இந்த வலைப்பதிவில் தேடு

சனி, ஜூலை 26, 2025

தலைப்பிலேயே ’த’வைக் காணோம்

பொதுவாகவே, நாளிதழ்களில் ஏகப்பட்ட பிழைகள் தென்படுகின்றன. அத்தகைய பிழைகளைக் கவனிக்கக்கூட நேரமில்லாமல் எல்லோரும் இயல்பாக வாசித்துவிட்டுச் சென்றுவிடுகிறார்கள். ஒற்றுப் பிழையைக்கூட விட்டுவிடலாம். எழுத்துப் பிழைகளே மலிந்துவிட்டன என்பது வருந்தம் தரத்தான் செய்கிறது.  

இன்றைய இந்து தமிழ் திசை நாளிதழைப் பிரித்து வாசித்தபோது, தலைப்பிலேயே தென்பட்ட இந்தப் பிழை கண்ணை உறுத்தியது. நாளிதழில் யாருக்குமே கண்ணை உறுத்தவில்லை போலும். அப்படியே பிரசுரித்திருக்கிறார்கள். 


எங்கே பிழை எனத் தேடுகிறீர்களா... தலைப்பைப் பாருங்கள்...  


திங்கள், ஜூலை 21, 2025

விக்ரம் சுகுமாரன்: மதயானைக் கலைஞன்


மரணிக்கப்போவது எங்கள் உடல்கள்; நாங்களல்ல – பாலுமகேந்திரா

இசையமைப்பாளர் இளையராஜா, இயக்குநர் மணிரத்னம் ஆகியோரது பிறந்தநாள்கள் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்திருந்த 2025 ஜூன் 2 அன்று காலையில், எதிர்பாராத அதிர்ச்சியாக இயக்குநர் விக்ரம் சுகுமாரனின் மரணச் செய்தி திடுமென வந்து விழுந்தது. மேதாவிலாசத்துக்கும் அற்பாயுளுக்கும் அப்படி என்னதான் நமக்கு எட்டாதபடி ரகசிய உறவோ? எனத் தனது ஜே.ஜே:சில குறிப்புகள் நாவலில் எழுத்தாளர் சுந்தர ராமசாமி கேள்வி எழுப்பியிருப்பார். அந்த நாவலை வாசித்த பின்னர் பல அகால மரணம் அந்தக் கேள்வியை நினைவூட்டிச் செல்லும். ஆனாலும், சிலரது மரணம் நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல் சில நொடிகள் சித்தத்தைக் கலங்கவைத்துவிடும். அப்படிச் சட்டென மனத்தில் கனத்த கல்லெறிந்த மரணம் இயக்குநர் விக்ரம் சுகுமாரனுடையது.

அவருடன் ஏற்பட்ட சிறு அறிமுகம் நட்பென்று சொல்லத்தக்க நிலையை அடைந்ததற்கு அவரே காரணம். அவரை அண்ணா நினைவு நூற்றாண்டு நூலகத்தில் சில மாதங்களுக்கு முன்னர் நண்பர் செல்வ புவியரசனுடன் தற்செயலாகச் சந்தித்தபோது, இதுதான் அவரை நேரில் இறுதியாகப் பார்க்கும் சந்தர்ப்பம் என்பதற்கான எந்தத் தடயத்தையும் மனம் உணரவே இல்லையே? வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த மண்ணில் நமக்கே இடமேது எனக் கேட்ட கவிஞர் கண்ணதாசனும், நடிகர் முத்துராமனும் அடுத்தடுத்த நாள்களில் மறைந்த செய்தியைச் – முன்னவர் 1981 அக்டோபர் 17 அன்றும், பின்னவர் அக்டோபர் 16 அன்றும் - எட்டு வயதில் கேள்விப்பட்டபோது, மரணம் பற்றிய எந்தவொரு அடிப்படை அறிதலும் புரிதலும் ஏற்பட்டிராத அந்த வயதில் ஏதோ ஓர் இனம்புரியாத கலக்கத்தை உணர முடிந்தது. கண்ணதாசன் 54 வயதிலும் முத்துராமன் 52 வயதிலும் உலகிலிருந்து விடைபெற்றிருந்தனர். அந்த வயதுக்குள் பெரும் புகழையும் தம் துறையில் மதிப்பு மிக்க இடத்தையும் சம்பாதித்துக்கொண்டனர். விக்ரம் சுகுமாரனுக்கும் இயற்கை சற்றுக் கருணை காட்டியிருக்கலாம். அவர் தனது துறையில் இன்னும் ஏராளம் சாதிக்க வேண்டியவர் அந்த ஆற்றல் அவருக்கு இருந்தது. ஆனால், இயற்கை கருணை காட்டாதது திரைத்துறைக்கு இழப்பென்றுதான் உணர்வு சொல்கிறது.

தமிழ்நாட்டில் ஒருவரது சராசரி ஆயுள் காலம் தற்போதைய நிலவரப்படி 75 வயது என்னும் சூழலில் அவர் இன்னும் ஐம்பது வயதைக்கூடத் தொட்டிருக்கவில்லை. அவரது சுய விவரத் தகவல்கள் பொதுவெளியில் தெளிவாக இல்லை. அவரது வயது 47, 48, 49 என வெவ்வேறுவிதமான தகவல்களே கிடைக்கின்றன. ஏப்ரல் 11 அன்று பிறந்த அவரது பிறப்பு குறித்த தகவல் விக்கிபீடியாவில் கூட ஒழுங்காக இல்லை. தமிழ்த் திரைப்பட வரலாற்றில் மதயானைக் கூட்டம் என்னும் ஒரு திரைப்படத்தின் மூலம் நிலையான இடம்பெற்றுவிட்ட ஓர் இயக்குநருக்கு இதுதான் நிலையா? தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திரைப்படத் துறையானது அரைகுறை நடிகர்கள்கூட மாநிலத்தை ஆள ஆசைப்படும் அளவுக்கு அரசியல்ரீதியான செல்வாக்கைப் பெற்றுத் தரும் களமாகவே புரிந்துகொள்ளப்பட்டுள்ள சூழலிலும், இப்படியான நிலைமை தொடர்வது என்பது ஆவணப்படுத்துதலில் தமிழர்தம் சுணக்கத்தையே சுட்டுகிறது.


மதயானைக் கூட்டம் திரைப்படத்தின் முதன்மைக் கதாபாத்திரமான ஜெயக்கொடித் தேவர் அப்படத்தில் தன் மகளுக்கு நடத்திவைத்த சிறப்பான திருமணத்தை, நினைத்த அளவுக்குச் சிறப்பாகச் செய்துவைக்க இயலவில்லையே எனும் மனத்தாங்கலில் மாரடைப்பால் உயிர்விட்டிருப்பார். திரைப்படக் கலைமீது பேரார்வம் கொண்டிருந்த விக்ரம் சுகுமாரனும் மதுரையில் தயாரிப்பாளர் ஒருவரிடம் கதை சொல்லிவிட்டுச் சென்னைக்குப் பேருந்தில் திரும்பிய வேளையில் மாரடைப்பால் உயிரை விட்டிருந்தார். இன்னும் தம் திறனை முழுமையாக வெளிப்படுத்தும் படைப்பொன்றை உருவாக்கும் வாய்ப்பு கிட்டவில்லையே என்னும் மனத்தாங்கல் அவருக்கும் இருந்திருக்கக் கூடும். தமிழ்த் திரைப்பட உலகுக்குப் பெருமைசேர்க்கும் பல படங்களை உருவாக்கும் திறன் மிக்க படைப்பாளி அவர் என்பது மரணத்துக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. எந்த எதிர்க்கேள்வியுமற்று இயற்கையின் ஏவலுக்குப் பழகிய விசுவாசமான வேலையாள்தானே மரணம்?

இயக்குநர் ருத்ரய்யா, S. கணேச ராஜ் வரிசையில் இரண்டு படங்களை இயக்கி அதில் ஒன்றால் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் என்றென்றும் இடம்பிடித்துவிட்ட திருப்தியில் சென்றுவிட்டாரோ என்னவோ? அவள் அப்படித்தான் மூலம் ருத்ரய்யாவும் சின்னத்தாயி வழியே S. கணேச ராஜும் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் நிலைத்துவிட்டர்கள். ருத்ரய்யா இரண்டாவதாக இயக்கிய கிராமத்து அத்தியாயம், S. கணேச ராஜின் மாமியார் வீடு இரண்டும் ரசிகர்கள் மனத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாதவை. இவர்கள் இருவருக்கும் இல்லாத சிறப்பு விக்ரம் சுகுமாரனுக்கு உண்டு. இவர்கள் இருவராவது தமது படங்களுக்கு இளையராஜாவின் இசையைப் பக்க பலமாகக் கொண்டிருந்தார்கள். ஆனால், விக்ரம் சுகுமாரனோ எந்தப் பெரிய தொழில்நுட்பக் கலைஞரையும் சாராது தனது கலைத் திறனை மட்டும் நம்பிக் களமிறங்கி அதில் வெற்றியை நோக்கி நகர்ந்தவர்.

தமிழ் சினிமாவில் பாரதிராஜா பரம்பரை என்று சொல்லக்கூடிய அளவில் இயக்குநர்கள் அவரிடம் பணியாற்றிவிட்டுத் தனியே இயக்குநராகியிருக்கிறார்கள். மணிவண்ணன், கே.பாக்யராஜ் உள்ளிட்ட பலரைக் குறிப்பிட முடியும். அதே போல் பாலுமகேந்திராவிடமிருந்தும், பாலா, சீனு ராமசாமி, வெற்றிமாறன் வரிசையில் இயக்குநரானவர் அவர். தனது ஜூலி கணபதி படத்தை, ‘தமிழ் சினிமாவை அதன் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல இருக்கும் என் இளைய தலைமுறைக்கு’ சமர்ப்பித்த பாலுமகேந்திராவின் சீடர்களில் ஒருவர் விக்ரம் சுகுமாரன். பாலுமகேந்திராவின் கதைநேரம் உள்ளிட்ட சில படைப்புகளில் பணியாற்றியுள்ளார். பின்னர் வெற்றிமாறனுடனும் பணியாற்றி, அவரது பொல்லாதவன், ஆடுகளம் போன்ற படங்களின் உருவாக்கத்தில் பங்களித்து விடைபெற்றுத் தனியே இயக்குநரானவர் விக்ரம் சுகுமாரன். போர்ச் சூழலால் வதைபட்ட இலங்கையிலிருந்து பாலுமகேந்திரா திரைப்படத்துறைக்கு வந்திருந்தார் என்றால், விக்ரம் சுகுமாரனோ வறட்சி வாட்டியெடுக்கும் இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து அத்துறைக்கு வந்தவர்.


“என்னுடைய சினிமாவிலே ஏதோ ஒரு தனித்தன்மை இருக்கிறது என யாராவது சொன்னால் அது எனக்கும் இலக்கியத்துக்குமான பரிச்சயம்” என்கிறார் பாலு மகேந்திரா ஒரு நேர்காணலில். அப்படிப்பட்ட இயக்குநரிடம் பாடம் பயின்ற விக்ரம் சுகுமாரன் உலக இலக்கியம், உலகத் திரைப்படம் என்றெல்லாம் கதைபேசாமல் உள்ளூர் படங்களான கிழக்குச் சீமையிலே, தேவர் மகன் போன்ற படங்களைப் பார்த்தே திரைத்துறைக்கு வந்ததாகக் கூறியுள்ளார். இயக்குநர் மிஷ்கின் போன்றவர்கள் மேடையில் ஏறி உலகப் படம், உலக இலக்கியம் என்றெல்லாம் பேசுவதைக் கேட்பதற்குப் பெரிய வியப்பாக இருக்கும். அதைவிட வியப்பு அவர்களது படங்களைப் பார்க்கும்போது ஏற்படும். அதற்குக் காரணம் உலக இலக்கியம், உலக சினிமா என வீறாப்பாகப் பேசும் அவர்களது படங்களில் அவற்றின் சிறு தடயமும் தென்படாத வகையில் அசல் தமிழ் சினிமாவை உருவாக்கிவிடுவதே. ஆனால், பேராரவாரமின்றி விக்ரம் சுகுமாரன் தமிழ்ச் சமூகத்தின் ஒரு பிரிவினரின் பண்பாட்டை விமர்சனரீதியில் திரைக்கதையாக்கி அதை ஒரு கலை ஆவணமாக மதயானைக் கூட்டம் என்னும் பெயரில் படைத்துள்ளார். சாதிப் பெருமிதம் பொங்கிய கிழக்குச் சீமையிலே, தேவர் மகன் போன்ற படங்கள் பெரிய வெற்றியைப் பெற்ற தமிழ்நாட்டில் சாதியை விமர்சித்த படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை என்பது நகைமுரணே.

இயக்குநர் விக்ரம் சுகுமாரனை நேர்காணல் ஒன்றுக்காக நுங்கம்பாக்கத்தில் இராவண கோட்டம் திரைப்பட அலுவலகத்தில் சந்தித்த வேளையில், அவர் திரைப்படத் துறைக்கு வந்த கதையை மிகவும் எளிமையாக, வெள்ளந்தியான மொழியில் விரிவாகப் பேசினார். மிகவும் சரியான விதத்தில் உருவாக்கப்பட்டும் மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட திரைப்படமான மதயானைக் கூட்டம் வெளியான வேளையில் அது சரிவரக் கவனிக்கப்படவில்லை என்ற ஆதங்கம் அவருக்கு இருந்தது. தமிழ்த் திரைப்படத்தில் வழக்கமாக வெளிப்படும் மிகைப்படுத்துதல் எதுவுமின்றி மிகவும் நுட்பமான முறையில், திரைக்கதை அமைத்து அவர் உருவாக்கிய முதல் படமான அது வெளியான தருணத்தில் பெரிதும் கவனிக்கப்பட்டிருந்தால் விக்ரம் சுகுமாரன் என்னும் இயக்குநர் அப்படம் போன்ற மேலும் பல படங்களைத் தந்திருக்கக்கூடும். ஆனால், இயற்கையின் கணக்கு வேறுவிதமாக அமைந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். அவர் இறுதியாக இயக்கிய தேரும் போரும் படம் என்னவானது என்பது விடையற்ற கேள்வியாகவே தொக்கி நிற்கிறது.

நுண்ணுணர்வுகளால் இழைக்கப்பட்ட நுட்பமான ஒரு திரைப்படத்தைக் கண்ணுக்குத் தெரியாமல் கழுத்தை நெரித்த சமூகத்தை எதிர்கொண்டதாலோ என்னவோ விக்ரம் சுகுமாரன் அடுத்து உருவாக்கிய இராவண கோட்டம் அந்த அளவுக்கு நுட்பமாக உருவாக்கப்படாமல் வழக்கமான தமிழ்ப் படப் பாதையில் பயணித்துவிட்டது. ஒரு கலைஞன் சுதந்திரமான மனநிலையில் சிந்தித்துக் கதை திரைக்கதையை எழுதி, உயிரோட்டமான வசனங்களைப் படைத்துப் படமாக்கினால் உருவாகும் படத்துக்கும், அதே கலைஞன் சமூகத்தின் அழுத்தத்துக்கு உட்பட்டு உருவாக்கும் படத்துக்குமான வேறுபாட்டை எளிதில் உணர வேறெதுவும் செய்ய வேண்டாம். அடுத்தடுத்து, மதயானைக் கூட்டத்தையும், இராவண கோட்டத்தையும் பார்த்தால் போதும். ஒரு படைப்பாளிக்கு ஏற்படும் நெருக்கடியை உணர்ந்துகொள்ளலாம். இவ்வளவுக்கும் விக்ரம் சுகுமாரனின் இரண்டாம் படம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம். தமிழ்த் திரைப்பட உலகில் திரைக்கதை மன்னன் எனக் கொண்டாடப்பட்ட கே.பாக்யராஜ் தன் மகனுக்கு நல்ல படம் ஒன்றை உருவாக்கித்தரும் பொறுப்பை விக்ரம் சுகுமாரனிடம் வழங்கியிருந்தார் என்றால் விக்ரம் சுகுமாரனின் திரைக்கதை மீது அவர் எந்த அளவுக்கு நம்பிக்கை வைத்திருந்திருப்பார். அந்தப் படமும் தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் பிரச்சினை ஒன்றை மையமாகக் கொண்டிருந்தது.

விக்ரம் சுகுமாரன் தனது மதயானைக் கூட்டம் படத்துக்கு ஒரு நேர்மறையான விமர்சனம்கூட வரவில்லை என்று ஆதங்கப்பட்டிருக்கிறார். ஆனால், சுப. குணராஜன் காட்சிப்பிழை இதழில் எழுதிய சாதீய சினிமாவும் கலாச்சார சினிமாவும் என்னும் கட்டுரை அப்படத்தை நேர்மறையான கண்ணோட்டத்துடன் அணுகி, அதன் இனவரைவியல் கூறுகளையும்,படமாக்க உத்திகளையும் செய்நேர்த்தியையும் தெளிவாகச் சுட்டிக்காட்டியது. அதே தலைப்பில் உருவாக்கப்பட்ட நூலிலும் இந்தக் கட்டுரை இடம்பெற்றுள்ளது. ஆவணத்தின் துல்லியமும் புனைவின் நேர்த்தியும் சரியான விகிதத்தில் கலந்து அசலான திரைப்படமாக உருவாக்கப்பட்டிருந்த அத்திரைப்படத்தைச் சரியாக அடையாளம் கண்டுகொண்ட விமர்சனம் அது.

(2025 ஜூலை காக்கைச் சிறகினிலே இதழில் வெளியானது) 

ஆதலினால் ஏடெழுதும் வாழ்க்கையிலே…

தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் இந்து தமிழ் திசை வணிகத்துக்கு வலுச்சேர்க்கவும்; தமிழ்ப் பற்றுக் கொண்ட நாளேடாய்க் காட்டிக்கொள்ளவும் ‘தமிழால் இணைவோம்’ என்னும் சொற்றொடரைத் தனது நாளேட்டின் முதல் பக்கத்தில் தலைப்புக்கு நடுவில் இலச்சினையில் அச்சிட்டுள்ளது. சம்ஸ்கிருதத்தால் சங்கமமாவோம் எனத் துணைத் தலைப்பிடும் சூழல் நம் நிலத்தில் இல்லை என்பது ஒரு காரணமாக இருக்கலாம். அப்படி ஒருவேளை துணைத் தலைப்பிட்டு நாளேடு இப்போது அளிக்கும் செய்திகளையே அளித்திருந்தாலும், பெரிய வேறுபாடு தோன்றியிருக்காது. பெரும்பாலான நாள்களில், தமிழ்ச் சமூகத்தின் நலனுக்காக நடத்தப்படும் தோற்றம்தரும் வகையில் இந்நாளேட்டின் இணைப்பிதழ்க் கட்டுரைகளும், நடுப்பக்கக் கட்டுரைகளும் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பிரசுரமாகும் அதே நேரத்தில் இந்நாளேட்டின் செய்திகளும் செய்திக் கட்டுரைகளும் நுண்ணரசியலில் தோய்த்து எழுதப்படும். நாளேட்டின் செய்திகளைத் தொடர்ந்து வாசிக்கும் எவரொருவரும் எளிதில் இந்த அரசியலைப் புரிந்துகொள்ள இயலும். அப்படியொரு செய்திக் கட்டுரையை இந்நாளேடு 2025 ஜூலை 13 அன்று தனது கடைசி பக்கத்தில் பிரசுரித்திருந்தது.

கட்டுரையின் தலைப்பு: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு – பின்னுக்குத் தள்ளப்படும் நவீன அறிவு. பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி என்பவர் இந்தச் செய்திக் கட்டுரையை எழுதியிருப்பதாக நாளேடு தெரிவிக்கிறது. 2025 ஜூலை 12 அன்று மாநில அரசால் நடத்தப்பட்ட தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வை விமர்சித்து இந்தக் கட்டுரை எழுதப்பட்டிருந்தது. மேலோட்டமாக வாசித்துப் பார்க்கும்போது, இளந்தலைமுறைமீது அக்கறையுடன் எழுதப்பட்ட கட்டுரையாகத் தோற்றம் தருகிறது. ஏனெனில், முதல் பத்தியில் தேர்வு நடத்தப்பட்ட விதத்தை வாழ்த்தித் தொடங்கும் கட்டுரை, பெரும்பாலும் நேர்மறையான எண்ணங்களைப் பதிவுசெய்வதே நோக்கம் என்னும் மயக்கத் தொனியிலேயே எழுதப்பட்டுள்ளது. கட்டுரையைச் சற்றுக் கவனத்துடன் வாசிக்கும்போது, அதில் இடம்பெற்றுள்ள சில வாக்கியங்களும், ஐயங்களும் நம் சிந்தையைக் கிளறிவிடுகின்றன; கட்டுரையில் பொதிந்துவைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளைக் கண்டுகொள்ளத் தூண்டுகின்றன. கட்டுரையின் தலைப்பைக் கவனித்தீர்கள் எனில், பின்னுக்குத் தள்ளப்படும் நவீன அறிவு என்னும் சொற்றொடர் புதிர்க்கதவைத் திறக்கும். அறிவில் என்ன, நவீன அறிவு தொல்லறிவு எனத் தோன்றக்கூடும். தொழில்நுட்பம்சார் அறிவைத்தான் கட்டுரையாளர் நவீன அறிவு என எழுதியுள்ளார். அப்படியென்றால், தொல்லறிவு என்பது தொல்காப்பியம் தொடங்கிப் புழங்கிவரும் தமிழ் மொழியின் இலக்கண அறிவென்பதை எளிதில் விளங்கிக்கொள்ளலாம்.

முதலில் வாக்கியங்களைக் குறித்து விவாதிக்கலாம். அடுத்ததாகக் கட்டுரையின் ஐயங்களை அலசலாம். “நாளுக்கு நாள் வெகுவேகமாக மாறிவரும் அறிவியல் தொழில்நுட்ப தேவைகளுக்கு ஏற்பத் தன்னைத் தகவமைத்துக்கொள்ளும் திறன், மிக நிச்சயமாக, நம் தமிழுக்கு இருக்கிறது. இதையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல், ‘இலக்கணம்’ என்கிற குடுவைக்குள் இளம் தலைமுறையின் தாய்மொழி அறிவை அடைக்க முயற்சிப்பது ஏன்?” என்றொரு வினாவை எழுப்பியுள்ளார் கட்டுரையாளர். இவ்வாக்கியத்தில் காணப்படும் பிழைகளைக் கண்டு பதறாதீர்கள், அதைப் பின்னர் விளக்கலாம். முதலில் இந்த வாக்கியத்தை எப்படி எழுத முடிந்தது, இந்த வாக்கியம் எப்படி நாளேட்டின் ஆசிரியர் முதலிய அனைவர் கண்ணையும் மறைத்து வெளிப்பட்டது என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

உலகின் மிகவும் தொன்மையான மொழிகளில் ஒன்றான தமிழின் இலக்கணத்தை, அம்மொழியை அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கடத்த வேண்டிய பொறுப்புமிக்க இளந்தலைமுறை கற்றுத் தெளிய வேண்டியதன் அவசியம் உணர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இலக்கணம் தொடர்பான வினாக்களை எவ்வளவு எளிதாகக் கட்டுரையாளர் மடைமாற்றிக் காட்டுகிறார். தாய்மொழியின் இலக்கணத்தை அறிந்துகொள்ளாமல் எப்படி அந்தத் தாய்மொழியில் தெளிவைப் பெற முடியும்? இலக்கணம் என்பது இதிகாசங்களிலும் புராணக் கதைகளிலும் இடம்பெறும் குடுவைக்குள் அடைபட்ட பூதம் போன்ற புனைவுச் சரக்கா? இதில் என்ன ஆச்சரியமென்றால், இந்தக் கட்டுரை வெளியாகியுள்ள இதே நாளேட்டின் நடுப்பக்கத்தின் இறுதியில், இந்நாளேடு நடத்தும் பதிப்பகம் உருவாக்கி விற்றுவரும் ‘இலக்கணம் இனிது’ என்னும் நூலின் விளம்பரமும் இடம்பெற்றுள்ளது. தன் கையை எடுத்துத் தன் கண்ணையே குத்துவது போன்ற காரியமல்லவா இது? பதிப்பக விற்பனைக்கு வேட்டுவைக்கும் வேலையை நாளேடு செய்யலாமா? கட்டுரையாளருக்கு இது தெரியாமல் போகலாம். ஆனால், நாளேட்டின் செய்தி ஆசிரியர், ஆசிரியர் உள்ளிட்டோர் இப்படியொரு முரணைக் கவனித்திருக்க வேண்டுமே?

மேலே இரட்டை மேற்கோள் குறிகளுக்கிடையே குறிப்பிட்டுள்ள நாளேட்டு வாக்கியத்தில் தென்படும் பிழைகளைப் பார்க்கலாம். ‘இதையெல்லாம்’ என்னும் ஒரு சொல்லைக் கட்டுரையாளர் எழுதியுள்ளார். இந்தச் சொல் ‘இதை என்றோ’, ‘இவற்றை எல்லாம்’ என்றோ எழுதப்பட்டிருக்கவோ பிரசுரிக்கப்பட்டிருக்கவோ வேண்டும். ‘தொழில்நுட்ப தேவைகளுக்கு’ என்று அடுத்தடுத்து இடம்பெற்றிருக்கும் சொற்களுக்கு இடையே ஓர் ஒற்றெழுத்து இட்டிருக்க வேண்டும். ‘முயற்சிப்பது’ என்னும் ஒரு சொல்லைக் கட்டுரையாளர் பயன்படுத்தியுள்ளார். அவ்விடத்தில் ‘முயல்வது’ என்னும் சொல்லைப் பயன்படுத்தியிருக்க வேண்டும். முயல் என்பது வேர்ச்சொல். ஆகவே, முயற்சிப்பது என்பதைத் தவிர்த்திருக்க வேண்டும். வினாத் தாளில் இடம்பெற்றுள்ள பல திரிசொற்களைக் குறிப்பிட்டுள்ள கட்டுரையாளர், “இவற்றையெல்லாம் மீட்டெடுக்கும் முயற்சியில் தவறில்லை. ஆனால் அதற்கான களம் இதுவல்ல.” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வாக்கியத்தின் இறுதிப் பகுதி, ‘ஆனால், அதற்கான களம் இதுவன்று’ என எழுதப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில், ‘அல்ல’ என்பது பன்மைக்குரிய பயனிலை. கட்டுரையாளர் ஒருபோதும் குடுவைக்குள் தாய்மொழி அறிவைப் புதைத்திராதவராக இருக்கலாம். இப்படி மொழிரீதியாகப் பல பிழைகளைக் கொண்ட ஒரு கட்டுரை, இலக்கண அறிவு தேவையா என்பது குறித்து வினா எழுப்புவது நகைப்பைத் தருகிறது.

வினாத்தாளில் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதர் என்று சாதிய அடையாளம் தவிர்த்ததைப் பாராட்டும் கட்டுரையாளர், டாக்டர் நடேச முதலியார், திவான்பகதூர் பவானந்தம் பிள்ளை ஆகியோர் பெயரின் சாதிப் பெயரையும் திருத்தி இருக்கலாம் என அங்கலாய்க்கிறார். அதுவும் ‘திவான் பகதூர் பவானந்தம் பிள்ளை’ எனும் பெயரை நாளேடு ‘பகவான் பகதூர் பவானந்தம் பிள்ளை’ எனப் பிரசுரித்துள்ளது. எப்போதும் பகவான் நினைவோ என்னவோ? இல்லம் தேடிக் கல்வி, விடியல் பயணம் போன்ற கொள்கை சார் கேள்விகளைப் பற்றிக் கூறி இப்படித்தான் இருக்கும் எனத் தம்மைத்தாமே சமாதானம் செய்துகொள்கிறாராம் கட்டுரையாளர். அரசுப் பணிக்கு வரும் ஒருவர் அரசுத் திட்டங்கள் சார்ந்த விவரங்களை அறிந்திருக்கிறாரா இல்லையா எனச் சோதிப்பது இயல்புதானே? அத்தகைய திட்டங்கள் சார்ந்த கேள்விகளைக் கண்டு ஏன் உச்சி வேர்க்கிறதோ, முதுகு அரிக்கிறதோ? ஒருவேளை வினாத் தாளில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா என்னும் பெயர்கள் இடம்பெற்றிருந்தது அதற்குக் காரணமாயிருக்குமோ?

ஒரு கட்டுரையிலேயே இத்தனை பிழைகள் எனில் நாளேட்டின் எஞ்சிய பக்கங்களில் எத்தனை எத்தனையோ? இப்படிப் பிழைகள்சூழ் செய்திகளைப் பிரசுரிக்கும் நாளேடுகள் மலிந்த சூழலில் இளந்தலைமுறையின் இலக்கண அறிவை, தொல் தமிழ்ச் சொற்கள் ஆகியவை குறித்தெல்லாம் தேர்வுகளின் வழியே சோதிப்பது ‘தெய்வக் குற்றமா’? மேலே சுட்டப்பட்ட பிழைகள் கட்டுரையாளர் செய்யாதவனவாக இருக்கலாம். ஏனெனில், ஒருவேளை கட்டுரையாளர் சரியாக எழுதி, நாளேட்டின் தரப்படுத்தலுக்கு உட்பட்டு வெளிவரும் வேளையில் பிழைபட்டிருக்கலாம். நூற்றாண்டுப் பெருமை கொண்ட குழுமக் கூடத்திலிருந்து வெளிவரும் ஒரு நாளேடு தொல் மொழி குறித்து இத்தனை பிழைகளுடன் செய்திக் கட்டுரை வெளியிடுவதை வாசித்துவிட்டு வாளாவிருக்க இயலுமா? 

வெள்ளி, ஜூலை 18, 2025

எமர்ஜென்சி எனும் நெருக்கடி நிலை

இந்தியாவின் பிரதமராகவிருந்த, இரும்புப் பெண்மணி என அறியப்பட்டிருந்த இந்திரா காந்தி ஆட்சியின் போது, 1975 ஜூன் 25 அன்று இந்தியா கண்ட எமர்ஜென்சி அதன் பின்னான அரசியலை ஒரு புரட்டு புரட்டியுள்ளது. நாட்டின் கருத்துரிமைக்கு வேட்டுவைத்த எமர்ஜென்சி குறித்த இலக்கியப் பதிவுகள் மிகச் சிலவே. அவற்றில் ஒன்று அசோகமித்திரன் எழுதிய இன்று. 

நாவலின் தலைப்பு இன்று என்றாலும் அது எக்காலத்துக்குமானது என முன்வைக்கப்படுகிறது. தேவிபாரதி போன்ற எழுத்தாளர்கள் எழுதும் சிறுகதைகளை ஒப்பிடுகையில் இதை நாவல் என்று சொல்லவே முடியவில்லை. அவ்வளவு சிறிய நாவல். கிழக்குப் பதிப்பகம் வெளியிட்ட இன்று நாவலையே படித்தேன். முதலில் நாவலில் தென்பட்ட பிழைகளைத் தாம் சொல்ல வேண்டும். வாக்கியப் பிழை, ஒருமை பன்மைப் பிழை என பக்கத்துக்கு ஒன்று தென்பட்டது. இதற்குக் காரணம் எழுத்தாளரா பதிப்பகமா என்பது தெரியவில்லை. வாசிக்கும் வேளையில் கண்ணில் வந்து விழும் துரும்புகள் போல் பிழைகள் உறுத்திக்கொண்டேயிருந்தன. 

பிழைகள் காரணமாகவோ நாவல் காரணமாகவோ தெரியவில்லை. இதுவரை அசோகமித்திரன் நாவல்கள் தந்திருந்த இதத்தை இந்நாவல் தரவில்லை. இலக்கியரீதியிலேயே இதம் என்னும்  சொல்லைத் தந்துள்ளேன். மற்றபடி அசோகமித்திரன் நாவல்களில் நொய்மைகளுக்குப் பஞ்சமிருக்காது என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. 

வாழ்வை அதன் சிக்கலைச் சற்று மேட்டிமைத்தனத்துடன் அதே வேளையில் மத்தியதரவர்கத்தின் கையறுநிலையிலேயே கண்டு பதிவுசெய்பவராகவே தோற்றம் கொள்கிறார் அசோகமித்திரன். பெரிய சிக்கல் இல்லாத தமிழ்த் தொடர்களைக் கையாண்டு தான் நாவல்களை நகர்த்திச்செல்கிறார். ஆனால், உள்ளடக்கரீதியாக அவருக்குச் சூழல்மீது உள்ள ஒவ்வாமை அதீதக் கசப்பாக எழுத்துகளின் அடியே நீங்காத வடுவாக வெளிப்பட்டுள்ளது. போராட்டங்கள் குறித்த அவரது பார்வை இந்நாவலில் சற்றுக் கீழாகவே உள்ளது. எது எதற்கோ போராடுகிறார்கள் இவை எல்லாம் தேவையா எனும் சத்தம் வெறும் முனகலாகக் கேட்கிறது. 

நாவலின் பின்னட்டைக் குறிப்பு இந்நாவலைக் கூறுவது போல் வடிவரீதியில் பெரிய முற்போக்கான நாவலாக இதைக் கருத இயலவில்லை. நெருக்கடி நிலை எப்படியான எண்ணத்தை இந்தியாவுக்குத் தந்ததோ அப்படியான எண்ணத்தைத்தான் இந்நாவலும் தந்துள்ளது. இவை எல்லாம் ஏன் ஏற்படுகின்றன இவற்றால் என்ன நன்மை என்னும் ஒருவித அலுப்பும் சலிப்புமான எண்ணத்தையே இந்நாவல் தோற்றுவிக்கிறது. நிராசையும் கசப்புமான சூழலில் சிக்கித் தவிக்கும் கதாபாத்திரங்கள் மூச்சுவிடவே அல்லல்படுகின்றன. வாசிக்கும்போது நாமும்கூட இழுத்து இழுத்து மூச்சுவிட வேண்டியதிருக்கிறது.   

அசோகமித்திரனின் நல்ல நாவல் என முன்மொழியப்பட்டாலும், நாவலை வாசித்த பின்னர் அதை வழிமொழியும் வாய்ப்பை நாவல் தரவில்லை. மற்றபடி நெருக்கடி நிலை குறித்து வாசிக்க வேண்டிய நாவலே. என்னதான் இருக்கிறது என்பதாவது வாசிப்பில் தெரிந்துவிடுமே.  

செவ்வாய், மே 20, 2025

ஒரு விக்ரம் பத்து கமல்ஹாசன்

வர வர தமிழ்ப் படங்கள் பார்க்கும் ஆசையே விட்டுப்போய்விடும்போல. ஏற்கெனவே கொரோனா காலத்துக்குப் பிறகு தியேட்டரில் போய் படம் பார்க்கும் பழக்கம் கிட்டத்தட்ட போய்விட்டது. 2023 ஆம் ஆண்டில் தியேட்டரில் இரண்டு படங்கள் பார்த்தேன். அதில் ஒன்று தமிழ்ப் படம். அது உதயநிதி நடித்து மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன். படம் சுமார் ரகம். அடுத்த ஆண்டான கடந்த ஆண்டில் அதாவது 2024இல் இவ்வளவுக்கு விளக்கம் எழுதுவதற்குப் பதில் 2024இல் என்றே எழுதியிருக்கலாம். சரி விடுங்கள் எழுதியாயிற்று இருந்துவிட்டுப் போகட்டும். 

2024இல் தியேட்டரில் பார்த்த ஒரே படம் லப்பர் பந்து. அந்தப் படத்தைப் பார்த்தபோது, முள்ளும் மலரும் படம் நினைவில் எழுந்தது. அதே கருதான். அதில் அண்ணன் தங்கை. இதில் அப்பா மகள். கிரிக்கெட் அது இதுன்னு படம் போரடிக்காமல் போனது என்றபோதும், புதிதாக படத்தில் ஒன்றுமில்லை என்ன எண்ணமே வந்தது. படத்தில் ஒரே காதல் சோகப் பாடலில் அப்பா மகள் இருவரையும் கொண்டு காட்சி அமைத்திருந்தது மட்டுமே புதுமையாக இருந்தது. 

இந்த ஆண்டில் இதுவரை பார்த்த எந்தத் தமிழ்ப் படமும் பெரிதாக ஈர்ப்புக்குரியதாக இல்லை. அதுவும் இப்போது தியேட்டருக்குச் செல்வதே இல்லை. படம் வெளியான நான்கு வாரத்தில் படம் ஓடிடியில் வந்துவிடுகிறது. ஆகவே, வீட்டிலிருந்தே படத்தைப் பார்த்துவிட முடிகிறது. தியேட்டருக்குச் செல்வதே தேவையில்லாத ஆணியாகிவிட்டது. முந்தைய வாக்கியத்தில் தேவையில்லாத ஆணி என்னும் பயன்பாட்டைப் போலவே முழுப் படத்திலும் வசனம் இடம்பெற்றிருந்த படம் அஜித் குமார் நடித்த   Good Bad Ugly. படம் Good ஆக இல்லாவிட்டாலும் Bad ஆகவாவது இருந்திருக்கலாம். ஆனால், Ugly ஆக இருந்தது. 

படம் முழுக்க அண்ணன் யார் தெரியுமா அண்ணன் யாரு தெரியுமான்னு உதார் இருந்துகிட்டே இருக்கு. படத்துலயோ ஒரு சரக்கும் இல்ல. எந்தத் தைரியத்துல இப்படியெல்லாம் படம் எடுக்குறாங்கன்னுதான் தோணுச்சு. ஜெயில் காமெடி குரு சிஷ்யன் படத்துல ஏற்கெனவே பார்த்துட்டோம். நாயகி வில்லன்களை நொறுக்கச் சொல்லும் காட்சி நல்லவனுக்கு நல்லவன் படத்திலேயே பார்த்துவிட்டோம். படம் முழுக்க கலர் கலரா ட்ரெஸ் போட்டுட்டு ஸ்டைலா வலம் வர்றாரு அஜித். அதுதான் நடிப்புன்னா அஜித்தோட நடிப்பு பிரமாதம்னு சொல்லணும். 

சரி இதுதான் இந்த லட்சணம்னு டூரிஸ்ட் ஃபேமிலி படம் நல்லாருக்கும்னு எல்லாரும் சொல்றாங்களேன்னு அதப் பார்க்க உட்கார்ந்தா அது அதுக்கு மேல. கொலையா கொல்றாய்ங்க. முன்னாடி தொலைக்காட்சியில செவ்வாய்க்கிழமை நாடகம் வருமே அது மாதிரியான மாடர்ன் ட்யூஸ்டே டிராமா. நெஞ்சை அநியாயத்துக்கு நக்கி நக்கி தோல உரிச்சு தொங்கவிட்டுட்டாங்க. படம் நல்லா இல்லன்னு சொன்னா நமக்கு மனிதநேயமே இல்லன்னு குரூரமா சொல்வாங்க. ஆனா, படம் நல்லாவே இல்லன்னு கூசாம சொல்லலாம். அந்தச் சின்ன பையன் மட்டும் படத்துல ஆறுதல். அதுவும் இல்லாட்டி சூர மொக்கைன்னு துணிஞ்சு சொல்லலாம். 

விக்ரம் நடித்த வீர தீர சூரன் நல்ல கமர்ஸியல் படம். நீட்டான திரைக்கதை. படம் எந்தத் தொய்வும் இல்லாம இருந்துச்சு. நடிகர் விக்ரமை எல்லை மீறாமல் வரையறைக்குள் வைத்து படத்தை எடுத்த விதத்துக்கே இயக்குநருக்கு ஒரு சபாஷ் சொல்லணும். ஏனெனில், அண்மைக்காலத்தில் நடிகர் விக்ரம் திரையில் பத்து கமலஹாசனா பரிணாமம் எடுக்கிறார். தாங்க முடியல. ஆனால், இந்தப் படத்தில் அவருடைய நடிப்பு இயல்பானது. எந்தவிதமான மிகையும் இல்லாமல் அப்படியே மலர்ந்த அதிகாலைபோல் உறுத்தலின்றி இருந்தது. இதுவும் நடிப்புதான் சார். இப்படி நடிச்சா போதும், தங்கலான் மாதிரி அநியாயத்துக்கு நடிச்சா ரசிகர்கள் பாவம் இல்லயா? கொஞ்சம் அவங்க நிலைமையையும் யோசிச்சுப் பாருங்க. வெளியில தொல்லை தாங்க முடியாம தியேட்டருக்கு வர்ற அவன ரத்தம் கக்க வைக்கிறது நல்லாவா இருக்கு?  விக்ரம் நடிச்ச இந்தப் படம் சரியா ஓடல்லன்னு சொல்றாங்க. ஏற்கெனவே முன்னாடி அவர் நடிச்ச மஜா படமும் அப்படித்தான். நல்லா இருந்துச்சு ஆனா படம் ஓடல. அவர் நடிச்ச சாமி, தூள் மாதிரி கரம் மசாலாதான் ரசிகருக்குப் பிடிக்குது போல.

புதன், ஏப்ரல் 30, 2025

இலக்கற்ற வாசிப்பு சரியா, தவறா?

இந்தப் பதிவை வாசிக்கத் தொடங்கும் உங்களிடம் அவன் உரையாடத் தொடங்குகிறான். நீங்கள் ஆணா, பெண்ணா அவனுக்கு நீங்கள் உறவா நட்பா பகையா எதுவும் அவனுக்குத் தெரியாது. ஒருவேளை இப்போதே நீங்கள் இந்தப் பதிவை வாசிப்பதிலிருந்து விலகியிருக்கலாம். ஆனாலும், அவன் உங்களுடன்தான் உரையாடுகிறான். இது ஒரு விதமான மாய விளையாட்டு. யாருமே இல்லாத சூழலிலும் யாரையாவது உருவகித்துக்கொண்டு உரையாடுகிறான். அந்த யாரோ நீங்களாக இருக்கலாம்; நீங்களாக இல்லாமலும் இருக்கலாம். நீங்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவனது உரையாடல் தொடங்கிவிட்டது.

பாடப் புத்தகங்களைத் தாண்டிய வாசிப்பு பள்ளிப் பருவத்திலேயே தொடங்கிவிட்டது. இப்போது தின மலர் என்னும் நாளிதழை நினைத்தால் அருவருப்பாக இருக்கிறது. ஆனால், அதன் அரசியல் புரியாத அந்தச் சிறுவயதிலேயே சிறுவர் மலர் வாசித்தானா என்பது நினைவில் இல்லை. ஆனால், வாரமலரை வாசித்திருக்கிறான். இப்போது அரைவேக்காட்டுத்தனமாகத் தோன்றும் அந்து மணி பதில்கள் எல்லாம் அப்போது வாசித்திருக்கிறோம் என்பதை நினைத்தால் வேடிக்கையாகத்தான் இருக்கிறது.
ரத்னபாலா வாசித்தது நினைவில் உள்ளது. புத்தகங்களுக்காகப் பிறர் வீடுகளுக்குச் செல்வதும் அப்போதே தொடங்கியிருக்கிறது. அந்தச் சிற்றூரில் பேருந்து வந்துசெல்லும் ஒரே சாலையில் உள்ள ஒரு வீட்டுக்குச் சிறுவயதில் போயிருக்கிறான். ஒரே தூசி மயமாக அந்த வீடு அவனது நினைவில் புரள்கிறது. அதன் நுழைவாயிலின் வளைவுகள் தூசி படிந்து ஒரு புராதனத் தோற்றத்தைக் கொண்டிருக்கும். வாழ்ந்துகெட்ட ஒரு வீட்டுக்கான சாயலை அந்த வீடு கொண்டிருந்ததாகத் தோன்றுகிறது. அந்த வீட்டையும் அங்கே வாசித்த புத்தகங்களையும் மனத்தில் முறையாகத் தொகுக்க அவனால் முடியவில்லை. அந்த வீடு தொடர்பான காட்சிகள் துண்டுதுண்டாக வேகவேகமாக மாறிக்கொண்டே வருகின்றன. வெவ்வேறு காட்சிகள் அடுத்தடுத்து இடம்பெறுகின்றன மனத்திரையில்.
உண்மையில் இவையெல்லாம் அவன் கடந்தவந்த பாதையா இல்லை அவனையே அறியாமல் மனம் புனையும் ஒரு புனைவா என்றுகூடத் தோன்றுகிறது. அங்கே ஒரு பெண்மணி சக்கர நாற்காலியில் அங்கும் இங்கும் செல்வார். அந்த வீட்டுக்குப் புத்தகம் வாங்கவே சென்றுள்ளான். அந்த மனிதர்களின் பெயர் எதுவும் நினைவில் இல்லை; அங்கே வாசித்த புத்தகங்கள் நினைவில் இல்லை. ஆனால், அங்கே வாசித்த நினைவை மனம் தக்கவைத்துள்ளது. இத்தனை ஆண்டுகள் கழிந்த பின்னரும் இப்படியான நினைவுகளுக்காகவா அங்கே சென்றான்? படிக்கும் காலத்தில் எத்தனையோ தகவல்களை நினைவில் தவறவிட்டு மதிப்பெண்களை இழந்திருக்கிறான். மதிப்பெண்களைப் பெற்றுதரவியலாத எத்தனையோ நினைவுகளை மறக்காமல் வைத்திருக்கிறானே? இந்த மடத்தனங்கள் எல்லாம் இல்லாமல் வாழ்பவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்?
மனிதர்களிடம் மனிதர்களை உறவுகொள்ள வைக்கும் மனித நேயம் தான் எழுத்துக்கும் வாசிப்புக்கும் அடிப்படை என்றபோதும், அவனைப் பொறுத்தவரையில் அவனுடைய வாசிப்பு அவனை மனிதரிடமிருந்து அந்நியப்படுத்துகிறதோ என்ற அய்யம் எழும்வேளையில் திடுக்கிட்டு வாசிப்பை நிறுத்திவிடுகிறான். ஆனாலும், வாசிப்பு அவனைக் கைவிடவில்லை. இளைப்பாற ஏதாவது ஓரிடம் தேவைதானே? அப்படியோரிடமாக இன்றுவரை புத்தகங்கள் தானே இருக்கின்றன.
அவன் வேலையில்லாமல் திரிந்த ஒரு காலத்தில் நண்பர் ஒருவர் அவன் கையிலிருந்த புத்தகம் ஒன்றைப் பார்த்துவிட்டு இந்த வெட்டி வேலையை விட்டுவிட்டு ஒரு நல்ல வேலையில் சேரலாமே என்று கேட்டார். அவனுக்கு அவரது கேள்வியின் பொருள் புரிந்தது. ஆனால், அவரது வேண்டுகோளுக்குச் செவிசாய்க்க முடியவில்லை. வாசிப்பது அப்படியொரு குற்றமாகத்தான் இன்னும் தமிழ்ச் சமூகத்தில் பார்க்கப்படுகிறதோ என்னும் அய்யம் இன்றுவரை நீங்கவில்லை. நீங்கள் கைநிறையச் சம்பாதிக்கும் வேலையில் இருந்துவிட்டு வாசித்தால் உங்களைப் பெருமையாகப் பேசுவார்கள். அதே நேரத்தில் வாசிப்பதையே வேலையாக வைத்திருந்தால் உங்களை மனிதராகக்கூடப் பார்க்க மாட்டார்கள்.
இலக்கற்ற வாசிப்பு சரியா தவறா என்ற யோசனைகளைத் தாண்டி அவனது பொழுதுகளை அவையே எடுத்துக்கொள்கின்றன. வாசிப்பதும் குறிப்பு எடுப்பதுமாக இருக்கிறான். அவற்றை எல்லாம் என்ன செய்வான்? அவனிடம் கேட்டால் அவனுக்கும் தெரியாது. ஆனால், அவை ஏதோ ஒரு திருப்தியைத் தருகின்றன என நம்புகிறான். அந்த திருப்தி என்பது அர்த்தமற்ற ஒன்றல்லவா என நீங்கள் சிரிக்கலாம். அது உண்மையாகவும் இருக்கலாம். ஆனால் அவற்றை அவன் லட்சியம் செய்வதில்லை. அவனுக்கு அது பிடித்திருக்கிறது அல்லது அது பிடித்திருக்கிறது என நம்புகிறான்.
வாசிப்பதைப் பொறுத்தவரை தேடித் தேடி வாசிப்பதோ ஒரு குறிப்பிட்ட பொருள் கொண்ட புத்தகங்களை மட்டும் வாசிப்பதே என்றோ எந்த வரையறையும் இல்லை. கைக்குக் கிடைத்ததை வாசிப்பான். ஒரு நூலைக் கையிலெடுத்தால் அதை முடித்துவிட்டுத் தான் மறுவேலை என்னும் வழக்கம் அவனிடம் இல்லை. பல நூல்களை ஆர்வத்துடன் வாசிக்க முயன்றும் சில பக்கங்களைக் கடப்பதற்குள் ஆயாசமாகிவிடும். இந்தப் புத்தகத்தை வாசித்து என்ன செய்யப் போகிறோம் எனத் தோன்றிவிடும் அப்படியே மூடிவைத்துவிடுவான். விலையின்றிக் கிடைக்கும் புத்தகங்களைத் தான் வாசிக்க முடிவதில்லையோ என்ற எண்ணத்தில் கூடுமானவரை புத்தகங்களை விலைக்கு வாங்கிப் படிக்கும் வழக்கத்தைப் பின்பற்றலாம் என முடிவுசெய்து அதைச் செயல்படுத்தியும் பார்த்தான். ஆனால், வாசிப்புக்கும் அதற்கும் ஒரு தொடர்பும் இல்லை.
ஒரு நல்ல புத்தகம் அதற்குரிய வாசகரைக் கண்டடைந்து தன்னைத் தானே வாசிக்கச் செய்துகொள்ளும் என்றே எண்ணுகிறான். இது அறிவுக்குப் பொருத்தமாக இல்லாத கூற்றாக இருக்கலாம். ஆனால், நடைமுறை வாழ்க்கையில் இப்படித்தான் வாசித்திருக்கிறான். ஏதோ ஒரு நாட்டில் பிறந்த ஏதோ ஒரு மொழியில் எழுதிய ஓர் எழுத்தாளரின் நாவலைத் தமிழில் வாசித்து லயித்துக் கிடக்கும் அவனை அவன் வசிக்கும் ஊரில் ஓர் எழுத்தாளரின் ஒரு நூல் சென்றடையவில்லை எனும் போது, ஒரு நூலுக்கும் வாசகருக்குமான தூரத்தை எப்படிப் புரிந்துகொள்வது என அவனுக்குச் சொல்லத் தெரியவில்லை.
வாசிப்பு அவனது அறியாமையின் பரப்பை அதிகரித்தபடியே செல்கிறது. எல்லாவற்றையும் அறிந்ததுபோல் மமதை கொண்ட ஒரு வேளையில் புரட்டும் ஒரு நூலின் ஒரு வரி உனக்கு ஒரு எழவும் தெரியாது என்பதை மண்டையில் குட்டியபடி சொல்லும். என்றாவது ஒரு நாள் ஒரு நல்ல வரியை எழுதிவிட மாட்டோமா என்ற அங்கலாய்ப்பு அவனுக்கும் உண்டு. உருப்படியாக எதையாவது எழுதலாமே என நண்பர்கள் ஊக்கப்படுத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவனுக்குத் தான் உருப்படியாக எழுதுவது என்றால் என்ன என்பது தெரியவில்லை.
எதற்காக எழுத வேண்டும்; வாசிக்க வேண்டும் என்ற கேள்விகளுக்கு அவனால் விடையைக் கண்டுபிடிக்க முடியவில்லை; ஆனால் எழுதுவதும் வாசிப்பதும் அவற்றுக்கான விடைகளைத் தேடிக் கண்டடையும் முயற்சி என்பதை நம்பியே அவற்றைத் தொடர்கிறான்...
இந்தப் பதிவை ஏன் வாசித்தோம்... இதைவிட உருப்படியான எதையாவது செய்திருக்கலாமே என்று சலித்துக்கொள்ளும் உங்களை முன்னிருத்தித்தான் இதை எழுதினான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். யாரோ ஒரு மனிதன் எங்கேயோ இருந்து எழுதுகிறான்... அதை யாரோ ஒரு மனிதர் எங்கேயோ இருந்து வாசிக்கிறார் என்பதில் மனிதருக்கு இடையே ஓர் அரூப உறவு முகிழ்க்கிறதே அது போதாதா எழுதுவதற்கும் அதை வாசிப்பதற்கும்... (2024 ஏப்ரல் 30 அன்று ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியிருந்த பதிவு)

செவ்வாய், ஏப்ரல் 01, 2025

நூரி பில்கே ஸிலான்: மனங்களில் ஒளிந்துகிடக்கும் மாய ஓவியங்களைக் கலைப்படுத்தும் இயக்குநர்


வாழ்க்கையைப் பேசும் படங்களை உருவாக்கியவர் எனத் துருக்கிய இயக்குநர் நூரி பில்கே ஸிலானைச் சொல்ல முடியும். 1959 ஜனவரி 26 அன்று பிறந்த ஸிலானை, சிறு வயது முதலே கலைகளைக் கண்டுணரும் சூழலில் வாழ்ந்தவர் எனச் சொல்ல முடியாது. ஏனெனில், சிறுவயதில் கிராமிய இசையைக் கேட்கும் சூழலும் திரைப்படத்தைக் காணும் வாய்ப்பும் மட்டுமே அவருக்குக் கிடைத்திருக்கின்றன. ஓவியக் கண்காட்சிகள் போன்றவை நடந்திட வாய்ப்பில்லாத சிற்றூர் ஒன்றில் ஸிலானின் பால்யம் கழிந்தது. ஆனால், அவரது படங்களின் பல காட்சிகள் நகரும் ஓவியங்கள் போலவே அமைந்துள்ளன என்பது ஆச்சரியம் தருகிறது. தான் கலைத் துறைக்கு வந்தது குறித்த ஆச்சரியம் அவருக்கே இருக்கிறது. உயர் பள்ளிக் கல்விக்காகத் தான் வசித்த யூனைஸ் என்னும் ஊரிலிருந்து இஸ்தான்புல் நகருக்கு வந்தபோது கலைத் துறையின்பால் அவர் கவனம் சென்றிருக்கிறது. அவரைப் போலவே அவருடைய சகோதரியும் கலைத் துறையில் ஆர்வம் கொண்டிருந்திருக்கிறார்.

சிறு வயதில் ஸிலானுக்கு உறவினர் ஒருவர் புகைப்படக் கலை தொடர்பான புத்தகம் ஒன்றைப் பரிசளித்திருக்கிறார். தனக்குப் புகைப்படக் கலை மீதான ஆர்வம் தோன்றியதற்கு அந்தப் புத்தகம் காரணம் என்கிறார் ஸிலான். இந்தச் சம்பவத்தைப் பற்றி நேர்காணல் ஒன்றில் பேசும்போது, குழந்தைகளுக்குப் பரிசுப் பொருள் வழங்கும் போது மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில், அந்தப் பொருள் அந்தக் குழந்தையின் வாழ்க்கைப் போக்கையே மாற்றிவிடக்கூடிய சாத்தியத்தைக் கொண்டுள்ளது என்பதை மறந்துவிடாதீர்கள் என்கிறார் ஸிலான். அந்தப் புத்தகத்தை வாசித்த பின்னர், அது தந்த உற்சாகத்தில் அவர் புகைப்படம் எடுக்கவும் அதை பிரிண்ட் போடவும் தொடங்கியுள்ளார். அதை ஒரு விளையாட்டுப் போலத் தான் தொடங்கியிருக்கிறார். ஆனால், நாள் செல்லச் செல்ல அது ஒரு கலை என்பதை உணர்ந்திருக்கிறார். இப்போதும் அவரது படங்களில் பல காட்சிகளில் கேமரா அசைவின்றி அப்படியே உறைந்துபோய்விட்டதோ என்று நினைக்கும் அளவுக்குக் காட்சிகள் நிதானமாக அமைந்திருப்பதற்குப் புகைப்படக் கலைமீது அவர் கொண்டுள்ள ஈடுபாடு காரணமாக இருக்கலாம். அவர் வளர்ந்த காலகட்டத்தில் வீடியோ கேமரா என்பது அவ்வளவு எளிதாக எல்லோருக்கும் கிடைத்திருக்கவில்லை. குறிப்பிட்ட சிலரிடம் மட்டும் வீடியோ கேமரா இருந்துள்ளது. அவர் பல்கலைக்கழகப் படிப்பை முடித்த பின்னரோ இராணுவ சேவை முடித்த பின்னரோ கூட சினிமா துறைக்கு வருவதைப் பற்றி எந்த முடிவும் எடுத்திருக்கவில்லை.

எல்லோரையும் போல் ஸிலானுக்கும் சினிமா பார்ப்பதில் விருப்பம் இருந்திருக்கிறது. திரைப்பட உருவாக்கம் தொடர்பான புத்தகங்களை விரும்பிப் படித்திருக்கிறார் அவர். அதுதான் அவரைத் திரைத் துறையின் பக்கம் தள்ளிவிட்டிருக்கிறது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், ராணுவத்தில் இருந்தபோது, போலந்து இயக்குநர் ரோமன் பொலான்ஸ்கியின் தன் வரலாற்றைப் படித்திருக்கிறார். அது அவரிடம் பெரிய தாக்கத்தை உருவாக்கியிருக்கிறது. சாதனைச் சம்பவங்கள் நிறைந்த அந்தப் புத்தகம் நாஜி முகாமில் ஒன்றுமில்லாமல் இருந்த பொலான்ஸ்கி ஹாலிவுட்டுக்குப் போனதுவரையான வாழ்க்கையை உள்ளடக்கியிருந்தது. அந்தப் புத்தகம் சினிமாவை எளிதில் உருவாக்கலாம் எனும் எண்ணத்தை ஸிலானிடம் ஏற்படுத்தியிருக்கிறது. தொடர்ந்து சினிமா தொடர்பான நூல்களுடன் சினிமா தொழில்நுட்பம் பற்றியும் வாசித்திருக்கிறார்.


அவர் ஒரு குறும்படத்தில் நடித்தபோது சினிமா உருவாக்கத்தின் அத்தனை விஷயங்களையும் கற்றுக்கொண்டிருக்கிறார். அதன் பின்னர்தான் ஏரிஃப்ளக் 2சி கேமரா ஒன்றை வாங்கியிருக்கிறார். அது இயங்கும்போது, இயந்திரத் துப்பாக்கி போன்று அதிகப்படியான ஓசையை எழுப்புமாம். அந்த கேமரா வாங்கிய பின்னரும் பத்தாண்டுகளாகத் தான் படமெதுவும் எடுத்திருக்கவில்லை என்கிறார் ஸிலான். பிறகு குக்கூன் என்னும் பெயரில் ஒரு குறும்படம் எடுத்திருக்கிறார். அதில் குடும்ப உறுப்பினர்களே நடித்திருக்கிறார்கள். தான் எடுத்ததிலேயே மிகவும் கடினமான படம் அது என்று ஸிலான் சொல்கிறார். குறும்படம் எடுத்து முடித்த பின்னர் ஒரு முழுநீளப் படத்தை உருவாக்கியிருக்கிறார். அதுவும் அவரது வாழ்க்கைச் சம்பவங்களை ஒட்டி உருவாக்கப்பட்ட படமே. அதன் பெயர் த ஸ்மால் டவுன் (1997). இந்தப் படத்தில் அவரது குடும்ப உறுப்பினர்களே நடித்திருந்தார்கள். இதைத் தொடர்ந்து க்ளவுட்ஸ் ஆஃப் மே (1999), டிஸ்டண்ட் (2002) ஆகிய படங்களையும் உருவாக்கினார். இந்த மூன்றுமே ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டது. ஒருவகையில் இந்த மூன்று படங்களும் ஒரு தொகுதி என்று சொல்ல முடியும்.

நூரி பில்கே ஸிலான் துணை இயக்குநராகக்கூடப் பிறரது படங்களில் பணியாற்றியிருக்கவில்லை. அவர் முழுக்க முழுக்க புத்தகங்கள் மூலமாகவே சினிமாவின் அத்தனை துறைகளைப் பற்றியும் அறிந்திருக்கிறார். அவரே படத்தை உருவாக்கி அவரே அதை வணிகமும் செய்திருக்கிறார். ஓர் இயக்குநருக்கு சினிமா தொடர்பான அனைத்து விஷயங்களும் தெரிந்திருக்க வேண்டும் என்று நம்புகிறார் ஸிலான். அப்படித் தெரிந்திருக்காவிட்டால் ஓர் இயக்குநர் தொழில்நுட்பக் குழுவையே சார்ந்திருக்க வேண்டியதிருக்கும். இயக்குநருக்கு எல்லா விஷயங்களும் தெரிந்திருந்தால் அவரால் தொழில்நுட்பக் குழுவைச் சிறப்பாக இயக்க முடியும் என்பதை ஸிலான் நம்புகிறார்.

சினிமாவின் பின்னணியிசை குறித்து ஸிலானுக்கு மாறுபட்ட கருத்து உள்ளது. சினிமாவில் இசை விஷயங்களைக் கொன்றுவிடுகிறது என்கிறார் ஸிலான். அதனால்தான் அவரது படங்களில் பின்னணியிசையின் குறுக்கீடு இருக்காது. காட்சிகள் நடைபெறும் களங்களில் அரங்கப் பொருள்கள், கதாபாத்திரங்கள் ஆகியவற்றிடமிருந்து வெளிப்படும் சத்தங்களைக் கொண்டே காட்சி தொடர்பான அர்த்தங்களை உருவாக்குவதிலேயே அவரது கவனம் இருக்கும். இசைக்கருவிகளை நம்பி இராமல் புறச்சூழலின் ஒலிகளை வைத்து அக உணர்வை உணர்த்த முயல்வார்.

குடிமைப் பணி செய்த பெற்றோருக்குப் பிறந்தார் நூரி பில்கே ஸிலான். யெனைஸ் பகுதியில் வசித்த அவரது தந்தை மிகக் கடினமான சூழலிலும் படித்து முடித்தவராக இருந்தார். அவர் வேளாண்மைப் பொறியியலாளர். அந்தப் பகுதியில் அப்போது நல்ல பள்ளிகள் கூட இருந்திருக்கவில்லை. ஸிலானின் சிறுவயதில் யெனைஸ் பகுதியில் இருந்த அவரது குடும்பம் கல்வியின் பொருட்டு இஸ்தான்புல்லுக்கு இடம்பெயர்ந்திருக்கிறது. சற்று வறுமையான சூழலிலேயே அவர் வாழ்ந்திருக்கிறார். புகை பரப்பும் அடுப்பில் சமையல் செய்து அம்மா பட்ட அவஸ்தையை ஸிலான் நினைவுகூர்கிறார். அம்மா சதா இருமிக்கொண்டே இருப்பார் என்கிறார் அவர். த ஸ்மால் டவுன் படத்தில் குடும்பத்துடன் வெட்ட வெளியில் உரையாடும் காட்சி ஒன்று இடம்பெற்றிருக்கும். அதில் அந்த அம்மா பாத்திரத்தில் பழமொன்றை வெட்டிப் போடும்போது, இருமிக்கொண்டே இருப்பார், அருகில் குளிர்காய்வதற்காகப் போடப்பட்ட நெருப்பில் புகைவெளியேறிக்கொண்டேயிருக்கும் என்பதை இங்கே நினைவுபடுத்திப் பார்க்க வேண்டியதிருக்கிறது.


சிறு வயதில் ஸிலானுக்கு ஆங்கில எழுத்தான ஆர் என்பதை உச்சரிக்க முடியாமல் இருந்திருக்கிறது. எனவே, அவரது பெயரின் நடுவில் இருக்கும் பில்கே என்பதையே பெயராகச் சொல்வது வழக்கமாம். ஆனால், துருக்கியில் இந்தப் பெயர் ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவானது. அவர் ஒருமுறை பள்ளியில் பில்கே எனப் பெயரைச் சொன்னபோது, கேலிக்காளாகியிருக்கிறார். அதனால்தான் அவர் எவரையும் இழிவுபடுத்துவது என்பதை வெறுக்கிறார்.

த ஸ்மால் டவுன் படத்தில் ஆசிரியர் வருகைப் பதிவேடு எடுத்துக்கொண்டிருப்பார். இஸ்மாயில் எனப் பெயர் சொல்வார். அந்த மாணவன் வந்திருக்க மாட்டான். ஆசிரியர் அப்படியே வெளியில் பார்ப்பார். வெளியில் பனி பெய்துகொண்டிருக்கும். இப்போது வகுப்பில் பாடம் தொடங்கிவிடும். சிறிது நேரத்துக்குப் பின்னர் மேல் கோட்டில் சிறு சிறு பனித் திட்டுகளைக் கொண்டபடி ஒரு மாணவன் வந்துசேர்வான். அவன் இஸ்மாயில். ஆசிரியர் பார்த்த பார்வைக்கு இப்போது நமக்குப் பொருள் விளங்கும். ஐயோ பனி பெய்துகொண்டிருக்கிறதே மாணவன் நனைந்துவிட்டு வருவானே என்ற அவரது பதைபதைப்பை நம்மால் உணர்ந்துகொள்ள முடியும். எந்த வசனமும் இல்லாமல் மௌனமாகவே இதை உணர்த்திவிடுகிறார் நூரி பில்கே ஸிலான். இதுதான் அவரது பலம். அதே நேரத்தில் மிக அவசியம் என்று தோன்றும் இடங்களில் வசனங்களை மிகக் கச்சிதமாகப் பயன்படுத்துகிறார் ஸிலான். இதே படத்தில் சிகரெட்டின் பயனற்ற முனை போல் என் இளமை வீணாகிக்கொண்டிருக்கிறது என ஒரு வசனத்தை சஃபேத் பேசுவார். இவர் ஸிலானின் உறவினர்.

ஸிலானின் அடுத்த படமான க்ளவுட்ஸ் ஆஃப் மே படம், சினிமாவுக்குள் சினிமாவைக் கொண்டது. முந்தைய படமான த ஸ்மால் டவுனில் தாத்தா ஒருவர் தனது போர்க்கால அனுபவங்களைப் பற்றிப் பேசுவார். இந்தக் கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் ஸிலானின் தந்தை. இந்தத் தாத்தா பற்றிய சம்பவங்களை அப்படியே திரைப்படமாக்கும் முயற்சிதான் க்ளவுட்ஸ் ஆஃப் மே என்னும் படம். இப்படத்தில் சஃபேத் ஒரு தொழிற்சாலையில் பணியாற்றுவார். திரைப்படப் பணிக்காக அந்த வேலையை விட்டுவிடுவார். படத்தில் இயக்குநராக வருவார் முஸாஃபர். இந்த முஸாஃபர் டிஸ்டண்ட் படத்தில் மஹ்மூத்தாக வருவார்; சஃபேத் யூசுஃபாக மாறிவிடுவார்.

இந்த க்ளவுட்ஸ் ஆஃப் மே படத்தில் தையல்காரர் ஒருவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வரும். அதில் பேசுபவர், தனக்கெனத் தைத்த பேண்ட் மிகவும் இறுக்கமாக இருப்பதாகவும் இடுப்புப் பகுதியில் காலை நுழைக்கவே முடியவில்லை என்றும் புகார் கூறுவார். முக்கியமான சந்திப்பு ஒன்றில் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் புதிய உடையைத் தைத்ததாகவும் உடனே சரிசெய்ய வேண்டும் என்றும் அந்த வாடிக்கையாளர் கூறுவார். உலகம் முழுவதும் தையல்காரர்களும் அவர்களிடம் உடைகளைத் தைக்கும் வாடிக்கையாளர்களும் ஒரே போல் தான் இருப்பார்கள் போல. இப்படியான இயல்பான காட்சிகள் மூலம் மனிதருடைய இயல்பான வாழ்வைத் திரையில் பிசிறின்றிக் காட்சிக்குவைக்கிறார் ஸிலான்.


இந்தப் படத்தில் நாற்பது நாள் முட்டையை உடைக்காமல் வைத்திருந்தால் மியூசிக் வாட்ச் கிடைக்கும் என்பதற்காகச் சிறுவன் அலி அதைப் பாதுகாத்து வருவான். ஒருநாள் தக்காளிப் பழங்கள் நிறைந்த கூடையொன்றை ஒரு வீட்டில் கொடுத்துவிடும்படி பெண்மணி ஒருவர் அவனிடம் கொடுத்துவிடுவார். மிகக் கவனமாக அதை எடுத்துச் சென்ற அலி கூடையைத் தர வேண்டிய வீட்டில் கொண்டுபோய் வைக்கும்போது, ஒரு தக்காளி தவறிக் கீழே விழுந்துவிடுகிறது. அதை எடுப்பதற்காகக் குனிகிறான் அலி. அப்போது பையிலிருந்து முட்டை உடைந்துவிடுகிறது. உடைந்த முட்டையைப் பையிலிருந்து வெளியே எடுத்துப் போட்ட அடுத்த விநாடி தக்காளிக் கூடையைக் காலால் உதைக்கிறான். முட்டையை உடையாமல் காப்பாற்ற வேண்டிய தனது முயற்சியை இந்தத் தக்காளி ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டதே எனும் கோபமே இந்த உதையாக வெளிப்படுகிறது. தக்காளிகள் நிலத்தில் நாலாபுறம் சிதறுகின்றன. மனிதரின் கீழான பண்பு எப்படியெல்லாம் வெளிப்படுகிறது என்பதையும் சிறுவயது முதலே நமது பண்பு வெளிப்படத் தொடங்குகிறது என்பதையும் இப்படித்தான் வாய்ப்புக் கிடைக்கும் காட்சிகளில் அழகாகக் கடைபரத்துகிறார் இயக்குநர். சட்டபூர்வமான ஆவணங்கள் தனி மனிதரது வாழ்வில் எத்தகைய முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன என்பதையும் இந்தப் படம் காட்சிகளாகக் கொண்டிருக்கும். முஸாஃபரின் தந்தையான எமின் தனது நிலத்தை அரசாங்கத்திடம் இருந்து காப்பாற்ற படும் பாட்டை மிகைப்படுத்துதலின்றிக் காட்சிப்படுத்தியிருப்பார் ஸிலான்.

இந்த வரிசையின் இறுதியான டிஸ்டண்ட் படத்தில் ஒரே அறையில் தங்கும் இருவருக்கிடையேயான தொலைவைப் பற்றி மிகவும் நுட்பமான வகையில் படமாக்கியிருக்கிறார். மஹ்மூத் ஒரு புகைப்படக் கலைஞர். இவர் இஸ்தான்புல்லில் தனியே வசித்துவருகிறார். இவரது அறைக்குக் கிராமத்திலிருந்து உறவினரான யூசுஃப் வேலை தேடி வந்து தங்குகிறார். அப்போது இருவருக்குமான உறவில் ஏற்படும் கசப்புகளையும் விருப்பு வெறுப்புகளையும் காட்சிப்படுத்தியிருக்கிறார். மஹ்மூத்தின் இரட்டை வேடத்தை மிக இயல்பாகக் காட்சிகளின் வழியே வெளிப்படுத்துகிறார் நூரி பில்கே ஸிலான். தன்னுடன் வந்து தங்கியிருக்கும் யூசுஃபின் வருகை மஹ்மூத்துக்கு உவப்பாக இல்லை. அதே நேரத்தில் அவரது வருகையைத் தவிர்க்கவும் இயலவில்லை. யூசுஃபின் வருகை தனது தனிமையைக் குலைப்பதாக நினைக்கிறார் மஹ்மூத். யூசுஃப் தன் தாயுடன் போனில் பேசும்போது, ஒட்டுக்கேட்கிறார். தனது வாட்ச் ஒன்று தொலைந்துவிட்டதெனக் கூறி யூசுஃபுக்குக் குற்றவுணர்வை ஏற்படுத்துகிறார். யூசுஃப் அறையில் ஒழுங்கைக் குலைக்கிறார் என்று அவர் மீது குற்றம்சுமத்துகிறார் மஹ்மூத். தார்கோவெஸ்கி இயக்கிய நீளப் படங்களைப் பார்க்கும் மஹ்மூத் அடுத்த கணமே நீலப்படத்தைப் பார்க்கக்கூடியவராகவும் இருக்கிறார். நீளப் படத்தை நண்பருடன் பார்க்கும் அவர் நீலப்படத்தைத் தனியே ரகசியமாகப் பார்க்கிறார். இவற்றையெல்லாம் பார்க்கும்போது, மனிதர்களிடம் இவ்வளவு கீழ்மைக் குணங்கள் ஏன் குவிந்துகிடக்கின்றன என்ற கேள்வி தோன்றிவிடுகிறது.

வீட்டுக்குள் தொந்தரவு தரும் எலியைத் தரையில் பசை தடவிய அட்டையை வைத்து சிக்கவைக்கிறார் மஹ்மூத். அந்த எலியின் சத்தம் யூசுப்பை இம்சைப்படுத்துகிறது. ஆகவே, எலியை ஒரு பாலிதீன் கவரில் போட்டு அந்த கவரைத் தெருவில் போட்டுவிட வருகிறார் யூசுப். ஏற்கெனவே தெருவில் கிடக்கும் சில கவருடன் இதையும் போட்டு விட முயல்கிறார். ஆனால், அந்த கவர்களைச் சுற்றிச் சுற்றி வரும் பூனைகளால் எலிக்கு ஆபத்து வருமோ என அச்சப்படுகிறார். ஆகவே, பாலிதீன் கவரை அருகிலிருந்து சுவரில் படார் படாரென சில அடிகள் அடிக்கிறார். அதன் பின்னர் அந்த கவரை தெருவில் போடுகிறார். எலியைப் பூனைகள் பிறாண்டிவிடும் என்பதால் அதை கவரில் போட்டுக் கொன்றுவிடுகிறார். இப்போதும் எலி செத்துத்தான் போயிருக்கும். யூசுப்பைப் பொறுத்தவரை பூனைகளால் எலி குதறப்படுவதில்லை என்பதே நிம்மதியான உணர்வாக இருக்கிறது. தானே எலியைக் கொன்றுவிட்டது குறித்து அவருக்கு எந்தப் புகாரும் இல்லை. இப்படியான அம்சம்தான் ஸிலான் படங்களைத் தனித்துக் காட்டுகிறது.


இவரது படங்களில் படம் ஒரு கதையைப் பற்றிப் படர்ந்துகொண்டிருக்கும். கதாபாத்திரங்களின் உரையாடல் ஒரு வாழ்க்கையைப் பேசிக்கொண்டிருக்கும். ஒன்றுக்கொன்று தொடர்பு உள்ளதா இல்லையா என்பதைப் பரிசீலிக்கும் பொறுப்பு பார்வையாளரிடம் விடப்பட்டுவிடும். படத்தில் வெளிப்பட்டு நிற்கும் பூடகமும் மர்மமும் ஒருபோதும் விளக்கப்படுவதில்லை, விலக்கப்படுவதுமில்லை. பார்வையாளரது புரிதலுக்கு விடப்பட்ட சவாலாகவே அவை எடுத்துக்கொள்ளப்பட வேண்டியதிருக்கிறது.

பொதுவாகவே, ஸிலான் தனது படங்களில் மனித உணர்வுகளை வெளிப்படுத்த பின்னணியிசையையோ வசனங்களையோ நம்புவதில்லை. த ஸ்மால் டவுன் படத்தில் ஆமையைத் திருப்பிப் போட்டுவிட்டு ஓடுகிறானே சிறுவன் அலி. ஆமையைத் திருப்பிப் போட்டால் ஆமையால் திரும்ப இயலாது என முந்தைய காட்சியில்தான் அலியின் அக்கா அவனிடம் கூறியிருப்பாள். ஆனாலும், அதைச் செய்கிறான். இந்தக் காட்சி தரும் உணர்வை எந்த வசனமும் இசையும் தந்திருக்க இயலும்? ஒரு காட்சியைப் படமாக்கும் உத்தியின் வழியே, கேமரா நகரும் விதம், அரங்கப் பொருள்கள் காட்சியில் புலனாகும் தன்மை, நடிகர்களது உடல்பாவனை போன்றவை வழியே பார்வையாளர்களிடம் ஒரு புரிதலை ஏற்படுத்த முனைகிறார். அதாவது, கேமரா கோணம், சட்டகத்தில் கதாபாத்திரங்களையும், அரங்கப் பொருள்களையும் இருத்திவைக்கும் தன்மை ஆகியவற்றை ஒருங்கமைத்து ஒரு காட்சியைப் படம்பிடிப்பதன் வழியே காட்சிக்கு ஓர் அர்த்தத்தை சிருஷ்டித்துவிடுகிறார் ஸிலான். வழக்கமான காட்சிகளை வழக்கத்துக்கு மாறான வகையில் பயன்படுத்தும் உத்தியால் காட்சிக்கு ஓர் அர்த்தம் கிடைத்துவிடும்.

நடிகர்கள் பெரிய அளவில் அவருக்கு உதவுகிறார்கள். சிறிய கண்ணசைவு, தலையசைப்பு என ஒவ்வொன்றும் ஸிலானின் பட உருவாக்கத்தில் முதன்மை பெற்றுவிடுகிறது. வழக்கமான படங்களைப் பார்த்துச் சலித்த பார்வையாளர்களுக்கு ஒரு மாறுபட்ட திரையனுபவத்தை வழங்குவதில் ஸிலான் கவனம்பெறுகிறார். அதே நேரத்தில் சினிமாவில் சுவாரசியம் விரும்பும் பார்வையாளர்களுக்கு இவரது படங்கள் அலுப்பையும் சலிப்பையும் தந்துவிடுபவை என்பதையும் சொல்ல வேண்டியதிருக்கிறது. வாழ்க்கையை உற்றுநோக்குபவருக்கு இவரது படங்கள் உருப்பெருக்கிக் கண்ணாடிபோல் உதவுகின்றன.

இவரது விண்டர் சிலீப் என்னும் படத்தின் பெயரைக் கேள்விப்பட்டவுடன் அவரது விநியோகஸ்தர்களும் அவரைச் சேர்ந்தவர்களும் அந்தத் தலைப்பு வேண்டாம் எனச் சொல்லியிருக்கிறார்கள். நீங்களோ மெதுவாக நகரும் காட்சிகளைக் கொண்டு படமெடுப்பவர்; இந்தப் படத்தின் நீளமும் அதிகம். அதிலும் தலைப்பு தூக்கம் என்பது இடம்பெற வேண்டுமா எனக் கேட்டிருக்கிறார்கள். ஆனால், ஸிலான் தலைப்பில் உறுதியாக இருந்திருக்கிறார். ஜப்பானிய இயக்குநர் யாஸிஜிரோ ஓஸுவும், பிரெஞ்சுத் திரைப்பட இயக்குநர் ராபர்ட் ப்ரெஸ்ஸனும் இவருக்குப் பிடித்த இயக்குநர்கள். தனது க்ளவுட்ஸ் ஆஃப் மே படத்தை எழுத்தாளர் ஆண்டன் செக்காவுக்குச் சமர்ப்பித்திருக்கிறார்.

ஒன்ஸ் அபான் எ டைம் இன் அனடோலியா (2011) படத்தில், யாசர் உயிரோடு புதைக்கப்பட்டிருப்பதை அறிந்தும் மருத்துவர் பிரேத பரிசோதனை அறிக்கையில் அதைக் குறிப்பிடவில்லை. ஏன் அப்படிச் செய்தார்? மருத்துவரது கன்னத்தில் தெறித்த அந்த ஒற்றைத் துளி ரத்தத்தை நோக்கிச் சென்ற கேமரா அதை ஏன் அத்தனை நெருக்கமாகக் காட்சிப்படுத்தியது? இந்தத் திரைப்படம் அடிப்படையில் ஒரு குற்றப்பின்னணியிலானது. ஆனால், படம் நமது குற்றத்தை நமது நடத்தையை எல்லாம் மறுபரிசீலனை செய்ய வைக்கும். ஸிலான் திரைப்படங்களில் இயற்கைக்கும் நிலக் காட்சிக்கும் முதன்மையான பங்கு உண்டு. இந்தப் படத்திலும் இரவில் மூன்று வாகனங்கள் ஊர்ந்து வரும் காட்சிகளில் தொனிக்கும் பூடகமான உணர்வு நம்மைப் படத்துடன் பிணைத்து நிற்கும். படத்தின் விடைகாணப்படாத மர்மங்களை உணரும்போது, நமது வாழ்வின் விடைகாணப்படாத மர்மங்களை நோக்கி நாம் நகர்வோம்.

இந்தப் படத்தில் உயிருள்ள மனிதர்கள் உயிரற்ற சடலம் ஒன்றைத் தேடி வருகிறார்கள். அந்தச் சடலத்துக்கு எந்தச் சிக்கலும் இல்லை. அது தேமே என்று எங்கோ புதைந்து கிடக்கிறது. அதைத் தேடி அலையும் இந்த மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் சிக்கல் இருக்கிறது. கெனான் என்னும் மனிதன் ஒருவன் தன் நண்பனைக் கொன்றதாகக் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறான். அந்தச் சடலத்தைத் தேடித்தான் காவலர்களும் வழக்கறிஞரும் மருத்துவரும் இன்னும் சில அரசு ஊழியர்களும் அந்த அர்த்த ராத்திரியில் அந்த மலைப்பாங்கான பாதையில் பயணப்படுகிறார்கள். கொன்றவனுக்குச் சடலத்தை எங்கே புதைத்தான் என்பது நினைவிலில்லை. உடனிருந்தவனோ தூங்கிவிட்டேன் எனக்கு எதுவும் தெரியவில்லை என்கிறான். சடலம் புதைத்த இடத்தைக் காட்டுவதாகச் சொல்லி அழைத்து வந்தவன் அலைக்கழிக்கிறான். காவல் துறை அதிகாரிக்குக் கோபம் வருகிறது. அவனைப் போட்டு அடிக்கிறார். வழக்கறிஞர் அதைத் தடுக்கிறார்.

சடலத்தைப் பொதிந்துகொள்ளத் தேவையான பையை எடுத்துவர மறந்துவிடுகிறார்கள். இப்போது சடலத்தை காரின் டிக்கியில் வைப்பதற்குள் படாதபாடு படுகிறார்கள். உயிருக்கும்போது எளிதாய் நிறைவேற்றும் ஒரு காரியத்தை இறந்தபிறகு நிறைவேற்ற எவ்வளவு அவதிப்பட வேண்டியதிருக்கிறது? ஒரு மரணம் எல்லோருக்கும் மரணமன்று. மரணமடைந்தவரைச் சாராதவர்களுக்கு மரணம் மிகச் சாதாரணமான நிகழ்வாகவே இருக்கிறது. காவல் துறை அதிகாரி, சடலத்தைக் கண்டுபிடித்துக் கொடுத்துவிட்டால் போதும் தனது வேலை முடிந்துவிடும் என்று நினைக்கிறார். சடலம் கிடைக்கிறது. சாவுக்கான காரணம் என்பதை அறியும் பொறுப்பு மருத்துவருக்கு வந்துவிடுகிறது. அதை அவர் கண்டுபிடிக்கிறார் ஆனால், அதை வெளியே சொல்லவில்லை. எல்லோரும் எதையாவது மறக்கிறார்கள்; அல்லது மறைக்கிறார்கள். அதன் வழியே வாழ்வில் சிக்கல் இல்லாமல் வாழ நினைக்கிறார்கள். ஆனால், மறைப்பதன் மூலம் வாழ்வில் சிக்கல் வந்துதான் விடுகிறது. ஏன் மறைக்க வேண்டும்? உண்மையை எதிர்கொள்ளும் துணிச்சல் மனிதருக்கு ஏன் இல்லை. உண்மைக்குப் பதில் பொய்யை ஏன் அங்கு இருத்திவைக்கிறார்கள்? இப்படியான கேள்விகளுக்கு விடை தேடிப் பார்வையாளர் செல்லட்டும் என்பதற்காகவே இப்படியான புதிரைத் தனது படங்களில் விட்டுச் செல்கிறார் ஸிலான். இந்தப் புதிருக்கு விடைதேடுவதே ஒரு புதிரான பயணமாக இருப்பதால் பார்வையாளரால் ஸிலானின் படங்களை ரசிக்க இயலுகிறது.

இந்தப் படத்தில் சில காட்சிகள் நம்மை அப்படியே ஆவிசேர்த்து அணைத்துக்கொள்கின்றன. இரவில் எல்லோரும் பசியுடன் அந்த அந்துவானக் காட்டில் மாட்டிக்கொள்கிறார்கள். ஒருவர் மரத்தை உலுக்க ஆப்பிள் பழங்கள் உதிர்ந்துவிழுகின்றன. அதிலொரு பழம் அப்படியே நழுவி உருண்டு நீரோடையில் மிதந்துசெல்கிறது. ஓரிடத்தில் மேலும் சில பழங்கள் ஒதுங்கிக்கிடக்கின்றன அவற்றுடன் சேர்ந்துகொள்கிறது இந்தப் பழம். எந்த வசனமும் இல்லாத இந்த காட்சி வாழ்வின் அபத்தத்தை உணர்த்துகிறது. யாருடைய பசியையோ ஆற்ற வேண்டிய இந்தப் பழம் யாருக்கும் பயனற்று ஏன் அப்படி உருள வேண்டும்?

கொல்லப்பட்ட யாசர் கொல்லப்பட்ட அன்று இரவில் நாயொன்றுக்கு உணவளித்திருப்பான். அவனது சடலம் புதைக்கப்பட்ட இடத்தில் அந்த நாய் நின்று குரைத்துக்கொண்டிருக்கும். உடனிருந்த நண்பனின் மனைவியுடன் ஏற்பட்ட உறவு காரணமாக நண்பனையே கொன்ற மனிதர்கள் வாழும் அதே ஊரில் தான் ஒரு நேரம் உணவிட்டவனின் சடலத்தைச் சுற்றிச் சுற்றி வருகிறது அந்த நாய்.

பொதுவாகவே ஸிலான் படங்களில் வசனமற்ற காட்சிகள் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியமானவை கதாபாத்திரங்களுக்கிடையேயான உரையாடல்கள். இந்தப் படத்தில் வழக்கறிஞருக்கும் மருத்துவருக்கும் இடையேயான உரையாடல் கவனம்கொள்ளத்தக்கது. தனக்குத் தெரிந்த பெண் ஒருவர் கர்ப்பமாக இருந்தபோது, பிரசவத்துக்குப் பின்னர் தான் இறந்துவிடுவேன் என்று தீர்க்கமாகச் சொல்லிவிட்டு அதே போல் மரித்தார் என்று சொல்கிறார் வழக்கறிஞர். அந்தப் பெண் வழக்கறிஞரின் மனைவி என்பது பின்னர் பூடகமாகச் சொல்லப்படுகிறது. ஒரு பொதுக் கதை இருந்தபோதும், ஒவ்வொருக்கும் தனித் தனிக் கதைகளும் உள்ளன. பொதுக் கதையைப் பேசும் சாக்கில் படம் தனித் தனிக் கதைகளையும் சொல்கிறது. வாகனம் பாதையில் சென்றாலும் நாம் சன்னல் வழியே புறக் காட்சிகளைப் பார்த்தபடியேதானே பயணப்படுவோம். அப்படியான அனுபவம் தரக்கூடிய இயக்குநர் நூரி பில்கே ஸிலான். வாய்ப்புக் கிடைக்கும்போது, ஸிலானில் படத்தைப் பார்ப்பதன் மூலம் வாழ்வில் நாம் மேற்கொள்ளும் அபத்தங்களை நாம் உணர முடியும். அதற்காகவாவது அவரது படங்களைப் பார்க்கலாம். முதன்முறை அலுப்புத் தரும் அவரது படங்களை மறுமுறை பார்த்தால் அது நம்மை வசீகரித்துவிடக்கூடும். இதுதான் அவரது படங்களின் மாயம்.

இவரது த்ரீ மங்கீஸ், க்ளைமேட்ஸ், விண்டர் சிலீப், த வைல்ட் பியர் ட்ரீ ஆகியவையும் தனித் தனியாகச் சிந்தித்துப் பார்க்கத்தக்கவை.

(2022 ஏப்ரல் அகநாழிகை இதழில் வெளியான கட்டுரை)

திங்கள், மார்ச் 31, 2025

வாதை எல்லாம் வாஞ்சையின் பொருட்டே…


சில திரைப்படங்கள் நம்மைச் சிந்திக்கவிடாமல் செய்யும்; சில திரைப்படங்கள் தூங்கவிடாமல் செய்யும். சிந்திக்கவிடாமல் செய்யும் திரைப்படங்களை விட்டு விலகித் தூங்கவிடாமல் செய்யும் திரைப்படங்களை நோக்கிச் செல்லும்போது, திரைப்பட அனுபவம் நமது வாழ்வுக்கும் உதவக்கூடும். அப்படியான படங்களைப் பார்ப்பது நமது நேரத்தையும் பயனுள்ளதாக்கும். அப்படி நமது நேரத்தைப் பயனுள்ளதாக்கும் ஒரு திரைப்படமே பிரெஞ்சு இயக்குநர் ராபர்ட் ப்ரஸ்ஸான் இயக்கிய Diary of a Country Priest.
 
படத்தின் கதை மிகவும் எளிமையானது. ஒரு சிற்றூரின் சிறிய சபை, அதன் போதகர், அந்தச் சபையின் அங்கத்தினர்கள், அவர்களது மனோபாவங்கள் ஆகியவற்றைச் சுற்றிய சம்பவங்களே படமாக்கப்பட்டுள்ளன. இதை வைத்துக்கொண்டு, நம்பிக்கை, விசுவாசம், அன்பு, கருணை, போன்ற நற்குணங்களையும், வஞ்சம், விரோதம், வெறுப்பு போன்ற தீக்குணங்களையும் ஆராய்கிறது திரைப்படம்.

அம்பரி கோர்ட் என்னும் அந்தச் சிற்றூரின் சபைக்குப் பாதிரியாக வருகிறார் அந்த இளைஞர். பூஞ்சையான உடல் வாகு. எப்போதும் துயரத்தில் தோய்ந்தெழுந்தது போன்ற மூஞ்சி. பாதிரியாருக்குரிய அங்கியின்றி அவரைப் பார்த்தல் அரிது. இறை நம்பிக்கையை இதயம் முழுவதும் பரவவிட்ட மனிதர் அவர். தனது நாள்களின் ஒவ்வொரு நிகழ்வையும் அவர் தனது டைரியில் குறித்துவைக்கிறார். அந்த நிகழ்வுகளே காட்சிகளாக விரிகின்றன.

1951இல் வெளிவந்துள்ள திரைப்படம் இது. இதில் நடித்துள்ள பாதிரி கிறிஸ்துவை நினைவூட்டுகிறார். படம் பெரிய ஆன்மிக அனுபவத்தைத் தரக்கூடியதாக அமைந்துள்ளது. மிகத் தீவிரமான படம்தான். பார்வையாளரைச் சுவாரசியப்படுத்தும் எந்த அம்சமும் இல்லாத படம். எந்தக் காட்சியில் வேண்டுமானாலும் விருப்பமில்லாத பார்வையாளர் வெளியேறிக்கொள்ளலாம் என்ற முடிவெடுத்த பின்னர் படத்தை ப்ரஸ்ஸான் இயக்கியிருப்பார் என்றே தோன்றுகிறது.

இளம் பாதிரியுடன் யாருமே இல்லை. அவர் தனித்திருக்கிறார். அவரது உடல்நலமும் உவப்புக்குரியதாக இல்லை. ரொட்டியும் ஒயினும் மட்டுமே அவரது உணவு. அவற்றைத் தவிர வேறு எதுவும் அவருக்கு ஒத்துக்கொள்வதில்லை. ஒரு நாளில் அவருக்குப் பரிசாகக் கிடைக்கிறது முயல் கறி. அதைக் கூட அவரால் சமைத்துச் சுவைக்க இயலாது என்பதுதான் அவரது நிலைமை. வயிற்று உபாதை அவரை அடிக்கடி வாட்டி எடுக்கிறது. சபையிலோ அங்கத்தினர்களது நடவடிக்கை அவரை வேதனைப்படுத்துகிறது. முதியவர் ஒருவர் அவருடைய மனைவியின் இறுதிக் காரியத்துக்குச் சல்லிக்காசுகூடத் தர முடியாது எனச் சாதிக்கிறார். ஏழைகளை வதைக்காதீர்கள் என வாதிடுகிறார். எல்லோருக்குமான கட்டணம் எதுவோ அதுதான் அவருக்கும் விதிக்கப்பட்டிருக்கிறது. சபையின் கடமைகளை நிறைவேற்றுவதில் பாதிரிக்குச் சமூகத் திறமைகள் போதுமான அளவு இல்லை என அவரது மூத்த பாதிரிகளும் சபையோரும் கூறுகிறார்கள். ஆனால், பாதிரியோ இறை நம்பிக்கையில் ஊறித் ததும்புபவர். ஆனாலும், இரவுகளில் துயரம் கவியும் தருணங்களே அவரது துணையாய் உள்ளன.



புனித சமயச் சடங்கான திடப்படுத்துதல் தொடர்பான வகுப்புகளில் கலந்துகொள்ளும் சிறுமிகளில் செராஃபிதா என்னும் சிறுமி ஒருத்தி மட்டும் துடிப்பாக இருக்கிறாள். பாதிரியின் கேள்விக்குச் சமயம் சார்ந்த சரியான பதிலைக் கூறுகிறாள். தம் சீடர்களிடம் ரொட்டியைப் பிய்த்து உண்ணத் தந்தபோது, நீங்கள் உண்ணும் இந்த ரொட்டியானது எனது உடம்பு என்றும் ஒயினை அருந்தத் தந்தபோது, நீங்கள் அருந்தும் இந்த ஒயின் எனது ரத்தம் என்றும் கூறியதை நினைவுபடுத்தும் வகையில் அனுசரிக்கப்படும் சடங்குதான் திடப்படுத்துதல் என்கிறாள். பாதிரியின் உள்ளம் நிறைகிறது. ”எப்படி உன்னால் மட்டும் இப்படிச் சரியான பதிலைக் கூற முடிகிறது” எனப் பாதிரி கேட்கிறார். ”உங்களது அழகான கண்கள் தாம் காரணம்” என்கிறாள் செராஃபிதா. கதவுக்கு வெளியே பிற சிறுமிகள் சிரிக்கிறார்கள். பாதிரிக்கு என்னவோ போல் ஆகிவிடுகிறது. பாதிரி மௌனமாகக் கடக்கிறார் அந்தத் தருணத்தை. ஆனால், அவரது மனபாரம் அதிகரிக்கிறது. அவர்கள் ஏன் இவ்வளவு விரோத பாவம் காட்டுகிறார்கள் என டயரி எழுதுகையில் கேள்வி எழுப்புகிறார்.

செரஃபிதாவின் நடவடிக்கைகள் பாதிரிக்குக் கவலையை உண்டாக்குகின்றன. ஒரு நாள் பாதையோரத்தில் தோழிகளுடன் நிற்கும் அவளை சைக்கிளில் சென்ற பாதிரி பார்க்கிறார். அவரைப் பார்த்த மாத்திரத்தில் துள்ளிக் குதித்து ஓடும் செரஃபிதா தனது பள்ளிப் பையைத் தூக்கி சேறும் சகதியுமான நிலத்தில் எறிந்துவிட்டுப் போகிறாள். அதை எடுத்து அவளிடம் கொடுப்பதற்காக அவளுடைய வீட்டுக்குப் போகும் இளம் பாதிரிக்கு அங்கே எந்த மரியாதையும் கிடைக்கவில்லை; அவரது உதவி மதிக்கப்படவில்லை. மிகவும் பாராமுகத்துடன் அவர் நடத்தப்படுகிறார். செரஃபிதாவால் பாதிரி மிகுந்த வாதைக்கு ஆளாகிறார். தனது ஜெபம் குறைந்துவிட்டதோ என்னும் ஐயம் பாதிரிக்கு ஏற்படுகிறது. அதே செரஃபிதா பின்னொரு நாளில் மயங்கி சேற்றில் வீழ்ந்து கிடக்கும் பாதிரியைத் தொட்டுத் தூக்கித் துடைத்துப் பணிவிடை செய்து அனுப்புகிறாள். அப்போது அந்தச் சபையின் அங்கத்தினர்கள் எல்லோரும் பாதிரியைக் குடிகாரர் என்றே நினைக்கிறார்கள். அந்தச் சூழலில் செரஃபிதா அவரை அக்கறையுடன் கவனித்துக்கொள்கிறார்.

அந்த சபைக்குட்பட்ட மாளிகையில் ஃபெரெண்ட் சீமான் ஒருவர் வசிக்கிறார். மாளிகையின் சீமாட்டி சிறுவயதில் இறந்துவிட்ட தன் மகனை எண்ணியே துக்கத்துடன் நாள்களைக் கழிக்கிறார். சீமானுக்கும் வீட்டின் பணிப்பெண்ணான லூயிஸுக்கும் ரகசிய உறவு இருக்கிறது. இந்த உறவு காரணமாக சீமானின் பெண்ணான சந்தால் லூயிஸை இழிவுபடுத்துகிறாள். வீட்டில் நடைபெறும் நிகழ்வுகள் பருவப் பெண்ணான சந்தாலைக் கலக்கப்படுத்துகின்றன; அவளது நடத்தையில் கடினத்தன்மை கூடுகிறது. இது தொடர்பான தீர்வுக்கு முயல்வதாக சந்தாலிடம் கூறுகிறார் இளம் பாதிரி. அதற்காக, சந்தாலின் தாயிடம் பேசப்போன அன்று அந்த உரையாடலை நிகழ்த்த முடியாத அளவுக்குப் பாதிரியின் உடல்நலம் பாதிக்கப்படுகிறது- இவ்வளவுக்கும் நல்ல உடல்நிலையுடன் தான் அந்த மாளிகைக்குள் நுழைந்தார், என்னவோ திடீரென உடல்நிலை மோசமானது. மிகத் தீவிரமான உடல்நிலைக் கோளாறு என்பதை பாதிரி உணர்கிறார். ஏற்கெனவே இதைப்போல் ஆறு மாதங்களுக்கு முன்னரும் உடல் நலம் கெட்டிருந்தது அவரது நினைவுக்கு வருகிறது.

டார்ஸி என்ற இடத்தின் பாதிரியார் தந்த அறிவுரையின்படி டாக்டர் தெல்பெந்தெவைப் பார்க்கப் போகிறார் இளம் பாதிரி. அவரது உடலநலனைப் பரிசோதித்த டாக்டர் மிகவும் பலவீனமாக உள்ளதாகக் கூறுகிறார். மிகக் குறைவாக உணவு உண்ணும் காரணத்தாலேயே இப்படியான பாதிப்பு ஏற்பட்டதாகவும் நிலைமை மோசமாக உள்ளதாகவும் அவர் பாதிரியிடம் தெரிவிக்கிறார். ”ஆல்கஹால் என்ன ஆனது” என வினவுகிறார். ”ஆல்கஹாலா” என பாதிரி அதிர்ச்சியாகிறார். ”நீ குடித்ததைக் கேட்கவில்லை நீ பிறப்பதற்கு வெகு காலத்துக்கு முன்னர் உனக்காகச் செலவிடப்பட்ட ஆல்கஹால்” என்கிறார் டாக்டர். அவர் இயேசுவின் ரத்தம் குறித்துக் கேள்வி எழுப்புவதாக உணர்ந்துகொள்ள வேண்டியதிருக்கிறது. ”உனது கண்கள் நம்பிக்கைமிக்கவை, விசுவாசத்தை வெளிப்படுத்துபவை” என்று கூறும் டாக்டர், ”நீ, டார்ஸியின் பாதிரியார், நான் மூவரும் ஒரே இனம்” என்கிறார். அநீதியை ஏற்றுக்கொள்ள வேண்டியவர்கள் என்னும் பொருளில் அப்படிக் கூறுகிறார். டாக்டர் தனக்கு இறை நம்பிக்கை இல்லை என்கிறார். ஆழ்ந்த வருத்தத்தால் காயம்பட்டிருக்கும் மனத்தால் டாக்டர் அப்படிப் பேசுவதாக இளம் பாதிரி உணர்கிறார்.



ஒரு நாள் வழியில் டார்ஸியின் பாதிரியாரைச் சந்திக்கிறார் இளம் பாதிரி. அவர் ஆயர்களுக்குப் பாதிரியின் மீது நம்பிக்கை இல்லை என்கிறார்; பாதிரிக்கு விவேகம் இல்லை என்றும் கூறுகிறார். அவரது மிகப் பெரிய திட்டங்கள் சூழலுக்கு ஒத்துவராதவை அவற்றில் நம்பகத்தன்மை இல்லை என்பதைப் போன்ற கருத்தைத் தெரிவிக்கிறார். இவையெல்லாம் இயேசு கிறிஸ்துவை விமர்சிப்பதுபோலத்தான் உள்ளன. அவரது அன்பு என்பது நமது சமூகச் சூழலுக்கு ஒத்துவருமா எனக் கேள்வி கேட்பதுபோல் தான் இருக்கிறது. உலகம் புரியாத பிள்ளை என்பதைப் போல் இளம் பாதிரியைக் குறிப்பிடுகிறார் டார்ஸியின் பாதிரியார். இந்தக் காட்சியைக் காணும்போது, பகைவரை நேசிக்கச் சொன்ன இயேசு கிறிஸ்துவின் கொள்கைகளை மானசீகமாக நம்மால் தரிசிக்க முடிகிறது, அதே நேரத்தில் அதை ப்ரஸ்ஸான் எள்ளிநகையாடுவதாகவும் தோன்றுகிறது.

ஒருநாள் அதிகாலை மூன்று மணிக்கெல்லாம் எழுந்து தேவாலயம் சென்று ஜெபிக்கிறார். இதயத்தை நொறுக்கும்படியான உருக்கமான ஜெபத்தில் ஈடுபடுகிறார். அன்று காலையில் அவருக்கு மோசமான தாளில் பெயர் குறிப்பிடப்படாமல் எழுதப்பட்ட ஒரு கடிதம் வருகிறது. அவருக்கு வருத்தப்படுவதாகத் தெரிவித்த அந்த மொட்டைக் கடிதம் அவரை அந்தச் சபையை விட்டு வெளியேறும்படி எச்சரிக்கிறது. அவரது நலத்தை முன்னிட்டே அவரை வெளியேறச் சொல்வதாகவும் எவ்வளவு விரைவில் வெளியேற முடிகிறதோ அவ்வளவு விரைவில் வெளியேறுவது நல்லது என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்தக் கடிதத்தில் இருந்த கையெழுத்தும், ஃபெரண்ட் வீட்டுப் பணிப்பெண் லூயிஸ் கையில் உள்ள பைபிளிலிலிருந்த கையெழுத்தும் ஒரே போல் உள்ளன. அதன் பின்னர் அவரால் முழு மனத்துடன் ஜெபிக்க இயலவில்லை. ஆனால், நுரையீரலுக்குக் காற்றுப் போல, குருதிக்கு பிராண வாயு போல அவருக்கு ஜெபம் தேவையாயிருக்கிறது. தான் தனித்துவிடப்பட்டதாக பாதிரி உணர்கிறார். எப்போதும் போன்ற அதே தனிமை, அதே ஆழ்ந்த, படுதீவிர, கலக்கம் தரும் வகையிலான அமைதி. தடைகளை உடைக்கும் நம்பிக்கை காலாவதியாகிவிட்டதோ என்ற உணர்வு அவருக்கு எழுகிறது. கையில் இருக்கும் லாந்தர் விளக்கை ஊதி அணைக்கிறார். கடவுள் தன்னைவிட்டு விலகிவிட்டாரோ என அவருக்குத் தோன்றுகிறது.

தனது கடமைகளிலிருந்து தான் வழுவிவிடவில்லை என்று நினைக்கிறார். தனது உடல் நலம் மேம்பட்டால் தனது பணிகளை இன்னும் எளிதாக நிறைவேற்ற முடியும் என நம்புகிறார். இந்த நிலையில் டாக்டர் தெல்பெந்தே மர்மமான முறையில் இறந்துபோகிறார். அது தற்கொலை எனும் பேச்சும் ஊருக்குள் உலவுகிறது. அவரது மரணம் டார்ஸியின் பாதிரிக்குத் தாங்கவொண்ணாத வேதனையைத் தருகிறது. அவர் தற்கொலை செய்துகொண்டாரா என இளம் பாதிரி டார்ஸியின் பாதிரியாரிடம் கேட்கிறார். ”டாக்டர் ஏமாற்றமடைந்திருந்தார், அவரது நோயாளிகள் அவரை விட்டுவிட்டுச் சென்றனர் மொத்தத்தில் தனது தொழிலில் மீண்டும் ஜொலிக்க முடியும் என்னும் நம்பிக்கையை இழந்துவிட்டார்” என்கிறார் பாதிரியார். அதை அப்படியே கேட்கும் நிலையில் இளம் பாதிரி இல்லை. டார்ஸியின் பாதிரியார் கூறிய சொற்கள் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியதைப் போல் இருக்கிறது இளம் பாதிரிக்கு. அவர் இதுவரை அனுபவித்தறியாத மிகுந்த மன வேதனைக்கு ஆளாகிறார். ”உண்மையிலேயே டாக்டர் தற்கொலை செய்துகொண்டாரா?” என மீண்டும் கேட்கிறார். ”என்னிடம் கேட்காதே கடவுள்தான் நீதிபதி அவருக்குத்தான் தெரியும்” என்கிறார் டார்ஸியின் பாதிரியார். ”நாம் போரில் ஈடுபடுகிறோம்; எதிரியை எதிர்கொள்ள வேண்டியதுதான். ’எதிர்கொள்ள வேண்டியதுதான்…’ என்பது அவரது கொள்கை அதை அடிக்கடி டாக்டர் சொல்வார் நினைவிருக்கிறதல்லவா” என்று சொல்லிவிட்டுப் பாதிரியார் செல்கிறார். இந்தக் காட்சியின்போது, ஒலிக்கும் தேவாலய மணி பெருஞ்சோகத்தை, வேதனையை வெளித்தள்ளுகிறது. இளம் பாதிரி சற்று நேரம் அங்கேயே நின்றுவிட்டு மெதுவாக அங்கிருந்து நகர்கிறார். மழையின் நீர் நிலத்தடிக்குப் போவதைபோல் பாதிரியாரது சொற்கள் இளம் பாதிரியின் உள்ளத்தின் ஆழத்தில் சென்று புதைகின்றன.

எனது நம்பிக்கையை நான் இழந்துவிடவில்லை. இந்தத் திடீரான, குரூரமான மனக் கசப்பு மிகுந்த அனுபவம் எனது நரம்புகளைப் பாதித்துள்ளது; என்னைச் சஞ்சலப்படுத்தியுள்ளது ஆனால் எனது நம்பிக்கை மாறாமல் அப்படியேதான் இருக்கிறது என்று நினைக்கிறார் இளம் பாதிரி. இவ்வாறு நினைத்தபோதே தன்னை யாரோ அழைத்தது போல் இருக்கிறது என அவருக்குத் தோன்றுகிறது. மெதுவாக எழுந்துசென்று ஜன்னலுக்கு வெளியே எட்டிப் பார்க்கிறார். அங்கே யாரும் இருக்க மாட்டார்கள் என்று உணர்ந்தும் அப்படிப் பார்க்கிறார்.

பாதிரியைச் சந்திக்க வருகிறாள் சந்தால். அவளது உரையாடலில் அவளுக்கு அவளுடைய தந்தை மீதும் தாய் மீதும் அவள் கொண்ட வெறுப்பு வெளிப்படுகிறது. பணிப்பெண் மீதான கோபத்தை வெளிப்படுத்துகிறாள். அவளைக் கொன்றுவிடுவேன் அல்லது என்னை மாய்த்துக்கொள்வேன் எனக் கடுங்கோபம் வெளிப்பட மொழிகிறாள். வெறுப்பைக் கைவிடச் சொல்கிறார் பாதிரி. அவளைப் பாவமன்னிப்பு கூண்டுக்கு நகர்த்திச் செல்கிறார். ஆனால், அவளோ பாவமன்னிப்பு பெறத் தான் விரும்பவில்லை என்கிறாள். எனக்கு வேண்டியது நீதி என்பது உங்களுக்கு நன்கு தெரியும் என்கிறாள். தன் தாய் ஒரு கோழை என்கிறாள். தனக்கு மகிழ்ச்சியானவற்றைக்கூடச் செய்துகொள்ள முடியாதவள் என்கிறாள். பணிப்பெண்ணும் தந்தையும் என்ன சொன்னாலும் நம்புபவள் என்கிறாள். தந்தைமீதும் மரியாதை இல்லை என்கிறாள். அவர்கள் எல்லோரையும் வெறுக்கிறேன் என்கிறாள். அவள் உதடுகள் வெளிப்படுத்தாத வார்த்தைகளையும் அவரால் உணர முடிகிறது.

அவள் பையில் மறைத்துவைத்திருக்கும் கடிதத்தைக் கொடு எனக் கேட்கிறார் பாதிரி. அவள் மறுக்காமல் கடிதத்தைக் கொடுத்துவிட்டு, கண்டிப்பாக நீங்கள் ஒரு பிசாசாகத்தான் இருக்க வேண்டும் என்று கூறிவிட்டுச் செல்கிறாள். அவள் சென்ற பின்னர், அந்தக் கடிதத்தை பாதிரி வாசிக்காமல் நெருப்பிலிட்டு எரிக்கிறார். அது அவள் தன் தந்தைக்கு எழுதிய தற்கொலைக் குறிப்பு என்பதாகக் காட்சியில் உணர்த்தப்படுகிறது. அவளது உக்கிரமான கண்களில் தற்கொலைத் தடயத்தைப் பாதிரி உணர்கிறார். தான் ஒன்றுக்கும் பயனற்ற துக்ககரமான பெரிய மதிப்பில்லாத பாதிரி என அவருக்குத் தன்னைப் பற்றிய ஓர் எண்ணம் ஏற்படுகிறது. அவள் கூறியவற்றைக் காது கொடுத்துக் கேட்டிருக்கக் கூடாது என்றும் அவருக்குத் தோன்றுகிறது. கடவுள் அவளைத் தண்டிப்பதாக அவர் நினைக்கிறார். மனிதர்கள் குறித்த எதுவும் தனக்குத் தெரியாது; தெரிந்துகொள்ளவும் இயலாது என்று அவருக்குத் தோன்றுகிறது.

சந்தாலிடம் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றும் பொருட்டு சீமாட்டியை வீட்டில் சென்று சந்திக்கிறார் பாதிரி. சந்தால் எதுவும் விபரீதமாகச் செய்துகொள்வாளோ எனப் பயப்படுவதாகச் சொல்கிறார். அவளுக்கு மரண பயம் அதிகம் என்கிறாள் சீமாட்டி. அப்படிப்பட்டவர்கள் தங்களை மாய்த்துக்கொள்வார்கள் என்கிறார் பாதிரி. அப்படிப் பிறர் உங்களிடம் சொல்லியிருக்கக் கூடும் எனச் சொல்லும் சீமாட்டி நீங்கள் மரணத்துக்குப் பயப்படுகிறீர்களா என வினவுகிறாள். கணவனின் துரோகம், மகளின் வெறுப்பு போன்றவற்றுக்குத் தானா பொறுப்பு என்பதைப் போன்ற கேள்விகளை எழுப்புகிறாள் சீமாட்டி. நல்லது கெட்டதுகளில் நாம் ஒருவரில் ஒருவர் பிணைக்கப்பட்ட விதத்தை முழுமையாகப் புரிந்துகொண்டால் நம்மால் வாழவே முடியாது என நான் நம்புகிறேன் என்கிறார் பாதிரி. மரணம், அன்பு, கடவுள் நம்பிக்கை போன்ற விஷயங்கள் குறித்து இருவரும் உரையாடுகிறார்கள். அதன் வழியே ஆன்மிக உலகின் பல சாளரங்கள் திறந்துகொள்கின்றன.

பாதிரி கடவுளின் மேன்மையை எடுத்துச் சொல்கிறார். கடவுளிடமிருந்து வெகுதூரம் விலகியிருந்த சீமாட்டி கடவுள்தன்மையைப் புரிந்துகொள்கிறார். தனது மகனின் மரணம் காரணமாகக் கடவுளிடமிருந்து விலகியிருந்த அவர் வேறு திசைக்குத் திரும்புகிறார். தனது கழுத்தில் அணிந்திருந்த மகனின் படம் கொண்ட டாலர் கோக்கப்பட்டிருந்த சங்கிலியை அறுத்து நெருப்பில் எரிகிறார். என்ன பைத்தியக்காரத்தனம் என்கிறார் பாதிரி. என்னை மன்னியுங்கள் என்கிறார் சீமாட்டி. கடவுள் யாரையும் துன்புறுத்துவதில்லை என்கிறார் பாதிரி. நாம் ஒருவரோடொருவர் கருணையுடன் நடந்துகொள்ள வேண்டும் என விரும்புகிறார் என்கிறார். கடவுள் அன்பின் எஜமானன் அல்ல அன்பே அவர்தான் என்றும் கூறுகிறார் பாதிரி. சீமாட்டி வேதனையுடன் முழங்கால் படியிட்டுத் தலையைக் கவிழ்கிறார். அமைதி ஆட்கொள்ளட்டும் எனப் பாதிரி ஜெபித்து அவர் சிரசின் மேல் சிலுவைக்குறியிடுகிறார்.

பாதிரி வீட்டுக்கு வரும்போது, தோட்டக்காரர் ஒரு சிறிய பொதியை அவரிடம் கொடுக்கிறார். அதில் சீமாட்டி நெருப்பில் எரிந்த சங்கிலியிலிருந்த வெற்று டாலரும் அவரது கடிதமும் இருக்கின்றன. இறந்துபோன மகனின் பயனற்ற நினைவு எல்லாவற்றிலிருந்தும் விலக்கித் தன்னைத் தனிமைக்குள் தள்ளிவிட்டது என்றும் அதிலிருந்து அடுத்த குழந்தை தன்னை வெளியே இழுத்துவிட்டிருக்கிறது போல் தெரிகிறது என்றும் எழுதிய கடிதத்தைப் பாதிரி வாசிக்கிறார். ஒரு பொறுப்பிலிருந்து தான் வழுவவில்லை என்ற நிம்மதி சீமாட்டிக்குக் கிடைத்ததைக் கடிதம் தெரிவிக்கிறது. பாதிரி தன்னை அமைதியடையச் செய்ததை நன்றியுடன் குறிப்பிட்டுள்ளார் சீமாட்டி. நாம் இனி சந்தித்துக்கொள்வோமா என்று தெரியவில்லை எனக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த சீமாட்டி அன்றிரவு இறந்துவிடுகிறார்.

துயரமிகு பின்னணியிசை ஒலிக்க பாதிரி சீமாட்டியின் மாளிகையை நோக்கி வியர்க்க விறுவிறுக்க ஓடுகிறார். சீமாட்டியின் முகத்தில் புன்னகை உறைந்திருக்கலாம் என நம்பிய பாதிரி புன்னகை அரும்பியிராத முகத்தையே பார்க்கிறார். கைகளை உயர்த்தி அவள் அமைதிகொள்ள ஜெபித்து, அப்படியே முழங்கால் படியிடுகிறார். தன் வேலையை முடித்துவிட்டு மீண்டும் மாளிகைக்குச் செல்கிறார். சீமாட்டியின் சடலத்தின் நெற்றியில் கைவைத்து அவள் அமைதிகொள்ள வேண்டுகிறார்.

மறுநாள் மாளிகைக்குச் செல்கிறார். அங்கே சந்தால் அவரை அழைத்துச் செல்கிறாள். பணிப்பெண் வீட்டை விட்டுப் புறப்பட்ட செய்தியைச் சொல்கிறார். சீமாட்டியின் இருக்கையில் சந்தால் அமர்கிறார். தான் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிவிக்கிறாள். தான் விரும்பியது தனக்குக் கிடைத்துவிட்டதாகக் கூறுகிறாள். நீ இப்போது இருப்பது போலவே தொடர்ந்து இருந்தால், நீ யாரையாவது ஒருவரை வெறுத்துக்கொண்டே இருப்பாய்… உண்மையில் நீ வெறுப்பது பிறரையல்ல உன்னையே என்கிறார் பாதிரியார். நான் விரும்பியது நடக்கவில்லை எனில் நானே என்னை வெறுக்கத்தான் செய்வேன் என்கிறாள் அவள் ஆங்காரத்துடன்.

சீமாட்டியின் மரணத்துக்குப் பாதிரி காரணம் என்று அந்தச் சிற்றூர் நம்புகிறது. ஆனால், சீமாட்டி மன அமைதியுடன்தான் மரணமடைந்துள்ளார் என்பது, சீமாட்டியை அவளது மன இறுக்கத்திலிருந்து விடுவிடுத்து இறைவனுக்கு அருகில் கூட்டிவந்துள்ள பணியைச் செய்துமுடித்த பாதிரிக்கு மட்டுமே தெரியும். அதற்குச் சான்றாக, பாதிரிக்குச் சீமாட்டி எழுதிய கடிதம் உள்ளது. பாதிரியோ அந்தக் கடிதத்தைக் காட்டி தனது தரப்பை நிரூபிக்க விரும்பவில்லை. அப்படியே இருந்துவிடுகிறார்.

பாதிரியின் உடல்நிலை மிகவும் மோசமாகிறது. அருகிலுள்ள நகரத்துக்கு சிகிச்சைக்காகச் செல்கிறார். நகரத்துக்குச் செல்வதற்காக ரயில் நிலையத்துக்கு பாதிரியை இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் செல்கிறான் சந்தாலின் உறவுக்கார இளைஞன். அந்த இரு சக்கர வாகனப் பயணம் பாதிரிக்கு ஒரு சாகசம் போல் தோன்றுகிறது. மிகச் சன்னமான நேரமே நிகழ்ந்தாலும் பாதிரியின் வாழ்வில் அந்தப் பயணம் பொருள்மிக்கதாகிறது. அதன் பின்னர் அவர் மருத்துவரைப் பார்க்கிறார். பாதிரிக்குப் புற்றுநோய் இருப்பது உறுதியாகிறது. பழைய நண்பர் ஒருவரைப் பார்க்கச் செல்லும் பாதிரி அங்கேயே உயிரை விட்டுவிடுகிறார்.

மொத்தத்தில், பாதிரியின் வாழ்க்கை பல கேள்விகளை எழுப்பிவிடுகிறது. எல்லோருக்கும் நல்லவராக நடக்க முயன்ற பாதிரியை ஏன் ஒருவரும் சரிவரப் புரிந்துகொள்ளவில்லை. பாதிரியைப் போன்றவர்கள் கதி இதுதானா? உலகம் சிறக்க அன்பொன்றே வழி என்று சொன்ன கிறிஸ்துவின் எண்ணம் தவறா? இந்த உலகம் நல்லவர்களுக்கானதில்லையா? மிகச் சரியான மனிதரான அந்தப் பாதிரி ஏன் மிகத் தவறான மனிதராகப் புரிந்துகொள்ளப்பட்டார்?

அந்தச் சிறிய ஊர் என்பதை முழு உலகமாகவும் அதன் அங்கத்தினர்களை உலக மக்களாகவும் பாதிரியை கிறிஸ்துவாகவும் கொள்ளும்போது, படம் விரிந்த தளத்தில் பொருள்தருகிறது.

படத்தில் இரண்டு மரணங்கள் இடம்பெறுகின்றன. ஒன்று, டாக்டர் தெல்பந்தேவின் மரணம், அது தற்கொலை எனச் சொல்லப்படுகிறது. அவர் கடவுள் நம்பிக்கையற்ற மனிதராகவே காட்டப்படுகிறார். அடுத்தது சீமாட்டியின் மரணம். அவர் கடவுளை உணர்ந்து அவர் அருகில் சென்ற வேளையில் மரணமடைகிறார். ஆனால், அவரது முகத்தில் இறப்புக்குப் பின்னர் ஒரு சிறிய புன்னகைகூட இல்லை. இவை எல்லாம் சேர்ந்து ப்ரஸ்ஸான் கடவுள் தொடர்பாக என்ன சொல்ல வருகிறார் என்பதைப் பற்றிக் கோடிட்டுக் காட்டுகின்றன. அதைச் சிந்திக்கும் வேளையில் நமக்குப் படம் வெவ்வேறு போதனைகளைத் தருகிறது. அவற்றுக்காகத் தான் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டியதிருக்கிறது.
*

வெள்ளி, மார்ச் 07, 2025

காதல் எனும் மயில் துத்தம்

சம காலத்தில் எழுதுபவர்களின் எழுத்துகளை அதிகமாக வாசித்திருக்காத நிலையில் கவிப்பித்தன் என்பவர் எழுதிய ஈமம் என்றொரு நாவலை வாசித்து முடித்தேன். அவர் ஏற்கெனவே நீவாநதி, மடவளி என இரு நாவல்களை எழுதியுள்ளார் என்கிறது நாவலின் முன்னுரை. ஒரு வித்தியாசமான களமாக, ஒரு பிணவறையில் தொடங்கிய கதை பின்னர் உயிர்த்தெழுதல், காதல், கைவிடுதல், உறவுச் சிக்கல், வாழ்வதற்கான போராட்டம் என்னும் பாதையில் சென்று மற்றொரு காதலின் தொடக்கத்தில் முடிந்தது.

நாவலாசிரியர் வருவாய்த் துறையில் பணியில் இருக்கிறார் என நண்பர் கூறினார். நாவலும் ’சக வருவாய்த் துறை அலுவலர்களுக்கு’ சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அந்தத் துறையில் இருந்துகொண்டு எழுதுவது என்பது பெரிய சவால் என்பதை மறுப்பதற்கில்லை. கடும்பணிச் சுமை, உளவியல்ரீதியான நெருக்கடி என அனைத்துச் சிக்கல்களையும் தாண்டி அங்கிருந்து ஒருவர் எழுதுகிறார் என்பது ஆசுவாசம் அளிக்கவே செய்கிறது.
நாவல் போகிறபோக்கில், குடியின் தீங்கையும் சொல்லாமல் சொல்கிறது. கைக்குழந்தையை வைத்துக்கொண்டு கிடைக்கும் சொற்பப் பணத்தையும் குடித்துத் தீர்க்கும் தகப்பனை நாவல் நம் முன் நிறுத்தும்போது, அப்படி என்ன தான் இருக்கிறது இந்தப் பாழாய்ப்போன குடியில் என்று தான் தோன்றுகிறது. ஓரிடத்தில், அந்தத் தகப்பன் இரவில் குடித்துவிட்டு உறங்கிவிடுகிறான். காலையில் விழிப்பு தட்டியபோது, அந்தச் சின்னஞ்சிறிய குழந்தை அவனது கால் கட்டை விரலைச் சூப்பிக்கொண்டிருக்கிறது. பிறந்து சில மாதங்களில் தாயை இழந்த குழந்தை, தந்தையைத் தவிர ஆதரவென யாருமற்ற அந்தக் குழந்தை அப்படி நிற்கும் காட்சி சட்டெனப் பதைபதைக்க வைக்கிறது. ஆனால், நாவலாசிரியர் எந்த இடத்திலும் உணர்வைச் சுரண்டும் தன்மையில் வளவளவெனச் சம்பவங்களை நீட்டிச் செல்லவில்லை. அதே வேளையில் தவிர்த்திருக்கப்பட வேண்டிய சில சம்பவங்களை விரிவாக விளக்கவும் செய்கிறார்.
ஒண்ட ஓரிடமும் கிடைக்காத, தோள்சாய ஒருவரும் இல்லாத மகேந்திரனுக்கு ஆதரவு அளிக்கும் பெரியவர் மாசானம் அவனைப் போன்ற துயரத்தை எதிர்கொண்டவர் என்பதால் அவனுக்கு ஆதரவளிக்கிறார். அவரது கதையைச் சொல்லாமலே புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், நாவலாசிரியர் அதையும் விரிவாகச் சொல்கிறார். மகேந்திரனின் தந்தை ஆனந்த மூர்த்திக்கும் சுசீலாவின் தந்தை கதிரவனுக்குமான சண்டையின் காரணமாகவே மகேந்திரன் சுசீலா திருமணத்தை நடத்தவியலாத நிலை ஏற்படுகிறது. ஆனால், ஆனந்த மூர்த்திக்கும் கதிரவனுக்குமிடையே என்ன சண்டை என்பது இறுதிவரை தெரியவில்லை.
உண்மையிலேயே மனிதர்கள் இவ்வளவு சுயநலத்துடன் தான் நடந்துகொள்கிறார்களா, சொந்தக் குடும்பமே இவ்வளவு விரோத பாவம் கொண்டுவிடுமா? இப்படியான கேள்விகளை நாவல் எழுப்புகிறது. ஒரு செய்தித்தாளில் நாம் வாசிக்கும் விநோதமான சம்பவமோ ஒரு வருவாய்த்துறை அலுவலகத்துக்கு வரும் ஒருவர் தன் வாழ்வு குறித்துச் சொன்ன கதையோ இந்த நாவலுக்கு ஊற்றுக் கண்ணாயிருக்கக் கூடும் என்ற எண்ணத்தையே ஏற்படுத்துகிறது. அப்படி ஒரு சம்பவத்தை எடுத்துக்கொண்டு சம்பவங்களை முன் பின்னாகக் கோத்து சுவாரசியமான கதையாக்கியிருக்கிறார்.
நாவல் நடைபெறும் இடம் குறிப்பாகச் சுட்டப்படுகிறது. ஆரணி, குடியாத்தம், வேலூர், பெங்களூர், பம்பாய் எனப் பல இடங்கள் நாவலில் இடம்பெற்றுள்ளன. அந்த மனிதர்தம் வாழ்க்கை நாவலில் காட்டப்படுகிறது. ஆனால், நாவல் நடைபெறும் காலம் குறிப்பாகச் சுட்டப்படவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக நாவல் சம்பவங்களில் கிடைக்கும் தரவுகளிலிருந்து வாசகரே ஊகித்து அறிந்துகொள்ளத்தான் முடிகிறது. நாவலில் தகவல்களைப் பரிமாறத் தொலைபேசி இல்லை. கடிதப் போக்குவரத்தே உள்ளது. ஒரு கல்லறைக் குறிப்பில் மறைவு 1988 என்று வருகிறது. இவற்றை வைத்தே நாவல் இந்தக் காலகட்டத்தில் நடந்திருக்கிறது என்னும் முடிவுக்கு வாசகர் வர வேண்டியுள்ளது. காலம் வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டிருக்கிறது என்னும் முடிவுக்கு வர எந்தத் தடயமும் தென்படவில்லை.
வாழ்வதற்கான ஆசை மனிதரை எந்தச் சூழலையும் எதிர்கொள்ளவைத்துவிடுகிறது என்னும் வகையில் நாவல் நம்பிக்கையை அளிக்கிறது. சொந்தத்துக்குள் நடந்த காதலால் பல பிரச்சினைகளை எதிர்கொண்ட மகேந்திரன் மகள் சங்கீதாவின் பார்வை வெளியில் ஒரு வாலிபன் மீது அழுத்தமாக விழும்போது, நாவல் நம்மிடமிருந்து விடைபெற்றுச் செல்கிறது. அந்தச் சங்கீதாவின் வாழ்வில் என்னவெல்லாம் துயரம் வரப்போகிறதோ என்று ஏற்படும் எண்ணத்தைத் தவிர்க்கவியவில்லை.
காதல் சிக்கலைத் தாங்கிக்கொள்ளவியலாத ஒருவன் மயில் துத்தம் குடித்துச் சாக முயல்கிறான்; காதலுடன் மணந்துகொண்ட ஒருவன் மீது கொண்ட பிணக்கு காரணமாக ஒருத்தி மரத்தில் தொங்குகிறாள். இவர்களுக்குப் பிறந்த பெண்ணும் காதலில் விழத்தான் செய்கிறாள். எவ்வளவு போராட்டம் இருப்பினும், எவ்வளவு பிரச்சினைகள் இருப்பினும் மலர்கள் மலர்வது போல் காதலும் மலர்ந்துகொண்டே இருக்கிறது. அதனால் ஏற்படும் துயரங்களும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. வாழ்க்கை ஒரு தொடர் பயணம். அந்தத் தொடர்பயணத்தில் அருகருகே அமர்ந்த கதாபாத்திரங்கள் தொலைவுக்குச் சென்றுவிடுவதும், தொலைவில் இருந்த கதாபாத்திரங்கள் அருகருகே வந்துவிடுவதும் வாழ்க்கை நடத்திக் காட்டும் மாயமன்றி வேறென்ன?
நாவலில் பல இடங்களில் எழுத்துப் பிழைகள் காணப்படுகின்றன; ஓரிடத்தில் நாவலின் பிரதான கதாபாத்திரமான மகேந்திரனே மனோகரனாகியிருக்கிறான். என்னடா திடீரென மகேந்திரன் எப்படி மனோகரன் ஆனான் எனப் பார்த்தால் அது பிழை என்பது தெரிகிறது. ஆனால், பிழைகளைக் கடந்து நாவல் அதன் பின்னே வாசகரை அழைத்துச் சென்றுவிடுகிறது.
இந்த நாவலை வாசித்து முடித்த பின்னர் தமிழில் copy editing எவ்வளவு அவசியம் என்பதை உணர முடிந்தது. மிகவும் செறிவாகவும் கன கச்சிதமாகவும் அமைந்திருக்க வேண்டிய நாவல் நாவலாசிரியர் சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லிய திருப்தியில் வாசகருக்கு அளித்திருக்க வேண்டிய பரம திருப்தியில் பாதியை அள்ளிச் சென்றுவிட்டது.
ஈமம்
கவிப்பித்தன்
வெளியீடு:
நூல்வனம்
முதல் பதிப்பு: பிப்ரவரி 2021
பக்கங்கள்: 384
விலை: ரூ. 440

(2024 மே 1 அன்று ஃபேஸ்புக்கில் எழுதிய குறிப்பு)

லேட்டஸ்ட்

தலைப்பிலேயே ’த’வைக் காணோம்

தொடர்பவர்