இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, மார்ச் 07, 2010

தோல் – பாவை - கூத்து


அவள் பெயர் தமிழரசி

பால்ய கால நினைவுகளில் சிக்கித்தவிக்கும் கதாநாயகனின் கதை மீண்டுமொருமுறை படமாகியிருக்கிறது. சற்று வித்தியாசமான படமாக இருக்கும் என நம்பிக்கையோடு சென்றபோதும் தமிழரசி ஏமாற்றிவிட்டாள். வெறுமனே பால்யகால சம்பவங்களைக் காட்சிப்படுத்துவதில் திருப்தி அடைந்துவிட்டார் இயக்குநர். கதைத் தன்மையோடு சேர்ந்து ஒரு முழு வளையமாகாமல் துண்டு துண்டு கண்ணிகளாக படம் சம்பவங்களால் கோக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட நசிந்துவிட்ட தோல்பாவைக்கூத்துக் கலையைக் குறித்த பதிவு என்பதற்காக மட்டுமே ஒரு படத்தை ரசிகன் பார்த்துவிடமாட்டான். அழகி தொடங்கி இன்னும் எவ்வளவு காலத்துக்குத் தான் இப்படிப்பட்ட படங்களைப் பார்க்க வேண்டுமோ தெரியவில்லை. படத்தில் ஆபாசமான வசனங்கள் இல்லை, வன்முறையில்லை, நமது கலாச்சார வடிவமான ஒரு கலையைப் பின்புலமாகக் கொண்டுள்ளது போன்ற பல பாஸிட்டிவான அம்சங்கள் இருந்தும் ஒரு படமாக மனத்தில் தங்கவேயில்லை தமிழரசி.

கதாநாயகன் யார் அவனது குணாதிசயம் என்ன எதுவுமே மனத்தில் படியவேயில்லை. எட்டு வருடங்களாகத் தேடி தமிழரசியைக் கண்டடையும் கதாநாயகனிடம் நாயகி வைக்கிறாளே ஒரு வேண்டுகோள் அது படத்தை நடுத்தெருவில் கொண்டுவந்து நிறுத்துகிறது. தன்னை அடைய வேண்டுமென்பதற்காக ஒரு நெருக்கடியான தருணத்தில் தன்னை வசப்படுத்திய கதாநாயகன் தான் இல்லாமல் வாழ்வான் என்று அவள் எப்படி நினைப்பாள்? தனது தாயை இழந்து தாத்தாவைப் பிரிந்து தனது வாழ்வு திசைமாறிப் போகக் காரணமான அந்தச் சம்பவத்தின் பாஸிட்டிவான அம்சத்தை மட்டும் கதாநாயகி பார்க்கிறாள் அதை மறுபடியும் அனுபவிக்க நினைக்கிறாள் என்றாள் அந்தக் கதாபாத்திரத்தின் மனநிலையைப் புரிந்துகொள்வது குழப்பமாக உள்ளது. அப்படி ஓஷோ மனம் கொண்ட பெண்ணா அவள்?

கதாபாத்திரங்களின் குணாதிசயங்கள் முறையாக வரையறுக்கப்படவில்லை. கிராமங்களில் வாடகைக்கு டிவி டெக் எடுத்து சினிமா போடுவது 1993இல் சன் டிவி ஒலிபரப்பைத் தொடங்குவதற்கு முன்பு இருந்த ஒரு நடைமுறை, ஆனால் படத்தில் முத்து படம் வந்த பின்பு இத்தகு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. முத்து 1996இல் வெளியானது. இதைப் போன்ற விஷயங்களைச் சற்றுக் கவனமாக கையாளாவிட்டால் ரசிகனுக்குத் திருப்தி வராது. ஒரு படமாக முழு வடிவம் பெறாமல் தோல்பாவைக்கூத்து குறித்து ஒரு பதிவாக மட்டுமே படம் மனத்தில் நிற்கிறது. இது படத்தின் வெற்றியா தோல்வியா?

சனி, மார்ச் 06, 2010

காமமென்றால் பெரு விருப்பம்


கோடிக்கணக்காகப் பணம் போட்டு எடுத்த படங்கள் எல்லாம் பார்க்க நாதியில்லாமல் அநாதையாய் தியேட்டரில் அல்லாடும் காலத்தில் சாமியார் நித்தியானந்தா தமிழ் நடிகையுடன் கூடிக் குலவும் கொஞ்சல் காட்சிகள் சன் டிவி உபயோகத்தில் தமிழக மக்களின் வரவேற்பரையில் பலப்பல காட்சிகளைக் கண்டுவிட்டது. சரச சாமியார் நித்தியானந்தா போல் எத்தனை யெத்தனை சாமியார்கள் இப்படி கையும் களவுமாக மாட்டினாலும் சாமியார் பின்னால் போகும் கூட்டங்கள் திருந்தவா போகிறது. பணம் கொட்டிக் கொழிக்கும் தொழில் சாமியார் தொழில். சுத்தமான காவியுடை. முகத்தில் மந்தகாசப் புன்னகை. வசியப்படுத்தும் வசீகர மொழி. வேறென்ன வேண்டும். சாமியார்கள் காட்டில் மழைதான். சில சமயங்களில் அல்ல பல சமயங்களில் இந்த சாமியார்களை நினைத்தால் பொறாமையாக இருக்கிறது. மகாநதியில், எப்படி ஒரு நல்லவனுக்குக் கிடைக்க வேண்டிய எல்லா மரியாதையும் ஒரு கெட்டவனுக்கு கிடைக்குது?ன்னு கதாநாயகன் ஆதங்கப் படுவதுதான் ஞாபகத்தில் வந்து தொலைக்கிறது.

எப்படிப் பெண்கள் மிகச் சரியாக ஏமாற்றுபவர்களை அடையாளம் கண்டு ஏமாறுகிறார்களோ ஆச்சரியமாக இருக்கிறது. தெரியாமல் ஏமாறுகிறார்களா தெரிந்தே ஏமாறுகிறார்களா. ஒரு சாமியார் மாட்டிக்கொண்டால் தொடர்ந்து புகார்களை வாரியிறைக்கும் பெண்கள் அதுவரை என்ன செய்து கொண்டிருந்தார்கள்? முகம் மழித்த சாமியார்கள் உறுப்பையும் அறுத்துக் கொண்டவர்கள் எனச் சமூகம் இன்னமும் நம்புகிறதா? பொதுவாக ஆன்மிகத்தில் அதிகப்படியான நாட்டம் கொண்டவர்களுக்கு சமூகத்தில் கிடைக்கும் அந்தஸ்து இத்தகைய தடுமாற்றங்களுக்கு பின்னணிக் காரணமாக இருக்கலாமோ? கோவிலுக்குப் போகிறேன் சாமியாரைப் பார்க்கப் போகிறேன் எனும்போது யாருக்கும் எந்தச் சந்தேகமும் வரப்போவதில்லை என்பது ஒரு கவசமாக இருக்கிறதா? சொத்துகளை வாரிக்குவிப்பவன் சுகத்தில் மூழ்கித் திளைப்பவன் எப்படி முற்றும் துறக்க முடியும்? அவன் எப்படி நமது கஷ்டங்களை தீர்க்க முடியும்? ஆண்களோ பெண்களோ ஏதோவொரு எதிர்ப்பார்ப்போடு தானே சாமியார்களை நாடுகின்றனர். உண்மையான சாமியார்கள் இருக்கும் இடமே யாருக்கும் தெரியப் போவதில்லை. நித்தியைப் போன்றவர்கள் இன்னும் எவ்வளவு பேர்கள் உள்ளனர். கூட்டத்தைச் சேர்க்கும் எல்லாச் சாமியார்களுமே ஒருவகையான அயோக்கியர்கள் தாம். மக்கள் விழித்துக்கொள்ளாதவரை இத்தகு சாமியார்கள் காட்டில் அடைமழைதான்.

சாமியார்களின், பெண்களின் பாலியல் வேட்கைகளில் எந்தத் தப்புமில்லை. ஆனால் போலியான வேஷங்கள் எதற்காக யாரை ஏமாற்ற... நம் சமூகத்தின் போலியான முகம் தொடர்ந்து பல வகைகளில் பொதுச்சபையில் கிழிந்து தொங்குகிறது. இதைப் போன்ற விஷயங்களில் புலனாய்வுப் பத்திரிகைகளின் பங்கு மகத்தானது. கிளுகிளுப்பான காட்சிகளை வழவழப்பாக வண்ணப்பக்கங்களில் வாரி இறைத்துத் தம் கல்லாவை நிரப்பிக்கொள்ளும். குழந்தைகள் ஆண்கள் பெண்கள் என அனைவரும் ஒன்றுகூடி அமர்ந்து தொலைக்காட்சி பார்க்கும் நமது வரவேற்பரையில் பலான காட்சிகள் அரங்கேறுவதைப் பற்றி நமக்கு எந்த வருத்தமும் வரப்போவதில்லை. வடுமாங்காய் போன்ற பாடல்களை ஒலிக்க விட்டு குழந்தைகள் ஆடுவதை ரசிக்கும் தவறை நம்மில் யார் செய்யவில்லை. பாலியல்ரீதியான நமது போலித் தனங்கள் களையப்பட வேண்டியதை நாம் உணரப்போவது எப்போது. அதுவரை இதைப் போன்ற சாமியார்களின் கதை நமது ரகசிய ஆசைகளுக்குத் தீனியாகவே வீசப்படுகிறது.

நித்திமீது அநியாயமாகப் பாய்கிறார்கள். கைதுசெய்யச் சொல்லிக் கூப்பாடு போடுகிறார்கள். சட்டப்படி அவர் எந்தத் தவறும் செய்ததாகத் தெரியவில்லை. அவருக்குப் பிடித்த பெண்ணோடு தனியறையில் அந்தப் பெண்ணின் விருப்பத்தோடு இருப்பதில் என்ன பிழை. தனது உடம்பானது அவருக்கான காணிக்கை என ரஞ்சிதா நினைத்திருக்கலாம். இது அவர்கள் இருவர் சம்பந்தப் பட்ட விஷயம். அவர்களது அந்தரங்கத்தைப் படம் பிடித்து அதை அரங்கேற்றியது ஒரு வகையான ஊடக வன்முறை. ரஞ்சிதாவுக்கும் நித்திக்குமான காதல் கலந்த காம விளையாட்டை கடைபரப்பி தனது டிஆர்பியை உயர்த்திக்கொண்டது சன் டிவி. தமிழ்க் கலாச்சாரம் பறிபோய்விட்டதாகப் பதறுகிறார்கள். அப்படியொன்று இருக்கிறதா என்ன. காமத்தை ஒழுக்கம் சார்ந்து பார்ப்பதால் வரும் பிழை இது. இன்னும் எத்தனை காலத்துக்கு இப்படி ஏமாற்றப்போகிறார்களோ தெரியவில்லை. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமான தொடர்பு குறித்து அவர்கள் தாம் முடிவு செய்ய வேண்டும். சமூகமல்ல.

வெள்ளி, பிப்ரவரி 26, 2010

உப்புமா 3 ப்ளேட்

இக்கரைக்கு

சொர்க்கத்தின் திறவுகோலுக்குப்
பலத்த போட்டி
வெளியிலிருப்பவர்களுக்கிடையே
அதேபோல்
உள்ளிருப்பவர்களுக்கிடையிலும்


நினைவுகள் 1

புகைபரப்பி
தடதடத்துச் செல்லும் ரயிலின்
சன்னலோர இருக்கையில் அமர்ந்தபடி
எதிரே தென்பட்ட
சோனார்கூட அறிய இயலாத
ஆழமான பார்வையைத் தவிர்க்க வேண்டி
வெளிப்பக்கம் திரும்ப
கழுத்தில் நீளமான கயிறு கட்டப்பட்ட
ஆட்டுக்குட்டி ஒன்று
சுதந்திரமாய்க் காய்ந்த புல்வெளியை
மேய்ந்துகொண்டிருந்தது.
அதன் மறுமுனை
எங்கோ
முளையடித்துக்கட்டப்பட்டிருக்கும்.

நினைவுகள் 2

எப்படித்தான் உறைகிறதோ

அடி வயிறு வலிக்க
இருமி இருமி
தொண்டைப் புண்ணாகக்
காறிக் காறித் துப்பியும்
முழுவதும் வெளியேறாத சளி
ஆம்
ஆளை நடைப்பிணமாக உலவவிடும்
இந்தச் சளி.

ஞாயிறு, ஜனவரி 31, 2010

செவ்வாய் தோஷம்

சுருங்கிய தோல் படிந்த முகத்தின்
உலர்ந்த உதடுகளால்
ஒத்தடம் போல்
புறங்கையில் முத்திடுவாள்
ஆச்சி

நெகிழ்ச்சிமிகு தருணங்களில்
ஆவிசேர்த்தணைத்து
திலகமாய்
நெற்றியில் முத்துவாள்
அம்மா

உற்சாகப் பொழுதுகளில்
வார்த்தைகள் வலுவிழக்க
இறுக்கியணைத்து
உதடு குவிப்பர்
நண்பர்கள்

யாருமறியாமல்
சூடான சுவாசம் கலந்து
இதழெட்டும் இடங்களில்
ஊற்றி மகிழ்வாள் முத்தத்தை
அந்த அக்கா

இவையெல்லாம்
இறகுகளாய் மிதக்க
நெஞ்சை அழுத்துவதோ
அவள் தராமல்போன
ஒற்றை முத்தம்

(அடப்பைத்தியக்காரா நீயெல்லாம் திருந்தவே மாட்டியாடா)

வெள்ளி, ஜனவரி 29, 2010

ஒரு மருத்துவமனைக் குறிப்பு

இந்த மருத்துவமனைக் குறிப்பு உங்களில் பலரது அநுபவமாக இருக்கலாம். எல்லோருக்குமே இதைப் போன்ற சமயத்தில் வரும் எரிச்சலும் கோபமும் எனக்கும் வந்தது. உங்களுக்கெல்லாம் செய்வதற்கென நிறைய வேலைகள் உள்ளதால் இதைத் துடைத்துப்போட்டு விட்டுப் போய்விடுகிறீர்கள். உருப்படியான வேலை இல்லாததால் கொஞ்சம் அதிகமாகப் புலம்புகிறேன். அவ்வளவுதான். மேலும் இப்போதான ப்ளாக் ஆரம்பிச்சிருக்கேன். புதுச் செருப்பு. புதுப் பொண்டாட்டி. புது பைக். விஷயம் அது தான். அட உருப்படாமப் போறவன எதோ குறிப்பு கிறிப்புன்னியே அது என்ன எழவுடான்னு உங்களுக்கு ஒரு கோபமாவது வரணும். வரும் ஆனா வராது அதுதான நம்ம நிலைமை.

பொங்கலுக்கு முந்தைய தினம். இயல்பா விடியல எனக்கு. இந்தக் காலத்துல யாருக்குடா தம்பி நல்லா விடியுது. எல்லாருக்கும் அப்படித்தாண்டா தம்பி. பொறுத்துக்கோடா அப்படின்னுல்லாம் சொல்ல ஆள் யாரும் இல்ல. ஆங் எங்கவிட்டேன். திடீர் திடீர்னு எல்லாம் மறந்துபோயிருது. என்ன வியாதியோ தெரியல. எதாவது ஹிந்தி படம் எடுத்தாத் தான் தெரியும் இதோட பேரு. இப்போதைக்கு ஞாபகம் வந்துட்டுது. காலையிலயே உடம்பெல்லாம் வலிக்கிற மாதிரி இருந்தது. காய்ச்சல் வேற லேசா இருந்தது. எதையும் சுத்தி வளைத்துச் செய்வதில் நான் சமர்த்துன்னு பேர் வாங்கியவன். பக்கத்துலயே எதாவது ஒரு டாக்டரப் பாத்திருந்தா அவரும் இந்தக் காய்ச்சல் அந்தக் காய்ச்சல்ன்னு சொல்லி ஊசியப்போட்டு அனுப்பி இருப்பாரு. ஒருவேளை சரியாகி இருக்கலாம். ஆனால் அதை நான் செய்யல. வழக்கமாகப் பார்க்கும் ஹோமியோ டாக்டரைத் தான் பார்ப்பேன்னு அடம் பிடித்து அவரைப் பார்க்கச் சென்றேன். மிக நிதானமான டாக்டர் அவர். பாம்பு கடித்தே சென்றால் கூட கண்மூடி யோசித்து உதட்டுல பேனாவில் தட்டி தட்டி ஆறேழு மருந்து எழுதுவது அவர் பழக்கம். ஆனால் நானோ சாதாரணக் காய்ச்சலுக்காகத் தானே சென்றேன். வழக்கம் போல அவரும் மருந்து கொடுத்தார். மருந்தோ அவரைவிட நிதானம். காய்ச்சலோ நமீதாவைப் பார்த்த விடலைமாதிரி சூடு சும்மா ஜிவ்வுன்னு ஏறியிருச்சு.

மதியம் மூணு மணி வரை அவர் கொடுத்த மருந்தை சாப்பிட்டுக்கொண்டே இருந்தேன். பலனில்லை. காலையிலிருந்தே ஒண்ணும் சாப்பிடாமல் வெறும் வயிற்றில் மருந்தைச் சாப்பிட்டதாலோ என்னவோ மூன்று மணியையொட்டி வாந்தி எடுத்துவிட்டேன். வாந்தி எடுத்தால் தலைவலி சரியாகும். காய்ச்சலும் விடக்கூடும் என்று வாய்க்குள் கையை விட்டு வாந்தி எடுத்தேன். லேசான இரத்த நிறத்தோடு வாந்தி வர அவ்வளவுதான். ஓ ராமா என அம்மா அலற... நமது திரைப்படங்கள், சீரியல்கள் புண்ணியத்தில் ஏதோ பெரு வியாதி மகனுக்கு எனப் புலம்பத் தொடங்க என்ன செய்வது என்ற குழப்பம் எனக்கு. இனி அவர்கள் வழியில் செல்வது மட்டும் என் முன்னே இருந்த வழி. அருகிலேயே இருக்கும் 24 மணி நேர கிளினிக் செல்லலாம் என முடிவு செய்தோம். அதற்குள் நண்பர் பழனி நண்பர் ஜின்னாவுக்கு தகவல்தர அவர் ஆட்டோ எடுத்து வந்துவிட்டார் வீட்டுக்கு. இந்த விரைவு நடவடிக்கைகளுக்கு அம்மா தெரிவித்த தகவலான ‘ப்ளட் வாமிட்’ தான் காரணம் என்பது பின்னால் தெரிந்தது.

போன உடனே அங்கே மருத்துவமனை வராண்டாவில் செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்துக்கொண்டிருந்த இளவட்டம் ஒருவரிடம் டாக்டர் இருக்கிறாரா எனத் தங்கை வினவ. அவர் உள்ளே அழைத்துச் சென்றார். டாக்டருக்கென இருந்த நாற்காலியில் அமர்ந்துகொண்டு கேள்விகளைக் கேட்கத் தொடங்கினார். அவர் தான் டாக்டர் என்று இப்போது நான் சொன்னால் அது சீரியல் டயலாக் போல் ஆகிவிடும். நான் ஹோமியோ சென்று வந்த கதையைச் சொல்லி முடிப்பதற்குள் தங்கை அவள் பங்கிற்கு ப்ளட் வாமிட் பற்றிச் சொல்லவும் கார்த்தி மீது ஒட்டிக்கொண்ட ரீமாசென் போல் பச்சக்கென ஒட்டிக்கொண்டார் டாக்டர். டிபிஆ அதுவா இதுவா என கேள்விகளை அடுக்கியதோடு ஹோமியோ மருத்துவத்தில் ஸ்டீராய்டு கொடுப்பாங்க என்ன மருந்து கொடுத்தோம் என்பதையும் சொல்ல மாட்டாங்க என அங்கலாய்த்தார். உடனே அட்மிட் பண்ணனும் எனச் சொன்னார். காய்ச்சல் நேரத்தில் குளுகோஸ் ஏற்றினால் ஒத்துக்கொள்ளுமா என தங்கை அவளது சந்தேகத்தைக் கேட்கவும். அது குளுகோஸ் இல்ல அது ஒரு fluid அதை முதலில் புரிந்துகொள்ளுங்கள் என எரிச்சல் பட்டார். வராண்டாவில் கேட்ட கேள்விக்கு எதிர்வினையோ என்னவோ.


அடுத்த கட்டமாக ப்ளட் டெஸ்ட்டுக்கு ஊசி மூலம் ரத்தத்தை உறிஞ்சினாங்க. மலேரியா பாஸிடிவ்ன்னு சொன்னாங்க. அது பசிக்கு ரத்தத்தை உறிஞ்சிருக்கு கொசுவும். உறிஞ்சுதல் எல்லாமே பிழைப்பின் நிமித்தம் தானே. மாடியில் ஒரு ரூமில் கொண்டு படுக்கவைத்தார்கள். கதவைத் திறந்ததும் எதிரே ஒரு அலமாரி மூடியிருந்தது. அதன் பக்கத்திலிருந்த கட்டிலில் படுத்தேன். மூடியிருந்த அலமாரி அலமாரியல்ல அது தான் டாய்லட் என்பது பின்னர் தெரிந்தது. தலைமாட்டுக்கு பக்கத்தில் இருந்த சன்னலில் நெட் லான் கொசுவலை அடிக்கப்பட்டிருந்தது. அதிலிருந்த emergency exit வழியே ஏகப்பட்ட கொசுக்கள் வந்த நோயாளியை நலம் விசாரிக்க ஆலாய்ப்பறந்தன. நோயாளிகளை ஆஸ்பத்திரியின் நிரந்தர வாடிக்கையாளர் ஆக்குவதே கொசுக்களின் நோக்கம் போலும். அவர்களின் யூனியனுக்கும் மருத்துவமனைக்கும் ஏதோ ஒரு அண்டர்க்ரவுண்ட் ஒப்பந்தம் இருக்கலாம். யாரறிவார்? படுத்தபடியே பார்பதற்கு வசதியாக நேரெதிரே ஒரு டிவி. நோய்த் தன்மையை நோயாளி மறந்து வீட்டில் இருப்பதைப் போன்ற ஒரு சூழல் உருவாக்க அது உதவியது. அதற்கும் சேர்த்துத் தான் பில்லும் பழுக்குமே.


சகட்டுமேனிக்கு ஊசிகள் போடப்பட்டன. என்ன ஊசி எதற்கு அது என்பதெல்லாம் சத்தியமாக எனக்குத் தெரியாது. முழுமையாக ஒரு நாள் அந்த மருத்துவமனையில் இருந்தேன் நான். Duty டாக்டர் ஒரே ஒரு முறை வந்தார். ரொம்ப வீக்கா இருக்கீங்க. நல்லா சாப்பிடுங்க. இட்லி இடியாப்பம் போன்ற அவித்த உணவு வகைகள் சாப்பிடுங்க என்றார். அவ்வளவு தான். பில் வந்தபோது அதற்கான தொகை 350ரூ. படித்தால் மருத்துவம் தான் படிக்க வேண்டும். சாப்பிடச் சொன்னதற்கே 350ரூ வாங்க முடிகிற தொழிலாக இருக்கிறதே.


மருத்துவமனையிலிருந்து தப்பிப்பது எப்படி என்பதற்கு மூளையைக் கசக்க வேண்டியிருந்தது. அய்யா சாப்பிட்டு நாலு நாளாச்சுய்யா எனும் ரீதியில் பஞ்சப் பாட்டுப்பாடி கெஞ்சிக்கூத்தாடி கிட்டத்தட்ட மூவாயிரம் ரூபாயை கட்டி முடித்து வெளியில் வந்து சுதந்திரக் காற்றைச் சுவாசித்தேன். மலேரியான்னு சொன்னாங்க. என்ன மருத்துவம் தந்தாங்கன்னு தெரியாது. எந்தவிதமான ரிப்போர்ட்டும் தரவில்லை. பதில் தெரியாத பல கேள்விகள் நம்மிடம் இருந்தும் டாக்டர்கள் கேள்விகள் மட்டுமே கேட்கத் தெரிந்த தருமிகளாகவே திரிகிறார்கள். இந்த இந்த வியாதி இதனால் வருகிறது. உங்களுக்கு வந்த வியாதி இது. இதன் காரணம் இது. இதைத் தவிர்க்க இதையெல்லாம் செய்யலாம். இதற்கான மருந்து இது. இந்த மருத்துவத்தைத் தான் உங்களுக்கு தந்திருக்கிறோம். இப்படியான தகவல்களை ஏன் எந்த மருத்துவரும் சொல்வதில்லை. எல்லாவற்றையும் வெளியே சொல்லிவிட்டால் அவர்களது மரியாதை குறைந்துவிடும் என்ற பயமா அல்லது படித்த திமிரா எனக் கேட்க நினைத்தும் கேட்கவில்லை. இப்படி பதில் சொல்லாமல் இருப்பதும் ட்ரீட்மெண்ட் தானோ டாக்டர் என ஒரு தெனாலிக் கேள்வி மட்டும் எவ்வளவு அடக்கியும் அடங்காமல் வந்து விழுந்துவிட்டது. பதில் சொல்லத் தெரியாத தருமிகள் சொல்வார்களா?

புதன், ஜனவரி 20, 2010

பேசும் கண்கள்

மீன்களின் மொழி நீர்ப்பரப்பில் எழுதப்படுகிறது

குடிகாரக் கவிஞனின் உளறலோடு
குழந்தையின் மழலையும்
குமரியின் குறும்பும்
கலந்த
மொழியது

கூர்ந்த அவதானிப்பைக் கோரி நிற்கும்
அம்மொழி
அடுத்தடுத்த
புள்ளிகளில்
தோன்றி மறைவதால்
சிறு கவனக் குறைவும்
தவறான புரிதலுக்கு வழிவகுக்கும்

தம் மொழி பற்றிய பிரக்ஞையற்று
தம்மைச் செரிக்கக் காத்திருக்கும்
இரைப்பைகள் குறித்த வருத்தங்களை
எழுதிச்செல்கின்றனவோ
நீரில் மீன்கள்

திங்கள், ஜனவரி 11, 2010

அறிவுப் புரட்சி 2010



சென்னைப் புத்தகக் காட்சி 2010 கிட்டத்தட்ட ஏழு கோடி ரூபாய்க்கு விற்பனை ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறதாம். நல்ல வியாபாரம் தான். புத்தகக் காட்சிக்குச் செல்பவர்களில் பெரும்பாலான பேர் புத்தகங்களை வாங்கிக் குவிக்கின்றனர். கூட்டம் கூட்டமாக நண்பர்களோடோ குடும்பத்துடனோ வந்து அள்ளிச் செல்கின்றனர். வீடுகளில் தனித்தனியாக அலமாரியில் அடுக்கி வைத்துக்கொள்ளலாம். வந்து பார்ப்பவர்கள் பிரமிப்போடு பார்ப்பார்கள். அலமாரித் தொழிலும் வளரும். புத்தக உற்பத்தி பெருகும். அறிவுப் புரட்சி விண்ணை முட்டும். எழுதித் தள்ளிய எழுத்தாளர்களது எண்ணங்கள் தொடர்ந்து பொங்கியபடியே இருக்கும். அறிவுப்பசிக்கு தீனிபோட மாட்டாமல் அச்சகங்களும் இணையமும் விழிபிதுங்கும். இணைய தளங்களில் புத்திசாலி எழுத்தாளர்கள் சாமர்த்திய சண்டைகளைத் தொடருவார்கள். அறிவுக் களஞ்சியங்களைப் பின்தொடரும் வாசக வட்டங்கள் பூதக் கண்ணாடி கொண்டு அர்த்தம் தேடி அலையும். அறிந்தோ அறியாமலோ குழாயடிச் சண்டையைக் கூடிக் களித்த சந்தோஷம் கிட்டும். சண்டையை மற்றவர்கள் பார்ப்பதால் வீறு கொண்டு வீர வசனங்களை இலக்கியத் தரத்தோடு வெளிப்படுத்தி மகிழ்வர் எழுத்தாளப் பிரம்மாக்கள். படைப்பதனால் நான் இறைவன் பாடிய கண்ணதாசனுக்கு ஐய்யோ.

உலகெங்கிலும் சிதறுண்டு கிடக்கும் தமிழ் வாசகப் பரப்புக்கு இலக்கிய சுகம் தர சதா உழைத்துக்கொண்டே இருக்கும் எழுத்தாளனை இன்னும் தமிழகம் சரியாகப் புரிந்துகொள்ளாத வருத்தத்தால் எரிச்சலால் அவர்கள் தமிழகத்தில் பிறந்த அபத்தத்தை தமிழ் வாசகன் தலையிலேயே கொட்டுகிறார்கள். சினிமாவில் வெளிப்படும் வடிவேல் வழி வந்த அநியாயத்திற்கு நல்லவர்கள் அவ்வளவையும் தாங்கிக்கொண்டு பின்னூட்டம் அனுப்புகிறார்கள். வாய்ப்புக் கிடைக்கும்போது எழுத்தாளர்களின் பாதம் பட்ட மண்ணை எடுத்துப் பூசிக்கொள்கிறார்கள். இதையெல்லாம் காணச்சகிக்காமல் தானே எழுத வந்தார்கள் என எண்ணும் பைத்தியக்காரர்கள் இருக்கலாம். அப்போது அவர்கள் வாசகர்கள். இப்போது அவர்கள் எழுத்தாள பிரம்மாக்கள். இதைப் புரிந்துகொள்ள வேண்டும் ஞானசூன்யங்கள். எழுத்தாளர்கள் என்பவர்கள் யார்? கருத்துகளை உருவாக்குபவர்கள். ஆய்வுகளை மேற்கொள்பவர்கள். புண்ணாக்கு பற்றி எழுதினாலும் அவற்றின் அத்தனை வரலாற்றோடு அக்கு வேறு ஆணி வேறாக புண்ணாக்கை மேய்ந்து விடுபவர்கள். அவர்களின் அறிவைக் கண்டு அரண்டுபோய் அப்படியே பின் தொடர்வதைத் தவிர வேறென்ன செய்வான் வாசகன்.

இவையெல்லாம் வெற்றுப்புலம்பல்கள். இது வியாபார உலகம். சந்தையில் எல்லாமும் விற்கப்படும். சந்தையில் கிடைக்காத பொருள்களே இல்லை என்ற நிலையை உருவாக்குவது தான் நல்ல சந்தை. வாங்குவதற்கு ஆள் உள்ள போது எதையும் யாரையும் விற்கலாம். மனிதர்களை விற்கும் சந்தை இருந்தால் அங்கே வியாபாரத்தைப் பெருக்க மகளை மகனை மனைவியை குடும்பத்தினரை விற்கலாம். அச்சந்தையை ஒட்டி தத்து எடுப்பது பெருகலாம். பலபேரை ஒருவர் மணக்கலாம். எல்லாம் சந்தைப் பொருள்கள். புத்திசாலி மட்டுமே நல்ல விற்பனையாளனாவான். பாரதியும் தான் கணக்குப் போட்டான். அவனுக்கு வியாபாரம் தெரியவில்லை. அல்லது அது வியாபாரத்துக்கான தருணம் இல்லை. ஆனால் அவனது பொருள் சந்தை மதிப்பு மிக்கது என்பது இப்போது புரிகிறது. வாங்கத் தெரிந்தவன் வாங்கும் தகுதி உள்ளவன் வாங்கித் தள்ளும்போதே விற்கத் தெரிந்தவன் விற்பது தானே முறை. இதிலென்ன தவறு. இன்னும் சமூக அக்கறை அது இதுவெனப் பேசி வீணாய்ப்போனவர்களைக் கழுவிலேற்றுங்கள். சந்தையில் கலகத்தை உண்டுபண்ணும் அவர்களுக்குப் பைத்தியக்காரர்கள் என்ற பேட்ஜைக் குத்திவிடுங்கள் மற்றவற்றை மக்கள் பார்த்துக்கொள்வார்கள். வாழ்க பாரதி! வாழ்க காந்தி! வாழ்க பாரத moneyத்திருநாடு!

லேட்டஸ்ட்

ரஜினியாவாரா விஜய்?

தொடர்பவர்