பெரிய திருப்பங்கள் எவையும் அற்ற இயல்பான கதை ஓட்டம். இந்தப் படத்தை இயக்கிய அமித் மஸுர்கர் இயக்கிய நியூட்டன் என்னும் படத்தைப் பார்த்திருக்கிறேன். ஏதோ ஒரு திரைப்பட விழாவின் போது, ரஷ்ய பண்பாட்டு மையத்தில் இந்தப் படத்தை பார்த்ததாக நினைவு. ஷெர்னியும் அப்படி ஒரு சாயலையே கொண்டிருக்கிறது. அந்தப் படத்தில் தேர்தலை நடத்துவதில் உள்ள சவாலை ஒரு அதிகாரி எப்படிக் கையாள்கிறார் என்பது விவரிக்கப்பட்டிருந்தது. இதில், வன அதிகாரி எதிர்கொள்ளும் சவால்கள் திரைக்கதையின் முதன்மை அம்சமாயிருக்கின்றன.
வனத்தில் நடமாடும் பெண் புலி ஒன்று அருகே இருக்கும் கிராமத்தினரைச் சேர்ந்த ஒருவரை அடித்துக்கொல்கிறது. மேலும் ஓரிருவர் கொல்லப்படுகிறார்கள். அந்த மரணங்களின் பின்னணியில் அதிகாரிகள் எப்படி நடந்துகொள்கிறார்கள், அரசியல்வாதிகள் அந்தப் பிரச்சினையைத் தங்களுக்கு வாகாக எப்படிப் பயன்படுத்தப் பார்க்கிறார்கள் போன்றவற்றின் அடிப்படையில் திரைக்கதை நகர்த்தப்பட்டிருக்கிறது. பெரிய கதாநாயக அம்சம் என்று எதுவுமில்லை. மிகச் சாதாரண நடுத்தரவர்க்கப் பெண்ணாகவே இருக்கிறார் வன அதிகாரி வித்யா (வித்யா பாலன்). சுற்றுச்சூழலை அழிப்பதில் எப்படி அரசியல்வாதிகளும் அதிகார வர்க்கமும் கைகோத்துள்ளது என்பதைப் போகிறபோக்கில் சொல்கிறார்கள்.
வனப் பாதுகாப்பு, பழங்குடியினர் நலன் இவை இரண்டுக்குமிடையே சிக்கலாக வளர்ந்து நிற்கும் அனைத்துக் காரியங்களும் அரசியல்வாதிகள், அதிகாரவர்க்கம் இரண்டின் கைங்கர்யங்களாகவே உள்ளன. இதனிடையே டிஆர்பி ரேட்டிங்காக ஊடகங்கள் வேறு பிரச்சினையை ஊதிப் பெருக்கும் காரியத்தில் இறங்குகின்றன. கிராமத்தினரை அடித்துக்கொல்லும் பெண் புலியைத் தேடும் நடவடிக்கை தொடர்கிறது. வித்யாவுக்குப் புலியைக் கொல்வதில் உடன்பாடில்லை. அதைப் பிடித்து தேசிய பூங்காவில் விட்டுவிட வேண்டும் என நினைக்கிறார். அந்தப் புலியையும் அதன் குட்டிகளையும் பாதுகாக்க வித்யாவால் முடிந்ததா, அந்தப் பயணத்தில் அவருக்கு ஏற்படும் அனுபவங்கள் இவையே படமாகியுள்ளன.
படம் மிக மெதுவாகத் தான் நகர்கிறது. பொழுதுபோக்கு அம்சங்கள் என்று பெரிதாக எதுவும் இல்லை. ஆனால், வழக்கமான கதைப் படங்களைப் பார்த்து பார்த்து அலுத்துப்போயிருந்தால் இந்தப் படம் சற்றுப் புத்துணர்ச்சி தரக்கூடும். இதுவும் மிக உயர்வான ரசனைக்குரிய படமன்று. ஆனால், எடுத்த கதைக்கு இயன்றவரை ஒழுங்காக உழைத்துப் படத்தை உருவாக்கியுள்ளனர். முழுக்க முழுக்க வனப்பகுதியிலேயே படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆகவே, கண்ணுக்குக் குளுமையான பசுமையான வனத்தின் அழகைப் பார்க்க முடிகிறது. அந்த வனத்திடையே கனிமச் சுரங்கம் ஒரு மாபெரும் வடுவாக நிற்கிறது. அது வன விலங்குகள் செல்லும் பாதையில் அமைந்துள்ளது. அதுதான் பிரச்சினையின் மையம்.
வளர்ச்சி என்னும் பெயரில் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவித்தால் அதனால் மனிதர்கள் சிக்கலை அனுபவிக்கத்தான் வேண்டியுள்ளது. வனம் வளம் பெற வேண்டும் மனித வாழ்வும் நலம் பெற வேண்டும் என்றால் அதற்கு வனத்தையும் வன விலங்குகளின் தன்மையையும் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால் உண்மையிலேயே வன அதிகாரிகள் அப்படி இருக்கிறார்களா? தான் நம்பிய உயரதிகாரியே அரசியல்வாதிகளுடன் கூட்டுச்சேர்ந்துவிடுவதை வித்யாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவரைக் கோழை என்கிறார். இந்தக் கோழைகள் தாம் பலவிடங்களில் நிறைந்திருக்கிறார்கள் என்பதே யதார்த்தம்.
புலியை வேட்டையாடத் துடிக்கும் நபருக்கு அரசியல்வாதிகளின் தயவு இருக்கிறது. அந்தப் புலியைக் காப்பாற்ற நினைக்கும் அதிகாரிக்கோ அதிகாரவர்க்கத்தினரின் ஆதரவுகூடக் குதிரைக் கொம்பாகிறது. நேர்மையான அதிகாரிகளை அந்தப் பகுதியின் மக்கள் மாத்திரம் எப்படியும் கொண்டாடுகிறார்கள் என்பதைப் படம் இயல்பாகச் சொல்லிச் செல்கிறது. ஆளும் தரப்பின் அதிகாரவர்க்கத்தின் பேராசைக்கு விலங்குகள் பலியாவதைப் போலவே மக்களும் பலியாகிறார்கள். இந்த இருதரப்பினருக்கும் இடையே நேர்மையை நிலைநாட்டப் போராடும் ஓர் அதிகாரியின் நடைமுறைச் சிக்கலைப் பார்க்க விரும்புவர்களுக்கான படம் இது.
வனம் புலி என்பதையெல்லாம் கதை மையமாகக் கொண்டிருந்தும், ஆக்ரோஷமோ, அச்சுற்றுத்தலோ இல்லாத காட்சிகளையே படம் கொண்டிருக்கிறது. அதிக அளவிலான ரத்தம் திரையில் காட்டப்படவில்லை. மனிதரின் இயல்புக்கும் ஆசைக்கும் அதிகாரத்துக்கும் நேர்மைக்கும் இடையேயா கண்ணாமூச்சு விளையாட்டே இப்படம். ஆஸ்தா டிக்கு எழுதிய கதை, திரைக்கதையை அமித் மஸுர்கர் இயக்க படம் பிடித்திருக்கிறார் ராகேஷ் ஹரிதாஸ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக