சிவசாமி (தனுஷ்) குடும்பத்தினரிடம் இருக்கும் சிறு நிலத்தைத் தன் தம்பி வெங்கடேசன் (பவன்) தொடங்கப்போகும் தொழிற்சாலைக்காக வாங்கத் துடிக்கிறான் வடக்கூரான் நரசிம்மன் (ஆடுகளம் நரேன்). சிவசாமியோ அது அவருடைய மனைவிக்கு அவளது அண்ணன் தந்த நிலம். அதை விற்க முடியாது என மறுக்கிறார். இதில் ஏற்பட்ட தகராறு காரணமாக சிவசாமியின் மூத்த மகன் முருகனை ஆள்வைத்துக் கொன்றுவிடுகிறான் நரசிம்மன். இதை நேரில் பார்த்த சிவசாமியின் இரண்டாம் மகன் சிதம்பரம் (கென் கருணாஸ்) அதற்குப் பழிவாங்கும்வகையில் நரசிம்மனையே கொன்றுவிடுகிறான். பள்ளிச் சிறுவனான அவன் செய்த கொலையால் அவனை நரசிம்மன் குடும்பத்தினரிடமிருந்தும் போலீஸாரிடமிருந்தும் காப்பாற்றுவதற்காகக் காட்டுக்குள் அழைத்துச் செல்கிறார் சிவசாமி. அவர்கள் போலீசாரிடம் மாட்டினார்களா, காட்டுக்குள் சென்ற அவர்களது நிலை என்ன போன்ற கேள்விகளுக்கு விடைகளாக இருக்கிறது அசுரன்.
எழுத்தாளர் பூமணியின் வெக்கை நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிமாறனும் வெற்றிமாறனும் இணைந்து திரைக்கதையை எழுதியுள்ளனர். நாவலின் சில அம்சங்களைத் திரைப்படத்துக்காக மாற்றியுள்ளனர். திரைக்கதையில் பஞ்சமி நிலப் பிரச்சினை, ஒடுக்கப்பட்டோருக்கான உரிமை போன்ற அம்சங்களைச் சேர்த்து அதற்கு வேறு வண்ணம்பூசியுள்ளனர். திரைக்கதையை விறுவிறுப்பாகவே அமைத்துள்ளனர். வணிகநோக்கத்துடன் கதாநாயக அம்சம் தூக்கலாகத் தெரியும் வகையில் மூன்று சண்டைக்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. அது சற்று நெருடலாகவே உள்ளது. மற்றபடி திரைப்படம் ஒரு நாவலை வாசிப்பதுபோல் அடர்த்தியாகவே உள்ளது.
தனுஷ் என்னும் நடிகரை நம்பியே இந்தப் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. தனுஷும் அதற்குத் தன்னுடைய முழு உழைப்பை வழங்கியுள்ளார். தொடக்கத்தில் தனுஷுக்குப் பொருந்தாததுபோல் தோன்றிய அந்தக் கதாபாத்திரத்துக்கு தனது நடிப்பால் ஈடுகட்டிவிடுகிறார். மஞ்சு வாரியர் உடை, தோற்றம், நடிப்பு எல்லாம் ஓகே ஆனால் குரலில்தான் அந்நியத்தன்மை தென்படுகிறது. பசுபதி, ஆடுகளம் நரேன், பாலாஜி சக்திவேல், பிரகாஷ்ராஜ் என நடிகர்கள் எல்லோரும் தெக்கத்தி மனிதர்களாகவே மாறியுள்ளனர்.
வேல்ராஜின் ஒளிப்பதிவு தேரிக்காட்டைத் துல்லியமாகப் படம் பிடித்திருக்கிறது. காட்சிகளில் பயன்படுத்தப்பட்ட இருள், ஒளி ஆகியவற்றின் வழியே கதாபாத்திரங்களின் மனநிலையைத் தத்ரூபமாக வெளிப்படுத்திவிடுகிறார்கள்.
அவனுக்கு நாய் போச்சுன்னு கஷ்டமாயிருக்கு எனக்கு நாயோட போச்சேன்னு ஆறுதலாயிருக்கு… காடு இருந்தா எடுத்துக்கிடுவானுவ ரூபா இருந்தா புடுங்கிக்கிடுவானுவ ஆனா படிப்ப மட்டும் நம்மகிட்ட இருந்து எடுத்துகிடவே முடியாது… போன்ற வசனங்களிலும் பெண் குழந்தையைத் தாய் என அழைக்கும் நுட்பத்திலும் கவனிக்கவைக்கிறார்கள் வசனம் எழுதிய சுகாவும் வெற்றிமாறனும்.
பாடல்களைவிடப் பின்னணியிசையில் ஜி.வி.பிரகாஷ்குமார் கவனத்தை ஈர்க்கிறார். அதிலும் அசுரன் தீம் ம்யூசிக்கில் அதிகமாக ஸ்கோர் செய்கிறார். கால கட்டத்தைச் சித்தரிப்பதில் கலை இயக்குநர் குறிப்பிடத்தக்கவகையில் பங்களித்துள்ளார்.
ஒரு நாவலை வெற்றிகரமான திரைப்படமாக்கியதில் இயக்குநர் வெற்றிமாறன் திறமையைக் காட்டியுள்ளார். ஒடுக்கப்பட்ட மனிதர்கள் செருப்பு அணிவதைக்கூட அனுமதிக்க முடியாமல் இருந்த காலநிலையையும் பெரிய மனிதர்களின் மனப்போக்கையும் அழுத்தமான காட்சிகளின் வழியே சித்தரித்திருக்கிறார். ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்குக் கல்வி மட்டுமே உயர்வைத் தரும் என்பதை ஆக்கபூர்வமாக வெளிப்படுத்தியுள்ளார். இதற்காகவெல்லாம் இயக்குநரைப் பாராட்டலாம். ஆனால், எண்பதுகள், அறுபதுகள் எனும் காலகட்டத்தை உணர்த்தும்போது சுவர் விளம்பரங்கள், பின்னணிப் பாடல்கள் போன்றவற்றையே தொடர்ந்து பயன்படுத்துவது அலுப்பு. ஒருவிதமான டெம்பிளேட் இயக்குநராகும் அபாயத்தின் விளிம்பில் நிற்கிறார் வெற்றிமாறன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக