இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், ஆகஸ்ட் 12, 2021

மிக்சர் மாமா

அவன் ஒரு லோக்கல் செய்திப் பத்திரிகையில் செய்தி உற்பத்திப் பணியைச் செய்துகொண்டிருந்தான். காலை முதல் இரவுவரை சற்றும் அலுப்பில்லாமல் செய்தியை உற்பத்திசெய்துகொண்டேயிருப்பான். எந்தச் செய்திக்கு உப்பு தூக்கலாக இருக்க வேண்டும். எந்தச் செய்திக்கு நாட்டுச் சர்க்கரை போட வேண்டும் எந்தச் செய்திக்குக் காரம் மிகுதியாகவும் எந்தச் செய்திக்குக் காரம் மிகாமலும் இருக்க வேண்டும் என்பவை எல்லாம் அவனுக்கு அத்துப்படி.

ஒருநாள்  திடீரென்று அவனை எடிட்டர் அழைப்பதாக அவனுடைய குழுத் தலைவர் தெரிவித்தார். ஏன் அவனை அழைக்கிறார் எடிட்டர் என்று  அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில், எடிட்டர் அழைத்தால் ஒன்று ஏதோ ஒரு பெரிய தவற்றை அவன் இழைத்திருக்க வேண்டும். இல்லையெனில் அவன் ஏதோ சாதனை செய்திருக்க வேண்டும். தான் செய்தது என்ன என்பது அவனுக்குப் புலப்படவில்லை. சரி என்ன என்பதைத் தெரிந்துகொள்ளலாம் என அவனுடைய எடிட்டரைப் பார்க்கப் போனான். அவன் போன நேரம் அவர் அமைதியாக மிக்சரைத் தின்றுகொண்டிருந்தார். அவர் மிக்சர் தின்னும் அழகு பார்ப்பதற்குச் சுவையாக இருக்கும். அது மிக அரிதான செயலன்று. நாள்தோறும் நடைபெறும் ஒன்றுதான். என்றபோதும், மலை போல் கடலலை போல் எத்தனைமுறை பார்த்தாலும் அது அலுக்காத காட்சி. மிக்சர் சாப்பிடுவதற்காகவே பிறந்தவர் போல் அவர் மிக்சர் சாப்பிடுவார்.

மிக்சரை வலக் கையால் ஒரு குத்து அள்ளுவார். அதை அப்படியே இடது உள்ளங்கையில் கொட்டுவார். அப்படிக் கொட்டும்போதும் அவரது முகத்தில் தென்படும் மலர்ச்சியை அவர் முதல் காதல் பொழுதிலோ காமப் பொழுதிலோகூடக் கொண்டிருந்திருக்க மாட்டார் என்றே தோன்றும். மிகவும் நிதானமாக ஓமப்பொடியையும் காராப்பூந்தியையும் தனித்தனியாக எடுத்து எடுத்து வாயில் போட்டு அதக்குவார். இடையிடையே வேர்க்கடலையும் மொறுமொறுப்பான கருவேப்பிலையையும் ஊடுபயிர் போல் வாயில் போட்டு மெல்லுவார். வேர்க்கடலையை எடுக்கும்போது, அதன் தொலியை விரல்களிடையே வைத்து அகற்றி மென்மையாக ஊதுவார். கடலையும் பறந்துவிடக் கூடாது தொலியும் அகல வேண்டும் வாயிலுள்ள மிக்சரும் சிந்திவிடக் கூடாது. இந்த மூன்றையும் அனுசரித்து மிக லாகவமாக அதை அவர் செய்வார். இத்தனை லாகவமாக அவர் எடிட்டர் பணியைக்கூடச் செய்ததில்லை. மிக்சர் தின்பதே ஒரு தவம் போல் தோன்றச் செய்துவிடுவார். அவர் மிக்சர் சாப்பிடும் அழகில் சொக்கிப்போன அவன் தனது வேலையை மறந்துவிட்டான். மிக்சர் சாப்பிடுவதில் லயித்திருந்த  எடிட்டரும் அவனைக் கவனிக்கவில்லை. ஒரு வேர்க்கடலை தவறிக் கீழே விழுந்தபோது, பதறிப்போய் அதை எடுப்பதற்காகக் குனிந்தவர் நிமிர்ந்தபோது, எதிரே நின்ற அவனைக் கவனித்தார்.

என்ன என்பதுபோல் பார்த்தார். வாயில் மிக்சரை நிறைத்துவைத்திருந்ததால் அவரால் பேச இயலவில்லை என்று சொன்னால் உங்கள் புத்திக்கூர்மையைச் சந்தேகிப்பதுபோல் ஆகிவிடும். மிக்சரைத் தின்று முடித்துக்கொள்ளுங்கள் கேட்கிறேன் என்றான். அவர் சிரித்துக்கொண்டே, அது ஆயுளுக்கும் நீளும் என்பதுபோல் சைகை காட்டினார். அவ்வளவு நாள் தாங்காது என்பதால் அவன், தன்னை ஏன் அழைத்தார் என்று வினவினான்.

உடனடியாக எடிட்டர் மிக்சரைக் கொட்டிவைத்திருந்த காகிதத்தை அவனிடம் நீட்டினார்அவனது வேலை நீக்கத்தை அறிவித்த நிறுவனத்தின் கடிதம் அது. ஆங்காங்கே மிக்சரைப் பொரித்த எண்ணெய்க் கறை அந்தக் காகிதத்தில் தெரிந்தது. அது பார்ப்பதற்கு ஒரு சர்க்கஸ் கோமாளியைப் போல இருந்தது. அதைச் சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தான். எடிட்டர் வழக்கம்போல் மிக்சர் கொறிக்கத் தொடங்கிவிட்டார்.

அவன் பார்த்துவந்த செய்தி உற்பத்திக் கண்காணிப்பாளர் பணியிலிருந்து நீக்கப்படுவதாகவும் அவனுக்கு இழப்பீடாக ஒரு கிலோ மிக்சர் தரப்படும் என்றும் வீடு செல்லும்வரை கொறித்துக்கொண்டே போக ஏதுவாக நிர்வாகத்தால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், நிறுவனம் இப்போது இருக்கும் பொருளாதார நிலையில் இந்த மிக்சரை வாங்கவே சிலரது இதயத்தை அறுத்தெடுத்து அடகுக் கடையில் வைத்திருக்கிறோம் என்றும் கண்ணீர் மல்க தெரிவித்திருந்த அந்தக் கடிதம் அழகான ஆங்கிலத்தில் இலக்கணச் சுத்தமாக எழுதப்பட்டிருந்தது. ஆனால், கடிதத்தை எழுதியிருப்பது என்பதை அறிவிக்கும் எந்த ஒரு கையெழுத்தும் இடப்பட்டிருக்கவில்லை. அந்தக் கடிதத்தின் இலக்கண மேன்மையை ரசிக்கும் நிலையில் அவன் இல்லை. இனி எடிட்டரிடம் கேட்க ஒன்றுமில்லை. அவரிடம் கேட்பதில் எந்த அர்த்தமுமில்லை. அவர் நிம்மதியாக மிக்சர் சாப்பிடட்டும். யார் வாழ்ந்தாலும் அழிந்தாலும் அவருக்கென்ன? அவராவது இன்பமயமான வாழ்வை அனுபவிக்கட்டும் என்றெண்ணி வந்துவிட்டான்.  

அவனுக்கு, செய்தி உற்பத்தியாளனான தன்னை ஏன் செய்தி உற்பத்திக் கண்காணிப்பாளர் எனக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்கள் எனப் புரியவில்லை. அதை யாரிடம் கேட்கலாம் என யோசித்தான்குழுத் தலைவரான தோழரிடம் கேட்கலாம் என்று போனான். அவரிடம் தான் பணி நீக்கம் செய்யப்பட்ட செய்தியைச் சொன்னான். அப்படியா என்பதுபோல் பார்த்தாரா, அப்பாடா என்பதுபோல் பார்த்தாரா என்பது அவனது சிற்றறிவுக்குப் புலப்படவில்லை. தன்னை ஏன் உற்பத்திக் கண்காணிப்பாளர் எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள் எனக் கேட்டான். நீங்கள் உற்பத்திக் கண்காணிப்பாளர் என்பதை மறந்து உற்பத்திப் பணியில் ஈடுபட்டதுதான் நீங்கள் செய்த தவறு அதனால்தான் பணியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறீர்கள் என்றார் அவர். இதை யார் சொன்னது எக்ஸா என்று எடிட்டரின் பெயரைக் குறிப்பிட்டுக் கேட்டான். அவர் பதறிப்போய் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு ஆமாம் எடிட்டர் சார் சார் சார் தான் என்று சொன்னார். ஏன் இத்தனை சார் என்று யோசித்தவன் அங்கிருந்த சிசிடிவியைப் பார்த்தான். உதட்டசைவில் எடிட்டர் மூன்று சாரைக் கவனித்துவிடுவார் என்ற தோழரின் நம்பிக்கையை உணர்ந்துகொண்டான்.

தான் உற்பத்தியாளன் என்றே நினைத்திருந்தவனுக்கு இது பெரும் ஆச்சரியத்தை அளித்தது. உற்பத்திக் கண்காணிப்பாளன் என்பதை இதுவரை யாருமே ஏன் சொல்லவில்லை என்று கேட்டான். அதையெல்லாம் யாரும் சொல்ல மாட்டார்கள், அதை நீங்களே முதலிலேயே கேட்டுத் தெரிந்துகொண்டிருக்க வேண்டும் என்று தோழர் கூறினார். தோழர் கொஞ்சம் கறாரான பேர்வழி. தனக்கு மேல் உள்ளவர்களிடம் மட்டும் நெடுஞ்சாண்கிடையாக நடந்துகொள்வாரே தவிர கீழுள்ளவர்களிடம் கறாரென்றால் கறார்தான்.

சரி என்று கிளம்பினான். வரவேற்பறையில் அவனுக்கான மிக்சர் தரமான பாக்கிங் செய்யப்பட்டுக் காத்திருந்தது. அந்த மிக்சரை எடுத்துக்கொண்டவன், நேரே மீண்டும் எடிட்டர் அறைக்குப் போனான். தன்னிடமிருந்த மிக்சரை அவருக்குக் கொடுத்தான். அவர் திடுக்கிட்டுப் பார்த்தார். நல்லா மிக்சர் சாப்பிடுங்க மாமா, அதுக்குத்தான் பொறந்திருக்கீங்க, நல்லா மிக்சர் சாப்பிடுங்க என்றான். வழக்கம்போன்ற டிரேட் மார்க் புன்னகையுடன் எடிட்டர் மிக்சரைப் பத்திரப்படுத்திக்கொண்டார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

லேட்டஸ்ட்

ஒரு விக்ரம் பத்து கமல்ஹாசன்

தொடர்பவர்