய பெரியாரின் வழியில் அண்ணாவை அடியொற்றி நடைபோட்டவர் மு.கருணாநிதி. அதற்கான சான்றுகளாக கருணாநிதி கொண்டுவந்த மகளிருக்கான திட்டங்களைச் சொல்லலாம். அந்தத் திட்டங்களால் பயனடைந்த பெண்கள், கருணாநிதி மறைந்த மறுநாள் ஆகஸ்ட் 8 அன்று நிகழ்ந்த கருணாநிதியின் இறுதி ஊர்வலத்தில் கண்ணீரும் கம்பலையுமாகக் கலந்துகொண்டார்கள். தங்கள் வாழ்வில் மலர்ச்சி காண விரும்பிய தந்தையாக, தமையனாக, தனயனாகச் செயல்பட்ட அம்மனிதரின் மரணம் அவர்களை உலுக்கியது. ஆகவே, கட்சி வேறுபாடின்றி அவருக்குத் தங்கள் நன்றியை அஞ்சலியாகச் செலுத்தினார்கள்.

காவேரி மருத்துவமனை முன்பு

மகளிருக்காக அவர் கொண்டுவந்த திட்டங்களைச் சிந்தித்துப் பார்த்தால் மகளிர் நலனுக்காக கருணாநிதி உண்மையிலேயே செயல்பட்டாரா இல்லையா என்பதை உணர்ந்துகொள்ளலாம். பெண்களின் பெரும் பிரச்சினைகள் என்று எடுத்துக்கொண்டால் அவர்களது கல்வியும் திருமணமுமே முன்னிலையில் நிற்கும். ஆகவே, பெண்கள் கல்வி கற்கவும் மணமுடிக்கவும் திட்டங்கள் வேண்டும். சரி மணமுடித்த பெண்கள் கணவனை இழந்தால் கைம்பெண்ணாகிவிடுகிறார்களே அவர்களுக்கும் உதவ வேண்டுமே. இன்னும் பெண்களில் சிலர் திருமணமே வேண்டாம் என முடிவெடுக்கக்கூடும் அவர்களை அப்படியே விட்டுவிட முடியாதே அவர்களுக்கும் உதவிக்கரம் நீட்ட வேண்டும். ஏழை எளிய பெண்களுக்கு இவை எல்லாம் உதவும், சொத்து நிறைந்த குடும்பத்துப் பெண்களுக்கு என்ன செய்வது? அந்தச் சொத்தில் சம உரிமையைப் பெற்றுத்தர வேண்டியது அவசியம்தானே? சரி அரசியல் ஈடுபாடுகொண்ட பெண்களை அரசியலிலும் ஈடுபடுத்த வேண்டுமே. அதற்கும் திட்டம் உண்டு. இப்படிப் பெண்கள் மீது அக்கறை கொண்டு எந்தவகையிலும் எந்தத் தரப்புப் பெண்ணும் விடுபட்டுவிடக் கூடாது என்னும் முன்னெச்சரிக்கையுடன் எல்லாத் தரப்பு பெண்களுக்கும் உதவும்படியான திட்டங்களை முன்னெடுத்ததில் கருணாநிதியின் கூர்மதியும் பங்களிப்பும் காலகாலத்துக்கும் நினைவுகூரத்தக்கவை.

கணவன் இறந்துவிட்டால் பெண்ணுக்கு வாழ்வே முடிந்துவிட்டது என்ற சமூகத்தின் அறியாமையை அகற்ற கைம்பெண்கள் மறுமணம் செய்துகொள்வது அவசியம். அதற்கு உதவும் வகையில், கைம்பெண் மறுமணத்தை ஆதரிக்கும் நோக்கத்தில் 1975ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட திட்டம்தான் டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு கைம்பெண் மறுமண உதவித் திட்டம். கைம்பெண்களின் மறுவாழ்வை ஊக்கப்படுத்தவும் அவர்களின் மறுமணத்துக்கு ஆதரவு தரவுமான நிதியுதவித் திட்டம் இது. இந்தத் திட்டத்தில் அப்போது 5000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது. 2009இல் இது 20 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. இந்தத் திட்டத்தில் உதவிபெற வருமான உச்சவரம்பு எதுவும் இல்லை. திருமணத்துக்கு உதவும் அதே நேரம் திருமணம் செய்து கொள்ள விரும்பாத கைம்பெண்களுக்கு உதவவும் ஒரு திட்டம் கொண்டுவந்தார் அவர். அது, 1975 ஜூன் 1 அன்று கொண்டுவரப்பட்ட ஆதரவற்ற கைம்பெண் உதவித் தொகைத் திட்டம். 18 வயசுக்கு மேற்பட்ட கைம்பெண்களுக்கு இந்தத் திட்டம் உதவுகிறது. வீட்டிலிருந்தபடியே உழைத்துப் பிழைக்க விரும்பும் 20 முதல் 40 வயது கொண்ட பெண்களுக்கு உதவுவதற்காக, சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவசத் தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தை 1975இல் அறிமுகப்படுத்தினார் கருணாநிதி.

கலைஞர் மறைந்த அன்று காவேரி முன்பு

ஆண்களின் கல்வி குடத்து நீரெனில் பெண்களின் கல்வி குளத்து நீர். அதனால் சமூகமே பயனடையும். ஆகவே, 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த கருணாநிதி, பெண்களின் கல்விக்கு உதவும்வகையில் பெரியார் ஈ.வே.ரா.நாகம்மை இலவசக் கல்வித் திட்டத்தை 1989-90இல் கொண்டுவந்தார்.  வருட வருமானம்  24 ஆயிரத்துக்குட்பட்ட எளிய குடும்பத்துப் பெண்கள் பட்டப் படிப்பு படிக்க உதவும் திட்டம் இது.

1989இல், கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3 அன்று கொண்டுவந்த மற்றொரு திட்டம் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம். இது திருமண உதவித் திட்டம் என்றபோதும் மறைமுகமாக பெண் கல்வியை ஊக்குவிக்கும் திட்டமாகவும் செயல்படுகிறது. குடும்பத்தின் வருட வருமானம் 72 ஆயிரத்துக்குட்பட்ட ஏழை எளிய பெண்களின் திருமணத்துக்கு உதவும் வகையில் அமைந்த திட்டம் இது. நிதி உதவி பெற விரும்பும் பெண்கள் பத்தாம் வகுப்புவரை படித்திருக்க வேண்டும் என்பது ஒரு விதி. எனவே, இந்தத் திட்டம் பெண் கல்வியை ஊக்குவிக்கவும் பயன்படுகிறது. பழங்குடியினப் பெண்கள் 5ஆம் வகுப்புவரை படித்திருந்தால் போதும் என்பதைப் போன்ற விதிகளைக் கருத்தூன்றிக் கவனிக்கும்போது திட்டங்கள் பயனாளிகளுக்குப் போய்ச்சேருவதிலும் அவர் கொண்டிருந்த அக்கறை விளங்கும்.  

கலைஞரின் இறுதி ஊர்வலம்

பெண்களது சமூகச் செயல்பாட்டையும் நிர்வாகத் திறனையும் வளர்க்க உதவும் வகையில், 1989ஆம் ஆண்டு முதலமைச்சர் கருணாநிதி தர்மபுரியில் தொடங்கிவைத்த திட்டம் மகளிர் சுய உதவிக் குழு. கிராமப்புறப் பெண்கள் சிறு குழுவாக ஒருங்கிணைந்து வாழவும், வருமானம் ஈட்டவும் உதவிய திட்டம் இது. 1989இல் செய்யப்பட்ட சட்ட திருத்தத்தின்படி ஆண்களைப் போல் பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை வழங்க வகை செய்யப்பட்டது. கல்வி, வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு, உள்ளாட்சியில் 33 சதவீத இட ஒதுக்கீடு ஆகியவையும் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் வழங்கப்பட்டன. மாற்றுப்பாலினத்தவருக்குத் திருநங்கைகள் என்ற கவுரவமான பதத்தை வழங்கியதுடன் அவர்கள் மரியாதையான வாழ்வு நடத்துவதை ஆதரிப்பதற்காகத் தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியம் ஒன்று 15.4.2008 அன்று தொடங்கப்பட்டது. அதுவரை மாற்றுப்பாலினத்தவரை ஏளனத்துடன் பார்த்துக்கொண்டிருந்த சமூகத்தின் பார்வையில் மாற்றம் ஏற்பட இந்த நடவடிக்கை உதவியது.

திருமணமே செய்துகொள்ள விரும்பாத பெண்களுக்கு உதவவும் ஒரு திட்டம் கொண்டுவந்திருக்கிறார் கருணாநிதி. அது 2008 ஜூலை 1 அன்று தொடங்கப்பட்ட முதிர்கன்னி உதவித் திட்டம். இந்தத் திட்டத்தின்கீழ் திருமணமாகாத 50 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்களுக்கு மாதம் ரூ 1000 நிதி உதவி கிடைக்கிறது.

அஞ்சலி சுவரொட்டி

கருணாநிதி கொண்டுவந்த திட்டங்கள் அனைத்தும் மக்கள் வரிப்பணத்திலிருந்தே செய்யப்பட்டன. அவர் கையிலிருந்து பணம் போட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தவில்லை. ஆனால், அத்தகைய திட்டங்கள் அவசியம் என்பதை உணர, முன்மொழிய, வழிமொழிய மகளிரின் துயரம் அறிந்த முதலமைச்சர் தேவைப்பட்டார். அந்த முதலமைச்சராக இருந்தார் கருணாநிதி. திட்டங்கள் தீட்டுவதில் வெறுமனே கடமையைத் தட்டிக்கழித்தால் போதும் என்று செயல்பட்டவரல்லர் அவர். திட்டங்களுக்குப் பெயர் சூட்டுவதிலிருந்து பயனாளிக்கான விதிகளைத் தீர்மானிப்பது வரை ஒவ்வொன்றிலும் அனைத்துத் தரப்பினரின் ஆலோசனைகளையும் கேட்டுச் செயல்படுத்தியிருக்கிறார் அவர். அது மாத்திரமல்ல; யாருக்காகத் திட்டங்கள் தீட்டப்பட்டனவோ அந்தப் பயனாளிகளைத் திட்டங்கள் சென்றடைகின்றனவா என்பதை விசாரித்தறிவதிலும் அவர் ஆர்வம் கொண்டிருந்திருக்கிறார். இவற்றை எல்லாம் விசாரித்து அறியும்போது அவரது தொலைநோக்குப் பார்வை புலப்படுகிறது. இருட்டறையில் முடங்கிக் கிடந்த மகளிருக்கு உதயசூரியனின் பேரொளியைக் காட்டிய கருணாநிதி அறிமுகப்படுத்திய திட்டங்கள் இவை. அதனால்தான் தமிழ்ப் பெண்களின் நெஞ்சம் நிறைந்த தலைவராயிருக்கிறார் இன்று அவர்.

(பெண்களுக்காகவும் சுடர்ந்த சூரியன் என்னும் தலைப்பில் 2018 ஆகஸ்ட் 12 அன்று பெண் இன்று இணைப்பிதழில் வெளியான கட்டுரையின் திருத்தப்பட்ட வடிவம் இது.) 

லேட்டஸ்ட்

அமலா எனும் பொன்மான்

தொடர்பவர்