இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், ஆகஸ்ட் 24, 2010

மனமே மயங்காதே

நீண்ட நாட்களுக்குப் பின்பு மீண்டும் ஒரு பதிவிடல். இதற்கு முந்தைய பதிவிடல் ஜூனில் நிகழ்ந்துள்ளது. ஏன் இவ்வளவு இடைவெளி என யாரும் கேட்கப்போவதில்லை, ஆஹா மறுபடியும் ஆரம்பிச்சிட்டானா என்று தான் நினைப்பீர்கள் ஆனாலும் என்ன செய்ய இந்தப் பாழாய்ப்போன மனம் இருக்கிறதே அது படுத்தும்பாடு கொஞ்சம்கூட வெட்கமே கிடையாது அதற்கு. அது தான் என்னிடம் சொன்னது எழுது எழுது என. எழுதுவதற்கு எதுவுமே இல்லையே எதை எழுத என அதனிடமே கேட்டேன். அது என்னைப் பார்த்து நக்கலாகச் சிரித்தது. உங்களுக்குப் புரிந்தது போலவே எனக்கும் புரிந்தது. நீங்கள் நினைத்தது சரிதான். அதையே தான் அதுவும் சொன்னது. என்னமோ இவ்வளவு நாளா ரொம்ப நல்ல சிந்தனைகளையும் மிக சுவாரசியமான பதிவுகளையும் எழுதிக்குவித்தது போல சலிச்சுக்கிடாத தம்பி. சிறப்பாக நீ இயங்குவதாக தப்பித்தவறி கூட எண்ணிவிடாதே. ஏதோ ஒரு வகையில் நீ இயங்க வேண்டும் என்பதற்காகத் தான் அப்படிச் சொன்னேன் என்ற மனத்திடம் நான் என்ன பேச முடியும்?

ஆவி ஜோசியம் பார்க்கும் போது, வட்ட வடிவமான காசையோ டம்பளரையோ நாம் நகர்த்த வேண்டியதில்லை அதுவாக ஒரு பக்கம் போகும். அதைப் போல் தான் எழுத ஆரம்பித்த உடனேயே எழுத்துகளெல்லாம் அவை விரும்பிய படி அவற்றை அமைத்துக்கொள்கின்றன. ஆசை ஆசையாய் மகனின் தலையில் எண்ணெய் தேய்க்க அம்மா ஓடோடி வருவாள் போக்கிரிப் பிள்ளையோ அங்கேயும் இங்கேயும் ஓடி அவளை அலைக்கழிக்க ஓட்டத்தில் எண்ணெய் எல்லாம் சிந்திவிடவே அகப்படும் மகனின் தலையில் வெற்றுக் கரங்களை ஆவி பறக்க தேய்க்கும் தாய் போல எழுத நினைத்தவுடன் மனத்தில் ஏதேதோ வரிகள் அங்கும் இங்கும் ‘சர் சர்’ரென நடைபோட அவற்றை இழுத்துப் பிடித்து நிறுத்திவிட்டால் போதும் சமாளித்துக்கொள்ளலாம் என நினைத்தேன் ஆனால் அந்தத் தாய் போல நானும் ஏமாந்துவிட்டேன். ஒரு எழவும் இந்தப் பதிவிலும் கிடையாது என்பதைச் சொல்ல வைத்து விட்டது அந்த நல்லவன் வேஷம் போடும் மனம்.


விடையற்ற கேள்விகள் ஏராளமாக நிரம்பி வழிகின்றன எனது மேசையின் இழுப்பறையில். தெரிகிறதோ தெரியவில்லையோ தேர்வு நேரம் முடியும் வரை பேனாவை கன்னத்திலும் டெஸ்க்கிலும் தட்டியபடி யோசிப்பதாக பாவனை புரியும் அப்பாவி/அடப்பாவி மாணவனைப் போல் அந்தக் கேள்விகளுக்கு விடை தேடி நான் யோசிப்பேன்/யோசிப்பது போல் பாவனை புரிவேன். எதன் மீதும் யார் மீதும் மரியாதையோ நம்பிக்கையோ அற்ற சபிக்கப்பட்ட வாழ்க்கை எனக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. எனது துயரங்கள் எனது இன்பங்கள் எல்லாவற்றையும் நான் ஒருவன் மாத்திரமே அனுபவிக்கிறேன். அது ஒரு வகையில் பேராசை என நீங்கள் நினைக்கலாம். ஆனால் யாரையும் என் வீட்டுக்கு வர விடாத பாம்பொன்று என் வீட்டைக் காவல் காக்கிறது. என்னால் அதைக் கொல்ல முடியாது, ஏனெனில் அதன் நோக்கம் நூறு சதவிகிதம் என் நலம். அதை மீறி யார் அங்கே வரப்போகிறார்கள். அப்படி வந்தும் அவர்கள் சாதிக்கப்போவதென்ன?


நாம் சரியென நினைக்கும் ஒன்றைச் செய்ய முடியாதவரை தவறு என நினைக்கும் ஒன்றைச் செய்யும் வரை ஏதோ ஒரு இயக்கத்தின் கட்டளைப்படிதானே நாம் செயல்படுகிறோம். அந்த இயக்கம் எது அதன் பெயர் என்ன? யார் யாரோ என்ன என்னவோ சொல்கிறார்கள் எதுவுமே புரியவில்லை. இரண்டும் மூன்றும் ஐந்து. மிகத் தெளிவாகப் புரிகிறது. அப்படிப் புரிய வேண்டும் வாழ்க்கையும் என ஆசைப்படுகிறது மனம். பேராசைதான் அதற்கு. ஆனால் எத்தனைமுறை போட்டு பார்த்தாலும், மிகக் கவனமாய் வகைகளை எழுதிப் பார்த்தாலும் விடை மட்டும் எப்போது தவறாகவே வருகிறது. சற்றும் மனம் தளராத மனமோ மீண்டும் மீண்டும் போட்டு முட்டி முட்டி பாடாய்ப்படுகிறது. அவஸ்தைதான். தொடர்ந்த அவஸ்தையின் காரணமாக அவஸ்தை இல்லாவிடின் ஏதோ ஒன்றை இழந்ததுபோல் ஆகிறது. மகிழ்ச்சியும் துக்கமும் ஒன்றென்பதை ஏன் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. உணர்வென்று பார்த்தால் சந்திப்பும் பிரிவும் ஒன்றுதானே. ஆனால் எப்போதும் இன்பம் மட்டுமே ஏன் எதிர்பார்க்கிறோம். வெற்றிக்கான வரிசை மிக நீளமாக இருக்கும் போது ஏன் எல்லோரும் அங்கேயே குவிகிறார்கள்? தத்துவமும் எதார்த்தமும் ஏன் சந்தித்துக்கொள்வதில்லை, ஒன்றையொன்று சந்திக்காமலே போய்விடுமோ?


வாலற்ற நாய்களுக்கு எலும்புத் துண்டுகள்கூடக் கிடைக்கப்போவதில்லை என்பது தெரிந்தும் வாலோடு சேர்த்து இரும்புக்கம்பியைக் கட்டிக்கொண்டுவிட்ட மனத்தை என்ன செய்வது? திடும் திடுமென எங்கிருந்தோ எங்கேயோ தாவும் மனத்தை அது இஷ்டத்திற்கு விடுவதா கட்டி நிறுத்துவதா? சாக்கடையில் உருண்டு புரண்டு எழும் மனம் அடுத்த நொடி சந்தனம் கம கமக்க சபையில் வந்து அமர்ந்துவிடுகிறது. அடிக்க ஓங்கும் கை அணைக்கத்தானே முடியும். இப்படித் தான் ஆகிறது எப்போதும். மீண்டும் ஒரு நாள் சந்திக்கிறேன் இப்போது விடை பெறுகிறேன். தொடர்ந்து சட்டசபைக்குப் போகாவிடில் பதவி இழக்க நேரிடும் என்பதால் கையெழுத்துப் போட்டுவிட்டு வராண்டாவில் சற்று அமர்ந்துவிட்டுப் போகும் எம்எல்ஏ போல நீண்ட இடைவெளிபோக்க ஒரு சிறு பதிவு செய்தாகிவிட்டது, இனி ஜென்மம் சாபல்யமாகிவிடும்.

வியாழன், ஜூலை 01, 2010

வேலைக்காரிகளின் புத்தகம் (கட்டுரைகள்)


தேசத்துரோகி என்னும் சிறுகதைத் தொகுப்பு, கொரில்லா, ம் போன்ற நாவல்களைத் தொடர்ந்து ஷோபா சக்தி எழுதிய சில கட்டுரைகளின் தொகுப்பு வேலைக்காரிகளின் புத்தகம். இலங்கையின் அரசியல் சூழலைத் தனது எழுத்துக்கள் மூலம் முற்றிலும் புதிதான கோணத்தில் அணுகுகிறார். வெகுஜன ஊடகங்களால் அறியப்பட்ட இலங்கையின் சூழல் மெல்ல மெல்ல மறைந்து இவர் எழுத்துகளால் உருவான இலங்கையின் சூழலை மனம் உணரும்போது ஒருவித அதிர்ச்சி பரவுகிறது. குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் என எல்லா வகையான மனிதர்கள் மேலும் மனித நேயமற்றுப் பாய்ந்த குண்டுகள் சிங்கள ராணுவம், விடுதலை இயக்கங்கள், அமைதிக்கெனச் சென்ற ராணுவப்படை போன்ற எல்லா இடங்களிலிருந்தும் புறப்பட்டுச் சென்றிருக்கின்றன.

தெரிவிக்க வேண்டிய செய்திகளைப் பாசாங்குகளற்றுத் துணிவுடனும் தெளிவுடனும் எழுதிச் செல்லும் ஷோபா சக்தியின் எழுத்துகளில் அமைதியை எதிர்நோக்கும் கலகக்காரனின் அறை கூவலே மேலோங்கி ஒலிக்கிறது. பொது ஊடகக் கருத்துகளோடு பொருந்தி நிற்கும் மனம் இவருடைய கட்டுரையைப் படித்தபின் இலங்கை பற்றிய தன் சித்திரத்தை நிச்சயமாக மாற்றிக் கொள்ளும். தீவிர அரசியல் கட்டுரை, கலை இலக்கிய அலசலை அடிப்படையாகக்கொண்டு அரசியலைத் தீவிரமாகப் பேசும் கட்டுரை என ஒன்று மாற்றி ஒன்று அமைந்த எட்டுக் கட்டுரைகள் கொண்ட தொகுப்பிது. 

தனது சொந்த கிராமமான அல்லைப் பிட்டிக்கு நேர்ந்த அவலத்தில் ஆரம்பமாகும் முதல் கட்டுரை முதல் புகழ்பெற்ற வானொலி அறிவிப்பாளர் கே.எஸ். ராஜாவின் மரணம் பற்றிய செய்தியோடு விடுதலைப் புலிகள் இயக்கத்தில்தான் இருந்ததைப் போகிற போக்கில் தெரிவிக்கும் கடைசிக் கட்டுரைவரை பக்கத்திற்குப் பக்கம் இலங்கை மக்களின் குருதிக் கறையே தென்படுகிறது. ஆணிவேர் திரைப்படத்தைக் கலைப் பொக்கிஷமாகக் கருதுவோரின் தலையில் குட்டிப் புரஹந்தகளுவர, இர மத்திமய போன்ற சிங்களக் கலைப் படைப்புகள் குறித்து விரிவாக அலசியுள்ளார். கலை மற்றும் இலக்கியப் படைப்புகள் துதிகளாவதையும் பிரச்சாரப் பிரதிகளாகச் சுருங்கிப்போவதையும் கடுமையாகச் சாடுகிறார். 

இத்தொகுப்பின் பிரதானமானது அக்டோபர் எழுச்சி, சாதியொழிப்புப் போராட்டம், சாதியம் குறித்து அலசும் நீண்ட கட்டுரையே. இதில் சாதியத்திற்கு எதிரான போராட்டங்களின் வளர்ச்சி பற்றி ஆதாரங்களோடு விளக்குகிறார். யாழ் நகர மேயரை நூலகத்தைத் திறக்கவிடாமல் செய்தது, யாழ்ப்பாண மத்தியக் கல்லூரியின் முதல்வர் கணபதி இராஜதுரையைக் கொலைசெய்தது என்பது போன்ற பல சான்றுகள் மூலம் விடுதலைப் புலிகளின் சாதிய ஒடுக்குமுறையை எடுத்துக் கூறுகிறார்.
1947இல் ஜோன் ஜெனே எழுதிய Les Bonnes (பணிப்பெண்கள்) நாடகம் பற்றிய கட்டுரையில் இந்நாடகம் வேலைக்காரிகளின் புத்தகமாகக் கருதப்படும்படியான ஒன்று என்கிறார். இது எதிர்த்துக் கேட்க அகத்தில் தீராத விழைவிருந்தும் ஒத்துழைக்க மறுக்கும் புறச்சூழல்களோடு போராடும் வேலைக்கார மனங்களில் புதைந்துகிடக்கும் கலகச் சக்திகளை இயன்ற அளவு ஒன்றிணைக்கும் புத்தகம். எனவே, வேலைக்காரிகளின் புத்தகம் என்பது இக்கட்டுரைத் தொகுப்புக்கான தலைப்பாகியிருக்கக்கூடும். 

ஐ.நா. சபையின் சிறப்பு விசாரணையாளர் பிலிப் அல்ஸ்டனின் அறிக்கையை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரையில் இலங்கையில் 2002 யுத்த நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பின்பு நடந்த அரசியல் படுகொலையின் குத்துமதிப்பான விவரக் கொத்தை அது தந்திருப்பதாக எள்ளல் தொனிக்கத் தெரிவிக்கிறார். இடதுசாரி, முஸ்லிம் அரசியல் தலைமைகளின் குரல் அறிக்கையில் தவிர்க்கப்பட்டிருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார். புலிகள் தனி அரசாங்கம் நடத்துவதைப் போலத் தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவல்களைக் கடுமையாக மறுக்கிறார். அரசு, புலிகள் இரண்டின் மனித உரிமை மீறல்களையும் விவரமாகக் கூறி இருதரப்பும் சர்வதேசக் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டியவை என்று பிலிப் கூறுவதன் உட்பொருளை உணர்த்துகிறார் ஷோபா சக்தி. 

தம்பி விமரிசனம் வழியாகத் திரைத் துறையின் மோகத்தால் பித்துப்பிடித்து அலைவதையும் புரட்சிக்குரியவர்களின் படங்களையும் மேற்கோளையும் காட்டுவதால் மட்டுமே ஒரு படம் புரட்சிப் படம் என நம்பும் அரைவேக்காட்டுத் தனத்தையும் தனக்கே உரிய நக்கலுடன் சாடுகிறார். சி. புஷ்பராஜாவின் நூலை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரையில் புலிகள் மற்றும் புலி ஆதரவாளர் தவிர்த்த மற்றொரு வரலாறு என்னும் வகையில் நூலை வரவேற்கிறார். ஈழப் போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்கைப் புலிகளின் வரலாறு இருட்டடிப்புச் செய்திருப்பதைக் குறிப்பிடுகிறார். 

மொத்தத்தில், தமிழர், சிங்களர் என்னும் வேறுபாடின்றிப் பயங்கரவாதத்திற்கும் வன்முறைக்கும் பலியாகும் அப்பாவி மக்களின் உயிரிழப்பு குறித்த கவலையும் கோபமும் வெளிப்படுகின்றன, கட்டுரைகளில். புலிகளின் பாசிசச் செயல்பாடுகள், அரச பயங்கரவாதம், ஏகாதியபத்திய எதிர்ப்பு இவையனைத்துக்கும் எதிராகப் போராட வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்துகிறார். தலித்துகள், முஸ்லிம்கள் இருவருக்காகவும் பெருமளவில் வாதாடுகிறார். கேள்விகளற்ற விசுவாசங்கள்மீது கட்டப்பட்ட பலமான இயக்கமான விடுதலைப் புலிகளின் அடித்தளத்தையே ஆட்டங்காணச் செய்யும் கேள்விகளை ஆதாரங்களுடன் அடுக்கியுள்ளார். விசுவாசங்களுக்குப் பழகிய மனத்தின் எதிர்ப்பையும் கலகக்கார மனத்தின் பெருத்த ஆதரவையும் ஒரே சமயத்தில் ஈட்டிக்கொள்ளும் புத்தகம் இது.

வெளியீடு:
கருப்புப் பிரதிகள்
45ஏ, இஸ்மாயில் மைதானம்
லாயிட்ஸ் சாலை, சென்னை 5
முதல் பதிப்பு: ஜனவரி 2007.
பக். 144. ரூ. 64.99


காலச்சுவடு 2007 செப்டம்பர் இதழில் வெளியானது.  

வியாழன், ஜூன் 24, 2010

ராவணன்

சில படங்களை அதிகமாக எதிர்பார்த்துப் போவோம். ஏமாற்றத்தோடு திரும்புவோம். எதை எதிர்பார்த்தோம் எனக் கேட்டால் சொல்லத் தெரியாது; ஆனால் ஏமாற்றம் என்பதை மட்டும் உணரமுடியும். அதிர்ஷ்டவசமாக சில படங்கள் எதிர்பார்த்த மாதிரியே இருக்கும். அதிலொன்று ராவணன். படம் வெளியான அன்று, படம் பார்த்த ஆர்வத்தில் சிலர் படத்தை ஆஹோ ஓஹோ என்றனர். எனக்கென்னவோ படத்தின் முன்னோட்டங்களைப் பார்த்து பெரிய நம்பிக்கை வரவில்லை. ஆனால் படம் நன்றாக இருப்பதாக நண்பர்கள் சொல்கிறார்களே எனக் குழப்பமாக இருந்தது. அக்குழப்பத்தோடேயே படம் பார்க்கச் சென்றேன். மணி சார் அவரது ரசிகனான என்னை ஏமாற்றவில்லை. நான் யூகித்தது சரியாகவே இருந்தது. திருப்தியோடு தியேட்டரைவிட்டு வெளியே வந்தேன். எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்த படம் பார்த்தால் திருப்தியாகத் தானே இருக்கும்.
இப்படத்தில் வரும் கதாபாத்திரங்கள் முழுக்க முழுக்க கற்பனையே. உயிருள்ள அல்லது மாண்டுவிட்ட யாரையும் குறிப்பவை அல்ல என முதலில் எச்சரித்துவிடுகிறார் சார். ஆனால் கதை என யார் பெயரும் டைட்டில் இடம்பெறவில்லை. ஆனால் அதைப் பற்றி நாம் கேள்வி கேட்கக்கூடாது. ஏனெனில் அவர் விவரம் தெரியாதவரல்ல. மணி சார் என்றால் சும்மாவா. அவரது ஒவ்வொரு அசைவுக்கும் ஏதாவது பொருள் இருக்கும். நமக்கு வேண்டுமானால் புரியாமல் இருக்கலாம். கிட்டத்தட்ட பதினான்கு கூட்டல் நான்கு அல்லது ஐந்து வருடங்களுக்கு முந்தி அதாவது 1991, 1992 களில் சார் இயக்கிய தளபதி, ரோஜா ஆகிய படங்களை அப்படியே உல்டாவாக்கி ஒரு புதுப் படமாக எடுத்தால் நமக்கு சப்பென்று போய்விடும். ஆனால் சாருக்கு வயதாகிவிட்டது. டிவிடியும் எவ்வளவு நாளைக்குத் தான் கைகொடுக்கும். ஆனால் படம் எடுத்தாக வேண்டுமே. மறுபடி மறுபடி யோசித்தாலும் அந்நியப் படங்களின் காட்சிகள் தாம் ஞாபகம் வருகிறதே ஒழிய புதிதாய் ஒரு காட்சிகூடத் தோன்றவில்லை. என்ன செய்வார் சார்?
படித்த படிப்பு எந்த நேரத்திலும் கைகொடுக்காமல் போகாது என்பதற்கு சார் உதாரணம். இவரது எம்பிஏ படிப்பு கைகொடுத்துவிட்டது. ஆனாலும் அதுவும் கொஞ்சம் பழைய உத்திதான் ஆனால் வேறு வழி இல்லை. அதே தளபதி, ரோஜாவில் பயன்படுத்திய உத்திதான். புராண முலாம் பூசுவதுதான். சாருக்கு நன்றாகத் தெரியும் அந்தப் பூச்சு இல்லை என்றால் இது விலைபோகாது என. எனவே சாதுர்யமாக ராமன் ராவணன் சீதா என செய்திகளை ஊடகங்களில் கசியவிட்டார். இப்போது அவரது வேலை சுலபம். படம் பார்ப்பவன் ராமன் யார் ராவணன் யார் கும்பகர்ணன் யார் சூர்ப்பனகை யார் என தன் அறிவைச் சோதிப்பதில் ஆர்வத்தோடு இருக்கும்போது சார் படத்தை அழகாக நகர்த்திச்சென்றுவிடலாமே. எனவே தான் கார்த்திக் கதாபாத்திரத்தை வேண்டுமென்றே மரத்திற்கு மரம் தாவவிட்டிருக்கிறார். போதாக்குறைக்கு வீரப்பன் மாவோயிஸ்ட் சங்கதிகள் வேறு. அவருக்குத் தெரியாதா என்ன, எங்கே அடித்தால் எங்கே விழுவான் ரசிகன் என. எவ்வளவோ ஆண்டு காலமாக புத்திசாலித்தனமாக மக்களை ஏமாற்றிய சாதிசார் மூளையின் மிச்ச சொச்சம் இல்லாமலா போய்விடும். எனவேதான் எள்ளளவும் உள் அடுக்குகளற்ற தட்டையான படமொன்றை ஏதோ ஒன்று இருப்பதுபோல் பம்மாத்து காட்டுகிறார் சார். மற்றபடி குறியீடு அது இதுவென்ற புண்ணாக்குகள் எவையுமில்லை இப்படத்தில்.
அந்நியச் சரக்கின்மீது மேட் இன் இந்தியா அச்சிடுவதில் சமர்த்தர் சார். சொந்தமாக அங்கொன்றும் இங்கொன்றுமாக உற்பத்தி செய்துள்ளார் சார் அதை மறுக்க முடியாது. அந்த ஏழு நாட்களை உல்டா பண்ணி மவுன ராகம் கொடுத்தார். அலைபாயுதேவின் திரைக்கதை அமைப்பு அப்படியே மவுனகீதங்களை ஞாபகமூட்டும். ஆனாலும் சாரின்மீது நமக்கு மரியாதை இருந்தது. என்னதான் காப்பி என்றாலும் ரசிக்கும்படி தருவார். ஆனால் சமீப காலமாக அந்த நம்பிக்கையை அவர் தகர்த்தெறிந்துவிட்டார். எஞ்சியிருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையையும் ராவணன் மூலமாக நிர்மூலமாக்கிவிட்டார்.படத்தில் நித்தி பக்தை மட்டுமே கைதட்டல் வாங்குகிறார். அதற்காகவும் மணி சார் பெருமைப்பட்டுக்கொள்ள முடியாது அது தம்பி நித்தியின் கைங்கர்யம். வெறுமனே தொழில்நுட்பங்களை வைத்து மட்டும் மிரட்டமுடியாது சார், புரிந்துகொள்ளுங்கள். நீங்கள் எந்தத் தொழில்நுட்பத்தை நம்புகிறீர்களோ அந்த தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சியே உங்களை அம்பலப்படுத்திவிடுமே சார். அதை ஏன் நீங்கள் யோசிக்கவே இல்லை. யோசித்திருப்பீர்கள், யார் நம்மைக் கேள்விகேட்பார்கள் என்ற தைரியமா ரசிகன் முட்டாள்தானே என்ற எண்ணமா எது உங்கள் யோசனையை முனை மழுங்கவைத்தது? முன்பெல்லாம் உங்களுக்கு மட்டுமே எட்டும் உயரத்தில் இருந்த உலகப் பட டிவிடிகள் இப்போது கண்ட இடங்களிலும் சீரழிந்துகிடக்கிறதே. இணையதளங்களிலோ கேட்கவேண்டாம். உலகத்தின் நல்ல படங்களை எல்லாம் உங்களது படங்களை வாய்பிளந்து பார்த்த அந்த சுந்தரபாண்டியபுரத்துக்கார ரசிகனும்கூட பார்த்துவிடுகிறான். எனவே உங்களது ரீயூசபிள் மில்க் ஸ்வீட் சமாச்சாரம் தொடர்ந்து எடுபடாது. அரசியல்வாதிகள் நோன்புக் கஞ்சி குடித்த மாதிரி இருக்கிறது நீங்கள் ஒடுக்கப்பட்டவர்கள் குறித்து பேசுவது. உங்கள் மனையாட்டி சுஹாசினி தயவால் எப்போதோ இறந்துபோன சுஜாதாவை நல்ல வசனகர்த்தா என நினைக்கவேண்டி உள்ளது.
மணி ரத்னம் சார் நீங்க ரொம்ப நல்லவர். அமைதியானவர். உங்களுக்கு ஓய்வு தேவை. நிறைய உழைச்சிட்டீங்க. ஓய்வெடுங்க. அதச் சொல்ல நீ யாருடான்னு கேட்டீங்கன்னா நல்ல படமெடுங்க, ப்ளீஸ் டோண்ட் ட்ரை டூ டேக் த ஜெராக்ஸ் காப்பிஸ். நிறைய இளைஞர்கள் படம் பண்ண வாய்ப்பில்லாம அலைஞ்சுகிட்டு இருக்காங்க. அவர்களில் பாதிப்பேருக்கும் மேல மணிசார் மாதிரி வர வேண்டுமென கனவு காண்கிறார்கள். தயவுசெய்து அவர்கள் கனவைக் கலைக்காதீர்கள். சமீபத்தில் ஒரு பேட்டியில் இனி படமெடுக்கப் போவதில்லையென்றும் கொடைக்கானலிலோ ஊட்டியிலோ போய் கோல்ஃப் விளையாடப் போவதாகவும் சொல்லியிருக்கிறீர்கள். நல்ல முடிவு. இப்படமெடுக்கும் முன்பே செய்திருக்கலாம். பரவாயில்லை. இப்போதாவது அதை செயல்படுத்துங்கள். இது கடைசி தேர்தல் இது கடைசி தேர்தல் எனக் கருணாநிதி போலோ இது கடைசிப் படம் இது கடைசிப் படமென ரஜினி போலோ பூச்சாண்டி காட்டிவிடாதீர்கள். உங்கள் மீது இன்னும் மரியாதை இருக்கிறது. சற்று காட்டமாக இருந்தாலும் உங்களை அணு அணுவாக ரசித்தவனுக்கு அந்த உரிமை கூட இல்லையா என்ன. இதுகூட புரியாதவரா சார் நீங்கள். அப்படியே உங்களுக்குக் கோபம் வந்தால் ராவணனில் ராமரின் மன்னிக்கவும் தேவின் வசனம் ஒன்று குறிப்பிடுகிறேன்: உண்மை சில சமயம் கேவலமாகத் தான் காதில் விழும்
நன்றி. வணக்கம்.

வெள்ளி, ஜூன் 18, 2010

சூப்பர் சிங்கர் ஜூனியர் 2

மலையாளத் தொண்டையிலிருந்து
புறப்பட்டு வரும்
தமிழகத்தின் செல்லக் குரல்


ஓராண்டு காலமாக தமிழக மத்திய தரக் குடும்பத் தாய்மார்களும் குழந்தைகளும் குடும்பத்தினரும் வாரத்தில் நான்கு நாட்கள் தொலைக்காட்சி முன்பு அமர்ந்து கண்டுகழித்த சூப்பர் சிங்கர் ஜூனியர் 2 தமிழகத்தின் செல்லக் குரலாக ஒரு மலையாளக் குரலைத் தேர்ந்தெடுத்து ஓய்ந்துவிட்டது. இசைக்கு மொழி இல்லை அது இல்லை. இது இல்லை. எதுவுமே இல்லை. மேலோட்டமாக பார்த்தால் திறமை உள்ளவர்களுக்குத் தானே பரிசு கிடைக்கும் என்று எளிதாகக் கூறிவிடலாம். ஆனால் எல்லாவற்றையும் நாம் எளிதாக எடுத்துக்கொள்வதால் தான் வர்றவன் போறவன் எல்லாம் தமிழனின் தலையில் மிளகாய் அரைக்கிறான். வாரத்தில் நான்கு நாட்கள் சராசரியாக சுமார் ஆறு மணி நேரம் மொத்தம் 52 வாரம் மொத்தத்தில் சுமார் 310 மணி நேரம் தமிழகக் குடும்பத்தினர் பார்த்த நிகழ்ச்சி இது. இதன் மூலம் தொலைக்காட்சி அலைவரிசைக்குக் கிடைத்த விளம்பர வருவாய் எல்லாம் தமிழனின் இளிச்சவாய்த்தனத்தால் அவனது பையிலிருந்து மறைமுகமாக எடுக்கப்பட்டது. அவர்கள் தேர்ந்தெடுப்பதற்கு இவன் தனது கைபேசியிலிருந்து ஒரு குறுஞ்செய்திக்கு சுமார் மூன்று ரூபாய் செலவழிப்பான்.

இங்கே இப்படி நடப்பது போல் ஒரு மலையாள அலைவரிசையில் நடத்தப்படும் போட்டிகளில் தமிழனுக்கு பரிசு கிடைக்கிறதா எனத் தெரியவில்லை. அங்கே அதை அனுமதிப்பார்களா? அம்மையப்பனிடம் இருந்து ஒரு பழம் கிடைக்காத கோபத்தில் தனியாய்ச் சென்று அமர்ந்தவன் முருகன். ஒரு பழம் தானே அது என்ன பெரிய விஷயமா என இறைவனே நினைக்கவில்லை. எனவே ஒரு அப்பாவி மனிதனால் இதை எப்படி எளிதாக எடுத்துக்கொள்ள இயலும். இத்தகைய நிகழ்ச்சிகளை ஏன் தமிழர்கள் நிராகரிக்கக் கூடாது. ரிமோட் நம் கையில் இருந்தும் நாம் ஏன் மற்றொருவரது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். விழித்தெழவே மாட்டோமா? தமிழனின் தலையில் சந்தனம் தடவவேபடாதா?

புதன், ஜூன் 16, 2010

டாஸ்மாக் பாரில் சிதறிக் கிடக்கும் சொற்கள்


எச்சரிக்கை: குடி குடியைக் கெடுக்கும். (இது ஒரு சிலேடை) இந்தப் பதிவைப் படிப்பது நேரத்தைக் கெடுக்கும். எச்சரிக்கை பண்ணிட்டேன் இனி உங்கள் பாடு.

எவண்டா கண்டுபிடிச்சான் இந்தக் கருமத்த. 

தலைப்பை வைத்துத் தப்பாப் புரிஞ்சுக்காதீங்க. தம்பி வேற எதையோ சொல்லப்போறான். இல்ல கொல்லப்போறான். 

எதோ செஞ்சுட்டுப் போட்டும் விடுடா. 

டேய் நான் கேட்ட கேள்விக்குப் பதிலச் சொல்லுடா. 

என்னடா கேட்ட? 

அட கருமம் பிடிச்சவன மொத வரியப் படிடா. 

அதுவா கவித்துவமா எழுதுறதா நினைச்சு உளறி வச்சிருக்க. 

அட எரும அது தலைப்புடா அதையாடா வாசிக்கச் சொன்னேன் கூறுகெட்டவனே நானே திருப்பியும் கேட்குறேன். எவண்டா கண்டுபிடிச்சான் இந்தக் கருமத்த? 

டேய் கொல்லாதடா நீதானடா கேக்குற நீதாண்டா பதிலையும் சொல்லணும். 

ஏன் நீ சொல்லு... இல்ல அவனச் சொல்லச் சொல்லு. 

எவன எவனும் இங்க இல்ல. நீயே சொல்லு. 

அது தாண்டா கல்யாணத்த...

அது ரொம்பப் புனிதமான விஷயம்டா. 

என்ன பெரிய புனிதம் புண்ணாக்கு. 

ஒருதருக்கு ஒருத்தரு ஆறுதலா வாழ்க்கையின் கடைசி வரைக்கும் ஒரு மாரல் சப்போர்ட்டா... 

ஏய் ஸ்டாப். இந்த வெங்காயம் எல்லாம் வேண்டாம். காசு கொடுத்து பொம்பளைட்ட போனா போலீஸு புடிச்சிக்கும். ஆனா எல்லாருமா சேர்ந்து ஒரே வீட்டுக்குள்ள ஆம்பளையும் பொம்பளையும் அடைச்சு வப்பாங்க. ஹால்ல யார் இருந்தாலும் கவலைப்படாம பெட்ரூம்ல கூத்தடிக்கலாம். அது தான. 

டேய் இந்த மாதிரில்லாம் பேசி பேசி வீணாப் போயிராத. இதெல்லாம் நாங்க புதுமைப்பித்தனிலேயே படிச்சிட்டோம். ஒழுங்கா காலகாலத்துல கல்யாணம் பண்ணாட்டி வாழ்க்கையில் ஒரு பிடிப்பு வராது. மனசுக்குப் பிடிச்ச பொண்ண கல்யாணம் பண்ணிகிட்டு வாழ்ந்து பாரு அப்ப புரியும் ஒனக்கு. ஒனக்கு ஒண்ணுனா அவ துடிப்பா. உம்மேல பாசத்தக் கொட்டுவா. 

அதுலயே போட்டு மூடிடுவாடா பேமாணி. பாசமாம் மாரல் சப்போர்ட்டாம். டேய் இப்படித்தாண்டா நெறையப் பேரு மண்ணாப்போயிருக்கான். நீ சொல்ற மாதிரி பாசம் பந்தம் நட்பு உறவு எல்லா எழவும் வெறும் கால்குலேஷன் தானடா? அதத் தாண்டி ஒன்னும் இல்லடா. அது உனக்குப் புரியல. காதல் கல்யாணம் பொண்டாட்டி புள்ள குடும்பம் அது இது எல்லாமே உன்னோட சந்தோஷத்தைக் குழி தோண்டிப் பொதச்சிரும்டா. ஆனா ராஸ்கல்ஸ் ரொம்ப ப்ளான் பண்ணி இத கட்டமைச்சிருக்கானுகடா. கல்யாணம் பண்ணிய உடனே எல்லாரும் ஒட்டுமொத்தமா அதுக்கு வக்காலத்து வாங்க ஆரம்பிச்சிட்றீங்களே. 

பெற்றோர்களுக்கு இது தானடா சந்தோஷம். 

அப்ப கல்யாணம் பண்ணிட்டா பெற்றோர்களோட எல்லாப் பிரச்சினையும் தீந்திருமா? 

அப்படி இல்லடா அவங்களுக்குன்னு ஒரு கடமை இருக்குல்லா. அத அவங்க நிறைவேத்தாட்டி அவங்க மனசு எவ்வளவு சங்கடப்படும் அதயும் நெனச்சிப்பாருடா.

இவ்வளவு பேசுறிய கல்யாணமே பண்ணாம இப்ப நீ என்ன பெரிய சந்தோஷத்தக் கண்டுட்ட. 

மச்சான் கோவப்படாதடா கல்யாணம் பண்ணின நீயும் நானும் ஒரே பார்ல தானடா சரக்க மாஞ்சு மாஞ்சு ஊத்திட்டிருக்கோம். பெரிய காந்தி பேரன் மாதிரி போதிக்கிற. 

டேய் இதுக்கெல்லாம் எதுக்குடா காந்தி பேர இழுக்குற அவரு மகான். 

ஓஹோ. அப்ப 23வயசுலய நாட்டுக்காக செத்த பகத்சிங் உடம்புரீதியான பிரச்சினைகளோட கடைசிவரை நாட்டுக்காக போராடின நேதாஜி இவங்கலாம் மகான் இல்லயா. நல்லவனா இருக்கிறதவிட நல்லவனா காட்டிக்கிட்றது முக்கியம் இல்லையா? 

டேய் நான் என்ன சொன்னா நீ எப்படிப் புரிஞ்சுக்கிற... உனக்கு ஓவரா ஆயிட்டு. வா கிளம்புவோம். 

சரி மாப்ள தெளிவாவே கேட்கிறேன். எனக்கு கல்யாணம் ஆகல மாரல் சப்போர்ட்டுக்கு யாரும் இல்ல நான் தண்ணியடிச்சா அதுல ஒரு நியாயம் இருக்கு. உனக்கு அழகான பொண்டாட்டி புள்ள எல்லாமே இருக்கத்தானடா செய்யுது பொறகு ஏண்டா நீயும் இங்க வந்து கூத்தடிக்கிற. 

கல்யாணத்துல பிரச்சினை இருக்குங்குறதுக்காக எல்லாரும் உன்னமாதிரியே வெட்டி நியாயம் பேசிக்கிட்டே இருக்க முடியாது. நீ ஒரு கோழை. குடும்ப பாரத்த தூக்க உனக்குத் தெம்பில்ல, எதையெதையோ போட்டு கொழப்பிக்கிற...

சரிடா ஒனக்குப் பதில் சொல்றதுக்கு முன்னாடி கொஞ்சம் ஏத்திக்கிறேன் சார்ஜ் எறங்குன மாதிரி இருக்கு...

புதன், ஜூன் 09, 2010

உறக்கத்தைத் துரத்தும் உண்மைகள்


ஜூன் 4 அன்று தி நகர் செ.தெ. நாயகம் மேல் நிலைப் பள்ளியில் உள்நாட்டு அடக்குமுறை எதிர்ப்பு கூட்டமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட அரங்கக் கூட்டத்தில் பழங்குடியினருக்கு எதிராக நடத்தப்படும் பச்சை வேட்டையைக் கண்டித்து அருந்ததி ராய் பேசினார். அரங்கக்கூட்டம் நிரம்பி வழிந்தது. தான் எழுத்தாளர் பேச்சாளர் அல்ல எனச் சொல்லித் தனது உரையைத் தொடங்கினாலும் தெளிவான ஆங்கிலத்தில் நிதானமாக ஆனால் அவரது கருத்தை அழுத்தமாக எடுத்துரைத்தார் அவர். பன்னாட்டு நிறுவனங்களுக்கும் பணக்கார இந்தியர்களுக்கும் நல்லது செய்ய நினைக்கும் அரசு பழங்குடி மக்கள்மீது கரிசனமோ இரக்கமோ கொள்வதில்லை. ப சிதம்பரம் போன்ற ஒருவரை உள்துறை அமைச்சராகியதில் நமது பங்கும் இருக்கிறது. தெரிந்தோ தெரியாமலோ அவருக்கு ஓட்டுப்போட்டது நாம் செய்த தவறு. பழங்குடியினர் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு முக்கியமான காரணம் சிதம்பரம். சிதம்பரம் மிக நல்ல தலைவர். தமிழகத்தை ஆள்வதற்குத் தகுதியானவர் என்றெல்லாம் ஒரு காலத்தில் நினைத்தது எவ்வளவு தவறு என்பது புரிகிறது.

அரசுக்கும் அதிகாரத்திற்கும் பயப்படாமல் உண்மையைத் துணிந்து சொல்வதும் கேள்விகள் கேட்பதும் நேர்மையான எழுத்தாளரின் கடமை. ஆனால் துரதிர்ஷ்டவசமாக நமக்கு அந்த அதிர்ஷ்டம் இல்லை. விருதுகளுக்கும் விருந்துகளுக்கும் விலைபோகிவிடும் நமது எழுத்தாளர்கள் தங்களுக்குள் நடக்கும் வெட்டித்தனமான சண்டைகளிலேயே தமது ஆற்றலை வீணாக்குபவர்கள். பொறுப்பாக அரசு வேலைகளில் இருந்துகொண்டு காகிதப்போர் நிகழ்த்துபவர்கள். அரசாங்கத்தை எதிர்த்து பேச வேண்டுமானால் அவர்கள் ஓய்வுபெறும்வரை பொறுத்திருக்க வேண்டும். கூழ் குடிக்கும் ஆசையில் மீசையை இழக்கத் தயங்காதவர்கள். மீசை என்னடா மீசை பொல்லாத மீசை முண்டாசுக்கவிஞனைப் போல் பொங்கிப்பாய்ந்தால் வாழும்வரை நிம்மதியாக வாழ முடியாது சந்ததிகளுக்கு சொத்து சேர்க்க முடியாது எனும்போது எதற்கு வெட்டி வீராப்பு எதிர்த்துபேசி பொல்லாப்பைச் சம்பாதிப்பதற்குப் பதில் பாராட்டுகள் எழுதி பணம் காசு சேர்ப்பதில் திருப்தி காண்பவர்கள். புரட்சி, போராட்டம் இதெல்லாம் வேலைக்காகாத வேலை என்ற ஞானம் கொண்டவர்கள்.

அருந்ததி ராய் பேசும் போது இந்தியாவை அச்சுறுத்தும் பிரச்சினை எனக் குறிப்பிட்டது மத்தியதர வர்க்கத்தின் பேராசை. எல்லாருக்கும் எல்லாம் தெரியும். ஆனால் எந்த விஷயத்திலும் அமைதியாய் இருப்பதில் நாம் பிரியப்பட்டவர்கள். நமக்கு மட்டும் எதற்கு அந்த வேலை. ஒழுங்காகப் படித்தோமா பணம் கொட்டிக்கொடுக்கும் நிறுவனத்தில் வேலையில் சேர்ந்தோமா என்றிருப்பது எவ்வளவு நிம்மதி. அரசியல், போராட்டம் என்றெல்லாம் நாம் போக முடியுமா? தேவையில்லாத விஷயத்தில் ஏன் மூக்கை நுழைக்க வேண்டும்? எதையும் கண்டுகொள்ளாமல் போய் விடுவது நல்லது என்ற அறிவுரை ஆரம்பம் முதலே கூறப்பட்டு வந்திருக்கிறது நமக்கு. எல்லாப் பிள்ளைகளும் ஒழுங்காத்தானடா இருக்கு உனக்கு மட்டும் ஏண்டா இந்த வேலை என்று சொல்லியே வாயை அடைத்து விடுகிறார்கள். நடப்பதைக் கண்டும் காணாமல் இருப்பது தவறு என்று தெரிந்தும் கண்டும் காணாததது போல் நடந்துகொள்வதைத் தவிர்த்து எதுவுமே செய்ய முடியாது என்பதை நினைக்க நினைக்க எரிச்சலாக இருக்கிறது. எதிர்விளைவாகக் குறைந்தபட்சம் சமூகம் எதையெதை தேவை என்று கருதுகிறதோ அதற்கு அடி பணியாமல் திமிறித் திரிய வேண்டும் என்னும் வேகம் எழுகிறது, அப்படித் திரிவதனால் அழிவு தான் முடிவென்று அறிவுறுத்தப்பட்டாலும். இங்கே சுகமாக வாழ்வதைவிட அழிவது சுகமாகத் தான் உள்ளது.


வியாழன், மே 20, 2010

இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்

ஆழத்தில் சொரணையான கர்ஜனை




கடந்த ஏழாம் தேதி தென்காசி தாய்பாலாவில் மாலைக்காட்சியில் இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் படம் பார்த்தேன். இருபது ரூபாய் டிக்கெட்டுக்கு நாற்பது ரூபாய் கவுண்டரிலேயே வாங்கினார்கள். தியேட்டரில் பெரிய கூட்டமில்லை. இடைவேளை வரை படம் சாதாரணமான படமாக தோன்றியது. படம் முழுவதும் பார்த்து முடிந்த பின்பு இது சாதாரண படமாக தோன்றவில்லை. ஓரளவு சென்ஸிபிளான படமெனத் தோன்றியது. ஆனால் அதன் காரணமாகவே படம் ஓடாதோ எனவும் தோன்றியது. படத்தை நண்பர்கள் யாரும் பெரிதாக சிலாகிக்கவில்லை. எனக்கென்னவோ படம் சரியாக கவனிக்கப்படவில்லையோ என்ற எண்ணம் எழுந்தது. எனவே குறைந்தபட்சம் படம் குறித்து வலைப்பதிவிலாவது எழுதிவிட வேண்டுமென நினைத்தேன். எனவே பின்வரும் விமர்சனம்.

துரோகத்தால் வீழ்த்தப்பட்ட தலைவனின் மர்மமான மரணம். தலைவனில்லாத நேரத்தில் அம்மக்களைக் கொடுமைப்படுத்தும் கொடுங்கோலன். யாராவது இந்த மக்களைக் காப்பாற்ற மாட்டார்களா என்றிருக்கும்போது தலைவனைப்போல தோற்றம் கொண்ட ஒருவரை தலைவனாக முன்னிறுத்துதல். அவர்கள் கூட்டத்திலேயே துரோகி ஒருவன் முளைப்பது. நேர்மையான தலைவனுக்காக காத்திருக்கும் மக்கள் கூட்டத்தின் கதை அடி நீரோட்டமாக இருக்க அதன்மேல் எழுப்பப்பட்டிருப்பதோ கௌபாய் உலகம்.

நிறைய விஷயங்களைச் சொரணையோடு சொல்லிச் செல்கிறார் இயக்குநர். புரட்சி, சுய உரிமை எனத் தமிழன் குழி தோண்டிப்புதைத்துவிட்ட விஷயங்கள் எல்லாம் படத்தில் பேசப்படுகின்றன. சுயமாய் யோசிக்கும் எல்லோருக்கும் எழும் இயல்பான ஆதங்கங்கள் எந்தவிதமான ஆரவாரமுமின்றி போகிறபோக்கில் சொல்லப்பட்டிருக்கின்றன.


இப்படத்தை வெறும் நகைச்சுவைப் படமாக சுருக்கிவிட மனமில்லை. படத்தின் திரைக்கதையில் சின்னச்சின்ன விஷயங்களும்கூட மிக நுண்ணிப்பாக கவனமாக கையாளப்பட்டுள்ளன. அணு ஒப்பந்தத்தை நக்கல் செய்வது அதுவும் வீரராகவனின் அந்தக் கேள்வி சுய மரியாதையிலிருந்து முளைப்பது. மொழிபெயர்ப்பின் அபத்தம் அழகான நகைச்சுவையாக்கப்பட்டிருக்கிறது. அப்படியே டிட்டோவாக ஆத்ரிகேசாவின் ஒவ்வொரு சொல்லையும் அசைவையும் ட்ரான்ஸ்லேட்டர் லீ மொழிபெயர்ப்பது. இறுதியில் பள்ளத்தில் தவறி விழுந்து தொங்கும்போது ஆத்ரி கேசா வெளிப்படுத்தும் அலறலைக்கூட மொழிபெயர்க்கிறார் லீ.

சோப்பு டப்பா விக்க வந்த நம்ம ராபர்ட் கிளைவுக்கே நூத்தம்பது வருஷமாக கழுவி விட்டவனுக தான இவனுக என்னும் வசனத்தைப் பேசும் போது வெளிப்படும் நாசரின் சைகை சுரீரெனப் பாய்கிறது நமது அசட்டுத்தனத்தின் மேல்.

புதையலைத் தேடி புறப்படும் பயணமும் முடிந்த அளவு கிரியேட்டிவிட்டியோடு நிகழ்த்தப்பட்டுள்ளது. தனது இனமே அழிக்கப்பட்ட நேரத்திலும் எந்த வித எதிர்ப்பையும் காட்டாமல் துரோகிகளுக்கு துணைபோன கூட்டத்தின் சொரணையற்ற தன்மை கண்ட வேதனையில் உருவாகியுள்ளதோ இத்திரைக்கதை என்ற நினைப்பே படத்தைப் பார்க்கையில் மேலெழுகிறது. அதன்காரணமாகவே - இலங்கைப் பிரச்சினையை இவ்வளவு நுண்ணுணர்வோடு சொல்லியதாலேயே - படத்தின் குறைகளைப் பட்டியலிடவும் மனம் கூசுகிறது. மொத்தத்தில் கவனிக்கப்பட வேண்டிய படம் இது. ஆனால் கவனிக்கப்படுமா?

லேட்டஸ்ட்

ரஜினியாவாரா விஜய்?

தொடர்பவர்