இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, செப்டம்பர் 27, 2013

ஜன கண மன என ஜதி சொல்லும் நேரம்...

2003ஆம் ஆண்டு முதல் வருடந்தோறும் செப்டம்பர் 10 சர்வதேச தற்கொலைத் தடுப்பு நாளாக அனுசரிக்கப்படுகிறது. ”அவமானம்: தற்கொலைத் தடுப்பின் மிகப் பெரிய தடை” ("Stigma: A Major Barrier for Suicide Prevention.") என்பதே இந்த ஆண்டுக்கான மையப்பொருள் அல்லது கரு. தற்கொலைத் தடுப்புக்கான சர்வதேச அமைப்பும் உலக சுகாதார நிறுவனமும் இணைந்து உலக தற்கொலைத் தடுப்பு நாளை அனுசரிக்கிறது.

வளர்ச்சியடைந்த நாடுகளில் முக்கிய மனநலப் பிரச்சினையாக தற்கொலை உள்ளது. வளரும் நாடுகளிலும் தற்கொலை செய்துகொள்தல் அதிகரித்துவருகிறது. உலகம் எங்கும் நடைபெறும் மரணங்களில் தற்கொலை முக்கியப் பங்கு வகிக்கிறது. குறிப்பாக இளைஞர்கள் அதிகமாக தற்கொலை செய்துகொள்கிறார்கள். உலகத்தில் ஒவ்வோர் ஆண்டும் பத்து லட்சம் பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள். சராசரியாக 40 விநாடிகளுக்கு ஒருவர் தற்கொலைசெய்துகொள்கிறார். கொலை, போர் ஆகியவற்றால் இறப்பவர்களைவிட அதிகமானோர் தற்கொலையால் உயிரிழக்கிறார்கள். தற்கொலையால் இறப்பவர்களைவிட அதிகமானோர் தற்கொலை முயற்சியை மேற்கொள்கிறார்கள்.

இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு மட்டும் ஒரு லட்சத்து முப்பத்தைந்தாயிரத்து நானூற்றி நாற்பத்தைந்து பேர் (1,35,445) தற்கொலை செய்துள்ளார்கள். தினசரி 371 பேர் அதாவது 242 ஆண்களும் 129 பெண்களும் தற்கொலையால் மரணமடைந்துள்ளனர். இந்தியாவிலேயே அதிகமாக தமிழகத்தில் தான் பதினாறாயிரத்து தொள்ளாயிரத்து இருபத்தியேழு பேர் (16,927) தற்கொலை செய்துகொண்டனர். தற்கொலை செய்துகொண்டவர்களில் 37 சதவிகிதத்தினர் தூக்கிட்டுக்கொண்டனர், 29.1 சதவிகிதத்தினர் விஷம் குடித்துள்ளனர், 8.4 சதவிகிதத்தினர் தீயிட்டுக்கொண்டனர். தமிழ்நாட்டில் 5,393 பேர் தூக்கிட்டும், 3,459 பேர் விஷம் குடித்தும், 2,349 பேர் தீயிட்டும் தற்கொலை செய்துகொண்டனர். சென்னையில் மட்டும் 282 பேர் தீயிட்டுத் தற்கொலை புரிந்துள்ளனர்.

தற்கொலை செய்துகொள்பவர்கள் பெரும்பாலும் மனநலப் பாதிப்பின் காரணமாகவே இந்த முடிவுக்கு வருகிறார்கள். அடுத்த இருபது வருடங்களுக்குள் மனநலப் பிரச்சினை காரணமாக உருவாகும் நோய்கள் உலக நோய்களுள் 25 சதவிகிதமாக இருக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. புற்று நோயைவிட இதய நோயைவிட மனநலம் சார்ந்த நோய்களே உலகத்தின் மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கும். தற்கொலை செய்பவர்களில் பெரும்பாலானோர் தற்கொலை செய்யும் தருணத்தில் உடல்நல, சமூக ஆர்வலர்களின் ஆலோசனைகளை நாடுவதில்லை. பல சந்தர்ப்பங்களில் நெருக்கடியில் சிக்கித் தவிப்பவர்களுக்கு தேவையான நேரத்தில் போதுமான உதவிகள் கிடைப்பதில்லை.



தற்கொலை எண்ணம் மூளும் சமயத்தில் அன்புக்குரியவர்கள் அருகில் இல்லாததால் பலர் மனத்தில் அந்த எண்ணம் உருவாகிறது. மனநலப் பாதிப்புடன் அவமான உணர்வும் சேர்ந்து தற்கொலை எண்ணத்தை வலுப்படுத்திவிடுகிறது. அவமானம் என்னும் உணர்வு பல சமூகங்களில் வேரோடியுள்ளது. பொதுவாக கல்வி அறிவு இல்லாதது அதாவது அறியாமையே அவமானம் என்னும் உணர்வு தோன்றுவதற்கு முக்கியக் காரணமாகும். அறியாமை காரணமாக உருவாகும் அவமானம் என்னும் உணர்வை முறையான கல்வி நிகழ்ச்சிகளின் மூலம் அகற்றிவிடலாம். பொதுவாக ஒரு சமூகத்தில் வயது சார்ந்த கல்வி சார்ந்த, மதம் சார்ந்த ஒரு குறிப்பிட்ட பிரிவினரிடையே இது காணப்படும். மனநலம் பாதிக்கப்பட்டுத் தற்கொலை எண்ணம் கொண்டோரிடம் போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே இத்தகைய கல்வி நிகழ்ச்சிகளின் நோக்கம்.

ஆனால் அவமான உணர்வை வெற்றிகொள்ள அறிவு மட்டும் போதாது. பொதுவாக பல சமூகங்களில் மனநலம் பாதிக்கப்பட்ட, தற்கொலை எண்ணம் கொண்ட தனிநபர்கள் குறித்து எதிர்மறையான எண்ணம் உள்ளது. மனநலப் பாதிப்பு, தற்கொலை எண்ணம் குறித்த கல்வியால் இத்தகைய எதிர்மறை எண்ணத்தை மாற்ற முடியாது. உண்மையைச் சொன்னால், மனநலப் பாதிப்புக்குள்ளாகி தற்கொலை எண்ணம் கொண்ட நோயாளிகளைக் கையாளும் மனநல நிபுணர்களே நோயாளிகள் குறித்த எதிர்மறை எண்ணங்களையும் முன்முடிவுகளையும் கொண்டுள்ளார்கள். இதன் விளைவாக தற்கொலை எண்ணம் கொண்டவர்களுக்கு நெருக்கடி நேரத்தில் கிடைக்க வேண்டிய அனுசரணையான உதவிகள் கிடைக்காமல் போகின்றன. ஒரு சமூகத்தின் கலாச்சாரங்களில் ஊடுருவியிருக்கும் இந்த எதிர்மறையான எண்ணங்களை மாற்ற பெரும் முயற்சிகள் தேவை. கூடவே மனநல நிபுணர்கள் வழங்கும் சிகிச்சை முறைகளிலும் மாற்றம் வேண்டும்.

அவமானம் என்னும் உணர்வு காரணமாகவே மனநலப் பாதிப்பு காரணமாகத் தற்கொலை எண்ணம் கொண்ட தனிநபர்களது சுதந்திரம் விஷயத்தில் பாரபட்சம் காட்டப்படுகிறது. இத்தகைய பாரபட்சம் தனிநபர், சமூகம், நிறுவனம் மட்டங்களில் உருவாகிறது. தற்கொலை முயற்சியைக் குற்றமாகக் கருதுவது இத்தைய பாரபட்சத்திற்கு உதாரணம்.



தற்கொலைக்கு முயற்சியில் ஈடுபட்டவர்கள் தகுந்த நேரத்தில் சிகிச்சை பெற்றதன் மூலம் உயிர் பிழைத்து பழைய வாழ்க்கைக்கு திரும்புவதை இத்தகைய பாரபட்சமான எண்ணம் தடுத்துவிடும். மேலும் தற்கொலை முயற்சியைக் குற்றமாகப் பார்ப்பது என்பது மனநலப் பாதிப்பு கொண்ட தற்கொலை எண்ணம் உடையவர்களுக்கு அச்சுறுத்தலாகவே இருக்கும். பிழைத்தால் தண்டனை கிடைக்கும் என்பதாலேயே கண்டிப்பாக இறந்துவிட வேண்டும் என எண்ண வாய்ப்புள்ளது.

ஒட்டுமொத்த உடல்நலப் பிரச்சினைகளை ஒப்பிடும் போது தற்கொலைத் தடுப்பு விஷயத்தில் அரசின் நிதி ஒதுக்கீடு குறைவான அளவிலேயே உள்ளது. இந்த விஷயத்தில் நிதிதிரட்டு முயற்சியும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. ஏனெனில் தற்கொலை அவமான காரியம் என்பதால் தற்கொலைக்கு எதிரான முயற்சிகளுக்கு நிதி தர தனிநபர்களோ, அரசுகளோ, சர்வதேச நிறுவனங்களோ பெரிய ஆர்வம் காட்டுவதில்லை.

சமூகத்தில் நிலவும் அவமானம் என்னும் உணர்வை ஒழிப்பதில் அனைவரும் ஒன்று திரண்டு புதிய உத்திகளைக் கையாண்டு பணியாற்ற வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்த உலக தற்கொலைத் தடுப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. அவமானம் என்னும் உணர்வை ஒழிக்காதவரை தற்கொலையைத் தடுப்பது கடினம். இந்த வருடத்தின் தற்கொலைத் தடுப்பு தினத்தை முன்னிட்டு சர்வதேச தற்கொலை தடுப்பு நிறுவனம் சைக்கிளில் உலகம் முழுவதையும் சுற்றும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.


தற்கொலை தடுப்பில் சிறப்பாக பணிபுரிபவர்களை ஊக்குவிக்க, ஸ்டெங்கல் ஆராய்ச்சி விருது, ரிங்கல் சேவை விருது, ஃபார்பெரோ விருது, டி லியோ நிதி விருது ஆகிய விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன.

ஆல் இந்தியா ரேடியோவுக்காக எழுதியது.

வெள்ளி, ஜூன் 07, 2013

சூது கவ்வும்

அதர்ம தர்மம்



 தமிழ்த் திரைப்படங்கள்மீது நம்பிக்கை முற்றிலும் தூர்ந்து போகும்போது ஏதோவொரு படம் வெளியாகி நம்பிக்கையூட்டும். அந்த நிழலில் சில காலம் இளைப்பாற முடியும். சுப்ரமணியபுரம், ஆடுகளம் என்னும் அந்த வரிசையில் சூது கவ்வும் திரைப்படத்தை இருத்த முடிகிறது. நயன்தாராவுக்குக் கோயில் கட்டிய பகலவன், ஜாக்குவார் காரை ஓட்டிப்பார்க்கும் விருப்பத்தால் வேலையைப் பறிகொடுத்த சேகர், பெண்ணின் நயவஞ்சகத்திற்குப் பலியாகி வேலையிழந்த கேசவன், இல்லாத காதலியை இருப்பதாகப் பாவித்து இன்புறும் ஆள்கடத்தல்காரனான தாஸ் ஆகிய நால்வரும் சந்தித்துக்கொள்வதும் பின்னர் நிகழும் சுவாரசியமான சம்பவங்களும் தாம் சூது கவ்வும். 

நன்கு வாய்விட்டுச் சிரிக்கச்செய்யும் பல காட்சிகளைக் கொண்ட இத்திரைப்படத்தை வெறுமனே நகைச்சுவைப் படம் என்னும் கூண்டுக்குள் அடைக்க மனம் ஒப்பவில்லை. வன்முறைச் சம்பவங்களற்ற, பாலியல் சித்தரிப்புகளற்ற, ‘விளிம்புநிலை மனிதர்கள்’ இல்லாத புதிய முயற்சி இப்படம். சமகாலச் சமூக அபத்தங்களின் மீது கொண்ட கோபத்தை வெளிப்படுத்தும் விதத்தில் மற்ற படங்களில் இருந்து இது வித்தியாசப்படுகிறது. இந்தப் படத்தின் மைய உத்தி மும்பை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் கமல் ஹாசன் கையாண்டதுதான் என்றாலும் எக்ஸ்பிரஸைச் சூது கவ்வும் அநாயாசமாக முந்துகிறது. இயக்குநரை மீறிக் கமலிடம் துறுத்திக்கொண்டிருந்த அறிவுஜீவித்தனம் படத்தைப் புத்திசாலித்தனமாக்காமல் பார்த்துக்கொண்டது. ஆனால் இயக்குநர் நலன் குமரசாமியிடம் வெளிப்பட்டுள்ள குருட்டுத்தனமான முட்டாள்தனமும் முரட்டுத்தனமான புத்திசாலித்தனமும் இதை ஒரு மாறுபட்ட படமாக்குகிறது. 

பெரு நகரில் வாழும் சராசரி இளைஞர்களின் உலகம் அப்படியே பதிவாகியுள்ளது. தாகமெடுக்கும்போதெல்லாம் பீர் குடிக்கும் இளைஞர்கள் ஆக்ஸிஜனைவிட அதிகமாக நிகோடினைச் சுவாசிக்கின்றனர். இவர்களுக்கு அறச்சிக்கல்கள் எழுவதேயில்லை. அந்தந்த கணத்தில் வாழ்ந்துவருகிறார்கள். வேலை குறித்து படத்தில் வெளிப்படும் தியரியைச் சதாசர்வகாலமும் மரபில் மூழ்கிக் கிடக்கும் பொதுமனம் புரிந்துகொள்வது துர்லபம். பொதுச்சமூகம் உயர்வாகக் கருதும் பல விஷயங்கள் இப்படத்தில் எள்ளலுக்கு ஆளாகியுள்ளன. நடிகர்கள் மட்டுமன்றி நடந்தது என்னன்னா அருமைப்பிரகாசம், துரும்பிலும் இருப்பரில் வரும் நேர்மைக் குசும்பு என நலனின் குறும்படங்களில் இடம்பெற்ற சில விஷயங்கள் சூது கவ்வும் படத்தில் தலைகாட்டுகின்றன. சினிமா கிறுக்கைச் சித்தரித்த ஒரு படம் எடுக்கணும், சொதப்பலான படமெடுப்பைக் கூறும் உண்மையைச் சொன்னா, நெஞ்சுக்கு நிதி, என்கவுண்டர் பற்றிய தோட்டா விலை என்ன, ஒரு வீட்டில் பேய் இருந்துச்சாம் போன்ற பல குறும்படங்களில் தனித்தனியே கிடந்த பல உத்திகளை இயக்குநர் நலன் இப்படத்தில் ஒன்றுசேர்த்துள்ளார். நேர்த்தியான திரைக்கதை ரசிகர்களை எந்தவகையிலும் குழப்பக் கூடாது என்பதற்கு உதாரணம் இப்படம். திரைக்கதையில் சீரான தொடர்பு உள்ளது. படத்தின் பிற்பகுதியில் வரும் கோடம்பாக்கம் தாதாவுக்கு முற்பகுதியிலேயே குறிப்பு உண்டு. படத்தில் மிக இக்கட்டான சமயத்தில் விரைவாகக் காரைக் கடத்தும்போதும் அதை எங்கே விட்டுச்செல்வோம் என்பதை உரிமையாளரிடம் தெரிவித்துவிட்டே செல்கிறார்கள் தாஸ் அண்ட் கோ.


பல காட்சிகளில் தீவிரமான விஷயங்களை இயல்பாகத்  தெரிவித்துவிட்டுக் காட்சி நகர்ந்துவிடுகிறது. அருமைப் பிரகாசம் அம்மா தந்த பணம் ஹெலிகாப்டரில் இருந்து கீழே விழும்போது அதைப் பிடிப்பதற்காக ஓர் எளியவரின் வேட்டியைப் பணம் கொடுத்துப் பெறும் காட்சி ஒட்டுமொத்தச் சமூகத்தின் இழிநிலையையும் மவுனமாகக் கேள்விக்குள்ளாக்குகிறது. பிரத்யேகக் கவனத்தை ஈர்க்கும் வகையில் படமாக்கப்படாத அந்தக் காட்சியை அலட்சியமான பார்வையாளன் எளிதில் தவறவிட்டுவிடுவான். ஆனால் அது ஆழமான சமூக விமர்சனம். இதைப் போன்ற சிறிய விஷயங்களில் வெளிப்பட்டிருக்கும் புரிதல்கள் படத்தின் மீது மரியாதைகொள்ளச் செய்கிறது. தாங்கள் கடத்த திட்டமிட்ட அருமைப் பிரகாசத்தை மற்றொரு குழுவினர் காரில் கடத்திச் செல்லும் காட்சியில், ‘அவங்க பின்னாடியே வர்றாங்க’ எனக் கூறப்படும்போது தாஸ், ‘நாம முன்னால போறோம்’ என்பார். ‘ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்’ எனக் கேட்கையில் ‘நிறைய வித்தியாசம்’ என்பார். அதே போல், தாஸ் நண்பர்களுடன் போலீஸ் வேனில் அமர்ந்திருக்கும் காட்சியில், “குற்றவாளிகளைத் தான் என்கவுண்டரில் போட முடியும் நிரபராதிகளை என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும்” என்பார். இத்தகையவை நகைச்சுவைப் படத்திற்கான வசனங்கள் அல்ல. வீரியமான சமூக விமர்சனத்தின் வெளிப்பாடு இவை. 

அருமைப் பிரகாசத்தின் வாக்குமூலத்தைப் பதிவுசெய்த பின்னர் அதைப் பிரதி எடுக்க ஆட்டோவில் செல்லும் காட்சியும் குறிப்பிடத்தக்க ஒன்று. தங்களது பிரச்சினைகளில் இருந்து தப்பித்துவிடலாம் என்ற மிதப்பின் கணத்தில் வீடியோ கேசட் தவறி விழுந்து சிதையும்போது பின்னணியில் ஒலிக்கும் டன்டணக்கா நாம் கொள்ளும் அபத்தமான நம்பிக்கைகளைக் கேலிசெய்கிறது. நேர்மையான அமைச்சரின் இடத்தைக் கள்ளத்தனத்தைப் பிசிறு தட்டாமல் செயல்படுத்தும் அமைச்சரின் மகனே பறித்துக்கொள்ளும்போது அறம் குறித்த வரையறைகள் காலாவதியாகின்றன. அறம் குறித்த நிலைப்பாடு ஆளாளாளுக்கு வேறுபடுவதை மிகவும் நுட்பமாக இத்திரைப்படம் காட்சிப்படுத்தியுள்ளது. நேர்மை என்பது புகழுக்கான உத்தி என்பதை நாசூக்காக உணர்த்தும் இப்படம் ஊழலையும் நேர்மையையும் ஒரே தட்டில் வைக்கிறது. 

நலனின் ஒரு படம் எடுக்கணும் குறும்படத்தில் வரும் ஒரு வசனம்: “முடிந்தவரை இம்ப்ரூவ் பண்ணிட்டு பெர்பெக்ஷனை நோக்கி போயிட்டேயிருக்கணும்” என்பது. இந்தப் படத்தைப் பொறுத்தவரை நலனுக்கு அது முற்றிலும் பொருந்திப்போகிறது. இந்தப் படம் பல காட்சிகளில் லாஜிக்கை மீறியுள்ளது. லாஜிக்கை மீறாமல் எந்தத் திரைக்கதையையும் உருவாக்க முடியாது. எதற்காக, எதை உணர்த்துவதற்காக லாஜிக்கை மீறுகிறோம் என்பதுதான் முக்கியமானது. பாக்யராஜின் வெற்றிப்படமான அந்த 7 நாட்களில் மிகப் பெரிய லாஜிக் மீறல் இருக்கும். ஆனால் திரைக்கதையின் பலத்தின் முன்னே அது பலவீனமாகியிருக்கும். காதலனுடன் சேர்த்துவைப்பதாகத் தெரிவித்துத் தான் ராஜேஷ் அம்பிகாவை மரண வாசலில் இருந்து அழைத்துவருவார். ஆனால் இறுதிக்காட்சியில் அம்பிகாவை ராஜேஷ் காதலனுடன் அனுப்பிவைக்க மாட்டார். அங்கு லாஜிக்கை மீறிய திரைக்கதை தான் வெற்றிபெற்றது. சூது கவ்வும் திரைப்படத்தைப் பொறுத்தவரை லாஜிக் மீறல் குறித்து அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை. ஏனெனில் படத்தில் பெரும்பாலான வெளிப்படைக் காட்சிகள் உள்ளுறைக் காட்சிகளைக் கொண்டிருக்கின்றன. இப்படி ஓர் அமெச்சூர்தனமான ஆள்கடத்தல்காரனா என்று கேள்வி எழுந்தால், இதற்கே இப்படி ஆத்திரப்படுகிறீர்களே உங்கள் வாழ்க்கையில் எவ்வளவு அபத்தங்கள் என்னும் பதில் கேள்வி அங்கே தொக்கி நிற்கிறது. அத்தகைய கேள்விகளை உருவாக்குவதுதான் முக்கியம் எனும்போது லாஜிக்குகளை மீறுவது பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. 


பெண்ணே இல்லாத திரைக்கதையில் வணிகத்திற்காகவும் சுவாரசியத்திற்காகவும் ஷாலு என்னும் கதாபாத்திரத்தைப் பயன்படுத்தியிருக்கும் விதம் புத்திசாலித்தனமான உத்தி. சின்னச் சின்ன குறும்பு நடிவடிக்கைகளால் பார்வையாளர்களை எளிதில் ஈர்த்துவிடுகிறார் ஷாலு. ஒரு கட்டத்தில் அதை ஓரங்கட்டிவிட்டு அப்படியே விட்டுவிடவுமில்லை இயக்குநர். இறுதியில் ஷாலு போன்ற ஒரு பெண்ணை தாஸ் கடத்துகிறார். அமைச்சரின் மகள் அவர். அத்துடன் படம் நிறைவுபெறுகிறது. ஆனால் பார்வையாளனிடம் படம் தொடர்கிறது. வழக்கமாகப் பணம் கொடுத்தால் தாஸ் ஆளை விட்டுவிடுவார். இப்போது அது நடக்குமா? ஏனெனில் தாஸின் ஷாலு அவள். ஒரு காலத்தில் தாஸுடன் ஷாலுவின் பிம்பம் இருந்தது. இப்போது அவரிடம் ஷாலுவே இருக்கிறார். ஆனால் பிம்பத்தில் தாஸைச் சந்தோஷப்படுத்திய ஷாலு நிஜத்தில் அவரைக் குஷிப்படுத்த முடியாது. ஏனெனில் அவருக்கு தாஸ் வெறும் கடத்தல்காரன். இந்தச் சிக்கல் தான் நமது வாழ்க்கை. இதை இப்படியும் உணர்த்தலாம் என்பதே மரபூறிய  மண்டையில் உறைக்காது. 

சினிமா, அரசியல், சோதிடம், செய்தி அலைவரிசை எனக் கிடைத்த எந்த இடத்தையும் இயக்குநர் விட்டுவைக்கவில்லை. சின்ன சின்ன இடங்களில் கூடத் தனது முத்திரை பதிக்கத் தவறவில்லை நலன். செய்தி அலைவரிசையின் அடிப்பகுதியில் வார்த்தைகளாக நகரும் ராஜ கம்பீரம் திடீர் மரணம், பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் தமிழில் படமெடுக்க ஆர்வம் போன்ற செய்திகளே அதற்கு எடுத்துக்காட்டுகள். நேர்மையாக இருப்பது தவறல்ல ஆனால் அதற்கு ஓர் எல்லை உண்டு. ஒரு கட்டத்திற்கு மேல் அது உளவியல் சிக்கல் தான். ஞானோதயம் கதாபாத்திரம் லஞ்சம் வாங்க மறுப்பது சரி. ஆனால் மகனை மீட்க கட்சி தந்த நிதியைத் திரும்பக் கொண்டுபோய்க் கொடுப்பதைக் கட்சியாலேயே சகித்துக்கொள்ள முடியாது என்பதுதான் எதார்த்தம். நீதிமன்றக் காட்சிகளில் வழக்கமாக வாய்மையே வெல்லும் எனக் காந்தி படம் மாட்டப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் ஒரே ஒரு திருவள்ளுவர் படம் மட்டும் தான். அவர் உலகப்பொதுமறை எழுதியவர், திருக்குறளில் எல்லாச் சிக்கலுக்கும் தீர்வு உண்டு என்பதால் அது தீவிர எள்ளல்.  

விறைப்புடன் வசனம் பேசிய டி. எஸ். பி. சௌத்ரி, அனல் பரப்பிய அலெக்ஸ் பாண்டியன், கழுத்து நரம்பு வெடிக்கப் பேசிய வால்டர் வெற்றிவேல் எனத் தமிழகத்து முன்னோடி போலீஸ் கதாபாத்திரங்கள் அனைத்திற்கும் பிரம்மா தந்தது ஊமை அடி. தாஸைப் பொறுத்தவரை ஆள்கடத்தல் என்பது ஆத்மார்த்தம் தரும் வேலை. ஆள்கடத்தலை எந்தக் குறுக்குப்புத்தியும் இல்லாமல் மிகவும் நேர்மையாகச் செயல்படுத்துகிறார் தாஸ். ஆனால் ஊழல் மிகுந்த அரசியல்வாதி சட்டத்திற்குட்பட்ட ஆட்சி நடத்துகிறார். இந்த முரணில் வெளிப்படும் புத்தி சாதுர்யம் திரைக்கதையை மெருகேற்றியுள்ளது. படித்தவர்களின் திமிர், அறியாமை, பேராசை ஆகியவற்றைக் கேசவன் கதாபாத்திரம் மூலம் அம்பலப்படுத்துகிறார் இயக்குநர். அமைச்சர் மகன் அருமைப் பிரகாசத்தைக் கடத்தும் முடிவுக்கும், அது சொதப்புவதற்கும் மறைமுகக் காரணம் கேசவன் தான். திரைக்கதையில் கதாபாத்திரங்கள், வசனங்கள் ஆகியவை நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. நடிகர்கள் தங்களுக்கான கடமையைச் சரியாக நிறைவேற்றியுள்ளனர். விஜய் சேதுபதி தாஸ் கதாபாத்திரத்தை நூறு சதவிகிதம் உயிரோட்டமாக்கியுள்ளார். வங்கியில் மேலாளரிடம் பணம் பெற்றுக்கொண்டு பந்தாவாகத் திரும்பும் ஒரு காட்சி போதும், மாமா பின்ற மாமா எனச் சொல்லவைக்கிறார். நம்பிக்கையூட்டும் நடிகராக விஜய் சேதுபதி தென்படுகிறார்.



நம்பிக்கை கண்ணன் ஒரு காட்சியில் கூறுவார்: “நீங்க செய்யுறது தப்பு தான் ஆனால் அதில் ஒரு நேர்மை இருக்கிறது. அமைச்சர் செய்தது சரிதான் ஆனால் அதில் ஒரு துரோகம் உள்ளது” என்று. இந்த நகை முரணை அறக்கோட்பாடுகளால் எளிதில் விளக்க முடியுமா எனத் தெரியவில்லை. ஆனால் சூது கவ்வும் லாவகமாக விளக்குகிறது. அதுதான் இப்படத்தின் வெற்றி. திரையரங்கில் பார்வையாளர்களை ரசித்துச் சிரிக்கவைக்கும் பல வசனங்கள் கிரேஸி மோகன் தனமானவை அல்ல. கதாபாத்திரங்கள் தங்களுக்குள் நிகழ்த்தும் இயல்பான உரையாடல் பார்வையாளனுக்கு உற்சாகத்தைத் தருகிறது. அலுவலகங்களுக்கு மட்டும்தான் ஞாயிறு விடுமுறையா ஆள்கடத்தலுக்கும் விடுமுறைதான் என்பது தாஸுக்கு இயல்பானது ஆனால் பார்வையாளர்களுக்கு அது ரசனையான நகைச்சுவையாகிறது. இப்படத்தில் கதாபாத்திரங்கள் அனைத்தும் அவற்றின் அதிகாரம் களைந்த நிலையிலே பயன்படுத்தப்பட்டுள்ளன. அமைச்சர், காவல் துறை அதிகாரி போன்ற அனைவரும் மனிதர்களாக மட்டுமே வலம் வருகின்றனர். 

இசை, ஒளிப்பதிவு போன்றவை தேவைக்கேற்பப் பயன்பட்டுள்ளன. காசு, பணம், துட்டு, money பாடல் வண்ணமயமாக இருந்தாலும் படத்தில் வேகத்தடையே. தமிழ்த் திரையுலக மேதைகள் எல்லாம் வறட்டுத்தனமான படங்களைத் தொடர்ந்து உருவாக்கும் நேரத்தில் யாரோ ஓர் இளம் இயக்குநர் புத்துணர்ச்சியான படத்தைத் தரும்போது மனம் ஆசுவாசம் கொள்கிறது. முதல் படத்துடன் தனது முத்திரையை நிறுத்திக்கொள்ளாமல் இயக்குநர் நலன் தொடர்வது தமிழ்த் திரையுலகிற்கு நலம்பயக்கும்.

ஜூன் மாதக் காலச்சுவடு இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரை இது

திங்கள், ஏப்ரல் 01, 2013

பரதேசி


துயர விலங்கு



இரண்டாம் உலகப் போரின்போது நடைபெற்ற துயரச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு ரோமன் பொலான்ஸ்கி இயக்கிய த பியனிஸ்ட், மார்க் ஹெர்மென் இயக்கிய த பாய் இன் த ஸ்ட்ரைப்ட் பைஜாமாஸ் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான படங்களைத் திரைப்பட விழாக்கள், டிவிடிகள் ஆகியவற்றின் உதவியால் பார்க்க முடிகிறது. அந்தக் காலகட்டத்தின் துயரம் வற்றாத ஜீவநதியாக மீண்டும் மீண்டும் வெவ்வேறு வகையான களங்களில் ஏதோ ஒரு வகையில் காட்சிகளாக மாற்றப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அதே 1939ஆம் ஆண்டில் தங்களது சொந்த ஊரான சாலூரில் பிழைக்க வழியற்ற சூழலில் வாழ்வாதாரம் தேடித் தேயிலைத் தோட்டத்தில் கொத்தடிமைகளாக வாழ விதிக்கப்பட்ட இந்தியத் தமிழர்களுக்கு நேர்ந்த துயரார்ந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு பால் ஹாரிஸ் டேனியல் என்னும் ஆங்கிலேய மருத்துவர் 1969இல் எழுதிய நாவல் ரெட் டீ. இரா.முருகவேள் தமிழில் மொழிபெயர்த்துள்ள அந்த நாவலை விடியல் பதிப்பகம் எரியும் பனிக்காடு என்னும் பெயரில் 2007இல் வெளியிட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள சம்பவங்களுடன் தனது கற்பனையைக் கலந்து பாலா உருவாக்கியுள்ள படம் பரதேசி. 

சில ஆண்டுகளுக்கு முன்னர் மரணமடைந்த நடிகர் முரளியின் மகனான அதர்வா முரளிக்குத் தகுந்ததொரு வாய்ப்பை அளிக்க வேண்டியது தன் கடமை என்பதால் அவரை இப்படத்தின் முக்கியக் கதாபாத்திரத்துக்குத் தேர்ந்தெடுத்ததாகப்  பாலா கூறியுள்ளார். தனக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்பைப் பாலா சொல்லிக்கொடுத்தது போலவே செய்துகாட்ட அதர்வா அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதைக் காட்சிகள் உறுதிசெய்கின்றன. சித்தன், அகோரி போன்ற வழக்கமான பாலா படத்துக் கதாபாத்திரங்கள் போலவே ஒட்டுப்பொறுக்கி என்ற ராசா கோணலாக முகத்தைத் திருப்பிக்கொண்டு விரோதம் கலந்த விநோதப் பார்வையைத் தந்து தனியே திரிகிறான். தனித்துவிடப்பட்ட அவனது வாழ்வில் அவனுக்குத் துணையாக இருப்பவை துயரமும் துக்கமுமே. ஊரில் நடைபெறும் திருமணத்தின் கடின வேலைகள் அனைத்தையும் அவன் பிரயாசையுடன் செய்து முடிக்கிறான், அறிமுகக் கலை இயக்குநர் பாலசந்தரின் கலைரசம் ததும்பும் குடிசைகள் நிறைந்த சாலூரில் நூறு பேர் தான் இருப்பார்கள் ஆனால் காட்டையே அழித்துவிடுவது போல் ஆவேசமாக விறகு வெட்டுகிறான் ராசா. தேயிலைத் தோட்டத்தில் தப்பிக்க முயன்று மாட்டிக்கொண்டபோது அவனது கால் நரம்பு கோரத்துடன் துண்டிக்கப்படுகிறது. அந்தக் காட்சி மனத்தைப்  பாதித்திருக்கவேண்டும் ஆனால் அப்போது ராசா வெளிப்படுத்தும் கோரமான கத்தல் காரணமாக அது காதுகளைக் காவுகொள்கிறது. வளர்ந்துவரும் நடிகரான அதர்வாவுக்குத் தனிப்பட்ட முறையில் ராசா கதாபாத்திரம் திருப்தி அளித்திருக்கலாம் ஆனால் பார்வையாளனைப் பொறுத்த அளவில் அது செயற்கைச் சித்தரிப்பே. எல்லாப் புகழும் இறைவனுக்கே என்பதுபோல் தனது நடிப்பில் வெளிப்பட்ட ஜாலம் அனைத்தையும் பாலாவுக்குச் சமர்ப்பித்துவிட்டுச் சாதுவாக அதர்வா ஒதுங்கிக்கொள்வது அதனால்தானோ? 



வாழ்வில் அனுபவபூர்வ துன்பங்களையும் துக்கங்களையும் திரைப்படத்தில் வெளிப்படுத்த மௌனத்திற்கு உறுதுணை புரிவது புரிதல்மிக்க இசை. முதலில் வெளியிடப்பட்ட இத்திரைப்படத்தின் பாடல்களைக் கேட்டபோது ஒருவகையான புலம்பெயர் சோகத்தின் துயரத்தை உள்வாங்கிக்கொள்ள முடிந்திருந்தது. ஆனால் திரைப்படத்தின் இங்கிதமற்ற பின்னணியிசை, காட்சிகளில் அவ்வப்போது முகம்காட்டும் ஆன்மாவை அழித்தொழித்துவிடுகிறது. அளவுக்கு மீறிய ஓலமும் ஒப்பாரியும் பின்னணியில் வெளிப்படுவது அலுப்பூட்டுகிறது, சில காட்சிகளில் அருவருப்பூட்டுகிறது. மகேந்திரனின் உதிரிப்பூக்கள் திரைப்படத்தில் குழந்தைக்குப் பெரிய அம்மை என்று அஸ்வினி பதைபதைத்துச் சொல்லும்போது, பதற்றமின்றி மிகவும் சாதாரணமாகப் பெரிய அம்மையை ஒழித்துவிட்டதாக மார் தட்டும் அரசாங்க மருத்துவமனையில் தெரிவிக்கச் சொல்வார் விஜயன். அதில் வெளிப்படும் குரூரம் பார்வையாளனை உலுக்கக்கூடியதாக இருக்கும். காரணம் அது வெளிப்பட்ட விதம். ஆனால் பாலா எல்லாவற்றையும் மிகையாக்கத் துடிக்கிறார். அதனால் தான் இறுதிக்காட்சியில் ராசா தெருவோரப் பிச்சைக்காரன் போல் கூக்குரலிட்டுப் புலம்புகிறான். தான் வெளியேற முடியாமல் தவிக்கும் புதைகுழிக்குத் தன் மனைவி குழந்தையுடன் வருவது கண்ட அவனது  அதிர்ச்சி பார்வையாளனைப் புரட்டிப்போட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி அமையாததற்குக் காரணம் காட்சியில் தென்படும் மிகையுணர்ச்சி.   

திரைப்படம் காட்சி ஊடகம் என்பதை உணர்ந்து பாலா பெரும்பாலான காட்சிகளை மாண்டாஷாகவே நகர்த்துகிறார். பாடல்களைக்கூடப் பின்னணியாகத் தான் பயன்படுத்தியுள்ளார் என்பதை இங்கே நினைவுபடுத்தலாம். அதனால் தான் தேவைக்கு மட்டுமே வசனங்களையும் வசனகர்த்தாக்களையும் அவர் பயன்படுத்துகிறார்.  அது ஜெயமோகனாக இருந்தாலும் சரி, எஸ்.ராமகிருஷ்ணனாக இருந்தாலும் சரி, நாஞ்சில் நாடனாக இருந்தாலும் சரி. பாலாவுக்குத் தேவைப்படுவது இலக்கியப் பின்புலம் என்பதில் அவர் தெளிவாக இருக்கிறார். குசு, குண்டி, புடுக்கு என்பதைப் பாலாவே எழுதிவிடுவார், ஆனால் அதை நாஞ்சில் நாடன் எழுதும்போது அதற்கு இலக்கிய அந்தஸ்து கிடைக்கும் எனப் பார்வையாளன் எண்ணிவிடுவான் என்பது மட்டுமே பாலாவின் கணக்கு. 



ஒளிப்பதிவைப் பொறுத்தமட்டில் செழியனின் உழைப்பால் திரைக்காட்சிகள் அழகியலைச் சுமந்து திரிகின்றன. ஒவ்வொரு சட்டகத்திலும் ஒளிப்பதிவு இயக்குநரின் கடும் பிரயத்தனம் நீக்கமற நிறைந்திருக்கிறது. குறிப்பாக விஷ காய்ச்சல் காரணமாக டீ எஸ்டேட்டில் இறந்த கூலிகளின் சடலங்கள் மொத்தமாக எரிக்கப்படும் விஷுவல் பிரம்மாண்டமாக உள்ளது. திருவண்ணாமலை ஜோதி போல் கொளுந்துவிட்டு அழகாக எரிகின்றன சடலங்கள்! சடலங்கள் எரிவதைப் பிரத்யேக ரசனையுடன் படமாக்க இனியொருவர் பிறந்துதான் வர வேண்டும். பாலாவுக்கு வாழ்த்துப்பா இசைத்துக் கொண்டேயிருக்கலாம். பாலாவும் செழியனும் இணைந்து காட்சிகளில் மேற்கொண்டிருக்கும் நேர்த்தியும் ஒழுங்கும் சட்டகத்தின் அழகை அதிகரிக்கின்றன. ஆனால் அவையே படத்தைச் செயற்கையானதாக மாற்றுவதிலும் பெரும்பங்கு வகிக்கின்றன. பஞ்சாயத்தில் அமர்ந்திருப்பது, ஊரை விட்டு வெளியேறுவது, குளத்தில் மிருகம் போல் நீர் குடிப்பது போன்ற அனைத்துக் காட்சிகளிலும் கதாபாத்திரங்களை இருத்தியிருக்கும் பாங்கு படு நேர்த்தி என்றாலும் வெகு செயற்கை. சாலூர் மக்கள் எப்போதும் கூட்டம் கூட்டமாகவே காணப்படுகிறார்கள். பல காட்சிகளில் கதாபாத்திரங்களின் நடவடிக்கைகள் மேல்நிலைப்பள்ளியின் மாறுவேடப் போட்டிக்குள் நுழைந்தது போன்ற பிரமையை ஏற்படுத்துகின்றன. 

அங்கம்மா வேடமேற்றுள்ள வேதிகாவின் உடல்மொழியில் நவீனப் பெண்ணின் அசைவுகள்தாம் வழிந்தோடுகின்றன. அந்தக் காலகட்டத்து பருவப் பெண் குறித்த நினைவு சிறிதளவும் எழுவதில்லை. கங்காணி தந்த வாக்குறுதிகளை நம்பி ராசா உள்படக் கிராமத்தினர் அனைவரும் அறியாமையின் காரணமாகக் கேள்விகளற்றுக் கைநாட்டு வைக்கும்போது அங்கம்மா பரிதவிக்கிறாள். அது எப்படிச் சாத்தியம்? அவளுக்கு மட்டும் அந்த அறிவு எங்கிருந்து வந்தது? காட்சிபூர்வ விளக்கம் தரப்படவே இல்லை. தங்களுடன் வந்த ஒருவன் உடல்நலம் பாதிக்கப்பட்டு மரணத்தை எதிர்நோக்கும் சூழலில் அவனை அப்படியே விட்டுவிட்டுக் கிராமத்தினர் தொடர்ந்து செல்கின்றனரே ஏன் பாலா? அவர்கள் நெல்லுச்சோற்றுக்காகச் சடலத்தை மறைத்துவைத்த கொடூரர்கள் என்பதாலா? 



தொழிலாளர்கள்மீது ஏவப்படும் மனித உரிமை மீறல்கள், வேலைக்குச் செல்லுமிடத்தில் பெண்கள்மீது மேற்கொள்ளப்படும் பாலியல் வன்முறைகள் ஆகியவை சதா சர்வகாலமும் தொடர்ந்துகொண்டேயிருக்கின்றன. இத்தகைய கொடூரங்களை மனிதர்கள் கவனத்திற்குக் கொண்டுவந்து இவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே கலைப் படைப்புகள் முயல்கின்றன. ஒரு படைப்பாளியின் நோக்கம் அதுவாகத் தான் இருக்கும். அத்தகைய படைப்பாளியாகத் தன்னை எண்ணிக்கொண்டிருக்கலாம் பாலா. ஆனால் பரதேசி படமாக்கப்பட்ட களத்தில் ஆங்கிலேயருக்குச் சரியான ஆடை வழங்காத தொழிலாளிமீது பாலா காட்டும் கோபம் அவர் ஒரு கங்காணி என்பதையே உறுதிசெய்கிறது. இரண்டு மணி நேரம் திரையில் ஓடும் திரைப்படத்தின் கலைத் தன்மைக்காக மனித உணர்வுகளை நசுக்குவதென்பது சரியானதாக ஒரு படைப்பாளிக்கு பட்டால் ஆங்கிலேயே தேயிலைத் தோட்ட மேலாளருக்கும் கங்காணிக்கும் சாலூர் கிராமத்தினர் வெறும் கூலிகள் தானே. அதற்கு ஏன் இவ்வளவு ஒப்பாரி? 

சிறந்த ஒளிப்பதிவாளராக அறியப்பட்டிருக்கும் பாலுமகேந்திராவிடம் இயக்கம் கற்றவரான பாலா தன்னைத் தனித்துவமிக்க இயக்குநராக அடையாளம் காட்டிக்கொள்வதில் பெருவிருப்பம் உடையவர். அதற்குத் தேவையான அனைத்துவகை உழைப்பையும் அவர் மேற்கொள்கிறார் என்பதை அவரது திரைப்படங்களின் மூலம் அறிய முடிகிறது.  பாலாவின் குரு பாலுமகேந்திரா இயக்குநராகக் காரணமானவர் மகேந்திரன். அவர் தான் தமிழ் இயக்குநர்களில் நாவல்களை விழைவுடன் படமாக்கியவர். அவரைப் போல பாலாவும் நாவல்களைப் படமாக்குவதில் ஆர்வமாக உள்ளார். ஆனால் மகேந்திரனிடம் இருந்த பக்குவமும் புரிதலும் பாலாவிடம் இல்லை என்பதே உண்மை. புதுமைப்பித்தனின் ‘சிற்றன்னை’யை அப்படியே மகேந்திரன் உதிரிப்பூக்களாக மாற்றவில்லை. சுந்தரவடிவேலு கதாபாத்திரத்தை மட்டுமே எடுத்துக் கையாண்டிருப்பார் எனினும் ‘சிற்றன்னை’யைப் படத்தின் டைட்டிலில் குறிப்பிடுவார். ஆனால் டேனியலை நினைவுகூர்ந்த பரதேசி இரா.முருகவேளுக்கு நன்றி தெரிவிக்கவில்லை. பாலா ஆங்கிலேத்திலேயே நாவலைப் படித்திருக்கக்கூடும்.



பரிசுத்தம் கதாபாத்திரம் மூலம் பாலா தனது இந்துத்துவக் கருத்தியலைப் படத்தில் வலியப் புகுத்தியுள்ளார். கிறித்துவ மிஷினரிகள்மீது அநேக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டபோதும்  கல்வியிலும் மருத்துவத்திலும் அவர்கள் ஆற்றிய பங்கு புறந்தள்ள முடியாதது என்பதே பெரும்பான்மையினரது கருத்து. தேயிலைத் தோட்ட மருத்துவர் பரிசுத்தம் கதாபாத்திரச் சித்தரிப்பில் பாலாவிடம் மேலிடுவது கிறித்தவர்கள்மீதான வெறுப்பு மாத்திரமே. தனது படத்தை உலகத் தரமானது என்று கூறத் தான் கூச்சப்படுவதாகப் பாலா ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார். ஆனால் அவரே கூசும் அளவுக்கு இப்படம் குறித்து உணர்ச்சிமேலிட்ட கருத்துகளை இணையங்களிலும் சமூக வலைதளங்களிலும் காண முடிகிறது. பரதேசி பாலாவுக்கும் அவரை ஆராதிப்பவர்களுக்கும் கலைப்படைப்பாக இருக்கலாம் ஆனால் பொதுப் பார்வையாளனுக்கு அது கலை அனுபவமாக மாறவில்லை.  

காலச்சுவடு ஏப்ரல் 2013 இதழில் வெளியாகியுள்ள விமர்சனக் கட்டுரை இது.

புதன், மார்ச் 27, 2013

டாடி எனக்கொரு டவுட்?

 எட்டாம் கிளாஸ் ராஜா...  

 டாடி நல்லா படிச்சுப் பெரிய ஆளா ஆனாத்தான் சமூகத்தில் மரியாதை கிடைக்கும் அதனால் ஒழுங்கா பள்ளிக்கூடம் போகணும்னு சொல்றீங்க... சரி தான்

ஆனால் நல்லா படிச்சு பட்டம் வாங்கினாலும் எட்டாம் கிளாஸ் ராஜா மாதிரியான சாடிஸ்ட் கிட்ட வேலை பார்க்க வேண்டிய நிலைமை இருக்குது. ஆண்களும் பெண்களும் எவ்வளவோ படித்திருந்தும் வேலையைக் காப்பாத்தணும்ங்கிறதால அவனை எதிர்த்து எதுவும் பேசப் பயப்படுறாங்க. பிறகு ஏன் டாடி நல்லாப் படிக்கணும் ராஜா மாதிரியான ஆளை எப்படி சமாளிப்பது என்பதை எந்தப் பள்ளியிலும் கல்லூரியிலும் சொல்லித் தருவதே இல்லை. நாம் வாங்கும் பட்டத்தால் என்ன பயன்? இந்த மாதிரி கழிசடைகள் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கின்றன.

அதனால் நான் படித்து என்ன பயன் டாடி..? சொல்லுங்க டாடி சொல்லுங்க டாடி....

புதன், ஜனவரி 16, 2013

உஸ்தாத் ஹோட்டல்

ரசனையைக் கெடுக்கும் மலையாள அரசியல்

எவ்வளவோ படம் பார்க்க வேண்டும் என்ற ஆசையிருந்தும் கையிலேயே படம் கிடைத்தாலும் கூட பல திரைப்படங்களை பார்க்க முடிவதில்லை. இயல்பான சோம்பேறித்தனம். சும்மா மேற்சுவரை பார்த்துக்கொண்டே கற்பனையில் ஆழ்ந்திருப்பதில் ஒரு சுகம். பன்றி சாக்கடையில் புரள்வது போன்றது அது. இதை எல்லாம் மீறி சில சமயங்களில் ஒருசில படங்களை பார்த்துவிட முடிகிறது. சமீபத்தில் அப்படி பார்த்த ஒரு படம் உஸ்தாத் ஹோட்டல் என்னும் மலையாளப்படம். அன்வர் ரஷீத் இயக்கிய திரைப்படம் இது. ஒருநாள் அதிகாலை இரண்டரை முதல் ஐந்து மணி வரை தூக்கம் தொலைத்த இரவில் இந்தப் படத்தை பார்த்தேன். 

பொதுவாக மலையாளப்படங்களில் பெரிய அளவிலே காட்சிபூர்வ ரசனை இருக்காது என்ற மேம்போக்கான புரிதலை தகர்க்கும் விதமாக அமைந்திருந்தன காட்சிகள். கோழிக்கோடு பகுதி இஸ்லாமிய  வாழ்க்கையின் கூறுகளை தன்னகத்தே கொண்டு படம் நகர்ந்தது. பெரிய அளவிலான சம்பவங்கள் எவையும் இல்லை என்றாலும் பார்ப்பதற்கு எந்தத் தடையும் இல்லாமல் படத்தின் நகர்வு இயல்பாக அமைந்திருந்தது. படத்தின் கதை அது இது என்று எல்லாவற்றையும் எழுத இது அப்படத்தின் மீதான விமர்சனம் அல்ல. இப்படம் குறித்து என்னை பாதித்த சில நினைவுகள் அவ்வளவே. எனவே மிக விரிவாக இதில் எதையும் எழுதிவிட ஆசையுமில்லை, முயற்சியும் இல்லை. 



ஒரு பிரம்மாண்ட ஐந்து நட்சத்திர ஹோட்டல் அருகே அமைந்திருக்கும் சிறிய உணவகம் தொடர்பானது தான் இப்படத்தின் கதை. திலகன் அந்த உணவகத்தை நடத்துகிறார். பேரனோடு திலகனுக்கு உள்ள நெருக்கமும் மகனோடு திலகனுக்கு உள்ள விலகலும் நேர்த்தியாக படமாக்கப்பட்டிருந்தன. மகன் தன்னை புறக்கணித்து பேசும் ஒரு காட்சியில் கையால் கழுத்தை நீவிவிட்டு நகரும் போது அந்த கதாபாத்திரத்தின் அத்தனை இயலாமை அதை அப்படியே உள்வாங்கிக்கொள்ளும் பாங்கு ஒரு வித ஒட்டாத்தன்மை, புறக்கணிப்பு என அத்தனை உணர்ச்சியையும் ஒரே ஒரு உடல் அசைவில் வெளிப்படுத்திவிடுகிறார். 

சமைக்க போன இடத்தில் மணமகளோடு காதல் கொண்டு அவளையே கரம் பற்றியவர் திலகன். கிட்டத்தட்ட அதே வாழ்க்கை திரும்புகிறது பேரனுக்கும். உணவின் முக்கியத்துவத்தை அழகான காட்சிகள் மூலம் திரைப்படமாக அளித்திருக்கிறார்கள் .ரசிக்கும் விதத்தில் அமைந்துள்ளது படம் . ஆனால் படத்தில் வெளிப்பட்டிருக்கும் குரூரமான மலையாள அரசியல் படத்தின் மீது ஒருவித வெறுப்பை ஏற்படுத்திவிடுகிறது.  தமிழன் ஒருவன் பசிக் கொடுமையின் காரணமாக தனது மலத்தையே உண்ணுகிறான் என காட்சிபடுத்தியிருக்கிறார் இயக்குநர். 



தமிழ்த்தேசியவாதியாகவோ தமிழன் என்ற பெருமையோ இல்லாத சாதாரண மனிதனுக்கே எரிச்சலை ஊட்டும் விதமாக அமைந்துவிட்டது இந்தக் காட்சி. அருகருகே இருந்தும் அன்றாட வாழ்வியல் தேவைகளுக்காக ஒருவரையொருவர் சார்ந்திருக்கும் மாநிலங்களாக இருந்தும் ஆழ்மனதில் இவ்வளவு வெறுப்பு இருக்கிறதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி விடுகிறது இந்த திரைப்படம். எனது புரிதல் தவறாகக்கூட இருக்கலாம் தவறாக இருந்தால் உண்மையிலேயே மகிழ்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால் சரியாக இருந்தால்...?

வெள்ளி, டிசம்பர் 07, 2012

அம்மாவின் கைப்பேசி


காக்கைக்குஞ்சு...


அம்மாவின் கைப்பேசி படத்தின் அறிவிப்பு வந்தபோது அதில் தலைப்புக்குக் கீழே சிறிய எழுத்தில் ஆங்கிலத்தில் A Mother’s Hand Phone எனத் துணைத் தலைப்பு ஒன்று கொடுக்கப்பட்டிருந்தது. படத்தின் மீது ஒரு கவனத்தை உருவாக்கியது அந்த மொழியாக்கம்தான். பொதுவாக, டி.ராஜேந்தர், விஜயகாந்த், பவர் ஸ்டார் போன்றவர்களின் திரைப்படங்கள் எப்போதுமே முழு பொழுதுபோக்குக்கு உத்தரவாதமளிப்பவை. அந்த வகையான படமாக அம்மாவின் கைப்பேசி இருக்க முடியாது என்பதில் முழுமையான நம்பிக்கை இருந்தது. ஏனெனில் சொல்ல மறந்த கதை, ஒன்பது ரூபாய் நோட்டு, பள்ளிக்கூடம் போன்ற உலகத் தரமெனத் தான் நம்பிய படங்களைத் தாம் தங்கர் பச்சான் இதுவரை உருவாக்கியுள்ளார். அவரது நோக்கம் நல்ல திரைப்படம் என்பதால் அம்மாவின் கைப்பேசியைப் பார்ப்பதில் ஆர்வம் இருந்தது. இத்திரைப்படம் வெளியாகும் முன்னர் தங்கர் தொலைக் காட்சிகளில் அளித்திந்திருந்த நேர்காணல்கள் அனைத்திலும் கிராமத்துத் தாயையும் நகரத்து மகனையும் ஒரு செல்போன் மட்டுமே இணைக்கும் என்று ஏகத்துக்குத் தெரிவித்திருந்த செண்டிமெண்ட் குறித்த பயம்  எழாமல் இல்லை. அந்த நேர்காணல்களில் அவரிடம் தென்பட்ட பண்பட்ட பாவம் ரசிக்கத்தக்கதாக இருந்தது. இந்தத் திரைப்படத்தை 500 ஆண்டுகளுக்குப் பின்னர்கூட யாராவது ஒருவர் பார்த்து ரசிப்பார் என்று ரசனையோடும் பயபக்தியோடும் கலைச் செருக்கோடும் ஒரு நேர்காணலில் அவர் குறிப்பிட்டார். ஒரு கலைஞனுக்கு இருக்க வேண்டிய அவ்வளவு ஞானச் செருக்கும் நம்பிக்கையும் தங்கர் பச்சானிடம் இருந்தது குறித்து ஆச்சரியம் எழுந்தது.

அம்மாவின் கைப்பேசியில் காட்சிகள் ஒவ்வொன்றாய் தோன்றித் தோன்றி மறைந்தன. இந்தத் திரைப்படம் குறித்து மனம் அதுவரை உருவாக்கி வைத்திருந்த பிம்பங்களை முற்றிலும் கலைத்துப்போடச் செய்துவிட்டார் இயக்குநர் தங்கர் பச்சான்.  


கிராமத்துக் குடும்பத்தில் இளைய பிள்ளை அண்ணாமலை. அவனுடைய அம்மா வழக்கமான கிராமத்துத் தாய். ஏழெட்டுப் பிள்ளை பெற்று ஒருவரால்கூட மகிழ்ச்சியை அனுபவித்தறியாதவள். அண்ணாமலை பொறுப்பில்லாமல் சுற்றினாலும் அந்தத் தாய்க்கு மகன் என்றால் உயிர். இடுப்பில் முடிந்துவைத்த பணத்தை அவன் திருடுவதைக் கூட ரசிப்பவள். சின்னச் சின்னத் திருட்டை வீட்டில் தொடர்ந்து மேற்கொள்பவன் அவன். அவன் செய்த ரசனை மிக்க திருட்டு மாமன் மகள் செல்வி. அண்ணாமலையின் சகோதரர்கள், சகோதரிகள் அனைவரும் ‘இந்தக் காலத்து’ மனிதர்களைப் போல் சூதுவாது கொண்டவர்களாக இருந்தாலும் கதையின் நாயகன் நற்குணசீலனாகவே இருக்கிறான். செல்வி அவனுக்காகவே உருகினாலும் வேலை வெட்டி அற்ற அவனை அவள் வெறுப்பதுபோல் நடிக்கிறாள். செல்வியின் மீது அண்ணாமலை கொண்ட காதல் அவனை மற்றவர் வியக்கும் வண்ணம் உயர்த்துகிறது. 


அம்மாவின் கைப்பேசி எனத் தலைப்பிட்டோம், அதையே முன் நிறுத்தினோம் என்பது குறித்து அலட்டிக்கொள்ளவே இல்லை இயக்குநர். அம்மா மகன் பாசத்தை ஒழுங்காகச் சித்தரிக்க வேண்டுமென்ற பதற்றமின்றி  நிஜமான கலைஞன் போல் தனக்கு என்ன தோன்றுகிறதோ அதைத் திரையில் ஒளி ஓவியமாகச் செதுக்கியதில் தங்கர் தனித்துத் தெரிகிறார். ஒரு காட்சியில் கூடத் தாய் மகன் பாசம் மனதைத் தொடும்படி அமையாததற்காகத் தங்கர் பச்சான்மீது வருத்தப்படுவதில் அர்த்தமில்லை. வைத்துக்கொண்டு வஞ்சகம் செய்யாதவர் அவர். தனது திரைப்படத்தைக் காணப் போகும் ரசிகன் குறித்த கவனம் அவருக்கு இருக்கவே இல்லை. முழுக்க முழுக்க ஒரு ‘கலைப்படைப்பை’ உருவாக்குவதில் அவர் தன்னை இழந்துவிட்டார். அதனால் தான் படத்தின் கதைக்குத் தொடர்பு இல்லாவிட்டாலும் அங்கங்கே ஆடு, மாடு, கோழி, நாய் என அப்பாவி விலங்குகளை மனிதர்களோடு உலவவிட்டிருக்கிறார். பன்றியைக் கூட விட்டுவைக்கவில்லை. இத்தகைய காட்சிகளைக் காணும்போது தமிழன் வாழ்க்கை முறையைத் திரையில் காட்சியாக மாற்றுவதில் இயக்குநர் தங்கர் பச்சானிடம் தென்படும் அப்பாவித்தனத்தை என்னவென்று சொல்வது? நீளமான ஷாட்களைப் பயன்படுத்திப் பார்த்துள்ளார். மௌனமான ஷாட்களை முயன்றுள்ளார். எவையுமே அவருக்குக் கைகூடாமலே போய்விட்டது. சினிமா என்னும் கலை தங்கர் பச்சானுக்குக் கைகூடிவரவேயில்லை. 

படத்தின் பின்னணி இசையில் காட்சிக்குப் பொருத்தமாக ஆடு, மாடு போன்ற வீட்டு விலங்குகளின் ஓசைகளை ஒலிக்கவிட்டிருப்பதில், குறிப்பாக செல்போன் ஒலிக்கும்போது பின்னணியில் பறவைகளின் கேவலை ஒலிக்கச் செய்திருப்பதை ரசித்துதான் உருவாக்கியிருப்பார். ஆனால் அதில் உணர்ச்சியே இல்லையே, என்னசெய்வது? காட்சிகளும் கதாபாத்திரங்களும் உயிர்ப்போடு இருக்க வேண்டியது உணர்வுபூர்வத் திரைப்படத்திற்கு அடிப்படை, அதை எதிர்பார்த்துத் தானே பார்வையாளன் வருவான். கருத்துகளைக் காது வலிக்கும்வரை சொல்வதை அவன் விரும்புவான் என உண்மையிலேயே எதிர்பார்க்கிறாரா தங்கர் பச்சான்?



அண்ணாமலைமீது திருட்டுப் பட்டம் கட்டும் சகோதரர்கள் செயல் கண்டு கோபம் கொண்ட தாய் வேறு வழியின்றிக் கையில் கிடைத்த துடைப்பத்தைக் கொண்டு அடித்து அவனை ஊரைவிட்டு வெளியேற்றுகிறாள். தான் உயிராய் நேசித்த ஊர், அம்மா, செல்வி என அனைத்தையும் விட்டுப் பிரிகிறான். அனைத்தும் பார்த்து பார்த்து அலுத்துப்போன சம்பவங்கள். அண்ணாமலையின் நினைவுவரும்போதெல்லாம் தான் செய்த இந்த அடாத செயலுக்காக வருத்தம் மேலிட அழுதுகொண்டேயிருக்கிறாள் அந்தத் தாய். ஆசை ஆசையாய்க் காதலிக்கு செல்போன் வாங்கித் தரும் காதலனைத் தானே இயக்குநர்கள் இதற்கு முன் திரையில் உலாவவிட்டார்கள். தங்கர் அங்குதான் மாற்றி யோசிக்கிறார்.  அண்ணாமலை  அம்மாவுக்கு வாங்கித் தருகிறான். இதே அண்ணாமலை கிராமத்தில் இருந்தபோது கிடைத்த சிறிய பணத்தைக் கொண்டு செல்விக்குப் பாவாடை தாவணியும் நவீன மார்க்கச்சையும் வாங்கித் தந்தவன்தான். ஏழாண்டுகளாக யாரையும் தொடர்புகொள்ளாமல் வைராக்கியமாக வாழ்ந்துவிடுகிறான் அண்ணாமலை. அதற்கான எந்தப் பின்புலமும் அழுத்தமாகக் கொடுக்கப்படவில்லை. திரைக்கதையில் நிகழும் எல்லா மாற்றங்களுமே திரையரங்கில் சிலைடுகளின் மாற்றம்போல் நிகழ்ந்துவிடுகின்றன. இவை திரைப்படத்தின் மொழி குறித்த அறியாமையை வெளிப்படுத்துகின்றன.

அண்ணாமலை தோல் பதனிடும் ஆலையில் வேலைக்குச் சேர்கிறான். அந்தத் தொழிலாளிகளின் துயரம் அவனது வாந்தியில் தெறிக்கிறது. ஒரேயொரு துண்டுக்காட்சியில் தோல் பதனிடும் தொழிற்சாலைத் தொழிலாளர்கள் துயரங்களைச் சொல்லாமல் சொல்லும் வித்தையை தங்கர் எங்கே கற்றாரோ? சிறுபான்மைச் சமூகத்தை சேர்ந்த அந்த முதலாளி அவன் மீது பரிவுகொள்கிறார். அவனை கிரானைட் குவாரி நடத்தும் எதார்த்தத்தில் எங்கு தேடியும் காணக் கிடைக்காத, படுசுத்தமான முதலாளியிடம் அறிமுகப்படுத்திவைக்கிறார். அண்ணாமலையை அதிர்ஷ்ட தேவதை தன் சொந்தக் குழந்தையைப் போல் பாவிக்கிறாள். குவாரியில் வேலைக்குச் சேர்ந்த முதல் நாளே அநீதி கண்டு பொங்குகிறான் அண்ணாமலை. விளைவு அண்ணாமலையை விபரீதத்தில் கொண்டுபோய் நிறுத்துகிறது. 



படத்தில் கோலோச்சுவது அந்த ப்ரசாத் கதாபாத்திரமே. அதில் தான் இயக்குநர் தனக்கான அதிகபட்ச மதிப் பெண்களை குவித்திருக்க வேண்டும். நயவஞ்சகம், வெகுளித்தனம், குற்ற உணர்ச்சி போன்ற மனித உணர்வுகள் மாறி மாறி எழும் கதாபாத்திரம் அது. ஓர் ஆக்டோபஸ் போல் அந்தக் கதாபாத்திரம் மற்ற அனைத்து விஷயங்களையும் வாரிச் சுருட்டி கக்கத்தில் திணித்துக்கொண்டு சென்றுவிடும் என்ற நம்பிக்கையில் தான் அது உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் திரைமொழி வசப்படாத காரணத்தால் அந்த எண்ணம் ஈடேறவில்லை என்பதுதான் குரூர எதார்த்தம், தங்கர் பச்சான் திரையில் காட்டும் சினிமா எதார்த்தமல்ல. 

உச்சக் காட்சியில் தன்னைக் கொல்ல வரும் வஞ்சகர்களை எதிர்த்து ஒரு வார்த்தை பேச வேண்டுமே அண்ணாமலை. பேசவே இல்லை. ஓடி ஒளிகிறான். அவன் பலரைப் பந்தாடும் நாயகத்தன்மை மிக்கவன் அல்லவே, ரத்தமும் சதையுமான  சாதாரணமான மனிதன். குவாரியில் முதல் நாளில் பொங்கியெழுந்த அதே அண்ணாமலை உயிர் பிச்சை கேட்டு மன்றாடுகிறான். ஆனால் எதுவும் நடக்கவில்லை. துரோகம் அவனை அழிக்கிறது. வீட்டை இடிக்கும் சூழலிலும் தன் இளைய மகன் வந்துவிடுவான் என நம்பியே இருந்த தாயின் நம்பிக்கை கைகூடவே இல்லை. இதுதான் கலைப்படத்தின் கூறு என்பது இயக்குரின் எண்ணம்போல. 

ஏழாண்டுகளாக வராத காதலன் இனிமேலா வந்துவிடுவான். காத்திருந்து காத்திருந்து நம்பிக்கை இழந்த காதலி காதலன் இறந்துவிட்டான் என நம்பிவிடுகிறாள். காதலன் இறந்த பின்னர் ஒரு தமிழ்ப் பெண் என்னசெய்வாளோ அதையே அச்சுப் பிசகாமல் செய்கிறாள். கண்ணுக்கு லட்சணமான பையன் கிடைத்தவுடன் மண முடித்துக்கொள்கிறாள். காதலன் உயிருடன் இருப்பது அறிந்து அவனது கடிதத்தை வைத்துக்கொண்டு கணவன் உறங்கிய பின்னர் குளியலறைக்குச் சென்று அழுகிறாள். அவள் அழுதுவிட்டுக் கட்டிலில் படுக்கும்போது ஆணாதிக்க கரம் ஒன்று அவள் மீது விழுகிறது.  


அழிந்துவரும் கலையான தெருக்கூத்து இந்தப் படத்தில் தங்கரின் கையில் அகப்பட்டுக்கொண்டது. சந்நதம் கொண்ட சாமியாடிபோல் மனிதர் பிய்த்து உதறுகிறார். அவர் ஆடும் உற்சாக நடனம் தங்கரின் நடிப்பு வெறியை உச்சத்தில் கொண்டுபோய் நிறுத்துகிறது. தெருக்கூத்துக் கலை மீது இயக்குநர் தங்கர் பச்சானுக்கு தீராத காதல் இருந்திருக்கிறது. அதை மறுக்க முடியாது. ஆனால் நமக்குப் பிரியமான ஒன்றை இப்படியா வதைப்பது? துணிச்சலுடன் தெருக்கூத்து உடையில் ஒரு பாடல் காட்சியை ரசிகர்களுக்குப் படைக்க முன்வந்ததற்கு காரணம் என்னவோ? தமிழ் பார்வையாளனின் ரசனை மட்டம் அதிக உயரத்தில்தான் உள்ளது. அவன் தனது கைக்கெட்டும் இடத்தில் இருக்கிறான் என நினைத்து ஏமாந்துவிட்டார் தங்கர் பச்சான்.  

திரைக்கதை எதையாவது மையப்படுத்துவது அவசியம். ஆனால் இப்படத்தில் இயக்குநர் கையாண்ட திரைக் கதையில் கருத்து என்பது மையமாகிப்போனது ஒரு மோசமான விபத்து. தமிழ்த் திரையுலகில் கருத்து சொல்லவும் தமிழனை சினிமா வழி நல்வழிப்படுத்தவும் ஆளே இல்லை என்று யாரோ தங்கரிடம் ஒரு நெகிழ்ச்சியான தருணத்தில் சொல்லியிருக்கக் கூடும். அதை அவர் நம்பியிருக்கலாம். 

அழகி, தங்கர் பச்சான் இயக்கிய முதல் திரைப்படம். அது தமிழின் உன்னதத் திரைப்படம் என்று சிலாகிக்கப்பட்டபோது ஆச்சரியமாக இருந்தது. தமிழ்த் திரைப்பட ரசனையில் வறட்சி ஏற்பட்டுவிட்டதோ எனத் தோன்றியது. இதுவரை தமிழில் எதார்த்தப் படங்களே வந்ததில்லை என்பது போன்று வாராது வந்த மாமணி போன்று அந்தத் திரைப்படத்தை ஒருசிலர் கொண்டாடித் தீர்த்தனர். தகுதிக்கு மீறித் தங்கரைப் பாராட்டி அவரது சினிமா படைப்பூக்கத்தைக் கிட்டத்தட்ட சிதைத்துவிட்டார்கள். கிடைத்த பாராட்டை உண்மையானது என்றே நம்பியிருக்கலாம் கிராமத்து மனிதரான தங்கர். அதனால்தான் எதார்த்தப் படம் என்னும் பெயரில் கற்பனையூரையும் அதன் மனிதர்களையும் சித்தரித்தே திரைப்படங்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறார் அவர். அவர் சித்தரிப்பில் எள்ளளவும் எதார்த்தம் இல்லை என்னும் உண்மையை அவர் உணரவே இல்லை என்பதைத் தான் தொடர்ந்து வெளிவரும் அவரது திரைப்படங்கள் அனைத்தும் நிரூபிக்கின்றன. தான் படமாக்க நினைத்த திரைப்படத்தை இன்னும் தங்கர் பச்சான் உருவாக்கவில்லை என்றே எண்ண முடிகிறது. அதை அவர் உருவாக்க விரும்பினால் விருப்பு வெறுப்பற்று அவர் தனது திரைப்படங்களை மறுஆய்வு செய்து பார்க்க வேண்டும்.  அடுத்த முறையாவது ஓரளவு தரமான திரைப்படத்தைத் தர அவர் முயல்வது அவசியம். அழகி மிகச் சிறந்த திரைப்படமல்ல அது ஒரு சாதாரணத் திரைப்படம் என்னும் எளிய உண்மையை மனப்பூர்வமாக உணர்ந்துகொண்டால் தான் தங்கரால் அம்மாவின் கைப்பேசி போன்ற அபத்த சினிமாக்களைத் தவிர்க்க முடியும்.   

காலச்சுவடு டிசம்பர் இதழில் வெளிவந்த திரைப்பட விமர்சனம் இது.     

செவ்வாய், நவம்பர் 06, 2012

35க்கும் 100க்குமிடையே



... அவர் என் நண்பர்
அவர் மீது எனக்கு 
பகையுணர்ச்சி அதிகம்
நட்புணர்ச்சி குறைவு
பிறகெப்படி
அப்படித்தான்
அவரை 
விரும்ப விரும்பவில்லை
வெறுக்க வெறுக்கவில்லை
இன்னுமா
இனியும்
அவர் என் நண்பர்...


லேட்டஸ்ட்

ரஜினியாவாரா விஜய்?

தொடர்பவர்