பாஸ்கர் சக்தி சினிமா எக்ஸ்பிரஸ் இதழுக்கு அளித்த பேட்டியில் காலச்சுவடு இதழில் நான் எழுதிய விமர்சனம் குறித்து இவ்வாறு கூறியிருந்தார்...
காயப்படுத்திய காலச்சுவடு!
- எழுத்தாளர் பாஸ்கர் சக்தி
"அழகர்சாமியின் குதிரை' படம் குறித்து காலச்சுவடு காட்டமான விமர்சனத்தை வெளிப்படுத்தியிருந்ததே?
ஒரு படைப்பு பொதுவெளிக்கு வரும்போது அது சகலவிதமான விமர்சனங்களுக்கும் உட்பட்டதுதான். அந்தப் படைப்பை யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். ஆனால், அந்த விமர்சனத்தில் ஒரு அடிப்படை நியாயம் இருக்க வேண்டும்.
இந்தப் படத்திற்கு தொண்ணூறு சதவிகித விமர்சனங்கள் பாராட்டித்தான் வந்தன. மீதி பத்து சதவிகித விமர்சனங்கள் கூட நேர்மையான விமர்சனங்கள்தான். அந்த விமர்சனங்கள் சுட்டிக்காட்டிய குறைகளை நானும் கூட ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், "காலச்சுவடு' இதழின் விமர்சனம் காழ்ப்புணர்ச்சியோடு எழுதப்பட்டிருந்தது. எனக்கு மிகவும் வருத்தத்தைக் கொடுத்த அம்சம் அதுதான்.
அந்த விமர்சனத்தில் வசனங்கள் எல்லாம் சீரியலுக்கு எழுதப்படும் வசனங்கள் போல இருந்தது என்று எழுதியிருந்தார்கள். இது நான் வசனகர்த்தாவாக இருப்பதால் மட்டுமே எழுதப்பட்ட வாக்கியம். வேறு யார் அந்த வசனம் எழுதியிருந்தாலும் இப்படி எழுதியிருக்க மாட்டார்கள் இல்லையா?
அந்த வாக்கியத்தில் பாஸ்கர் சக்தி சீரியலுக்கு வசனம் எழுதுபவர் என்கிற ஒரு முன் தீர்மானம் இருக்கிறது. விமர்சனத்தை எழுதிய அந்த நண்பர் உண்மையிலேயே கவனத்துடன் சீரியல்களைப் பார்த்திருந்தால் அவருக்கு சீரியலுக்கான வசனம் எப்படியிருக்கும் என்பது புரிந்திருக்கும்.
இது தவிர அடிப்படையிலேயே அந்த விமர்சனத்தில் ஒரு கேலியான தொனி இருந்தது. அந்த ஊரின் பெண்களெல்லாம் தெருவில்தான் மாவாட்டுகிறார்கள். குழந்தையை தெருவில்தான் குளிப்பாட்டுகிறார்கள் என்று வரி... கிண்டலாம்!
அய்யா எங்கள் ஊரில் அப்படித்தான்... தெருவில்தான் குழந்தையை குளிப்பாட்டுவார்கள். மாவாட்டுவார்கள்... விமர்சனம் எழுதிய நண்பர் நகரத்திலேயே பிறந்து, வளர்ந்தவராக இருக்கலாம். என்ன செய்ய? அப்புறம் அப்புக்குட்டி எங்கே திரும்பி வந்து அந்தப் பெண்ணை கல்யாணம் செய்துகொள்வானோ என்று பயந்தேன் என்றெல்லாம் எழுதுகிறார்கள்.
ஒரு தனிப்பட்ட மனிதனின் விமர்சனம் எப்படி பொது விமர்சனமாக இருக்க முடியும்? அந்த ஒரு விமர்சனம் மட்டும்தான் என்னை காயப்படுத்தியது. ஒரு விமர்சனத்தில் குறைந்தபட்ச நேர்மை என்பது இருக்க வேண்டும். அப்படியில்லாத "காலச்சுவடு' விமர்சனத்திற்கு மதிப்போ, மரியாதையோ தர தேவையில்லை என்றே கருதுகிறேன்.
-நன்றி சினிமா எக்ஸ்பிரஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக