1959 மே 7 அன்று பிறந்த எஸ்.பி.ஜனநாதன் இன்று, 14.03.2021 அன்று, உயிரிழந்திருக்கிறார். ஓரிரு நாள்களுக்கு முன்னர் (மார்ச் 11 அன்று) மூளைச்சாவு அடைந்ததாகக் கூறி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவர் மீண்டு வந்துவிட வேண்டுமென்று திரைத்துறையினர் விரும்பிக்கொண்டிருந்த சூழலில் இயற்கை அதற்கு ஒத்துழைக்கவில்லை. பெரிய அளவிலான கல்வி அறிவு இல்லாதபோதும், பெரியார், மார்க்ஸ் போன்றவர்களின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அவர்களிடம் வாழ்க்கைக் கல்வியைக் கற்றிருக்கிறார் ஜனநாதன். படிப்பறிவில்லாத பெற்றோருக்குக் கடைசி மகனாகப் பிறந்த ஜனநாதன் எம்.ஜி.ஆர். படங்கள் வாயிலாகவே திரைத்துறைக்கு வந்ததாகத் தெரிவிக்கிறார்.
பி.லெனினிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ஜனநாதன் மலையாள இயக்குநர் பரதன், இயக்குநர் கேயார் ஆகியோரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். தமிழில் 2003இல் வெளியான ‘இயற்கை’ படம் இவரது முதல் படம். ‘காதல் வந்தால் சொல்லியனுப்பு உயிருடன் இருந்தால் வருகிறேன்...’ என்னும் பிரபலப் பாடல் இடம்பெற்ற இந்தப் படம் தேசிய விருதை வென்றது. சிறந்த தமிழ்ப் படம் என்னும் விருதை வென்ற இதன் கதை தஸ்தயெவ்ஸ்கியின் ‘வெண்ணிற இரவுக’ளைப் போன்ற அம்சத்தைக் கொண்டிருக்கும். இந்தப் படம் வணிகரீதியாகவும் வெற்றிபெற்றது. இதைத் தொடர்ந்து ‘ஈ’ (2006), ‘பேராண்மை’ (2009), ‘புறம்போக்கு என்கிற பொதுவுடைமை’ (2015) ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கியுள்ள ‘லாபம்’ என்னும் திரைப்படம் வெளியாகவில்லை. ஆனால், வெளியாகும் நிலையில் இருந்தது. இத்தகைய சூழலில் ஜனநாதனின் மரணம் நிகழ்ந்திருக்கிறது.
தமிழின் பெருமைமிகு இயக்குநராக ஜனநாதனை முன்னிருத்தும் வகையில் அவர் திரைப்படங்களை உருவாக்காதபோதும், குறிப்பிடத்தக்க இயக்குநராகத் தனது படைப்புகளைத் தந்தவர். அவருடைய படங்களில் ‘இயற்கை’, ‘ஈ’ ஆகியவை ஓரளவு நல்ல படங்கள் எனச் சொல்ல முடியும். தனிப்பட்ட முறையில் அனைவரிடமும் நற்பெயர் எடுத்திருப்பவராகவே ஜனநாதன் உள்ளார். அவரது திடீர் மறைவு திரையுலகினர் மத்தியிலும் திரை ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியையே ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக