இந்த வலைப்பதிவில் தேடு

புதன், அக்டோபர் 29, 2025

ரஜினியாவாரா விஜய்?

1975இல் திரையுலகுக்கு ரஜினி காந்த் வந்தார். 50 ஆண்டுகளாகிவிட்டன. இந்த ஐம்பதாண்டுகளில் தீபாவளிக்கு ரஜினியின் 19 தமிழ்ப் படங்கள் வெளியாகியுள்ளன. அதுவும் 1995வரை 18 படங்களும் நீண்ட நாள்களுக்குப் பிறகு 2021இல் அண்ணாத்தயும் வெளியானது.

முதன்முதலில் 1976இல் மூன்று முடிச்சு வெளிவந்தது. 1978 தீபாவளிக்கு, மூன்று ரஜினி படங்கள் திரைக்கு வந்துள்ளன. 1976 முதல் 1981வரை தொடர்ந்து ஆறு ஆண்டுகளும் [ஆறு புஷ்பங்கள் (1977); தப்புத் தாளங்கள், அவள் அப்படித்தான், தாய்மீது சத்தியம் (1978); அன்னை ஓர் ஆலயம் (1979); பொல்லாதவன் (1980); ராணுவ வீரன் (1981)], 1983முதல் 1989வரை தொடர்ந்து ஏழு ஆண்டுகளும் [தங்க மகன் (1983), நல்லவனுக்கு நல்லவன் (1984), படிக்காதவன் (1985), மாவீரன் (1986), மனிதன் (1987), கொடிபறக்குது (1988), மாப்பிள்ளை (1989)] தீபாவளிக்குப் படங்களை வழங்கிய ரஜினிக்கு 1990, 1993,1994 ஆகிய ஆண்டுகளிலும், அதன் பின்னர் 2020 வரையிலும் ஒரு படம்கூடத் தீபாவளிக்குத் திரைக்கு வரவில்லை.

1990 தீபாவளிக்குத் திரைப்படம் வராததால் அவருடைய ரசிகர்கள் அந்தத் தீபாவளி நாளைத் துக்க நாள் எனச் சொல்லித் திரிந்தார்கள். மதுரையில் சுவரொட்டி ஒட்டப்பட்டதாகக்கூட தகவல் உண்டு. அடுத்த ஆண்டு 1991இல் தளபதியும், 1992இல் பாண்டியன் திரைப்படமும் ரசிகர்களுக்குப் பார்க்கக் கிடைத்தன. இன்னும் அவர் வீட்டு முன்னர் தீபாவளி அன்று ரசிகர்கள் சிலர் திரள்கிறார்கள். இது ரஜினியின் நிலைமை.
இப்போது விஜய் கதைக்கு வருவோம். அவர் நடித்த 12 படங்கள் தீபாவளியை முன்னிட்டு வெளியாயின. முதலில் தீபாவளிக்கு வந்த படம் சந்திரலேகா (1995). தீபாவளி அன்று ரஜினியின் முத்து படம் வெளியான அதே தீபாவளிக்கு வந்து படுதோல்வியடைந்த படம் இது. அதன் பின்னர் சில ஆண்டுகள் கழித்து 2000இல் பிரியமானவளே வந்தது. 2001இல் ஷாஜகான் தொடங்கி, 2019இல் பிகில் வரை, பகவதி (2002), சிவகாசி (2005), அழகிய தமிழ் மகன் (2007), வேலாயுதம் (2011), துப்பாக்கி (2012), கத்தி (2014), மெர்சல் (2017), சர்கார் (2018) என மொத்தம் 10 படங்கள் வெளியாயின. மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாகப் படம் வெளியானதே ஒரே ஒரு முறைதான். அதுவே இருபது ஆண்டுகள் ஆகிவிட்டன.
திரைப்படத் துறையில் இன்றுவரை ஆதிக்கம் செலுத்துவரும் ரஜினி பொதுமேடைகளில் எந்தவித பெரிய ஒப்பனையும் இன்றி முடியற்ற தலையுடன் தோன்றிவிடுகிறார். அப்படிப்பட்ட நடிகர் ரஜினியையே அரசியல் துண்டைக்காணோம் துணியைக் காணோம் என ஓடவைத்துவிட்டது. ஆனால், நடிகர் விஜய் ஒப்பனையற்று ரசிகர்களைச் சந்திக்கத் துணியாமல் முழு ஒப்பனையுடன் அதுவும் குளிர்சாதனக் கூண்டு வண்டியில் வந்து மக்களைச் சந்திக்கிறார். அப்படிப்பட்ட விஜய் அரசியல் மாற்றத்துக்கான தலைவர் என்று அறியாமையாலோ அவசியத்தாலோ நம்பும் மனிதர்கள் கலர் கலராக ரீல் விடுகிறார்கள். அவரது செல்வாக்கின் ஆற்றலை மிகைப்படுத்திக் கூறுகிறார்கள். எல்லாம் 2026 தேர்தல் முடிவு வரும் வரையில்தான். முடிவு வந்த பின்னர் அவருக்கான ஆதரவு வெட்டவெளிச்சமாகிவிடும். அது அஞ்சு … ஆறு… விழுக்காடாக இருக்கலாம்… அதுவரை கம்பு சுத்துபவர்கள் சுத்திக்கொண்டே இருக்கலாம்.

திங்கள், அக்டோபர் 27, 2025

ராமராஜனுக்கும் விஜய்க்கும் முதலமைச்சர் ஆசை


நடிகர் விஜய் போலவே மக்கள் செல்வாக்கு பெற்ற நடிகராக எண்பதுகளின் இறுதியில் இருந்தார் ராமராஜன். இளையராஜா இசையமைத்த

அவருடைய படங்களின் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் பரவின. விஜய் போல் அவர் அரசியலில் நடிகராக இல்லை. அவருக்கு உண்மையிலேயே அரசியல் ஆர்வம் இருந்தது. அதிமுகவில் இணைந்து 1998இல் திருச்செந்தூர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார்.
திருச்செந்தூரில் அப்போது, மொத்தம் 12 பேர் மனுத் தாக்கல் செய்தனர். அதில் ஒருவரது மனு தள்ளுபடியானது. நான்கு பேர் மனுவைத் திரும்பப் பெற்றுக்கொண்டனர். இறுதியில் களத்தில் ஏழு பேர் எஞ்சினர். ஊரகப் பகுதியின் இளம்பெண்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற நடிகர் ராமராஜனை எதிர்த்து எந்தப் பெண்ணும் போட்டியிடவில்லை. போட்டியிட்ட ஏழு பேரும் ஆண்கள்.
1998 பிப்ரவரி 22 அன்று தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் மார்ச் 2 அன்று எண்ணப்பட்டு,முடிவு அறிவிக்கப்பட்டது.
அப்போது, திருச்செந்தூரின் மொத்த வாக்காளர்கள் 10,14,366 பேர். அவர்களில் 53.95 விழுக்காட்டினர் வாக்களித்தார்கள். 5,47,234 வாக்குகள் பதிவாயின. அவற்றின் செல்லுபடியானவை 5,35,637 வாக்குகள்.
அவற்றில் நடிகர் ராமராஜன் 2,64,290 (49.34%) வாக்குகளைப் பெற்று, தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் தனுஷ்கோடி ஆதித்தனை 46,855 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிகொண்டார். ஆதித்தன் பெற்ற வாக்குகள் 2,17,435 (40.59%)
எஞ்சிய ஐவரும் வைப்புத் தொகையைப் பறிகொடுத்தனர். அதிலொருவர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட குமரி அனந்தன் அவர்கள். அவருக்கு 38,291 (7.15%) வாக்குகள் கிடைத்திருந்தன.
இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக 22 இடங்களில் போட்டியிட்டது. நான்கு தொகுதிகளில் தோல்வியுற்றது. டி ஜெயகுமார் (மத்திய சென்னை), கா.காளிமுத்து (சிவகங்கை), கிருஷ்ணமூர்த்தி (திருப்பத்தூர்), டாக்டர் கோபால் (நாகப்பட்டினம்) ஆகிய நால்வரும் தோல்வியைத் தழுவியவர்கள்.
கா.காளிமுத்து தோல்விகண்ட சிவகங்கை தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ப.சிதம்பரம் வெற்றிபெற்றார். இந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் திருநெல்வேலியில் போட்டியிட்ட நடிகர் சரத் குமார் தோற்றுப்போனார்.
முதலமைச்சர் கனவு கண்ட ராமராஜனை அந்த ஒரு தேர்தலோடு அரசியல் ஏறக்கட்டிவிட்டது.
(ராமராஜனின் பிறந்த நாளான அக்டோபர் 18 அன்று ஃபேஸ்புக்கில் எழுதிய பதிவு)

லேட்டஸ்ட்

ரஜினியாவாரா விஜய்?

தொடர்பவர்