இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, ஏப்ரல் 17, 2011

மேலும் சில சிலைகள்

மேயர் நமச்சிவாயம் சிவராஜ்

சென்னை நகர மேயராக இருந்த ராவ் பகதூர் நமச்சிவாயம் சிவராஜின் திரு உருவச்சிலை சென்னை வள்ளலார் நகர் பேருந்து நிலையச் சந்திப்பில் நிறுவப்பட்டுள்ளது. 1994 டிசம்பர் 6 அன்று அன்றைய முதல்வர் ஜெ.ஜெயலலிதா இச்சிலையைத் திறந்துவைத்துள்ளார். இச்சிலையின் தகவல்களைச் சற்று சிரமப்பட்டே படிக்க வேண்டியுள்ளது. பராமரிப்பற்று இருக்கிறது இச்சிலை. சிவராஜ் மெட்ராஸ் மாகாணத்தைச் சார்ந்த கடப்பாவில் 1892, செப்டம்பர் 29இல் பிறந்தவர். இவரது தந்தை தலித் சமுதாயத்தைச் சார்ந்தவர். பின்னர் புத்த மதத்தைத் தழுவினார். சென்னை மாநிலக் கல்லூரியில் 1911இல் பட்டம் பெற்றார். சென்னை சட்டக் கல்லூரியில் 1915இல் வழக்கறிஞர் பட்டம் பெற்று சர் சி பி ராமசுவாமி அய்யரிடம் ஜூனியராகப் பயிற்சி எடுத்துக்கொண்டார். சென்னை சட்டக் கல்லூரியில் விரிவுரையாளராக 13 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். செங்கல்பட்டு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக 1957 முதல் 1962வரை இருந்துள்ளார். மேயர் சிவராஜ் 1964 செப்டம்பர் 29 அன்று காலமாகியுள்ளார்.
டாக்டர் ரங்கச்சாரி


டாக்டர் ரங்கச்சாரியின் முழு உருவச் சிலை சென்னை பொது மருத்துவமனையின் முகப்பில் நுழைவாயிலருகே நிறுவப்பட்டுள்ளது. எப்போதும் கையைப் பின்புறம் கட்டிவைத்தபடி நடக்கும் பழக்கம் உடையவர் இவர் என்பதால் இச்சிலையும் அப்படியே அமைக்கப்பட்டுள்ளது. இச்சிலை நவம்பர் 6, 1939 அன்று மெட்ராஸ் கவர்னர் லார்டு எர்ஸ்கின்னால் திறந்துவைக்கப்பட்டது. முழுக்க முழுக்க பொதுமக்கள் தந்த நிதியால் உருவாக்கப்பட்டது இச்சிலை.

சருக்கை ரங்காச்சாரி மெட்ராஸ் மாகாணத்தைச் சார்ந்த பிரசித்தி பெற்ற மருத்துவர். இவர் 1892 ஏப்ரலில் பிறந்தார். இவரது தந்தை கிருஷ்ணமாச்சாரி மெட்ராஸ் மாகாண அரசாங்கப் பொறியியலாளர். ரங்கச்சாரியையும் பொறியியலாளராக்க விரும்பினார். ஆனால் ரங்கச்சாரி மருத்துவராகவே விருப்பம் கொண்டார். இவர் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்தவர். தனது பள்ளிப்படிப்பை கும்பகோணத்தில் முடித்தார். பின்னர் சென்னை கிறித்துவக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கே படித்து முடித்தபின் தான் மருத்துவம் படிக்க இருப்பதாக அறிவித்தார். இங்கிலாந்து சென்று படிக்க விரும்பினார். ஆனால் அவரது குடும்ப சூழ்நிலை காரணமாகவும் அந்தக் கால ஆச்சார பிராமணர்கள் கடல் தாண்டி செல்வது தடைசெய்யப்பட்டிருந்ததாலும் அவரால் அங்கே சென்று படிக்க இயலவில்லை. ஆனால் வெகு சீக்கிரமே அனைத்துத் தடைகளையும் கடந்து பலரும் அறிந்த மருத்துவரானார் ரங்கச்சாரி. நாகப்பட்டிணம், தஞ்சாவூர், கும்பகோணம் போன்ற பல இடங்களில் பணிபுரிந்தார் இவர். 1919இல் மெட்ராஸுக்கு மாற்றப்பட்டார். அனைவரும் அறிந்த பூங்கா நகரிலிருந்த பொது மருத்துவமனையில் பணியாற்றினார் இவர். எந்நேரமும் மக்களுக்குச் சேவையாற்றினார். தனது நோயாளிகளைப் பார்ப்பதற்குச் செல்வதற்காக ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கினார். பின்னர் தென்னிந்தியாவில் உள்ள தனது நோயாளிகளைப் பார்ப்பதற்காக சொந்தமாக ஒரு சிறிய விமானத்தையே வாங்கினார். அந்தக் காலத்தில் அது ஒரு அரிதான செயல். தனது புத்திசாலித்தனம், மருத்துவத்திறமை அளவுக்கு மனித உளவியலையும் நம்பினார். தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு ஏராளமான மருந்து மாத்திரைகளை, விலை உயர்ந்த ஊசி மருந்துகளை அளிப்பதை ஊக்குவிப்பதில்லை இவர். குழப்பமிகுந்த நோய்களுக்குக் கூட மருந்துகளுக்குப் பதில் மனித உளவியல் சார்ந்தே மருத்துவம் அளித்தார். நோயாளிகளின் அந்தஸ்தை அவர் பொருட்படுத்தியதில்லை. வசதி மிக்கவர்களையும் வறியவர்களையும் ஒன்றுபோலவே பாவித்தார். மிக வறிய நோயாளிகளுக்குத் தேவையான தினசரிச் செலவுகளுக்கு தன் கையிலிருந்து பணமளிப்பார். டாக்டர் ரங்கச்சாரிக்குக் குழந்தைகள் இல்லை. தனது 52ஆவது வயதில், ஏப்ரல் 1934இல் கடுமையான டைபாயிட் நோயால் அவதியுற்று மாண்டுபோனார் இவர். மிக குறைந்த வயதில் ஏற்பட்ட இவரது மரணம் மருத்துவத் துறைக்கும் நாட்டிற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரது இழப்பை நினைவுகூரும் விதத்தில் நிறுவப்பட்டுள்ள இவரது சிலையில் அரிதான மருத்துவத் திறமைக்காகவும் எல்லையற்ற மனிதநேயத்துக்காகவும் சிலை நிறுவப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேயர் எஸ் சத்தியமூர்த்தி


1939 - 40இல் சென்னை மேயராகப் பணியாற்றிய சத்தியமூர்த்தியின் சிலை சென்னை மாநகராட்சிக் கட்டடமான ரிப்பன் கட்டடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இச்சிலை நிறுவப்பட்ட போது மேயராக திரு சி குசேலர் இருந்துள்ளார். இந்தியப் பிரதமர் ஜவஹர் லால் நேருஜி 1963, ஜூன் 14 அன்று திறந்துவைத்த சிலை இது.

காங்கிரஸ் அரசியல்வாதியும் இந்திய விடுதலைப்போராட்ட வீரருமான சத்தியமூர்த்தி ஆகஸ்டு 19, 1887 அன்று மதுரை மாவட்டத்தில் பிறந்தார். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பட்டம்பெற்ற பின்னர் சட்டம் பயின்றார். கல்லூரி நாட்களிலேயே கல்லூரி தேர்தல்களில் கலந்துகொண்டு வெற்றி பெற்றார். இவை அவருக்கு மக்களாட்சி முறையில் ஆழ்ந்த பிடிப்பை உண்டாக்கியது. இந்திய அரசியலில் மக்களாட்சி நெறிமுறைகள் ஆழமாக வேரூன்ற பாடுபட்டவர். தமிழக காங்கிரசின் வளர்ச்சிக்கும் பிரித்தானிய இந்தியாவில் நடைபெற்ற தேர்தல்களில் அக்கட்சி வெற்றிபெறவும் உழைத்தவர். அவரது பங்காற்றலை நினைவுகூரும் விதத்தில் சென்னையிலுள்ள காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைமையகம் அவரது பெயர்கொண்டு சத்தியமூர்த்தி பவன் என அழைக்கப்படுகிறது.

 இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற நேரத்தில் சென்னையில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவியது. இப்பஞ்சத்தைப் போக்க பிரிட்டிஷ் அரசுடன் போராடி பூண்டி நீர்தேக்கத்திற்கான வரைவு ஒப்புமை பெற்று தமது பணிக்காலத்திலேயே அதன் அடிக்கல்லை நாட்டினார். ஆயினும் 1944ஆம் ஆண்டு இந்த நீர்த்தேக்கம் கட்டி முடிக்கப்பட்டபோது இவர் உயிருடன் இல்லை. இவரது முதன்மை சீடரான காமராஜர் பின்னர் இத்தேக்கத்திற்கு இவரது பெயரையே வைத்தார்.

அவரது பேச்சாற்றல் திறனைக் கொண்டு காங்கிரசின் பிரதிநிதியாக மாண்டேகு-செம்ஸ்போர்ட் சீர்திருத்தங்கள் மற்றும் ரௌலத் சட்டத்திற்கெதிரான இணை நாடாளுமன்றக் குழுவில் வாதிட இங்கிலாந்து அனுப்பப்பட்டார். 1930ஆம் ஆண்டு சென்னை பார்த்தசாரதி கோவிலில் இந்தியக் கொடி ஏற்ற முயன்றபோது கைது செய்யப்பட்டார். 1942ஆம் ஆண்டு தனிநபர் சத்தியாகிரகம் செய்தமையால் கைது செய்யப்பட்டு நாக்பூரிலுள்ள அமராவதி சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு செல்லும்போது ஏற்பட்ட முதுகுத்தண்டு காயத்தினால் பாதிக்கப்பட்டு மார்ச் 28, 1943ஆம் ஆண்டு சென்னை பொதுமருத்துவமனையில் இயற்கை எய்தினார் சத்தியமூர்த்தி

புதன், ஏப்ரல் 13, 2011

நான் கடவுள்

காவி முலாம் பூசிய பிச்சைப்பாத்திரம்

மனிதனைக் கடவுள் தன்மையிலிருந்து விலக்கிவைப்பதே நான்தான். நான் அழிந்தால்தான் கடவுள் தன்மை உருவாகும். நான் கடவுள் என்று சொல்லும்போதே அதில் தொனிக்கும் ஆணவத் தன்மை கடவுள் தன்மையிலிருந்து பெருமளவு மாறுபட்டது. இத்தகு முரண்பட்ட தலைப்பின் மூலம் வித்தியாசமான தமிழ்ப் படம் என்ற கருத்தை உருவாக்கிக்கொண்ட, தமிழ்த் திரைப்பட வரலாற்றில் நீண்ட நாள்கள் படம்பிடிக்கப்பட்ட படமான நான் கடவுளைத் திரையில் பார்க்கும் ஆவலைத் தொடக்க நாள் முதலே தூண்டிய படம் இது. இந்தியர்களின் புனிதத் தலமான காசியில் சம்ஸ்கிருதப் பாடல் (படத்தில் வசனம்தான் ஜெயமோகன்) பின்னணியில் ஒலிக்கத் தொடங்கும் இந்தத் தமிழ்ப் படத்தின் முதல் இருபது நிமிடங்களில் இளையராஜா, ஆர்தர் வில்சன் இருவரது பக்க பலத்தோடு சராசரித் தமிழ் ரசிகனைத் தனது பிடிக்குள் கொண்டுவருவதில் வெற்று பெற்றுள்ளார் பாலா.  வழக்கமான பல விஷயங்களைச் சர்வசாதாரணமாக அலட்சியப்படுத்தி விட்டு வித்தியாசமான ஒரு திசையில்  நம்மை அழைத்துச் செல்லப் போகிறார் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கையில் படம் வேறு திசையில் பயணப்படுவது வரமா சாபமா. பாலாவின் முந்திய படங்களிலும் சரி இந்தப் படத்திலும் சரி படங்களின் அடி ஆழத்தில் விதியோ சாபமோ பயணப்படுவது நிகழ்கிறது. கதாநாயகனின் பின்னால் நாய்கள் வரும் இரண்டு காட்சித் துண்டுகள் படத்தில் இருக்கின்றன.


சேதுவில் பித்துப்பிடித்த பெண் கதாநாயகனைச் சுற்றிச் சுற்றிவர அவனோ மற்றொரு பெண்ணைக் காதலித்துப் பித்துப்பிடித்து அலைய அந்தக் காதல்கூடக் கைகூடாமல் போனதற்கும் நந்தாவில் வலியவரும் நல்வாழ்வை வெறுத்து ஒதுக்கும் கதாநாயகன்  தாய் கையாலேயே கொல்லப்பட்டதற்கும் பிதாமகனில் கலகலப்பான ஏமாற்று வியாபாரி கதாபாத்திரத்துக்கும் மௌனியான வெட்டியானுக்கும் இடையே மலரும் நட்புக்கும் காரணம் என்னவாக இருக்க முடியும்? இப்படத்திலும் 14 வருடம் குடும்பத்தைப் பிரிந்து வாழ வேண்டிய நிர்ப்பந்தத்தைக் கதாநாயகனுக்கு ஏற்படுத்தியது வெறும் ஜாதகம்தானா? அறிவுத்தளம் தனது தோல்வியை ஒப்புக்கொண்டே ஆக வேண்டிய இடங்கள் இவை. இத்தகைய கதைகளைக் கையில் எடுத்துக்கொண்டு ஏதோவொரு வித்தியாசமான களம் அமைத்து - சேதுவில் பாண்டிமடம், நந்தாவில் இலங்கைத் தமிழர்கள், பிதாமகனில் கஞ்சா வியாபாரம், இதில் அகோரியும் அகோரப் பிச்சைக்காரர்கள் -  அதில் வர்த்தக வெற்றிக்கான விஷயங்களைச் சரியான விகிதத்தில் கலந்துதருவதில் சமர்த்தர் பாலா. இந்த விகிதாசாரக் கலப்பு மிக இயல்பான ஒன்றாக அமைந்திருந்தது சேதுவில் மட்டுமே. செண்டிமெண்ட்ஸ்களைத் துறந்ததாகவே தனது கதாநாயகப் பாத்திரங்களை வடிவமைக்கிறார். ஒழுங்குகளைக் குலைப்பதிலும் உறவுகளைத் துறந்து திரிவதிலும் பெருவிருப்பம் கொண்டு அலையும் அவை. வாழ்வில் நடைபெறும் நிகழ்ச்சிகளையும் அதற்கான காரணங்களையும் அலசி ஆராயத் துடிக்கும் ஆழ்மனத் தேடுதலின் வடிகால்கள் போன்ற தோற்றம்கொள்கின்றன பாலாவின்  படைப்புகள். தனித்துத் திரிய விரும்பும் தனிமனிதனுக்கும் அவனை ஒரு கூட்டுக்குள் அடைத்துவிடத் துடிக்கும் சமூகத்துக்குமான உறவில் ஏற்படும் முரண்களினூடாக வாழ்க்கை பற்றிய சமூகம் குறித்த தனது புரிதல்களை, விமர்சனங்களை வெளிப்படுத்துகிறார் இவர். மனங்களில் பரவிக்கிடக்கும் இருட்டை வலுக்கட்டாயமாக இழுத்துவந்து திரையில் கடைபரப்புகிறார். இளமையின் வசந்தம் திளைக்கத் திரிபவனைப் பைத்தியமாக்கிச் சங்கிலிகொண்டு கட்டிப்போடவும் வன்புணர்ச்சி செய்த ஆணுறுப்பை அப்படியே அறுத்து எடுக்கவும் பழிவாங்கும் பொருட்டுக் குரல்வளையைக் குதறி உதிரத்தை உறிஞ்சவும் ஊனமுற்றவர்களைக்கூட ஈவு இரக்கமின்றி கொடுமைப்படுத்தவும் பாலாவின் கதாபாத்திரங்களால் முடிகிறது. கருணையும் குரூரமும் குடிகொண்டிருக்கும் மனித மனத்திலிருந்து குரூரத்தைக் கருணையின்றிக் காட்சிகளாக்குவதை விருப்பத்தோடு செய்கிறார் இயக்குநர். 

      

இத்தகைய பின்னணியோடு பார்க்கும்போது கடவுள் பற்றிய படமெனும் போது அதில் குவிக்கப்படும் கவனம் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய ஒன்று.   கால் கை முகம் எனத் தனித்தனியாகக் காட்டிப் பெரும் ஆரவாரத்தோடு கதாநாயகனை அறிமுகப்படுத்தும் தமிழ்த் திரைப்படச் சூழலில் தலைகீழாக ஆசன நிலையில் கதாநாயகனை அறிமுகப்படுத்தும் துணிச்சல் பாலாவுக்கு உள்ளது. அந்தத் துணிச்சல்தான் கதாநாயகி கதாநாயகன் சந்திக்கும் முதல் காட்சியைப் பிணவறையில் வைக்கும்படிச் செய்திருந்தது நந்தாவில். இயன்ற வரை அழகாகக் கதாநாயகிகளைக் காட்டுவதிலேயே அக்கறை காட்டும் இயக்குநர்கள் மத்தியில் அழகான கதாநாயகியை அசல் பிச்சைக்காரி போலவே காட்டியிருப்பதன் மூலம் கதைக்குத் தான் நடிகர்கள் என்பதை அழுத்தம் திருத்தமாக உணர்த்தியுள்ளார்.  பூஜாவின் ஒப்பனையும் உடையமைப்பும் நடிப்பும் கதாபாத்திரத்திற்கும் நடிகருக்குமான இடைவெளியை இல்லாமல் ஆக்குகிறது. ஆர்யாவின் கதாபாத்திரம் காட்ட வேண்டிய உக்கிரத்தையும் உணர்ச்சியையும் இசைதான் உச்சத்துக்கு எடுத்துச்செல்கிறது. பிச்சைக்காரர்களின் உலகத்தைத் தனது இயல்பான நக்கல் நையாண்டியோடு காட்சிப்படுத்தியிருக்கிறார் பாலா. படத்தைச் சுவாரசியப்படுத்த பிச்சைக்காரர்களை உருவாக்குபவனாக ஒரு வில்லனை உருவாக்கி அவனைக் கதாநாயகனுக்கு எதிர்ப்புறத்தில் நிறுத்துவது உதகிறது. ஆனால் பிச்சைக்காரர்கள் உருவாவதின் காரணம் பற்றிய தவறான புரிதலுக்கு வழிகாட்டுகிறது படம்.   (பிச்சைக்காரர்கள் பின்னணியில் எச்சில் இரவுகள் என்றொரு படம் ரவீந்தர் நடித்துத் தமிழில் வந்ததாக ஞாபகம்) பிதாமகனில் வெற்றிபெற்ற சூத்திரம் என்பதற்காகப் பழைய பாடல்களை இந்த அளவுக்குப் பயன்படுத்த வேண்டுமா? ரசிகர்களைத் தன் பக்கம் இழுக்கும் திறன்பெற்ற இயக்குநர் அவர்கள் வழியில் பயணப்படுவது அவசியமா?


கண் பார்வையற்ற பிச்சைக்காரிக்கு ஆதரவென யாருமில்லை. தன் வளர்ப்புத் தகப்பனிடமிருந்து பிடுங்கிவரப்பட்டு தாண்டவன் குழுவில் பிச்சை எடுக்கும்படி நிர்ப்பந்திக்கப்படுகிறாள். வேறு வழியற்ற அவள் அவ்வாழ்வுக்குத் தன்னை முழுவதுமாக ஒப்புக்கொடுக்கிறாள். அதற்கும் ஆபத்து வருகிறது. பார்க்கச் சகிக்க இயலாத முகம் கொண்ட ஒருவன் மணந்துகொள்வதற்காக அவளைத் தாண்டவன் விலைபேசுகிறான். அவளுக்கு மனம் அதில் ஒப்பவில்லை. தப்பிக்க முயல்கிறாள். மாதா கோவில் கன்னியாஸ்திரி அவளுக்கு வெறுமெனப் போதிக்கிறாள். ஆறுதலாக பைபிள் வசனத்தைச் சொல்கிறாள். தன்னைக் கட்டாயப்படுத்தும் தாண்டவனிடம் அவ்வசனங்களைப் பேசுகிறாள் பிச்சைக்காரி. அவை அவளைக் காப்பாற்றவில்லை. அவளை வாங்க வந்தவன் அவளது விருப்பமின்மையை அறிந்து ஓடிவிட அவளை விற்கமுடியாத கோபத்தில் கண்மூடித்தனமாக அவளைத் தாக்குகிறான் தாண்டவன். ஓரிடத்திலும் அவளுக்கு ஆறுதல் கிடைக்கவில்லை. பந்த பாசங்களை அறுத்துவிட்டுவரும்படி குருவால் அனுப்பப்பட்டிருக்கும், அடிக்கடி இந்தி, சம்ஸ்கிருத வசனமும் அவ்வப்போது தமிழ் வசனமும் பேசும், காசியிலிருந்து திரும்பியிருக்கும் கஞ்சா சாமியிடம் -கதாநாயகனிடம்- வருகிறாள். முருகனோ காளியாத்தாளோ மாதாவோ அல்லாவோ தனக்கு உதவவில்லையே திக்கற்ற, வாழ இயதாத தனது கதி என்னவாகும் என வினவுகிறாள். அவள் சொல்லும் கடவுள்கள் பட்டியலில் ராமரோ விஷ்ணுவோ ஏன் இல்லையென நாம் நினைக்க இயலாது ஏனெனில் பிச்சைக்காரிக்குத் தெரிந்த தெய்வங்களைத் தான் அவள் குறிப்பிட முடியும். பிச்சைக்காரிக்கு அரசியல் தெரியாது அது வசனகர்த்தாவுக்கும் இயக்குநருக்கும்தான் தெரியும். அவளுக்குத் தன்னைக் கடவுளாக நினைத்துக்கொண்டிருக்கும் அந்தக் காசி ரிடர்ன் என்னவித ஆறுதலைத் தரப்போகிறார் என எல்லோரும் ஆவலோடு எதிர்பார்க்க அவர் தரும் வரம் அவளுக்கு மரணம். வாழவழியில்லாதவர்களுக்கு எல்லாத் திசையிலிருந்தும் பிரச்சினைகள் வரும் அவற்றிலிருந்து அவர்களைத் தப்புவிக்க என்ன செய்யலாம்? பிரச்சினைகளை அழிக்கலாம். அல்லது வாழ வழியற்றவர்களை அழிக்கலாம்.  பிரச்சினைகள் அனைத்தையும் அழிப்பது சாத்தியமற்றது. ஆனால் வாழ வழியற்றவர்களை அழிப்பது எளிது. அத்தகைய தீர்வுகளை அவர்களே மேற்கொண்டால் அது தற்கொலை, பாவம். சாதாரணமானவர்கள் அதைச் செய்தால் கொலை ஆனால் காசிச் சாமியார் அதே விஷயத்தைச் செய்தால் வெறும் மரணமல்ல அது. பிறவாமையிலிருந்து காக்கும் முக்தி. ஏனெனில் அவர் வேதமறிந்தவர்; சம்ஸ்கிருதம் கற்றவர்; தன்னை உணர்ந்த சுயம்புதூமை என்றால் என்னவென்று தெரியுமா எனத் தாயை அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஞானி’.


 “வாழ வழியில்லாதவர்களுக்கு நீ தரும் மரணம் வரம்; வாழத் தகுதி இல்லாதவர்களுக்கு நீ தரும் மரணம் தண்டனைஎனப் படம் முன்வைக்கும் கருத்து ஆன்மிகத்தைத் தாண்டிய அரசியலாக மாறியுள்ளதை எதிர்கொள்ள நேரிடும்போது மனத்தில் பரவும் அதிர்ச்சி அலைகள் அடங்க மறுக்கின்றன. படத்தின் பெரும்பான்மையான சமயத்தில் வசனகர்த்தாவின் வேலையை இசையமைப்பாளரே செய்துவிடுகிறார். பல இடங்களில் வசனத்தைத் தவிர்த்துப் பின்னணி இசையை ஒலிக்கவிட்டே காட்சிகள் நகர்த்தப்பட்டிருக்கின்றன. கிடைத்த இடத்தில் தனது வசனங்கள் மூலம் மிகச் சாதுர்யமாக இந்துத்துவக் கருத்துகளை முன்வைத்துள்ளார் வசனகர்த்தா.  நீதிமன்ற காட்சியில் நீதிபதியே, ‘சாமியார் ஒருவர் முதல்வரைக் கொல்வதாகவே சொன்னாரே அவரை உங்களால் என்ன செய்ய முடிந்தது? சாமியார்களை மதியுங்கள்எனச் சொல்லும் விதமாக வசனங்கள் வருகின்றன. திக்கற்றவர்கள் வேறு மார்க்கமற்றதால் அறியாமையால் கிறித்துவத்திற்குச் செல்கிறார்கள். இஸ்லாமோ கிறித்துவமோ மற்ற கடவுள்களோ அவர்களுக்கு உதவுவதில்லை எனும்படியான புரிதலை உருவாக்குவதன் பின்னணிக் காரணம் குறித்து ஆழ்ந்து யோசிக்க வேண்டியுள்ளது. கதாபாத்திரங்களை வித்தியாசமாக வடிவமைத்து படம் நெடுகத் திரியவிட்டிருப்பதில் தனது ஆளுமையைக் கட்டிக்காப்பாற்றியபோதும் படத்தின் மூலம் உணர்த்த முயன்ற தீர்வும் அதில் பொதிந்துள்ள கருத்தும் அரசியலும் படத்தின் மீது மூன்றாம் கண் கொண்ட பரிசீலனையைக் கோருகின்றன.        

செவ்வாய், மார்ச் 08, 2011

பாதங்கள்


அகலிகையாய் உறைந்துவிட்டேன்
காலம் கடந்துகொண்டேயிருக்கிறது
எல்லோரையும்
எல்லாவற்றையும் 
வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்
வேடிக்கை பார்க்கப்படுவதை உணராமல்.

வியாழன், மார்ச் 03, 2011

ஆனாலும் அவன் என் நண்பன்

பெரும்பாலான நேரங்களில் என்னை எனக்குப் பிடிக்காது. மனத்திற்குள் சில நேரங்களில் சஹாரா குடிகொண்டுவிடும். உலகத்தின் ஒட்டுமொத்த ஹெச்டூஓவும் ஒரே நொடியில் ஆவியாகிவிட்டது போன்ற எண்ணம் தோன்றும். கண்ணுக்கெட்டிய தூரம் வரை கானல் நீரைத் தவிர எதுவும் தென்படாது. ஒரு துளி நீருக்கான ஏக்கம் அதிகமாகும். நிறைவேறா ஏக்கம் கடும் சுமையாக மனத்தை வருத்த கண்கள் கலங்கும். வறண்ட தொண்டைக்கு கிடைக்காத நீர் வழிந்தோடும் இளகிய கண்களிலிருந்து. அத்தகைய நேரங்களில் எல்லாம் எப்படித்தான் அவனுக்கு மூக்கு வியர்க்குமோ வந்துவிடுவான். என்ன தான் தனிமையை ரசித்தாலும் விரும்பினாலும் சில நேரங்களில் ஆதரவான ஒரு சொல்லோ பார்வையோ தேவைப்பட்டுவிடுகிறது, அது எங்கிருந்தும் கிடைப்பது அரிது என்பதை உணர்ந்தபோதும் மனம் அறியாக் குழந்தையாக ஆசைப்பட்டுவிடும். அதற்கென்ன தெரியும் அப்பனின் ஒட்டுக்கோவண நிலைமை? இழுத்துப்போர்த்தத் தான் அது சொல்லும்.



சஹாராவில் தண்ணீர் வார்க்க அவன் வந்திருப்பான் என எண்ணிவிடாதீர்கள். அது அவனது பழக்கமில்லை. ஒரு நாளும் அவன் ஆறுதலாகப் பேசியதில்லை ஆனால் என்ன மாயமோ மந்திரமோ அவனது வசைமொழிகூட அவ்வளவு ஆறுதல் தரும். வேதனைப் பொழுதுகளின் வெம்மையைத் தான் அவன் கூட்டுவான். ஆனால் அந்தச் செயலில் ஒரு குளுமை இருக்கும். அது ஒரு விநோதமான மனோபாவம்தான். அவனைக் கொல்ல முடிந்தால் கொன்றுவிடத் துணியும் முதல் மனிதன் நானாகத்தான் இருப்பேன். ஆனால் எனது துக்கங்களிலிருந்து என்னைக் காப்பாற்ற முதலில் நீளும் கரத்திற்கு அவன் தான் சொந்தக்காரன். என் கிணற்றில் மிக ஆழத்தில் யாரும் அறிய மாட்டார்கள் என்னும் நம்பிக்கையில் நான் மறைத்து வைத்திருக்கும் குற்றங்களையும் அவனது மாயக் கண் கண்டுகொள்ளும்.  நான் குற்றம் செய்வதில் சமர்த்தன். அவனை எப்படியாவது ஏமாற்றிவிட்டு குற்றம்புரிவேன். நான் குற்றம்புரிய வேண்டும் என்பதற்காகவே ஏமாந்தவனாக நடித்தவனைப்போல் அடுத்த கணம் வந்திடுவான். முதலிலேயே என்னைத் தடுத்திருக்கலாமே என்பேன் ஒன்றுமே அறியாதவன் போல் மெல்ல நகைப்பான். அவன் முன் தோற்றுப்போய் அவமானத்தைத் தாங்கியபடி நிற்க வேண்டும். அவன் சாட்டையை எடுப்பதில்லை. ஆனால் அவன் சாட்டையை நினைத்தாலே உடம்பில் சுளீரென்றிருக்கும்.


வெளிச்சத்தில் சண்டையிட்டு இருட்டில் இணைந்துகொள்ளும் வெட்கமற்ற கணவன் மனைவி போன்ற உறவுதான் அவனுக்கும் எனக்கும். அவன் வந்தால் எரிச்சலாக இருக்கும். அவன் வராவிடிலோ அவன் நினைப்பாகவே இருக்கும். என்னை வெறுத்து எங்கும் போய்விட்டானோ எனக் கவலையாக இருக்கும். அவனிடம் சொன்னால், என்னை நீ நிம்மதியாக விட்டுவிடுவாயா என்ன, என்பது போல் பார்ப்பான். அவன் குறித்த என் நினைவுதான் அவனை இழுத்து வந்ததோ என்றுகூடத் தோன்றும். யாரிடமும் அவனைப் பற்றிக் குறைகூற முடியாது. ஏனெனில் இப்படிப்பட்ட ஒருவனோடு உனக்கென்ன நட்பு அவனை வெட்டிவிடு என வெடுக்கென சொல்லக்கூடும். அந்தச் சொல் அவனை வாட்டாது ஆனால் என்னை வாட்டிவிடும். உலகத்திலேயே மிக அதிகமாக நான் வெறுப்பது அவனைத்தான் ஆனாலும் அவன் என் நண்பன். என்னைவிட அவனை யாரும் நேசிக்க இயலாது. அவனைத் தவிர வேறு யாராலும் என்னை நேசிக்க முடியாது. எனவே தான் காத்திருக்கிறேன் அவனுக்காக... அவனது பிரியத்துக்காக... கிட்டப்போகப்போக எட்டப்போகும் அவனது தோழமைக்காக...       

செவ்வாய், மார்ச் 01, 2011

மௌனமாய் உரையாடும் சிலைகள்

தந்தை பெரியார்

சென்னை அண்ணாசாலையில் சிம்சன் எதிரில் அமைந்துள்ளது தந்தை பெரியாரின் சிலை. இந்தச் சிலை பெரியாரின் 96ஆவது பிறந்த தினமான செப்டம்பர் 17, 1974 அன்று நாவலர் நெடுஞ்செழியன் தலைமையில் க.அன்பழகன் முன்னிலையில் நடைபெற்றவிழாவில் அன்றைய முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி திறந்துவைத்தது. இது தி.மு.க.வின் சார்பில் வைக்கப்பட்ட சிலையாகும். உட்கார்ந்த நிலையில் இச்சிலை அமைந்திருந்தாலும் பெரியாரின் கம்பீரம் அப்படியேதான் இருக்கிறது.

கலைஞருக்கு சிலை வைக்க வேண்டும் என்று பெரியார் வலியுறுத்துகிறார். ஆனால் கலைஞரோ பெரியாரின் சிலையை அமைத்த பிறகுதான் தனக்கு சிலை என்று அறிவித்துவிடுகிறார். அதனால் பெரியார் “தனக்குச் சென்னையில் சிலைவைக்க கலைஞரை வற்புறுத்துங்கள்” எனக் கூறுகிறார். தனது சிலை அமைக்கப்பட்டால் தானே கலைஞர் சிலையைத் திறக்க முடியும் என்பதால் அவ்வாறு வற்புறுத்தினார் பெரியார். அவரது நோக்கம் தனக்கோ கலைஞருக்கோ சிலைவைக்க வேண்டும் என்பது மட்டுமல்ல. பகுத்தறிவாளர்கள் அனைவருக்கும் சிலை வைக்க வேண்டும் என்பதுதான். இதனால் அமைக்கப்பட்ட சிலை தான் இந்தப் பெரியார் சிலை.


மவுண்ட் ரோடு மகாவிஷ்ணு என்று பார்ப்பனரல்லாதாரால் குறிப்பிடப்படும் ‘இந்து’ நாளிதழ் அலுவலகத்திற்கு அருகில் அமைந்திருப்பதுதான் இதற்கான சிறப்பு. லட்சக்கணக்கான மக்கள் இன்று இச்சிலையை பார்வையிட்டபடிதான் போகிறார்கள், வருகிறார்கள். இப்பொழுது இன்னுமொரு கூடுதல் சிறப்பு, புதிதாக அமைக்கப்பட்டுள்ள சட்டமன்றம் பெரியார் சிலை முன்னிலையில் இருப்பது.

இச்சிலை திறப்பு விழாவிற்கு கல்வி அமைச்சர் நாவலர் தலைமை, தி.மு.க. தலைமை நிலையச் செயலாளர் வீராசாமி எம்.எல்.ஏ. வரவேற்புரை, தொடர்ந்து தி.மு.க. அமைப்புச் செயலாளர் நீலநாராயணன், மாவட்ட செயலாளர் சீதாபதி ஆகியோர் வழிமொழிந்து பேசினர். நாவலரின் தலைமை உரைக்குப்பின் லட்சசோபலட்சம் மக்களின் உணர்ச்சி வெள்ளத்திடையே தந்தை பெரியாரின் சிலையை முதல்வர் கலைஞர் திறந்துவைத்தார். பெரியார் இயற்கை அடைந்த பிறகு நடந்த சிலை திறப்பு என்பதால் மக்களின் உணர்ச்சி கட்டுக்கடங்காததாக இருந்தது.

பிறகு, அமைச்சர் என்.வி. நடராசன், மேலவைத்தலைவர் சி.பி. சிற்றரசு, திராவிடர் கழகத் தலைவர் அன்னை மணியம்மையார், திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி. வீரமணி, அமைச்சர் அன்பழகன் ஆகியோரின் உரைக்குப்பின் கலைஞர் உரையாற்றினார். இச்சிலையை உருவாக்கிய சிற்பி கோவிந்தசாமியின் மகன் பழனிக்கு கலைஞர் கேடயம் கொடுத்துச் சிறப்பித்தார். இந்த சிலை திறக்கப்பட்ட ஏப்ரல் 17ஆம் தேதி காலை பெரியார் திடலில் நடைபெற்ற நூலகத் திறப்பு விழா நிகழ்ச்சியில் “பெரியாரின் இல்லத்தை நினைவுச் சின்னமாக அனுமதிக்க வேண்டும்” என்று முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்தார். இதை ஏற்றுக்கொண்டு, சிலை திறப்பு விழாவில் ஈரோட்டில் உள்ள பெரியாரின் இல்லத்தை நினைவுச் சின்னமாக்க மணியம்மையார் ஒப்புக்கொண்டார். பெரியாரின் இல்லத்தை நினைவுச் சின்னமாக்குவதற்கான ஒப்புதல் தெரிவிக்கப்பட்ட விழா என்பதால், இந்தச் சிலை திறப்பு விழாவுக்கென ஒரு வரலாறு உண்டு.

கர்மவீரர் காமராஜர்

சென்னை அண்ணாசிலையில் ஜிம்கானா க்ளப் முன்னால் அமைக்கப்பட்டுள்ளது காமராஜரின் முழு உருவச் சிலை. காமராஜர் உயிரோடிருந்தபோது அக்டோபர் 9, 1961 அன்று இச்சிலையைத் திறந்துவைத்தவர் பாரதப் பிரதமர் ஜவஹர் லால் நேரு. இச்சிலையைப் பெருந்தலைவர் காமராஜர் நற்பணி ட்ரஸ்ட் பராமரித்து வருகிறது. குமாரசாமி காமராஜ் தமிழ் நாட்டின் முதலமைச்சர்களுள் ஒருவர். காமராஜர் விருதுநகர் மாவட்டத்திலுள்ள விருதுநகரில் 1903 ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி பிறந்தார். 1954 ஆம் ஆண்டு அப்போதைய சென்னை மாகாணத்தின் முதலமைச்சர் ஆனார். இவர் 9 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராகப் பதவி வகித்தார். தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். காமராஜ் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்ற இவர், தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, பெருந்தலைவர் என்றெல்லாம் புகழப்படுகிறார். இவர் இறந்த பிறகு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

மூன்று முறை (1954-57, 1957-62, 1962-63) முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த காமராஜர் பதவியைவிட தேசப்பணியும் கட்சிப்பணியுமே முக்கியம் என்பதை மக்களுக்கும் குறிப்பாக கட்சித் தொண்டர்களுக்கும் காட்ட விரும்பி கொண்டு வந்த திட்டம் தான் காமராஜர் திட்டம். அதன்படி கட்சியின் மூத்த தலைவர்கள் பதவிகளை இளையவர்களிடம் ஒப்படைத்துவிட்டு கட்சிப்பணியாற்றச் செல்ல வேண்டும் என்று இவர் நேருவிடம் சொன்னதை அப்படியே ஏற்றுக்கொண்டார் நேரு. இந்தத் திட்டத்தை முன்மொழிந்த கையோடு தன் முதலமைச்சர் பதவியை அக்டோபர் 2, 1963 அன்று ராஜினாமா செய்தார். அக்டோபர் 9ஆம் நாள் அகில இந்தியக் காங்கிரஸின் தலைவர் ஆனார்.


மிகச் சிறந்த பேச்சாளரும் சிறந்த நாடாளுமன்றவாதியுமான சத்தியமூர்த்தியைக் காமராஜர் தன் அரசியல் குருவாக ஏற்றுக்கொண்டிருந்தார். 1936இல் சத்தியமூர்த்தி பிரதேச காங்கிரசின் தலைவரானபோது காமராஜரைச் செயலாளராக்கினார். இந்தியா சுதந்திரம் அடைந்த செய்தி கேட்டு காமராஜர் முதலில் சத்தியமூர்த்தியின் வீட்டுக்குச் சென்று அங்கு தான் தேசியக் கொடியை ஏற்றினார். அதேபோல் முதலமைச்சர் ஆனபோதும் முதலில் சத்தியமூர்த்தியின் வீட்டுக்குச் சென்று அவர் படத்துக்கு மாலை அணிவித்து விட்டுத் தான் தன் பணியைத் தொடங்கினார். பெருந்தலைவர் காமராஜர் அக்டோபர் 2, 1973 அன்று காலமானார்.

தோழர் ப. ஜீவானந்தம்

பொதுவுடைமை வீரர் ப. ஜீவானந்தத்தின் சிலை சென்னை தண்டையார் பேட்டை மணிக்கூண்டுக்கு அருகே ஜீவா பூங்காவில் நிறுவப்பட்டுள்ளது. மார்பளவு சிலை இது. இந்தப் பூங்கா சமீபத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சிலை 30.11.1966 அன்று காமராஜர் தலைமையில் பி.ஸி.ஜோஸியால் திறந்துவைக்கப்பட்டுள்ளது. வேறெங்கோயிருந்து இங்கே கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும் இது. ப. ஜீவானந்தம் ஆகஸ்ட் 21, 1906 இல் கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியில் பிறந்தவர். ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு தியாகங்கள் பல புரிந்த பொதுவுடமைத் தலைவர் இவர். ஏறத்தாழ பத்து ஆண்டுகளைச் சிறையில் கழித்தவர். காந்தியவாதியாக, சுயமரியாதை இயக்க வீரராக, தமிழ்ப் பற்றாளராக, அனைத்திற்கும் மேலாக ஒரு பொதுவுடைமை இயக்கத் தலைவராகப் படிப்படியாக உயர்ந்தவர். தம்மை நாத்திகராக அறிவித்துக் கொண்டவர். கலை இலக்கிய உணர்வுள்ள ஜீவா அவர்கள் பெரும் இலக்கியவாதியாகவும் பத்திரிக்கையாளராகவும் திகழ்ந்தவர். குடியரசு, பகுத்தறிவு, புரட்சி, ஜனசக்தி, தாமரை ஆகிய பத்திரிகைகளில் கவிதைகளும் ஆய்வுக்கட்டுரைகளும் எழுதியுள்ளார். பாரதியின் பாதையைப் பின்பற்றி பாமரர்களை எழுச்சி பெறச் செய்த பாடல்கள் பலவற்றைப் பாடியவர். பொதுவுடைமை கட்சிக் கூட்டங்களில் முதல் முறையாகத் தமிழ் இலக்கியப் பெருமைகளை பேசி, தமிழ்க் கலாச்சாரத்தோடு, கட்சியை வளர்த்தவர். வைக்கம் சத்தியாக்கிரகம், சுசீந்திரம் தீண்டாமை இயக்கம், சுயமரியாதை இயக்கம் போன்றவைகளில் தனிப் பங்கேற்றவர். 1952ஆம் ஆண்டு வண்ணாரப்பேட்டை தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஜீவா 1963, ஜனவரி 13 அன்று சென்னையில் காலமானார்.

நான் ஒரு நாத்திகன் என்னும் நூலில் ஜீவா பின்வருமாறு கூறியுள்ளார்:
“அழகும் நிறைவும் கொண்ட ஒரு வாழ்வை சுவர்க்கத்திலன்று, இந்த மாநிலத்திலேயே நிர்மாணிப்பதற்காவே நான் பணிபுரிகிறேன். எல்லாவிதமான அடக்கல், ஒடுக்கல், அடிமைத்தனங்களையும், சுரண்டல் சூறையாட்டங்களையும் இந்தப் பூமண்டலத்திலிருந்து துடைத்து எறிந்துவிட்டு, மனிதனுடைய சிறந்த இன்பத்திற்கும், வளர்ச்சிக்கும் இன்றியமையாத பௌதிகச் சூழ்நிலைகளையும், சாதனங்களையும் படைக்கவே நான் போராடுகிறேன். மனிதத் தன்மையின் மாண்புகளைக் காலடியில் தள்ளி மிதித்துத் துவைக்கும் எல்லா பிற்போக்குத் தீமைகளுக்கும் எதிரிடையான இந்த அறப்போரில் எனது பொருள்முதல்வாதமும், எனது நாத்திகவாதமும் மாபெரும் சக்தியையும், உணர்ச்சிப் பெருக்கையும் ஊட்டுகின்றன. நான் ஒரு நாத்திகன், காரணம், நான் மனிதனை நேசிக்கிறேன்”

அறிஞர் அண்ணாதுரை

சென்னை அண்ணாசாலையில் ஓமந்தூரார் தோட்டம் (தற்போதைய தலைமைச் செயலகம்) முன்னர் வலதுகையை உயர்த்தி வழிகாட்டியபடி நிற்கும் பேரறிஞர் அண்ணாவின் முழு உருவச் சிலை. 1968இல் சென்னையில் உலகத் தமிழர் மாநாடு நடைபெற்றது. அப்போது கடற்கரைச் சாலையில் அறிஞர் பெருமக்கள் பத்து பேர்களின் சிலை நிறுவப்பட்டது. “அப்படி பத்து சிலை வைத்ததனால் அந்த அண்ணனின் புகழைப் பார் போற்ற சென்னையிலே சிலை ஒன்று வைத்தபோது ஆட்காட்டி விரல் மட்டும் காட்டி நின்றார் எம் அண்ணா. ஆணையிடுகிறார் எம் அண்ணா என்றிருந்தோம் அய்யகோ இன்னும் ஓராண்டே நான் உயிர் வாழப்போகிறேனென்று ஓர் விரல் காட்டியது இன்றன்றோ புரிகிறது” என அண்ணாவுக்கான இரங்கல் கவிதாஞ்சலியில் கலைஞர் மு கருணாநிதி குறிப்பிடுவது இச்சிலையைத் தான். இச்சிலை நிறுவப்படுவதில் அண்ணாவுக்கு விருப்பமில்லை. ஆனால் எம்ஜிஆரும் கருணாநிதியும் சேர்ந்து எடுத்த பெரு முயற்சியின் காரணமாகவே இச்சிலை நிறுவப்பட்டுள்ளது. இச்சிலையை எம்ஜிஆர் நன்கொடையாகக் கொடுத்துள்ளார். 1968 ஜனவரி முதல் நாளன்று டாக்டர் சர் ஏ ராமசாமி முதலியார் இச்சிலையைத் திறந்துவைத்தார். அண்ணா உயிரோடு இருக்கையில் இச்சிலை திறந்துவைக்கப்பட்டது. ஆனால் சிலை திறந்த அடுத்த ஆண்டே பேரறிஞர் அண்ணா மறைந்துவிட்டார்.

வியாழன், பிப்ரவரி 24, 2011

வரலாற்றில் வாழும் சிலைகள்

சுவாமி விவேகானந்தர்
சுவாமி விவேகானந்தரது சிலை சென்னை ஐஸ் ஹவுஸ் அருகே கடற்கரைச் சாலையில் கடலை நோக்கியபடி கம்பீரமாக நிறுவப்பட்டுள்ளது. தற்போதைய விவேகாநந்தர் இல்லமான ஐஸ் ஹவுஸ் அந்தக் காலத்தில் பிரபலமான வக்கீலான பிலகிரி அய்யங்காருக்குச் சொந்தமானது. அக்கட்டடத்தில் தான் விவேகாநந்தர் அமெரிக்கா செல்வதற்கு முன்பு ஒன்பது நாட்கள் தங்கியிருந்தார். அமெரிக்காவிலிருந்து திரும்பியதும் அக்கட்டடத்திற்கருகே மேடை அமைக்கப்பட்டு அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. எனவே1963இல் அவருடைய நூற்றாண்டு விழாவின் போது அவரது சிலை அதே இடத்தில் நிறுவப்பட்டது. முதலில் ஜவஹர்லால் நேரு தான் இச்சிலையைத் திறந்துவைப்பதாக இருந்தது. ஆனால் நேரு காலமாகிவிட்டதால் 1964ஜூனில் டாக்டர் ராதாகிருஷ்ணன் இச்சிலையைத் திறந்துவைத்தார். விவேகாநந்தர் இல்லத்திலும் விவேகாநந்தரின் சிலை ஒன்று உள்ளது.
விவேகானந்தர் 1863 ஜனவரி 12ஆம் நாள் கல்கத்தாவில் விசுவநாத் தத்தாவுக்கும் புவனேஸ்வரி தேவிக்கும் முதல் மகனாகப் பிறந்தார். பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் 1879 ஆம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள மாநிலக் கல்லூரியில் சேர்ந்தார். பின்னர் ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் தத்துவம் பயின்றார். அங்கே மேல்நாட்டு தத்துவங்கள், மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வரலாறு முதலியவற்றை படித்தறிந்தார். இச்சமயத்தில் அவர் மனத்தில் இறை உண்மைகளைப் பற்றி பல கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்தன. இறை உண்மைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்காக, இராமகிருஷ்ணரைப் பற்றி கேள்விப்பட்டு அவரிடம் சென்றார் விவேகானந்தர். ராமகிருஷ்ணரை முதன் முதலாக விவேகானந்தர் 1881இல் சந்தித்தார். இராமகிருஷ்ணரின் ஈடுபாட்டால், விவேகானந்தரால், பக்தி மார்க்கம், ஞான மார்க்கம், இரண்டின் அவசியத்தையும் புரிந்துகொள்ள முடிந்தது. 24 டிசம்பர், 1892இல் கன்னியாகுமரி சென்ற விவேகானந்தர் அங்கே கடல் நடுவில் அமைந்த ஒரு பாறைமீது மூன்று நாட்கள் தியானம் செய்தார். அம்மூன்று நாட்கள் இந்தியாவின் கடந்த காலம், நிகழ்காலம், மற்றும் எதிர்காலம் குறித்து தியானம் செய்ததாகப் பின்னர் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று அந்தப் பாறை விவேகானந்தர் பாறை என அழைக்கப்படுகிறது.
கன்னியாகுமரியிலிருந்து சென்னை வந்த விவேகானந்தரிடம், அமெரிக்காவில் நடைபெறவுள்ள 1893ஆம் ஆண்டு உலக சமய மாநாட்டில் இந்து மதம் சார்பாக கலந்துகொள்ளுமாறு சென்னை நகர இளைஞர்கள் வேண்டுகோள் விடுத்தனர். அதை ஏற்றுக்கொண்ட விவேகானந்தர் அமெரிக்கா பயணமானார். சிகாகோவின் உலகச் சமய மாநாட்டில் அவர் ஆற்றிய சொற்பொழிவுகளுக்கு அந்நாட்டில் பெரும் வரவேற்பு கிடைத்தது. விவேகானந்தர் ஆற்றிய சொற்பொழிவுகள், அவர் எழுத்துக்கள், கடிதங்கள், பேச்சுக்கள், பேட்டிகள் முதலியன The complete works of Swami Vivekananda என்னும் பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன. இத்தொகுப்பு தமிழ் மொழியிலும் விவேகானந்தரின் ஞான தீபம் என்னும் பெயரில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது. 1902ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் நாள், தனது 39ஆம் வயதில் பேலூரில் விவேகானந்தர் காலமானார்.
தங்குத்தூரி பிரகாசம் பந்துலு
சென்னை பாரிமுனை பேருந்து நிலையம், இராஜா அண்ணாமலை மன்றம் ஆகியவற்றின் அருகில் எஸ்பிளனேடு, பாரிஸ் கார்னர் பிராட்வே பேருந்து நிலையச் சாலை ஆகியவை சந்திக்கும் முனையில் அமைக்கப்பட்டுள்ள சிலை ஆந்திர கேசரி திரு தங்குத்தூரி பிரகாசம் பந்துலுவினுடையது. சென்னை மேயராக திரு ஹபிபுல்லா பாக் இருந்தபோது அக்டோபர் 19, 1968 அன்று அப்போதைய தமிழகப் பொதுப்பணித் துறை அமைச்சர் மு. கருணாநிதி தலைமையில் இந்திய ஜனாதிபதி டாக்டர் வி வி கிரி திறந்துவைத்த சிலை இது.
பந்துலு சென்னை மாகாணப் பிரதமராக 30.04.1946 முதல் 23.03.1947 வரை பதவிவகித்துள்ளார். அவரது அமைச்சரவையில் வி வி கிரி தொழிற்துறை மந்திரியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆலோசகர் ஆட்சியில் ரத்து செய்யப்பட்ட மதுவிலக்கை பந்துலு மீண்டும் கொண்டுவந்தார். ஆந்திர மாநிலம் தனியாகப் பிரிந்தபோது அதன் முதல்வராக 01.101953முதல் 15.11.1954வரை பதவிவகித்துள்ளார் இவர். சென்னையில் சைமன் கமிஷன் பகிஷ்காரம் இவரது தலைமையில் நடைபெற்ற இடத்திலேயே இவருக்குச் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. இவரது சிலையை நிறுவுவதில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை அதிக அக்கறை எடுத்துக்கொண்டார். விடுதலைப் போராட்டங்கள் அனைத்திலும் கலந்துகொண்டவர் இவர். இங்கிலாந்தில் பாரிஸ்டர் பட்டம் பெற்ற பிரகாசம் பந்துலு ஸ்வராஜ்யா என்னும் ஆங்கிலத் தினசரி பத்திரிகையை சென்னையில் நடத்தி விடுதலைப் போருக்கு மாபெரும் சேவை செய்தார். ஆகஸ்ட் 23, 1872இல் பிறந்த ஆந்திர கேசரி பந்துலு மே 20, 1957இல் காலமானார்.
கோபால கிருஷ்ண கோகலே
கோபால கிருஷ்ண கோகலேவின் சிலை பல்கலைக்கழக செனட் கட்டடத்தின் முன்னே அமைக்கப்பட்டுள்ளது. காந்தியால் அவரது அரசியல் குரு என அழைக்கப்பட்டவர் கோகலே. காந்தியின் அழைப்பின் பேரில் 1912இல் தென்னாப்பிரிக்கா சென்றுவந்தவர் கோகலே. இவர் மகாராஷ்டிராவிலுள்ள ரத்னகிரி மாவட்டத்தின் கோதலக்கில் மே 9, 1866 அன்று பிறந்தவர். மிதவாதியாக இருந்தபோதும் நாட்டின் நன்மையைப் பொறுத்தவரையில் எதையும் யாருக்கும் விட்டுக்கொடுக்கக் கூடியவரல்ல. கல்விக்காக ஸ்ரீ கோகலே செய்த பொதுத்தொண்டு மிக மிக அதிகமான அளவிலானது. அதன் காரணமாகவே அவரது சிலை செனட் மண்டபத்தின் முகப்பில் இடம்பெற்றிருப்பது மிகப் பொருத்தமான ஒன்று. கோகலே பிறர் நலனுக்காக வாழ்ந்தவர். 1905ஆம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராகத் தேந்தெடுக்கப்பட்டார். அப்போது இந்திய ஊழியர் சங்கத்தைத் தோற்றுவித்தவர் கோகலே. சென்னை ராயப்பேட்டையில் இதன் கிளை இருக்கிறது. தனது 49ஆவது வயதில் பிப்ரவரி 19, 1915 அன்று பம்பாயில் காலமானார் கோகலே.
பாபு ஜெகஜீவன் ராம்
இந்தியாவின் துணைப் பிரதமராக விளங்கிய பாபு ஜெகஜீவன் ராமின் சிலை சென்னை கடற்கரைச் சாலையில் உழைப்பாளர் சிலை எதிரே எழிலகக் கட்டடத்தின் முகப்பில் பல்கலைக்கழகத்தைப் பார்த்தவாறு அமைக்கப்பட்டுள்ளது. இச்சிலையை 1990ஆம் ஆண்டு முதல்வர் மு.கருணாநிதி தலைமையில் அப்போதைய ஜனாதிபதி ஆர். வெங்கடரமணன் திறந்துவைத்துள்ளார்.
சுதந்திரப் போராட்ட வீரரான ஜெகஜீவன் ராம் பீஹாரில் அர்ரா அருகேயுள்ள சந்த்வாவில் 1908, ஏப்ரல் 5 அன்று பிறந்தார். அனைத்திந்திய தாழ்த்தப்பட்டோருக்கான அமைப்பை 1935இல் உருவாக்குவதற்கு முக்கியப் பங்காற்றியவர். 1946இல் ஜவஹர்லால் நேரு தலைமையிலான இடைக்கால அமைச்சரவையின் மிக இளைய அமைச்சர் இவர். அதைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட அமைச்சரவையில் தொழிற்துறை அமைச்சராக இருந்துள்ளார். பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் விவசாயத்துறை அமைச்சராகவும் இரயில்வே துறை அமைச்சராகவும் சேவையாற்றியுள்ளார் இவர். 1947, ஆகஸ்ட் 16இல் ஜெனிவாவில் நடைபெற்ற சர்வதேச தொழிலாளர் கருத்தரங்கில் இந்தியப் பிரதிநிதியாக காந்தியவாதி டாக்டர் அனுக்ரஹா நாராயண் சின்ஹாவுடன் சென்று கலந்துகொண்டார். தற்போதைய மக்களவை சபாநாயகரும் முதலாவது பெண் சபாநாயகருமான மீரா குமார் இவரது மகள். பாபு ஜெகஜீவன் ராம் ஜூலை 6, 1986இல் புதுதில்லியில் வைத்துக் காலமானார்.
டாக்டர் அம்பேத்கர்
டாக்டர் அம்பேத்கரின் வெங்கலத்திலான முழு உருவச் சிலை சென்னையில் சிங்கார வேலர் மாளிகைக்கு எதிரே அமைக்கப்பட்டுள்ளது. அம்பேத்கரின் 94ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இச்சிலை நிறுவப்பட்டுள்ளது. 1985, ஏப்ரல் 14அன்று எம். ஏ. எம். ராமசாமி தலைமையில் ஜனாதிபதி ஆர். வெங்கடரமணன் திறந்துவைத்துள்ள சிலை இது. இவ்விழாவில் தமிழக சமூக நலத்துறை அமைச்சர் கோமதி சீனிவாசன், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ஆர். எம். வீரப்பன், மத்திய சமூக நலத்துறை அமைச்சர் மரகதம் சந்திரசேகர் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் மகாராஷ்டிர மாநிலம் (தற்போதைய மத்தியப்பிரதேசம்) ரத்னகிரி மாவட்டத்தில் அம்பாவாதே என்னும் கிராமத்தில் 1891 ஏப்ரல் 14 அன்று ராம்ஜி - பீமாபாய் ஆகியோரின் 14ஆவது குழந்தையாகப் பிறந்தார். மகர் என்னும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்தார். டாக்டர் அம்பேத்கர் மிகச் சிறந்த கல்வியாளர். பரோடா மன்னரின் உதவியுடன் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் உயர்கல்வி பயின்றார். அங்கு அவர் 1915இல் பண்டைய இந்தியாவின் வர்த்தகம்என்னும் ஆய்வுக்கு முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர், “இந்திய லாபப் பங்கு ஒரு வரலாற்றுப் பகுப்பாய்வுஎன்னும் ஆய்வுக்கு கொலம்பியா பல்கலைக் கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது. பிரிட்டிஷ் இந்தியாவில் அரசு நிதியைப் பரவலாக்குதல்என்னும் ஆய்வுரைக்கு 1921இல் முது அறிவியல் பட்டம் பெற்றார். ரூபாயின் பிரச்சினைஎன்ற ஆய்வுரைக்கு 1923இல் டிஎஸ்சி பட்டம் பெற்றார்.
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். சமுதாய அமைப்பிலும் பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்டவர்கள் கையில் அதிகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் போராடினார். 1930இல் லண்டனில் நடைபெற்ற வட்ட மேசை மாநாட்டில் கலந்துகொண்டார். இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் குறித்த பிரச்சினை முக்கியமாக விவாதிக்கப்பட்டது. தாழ்த்தப்பட்டோருக்குத் தனி வாக்குரிமையும், விகிதாசாரப் பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டுமென அம்பேத்கர் வலியுறுத்தினார். இதன் விளைவாக இரட்டை வாக்குரிமைதாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது. காந்திஜி இதை எதிர்த்தார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனித் தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி காந்திஜி உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். இதன் விளைவாக 24-9-1931இல் காந்திஜிக்கும், டாக்டர் அம்பேத்கருக்கும் இடையே புனா ஒப்பந்தம்ஏற்பட்டது. இதன்படி தாழ்த்தப்பட்டோருக்கு தனி வாக்குரிமை என்பதற்குப் பதிலாக பொது வாக்கெடுப்பில் தனித்தொகுதி ஒதுக்கீடுகள் ஒத்துக்கொள்ளப்பட்டன. வர்ணாசிரம தருமத்திலிருந்து தோன்றிய சாதிய அமைப்பையும் தீண்டாமைக் கொடுமைகளையும் எதிர்த்து டாக்டர் அம்பேத்கர் தீவிரமாகப் போராடினார். இறுதியில் 1956இல் தமது ஆதரவாளர்களுடன் புத்த மதத்தில் இணைந்தார். இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும் இந்திய அரசியல் சாசனத்தின் தலைமைச் சிற்பி ஆகவும் செயல்பட்டார். 1951ஆம் ஆண்டு இந்து சட்டத் தொகுப்பு மசோதாஅறிமுகப்படுத்தப்பட்டபொழுது அதை எதிர்த்து தனது சட்ட அமைச்சர் பதவியைத் துறந்தார். சமூக நீதிப் போராளி டாக்டர் அம்பேத்கர் 1956 டிசம்பர் 6இல் காலமானார்.

திங்கள், பிப்ரவரி 07, 2011

தீக்குள் விரலை வைத்தால்...

நந்தலாலா

நண்பர் முரளியின் அடவி பிப்ரவரி இதழில் இந்த விமர்சனம் வெளியாகியுள்ளது. அச்சில் தென்பட்ட ஒரு சில பிழைகளை மட்டும் திருத்தி இதில் பதிவிட்டுள்ளேன்.

திரையரங்குகளுக்காகத் தயாரிக்கப்படும் அனைத்துப் படங்களும் வணிக நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பினும் தங்கள் திரைப்படங்கள்மீது சுமத்தப்படும் வணிகப் பொதியைத் தாண்டி அவற்றை அர்த்தமிக்க கலைப் படைப்பாக மாற்ற விரும்பும் பயணத்தையும் அவ்வப்போது இயக்குநர்கள் மேற்கொள்கிறார்கள். வணிகத்துக்கும் கலைக்கும் இடையே சதா சர்வகாலமும் பனிப்போர் ஒன்று நிகழ்ந்துவருகிறது. திரை ரசிகர்களில் ஒரு சாரார் வணிகத்தின் பக்கமும் ஒரு சாரார் கலையின் பக்கமும் தங்களை இருத்திக்கொள்கிறார்கள். இவை இரண்டும் சரிவிகிதத்தில் கலந்த கலவையெனச் சில படங்கள் தமிழில் வந்துள்ளன, உதாரணமாகத் தேவர் மகன், சேது போன்ற படங்களைச் சுட்டமுடிகிறது. சட்டென ஞாபகம் வந்தவை இவை அவ்வளவே. ஆனால் தமிழின் நல்ல படம் ஒன்றை யாரேனும் வினவினால் உடனேயே ஞாபகத்தில் வந்து நிலைப்பது உதிரிப்பூக்கள் மட்டுமே. ஆனாலும் தமிழில் மாற்றுப்பட முயற்சிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்தவாறு தான் உள்ளன. கலையா கவளமா எனப் போட்டி வரும்போது அங்கே பலியாவது சந்தேகமே இல்லாமல் கலையே. மறைந்திருந்து வீழ்த்திவிடுகிறது கவளம். ஆனாலும் மீண்டும் உயிர்த்தெழுந்து விடும் மாய சக்தி மட்டுமே கலைக்கு கைவரப்பெற்றிருக்கிறது. சித்திரம் பேசுதடி, அஞ்சாதே போன்ற ஜனரஞ்சகத் திரைப்படங்களை இயக்கியிருப்பினும் மாற்றுப்பட முயற்சிக்குரிய திரைப்படம் இதுவெனத் திரைக்கு வருவதற்கு முன்பே நந்தலாலாவைத் தன் சாதுர்யத்தால் மிஷ்கின் பேசவைத்திருந்ததால் அதன்மீது ஒரு தனிக்கவனம் இருந்தது சினிமா ஆர்வலர்களுக்கும் ரசிகர்களுக்கும். ஆனால் திரையரங்க அனுபவம் சிலாகிக்கவைத்த ஒன்றாக இருக்கவில்லை. மானசீகமாக மனத்தில் கட்டியமைக்கப்பட்ட பிம்பத்துக்கும் நேரிலே திரையில் அசையும் சலனக் காட்சிகளாலான பிம்பத்துக்கும் இடையே பெருவாரியான வேறுபாடுகளை மனம் உணர்ந்திருக்கக்கூடும்.

குழந்தைகளோடு குழந்தையாய் வளர வேண்டிய பிராயத்தில் தனியனாகப் பாட்டியோடு வாழ நேர்ந்த சிறுவன் அகிலேஷ். அவனுடைய தாய் மற்றொருவரை மணந்துகொண்டு அன்னவயல் என்னும் கிராமத்தில் வாழ்ந்துவருகிறாள். அதையறியாத அகி தன்னைக் காண அவள் வருவாள் வருவாள் என எதிர்பார்த்து ஏமாந்து இறுதியில், தன் தாயைக் கண்டு அவள் கன்னத்தில் முத்தமொன்று தரும் ஆசையில் பள்ளியில் இருந்து சொல்லாமல் கொள்ளாமல் அவளைத் தேடி ஓடிவருகிறான். ஜுரம் நின்ற பின்னும் ஊசிபோட்டுக் கொடுமை பண்ணும் மனநலக் காப்பகத்தில் தன்னைக் கொண்டு சேர்த்த தாய் வீட்டிற்கு அழைத்துப்போக வரவே வராத கோபத்தால் அவளது கன்னத்தில் அறைய வேண்டும் என்னும் ஆர்வத்தில் அங்கிருந்து தப்பித்த பாஸ்கர் மணி அவள் வசிக்கும் தாய் வாசலுக்கு தாயைத் தேடிப் போகிறான். இருவரும் இணையும் புள்ளியில் தொடங்குகிறது, நந்தலாலாவின் பயணப்பாதை. பயணம் பேருந்தில் தொடங்கி, ஆட்டோ, போலீஸ் ஜீப், டிராக்டர், புதுக்கார், லாரி, மாட்டுவண்டி, பைக் எனப் பலவகையான வாகனங்களில் நடந்தேறுகிறது. அந்த நிலவியலும் சம்பவங்களும் தருக்கங்களுக்குட்படாமல் பார்வையாளனிடமிருந்து அந்நியப்பட்டே நிற்கின்றன. அந்தப் பயணத்தில் எதிர்ப்படும் சம்பவங்கள், அவர்கள் சந்திக்கும் மனிதர்கள் இவற்றை மட்டுமே வைத்துக் கதை நகர்த்த துணிந்தற்கு மிஷ்கின் கிகுஜிரோவுக்கு மனத்திலாவது நன்றி சொல்ல வேண்டும்.

காற்றைத் தவிர ஒன்றுமில்லை தந்த இளையராஜா படத்தின் குறைகளைக் களைந்து படத்தின் தரத்தை உயர்த்த முயன்றதில் கிட்டத்தட்ட களைத்தேபோய்விட்டார். மாறுபட்ட பல கோணங்களில் காட்சிகளை ஒளிப்படச் சுருளுக்குள் சிறைப்பிடித்ததில் ஒளிப்பதிவாளரின் பங்கும் உயர்வான இடத்திலேயே உள்ளது. அநாவசியமான கூட்டங்கள் எதுவும் இல்லை படத்தில். சாதிக்கலவரம் நடந்த ஊரைக்கூட ஊருக்கு வெளியே காண்பித்ததால் கலவரப் பூமியையும் பெருகியோடும் குருதியையும் திரையில் பார்க்க வேண்டிய பாரமில்லை. ஆபாசமான வசனங்களில்லை. உரையாடல்கள் பக்கம் பக்கமாகப் பேசப்படவில்லை. பெரும்பான்மையான காட்சிகளில் மிக நீளமான காட்சிகளில் கூட வசனங்கள் மௌனித்திருக்க இசை மட்டும் உணர்ச்சிகளைக் கொட்டுகிறது. இப்படிப் பலவிதமான நேர்மறையான கூறுகளுக்கான அம்சங்களைக் கொண்டிருந்தும் உன்னதத் திரைப்படத்தைப் பார்த்த திருப்தி தர வேண்டிய நந்தலாலா அதிலிருந்து தவறியதாலேயே இப்படம் குறித்த கோபம் கொப்பளிக்கிறது.


நல்ல படம் ஒன்றிற்குத் தேவைப்படும் அனைத்துக் கூறுகளும் நிரம்பிவழிவது போன்ற தோற்றம் கொண்டிருந்தபோதிலும் நல்ல படம் இதுவெனும் கூற்றை ஏற்பதா மறுப்பதா என்பதை அவதானிக்க இயலாமல் தத்தளிக்கும் மனம் இறுதியில் மறுப்பின் பக்கமே நிற்கிறது. பார்வையாளனுக்கும் திரைக்கும் நடுவே கண்ணுக்குப் புலப்படாத கண்ணாடிச் சுவர் ஒன்று எழும்பி நிற்கிறது. அதன் வழியே தான் அவன் கதாபாத்திரங்களைக் காண்கிறான். இசையெனும் ஈரமான விழுதுகள் அவனை நோக்கி வளைந்து நெளிந்து வந்தும் அந்தக் கண்ணாடிச் சுவரைக் கடக்க இயலாமல் திரும்புகிறது. திரைக்கதையின் நுட்பமான இழைகள் இசை வழியே கதாபாத்திரங்களுக்கும் பார்வையாளனுக்கும் இடையே நெருக்கமான உறவைப் பின்னியிருந்தால் படம் முடியும் தருவாயில் அந்த உறவிலிருந்து தன்னைக் கழற்றிக்கொள்ள அவன் பிரயத்தனப்பட வேண்டியதிருந்திருக்கும். ஆனால் அப்படியொரு இழை உருவாவதை அறிந்தோ அறியாமலோ மிகக் கவனமாகத் தடுத்துவிடுகிறார் இயக்குநர். கதாபாத்திரங்களோடு பார்வையாளனுக்கு ஏற்பட வேண்டிய அன்னியோன்ய உறவு ஏற்படாமலே போய்விட்டபோது அதன் நிறைகள் எவையுமே மனத்தில் தங்கவில்லை.

கதாபாத்திரங்களில் இயக்குநரின் தாக்கம், குறிப்பாக அவரது தன்முனைப்பு அதிக அழுத்தத்துடன் பதிந்திருக்கிறது. அதனதன் இயல்புகளோடு திரிய வேண்டியவை இயக்குநரின் கருத்துகளைத் தாங்க முடியாமல் தங்கள் இயல்பிலிருந்து பிரிந்து அந்நியத்தன்மையைத் தழுவிக்கொள்கின்றன. கதையோட்டத்தின் போக்கில் அவனை உள்ளிழுக்கத் தவறி அவனைவிட்டு எங்கோ தொலைதூரத்துக்குப் பயணிக்கிறது திரைக்கதை. மாடோட்டுபவர்கூட ஒரு மாட்டுக்கு ராமன் என்றும் மற்றொன்றுக்கு ராவணன் என்றும் பெயர்வைத்திருக்கிறார். ஒரு காட்சியில், “நீ என்ன சாதி?” என பாஸ்கர் மணியிடம் வினவுகையில் அவன் “மெண்டல்” எனப் பதில் தருகிறான், கேள்வி கேட்டவள், “அது என்ன சாதி?”யென வெகுளியாகக் கேட்கிறாள். இத்தகைய அசட்டறிவு தூசியாகப் படம் முழுவதிலும் பரவிக்கிடக்கிறது.

அகியின் தாயைப் பாஸ்கர் மணி சந்திக்கும் காட்சியில் காலம்காலமாக வசனங்களால் கட்டியமைக்கப்பட்ட புனிதம் வசனமே இல்லாமல் இசையின் துணையோடு கட்டியமைக்கப்பட்டுள்ளது மட்டுமே புதுமை. அடுத்த கட்டத்தை நோக்கி நகராமல் அங்கேயே விழுந்துகிடப்பதால் என்ன பயன்? அகியின் தாய் பாஸ்கர் மணியின் காலில் விழுந்து கதறி அழுகிறாள். கழுத்திலிருக்கும் நகையைக் கழற்றிக்கொடுக்கிறாள், பணத்தைக் கொடுக்கிறாள். எல்லாவற்றையும் ஒதுக்கித்தள்ளிவிட்டு ஓங்கி அவள் கன்னத்தில் அறைகிறான் பாஸ்கர் மணி. அங்கே இயக்குநரின் முதிராத் தன்மையை எதிர்கொள்கையில் பார்வையாளனுக்கும் திரைக்குமான தூரம் பல மடங்கு அதிகரிக்கிறது.



பாலியல் தொழிலாளியை அவளது சிக்கலிலிருந்து மீட்ட பின்பு அவள் பேசும் வசனங்களைக்கூடத் தாங்கிக்கொள்ளலாம்- சிக்மண்ட் ஃப்ராய்ட்கூட நினைவுருத்தப்படுகிறார்- ஆனால் அதன் பின்பு அவளது அழுக்கைப் போக்குவதற்காக அவளை மழை நீரில் குளிப்பாட்டும் அபத்தத்தைத் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அது போதாதென்று குறியீடு போல மலைப்பாம்பொன்றை நகரச் செய்தது அபத்தத்திலும் அபத்தம். பாஸ்கர் மணி அவனது தாயைச் சந்திக்கும் காட்சியில் பார்வையாளனுக்கு அதிர்ச்சி ஏற்படுத்துவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருந்திருக்கிறார் இயக்குநர். மனநிலை பிசகிய நிலையில் அந்தத் தாய் இருப்பதற்கான நியாயமான காரணங்கள் எவையுமே இல்லை. ஏனெனில் அவள்தான் மகனை மனநலக் காப்பகத்தில் சேர்ந்து வந்திருக்கிறாள் அவள் ஏன் மன நலம் பாதித்தவளாக மாற வேண்டும் என்ற நியாயமான கேள்விகள் எழுவதையும் தடுக்க முடியவில்லை. இப்படியான தருக்கங்கள் எவற்றிற்கும் பதில் கிடைக்காத காரணத்தினாலேயே தன்னளவில் தனிப்பட்டுப் போய்விடுகிறது இப்படம். எல்லாவற்றுக்கும் காரணம் வேண்டுமா என்னும் கேள்வியில் தருக்கங்களை எல்லாம் மூழ்கடித்துவிட முடியாது. தருக்கங்களைப் பற்றி யோசிக்காமல் திரைக்கதையில் ஒன்றிவிட்ட பார்வையாளர்கள் வேண்டுமானால் தீக்குள் விரலைவைக்கும்போது நந்தலாலாவைத் தீண்ட முடியும் - அத்தகைய ஒன்றுபடலின் காரணம் ஞானமா, அறியாமையா? - நாம் சூடு கண்டதுதான் மிச்சம்.

லேட்டஸ்ட்

ரஜினியாவாரா விஜய்?

தொடர்பவர்