இந்த வலைப்பதிவில் தேடு

தமிழன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், நவம்பர் 18, 2019

சங்கத்தமிழன் சாதாரணமானவன்

தேனிமாவட்டம் மருதமங்கலம் கிராமத்தில் சஞ்சய் என்னும் கார்ப்பரேட் நிறுவனம் தாமிர உருக்காலை அமைக்கத் துடிக்கிறது. சுற்றுச்சூழல் பாதிப்பு வரும் என்பதால் ஊர் மக்கள் எதிர்க்கிறார்கள். வழக்குப் போடுகிறார்கள். உருக்காலை பாதுகாப்பானது எனச் சொல்லும் கார்ப்பரேட்நிறுவனத்திடம் சரியான ஆதாரங்களைத் தாக்கல் செய்யச் சொல்லி நீதிமன்றம் கோருகிறது. சென்னையில் முருகன் (விஜய் சேதுபதி) சினிமாவில் நகைச்சுவை வேடத்தில் நடிக்க முயன்றுவருகிறார். முருகனுக்கும் சஞ்சய் கார்ப்பரேட் நிறுவன அதிபர் சஞ்சயுடைய மகளான கமாலினிக்கும் (ராஷி கண்ணா) காதல் மலர்கிறது. இதை அறிந்த சஞ்சய்தன் மகளின் காதலனை நேரில் பார்க்கும்போது அலறுகிறார். அது முருகன் அல்லதமிழ் என்கிறார். தமிழ் யார், முருகனுக்கும் அவனுக்கும் என்ன உறவு, தாமிர உருக்காலை தொடங்கப்பட்டதாபோன்ற கேள்விகளுக்கு விடைதருகிறது சங்கத்தமிழன்.
சுற்றுச்சூழலுக்கும் மனிதர்களுக்கும் கேடுவிளைவிக்கும் ஆலை பற்றிய சீரியஸானவிஷயத்தை நகைச்சுவை கலந்து சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் விஜய் சந்தர். அதுதான் பயங்கர காமெடி. படத்தின் முதல் பாதியில் திரைக்கதையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக என்னவெல்லாமோ நடைபெறுகிறது. அதற்கான காரணங்களை எல்லாம் படத்தின் பின்பாதியில் அறிய முடிகிறது. படத்தின் திரைக்கதை எண்பதுகள்காலத்தில் நடைபெறுவது போல் சராசரியான சம்பவங்களால்உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, பல இடங்களில் பழையபடத்தைப் பார்ப்பதுபோல் அலுப்பாக உள்ளது.
முருகனைத்தமிழ் வேடத்தில் தேனிக்கு அனுப்பும்போது படம் சுவாரசியமான திசைக்குநகர்வதுபோல் தோன்றுகிறது. ஆனால், அங்கே சென்று ஏற்கெனவே தமிழ் செய்த அதே வேலையைத் தான் தொடர்கிறார் முருகன். தமிழும் முருகனும் ஒருவர்தான் என்னும் படத்தின் திருப்பம் மிகச் சாதாரணமாகக் கடந்துசென்றுவிடுகிறது. சமகாலத்தில் பேசப்பட்ட முக்கியமான ஸ்டெர்லைட் ஆலையை நினைவூட்டும் படம் அழுத்தமாகச் சொல்லப்படாததால் பத்துடன் பதினொன்றாகியிருக்கிறது.
முருகன், தமிழ் என்னும் இரு வேடங்களில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். பெரிய வித்தியாசங்கள் இல்லாத வேடம். வழக்கம்போல் வள வள என்று பேசிக்கொண்டே இருக்கிறார். படத்தில் எத்தனை முறை தன் கண்ணாடியைக் கழற்றி எறிகிறார் விஜய் சேதுபதி எனப் போட்டியே வைக்கலாம். காமெடி செய்கிறேன் பேர்வழி என சூரியும் விஜய் சேதுபதியும் சேர்ந்து செய்யும் அலப்பறைகள் பல இடங்களில் கடுப்பையும்; சில இடங்களில் லேசான சிரிப்பையும் தருகின்றன.
ஒன்றுக்கு இரண்டு நாயகிகள் இருந்தபோதும் படத்தின் சுவையான காதல் காட்சிகளுக்குப் பஞ்சம்தான். நகரத்தில் ராஷி கண்ணாவுடனான காதலை ஒப்பிடும்போது கிராமத்தில் நிவேதா பெத்துராஜுடனான காதல் தேறும்.
விஜய் சேதுபதியின் தந்தையாக நாசர். பெரிய வேடம் ஆனால் வழக்கமான பெரிய குடும்பத்துத் தந்தை என்பதைத் தாண்டி சொல்ல எதுவும் இல்லை. விஏஓவாக நடிகர் முனைவர் ஸ்ரீமன் நடித்திருக்கிறார். சஞ்சய் நிறுவன அதிபர் சஞ்சய்யைத் தரை மட்டத்துக்கு இறக்கியிருக்கிறார்கள்.
வேல்ராஜின் ஒளிப்பதிவு கிராமத்தின் பசுமையை கண்ணுக்கு அழகாகக் காட்டியிருக்கிறது. இசை என்னும் பெயரில் விவேக் மெர்வின் மிரட்டியிருக்கிறார். அவ்வளவு சத்தம். படம் முழுவதுமே விஜய் சேதுபதி முதல் காட்சியில் நுழைவது போலவே மாஸாக வருகிறார்; தமாஷாக இருக்கிறது.
சமூகத்தைப் பாதிக்கும் தீவிரமான பிரச்சினையை அழுத்தமாகச் சுட்டிக்காட்ட வேண்டிய படம் அந்தக் கடமையில் தவறுவதால் இந்தச் சங்கத்தமிழன் சாதாரணமானவன்.


புதன், ஜனவரி 16, 2013

உஸ்தாத் ஹோட்டல்

ரசனையைக் கெடுக்கும் மலையாள அரசியல்

எவ்வளவோ படம் பார்க்க வேண்டும் என்ற ஆசையிருந்தும் கையிலேயே படம் கிடைத்தாலும் கூட பல திரைப்படங்களை பார்க்க முடிவதில்லை. இயல்பான சோம்பேறித்தனம். சும்மா மேற்சுவரை பார்த்துக்கொண்டே கற்பனையில் ஆழ்ந்திருப்பதில் ஒரு சுகம். பன்றி சாக்கடையில் புரள்வது போன்றது அது. இதை எல்லாம் மீறி சில சமயங்களில் ஒருசில படங்களை பார்த்துவிட முடிகிறது. சமீபத்தில் அப்படி பார்த்த ஒரு படம் உஸ்தாத் ஹோட்டல் என்னும் மலையாளப்படம். அன்வர் ரஷீத் இயக்கிய திரைப்படம் இது. ஒருநாள் அதிகாலை இரண்டரை முதல் ஐந்து மணி வரை தூக்கம் தொலைத்த இரவில் இந்தப் படத்தை பார்த்தேன். 

பொதுவாக மலையாளப்படங்களில் பெரிய அளவிலே காட்சிபூர்வ ரசனை இருக்காது என்ற மேம்போக்கான புரிதலை தகர்க்கும் விதமாக அமைந்திருந்தன காட்சிகள். கோழிக்கோடு பகுதி இஸ்லாமிய  வாழ்க்கையின் கூறுகளை தன்னகத்தே கொண்டு படம் நகர்ந்தது. பெரிய அளவிலான சம்பவங்கள் எவையும் இல்லை என்றாலும் பார்ப்பதற்கு எந்தத் தடையும் இல்லாமல் படத்தின் நகர்வு இயல்பாக அமைந்திருந்தது. படத்தின் கதை அது இது என்று எல்லாவற்றையும் எழுத இது அப்படத்தின் மீதான விமர்சனம் அல்ல. இப்படம் குறித்து என்னை பாதித்த சில நினைவுகள் அவ்வளவே. எனவே மிக விரிவாக இதில் எதையும் எழுதிவிட ஆசையுமில்லை, முயற்சியும் இல்லை. 



ஒரு பிரம்மாண்ட ஐந்து நட்சத்திர ஹோட்டல் அருகே அமைந்திருக்கும் சிறிய உணவகம் தொடர்பானது தான் இப்படத்தின் கதை. திலகன் அந்த உணவகத்தை நடத்துகிறார். பேரனோடு திலகனுக்கு உள்ள நெருக்கமும் மகனோடு திலகனுக்கு உள்ள விலகலும் நேர்த்தியாக படமாக்கப்பட்டிருந்தன. மகன் தன்னை புறக்கணித்து பேசும் ஒரு காட்சியில் கையால் கழுத்தை நீவிவிட்டு நகரும் போது அந்த கதாபாத்திரத்தின் அத்தனை இயலாமை அதை அப்படியே உள்வாங்கிக்கொள்ளும் பாங்கு ஒரு வித ஒட்டாத்தன்மை, புறக்கணிப்பு என அத்தனை உணர்ச்சியையும் ஒரே ஒரு உடல் அசைவில் வெளிப்படுத்திவிடுகிறார். 

சமைக்க போன இடத்தில் மணமகளோடு காதல் கொண்டு அவளையே கரம் பற்றியவர் திலகன். கிட்டத்தட்ட அதே வாழ்க்கை திரும்புகிறது பேரனுக்கும். உணவின் முக்கியத்துவத்தை அழகான காட்சிகள் மூலம் திரைப்படமாக அளித்திருக்கிறார்கள் .ரசிக்கும் விதத்தில் அமைந்துள்ளது படம் . ஆனால் படத்தில் வெளிப்பட்டிருக்கும் குரூரமான மலையாள அரசியல் படத்தின் மீது ஒருவித வெறுப்பை ஏற்படுத்திவிடுகிறது.  தமிழன் ஒருவன் பசிக் கொடுமையின் காரணமாக தனது மலத்தையே உண்ணுகிறான் என காட்சிபடுத்தியிருக்கிறார் இயக்குநர். 



தமிழ்த்தேசியவாதியாகவோ தமிழன் என்ற பெருமையோ இல்லாத சாதாரண மனிதனுக்கே எரிச்சலை ஊட்டும் விதமாக அமைந்துவிட்டது இந்தக் காட்சி. அருகருகே இருந்தும் அன்றாட வாழ்வியல் தேவைகளுக்காக ஒருவரையொருவர் சார்ந்திருக்கும் மாநிலங்களாக இருந்தும் ஆழ்மனதில் இவ்வளவு வெறுப்பு இருக்கிறதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி விடுகிறது இந்த திரைப்படம். எனது புரிதல் தவறாகக்கூட இருக்கலாம் தவறாக இருந்தால் உண்மையிலேயே மகிழ்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால் சரியாக இருந்தால்...?

லேட்டஸ்ட்

அமலா எனும் பொன்மான்

தொடர்பவர்