இந்த வலைப்பதிவில் தேடு

திகில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திகில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, டிசம்பர் 13, 2015

திரையரங்கில் பாய்ந்த வெள்ளம்!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கொட்டித் தீர்த்தப் பெரு மழையால் திரண்டுவந்த தண்ணீரால் நிரம்பி வழிந்தது செம்பரம்பாக்கம் ஏரி. முன்னறிவிப்பின்றி திறந்துவிடப்பட்டதாகக் கூறப்படும் அந்த ஏரியின் வெள்ள நீர், அடையாற்றின் கரைகளை மீறி பெருக்கெடுத்துப் பாய்ந்தது. வெள்ளத்தையே கண்டறியாத கரையோர வசிப்பிடங்களை நள்ளிரவில் புகுந்த வெள்ள நீர் ஆக்கிரமிப்பு ராணுவம்போல் முற்றுகையிட்டது. மக்கள் போகுமிடமின்றி வீடுகளில் சிறைப்பட்டனர்.


தண்ணீர், பால், உணவு போன்ற அடிப்படை விஷயங்களுக்கு மக்கள் அல்லல்பட்டார்கள். கூவம் ஆற்றிலும் இதே நிலைதான். சைதாப்பேட்டை மறைமலை அடிகளார் பாலத்தின் மேலே தண்ணீர் ஓடியது. அந்தக் காட்சிகளின் தொகுப்பைத் தொலைக்காட்சிகளில் பார்த்தபோது ஹாலிவுட் படத்தை அது மிஞ்சிவிட்டது. உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் அவற்றைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். சும்மா சொல்லக் கூடாது, நமது தொலைக்காட்சி அலைவரிசைகளும் தங்களது மொத்த வித்தையையும் காட்டி ஒரு திகில் பட எஃபக்டைக் கொடுத்தன. இப்படிப்பட்ட பேரழிவுகளை மையக் கருத்தாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் ஹாலிவுட் படங்கள் சிலவற்றைப் பற்றிப் பார்ப்போம்…

நோவா காத்த உயிர்கள்


நோவா என்னும் அமெரிக்கத் திரைப்படம் 2014-ம் ஆண்டில் வெளியானது. டாரன் அரனொவ்ஸ்கி இயக்கிய இந்தப் படம். உலகம் அதி பயங்கர வெள்ளத்தால் பேரழிவைச் சந்தித்தபோது, இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட நோவா, ஒரு பேழையை (கப்பலை) உருவாக்குகிறார். அதில் விலங்குகள் பறவையினங்களின் ஒரு ஜோடி உயிர்களைக் காப்பாற்றி வைத்து உலகில் உயிர்கள் அழியாமல் பார்த்துக்கொண்டார் என்பது பைபிளில் வரும் கதை. அதையே திரைக்கதையாக்கியிருக்கிறார் அரனொவ்ஸ்கி, பள்ளியில் படித்த காலத்திலேயே அவரைக் கவர்ந்திருக்கிறது இந்த பைபிள் கதை.

13 வயதில் உலகத்தின் அழிவை நோவாவின் கண்களால் பார்த்து, கவிதை ஒன்றை எழுதியிருக்கிறார் அவர். படம் பண்ணும்போது நோவாவின் கதையைத் தவறவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்து அதைப் படமாக எடுத்து வெளியிட்டார் அவர். ரஸ்ஸல் குரோ நோவாவின் வேடத்தை ஏற்று நடித்திருந்தார். சுமார் 125 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் உருவாக்கப்பட்டிருந்த இந்தப் படம் இங்கிலாந்தில் வெளியிடப்பட்டபோது அது வெளியான திரையரங்கில் வெள்ளம் பாய்ந்தது. திரையரங்கின் ஐஸ் மெஷினில் குழாய் உடைப்பு ஏற்பட்டதாகக் காரணம் தெரிவிக்கப்பட்டது.

புயலில் சிக்கிய கப்பல்



‘டிராய்’ படத்தை இயக்கிய வோல்ஃப்கேங் பீட்டர்ஸன் இயக்கி, 2000-ல் வெளியான திரைப்படம் ‘த பெர்ஃபெக்ட் ஸ்ட்ராம். 1991-ம் ஆண்டில் வட அமெரிக்காவில் ஏற்பட்ட கடும் புயலின்போது வட அட்லாண்டிக் கடலில் ஆண்ட்ரியா கெய்ல் என்னும் மீனவப் படகில் மாட்டிக்கொண்ட மீனவர்களைப் பற்றிய கதை இந்தப் படம். பிடித்த மீன்களோடு புயலையும் கடுமையான அலைகளையும் துணிச்சலோடு எதிர்கொண்டு கரைக்குத் திரும்பும் நம்பிக்கையில் அவர்கள் மேற்கொண்ட முயற்சியும் அதனால் ஏற்பட்ட போராட்டமுமே இந்தப் படம்.

இயக்குநர் மிருகங்களை வதைக்கக் கூடாது எனும் கொள்கையில் நம்பிக்கை கொண்டவர் என்பதால், இந்தப் படத்தில் பயன்படுத்தப்பட்ட எந்த மீனும் இயற்கையான மீன் அல்ல. அனைத்துமே செயற்கையாக உருவாக்கப்பட்டவை. ஜார்ஜ் க்ளூனி இந்தப் படத்தில் கேப்டன் பில்லி டைன் என்னும் கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார். ஆண்ட்ரியா கெய்ல் கப்பல் உரிமையாளர்கள் தங்களிடம் உரிமை பெறாமல் தங்கள் பெயரைப் பயன்படுத்தியதாக படத்துக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார்கள்.

சுனாமியில் சிதறிய குடும்பம்


இந்தியப் பெருங்கடலில் 2004-ம் ஆண்டு டிசம்பர் 26 அன்று சுனாமி ஏற்பட்டது. அப்போது தாய்லாந்தின் கடற்கரை நகருக்கு விடுமுறையைக் கழிக்க சென்றிருந்த மரியா பெலான் என்பவரது குடும்பம் சுனாமியில் சிக்கி அவதிப்பட்ட கதையை ‘த இம்பாஸிபிள்’ என்னும் பெயரில் படமாக்கியிருந்தார் இயக்குநர் யுவான் அண்டோனியோ பயோனா. உண்மைச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மரியா இந்தப் படத்தின் படமாக்கல் முழுவதுமே உடனிருந்திருக்கிறார். நடந்த சம்பவத்தை அவர் விவரித்ததன் அடிப்படையிலே படம் காட்சியாக்கப்பட்டிருந்தது. ஆழிப் பேரலை கடற்கரையின் ரிஸார்டைப் புரட்டிப் போட்ட காட்சிகள் அனைத்துமே ஒரு முறைதான் படமாக்கப்பட்டன. அந்த செட்டை அமைக்கச் செலவு அதிகமானதால் மறுபடியும் படமாக்க முடியவில்லை.

பூமியைத் தாக்கும் நட்சத்திரம்


பேர்ல் ஹார்பர், டிரான்ஸ்ஃபார்மர்ஸ் போன்ற பல கலக்கல் ஹாலிவுட் படங்களின் மூலம் நன்கு அறியப்பட்ட மெக்கேல் பே இயக்கிய படம் ‘ஆர்மகெடான்’. பூமியின் மீது சிறிய கோள் ஒன்று மோத உள்ளது என்பது நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையத்துக்குத் தெரிய வருகிறது. அந்தத் தாக்குதலிலிருந்து புவிப் பந்தைக் காப்பாற்ற விண்வெளி வீரர் குழு ஒன்றை நாசா அனுப்புகிறது. இந்தப் பின்னணில் பரபரவென நகரும் படம்தான் இது. சிறந்த நடிப்பு, சிறந்த இயக்கம், நல்ல விமர்சனங்கள், அட்டகாசமான வசூல் என்று எல்லா விதங்களிலும் சாதித்த இந்தப் படங்கள் தவிர ‘டீப் இம்பாக்ட் (1998), ‘எர்த்குவேக் (1974), அவுட்பிரேக் (1995), த ஹேப்பனிங் (2008), 2012 (2009), வோல்கனோ (1997), த டே ஆஃப்டர் டுமாரோ (2004), ஏர்ஃபோர்ட் (1970), டுவிஸ்டர் (1996)… என அநேக படங்கள் பேரழிவுகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கின்றன.

நம்பிக்கை தரும் கதைக்களம்

இயற்கைச் சீற்றங்களால் பேரழிவுக்குள்ளாகும்போது வாழ்க்கை என்றால் என்னவென்று உணர நாம் முற்படுகிறோம். வாழ்க்கை குறித்த விடை தெரியாத எண்ணற்ற கேள்விகளுக்குப் பதில் அறிய நாம் விரும்புகிறோம். அப்படியொரு வாய்ப்பை இயற்கைச் சீற்றங்கள் நமக்கு வழங்குகின்றன. அவற்றால் ஏற்படும் பேரழிவு அதோடு சம்பந்தப்படாதவர்களுக்கும் வாழ்வு குறித்த நம்பிக்கையை அளிக்கிறது. நாம் தப்பிவித்துவிட்டோம் நம்மை இறைவன் காப்பாற்றிவிட்டார் என அவர்கள் நம்புகிறார்கள்.

அதனால்தான் பேரழிவை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் திரைப்படங்களை உலக அளவில் ரசிகர்கள் பார்த்து மகிழ்கிறார்கள். அவையும் பெரிய அளவிலான வெற்றியைப் பெறுகின்றன. அத்தகைய படங்களைப் பார்க்கும்போது, அவற்றின் கதாபாத்திரங்கள் படும் துன்பத்தை ஒப்பிடும்போது, நமது துயரம் அதைவிடப் பெரிதல்ல என்னும் எண்ணத்தையும் பாதுகாப்பே இல்லாத இந்த உலகத்தில் நமக்குச் சிறிதளவாவது பாதுகாப்பு கிடைக்கிறதே என்ற எண்ணத்தையும் அவை தருகின்றன என்கிறார் அமெரிக்க உளவியல் பேராசிரியர் டாக்டர் ஜூலி நோரம்.

டிசம்பர் 11 தி இந்து நாளிதழில் வெளியானது

ஞாயிறு, ஆகஸ்ட் 16, 2015

உறைய வைக்கும் கதையில் கான் கேர்ள் நாயகி!

அமெரிக்கத் திகில் படமான ‘ரிடர்ன் டு சென்டர்’ இங்கிலாந்தில் மே மாதமே வெளியாகிவிட்டது. அமெரிக்காவில் வரும் ஆகஸ்ட் 14 அன்று வெளியாக இருக்கிறது. ஒரு சிறு நகரத்தில் மிராண்டா வெல்ஸ் நர்ஸாகப் பணியாற்றிவருகிறார். இயல்பான வாழ்க்கை நடத்திவரும் அவருக்குத் தோழி ஒருவரின் தூண்டுதல் மூலமாக விநோதமான ஆசை ஒன்று வருகிறது. அறிமுகமற்ற ஒருவருடன் டேட்டிங் போக வேண்டும் என முடிவுசெய்கிறார். கெவின் என்னும் நபரையும் சந்திக்க முடிவுசெய்து டேட்டிங்குக்கு வரச் சொல்கிறார்.

டேட்டிங் நாளன்று மிராண்டா கிளம்பிக்கொண்டிருக்கிறார். அப்போது வெளியே சத்தம் கேட்கிறது. சென்று பார்க்கிறார். ஒரு நபர் நிற்கிறார். அவர் தான் கெவின் என நினைத்து உள்ளே அழைத்து வருகிறார். ஆனால் வந்தவரின் நடவடிக்கைகள் விநோதமாக இருக்கின்றன. அவரைத் தவிர்க்கும் முன்னர் அந்த நபரால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகிறார் மிராண்டா. பின்னர் அந்த நபர் ஓடி ஒளிந்துவிடுகிறார்.

இப்போது வேறொருவர் வருகிறார். அவர்தான் கெவின். மிராண்டா டேட்டிங்குக்கு ஒப்புதல் தந்த நபர் என்பது புரிகிறது. முதலில் வந்த வில்லியம் ஃபின் என்பவரை போலீஸ் கைது செய்து சிறையிலடைக்கிறது. இயல்பான வாழ்க்கைக்குத் திரும்ப மிராண்டா முயல்கிறார். இதனிடையே சிறையில் இருக்கும் வில்லியமுக்கு மிராண்டா கடிதம் எழுதுகிறார். ஒவ்வொரு முறையும் கடிதம் திரும்பி வருகிறது. விடாமல் கடிதத்தைத் தொடர்ந்து அனுப்புகிறார் மிராண்டா. இறுதியில் வில்லியம், மிராண்டா இருவருக்குமிடையே நட்பு உருவாகிறது.

சிறையிலிருந்து வெளியே வரும் வில்லியம் அடிக்கடி மிராண்டாவின் வீட்டுக்கு வருகிறார். இருவருக்குமிடையே விளையாட்டுக் காதல்கூட ஏற்படுகிறது. வீட்டுக்கு வரும் வில்லியமை வீட்டுக்குள் மிராண்டா அனுமதிப்பதில்லை. ஒரு நாள் அனுமதிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அப்போது பார்வையாளர்களை அதிரவைக்கும் சம்பவம் ஒன்று நிகழ்கிறது. அது என்ன என்பதே படத்தின் சுவாரஸ்யமான திருப்பம்.

கான் கேர்ள் படத்தில் அசத்திய ரோஸமண்ட் பைக் மிராண்டாவாக நடித்துள்ளார். ஹல்க், ஹோட்டல் ருவாண்டா போன்ற படங்களால் அறியப்பட்டிருக்கும் நிக் நால்டே மிராண்டாவின் தந்தையாகவும் வில்லியமாக ஷைலோ ஃபெர்னாண்டஸும் நடித்திருக்கிறார்கள். உணர்வும் திகிலும் அலைமோதும் படத்தைப் பார்க்க விரும்புபவர்களுக்கானது இந்தப் படம்.

ஆகஸ்ட் 14 தி இந்து நாளிதழில் வெளியானது

ஞாயிறு, ஜூலை 26, 2015

எழுந்து வரும் கடந்த காலம்!-

அந்தச் சிறுமிக்கு அப்போது ஏழு வயது. ஓரிரவில் அவரது பண்ணைவீட்டில் அவருடைய அம்மாவும் சகோதரிகளும் கொடூரமான முறையில் கொல்லப்படுகிறார்கள். கொலை செய்தவரென அந்தச் சிறுமி சொந்தச் சகோதரனையே நீதிமன்றத்தில் கைகாட்டுகிறாள். 16 வயது நிரம்பிய அவனுக்கு ஆயுள் தண்டனை கிடைக்கிறது. தன் வாழ்வின் இருள் பகுதியான அந்த இரவைத் திரும்பிப் பார்க்கவே இல்லை அந்தச் சிறுமி.

ஆனால் 25 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் சந்திக்கும் த கில் க்ளப் என்னும் அமெச்சூர் டிடெக்டிவ் ஏஜன்சி அந்தச் சிறுமியின் சகோதரன் ஒன்றுமறியாதவன் என்கிறது. வாய்ப்புக் கிடைத்தால் அதை நிரூபிப்பதாகவும் சொல்கிறது. அவர் அந்த இரவைத் திரும்பிப் பார்க்கும் அவசியம் வருகிறது. கொலைகாரன் தன் சகோதரன் இல்லையோ, அவன் ஒன்றும் அறியாதவனோ எனும் சந்தேகம் எழுகிறது. உண்மையை அறிய வேண்டும் என்ற ஆவலால் மீண்டும் துயரம் நிறைந்த அந்த இரவுக்குப் பயணப்படுகிறார். அந்த இரவில் நடந்த மர்மம் என்ன? அவர் பார்த்தது என்ன? பார்க்காதது என்ன? இவை அனைத்தையும் சுவாரசியமான காட்சிகளாக்கினால் கிடைக்கும் திகில் படமே டார்க் ப்ளேசஸ்.

ரசிகர்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்த கான் கேர்ள் படத்தின் கதையை எழுதிய கில்லியன் ப்ளைன் தான் இப்படத்துக்கான கதையை எழுதியிருக்கிறார். கில் பக்கே ப்ரென்னர் என்னும் பிரெஞ்சு இயக்குநர் படத்தை இயக்கியுள்ளார்; படத்தின் திரைக்கதையையும் இவரே எழுதியிருக்கிறார். சார்லிஸ் தெரோன், கிறிஸ்டினா ஹெண்ட்ரிக்ஸ், நிக்கோலஸ் ஹோல்ட், ஸ்டெர்லிங் ஜெரின்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஏற்கனவே ஏப்ரல் மாதமே இந்தப் படம் பிரான்ஸில் வெளியாகிவிட்டது. நிகழ்காலம் இறந்த காலம் எனப் படத்தின் திரைக்கதை மாறி மாறிப் பயணித்து ரசிகர்களிடம் டென்ஷனை ஏற்படுத்துகிறது. அடுத்து என்ன நடக்குமோ என்னும் பதைபதைப்பை உருவாக்கும் வகையில் படம் ஜெட் வேகத்தில் நகர்கிறது. ரசிகர்களுக்குச் சரியான திகில் விருந்தாக டார்க் ப்ளேசஸ் இருக்கும் என்னும் எண்ணத்தை இப்படத்தின் டிரெயிலர் ஏற்படுத்துகிறது. படமும் அப்படியே இருக்குமா என்பதை ஆகஸ்ட் 7 அன்று தான் தெரிந்துகொள்ள முடியும். ஏனெனில் அன்று தான் டார்க் ப்ளேசஸ் வெளிச்சத்துக்கு வருகிறது.

ஜூலை 24 தி இந்து நாளிதழில் வெளியானது

லேட்டஸ்ட்

அமலா எனும் பொன்மான்

தொடர்பவர்