இந்த வலைப்பதிவில் தேடு
செவ்வாய், செப்டம்பர் 09, 2025
இரும்புக் காலத்தின் முன்னோடி தமிழ்நாடு
ஞாயிறு, செப்டம்பர் 07, 2025
வாக்காளப் பெருமக்களே...
![]() |
பொதுச்செயலாளர் வ.மணிமாறன் உரையாற்றுகிறார் |
![]() |
பொதுக்குழுவில் உறுப்பினர்கள் |
அதைத் தொடர்ந்து சங்க நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. ஆகஸ்டு 12 அன்று மாலை 6.00 மணிக்கு வழக்கறிஞர் கார்க்கி வேலன் தேர்தல் அலுவலராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். சங்க அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சங்க நிர்வாகிகளும் உறுப்பினர்களும் பங்கேற்றனர். பின்னர் தேர்தல் அறிவிக்கை வெளியிடப்பட்டது.
![]() |
தேர்தல் அலுவலராக கார்க்கிவேலன் பொறுப்பேற்கிறார் |
சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் 2025 (செப்டம்பர்) -2027 (செப்டம்பர்) ஆம் ஆண்டுக்கான நிர்வாகிகள் தேர்தலுக்கான அட்டவணையும் அதில் இடம்பெற்றிருந்தது. தலைவர் ஒருவர், துணைத்தலைவர் இருவர், பொதுச்செயலாளர், இணைச் செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் ஐவர் ஆகியோரைத் தேர்ந்தெடுக்கத் தேர்தல் நடைபெறும் என்று அறிக்கையில் தகவல் வெளியாகியிருந்தது.
வேட்புமனு தாக்கல் ஆகஸ்டு 20 (20.08.2025) அன்று தொடங்கும் என்றும், வேட்புமனு தாக்கல்செய்வதற்கான இறுதி நாள் ஆகஸ்டு 27 (27.08.2025) என்றும், அதற்கு அடுத்த நாள் அதாவது ஆகஸ்டு 28 (28.08.2025) அன்று வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்படும் என்றும் மனுக்களை ஆகஸ்டு 31 (31.08.2025) அன்று திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் வாக்குப்பதிவு செப்டம்பர் 14 (14.09.2025) அன்று நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நாள்தோறும் மாலை 4 மணி முதல் 7 மணி வரை, ரிச்சி தெருவில் உள்ள எம்.யூ.ஜே. அலுவலகத்தில் தேர்தல் பணிகளில் ஈடுபடும் தேர்தல் அலுவலரிடம் வேட்புமனுவைப் பெறலாம்; பூர்த்திசெய்த வேட்பு மனுவை அளிக்கலாம் எனவும் அந்த அறிவிக்கை தெரிவித்தது. தேவைப்படின் வாக்காளர் பட்டியலையும் அவரிடம் பெற்றுக்கொள்ளலாம் என்றும் வாக்காளர் பட்டியல் ஆகஸ்டு 19 (19.08.2025) அன்று மாலை 5 மணிக்குச் சங்க அலுவலகத்தில் ஒட்டப்படும் என்றும் அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. வேட்புமனு தாக்கல் செய்வோர், வேட்புமனுவை முன்மொழிவோர், வழிமொழிவோர் ஆகியோர் அனைவரும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்த அந்த அறிவிக்கையானது, செப்டம்பர் 14 அன்று காலை 8 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை சங்க அலுவலகத்தில் வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் வாக்குப்பதிவு முடிந்தவுடன், பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தது.
வேட்புமனு படிவத்தைத் தேர்தல் அலுவலரிடம் கொடுக்கும்போது,
1, வேட்புமனு படிவத்தில் அடித்தல் திருத்தல் இருக்கக் கூடாது.
2, வேட்புமனு படிவத்துடன் வேட்பாளர், அவரை முன்மொழிபவர், வழிமொழிபவர் ஆகியோரின் சங்க உறுப்பினர் அடையாள அட்டை மற்றும் பணியாற்றும் நிறுவனத்தின் அடையாள அட்டை ஆகியவற்றின் நகல் (ஜெராக்ஸ்) இணைக்கப்பட வேண்டும்.
3, தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனுவை சமர்ப்பிக்கும் போது, வேட்பாளருடன் முன்மொழிபவரும் வழிமொழிபவரும் உடனிருக்க வேண்டும்.
4, போட்டியிடும் பதவியைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.
5, சங்க உறுப்பினர் அட்டை இல்லாதவர்கள் நடப்பு ஆண்டு சந்தா செலுத்தியதற்கான ரசீதை இணைக்க வேண்டும்
ஆகிய விதிமுறைகளைத் தேர்தல் அலுவலர் சங்கத்தின் அலுவலரீதியான வாட்ஸ் அப் குழு வழியே தெரிவித்திருந்தார்.
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனைக்குப் பின்னர் ஆகஸ்டு 28 அன்று, தலைவர் பொறுப்புக்கு இருவர், துணைத்தலைவர் பொறுப்புக்கு ஐவர், பொதுச்செயலாளராக இருவர், இணைச் செயலாளராக இருவர், பொருளாளர் பொறுப்புக்கு இருவர் என மொத்தம் 13 பேரும், செயற்குழு உறுப்பினர்களாக பதினோரு பேரும் தேர்தலில் போட்டியிட மனுத் தாக்கல் செய்ததாகவும் அதில் செயற்குழு உறுப்பினர் வேட்பாளர் ஒருவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாகவும் தேர்தல் அலுவலர் அறிக்கை வெளியிட்டிருந்தார். இறுதி வேட்பாளர் பட்டியல் ஆகஸ்டு 31 அன்று வெளியிடப்படும் என தேர்தல் அலுவலர் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
தேர்தல் அலுவலர் தெரிவித்திருந்தது போல் இறுதி வேட்பாளர் பட்டியல் ஆகஸ்டு 31 அன்று மாலையில் வெளியிடப்பட்டது. எம்.யூ.ஜே. நிர்வாகிகள் தேர்தல் - 2025இல் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தவர்களில், 23 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதாகவும், துணைத் தலைவர் பொறுப்புக்கு மனுதாக்கல் செய்திருந்த ஒருவரும், செயற்குழு உறுப்பினர் பொறுப்புக்குப் மனுத்தாக்கல் செய்திருந்த ஒருவரும் திரும்பப்பெற்றுவிட்டதாகவும் இறுதியாக 21 பேர் போட்டியிட உள்ளதாகவும் இறுதி வேட்பாளர் பட்டியலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தலைவர் பொறுப்புக்கு 1. வி.செல்வின் வினோத்குமார் (தினகரன்), 2. எஸ்.ஆர்.சங்கர் (டைம்ஸ் ஆப் இந்தியா) ஆகிய இருவரும்; துணைத்தலைவர் பொறுப்புக்கு 1.எம்.முத்தையா (முரசொலி), 2.கே.நாகப்பன் (ஜீ மீடியா), 3.ஏ.பிரதாப் (டைம்ஸ் ஆப் இந்தியா), 4. டி.சரவணன் (சுயாதீனப் பத்திரிகையாளர்) ஆகிய நால்வரும்; பொதுச்செயலாளர் பொறுப்புக்கு 1.பி.கோபி (சன் நியூஸ்), 2. வ.மணிமாறன் (ஜனசக்தி) ஆகிய இருவரும்; இணைச் செயலாளர் பொறுப்புக்கு 1. திருமேனி சரவணன் (சன் டிவி), 2. எம்.வினோத் ராஜா (தினமணி) ஆகிய இருவரும்; பொருளாளர் பொறுப்புக்கு 1. எம்.அய்யனார் ராஜன் (ஆனந்த விகடன்), 2. ஜோசப் ராஜ் (ஈ டிவி பாரத்) ஆகிய இருவரும்; செயற்குழு உறுப்பினர் பொறுப்புக்கு 1.ஜெ.மகேஷ் (சன் டிவி), 2.கே.பிரியா (தினகரன்), 3. வி.ரவிச்சந்திரன் (முரசொலி), 4. ஜி.சசிரேகா (சிகரம் மீடியா), 5. எம்.செந்தில்நாதன் (குமுதம்), 6. எஸ்.சுந்தர்ராஜன் (சன் டிவி), 7. இரா.தமிழ்க்கனல் (அந்திமழை), 8. கே.வெங்கடேஷ் (சன் நியூஸ்), 9. ஏ.விஜயகுமார் (தீக்கதிர்) ஆகிய ஒன்பது பேரும் என மொத்தமாக 21 பேர் தேர்தல் களத்தை எதிர்கொள்ளவிருப்பதாக அந்தப் பட்டியல் தெரிவித்தது.
இவர்கள் உழைக்கும் பத்திரிகையாளர் அணி, ஜனநாயக அணி என இரு அணியாகத் தேர்தலை எதிர்கொள்கிறார்கள்.
செவ்வாய், செப்டம்பர் 02, 2025
ரஜினியோட ராசி நல்ல ராசி
எம்.ஜி.ஆரின் நூறாம் படம் ஒளிவிளக்கு. 1968 ஆம் ஆண்டில் செப்டம்பர் 20 அன்று இப்படம் வெளியாகியுள்ளது. அந்தப் படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது ராண்டார் கை. எம்.ஜி.ஆர் உடல்நலம் குன்றி அமெரிக்க மருத்துவமனையில் இருந்த வேளையில் இந்தப் படத்தின் இறைவா உன் மாளிகையில் பாடல் தமிழ்நாட்டுத் திரையரங்குகளில் எல்லாம் ஒலிக்கவிடப்பட்டது.
சிவாஜி, எம்.ஜி.ஆர். படங்கள் போலவே நடிகர் சிவகுமாருக்கும் நூறாம் படம் பெரிய வெற்றியைப் பெற்றது. அந்தப் படம் ரோசாப்பூ ரவிக்கைக்காரி. 1979 மே 18 அன்று படம் வெளியாகி வெற்றிபெற்றுள்ளது. தேவராஜ் மோகன் இயக்கிய இந்தப் படம் விமர்சனரீதியான வரவேற்பையும் பெற்ற படம்.
கமல் ஹாசன் நடித்த நூறாம் படம் ராஜபார்வை. 1981 ஏப்ரல் 10 அன்று வெளியாகியுள்ளது. ஹாசன் பிரதர்ஸ் என்னும் பெயரில் கமல் முதன் முதலில் தயாரித்த இந்தப் படம் படுதோல்வி. வசூல் ரீதியில் வெற்றிபெறாத இந்தப் படம் விமர்சனரீதியில் கமலுக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கிய இந்தப் படம் வசூலை வாரிக்குவிக்காதபோது, ரசிகர்களின் நினைவில் நின்றுவிட்ட படம்.
நடிகர் ரஜினிகாந்த் நடித்த நூறாம் படம் ஸ்ரீராகவேந்திரர். ரஜினியின் விருப்பப்படி படத்தை கே.பாலசந்தர் தயாரித்தார்; எஸ்பி.முத்துராமன் இயக்கினார். ராகவேந்திர சாமிகள் மீது ரஜினி கொண்டிருந்த பற்றும் பாசமும் இப்படி ஒரு படத்தை உருவாக்க வைத்தது. படம் 1985 செப்டம்பர் 1 அன்று வெளியானது. படம் தோல்விப் படம் தான். விமர்சனரீதியிலும் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. ரஜினிக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்கும் வேண்டுமானால் இது நல்ல படம் என்ற எண்ணத்தைக் கொடுத்திருக்கும். மற்றபடி ரஜினியின் நூறாம் படமாக இருந்திருந்தபோதும், இது பத்தோடு பதினொன்று, அவ்வளவுதான்.
ரஜினி ஆசையோடு எதைச் செய்தாலும் அது உருப்படாது. ரஜினி முதலில் தயாரித்த மாவீரன் படு தோல்வி. நூறாம் படமான ஸ்ரீராகவேந்திரர் தோல்வி. முதல்முதலில் கதை, திரைக்கதை எழுதித் தயாரித்த வள்ளி தோல்வி. எஸ்பி.முத்துராமனுக்காக அவர் செய்துகொடுத்த பாண்டியன் படம் தோல்வி. ஆன்மிக அனுபவமாக உருவாக்கிய பாபா படு தோல்வி. இப்படி ரஜினி விருப்பத்தோடு எதைச் செய்தாலும் அது வெற்றிபெற்றதே இல்லை என்பதன் பெரிய எடுத்துக்காட்டு அவரது ஆன்மிக அரசியல். அது தோற்றுவிக்கப்படாமலேயே படு தோல்வியடைந்தது.
ஞாயிறு, ஆகஸ்ட் 31, 2025
கிண்டலா, கேலியா?
வெகுளி வெள்ளச்சாமியோட புரோகிராம் கிண்டலா கேலியாவுக்கு நல்ல டிஆர்பி ரேட்டிங் கிடைக்குதுன்னு எல்லாருமே சொல்றாங்க. வெள்ளைக்கு இதெல்லாம் நம்பவே முடியல. முதலில் வேலை தேடி அலைஞ்ச காலம் கண்ணு முன்னால வரும். ஒரு முறை ஒரு சினிமா கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தான். ஒரு படத்தோட பூஜை அன்னக்கி வெள்ளப் பூசணியில் நாணயங்கள் போடுறதுக்காக அது மேல கேக் சைஸ்ல வெட்டி எடுத்துட்டு வான்னு வெள்ளைட்ட சொன்னாங்க. வெள்ளக்குப் புத்தி கொஞ்சம் மந்தமா இருந்தாலும், சொன்னத கரெக்டா செய்வான். கேக் மாதிரி வெட்டணும் அவ்வளவு தானேன்னு போன வெள்ள ஒரு தாம்பாளத்தில் பூசணியை வைத்து துண்டு துண்டா கூறு போட்டு டைரக்டர் முன்னால் கொண்டுபோய் பெருமையோட வச்சுட்டான். அங்க நின்ன அத்தனை பேரும் சிரிச்சிட்டாங்க. வெள்ளக்கு எதுவும் வெளங்கல. ஆனா அன்னக்கே அவன வேலையை விட்டுத் துரத்திட்டாங்க.
வியாழன், ஆகஸ்ட் 28, 2025
இப்பல்லாம் யாரு சார் சாதி பாக்குறா?
ரயில் திரிசூலத்தைக் கடந்த நேரத்தில் அந்தப் பெரியவர் அவனிடம் பேச்சுக் கொடுத்தார்.
“நீங்க ரயில்வேல வேலை பாக்குறீங்களா?”
அவன் தலையை மறுத்து ஆட்டியபடியே, “இல்லையே” என்றான்.
“ஃபர்ஸ்ட் க்ளாஸ் டிக்கெட் வச்சிருக்கீங்களா” எனும் அடுத்த கேள்வியை எறிந்தார்.
அப்போது, அவன் அவரைக் கூர்ந்து கவனித்தான். அவரது முதுகுச் சட்டையை மீறி நூலைக் காண வழியில்லை. ஆனால், பிடரியில் சிறிய அளவில் தென்பட்ட குதிரை வால் போன்ற மயிர்க் கற்றையைக் காண முடிந்தது. அவர் இன்னார் என்பதை உணர்ந்துகொண்டதால் சிறு திருவிளையாடலை நடத்த விரும்பினான்.
“நீங்க யாரு, உங்ககிட்ட நான் டிக்கெட் எடுத்தேனா இல்லையான்னு ஏன் சொல்லணும்?”
“நான் சாதாரணமாத்தான கேட்கிறேன், ஏன் கோபப்படுறீங்க?”
“நான் கோபப்படலைங்க... சாதாரணமாத்தான் சொல்றேன்... உங்ககிட்ட ஏன் நான் டிக்கெட்டைக் காட்டணும்?” மூஞ்சியில் புன்னகை தவழச் சொன்னான்.
அவனது பேச்சால் அவருக்கு எரிச்சலும் கோவமும் ஏற்பட்டிருக்க வேண்டும்.
“டிக்கெட் எடுத்தீங்களா?” அதிகாரத் தொனியில் வாலிமீது ராமன் அம்பெய்தது போல் கேள்வியை வீசினார்.
அவன் சிரித்துக்கொண்டே, “இல்லை” என்று உதட்டைப் பிதுக்கிக் காட்டினான்.
“டிக்கெட் எடுக்கல... ஃப்ர்ஸ்ட் கிளாஸ்ல போறீங்க... வாழ்க வளமுடன்” என்று வஞ்சகப் புகழ்ச்சியில் வாழ்த்தியபடி குரோம்பேட்டையில் இறங்கிச் சென்றார்.
அந்த மனிதர் அவன் உள்ளத்தைச் சோற்றகப்பை போல் கிளறிவிட்டார். அவன் மனதில் தந்தை பெரியார் விஸ்வரூபமெடுத்தார். அந்தப் பெரியவர் சின்னதொரு கடுகு போல உள்ளங்கொண்ட மனிதராகத் தோற்றம் கொண்டார். இது நடந்தது 2025இல் எனில், 1925இல் நிலைமை எப்படி இருந்திருக்கும்?
பெரியார் ஏன் கைத்தடியைக் கடுங்கோவத்துடன் சுழற்றினார் என்பது புரிகிறதா? இப்பல்லாம் யார் சார் சாதி பாக்குறான்னு யாராவது சொல்லத்தான் செய்றாங்க. ஆனால், யதார்த்தம் வேறு மாதிரியாகத்தானே உள்ளது.
செவ்வாய், ஆகஸ்ட் 26, 2025
இங்கேயும் ஒரு கங்கை
இத்திரைப்படம் 1984 ஆகஸ்டு 10 அன்று வெளியாகியுள்ளது. அன்றுதான் தாத்தா இறந்த நாள். அந்த ஆண்டு தேர்தல் டிசம்பர் 24 அன்று நடைபெற்றுள்ளது. தேர்தலின்போது, திமுக சார்பில் அச்சிடப்பட்டிருந்த, நண்பரின் நலிவு நீங்கிட நலமார்ந்த வாழ்த்துகள், நாட்டின் நலிவு நீங்கிட உதயசூரியனுக்கு வாக்குகள் என்னும் வாசகங்களைக் கொண்ட, சுவரோட்டியை இலஞ்சியின் சுவர்களில் பார்த்துள்ளேன். எம்ஜிஆரும் கலைஞரும் அருகருகே இருப்பது போன்ற படம் போட்டு அந்தச் சுவரொட்டி அச்சிடப்பட்டிருந்தது. இது குறித்து 2014இல் ஒரு பதிவிட்டுள்ளேன்.
தேர்தல் முடிவுகள் டிசம்பர் 28 அன்று வெளியாகியுள்ளன. அன்றைய மாலை நாளிதழைத்தான் நான் பார்த்திருக்க வேண்டும். கணக்குப்படி பார்த்தால் அப்போது நான் ஏழாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தேன். அரையாண்டுத் தேர்வு விடுமுறையில் படம் பார்க்கப் போயிருக்கிறேன். சரி இனி படம் குறித்த விஷயத்திற்கு வருவோம்.
படத்தின் கதை, வசனம், பி.கலைமணி. மணிவண்ணன் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். ஒரு வில்லை வளச்சு வச்ச புருவமோ பாடல் காட்சியை முன்னர் பார்த்த நினைவு அப்படியே பசுமரத்தாணி போல் உள்ளது. இப்படத்தின் சோலை புஷ்பங்களே பாடல் அப்போது, இலங்கை வானொலியில் நீண்ட நாள்களாக முதலிடம் பிடித்த பாடலாக இருந்தது. நேயர்களின் வாக்குகள் அடிப்படையில் டாப் டென் பாடல்கள் போல ஒரு வரிசையில் பாடல்கள் ஒலிபரப்பப்படும். அதில் இந்தப் பாடல் இடம்பெற்றிருந்தது. பாடலை வைரமுத்து எழுதியுள்ளார். பி.சுசிலாவும் கங்கை அமரனும் பாடியுள்ளனர்.
இப்போது படத்தைப் பார்த்தபோது, சில காட்சிகள் மனத்தில் பதிந்திருந்ததை உணர முடிந்தது. குறிப்பாக, நடிகர் சந்திரசேகர் கையில் ஊன்றுகோலுடன் சண்டையிடும் காட்சி; நடிகை தாராவின் பின்னர் வாத்துகள் போகும் காட்சி... இவை ஓரிரு எடுத்துக்காட்டுகள்.
படம் இப்போது பார்க்கவும் சுவாரசியமாகத்தான் இருந்தது. உணர்வுபூர்வமான திரைக்கதை. மனசவிட மாங்கல்யத்தை முக்கியமா நெனைக்கிற தலைமுறை உள்ளிட்ட வசனங்கள் கலைமணியின் எழுத்துத் திறமையைக் காட்டுகின்றன. படத்தை இயக்கிய வகையில் மணிவண்ணனின் முத்திரையைப் பார்க்க முடிகிறது. படத்தில் வேண்டுதல் தொடர்பான காட்சி ஒன்று இடம்பெற்றுள்ளது. அந்தக் கோவிலில் மனதார வேண்டிக்கொண்டு அதை ஒரு காகிதத்தில் எழுதி அங்கே உள்ள மரத்தில் கட்டித் தொங்கவிட்டால் அது அப்படியே நிறைவேறும் என்பது நம்பிக்கை. அங்கே படத்தின் நாயகனும், நாயகியும் ஒரு காரியத்தை எண்ணித் தனித் தனியே வேண்டிக்கொள்வார்கள். ஆனால், அந்த இரண்டுமே பலிக்க மாட்டா.
முரளி, தாரா, வினுச்சக்ரவர்த்தி, ஒய்.விஜயா, காந்திமதி, செந்தில், ஜனகராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். முக்கோணக் காதல் கதைதான். ஆனால், காதல் கைகூடாவிட்டாலும் கவலைப்பட ஏதுமில்லை. வாழ்க்கை காதலைவிட மிகவும் பெரியது என்பதை உணர்த்தும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது.
செவ்வாய், ஆகஸ்ட் 19, 2025
குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சில குறிப்புகள்
பாஜக அரசியல் ஆளுமையை வேட்பாளராக நிறுத்தியுள்ளது எனில், இந்தியா கூட்டணி அரசியலில் ஈடுபடாத ஒருவரை வேட்பாளராகக் கொண்டுவந்துள்ளது. எப்படியும் வெற்றிபெறப் போவது சி.பி.ராதாகிருஷ்ணன் தான் எனும்போது, அரசியல் சாராத ஒருவரை நிறுத்தியிருப்பதன் மூலம் இந்தியா கூட்டணி சரியாகவே நகர்ந்துள்ளது.
1998 நாடாளுமன்றத் தேர்தலில் கோயம்புத்தூர் தொகுதியில் 4,49,269 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளரான கே.ஆர். சுப்பையனை 1,44,676 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிகொண்டவர். என்னடா, பாஜக அவ்வளவு வாக்குகளை எப்படிப் பெற்றது என அதிசயிக்காதீர்கள். அந்தத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருந்தது பாஜக. அடுத்த தேர்தலில் அதாவது 1999 நாடாளுமன்றத் தேர்தலில் அதே கோயம்புத்தூரில் சி.பி.ராதா கிருஷ்ணன் 4,30,068 வாக்குகளைப் பெற்று, அவரை அடுத்த வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளரான ஆர். நல்லகண்ணுவைவிட 54,077 வாக்குகள் அதிகம்பெற்று வெற்றிபெற்றிருந்தார்.
மீண்டும் 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கோயம்புத்தூர் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் கே.சுப்பராயன் 1,64,505 வாக்குகள் வித்தியாசத்தில் சி.பி.ராதா கிருஷ்ணனைத் தோற்கடித்தார். அந்தத் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வாங்கிய வாக்குகள் 3,40,476. 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் கோயம்புத்தூர் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்ட ராதாகிருஷ்ணன் 3,88,911 வாக்குகள் பெற்றுத் தோல்வியடைந்தார். 2019 ஆம் ஆண்டும் கோயம்புத்தூர் தொகுதியிலேயே போட்டியிட்டார் சி.பி.ராதாகிருஷ்ணன். அப்போது அவர் 3,92,007 வாக்குகள் பெற்று வெற்றிவாய்ப்பைத் தவறவிட்டார்.
2023 ஆம் ஆண்டில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். அப்போது, தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களையும் கூடுதல் பொறுப்பாக அவர் கவனித்துக்கொண்டார். அதன் பிறகு மகாராஷ்டிர மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டவர், தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிறார்.
ஜூலை 21 ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளில் உடல்நலக் காரணங்களைக் கூறி குடியரசு துணைத் தலைவராகவிருந்த ஜகதீப் தன்கர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து குடியரசு துணைத் தலைவர் பதவி காலியானது.வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஆகஸ்டு 21. வேட்பாளர்கள் ஆகஸ்டு 25 வரை தங்கள் வேட்புமனுக்களைத் திரும்பப் பெறலாம். குடியரசு துணைத் தலைவர் தேர்தல் செப்டம்பர் 9 அன்று நடைபெற உள்ளது. வாக்குகள் அன்றே எண்ணப்படும்.
பாஜகவின் அரசியல் நாடகம் வெற்றிபெறாது
குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை பாஜக முன்னிருத்தியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு ஆகஸ்டு 18 அன்று வெளியானது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரை அதுவும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளராக நிறுத்துவதன் மூலம் தமிழ்நாட்டில் திமுகவுக்கு ஒரு நெருக்கடியைத் தரலாம் என பாஜக நினைக்கிறது.
வழக்கம்போல் பாஜக நடத்தும் அதே அரசியல் நாடகம்தான் இது. இந்தத் தேர்தலில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரை நிறுத்துவதால் திமுக அவருக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என பாஜக கோருகிறது. ஆனால், அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ்.காரரான ராதாகிருஷ்ணன் திராவிட சித்தாந்தத்துக்கு எதிரானவர்.
மேலும், ஒருவர் தமிழர் என்பதற்காகவே அவரை ஆதரிக்க இயலுமா? அவர் தமிழ்நாட்டுக்கு என்ன செய்வார்? திராவிட சித்தாந்தம் குறித்த அவரது அணுகுமுறை என்ன? புரிதல் என்ன? என்பவற்றை ஆழ்ந்து பரிசீலித்துத்தானே முடிவெடிக்க இயலும்.
திராவிட சித்தாந்த புரிதல் உள்ள எந்தத் தமிழரும் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் திமுக சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்க வேண்டும் என நினைக்க மாட்டார். கொங்குப் பகுதியின் வாங்குவங்கிக்கான கணக்காகவே பாஜக சிபிஆரை வேட்பாளராக நிறுத்தியுள்ளது என்பதை அரசியலில் அடிப்படை அறிவு உள்ள எவரும் புரிந்துகொள்ள முடியும்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த திருச்சி சிவா இந்தியா கூட்டணியின் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்றும் வதந்தி ஒன்று நேற்று முதலே சமூக ஊடகங்களில் உலவுகிறது. அப்படி அவர் நிறுத்தப்பட்டால் அது சரியான நகர்வாகவே இருக்கும். தமிழர் என்பதால் ராதாகிருஷ்ணனை ஆதரிக்கக் கோரும் பாஜக அப்போது எதுவும் செய்ய இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டுவிடும். பாஜக வேட்பாளரைத் தவிர்ப்பதற்கு ஒரு நியாயமான காரணம் திமுகவுக்குக் கிடைத்துவிடும்.
ஒரு வேளை அப்படி இல்லாத பட்சத்திலும் இந்தியா கூட்டணியின் சார்பில் வேறு ஒரு வேட்பாளரே நிறுத்தப்படும் பட்சத்திலும் திமுக ராதாகிருஷ்ணனை ஆதரிக்காமல் தவிர்ப்பதே தமிழ்நாட்டு நலனுக்கு நல்லது.
ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தில் ஊறிப்போன ஒருவரால் ஒருபோதும் தமிழ்நாட்டுக்கு எந்த நல்லதும் நடைபெறப்போவதில்லை. ஆகவே, தமிழ்நாட்டைச் சார்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசுத் துணைத் தலைவராகத் தேர்வாகப் போவதால் தமிழ்நாட்டுக்கு அதனால் எந்த நல்லதும் நடக்கப்போவதில்லை என்பதை மட்டும் உறுதியாகக் கூற முடியும்.
புதன், ஜூலை 30, 2025
தவறுகளுக்கு வருந்துகிறோம்...
பொதுவாகவே நாளிதழ்கள் ஒற்றைப் பற்றிக் கவலைப்படுவதில்லை; விருப்பத்திற்கிணங்க அதைத் தவிர்த்துவிடுகின்றன. ஒரு நாளிதழின் தலைப்புகளில் மட்டும் தென்படும் தவறுகளைப் பார்க்கலாம் என்று முடிவுசெய்து, நாளிதழைத் திருப்பினால் இரண்டு மூன்று பக்கங்களுக்குள்ளாகவே நமக்கு அயர்ச்சி ஏற்பட்டுவிடுகிறது. ஆனால், தவறுகளுடன் நாளிதழ்களை அச்சாக்கிக் கடைத்தெருவுக்கு விற்பனைக்கு அனுப்பிவிடுவதற்கு அயர்ச்சிகொள்வதேயில்லை நிறுவனங்கள்.
அந்த, இந்த, எந்த என்பவை நிலைமொழியில் இருந்து, வருமொழியில் க,ச,த,ப என்னும் எழுத்துகளில் சொல் தொடங்கினால் ஒற்றிடலாம். ஒற்றிடுதல் பெரும்பிழையன்று.
![]() |
உலகின் எந்தத் தலைவரும் போரை நிறுத்தவில்லை |
கச்சத்தீவை என்னும் சொல்லில் இரண்டாம் வேற்றுமை இடம்பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து தாரைவார்த்து என்னும் சொல் வந்துள்ளது. ஆகவே, ஒற்றிடலாம்.
![]() |
கச்சத் தீவைத் தாரைவார்த்துத் தமிழக மீனவர்களுக்குத் துரோகம் |
சிறப்பு என்னும் சொல் வன்றொடர்க் குற்றியலுகரச் சொல். ஆகவே, அங்கேயும் ஒற்றிடலாம்.
![]() |
சிறப்புப் பிரிவு |
![]() |
இலங்கைக் கடற்படையினரால்... |
இந்தத் தலைப்பில் துவக்கம் என்று பிரசுரிக்காமல் தொடக்கம் என்றும் பிரசுரித்திருக்கிறார்கள். அது வரவேற்கத்தக்கது.
![]() |
குடியரசுத் தலைவருக்குக் கால நிர்ணயம் செய்த தீர்ப்பை எதிர்த்த வழக்கு |
![]() |
புலிகளைக் காப்பதன் மூலம் |
![]() |
செல்போனைப் பறித்த |
![]() |
சாதியக் கொலைகளைத் தடுக்க... |
![]() |
பரிந்துரைக் கடிதத்தைத் தாக்கல்செய்தல் வேண்டும் |
![]() |
வங்க இளைஞர்கள் இருவர் கைது |
எழுவாய் பன்மையாக இருக்கும்போது, தாம் என்னும் பன்மை இடம்பெற்றிருத்தல் வேண்டும்.
![]() |
தீவிரவாதிகள்தாம் |
சனி, ஜூலை 26, 2025
தலைப்பிலேயே ’த’வைக் காணோம்
பொதுவாகவே, நாளிதழ்களில் ஏகப்பட்ட பிழைகள் தென்படுகின்றன. அத்தகைய பிழைகளைக் கவனிக்கக்கூட நேரமில்லாமல் எல்லோரும் இயல்பாக வாசித்துவிட்டுச் சென்றுவிடுகிறார்கள். ஒற்றுப் பிழையைக்கூட விட்டுவிடலாம். எழுத்துப் பிழைகளே மலிந்துவிட்டன என்பது வருந்தம் தரத்தான் செய்கிறது.
இன்றைய இந்து தமிழ் திசை நாளிதழைப் பிரித்து வாசித்தபோது, தலைப்பிலேயே தென்பட்ட இந்தப் பிழை கண்ணை உறுத்தியது. நாளிதழில் யாருக்குமே கண்ணை உறுத்தவில்லை போலும். அப்படியே பிரசுரித்திருக்கிறார்கள்.
திங்கள், ஜூலை 21, 2025
விக்ரம் சுகுமாரன்: மதயானைக் கலைஞன்
ஆதலினால் ஏடெழுதும் வாழ்க்கையிலே…
வெள்ளி, ஜூலை 18, 2025
எமர்ஜென்சி எனும் நெருக்கடி நிலை
இந்தியாவின் பிரதமராகவிருந்த, இரும்புப் பெண்மணி என அறியப்பட்டிருந்த இந்திரா காந்தி ஆட்சியின் போது, 1975 ஜூன் 25 அன்று இந்தியா கண்ட எமர்ஜென்சி அதன் பின்னான அரசியலை ஒரு புரட்டு புரட்டியுள்ளது. நாட்டின் கருத்துரிமைக்கு வேட்டுவைத்த எமர்ஜென்சி குறித்த இலக்கியப் பதிவுகள் மிகச் சிலவே. அவற்றில் ஒன்று அசோகமித்திரன் எழுதிய இன்று.
நாவலின் தலைப்பு இன்று என்றாலும் அது எக்காலத்துக்குமானது என முன்வைக்கப்படுகிறது. தேவிபாரதி போன்ற எழுத்தாளர்கள் எழுதும் சிறுகதைகளை ஒப்பிடுகையில் இதை நாவல் என்று சொல்லவே முடியவில்லை. அவ்வளவு சிறிய நாவல். கிழக்குப் பதிப்பகம் வெளியிட்ட இன்று நாவலையே படித்தேன். முதலில் நாவலில் தென்பட்ட பிழைகளைத் தாம் சொல்ல வேண்டும். வாக்கியப் பிழை, ஒருமை பன்மைப் பிழை என பக்கத்துக்கு ஒன்று தென்பட்டது. இதற்குக் காரணம் எழுத்தாளரா பதிப்பகமா என்பது தெரியவில்லை. வாசிக்கும் வேளையில் கண்ணில் வந்து விழும் துரும்புகள் போல் பிழைகள் உறுத்திக்கொண்டேயிருந்தன.
பிழைகள் காரணமாகவோ நாவல் காரணமாகவோ தெரியவில்லை. இதுவரை அசோகமித்திரன் நாவல்கள் தந்திருந்த இதத்தை இந்நாவல் தரவில்லை. இலக்கியரீதியிலேயே இதம் என்னும் சொல்லைத் தந்துள்ளேன். மற்றபடி அசோகமித்திரன் நாவல்களில் நொய்மைகளுக்குப் பஞ்சமிருக்காது என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை.
வாழ்வை அதன் சிக்கலைச் சற்று மேட்டிமைத்தனத்துடன் அதே வேளையில் மத்தியதரவர்கத்தின் கையறுநிலையிலேயே கண்டு பதிவுசெய்பவராகவே தோற்றம் கொள்கிறார் அசோகமித்திரன். பெரிய சிக்கல் இல்லாத தமிழ்த் தொடர்களைக் கையாண்டு தான் நாவல்களை நகர்த்திச்செல்கிறார். ஆனால், உள்ளடக்கரீதியாக அவருக்குச் சூழல்மீது உள்ள ஒவ்வாமை அதீதக் கசப்பாக எழுத்துகளின் அடியே நீங்காத வடுவாக வெளிப்பட்டுள்ளது. போராட்டங்கள் குறித்த அவரது பார்வை இந்நாவலில் சற்றுக் கீழாகவே உள்ளது. எது எதற்கோ போராடுகிறார்கள் இவை எல்லாம் தேவையா எனும் சத்தம் வெறும் முனகலாகக் கேட்கிறது.
நாவலின் பின்னட்டைக் குறிப்பு இந்நாவலைக் கூறுவது போல் வடிவரீதியில் பெரிய முற்போக்கான நாவலாக இதைக் கருத இயலவில்லை. நெருக்கடி நிலை எப்படியான எண்ணத்தை இந்தியாவுக்குத் தந்ததோ அப்படியான எண்ணத்தைத்தான் இந்நாவலும் தந்துள்ளது. இவை எல்லாம் ஏன் ஏற்படுகின்றன இவற்றால் என்ன நன்மை என்னும் ஒருவித அலுப்பும் சலிப்புமான எண்ணத்தையே இந்நாவல் தோற்றுவிக்கிறது. நிராசையும் கசப்புமான சூழலில் சிக்கித் தவிக்கும் கதாபாத்திரங்கள் மூச்சுவிடவே அல்லல்படுகின்றன. வாசிக்கும்போது நாமும்கூட இழுத்து இழுத்து மூச்சுவிட வேண்டியதிருக்கிறது.
அசோகமித்திரனின் நல்ல நாவல் என முன்மொழியப்பட்டாலும், நாவலை வாசித்த பின்னர் அதை வழிமொழியும் வாய்ப்பை நாவல் தரவில்லை. மற்றபடி நெருக்கடி நிலை குறித்து வாசிக்க வேண்டிய நாவலே. என்னதான் இருக்கிறது என்பதாவது வாசிப்பில் தெரிந்துவிடுமே.
செவ்வாய், மே 20, 2025
ஒரு விக்ரம் பத்து கமல்ஹாசன்
வர வர தமிழ்ப் படங்கள் பார்க்கும் ஆசையே விட்டுப்போய்விடும்போல. ஏற்கெனவே கொரோனா காலத்துக்குப் பிறகு தியேட்டரில் போய் படம் பார்க்கும் பழக்கம் கிட்டத்தட்ட போய்விட்டது. 2023 ஆம் ஆண்டில் தியேட்டரில் இரண்டு படங்கள் பார்த்தேன். அதில் ஒன்று தமிழ்ப் படம். அது உதயநிதி நடித்து மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன். படம் சுமார் ரகம். அடுத்த ஆண்டான கடந்த ஆண்டில் அதாவது 2024இல் இவ்வளவுக்கு விளக்கம் எழுதுவதற்குப் பதில் 2024இல் என்றே எழுதியிருக்கலாம். சரி விடுங்கள் எழுதியாயிற்று இருந்துவிட்டுப் போகட்டும்.
2024இல் தியேட்டரில் பார்த்த ஒரே படம் லப்பர் பந்து. அந்தப் படத்தைப் பார்த்தபோது, முள்ளும் மலரும் படம் நினைவில் எழுந்தது. அதே கருதான். அதில் அண்ணன் தங்கை. இதில் அப்பா மகள். கிரிக்கெட் அது இதுன்னு படம் போரடிக்காமல் போனது என்றபோதும், புதிதாக படத்தில் ஒன்றுமில்லை என்ன எண்ணமே வந்தது. படத்தில் ஒரே காதல் சோகப் பாடலில் அப்பா மகள் இருவரையும் கொண்டு காட்சி அமைத்திருந்தது மட்டுமே புதுமையாக இருந்தது.
இந்த ஆண்டில் இதுவரை பார்த்த எந்தத் தமிழ்ப் படமும் பெரிதாக ஈர்ப்புக்குரியதாக இல்லை. அதுவும் இப்போது தியேட்டருக்குச் செல்வதே இல்லை. படம் வெளியான நான்கு வாரத்தில் படம் ஓடிடியில் வந்துவிடுகிறது. ஆகவே, வீட்டிலிருந்தே படத்தைப் பார்த்துவிட முடிகிறது. தியேட்டருக்குச் செல்வதே தேவையில்லாத ஆணியாகிவிட்டது. முந்தைய வாக்கியத்தில் தேவையில்லாத ஆணி என்னும் பயன்பாட்டைப் போலவே முழுப் படத்திலும் வசனம் இடம்பெற்றிருந்த படம் அஜித் குமார் நடித்த Good Bad Ugly. படம் Good ஆக இல்லாவிட்டாலும் Bad ஆகவாவது இருந்திருக்கலாம். ஆனால், Ugly ஆக இருந்தது.
படம் முழுக்க அண்ணன் யார் தெரியுமா அண்ணன் யாரு தெரியுமான்னு உதார் இருந்துகிட்டே இருக்கு. படத்துலயோ ஒரு சரக்கும் இல்ல. எந்தத் தைரியத்துல இப்படியெல்லாம் படம் எடுக்குறாங்கன்னுதான் தோணுச்சு. ஜெயில் காமெடி குரு சிஷ்யன் படத்துல ஏற்கெனவே பார்த்துட்டோம். நாயகி வில்லன்களை நொறுக்கச் சொல்லும் காட்சி நல்லவனுக்கு நல்லவன் படத்திலேயே பார்த்துவிட்டோம். படம் முழுக்க கலர் கலரா ட்ரெஸ் போட்டுட்டு ஸ்டைலா வலம் வர்றாரு அஜித். அதுதான் நடிப்புன்னா அஜித்தோட நடிப்பு பிரமாதம்னு சொல்லணும்.
சரி இதுதான் இந்த லட்சணம்னு டூரிஸ்ட் ஃபேமிலி படம் நல்லாருக்கும்னு எல்லாரும் சொல்றாங்களேன்னு அதப் பார்க்க உட்கார்ந்தா அது அதுக்கு மேல. கொலையா கொல்றாய்ங்க. முன்னாடி தொலைக்காட்சியில செவ்வாய்க்கிழமை நாடகம் வருமே அது மாதிரியான மாடர்ன் ட்யூஸ்டே டிராமா. நெஞ்சை அநியாயத்துக்கு நக்கி நக்கி தோல உரிச்சு தொங்கவிட்டுட்டாங்க. படம் நல்லா இல்லன்னு சொன்னா நமக்கு மனிதநேயமே இல்லன்னு குரூரமா சொல்வாங்க. ஆனா, படம் நல்லாவே இல்லன்னு கூசாம சொல்லலாம். அந்தச் சின்ன பையன் மட்டும் படத்துல ஆறுதல். அதுவும் இல்லாட்டி சூர மொக்கைன்னு துணிஞ்சு சொல்லலாம்.
விக்ரம் நடித்த வீர தீர சூரன் நல்ல கமர்ஸியல் படம். நீட்டான திரைக்கதை. படம் எந்தத் தொய்வும் இல்லாம இருந்துச்சு. நடிகர் விக்ரமை எல்லை மீறாமல் வரையறைக்குள் வைத்து படத்தை எடுத்த விதத்துக்கே இயக்குநருக்கு ஒரு சபாஷ் சொல்லணும். ஏனெனில், அண்மைக்காலத்தில் நடிகர் விக்ரம் திரையில் பத்து கமலஹாசனா பரிணாமம் எடுக்கிறார். தாங்க முடியல. ஆனால், இந்தப் படத்தில் அவருடைய நடிப்பு இயல்பானது. எந்தவிதமான மிகையும் இல்லாமல் அப்படியே மலர்ந்த அதிகாலைபோல் உறுத்தலின்றி இருந்தது. இதுவும் நடிப்புதான் சார். இப்படி நடிச்சா போதும், தங்கலான் மாதிரி அநியாயத்துக்கு நடிச்சா ரசிகர்கள் பாவம் இல்லயா? கொஞ்சம் அவங்க நிலைமையையும் யோசிச்சுப் பாருங்க. வெளியில தொல்லை தாங்க முடியாம தியேட்டருக்கு வர்ற அவன ரத்தம் கக்க வைக்கிறது நல்லாவா இருக்கு? விக்ரம் நடிச்ச இந்தப் படம் சரியா ஓடல்லன்னு சொல்றாங்க. ஏற்கெனவே முன்னாடி அவர் நடிச்ச மஜா படமும் அப்படித்தான். நல்லா இருந்துச்சு ஆனா படம் ஓடல. அவர் நடிச்ச சாமி, தூள் மாதிரி கரம் மசாலாதான் ரசிகருக்குப் பிடிக்குது போல.
புதன், ஏப்ரல் 30, 2025
இலக்கற்ற வாசிப்பு சரியா, தவறா?
இந்தப் பதிவை வாசிக்கத் தொடங்கும் உங்களிடம் அவன் உரையாடத் தொடங்குகிறான். நீங்கள் ஆணா, பெண்ணா அவனுக்கு நீங்கள் உறவா நட்பா பகையா எதுவும் அவனுக்குத் தெரியாது. ஒருவேளை இப்போதே நீங்கள் இந்தப் பதிவை வாசிப்பதிலிருந்து விலகியிருக்கலாம். ஆனாலும், அவன் உங்களுடன்தான் உரையாடுகிறான். இது ஒரு விதமான மாய விளையாட்டு. யாருமே இல்லாத சூழலிலும் யாரையாவது உருவகித்துக்கொண்டு உரையாடுகிறான். அந்த யாரோ நீங்களாக இருக்கலாம்; நீங்களாக இல்லாமலும் இருக்கலாம். நீங்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவனது உரையாடல் தொடங்கிவிட்டது.