இந்த வலைப்பதிவில் தேடு

கல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஜூலை 15, 2014

எளியவர்களுக்கு ஏற்றம் தந்த காமராஜ்


கர்ம வீரர் எனப் பிரியத்துடன் அழைக்கப்பட்டவர் காமராஜர். 1903-ம் ஆண்டு ஜூலை 15 ல் விருதுநகரில் ஒரு தேங்காய் வியாபாரியின் மகனாகப் பிறந்தார். அவருடைய அப்பா குமாரசாமி. அம்மா சிவகாமி அம்மாள். காமராஜர் பள்ளி மாணவனாக இருக்கும்போதே அவரது அப்பா இறந்து விட்டார். குடும்பத்தை வறுமை சூழ்ந்தது. காமராஜருடைய அம்மா சிவகாமி அம்மாள் காதில் போட்டிருந்த நகையைத் தவிர குடும்பத்தில் இருந்த எல்லா நகைகளையும் விற்றார். அதை உள்ளூர் வியாபாரியிடம் கொடுத்தார். அதில் இருந்து கிடைத்த வட்டியைக் கொண்டு குடும்பத்தை நடத்தினார்.

பள்ளியில் காமராஜர் மிகவும் சாதாரணமான மாணவராகவே இருந்தார். ஆறாம் வகுப்பு வரைதான் படித்தார். பிறகு தாய்மாமா கருப்பையாவின் துணிக்கடையில் வேலைக்குச் சேர்ந்தார். ஆனால் கடையில் இருந்து திடீர் திடீரெனக் காணாமல் போய்விடுவார். வரதராஜுலு நாயுடு, ஜார்ஜ் ஜோஸப் போன்ற காங்கிரஸ் தலைவர்கள் நடத்தும் பேரணியில் கலந்துகொள்ளச் சென்றுவிடுவார். அந்தப் பருவத் திலேயே அவருக்குத் தீவிரமான அரசியல் ஈடுபாடு இருந்தது. குடும்பத்தைவிடச் சமூகமே அவருக்குப் பிரதானமாகப் பட்டது. உள்ளூரில் இருந்தால் அரசியல் கூட்டங்களுக்குப் போய்விடுகிறார் என்பதால் திருவனந்தபுரத்தில் உள்ள மற்றொரு உறவினரின் கடைக்குக் காமராஜரை அனுப்பி வைத்தனர்.


அங்கும் காமராஜரால் அரசியல் கூட்டங்களில் கலந்துகொள்ளாமல் இருக்க முடியவில்லை. அங்கே கோயில் இருந்த தெருக்களில் நடமாடக் கூடாது என இருந்த தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக வைக்கம் எனுமிடத்தில் காங்கிரஸ் போராட்டம் நடத்தியது. அதில் காமராஜர் கலந்துகொண்டார். உறவினர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. திருமணம் செய்துவைத்தால் எல்லாம் சரியாகிவிடும் என நினைத்தனர். ஆனால் காமராஜர் அதற்கும் வளைந்துகொடுக்கவில்லை. தனது 16-ம் வயதில் காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராகி முழு நேரமும் அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். 1930-ல் வேதாரண்யத்தில் ராஜாஜி தலைமையிலான உப்புச் சத்தியாகிரகத்தில் கலந்துகொண்டார்.

விருதுநகர் அஞ்சலகத்தில் வெடிகுண்டு வீசிய வழக்கில் அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டுச் சிறைக்கு அனுப்பப்பட்டார். ஆனால் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என அவருக்காக வரதராஜுலு நாயுடுவும் ஜார்ஜ் ஜோஸபும் வாதாடி வெற்றிபெற்றனர். ஆனால் 1940-ல் மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்டார். சிறையிலிருந்தபோது விருதுநகர் நகராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முழு நேர சமூகப் பணிக்குத் தன்னை ஒப்படைத்தபோது காமராஜருக்குக் கல்வியின் அவசியம் புரிந்தது. தேச விடுதலைக்காகப் போராட்டங்களில் ஈடுபட்டுச் சிறையில் இருந்த காலத்தில் கல்வியைத் தானாய்த் தேடிக் கற்றார்.

பின்னாளில் அவர் முதல்வரான பிறகு அனைவருக்கும் இலவசக் கல்வி என்னும் திட்டத்தைக் கொண்டு வந்தார். அரசியலில் காங்கிரஸ் தலைவர் சத்யமூர்த்தியைக் குருவாகக் கொண்டு செயல்பட்டார் காமராஜர். 1936-ல் சத்தியமூர்த்தி மாகாண காங்கிரஸ் தலைவராக ஆனபோது காமராஜரை மாகாண காங்கிரஸ் செயலாளர் ஆக்கினார். நாடு விடுதலை அடைந்த பின்னர் காமராஜர் 1954-ல் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். முதலமைச்சர் பதவிக்குப் போட்டியிட்ட பக்தவத்சலத்தையும், சி. சுப்ரமணியத்தையும் தனது அமைச்சரவையில் அமைச்சராக்கிக்கொண்டார்.


அரசியலில் காங்கிரஸ் தலைவர் சத்யமூர்த்தியைக் குருவாகக் கொண்டு செயல்பட்டார் காமராஜர். 1936-ல் சத்தியமூர்த்தி மாகாண காங்கிரஸ் தலைவராக ஆனபோது காமராஜரை மாகாண காங்கிரஸ் செயலாளர் ஆக்கினார். நாடு விடுதலை அடைந்த பின்னர் காமராஜர் 1954-ல் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். முதலமைச்சர் பதவிக்குப் போட்டியிட்ட பக்தவத்சலத்தையும், சி. சுப்ரமணியத்தையும் தனது அமைச்சரவையில் அமைச்சராக்கிக்கொண்டார். காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது கொண்டுவந்த நீர்ப்பாசனத் திட்டங்களும், தொழிற்சாலைகளும் அவரது மதிநுட்பத்தை வெளிப்படுத்துபவை. எளிய குடும்பங்களின் வறுமை ஏழைக் குழந்தைகளின் கல்வியைத் தின்றுவிடக் கூடாது எனும் நோக்கத்தில் மதிய உணவுத் திட்டத்தை மாநில அளவில் கொண்டுவந்தார். ஒரே நபர் கட்சிப் பணியையும் அரசுப் பொறுப்பையும் வகிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி 1963-ல் காமராஜர் திட்டம் என்பதைக் கொண்டுவந்தார். இந்தத் திட்டத்தின்படி முதலமைச்சர் பொறுப்பிலிருந்து விலகிக்கொண்டார். கட்சிப் பணியில் தீவிரமாக ஈடுபட்டார்.

1965-ல் இந்தியப் பிரதமர் நேரு மறைந்த பின்னர் லால் பகதூர் சாஸ்திரியையும் பின்னர் இந்திரா காந்தியையும் பிரதமராக்கினார். பிரதமர் பதவி தன்னைத் தேடி வந்த போதும் பெருந்தன்மையுடன் அதை மறுத்த மகா மனிதர் காமராஜர் 1975-ம் ஆண்டு அக்டோபர் 2 அன்று காலமானார். காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது கொண்டு வந்த நீர்ப்பாசனத் திட்டங்களும், தொழிற்சாலைகளும் அவரது மதிநுட்பத்தை வெளிப்படுத்துபவை. எளிய குடும்பங்களின் வறுமை ஏழைக் குழந்தைகளின் கல்வியைத் தின்றுவிடக் கூடாது எனும் நோக்கத்தில் மதிய உணவுத் திட்டத்தை மாநில அளவில் கொண்டுவந்தார்.

வெள்ளி, செப்டம்பர் 27, 2013

ஜன கண மன என ஜதி சொல்லும் நேரம்...

2003ஆம் ஆண்டு முதல் வருடந்தோறும் செப்டம்பர் 10 சர்வதேச தற்கொலைத் தடுப்பு நாளாக அனுசரிக்கப்படுகிறது. ”அவமானம்: தற்கொலைத் தடுப்பின் மிகப் பெரிய தடை” ("Stigma: A Major Barrier for Suicide Prevention.") என்பதே இந்த ஆண்டுக்கான மையப்பொருள் அல்லது கரு. தற்கொலைத் தடுப்புக்கான சர்வதேச அமைப்பும் உலக சுகாதார நிறுவனமும் இணைந்து உலக தற்கொலைத் தடுப்பு நாளை அனுசரிக்கிறது.

வளர்ச்சியடைந்த நாடுகளில் முக்கிய மனநலப் பிரச்சினையாக தற்கொலை உள்ளது. வளரும் நாடுகளிலும் தற்கொலை செய்துகொள்தல் அதிகரித்துவருகிறது. உலகம் எங்கும் நடைபெறும் மரணங்களில் தற்கொலை முக்கியப் பங்கு வகிக்கிறது. குறிப்பாக இளைஞர்கள் அதிகமாக தற்கொலை செய்துகொள்கிறார்கள். உலகத்தில் ஒவ்வோர் ஆண்டும் பத்து லட்சம் பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள். சராசரியாக 40 விநாடிகளுக்கு ஒருவர் தற்கொலைசெய்துகொள்கிறார். கொலை, போர் ஆகியவற்றால் இறப்பவர்களைவிட அதிகமானோர் தற்கொலையால் உயிரிழக்கிறார்கள். தற்கொலையால் இறப்பவர்களைவிட அதிகமானோர் தற்கொலை முயற்சியை மேற்கொள்கிறார்கள்.

இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு மட்டும் ஒரு லட்சத்து முப்பத்தைந்தாயிரத்து நானூற்றி நாற்பத்தைந்து பேர் (1,35,445) தற்கொலை செய்துள்ளார்கள். தினசரி 371 பேர் அதாவது 242 ஆண்களும் 129 பெண்களும் தற்கொலையால் மரணமடைந்துள்ளனர். இந்தியாவிலேயே அதிகமாக தமிழகத்தில் தான் பதினாறாயிரத்து தொள்ளாயிரத்து இருபத்தியேழு பேர் (16,927) தற்கொலை செய்துகொண்டனர். தற்கொலை செய்துகொண்டவர்களில் 37 சதவிகிதத்தினர் தூக்கிட்டுக்கொண்டனர், 29.1 சதவிகிதத்தினர் விஷம் குடித்துள்ளனர், 8.4 சதவிகிதத்தினர் தீயிட்டுக்கொண்டனர். தமிழ்நாட்டில் 5,393 பேர் தூக்கிட்டும், 3,459 பேர் விஷம் குடித்தும், 2,349 பேர் தீயிட்டும் தற்கொலை செய்துகொண்டனர். சென்னையில் மட்டும் 282 பேர் தீயிட்டுத் தற்கொலை புரிந்துள்ளனர்.

தற்கொலை செய்துகொள்பவர்கள் பெரும்பாலும் மனநலப் பாதிப்பின் காரணமாகவே இந்த முடிவுக்கு வருகிறார்கள். அடுத்த இருபது வருடங்களுக்குள் மனநலப் பிரச்சினை காரணமாக உருவாகும் நோய்கள் உலக நோய்களுள் 25 சதவிகிதமாக இருக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. புற்று நோயைவிட இதய நோயைவிட மனநலம் சார்ந்த நோய்களே உலகத்தின் மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கும். தற்கொலை செய்பவர்களில் பெரும்பாலானோர் தற்கொலை செய்யும் தருணத்தில் உடல்நல, சமூக ஆர்வலர்களின் ஆலோசனைகளை நாடுவதில்லை. பல சந்தர்ப்பங்களில் நெருக்கடியில் சிக்கித் தவிப்பவர்களுக்கு தேவையான நேரத்தில் போதுமான உதவிகள் கிடைப்பதில்லை.



தற்கொலை எண்ணம் மூளும் சமயத்தில் அன்புக்குரியவர்கள் அருகில் இல்லாததால் பலர் மனத்தில் அந்த எண்ணம் உருவாகிறது. மனநலப் பாதிப்புடன் அவமான உணர்வும் சேர்ந்து தற்கொலை எண்ணத்தை வலுப்படுத்திவிடுகிறது. அவமானம் என்னும் உணர்வு பல சமூகங்களில் வேரோடியுள்ளது. பொதுவாக கல்வி அறிவு இல்லாதது அதாவது அறியாமையே அவமானம் என்னும் உணர்வு தோன்றுவதற்கு முக்கியக் காரணமாகும். அறியாமை காரணமாக உருவாகும் அவமானம் என்னும் உணர்வை முறையான கல்வி நிகழ்ச்சிகளின் மூலம் அகற்றிவிடலாம். பொதுவாக ஒரு சமூகத்தில் வயது சார்ந்த கல்வி சார்ந்த, மதம் சார்ந்த ஒரு குறிப்பிட்ட பிரிவினரிடையே இது காணப்படும். மனநலம் பாதிக்கப்பட்டுத் தற்கொலை எண்ணம் கொண்டோரிடம் போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே இத்தகைய கல்வி நிகழ்ச்சிகளின் நோக்கம்.

ஆனால் அவமான உணர்வை வெற்றிகொள்ள அறிவு மட்டும் போதாது. பொதுவாக பல சமூகங்களில் மனநலம் பாதிக்கப்பட்ட, தற்கொலை எண்ணம் கொண்ட தனிநபர்கள் குறித்து எதிர்மறையான எண்ணம் உள்ளது. மனநலப் பாதிப்பு, தற்கொலை எண்ணம் குறித்த கல்வியால் இத்தகைய எதிர்மறை எண்ணத்தை மாற்ற முடியாது. உண்மையைச் சொன்னால், மனநலப் பாதிப்புக்குள்ளாகி தற்கொலை எண்ணம் கொண்ட நோயாளிகளைக் கையாளும் மனநல நிபுணர்களே நோயாளிகள் குறித்த எதிர்மறை எண்ணங்களையும் முன்முடிவுகளையும் கொண்டுள்ளார்கள். இதன் விளைவாக தற்கொலை எண்ணம் கொண்டவர்களுக்கு நெருக்கடி நேரத்தில் கிடைக்க வேண்டிய அனுசரணையான உதவிகள் கிடைக்காமல் போகின்றன. ஒரு சமூகத்தின் கலாச்சாரங்களில் ஊடுருவியிருக்கும் இந்த எதிர்மறையான எண்ணங்களை மாற்ற பெரும் முயற்சிகள் தேவை. கூடவே மனநல நிபுணர்கள் வழங்கும் சிகிச்சை முறைகளிலும் மாற்றம் வேண்டும்.

அவமானம் என்னும் உணர்வு காரணமாகவே மனநலப் பாதிப்பு காரணமாகத் தற்கொலை எண்ணம் கொண்ட தனிநபர்களது சுதந்திரம் விஷயத்தில் பாரபட்சம் காட்டப்படுகிறது. இத்தகைய பாரபட்சம் தனிநபர், சமூகம், நிறுவனம் மட்டங்களில் உருவாகிறது. தற்கொலை முயற்சியைக் குற்றமாகக் கருதுவது இத்தைய பாரபட்சத்திற்கு உதாரணம்.



தற்கொலைக்கு முயற்சியில் ஈடுபட்டவர்கள் தகுந்த நேரத்தில் சிகிச்சை பெற்றதன் மூலம் உயிர் பிழைத்து பழைய வாழ்க்கைக்கு திரும்புவதை இத்தகைய பாரபட்சமான எண்ணம் தடுத்துவிடும். மேலும் தற்கொலை முயற்சியைக் குற்றமாகப் பார்ப்பது என்பது மனநலப் பாதிப்பு கொண்ட தற்கொலை எண்ணம் உடையவர்களுக்கு அச்சுறுத்தலாகவே இருக்கும். பிழைத்தால் தண்டனை கிடைக்கும் என்பதாலேயே கண்டிப்பாக இறந்துவிட வேண்டும் என எண்ண வாய்ப்புள்ளது.

ஒட்டுமொத்த உடல்நலப் பிரச்சினைகளை ஒப்பிடும் போது தற்கொலைத் தடுப்பு விஷயத்தில் அரசின் நிதி ஒதுக்கீடு குறைவான அளவிலேயே உள்ளது. இந்த விஷயத்தில் நிதிதிரட்டு முயற்சியும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. ஏனெனில் தற்கொலை அவமான காரியம் என்பதால் தற்கொலைக்கு எதிரான முயற்சிகளுக்கு நிதி தர தனிநபர்களோ, அரசுகளோ, சர்வதேச நிறுவனங்களோ பெரிய ஆர்வம் காட்டுவதில்லை.

சமூகத்தில் நிலவும் அவமானம் என்னும் உணர்வை ஒழிப்பதில் அனைவரும் ஒன்று திரண்டு புதிய உத்திகளைக் கையாண்டு பணியாற்ற வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்த உலக தற்கொலைத் தடுப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. அவமானம் என்னும் உணர்வை ஒழிக்காதவரை தற்கொலையைத் தடுப்பது கடினம். இந்த வருடத்தின் தற்கொலைத் தடுப்பு தினத்தை முன்னிட்டு சர்வதேச தற்கொலை தடுப்பு நிறுவனம் சைக்கிளில் உலகம் முழுவதையும் சுற்றும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.


தற்கொலை தடுப்பில் சிறப்பாக பணிபுரிபவர்களை ஊக்குவிக்க, ஸ்டெங்கல் ஆராய்ச்சி விருது, ரிங்கல் சேவை விருது, ஃபார்பெரோ விருது, டி லியோ நிதி விருது ஆகிய விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன.

ஆல் இந்தியா ரேடியோவுக்காக எழுதியது.

லேட்டஸ்ட்

அமலா எனும் பொன்மான்

தொடர்பவர்