இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், மே 03, 2012

மெரினா

கடல் நீரும் கடற்கரை மணலும்



தேசிய விருது பெற்ற பசங்க திரைப் படத்தை இயக்கியவர் பாண்டிராஜ் என்பதாலும் சின்னத் திரையில் தனது எள்ளல் மிக்க பாணியின் காரணமாகப் பெரும்பாலானோரின் கவனத்தை ஈர்த்திருந்த சிவகார்த்திகேயன் கதாநாயகனாக அறிமுகப்படுத்தப்பட்டிருந்ததாலும் வெளியாவதற்கு முன்பே பிரத்யேகக் கவனம்பெற்றிருந்தது மெரினா. ஒரு திரைப்படம் வெளியாகும் முன்பும் வெளியான பின்பும் அதைப் பற்றிக் கட்டமைக்கப்படும் உரையாடல்கள் சின்னத் திரையில் பரவலாக இடம்பெறுவது வாடிக்கையாகிவிட்டது. இது ஒருவகையான வியாபார உத்தி. பெரிய திரை, சின்னத் திரை இரண்டும் இதனால் பயனடையுமென நம்பப்படுகிறது. அத்தகைய நிகழ்ச்சிகளில் திரைப் படத்தைப் பற்றி வெளிப்படுத்தப்படும் கருத்துகள் அதைச் சந்தைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கும்.

மெரினா பற்றிய முன்னோட்டங்களும் அத்தகையானவையாகவே இருந்தன. இந்த உத்தி வியாபாரத்திற்கு உகந்ததாக இருக்கலாம். ஆனால் திரைப்படத்தைக் கலையாக மாற்ற இது சிறு துரும்பைக்கூடக் கிள்ளிப்போடாது. வணிகரீதியாக ஒரு திரைப்படம் வெற்றிபெறும் போது அதன் தயாரிப்பாளர் பெருமகிழ்ச்சிகொள்கிறார்; கலைரீதியாக வெற்றியடையும்போது இயக்குநருக்கு மனத் திருப்தி ஏற்படும். இங்கே மெரினாவில் தயாரிப்பாளரும் இயக்குநரும் ஒருவரே. எனவே வணிகரீதியிலும் கலைரீதியிலும் வெற்றிபெற்றால் மட்டுமே அது பாண்டிராஜைத் திருப்திப்படுத்தும். அதைப் பார்வையாளன்தான் பெற்றுத்தர முடியும். ஆனால் அப்படியான வெற்றி சாத்தியப்பட்டிருப்பதான பிம்பத்தை உருவாக்குவதில் சின்னத்திரை ஆற்றியுள்ள பங்கு அளப்பரியது.

மெரினாவின் தொடக்கத்திலிருந்தே அதன் பயணம் பார்வையாளனின் மனத்தைத் தொட்டுவிட வேண்டுமென்பதிலேயே குறியாக இருக்கிறது. அமரர் ஊர்தி எனத் தெரியாமல் அதில் பயணித்து மெரினாவுக்கு ஆதரவற்றவனாக வந்திறங்கும் சிறுவன் அம்பிகாபதி, பின்னர் நில மோசடி குறித்தெல்லாம் பேசும் அளவுக்கு ஞானம் பெற்று விடுகிறான். மெரினாவை மையமிட்டுப் பிழைப்பு நடத்துபவர்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளைக் கொஞ்சம்கூட அலட்டிக்கொள்ளாமல் வியாபாரம் பாதிக்காத வகையில் அழகியலைப் புறக்கணித்துவிட்டு அநாயாசமாகக் காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குநர். சென்னைக் கடற்கரையில் சுண்டல் விற்பதில் கிடைக்கும் நிம்மதி வேறு எந்தத் தொழிலிலும் கிடைக்காதோ என எண்ணுமளவுக்கு அந்தச் சிறுவர்களின் வாழ்க்கை முறை அவ்வளவு உற்சாக மானதாகக் காண்பிக்கப்பட்டுள்ளது.


தன் ஆசான்களிடம் கற்ற வித்தைகளைப் போதும் போதும் என்னும் அளவிற்கு அள்ளிவழங்கியுள்ளார் பாண்டிராஜ். மற்றொரு தேசிய விருதுக்கு உத்தரவாதமளிக்கும் வகையில் மனிதாபிமான, சமூக நல்லிணக்கக் கருத்தாக்கங்கள் அடிப் படையிலமைந்த கதாபாத்திரங்களையும் கதை நிகழ்வுகளையும் உலவவிட்டதில் அவரது கற்பனைத் திறனும் படைப்புத் திறனும் மிளிர்வதை உணரும் பார்வையாளன் நெகிழ்ந்துபோவான். குறிப்பாக அந்த அஞ்சல்காரர், மெரினாவில் உயிரோட்டமான அப்படிப்பட்ட கதாபாத்திரத்தை அலையவிடுவதற்கே அசாத்தியமான தன்னம்பிக்கையும் துணிச்சலும் வேண்டும். யாரையாவது ‘உஷார்பண்ணி’ மெரினாவுக்கு அழைத்துவந்து கிளுகிளுப்பாக இருக்க ஆசைப்படும் செந்தில்நாதன், உணவுப் பிரியையான அவன் காதலி சொப்னசுந்தரி, படிப்பதற்காகப் பணம் சேமிக்கும் அம்பிகாபதி, பணத்தைச் சுத்தமாக மதிக்காத -மனநிலை பிறழ்வுகொண்ட-அன்புச் செல்வன் ஐஏஎஸ், குடும்பத்தின் மீதான கோபத்தைப் பிச்சையெடுத்துத் தீர்க்கும் முதியவர், இப்படியான கதாபாத்திரங்களைத் தேசிய விருது பெற்றுத்தந்த உற்சாகத்தில்தான் இயக்குநரால் படைத்திருக்க முடியும். ஒழுக்க சீலர்களும் பிரதிபலன் எதிர்பாராமல் உதவுபவர்களும் நிறைந்த இடம் மெரினா என்னும் யதார்த்தத்தை நமக்குப் புரியவைக்க ஒரு பாண்டிராஜ் தேவைப்படுகிறார். மெரினாவில் பிழைப்பு நடத்தும் விளிம்புநிலை மனிதர்கள் ஒரு நாளைக் கழிக்கப் படாதபாடுபடுவார்கள் என்னும் நம்பிக்கை இந்தப் படத்தின் மூலம் குப்புறக் கவிழ்க்கப்பட்டுவிட்டது. ஒன்பது ரூபாய் நோட்டு, பொக்கிஷம், சொல்ல மறந்த கதை போன்ற அசல் தமிழ்ப் படங்கள் நனைக்க மறந்த இடங்களையும் பூதக்கண்ணாடியால் கண்டறிந்து நனைத்துச் செல்கிறது இந்தப் படம்.

படத்தில் இடம்பெறும் பிபிசிக்கான ஆவணப்படமாக்கக் காட்சியில், காமராஜர் படிப்பென்றால் என்னவென்றே தெரியாத அப்பாவியாகவும் காலில் செருப்பு போட்டால் நடக்கும்போது சுண்டலில் மணல் தெறித்துவிடும் என்பதை அறியாத அளவுக்கு வெகுளியாகவும் காட்சியளிக்கும் அதன் இயக்குநர் சிந்தனையைக் கிளறிவிடும் கேள்விகளால் பார்வையாளர்களைப் பதம்பார்த்து விடுகிறார். உதாரணமாக ‘சுண்டல் மிஞ்சினா என்ன பண்ணுவீங்க?’, நீங்க என்ன படிச்சிருக்கீங்க?’, ‘உங்கள் லட்சியமென்ன?’ போன்ற சீரிய கேள்விகள். இத்தகைய வலுவான கேள்விகளுக்குப் பின்னாலுள்ள ஆவணப்பட இயக்குநரின் அறிவு முதிர்ச்சி அதிரவைத்தது. அப்படத்தால் சிறார்கள் வாழ்வு மலர்ச்சி பெறும் என்பதில் பெண் இயக்குநருக்கு உறுதியான நம்பிக்கையில்லை. ஆனாலும் அதை நோக்கிய பயணத்தை அவர் மேற்கொள்கிறார். ஒட்டுமொத்தமாக அந்தக் காட்சியின் நேர்த்தியில் பாண்டிராஜ் தனிக் கவனம் எடுத்திருக்கிறார். ஆறு மாதக் காலம் இயக்குநர் மெரினா குறித்து ஆய்வுசெய்துள்ளதாகக் கேள்விப்பட்டது உண்மைதானோ!

மருமகள் கொடுமை தாங்காமல் வீட்டைவிட்டு ஓடிவந்து மெரினாவில் பிச்சை எடுக்கும் தாத்தாவுக்கும் அம்பிகாபதிக்கும் நிகழும் உரையாடலின்போது வெளிப்படும் வசனங்கள் மனித நேயத்தில் வருடக்கணக்காக மூழ்கியெழுந்தவையோ என எண்ணு மளவுக்குக் கச்சிதமாக அமைந்துள்ளன. “வந்தாரை வாழவைக்கும் சென்னை உன்னை மட்டும் வாழ வைக்காதா என்ன?” என்று கேட்கும் தாத்தாவிடம் மறுமொழியாக அவன், “அப்புறம் ஏன் தாத்தா உங்களமட்டும் பிச்சை எடுக்கவச்சுச்சு?” எனக் கேட்கும்போதும் மற்றொரு காட்சியில் அவரது கடந்த காலம் உள்ளத்தை உருக்கும் பின்னணி இசையோடு வெளிப்படுத்தப்படும்போதும், அம்பிகாபதியின் கேள்வியால் அவர் திருந்தி புல்லாங்குழல் விற்பனையாளராக மாறும்போதும் பார்வையாளன் மனத்தில் மெல்ல மெல்ல இரக்கவுணர்ச்சி சுரக்கத் தொடங்குகிறது. உறவுகளின் அருமை, மேன்மை குறித்து அவர் விதந்தோதும்போது அவ்வுணர்ச்சி ததும்பல் நிலையை எட்டுகிறது. வீட்டைவிட்டுத் தனியே வந்து, சிறார்கள் அனைவருக்கும் நல்லது செய்துவிட்டு இறுதியில் அவர் மரணமடைந்து உறவுகள் புடைசூழ மயானத்திற்குச் செல்கையில் அந்த உணர்ச்சி குடைசாய்கிறது. ராஜ மரணத்துக்கும் தகுதியான பின்னணியிசை துயரத்தை இடைவிடாது வழங்குகிறது. ‘இந்தியா எப்பவும் தோக்காதுடா கிரிக்கெட் தான் ஜெயிக்கும் தோக்கும்’, ‘வெள்ளைக்காரனவிட இந்தத் தமிழன் தாழ்ந்தவனாடா?’ போன்ற இனத்தை, தேசத்தைத் தூக்கிப் பிடிக்கும் வசனங்கள் வலுவானவை. வாழ்க பாரதம்! வாழிய செந்தமிழ்!

மனித மனங்களின் ஆழத்தில் சுரக்கும் உணர்ச்சிகள் ஒளிவுமறைவில்லாமல் படம் முழுவதிலும் பாய்ந்தோடுகிறது. கடற்கரையில் கண்டெடுக்கும் தங்கச் சங்கிலியைத் தனக்குத் தர மறுத்த அம்பிகாபதிக்கு அடி கிடைக்கும்போது அதைப் பார்த்து ரசிக்கும் வகையில் குதிரையில் அமர்ந்து மெல்லிய புன்னகையை வீசுகிறார் குதிரைக்காரர். தன்னைப் பற்றிய கவலையற்று மற்றொருவரோடு காதல்கொண்டு ஓடிவிட்ட தாய் பட்ட கடனை அடைக்கத் தான் ஏன் கஷ்டப்பட வேண்டுமெனக் கைலாசம் சொல்லும் காட்சியில், மௌனமாக ஒரு பறவை தன் அலகுகளால் தன் குஞ்சுக்கு இரையூட்டும் மாண்டாஜைக் காணும்போது தமிழ்த் திரைப்படத்தின் காட்சியமைப்பில் வந்துசேர்ந்திருக்கும் நுட்பம் குறித்த ஆச்சரியம் பெருகுகிறது.

சிறுவர்களை மீட்டுச்சென்று கல்வி, அதன் அவசியம், அரசாங்கச் சலுகைகள் போன்றவை குறித்துச் சமூக அக்கறை தொனிக்க நீண்ட பிரசங்கம் நிகழ்த்தும் ஹோம் அதிகாரி “உங்களுக்கெல்லாம் அப்பா அம்மா இல்லாட்டி என்ன நமக்கெல்லாம் அரசாங்கம் இருக்குது” என்கிறார். நமது அரசாங்கத்தின்மீது இயக்குநருக்கு இருக்கும் நம்பிக்கையை நினைத்துப் புளகாங்கிதம் அடையாமலிருக்க முடியவில்லை. அன்னம்மா சாகக் கிடக்கும்போது அவளுடைய அப்பாவிடமிருந்து வெளியேறும் உணர்ச்சிமயமான வசனங்களும் தாத்தாவின் இறுதி வசனங்களும் பார்வையாளனை உலுக்கி விடுகின்றன. வாழ்க்கை என்பது குதிரைப்பந்தயம் அதில் வெற்றி பெற்றவனுக்குத்தான் மரியாதை ஆனால் தோற்றவனிடமும் நேசம் காட்ட வேண்டும் என்பதை உணர்த்தும்விதத்தில் அமைந்த இயக்குநர் பாண்டிராஜ் பச்சைக்கொடி காட்டித் தொடங்கி வைத்த பந்தயத்தில் அம்பிகாபதி வெற்றிபெறுகிறான். பசங்க பாண்டிராஜின் இந்த மெரினா கேன் பட விழா, ஆஸ்கார் போன்றவற்றுக்குப் பரிந்துரைக்கப்படும் வாய்ப்புள்ளது. உலகத்துப் பார்வையாளர்கள் தமிழ்ப் படத்தின் சிறப்பை உணர்ந்து குடம் குடமாய்க் கண்ணீர் சிந்தும் காட்சியை நாம் காணும் வாய்ப்பைச் சின்னத்திரை உருவாக்கித் தரும் எனும் நம்பிக்கையோடு திரையரங்கை விட்டு வெளியேறும்போது எதேச்சையாகக் கையை நெஞ்சில் வைக்க அன்பு, மனித நேயம், கல்வி, இன்னபிற அதிர்வுகளை உணர முடிந்தது. அதுதான் இப்படத்தின் வெற்றி!

திங்கள், பிப்ரவரி 27, 2012

மௌனகுரு

மெய்ப்பொருள் காண்பதறிவு


 


"உண்மையைக் காண முயலும் தனி மனிதன் சமூகத்தின் விதிவிலக்கு:
வாழ்க்கையின் பலிபீடம்" - புதுமைப்பித்தன்

திரைப்பட வரலாற்றில் தனக்கென ஓரிடம்பிடித்துவிட வேண்டுமென்ற விருப்பம்தான் திரைப்பட இயக்குநர்களின் உந்துசக்தி. அதுதான் அவர்களைப் படத்தை இயக்கவைக்கிறது. அந்த உந்துசக்தியின் வீரியம் எப்போதுமே காத்திரமானதுதான். என்றபோதும் எல்லாப் படங்களும் வரலாற்றுப் பக்கங்களின் வரிகளாக மாறிவிடுவதில்லை. தங்களது மனத்தில் வரித்துக்கொண்ட திரைப்படத்திற்கும் தங்களால் உருவாக்கப்பட்டுத் திரையில் காட்சிகளாக விரிந்துநிற்கும் படத்திற்கும் உள்ள இடைவெளியைப் பெருமளவுக்குக் குறைக்கும் போதுதான் படம் பார்வையாளனின் மனத்தை ஆக்கிரமிக்கிறது. அந்த இடைவெளியை எந்த அளவுக்குக் குறைக்கிறார்களோ அதைப் பொறுத்தே அவர்களது படங்களின் தரம் அமையும். இதுவரை சொல்லப்படாத கருவை மாறுபட்ட முறையில் படமாக்கித் தங்களை வேறுபட்டவர்களாகக் காட்டிக்கொள்ளும் முனைப்பு இருந்தபோதும் ஏதோ ஓரிடத்தில் ஏற்படும் சறுக்கலால் நினைத்ததை நிறைவேற்றுவதில் சிலர் தவறிவிடுகிறார்கள். அதிலும் குறிப்பாக இயக்குநர்களின் பெயரைப் பார்வையாளர்கள் மனத்தில் நிலைக்கவைக்கும்படி முதல் திரைப்படம் அமைய வேண்டும். இயக்குநர்கள் முன்னுள்ள பெரும் சவால் அது. மௌன குரு இயக்குநர் சாந்தகுமார் அந்தச் சவாலை எதிர்கொண்டு அதில் வெற்றியும் பெற்றுவிட்டார்.

தனக்குரிய உரிமையை நிலைநாட்டுவதில் வேட்கை கொண்ட சராசரி தெக்கத்தி இளைஞனான கருணாகரனுக்குச் சமூகத்தோடு ஏற்படும் முரணையும் அதன் காரணமாக அவன் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் எடுத்துக்காட்டி தற்போதைய சமூக அமைப்பின் தவறான புரிதலை, உண்மையின் காட்சிப் பிழையை உணர்த்துகிறார் மௌன குரு. சமூகத்தின் மிக முக்கியப் பொறுப்பு வகிக்கும் காவல் துறை அதிகாரிகள் சிலர் தனிமனிதப் பலவீனங்களுக்கு இரையாகிக் குற்றமிழைத்து, அதற்கான தண்டனையிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ளச் சாதாரணக் குடிமகனான கருணாகரனைக் காவு கொடுக்கிறார்கள். தங்களது கல்வியறிவைத் தவறான வழியில் பயன்படுத்தி அவனுக்கு Recurrent persistent non-bizarre delusion, persecutory subtype என்னும் கற்பிதங்களுக்கு இரையாகும் மன நோய் இருப்பதாகச் சொல்லிச் சமூகத்தையும் நம்பவைத்துவிட அவர்களால் முடிகிறது. உயர் அந்தஸ்துக்காரர்களின் பொய்யான கூற்றை எந்தவிதக் கேள்வியுமின்றி அப்படியே நம்பத் தலைப்படும் சமூகம் எளியவர்கள் கூறும் அப்பட்டமான உண்மையை உதாசீனப்படுத்துகிறது. இதன் விளைவாகச் சமூகத்தின் ஒழுங்கு குலைக்கப்படுகிறது. பழி எளிதாகப் பலம் குறைந்தவன்மீது சுமத்தப்படுகிறது. இந்த அபத்தத்தை உணர்த்துவதைக் கருவாகக் கொண்டுள்ள மௌன குரு குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய ஒன்றே. சாந்தகுமார் உருவாக்கிய களம், கதாபாத்திரங்கள், திரைக்கதை ஆகியவற்றைச் சுவாரஸ்யமான ஒரு திரைப்படமாக மாற்றுவதன் பின்னணியில் செயல்பட்ட அவரது ஆளுமை, தொழில்நுட்பக் குழுவினரின் ஒத்துழைப்பு ஆகியவைசார்ந்ததே இப்படத்தின் வெற்றி.


ராஜேந்திரன் வேடமேற்றிருக்கும் மதுவின் முகத்தில் இயலாமை, எரிச்சல், கோபம் என அநேக உணர்ச்சிகள் மிக இயல்பாக வெளிப்படுகின்றன. ஜான்விஜய், பாலகிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மாரிமுத்து, செல்வம், பெருமாள்சாமி ஆகிய பாத்திரங்களுக்குத் தேவையான உணர்ச்சிகளைத் தகுந்த அளவுக்கு வெளிப்படுத்தியுள்ளனர். பாபுவாக நடித்திருந்த முருகதாஸின் நடிப்பில் சார்லி, சின்னி ஜெயந்த் போன்றவர்களது சாயல் தென்படுகிறது. எதிர்பார்ப்பற்ற உதவிகளைப் புரியும் பாபு போன்ற கதாபாத்திரங்களைச் சாகடிக்கும் சாபம் இப்படத்திலும் தொடர்கிறது. கருணாகரன் பாத்திரமேற்றிருக்கும் அருள்நிதி மௌன குரு என்னும் தலைப்புக்கேற்ற விதத்தில் ஒரு ஞானியாகவே மாறிவிட்டார். அவரது முகபாவம் பெருமளவில் மாறுவதேயில்லை. கிட்டத்தட்ட அனைத்துக் காட்சியிலும் ஒரேவிதமான பாவத்தையே வெளிப்படுத்துகிறார். ஏற்ற இறக்கங்கள், கோபதாபங்கள், நெழிவுசுளிவுகள் அனைத்தையும் குரல்தான் ஓரளவு சரிப்படுத்துகிறது. சிபி மலயில் இயக்கத்தில் 1987இல் வெளியான தனியாவர்த்தனத்தில் மன நலம் சரியாக உள்ளவனைச் சமூகம் மனநலம் பாதிக்கப்பட்டவனாக நம்பும் சூழல் ஏற்படும். வேறு வழியற்று அவனே தன்னை மனநலம் பாதித்தவனாகக் காட்டிக்கொள்ள நேரிடும். கருணாகரனுக்கும் அதே விஷயம் நடக்கிறது. ஆனால் கதாபாத்திரம் பிரதிபலிக்க வேண்டிய உணர்ச்சிகள் கதாநாயகத்தனத்திற்குப் பலியாகிவிட்டன. மன நலம் பாதித்தவர்களை நகைச்சுவைக்குப் பயன்படுத்தும் குரூரம்தான் பல தமிழ்ப்படங்களில் காணக்கிடைக்கிறது. ஆனால் அதைத் தவிர்த்து ஓரளவு ஆக்கபூர்வமாக இப்பிரச்சினையைக் கையாண்டுள்ளதால் இயக்குநரின் புரிதல் மேம்பட்டதாகத் தோன்றுகிறது.

இயக்குநரின் மனத்தில் ஒளிந்துள்ள காட்சிகளை அவரது விவரிப்புகளைக் கொண்டு காட்சிப்படுத்தும் வல்லமைகொண்ட ஒளிப்பதிவாளரால் மட்டுமே இயக்குநரின் மனக்காட்சியைத் திரைக்காட்சியாக மாற்ற இயலும். மகேஷ் முத்துசாமி அவ்வேலையைத் திறம்படச் செய்துள்ளார். படமாக்கத்தில் இயக்குநருக்கும் ஒளிப் பதிவாளருக்குமான இணைவு உச்சத்தில் உள்ளது. எனவே இயக்குநரின் மனத்திலிருந்து காட்சிகளை உரித்து உரித்துப் படச்சுருளுக்குள் அநாயசமாகச் சிறைப்பிடித்து விடுகிறார் ஒளிப்பதிவாளர். ஒரு த்ரில்லருக்குத் தேவையான கோணங்கள், ஒளி ஆகியவற்றைப் பிரயோகித்துப் பார்வையாளனுக்குகந்ததாகப் படத்தை மாற்றிவிடுகிறார் அவர்.

அரசு மனநலக் காப்பகத்தில் வகுப்பெடுக்கப்படும் காட்சியில் ஆர்த்தியின் கைபேசி அதிர்வு நிலையில் ஒலிப்பதை உணர்த்தும் அளவுக்கு நுட்பமாக இருக்கும் பின்னணி இசை சில காட்சிகளில் பொருத்தமாக அமையாமல் பார்வையாளனைத் திகிலூட்டுவதற்குப் பதிலாகப் பயமுறுத்துகிறது. இயக்குநருக்கு ஒளி கைகொடுத்த அளவுக்கு ஒலி கைகொடுக்கவில்லை. அவரது ஆளுமைத் திறன் இசை விஷயத்தில் தளர்ந்துள்ளது. பொறுமையாக மௌனங்களைக் கையாண்டு அடுக்கப்படும் துண்டுக் காட்சிகளால்கூடப் பார்வையாளனின் மனத்தில் அழுத்தமான உணர்வலைகளை எழுப்ப முடியும். திகிலைப் பார்வையாளன் மனத்தில் உணர வேண்டும் செவியிலல்ல.


கிரைம் இன்ஸ்பெக்டர் பழனியம்மாள், ரத்தப் பரிசோதனை செய்வதற்குப் போடப்பட்ட ஊசித்துவார ரத்தக்கசிவை நிறுத்த அதில் வைத்து அழுத்திக்கொண்டிருந்த பஞ்சை எடுத்துப்போடுவதைக்கூடப் போகிற போக்கில் காண முடிகிறது. இப்படி அட்சரம் பிசகாமல் திரைக்கதை பயணித்துள்ள படத்தில் ஒருசில விஷயங்கள் தவிர்க்கப்பட்டிருந்தால் தமிழின் முக்கியமான படங்களில் ஒன்றாக அமைந்திருக்கும் மௌன குரு. முதலாவது நம்பகத்தன்மையற்ற அந்தக் காதல். படத்தின் தொடக்கத்தில் தீவிரமான ஒரு விஷயம் வர இருக்கிறது என்பதை உணர்த்திவிட்டு ஏறக்குறைய நாற்பது நிமிடங்கள் படம் சுவாரஸ்யமற்ற காதல்வழியே நகர்கிறது. அடுத்தது ஈர்க்கும்படியாய் அமையாத சில வசனங்கள். ‘சனிக்கிழமை எண்ணெய் தேய்ச்சிக் குளி’ என்பதைச் சொல்லிச் சொல்லி அந்த இடம் தேய்ந்து அதிலிருந்து நீர் சுரக்கத் தொடங்கிவிட்டது. அப்படிப்பட்ட வசனங்கள் வாழ்க்கையில் வழக்கத்தில் இருந்தால்கூடத் திரைப்படத்தில் நிறுத்திவிடலாம். ஆந்திர மாநில வனப்பகுதி, கல்லூரி என அநாவசியமாகப் பல இடங்கள் துணைத்தலைப்புகள் மூலம் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. பார்வையாளனுக்குப் புரியாமல் போய்விடுமோவென்ற பதற்றமா? அருள்தாஸ் கல்லூரி முதல்வரின் மகன் செய்யும் சிறு சிறு திருட்டுகளுக்குப் பின்னணியாக அப்படியொரு நீதிபோதனைக் கதை அவசியமல்ல. அது அவனது இயல்பாகக்கூட இருக்கலாம். கதையில் அவனது திருட்டு என்னவித பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது தான் முக்கியமே தவிர அதற்குப் பின்னணி அவசியமல்ல.

ஓரிரு காட்சிகளைத் தவிர அனைத்துக் காட்சிகளிலும் அமர் மனைவியின் நெற்றியில் குங்குமம் கொட்டப்பட்டுள்ளது. பாலியல் வறுமை போக்கும் தொழில் புரியும் மாயாவோ நடு வீட்டில் அமர்ந்து புகைபிடிக்கிறாள். குடும்பப் பெண் இப்படி இருப்பாள், பரத்தை இப்படி இருப்பாள் என்னும் வகையில் காட்சிப்படுத்தும் சிந்தனைகளில் மூழ்கிக் கிடக்கும் தமிழ்த் திரைப் படத்தைப் புது இயக்குநர்கள் தாம் விடுவிக்க வேண்டும். அதிகக் கவனத்துடனும் சிரத்தையுடனும் உருவாக்கப்பட்டிருக்கும் இப்படம் இன்னும் துணிச்சலுடன் கையாளப்பட்டிருந்திருக்கலாம். படத்தில் சிறு சிறு குறைகள் தென்பட்டபோதும் நேர்த்தியான தமிழ்ப் படமொன்றைத் தரும் திறனுள்ளவராகத்தான் தெரிகிறார் சாந்தகுமார். அதனால் தான் மைனா, ஆரண்யகாண்டம் போன்ற மாறுபட்ட முயற்சிப் படங்களின் வரிசையில் இந்த மௌன குருவையும் வைத்துவிட முடிகிறது. நேர்த்தியான படைப்பு என்னும் இலக்கை அடைவதை நோக்கமாகக்கொண்ட எத்தனிப்பே இப்படத்தைக் கவனத்துக்குரியதாக மாற்றுகிறது.

காலச்சுவடு பிப்ரவரி இதழில் வெளிவந்த விமர்சனம் இது : http://kalachuvadu.com/issue-146/page75.asp

புதன், ஜனவரி 11, 2012

காதலின் துயரம் நிரம்பிய ஆன்மா


அஸீஸ் பே சம்பவம் 



“பிறப்பு, இறப்பு என்னும் இரண்டு பெரும் தனிமைகளுக்கு இடைப்பட்ட சிறிய சாகசமே வாழ்க்கை. நம் இருப்பை வடிவமைக்கும் முழுமையிலிருந்து விலகுவதுதான் மானுடத்தின் கதை. ஓர் உடம்பிலிருந்து பிறப்பதன் மூலம் பெரிய முழுமையிலிருந்து விலகுகிறோம். இப்படியாகத் தொடங்கும் அந்தச் சாகசம் மரணம் எங்கே நமக்காகக் காத்திருக்கிறதோ அங்கே முடிவடைகிறது” என்கிறார் துருக்கி எழுத்தாளர் அய்ஃபர் டுன்ஷ். இவரது அஸீஸ் பே ஹேடசேசி என்னும் சிறுகதைத் தொகுப்பிலுள்ள கதையே அஸீஸ் பே சம்பவம். துருக்கிய கதைசொல்லும் திறனின் செவ்வியல் உதாரணமான இந்தச் சிறுகதை அய்ஃபர் டுன்ஷுக்கு மிகப் பரவலான வாசகர்களை உருவாக்கித்தந்துள்ளது.

தன் முழுவாழ்க்கையைச் செலவிட்டும் மனத்திலிருந்து களைந்தெறிய முடியாதபடி மரியத்தின் மீது தான்கொண்டிருந்த மாசற்ற கடுங்காதல் ஏற்படுத்திய தீராக் காயம் தரும் வேதனைமிகு நினைவுகளைக் கடக்க இயலாமல் தனிமையின் உக்கிரத்தில் வீழ்ந்தழிந்துபோன இசைக் கலைஞன் அஸீஸ் பேயை மையமாகக் கொண்டு விரிகிறது கதை. அவனது தம்புராவிலிருந்து புறப்படும் மெல்லியதும் துயரங்களைக் கசியவிடுவதுமான துக்கம் தோய்ந்த இசை ஸேகியின் மது விடுதியில் நடைபெற்ற அந்தத் துயரச் சம்பவத்தில் அடங்கி ஒடுங்கும்வரை இஸ்தான்புல்லிலிருந்து பெய்ரூட்வரை இழைத்து நெய்யப்பட்ட இந்தக் கதையின் அத்தனை பக்கங்களிலும் ஒலிக்கிறது. பெரும்பாலானோர் வாழ்வில் கடந்துசெல்லும் தவிர்க்க இயலாத, மிகச் சாதாரணக் காதல் கதைக்குள் பரவிக்கிடக்கும் இழைகளும் மனித உணர்வுகள் குறித்த துல்லியமான பதிவுகளும் ஏற்படுத்தும் மயக்கங்களிலிருந்து நாம் விடுபட வெகுநேரம் பிடிக்கிறது. பல வருடங்களுக்கு முன்பு தஸ்தாயெவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகள் வாசித்தபோது மனத்தில் தளும்பி நின்ற அதே உணர்வை மீண்டும் ஒருமுறை ஊற்றெடுக்கவைத்தது இந்த நெடுங்கதை. காலச்சுவடில் வெளியான மிக்கேயிலின் இதயம் நின்றுவிட்டது என்னும் டுன்ஷின் சிறுகதையையும் இந்நேரத்தில் நினைவுகூர விரும்புகிறது வாசிப்பில் புத்துணர்ச்சி கண்ட மனம்.

மிகப் பெரும்பாடுபட்டு முழுமையான ஓவியமொன்றைத் தீட்டி அதன் பகுதிகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக மாற்றிவைக்க மாயத்தன்மை பெறும் ஓவியம்போல் தோற்றம்கொள்கிறது இந்தக் கதையின் கூறுமுறை. அஸீஸ் பேயின் வாழ்வை விதி குழப்பிப்போட்டது. அதைப் போன்றே கதையிலும் நிகழ்வுகளைக் கையாண்டு காதல், திருமணம், வாழ்வு, தனிமை, இசை போன்றவை குறித்த விஷயங்களை அடர்த்தியுடன் பகிர்ந்துள்ளார் டுன்ஷ். காமமும் காதலும் ததும்பி மிளிர வேட்கைப் பெருமூச்சுகள் வெளிப்படப் பெருமுலைப் பெண்கள் எழுதியனுப்பிய கடிதங்களைச் சுருதி பேதங்களாகக் கருதியொதுக்கிய அஸீஸ் பே மரியத்தால் தானும் அப்படியொரு வேட்கைமிகு நிலையை எய்துவோமென ஒருபோதும் எண்ணியிருக்க மாட்டான். மரியத்தின் ஆழங்காண முடியாத கறுத்த கண்களின் பெரும் பள்ளத்தில் விழுந்துகிடந்த அவனது ஆன்மாவை மீட்கும் வழியைக் கடைசிவரை அவனிடம் மறைத்துவைத்து மாயவிளையாட்டுக்காட்டிய விதியின் சாட்டைச் சொடுக்குதலில் வாழ்வின் அத்தனை ஐஸ்வர்யங்களையும் சௌந்தர்யங்களையும் இழந்துநின்றான் அஸீஸ் பே. புறக்கணிப்பின் கொடுங்கசப்பை நினைவிலிருந்து அகற்ற முடியாமல் தவித்தவன் நாசிக்குள் அதன் காடியான நெடி மிதந்துகொண்டேயிருந்தது. 

தனது சிறிய சாகசத்தின் இறுதிக் கணங்களைக் கடந்துகொண்டிருக்கும் சமயத்தில், எப்போதும் தலையை வானத்தை நோக்கியேவைத்திருக்கும் வீறாப்புமிக்க இசைக் கலைஞனான அஸீஸ் பே ஊதா நிற சாட்டின் துணியாலான கைப் பகுதி கிழிபட்டுத் தொங்கும் கோலத்தில் தட்டுத் தடுமாறி வீட்டிற்குள் வந்தமர்கிறான்; கோல்டன் ஹார்ன் ஏரியின் மேற்பகுதியில் பிரதிபலிக்கும் நிலவின் பிம்பத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறான்; வெப்பமிக்க பெய்ரூட் நகரில் மரியத்துடன் கழிந்த அந்த மூன்று நாட்கள்தாம் அவனது நினைவைச் சுரண்டுகின்றன. அஸீஸ் பேயை மணந்திருக்கிறோம் என்பதை நம்ப முடியாமல் முதலிரவில் தன்னுடன் படுத்துக்கொண்டிருப்பது அஸீஸ் பே தானா என்னும் சந்தேகத்தால் அடிக்கடி எழுந்து பார்த்தவள் வுஸ்லாத். அவனை எதிர்பார்த்து ஜன்னல் முன்னால் சாய்வு நாற்காலியில் அமர்ந்து அதே கோல்டன் ஹார்ன் ஏரியைக் கண்ணெதிரில் நிறுத்தியே தனது தனிமையை, வெறுமையைக் கொன்றவள் அவள். அந்த அன்பு மனைவி வுஸ்லாத் குறித்த ஞாபகங்கள் அவனுள் புரளவில்லை. கால ஓட்டத்தில் கரைந்துபோன மரியத்தின் காதல் பற்றியே காலமெல்லாம் கவனமெடுத்திருந்த அஸீஸுக்கு வுஸ்லாத்தின் உண்மையான பிரியத்தை உணர்ந்துகொள்ள வாய்ப்பில்லாமலே போயிற்று.

அந்தத் துயரச் சம்பவத்தின் முக்கியக் காரணகர்த்தாவான ஸேகி, ‘அபி அபி’ என அன்புடன் அஸீஸை அழைத்துவந்து அவனது தம்புரா இசை மூலம் தனது வியாபாரத்தை வளர்த்து மகிழ்ந்திருந்தான். அஸீஸ் தன்னுடன் வரச் சம்மதித்திருந்த காரணத்தால் நன்றிக்குரியவனாகவும் பெருமையுடன் நடந்துகொள்பவனாகவும் இருந்தான். தொடர்ந்த துக்கப் பாடல்களால் விடுதியின் வாடிக்கையாளர்கள் குறைந்துவந்ததால் தனது வியாபாரம் நசிந்துபோவதைக் காணச் சகிக்காமல் அந்த இரவில் தானே தன்னை நம்ப முடியாத அளவுக்கு அஸீஸிடம் கடுமையாக நடந்துகொண்டான். எனவேதான் தனது செய்கை சரியா தவறா என்னும் மனக்குழப்பத்தில் தன்னுடைய மனைவியிடம் அதேவிதமான கேள்விகளை மாற்றி மாற்றிக் கேட்டுக்கொண்டிருந்தான். அவனது செய்கையின் நியாயங்களை அவன் உணந்துகொள்ளும் வகையில் யாராவது எடுத்துக்கூறிவிட்டால் போதும் அவனுக்குள்ளிருந்து அவனைக் கொஞ்சம்கொஞ்சமாகச் சிராய்ப்புக்கொள்ளவைக்கும் அந்த வேதனையிலிருந்து அவன் மீண்டெழுந்துவிடுவான். ஆனால் கேட்பவர்களுக்குப் போதையேற்றும் மீட்டல்களைத் தம்புராவின் தந்திகளில் மென்மையான சிறகுகளைக் கொண்ட பறவைகளைப் போலத் தவழவிடும் பெருமைமிக்க தம்புராக் கலைஞனான அஸீஸின் குழந்தைத்தனமான ஒன்றன்மீது ஒன்றாகப் பிணைந்திருந்த உறைந்துபோன கைவிரல்களைப் பிரித்துவிட ஒருவரும் இல்லாததுபோலவே ஸேகியை வேதனையிலிருந்து விடுவிக்கவும் அங்கு ஒருவருமில்லை.

மரியத்தின் கண்களில் அலை பாய்ந்துகொண்டிருந்த, தோற்றப் பிழையான காதலை அஸீஸ் பே கண்டு அதன் பின்னே பயணத்தைத் தொடங்கித் தனது அழிவிற்கான பாதையைத் தானே தேர்ந்தெடுத்துக்கொள்கிறான். பல்வேறு திருப்பங்களைக் கொண்ட அந்தப் பாதையின் முதல் திருப்பம் மரியம் பெய்ரூட் நகருக்குப் பிழைப்புக்காகக் குடும்பத்தோடு புறப்படுவது. அத்தோடு அவனை அவள் மறந்திருந்தால் இந்தக் கதை யாருமே அறியாதவண்ணம் காற்றோடு காற்றாக மறைந்திருக்கக்கூடும். ஆனால் அவ்வாறு நிகழாதது நமது அதிர்ஷ்டம்; அஸீஸ் பேயின் துரதிர்ஷ்டம். விளையாட்டுப் போல் கடிதமொன்றில் மரியம் விடுத்திருந்த அழைப்பு அவனைக் கிறங்கச் செய்துவிட்டது. பெருமுலைப் பெண்களிடம் சிக்காமல் அவர்களை உதா சீனப்படுத்திவிட்டு எளிதாகக் கடந்ததைப் போன்ற எச்சரிக்கையுடன் இந்தக் கடிதத்தின் அழைப்பை உதறியிருந்தால்கூட வாழ்வின் பின்னாளையச் சங்கடங்களிலிருந்து அஸீஸ் பே தப்பித்திருப்பான். பெய்ரூட் நகரில் மரியத்தின் மறக்கடிப்பால் ஏற்பட்ட மனவேதனையைப் போக்க இஸ்தான்புல்லில் வசிக்கும் தன் தாயின் கழுத்தைக் கட்டிக்கொள்ள அவனுக்குத் தோன்றுகிறது. ஆனால் இஸ்தான்புல்லிலிருந்து பெய்ரூட்டுக்குப் புறப்பட்டபோது வீட்டில் உருவான கடுமையான வாக்குவாதங்களுக்குப் பின்னர் வீட்டைவிட்டு அவன் வெளியேறியபோதே அவனது அம்மா அதிர்ச்சியில் மாண்டுவிட்டிருந்ததைப் பின்னர்தான் அறிந்துகொள்கிறான் அஸீஸ். அவனுக்குச் சிறு சலுகைகூடக் காட்டாமல் ஒதுங்கிக்கொண்டது விதி. கடும் சூறைக்குத் தாக்குப்பிடிக்கமாட்டாமல் தன்னை முழுவதுமாக இழந்த குடிசை போலானான் அஸீஸ் பே. சிதிலமடைந்த அவனது வாழ்வுக்கு அவன் எந்தவிதத்திலும் பொறுப்பாளி அல்ல; ஆனால் அத்தனை சிதிலங்களும் அவனாலேயே ஏற்பட்டன. 

ஒரு கட்டத்தில் தான் தன் தந்தையைப் போல மாறிக்கொண்டிருப்பதாக உணர்ந்து அதிர்கிறான் அஸீஸ். அவனுடைய தந்தை அஸீஸ் பேயின் அம்மாவைக் காதலித்து மணம்புரிந்திருந்தார். முறிந்துபோன காதல் நினைவில் இருந்தபோதும் அவரால் மறுபடியும் காதல்வயப்பட முடிந்திருந்தது. தோல்வியுற்ற காதலின் வேதனையைத் தள்ளிவைத்துவிட்டு மணம்புரிந்து, தொடர்ந்து வேலைக்குச் சென்று குடும்பத்தைப் பராமரித்து, குடித்து, எஞ்சிய நாள்களை எல்லாம் வேடிக்கை மனிதர் போலக் கழித்துப் பிறகுதான் மறைந்திருந்தார் அவர். ஆனால் அஸீஸ் பேயால் மரியத்தின் கண்களையோ அதனால் ஏற்பட்ட ஏமாற்றத்தையோ முறிந்துபோன அந்தக் காதலின் வலியையோ கடைசிவரையிலும் மறக்கவே முடியவில்லை. இங்குதான் வழக்கம் போல் அலுவலகம் சென்று சம்பாதித்து, வாழ்ந்து, மடிந்த எழுத்தரிடமிருந்து வேறுபட்டு நிற்கிறான் விளையாட்டாகத் தான் தொட்ட தம்புராவையே தனக்கான அடையாளமாக மாற்றிக்கொண்ட கலைஞன் அஸீஸ் பே. 

அகாலத்தில் மறைந்துவிட்டிருந்த தன்னுடைய தாத்தாவின் தம்புராவைச் சிறுபிராயத்தில் விளையாட்டுப் பொருளாகவே எடுத்துவைத்து விளையாடிக்கொண்டிருந்தான் அஸீஸ் பே. தந்தையைக் கவர்ந்திராத அந்த இசைக் கருவி அஸீஸை ஈர்த்தது. மரியத்தால் வஞ்சிக்கப்பட்டு அநாதைபோல் மொழி தெரியாத அந்தப் பெய்ரூட் நகரில் தினசரி உணவுக்கே வழியற்ற கொடுமையை விதி அவனுக்கு நேர்ந்துவிட்டபோது மனத்துயராற்ற அந்த இசைக் கருவியை எடுத்து மீட்டுகிறான் அஸீஸ் பே. அந்த மீட்டல் அவனுக்கு டோராஸ் வடிவில் மற்றொரு வாழ்வைத் திறந்துவைத்துக் காத்திருந்தது. தத்தளித்த வாழ்வில் தப்பிப் பிழைக்கச் செய்த அதே தம்புராதான் அந்தத் துயரச் சம்பவத்துக்குக் காரணமான சோகப் பாடல்களுக்கான இசையை வழியவிட்டு அவனை ஒரேயடியாக மூழ்கடித்ததும் என்பது முரணே.

தனது காதல் கைகூடாமல்போயிருந்தால் அதிலிருந்து அஸீஸ் மீண்டு வந்திருக்கக்கூடும்; ஆனால் மரியம் நம்பிக்கையோடு வரவழைத்தபின் கைவிட்டுவிட்டுப் போய்விட்டாள். அவனுக்கு மிகத் தீவிரமாகத் தென்பட்ட அந்தக் காதல் அவளுக்கு வெறும் விளையாட்டாக மட்டுமே நின்றுவிட்டதால் ஏற்பட்ட மனவருத்தம் அவனுக்குள் நிலைபெற்றுவிட்டது. தான் விரும்பிய எளிய பொம்மை கிடைக்காவிட்டால் தனக்குக் கிடைத்த அனைத்து வகை அரிய பொம்மைகளையும் தூக்கி எறியும் குழந்தைபோலானான் அஸீஸ். அவனுக்குள்ளே பரவிவந்த துக்க அலைகளில் சிக்கிக்கொள்வதில் அவன் பிரியம் கொண்டான். துக்கம் அவனுக்குப் போதை தந்தது. இன்னும் இன்னும் ஆழமாகத் துக்கத்துக்குள் இறங்கிக்கொண்டே இருந்தான். தனது துக்கத்தைத் தம்புராவின் மீட்டல் வழியே உலகுக்குப் பரப்பி அதைத் தனது துக்கத்தோடு ஒன்றிணைக்கும் வேட்கையில் துக்கத்தை விட்டு வெளியேறத் துடிக்கும் புற உலகை மறந்தான். அவனோடு முரண்பட்ட புற உலகத்தை அவனுக்கு எதிராக மாற்றமுற்பட்ட விதி ஸேகியின் மதுபான விடுதியில் தனது கடைசி பாணத்தை அஸீஸ்மேல் பாய்ச்சிய பின்னர் “எல்லாம் முடிந்தது.”   

இந்த இசைக்கலைஞனின் அனைத்துப் பிராயங்களையும் மன உணர்வுகளையும் மிகத் தெளிவாகப் பதிவுசெய்திருக்கிறார் அய்ஃபர் டுன்ஷ். எங்கோ துருக்கியில் நடைபெற்ற கதை என்பதாக அல்லாமல் நமக்கு நெருக்கமான ஒருவனாக அஸீஸை நம்மால் அடையாளம் காண முடிகிறது. கதை விவரிப்பில் டுன்ஷ் பயன்படுத்தியிருக்கும் நவீன மொழி நடை நம்மை வசீகரிக்கிறது. இவரது சிறுகதையான சக்ன 1989இல் கம்ஹுரியத் நாளிதழ் நடத்திய ‘யூனஸ் நாடி சிறுகதைப் போட்டி’யில் கலந்துகொண்டு முதல் பரிசை வென்றது. 2001இல் வெளியான இவரது “நீ ஆக்கிரமிக்கப்படாமலிருந்தால் என் பெற்றோர் உன்னைப் பார்வையிடுவர் - எழுபதுகளில் எங்கள் வாழ்க்கை” என்னும் வாழ்க்கைக் குறிப்பு நூல் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. பால்கன் நாடுகள் வழங்கும் சர்வதேச விருது 2003இல் இந்நூலுக்கு வழங்கப்பட்டது. இதன் அரபி மொழியாக்கம் சிரியாவிலும் லெபனானிலும் வெளியானது. துருக்கியைச் சார்ந்த புகழ்பெற்ற எழுத்தாளரான சையத் ஃபைக் எழுதிய சிறுகதைகளை அடிப்படையாகக் கொண்டு ‘வானத்து மேகம்’ என்னும் திரைக்கதையையும் இவர் எழுதியுள்ளார். இது படமாக்கப்பட்டுத் துருக்கித் தொலைக்காட்சி அலை வரிசையில் 2003இல் ஒளிபரப்பானது. 

இத்தகு சிறப்புகளைப் பெற்றுள்ள அய்ஃபரின் கதையைத் தமிழ்க் கதை போல் உணரச் செய்துள்ளார் சுகுமாரன்.  அஸீஸின் மனவோட்டங்களின் நெழிவுசுளிவுகளையும் ஏற்ற இறக்கங்களையும் உயர்வுதாழ்வுகளையும் தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களாலான அடர்மிகு வாக்கியங்களின் வழியே நமக்கு மிகவும் நெருக்கமாக்கியுள்ளார் சுகுமாரன்.  செறிவுமிக்க நடைகொண்ட இந்தக் கதையின் துயரார்ந்த பரவசம் நம்மை முழுவதுமாக ஆக்கிரமித்து நிற்கும் அதே சமயத்தில் மொழிபெயர்ப்பைப் படிக்கும் உணர்வைத் துளிக்கூட அரும்பவிடாமல் செய்ததன் மூலம் சுகுமாரன் தனித்துத் தெரிகிறார். இதன் பின்புலமாகவுள்ள மொழியாக்கம் குறித்தான அவரது அக்கறையும் அவதானிப்பும் மூலத்தை வாசித்த வாசகனுக்குக் கிட்டிய வாசக அனுபவத்தைத் தமிழில் வாசிப்பவனுக்கும் உருவாக்கித் தந்துவிட வேண்டுமென்ற யத்தனிப்பும் இணைந்து இப்படைப்போடு வாசகன் கொள்ளும் உறவை அர்த்தமுள்ளதாக்கிவிடுகின்றன. மனத்தின் ஈரமிக்க, பசுமையான ஊற்றுக்கண்களை உருத் தெரியாமல் செய்துவிடும் படைப்புகளால் சோர்ந்து போயிருக்கும் வாசக மனங்களில் கிறங்கவைக்கும் நறுமணம்கொண்ட இலக்கிய வாசனையைக் கொண்டு வந்து சேர்த்துள்ளார் சுகுமாரன். 


அஸீஸ் பே சம்பவம் 

அய்ஃபர் டுன்ஷ்

தமிழில்: சுகுமாரன்
பக். 96. விலை: ரூ.50 (மே 2011)
வெளியீடு
காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ்(பி)லிட்.
669, கே. பி. சாலை
நாகர்கோவில் - 629 001


காலச்சுவடு ஜனவரி 2012 இதழில் வெளியாகியுள்ள மதிப்புரை இது. அதன் இணைய இணைப்பு இதோ http://kalachuvadu.com/issue-145/page137.asp 

ஞாயிறு, ஜனவரி 01, 2012

2011: மாயமான் பின்னே ஓடும் வாழ்க்கை

உறவும் நட்பும் நெருங்குவதும் விலகுவதும் மிக இயல்பான செயலாக நிகழ்கிறது. மனம் ஏன் பின்னணிக் காரண காரியங்களை அலசி ஆராய்ந்து அவதியுற வேண்டும்? (2011 ஜன. 6) 

🙏

படித்து முடித்து பதினாறு வருடங்கள் கழிந்தும் ஏதோ ஒரு உப்புமா வேலையில் 8500 மட்டும் மாதச் சம்பளம் வாங்கும் பொறியியல் பட்டதாரி முட்டாள்தானே என சமூகம் நினைக்கிறது... அதன் நினைப்பு சரிதானா? (2011 ஜன. 8) 

🙏

மனசுல என்ன தோணுதோ அதை டக் டக்குன்னு பேசி பேரைக் கெடுத்துக்கொள்வதே பிழைப்பாப்போயிருச்சு. மனசுல எவ்வளவு கோபம் இருந்தாலும் அதை வெளிக்காட்டிக்காம வளைந்து, நெழிந்து, குழைந்து, இதழோரச் சிரிப்பை நழுவவிடாமல் பேசும் வித்தையை எங்கேயாவது சொல்லித் தர்றாங்களா? (2011 மார்ச் 4) 

🙏

மௌனமாக இருக்க முடிகிறது; அமைதியை அடையத்தான் முடியவில்லை. (2011 மார்ச் 11) 

🙏

சிக்ஸர் அடித்த பந்தை 21 லட்சத்துக்கும் டாஸ் போட பயன்பட்ட நாணயத்தை சுமார் 11 லட்சத்துக்கும் ஏலம் எடுக்க எப்படித்தான் தோன்றுமோ? பணத்தை என்ன பண்ண என்றே தெரியாதவர்கள் வாழும் பூமியில் தான் நாமும் வாழ்கிறோம்? என்ன கொடுமை சரவணா! (2011 ஏப்ரல் 5) 

🙏

நமக்கு முதல்வராக வர ஆசைப்படும் கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்த் யாருமே பத்தாங்கிளாஸ் தாண்டலை... ஒழுங்கா பத்தாங்கிளாஸோட படிப்பை நிறுத்தியிருக்கலாம் முதல்வராகவாவது ஆகியிருக்கலாம். (2011 ஏப்ரல் 10) 

🙏

எட்டுத் திக்கும் மத யானை என்ன செய்யப் போகிறார்கள் தமிழக வாக்காளர்கள்? (2011 ஏப்ரல் 11) 

🙏
 
ஜனநாயகக் கடமையை இந்த முறையும் நிறைவேற்ற முடியவில்லை. பிரதமரே நிறைவேற்றவில்லை, நமக்கென்ன என்று சமாதானம் கூறிக்கொண்டாலும் ஒரு வகையான இழப்பு தான் இது. வெளியூரில் வசிப்பவர்கள் வாக்களிக்க ஏதாவது வழிவகை செய்தால் வாக்களிப்போர் சதவிகிதம் உயரக்கூடும். அடுத்த தேர்தலிலாவது இது குறித்து ஆவன செய்யுமா தேர்தல் ஆணையம். (2011 ஏப்ரல் 13) 

🙏

ப்ரியத்தின் உச்சத்தில் ஒளிந்திருக்கிறது வெறுப்பின் தொடக்கப்புள்ளி (2011 மே 5) 

🙏

காத்திருப்பு இன்றோடு முடியப் போகிறது. நாளை எல்லாம் வெட்டவெளிச்சமாகிவிடும்... (2011 மே 12) 

🙏

என் புது நண்பரை எனக்குப் பிடிக்காதுதான் ஆனால் என் பழைய நண்பர் படுத்தியபாட்டால் புது நண்பரைப் பார்த்து முகம் மலர வேண்டியதாயிற்று... (2011 மே 13) 

🙏

கருணாநிதி, 1989 தேர்தலில் வெற்றிபெற்று பதவியேற்கும்போது வானொலியில் ஆற்றிய உரையில் தமிழக மக்களை குழப்பமில்லாத ஜனநாயகவாதிகள் என்றார் அந்தக் கூற்று மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியுள்ளது. ஆனால் அதை நினைத்துப்பார்க்க கருணாநிதி விரும்பமாட்டார் இப்போதுள்ள நிலையில்... (2011 மே 13) 

🙏

தலை அரிக்கும்போதெல்லாம் நாம் கொள்ளிக்கட்டையால் தான் தலையைச் சொறிகிறோம்... (2011 மே 14) 

🙏

வணக்கம் நண்பர்களே என்னுடைய மொபைல் இன்று மாலை தொலைந்துவிட்டது. புதிய எண் வாங்கிய பிறகு தொடர்புகொள்கிறேன். யாருமே லைக் போட முடியாத ஒரு கமெண்டை இன்று போட்டிருக்கிறேன் என எண்ணுகிறேன் (2011 ஜூன் 9) 

🙏

முழுவதும் எண்ணெயில் நனைந்த கையோடு கண்ணாடிப் பாத்திரத்தைக் கையாளுவது போலவே உறவையும் நட்பையும் கையாண்டும் இன்னும் ஒரு சில கண்ணாடிப் பாத்திரங்கள் என்னிடம் புழக்கத்திலுள்ளன... (2011 ஜூலை 13) 

🙏

மாயமான்கள் பின்னால் ஓடுவது வாழ்க்கையின் தவிர்க்க முடியாத அம்சம்தானோ? (2011 ஆகஸ்ட்5) 

🙏

அன்பு, நட்பு, பாசம், காதல், கருணை, கத்தரிக்காய் எல்லாமே ஒவ்வாமையாகவே உள்ளது (2011 ஆகஸ்ட் 19) 

🙏

ஊழலுக்கு எதிராகப் போராடும் அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்ஜி. அவருக்கே ஏகப்பட்ட சொத்து, உல்லாசமா உலக நாடுகளைச் சுத்தி வர்றாரு. ஆனால் அவர் ஊழலுக்கு எதிராக தனது ஆதரவைத் தருகிறார். கொஞ்சம்கூட சுய சிந்தனை அற்று மத்தியதர வர்க்கம் இதை நம்பினால் அவர்கள் நிலைமை கஷ்டம்தான்... ராம் லீலா மைதானத்தில் ரவிசங்கர் வந்தே மாதரம் என்று சொன்னது வந்து ஏமாத்துறோம் என்றே என் காதில் விழுகிறது... (2011 ஆகஸ்ட் 21) 

🙏



வாகை சூட வா போய் வகையாக மாட்டிக்கொண்டேன். அடிப்படைப் புரிதலற்ற அமெச்சூர் சினிமா... (2011 அக்டோபர் 8) 

🙏
 
உரையாடல் வெளியிலிருந்து வெளியேறி விட யத்தனித்துக்கொண்டே இருக்கும் மனம்... சூழல் அதை முறியடித்துக்கொண்டே இருக்கும்... இந்தக் கண்ணாமூச்சி எப்போது நிறைவு பெறுமோ? (2011 நவம்பர் 29) 

🙏
 
ஒன்றும் ஒன்றும் இரண்டு என்பதுபோல் எளிதாகப் புரிய வேண்டும் வாழ்க்கை என மனம் ஆசைப்படுகிறது. ஒன்றும் ஒன்றும் எத்தனையாக இருந்தால் உனக்கென்ன என்று மனத்திடம் வம்பு செய்கிறது வாழ்க்கை... (2011 டிசம்பர் 23) 

🙏


ஞாயிறு, டிசம்பர் 04, 2011

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்


படித்தவர்களின் சூதும் வாதும்


எப்போதும்போல் மலர்ந்த அந்த நாள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் (த. அ. ப. தே.) தலைவருக்கும் உறுப்பினர்களுக்கும் வழக்கமான நாளாக முற்றுப்பெற வில்லை. அவர்கள் புரிந்திருந்த ஊழல்களும் முறைகேடு களும் கடந்த அக்டோபர் 14 அன்று வெளியுலகுக்குக் காட்சியாகத் தொடங்கியது.  த. அ. ப. தே. தலைவர் ஆர். செல்லமுத்து, உறுப்பினர்கள் 13 பேர் ஆகியோர் வீடுகளிலும் அரசுப் பணியாளர் தேர்வாணையத்திலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நிகழ்த்திய திடீர்ச் சோதனை பற்றிய தகவல் செய்தியாகத் தொலைக்காட்சி அலை வரிசைகளில் ஒளிபரப்பானதைக் கண்டபோது அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைப் பற்றி அறிந்திருந்தோர், பணி நியமனத்திற்கெனக் காத்திருந்தோர் மத்தியில் அதிர்ச்சி அலைகள் பரவத் தொடங்கின. லஞ்ச ஒழிப்பு இயக்குநர் மகேந்திரனின் தலைமையில் ஏறக்குறைய நூற்றைம்பது பேர் இந்தச் சோதனையை நிகழ்த்தியிருந்தனர். த. அ. ப. தே. தலைவர் மற்றும் உறுப்பினர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு விசாரணை நடத்தியது இதுதான் முதல்முறை என்பதால் இந்நடவடிக்கை பொதுமக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றது. முறையற்ற வழிகளில் பணம் சம்பாதிக்கத் துடித்த ஆணையத்தின் தலைவர்; உறுப்பினர்கள்; மேல் மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரையிலான அதிகாரிகள் போன்றோருக்கும் அவர்களது சட்டபூர்வமற்ற நடவடிக்கைகளுக்குத் துணைபோனவர் களுக்கும் இது மனக் கலக்கத்தை உண்டுபண்ணியது. 

சமூகத்தின் வேர்வரை பரவியுள்ள பொருளீட்டும் வெறி, கையூட்டுக் கொடுப்பவர்களையும் வாங்குபவர் களையும் ஒருசேர ஆக்கிரமித்திருப்பதால் இத்தகைய ஊழல்கள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. குழந்தைகளது கல்விக்கான செலவுகளை முதலீடாகப் பார்க்கும் பெற்றோர்கள் ஏதாவது ஒருவகையில் தம் மக்களைச் சமூகத்தின் உயர்தட்டில் அமர்த்த விரும்புகின்றனர். அதற்கான முறையான தகுதி தம் பிள்ளைகளிடம் இல்லாதபோது சமூகத்தில் காணப்படும் ஓட்டைகளைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி அவர்களை முன்னேற்ற பெற்றோர்கள் விழைகின்றனர். இதன் காரணமாகவே வேலைக்கெனப் பணம் கொடுப்பது இவர்களைப் பொறுத்தவரை சமூகக் குற்றமாகத் தென்படாமல் பிள்ளைகளின் நல்வாழ்வுக்கான முயற்சியாகச் சுருங்கிவிடுகிறது. பணம் கொடுக்க இயலாமல் அல்லது விரும்பாமல் திறமையை மட்டுமே நம்பி உழைத்துவருபவர்களது வேலைகளைத் தாங்கள் கைப்பற்றுகிறோம் என்ற குற்றவுணர்வு சிறிதுமற்றுக் குறுகிய மனோபாவம் கொண்டவர்களாக இவர்கள் மாறுகிறார்கள். அழுகிக்கொண்டிருக்கும் சமூகத்தைக் குற்றம்சாட்டும் இந்தப் பெற்றோர்கள் அதற்குத் தாங்களும் ஒரு காரணமாக விளங்குவதை உணரவியலாத அளவுக்குப் புத்திர பாசம் இவர்கள் கண்களை மறைக்கிறது.  

இத்தகைய பெற்றோரிடம் வகைதொகையின்றிப் பணம் பெற்றுச் சட்டத்திற்குப் புறம்பாக நடந்து கொண்டோர் என நம்பப்படுபவர்களது வீடுகளில்தாம் அன்று சோதனை நடத்தப்பட்டது. உதவிப் பல் மருத்து வர்கள், 2006-2008ஆம் ஆண்டுக்கான மோட்டார் வாகன ஆய்வாளர்கள், குரூப் 1 அதிகாரிகள் போன்ற வர்களைத் தேர்வுசெய்ய நடத்தப்பட்ட தேர்வுமுறைகளில் மேற்கொள்ளப்பட்ட முறைகேடுகள் காரணமாக எழுந்த குற்றச்சாட்டையொட்டியே சோதனை நிகழ்த்தப்பட்டி ருந்தது. த.அ.ப.தே. தலைவர், உறுப்பினர்கள்மீது ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழும் இந்தியத் தண்டனைச் சட்டப்பிரிவுகளின் கீழும் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. குற்றம் சாட்டப்பட்டோர், உதவிப் பல் மருத்துவர் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பெயர்ப் பட்டியல் அதிகாரபூர்வமாக வெளியிடப்படு வதற்கு முன்பு அதைப் பார்வையிடக் கோரியுள்ளனர்; 2006-2008ஆம் ஆண்டுகளுக்கான மோட்டார் வாகன ஆய்வாளர்களுக்கான தேர்வு முறைகளில் ஊழல் புரிந்துள்ளனர்; இவற்றின் மூலம் விதிகளைமீறி முறையற்ற வழிகளில் பொருளாதாரரீதியான பயன்பெற முயன்றுள்ளனர்.

துணை ஆட்சியர், காவல் துறை உதவிக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளைத் தேர்ந்தெடுக்க நடத்தப்படும் குரூப் 1 தேர்வுகளில் நடைபெற்றுவரும் ஊழல்களைத் தடுக்கும்வகையில் தேர்வாணையச் செயலர் த. உதயச்சந்திரன் துணிச்சலுடன் செயல்பட்டுள்ளார். குற்றம்சாட்டப்பட்டவர்கள் விதிமுறைகளுக்குக் கட்டுப்படாமல், செயலரைச் செயல்படவிடாமல் தடுத்துள்ளனர். தங்கள் பெயர்களின் பின்னே ரயில் பெட்டிகள்போல் பட்டங்களைச் சுமந்துதிரியும் இவர்கள் அனைவரும் பொறுப்பான உயர்பதவிகளை வகித்துப் பின்னரே தேர்வாணையப் பணிகளுக்கென நியமிக்கப்பட்டுள்ளனர் என்பதை நினைக்கும்போது மனத்தில் அச்சமெழுகிறது. 

இந்தச் சோதனையில் கையெழுத்திடப்படாத பணி நியமன உத்தரவு நகல்கள், போட்டித் தேர்வு எழுதியவர்களின் நுழைவுச்சீட்டுகள், பல்வேறு பணிகளுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டோர் பட்டியல், அரசியல்வாதிகளும் முக்கிய ஆளுமைகளும் வழங்கியிருந்த பரிந்துரைக் கடிதங்கள், கிராம நிர்வாக அலுவலர் தேர்வெழுதியவர்களின் பதிவு எண்கள் கொண்ட பட்டியல், மாணவர் களின் சான்றிதழ்கள், மோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வுகளை எழுதியவர்களின் மதிப்பெண் விவரங்கள் அடங்கிய ஆவணங்கள், மையிட்டு நிரப்பப்பட்ட விடைத் தாள்கள், புதிய சொத்துகள் வாங்கியதற்கான சான்றுகள் போன்ற அநேக ஆவணங்களும் ரொக்கப் பணம் லட்சக்கணக்கிலும் கைப்பற்றப்பட்டிருந்தன. ஓய்வுபெற்ற காவல் துறை ஐ. ஜி. துரைராஜின் தம்பியான உறுப்பினர் சண்முகநாதன் வீட்டில் ஏறக்குறைய இருபத்தைந்து லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. அறத்தைச் சுத்தமாகப் புறக்கணித்துவிட்டுப் பணம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டதாக நம் சமூகம் மாறிவிட்டதன் அப்பட்டமான சான்று இது.

தேர்வெழுதும் மாணவ, மாணவிகள்
      
2005இல் தனது பவளவிழாவைக் கொண்டாடிய இந்த ஆணையம் ஊழல்களுக்குப் பேர்போனது. காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வரும்போதெல்லாம் அதை மையமிட்டு அநேக ஊழல் ஊற்றுகள் வெவ்வேறு மட்டங்களில் சுரக்கும். கேள்வித் தாள்களை வழங்குவது, விடைகளைத் தேர்வுக்கு முன்னமே விண்ணப்பதாரர்களுக்கு அறியத் தருவது, நேர்முகத் தேர்வில் அளிக்கப்படும் மதிப்பெண்களைப் பெற்றுத் தருவது, விரும்பிய இடத்திற்கு பணி நியமன உத்தரவை மாற்றித் தருவது என எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கிருந் தெல்லாம் இப்போது லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் சிக்கியுள்ள தலைவரும் உறுப்பினர்களும் பணம்பெற்றுள் ளதாகச் சொல்லப்படுகிறது. விதிமுறை மீறலும் அதற்கு நிர்ணயிக்கப்படும் சட்டபூர்வமற்ற கட்டணமும் நேர்விகிதப் பொருத்தமுடையன. தேர்வாணையத்துக்குத் தொடர்பே இல்லாத இடத்தில் ஆட்கள் சந்தித்துச் சங்கேத வார்த்தைகளோடு சட்டபூர்வமற்ற விதத்தில் ஆவணப் பரிமாற்றங்களை மேற்கொள்வதாகவும் கதைகள் உலவுகின்றன. எப்படியாவது அரசு வேலையைப் பெற்று விட்டால் போதும் எஞ்சிய வாழ்நாள் முழுவதையும் நிம்மதியாகக் கழித்துவிடலாம் என்று நினைத்தும் அதற்கான உழைப்பைச் செலுத்தத் தயாராக இல்லாத நடுத்தரவர்க்க விண்ணப்பதாரர்களை இலக்காகக் கொண்டே இந்த முறைகேட்டாளர்கள் செயல்படுகின்றனர். கற்பனைக்கெட்டாத விதத்தில் பல ரூபங்களில் பணி நியமன உத்தரவு வழங்கும் அதிகாரத்தைப் பயன்படுத்திப் பெருமளவில் இவர்கள் பொருளாதாரப் பயனடைந்துள்ளனராம். தன்னாட்சி அதிகாரம்கொண்ட அமைப்பாக இருப்பதால் தங்களைக் கேள்விகேட்க எவருமில்லை என்ற அதீத நம்பிக்கையின்பொருட்டுத் தைரியமாக முறைகேடுகளில் ஈடுபட்டுப் பெருவாரி யான தொகையைக் கையூட்டாகப் பெற்றுக்கொண்டு ஆனந்த வாழ்வு நடத்திவந்ததாகச் சொல்லப்படும் ஆணைய உறுப்பினர்களுக்கும் தலைவருக்கும் 2011 சட்டப்பேரவைத் தேர்தல் மூலம் நிகழ்ந்த ஆட்சி மாற்றம் நல்ல சகுனமாக இருக்கவில்லை. 

தமிழகத்தில் அறிவியல் முறை ஊழலுக்கு வித்திட்ட வராக அறியப்பட்டிருக்கும் கருணாநிதி முதல்வராக இருந்தபோது இவர்கள் பெரிதாக அலட்டிக்கொள்ளத் தேவையில்லாமல் இருந்தது. முறைகேடுகள் பற்றிய குற்றச்சாட்டுகள் எழுப்பப்படும்போது கண்டிப்புடன் நடந்துகொள்ளாமல் தாயுள்ளத்தோடு நடந்து கனிவை வெளிப்படுத்திப் பிரச்சினையைப் பெரிதுபடுத்தாமல் சுமூகமாகத் தீர்த்துவிடும் சாணக்யர் அவர். தமிழகத்தில் ஊழலை வளர்த்தெடுத்ததில் ஜெயலலிதாவின் பங்கும் குறைத்து மதிப்பிடக் கூடியதல்ல என்பதையும் அவருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு தற்போது பெங்களூர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருவதையும் மறந்திட இயலாது. என்றாலும், அரசுப் பணியாளர் தேர்வாணையம் குறித்த அலட்சியப்படுத்தவியலாத குற்றச்சாட்டுகள் அரசின் தலைமைப் பீடத்தில் அழுத்தமாக வைக்கப்பட்டதாலும் இயல்பாகவே அவரிடம் மண்டிக்கிடக்கும் திமுக எதிர்ப்புணர்வின் காரணத்தாலும் அவர் தலைமை யிலான தமிழக அரசு இவ்விஷ யத்தில் மேம்போக்கான நடை முறையைத் தளர்த்திக்கொண்டு ஆக்கபூர்வமான செயல்பாட்டுக்கு நகர்ந்திருக்கிறது. 

நேர்மையான அதிகாரிகளான த. உதயச்சந்திரனையும் வெ. இறையன்புவையும் முறையே தேர்வாணையத்தின் செயலாளராகவும் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறைச் செயலாளராகவும் நியமித்ததைத் தேர்வாணைய முறைகேடுகளுக்கெதிரான அரசின் முதல் நடவடிக்கையெனக் குறிப்பிடலாம். 2011, ஆகஸ்ட் ஒன்பதாம் நாள் அன்று தமிழக அரசு த. அ. ப. தே. தலைவர், உறுப்பினர்களை ஊழல் தடுப்புச் சட்டம்-1988இன் கீழ் ஊழல் தடுப்பு வரம்புக்குள் கொண்டுவர அரசாணை பிறப்பித்த செயல் அடுத்த நடவடிக்கை. த.அ.ப.தே. தலைவர், உறுப்பினர்கள்மீது புகாரளிக்கப்பட்டால் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவர்களை விசாரிப்பதற்கான அதிகாரத்தை இந்த அரசாணை பெற்றுத்தந்தது. தேர்வாணையத்தின் மீதான அரசின் பிடி தொடர்ந்து இறுகிக்கொண்டிருந்ததை இந்த நடவடிக்கை உறுதிப்படுத்தியது.
  
2011 ஜூலையில் நடத்தப்பட்ட குரூப் 2 தேர்வின் விடைத்தாள்கள் தேர்வுக்கு முன்னதாகவே வெளியாகி விட்டதாக எழுந்த குற்றச்சாட்டு, கிராம நிர்வாக அலுவலர் தேர்வில் அறுநூறு பேர் அனைத்துக் கேள்விகளுக்கும் சரியான விடையளித்திருந்ததாகத் தினத் தந்தியில் வெளியான செய்தி போன்றவற்றின் விளைவாகத் தேர்வு எழுதிய மாணவர்களில் ஒரு குழுவினர் தலைமைச் செயலகத்திற்குச் சென்று தலைமைச் செயலரைச் சந்தித்து முறையிட்டுள்ளனர். மோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வில் நடந்தேறிய அதிகளவிலான முறைகேடுகள் மூலமாகத் தகுதியற்ற பலர் தேர்ச்சி பெற்றுள்ளது குறித்து விசாரிக்க வேண்டுமெனவும் தேர்வு எழுதிய சிலர் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகாரளித்துள்ளனர். தேர்வாணையம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளனைத்தையும் சேகரித்த லஞ்ச ஒழிப்புத் துறை அவற்றை ஒழுங்குபடுத்தித் தலைவர், உறுப்பினர்கள் 13 பேர்மீது வழக்குப் பதிவுசெய்ய அனுமதிக்கும்படி அரசுக்குக் கடிதம் அனுப்பியுள்ளது. இதைப் பரிசீலித்த தலைமைச் செயலர் தேவேந்திரநாத் சாரங்கி உடனே அனுமதி வழங்கி முறைப்படியான துறை நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டுள்ளார். ஆகவே திடீரெனச் சோதனை நடத்தப்பட்டிருந்தாலும் அதற்கான செயல்வடிவம் மிகக் கவனமாகத் திட்டமிடப்பட்டுப் பல கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தச் சோதனையில் தேர்வாணையத்தினர் அணிந்திருந்த முகமூடிகள் ஒவ்வொன்றாகக் கழற்றியெறியப்பட்டன.
  
அரசியல்வாதிகள் தலையீடு இருக்கும்பட்சத்தில் பாரபட்சமற்ற நியாயமான அமைப்பாகச் செயல்படுவதில் இடையூறுகள் ஏற்பட்டுவிடக் கூடும் என்ற அதிஜாக்கிரதை உணர்வு காரணமாகவே அரசுப் பணியாளர் தேர்வாணையம், தேர்தல் ஆணையம் போன்ற தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது. தேர்வாணையத் தலைவரும் உறுப்பினர்களும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 316(1) பிரிவின்படி தமிழக ஆளுநரால் நியமிக்கப்படுகிறார்கள். அவர்கள் ஆறு ஆண்டுகளோ அறுபத்தியிரண்டு வயதுவரையோ பணியாற்றலாம். இதில் எது முந்துகிறதோ அது வரை அவர்கள் பணி நீடித்திருக்கும். தற்போதைய தலைவரும் உறுப்பினர்களும் கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவின் பதவிக்காலத்தின் கடைசியில் 2011, பிப்ரவரி 21 அன்று வெளியிடப்பட்ட அரசாணை [G.O (Ms)] எண் 29  மூலம் தமிழகத் தலைமைச் செயலர் எஸ். மாலதி பிறப்பித்த உத்தரவின்படி எஸ். பன்னீர்செல்வம், வி. ரத்தினசபாபதி, பி. பெருமாள் சாமி, டி. குப்புசாமி, ஜி. செல்வமணி ஆகியோர் உறுப்பினர் பதவிபெற்றுள்ளனர்.  ஆர். செல்லமுத்து மு. க. ஸ்டாலினின் சிபாரிசால் தலைவராக்கப்பட்டார் என்கிறார்கள். கிராமப்புறப் பின்னணியில் இருந்து வந்தவர் என்பதால் கிராமப்புற மாணவர்களின் மனநிலையை நன்கு உணர்ந்துகொள்ளக் கூடியவர் என்ற நம்பிக்கையை விதைத்த தேர்வாணையத் தலைவர் இன்று தேர்வாணைய ஊழல்களின் பிதா மகனாகக் காட்சியளிப்பது அவலமே.  

தேர்வாணையத் தலைவர் செல்லமுத்து வீட்டில் சோதனை

தேர்வாணைய உறுப்பினரான வழக்கறிஞர் கே. எம். ரவி 1993இல் பதிவுத் துறை அதிகாரியாகத் திருப்போரூரில் பணிபுரிந்தபோது பத்தாயிரம் ரூபாய் கையூட்டுப் பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுக் கைதாகியுள்ளார். பின்னர் இவர்மீது சொத்துக் குவிப்பு வழக்கும் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த வழக்குகளிலிருந்து நீதிமன்றத்தில் இவர் விடுவிக்கப்பட்டுவிட்டார். அரசு வேலையை உதறிவிட்டே இவர் தேர்வாணைய உறுப்பினராகியுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு யோசிக்கும்போது ஒவ்வொரு உறுப்பினர்களின் தேர்வுகளுக்குப் பின்னணியிலும் என்னென்ன மர்மங்கள் ஒளிந்திருக்குமோ தெரியவில்லை. மராட்டிய மாநிலத் தேர்வாணைய உறுப்பினருக்கெதிரான ஊழல் வழக் கொன்றில், ஜூலை 2007இல் உச்ச நீதிமன்ற நீதிபதி பி. கே. பாலசுப்ரமணியம் வழங்கிய தீர்ப்பில் மாநில அரசுகள் தேர்வாணையத் தலைவரையும் உறுப்பினர் களையும் தேர்வுசெய்யும்போது கவனமாக இருக்க வேண்டுமென்றும் அப்பழுக்கற்றவர்களைத் தேர்வுசெய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்; தேர்வாணையத் தலைவரும் உறுப்பினர்களும் சீஸரின் மனைவி போல் இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். 2008இல் நடைபெற்ற ஒரிசா அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் டாக்டர் ஹெச். பி. மிர்தாமீதான வழக்கின் தீர்ப்பில் ஏற்கனவே ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப் பட்டிருப்பவர்களை மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையங்களில் உறுப்பினராக நியமிக்கக் கூடாதென உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. நேர்மையான வழியில் தேர்வாணையத்திற்குத் தலைவரும் உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படிப் பெரும்பாலும் அமையவில்லை என்பதுதான் சோகம். 

தமிழகத்தில் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்கள் நடைமுறைப் படுத்தப்பட்டிருந்தால் தேர்வாணையம் இப்படியொரு தலைக்குனிவைச் சந்தித்திருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்காது. தமிழக வீட்டுவசதித் துறைச் செயலராகச் செல்லமுத்து பதவி வகித்து வந்த காலத்தில் வீட்டு வசதி வாரிய வீட்டுமனை ஒதுக்கீட்டில் ஏதேனும் முறைகேடு நடந்துள்ளதா என்னும் கோணத்திலும் விசாரணை நடைபெற்றுவருவதை இங்கே நினைவுகூர வேண்டியுள்ளது. சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுக்கொண்டிருக்கும் விசாரணை நிறைவுபெறுவதற்குக் குறைந்தது 15 நாட்களாவது ஆகுமென முதலில் கூறப்பட்டது. லஞ்ச ஒழிப்புத் துறை தங்கள் விசாரணை குறித்த இடைக்கால அறிக்கையைத் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது. எனினும் முப்பது நாட்களைத் தாண்டிய பின்னரும் விசாரணை இன்னும் இறுதிக் கட்டத்தைத் தொடவில்லை என்பதை நவம்பர் 18 அன்று நடத்தப்பட்ட சோதனை பறைசாற்றியது. 

கிராம நிர்வாக அலுவலர் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டோர் பெற்றிருந்த மதிப்பெண்கள் இணையத்தில் வெளியிடப்படுவதாக நாளிதழ்களில் முன்னர் குறிப்பிடப்பட்ட நவம்பர் 18 அன்று தேர்வாணைய அதிகாரிகள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். தேர்வாணைய இணைச் செயலர் மைக்கேல் ஜெரால்டு, சார்புச் செயலர்கள், பிரிவு அதிகாரி, உதவிப் பிரிவு அதிகாரிகள் ஆகியோர் இந்தச் சோதனையில் அடங்குவர். முக்கியமான ஆவணங்கள் சில இதில் சிக்கியுள்ளன. தேர்வாணையத் தேர்வுகளில் பங்கேற்ற விண்ணப்பதாரர்களது விவரம், பெற்ற மதிப்பெண்கள் ஆகியவை குறித்தும் சோதனையிட்ட அதிகாரிகள் தீவிரமாக ஆராய்ந்துள்ளனர்.  முதல்வரும் தலைமைச் செயலரும் தேர்வாணைய முறைகேடுகள் குறித்த விஷயத்தில் தீவிர அக்கறை காட்டிவருவதாகச் சொல்கிறார்கள். 

செல்லமுத்து தலைவராகவும் ஏனைய 13 பேர் உறுப்பினர்களாகவும் செயல்பட்டிருக்கும் காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட நியமனங்கள் அனைத்தையும் ரத்துசெய்யும்படி அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கொன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எம். ஒய். இக்பால், நீதிபதி டி. எஸ். சிவஞானம் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்வாணையத்தை லஞ்ச ஒழிப்புத் துறையின் கண் காணிப்புக்குக் கீழ்க் கொண்டுவந்திருந்த தமிழக அரசாணையை எதிர்த்துச் செல்லமுத்துவும் ஏனைய உறுப்பினர்களும் வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக நீதிபதிகளிடம் தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்வினை புரிந்த நீதிபதிகள், தேர்வாணையம் தொடர்பான அனைத்து வழக்குகளும் தங்களின் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட வேண்டும் என்றும் தலைவர், உறுப்பினர்கள் 13 பேர் மீதான லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்க விரும்புகிறது என்றும் தெரிவித்திருந்தனர். 

தேர்வாணைய ஊழல் குறித்த விசாரணைகளின் இறுதியில் இவர்களது குற்றச்செயல்கள் சந்தேகத்திற்கிட மின்றி நிரூபிக்கப்பட்டால், முறைகேட்டில் ஈடுபட்ட அனைவரும் பதவி இழக்க நேரிடலாம். தேர்வாணையத் தலைவரையும் உறுப்பினர்களையும் பணிநீக்கம் செய்வதற்குரிய நடைமுறைகள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 317இல் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதில் குறிப்பிட்டுள்ளபடி, பணியாளர் தேர்வாணையத்தில் பணியாற்றும் அதே சமயம் வேறு எங்கேயும் ஊதியத்திற்காகப் பணியாற்றினாலோ பணியைச் செய்ய முடியாத அளவுக்கு மனநிலை பாதிக்கப்பட்டிருந்தாலோ முறைகேடுகள் தொடர்பாகக் குற்றம்சாட்டப்பட்டு அது நிரூபிக்கப்பட்டாலோ தலைவரையும் உறுப்பினர்களையும் குடியரசுத் தலைவர் பணிநீக்கம் செய்யலாம். முறைகேட்டில் ஈடுபட்டோரைப் பதவிநீக்கம் செய்யுமாறு மாநில அரசு ஆளுநரிடம் பரிந்துரைக்க, அவர் இந்தப் பிரச்சினையை ஜனாதிபதியிடம் கொண்டுசெல்வார். கவர்னரின் பரிந்துரையின் பேரில் ஜனாதிபதி இது குறித்து விசாரணை நடத்துமாறு உச்ச நீதிமன்றத்தைக் கோருவார். உச்ச நீதிமன்றம் அளிக்கும் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் ஜனாதிபதி அனைவரையும் பதவியை விட்டு நீக்கலாம் என்பதாகச் சட்ட அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

2007 ஜனவரியில் ஹரியானா அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மேஹர் சிங் சைனி, உறுப்பினர்கள் சந்தோஷ் சிங், ராம்குமார் காஷ்யப் ஆகியோரைப் பதவிநீக்கம் செய்து ஹரியானா ஆளுநர் உத்தரவிட்டிருந்ததற்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்திருந்தது. இவர்கள்மீது சாட்டப்பட்டிருந்த ஒன்பது குற்றச்சாட்டுகளில் ஆறு சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டிருந்தன. ஆகவே இவர்களைப் பதவிநீக்கியதற்குச் சட்டபூர்வமான காரணங்கள் உள்ளதாகத் தெரிவித்திருந்தது உச்ச நீதிமன்றம். அதே போல் கர்நாடக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முன்னாள் தலைவர் ஹெச். என். கிருஷ்ணா 1998, 1999, 2004 ஆகிய ஆண்டுகளுக்கான அதிகாரிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்வில் விதிமுறைகளை மீறி முறைகேடான நடவடிக்கைகளை மேற்கொண்டதால் பதவி நீக்கப்பட்டுக் குற்றப் புலனாய்வுத் துறையினரால் 2011, அக்டோபர் ஏழாம் நாளன்று கைதுசெய்யப்பட்டுள்ளார். இதைப் போன்ற முன்னுதாரணங்கள் இருந்தபோதும் இந்த விசாரணையில் இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் இருக்குமா என்பதை இப்போது ஊகித்தறிவது கடினம்.

வழக்குகளின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் இந்தச் சூழலில் அவற்றின் போக்கு குறித்துப் பெருமளவில் ஊடகங்களில் விவாதிக்கப்படுகின்றன. ஆனால் குரூப் 2, கிராம நிர்வாக அலுவலர் ஆகிய தேர்வுகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுத் தேர்ச்சிபெற்றவர்களுக்கான நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு போன்ற நடைமுறைகள் நிறைவுபெற்றபோதும் அவர்களுக்குப் பணி நியமன உத்தரவுகள் வழங்கப்படா தது குறித்த விவாதங்கள் ஊடகங்களில் இடம்பெறவில்லை. அப்படியே இடம்பெற்றாலும் அவை வெறும் ஊகத்தின் அடிப்படையிலேயே அமைகின்றன. பிற மாநிலங்களில் தேர்வாணைய முறைகேட்டுக்கெதிராக நடைபெற்ற வழக்குகளில் வழங்கப்பட்ட தண்டனை குறித்த தகவல்களை இணையதளங்களில் காண முடிகிறது. ஆனால் முறைகேட்டாளர்கள் தலைமையின் கீழ்த் தேர்வாணையம் நடத்திய தேர்வுகள் பற்றி என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதென்பது சரிவரத் தெரியவில்லை. 

முறையாகத் தேர்ச்சிபெற்றும் பணி கிடைக்காமல் மன உளைச்சலோடு என்ன நடக்குமோ என்ற பதை பதைப்போடு தேர்வாணைய உத்தரவுகளுக்குக் காத்துக்கிடப்பவர்களது நிலைமை துயரம்மிக்கது. இவர்கள் தேர்வாணைய அலுவலகத்தில் தங்கள் தரப்புக்கு நியாயம் கேட்டதோடு முதல்வரைத் தனிப் பட்ட முறையில் சந்தித்துத் தங்களுக்குப் பதவி வழங்கு மாறு கோரியுள்ளனர். சட்டவிதிகளை மீறிப் பலவித முறைகேடான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதால் செல்லமுத்து காலகட்டத்தின் அனைத்துப் பணி நியமனங்களையும் ரத்துசெய்துவிட வேண்டுமென்ற கோரிக்கை குறித்து நீதிமன்றம் என்ன நடவடிக்கை எடுக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஒட்டுமொத்தமாகத் தேர்வுகளை ரத்துசெய்ய வேண்டும் என்று எழும் குரல் மேலோட்டமான பரிசீலனையின் அடிப்படையில் ஒலிக்கிறது. இப்பிரச்சினை பற்றித் தீவிரமாக ஆலோசித்ததற்குப் பின்னர் அது எழுப்பப்படவில்லை. தேர்வுகளை ரத்துசெய்ய நேரிட்டால் முறையாகத் தேர்வெழுதி வெற்றி பெற்றவர்களுக்கு நியாயம் மறுக்கப்பட்டதாகிவிடும். குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டாலும் நிரபராதிகள் தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது என்னும் சட்ட வழிமுறை நமது நீதியமைப்பில் பின்பற்றப்படுகிறது என்பதை நினைவில்கொள்க. தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக அவர்கள் நீதிமன்றத்தை அணுகும் சாத்தியமுமுள்ளது. இத்தகைய பல குழப்ப முடிச்சுகளும் அவிழ்க்கப்படும் காலம் வெகு அருகில் என நம்புவதைத் தவிர வேறு வழியில்லை.  

ஊழலற்ற, நேர்மையான, பாரபட்சமற்ற அமைப்பாகத் தேர்வாணையம் செயல்பட்டால் மட்டுமே அதை நம்பிப் போட்டித்தேர்வுகளுக்கெனத் தயாராகும் லட்சக் கணக்கானவர்களின் உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிட்டும். பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு இறுதித் தேர்வு முடிவுகள் இரண்டு மாதங்களுக்குள் வெளியிடப்பட்டு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்களும் வழங்கப்பட்டுவிடுகின்றன எனும்போது அரசுப் பணியாளர் தேர்வாணையம் தேர்வு முடிவுகளை அறிவிக்க அதிக நாட்கள் எடுத்துக்கொள்வதையும் மதிப்பெண்கள் குறித்த வெளிப்படைத் தன்மையைப் பேணாததையும் சந்தேகத்திற்குரிய நடவடிக்கையாகவே பார்க்க வேண்டியதுள்ளது. எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான நேர்முகத்தேர்வில் மதிப்பெண்கள் அளிக்கப்படுவது முறைகேட்டை மறைமுகமாக ஊக்கு விக்கவே உதவுகிறது. பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவ ரின் மனநிலை அதற்குகந்ததாக உள்ளதா என்பதை அறிவதற்காக வேண்டுமானால் நேர்முகத் தேர்வு நடத்தப்படலாம். அதற்கு மதிப்பெண்கள் வழங்குவது அறவே ஒழிக்கப்பட வேண்டும். இந்திய ரயில்வே தேர்வுகளில் முறைகேடுகளைத் தடுக்கும் முகமாக இந்த நேர்முகத் தேர்வுகள் முற்றிலுமாகத் தவிர்க்கப்பட்டுவிட்டன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. 

தங்கள் மதிப்பெண்கள் குறித்த சந்தேகங்கள் எழும்போது தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பதாரர்கள் நிரப்பப்பட்ட விடைத்தாளைக் கோரினால் அதன் விவரம் அவர்களுக்கு அறிவிக்கப்பட வேண்டும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை அணுகும் விண்ணப்பதாரர் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு ஆளாகாமல் தடுக்கப்பட வேண்டியதும் அவசியம். இத்தகைய முறையான செயல்பாடுகள் பாரபட்சமற்றுப் பின்பற்றப்பட்டால் மட்டுமே தேர்வாணையத்தின் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படும். அப்படியான நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதில் தேர்வாணையத்தினர் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இல்லையெனில் சமூகப் பொறுப்பு மிக்க உதயச்சந்திரன் போன்ற அதிகாரிகளின் நேர்மையான முயற்சிகள் வீணாய்ப்போய்விடும்.

ஒருவேளை இந்தத் தேர்வாணையம் கூண்டோடு மாற்றப்பட்டால் அதன்பிறகு நியமிக்கப்படும் தலைவர், உறுப்பினர்கள் தற்போதைய ஆளும் கட்சிசார்ந்த வட்டாரத்திற்கு நெருக்கமானவர்களால் பரிந்துரைக்கப்பட்டவர்களாக இருக்கக்கூடும். அவர்கள் இன்று புதிதாய்ப் பிறந்தவர்களாக இருக்கப்போவதில்லை. தொடர்ச்சியான தவறுகளும் ஊழல்களும் தொடர்வது மக்களுக்கோ ஜனநாயகத்திற்கோ ஆரோக்கியமானதல்ல. நேர்மையாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கும் தேர்வாணையச் செயலருக்கும் புதியதாக உருவாகும் தேர்வாணையத் தலைவர், உறுப்பினர்களுக்கும் இதைப் போன்ற முரண்பாடுகள் எழுந்தால் இப்போது தமிழக அரசு வழங்கிவருவது போன்ற ஒத்துழைப்பைத் தொடர்ந்து அவருக்கு வழங்கித் தனது ஜனநாயகச் செயல்பாட்டை நிரூபிக்க வேண்டும். அதற்கு மாறாகக் கட்சி விசுவாசத்தோடு அரசு நடந்துகொள்ளுமேயானால் நேர்மையான செயலர் மீண்டும் வேறு ஒரு துறைக்கு மாற்றப்படுவார். வழக்கம்போல் தேர்வாணையம் ஊழல் பாதையில் பயணத்தைத் தொடங்கிவிடும்.  

டிசம்பர் 2011 காலச்சுவடு இதழில் வெளியாகியுள்ள கட்டுரை இது       

சனி, நவம்பர் 12, 2011

ஆதமிண்ட மகன் அபு



யாத்திரைகள் அல்லாவின்ட நிச்சயங்களானு


கண்டன்குந்நு வலியபறம்பு ஆதமிண்ட மகன் அபுக்காவுக்கும் அவருடைய மனைவி வீட்டிலப்புரையில் அய்ஷும்மாவுக்கும் கைக்கும் வாய்க்கும் சரியாக இருக்கும் வறுமையான வாழ்க்கை அமையப்பெற்றும் மரிக்கும் முன்பு புனிதமான மெக்காவில் காலடி வைத்து இஸ்லாமியரின் ஐந்து அடிப்படைக் கடமைகளில் ஒன்றான ஹஜ்ஜை நிறைவேற்றிவிட வேண்டுமென்ற நீண்ட கால மோகம் காரணமாக அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளைப் பின்புலமாகக் கொண்டு இஸ்லாம் மார்க்கத்தைப் பழுதறக் கடைப்பிடிக்கும் அபுக்காவுடைய நடைமுறைச்சிக்கல் மிக்க எளிய வாழ்க்கைப் பயணத்தின் ஊடாகவும் அவர் சந்திக்கும் நபர்கள் மூலமாகவும் இஸ்லாம் மார்க்கம் குறித்த தனது பார்வையை ஆழமாகவும் செறிவாகவும் பதிவுசெய்துள்ளார் இயக்குநர் சலீம் அகமது.

தேர்ந்தெடுத்துக்கொண்ட கதையைப் பார்வையாளனுக்குக் காட்சிப்படுத்தும்போது மையக் கதையிலிருந்து சிறு விலகலைக்கூட அனுமதிக்காத கறார்தன்மையுடனும்   அக்கறையுடனும் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகப் பார்வையாளனுக்கும் படத்திற்கும் இடையே உருவாகும் மானசீக உறவு வலுவானதாக அமைகிறது. எனவே அத்தரையும் மார்க்க நெறிகளை உரைக்கும் புத்தகங்களையும் யுனானி மருந்துகளையும் விற்பதற்காக அவற்றைத் தூக்கிக்கொண்டு ஊர் ஊராக மசூதி மசூதியாக அலையும் அபுக்கா செல்லும் இடங்களுக்கெல்லாம் அவர் தோளில் தொங்கும் பையாகவோ கையிலிருக்கும் குடையாகவோ நாமும் செல்ல முடிகிறது.

இறைத்தூதர் உஸ்தாத் தொழுகைக்கெனப் பள்ளிக்குப் போவதில்லை; ஆனால் நாவிதர் போக்கரின் மகளின் பித்தைத் தெளியவைத்தவர், உஸ்மானின் மணமகள் பம்பாயில் இருப்பதை ஞான திருஷ்டியில் தெரிவித்தவர், வெறும் சில்லறைகள் மட்டுமே தந்து மரக்கடை ஜான்சன் மிகப் பெரிய அளவில் சம்பாதிக்க உதவிய கைராசிக்காரர். தொலைந்துபோன கோயிலின் விக்கிரஹம் ஏரிக்கடியில் மூழ்கிப்போயிருப்பதைச் சொன்னவர்.  அற்புதங்களையும் தீர்க்கதரிசனங்களையும் தன் மூலமாக இறைவன் வெளிப்படுத்துகிறானே தவிர தனக்கும் அவற்றுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதையும் தான் வெறும் கருவி மட்டுமே என்பதையும் ஆழமாக உணர்ந்துகொண்டவர். ஆனால் மற்றவர் துயரங்களைக் காற்றோடு கலந்துவரும் மாறுபாடுகளைக் கொண்டே அறிந்துகொள்பவர்.

இந்தக் காலத்தில் அத்தரை யார் விரும்புகிறார்கள்? துபாய் செண்டுக்குத்தான் மரியாதை, மார்க்கங்களைக் குறித்து அறிவதில் யாருக்கென்ன அக்கறை, அவரவருக்கு அவரவர் காரியங்கள்தாம் முக்கியமாகப் போய்விட்டது என்று அய்ஷும்மாவிடம் அபுக்கா புலம்புவதும், ஹஜ்ஜுக்குச் செல்வதற்காகச் சேமிக்கும் பணத்தைப் போட்டுவைக்கும் பெட்டியை மற்றொரு பெட்டிக்குள் வைத்து மிகப் பாதுகாப்பாகப் பத்திரப்படுத்துவதும் அந்தப் பணத்தை எண்ணும்போது கவனமாகச் சன்னலைப் பூட்டிவிட்டே எண்ணுவதும், பணத்தை உடம்போடு அணைத்தபடி அக்பர் டிராவல்ஸுக்கு எடுத்துச்செல்வதும் பக்கத்தில் அமர்ந்திருப்பவரைச் சந்தேகத்தோடு பார்ப்பதும் தான் எதார்த்தம். இன்றைய காலகட்டத்து சக மனிதன் குறித்த உண்மையான புரிதல் இதுதான்.  


உஸ்தாத் மறைவுக்குப் பின்னர் உடலைப் பெற்றுக்கொள்வதில் இரு கிராமத்தினரிடையே போட்டியும் பூசலும் ஏற்படுகின்றன. யாருக்கும் தேவைப்பட்டிருக்காத தாயத்தங்காடி பள்ளியில் உஸ்தாத் சமாதியின் காரணமாக மக்கள் கூட்டம் அதிகரிக்கிறது, தினம் 10,000 ரூபாய் பணமீட்ட முடிகிறது. உஸ்தாத்திடம் குற்றம்கண்டுபிடித்தோரெல்லாம் அவரது வழிநடப்பதாகச் சொல்லிப் பணம் பண்ணுகிறார்கள். இத்தகவலைக் கூறும் மம்மூனும் மொய்தீனும் டீக்கடையில் அமர்ந்து பேசும் காட்சியில் நாம் எதிர்கொள்ளும் எதார்த்தமான ஏமாற்றுக்கார மனிதர்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் சந்திக்கிறோம்.

உஸ்தாத்மீது கொண்டுள்ள அடர்த்தியான பிரியம் நிரம்பிவழிய உஸ்தாத் மவுத் ஆன சேதியை ஆழ்ந்தவருத்தத்தில் தோய்த்தெடுத்த தொனியில் அபுக்காவிடம் கூறும் ஹைதருக்குப் உஸ்தாத்தைக் கொண்டு பொருளாதாரரீதியான பயன் இல்லை. ஆனால் பக்ரீத் அன்று உஸ்தாத் மீண்டும் அரூபமாக அவதரிப்பது அவனுக்கு மட்டுமே புலனாகிறது. ஆன்மிக அமைதி அவனுக்கு கிட்டுகிறது. அவன் ஹஜ் கடமை நிறைவேற்ற  வேண்டுமெனத் துடிக்கவில்லை. இறைவன்மீது அவன் வைத்திருக்கும் நம்பிக்கைகாரணமாகவே உஸ்தாத் அவனுக்குப் புலனாகிறார்.  மார்க்க நெறிகளை முழுமுற்றாகப் பின்பற்றியும் உஸ்தாத்திடம் மந்திரித்து தாயத்து வாங்கிக் கட்டியும் ஜான்சன், கோவிந்தன் மாஸ்டர், அஷ்ரப் போன்றோர் உளபூர்வமாக உதவ முன்வந்தும் ஹஜ்ஜுக்குச் செல்லும் பாக்கியம் அபுக்காவுக்குக் கிட்டவில்லை. உஸ்தாத்தின் மறு அவதரிப்பை ஹைதர் உணர்ந்த அந்த பக்ரீத் நாளில்கூட அபுக்கா ஹஜ் கனவிலேயே இருக்கிறார். இந்த இரு கதாபாத்திரங்களைக் கொண்டு மார்க்கத்திற்கும் இறை நம்பிக்கைக்கும் இடையே உள்ள மாறுபாட்டைப் படம்பிடித்துள்ளார் சலீம் அகமது.

தனக்கு விருப்பமான பெண்ணை நிக்காஹ் செய்துகொண்டு அவளோடு துபாய்க்குப் பிழைக்கப்போய்விட்டான் அபுவின் மகன் சத்தார். அவனுடைய மூத்த குழந்தை அபுவின் சாயலிலேயே இருப்பதையும் இரண்டாவது குழந்தைகூடக் கல்விச்சாலைக்குச் செல்லத் தொடங்கிவிட்டதையும் சத்தாரின் நண்பன் உஸ்மான் மூலம் அறிகிறார்கள் அபுவும் அய்சும்மாவும். பேரப்பிள்ளைகளைக்கூடத் தங்களிடம் கூட்டிவந்து காட்டாமல் தன் மகன் இருப்பதையும் தங்களைப் பெற்றோரெனக் கூறுவதில்கூட அவமானப்படுபவனாக அவன் மாறிவிட்டிருப்பதையும் குறித்து மனச்சஞ்சலத்துடன் அபுக்காவும் அய்சும்மாவும் உறங்காமல் படுக்கையில் உரையாடிக்கொள்ளும் காட்சியில் ஆக்கிரமித்துக் கிடக்கும் இருட்டு துயரடர்ந்த அந்த முதியவர்களது வேதனையையும் இயலாமையையும் மேற்பூச்சாகக் காணப்படும் மெல்லிய வெளிச்சம் வாழ்க்கைமீது அவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையையும் உணர்த்துகின்றன. பணம்கொழித்த நிலையில் மூன்று நான்குமுறை ஹஜ்ஜுக்குப் போய்வரும் மாலியக்கிள் அஸினார் ஹாஜியாருக்கோ அவரின் மகன் கார் வாங்கிக்கொடுக்கிறான். இந்த முரண்பாடுகளுக்குப் பின்னணியிலுள்ள காரணங்கள் பற்றிய சிந்தனை கிளறப்படுவது இப்படத்தின் மூலம் சாத்தியப்படுகிறது.
    
மெக்காவெனும் புனித பூமியின் ஹஜ் நிகழ்ச்சிகளைக் கண் நிறையக் காண்பதில் தனக்குள்ள மோகத்தை ஆர்வத்தோடும் ஏக்கத்தோடும் அய்ஷும்மாவிடம் விவரிக்கும்போதும், மெதினாவில் அய்ஷும்மாவின் கையை இறுக்கப் பிடித்தபடி ரசூலுல்லாவை வணங்கியதாகக் கண்ட கனவு குறித்து விவரிக்கும்போதும், மிகப் பாடுபட்டு சம்பாதித்த பணத்தைக் கொண்டு வாங்கிவந்த பாஸ்போர்ட்டை அஷ்ரப் மிகச் சாதாரணமாகக் கையாளுவதைக் கண்டு பதற்றப்படும் போதும், அஸ்ரப்பைச் சந்தித்துத் திரும்பும்போது அவர் தன் மகன் சாயலில் இருப்பதாக அய்ஷும்மா சொல்வதைக் கேட்டவுடன், இல்லையென மறுத்து அஸ்ரப் நல்லவன் எனக் கூறும்போதும், நிலத்தகராறுக்கு வரும் சுலைமான், தொப்பியும்  தாடியும் வைத்துக்கொண்டு ஐந்துவேளை தொழுதால் மட்டும் முஸ்லிமாகிவிட முடியாது ஜீவித்துக்காட்ட வேண்டும் எனக் கூறி தன்னை இழிவுபடுத்தும்போது சுலைமானே எனச் சஞ்சலத்துடன் விளிக்கும்போதும், ஹஜ்ஜுக்குப் போகும் முன்பு அவனைக் கண்டு அவன் இருக்கும் கோலம் கண்டு வேதனையோடு நெகிழும்போதும், ஹஜ்ஜுக்கான பணத்தை ஜான்சனிடமும் கோவிந்தன் மாஸ்டரிடமும் அஷரப்பிடமும் மார்க்க நெறிகளைக்கூறி மறுக்கும்போதும், ஹஜ் செல்ல இயலாத நிலைமைக்குத் தனது செயல்களே பொறுப்பென அதை தனது தவறாக எடுத்துக்கொள்ளும்போதும் அசலான முஸல்மானாகவும் முதியவனாகவுமே மாறிவிட்டார் சலீம் குமார். பிற கதாபாத்திரங்களைக் கையாண்டவர்களும் தங்களால் இயன்ற அதிகபட்ச உழைப்பைக் கொடுத்துள்ளனர் என்பது அவதானிக்கக் கூடியதாக உள்ளது.


தனித்துவமான திரைமொழியில் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் ஒளிப்பதிவும் இசையும் படத்தோடு படமாக பிரித்துணரமுடியாதபடி ஒரே அங்கங்களாகி திரைப்படத்தை  வலுவாக்கியுள்ளன. கண்களின்வழி பார்வையாளனுக்குள் புகும் காட்சிகளில் கதாபாத்திரங்களின் உணர்வுகளைச் செம்மைப்படுத்துவதில் பின்னணியிசை அமைத்த ஐசக் தாமஸ் கொடுக்காபள்ளியின் பங்கு குறிப்பிடத்தக்க விதத்தில் அமைந்துள்ளது. அதீதப் புனைவாகக் காட்சியளிக்கும் திரைப்படத்தின் வெளிச்சம் பாயும் பகுதிகளைவிட வெளிச்சம் பாயாத மறைவுப் பகுதிகளே மார்க்கம் குறித்த இயக்குநரின் அபிப்பிராயங்களை விமர்சனங்களை மென்மையாக எடுத்துவைக்கின்றன. இறை நம்பிக்கைக்கும் மார்க்கத்தைப் பின்பற்றுதலுக்குமான வேறுபாடுகளை மிக நுட்பமாக உள்ளுக்குள் மறைந்திருக்கும் நுண்ணடுக்கில் இயக்குநர் காட்சிக்குவைக்கிறார். மேலோட்டமான அதீதப் புனைவின் மயக்கம் தெளிந்து சற்று ஆழமாக இறங்கித் திரைப்பிரதியை அணுகும்போது இந்த நுண்ணிய வேறுபாட்டைக் கண்டுபிடித்து மனம் ஆசுவாசம் கொள்கிறது.

தான் பார்த்துப் பழகிய வாழ்க்கையை அது சார்ந்த மனிதர்கள் எதிர்கொள்ளும் வாழ்வியல் பிரச்சினைகளை  உள்ளடக்கிய படைப்புத்திறன் மிளிரும் இது போன்ற அசலான திரைப்படம் விருதுகளுக்கென அனுப்பப்படுவதால் நம் கலாச்சாரம் வெளியுலகுக்குப் பரிச்சயமாவதோடு படைப்பாளியின் படைப்புத்திறன் உலகளவில் உரிய அங்கீகாரமடைவது சாத்தியமாகிறது.  உலகப்படங்களை நகல் செய்து நல்ல படங்கள் எனக் கூச்சமின்றி கூறுவதோடு அத்தகைய படங்களைத் திரைப்படத்திற்கென வழங்கப்படும் உச்சபட்ச விருதுகளுக்கும் மனசாட்சியின்றி அனுப்பிவைப்பவர்கள் நிறைந்துள்ள சூழலில் இதைப் போன்ற படங்கள் விருது பெறுவதும் அதற்கான ஊக்குவிப்பது கிடைப்பதும் அவசியமானதே.

நவம்பர் 2011, படப்பெட்டி இதழில் வெளிவந்துள்ள விமர்சனம் இது
  


வெள்ளி, நவம்பர் 04, 2011

வாகை சூட வா

வேர்களோ விழுதுகளோ அற்ற ஆலமரம்


திரைப்படம் வெளிவருவதற்கு முன்பு வெளியாகும் முன்னோட்டக்  காட்சிகளும் ஊடகங்களில் கசியவிடப்படும் தகவல்களும் படம்மீதான பார்வையாளனின் கவனத்தைக் கோரி அவனைத் திரையரங்கிற்கு வரவழைக்கும் முயற்சிகளே. அவற்றை முழுவதுமாகப் புறக்கணித்துவிட்டு முன் அவதானிப்பு எதுவும் இன்றித் திரைப்படத்தை எதிர்கொள்வது சாத்தியமல்ல. களவாணி என்னும் பொழுது போக்குத் திரைப்படத்தின் மூலம் தனது திரைப் பயணத்தைத் தொடங்கியிருந்த இயக்குநர் சற்குணம்  திரைப்படமாக்கலில் கடைப்பிடித்திருந்த செய்நேர்த்தியின் காரணமாக அவர்மீது கவனம் பதிந்திருந்தது. தன்மீது குவிந்த கவனத்தைக் கருத்தில்கொண்ட அவர் அதற்கான காரணத்தை உள்வாங்கிக்கொள்ளவில்லையோ என எண்ணவைத்துள்ளது வாகை சூட வா.     
     
இப்படத்தின் காட்சியமைப்புகள் 1966இல் நடப்பதாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான தமிழர்கள் தெரிந்துவைத்திருக்கும் எம்ஜிஆர் குறித்த துணுக்கொன்றை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் தொடக்கக் காட்சி சற்குணத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கையின் ஆணிவேரை அறுக்கத் தொடங்குகிறது. அடுத்ததாகக் கதாநாயகன் விமலின் தந்தையாகப் பத்திர எழுத்தர் பாக்யராஜ் அறிமுகமாகும் காட்சியில் அவர் சுமந்துவரும் முருங்கைக்காய்ப் பையைத் தனித்துவமாகப் பார்வையாளனுக்குக் காட்டும்போது ஏதோ தவறு நேர்ந்து கொண்டிருப்பதை உணர, பதைபதைப்பு உண்டாகிறது. கலவிக்கும் முருங்கைக்காய்க்கும் தொடர்பு இருப்பதான நம்பிக்கையைப் பாக்யராஜ் உருவாக்கியது எண்பதுகளில் வெளியான அவரது முந்தானை முடிச்சில். அத்திரைக்கதைக்கு அது அத்தியாவசியமான ஒன்றாக இருந்தாலும், கல்விக்கும் அதுவும் 1966இல் நடக்கும் சம்பவங்களுக்கும் அதற்கும் என்ன தொடர்பு? திரைக்கதையின் பயணத்தில் பார்வையாளன் எதிர்கொள்ளும் இந்த முதிர்ச்சியின்மை படத்தின் இறுதிவரையிலும் அவனோடு இணை கோட்டில் பயணிக்கிறது. 
 
அடிப்படைப் புரிதலற்ற காட்சியமைப்புகளை ஒதுக்கிவைத்துவிட்டுப் படத்தோடு ஒன்றி அதன் மற்ற சிறப்புகளை ரசிக்க ஏனோ முடியவில்லை. இயக்குநரின் முழுக் கவனமும் கலைப் பொருட்கள்மீது சென்றுவிட்டது போலும். திரைக்கதையமைப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய அக்கறையைப் பார்வையாளனுக்குக் கலைப் பொருட்களைக் காண்பிப்பதில் செலவிட்டாலே படம் கலைப்படமாக மாறிவிடும் என்னும் அதீத நம்பிக்கையின் காரணத்தால் பேணிவளர்க்கப்பட வேண்டிய திரைக்கதையை ‘வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோம்’ என்னும் நிலைக்குத் தள்ளிவிட்டாரோ இயக்குநர்?

சிட்டுக் குருவிகளுக்காக விசனப்படும் அந்தக் குருவிக்காரர் கதாபாத்திரமும் அவரது பரிதவிப்பும் பகடிக்குரியன. கைத்தொலைபேசிக் கோபுரங்கள் அமைக்கப்பட்டதால் சிட்டுக்குருவிகள் காணாமல் போய்விட்டதாகச் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் துக்கம் கொள்வது இந்தக் காலகட்டத்திற்கான ஓர் உணர்வு தானே? 1966இல் குருவிகளுக்கு என்ன சிக்கல்? தானே ஆசானாகும் அளவுக்கு அறிவையும் சமூக அக்கறையையும் ஒட்டுமொத்தக் கிராமத்தின் ஆதரவையும் பெற்ற அந்தக் குருவிக்காரர், அந்த வறண்ட நிலத்துக்கு வாத்தியாராய் விமல் வந்தவுடன் அவதார புருஷர் வந்துசேர்ந்ததைப் போல ‘அவன் வந்துட்டான். அவன் வந்துட்டான்’ எனப் புளகாங்கிதமடைவது நகைப்புக் குரியதாகப்படவில்லையா? அசட்டுக் காரணத்திற்காகக் குருவிக்காரர் மரணமடைவதால் அதுவும் அர்த்தமற்ற ஒன்றாகிவிடுகிறது. அந்தக் கிராமத்தின் நலனுக்காக அவர் உயிர்விட்டதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.

குருவிக்காரர் இறந்தவுடன் ஊர் குழுமுவதைக் காட்சிப் படுத்துகையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் காமராக் கோணத்தில் மனம் லயித்துக்கிடந்தாலும் கண்டெடுத்தான் காடு செயற்கையாக அமைக்கப்பட்ட ஒன்று என்பதை அந்தப் பறவைக்கோணத் துண்டுக் காட்சி அம்பலப்படுத்திவிடுகிறது. கிராமமென முன்னிருத்தப்பட்டாலும் கிராமமாக ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு ஒவ்வாத தன்மையுடன் அது உருவாக்கப் பட்டிருக்கிறது. கல்வியறிவே இல்லாத அக்கிராமத்தில் அஞ்சல் பெட்டி ஒன்று உள்ளது. நலிவடையும் நிலையிலுள்ள அஞ்சல் துறையினர் நெஞ்சை நிமிர்த்திக்கொள்ளலாம். நாயகியின் குடிசையில் அபூர்வமாக ஒரேயொரு வாழைமரம் மட்டும் முளைத்திருக்கிறது. இவையெல்லாம் அது கிராமமல்ல செயற்கை அரங்கென்பதை உணர்த்திக்கொண்டே இருப்பது உறுத்தலாக அமைந்துவிட்டது.


கல்வி என்பது சமூக விழிப்புணர்வைத் தரும் ஒன்றாக இல்லாமல் பணமீட்டும் கருவியாக மாறிவிட்டதைக் கிட்டத்தட்ட முழுச்சமூகமும் சரிதானென நம்புமளவுக்குச் சரிவைச் சந்தித்துவரும் கல்விச் சூழலோடு பொருந்திப்போவதாகவே இப்படத்தின் கல்வி குறித்தான புரிதல் உள்ளது. படத்தின் இறுதியில் தாங்கள் செய்த வேலைக்குரிய கூலியை மிகச் சரியாகக் கணக்குப் பார்த்துக் குழந்தைகள் வாங்கிக்கொள்ளும் காட்சியோடு அவர்களின் கல்வியறிவு வளரத் தொடங்கிவிட்டதைக் குறிப்புணர்த்திப் படம் நிறைவடைகிறது. அடுத்ததாகக் காட்டப்படும் குறிப்போ இத்திரைப்படம் குழந்தைத் தொழிலாளர்களுக்குச் சமர்ப்பிக்கப்படுவதாகப் பெருமையுடன் அறிவிக்கிறது. இந்த முரணை எப்படிச் சகித்துக்கொள்வது?  

முந்தைய படம் முழுக்க முழுக்கப் பொழுதுபோக்கை மையமாகக்கொண்டிருந்ததால் அடுத்து சமூக அக்கறை கொண்ட திரைக்கதையைப் படமாக்கித் தனது சமூகக் கடப்பாட்டை நிரூபிக்க இயக்குநர் நினைத்திருக்கலாம். இந்த மனோபாவம் பெரும்பாலான இயக்குநர்களைப் பீடிக்கும் நோய்தான். தான் வாழும் சமூகச் சூழலுக்கு உகந்ததெனப் பொதுச்சமூகம் நம்பும் கருத்துகளை உள்ளடக்கிய படங்களை உச்சிமுகரத்தக்கவையாகவும் அத்தகைய கருத்துகளற்று வெறுமனே சுவாரசியத்தைக் குறிவைத்து எடுக்கப்படும் படங்கள் வணிகத் திரைப்படம் என்ற எல்லைக்குள் சுருங்கிவிடுவதாகவும் நினைத்து அந்த எல்லையை மீறிச் சென்று கலைப்படங்களுக்கான எல்லையைத் தொடுவது மட்டுமே திரைப்பயணத்தில் தனது வளர்ச்சி என்பதாக எண்ணுவதால் இந்தக் கருத்து நோய் பீடிக்கிறதோ என்னவோ!

இத்தகைய கருத்துப் படங்கள் தோல்வியடைந்தால், ‘பார்வையாளர்கள் வணிகத் திரைப்படங்களையே விரும்புகிறார்கள்; இதைப் போன்ற சமூக அக்கறை கொண்டவற்றைப் புறக்கணித்துவிடுகிறார்கள்’ என எளிதாக அவர்கள்மேல் பழிபோட்டுவிட்டு வழக்கம் போல் காரம், மணம், சுவை கூடிய திரைப்படமெடுக்கத் திரும்பிவிடுகிறார்கள். ஆனால் கருத்து உள்ளதோ இல்லையோ அதைப் பற்றிய கவலையற்றுத் திரைப் படமாக அது எந்த அளவு பரிணமித்திருக்கிறதோ அதைப் பொறுத்தே  பார்வையாளனிடம் படத்திற்கு வரவேற்பு கிட்டும் என்ற அடிப்படை உண்மையை இயக்குநர்கள் மறந்துவிட்டுத் தாங்கள் எடுத்த அதி உன்னதத் திரைப் படத்தை வரவேற்கும் அளவுக்குப் பார்வையாளர்களின் புரிதல் வளர்ச்சியடையவில்லை என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள்; தங்கள் படைப்புத் திறனில் வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையின் காரணமாகத் தாங்கள் உருவாக்கிய படத்தில் நேர்ந்த தவறு குறித்து யோசிக்கப் பிரியப்படுவதில்லை; அவர்களைச் சுற்றியிருக்கும் நலம் விரும்பிகளும் வருடிக் கொடுப்பதிலேயே அக்கறை காட்டுவார்கள்; மாற்றுக் கருத்துகளுக்கோ வெவ்வேறு விதமான சாயங்கள் பூசி அவற்றைக் காழ்ப்புணர்ச்சி என்னும் கூட்டிற்குள் அடைத்தும் விடுவார்கள். களவாணியில் வாகை சூடிய இயக்குநர் கருத்தென்னும் மாயச் சுழலில் சிக்கிக்கொண்டுவிட்டதை உணர்ந்து அதிலிருந்து மீண்டுவருவார் என்னும் நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்.  

காலச்சுவடு நவம்பர் 2011 இதழில் வெளியாகியுள்ள விமர்சனக் கட்டுரை இது                       

லேட்டஸ்ட்

ரஜினியாவாரா விஜய்?

தொடர்பவர்