இந்த வலைப்பதிவில் தேடு

வாகை சூட வா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாகை சூட வா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, ஜனவரி 01, 2012

2011: மாயமான் பின்னே ஓடும் வாழ்க்கை

உறவும் நட்பும் நெருங்குவதும் விலகுவதும் மிக இயல்பான செயலாக நிகழ்கிறது. மனம் ஏன் பின்னணிக் காரண காரியங்களை அலசி ஆராய்ந்து அவதியுற வேண்டும்? (2011 ஜன. 6) 

🙏

படித்து முடித்து பதினாறு வருடங்கள் கழிந்தும் ஏதோ ஒரு உப்புமா வேலையில் 8500 மட்டும் மாதச் சம்பளம் வாங்கும் பொறியியல் பட்டதாரி முட்டாள்தானே என சமூகம் நினைக்கிறது... அதன் நினைப்பு சரிதானா? (2011 ஜன. 8) 

🙏

மனசுல என்ன தோணுதோ அதை டக் டக்குன்னு பேசி பேரைக் கெடுத்துக்கொள்வதே பிழைப்பாப்போயிருச்சு. மனசுல எவ்வளவு கோபம் இருந்தாலும் அதை வெளிக்காட்டிக்காம வளைந்து, நெழிந்து, குழைந்து, இதழோரச் சிரிப்பை நழுவவிடாமல் பேசும் வித்தையை எங்கேயாவது சொல்லித் தர்றாங்களா? (2011 மார்ச் 4) 

🙏

மௌனமாக இருக்க முடிகிறது; அமைதியை அடையத்தான் முடியவில்லை. (2011 மார்ச் 11) 

🙏

சிக்ஸர் அடித்த பந்தை 21 லட்சத்துக்கும் டாஸ் போட பயன்பட்ட நாணயத்தை சுமார் 11 லட்சத்துக்கும் ஏலம் எடுக்க எப்படித்தான் தோன்றுமோ? பணத்தை என்ன பண்ண என்றே தெரியாதவர்கள் வாழும் பூமியில் தான் நாமும் வாழ்கிறோம்? என்ன கொடுமை சரவணா! (2011 ஏப்ரல் 5) 

🙏

நமக்கு முதல்வராக வர ஆசைப்படும் கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்த் யாருமே பத்தாங்கிளாஸ் தாண்டலை... ஒழுங்கா பத்தாங்கிளாஸோட படிப்பை நிறுத்தியிருக்கலாம் முதல்வராகவாவது ஆகியிருக்கலாம். (2011 ஏப்ரல் 10) 

🙏

எட்டுத் திக்கும் மத யானை என்ன செய்யப் போகிறார்கள் தமிழக வாக்காளர்கள்? (2011 ஏப்ரல் 11) 

🙏
 
ஜனநாயகக் கடமையை இந்த முறையும் நிறைவேற்ற முடியவில்லை. பிரதமரே நிறைவேற்றவில்லை, நமக்கென்ன என்று சமாதானம் கூறிக்கொண்டாலும் ஒரு வகையான இழப்பு தான் இது. வெளியூரில் வசிப்பவர்கள் வாக்களிக்க ஏதாவது வழிவகை செய்தால் வாக்களிப்போர் சதவிகிதம் உயரக்கூடும். அடுத்த தேர்தலிலாவது இது குறித்து ஆவன செய்யுமா தேர்தல் ஆணையம். (2011 ஏப்ரல் 13) 

🙏

ப்ரியத்தின் உச்சத்தில் ஒளிந்திருக்கிறது வெறுப்பின் தொடக்கப்புள்ளி (2011 மே 5) 

🙏

காத்திருப்பு இன்றோடு முடியப் போகிறது. நாளை எல்லாம் வெட்டவெளிச்சமாகிவிடும்... (2011 மே 12) 

🙏

என் புது நண்பரை எனக்குப் பிடிக்காதுதான் ஆனால் என் பழைய நண்பர் படுத்தியபாட்டால் புது நண்பரைப் பார்த்து முகம் மலர வேண்டியதாயிற்று... (2011 மே 13) 

🙏

கருணாநிதி, 1989 தேர்தலில் வெற்றிபெற்று பதவியேற்கும்போது வானொலியில் ஆற்றிய உரையில் தமிழக மக்களை குழப்பமில்லாத ஜனநாயகவாதிகள் என்றார் அந்தக் கூற்று மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியுள்ளது. ஆனால் அதை நினைத்துப்பார்க்க கருணாநிதி விரும்பமாட்டார் இப்போதுள்ள நிலையில்... (2011 மே 13) 

🙏

தலை அரிக்கும்போதெல்லாம் நாம் கொள்ளிக்கட்டையால் தான் தலையைச் சொறிகிறோம்... (2011 மே 14) 

🙏

வணக்கம் நண்பர்களே என்னுடைய மொபைல் இன்று மாலை தொலைந்துவிட்டது. புதிய எண் வாங்கிய பிறகு தொடர்புகொள்கிறேன். யாருமே லைக் போட முடியாத ஒரு கமெண்டை இன்று போட்டிருக்கிறேன் என எண்ணுகிறேன் (2011 ஜூன் 9) 

🙏

முழுவதும் எண்ணெயில் நனைந்த கையோடு கண்ணாடிப் பாத்திரத்தைக் கையாளுவது போலவே உறவையும் நட்பையும் கையாண்டும் இன்னும் ஒரு சில கண்ணாடிப் பாத்திரங்கள் என்னிடம் புழக்கத்திலுள்ளன... (2011 ஜூலை 13) 

🙏

மாயமான்கள் பின்னால் ஓடுவது வாழ்க்கையின் தவிர்க்க முடியாத அம்சம்தானோ? (2011 ஆகஸ்ட்5) 

🙏

அன்பு, நட்பு, பாசம், காதல், கருணை, கத்தரிக்காய் எல்லாமே ஒவ்வாமையாகவே உள்ளது (2011 ஆகஸ்ட் 19) 

🙏

ஊழலுக்கு எதிராகப் போராடும் அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்ஜி. அவருக்கே ஏகப்பட்ட சொத்து, உல்லாசமா உலக நாடுகளைச் சுத்தி வர்றாரு. ஆனால் அவர் ஊழலுக்கு எதிராக தனது ஆதரவைத் தருகிறார். கொஞ்சம்கூட சுய சிந்தனை அற்று மத்தியதர வர்க்கம் இதை நம்பினால் அவர்கள் நிலைமை கஷ்டம்தான்... ராம் லீலா மைதானத்தில் ரவிசங்கர் வந்தே மாதரம் என்று சொன்னது வந்து ஏமாத்துறோம் என்றே என் காதில் விழுகிறது... (2011 ஆகஸ்ட் 21) 

🙏



வாகை சூட வா போய் வகையாக மாட்டிக்கொண்டேன். அடிப்படைப் புரிதலற்ற அமெச்சூர் சினிமா... (2011 அக்டோபர் 8) 

🙏
 
உரையாடல் வெளியிலிருந்து வெளியேறி விட யத்தனித்துக்கொண்டே இருக்கும் மனம்... சூழல் அதை முறியடித்துக்கொண்டே இருக்கும்... இந்தக் கண்ணாமூச்சி எப்போது நிறைவு பெறுமோ? (2011 நவம்பர் 29) 

🙏
 
ஒன்றும் ஒன்றும் இரண்டு என்பதுபோல் எளிதாகப் புரிய வேண்டும் வாழ்க்கை என மனம் ஆசைப்படுகிறது. ஒன்றும் ஒன்றும் எத்தனையாக இருந்தால் உனக்கென்ன என்று மனத்திடம் வம்பு செய்கிறது வாழ்க்கை... (2011 டிசம்பர் 23) 

🙏


வெள்ளி, நவம்பர் 04, 2011

வாகை சூட வா

வேர்களோ விழுதுகளோ அற்ற ஆலமரம்


திரைப்படம் வெளிவருவதற்கு முன்பு வெளியாகும் முன்னோட்டக்  காட்சிகளும் ஊடகங்களில் கசியவிடப்படும் தகவல்களும் படம்மீதான பார்வையாளனின் கவனத்தைக் கோரி அவனைத் திரையரங்கிற்கு வரவழைக்கும் முயற்சிகளே. அவற்றை முழுவதுமாகப் புறக்கணித்துவிட்டு முன் அவதானிப்பு எதுவும் இன்றித் திரைப்படத்தை எதிர்கொள்வது சாத்தியமல்ல. களவாணி என்னும் பொழுது போக்குத் திரைப்படத்தின் மூலம் தனது திரைப் பயணத்தைத் தொடங்கியிருந்த இயக்குநர் சற்குணம்  திரைப்படமாக்கலில் கடைப்பிடித்திருந்த செய்நேர்த்தியின் காரணமாக அவர்மீது கவனம் பதிந்திருந்தது. தன்மீது குவிந்த கவனத்தைக் கருத்தில்கொண்ட அவர் அதற்கான காரணத்தை உள்வாங்கிக்கொள்ளவில்லையோ என எண்ணவைத்துள்ளது வாகை சூட வா.     
     
இப்படத்தின் காட்சியமைப்புகள் 1966இல் நடப்பதாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான தமிழர்கள் தெரிந்துவைத்திருக்கும் எம்ஜிஆர் குறித்த துணுக்கொன்றை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் தொடக்கக் காட்சி சற்குணத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கையின் ஆணிவேரை அறுக்கத் தொடங்குகிறது. அடுத்ததாகக் கதாநாயகன் விமலின் தந்தையாகப் பத்திர எழுத்தர் பாக்யராஜ் அறிமுகமாகும் காட்சியில் அவர் சுமந்துவரும் முருங்கைக்காய்ப் பையைத் தனித்துவமாகப் பார்வையாளனுக்குக் காட்டும்போது ஏதோ தவறு நேர்ந்து கொண்டிருப்பதை உணர, பதைபதைப்பு உண்டாகிறது. கலவிக்கும் முருங்கைக்காய்க்கும் தொடர்பு இருப்பதான நம்பிக்கையைப் பாக்யராஜ் உருவாக்கியது எண்பதுகளில் வெளியான அவரது முந்தானை முடிச்சில். அத்திரைக்கதைக்கு அது அத்தியாவசியமான ஒன்றாக இருந்தாலும், கல்விக்கும் அதுவும் 1966இல் நடக்கும் சம்பவங்களுக்கும் அதற்கும் என்ன தொடர்பு? திரைக்கதையின் பயணத்தில் பார்வையாளன் எதிர்கொள்ளும் இந்த முதிர்ச்சியின்மை படத்தின் இறுதிவரையிலும் அவனோடு இணை கோட்டில் பயணிக்கிறது. 
 
அடிப்படைப் புரிதலற்ற காட்சியமைப்புகளை ஒதுக்கிவைத்துவிட்டுப் படத்தோடு ஒன்றி அதன் மற்ற சிறப்புகளை ரசிக்க ஏனோ முடியவில்லை. இயக்குநரின் முழுக் கவனமும் கலைப் பொருட்கள்மீது சென்றுவிட்டது போலும். திரைக்கதையமைப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய அக்கறையைப் பார்வையாளனுக்குக் கலைப் பொருட்களைக் காண்பிப்பதில் செலவிட்டாலே படம் கலைப்படமாக மாறிவிடும் என்னும் அதீத நம்பிக்கையின் காரணத்தால் பேணிவளர்க்கப்பட வேண்டிய திரைக்கதையை ‘வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோம்’ என்னும் நிலைக்குத் தள்ளிவிட்டாரோ இயக்குநர்?

சிட்டுக் குருவிகளுக்காக விசனப்படும் அந்தக் குருவிக்காரர் கதாபாத்திரமும் அவரது பரிதவிப்பும் பகடிக்குரியன. கைத்தொலைபேசிக் கோபுரங்கள் அமைக்கப்பட்டதால் சிட்டுக்குருவிகள் காணாமல் போய்விட்டதாகச் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் துக்கம் கொள்வது இந்தக் காலகட்டத்திற்கான ஓர் உணர்வு தானே? 1966இல் குருவிகளுக்கு என்ன சிக்கல்? தானே ஆசானாகும் அளவுக்கு அறிவையும் சமூக அக்கறையையும் ஒட்டுமொத்தக் கிராமத்தின் ஆதரவையும் பெற்ற அந்தக் குருவிக்காரர், அந்த வறண்ட நிலத்துக்கு வாத்தியாராய் விமல் வந்தவுடன் அவதார புருஷர் வந்துசேர்ந்ததைப் போல ‘அவன் வந்துட்டான். அவன் வந்துட்டான்’ எனப் புளகாங்கிதமடைவது நகைப்புக் குரியதாகப்படவில்லையா? அசட்டுக் காரணத்திற்காகக் குருவிக்காரர் மரணமடைவதால் அதுவும் அர்த்தமற்ற ஒன்றாகிவிடுகிறது. அந்தக் கிராமத்தின் நலனுக்காக அவர் உயிர்விட்டதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.

குருவிக்காரர் இறந்தவுடன் ஊர் குழுமுவதைக் காட்சிப் படுத்துகையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் காமராக் கோணத்தில் மனம் லயித்துக்கிடந்தாலும் கண்டெடுத்தான் காடு செயற்கையாக அமைக்கப்பட்ட ஒன்று என்பதை அந்தப் பறவைக்கோணத் துண்டுக் காட்சி அம்பலப்படுத்திவிடுகிறது. கிராமமென முன்னிருத்தப்பட்டாலும் கிராமமாக ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு ஒவ்வாத தன்மையுடன் அது உருவாக்கப் பட்டிருக்கிறது. கல்வியறிவே இல்லாத அக்கிராமத்தில் அஞ்சல் பெட்டி ஒன்று உள்ளது. நலிவடையும் நிலையிலுள்ள அஞ்சல் துறையினர் நெஞ்சை நிமிர்த்திக்கொள்ளலாம். நாயகியின் குடிசையில் அபூர்வமாக ஒரேயொரு வாழைமரம் மட்டும் முளைத்திருக்கிறது. இவையெல்லாம் அது கிராமமல்ல செயற்கை அரங்கென்பதை உணர்த்திக்கொண்டே இருப்பது உறுத்தலாக அமைந்துவிட்டது.


கல்வி என்பது சமூக விழிப்புணர்வைத் தரும் ஒன்றாக இல்லாமல் பணமீட்டும் கருவியாக மாறிவிட்டதைக் கிட்டத்தட்ட முழுச்சமூகமும் சரிதானென நம்புமளவுக்குச் சரிவைச் சந்தித்துவரும் கல்விச் சூழலோடு பொருந்திப்போவதாகவே இப்படத்தின் கல்வி குறித்தான புரிதல் உள்ளது. படத்தின் இறுதியில் தாங்கள் செய்த வேலைக்குரிய கூலியை மிகச் சரியாகக் கணக்குப் பார்த்துக் குழந்தைகள் வாங்கிக்கொள்ளும் காட்சியோடு அவர்களின் கல்வியறிவு வளரத் தொடங்கிவிட்டதைக் குறிப்புணர்த்திப் படம் நிறைவடைகிறது. அடுத்ததாகக் காட்டப்படும் குறிப்போ இத்திரைப்படம் குழந்தைத் தொழிலாளர்களுக்குச் சமர்ப்பிக்கப்படுவதாகப் பெருமையுடன் அறிவிக்கிறது. இந்த முரணை எப்படிச் சகித்துக்கொள்வது?  

முந்தைய படம் முழுக்க முழுக்கப் பொழுதுபோக்கை மையமாகக்கொண்டிருந்ததால் அடுத்து சமூக அக்கறை கொண்ட திரைக்கதையைப் படமாக்கித் தனது சமூகக் கடப்பாட்டை நிரூபிக்க இயக்குநர் நினைத்திருக்கலாம். இந்த மனோபாவம் பெரும்பாலான இயக்குநர்களைப் பீடிக்கும் நோய்தான். தான் வாழும் சமூகச் சூழலுக்கு உகந்ததெனப் பொதுச்சமூகம் நம்பும் கருத்துகளை உள்ளடக்கிய படங்களை உச்சிமுகரத்தக்கவையாகவும் அத்தகைய கருத்துகளற்று வெறுமனே சுவாரசியத்தைக் குறிவைத்து எடுக்கப்படும் படங்கள் வணிகத் திரைப்படம் என்ற எல்லைக்குள் சுருங்கிவிடுவதாகவும் நினைத்து அந்த எல்லையை மீறிச் சென்று கலைப்படங்களுக்கான எல்லையைத் தொடுவது மட்டுமே திரைப்பயணத்தில் தனது வளர்ச்சி என்பதாக எண்ணுவதால் இந்தக் கருத்து நோய் பீடிக்கிறதோ என்னவோ!

இத்தகைய கருத்துப் படங்கள் தோல்வியடைந்தால், ‘பார்வையாளர்கள் வணிகத் திரைப்படங்களையே விரும்புகிறார்கள்; இதைப் போன்ற சமூக அக்கறை கொண்டவற்றைப் புறக்கணித்துவிடுகிறார்கள்’ என எளிதாக அவர்கள்மேல் பழிபோட்டுவிட்டு வழக்கம் போல் காரம், மணம், சுவை கூடிய திரைப்படமெடுக்கத் திரும்பிவிடுகிறார்கள். ஆனால் கருத்து உள்ளதோ இல்லையோ அதைப் பற்றிய கவலையற்றுத் திரைப் படமாக அது எந்த அளவு பரிணமித்திருக்கிறதோ அதைப் பொறுத்தே  பார்வையாளனிடம் படத்திற்கு வரவேற்பு கிட்டும் என்ற அடிப்படை உண்மையை இயக்குநர்கள் மறந்துவிட்டுத் தாங்கள் எடுத்த அதி உன்னதத் திரைப் படத்தை வரவேற்கும் அளவுக்குப் பார்வையாளர்களின் புரிதல் வளர்ச்சியடையவில்லை என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள்; தங்கள் படைப்புத் திறனில் வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையின் காரணமாகத் தாங்கள் உருவாக்கிய படத்தில் நேர்ந்த தவறு குறித்து யோசிக்கப் பிரியப்படுவதில்லை; அவர்களைச் சுற்றியிருக்கும் நலம் விரும்பிகளும் வருடிக் கொடுப்பதிலேயே அக்கறை காட்டுவார்கள்; மாற்றுக் கருத்துகளுக்கோ வெவ்வேறு விதமான சாயங்கள் பூசி அவற்றைக் காழ்ப்புணர்ச்சி என்னும் கூட்டிற்குள் அடைத்தும் விடுவார்கள். களவாணியில் வாகை சூடிய இயக்குநர் கருத்தென்னும் மாயச் சுழலில் சிக்கிக்கொண்டுவிட்டதை உணர்ந்து அதிலிருந்து மீண்டுவருவார் என்னும் நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்.  

காலச்சுவடு நவம்பர் 2011 இதழில் வெளியாகியுள்ள விமர்சனக் கட்டுரை இது                       

லேட்டஸ்ட்

அமலா எனும் பொன்மான்

தொடர்பவர்