இந்த வலைப்பதிவில் தேடு

சனி, செப்டம்பர் 24, 2011

முடிவற்ற முனை கொண்ட துயரம்

ஆகஸ்டு மாத படப்பெட்டி இதழில் வெளியாகியுள்ள துயரம் படிந்த கரைகள் ஆவணப்பட விமர்சனத்தின் சுருக்கப்பட்ட வடிவம் இது. 

இலங்கைக்  கடற்படையால், ராணுவத்தால் தமிழக மீனவர்கள் எதிர்கொள்ளும் இன்னல்களை மீனவர்களைத் தவிர மற்றவர்கள் புரிந்துகொள்ளாத சூழ்நிலையே இன்றுவரை நீடித்துவருகிறது. அவ்வப்போது பத்திரிகை, தொலைக்காட்சி செய்திகளில் இடம்பெறும் இத்தகைய இடர்கள் குறித்தும் அவற்றுக்கான சமூக, அரசியல் காரணங்கள் குறித்தும் அவற்றைக் களைய மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள்  குறித்தும் சமூக ஆர்வலர்கள், மீனவத் தலைவர்கள்,  வழக்கறிஞர்கள், மீனவர்கள் ஆகியோரின் கருத்துகளை உள்ளடக்கிய காட்சி வடிவிலான ஆவணம் துயரம் படிந்த கரைகள்.  

கொஞ்சம்கூட  மனிதாபிமானமற்றுத் தமிழக மீனவர்கள்மீது துப்பாக்கிச் சூடு நடத்தும் இலங்கைக் கடற்படை பாதுகாப்புக் காரணங்களுக்காக நடவடிக்கை மேற்கொள்வதாகக் காட்டிக்கொள்கிறது. இந்திய அரசோ தமிழக அரசோ இதைக் குறித்துப் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. உயிரழப்பென்றால் நஷ்ட ஈடு, ஆறுதல் வார்த்தைகள் பொதிந்த அறிக்கைகள் போன்றவற்றோடு தம் பொறுப்பைச் சுலபமாகச் சுருக்கிக்கொள்ளும் அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஆகியோர்மீது தார்மீகக் கோபம் கொண்ட இந்த ஆவணப்படம் தம் சொந்த நாட்டு மக்கள் வேற்று ராணுவத்தால் கொல்லப்பட்டும் அதைக் கண்டும் காணாததுபோல் நடந்துகொள்ளும் இந்திய அரசின் இறையாண்மை குறித்த கேள்விகளை எழுப்புகிறது.  


இலங்கை  தமிழ்நாடு ஆகியவற்றுக்கிடையிலான கடற்பரப்பின் சூழல், கடற்எல்லையை மீனவர்கள் கடக்க நேரிடுவது எதனால், கச்சத்தீவின் முக்கியத்துவம் என்ன, தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளின் மீனவர்கள் எதிர்கொள்ளும் வெவ்வேறு பிரச்சினைகள் என்பனவற்றை எல்லாம் விரிவாக அலசும் இந்தப் படத்தில் தனது கருத்துக்கு வலுச்சேர்க்கும் விதத்தில் அமைந்திருக்கும் நேர்காணல்களும் காட்சி வடிவ வரைபட விளக்கங்களும் பார்வையாளனுக்கு மீனவர்களின் துன்பங்களை அவை ஏற்பட காரணமாக இருக்கும் இயற்கைச் சூழல்களோடு இதமாக எடுத்துரைக்கின்றன.  

சீனா, பாக்கிஸ்தான் ஆகிய நமது எதிரி  நாடுகளோடு இலங்கை நட்பு  கொண்டுவிடக் கூடாது என்னும் ஒரே காரணத்திற்காக இலங்கையைச் சமாதானப்படுத்தும் நோக்கோடு இலங்கை, இந்திய மீனவர்களின் பாரம்பரிய உரிமைகள் பாதுக்காக்கப்படும் என்னும் உத்தரவாதத்தோடு 1974இல் கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டுவிட்டதையும்  1976இல் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகளில் கச்சத்தீவு ஒப்பந்தத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின் காரணமாக அந்த உரிமைகள் பறிபோய்விட்டதால் தமிழக மீனவர்களின் மீன்பிடிப் பரப்பு குறுகிவிட்டதையும் கவனப்படுத்துகிறது இந்தப் படம்.   


கச்சத்தீவையொட்டி  மீன்கள் அதிகமாக அலையும்படியான  இயற்கை அமைப்புகள் உள்ளதாகவும் தீவை இழந்ததால் ஏற்படும் மீனவர்கள் பிரச்சினைகளைத் தொலைநோக்குப் பார்வையற்ற அரசியல்வாதிகள் இந்திய அரசுக்கு அழுத்தமாக உணர்த்தத் தவறிவிட்டனர் என்கிறார் ஜோ டி குருஸ். கடலோரங்களில் ரசாயணக் கழிவுகள் கலக்கும் வகையிலான தொழிற்சாலை அமைக்கப்பட்டதன் காரணமாக கடலோர மீன்வளங்கள் முற்றிலும் நாசப்படுத்தப்பட்டதால் மீனவர்கள் ஆழ்கடலுக்குள் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறார் சேதுபதி நாட்டார்.
  
தமிழக மீனவர்களுக்கு இந்திய அரசு அடையாள அட்டை வழங்கியுள்ளதையும்  மீன்பிடிப்பதற்குத் தேவைப்படும்  டோக்கன் போன்ற ஆவணங்களோடு கடலுக்குள் செல்லும் மீனவர்கள்மீது  கூடத் தாக்குதலும் துப்பாக்கிச் சூடும் நடத்தப்படுகிறது  என்பதையும் குறிப்பிடுகிறார் அ.புனிதன் என்னும் மீனவர். டோக்கன் பெற்றுக்கொண்டு மீன்பிடிக்கச் சென்று கடற்படையால் சுடப்பட்ட ஜூலியன்ஸ் இறப்பின் வாயில்வரை சென்றுவந்த நினைவுகளோடு மீனவர்கள் கடலில் படும் துயரங்களை, மீன்பிடித் தொழிலையே விட்டுவிடலாமா என்ற எண்ணத்தை ஏற்படுத்தும்படியான விரக்தியான உணர்வை எடுத்துச் சொல்கிறார். 

கடற்புலிகளின் கட்டுப்பாட்டில் கடற்பரப்பு இருந்த காலங்களில் தமிழக  மீனவர்களுக்கும் கடற்புலிகளுக்கும்  மோதல்கள் வந்ததாகச் செய்திகள்  கிடையாது என்கிறார் இராசேந்திரச் சோழன். விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகச் சொல்லி தமிழக மீனவர்களைத் தாக்கிய கடற்படை விடுதலை புலிகள் அழிக்கப்பட்டுவிட்ட பின்பும் அத்தகைய தாக்குதல்களைத் தொடர்கிறது. மனித உரிமைகள் மீறப்படுகின்றன. இந்தியர்கள் மீது தங்களுக்குள்ள வன்மத்தைத் தமிழக மீனவர்களிடம் காட்டுவதைத் தனது வாடிக்கையாகவே கொண்டுள்ளது இலங்கை ராணுவம். இதற்கெதிராகக் குரல்கொடுக்க வேண்டிய இந்திய அரசு தொடர்ந்து தன்னை மௌனத்தில் புதைத்துக்கொண்டுள்ள மரக்கட்டைத் தனமான போக்கு குறித்த ஆளுமைகளின் கோபத்தைத் தனக்குள் உள்வாங்கிக்கொண்டு அந்தக் கோபத்தை, ஆதங்கத்தைப் பார்வையாளனுக்குள் நிரப்பிட வேண்டும் என்னும் இலக்கை நோக்கி மிகத் தெளிவாக முன்னேறுகிறது இந்த ஆவணப்படம்.

   
தமிழக மீனவர்கள் தாக்கப்படும்போது இந்திய அரசு நேரடியாகக் குரல்கொடுத்தாலே மீனவர்கள்மீது கைவைக்க இலங்கை அரசு துணியாது. மேலும் கடற்பகுதியில் மீனவர்களுக்கு ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் இந்தியக் கடற்படை அவர்களுக்கு உடனே உதவ வேண்டும். அப்படியொரு நிலை ஏற்பட்டால் மட்டுமே இப்பிரச்சினை தீரும் என்கிறார் ராசேந்திரச் சோழன். இரண்டு நாட்டு மீனவர்களுக்கும் உரிமம் வழங்கி மீன்பிடிக்கச் செய்யலாம் என்கிறார் சேதுபதி நாட்டார். இந்தியத் தரப்பில் மீனவர்களாக இருப்பவர்களும் தமிழர்கள் இதற்கு மறு கரையில் இலங்கைத் தரப்பில் மீனவர்களாக இருப்பவர்களும் தமிழர்கள் மீன்பிடிக்க முனையும்போது இரு தரப்பினரும் எல்லை தாண்டுவது இயல்பானது எனவே எல்லை என்பதே அழிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார் தோழர் தியாகு. இரு நாட்டு மீனவர்களும் ஒத்திசைந்து மீன்பிடிக்கும் சூழல் உருவாக்கப்பட்டால் அனைத்தும் நலமாக மாறும் அதற்கான உடன்பாடுகள் எட்டப்பட வேண்டுமென கோருகின்றனர் மீனவப் பிரதிநிதிகள்.  

மீனவர்  பிரச்சினைகளின் காரணங்களைப்  பல்விதப் பரிமாணத்தில் உணரத்  தலைப்பட்டு அவற்றைக் களைய மேற்கொள்ளப்பட வேண்டிய  தீர்வுகள் குறித்து அக்கறையோடு கரிசனப்படும் இப்படத்தில் இலங்கைத் தரப்பு மீனவர்கள் இவ்விஷயத்தில் என்னவித நிலைப்பாடு கொண்டுள்ளனர் என்பதுவும் சேர்க்கப்பட்டிருந்தால் அது முழு முற்றான பூரணத்துவத்தை இப்படத்திற்கு அளித்திருக்கும். நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக இது தவிர்க்கப்பட்டிருக்கக் கூடும் என்னும் புரிதலோடுதான் இதை நாம் அணுக வேண்டியுள்ளது. முடிவற்ற முனை கொண்ட மீனவர் துயர முனையின் நீட்சியை நிறுத்தி அதை முற்றுப்புள்ளியாக்கப் போராடும் போராட்டத்தில் தனது முயற்சியையும் இணைத்துக்கொண்டதில் வெற்றிபெற்றுள்ளார் இதைப் படமாக்கி இயக்கி தயாரித்த செ.தே.இமயவரம்பன்.

வெள்ளி, ஆகஸ்ட் 19, 2011

இருட்டைத் துரத்தும் ஒற்றைச் சுடர்


ஆகஸ்டு அடவி இதழில் வெளியாகியுள்ள நாடகப் பதிவு இது.


பெருநகரான சென்னையில் இலக்கிய அரசியல் நிகழ்வுகள் பெருமளவில் நடந்தேறுகின்றன. நம்மைக் கடந்துசெல்லும் வெறும் சம்பிரதாய நிகழ்வுகளை ஞாபகத்தில் இருந்து சுத்தமாகத் துடைத்தழித்துவிட்டுத் தினசரிக் கடமைகளில் நம்மை ஈடுபடுத்திக்கொள்கிறோம். ஆனால் எதேச்சையாக நாம் பங்குகொள்ளும் சில நிகழ்வுகள் நமது சிந்தனை மையத்தை ஆதிக்கம் செலுத்தும்விதமாக அமைந்துவிடுகின்றன. அத்தகு நிகழ்வுகளை நம்மால் மிகச் சாதாரணமாகக் கடந்துவிட முடிவதில்லை. அவை உருவாக்கிய சுறுசுறுப்பான உற்சாக எண்ண ஓட்டங்கள் நம் சிந்தனையைக் கூர்மையடையச்செய்கின்றன. நாம் அறிந்திராத மற்றொரு தளத்திற்கு நம்மை அழைத்துச்செல்ல முயலும் அவை நமது புரிதலின் பரப்பை மேலும் சில அடிகள் நகர்த்திச் செல்லும். அப்படியொன்றுதான் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக ஏப்ரல் 1, 2011 அன்று மாலை சென்னை தேனாம்பேட்டை நரேஷ் பால் மையத்தில் நடைபெற்ற லே மஷாலே நாடக நிகழ்வு. 
  
இரோம் ஷர்மிளாவும் மணிப்பூரின் அமைதிக்கான போராட்டமும் என்னும் நூலை அடிப்படையாகக் கொண்டு சிவிக் சந்திரன் மலையாளத்தில் எழுதிய, பெங்குயின் பதிப்பகம் 2009இல் வெளியிட்ட மெய்ரா பெய்பி என்னும் நாடகத்தை ஆங்கில மொழி பயன்படுத்தி தனியொரு ஆளாக நிகழ்த்திக் காட்டினார் மகாராஷ்டிர மாநில நாடக ஆளுமையான,  இருபத்தைந்து வயது ஓஜாஸ் சுனித் விஜய். மெய்ரா பெய்பி என்னும் பதம் சுடரேந்திய பெண் என்பதைக் குறிக்கிறது. ஷர்மிளா என்னும் மணிப்பூரைச் சார்ந்த இளம்பெண் தனது மாநிலத்தில் நிலவும் வன்முறைகளுக்கெதிராக அஹிம்சை வழியில் மேற்கொண்டிருக்கும் பதினோறாண்டுகால உண்ணாவிரதப் போரை மையப்படுத்தி அம்மாநிலக் கலாச்சாரம், பண்பாடு, அம்மக்களின் வாழ்வு சீரழிக்கப்படும் விதம் போன்றவற்றை நம் கண்முன் கொண்டுவந்துவிடுகிறது நாடகத்தின் சித்திரிப்பு குறிப்பாக ஓஜாஸின் நடிப்புத் திறன்.  “ஐம் இரோம் ஷர்மிளா, இரோம் ஷர்மிளா சானு” என்னும் வார்த்தைகளோடு தொடங்கும் இந்நாடகம் பார்வையாளர்களை மானசீகமாக மணிப்பூருக்கு அழைத்துச்சென்று அம்மக்களின் நிலவியல், நாட்டுப்புறக் கதைகள், வாழ்க்கை முறை ஆகியவற்றை அவர்களிடம் அன்னியோன்யத்துடன் கூறுகிறது. நாடகம் முடியும்போது வடகிழக்கு மாநிலங்களில் நிலவும் அடக்குமுறைகள் குறித்து பகிரப்பட்ட தகவல்களின் காரணமாக ஏற்பட்ட பதற்றமும் அதிர்ச்சியும் பார்வையாளனுக்குள் பரவி அவனை அந்த அடக்குமுறைகளுக்கு எதிராக ஏதாவது செய்துவிட மாட்டாமோ என ஏங்கவைக்கிறது. 


கடுமையான சோர்வை ஏற்படுத்தும்படியான பயணத்தை மேற்கொண்டால் மட்டுமே மாநிலத்தின் தலைநகரமாக இருந்தபோதும் புகைவண்டி நிலையம்கூட இல்லாத இம்பாலுக்குச் செல்ல முடிவது; வாரத்தில் 24 மணி நேரம் மட்டுமே மின்சார வசதி கிடைப்பது; திடீர் திடீரென ஆள்கள் காணாமல்போவது, பெண்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்படுவது போன்ற நாடகத்தில் ஓஜாஸ் வெளிப்படுத்தும் பல தகவல்கள் நம்மை உலுக்குகின்றன. ஷர்மிளா படித்த வரலாற்றுப் புத்தகங்களில் அவளது மாநிலத்தைச் சார்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களது சரிதம் குறிப்பிடப்படவில்லை. அந்தப் புத்தகங்களை ஓஜாஸ் தேடும் விதம் பல ஆண்டுகள் அதில் நகர்வதைக் குறிப்புணர்த்துவதுபோல் உள்ளது. நமது தேசியகீதத்தில்கூட வடகிழக்கு மாநிலங்களின் பிரதிநிதித்துவம் இல்லை. ஏன் அப்படி? தேசியகீதம் பின்னணியில் ஒலிக்க இந்திய தேசத்தைப் போன்ற வளைவு சுழிவுகளோடு நளினமாக நாட்டிய அசைவுகளைத் தருகிறார் ஓஜாஸ். வழக்கமாக, தேசிய கீதம் ஒலிக்கும்போது இறுக்கமாக நேராக நெஞ்சு நிமிர்த்தி நின்றே பழகிய நம்மை அர்த்தமுள்ள பகடிக்குள் அமிழ்த்துகிறது இந்தக் காட்சி. இந்த மாதிரியான சூழலில் வழக்கமான மத்தியதர வர்க்கத்தைச் சார்ந்த ஷர்மிளா படிக்கிறார், வளர்கிறார், கவிதை எழுதுகிறார் இறுதியில் ஒரு மனித உரிமை அமைப்பில் பணியில் அமர்கிறார். 
  
2004ஆம் ஆண்டு ஜூலை 10 அன்று தங்க்ஜம் மனோரமா தேவி என்னும் 32 வயது பெண்ணின் சடலம் அவளது வீட்டிலிருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் கிடைத்தது. அந்த இளம்பெண் அவளது வீட்டிலிருந்து பிரிவினையைத் தூண்டும் போராட்டக்காரர்களுடன் அவளுக்குத் தொடர்பிருக்கிறது என்னும் குற்றச்சாட்டின் பேரில் துணை ராணுவப் படையினரால் பிடித்துவரப்பட்டிருந்தாள். சில மணி நேரங்கள் கழித்து அவளது உடல் கண்டெடுக்கப்பட்டது. அவளது யோனியில் துப்பாக்கி ரவை பாய்ந்திருந்தது, அவள் உடலில் துப்பாக்கி ரவைகள் ஏற்படுத்திய காயமும் சித்திரவதை செய்யப்படிருந்ததற்கான அடையாளங்களும் தென்பட்டன. இச்சம்பவத்திற்கெதிராக இம்பாலில் உள்ள அஸ்ஸாம் ரைபிள்ஸ் படைப்பிரிவு அலுவலகத்தின் முன்பு ஜூலை 15, 2004 அன்று பெண்கள் நிர்வாணமாக நின்று அஸ்ஸாம் ரைபிள்ஸுக்கெதிராகப் போராடிய காட்சியைக் காட்டும் படம் ஒன்று இந்நாடகத்தின் ஊடாகத் திரையில் வந்துசென்றது. இந்திய ராணுவம் எங்களை வன்புணர்ச்சிக்குள்ளாக்கியது என்னும் பதாகையைத் தாங்கியிருந்தனர் அவர்கள். படைப்பிரிவினர் மணிப்பூரி இளைஞர்களை ஒருவரையொருவர் அடிக்கச்சொல்லி வதைக்கும் காட்சியும் திரையில் விரிந்து திகைக்கவைத்தது. மணிப்பூரின் கிராமம் ஒன்றுக்கு 2004 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இரண்டாம் தேதி வண்டியில் வந்த ராணுவப்படையினர் தங்களது வேலைகளில் ஈடுபட்டிருந்த அங்கிருந்த அப்பாவி மக்களில் பத்துப் பேரை துப்பாக்கியால் சுட்டுவீழ்த்தினர். அவர்களுள் முதிய பெண் ஒருவரும் வீரத்திற்காகத் தேசிய விருது பெற்ற இளைஞனும் அடக்கம். மணிப்பூரிகளாக இருந்ததைத் தவிர வேறு எந்தக் குற்றமும் செய்திராத அப்பாவிகள் அவர்கள். 

 
  
இந்திய தேசத்தில் வாழும் அம்மக்களுக்கு ஏன் இப்படியொரு நிலைமை, அவர்கள் செய்த குற்றம்தான் என்ன என்னும் கேள்விகள் நாடகத்தைப் பார்க்கும்போது நமக்கு ஏற்படுவது போல் தான் இத்தகைய நிகழ்வுகளை நேரில் பார்த்த ஷர்மிளாவுக்கும் ஏற்பட்டிருக்கிறது. என்னவொன்று, நமக்கு நாடகம் ஒரு முறை தான் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது எனவே அதைப் பற்றி சிறிது சிந்தித்துவிட்டு நாம் நமது வேலையைக் கவனிக்கத் தொடங்கிவிடுகிறோம். ஆனால் ஷர்மிளாவுக்கு அவை தினசரிக் காட்சிகள், அதுவும் சொந்த மண்ணில் சொந்த ராணுவத்தால் சொந்த மக்களுக்கு ஏற்படும் வலி மிக்க அந்தத் துயரம் பெரும் சுமையாக அவளுள் இறங்கியது. அந்த இளம்பெண்ணால் அச்சுமையை எளிதாகத் தூக்கிப்போட இயலவில்லை. அந்தத் துயரத்தை மாற்ற தன்னால் ஆன எதைச் செய்ய முடியும் என ஆழமாக யோசித்த அவளுக்கு முன்னால் பெரியதொரு வெளிச்சமாக தோன்றியது அஹிம்சை முறையிலான உண்ணாநோன்புதான். அவளிடம் ஆயுதங்கள் இல்லை. ஆனால் அவள் போரிட வேண்டியது ஆயுதமேந்திய வீரர்களிடம். அவளிடம் இருந்த ஒரே ஆயுதம் அவளது மன வலிமை மட்டுமே. இருக்கும் ஆயுதத்தை மறந்துவிட்டுப் புலம்பத் தயாராகயில்லாத அவள் போரிடுகிறாள். அந்தப் போராட்டம் பதினோரு ஆண்டுகளாகத் தொடர்கிறது. 

இந்நாடகத்தில் ஒன்பது சூரியன்கள் விரட்டப்படுவது குறித்து இடம்பெறும் நாடோடிக் கதை ஒன்றில் மணிப்பூரில் ஒன்பது சூரியன்கள் இருந்ததாகவும் மணிப்பூரின் மூதாதைப் பெண்கள் வில் தொடுத்து அம்பெய்து அவற்றுள் எட்டை வீழ்த்தியதாகவும் இறுதியில் ஒன்பதாவது சூரியன் தானாகவே பயந்து ஓடிவிட்டதாகவும் அதன் பின்புதான் அவர்கள் தங்களுக்கான இரவை, தங்கள் காதலை, பிரியத்தைப் பகிர்ந்துகொள்வதற்கான இருளைக் கண்டுகொண்டதாகவும் குறிப்பிடப்படுகிறது. ஆனால் 1958 இல் ஆயுதப் படையினருக்கான சிறப்பு அதிகாரச் சட்டம் [Armed Forces Special Powers Act (AFSPA)] அமல்படுத்தப்பட்ட பிறகு அந்த இருள் அகன்று போய்விட்டது; இப்போது இருப்பதெல்லாம் ராணுவத்தினரின் பயம் மிரட்டும் இருட்டுதான் என்கிறார் ஓஜாஸ். நாற்பது லட்சம் மக்களை அடக்குமுறைக்குள்ளாக்கும், இந்தியாவின் ஆபரணம் என பண்டித ஜவஹர்லால் நேரு வர்ணித்த மணிப்பூரில் அமல்படுத்தப்பட்டிருக்கும் ஆயுதப் படையினருக்கான சிறப்பு அதிகாரச் சட்டத்தை அரசாங்கம் திரும்பப்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தித்தான் இவர் போராடுகிறார். இதில் வெற்றிபெறாமல் ஷர்மிளா தன் தாயைக்கூடப் பார்க்கப்போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார். “உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்பதை உலக நாடுகள் ஒப்புக்கொள்ள வேண்டுமானால் இந்தச் சட்டம் திரும்பப்பெறப்பட வேண்டும்” என்கிறார் இவர். தற்கொலைக்கு முயன்றார் எனும் குற்றச்சாட்டின் பேரில் ஷர்மிளாவைக் கைது செய்தது அரசு. ஆனால் ஷர்மிளா சாக விரும்பவில்லை. வாழ்வதற்காக, கௌரவமாக வாழ்வதற்குரிய அனைத்து உரிமைகளையும் அனுபவித்து வாழ்வதற்காகத்தான் ஆசைப்படுகிறார். 


ரத்தக்கறை படிந்த செய்தித் தாள், சில புத்தகங்கள், காலியான தண்ணீர் பாட்டில், ராணுவச் சீருடை ஒன்று, ஒரு சில தீப்பந்தங்கள் முதலான சிறு சிறு பொருள்களைக் கொண்டு கிடைத்த இடத்தை மேடையாகப் பயன்படுத்தி வடகிழக்கு மாநிலமொன்றில் போராடும் இளம்பெண்ணின் கதையை நாடகம் ஒன்றின் மூலம் இந்தியா முழுவதும் பரப்பி, மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி ராணுவக் கொடுமைகளுக்கெதிராக மக்களைக் கேள்வி கேட்கவைக்கும் ஓஜாஸின் முயற்சிக்காக அவரைப் பெருமிதத்தோடு பார்க்கும் அதே நேரத்தில் நம் சொந்தச் சகோதரர்கள் அண்டை நாட்டில் சாகும் நேரத்தில் அதைத் தடுத்து நிறுத்தியிருக்கக்கூடிய இடத்தில் இருந்தபோதும் அதை எண்ணிக் கண்ணீர் சிந்திக் கவிதை மட்டுமே எழுத முடிந்த முதல்வர் நமக்குக் கிடைத்த கொடுமையை நினைக்கும்போது “சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்” என்னும் பாரதியின் வரிதான் மனத்தை ஆக்கிரமித்து நிற்கிறது.   

சனி, ஆகஸ்ட் 06, 2011

எதிர்வினை


பாஸ்கர் சக்தி சினிமா எக்ஸ்பிரஸ் இதழுக்கு அளித்த பேட்டியில் காலச்சுவடு இதழில் நான் எழுதிய விமர்சனம் குறித்து இவ்வாறு கூறியிருந்தார்...


காயப்படுத்திய காலச்சுவடு!

 - எழுத்தாளர் பாஸ்கர் சக்தி


"அழகர்சாமியின் குதிரை' படம் குறித்து காலச்சுவடு காட்டமான விமர்சனத்தை வெளிப்படுத்தியிருந்ததே?

ஒரு படைப்பு பொதுவெளிக்கு வரும்போது அது சகலவிதமான விமர்சனங்களுக்கும் உட்பட்டதுதான். அந்தப் படைப்பை யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். ஆனால், அந்த விமர்சனத்தில் ஒரு அடிப்படை நியாயம் இருக்க வேண்டும்.
இந்தப் படத்திற்கு தொண்ணூறு சதவிகித விமர்சனங்கள் பாராட்டித்தான் வந்தன. மீதி பத்து சதவிகித விமர்சனங்கள் கூட நேர்மையான விமர்சனங்கள்தான். அந்த விமர்சனங்கள் சுட்டிக்காட்டிய குறைகளை நானும் கூட ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், "காலச்சுவடு' இதழின் விமர்சனம் காழ்ப்புணர்ச்சியோடு எழுதப்பட்டிருந்தது. எனக்கு மிகவும் வருத்தத்தைக் கொடுத்த அம்சம் அதுதான்.

அந்த விமர்சனத்தில் வசனங்கள் எல்லாம் சீரியலுக்கு எழுதப்படும் வசனங்கள் போல இருந்தது என்று எழுதியிருந்தார்கள். இது நான் வசனகர்த்தாவாக இருப்பதால் மட்டுமே எழுதப்பட்ட வாக்கியம். வேறு யார் அந்த வசனம் எழுதியிருந்தாலும் இப்படி எழுதியிருக்க மாட்டார்கள் இல்லையா?

அந்த வாக்கியத்தில் பாஸ்கர் சக்தி சீரியலுக்கு வசனம் எழுதுபவர் என்கிற ஒரு முன் தீர்மானம் இருக்கிறது. விமர்சனத்தை எழுதிய அந்த நண்பர் உண்மையிலேயே கவனத்துடன் சீரியல்களைப் பார்த்திருந்தால் அவருக்கு சீரியலுக்கான வசனம் எப்படியிருக்கும் என்பது புரிந்திருக்கும்.
இது தவிர அடிப்படையிலேயே அந்த விமர்சனத்தில் ஒரு கேலியான தொனி இருந்தது. அந்த ஊரின் பெண்களெல்லாம் தெருவில்தான் மாவாட்டுகிறார்கள். குழந்தையை தெருவில்தான் குளிப்பாட்டுகிறார்கள் என்று வரி... கிண்டலாம்!

அய்யா எங்கள் ஊரில் அப்படித்தான்... தெருவில்தான் குழந்தையை குளிப்பாட்டுவார்கள். மாவாட்டுவார்கள்... விமர்சனம் எழுதிய நண்பர் நகரத்திலேயே பிறந்து, வளர்ந்தவராக இருக்கலாம். என்ன செய்ய? அப்புறம் அப்புக்குட்டி எங்கே திரும்பி வந்து அந்தப் பெண்ணை கல்யாணம் செய்துகொள்வானோ என்று பயந்தேன் என்றெல்லாம் எழுதுகிறார்கள்.
ஒரு தனிப்பட்ட மனிதனின் விமர்சனம் எப்படி பொது விமர்சனமாக இருக்க முடியும்? அந்த ஒரு விமர்சனம் மட்டும்தான் என்னை காயப்படுத்தியது. ஒரு விமர்சனத்தில் குறைந்தபட்ச நேர்மை என்பது இருக்க வேண்டும். அப்படியில்லாத "காலச்சுவடு' விமர்சனத்திற்கு மதிப்போ, மரியாதையோ தர தேவையில்லை என்றே கருதுகிறேன்.
-நன்றி சினிமா எக்ஸ்பிரஸ்

வியாழன், ஆகஸ்ட் 04, 2011

மாயமான்



நள்ளிரவின் விபரீதக் கனவால்
உறக்கம் தொலைய
அநிச்சையாய்க் 
கை
துழாவி எடுத்தது அலைபேசியை
படிக்கப்படாத குறுஞ்செய்தி ஒன்று
முகப்பில் ஒளிர்ந்தது
குருட்டுத்தனமாக உன்னை நம்புபவர்களை
குருடர்கள் என ஒருபோதும் நிரூபித்துவிடாதே என்றது
இரவு வணக்கத்திற்கென
பின்னிரவில்
தோழியால் அனுப்பப்பட்ட அச்செய்தி
அவள் குருடியா
நான் நம்புகிறேனா
நான் குருடனா
அவள் நம்புகிறாளா
மனம் வலை பின்னத் தொடங்கியது
துயில் தடைபட்டது.   

திங்கள், ஜூலை 11, 2011

சிருங்காரச் சிலைகள்

டாக்டர் ராஜா சர் அண்ணாமலை செட்டியார் 


 சென்னை தமிழிசைச் சங்கம் இருக்கும் ராஜா அண்ணாமலை மன்றத்தின் முன்னே ஆஜானுபாகுவாக நின்ற நிலையில் நிறுவப்பட்டிருக்கும் சிலை அண்ணாமலை செட்டியாருடையது. 1964 ஆம் ஆண்டு நவம்பர் 16 அன்று மைசூர் மகாராஜா திறந்துவைத்த சிலை இது. நிகழ்ச்சிக்கு அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சர் சி. பி. ராமசாமி அய்யர் தலைமை வகித்தார். தமிழிசைச் சங்கத்தை 1943இல் நிறுவி அதன் தலைவராகவும் இருந்த அண்ணாமலை செட்டியார் 1881 செப்டம்பர் 30 அன்று சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தானில் பிறந்தார். இவர் உருவாக்கியதே அண்ணாமலை பல்கலைக்கழகம். சென்னை மாநகராட்சி தலைவராகவும் இருந்துள்ளார். இவரைக் கௌரவப்படுத்த இந்திய அஞ்சல் துறை தபால்தலை வெளியிட்டுள்ளது. அண்ணாமலைச் செட்டியார் பர்மா, பிரெஞ்சு, இந்தோ சீனா போன்ற நாடுகளில் இருந்த இந்தியர்கள் மேல் அக்கறை கொண்டு அவர்களின் பாதுகாப்புக்கு தொடர்ந்து முயற்சி எடுத்தவர். அதன் காரணமாக 1935இல் இந்தியப் பிரதிநிதியாக லண்டனுக்கும் பாரிஸுக்கும் போய் வந்தார். 1921இல் இம்பீரியல் வங்கியின்(தற்போதைய பாரத ஸ்டேட் வங்கி) தொடக்கத்தில் அதன் கவர்னராக இருந்துள்ளார். இந்தியன் வங்கியை உருவாக்கியதில் முக்கியப் பங்கு இவருக்கு. 1948 ஜூன் 15இல் இவர் காலமானார்.

 ராஜா சர் முத்தையா செட்டியார்



சென்னை ரிப்பன் கட்டடத்தில் இவருக்கு வெங்கலச்சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது. அக்டோபர் 27, 1994 அன்று முதல்வர் ஜெ.ஜெயலலிதா திறந்துவைத்த சிலை இது. சிற்பி கோ.மோகன்தாஸ் உருவாக்கிய சிலை இது. இவர் 1905, ஆகஸ்ட் 5இல் சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தானில் பிறந்தார். 1922இல் சென்னை மாநிலக் கல்லூரியில் பட்டம் பெற்றார். பின்னர் குடும்ப வியாபார சம்பந்தமாக பர்மா சென்றார். மெட்ராஸ் மாகாண சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தார். 1929இல் சென்னை மாநகராட்சியின் உறுப்பினரான இவர் 1933- 34இல் சென்னை மேயரானார். பூண்டி நீர்த்தேக்கம் அமைவதற்கு இவரும் உதவினார். இவருடைய முயற்சியால் சென்னை மாநகராட்சியின் சார்பில் குறைந்த சக்தி கொண்ட வானொலி நிலையம் அமைக்கப்பட்டது. தென்னிந்திய வர்த்தக சபையின் உறுப்பினராக இருந்தார். 1941இல் அதன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கல்வி மீது ஆர்வம் என்பது இவரது பரம்பரை வழக்கம்.  மீனாட்சி கல்லூரியை உருவாக்குவதில் தந்தையாருக்கு துணை புரிந்தார். சட்டப்பேரவை உறுப்பினர் நீதிக்கட்சியின் தலைவர் என தொடர்ந்து அரசியலில் ஈடுபட்டபோதும் கல்வி மீது இவருக்கு ஆர்வம் தொடர்ந்திருந்துவந்தது. 1936இல் கல்வி, மக்கள்நலவாழ்வு, சுங்க துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.  அப்போது ஓராண்டு வரை சென்னை பல்கலைக்கழகத்தின் கௌரவ வேந்தராகவும் இருந்தார். 1937 - 39 ஆம் ஆண்டுகளில் ராஜாஜி முதல்வராக இருந்தபோது இவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்துள்ளார். பச்சையப்பா அறக்கட்டளையில் நிர்வாகக் குழுவில் 33 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தார். சென்னை ஐஐடியின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் சென்னை பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராகவும் இருந்தார். 1941இல் சர் பட்டம் பெற்றார். 1948இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கௌரவ வேந்தரானார். தமிழ் மொழி, தமிழிசை, தமிழ் இலக்கியம், தமிழ்க் கலாச்சாரம் போன்றவற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். 1973இல் இந்திய அரசு இவருக்கு பத்ம பூஷன் பட்டமளித்தது. 1979இல் தமிழக அரசிடமிருந்து தமிழிசைக் காவலர் என்னும்  பட்டம் பெற்றிருந்தார். 1984 மே 12இல் இவர் காலமானார். இந்திய அரசாங்கம் 1987 டிசம்பர் 21இல் இவரது நினைவாக தபால் தலை வெளியிட்டு சிறப்பித்தது.


பெ.தெ.லீ. செங்கல்வராய நாயக்கர்



சென்னை ராஜாஜி சாலையில் மெட்ரோபாலிடன் மேஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தின் அருகே செங்கல்வராய நாயக்கர் சிலை உள்ளது. மார்பளவுக்கான இந்த வெங்கல சிலையை பிப்ரவரி 23, 2006 அன்று நீதியரசர் கே எம் நடராஜன் திறந்துவைத்தார். செங்கல்வராய நாயக்கர் 1886இல் ஆரம்பித்த டிரஸ்ட் பல கல்வி சேவைகளைப்  புரிந்துவருகிறது. 1829இல் பிறந்த இவர் 1874இல் காலமானார். இவர் தன் சொத்துக்களை அறக்கட்டளையாக்கி வன்னிய மக்களின் கல்விக்காக என உயில் எழுதி வைத்துள்ளார். இந்த அறக்கட்டளை 1886இல் ஏற்படுத்தப்பட்டது. 


சமநீதிகண்டசோழன்



மெட்ராஸ் உயர் நீதிமன்ற வளாகத்தில் மனுநீதி சோழனின் பிரம்மாண்டமான சிலை நிறுவப்பட்டுள்ளது. 1996 இல் மெட்ராஸ் சென்னை எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்ட போதும் உயர் நீதிமன்றம் மெட்ராஸ் உயர் நீதிமன்றம் என்றே அழைக்கப்படுகிறது. இச்சிலையைத் திறந்துவைத்தவர் தமிழக ஆளுநர் பி.சி.அலெக்ஸாண்டர். உயர் நீதிமன்றத்தின் 125ஆவது ஆண்டுவிழாவை நினைவுகூர்வதற்காக இது நிறுவப்பட்டுள்ளது. 

தன் மகனால் இறந்த பசுவின் துயரத்தைக் காணப் பொறாமல் அதே துயரம் தனக்கும் கிடைக்கச்செய்வதே சரியான நீதி என்றெண்ணி தனது மகனை தேர்க்காலில் மாட்டச்செய்து இறக்கச் செய்தான் மனுநீதிச் சோழன். இவனது சிலை நீதிமன்றத்தில் இருப்பது சரியான நீதியை உணர்த்தவே.   

சனி, ஜூன் 11, 2011

சிலைகளின் சரித்திரங்கள்

வ.உ.சிதம்பரம் பிள்ளை
சென்னை துறைமுக பொறுப்புக் கழக மைய வளாகத்தின் முன்னே நிறுவப்பட்டுள்ளது வ.உ.சியின் சிலை. 1968இல் உலக தமிழ் மாநாடு நடைபெற்றபோது காமராஜர் சாலையில் சிலைகள் வைக்கப்பட்டன. அப்போது வைக்கப்பட்ட சிலைதான் இதுவும். 1968, ஜனவரி 2 அன்று அப்போதைய உணவு, வருவாய்த் துறை அமைச்சர் கே.ஏ.மதியழகன் தலைமையில் தமிழ்வேள் பி.டி.ராஜன் திறந்துவைத்தார் இச்சிலையை. 


வ.உ.சி.
வ. உ. சிதம்பரம்பிள்ளை செப்டம்பர் 5, 1872இல் திருநெல்வேலி மாவட்டத்தில் ஒட்டப்பிடாரம் எனும் ஊரில் பிறந்தார்.  சட்டக்கல்வியைத் திருச்சியில் பெற்று 1895இல் வழக்கறிஞரானார். உரிமையியல், குற்றவியல் ஆகிய சட்டத் துறைகளில் சிறந்து விளங்கிப் பொருள் குவித்தார். விவேகபானு என்கிற மாத இதழை நடத்திவந்தார். 

வ.உ.சி கைத்தொழில்சங்கம், தருமசங்கம், நூல்நூற்பு நிறுவனம், தேசியப் பண்டகசாலை ஆகியவற்றை நிறுவி சுதேசியம் வளர்த்தார். பாலகங்காதர திலகரின் விடுதலைப் போராட்டத்தில் மனத்தைப் பறிகொடுத்து, இந்திய சுதந்திரப் போராட்டத்திகாகப் பாடுபட்டார். ஆங்கிலேய  கப்பல் கம்பெனிக்குப் போட்டியாக, 1906ஆம் ஆண்டு சுதேசி நாவாய்ச் சங்கம்என்கிற சங்கத்தை நிறுவி அதன் செயலாளர் ஆனார். அதன் தலைவர் மதுரை தமிழ்ச்சங்கத் தலைவர், வள்ளல் பாண்டித்துரைதேவர்; சட்ட ஆலோசகர் சேலம் சி.விஜயராகவாச்சாரியார். அந்தக் கம்பெனியின் சார்பில் காலியா, லாவோ ஆகிய இரண்டு கப்பல்களை வாங்கி தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து இயக்கத் தொடங்கினார்.

தொடர்ந்த இவருடைய சுதந்தரப் போராட்ட நடவடிக்கைகளால் எரிச்சலடைந்திருந்த ஆங்கிலேய அரசு, 1908ஆம் ஆண்டு மார்ச் 9 அன்று விபின் சந்திரபாலர் விடுதலைக் கொண்டாட்டத்தின் போது அரசாங்கத்தை அவமதித்ததாகவும், சுதந்திரத்திற்காக பொதுமக்களைத் தூண்டியதாகவும் இவர்மேல் வழக்குப் பதிவுசெய்து, அரச நிந்தனைக்கு 20 ஆண்டுகள், சுப்ரமணிய சிவாவுக்கு உடந்தையாக இருந்ததற்கு 20 ஆண்டுகள், மொத்தம் 40 ஆண்டுகள். அதுவும் அந்தமான் சிறையில் என இவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை கொடுத்தது.  தீர்ப்பளித்தவர் திருநெல்வேலி ஜில்லா செஷன்ஸ் நீதிபதி ஏ.எஃப்.ஃபின்ஹே. அந்தத் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. முறையீட்டின் போது அந்தமான் அனுப்ப இயலாது என்பதால் கோவைச் சிறையில் அடைக்கப்பட்டார் வ.உ.சி. அங்கே தான் செக்கிழுக்க வைக்கப்பட்டார். தூத்துக்குடியைத் தலைநகராகக் கொண்டு 1986இல் மாவட்டம் உருவாக்கப்பட்டபோது இவருடைய பெயர் தான் அந்த மாவட்டத்துக்கு வைக்கப்பட்டது. இந்திய அரசும் இவரைக் கௌரவித்து அஞ்சல் தலை வெளியிட்டிருக்கின்றது. நவம்பர் 18, 1936 இல் வ.உ.சி காலமானார்.

இராஜகோபாலாச்சாரியார்
சென்னை பாரிமுனையில் உயர் நீதிமன்ற வளாகத்தையொட்டி நிறுவப்பட்டுள்ளது ராஜாஜியின் முழு உருவச் சிலை. இதை 1978, டிசம்பர் 24 அன்று இந்திய துணை ஜனாதிபதி பி.டி.ஜாட்டி திறந்துவைத்தார். அந்நிகழ்ச்சிக்கு ஆளுநர் பிரபுதாஸ் பி பட்வாரி முன்னிலை வகித்தார்; முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.


மூதறிஞர் ராஜாஜி

ராஜாஜி 10 டிசம்பர், 1878இல் சேலம் மாவட்டத்தில் தொரப்பள்ளி கிராமத்தில் பிறந்தார். இந்திய சுதந்திரப் போராட்ட வீரர். வழக்கறிஞர், எழுத்தாளர், அரசியல்வாதி எனப் பன்முகம் கொண்டவர். இந்திய தேசிய காங்கிரஸில் பெரும் பங்கு வகித்தவர். 1952 வரையில் கேரளம், தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடகம் இணைந்த பகுதிகளைக் கொண்ட மதராஸ் (சென்னை) மாகாணத்தின் முதலமைச்சராகப் பணியாற்றினார். சுதந்திரத்திற்குப் பின்னர் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக பொறுப்பாற்றினார்.

இராஜாஜியின் கல்லூரிக் கல்வி பெங்களூரு சென்ட்ரல் கல்லூரியிலும் சென்னை மாகாணக் கல்லூரியிலும் கழிந்தது. 1900இல் தமது வழக்கறிஞர் தொழிலை நன்கு நடத்தி வந்தார்.பின்னர் அரசியலில் ஈடுபட்டு சேலம் நகராட்சி உறுப்பினராகவும் பின்னர் நகரதந்தையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரசில் சேர்ந்து ரௌலத் சட்டத்திற்கெதிரான இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், வைக்கம் சத்தியாகிரகம் போன்றவற்றில் ஈடுபட்டார். 1930ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் தண்டி யாத்திரையை ஒட்டி வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகம் நடத்திச் சிறை சென்றார். 1937ஆம் ஆண்டு மதராஸ் மாகாணத்தின் முதன்மை மந்திரியாக பொறுப்பேற்று 1940 வரை பதவி வகித்தார். 1946ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இடைக்கால அரசில் தொழில், வழங்கல், கல்வி மற்றும் நிதித் துறை அமைச்சராகப் பணியாற்றினார். 1947 முதல் 1948வரை மேற்கு வங்க ஆளுனராகவும் 1948 முதல் 1950வரை விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகவும் 1951 முதல் 1952 வரை உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். மாநிலங்கள் சீரமைப்பிற்கு முன்பான சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக 1952 முதல் 1954வரை பதவிவகித்தார்.  1967 சட்டமன்ற தேர்தலில் காங்கிரசிற்கு எதிரான அணியை ஒருங்கிணைத்து தமிழக அரசியலில் முதன்முறையாக காங்கிரசல்லாத ஆட்சி மலர துணை நின்றார்.  நாடாளுமன்றத்திலும் சுதந்திராக் கட்சி 45 இடங்களைப் பிடித்து முதன்மை எதிர்கட்சியாக விளங்கியது. கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்த போதும் பெரியார் ஈ. வே. இராமசாமியுடன் தமது கடைசிக் காலம் வரையில் நட்பு பாராட்டியவர்.

ராஜாஜி தமது எழுத்தாற்றலால் ஆங்கில இலக்கியத்திற்கு சிறப்பாக பங்களித்துள்ளார். தமிழிலும் இராமாயணம் மற்றும் மகாபாரதம் காவியங்களை மொழிபெயர்த்துள்ளார். இவர் கல்கி, இரசிகமணி டி.கே.சியுடன் இணைந்து குற்றாலத்தில் இலக்கிய ஆய்வுகள் நடத்தினார். புகழ்பெற்ற கர்நாடக இசைப்பாடலான குறை ஒன்றும் இல்லை, மறை மூர்த்தி கண்ணாஇவர் இயற்றிய பாடலே. 1954ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய குடிமையியல் விருதான பாரத ரத்னா விருது பெற்றார். 1972, டிசம்பர் 25அன்று தமது 94ஆவது வயதில் காலமானார் இவர்.

உ. வே. சாமிநாதய்யர்

சென்னை மாநிலக் கல்லூரியில் உ.வே.சாமிநாதய்யரின் சிலைநிறுவப்பட்டுள்ளது.     உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் சாமிநாதையர் சுருக்கமாக உ.வே.சா பிப்ரவரி 19, 1855 அன்று கும்பகோணமருகே உத்தமதானபுரத்தில் பிறந்தார். இவரது தந்தையாரான வேங்கட சுப்பையர் ஒர் இசைக் கலைஞர். உ.வே.சா தனது தொடக்கத் தமிழ்க் கல்வியையும், இசையையும் சொந்த ஊரில் உள்ள ஆசிரியர்களிடத்தே கற்றார். பின்னர் அவர் 17 வது வயதில் தஞ்சாவூர் திருவாவடுதுறை சைவ ஆதினத்தில் தமிழ் படிப்பித்துக்கொண்டிருந்த புகழ் பெற்ற தமிழறிஞர் மகாவித்துவான் என அழைக்கப்பட்ட திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் தமிழை 5 ஆண்டுகளாக பயின்று தமிழறிஞர் ஆனார். தொடக்கத்தில் கும்பகோணத்திலிருந்த கல்லூரி ஒன்றில் ஆசிரியராகப் பணியில் இருந்த சாமிநாதையர் பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியிலும் ஆசிரியராக இருந்தார். பலரும் மறந்து அழிந்துபோகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டு பதிப்பித்தவர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழுக்குத் தொண்டாற்றியவர்களுள் உ. வே. சா குறிப்பிடத்தக்கவர். தமது அச்சுப்பதிப்பிக்கும் பணியால் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும் செழுமையையும் அறியச் செய்தார். உ.வே.சா 90 க்கும் கூடுதலான புத்தகங்களை அச்சுப்பதிப்பதித்தது மாத்திரமன்றி 3000 க்கும் கூடுதலான ஏட்டுச்சுவடிகள், கையெழுத்தேடுகளைச் சேகரித்தும் இருந்தார்.


உ.வே.சாமிநாதய்யார்
இராமசாமி முதலியார் என்பவரே  பின்னை நாட்களில் உ.வே.சா ஏட்டுசுவடிகளில் இருந்த தமிழ் இலக்கியங்களை அச்சேற்றும் பணியே மேற்கொள்ள கால்கோலியவர். இவரால் உ.வே.சாவுக்கு கையளிக்கப்பட்ட சீவக சிந்தாமணி எனும் சமண இலக்கியத்தின் செழுமை அக்காலகட்டத்தில் சமயக்காழ்ப்பினால் புறக்கணிக்கப்பட்டிருந்த சமண இலக்கியங்களை பற்றி அறியும் ஆவலையும் அதை அழிய விடாது அச்சேற்ற வேண்டும் எனும் எண்ணத்தையும் அவருள் தூண்டியது. பலவிதமான சமண இலக்கியங்களைத் தேடி சேகரித்தார். 1887இல் சீவக சிந்தாமணியை பதிப்பித்து வெளியிட்டார். அடுத்து பத்துப்பாட்டு வெளிவந்தது. இவ்வாறு தொடக்கம் பெற்ற உ.வே.சாவின் தமிழ் இலக்கியங்களின் மூலச் சுவடிகளை தேடி சேமித்து, பகுத்து, பாடபேதம் கண்டு, தொகுத்து வழுநீக்கி அச்சிலேற்றும் பணியானது அவர் 84 வயதில் காலமாகும் வரை தொடர்ந்தது. இதற்காக அவர் பல ஊர்களில் ஏட்டுச் சுவடிகளை தேடியலைந்து கிடைத்தவற்றை அச்சேற்றினார்.


உ. வே. சா தமிழுக்கும் இலக்கியத்துக்கும் ஆற்றிய பங்களிப்பினை பாராட்டி மார்ச் 21, 1932 அன்று சென்னைப் பல்கலைக்கழகம் சிறப்பு முனைவர் பட்டம் அளித்தது. இது தவிர மகாமகோபாத்தியாய மற்றும் தக்க்ஷிண கலாநிதி எனும் பட்டமும் பெற்றுள்ளார். இந்திய அரசு பிப்ரவரி 18, 2006இல் இவரது நினைவு அஞ்சல் முத்திரை வெளியிட்டுள்ளது. உ.வே.சாமிநாதையர் தனது வரலாற்றை என் சரித்திரம் எனும் தலைப்பில் ஆனந்த விகடன் வார இதழில் 1940 முதல் 1942 வரை தொடராக எழுதி வந்தார். இது 1950ல் தனிப் புத்தக வடிவம் பெற்றது. ஏப்ரல் 28, 1948அன்று காலமானார் உ.வே.சா.

சனி, ஜூன் 04, 2011

அழகர்சாமியின் குதிரை


பிரச்சாரப் பொதி சுமக்கும் மரக்குதிரை 



கிராமியக் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவான திரைப்படமான அழகர்சாமியின் குதிரைக்கு இசையமைக்க ஹங்கேரி இசைக் குழுவைச் சார்ந்த ஐவர் இளைய ராஜாவால் அழைத்துவரப்பட்டிருந்தனர் என்னும் தகவல் இப் படத்தின் மீது சிறு ஈர்ப்பை உருவாக்க, உலகத் திரைப்பட விழாக்கள் பலவற்றில் திரையிடப்படுவதற்காக இப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது அதை அதிகப்படுத்த ‘இந்தப் படத்தின் இசையைக் கேட்டு ஒரு சொட்டுக் கண்ணீர் வடிக்காவிட்டால் நான் இசையமைப்பதையே நிறுத்திவிடுகிறேன்’ என்ற இளையராஜாவின் அதிரடி அறிவிப்போ குதிரை இதுவரை நாம் அனுபவித்தறியாத, பயணப்பட்டிராத ஏதோ ஒரு புதிய உலகிற்கு நம்மை அழைத்துச்செல்லக்கூடும் எனும் நம்பிக்கையை ஏற்படுத்தியதால் மிகுந்த ஆர்வத்தோடு கவனத்தை எல்லாம் ஒருமுகப்படுத்தி அந்தப் பரவச அனுபவத்திற்காகக் காத்திருக்க நேர்ந்தது.  

மூன்றாண்டுகளாக அழகர் கோவில் திருவிழா நடைபெறாத காரணத்தால் மழை தண்ணீரின்றிப் பஞ்சத்தால் மல்லையாபுரம் ஊர் வாட, பிழைக்க வழியற்ற மக்கள் குழந்தைகளைத் திருப்பூர் பனியன் கம்பனிக்கு வேலைக்கனுப்பும் வறட்சியான சூழலைப் பிரதிபலிப்பதாகப் படம் தொடங்குகிறது. திருவிழா நடத்தினால்தான் ஊருக்கு விமோசனம் என்று கோடாங்கி குறி சொன்னதால் விழா எடுக்கும் உறுதியோடு வரி வசூலித்து வரும் தருணத்தில் அழகரைச் சுமந்து செல்லும் வாகனமான மரக்குதிரை காணாமல்போகிறது. தங்களது திருவிழாக் கனவின் முக்கியக் கண்ணி அறுபட்டதை உணர்ந்த கிராம மக்கள் குதிரையைக் கண்டு பிடிக்கப் போராடுகின்றனர். காவல் நிலையத்தில் புகார் அளிப்பதோடு மலையாள மந்திரவாதியை அழைத்து வெற்றிலையில் மை போட்டுப் பார்க்கின்றனர். மரக்குதிரைக்குப் பதில் நிஜக் குதிரை ஒன்று கிடைக்கிறது. மற்ற படங்களில் இருந்து இது மாறுபட்டதோ என்னும் எண்ணத்தை ஏற்படுத்தும் திருப்பம் இது.

அழகரின் திருவிழாவிற்கு அழகரே தந்த பரிசது என்ற மாந்திரீகவாதியின் பொய்வாக்கை உண்மையாக நம்பிய மக்கள் அதை அழைத்துவந்து திருவிழா கொண்டாட்டத்தில் மீண்டும் ஈடுபடுகிறார்கள். குதிரை வந்துசேர்ந்த நேரம் ஊரில் நல்ல நிகழ்வுகள் பல நடந்தேறுகின்றன. இந்தச் சமயத்தில் காணாமல்போன குதிரையைத் தேடி வந்துவிடுகிறான் அதன் சொந்தக்காரன். மீண்டும் திருவிழா தடைபட்டுவிடுமோவெனும் பயத்தில் குதிரையை அவனிடம் ஒப்படைக்க மறுக்கும் ஊர்க்காரர்களுக்கும் குதிரை இல்லாவிடின் தனக்கு நடைபெற இருக்கும் திருமணம் கேள்விக்குறியாகிவிடும் என்பதால் எப்பாடுபட்டாவது குதிரையைக் கொண்டுபோய்விட வேண்டுமென்பதில் குறியாய் இருக்கும் உரிமையாளனுக்கும் இடையில் நாட்டாமை செய்யும் உள்ளூர் போலீஸார் திருவிழா முடியும்வரை அவனை அந்தக் கிராமத்தில் தங்கியிருக்கும்படியும் அதன் பின்னர் அவன் குதிரையை அழைத்துக்கொண்டு கிளம்பலாம் என்றும் கூற அதற்குச் சம்மதித்தவன் அங்கேயே தங்குகிறான். இறுதியில் குதிரை அவனுக்குக் கிடைத்ததா அவனது திருமணம் நடந்ததா போன்ற கேள்விகளுக்கு விடையாய் விரியும் திரைக்கதையினூடே உயர்சாதி பையனுக்கும் தாழ்ந்த சாதி பெண்ணுக்குமான பிரச்சாரக் காதல் ஒன்றும் ஊடுசரடாகப் புரள்கிறது. 


சற்று வித்தியாசமான கதை மாறுபட்ட பாதையில் பயணிக்கும் என்னும் பார்வையாளனின் எதிர் பார்ப்பு படம் தொடங்கிய பத்திருபது நிமிடத்திற்குள் நீர்த்துப் போய்விடுகிறது. சாதி, கடவுள் மறுப்புக் குறித்த பிரச்சார நெடியடிக்கும் காட்சிகளும் கோனார் தமிழ் உரை போன்று விளக்கங்களை அள்ளித் தெளித்து தொடர்ந்து முன்னேறும் வளவளா வசனங்களும் படத்தோடு பார்வையாளனை ஒன்றவிடாமல் பார்த்துக்கொள்கின்றன. நகைச்சுவை என்னும் பெயரில் மேற்கொள்ளப்படும் அரைவேக்காட்டுத் தனங்கள் வேறு பாடாய்ப்படுத்துகின்றன.

1982ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில் நடைபெறும் கதை என்பதால் அந்தக் காலகட்டத்தைத் திரையில் காட்சியாகக் கொண்டு வருவதற்காக அப்போதைய காசு பணம் முதற்கொண்டு அவ்வாண்டில் அறிமுகமான சத்துணவுத் திட்டம் வரையிலும் காட்சிப்படுத்தியதோடு ஓரிரு காட்சியின் பின்னணியில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனத்தின் தமிழ்ச்சேவையை ஒலிக்கவிட்டிருக்கின்றனர். புரோட்டாக் கடையில் மதிநுட்ப மிக்க சிறுவன் பிரபு சாப்பிடும் காட்சியின் பின்னணியில் ஒலிக்கும் திசை மாறிய பறவைகள் படத்தில் இடம்பெற்ற ‘கிழக்குப் பறவை மேற்கில் பறக்குது அது கிழக்கு வானை மறைக்கப்பார்க்குது’ பாடல் அச்சசல் தமிழ்ச்சேவை பாடல். 

சவ்வு மிட்டாயைக் கையில் வாட்ச் போல் கட்டுவது, வை ராஜாவை சூதாட்டம், டைனமோவில் மஞ்சள் துணியும் இரு சக்கரங்களின் நடுவிலும் கலர் பூவும் சுற்றிய சைக்கிள், பேப்பர் விசிறி, வில்வண்டி, தந்தை தைத்துத் தரும் தொளதொளா சட்டை போன்ற எண்பதுகளை நினைவூட்டும் பொருள்களாலும் சம்பவங்களாலும் காட்சிகளைப் பூசி மெழுகியுள்ளனர். இத்தகைய மெனக்கெடல்கள் படத்திற்கு விழுதுகளாயிருக்கின்றன. ஆனால் உயிரோட்டமான காட்சியமைப்புகளும் ஜீவன்மிக்க வசனங்களும் தாம் படத்தின் இயல்பான பயணத்தில் பார்வையாளர்களை அரவணைத்து உடன் அழைத்துச் செல்லும். தட்டையான காட்சியமைப்புகளும் தொலைக்காட்சித் தொடருக்கென எழுதியது போன்ற வசனங்களும் பார்வையாளனைப் படத்தின் அருகில்கூட வரவிடாமல் துரத்துகின்றன. 


காணாமல்போன தனது குதிரையைக் கண்ட ஆனந்தத்தில் சைக்கிளை அப்படியே விட்டுவிட்டு ஓடிவரும் அழகர்சாமியின் மனநிலையைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் காவல்நிலைய வாசலிலும் சைக்கிளை நிறுத்த முயலாமல் அப்படியே போட்டுவிட்டு ஓடும் பதற்றத்திற்கான காரணம் பிடிபடவில்லை, அதைவிடக் கொடுமை கிராமத்தானுக்குக் கைதிக்கும் போலீஸுக்கும் இடையே இருக்கும் வித்தியாசம் தெரியாதா என்ன, நேரடியாகச் சென்று கைதியிடமா முறையிடுவான்? எண்பதுகளில் இவ்வளவு அப்பாவியான மனிதர்கள் இருந்தார்களா என்ன? தான் தொலைத்த குதிரையைக் கண்டுபிடித்து அதைக் குழந்தையைப் போல் கொஞ்சி முடித்து அதை அவிழ்த்துப்போக முற்படும் சமயத்தில் ஊரார் ஒன்றுதிரண்டு அழகர்சாமியை மொத்து மொத்தென்று மொத்தும்போது நமது இதயம் படபடக்கவில்லையே, சிறு வேதனைகூட வரவில்லையே? எந்த ஒரு காட்சியிலும் கதாபாத்திரங்களின் உணர்வு பார்வையாளனுக்குள் கடத்தப்படவே இல்லை. இசையும் காட்சிகளும் வெவ்வேறு அடுக்கிலிருக்க இரண்டுக்கும் நடுவில் உள்ளீடாக நிரம்பியுள்ள வெற்றிடத்தை எதைக்கொண்டு நிரப்புவது? 

திருடன் ஒருவனை அடித்துத் துவைத்த ஊர் மக்கள் அவனைக் கட்டிப்போட்டுவைத்திருக்க, அவனருகிலே கொஞ்சம்கூட இரக்கமற்றுக் காவலர்கள் இருவரும் பெருந்தீனி தின்க, அதைக் கண்ட அழகர்சாமி திருடன்மேல் பரிதாபப்பட்டு ‘அண்ணன் பசிக்குதாண்ணன்’ எனக்கேட்டு அவனுக்கென அந்த அக்காவிடம் சோறு வாங்கிக் கொண்டு வருவதில் வெளிப்படும் மனிதநேய உணர்வை ஓரளவு உள்வாங்கிக்கொள்ள முடிகிறது, ஆனால் அந்தத் திருடனை அன்புப் பிரவாகத்தோடு ‘திருடண்ணன்’ என அவன் விளிக்கும்போது வசன கர்த்தாவின் கைவிரல்களை மானசீகமாக முத்தமிட்டு அடங்குகின்றன இதழ்கள், என்னவொரு பரிவு! இறுதியாகக் குதிரையை பிடித்துக் கொண்டு அழகர்சாமியை ராமகிருஷ்ணன் கிளம்பச் சொல்லும் சமயத்தில் அதை மறுத்துத் திருவிழா முடியும்வரை தான் போகப் போவதில்லை, இந்தத் திருவிழாவை நம்பி எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை எடுத்துரைத்து ஊர் மக்களின் சந்தோஷத்திற்காகத் தன் வாழ்க்கை பற்றிய கவலை இன்றி முடிவெடுக்கும் அழகர்சாமியிடமிருந்து பொங்கிப் பாயும் நல்லுணர்வு திரையை நனைத்துவிடுமோ என்னும் அளவுக்கு அச்சத்தை உருவாக்குகிறது. எண்பதுகளில் மனிதர்கள் எவ்வளவு உயர்வான குணநலன்கள் கைவரப்பெற்றிருந்தவர்களாக இருந்திருக்கின்றனர் என்பதை உணரும் தருணத்தில் கண்கள் தாமாகக் கண்ணீர் உகுக்கின்றன.  

அழகர்சாமியின் குதிரைக்குத் தான் எத்துணை அறிவு? தன் எஜமானனை அடிக்கும்போது துன்பமிகுதியால் கணைக்கிறது, ஊரைவிட்டு யாருக்கும் தெரியாமல் சென்றுவிடலாம் என அழகர்சாமி அழைக்கும்போது நல்லுணர்வின் காரணமாக மறுத்துவிடுகிறது, கடைசியில் எஜமானனைக் காப்பாற்றுவதற்காகத் தீமை புரிந்தவர்களை வதம்செய்து நன்மையை நிலைநாட்டி எல்லாம் உணர்ந்த ஞானிபோல் அமைதியாக மண்டபத்தில் வந்து அமர்ந்துவிடுகிறது. அழகர்சாமிக்கும் குதிரைக்கும் இடையிலான ஆத்மார்த்த உறவுக்கான காட்சிகள் சரியாக வளர்த்தெடுக்கப்படாமல் மேம்போக்கானவையாகச் சுருங்கிவிட்டன.  எனவே தேவர், ராம நாராயணன் போன்றோரது திரைப் படங்களை மட்டுமே நினைவூட்டிச் செல்கிறது இந்த மாற்றுப்படக் குதிரை. 

தேனிக்கருகில் இருக்கும் இந்த மல்லையாபுரத்துப் பெண்கள் கடின உழைப்பாளிகளாகவே இருக்க வேண்டும். பெரும்பாலான காட்சிகளில் பெண்கள் வீதிகளில் துணி துவைத்துக்கொண்டோ பாத்திரம் கழுவிக்கொண்டோ இருக்கிறார்கள். திருவிழா சமயத்து இரவில் மாவு இடிப்பதும் இட்லிக்கு மாவாட்டுவதும்கூடத் தெருவில்வைத்துத்தான். அந்த மைனருக்குப் பெண்களை மடக்குவதைத் தவிர வேறு வேலையே இல்லை போல. ஆனாலும் படத்தில் எந்தப் பெண்ணையும் அவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தவில்லை. பெண்கள் அனைவரும் அவரின் கண்ணசைவுக்கு மயங்கி விருப்பத்தோடு தங்களை மைனரோடு இணைத்துக்கொள்ளும்போது அழகர்சாமியின் குதிரை மைனரை மட்டும் தாக்குவது அதிலும் தவறுக்கு முக்கியக் காரணமாக இருந்த ஆதார சுருதியின் வேரறுத்தது ஓரவஞ்சனையில்லையா?

பெண் பார்க்க வந்த அன்று அழகர்சாமி, குதிரையிடம் இவ்வளவு அழகானவள் தனக்கு மனைவியாக வர வேண்டாம், தன்னைப் போல் தானே அந்தப் பெண்ணுக்கும் வரக்கூடிய கணவன் குறித்தான கற்பனை இருக்கும், தன்னால் அது தகர்ந்து போய்விடக் கூடாது என்று கூறுவதைக் கேட்ட மாத்திரத்தில் அவனை முழுமனத்தோடு ஏற்றுக் கொள்ளத் தயாராகிவிட்டாளே அந்தப் பெண் ராணி! சாத்தியம் தானா அது என்னும் சந்தேகம் எழுவதைத் தடுக்க முடியவில்லை. அதன் பின்பு ஒருமுறை அவளைத் தொட்டுப்பார்க்க அனுமதி கேட்டு தொட்டதால் உற்சாகம் கொள்கிறான் அவன். இந்த வெகுளித் தனத்தில் தன் மனத்தைப் பறி கொடுத்திருப்பாளோ என்னவோ! குதிரை காணாமல்போய் விட்டதைக் கூற வந்திருக்கும் அழகர்சாமிக்கு ஆறுதல் தருவதோடு அவன் பூ வைத்த தினத்திலிருந்து அவனையே புருஷனாக எண்ணி வாழ்ந்துவருவதாகவும் குதிரையுடன் வராவிட்டால் செத்துவிடுவதாகவும் சொல்லும் காட்சியின் - குதிரை திரும்பக் கிடைத்தால் அழகர்சாமியை இந்தப் பெண் மணமுடிக்க வேண்டியதிருக்குமேவெனும் பயம் பார்வையாளனைப் பதைபதைக்க வைக்கிறது - முடிவில் கேமரா கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து உச்சிக் கோணத்தில் வந்து நிற்கிறதே. இந்த இடத்தில் உயர்ந்து நிற்பது பெண்மையின் பெருமையா திரைப்படத்தின் தரமா என்பதைக் கணிக்க இயலாமல் தடுமாறிப் போய் விடுவான் பார்வையாளன். கிராமத் தலைவரின் மகனும் கோடாங்கியின் மகளும் ஊரைவிட்டு ஓடிப்போய் திருமணம் செய்துகொண்ட தகவலைக் கேட்ட மாத்திரத்தில் இனி இந்த ஊரில் மழையே பெய்யாது என அவர் அளிக்கும் சாபத்திற்காகவே காத்திருந்ததுபோல் கொட்டித் தீர்த்துவிடுகிறதே அந்த முற்போக்கு மழை. உணர்வுக்கும் எதிர்வினைக்குமான கால அவகாசமே தரப்படாததால் செயற்கையானதாக மாறிவிடுகிறது அந்த மழை.


நல்லவன் வாழ்வான் தீயவன் அழிவான் என்று காலகாலமாய்ச் சொல்லப்படும் அதே கருத்தை உணர்த்துவதில் என்ன புதுமையைக் காண முடிகிறது என்பதே புரியவில்லை. அசலான கிராமம் என்னும் பெயரில் எதார்த்தத்தோடு எந்தவகையிலும் ஒட்டாத கதா பாத்திரங்கள் குறுக்கும் நெடுக்கும் வந்துபோகும் செயற்கையான கிராமம் தமிழ் சினிமாவின் அடிப்படைக் குணத்தில் எந்த மாற்றமுமின்றி வந்து செல்கிறது. தொடர்ந்து தமிழ்த் திரைப்படம் பார்க்கும் யாராலும் எளிதாகச் சொல்லிவிட முடியும் அந்தக் குதிரையின் சொந்தக்காரனது பெயர் கண்டிப்பாக அழகர்சாமியாகத்தான் இருக்கும் என்பதை. அவனுக்கு வேறு ஒரு பெயரை வைக்கக்கூடத் துணியாமல் தமிழ் சினிமாவின் எந்தச் சூத்திரத்தையும் கொஞ்சம்கூட மாற்றாமல் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தை மாற்றுப்பட வரிசையில் வைத்துப் பார்க்க முயலும்போதுதான் இதன் அசல் தன்மை குறித்து ஆராய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. 1977இல் வெளியான 16 வயதினிலே, 1978இல் வெளியான முள்ளும் மலரும், 1979இல் வெளியான உதிரிப்பூக்கள் போன்ற படங்களில் கண்டுணர்ந்த அசல் கிராமத்தையும் மனிதர்களையும் அவர்தம் உணர்வுகளையும் 2011இல் வெளியாகியுள்ள 82இல் நடைபெற்ற சம்பவங்களை உள்ளடக்கிய இந்த அழகர்சாமியின் குதிரையில் தரிசிக்க முடியாததன் ஏக்கம் படிப்படியாக வளர்ந்து இறுதியில் திரையரங்கைவிட்டு வெளியில் வருகையில் இந்தப் படத்தின் மீதான எதிர்மறை உணர்வைக் கொண்டுவந்து சேர்க்கிறது.   

ஒப்பனையற்ற, ரத்தமும் சதையுமான அசல் மனிதர்களைக் காட்டி விட்டாலே அது தமிழ் வாழ்வு, தமிழர் கலாச்சாரம் என்ற கண்மூடித்தனமான நம்பிக்கையில் நல்ல படம் போன்ற பாசாங்கைக் கொண்டிருக்கும் படங்களையும் மாற்றுத் திரைப்பட வரிசையில் வைக்கத் துணிவதென்பது தமிழ்த் திரைப்படம் குறித்த நமது குறை மதிப்பீட்டைக் காட்டுவதாக அமைந்துவிடும். அத்தகைய ஒரு முடிவு ஒருபோதும் திரைப்படங்களுக்கோ இயக்குநர்களுக்கோ வலுச் சேர்ப்பதாக அமையாது. அங்காடித் தெரு, நந்தலாலா போன்ற பாசாங்குப் படங்கள் வரிசையில் ஒன்றாகத் தன்னையும் இணைத்துக்கொண்டுவிட்டது இந்த அழகர்சாமியின் குதிரை. 

(காலச்சுவடு ஜூன் 2011 இதழில் http://kalachuvadu.com/issue-138/page73.asp பிரசுரமாகியுள்ள விமர்சனம் இது.)   

லேட்டஸ்ட்

ரஜினியாவாரா விஜய்?

தொடர்பவர்