இந்த வலைப்பதிவில் தேடு

ரசனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரசனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, ஏப்ரல் 07, 2019

இயக்குநர் மகேந்திரன்: அழகியல் திரைப்பட ஆசான்

(அஞ்சலிஇயக்குநர் மகேந்திரன் 25.07.1939 – 02.04.2019)



தமிழ்த் திரையின் உயிர்த் துடிப்பு கொண்ட இயக்குநர் மகேந்திரன் என்பதை யாரும் மறுக்கப்போவதில்லை. சினிமா ஒரு தவம் என்றோ அதற்காகவே காத்துக்கிடந்தவர் என்றோ அவரைக் குறிப்பிட்டுச் சொல்லிவிட முடியாது. ஏனெனில், அவர் சினிமாவுக்கு வந்தது அவரே சொல்லியிருப்பதுபோல் ஒரு விபத்துதான். ஆனால், சினிமாவுக்கு வந்த பின்னர் அவர் படைத்த சினிமாக்களில் சிலதாம் அவரைக் காலாகாலத்துக்கும் சாகாவரம் பெற்றவராக்கியிருக்கின்றன. 

அளவுக்கு மீறித் தான் புகழப்பட்டுவிட்டோமோ என அவரே கூச்சப்பட்டுப் பேசியிருக்கிறார். ஆனாலும், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அவரைப் புகழ்ந்துபேசுவது ஒருவகையான போதை. அதை அவர்கள் தவிர்க்க நினைத்தாலும் அந்தப் போதையில் அவர்களுக்கு ஒரு ஆத்மதிருப்தி இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. ஏனெனில், அந்த அளவுக்கு சினிமாவை நேசிக்கும் ரசிகரின் உதிரத்தின் அணுக்களில் கலந்துவிட்ட பெயர்கள் ‘முள்ளும் மலரு’மும்  ‘உதிரிப்பூக்க’ளும் ‘மெட்டி’யும் ‘ஜானி’யும் ‘நண்டு’ம்  இன்ன பிற படங்களும்.   

பல படங்களுக்குக் கதை, வசனம் எழுதித் தள்ளிய பின்னரே அவர் இயக்குநராக அரிதாரம் பூசிக்கொண்டார். சிவாஜி கணேசனின் ‘தங்கப்பதக்கம்’ அதில் இடம்பெற்றிருந்த வசனங்களுக்காகவே அறியப்பட்டது. அப்படியான மனிதர் முதன்முறையாக இயக்குநராக அவதாரமெடுத்த ‘முள்ளும் மலரும்’ காட்சி மொழியில் புது இலக்கணம் வகுத்தது. அதன் பின்னர் அவர் யதார்த்த சினிமாவின் நாயகன் எனக் கொண்டாடப்படுகிறார். அவர் யதார்த்த சினிமாவை உருவாக்கினாரா என்பது சந்தேகம்தான். ஏனெனில், அவர் அழகியல் சினிமாக்களை உருவாக்கினார்.



அவரது முதல் படமான ‘முள்ளும் மலரும்’ படத்தையே எடுத்துக்கொண்டால் அது ஒரு யதார்த்த படம் அன்று. அது முழுக்க முழுக்க அழகியல் சினிமாதான். கையை இழந்துவிட்டு அண்ணன் வந்து நிற்கும் ஒரு காட்சி போதும் அது அழகியல் சினிமா என்பதைப் புரிந்துகொள்ள.  கையில்லாமல் வந்து நிற்கும் அண்ணனைப் பார்த்து விக்கித்துப்போய் நிற்பார் தங்கை. அண்ணனோ “என்னடா ஆச்சு? ஒண்ணும் இல்ல… ஒண்ணும் இல்லடா… ஒண்ணும் இல்ல” எனும் வசனங்களை மட்டுமே பேசுவார். யதார்த்தத்தில் எந்த அண்ணனும் தங்கையும் அப்படிப் பேசிக்கொள்வார்களா? ஆனால், படத்தில் அந்தக் காட்சியைப் பார்க்கும்போது அற்புதமானதாகத் தெரியும். அந்தக் காட்சியின் கதாபாத்திர உணர்வுகளை ரசிகருக்கு நடிப்பின் வழியாகவும் இசையின் வழியாகவும் ஒளிப்பதிவின் வழியாகவும் இயக்குநர் உணர்த்தியிருப்பார். இந்தத் தன்மை அதுவரையான தமிழ் சினிமாவின் பாதையிலிருந்து விலகியிருந்தது. அதுதான் மகேந்திரனின் பாதையாக அதன் பின்னர் உருவெடுத்தது. உணர்வுமயமான தருணங்களை அறிவின் தளத்தில் வைத்து அலசிப் பார்ப்பதில் அலாதி ஆனந்தமடைந்தவர் அவர். அதனால்தான் அவை யதார்த்தப் படங்களா எனச் சந்தேகம் கொள்ள வேண்டியதிருக்கிறது.

அவரது படங்களில் திரையில் காட்சிகள் அமைக்கப்பட்ட விதமும் நடிகர்கள் வருவதும் போவதும் வசனங்களைப் பேசுவதும் ரசனைக்குரியவையாக மாறியிருந்தன. அவற்றில் காணப்பட்ட அழகில் சொக்கிப்போயிருந்தனர் தமிழ்த் திரைப்பட ரசிகர்கள்.  அதுவரை பெரிதாக மலராமல் கிடந்த தமிழ் சினிமாவின் மலர்ச்சிக்குக் கைகொடுத்தவர் என்ற வகையில் தொடர்ந்து ஆராதிக்கப்படுகிறார் மகேந்திரன். அவரது பாடல்களில் காணப்படும் மாண்டேஜ் காட்சிகளும் அவர் எந்த அளவுக்கு சினிமாவில் அழகுணர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்தார் என்பதைத் துல்லியமாக உணர்த்துகின்றன. ஆனாலும், சினிமாவில் பாடல்களின் இடம் குறித்து அவருக்குப் பலத்த ஆட்சேபகரமான கருத்துகள் இருந்தன என்பதும் உண்மை. அவருக்குப் பின் வந்த மணிரத்னம், ஷங்கர், வஸந்த் போன்ற பல இயக்குநர்களின் படங்களில் பாடல் காட்சிகள் சிறப்பான இடத்தைப் பெற்றதற்கு மகேந்திரன் பெரிய உந்துதலாக இருந்திருக்கக்கூடும்.  



உரையாடல் என்ற உறைநிலை சினிமாவில் இவரது பாதம் பட்ட பிறகுதான் அது உயிர் தரித்துக்கொண்டது. அவரது படங்கள் ஒவ்வொன்றைப் பற்றியும் நாள்கணக்காகப் பேசிக்கொண்டிருக்கலாம். திரைத்துறையின் நண்பர்கள் சந்தித்து அளாவளாவும்போதெல்லாம் அந்த இடத்தில் மகேந்திரன் பெயரோ அவரது படங்களின் பெயரோ அவர் படைத்த கதாபாத்திரங்களது பெயரோ இடம்பெறாமல் போகாது என்று சொல்லும் அளவுக்கு மகேந்திரன் தமிழ் சினிமாவில் பெரும் தாக்கத்தைச் செலுத்தியிருக்கிறார். ஆனாலும், இந்தியத் தரத்துடனும் உலகத் தரத்துடனும் ஒப்பிட்டுப் பார்த்தால் மகேந்திரனின் இடம் நாம் பெருமைப்படும் அளவுக்கான உயரத்தில் இல்லை என்பதை இந்த இடத்தில் நினைவுபடுத்திப் பார்க்க வேண்டும். அதே நேரத்தில் நூறாண்டு தமிழ் சினிமா வரலாற்றில் மகேந்திரன் அழுத்தமான அத்தியாயங்களை எழுதிச் சென்றிருக்கிறார் என்பதையும் மறுக்க முடியாது. 

அவருக்குக் குடும்பம் என்ற அமைப்பின்மீது அநேகக் கேள்விகள் இருந்துள்ளன என்ற முடிவுக்கு நாம் வருவதற்கான சாத்தியங்களைக் கொண்டவை அவரது ‘உதிரிப்பூக்கள்’, ‘மெட்டி’, ‘நண்டு’, ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’, ‘ஜானி’ போன்ற பெரும்பாலான படங்கள். மரபு, குடும்பம், திருமணம், ஆணாதிக்கம், பெண்களின் துயரம் இவற்றைப் போன்ற விஷயங்களைத் தான் அவர் தொடர்ந்து படைத்திருக்கிறார். அவற்றைக் கருவாகக்கொண்டே அவரது படைப்புகள் உருவாகியிருக்கின்றன. தந்தைமீது சினம் கொண்ட தனயர்களையும், அன்பு கொண்ட காரணத்தால் அவதிக்கு ஆளாகும் பெண்களின் துயரத்தையும் அவருடைய படங்களில் நாம் அதிகமாக எதிர்கொள்ள முடிகிறது.

பெரிய குடும்பத்தின் இனம்புரியாத அரூப சோக இழையைத் தேர்ந்தெடுத்து அதில் கதாபாத்திரங்களைக் கோத்துப் படங்களாக்கிருக்கிறார் மகேந்திரன். அவரது முதன்மைக் கதாபாத்திரங்கள் குடும்பங்களைப் புறக்கணித்தவை அல்லது குடும்பங்களால் துரத்திவிடப்பட்டவை. குடும்பத்திலிருந்து அல்லது ஒரு கூட்டத்திலிருந்து விலகிச் செல்லும் மனநிலையில்தான் அவர் படங்களை உருவாக்கியிருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. ‘மெட்டி’ திரைப்படத்தில் தந்தை மீது வெறுப்புக் கொண்டு ஊரைவிட்டு ஓடிவருகிறார் பட்டாபி. இது தமிழ்நாட்டில் நடைபெறும் கதை. இதே போல் ‘நண்டு’ திரைப்படத்தில் லக்னோவிலிருந்து தகப்பன் மீது கோபம் கொண்டு தமிழ்நாட்டுக்கு வருகிறார் அதிர்ஷ்டம்கெட்ட நாயகன் ராம் குமார் ஷர்மா.  



இந்தியா முழுவதும் குடும்பங்களில் ஆணாதிக்கத் திமிர் கொண்ட தந்தைகள்தாம் இருந்திருக்கிறார்கள் என்று இதை நாம் புரிந்துகொள்ள சாத்தியமிருக்கிறது. மகேந்திரனின் புரிதலும் இதுவாக இருந்திருக்கலாம். குடும்பத்துப் பெண்கள் ஆண்களை எதிர்த்துப் பேச முடியாமலும் அந்த அடிமைத்தனத்திலிருந்து வெளிவர இயலாமலும் தங்களை மாய்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஒருவேளை அவர்கள் வீட்டிலிருந்து வெளியேறினாலும் ஊர்ப் பேச்சுகளிலிருந்து தப்பிக்க வழியின்றித் தங்களை இழந்திருக்கிறார்கள். ‘மெட்டி’யின் கல்யாணி அம்மா தனது கொடுமைக்காரக் கணவனிடமிருந்து விலகித் தனியே தன் மகள்களை வளர்த்துவிட்டபோதும், ஊராரது இழிபேச்சுக்கு ஆளாகித் தனது முந்தானையிலேயே தூக்குப்போட்டு இறந்துவிடுகிறார். குடும்பமும் சமூகமும் பெண்கள் விஷயத்தில் எவ்வளவு பிற்போக்காக இருக்கின்றன என்பதை உணர்ந்து அந்தப் பிற்போக்குத் தனத்தை உணர்த்துவதற்காகவும் அதை மாற்ற இயலும் கலைப் படைப்பாகவுமே தனது படங்களை உருவாக்கியுள்ளார்.

இயக்குநர் மகேந்திரன் கதை எழுதும் திறமை கொண்டிருந்தவர் என்றபோதும் பிறரது கதைகளைப் படமாக்குவதிலும் அவர் ஆர்வம் கொண்டிருந்தார். புதுமைப்பித்தனின் ‘சிற்றன்னை’ தாக்கத்தில்தான் அவர் ‘உதிரிப்பூக்க’ளைப் படைத்தார். நாவலுக்கும் சினிமாவுக்கும் பெரிய வேறுபாடுண்டு. ஆனாலும், உந்துதலைத் தந்த காரணத்துக்காகவே அதைப் படத்தின் டைட்டிலிலேயே கவனப்படுத்தியவர். இலக்கியத்துக்கும் சினிமாவுக்கும் பாலமாக இருந்தவர் மகேந்திரன். அவரது வேர் இலக்கியத்தில் நிலைகொண்டிருந்த காரணத்தாலேயே அவரால் பசுமையான கிளை பரப்பிய உயிர்த்துடிப்பான சினிமாக்களை உருவாக்க முடிந்திருந்தது. அந்த சினிமாக்களின் நிழலில் சினிமா ரசிகர்கள் ஆசுவாசமடைந்துகொண்டே இருப்பார்கள். அந்த நிழல் இருக்கும் வரை மகேந்திரனின் நினைவுமிருக்கும்.

இந்து தமிழ் திசை இதழில் வெளியானது. 

புதன், ஜனவரி 16, 2013

உஸ்தாத் ஹோட்டல்

ரசனையைக் கெடுக்கும் மலையாள அரசியல்

எவ்வளவோ படம் பார்க்க வேண்டும் என்ற ஆசையிருந்தும் கையிலேயே படம் கிடைத்தாலும் கூட பல திரைப்படங்களை பார்க்க முடிவதில்லை. இயல்பான சோம்பேறித்தனம். சும்மா மேற்சுவரை பார்த்துக்கொண்டே கற்பனையில் ஆழ்ந்திருப்பதில் ஒரு சுகம். பன்றி சாக்கடையில் புரள்வது போன்றது அது. இதை எல்லாம் மீறி சில சமயங்களில் ஒருசில படங்களை பார்த்துவிட முடிகிறது. சமீபத்தில் அப்படி பார்த்த ஒரு படம் உஸ்தாத் ஹோட்டல் என்னும் மலையாளப்படம். அன்வர் ரஷீத் இயக்கிய திரைப்படம் இது. ஒருநாள் அதிகாலை இரண்டரை முதல் ஐந்து மணி வரை தூக்கம் தொலைத்த இரவில் இந்தப் படத்தை பார்த்தேன். 

பொதுவாக மலையாளப்படங்களில் பெரிய அளவிலே காட்சிபூர்வ ரசனை இருக்காது என்ற மேம்போக்கான புரிதலை தகர்க்கும் விதமாக அமைந்திருந்தன காட்சிகள். கோழிக்கோடு பகுதி இஸ்லாமிய  வாழ்க்கையின் கூறுகளை தன்னகத்தே கொண்டு படம் நகர்ந்தது. பெரிய அளவிலான சம்பவங்கள் எவையும் இல்லை என்றாலும் பார்ப்பதற்கு எந்தத் தடையும் இல்லாமல் படத்தின் நகர்வு இயல்பாக அமைந்திருந்தது. படத்தின் கதை அது இது என்று எல்லாவற்றையும் எழுத இது அப்படத்தின் மீதான விமர்சனம் அல்ல. இப்படம் குறித்து என்னை பாதித்த சில நினைவுகள் அவ்வளவே. எனவே மிக விரிவாக இதில் எதையும் எழுதிவிட ஆசையுமில்லை, முயற்சியும் இல்லை. 



ஒரு பிரம்மாண்ட ஐந்து நட்சத்திர ஹோட்டல் அருகே அமைந்திருக்கும் சிறிய உணவகம் தொடர்பானது தான் இப்படத்தின் கதை. திலகன் அந்த உணவகத்தை நடத்துகிறார். பேரனோடு திலகனுக்கு உள்ள நெருக்கமும் மகனோடு திலகனுக்கு உள்ள விலகலும் நேர்த்தியாக படமாக்கப்பட்டிருந்தன. மகன் தன்னை புறக்கணித்து பேசும் ஒரு காட்சியில் கையால் கழுத்தை நீவிவிட்டு நகரும் போது அந்த கதாபாத்திரத்தின் அத்தனை இயலாமை அதை அப்படியே உள்வாங்கிக்கொள்ளும் பாங்கு ஒரு வித ஒட்டாத்தன்மை, புறக்கணிப்பு என அத்தனை உணர்ச்சியையும் ஒரே ஒரு உடல் அசைவில் வெளிப்படுத்திவிடுகிறார். 

சமைக்க போன இடத்தில் மணமகளோடு காதல் கொண்டு அவளையே கரம் பற்றியவர் திலகன். கிட்டத்தட்ட அதே வாழ்க்கை திரும்புகிறது பேரனுக்கும். உணவின் முக்கியத்துவத்தை அழகான காட்சிகள் மூலம் திரைப்படமாக அளித்திருக்கிறார்கள் .ரசிக்கும் விதத்தில் அமைந்துள்ளது படம் . ஆனால் படத்தில் வெளிப்பட்டிருக்கும் குரூரமான மலையாள அரசியல் படத்தின் மீது ஒருவித வெறுப்பை ஏற்படுத்திவிடுகிறது.  தமிழன் ஒருவன் பசிக் கொடுமையின் காரணமாக தனது மலத்தையே உண்ணுகிறான் என காட்சிபடுத்தியிருக்கிறார் இயக்குநர். 



தமிழ்த்தேசியவாதியாகவோ தமிழன் என்ற பெருமையோ இல்லாத சாதாரண மனிதனுக்கே எரிச்சலை ஊட்டும் விதமாக அமைந்துவிட்டது இந்தக் காட்சி. அருகருகே இருந்தும் அன்றாட வாழ்வியல் தேவைகளுக்காக ஒருவரையொருவர் சார்ந்திருக்கும் மாநிலங்களாக இருந்தும் ஆழ்மனதில் இவ்வளவு வெறுப்பு இருக்கிறதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி விடுகிறது இந்த திரைப்படம். எனது புரிதல் தவறாகக்கூட இருக்கலாம் தவறாக இருந்தால் உண்மையிலேயே மகிழ்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால் சரியாக இருந்தால்...?

லேட்டஸ்ட்

அமலா எனும் பொன்மான்

தொடர்பவர்